Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி

-தனபாலா

மஹிந்த இராஜபக்ச தன் நண்பர்களை வீழ்த்தி, தன் எதிரிகளை சிம்மாசனத்தில் ஏற்றினார் என வரலாறு அவரைப் பற்றிய கணிப்பீட்டை பதிவு செய்யத் தவறாது.

2005ஆம் ஆண்டு, மஹிந்த இராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியவர் மங்கள சமரவீர. சுதந்திரக் கட்சிக்குள் இருந்த பண்டாரநாயக்க அணியைத் தோற்கடித்து, சுதந்திரக் கட்சியினை மஹிந்த இராஜபக்சவின் காலடியில் கொண்டு வந்து விட்டவர் மங்கள சமரவீர. இதுவே அவரது ஜனாதிபதி பதவிக்கான முதல் அடித்தளமாகும். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஏமாற்றப்பட்டவரும், ஏப்பமிடப்பட்டவரும் மங்கள சமரவீர தான்.

அடுத்து, மஹிந்த இராஜபக்சவுக்கான பிரச்சாரப் பீரங்கிகளாய் செயற்பட்டு அவரை அரச கட்டில் ஏற உதவியது ஜே.வி.பி.யினராவர். ஆனால் மஹிந்த இராஜபக்ச பதவிக்கு வந்த பின்பு, தருணம் பார்த்து ஜே.வி.பி.யை இரண்டாக உடைத்து, ஒரு பகுதியை ஏப்பமிட்டதுடன் இன்னொரு பகுதியை செல்லாக் காசாக்கினார்.

அதேவேளை, தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம் மஹிந்த இராஜபக்ச பதவிக்கு வர பெரிதும் உதவியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆவார். ஆனால் அவரை வீழ்த்திவிட்டு, தனக்கு எதிரியாகக் கூடிய சரத் பொன்சேகாவை அவர் ஊட்டி வளர்த்தார்.

இவ்வாறே மஹிந்த இராஜபக்சவுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தலில் செயற்பட்ட பேராசிரியர்.ஜீ.எல்.பீரிஸ், கரு ஜெயசூரிய, மிலிந்த மொரகொட போன்றோரை அமைச்சர்களாக்கி தனது அரியாசனத்தில் இணைத்துக் கொண்டார். மொத்தத்தில் மஹிந்த இராஜபக்ச வீழ்த்தியது தனது நண்பர்களை, சிம்மாசனத்தில் ஏற்றியது தனது எதிரிகளை என்பது தெளிவாய் துலங்குகிறது.

இதில் அரசியல் ரீதியாக அவர் செய்த மாபெரும் தவறாய் பிரபாகரனை வீழ்த்திய படலம் அவருக்கு அமைந்தது என்று அரசியல் மதிப்பீட்டாளர்கள் எதிர்காலத்தில் கூறுவர் என்பது உண்மை. இந்த உண்மையை மஹிந்த இராஜபக்ச தற்போது அனுபவத்தால் அறிந்து வருந்தத் தொடங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த வகையில் பிரபாகரனை வீழ்த்தியது என்பது மஹிந்த இராஜபக்சவின் வீழ்ச்சிக்கான தொடக்கம் ஆகும். அதுவே இனவாதத்தின் வீழ்ச்சிக்கான தொடக்கமும் ஆகும். அதாவது ஒன்றாய் நின்று இனவாத யுத்தம் புரிந்த இராஜபக்சக்களும், பொன்சேகாக்களும், றோகண விஜயவீராக்களும், சமரவீராக்களும் இப்போது இரண்டாய் அணிபிரிந்து மோதத் தொடங்கியுள்ளனர். இது இனவாதத்தினது ஒரு தர்க்கபூர்வ விளைவாகும்.

கிளிநொச்சியைக் கைப்பற்றாது விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் முடக்கினால் போதும் என்ற வகையில், யுத்தத்தை இடையில் நிறுத்த வேண்டும் என்ற கருத்தை மஹிந்த இராஜபக்சவுக்கு அவரது சகோதரர் பசில் இராஜபக்ச கூறியதாக ஒரு செய்தி உண்டு. அல்லது A 9 நெடுஞ்சாலைக்கு கிழக்கே பிரபாகரனின் ஆட்சியை அப்படியே விட்டு வைப்பதுதான் நல்லதென மஹிந்த இராஜபக்சவுக்கு ஆலோசனை கூறப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. ஆனால் இத்தகைய நிலைப்பாட்டை கோத்தபாய இராஜபக்சவும், சரத் பொன்சேகாவும் ஏற்காது யுத்தத்தை முடிக்கவேண்டும் என்றும், பிரபாகரனிடமிருந்து முழுமண்ணையும் கைப்பற்றி, அவருக்கு ஓர் ஆள்புலமற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்றும் வாதிட்டு, பிரபாகரனை வீழ்த்தும் வரை யுத்தத்தை தொடர்வது என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பிரபாகரனை வீழ்த்தியதோடு மஹிந்த இராஜபக்ச பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளாகத் தொடங்கினார். ஒரு புறம் மஹிந்த இராஜபக்சவால் இடுப்பில் தூக்கி ஊட்டி வளர்க்கப்பட்ட சரத் பொன்சேகா, அவரது தோளில் ஏறி கழுத்தை நெரிக்கப் புறப்பட்டார். இவ்வாறு உள்ளிருந்து அவருக்கு முதல் எதிர்ப்புக் கிளம்பியது. அத்துடன் அவருடன் கூடவிருந்த ஜே.வி.பி. அவருக்கு எதிராய் போர்க்கொடி தூக்கத் தொடங்கியது.

