Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்ய வேண்டும்

[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 18:45 GMT ] [ புதினப்பார்வை ]

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டம் மிகப் பெரிய பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் எதிர் காலத்தினை நெறிப்படுத்தும் பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வந்துள்ளது.

பல பத்தாண்டுகளாக சனநாயக அரசியல் பாரம்பரியத்தினூடாக நாடாளுமன்ற அரசியலினைக் கையாண்டு வந்த தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு கட்சி உட்பட பிற்காலத்தில் ஆயுதப் போராட்ட வழிமுறையிலிருந்து சனநாயக வழிக்கு மாறிய தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி [சுரேஸ் அணி] ஆகியன இணைந்ததாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கம் பெற்றது.

இந்த உருவாக்கத்திற்குப் பின் புலமாகச் செயற்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைமை - கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அதற்கு பின்னரான கால கட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளினைத் தமது செயற்பாடுகளுக்கு இசைவாகவே நெறிப்படுத்தியிருந்தனர்.

இது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் காலத்திற்கு காலம் பல தரப்புக்களிலிருந்தும் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள் இருந்த முதிர்ந்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் கூட ஒரங்கட்டப்பட்டன.

2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட போரழிவும் அனர்த்தமும் வெறுமனே இராணுவத் தோல்வி என்பதற்கும் அப்பால் தமிழ் மக்களின் அரசியல் வாழ்வில் ஒரு வெற்றிட நிலையினை தோற்றுவித்துள்ளது.

இவ்வெற்றிடம் பல்வேறு பரிமாணங்களில் வியாபித்துள்ளது.

இன்று மீண்டும் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தினைப் பொறுப்பேற்றுள்ள சனநாயக பாரம்பரியத்தில் ஊறி வளர்ந்த திரு.சம்பந்தன் அவர்களுக்கும் அவர்களுடன் இணைந்துள்ள ஏனையோருக்கும் பாரிய சவால்கள் காத்திருக்கின்றன.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலின் போது நாடாளுமன்ற தேர்தலுக்காக நியமனம் செய்யப்பட்டவர்களின் தெரிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆளுமை மேலோங்கி இருந்தது.

அவர்கள் தங்களது நெறிப்படுத்தலுக்கு இசைந்தும் அதனை நியாயப்படுத்தியும் செயற்படக்கூடியவர்களினை அடையாளங் கண்டு வேட்பாளர்களாக முன்னிறுத்தினர்.

அத்தகைய வேட்பாளர்களுக்கு தங்கள் செயற்பாடுகளினை தீர்மானிப்பதில் எவ்வித சிரமங்களும் இருக்கவில்லை. சகல விடயங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறையிடமிருந்து அறிவுறுத்தல்களாக காலத்திற்கு காலம் வழங்கப்பட்டது.

அவர்களும் தங்களது சுய ஆளுமைக்கும் மேலாக மிகுந்த நேர்மைடனும் விசுவாசத்துடனும் தங்களுக்கு இடப்பட்ட பணிகளினைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

ஆனால், 2009 மே மாதத்திற்கு பின் ஈழத்தமிழர்களின் எதிர் காலத்தினை நெறிப்படுத்த முன்வரும் தலைமை முற்றிலும் வேறான யதார்த்தத்தினை எதிர்கொள்ளவேண்டி உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் கட்டி எழுப்பப்பட்டிருந்த ஒற்றைத் தன்மையான தலைமையினைப் போல் எதிர் காலத்தில் செயற்பட முடியாது; அது போன்ற அணுகுமுறைகள் இனிமேல் எவ்வித பயனையும் அளிக்கவும் மாட்டாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னுள்ள சாவால்கள்

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட மிகக் கொடுமையான யுத்தமும் இனப் படுகொலையும் தமிழர் தாயக வளங்களின் மீதும் சமூக பொருளாதாரக் கட்டமைப்புகள் மேல் நிகழ்த்தப்பட்ட பேரழிவும் அளவிடப்பட முடியாதவை.

பௌதிக வளங்களினைக் கட்டி எழுப்புவதற்குத் தேவைப்படும் பணத்தின் மதிப்பீட்டினால் மட்டும் இதனைக் கணிப்பிட முடியாது.

இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலினூடாக மீளெழும் தமிழ் மக்களின் தலைமை 'பாரம்பரிய அரசியல் கட்சி' போன்று மட்டும் செயற்பட முடியாது.

அதற்கெனத் தெரிவுசெய்யப்படும் அங்கத்தவர்களும் சராசரியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் போல் 'சம்பிரதாயக் கடமைகளுடன்' தம்மை முடக்கிவிட முடியாது.

