Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சிதிலமாகி உறைந்த காலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

post-7111-12583124117128_thumb.jpg

01

பத்து மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய கவிதைகள் நூலாக்கப்படவுள்ளதாக தெரிவித்து அதற்கு முன்னுரை தரவேண்டும் என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் தீபச்செல்வன். அப்போது நான் கிளிநொச்சியிலிருந்தேன். கிளிநொச்சியை நெருங்கியதாக யுத்தம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. எனினும் கிளிநொச்சியின் சில பகுதிகளில் மின்சாரம் இருந்தது. ஒரு இடத்தில் இணைய வசதியும் கிடைத்தது. என்றபோதும் யுத்தத்தின் தீவிரம் எதையும் நிதானிக்க முடியாத அளவிற்கு நிச்சயமின்மையை உருவாக்கிகொண்டிருந்தது. அதைவிட எப்போதும் அச்சமூட்டிக் கொண்டேயிருக்கும் அபாய நிலை சடுதியாக மாறும் அல்லது வீழ்ச்சியடையும் சூழல். தீபச்செல்வனுக்கு ஒப்புக்கொண்டபடி அவருடைய கவிதைகளுக்கான முன்னுரையினை அனுப்ப முடியவில்லை.

யுத்தம் திடீரென வேகமெடுத்த போது எழுதிய குறையுடன் இருந்த முன்னுரையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டே இடம்பெயரத் தொடங்கினோம். எல்லாவற்றையும் அள்ளிப்போட்டுக்கொண்டு, பெயர்க்கப்பட்ட வீட்டோடு ஒவ்வொரு இடமாக பெயர்ந்து கொண்டிருக்கும் போது எல்லாமே தொலையத் தொடங்கின. எதிலும் நிதானம் கொள்ள முடியாத நிலை. யுத்தத்தின் வேகத்திற்கு எதனாலும் யாராலும் ஈடுகொடுக்க முடியவில்லை. சிதைவுகள,; சேதங்கள், அழிவுகள் இழப்புக்கள் தொடர்புகள் கிடையாது. எல்லாமே தடைப்பட்டன. மிஞ்சியவை தடுக்கப்பட்டன. தகவல் யுகத்தில் எந்தத் தகவல் அமைப்பிலும் நுளைய முடியாமலும் எந்த தகவல்களாலும் தீண்டப்படாமலும் இருந்தோம். வாழ்க்கை முற்றாக மாறியது. நாங்கள் மனிதர்கள்தானா என்று நம்பவே கடினமாகியது. இறந்தவர்களை புதைப்பதற்கோ அவர்களுக்கு ஒரு சிறு சடங்கை செய்யவோ இறுதி மரியாதையை செலுத்தவோ கூட அவகாசமில்லாத வாழ்க்கை.

அபாயவலை எங்கும் பிரமாண்டமாக விரிந்து இறுக்கியது மூச்சை. எதையும் நினைவு கொள்ள முடியாது. எதைப்பற்றியும் சிந்திக்கவும் இயலாது. யுத்தத்தை தவிர அதன் உக்கிர நடனத்தை தவிர வேறொன்றுமில்லை. உயிர் பிழைத்தலுக்கான நிகழ்தகவில் எதிர்மறைக்கூறுகளே கணமும் பெருகிக் கொண்டிருந்தன. வன்னியிலிருந்து எப்படித் தப்புவது என்ற ஒரே எண்ணமே எல்லோருக்கமிருந்தது. தீபச்செல்வனின் கவிதைகளும் ஏறக்குறைய யுத்தத்தின் குரல்களாகவே இருக்கின்றன. அதுவும் இந்த நிலமைகளைப் பேசுவனவாக இருக்கின்றன. வன்னியின் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் வெளியே யாழ்பாணத்திலிருந்தார். இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் குறிப்பிடத்தக்கவை அவர் கிளிநொச்சியில் இருந்தபோது எழுதியவை. சில வன்னி நிலமைகளை அவர் யாழ்ப்பாணத்தலிருந்து எழுதியபவை. யுத்த்தின் நெருக்குவாரம், தீவிரம் பற்றிய அனுபவம் அவருக்குண்டு. வன்னி யுத்தம் யாழ்ப்பாணத்தலிலும் தன் அதிர்வுகளையும் தீவிரத்தையும் காட்டியிருந்தது. (இன்றும் யாழ்ப்hணம் தன்னுடைய இறுக்கத்தலிருந்து மீள வில்லை. இயல்புக்குத் திரும்பவில்லை) எனவே அவர் தன்னுடைய கவிதைகளை எதிர்பார்த்த முன்னுரை இல்லாமலே வெளியிடத் தீர்மானித்து விட்டார்.

இப்போது தீபச்செல்வனின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’யைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. முன்னுரைக்குப் பதிலா இந்த அறிமுகத்தை எழுதலாம் என்று ஒரு எண்ணம் ஏற்பட்டது. ஆனால் அப்போது யுத்த்தின் தீரத்தை அகதி வாழ்வை உயிர் பிழைத்தலு;கான போராட்டம் இவையின்றி வேறில்லை என்ற நிலை. இப்போது எப்போது முடியும் இந்த தடுப்பு முகாம் அவலங்கள் என்ற வாழ்க்கை. எப்படி வெளியே போவது? எப்போது செல்வது? அப்படி தப்பிச் சென்றால் எங்கே போவது? என்று எதைப் பற்றியும் திர்மானிக்க முடியாத நிலை. முடிவற்ற இருட்பரப்பின் நடுவே ஒவ்வொருவரும் நிறுத்தப்பட்டிருக்கிறோம். 10ù10 என்ற அளவிலான முட்கம்பிகளால் சூழப்பட்ட இந்த பிரமாண்டமான முகாம்களிற்குளிலிருந்து கொண்டு எதை எழுதுவது? இன்றும் துப்hக்கியுடன் படையினர் வெளியே சூழவும் காவலிருக்கின்றனர். இந்த நிலையில் இதை மட்முமல்ல எதையும் எப்படி எழுதுவது?

