Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"ஆயுதங்களுடன் இலங்கைக்குப் போவார்கள்" - கூட்டத்தில் பொங்கிய வைகோ

Featured Replies

இலங்கையில் நடக்கும் தமிழினப் படுகொலையை தடுக்கத் தவறிய அரசுகளைக் கண்டித்து, சென்னையில் கடந்த செவ்வாயன்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த பொதுக்கூட்டம் பெரும் உணர்ச்சிப் பிழம்பாகச் சுட்டெரித்தது.

சென்னை அமைந்தகரை `புல்லா அவென்யூ' திடலில் நிரம்பி வழிந்த மக்கள் கூட்டத்தில், இலங்கைத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து இறந்த `வீரத்தமிழ் மகன்' முத்துக்குமாருக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, பொதுக்கூட்டம் தொடங்கியது. பழ.நெடுமாறன், வைகோ, சீமான் ஆகியோர் பேசத் தொடங்க... ராமதாஸ், தொல்.திருமாவளவன், தா.பாண்டியன், தமிழிசை போன்றவர்கள் ஒவ்வொருவராக வந்து சேர்ந்தனர்.

சேகுவேரா டீஷர்ட்டில் வந்திருந்த இயக்குநர் சீமான், ``பிரபாகரன் எப்போது சாவான்? என்று கேட்பவர்கள் நீண்ட நாள் வாழ வேண்டும். என் தலைவன் ஈழத்தில் தலைமை ஏற்பதைக் காண அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தே ஆக வேண்டும். நம் போராட்டத்தைத் திசைதிருப்ப இந்த இக்கட்டான நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு விளையாட அனுப்பியிருக்கிறது, இந்திய அரசு. மானங்கெட்ட நாலைந்து பேர் அந்த கிரிக்கெட் போட்டியையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்'' என்று முழங்கினார்.

அடுத்ததாக, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நெடுமாறன் எழுந்தார். ``இது தேர்தல் அணி அல்ல. மதிப்புக்குரிய தலைவர் முதல்வர், எங்களைப் பார்த்து ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறோம் என்கிறார். எங்கள் தரப்பில் இருந்து எந்த அறிக்கை வந்தாலும் அதை எதிர்த்து `சந்துமுனை சிந்து' பாடுகிறார். கருணாநிதிக்கு இருக்கும் இந்த சாமர்த்தியம் வேறு யாருக்கும் வராது.

இந்திய அரசு செய்யத் தவறியதை வேலைநிறுத்தம் மூலம் சுட்டிக்காட்ட விரும்பினோம். நள்ளிரவு இரண்டு மணிக்கு கதவைத் தட்டி தலைமைச் செயலாளரின் கடிதத்தைக் கொடுக்கிறார்கள். அதில் 1997ல் வேலைநிறுத்தத்திற்கு எதிரான உச்சநீதிமன்ற உத்தரவு உள்ளது என்று எழுதியிருக்கிறார்கள். அன்றைக்குப் பிற்பகல் மூன்று மணிக்கு, வேலைநிறுத்தம் சட்டவிரோதம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் விடுத்த உத்தரவை மறந்துவிட்டார்கள். இதுகூடத் தெரியாமல் முதல்வர் என்ன ஆட்சி நடத்துகிறார்?

சிங்கள ராணுவத்தில் 53 சதவிகித படையினருக்கு இந்தியாவில்தான் பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 65, 300 சிங்களப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்தாண்டு 2,579 சிங்களவர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது. பிப். 17ம் தேதி கன்னியாகுமரி முதல் சென்னை வரை இடைவிடாத மனிதச் சங்கிலி நடத்தப்படும். தமிழகம் முழுவதும் அடுத்தடுத்து பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும். சென்னையில் உள்ள வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகளிடம் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தக் கோரி, மனு கொடுக்கிறோம். மாவீரன் முத்துக்குமாரின் மரண சாசனம் ஆடியோ சி.டி.யில் பதிவு செய்து விநியோகிக்கப்படும்'' என்றார் நெடுமாறன்.

அடுத்துப் பேசிய திருமாவளவன் எரிமலையாக வெடித்தார். ``காங்கிரஸ்காரர்களின் பிரசாரத்தால் எரிச்சல் அடைந்துள்ள புதிய தலைமுறையினர் ராஜீவ் கொலை சரியே என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். புதிய தலைமுறையினர் பிரபாகரன் வழி தான் எங்கள் வழி என்ற நிலைக்கு வந்து விட்டனர். கோழைகளாக இருக்கும் ஓர் இனத்துக்கு பிரபாகரனைக் கண்டால் பயம் வருகிறது; இது உளவியல் சிக்கல். வரலாற்றில் பிரபாகரனைப் போன்ற வீரன் எவனும் கிடையாது.