தற்போது மகிந்த ராஜபக்ச சகோதரர்களின் குடும்ப அதிகாரத்தின் புதிய நிகழ்ச்சித் திட்டம் தமிழ் மக்கள் சார்பாக குரலெழுப்பும் வாய்புக்களினை கொண்டிருக்கக் கூடிய சகல அரசியற் சக்திகளினையும் சிதைப்பதாகும்.

அவர்களின் இக் குறிக்கோளுக்கு முதல் இலக்காக தெரிவுசெய்யப்பட்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும்.

ஏதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னால் திரண்டெழக்கூடிய தமிழர்களின் அரசியற் பலத்தினை சிதறடிக்கும் மூலோபாய வேலைத்திட்டங்கள் அவர்களால் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தன்னார்வப் போட்டியாளர்களாகத் தமிழ்ச் சமூகத்தில் செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய தனி நபர்களினை அழுத்தம் கொடுத்து அரசியலுக்கு முன்னகர்த்தத் தொடங்கியுள்ளனர் மகிந்த சகோதரர்கள்.

மறு பக்கத்தில் துரிதப்படுத்தப்பட்ட "வடக்கின் வசந்தம்" என்ற பெயரால் கொழும்பினை மையப்படுத்திய அதிகாரிகளின் ஆட்சியும் இராணுவத்தினரின் அடாவடித்தனமும் பல் தேசிய வர்த்தக நிறுவனங்கள், தமிழ்ச் சமூகத்திற்கு உரித்தற்ற தனியார் துறை ஆகியவற்றின் சந்தை ஆக்கிரமிப்பும் வளங்களின் அபகரிப்பும் விரிவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையின் நலன்களுக்காகவும் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் நவீன சந்தைப் பொருளாதாரத்திற்கு ஊடாக அடிமைப்படுத்தப்பட்ட தொழிற் படையாகவும், மூலப் பொருட்களின் உற்பத்தி மையமாகவும், தென்னிலங்கையின் வர்த்தக விரிவாக்கத்தினை தாங்கிப் பிடிக்கும் நுகர்வுச் சந்தையாகவும் வடக்கு மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வாழும் தேசங்களில் கட்டி எழுப்பக் கூடிய அரசியற் பின்புலம், பொருளாதார மேலாண்மை, சிறப்புத் தேர்ச்சி ஆகியவற்றினைத் தனது நிகழ்ச்சி நிரலுக்காகச் சிதறடிக்க வைக்கும் உதிரியான முன் முயற்சிகள் சிறிலங்காவின் தூதுவரகங்கள் ஊடாக புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் கசிய விடப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவினுள் சிறுபான்மை மக்கள் என்று ஒரு மக்கள் பிரிவு இல்லை, எல்லோரும் சிறிலங்காவின் குடி மக்களே. இன அடையாளத்தினைக் கொண்டிருக்கும் அரசியற் கட்சிகள் செயலற்றவை ஆக்கப்படவேண்டும் போன்ற வாதங்கள் சிங்களப் பெருந் தேசியவாதத்தின் கோர முகத்தினைக் காட்டி நிற்கின்றது.

இதனை முறியடித்து எதிர் காலத்தில் தமிழர்களின் தேசிய வேட்கைகளினை நிறைவு செய்யக் கூடிய அரசியல் வேலைத் திட்டத்தினை முன்னெடுப்பதும் அதற்கு வேண்டிய ஆய்வுகள், அரசியல் அமர்வுகள், ராஜதந்திர முன் முயற்சிகள், மற்றும் பேரம் பேசல் முயற்சிகள் ஆகியவற்றினை மூலோபாய அடிப்படையில் முன்னெடுக்கும் உறுதியான தலைமைத்துவம் இன்று அவசியமாக உள்ளது.

முற் குறிப்பிட்ட சவால்களினை எதிர் கொண்டு தமிழ் மக்களின் அரசியற் சுதந்திரத்தினையும் பொருளாதாரச் செழுமையினையும் தாயக வளங்கள் மீது கொண்டிருக்கக் கூடிய உரித்தாண்மையினையும் வென்றெடுக்க இந்த பாரம்பரிய நாடாளுமன்ற அரசில் செயற்பாடும், அதற்கு மட்டுமே பொருத்தமான உள்ளுர் பிரபல்யங்களும் உதவப் போவதில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படலாம்?

தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற அங்கத்தவர்களும் ஏனைய போட்டியாளர்களும் தங்களுக்குள் நான்கு செயலணிகளாக பிரிந்தும் ஒருங்கிணைந்தும் செயற்படவேண்டும்.

செயலணி 1. நிழல்அரசு நிர்வாகக் கட்டமைப்பு

புனர்வாழ்வு, புனரமைப்பு, மீள் குடியமர்வு, மேம்பாடு ஆகியவற்றினை நெறிப்படுத்துவதற்கான உயர்புலமை சார்ந்த செயலணி.

