ட்ரம்ப் உருவாக்கிய புதிய “Board of Peace” ஐநாவுக்கு எதிரானதா? -- -- --- *ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக்கரம் நீட்டும் சீனா! *இலங்கையை முழுக் கட்டுப்பாட்டில் எடுக்க இந்தியா முயற்சி *தமிழ்தரப்பின் உள்ளக மோதல்கள் டில்லிக்கும் கொழும்புக்கும் சாதகம்! --- --- --- சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார சபையின், சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய நாடுகளுடன் பதை்துக் கொள்ளும் முறையில் வெளியிட்ட கருத்துக்கள், சீனாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளன. நேட்டோ இராணுவக் கூட்டணி இனிமேல் தேவையற்றது என்ற தொனியும், அந்த அணிக்கான செலவை நூறுவீதமும் அமெரிக்கா தான் வழங்கி வருவதாகவும் கூறியமை, ஏனைய நோட்டோ அங்கத்துவ நாடுகளின் கௌரவத்துக்கு பெரும் இழுக்காக அமைந்துள்ளது. அதாவது -- டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் பொய் கூறுகிறார் என்றும், அமெரிக்கா இல்லையேல் ஐரோப்பிய நாடுகள் இயங்காது என்ற அவருடைய பார்வையும் மிக அழுக்கானது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. டென்மார்க்கிடமிருந்து கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது விருப்பத்தை, ஒரு "சிறிய கோரிக்கை" என்று டொனால்ட் ட்ரப் விளக்கம் அளித்தமை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளன. 1940 களிற்கு முன்னர் டென்மார்க் ஜேர்மனியிடம் சரணடைந்தது. இதனால் நாஜிக்கள் கிரீன்லாந்தைக் கைப்பற்றுவதைத் தடுப்பதற்காக, அதனை அமெரிக்காவிற்கு கையளிக்கும் ஒப்பந்தத்தில் டென்மார்க் பிரதிநிதிகள் கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் -- கிரீன்லாந்தின் தனி இறைமை கிரீன்லாந்துக்கு உரியது என்றும், அமெரிக்காவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல்ல என்பதும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஆனாலும் ஒப்பந்தத்தின் பிரகாரம், கிரீன்லாந்தில், அமெரிக்க இராணுவத் தளங்கள், படைகள் அங்கு அமைக்கப்பட்டன. இதனை அடிப்படையாகக் கொண்டு தான், ட்ரம்ப் கிரீன்லாந்து தீவை மீண்டும் கைப்பற்ற தற்போது முற்படுகிறார். ஆகவே -- அமெரிக்க வெளியுறவுக் கொள்கை தவறுகிறதா அல்லது டொனால்ட் ட்ரம்ப் தன்னிச்சையாக முடிவெடுக்கிறாரா என்ற கேள்வி நியாயமானது. ஐநா சபை அவசியம் அற்ற ஒன்று என ட்ரம்ப் கூறியிருக்கின்றமை, தன்னிச்சையான முடிவை பகிரங்கப்படுத்தியுமுள்ளது. ஆகவே -- பலமுள்ள மேற்கு நாடான கனடாவும், ஐரோப்பிய நாடுகளும், டொனால்ட் ட்ரம்பின் இத்தகைய செயற்பாடுகளுக்கு அஞ்சும் ஒரு சூழலில் அல்லது தயக்கம் காண்பிக்கும் பின்னணியில், வளர்ச்சியடைந்து வரும் மற்றும் இலங்கை போன்ற வளர்ச்சியடையாத நாடுகள் மத்தியில் சீனா தனது செல்வாக்கை காண்பிக்க முயற்சிக்கிறது. சீனாவின் குளோபல்ரைம்ஸ் (globaltimes) ஆங்கில செய்தி ஊடகத்தில் சென்ற வியாழக்கிழமை வெளியான ஆசிரியர் தலையங்கம், ஐரோப்பிய நாடுகளை நோக்கி