Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தன்னிலை இழந்த அரசியல் தலைமை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் வாடும் ஈழத் தமிழரின் நிலை குறித்தும், அவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைக்கச் செய்வது குறித்தும், அவர்களின் அரசியல் உரிமை குறித்தும் விவாதிக்க தமிழக சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்துள்ள ‘விரிவான’ பதில் தமிழனின் அரசியல் தலைமை எந்த அளவிற்கு தடம் மாறிப் போய்விட்டது என்பதற்குச் சான்றாகும்.

ஈழத் தமிழரின் பிரச்சனை (தான் ஆட்சியில் இருக்கும் போது) அரசியல் பிரச்சனை ஆவதையோ அல்லது தேர்தல் பிரச்சனை ஆவதையோ திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி விரும்புவதில்லை என்பது தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிந்து உண்மையாகும்.

அதனால்தான் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கியதும், இலங்கையில் இறுதிக் கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் 50 ஆயிரத்திற்கு மேல் கொல்லப்பட்டவர்கள் குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக-வும், மதிமுக-வும் ஒத்திவைப்புத் தீர்மானம் கொ்ண்டுவந்தபோது அதனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாமல் வெளிநடப்பிற்கு வழி செய்தது ஆளும் கட்சி!

மறுநாள் அவர்கள் அப்பிரச்சனையை அவையில் பேசியபோதும், அதனைப் பெரிது படுத்தாமல் பதிலளித்து நீர்க்கச் செய்தது ஆளும் கட்சி. ஏனென்றால், இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட 16ஆம் தேதி மதியம், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் பலம் பெற்றதற்குப் பிறகே ஈழத்தில் தமிழர்கள் மீதான தாக்குதல் கடுமையானது. நான்கு பக்கமும் சிறிலங்க இராணுவத்தின் பல படையணிகள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி. 2 கி.மீ. சுற்றளவு உள்ள பகுதியில் முடங்கியிருந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்று குவிக்கத் தொடங்கினர்.

அத்தாக்குதலின் உச்சக் கட்டமாக, மே 18ஆம் தேதி (திங்கட் கிழமை) பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் ஆகிய இரண்டு கிராமங்களில் இருந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் அனைவரையும் கொன்று தீர்த்தது சிறிலங்க இராணுவம். அப்படிப்பட்ட ஒரு மாபெரும் படுகொலையை நடத்தி முடித்த பிறகே போர் முடிந்தது என்று இராணுவம் அறிவித்தது. மறுநாள் போர் முடிந்ததை சிறிலங்க அதிபர் ராஜபக்ச அறிவித்தார்.

இறுதி கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட விவரம் அறிந்த உலக நாடுகள் சிறிலங்க அரசைக் கண்டித்தன. "மக்கள் வாழ்ந்த தடமே அங்கு இல்லை, அந்த இடமே அச்சமூட்டுவதாக இருந்தது" என்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட ஐ.நா. பொதுச் செயலரின் முதன்மை அலுவலர் விஜய் நம்பியாரும், பிறகு பொதுச் செயலர் பான் கீ மூனும் கூறினர். அது குறித்து சர்வதேச குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று பான் கீ மூனும், மற்ற உலக நாடுகளும் ராஜபக்சேவை வற்புறுத்தின.

ஆனால், தாய் தமிழகத்தின் முதல்வராக இருக்கும் மு.கருணாநிதி இது குறித்து சற்றும் ‘அறியாதவராய்’ டெல்லியில் முகாமடித்து தனது கட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திய அமைச்சர் பதவிகளை பெறுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தார். பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து, அந்தத் தொப்புள் கொடி உறவுகள் ஆறே முக்கால் கோடிப் பேர் வாழும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கவலைப்படாதவராகவே இருந்தார். அது குறித்து இன்று வரை அவர் பேசவில்லை!

ஒரு பிரச்சனை குறித்து ‘பேசாமல் இருந்தாலே அது செத்துவிடும்’ என்பதை அறியாதவரா அனுபவம் மிக்க நமது அரசியல் தலைவர்? அதனால்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அந்த மாபெரும் படுகொலை குறித்து வற்புறுத்தி வரும் நிலையிலும் இன்றுவரை கருணாநிதி அப்படி ஒன்று நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் மெளனம் சாதிக்கிறார் என்றால் எப்படிப்பட்ட அரசியல் சாதுரியம்?

உறுப்பினர்களின் பேச்சும் முதல்வர் அளித்த பதிலும்!