தீபச்செல்வனின் யுத்தக் கவிதைகள் இங்கே முன் சொல்லப்பட்டவற்றின் விவரணை அல்லது சாரம். எனவே அவை எல்லாவற்றையும் நினைவூட்டுகின்றன. மறக்க நினைக்கும் நினைவுகளை ஆறாக்காயங்களை அவை மீண்டும் புதுப்பிக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது துளிர்க்க மறுக்கும் கனவுகளுக்கு முன்னே, நிறங்கொள்ள மறுக்கும் அவற்றின் சாயல்களுக்கு முன்னே தீயோடும் வலியோடும் தம் குரலை உயர்த்தி வைத்திருக்கின்றன இந்தக் கவிதைகள். அதாவது ஈழப்போராட்டத்தின் இறுதிக்கால நிகழ்ச்சிகளை மென் விமர்சனமாகவும் விபரணையாகவும் கண்டனமாகவும் விவரிக்கும் இயல்பை இந்தக் கவிதைகளில் உருவாக்கி வைத்திருக்கிறார் தீபச்செல்வன். இந்தக் கவிதைகளுக்கும் இங்கே முன் சொல்லப்பட்ட நிலமைகளுக்கும் இடையிலான ஒற்றுமைகள் இந்தக் கவிதைகளை ஒரு கால கட்டத்தின் உண்மை வரலாற்றுடன் இறுகப் பிணைத்ததாக உள்ளன.

02

1986இல்- 23 ஆண்டுகளுக்கு முன்னர் ‘மரணத்துள் வாழ்வோம்’ என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்தது. அதில் 52பேரின் கவிதைகள் இடம்பொற்றிருந்தன. எல்லாமே அரசியற் கவிதைகள். அன்று ஈழத்தில் நிலவிய இராணுவ அடக்குமுறையை, அரசியல் வன்முறையை, அரச பயங்கரவாத்தை, இவற்றுக்கெதிரான விடுதலை வேட்கையை வெளிப்படுத்தின இந்தக் கவிதைகள். ஈழத்தமிழரின் அன்றைய வாழ்க்கையை, அது எதிர்கொண்ட சவால்களை, அந்தச் சூழலின் கொந்தளிப்பை, அதன் உணர்வை வெளிப்படுத்திய கவிதைகள் அவை. இந்தக் காலப்பகுதியை நெருங்கியதாக முன்- பின்னாக இன்றும் பல கவிதைகளும் தொகுப்புகளும் வெளி வந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழக்விஞர்களில் ஒருவரேனும் தன் காலச் சூழலையும் நிகழ்ச்சிகளையும் பற்றி எழுதாமல் இருந்ததில்லை. எனவே இந்தக் காலப் பகுதியில் வெளிவந்த எல்லாக் கவிதை நூல்களிலும் அரசியல் கவிதைகள் அல்லது இந்தக் காலப்பதிவுக் கவிதைகள் - கால நிகழ்ச்சிகளின் விவரணை- விமர்சனக் கவிதைகள் தவறாமல் இடம்பெற்றுள்ளன.

ஈழக்கவிதைகள் வெளிச்சூழலில் தீவிர கவனத்தை பெற்றதற்கு இந்தப் பண்புகளும் தொனியும் முதன்மைக்காரணமாகி அமைந்தன. இதேவேளை பின்னர் வெளிவந்த கவிதைகளில் அரச பயங்கரவாதத்தின்மீதான எதிர்ப்புணர்வுடன் விடுதலை அமைப்பக்களிடையே ஏற்பட்ட சிதைவுகள், சகோதரப் படுகொலைகள், அவை உருவாக்கிய அதிகாரக் குவிவு, ஜனநாயக விரோதம் என்பவற்றுக்கு எதிரான குரலும் சேர்ந்தொலித்தன. தமழ்க்கவிதை- தமிழ்த்தேசியம்- தன்னுள் விமர்சனக் கண்ணோட்டத்தை பகிரங்கப்படுத்தவும் ஜனநாயகக்குரலை ஒலிக்கக்கூடிய ஒரு முன் கண்ணோட்டமாக இந்தக் கவிதைகள் அமைந்தன. எதிர்ப்புக் கவிதைகளில் நிச்சயமாக இருக்க வேண்டிய ஜனநாயகக்கூறுகள் இவற்றில் இருந்தது இன்னொரு முக்கிய அம்சம். இது ஈழக் கவிதைகளுக்கு இன்னொரு பரிமாணத்தைக் கொடுத்தன. ஆனால் அதேவேளை இங்கே இரண்டு விதமான நிறங்களும் உருவாகின. ஓன்று சார்பு மற்றது எதிர். புலிகளின் போராட்டை நிபந்தனையின்றி ஆதரித்தவை ஒரு வகையாகவும் (இதில் அரச எதிர்ப்புக்கரலும் சிங்கள தேசியத்திற்கு எதிரான கண்டனமும் தூக்கலாக இருந்தன) அதை விமர்சித்த கவிதைகள் (ஜனநாயகம் பன்மைத்துவத்தை வலியுறுத்தின) இன்னொரு வகையிலும் இருந்தன இந்தப் பண்பு மாற்றத்தின் சிறப்பு அடையாளத்தை நாம் சேரன், சி.சிவசேகரம், இளவாலை விஜயேந்திரன், செல்வி, றஷ்மி, நட்சத்திரன் செவ்விந்தியன், வ.ஐ.ச.ஜெயபாலன், சு.வில்வரத்தினம், ஓட்டமாவடி அறபாத் போன்றவர்களின் கவிதைகளை காணலாம். எல்லாமே முன்னர் குறிப்பட்டதைப்போல ஆயுத வன்றுறையை, ஜனநாயக மறுப்பை, மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேசும் கவிதைகள்.

கடந்த 30 வருடங்களாக ஈழத்தமிழரின் வாழ்க்கை கொந்தளிப்பு மிக்கதாகவே இருக்கிறது. வன்மறை சப்பித்துப்பிய வாழ்க்கையின் துயரம் மிகக் கொடியது. ஏறக்குறைய மூன்று நான்கு தலைமுறைக் கவிஞர்களிடத்தில் இந்த வன்முறை அரசியலின் தாக்கம் உண்டு. குருதியும் நிணமும் தீயும் புகையும், கண்ணீரும், ஓலமும், அலைதலின் விசும்பலும் கொந்தளித்துத் ததும்பும் ஓரூலகத்தை இந்தக் கவிஞர்கள் தங்களின் கவிதைகளில் காண்பிக்கின்றனர். தொடக்கத்தில் சிங்கள இனவாதம்- பேரினவாதம்- அரச பயங்கரவாதம் எனபதற்கெதிரான எதிர்ப்புக் குரலாக வெளிக்கிளமபிய எதிர்ப்புக்குரலாக வெளிக்கிளம்பிய கவிதைக்குரல், விடுதலைப் போரட்டத்தினுள்ளும் விடுதலை அமைப்புகளினுள்ளும் நிகழ்ந்த உள் நெருக்கடிகள், ஜனநாயக மறுப்புகள், மனித உரிமை மீறல்கள், மக்கள் விரோத நடவடிக்கைகள், தமிழ் இனவாதம் என்பவற்றுக்கு எதிராகவும் ஒலித்தன.