இந்த செயலணி தன்னை ஓரு நிழல்அரசு நிர்வாகக் கட்டமைப்பு போன்று உருவகித்து தனக்கு வேண்டிய புலமைசார் மனித வளத்தினை உள்ளூரிலும் புலம்பெயர்ந்த தமிழர் மத்தியிலிருந்தும் திரட்ட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் முன்மொழியப்பட்டுள்ள சகல வேலைத் திட்டங்களினையும் ஆராய்ந்து பொருத்தமான மாற்றங்களினை செய்வதற்கு ஏதுவான கலந்துரையாடல்களினை சிறீலங்காவின் கொள்கை வகுப்பாளர்கள், உதவி வழங்கும் நாடுகள், நிறைவேற்றும் நிறுவனங்கள் பயனாளிகள் ஆகியோருடன் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் - திட்டங்கள் வள ஒதுக்கீடுகள் ஆகியவற்றின் முன்னேற்றங்களினைக் காலத்திற்கு காலம் ஆய்வு செய்து பொருத்தமான சீர்செய்தல் வழிமுறைகளினை உறுதிப்படுத்த வேண்டும்.

செயலணி 2. அரசியல் முன்னெடுப்பும் கட்டமைப்பு உருவாக்கமும்

இச் செயலணி தமிழர்களின் தேசிய அரசியல் அவாவினை வென்றெடுக்கக்கூடிய வழிமுறைகளினைக் கண்டறிதல், வேண்டிய ஆய்வுகள் அமர்வுகள் ஆகியவற்றினை முன்னெடுத்தல், சர்வதேச பின்பலத்தில் மேற்கொள்ளக் கூடிய பரப்புரைப் பணிகளினை முன்னெடுத்தல், ராஜதந்திர செயற்பாடுகளில் ஈடுபடல், சிறிலங்கா அரசுடனும் ஏனை பொருத்தமான கட்சிகள், குழுக்கள், தனி நபர்களுடன் கலந்துரையாடல்கள், விவாதங்கள் பேரம் பேசல்களில் தன்னை ஈடுபடுத்தி உரிய இலக்கினை அடைதல்.

செயலணி 3. புலம் பெயர் தமிழர்களுடனான உறவுகளும் வளங்களினை திரட்டுதலும்

இச் செயலணி இலங்கைத் தீவினுள் தமிழ் மக்களின் அரசியற் சுதந்திரம், பொருளாதார மேம்பாடும் மேலாண்மையும் ஆகியவற்றினைத் துரிதமாக வென்றெடுப்பதற்கு தேவையான - நேரடியானதும் நேரடியற்றதுமான செயற்பாடுகளினை ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டும்.

செயலணி 4. உள்ளூரில் ஜனநாயக அரசியற் தளத்தினைக் கட்டியெழுப்புதலும் மரபு ரீதியான கடமைகளினைப் புரிதலும்

இச் செயலணி மரபார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களி்ன் கடமைகள், அவை தொடர்பில் சாதாரண மக்கள் கொண்டிருக்கக் கூடிய எதிர்பார்ப்புக்களினை நிறைவு செய்தல், பலம் மிக்கதும் அரசியல் உணர்வு கொண்டதுமான சமூகமாக தமிழ்ச் சமூகத்தினைக் கட்டியெழுப்பதல் என தனது செயற்பாடுகளினைக் கொண்டிருக்க வேண்டும்.

இத்தகைய முறையில் மூலோபாயத்தின் அடிப்படையில் செயற்படக் கூடிய பலம் கொண்ட அரசியற் கட்டமைப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஊடாக மேலெழ வேண்டுமாயின் - தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களினைத் தெரிவு செய்யும் போது மிகக் கூடிய கவனமெடுக்க வேண்டியுள்ளது.

தற்போது - விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை அரசியலில் இருந்து அகற்றப்பட்ட பின்பு - மிக அதிகமானோருக்கு நாடாளுமன்றக் கதிரைகள் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது.

அத்துடன் - கடந்த காலத்தில் பெற்ற வசதி வாய்ப்புகளை இழக்கத் தயாரில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதற்கும் ஒரு படி மேலாகத் தங்களுக்குச் சார்பான ஆதரவுத் தளத்தினையும் கருத்துருவாக்கத்தினையும் கட்டியெழுப்பும் போட்டியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை எல்லாம் தாண்டி முற் குறிப்பிட்ட சவால்களினை வெற்றிகரமாகக் கையாளுவதற்குப் பொருத்தமான ஆளுமையும் ஈடுபாடும் சலிப்புறாத தன்மையும் கூட்டுப்பொறுப்பும், தேடல் உணர்வும் கொண்டவர்களினை மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக் குழு அடையாளம் காண வேண்டும்.

http://www.puthinappalakai.com/view.php?20100216100519

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.