"ஆடு மாடுகளைக் கூட வேலி போட்டு அடைத்து வைப்பதில்லை, ஆனால் அங்கே மனிதர்களை முள்வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் இருந்தும் உதவி செய்ய முடியாதவர்களாக கைகள் கட்டப்பட்டுள்ளோம்" என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பன்னீர் செல்வம் பேசுகிறார்.

"போர் முடிந்த பின்னும் எஞ்சியுள்ள தமிழர்கள் படும் சிரமங்களை பார்க்கும் போது கண்கள் குளமாகின்றன. மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கட்டாந்தரையில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். தமிழர்களுக்கு சம உரிமையும், வாழ்வையும் பெற்றுத் தரவேண்டும், அவர்கள் எங்கு வாழ்ந்தார்களோ அதே இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டு்ம். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிங்களர்களை குடியமர்த்தக் கூடாது" என்று காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை கொறடா பீட்டர் அல்போன்ஸ் பேசுகிறார்.

"முகாம்களில் உள்ள இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்படுகின்றனர். இளம் பெண்களை கடத்திச் சென்று கற்பழிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இன்றுள்ள நிலையில் குறைந்த பட்ச சுயாட்சி உரிமையை பெற்றுத் தர வேண்டும்" என்று பா.ம.க. சட்டப் பேரவைக் கட்சித் தலைவர் கோ.க. மணி பேசிகிறார்.

"உயிரோடு மிச்சமிருக்கும் தமிழர்களையாவது பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமிருக்கின்ற தமிழர்களாவது மானத்தோடு வாழ வேண்டும். பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அவர்களுக்கு உரிய நிவாரணம் சென்று சேர வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் இராமசாமி பேசுகிறார்.

இந்த கேள்விகளுக்கெல்லாம் நேரடியான எந்தப் பதிலும் தெரிவிக்காமல், "அங்குள்ள தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை சிங்கள அரசுதான் செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்திய அரசு இது குறித்து வற்புறுத்தத்தான் முடியும்" என்று முதல்வர் பதில் கூறுகிறார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சரின் பதிலை ஏதோ இவர் அடிப்படை இன்றி அளித்த பதிலாக புரிந்துகொண்டால் ஏமாந்து விடுவோம். இந்த தலைவர் பயன்படுத்திய இதே வார்த்தையைத்தான், அயலுறவுச் செயலரான சிவ்சங்கர் மேனன் கொழும்புவிலும், பிறகு டெல்லியிலும் கூறினார். "என்ன செய்ய வேண்டும் என்பதை சிறிலங்க அரசிற்கு நாங்கள் எதையும் சொல்லப் போவதில்லை. அவர்களின் நாடு, அதைச் செய், இதைச் செய் என்று நாங்கள் எதையும் அவர்களிடம் கூறிட முடியாது" என்று கூறினார். இதைத்தான் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் பங்கு பெற்றிருக்கும் திமுக-வின் தலைவரான கருணாநிதி தமிழக சட்டப் பேரவயையில் பதிலாக கூறியுள்ளார்!

நாம் எதையாவது பேசி சிங்களவர்களின் கோபத்தை கிளிறிவிடக் கூடாது என்றும் ஆலோசனை கூறியுள்ளார் தமிழக முதல்வர்!

"இங்கு நாம் வீரவேசமாகப் பேசலாம், சூறாவளிப் பேச்சு, புயல் வேகப் பேச்சு என்று பேசி அதற்காக புகழாரம் சூட்டலாம். தமிழ் மக்களைக் காப்பாற்ற அது உதவாது, மாறாக சிங்களர்களின் கோபத்தைத்தான் அது அதிகரிக்கும்" என்று தமிழினத் தலைவர் என்று அழைக்கப்படும் திராவிட இயக்கத்தின் அரசியல் கட்சியின் தலைவராக உள்ள கருணாநிதி ஆலோசனை கூறியுள்ளார்.

திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், பெரியார், அண்ணா வழியில் இயக்கத்தையும், அரசியலையும் நடத்திய திமுக தலைவரும், தமிழக முதல்வருமான கலைஞர் மு. கருணாநிதியிடம் நாம் முன்வைக்கும் கேள்விகள் இதுதான்:

1) தமிழர்கள் தங்களுக்கு அரசமைப்பு ரீதியாக சம உரிமை கோரி சாத்வீக வழியில்தானே போராட்டத்தை துவக்கினார்கள்? அதற்கே சிங்களவனுக்கு கோபம் வந்ததே? அதனால்தானே ஈழத் தந்தை செல்வாவையும், அவருடன் நாடாளுமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்த மற்ற தலைவர்களையும் சிங்கள காவல் துறையும், சிங்கள காடையர்களும் அடித்து உதைத்தனர்? அப்படியானால், அவர்களுக்கு கோபம் வரும் வகையில் போராடியது செல்வா செய்த தவறா?