நேசக் கரம் நீட்டியுள்ளது. அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடந்த சில வாரங்களாக சீனாவுடன் நெருக்கமாக உறவுகளை கையாள ஆரம்பித்துள்ளன. ஏற்கனவே வர்த்தக உறவு இந்த நாடுகளுடன் சீனாவுக்கு இருந்தது. ஆனால்-- மிகச் சமீபகாலங்களில், அரசியல் ரீதியான உறவுக்கும் அதனை மையப்படுத்திய இராணுவ தொடர்புகளுக்கும் வழி வகுக்கக் கூடிய ஏதுநிலைகள் தென்படுகின்றன. குறிப்பாக -- அஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தபோது, முரண்பாடுகளை தவிர்த்து இணக்கப்பாடான அம்சங்களில் ஒன்றித்துச் செயலாற்றுவது என கூறியிருந்தார். ஆனால் -- சீனாவுக்கு எதிராக இந்தோ – பசுபிக் பாதுகாப்பு விவகாரத்தில் அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய நாடுகளை மையப்படுத்தி 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா உருவாக்கிய அக்கியுஸ் (Aukus) ஒப்பந்தம் அவுஸ்திரேலியா அரசுக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் -- டொன்ல்ட் ட்ரம்ப் சுவிஸ்லாந்தில் நிகழ்த்திய உரையின் பின்னர், சீனா நோக்கிய கரிசனை உருவாகியுள்ளது போல் தெரிகின்றது. குளோபல் ரைம்ஸ் ஊடகத்தின் சர்வதேசச் செய்திகளில் இத் தொனி வெளிவர ஆரம்பித்துள்ளது. அஸ்திரேலியா தனது நாட்டின் நலன்களைக் கருத்தில் கொள்வதன் மூலம், சீனா மீதான கொள்கையை வரையறுத்துப் பிராந்திய நாடுகள், சீனாவுடனான உறவைக் கையாள்வதற்குரிய மாதிரியை வழங்கும் என்று சீன வெளியுறவு விவகார பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லீஹைய்தோங் தெரிவித்திருக்கிறார். அதேநேரம் -- பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டத்தில், பல ஆண்டுகளாக, சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 'விரிவான ஆலோசனை, கூட்டு பங்களிப்பு மற்றும் பகிரப்பட்ட நன்மைகள்' (extensive consultation, joint contribution, and shared benefits,) என்ற கொள்கைகளை கடைபிடித்துள்ளன, இருதரப்பு வர்த்தகம் இராஜதந்திர உறவுகளின் தொடக்கத்தில் $ 2.4 பில்லியனில் இருந்து 2025 இல் $828.1 பில்லியனாகவும், பரஸ்பர முதலீட்டு பங்கு கிட்டத்தட்ட பூஜ்ஜியத்திலிருந்து $280 பில்லியனாகவும் அதிகரித்தாக குளோபல்ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. சீனா-ஐரோப்பா சரக்கு ரயில் சேவை 120,000 பயணங்களை இயக்கியுள்ளது, 26 ஐரோப்பிய நாடுகளில் 200க்கும் மேற்பட்ட நகரங்களை சென்றடைந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முக்கிய வகிக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீன மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், காலநிலை மாற்றம் குறித்த கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நலன்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்கியுள்ளதாகவும் அந்த ஊடகம் புள்ளி விபரங்களை காண்பித்துள்ளது. இப் புள்ளி விபரங்கள், சீனாவுடன் வர்த்தக உறவில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் தூதரக இணையங்களிலும் உண்டு. ஆகவே -- இப் பின்னணியில் டொனால்ட் ட்ரம்பின் தற்போதைய தன்னிச்சையான அணுகு முறைகள், சர்வதேச உலக ஒழுங்கில் புதிய மாற்றத்துக்கு வழி வகுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை. ரசிய - உக்ரெய்ன் போர், இஸ்ரேல் காசா மோதல் போன்ற விவகாரங்களில், டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாடுகள் ஐரோப்பிய நாடுகளுக்குச் சாதகமாக இல்லை. ட்ரம்ப் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு அறிக்கையை ரசியா வரவேற்றுள்ள பின்னணியில், உக்ரெய்ன் அரசை அமெரிக்கா கைவிட்டுள்ளது என்ற செய்தி வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் -- வெனிசுலா ஜனாதிபதியை கடத்திச் சென்ற விவகாரம். டென்மார்க் உள்ளிட்ட அனைத்து சர்வதேச நாடுகளையும் அமெரிக்கா கட்டுப்படுத்தும் அல்லது சொல்வதை செய்யுங்கள் அல்லது ஒத்துழைக்கவும் என்ற அதிகாரத் தொனியை புடம் போட்டுக் காண்பித்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவுடன் பல விடயங்களில் இணங்கிச் செல்ல மறுத்த பிரான்ஸ், ட்ரம்பின் செயற்பாடுகளின் பின்னர், சீனாவுடன் இணைந்தால் என்ன என்ற மன நிலைக்கு வந்துள்ளது. இந்த இடத்தில்தான் -- அமெரிக்க - சீன - ரசிய அரசுகளுடன் சமாந்தரமான முறையில் அதாவது சர்வதேசரீதியாக இரட்டை வெளியுறவுக் கொள்கையை இந்திரா காந்தி காலத்தில் இருந்து பின்பற்றி வந்த இந்திய அரசுக்கு, வாய்ப்பான ஒரு புவிசார் அரசியல் பின்ணியை உருவாகி வருகிறது. ரசிய - உக்ரெய்ன் போரில் இருந்து வெனிசுலா ஜனாதிபதி கடத்தப்பட்டது வரையும் அடக்கமான கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த இந்தியா, அமெரிக்காவையும் பகைக்காமல், ஐரோப்பிய நாடுகளையும் கையாளக் கூடிய தனது இராஜதந்திர உத்தியை தொடர்ந்து பின்பற்றக் கூடிய வாய்ப்பு தடையின்றி கிடைத்திருக்கிறது. இந்தோ - பசுபிக் விவகாரத்தில் அமரிக்கா செய்து கொண்ட அக்கியுஸ் பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி பிராந்திய இராணுவ விவகாரத்தில் அவுஸ்ரேலிய அரசு, சீனாவுடன் பகைக்காமல் இருக்கக் கூடிய உத்தி பற்றி ஆராயும் நிலையில், அது இந்திய அரசுக்கு வாய்ப்பை ஏற்படுத்தலாம். இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாடுகளை அவதானிக்கவும் தடுக்கவும் உருவாக்கப்பட்ட குவாட் இராணுவ அணியில் இந்தியா பிரதான பங்கு வகித்திருந்தது. ஆனால் -- சில வருடங்களாக அதன் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி வரும் நிலையில், ட்ரம்பினுடைய சமீபகால உத்திகள், சீனாவுடன் முரண்பாட்டில் உடன்பாடாக செல்லக் கூடிய சூழலை உருவாக்கலாம். ஏற்கனவே சீன - இந்திய வர்த்தகம் உலகில் முன்னிலை பெற்றுள்ளது. எல்லை விவகாரத்தை தவிர, இந்தியாவுடன் வேறு பிரச்சினை இல்லை என்று சீன ஊடகங்கள் கூறி வருகின்றன. ஆனால் இந்தியா அதனை மறுக்கிறது. இப் பின்புலத்திலே தான் -- தலைகீழாக ட்ரம்ப் நின்றாலும், இந்தோ - பசுபிக் விவகாரத்தில், அவுஸ்திரேலிய - இந்தியா ஒத்துழைப்பு அவசியமானது. ஆகவே, இதனையே