கடந்த முப்பதாண்டு கால தமிழ்கவிதைகளில் அதிகமதிகம் ஜனநாயகக்குரலை உயர்ததிய கவிதைகளாக ஈழக் கவிதைகள் இருக்கக்கூடுமென நம்புகிறேன். ஆனால் ஒரு வகையில் இது மிக்கொடியது. மிக மிகத் துயரமானது. அவலம் நிரம்பியது. ஏனெனில், ஜனநாயக மறுப்புச் சூழலில் நமது வாழ்க்கை சிக்கியுள்ளதையிட்டு நாம் எப்படி மகிழ முடியும்? ஒரு பக்கம் சிங்கள இனவாத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் பாதிப்பும் நெருக்கடியும் மறுபக்கம் தமிழ்த்தேசியம் என்ற சுலோகத்தின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலின் நெருக்கடி.களும் பயங்கரவாதமும். சனங்கள் இரண்டு தரப்பினாலும் கிழிபட்டனர். எனவே ஈழ விடுதலை போராட்டம் எப்படிச் சிதைந்தது என்பதற்கான தக்க சாட்சியமாகவும் இந்த கவிதைகள் உள்ளன.

முப்பதாண்டு கால ஈழத்தமிழரின் (முஸ்லிம்கள் உட்பட) வாழ்க்கை சிதைவையும் இன்றைய அவலநிலையையும் இந்த கவிதைகளில் உணர முடியும். அரச பயங்கரவாதம் இன்னும் அப்படியே உயர் வளர்ச்சி நிலையில் உள்ளதையும் விடுதலை போராட்டமும் போராட்ட அமைப்புகளும் எவ்வாறு உருச்சிதைந்து குரூர வெளியில் பிரவேசித்தன என்பதையும் சாட்சி நிலையில் காட்டுகின்றன. இந்த கவிதைகள் ஈழத்தின் குச்சொழுங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அவர்கள் வாழும் ஐரோப்பிய, அமெரிக்க, இஸ்ரேலிய பெருநகரங்கள் வரையில் இந்தத் தொனிமாற்றத்தையும், வளர்ச்சியையும் அடையாளம் காணலாம். யார் யார் எங்கெங்கு இருந்தாலும் ஈழத்தமிழ் கவிதைகளின் மையம் அனேகமாக ஒன்றாகவே இருக்கின்றது. ஈது ஊன்றிக் கவனிக்க வேண்டியதொரு முக்கிய அம்சம். ஏவரெவர் எங்கெங்கு எப்படியெப்படி வாழ்ந்தாலும் அவர்கள் எல்லோருடைய கவனமும் பிரச்சினையும் தங்கள் தாய்நிலத்தில் எப்படி வாழ்வது? அல்லது அங்கு தமிழ் மக்களின் - தமது உறவுகளின் (இது புலம்பெயர்களின் உணர்வுகளுடன் நேரடித் தொடர்புடைய சங்கதி) வாழ்க்கை எப்படி அமைந்துள்ளது என்பதையிட்டது. எனவே எல்லோருடைய பிரச்சினையும் ஒரே மையத்திற் குவிவது தவிர்க்க முடியாத ஒரு நியதியானது. இந்த சூழலமைவு என்பது எப்படி திக்குகள் எட்டிலும் பரவித் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அவ்வாறே ஒவ்வொரு தலைமுறைகளிலும் பாதித்தது.

எனவேதான் முருகையன், சண்முகம் சிவலிங்கம், சி.சிவசேகரம், எம்.ஏ.நுஃமான், மு.பொ, சு.வி, சேரன், ஜெயபாலன், ஊர்வசி, ஒளவை, நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை வியஜேந்திரன், பா.அகிலன், றஷ்மி, அனார், கற்சுதா சோலைக்கிளி, சித்தாந்தன், நிலாந்தன், எஸ்.போஸ் என சகல தரப்பினரையும், சகல தலைமுறையினரையும் ஒரே மையத்தில் குவிய இந்த சூழலமைவும் இந்த நிகழ்ச்சிப் போக்குகளும் காரணமாய் அமைந்தன. இங்கே தீபச்செல்வனும் தவிர்க்க முடியாமல் இந்த மையத்திலேயே தன்னைக்குவிக்கிறார். இஙகே இதை இலகுவாக புரிந்து கொள்ள ஒரு சிறு உதாரணம், 1986ல் வெளிவந்த கவிதை நூலொன்றின் தலைப்பு “மரணத்தில் வாழ்வோம்” 2009ல் வெளிவந்திருக்கும் தீபச்செல்வனின் கவிதை நூலின் தலைப்பு “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” இரண்டு நூல்களும் மரண வளையங்களால் சூழப்பட்ட தமிழ் வாழ்வை குறியாக உணர்த்துகின்றன. எனவே இந்தக் காலப்பதிவாகவே இந்த நூல்கள் உள்ளன என்பதை நாம் இலகுவாக உணர முடியும். அதன்படியே நாம் இந்த கவிதைகளை அணுகவேண்டிய ஒரு நிலையும் உள்ளது. ஏறக்குறைய கால் நூற்றாண்டு கால வெளியில் இரண்டு நூல்களும் வெளிவந்திருக்கின்றன. ஆனால் சூழலின் கொந்தளிப்பு மாறாமல் அப்படியே இன்னும் தீவிர நிலையிலேயே இருக்கின்றது.