இந்நிலையில் உள்நாட்டில் அவருக்கு எதிரான சக்திகள் எல்லாம் சரத் பொன்சேகாவையும், ஜே.வி.பி.யையும் சுற்றி மையங்கொண்டு ஓர் எதிரணியாய் திரளத் தொடங்கின. இதற்கு ஐ.தே.க.வின் தளம் அடிக்கட்டுமானமாய் அமையும் வாய்ப்பு ஏற்பட முடிந்தது. அதேவேளை, மேற்படி எதிரணிகள் பலமாய் உருவாகியதும் இனப்படுகொலை பற்றிய யுத்தக் குற்றம் முன்னணிக்கு வர வாய்ப்பு ஏற்பட்டது. இதன் மூலம் யுத்தத்தின் குற்றம் மஹிந்த இராஜபக்சவையும், யுத்தத்தின் வெற்றி அவரது யுத்தப் பங்காளிகளையும் சென்றடையக் கூடியநிலை உருவானது. இதனால் அவர் சர்வதேச ரீதியில் இனப்படுகொலைக் குற்றவாளியாய் சுற்றி வளைக்கப்படக் கூடிய ஏதுநிலை தோன்றியுள்ளது.

இப்பின்னணியில் இருபெரும் கூற்றுக்களை அவதானிப்பது நல்லது. ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுடையது. மற்றையது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தர் கிறிஸ் பற்றன் அவர்கள் தெரிவித்திருப்பது. அதாவது 2005ஆம் ஆண்டு தேர்தல் பகிஸ்கரிப்பின் மூலம் மஹிந்த இராஜபக்சவை விடுதலைப் புலிகள் ஜனாதிபதியாக்கியது பெரும் தவறு என்ற கோணத்தில் நின்று இரா.சம்பந்தன் தனது கருத்தை முன்வைக்கிறார். ஆனால் அதே மஹிந்த இராஜபக்சவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதுதான் அவரைத் தண்டிப்பதற்கான சிறந்த வழி என்ற கோணத்தில் நின்று கிறிஸ் பற்றன் தனது கருத்தை முன்வைக்கின்றார்.

இங்கு மேற்படி இருவரும் மஹிந்த இராஜபக்சவை ஒரு குற்றவாளியாகவே கருதுகின்றனர் என்பதும், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் இருவரினதும் ஒரு பொது முடிவாகும். ஆனால் எது தண்டனை? அவரை எப்படித் தண்டிப்பது என்பதில் தான் இருவரும் வேறுபடுகின்றனர்.

அரசியலை கடந்த நான்கு ஆண்டு கால செயல் வடிவத்துக்குள்ளால் பார்த்தால், மஹிந்த இராஜபக்ச தற்போது தண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மக்களுக்கு எதிரான அரசியலின் பெயரால் கொழும்பு அரசியல் வெடிமருந்துக் கிடங்காய் மாறிவிட்டது. அந்த வெடிமருந்துப் பொறிக் கிடங்கில் ஏறி நின்றவாறு, தன் கழுத்தில் தானே கயிறை மாட்டிவிட்டு, கயிற்றின் தலைப்பை தானே தன் கையால் பிடித்துக் கொண்டிருக்கிறார். கயிற்றை இழுத்தால் கழுத்தில் சுருக்கிறுகும். கயிற்றை விட்டால் வெடிமருந்தில் சறுக்கி விழ, கிடங்கு வெடிக்கும். இந்நிலையில் மஹிந்த இராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவர் தண்டிக்கப்பட்டவர் ஆவார். தேர்தலில் வெற்றி பெற்றாலும் அவர் தண்டிக்கப்படுபவர் ஆவார்.

மஹிந்த இராஜபக்ச தேர்தலில் தோல்வி கண்டால் அவர் மட்டும் தண்டிக்கப்படுவதோடு, போர்க் குற்றவாளிகளான மற்றைய அணி தப்பி, பதவியில் சுகமாய் இருக்க வாய்ப்பு ஏற்பட்டுவிடும். அதாவது மஹிந்த இராஜபக்ச தோல்வியடைந்தால், பழியை அவர் தலையில் மட்டும் போட்டுவிட்டு ஏனையோர் பரிசுத்தவாளராய் காட்சியளிப்பார்கள். அத்துடன் மஹிந்த இராஜபக்சவின் தோல்வியின் பின்பு மேற்குலகம் போர்க் குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தாது, சரத் பொன்சேகாவை பாதுகாக்க முனையுமெனவும் கூறப்படுகிறது. கிறிஸ் பற்றனது வாதத்தின் தொனி இதுவாகவே உள்ளது.

