Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர் மாநாடு, மிரளும் அரசியல் வட்டாரங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீனவர் மாநாடு, மிரளும் அரசியல் வட்டாரங்கள்

நாடாளுமன்றத் தேர்தல் அதோ இதோ என்று நெருங்கிவரும் நிலையில், குமரி மாவட்டத்தில் நடைபெறப்போகும் ஒரு மாநாடு பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அந்த மாநாட்டின் பெயர் `மீனவர் வாழ்வுரிமை மாநில மாநாடு.' ஓட்டு வங்கியை எதிர்பார்த்துத்தான் இந்த மாநாடோ? என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களை இப்போது உலுக்கத் தொடங்கியுள்ளது.

நாகர்கோவிலில் வரும் 21-ம்தேதி நடக்க இருக்கும் இந்த மாநாட்டை `மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' என்ற அமைப்பு நடத்துகிறது. இது மீனவர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் முதல்முறையாக ஒன்றிணைக்கும் மாநாடு. இதில் பங்கேற்கப்போகும் தலைவர்கள் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், கோ.க.மணி, திருமாவளவன் உள்பட இன்னும் பலர். இலங்கைத் தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாகவும், மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிரானதாகவும் இந்த மாநாடு நடக்கப் போவதாக சூசகத் தகவல்கள் சுழன்றடிப்பதால், காவல்துறையின் கவனிப்புக்குரிய மாநாடாக மாறியிருக்கிறது இது.

இந்த மாநாடு குறித்து `மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின்' மாநில அமைப்பாளர் சி.ஜே. ராஜனிடம் நாம் பேசினோம்.

``தமிழகத்தில் பதின்மூன்று கடலோர மாவட்டங்களும், அதில் 591 மீனவ கிராமங்களும் உள்ளன. தமிழகத்தில் நாற்பத்தைந்து லட்சம் பேர் மீன்பிடித் தொழில் மற்றும் மீன் வியாபாரத்தில் இருக்கிறார்கள். இன்றைக்கு 15 மக்களவைத் தொகுதிகள், 37 சட்டசபைத் தொகுதிகளில் வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பவர்களாக மீனவர்கள் இருக்கிறார்கள்'' என்ற புள்ளிவிவரத்துடன் ஆரம்பித்தார் அவர்.

``தமிழகத்தில் இதுவரை யாரும் மீனவர் பிரச்னையைக் கையில் எடுக்கவில்லை. மீனவர்களின் பிரச்னை மீனவர்களின் சொந்தப் பிரச்னை என்பது மாதிரியான போக்கே இங்கு நிலவுகிறது. அந்த மனப் பான்மையை மாற்றத்தான் இந்த மாநாடு. இந்த மாநாட்டில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இருக்கிறதா என்பது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்தது.

தமிழக மீனவர்களுக்கு இன்று சுதந்திரமாக மீன்பிடிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. பாகிஸ்தான் கடற்படை கூட எல்லைதாண்டி வரும் குஜராத் மீனவர்களைச் சுடுவதில்லை. பிடித்து மட்டுமே செல்கிறது. ஆனால், இந்தியாவின் இணக்க நாடாகக் காட்டிக்கொள்ளும் இலங்கையின் கடற்படை மட்டும் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்கிறது. அதன் ரத்த வெறிக்கு இதுவரை பலியான மீனவர்களின் எண்ணிக்கை நானூறுக்கும் மேல்.

மீனவர்கள் யாரும் வேண்டுமென்றே எல்லை தாண்டுவதில்லை. மீன்கள் கடல் எல்லையைத் தாண்டுவதால் மீனவர்களும் கடல் எல்லையைத் தாண்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுதான் உண்மை. தமிழக மீனவர்களை இதுவரை `இந்தியன்' என்று குறிப்பிட்டு வந்த சிங்களக் கடற்படை, இப்போது அவர்களைத் `தமிழன்' என்று கூறி தாக்கத் தொடங்கியுள்ளது. இது இந்தியாவின் ஓர் இனத்தை அதன் தேசியத்திலிருந்து அந்நிய நாடு துண்டாடுவது போன்ற செயல். அதோடு இந்திய நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்கள் சுடப்படுவதை இந்திய அரசே வேடிக்கை பார்க்கிறது. தேசப் பாதுகாப்பு என்பதில் மீனவர்கள் பாதுகாப்பு அடங்காதா என்ற கேள்வியையும் இது கிளப்புகிறது.

புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றத்துக்குக் கூட பயப்படாத தமிழக மீனவர்கள், இப்போது இலங்கைக் கடற்படைக்குப் பயப்படும் நிலையுள்ளது. நிலத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டால் அவரது உடலை கண்டுபிடித்து விடலாம். ஆனால், கடலில் யார் கண்டுபிடிப்பது? கடலில் ஒரு மீனவர் காணாமல் போனால், அவரை மீனவர்கள்தான் இப்போது தேடிக்கண்டுபிடிக்க வேண்டியநிலை. நான்கைந்து நாட்கள் டீசலை செலவழித்து படகில் தேடினால் ஒன்றரை லட்சத்துக்கு மேல் செலவாகிவிடும். இது சாதாரண மீனவக் குடும்பத்துக்குச் சாத்தியமாகிற செலவா? அரசு இதைக் கண்டுகொள்வதே இல்லை. எங்களுக்குத் தெரிந்து இதுவரை ஐம்பது மீனவர்கள் காணாமல் போய் உள்ளனர். காணாமல் போன படகுகளின் எண்ணிக்கை 160.

காணாமல் போன மீனவருக்காக காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் இருந்து இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை எல்லாமே பிரச்னைதான். தேவையற்ற கால தாமதம்தான். இதுபோன்ற விஷயங்கள் மற்றும் மீனவர்களுக்கு அவர்களது தொழில் குறித்து ஒரு விழிப்புணர்வைக் கொண்டு வரவும்தான் இப்படியொரு மாநாடு. தமிழகத்தில் இன்று மீனவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை. இந்தச் சமுதாயத்தில் இரண்டே பேர்தான் எம்.எல்.ஏ.க்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில், மீனவர்களின் பிரச்னைகளை அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

1982-ம் ஆண்டு மண்டைக்காட்டில் நடந்த மதக் கலவரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி வேணுகோபால் கமிஷன் பரிந்துரைப்படி குமரி மாவட்ட கடற்கரைப் பகுதிகளைத் தனித்தொகுதிகளாக மாற்றுவதற்கான கோரிக்கையை இந்த மாநாட்டில் வலுவாக வற்புறுத்துவோம். மண்டல்க்குழு பரிந்துரைப்படி கடல் சார் மக்களை `கடல்சார் பழங்குடியினர்' என அறிவிக்குமாறு கேட்போம். `மீனவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும், மீனவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் மற்றும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என இந்த மாநாட்டின் மூலம் வலியுறுத்துவோம்.

மீனவர்கள் சுட்டுக் கொலை செய்யப்படுவது, சித்திரவதை செய்யப்படுவது, கடத்தப்படுவது இவற்றிற்கு பின்னணியிலிருக்கும் அரசியல் சதியை விசாரிக்க விசாரணைக்குழு அமைக்குமாறு கோருவோம். கடற்கரை கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பட்டா வழங்கக் கேட்போம். மீனவர்களைக் காக்க மீனவர் பாதுகாப்பு ஆணையம் என்ற தனி ஆணையம் ஒன்றை உருவாக்குமாறு இந்த மாநாட்டில் நிர்ப்பந்திப்போம். மீனவர்கள் பிரச்னை பற்றி அரசுகள் பேசும்போது மீனவர் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கிறார்கள். அந்த நிலை மாறவும் மாநாட்டில் நாங்கள் குரல் கொடுப்போம்.

சுனாமியின்போது தமிழக மீனவர்கள் பட்டபாடு கொஞ்சம் நஞ்சமா? குமரி, நாகை, கடலூர், புதுக் கோட்டை, காஞ்சிபுரம், சென்னை என பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த எட்டாயிரம் பேர் அதில் பலியானார்கள். அதன்பின்னரும் கூட மீனவர்கள் கடலைத்தானே நம்பியிருக்கிறார்கள்? அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது அரசின் கடமையில்லையா? சுனாமிக்குப் பிறகு இப்போது அரசின் `கடற்கரை மேலாண்மைத் திட்டம்' வேறு தமிழக மீனவர்களைப் பயமுறுத்தி வருகிறது.

1983-ல் சிங்களக் கடற்படையின் தாக்குதலுக்குப் பலியாகி முதன்முதலாக இறந்த தமிழக மீனவரின் பெயர் உச்சிப்புளி முனியசாமி. இலங்கைக் கடற்படையின் ரத்த வேட்டை அன்று தொடங்கி இன்றுவரை தொடர்கிறது. அரசியல் காழ்ப்புணர்வுக்கும், இனப் பகைமைக்கும் தமிழக மீனவர்கள் பலியாவது இனிமேலும் தொடரக் கூடாது.

அப்பாவி மீனவர்களைக் காக்கும் பொறுப்பில் இருந்து மத்திய,. மாநில அரசுகள் தப்பிக்க முயல்கின்றன. அவர்களை மீனவர் பிரச்னையில் தலையிடச் செய்யுமளவுக்கு மீனவர்கள் வலிமையை இந்த மாநாட்டில் காட்டவேண்டும் என்பது எங்கள் பிரதான நோக்கம். அதற்காகவே இந்த மாநாடு. இதன்மூலம் யாரும் அரசியல் ஆதாயம் தேடவில்லை'' என முடித்துக் கொண்டார் சி.ஜே. ராஜன்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நடக்க இருக்கும் இந்த மீனவர் மாநாடு, கொஞ்சம் கூர்மையாகவே கவனிக்கப்படுகிறது.

-குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.