மரணத்துள் வாழ்க்கை அதில் என்றால், இதில் பதுங்கு குழியில் பிறக்கின்றது குழந்தை. ஆக தொடரும் போர், அவலம், நெருக்கடி, துயரம், அச்சம், இருள் என்றவாறே வாழ்வும் அதன் நிகழ்ச்சிகளும் தொடர்ந்திருக்கின்றன. இந்த இரண்டு நூல்களுக்குமிடையே அடிப்படையில் எந்தப் பெரிய வேறுபாட்டையும் காணமுடியவில்லை. அதாவது ஈழ நிலமைகளில் வேறுபடில்லாத நிலையை போன்றே இந்தக் கவிதைகளிலும் ஒரே அரசியற் சூழலும், வாழ்க்கை சூழலும் காணப்படுகின்றன. ஆக ஒரு வளர்ச்சி மட்டுமல்ல இது யுத்தத்தின் உக்கிரத்தோடு இணைந்தது. மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் யுத்தத்தின் தொடக்க நிலையிலானவை. அவ்வளவுதான். இதேவேளை இந்தக்கால வெளியில் ஈழச்சூழலிலேயே – குறிப்பாக ஈழ அரசியற் சூழலின் உள்ளே நிறைய மாற்றங்களும் பிரச்சினைகளும் உருவாகி விட்டன. அவற்றை பலரின் பல கவிதைகளும் தம்முள் தீவிரத்துடன் பிரதிபலித்துள்ளன என்பதையும் நாம் தனியாக அவதானிக்க வேண்டும். அதேபோல ஒவ்வொரு கவிஞர்களுக்கும் உள்ள வெளிப்பாட்டு முறமை, மொழிப்பிரயோகம், பார்வை என்பவற்றிலும் வேறுபாடுகள் உண்டு. அவையும் தனியான அவதானத்திற்குரியவை. தீபச்செல்வனின் கவிதைகளை வாசிக்கும் போது தவிர்க்க முடியாதவாறு இந்தக் காலவெளியின் நிகழ்ச்சிகள் இந்தமாதிரியான மதிப்பீட்டுக்கு நம்மை இட்டுச்செல்கின்றன.

முன்னரே குறிப்பி;ட்டு இருப்பதை போல ஈழத்தில் நிலவிய இனவாத அரசியற் சூழலும் போராட்டமும் யுத்தமும் இவற்றின் விளைவுகளான உயிர் அச்சம், ஒவ்வொரு மனிதரையும் எப்போதும் சுற்றிச் சூழ்ந்திருக்கும் அபாய நிலை என்பவற்றையும் இந்த கால வெளிக் கவிதைகள் எளிதில் காட்டுகின்றன. யமன், போரின் முகங்கள், எலும்புக் கூடுகளின் ஊர்வலம், காவுகொள்ளப்பட்ட வாழ்வு, யுத்த சஞ்யாசம், ஆணி அறுந்த வேர், இயல்பினை அவாவுதல், தரப்பட்ட அவகாசம், வாழ்ந்து வருதல், முகங்கொள், எல்லை கடத்தல், இப்படிப் பல. ஆக முன் சொன்னதைப் போன்று கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஈழத்தின் வாழ் நிலை எப்படி அமைந்திருந்தது, அமைந்திருக்கின்றது என்பதற்கான ஆதாரங்கள் இந்தக் கவிதைகள்.

மரணத்தில் வாழ்வோம் கவிதைகள் தொகுக்கப்பட்ட போது தீபச்செல்வனுக்கு வயது மூன்று. அந்தக் கவிதைகளில் பல எழுதப்பட்ட போது தீபச்செல்வன் பிறந்திருக்கவேயில்லை. ஆனால் தீச்செல்வன் இளைஞராகி கவிதை எழுதும் போதும் அதே மாதிரியான பிரச்சினைகளையே அவரும் எழுதவேண்டியிருக்கின்றது. எனவே இதற்கு மேல் ஈழநிலவரத்தை பற்றிய விளக்கங்கள் தேவையில்லை. தவிரவும் இப்போது போரும் முடிந்துவி;ட்டது. ஆனால் இன்னும் போரின் வடுக்கள் தீரவில்லை. அரசியற் பிணக்குகள் தீரவில்லை. அகதி வாழ்க்கை மாறவில்லை. முட்கம்பிகளும் துப்பாக்கிகளும் அகலவில்லை. அகற்றப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரியவில்லை. எனவே இத்தகைய சுருக்கமான வரலாற்றுப் பிண்ணணியில் தீபச்செல்வனையும் அவருடைய பதுங்கு குழியில் பிறந்த குழந்தைகளைப் பற்றியும் நோக்கலாம். இதுவும் ஒரு சுருக்க நிலையிலேயே.

03.

தீபச்செல்வன் வன்னியில் கிளிநொச்சி நகரில் பிறந்து வளர்ந்தவர். இன்னொரு வகையில் சொன்னால் யுத்தத்திற்குள் பிறந்து வளர்ந்தவர். இலங்கைத் தீவிலேயே அதிகமதிகம் அழிவுக்குள்ளான நகரம் கிளிநொச்சி. ஒன்றிரண்டு தடவையல்ல. 1983, 1986, 1990, 1996, 2008, என பல தடைவ அழிந்த நகரம். புல தடவைகள் நடந்த படையெடுப்புக்களில் (சிறிலங்கா இராணுவம், இந்திய இராணுவம், விடுதலைப்புலிகள்) கிளிநொச்சி அழிவுக்கும் மீள்எழுச்சிக்கும் அழிவுக்கும் என்றானது. வன்னி யுத்தம் (ஈழப்போராட்டம்) முடிந்து இப்போது இந்தக் குறிப்பக்களை எழுதிக் கொண்டிருக்கும் போது 46 நாட்களே ஆகின்றன. இந்த யுத்தத்திற் பிறந்த குழந்தைகளில் ஒன்று தன்னுடைய கதையை, உணர்வகளை, எண்ணங்களை, அனுபவங்களை, தான் வளர்ந்த சூழலை, வாழும் காலத்தில் தனக்கு வாய்த்த மொழியில் அல்லது இது வாழும் காலமும் சூழலும் இதற்களித்த மொழியில் பேச முனைகிறது. இவையே இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைகளை படிக்கும் போது ஏனோ த.அகிலனின் கவிதைகளை பற்றிய நினைவுகள் வருகின்றன.

தீபச்செல்வனும் த.அகிலனும் கிளிநொச்சியை சேர்ந்த இரண்டு இளம் கவிஞர்கள். இருவரும் ஒரெ வயதுடையவர்கள். ஏறக்குறைய ஒத்த வாழ்க்கை சூழலையும் அனுபவத்தொகுதியையும் கொண்டவர்கள். அத்துடன் ஒரே பள்ளியில் படித்தவர்கள். (கடந்த கால யுத்தத்தின் சின்னமாக – எச்சமாக - இவர்கள் படித்த கல்லூரியின் பெரிய கட்டிடத்தொகுதியொன்று அங்கே விடப்பட்டிருக்கின்றது.) எனவே இவர்கள் இருவரின் கவிதைகளிலும் சில அடிப்படை விசயங்கள் ஒத்ததாக இருக்கின்றன. அதேவேளை சில இடங்களில் சில முறமைகளில் இருவரும் தத்தமது பார்வை ஆளுமை என்பவற்றிற்கு ஏற்ப வேறுபடுகிறார்கள். த.அகிலனின் கவிதைகள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்புவதையும் விட மனித உணர்வு சார்ந்த விடயங்களையும் விடுதலைப்புலிகளின் நடைமுறைகள் மற்றும் அவர்களுயை கோட்பாடுகளுக்கெதிரான விமர்சனங்களையுமே அதிகமாக கொண்டவை. தொடக்க நிலையில் அகிலனும் அரச பயங்கரவாதம் சிங்கள இனவாதம் என்பவற்றிற்கு எதிராகவே எழுதியவர்.