மஹிந்த இராஜபக்ச வெற்றி பெற்றால் அவர் நிச்சயமாக வெடிமருந்து சிம்மாசனத்திற்தான் அமரவேண்டி வரும். அப்போது எதிரும் புதிருமாய் இரு அணிகளும் மோதுண்டு, சிம்மாசனமும் வெடித்துச் சிதற, இரு அணிகளும் அதில் அழிவுக்குள்ளாகும் என்ற இன்னொரு பார்வையும் உண்டு. எது எப்படியோ தென்னிலங்கை அரசியல், வெடிமருந்து அத்திவாரத்தின் மீது கட்டப்பட்ட மாளிகையாகவே காணப்படுகிறது.

தமிழ் வாக்குகளே தேர்தலில் தீர்மானகரமானவை என்ற நிலை இம்முறை முதன்மை பெற்றது உண்மையாகும். இதில் தமிழ்த் தரப்பின் வாக்குகள் 65 வீதத்திற்கு குறையாமல் சரத் பொன்சேகாவைச் சென்றடையும் என்பது தற்போது பரவலாக நம்பப்படுகிறது. தமிழ் மக்கள் தமது தலைமையைப் பின்பற்றி நடக்கும் பண்பாட்டைக் கடந்த காலங்களில் நிரூபித்துள்ளனர். எனவே இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்று வாக்களிப்பர் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிராம ரீதியான கட்சிக் கட்டமைப்பும், தொண்டர் பலமும் இல்லையே ஆயினும் இலட்;சியத்தின் பெயரால் கூட்டமைப்பின் வேண்டுகோளை அவர்கள் அதிகம் பின்பற்றுவர் என்பது நிச்சயம்.

இப்பின்னணியில், இனித் தேர்தலின் நிர்ணயகரமான வாக்குத் தொகுதியாக இருக்கப் போவது அலைபாயும் வாக்குகள் எனப்படும் 10 வீதம் வரையான சிங்கள வாக்குகளே ஆகும். ஆதலால் கூச்சமின்றி தீவிர சிங்கள இனவாதத்தை முன்வைத்து இராஜபக்சக்கள் இந்த அலைபாயும் வாக்குகளை தமதாக்கிக் கொள்ள முற்படுவர் என்பது உண்மை.

மேலும் 24ஆம் திகதி நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறுத்தப்படும் கணத்தில் இருந்து பிரச்சாரத்திற்கான அதிக வாய்ப்புக்கள் அரச தரப்பிற்கே பிரகாசமாய் இருக்கும். மாகாண சபைகளும், உள்ளுராட்சி சபைகளும் அதிகம் அரசாங்கத்தின் கையிலேயே இருப்பதால், இறுதி மூன்று தினங்களில் அரசாங்கம் தனது பொய் மூட்டைகளை இவற்றின் துணைகொண்டு இலகுவாய் அவிழ்த்துவிட முடியும். எனவே இறுதி மூன்று நாட்கள் இதில் பிரதானமானவை.

1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிகள் பலமாக இருந்த இடங்களில் குண்டு வெடிப்புக்கள் அல்லது வன்செயல்களை ஏற்படுத்தி, அந்த வாக்காளர்களை பிறேமதாச வாக்களிக்காமல் செய்த அரசியல் வித்தைகள் எதுவும் இராஜபக்சக்களுக்கு தெரியாதவை அல்ல. எனவே இவற்றுக்கூடாகவும் நாம் தேர்தல் முடிவுகளை எதிர்பார்க்க வேண்டும்.

மொத்தத்தில், மஹிந்த இராஜபக்ச தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி. அவர் தோல்வியடைந்தாலும் தோல்வி. அவருக்கு வெற்றியும் தண்டனை தான், தோல்வியும் தண்டனை தான்.

1/21/2010

www.ponguthamil.com

info@ponguthamil.com

நன்றி - பொங்குதமிழ் இணையம்

  • கருத்துக்கள உறவுகள்

விழுந்தாலும் மீசையில் மண்படவில்லை என்ற கதையாக உள்ளது. உண்மையில் மகிந்த சிறந்த அரசியல்வாதி என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுரையின் உண்மையான நோக்கம் புரியவில்லையே????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையின் உண்மையான நோக்கம் புரியவில்லையே????

கட்டுரையின் உண்மையான நோக்கம், தமிழினம் சுயமாக சிந்திக்கக் கூடாது என்பதுதான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.