2) செல்வாவின் போராட்டத்தையே ஒடுக்கியதால்தானே பின்னாளில் ஆயுத போராட்டம் உருவானது? அதனால் சிங்களர்களுக்கு ஏற்பட்ட கோபம்தானே 1983இல் வெடித்த இனப் படுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை கொல்லப்பட்டது சிங்களர்கள் கோபமுற்றதால்தானே? அவர்களிடம் ஏன் இந்த ஆலோசனையை அன்றே சொல்லவில்லை?

3) கால் நூற்றாண்டிற்கும் மேலாக நடந்த ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தது மட்டுமின்றி, உங்களது பிறந்த நாளில் வசூலான பணத்தை எல்லா ஆயுதமேந்திய இயக்க்களுக்கும் தலா ரூ.50,000 வீதம் பிரித்துக் கொடுத்தீரே, அது எதற்காக?

கச்சத் தீவிற்கும் இது பொருந்துமா?

இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருக்காது என்பது தெரியும். ஆட்சியில் இருந்தால் ஒரு பேச்சு, எதிர்க்கட்சியானால் வேறு பேச்சு என்பது உங்களை அறிந்த தொண்டர்களுக்கே தெரியும்.

ஆயினும் நமது மற்றொரு கேள்வி இதுதான்:

கச்சத்தீவை மீட்க அரசியல் வேறுபாடுகளை மறந்து நாம் எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினீர்களே? இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை நாம் மீண்டும் கேட்டால் சிங்களவர்களுக்கு கோபம் வராதா? அங்கே சென்று மீன் பிடித்தாலே சுடுகிறானே சிங்களவன்? அந்தத் தீவை திருப்பிக் கொடடா என்று கேட்டால் அவனுக்கு எவ்வளவு கோபம் வரும்? அதனால் நமது மீனவர்கள் பாதிக்கப்படுவார்களே? என்ன செய்வீர்கள்?

நமது ‘மீனவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க’ கச்சத் தீவும் வேண்டாம், அந்த கடற்பரப்பில் நாம் சென்று மீன் பிடிக்கவும் வேண்டாம் என்று கூறுவீர்களா முதல்வர் அவர்களே?

இதேபோல முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையிலும் கேரள அரசிற்கும், அதன் தலைவர்களுக்கும் அடிக்கடி கோபம் வருகிறதே, அந்த அணையை இடித்துவிட ஒப்புக் கொள்வீர்களா?

பாலாற்றுப் பிரச்சனையிலும் உங்களின் அரசு இந்தப் புதிய பாதையில்தான் சென்றுதான் ‘தீர்வு’ காணுமா?

ஆனால் அங்கே தமிழர்களுக்கு மாநில சுயாட்சியாவை கிடைக்க வேண்டும் என்று விரும்புகிற நீங்கள், அதே கோரிக்கையை சமீபத்தில் எழுப்பினீர்கள், அது சோனியாவை கோபப்படுத்தினால் விட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாம் நீங்கள் பதில் கூறவேண்டும். அப்போதுதான் உங்களிடம் எதை எதிர்ப்பார்க்கலாம் என்பது தமிழக மக்களுக்குப் புரியும்.

பெரியார் காட்டிய வழியா இது?

ஆட்சியும், அதிகாரமும், பதவியும் ஒரு மனிதனை மாற்றும் என்று கூறுவார்கள். ஆனால் அது ஒரு தலைவனை இந்த ‘அளவிற்கு’ மாற்றும் என்று இன்றுதான் தெரிகிறது.

சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார், தமிழரின் உரிமைக்காக சமூக, அரசியல் தளங்களில் கடுமையாக போராடினார். அதன் விளைவாகவே இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டு, இட ஒதுக்கீட்டுற்கு வழிகாணப்பட்டது. தமிழரின் மொழிக்கு உரிய இடம் கிடைத்தது.

மானமும், அறிவும் மாந்தரின் அடையாளம் என்றார் பெரியார். அப்படியே நின்றார், போராடினார், வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் வழி வந்த அரசியல் தலைவர்கள் அனைவரும் - விதிவிலக்கில்லாமல் அனைவரும் - பெரியார் ஊட்டிய அறிவையும், தமிழரின் மானத்தையும் அடக்கு வைத்துவிட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதனை சிங்களவன் நன்கு உணர்ந்துள்ளான். அதனால்தான் கூறினான் "தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் கோமாளிகள்" என்று.

http://tamil.webdunia.com/newsworld/news/c...090702121_1.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.