ஈழத்தின் பெரும்பாலான கவிஞர்களும் படைப்பாளிகளும் ஆரம்பத்திலோ அல்லது ஏதோ ஒரு கட்டத்திலோ அரச பயங்கரவாதத்திற்கும் சிங்கள இனவாதத்திற்கும் எதிரான படைப்பியக்கத்தில் ஈடுபட்டிருப்பது யதார்த்தம். அதேவேளை இவர்களில் அநேகர் பின்னாட்களில் விடுதலை அமைப்புக்களின் குறிப்பாக விடுதலைப்புலிகளின் சிதைவுகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் ஜனநாயக மறுப்பையும் விமர்சித்து எழுதுகின்றனர். அகிலனும் இவ்வாறுதான் தன்னுடைய பயணத்தில் திகழ்கின்றார். அரச பயங்கரவாத்திற்கு எதிராக ஆரம்பித்து விடுதலை அமைப்புக்களின் அராஜகத்திற்கு எதிராக இயங்குகின்றார். ஆனாலும் சிவசேகரம், சேரன், நட்சத்திரன், செவ்விந்தியன், இளவாலை விஜயேந்திரன், சிவரமணி, தீவிரநிலையிலும் உயர்தொனியிலும் எழுதவில்லை அகிலன். அவருடைய தொனி மென்னிலையானது. அவ்வாறே அவருடைய விமர்சனங்களும் கண்டனங்களும் அவருடைய ஒரே சகோதரரை (இவர் பொறியியற் துறையில் உயர்கல்வியை படிப்பதற்கு தேர்வாகியிருந்தார். பின்னர் கொல்லப்பட்டு விட்டார்.) விடுதலைப் புலிகள் கட்டாயப் போர் நடவடிக்கைகளுக்காக பிடித்துச் சென்ற போது (அப்போதுதான் அகிலனும் ஈழத்தை விட்டு தமிழத்திற்கு சென்றார்) எழுதிய கவிதை இதற்கு அகிலனின் கவிதைகளின் இயல்புக்கு ஒரு ஆதாரமாக இதைக் குறிப்படலாம்.

----------

வெறுமனே

எதிர்முனை இரையும்

என் கேள்விகளின் போது

நீ

எச்சிலை விழுங்குகிறாயா?

எதைப்பற்றியும்

சொல்லவியலாச்

சொற்களைச் சபித்தபடி

ஒன்றுக்கும் யோசிக்காதே

என்கிறாய்..

உன்னிடம்

திணிக்கப்பட்ட

துப்பாக்கிகளை நீ

எந்தப்பக்கமாகப் பிடிப்பாய்

வாய் வரை வந்த

கேள்வியை விழுங்கிக்கொண்டு

மௌனிக்கிறேன்.

தணிக்கையாளர்களாலும்

ஒலிப்பதிவாளர்களாலும்

கண்டுகொள்ளமுடியாத

ஒருதுளிக்கண்ணீர் புறங்கையில்

உதிர்கிறது..

தொலைபேசிகளை

நிறைக்கிறது

ஒரு நிம்மதிப்பெருமூச்சு..

நீ நிம்மதியாப் போ..

-----------

இதேபோல தீபச்செல்வனின் தங்கையை – அதிலும் அவள் பதின்மூன்று வயதுச்சிறுமியாக – பள்ளி மாணவியாக இருந்தபோது புலிகள் அவளை பிடித்துச் சென்றதையும் தீபச்செல்வன் தன்னுடைய

--------------------------------

இப்படி ஒரு கவிதையும்

இப்படி அச்சம் தருகிற இராத்திரியும்

ஏன் என்னை நெருங்கின.

கடைசியில் பொய்த்துப்போய்

கிடக்கிறது எனது சொற்கள்.

இனி குழந்தைகள் போரிடுகிற களம் பற்றி

நான் ஒரு பரணியெழுதுகிறேன்?

ஷெல்களின் மத்தியில் சேர்ந்துகொண்டு

நடுங்கியபடியிருக்க நீ வேண்டும்?

யார் உன்னை இழுத்துச் சென்றனர்?

அண்ணாவைப்போல அவர்கள் இருந்தனர்.

அண்ணா நமது தேசத்தைப்போலவே

உன்னையும் மிகவும் நேசித்திருந்தான்.

குழந்தைகள் துப்பாக்கிகளில் மறைந்திருந்தனர்

என்று அம்மா சொல்லுகிறாள்.

-----------------------------------

(நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு)

என்ற கவிதையில் வெளிப்படுத்துகின்றார். இந்தக் கவிதை அவரது நூலில் இல்லை. அவருடைய இணையத்தளத்தில் இதைப் படிக்க முடியும். இவ்வளவுக்கும் தீபச்செல்வனின் சகோதரர் ஏற்கனவே விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து சாவடைந்தவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ நூலே இந்த சகோதரனுக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.

தீபச்செல்வனின் கவிதைகள் போரையும் இராணுவ அழுத்தத்தையும் பொதுவான தமிழ் மனநிலை நின்று நோக்குகின்றன. தமிழ் பொதுமனநிலை என்பது உடனடியாக அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே முதற்பார்வையாக கொள்ளும் இயல்பைக் கொண்டது. இதற்கு தமிழ் மக்களின் பேரால் இயங்கிய அரசியற் கட்சிகளும், இயக்கங்களும், அரசியலாளர்களும், இந்த நோக்குநிலை ஊடகங்களும் ஒரு பிரதான காரணமாகும். அதிலும் குறிப்பாக பின்னர் தமிழ் மைய ஊடகங்கள் விமர்சனம், மாற்றுப்பார்வை, ஜனநாயகமின்மை, என்று ஒற்றைப் படைத்தன்மையில் - சார்பு எதிர்ப்பு- ஒரு நண்பர் சொல்வதைப்போல கறுப்பு வெள்ளை என்ற பிரிப்பில் இயங்கியதால் பெரும்பாலான இளைய தலைமுறைப்படைப்பாளிகள் அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே தமது பார்வைத்தெரிவில் கொண்டனர். நட்சத்திரன், செவ்விந்தியன், சிவரமணி போன்றோர் இதில் விதிவிலக்கு. இந்த ஊடகங்கள் கட்டமைக்கும் கருத்துலகுக்கு வாய்ப்பானதாக சிங்கள இனவாதிகளும் அரசும் காரணமாக இருப்பதையும் இங்கே நாம் நோக்கவேண்டும்.

