Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிதி நிர்வாகம் சரியாக இருந்தால் நீதி நிர்வாகம் அதில் தலையிடாது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிதி நிர்வாகம் சரியாக இருந்தால் நீதி நிர்வாகம் அதில் தலையிடாது

[23 டிசம்பர் 2008, செவ்வாய்க்கிழமை 8:30 மு.ப இலங்கை]

பெற்றோலின் விற்பனை விலையை நிர்ணயிக்கும் விடயத்தில் உயர்நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு வழங்கியமை நாட்டில் பெரும் அரசியல் சர்ச்சையைத் தோற்றுவித்திருக்கின்றது.

ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான பொதுக்கட்டமைப்பை நிராகரித்தும் -

சுமார் பத்தொன்பது ஆண்டுகள் நீடித்த வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பை ரத்துச் செய்தும் -

முன்னர் பிரதமராக இருந்த சமயம் ஆழிப்பேரலை அனர்த்த நிவாரண நிதி கையாள்கையில் மோசடியில் ஈடுபட்டார் எனத் தெரிவித்து மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட ‘ஹெல்பிங் அம்பாந்தோட்டை’ விவகாரத்தில், ராஜபக்ஷ தவறிழைக்கவில்லை என்று தீர்மானித்தும் -

ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் பதவிக் காலம் 2005 நவம்பருடன் முடிவடைகிறது, அதற்குமேல் ஒரு வருடம் நீடிக்கப்பட மாட்டாது என உத்தரவிட்டும் -

உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அத்தீர்ப்புகள் எல்லாம் இன்றைய ஆட்சியாளருக்கு இனித்தன. நீதித்துறையைத் தலையில் தூக்கி வைத்து ஆடினார்கள்.

இப்போது -

அப்பாவித் தமிழ் மக்களை கண்மூடித்தனமாகக் கைது செய்வதையும், பலவந்தமாகத் தலைநகரில் இருந்து ஏற்றி வடக்கு, கிழக்கு அனுப்புவதையும் தடுத்தும் -

கண்மண் தெரியாமல் அமைக்கப்படும் சோதனைத் தடை நிலைகளை அகற்றும்படி பணித்தும் -

ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்காவின் பெயரை தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியமையை இடைநிறுத்தியும் -

ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகளின் பெயரில் திறைசேரிச் செயலாளரைப் பதவி விலக்கியும் -

எரிபொருள் கொள்வனவு தொடர்பான ‘ஹெட்ஜிங்’ ஒப்பந்த ஊழலை ஒட்டிய கொடுப்பனவுகளைத் தடுத்தும், அதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சேவையிலிருந்து இடைநிறுத்தியும் -

அளவுக்கு அதிகமாக எரிபொருளுக்கு வரி அறவிடுவதைத் தடை செய்தும் -

உயர்நீதிமன்றம் உத்தரவிடும்போது அவை ஆட்சியாளர்களுக்குக் கசக்கின்றன. அதனால் நீதித்துறையைக் கரித்துக் கொட்டுகின்றார்கள் அவர்கள். இத்தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளுக்காக உயர்நீதிமன்றின் பிரதம நீதியரசரைப் பதவி விலக்குவதற்காகக் குற்ற விசாரணைப் பிரேரணை ஒன்றை நாடாளுமன்றுக்குக் கொண்டு வருவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயும் அளவுக்கு நிலைமை போயிருக்கின்றது.

இதேசமயம், பெற்றோலின் விலையை லீற்றருக்கு 100 ரூபாவாகக் குறைக்கும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஏறத்தாழ ஒரு வாரமாகிவிட்டது. அதை அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிப்பது நாட்டில் பெரும் அரசியல் சிக்கலுக்குக் கால்கோள் இடப்படுவதான அச்சத்தை உருவாக்கியிருக்கின்றது.

ஒரு தேசத்தின் ஆட்சிமுறையும் வாழ்வியலும் சிறப்பாக இருக்கவேண்டுமானால் நிறைவேற்றுத்துறை, நீதித்துறை, சட்டவாக்கல் துறையான நாடாளுமன்றம் ஆகியன சுயாதீனமாகவும், மூன்று பக்கங்களைக் கொண்ட கூம்பகம் போல ஒன்றில் ஒன்று தங்கியும் - அதேசமயம் தனித்தும் - செயற்பட வேண்டும்.

ஆனால், இங்கு நீதித்துறைக்கு எதிராக மற்றைய இரு துறைகளும் சீறிப் பாய்ந்து எழுந்து குழம்பும் சூழல் உருவாகியிருக்கின்றது.

"நாட்டின் நிதி நிர்வாகம் தொடர்பான அனைத்து முடிவுகளையும் நாடாளுமன்றமே மேற்கொள்கின்றது. மேற்கொள்ளவேண்டும். வேறு எந்த அமைப்புகளுக்கும் அந்த அதிகாரம் கிடையாது. இது அரசமைப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது." - என வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன வாதிடுகின்றார்.

ஒரு வகையில் பார்த்தால் அந்த வாதத்தில் அர்த்தம் இருக்கவே செய்கின்றது. எரிபொருள் விலை என்றாலும் சரி, வேறு பொருட்கள் என்றாலும் சரி, அவற்றுக்கு வரி விதிப்பதும் - அல்லது மானியம் அளிப்பதும் - அவற்றின் அடிப்படையில் விற்பனை விலையைத் தீர்மானிப்பதும் நாடாளுமன்றில் பெரும்பான்மையைக் கொண்டு ஆட்சி நடத்தும் அரசின் வேலையாகும். அதில் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு, தீர்மானம் எடுப்பது எந்தளவு தூரம் சரியானது, நியாயமானது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

ஆனால், அத்தகைய வரி விதிப்புகளும், விலை நிர்ணயங்களும் இயற்கை நீதியின்படி நியாயப்படுத்த முடியாதவையாக முன்னெடுக்கப்படுமானால் -

அவற்றைச் செய்யும் அதிகாரம் அரசுக்குரியதே என்று தெரிவித்துவிட்டு நீதிமன்றம் தள்ளி நிற்பதும் கூட சரியான நீதி நிர்வாகமாக அமையாது.

நிதி நிர்வாக விடயத்தில் நீதித்துறை தலையிட வேண்டிய சூழல் ஏற்படாமல் அந்தத் துறையை சரிவர நிர்வகிப்பது சம்பந்தப்பட்டோரின் கடமை; பொறுப்பு. அதில் அத்தரப்புத் தவறும் போது நீதிமன்றத் தலையீடும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது.

uthayan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.