இலங்கை இறையாண்மையில் ராஜீவ் தலையிட்டு ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். `எங்களைக் கலந்தாலோசிக்காமல் போடப்பட்ட ஒப்பந்தத்தை எங்கள் மேல் இந்தியா திணிக்கிறது. ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும் இந்தியாவுக்காக ஒப்புக்கொள்கிறோம்' என்று சுகுமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரபாகரன் பேசினார். அமைதிப்படை என்கிற போர்வையில் இலங்கைத் தமிழ்ப் பெண்களை பலாத்காரம் செய்தது, இந்திய ராணுவம். தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் இந்திய இறையாண்மைக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்தியாவை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்'' என்ற திருமா, ``இலங்கை வன்னிப் பகுதியில் பாதுகாப்புப் பகுதிக்கு அகதிகளாகச் சென்ற மக்களுடன் ஊடுருவிச் சென்ற பெண், மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை புலிகள் செய்ததாக, சிங்கள ராணுவம் செய்தி பரப்பி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளும், போப்பாண்டவரும் தமிழினப் படுகொலையைக் கண்டித்து வருகின்ற இந்தச் சூழ்நிலையில், புலிகள் மீது அவப்பெயரை உருவாக்கவே இப்படியொரு நாடகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இலங்கையில் இதுவரை எந்த சிங்களப் பெண்ணையும் புலிகள் பலாத்காரம் செய்ததோ, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதோ இல்லை. உயிரிழந்த பெண் புலிகளின் சடலங்களிடம் தகாத முறையில் சிங்களப் படையினர் நடந்து கொண்டனர்!'' என்று தனது பேச்சை முடித்தார்.

அடுத்ததாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், ``விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கான போரில் இந்திய அரசின் ஒத்துழைப்பும், உதவியும் பெரும் திருப்தியைத் தருவதாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். இதிலிருந்து இந்திய அரசின் துரோகம் வெளிப்படையாகத் தெரிகிறது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கான சதித்திட்டமே இலங்கையில்தான் தீட்டப்பட்டுள்ளது என நாங்கள் சந்தேகிக்கிறோம். இலங்கைப் பிரச்னையில் தி.மு.க. ஆட்சி கவிழும் நிலை வந்தால் எங்கள் கட்சியின் 18 எம்.எல்.ஏ.க்களும் இந்த ஆட்சியைக் காப்பாற்றுவார்கள்'' என்று முடித்துக் கொண்டார்.

``மதுரையில் இந்திராகாந்தியை சிலர் தாக்க முற்பட்டபோது, அந்த அடியை தன் மீது வாங்கிக் கொண்டவர், பழ.நெடுமாறன். ராஜீவ் படுகொலையின் போது அவருக்கு அருகில் இருந்த நானும் குண்டடி பட்டேன். ஒரு காங்கிரஸ்காரனும் அப்போது அங்கில்லை. எனவே, எங்கள் தேசபக்தி குறித்து சந்தேகம் எழுப்ப காங்கிரஸ் கட்சியினருக்கு எந்தத் தகுதியும் இல்லை'' என்றார், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்.

வைகோ மைக்கைப் பிடித்ததும் கைதட்டல் அடங்க வெகுநேரமானது. ``திலீபன் உண்ணாநிலை இருந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாவதை இந்திய அரசு வேடிக்கை பார்த்தது. குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 17 பேர் சாவுக்கு இந்திய அரசு காரணமாகி விட்டது. இந்தியஅரசின் வேண்டுகோளை ஏற்று ஆயுதத்தைக் கீழே போட்ட பிரபாகரன், அந்த 17 பேரின் அஞ்சலிக் கூட்டத்தில் வேறு வழியின்றி மீண்டும் ஆயுதமேந்தினார். அங்கு பிரபாகரனைக் கொல்ல அனுப்பப்பட்ட இந்தியப் படையினரும் யாரும் உயிருடன் திரும்பவில்லை. இலங்கையில் ஈழமுரசு பத்திரிகை அலுவலகத்தையும், நிதர்சனம் தொலைக்காட்சி அலுவலகத்தையும் இந்திய ராணுவம் தாக்கியது. தமிழக வழக்கறிஞர்கள் பதினான்கு பேர் படகில் முல்லைத்தீவுக்குச் செல்ல முயன்று கைதாகி இருக்கிறார்கள். இனியும் இந்திய அரசு மௌனம் சாதித்தால், ஆயுதங்களுடன் இளைஞர்கள் இலங்கைக்குப் போவார்கள். அப்போது நான் ஓடி ஒளிய மாட்டேன். மாணவர்களே வீதிக்கு வாருங்கள்! கொந்தளித்து எழுங்கள்! மாவீரன் முத்துக்குமார் உங்களை நம்பித்தான் உயிரைவிட்டான். தனிஈழம் ஒன்றே நிரந்தர விடியல்!'' என்று வைகோ முழங்கி முடித்தபோது இரவு பதினொரு மணி.

குமுதம் ரிப்போர்ட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.