பேராசிரியர் கா.சிவத்தம்பி ஒரு தடைவ குறிப்பிட்டதை போல ‘தமிழ் மக்களின் போராட்டத்திலுள்ள ஜனநாயகமின்மை, அதன் நீதி மறுப்பு என்பனவெல்லாம் சிங்கள இனவாதத்தினால் மிக லாவகமாக மறைக்கப்படுகின்றன என்பது இந்த வாய்ப்பை இன்னும் தமிழ் அரசியலாளர்களுக்கும் சார்பு ஊடகங்களுக்கும் அளித்தது. இன்னும் இந்த ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியற் பாதை குறித்து தெளிவாக சிந்திக்க தயாராக இல்லை. கடந்த ஐம்பது ஆண்டுகால அதேமனநிலை, அணுகுமுறை, போக்கு என்பவற்றினடியாகவே இயங்குகின்றன. சர்வதேச அரசியல், பொருளாதாரம், இவற்றுக்கான இராஜதந்திரப் பொறிமுறை, அறிவியல் வளர்ச்சி, அதன் விளைவான தகவல் தொழில்நுட்ப ஆதிக்கம், போன்ற இன்னோரன்ன அம்சங்களையும் இவற்றின் செல்வாக்கு மற்றும் பாதிப்புக்களையும் கணக்கில் எடுத்ததாக தெரியவில்லை.

யதார்த்தை உணர மறுக்கும் கற்பனாவாதப் போக்கும் அந்த மனநிலையில் மக்களை தொடர்ந்தும் வைக்கும் நோக்குமே இந்த ஊடகங்களின் இயங்கு முறையாக உள்ளது. உண்மையைக் கண்டறிய தயங்கும் இந்த நிலை உண்மையிலிருந்து சனங்களை வெகு தொலைவில் நிறுத்தும் காரியத்தையே செய்கின்றது. உண்மையிலிருந்து மக்களை பிரித்து தூரவைப்பதன் மூலம் மக்களை அறியாமையில் வைக்க முயல்கின்றன. இதை விரும்பியோ விரும்பாமலோ தெளிவில்லாமலோ தெளிந்தோ இந்த ஊடகங்கள் செய்யலாம். ஆனால் இந்த ஊடகங்களும் இவற்றில் இயங்கும் பல ஊடகவியலாளர்களும் தமிழ் மேலாதிக்க மனோபாவத்தால் கட்டமைக்கப்பட்டவர்கள். (இந்த ஊடக கலாச்சாரத்திற்கெதிரான முயற்சிகளில் ஈடுபட்ட கசப்பனுபவங்கள் எனக்குண்டு என்பதால் இதனை இங்க அழுத்தமாக குறிப்பிட முடியும்.) எனவே இவர்களாலும் இந்த ஊடகங்களாலும் கட்டமைக்கப்படுகின்ற உலகத்தில் (வன்னியில் எல்லாவற்றிகும் தடை வேறு) இருந்தகொண்டு எழுதும் அல்லது எழுதத் தொடங்கும் இளந்தலைமுறையின் எழுத்துக்கள் ஆரம்பத்தில் இவை உருவாக்கும் போது மனநிலையில் - படிமத்தில் - இருந்தே பிறக்கும். ஆனால் பின்னர் ஆளுமையும் சுயமும் உள்ள படைப்பாளிகள் இவற்றில் இருந்து விலகிச்சென்று விடுகின்றனர்.

இதுவே அகிலனுக்கும் தீபச்செல்வனுக்கும் நிகழ்ந்தது. இதுவே சேரனுக்கும், ஜெயபாலனுக்கும் ஏனையோருக்கும் நிகழ்ந்தது. அதாவது காலப்போக்கில் தன்னுடைய அனுபவத்திலுலிருந்தும் நோக்கு நிலையிலிருந்தும் இன்னும் விசாலிக்கும் போதும் தமிழ்ச் சூழலிலேயே நிலவுகின்ற ஜனநாயக மறுப்பையும் அதிகாரத்துவத்தையும் கண்டு அதிர்ச்சியடைகின்றார் ஒரு படைப்பாளி. இது இந்தச் சூழலில் ஏதோ திடீரென முளைத்துள்ள நிலமைகள் அல்ல. தொடர்ந்து நீண்ட காலமாக வளர்ந்திருக்கும் இத்தகைய எதிர்நிலைகள் சிங்கள இனவாதத்தினாலும் அரச பயங்கரவாதத்தினாலும் போர்த்தி மறைக்கப்பட்டிருந்தன என்பதே இங்கு சோகம். (இதற்கு பலியானோரில் நானும் ஒருத்தன்) எனவே ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இனவாதத்திற்கு எதிராகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விடுதலைக் குரலை உயர்த்திய பல கவிஞர்கள் பின்னாட்களில் தமிழ்ச்சூழலில் நிலவும் ஜனநாயக விரோத சூழலையும் தமிழ் இனவாதத்தையும் விமர்சிப்பதில் வந்து நின்றனர். இதற்கு நல்ல உதாரணம் “மரணத்தில் வாழ்வோம்” கவிஞர்கள்.

இங்கே தீபச்செல்வனும் சரி அகிலனும் சரி இந்த வகையிலேயே உள்ளனர். ஆனால் நட்சத்திரன், செவ்விந்தியன் போன்றோர் இதற்கு விதிவிலக்கு எனக் கண்டோம். தீபச்செல்வனின் முதல்நிலை அனுபவம் வன்னிச் சூழலும் அங்கு நிகழ்ந்த போருமே. வன்னிப் போர் பற்றிய விமர்சனங்களும் கண்டனங்களுமே அவருடைய முதற்கட்ட கவிதைகள். குறிப்பாக பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைகள். ஆனால் தீபச்செல்வனின் இணையத்தளத்திற் காணப்படுகின்ற கவிதைகள்; பலவும் வன்னியின் இறுதிக்கால நிலவரம் தொடர்பானவை. ஏனையவை யாழ்ப்பாண நிலமைகளின் பதிவுகள் அல்லது வெளிப்பாடு.