ட்ரம்ப்புடனான பலமான உறவுக்கு இந்தியா பயன்படுத்தும் சாத்தியம் உண்டு. ரசியா ஊடாக சீனாவையும் கையாள முடியும். ஆனால், இந்தியாவின் இந்த நிலைப்பாடு தான், இப்போது இலங்கைக்கு குறிப்பாக ஜனாதிபதி அநுரவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. உலகில் மேலும் குழப்பங்களை ட்ரம்ப் உருவாக்க முன்னர், இந்தோ - பசுபிக் விவகாரத்தில் தனக்கு சாதகமான, அதேநேரம் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட தற்போது இந்தியா தீவிரமாக ஈடுபடுகிறது. இதன் காரண- காரியமாக சிறிய நாடாக இருந்தாலும், இலங்கை அரசை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. 1980 களில் இருந்து இந்தியாவின் நிலைப்பாடு இதுதான். ஆனாலும், ட்ரம்பின் தற்போதைய குழப்பமான நகர்வுகளுக்கு மத்தியில், அந்த நிலைப்பாட்டை இந்தியா மிகவும் அவசர அவசியமாக தீவிரப்படு்த்தியுள்ளது. ஏனெனில் -- ஐரோப்பிய நாடுகளுடன் சீரான உறவை வலுப்படுத்த சீனா கையாளவுள்ள நகர்வு, தமக்கு ஆபத்தானதாக இருக்கும் என்று இந்தியா கருதக் கூடும். இப் பின்னணியில் தான் -- இலங்கையில் புதிய அரசியல் யாப்பு என்ற கதைகள் உலாவுகின்றன. வடக்கு - கிழக்கு இணைப்பு, சுயாட்சி என்ற தமிழ்த்தரப்பின் உறுதியான கோரிக்கைகளுக்கு முன்னர், சும்மா ஒப்பாசாரத்துக்கு மீள் நல்லிணக்கம் என்று கதை சொல்லக் கூடிய புதிய அரசியல் யாப்பு அல்லது யாப்புத் திருத்தம் பற்றி கொழும்பில் சில உரையாடல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கவனத்தை திசை திருப்ப தமிழ்தரப்பின் மத்தியில் பிளவுகள் - மோதல்கள் திட்டமிட்டுத் தூண்டப்படுகின்றன. அதற்குப் பலியாகி சமகால புவிசார் அரசியல் சூழலை அவதானித்துத் திட்டமிட்டுச் செயற்பட தமிழ்த்தரப்பும் தவறியுள்ளது. ஆகவே --- இப்பின்னணி விளைவுகளும், தேர்தல் அரசியலில் மாத்திரம் அக்கறை செலுத்தியமையும், இந்திய - இலங்கை அரசுகளுக்குத் தமது தேவைகளை நிறைவேற்றச் சாதகமாக்கியுள்ளன. --- --- குறிப்பு ---இக் கட்டுரை வெள்ளிக்கிழமை எழுதப்பட்டது. ஆனால் சனிக்கிழமை காலை தான், அதாவது சுவிஸ் நேரப்படி வெள்ளி மாலை தான் Board of Peace என்ற புதிய சபை ட்ரம்பினால் அறிவிக்கப்பட்ட செய்தி வெளியானது. 1) சுவிஸ்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொருளாதார மன்றக் கூட்டத்தில் டொனால்ட் ரம்ப், தனது புதிய 'சமாதான சபை' (Board of Peace) ஒன்றை உருவாக்கியுள்ளார். 2) ஐநாவில் வீட்டோ அதிகாரமுள்ள ஏனைய நான்கு நாடுகள் இதில் கைச்சாத்திடவில்லை. 12 நாடுகள் சிறிய கைச்சாத்திட்டுள்ளன. 3) இஸ்ரேல் - காசா போன்ற மோதல்கள் மற்றும் உலகின் ஏனைய விவகாரங்களை தீர்ப்பது இச் சபையின் நோக்கம் 4) தலைவராக ட்ரம்ப், அதாவது அமெரிக்கா... 5) ஐநா சபை உடைந்ததா என்ற கேள்வியுடன் சீன - ரசிய, கனடா மற்றும் ஐரோப்பிய ஊடகங்கள் கடும் விமர்சனம். -அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
By
ஈழப்பிரியன் · 3 hours ago 3 hr
Archived
This topic is now archived and is closed to further replies.