Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனுக்கு அகதி என்று பேர்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு அகதி என்று பேர்!

வீழ்ந்துகிடக்கும் பெருங்கனவாகக் கண் முன்னால் கிடக்கிறது வன்னிப் பெருநிலம். தமிழீழ நிலப்பரப்பு சூனியத்தால் சூழப்பட்டு இருக்கிறது. முள்வேலி முகாம்களுக்குள் மக்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சூழலில் இலங்கை முகாம் ஒன்றில் இருந்து தமிழகம் வந்திருக்கும் சிலரைச் சந்திக்க முடிந்தது. அவர்கள் சொல்லும் உண்மையின் வார்த்தைகள் இவை…

”முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு இருந்த மூன்று லட்சம் வரையிலான மக்களில் சரிபாதியினரை அரசு வெளியேற்றி இருக்கிறது. மீதமிருக்கும் முகாம் மக்களையும் இலங்கை அரசு வெளியேவிட்டு தான் ஆக வேண்டும். ஏனென்றால், இலங்கைத் தீவானது பொருளாதார நிலைமைகளில் முற்றுமுதலாகச் சீர்குலைந்து கிடக்கிறது. சிங்கள மலைப் பாம்பு ஒரு பெரும் இரையை விழுங்கிவிட்டது. அதனால் எங்களைச் செரிக்க முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் துப்பித்தான் ஆக வேண்டும். ஆனால், தமிழர்களுக்கான பிரச்னைகள் வேறு.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, புதுக் குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் என ஒவ்வொரு இடமாகராணுவம் கைப்பற்றிக்கொண்டே வந்தபோது, நாங்கள் எங்க ளின் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு இடம்பெயர்ந்தோம். வீட்டுக் கூரை, கதவு, ஜன்னல், நிலைப்படி, சாமான்கள் என சகலத்தையும் எடுத்துப் போனோம். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை வீடு என்பது வெறுமனே கூரை மட்டும்தான். பொருளாதாரத் தடை மற்றும் கால் நூற்றாண்டு கால போர்ச்சூழலால் அவ்வகையான வீடுகளே எங்களுக்கு வாய்த்திருந்தது. இறுதியில் உயிரன்றி வேறெந்த உடைமைகளும் அற்றவர்களாக முகாம்களில் அடைக்கப்பட்டோம். இப் போது திடீரென பூர்வீகப் பிரதேசங்களில்கொண்டு போய்விட்டால், என்ன செய்வது?

தண்ணீர் குடிக்கும் குவளை முதல், சோறு காய்ச்சும் அடுப்பு வரை சகலமும் புத்தம் புதிதாக ஏற்படுத்த வேண்டும். ஓர் ஏனம்கூடக் கிடையாது. வீட்டைச் சரிசெய்ய வேண்டும் என்றால், அதற்குரிய உபகரணங்கள் வேண்டும். அந்த வேலைகளைச் செய்யும் தொழிலாளிகள் வேண்டும். உளி, சுத்தியல், ஆணிகூடக் கிடையாது. அவற்றை விற்கும் வியாபாரிகள் இல்லை. இந்த யதார்த்தத்தில் இருந்துதான் இதை அணுக வேண்டும்.

நாங்கள் விட்டுபோன வீடுகளில் சரிபாதிக்கு மேல் குண்டுவீச்சில் சிதிலம் அடைந்துவிட்டன. அந்தப் பகுதியே உடைந்து நொறுங்கிச் சுடுகாடாகக் கிடக்கிறது. மிச்சமிருக்கும் சில வீடுகள்கூட கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மழை, வெயில் அனைத்திலும் சிக்கி புதர் மண்டி, மரம் முளைத்துக் கிடக்கின்றன. காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து விட்டன. இந்த நிலையில், அடிப்படையான உள் கட்டுமானங்களைச் செய்யாமல் அங்கு மக்கள் வசிக்க முடியாது.

பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் இறந்துவிட்டனர். இருப்பவர்களும், கை கால்களை இழந்து நிற்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் வயசாளிகளும், பெண்களும், குழந்தைகளுமே நிறைந்திருக்கிறார்கள். உழைக்கத் தகுந்த உடலுடன் இருப்பவர்கள் வெகு குறைவு. இவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்து இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசாங்கத்தின் பொறுப்புதான்.

நாடு முழுவதும் செயல்பட்டு வந்த 33 தடுப்பு முகாம்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு இருக்கிறது. அழைத்துச் செல்வதற்கு உறவினர்கள் இருப்பவர்களைச் சிலகட்ட விசாரணைகளுக்குப் பிறகு வெளியே விடுகிறார்கள். முகாமில் இருந்து பூர்வீகப் பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லும்போது வசிக்க வீடு இல்லை என்றால், இடைத்தங்கல் முகாம்களில் விட்டுவிடுகிறார்கள். இதைத்தான் ‘ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமில் அடைக்கிறார்கள்’ என்று தமிழ்நாட்டில் பேசுகின்றனர்.

காடுகளை அழித்து வெறும் மண் தரையில் உருவாக்கிய முகாம்கள் இப்போது மழைநீரில் தத்தளிக்கின்றன. ஆழம் குறைவாகத் தோண்டப்பட்ட மலக் குழிகள் மழை நீரில் சிதைந்து கழிவுகள் மேலே மிதக்கின்றன. கொடுக்கப்படும் அரிசியைச் சமைத்து சாப்பிடவும் விறகு இல்லை. வெளியில் சென்றோ, பக்கத்து முகாமுக்குச் சென்றோ விறகுகளை எடுத்து வரவும் ராணுவம் அனுமதிப்பது இல்லை. உலக உணவுத் திட்டத்தின் கீழ்தான் இப்போது மக்களுக்கான உணவு விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு முன்பிருந்து அவர்களும் ‘நிதிப் பற்றாக்குறை’ எனக் காரணம் சொல்லி, தங்களது உணவு விநியோகத்தை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துவிட்டார்கள்.

தமிழர் வாழ்ந்த பகுதிகளில் தீவிரமான நிரந்தரக் கண்காணிப்பு வளையங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலைச் சுற்றி இலங்கைக் கடற்படை நிறுத்தப்பட்டு இருக்கிறது. பல்வேறு இடங்களில் ராணுவத் தளங்களும், காவல் நிலையங்களும் உருவாகிவிட்டன. ராணுவ கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வடமராச்சி கிழக்கு, வளிகாமம் வடக்கு போன்ற பகுதிகள் உயர் பாதுகாப்புப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்த நிலத்துக்காகப் போராடினோமோ, எந்த நிலத்தைச் சமர் புரிந்து எங்கள் வசமாக்கி வைத்திருந்தோமோ அதே நிலத்தில் இப்போது அகதிகளாக வாழ்கிறோம். முகாமில் இருந்து வெளியே வந்தாலும் இதுதான் நிலைமை.

நாம் தோல்வியுற்ற இனம். நமக்கென யாரும் இல்லை. இன்று இலங்கை அரசாங்கத்துடன் சவால் செய்து உரிமைகளைப் பெறுவதற்கு ஓர் அரசியல் தலைமை அரங்கில் இல்லை. நாம்தான் கைகளைக் கோத்து எழுந்து வர வேண்டும். ஈழ மக்களின் உரிமைப் போராட்டம் நந்திக்கடலுடன் முற்றுப்பெற்றுவிடவில்லை. முற்றுமுதலாக அடக்கி ஒடுக்கப்பட்ட அல்ஜீரிய விடுதலைப் போர் 40 ஆண்டுகள் கழித்து வெல்லப்பட்ட வரலாற்றை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். இனியாவது ஆயுதங்களை நம்பிய காலத்தைக் கைவிட்டு, அரசியலை நம்புவோம்!” என்கிறார்கள் மிகுந்த நம்பிக்கையுடன்!

நன்றி: விகடன் சஞ்சிகை

http://www.meenagam.org/?p=16774

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.