“எனது அறையை சூழ்ந்து வந்தன

பல மிருகங்கள்

-------------------------------------

--------------------------------

அறைகளை முழுக்க

மோப்பமிடுகிறது அந்த நாய்

புத்தகங்களையும்

பேனாக்களையும்

ட்ரக்கில் நிரப்பி விடுகின்றது.

ஆந்த மிருகங்கள்

என்னை நெருங்கி அறைந்த விடுகின்றன

கைகள் கழன்று விட

நான் முண்டமாகி கிடந்தேன்.

தணிக்கை செய்யப்பட்ட செய்தியை

வானொலி வாசிக்கிறது.

சொற்கள் கொலை செய்யப்பட்டு

புதைக்கப்பட்ட

துப்பாக்கிகள் விழுங்கிய இரவின்

மறுநாள்

குருதி வடியும் புத்தகங்களை சுமந்து

நானும் அவளும் வகுப்பறைக்கு போனோம்.

(துப்பாக்கிகள் விழுங்கிய இரவின் மறுநாள்)

இத்தகைய கவிதைகள் ஈழக்கவிதைகளுடன் பரிச்சயமானவர்களுக்கு புதுமையல்ல. சேரனின் கவிதை ஒன்றும் ஏறக்குறைய இதேபோன்றுதான் ஒரு சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. அது சிறைச்சாலை வரை நீழ்கிறது. உண்மையில் தணிக்கை செய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாற்றீடாகவே இந்தக் கவிதைக் குரல்கள் முன்னெழுகின்றன. இந்தப் படைப்புக்களின் முக்கியத்தவம் என்பது முதல் நிலையில் இவை மறைக்கப்பட்டவற்றிற்கு எதிரான தடைகளுக்கெதிரான ஒலிப்புக்களே. (ஆனால் இத்தகைய எழுத்துக்கள் பிற விவகாரங்கள் பலவற்றை மறைத்ததையும் நாம் இங்கு குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஜனநாயகமற்ற சூழல், முஸ்லிம் விவாதம், தலித்துக்களின் பிரச்சனை போன்றன) எப்படியோ தணிக்கை செய்யப்பட்ட செய்திகளுக்கு மாற்றீடாக தன் கவிதைகளை முன்வைக்கும்.

தீபச்செல்வன் அதிகமாக நிகழ்வகளை பதிவாக்கும், ஆதாரப்படுத்தும் ஓர் உபாய முறையில் அதிகமாத் தன்னுடைய கவனத்தை குவித்திருக்கிறார். இந்தத் தொகுதியில் உள்ள ஒரு கவிதைகளில் எட்டுக் கவிதைகளுக்கு அடிக்குறிப்புக்கள் உள்ளன. இந்தக் குறிப்புக்கள் இந்தக் கவிதை எழுந்ததற்கான பின்ணணியை விபரிப்பன. நிகழ்ச்சியை கூறுவன. நூலின் அறிமுகத்தில் சொல்லப்படுவதைப் போன்று ‘நோக்கம் சார்ந்து வெளிப்படையாக பேசும்’ பண்பைக் கொண்டவை இந்தக் கவிதைகள். இதுதான் தீபச்செல்வனுக்கு இப்போது அவசியமாகவும் இருக்கிறது. ஆனால் இந்த வெளிப்படை சாதாரணமானதல்ல. அசாதாரணமானது. குறிப்பாக “யாழ் நகரம்” என்ற கவிதை,

ஒரு கொத்துரொட்டிக் கடை

இனந்தெரியாத பிணம்

நீளும் அமைதி: யாழ் நகரம்

யாழ்ப்பாணத்தின் ஒருகாலகட்ட நிலவரத்தையும நிகழ்ச்சிகளையும் இந்த மூன்று வரிகளும் சாதாரணமாக சொல்லிவிடுகின்றன. ஆனால் இவை சொல்லும் அல்லது மனதுள் விரிக்கும் அசாதாரண நிலை மிகப் பெரியது. யுத்தம் முடிந்த பின்னரும் - இவ்வளவுக்கும் யுத்தம் நடந்தது வன்னியில் - இன்னும் யாழ்ப்பாணம் உறை நிலையில் இருந்து மீளவில்லை. அச்சப் பிராந்தியத்துள் அது அமிழ்ந்தேயிருக்கிறது. கிலி நீங்கவில்லை. அவ்வளவுக்கு இரவுக்கொலைகள், இனந்தெரியாத கொலைகள் யாழ்ப்பாணத்தின் இரத்தவோட்டத்தை உறைய வைத்தன. இன்றும் ஊரடங்கு நீங்காத நகரமாகவே இருக்கிறது யாழ்ப்பாணம்.

யாழ் நகரம் பற்றி கடந்த முப்பது ஆண்டுகளில் ஏராளம் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. நுஃமான், அ.யேசுராசா, சோ.பத்மநாதன், சேரன், மைதிலி, நிலாந்தன், சத்தியபாலன், இயல்வாணன், பா.அகிலன், புதுவை இரத்தினதுரை எனப்பலர் யுத்தகால யாழ்நகரை எழுதியிருக்கின்றனர். ஆனால் என்னுடைய வாசிப்பில் பா.அகிலனின் (யாழ்ப்பாணம் 1996 நத்தார்) என்ற கவிதையும் தீபச்செல்வனின் யாழ் நகரமும் ஏற்படுத்திய அதிர்வுகள் அதிகம் என்பேன். பா.அகிலனின் கவிதைகள் கலை எழுச்சியுடன் அமையப்பெற்றது. தீவிர உணர்தளத்தை நோக்கி ஊடுருவும் வீச்சையுடையது. தீபச்செல்வனின் கவிதை காட்சி விபரிப்பாக எழுந்து மனதில் அழுத்தமாக இந்தக் காட்சியை உறைய வைப்பது. காட்சிப்படிமத்தை உருவாக்கும் வகையில் தீபச்செல்வன் சொற்களை இணைக்கும் உத்தியை – தொழில்நுட்பத்தை – கையாள்கிறார். சொற்களை ஒரு காட்சி சாதனமாக்குகிறார் என்றும் சொல்லலாம்.

வீதி மயானமாகிறது

சீருடைகள் சவப்பெட்டியாகின்றன

மின் தூண்கள் உயிரை குடிக்கின்றன

யாரோ சாப்பிட வருகிறார்கள்

கொத்து ரொட்டிகடை திறந்திருக்கிறது.

(யாழ் நகரம்)

இந்தச சித்தரிப்பு நாமகளின் ‘யதார்த்தம்’ கவிதையை ஒத்திருக்கிறது. அதேபோல ‘காகங்கள் கரைகின்றன மரணம் நிகழ்கின்றது’ என்றவாறாக செல்லும் அஷ்வகோஸின் கவிதையையும் ஒத்திருக்கிறது. சாவும் அவலமும் துயரமும் இயல்பாகிப்போயிருக்கிறது என்பதையே இவை சொல்கின்றன. ஆனால் தீபச்செல்வன் இந்த இயல்பை சிதைத்த விடுகின்றார். இதில் அதிர்ச்சியூட்டும் இன்னொரு இடம்,

நீங்கள் சாப்பிடும் கொத்துரொட்டி

மேசையில் பரவியிருக்க

எனது பிணம்

பின்னணியாய் தெரியும்

(யாழ் நகரம்)

எவ்வளவு குரூரமான யதார்த்தம் இது.

இந்தத் தொகுதியில் உள்ள இன்னொர கவனத்திற்குரிய கவிதை ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ இந்தக் கவிதையின் அரசியல் பற்றி பல முரண்பாடுகள் உண்டு.

எனது குழந்தை

சதாமின் ஆட்சிக் காலத்தில்

ஈராக்கில் பிறந்திருக்கலாம்’

என்பதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கெதிரான தீபச்செல்வனின் எதிர்ப்புணர்வு நிபந்தனையற்று, கேள்விகளற்று சதாமை ஆதரிக்க வைக்கிறது. சதாமின் ஜனநாயக மறுப்புகளும் வரலாற்று குருட்டுத்தனங்களும் குர்திஷ்களுக்கு சதாம் இளைத்த அநீதியும் இங்கே கண்டுகொள்ளப்படவில்லை. இதே வேளை இந்தக்கவிதையில் வரும்

நான்

கடும் யுத்தப்பேரழிவில் பிறந்ததாய்

அம்மா சொன்னாள்

எனது குழந்தையை

நான் இந்த பதுங்கு குழியில்

பிரசவித்திருக்கிறேன்.

(பதுங்கு குழியில் பிறந்த குழந்தை)

என்ற அடிகள் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டதை போல ஈழத்தின் தொடர் யுத்தச் சூழலை இலகுவாகவும் துல்லியமாகவும் சொல்கிறது. ஆனால் ஈழக்கவிதைகளில் பின்னாட்களில் உருவாகியிருக்கும் ஈழ்ப்போராட்டம் பற்றிய விமர்சனங்கள் தீபச்செல்வனிடம் இங்கு முழு அளவில் இல்லை. நிகழ்ச்சிகளை பதிவுசெய்தல், அவற்றின அடியாக எழும் உணர்வுகளை வெளிப்படுத்தல் என்பவற்றை தனது அக்கறையாகவும் முறைமையாகவும் கொள்கிறார் தீபச்செல்வன்.

இது அவரை விமர்சன பூர்வமாக எதையும் அணுக வேண்டும் என்ற ஒரு நிலைக்கு இட்டுச்செல்லும் ஒரு ஆயத்த நிலை என்று கருதலாம். ஏனெனில் தீபச்செல்வன் வரிசைப்படுத்தும் நிகழ்ச்சிகள் அவரை அப்படியொரு நிலைக்கே கொண்டு போகும். ஈழப்போராட்டத்தை ஆதரித்த படைப்பாளிகளில் பலரும் இத்தகைய ஒரு பரிணாம நிலையையே எட்டியுமிருக்கின்றனர். இப்போது இணையங்களில் காணப்படுகின்ற தீபச்செல்வனின் கவிதைகளும் பிற எழுத்துக்களும் அதை நிரூபிக்கின்றன. இது புலிகளின் வீழ்ச்சியுடன் ஏற்பட்ட மாற்றமல்ல. ஏற்கனவே அவருடன் தொடர்புடையோருக்கு அவரிடம் நிகழ்ந்து வந்த இந்த வளர்ச்சியைத் தெரியும். அவர் தொடர்பு கொள்ளத்தொடங்கிய இணையங்கள் இதற்கு இன்னொரு ஆதாரம்.

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை நூலில் இரவு நதி, முட்களுக்காக முளைத்திருக்கும் கால்;கள், கத்தி, அம்மாவின் வீடு கட்டும் திட்டம், இரவு மீது அமர்ந்திருக்கும் சிவப்பு பறவை, இரவு நட்சத்திரங்கள், சாபத்தின் நிழல், யாழ் நகரம், பதுங்கு குழியில் பிறந்த குழந்தை ஆகிய கவிதைகள் கவனத்திற்குரியன. நம் மனதில் துக்கத்தையும் அதிர்ச்சியையும் நிகழ்த்துவன. மூடுண்ட ஈழச் சூழலின் உள்ளரங்க நிகழ்ச்சிகளில் ஒரு தொகுதியை பதுங்கு குழியில் பிறந்த குழந்தை சொல்கின்றது. ஆனால் பல தொகுதிகள் சொல்லப்படவிருக்கு. அதைச் சொல்லத் தெடங்கியிருக்கிறார் தீபச்செல்வன் தன்னுடைய இன்றைய கவிதைகளில்.

-----------------------

http://deebamvelekkalam.blogspot.com/2009/11/blog-post.html

இந்த விமர்சனத்தை யாழில இருக்கிற பலர் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை போல இருக்கிது.

bookj.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விமர்சனத்தை யாழில இருக்கிற பலர் இன்னமும் முழுமையாக வாசிக்கவில்லை போல இருக்கிது.

bookj.jpg

நான் வாசிச்சிட்டேன் மச்சான். ஆனால் பல உண்மைகள் வெளிப்படையாக கருணாகரனால் முன்வைக்கப்பட்டுள்ளது. கொஞ்சம் பொறுங்கொ வீரர்கள் புறப்பட்டு வருவார்கள். ஏற்கனவே நீறுபூத்த நெருப்பாயிருக்கிற தேசியத் தூண்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"பதுங்குகுழியில் பிறந்த குழந்தை" கவிதைத் தொகுப்பு தமிழ் மக்களின் இருப்பு பற்றி அக்கறைப்படும் அனைவரும் வைத்திருக்கவேண்டிய நூல். இன்னும் என் கையில் கிட்டவில்லை.

கருணாகரன் முள்ளிவாய்க்கால் வரை சென்று வந்தவர் என்பதால் போரின் இறுதிக் கால நிகழ்வுகளை / தனது வன்னி அனுபவங்களை எதிர்காலத்தில் வெளிக்கொணரவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.