Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னி மீள் குடியேற்றம், ஒரு சீழ்பிடித்த புண்

Featured Replies

வன்னி மீள் குடியேற்றம், ஒரு சீழ்பிடித்த புண்

ஆறாத காயங்கள், தீராத வலி, முடிவுறாத வேதனை, முடியாத கவலைகள், ஓயாத அலைச்சல், வற்றாத கண்ணீர், வாடிய முகங்கள், நிர்க்கதியான வாழ்க்கை, நிம்மதி தேடும் மனம். இன்று எப்படி? நாளை எப்படி?..

இதெல்லாம் ஏதோ திருவளையாடல் படத்தில் நாகேசும் சிவாஜி கணேசனும் சொல்கிற அடுக்கு வசனங்கள் அல்ல. அல்லது, வைரமுத்துவோ, பழநிபாரதியோ பாடுகிற கவிதை வரிகளும் அல்ல. வன்னியில் மீளக் குடியமர்ந்திருக்கிற (?) ஒரு குடும்பத்தின் பதின்நான்கு வயதுப் பள்ளி மாணவியான மாதினி தன்னுடைய பாடப்பதிவு ஏட்டில் எழுதி வைத்திருக்கும் தங்களைப் பற்றிய நிலைமை இது. அங்கே அரசாங்கத்தினால், ஒழுங்கு படுத்தப்பட்டிருக்கிற மீள் குடியேற்றம் என்பது அந்த மக்களை சொந்த வீட்டிலேயே அகதியாக, மீண்டும் அலைவோராக, வாழ வழியற்றோராக ஆக்கியிருக்கிறது.

ஆதவன் மார்ச் இதழுக்காக எழுதியவர் கஜானி

வன்னியில், கிளிநொச்சி, பூநகரி, முழங்காவில், முடகொம்பன் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மல்லாவி, பாண்டியன்குளம், வவுனியா வடக்கில் நெடுங்கேணி, கனகராயன் குளம், புளியங்குளம் பகுதிகளில் சனங்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். கவனிக்கவும், அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அங்கே உருப்படியாக ஒரு வீடில்லை. செய்வதற்குத் தொழில் இல்லை. கடைகள் இல்லை. சந்தை இல்லை. பிள்ளைகள் படிப்பதற்கேற்ற மாதிரிப் பள்ளிகள் இல்லை. போதிய மருத்துவ வசதிகளுடன், தேவையான பணியாளர்களுடன் மருத்துவமனைகள் இல்லை. கூட்டுறவுச் சங்கங்கள் கூட சரியான முறையில் இயங்கவில்லை. அரசாங்க அதிகாரிகள் வருகிறார்கள். போகிறார்கள். எல்லாமே ஸ்லோ மோசனில்தான் நடக்கின்றன.

எனவே, மீண்டும் மரநிழல்கள், தரப்பாள் கூடாரங்கள், குடிசை வீடுகள். குப்பி விளக்கு. அதற்கப்பால் இருள்…. காற்றுக்குப் பதிலாக அங்கே பெருமூச்சொலியே கேட்கிறது. இந்த மீள்குடியேறிகளைப் பார்க்கும்போது…

‘சிலுவை யேசுவைச் சிலந்தி மூடியது,

பிள்ளையார் பலி பீடத்தில் களிம்பு படிந்தது

மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன

சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் ஊர்ந்தன…’

என்ற ஹம்சத்வனியின் கவிதை அடிகள்தான் நினைவுக்கு வருகிறது. ஆனால், ஒன்று இந்தக் கவிதை வரிகள் கடந்த காலத்தொனியுடையவை. இங்கே அவற்றை நிகழ்காலத்தோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள்.

காய்ந்து, ஒட்டியுலர்ந்த தேகத்தோடு, சருகு முற்றி, பற்றை மண்டியிருக்கும் தங்களது வளவுகளை எல்லோரும் துப்புரவு செய்கிறார்கள். இந்த மாதிரி ஒரு மீளக் குடியமர்வு ‘ஜெயசிக்குறு நடவடிக்கை’ முடிந்த பிற்பாடு – 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் இந்தப் பகுதிகளில் நடந்தது. அப்போது புலிகளின் நிர்வாகமும் அவர்களுடைய உதவிகள், ஒத்தாசைகளும் இருந்தன. அத்துடன் அரை குறை என்ற அளவில் சனங்களிடம் கொஞ்ச நஞ்சப் பொருட்களாவது இருந்தது. அதனால் அந்த மீள் குடியமர்வு ஓரளவுக்கு வெற்றியடைந்தது. விரைவாகவும் நிறைவேறியது.

ஆனால், இப்போது சனங்கள் தடுப்பு முகாம்களிலிருந்து வெறுங்கையோடுதான் மீள் குடியேற்றத்துக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்து இறக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி இறக்கப்படும்போது முதலில் இவர்கள் அங்கிருக்கும் பாடசாலைக் கட்டடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இப்படி கிழமைக்கணக்காக தங்க வைக்கப்பட்ட பல குடும்பங்களின் கதை மிகப் பரிதாபம். அவர்களின் வீடுகளிருக்கும் பகுதிக்குச் செல்வதற்கான அனுமதி கிடைக்கும் வரையில் பள்ளிக் கூடத்திலேயே இருக்க வேண்டும்.

வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டாலும் அங்கே என்ன வீடா இருக்கிறது, போய் வசதியாகப் படுத்துக் கொள்வதற்கும் தங்குவதற்கும்? சமைப்பதற்கே வழியில்லை. ஒரு சிறு கூரைகூடக் கிடையாது. அதனால்தான் அவர்கள் மரநிழலில் தஞ்சமடைகிறார்கள். சில குடும்பங்களுக்கு உடனடியாக தரப்பாள் கூடாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், எல்லோருக்கும் கூரைத் தகடுகள் (தகரத்தாலானவை) அரசாங்க அதிபர் மூலமாக வழங்கப்படுகிறது. எத்தனை தகடுகள்? ஆகப் பன்னிரண்டு தகரங்கள். சுவர் கிடையாது. அதை அந்தத்தப் பகுதிகளிலுள்ள படையினர் வைத்துக் கொடுக்கிறார்கள். நாட்டில் இப்போது போர் இல்லை என்றபடியால், சும்மா இருக்கும் இராணுவத்தினரை எதற்காவது பயன்படுத்தலாம் என்று யோசித்திருக்கிறார்கள் போல.

சிவில் அதிகாரிகள் இருக்கின்ற போதும் வன்னியில் நடப்பது இராணுவ நிர்வாகம்தான். படையினரின் அனுமதி இல்லாமல் அங்கே எதையுமே செய்ய முடியாது. இந்தப் பகுதிகளில் இன்னும் இயல்புச் சூழல் உருவாகாத காரணத்தினால், சனங்களுக்குத் தொழில் இல்லை. அதனால் வருமானமில்லை. வன்னியிலிருந்து வெளியேறும்போது இந்தச் சனங்கள் வெறுங்கையோடுதான் வெளியேறினார்கள். இது அரசாங்கத்துக்குத் தெரியும். நாட்டு மக்களுக்குத் தெரியும். உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகத்துக்கும் தெரியும்.

இப்போது மீளக் குடியமரும் போதும் இந்த மக்கள் வெறுங்கையுடன்தான் குடியர்த்தப்படுகிறார்கள். இதையும் சகலரும் நன்றாக அறிவார்கள். ஆனால், இதைப் பற்றி யாரும் அக்கறையோடு கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அரசாங்கத்தைக் குற்றஞ்சொல்வதுடன் மட்டும் நின்று விடும் காரியமல்ல இது. போராட்டத்துக்காக தங்கள் வாழ்வையே கொடுத்த மக்கள் இவர்கள் என்ற நோக்கு நிலையில் இன்னும் அரசாங்கம் இந்த மக்களைப் பார்க்கிறதாகவே தோன்றுகிறது. இன்னும் வன்னி மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் பார்வையை அரசாங்கம் விட்டுவிடவில்லை. மீள் குடியேற்றம் நடந்த இந்தப் பகுதிகளுக்கு தமிழ் அமைச்சர்கள் ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் வந்து பார்த்தது கிடையாது. மீள்குடியேற்றத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரிஸாத் பதியுதீன் கூட இந்த மக்களை எட்டிப்பார்க்கவேயில்லை.

இது எதைக்காட்டுகிறது? உண்மையில் இந்த மக்களின் மறுவாழ்வுக்காக அரசாங்கத்தின் அத்தனை அமைச்சர்களும் பிரதிநிதிகளும் வன்னியில் நின்றிருக்க வேண்டும். வன்னி மக்களின் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி ஒரு சிறப்பு வேலைத் திட்டம் போட்டிருக்க வேண்டும். ஆனால், இதெல்லாம் நடக்கவேயில்லை.

‘அரசாங்கத்தின் கதையை விடுங்கள். எங்கள் பெயரில் பாராளுமன்றத்தில் இருக்கிற 23 எம்பி மாரில் (டக்ளஸ் தேவானந்தாவையும் சேர்த்து மொத்தமாக 23 எம்பிக்கள் என்கிறார்கள்) ஒருவரேனும் முறையான வகையில் எதையும் செய்யவில்லை. ஏதோ தமிழர்களுக்காக தாங்கள் உயிரையே கொடுக்கிறோம் என்று அவரவர் சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு மண்ணும் கிடையாது’ என்பது இவர்களுடைய அபிப்பிராயம்.

அப்படியென்றால், புலம்பெயர் நாடுகளிலுள்ளவர்கள் ஏதாவது செய்கிறார்களா? என்று நெடுங்கேணியில் இப்போதிருக்கும் 63 வயதுடைய சங்கரப்பிள்ளை என்பவரைக் கேட்டேன். ‘சண்டை நடக்கும் மட்டும்தான் எல்லாரும் ஏதோவெல்லாம் செய்தார்கள். பிறகு ஒண்டையும் காணேல்லை. அரசாங்கத்துக்கும் எங்களைப் பற்றி அக்கறையில்லை. எங்கடை ஆக்களுக்கும் எங்களைப் பற்றிக் கரிசனை கிடையாது. வெளிநாட்டில இருக்கிறவையாவது ஏதாவது செய்யக் கூடியதைச் செய்யலாம். அவைதான் எதையாவது செய்கிலும் செய்யலாம். ஆனால், அவையும் இப்ப வேற பராக்கிலை அல்லவா இருக்கினம்’ என்றார் அவர். ஏறக்குறைய இப்போது வன்னியில் மீளக்குடியமர்ந்திருக்கிற பெரும்பாலானவர்களின் அபிப்பிராயம் இப்படித்தானிருக்கு.

ஆனால், புலம்பெயர் நாடுகளிலிருக்கின்ற சிலர் தனிப்பட்ட முறையில் சில உதவிகளைச் செய்து வருகிறார்கள். சிலர் இணைந்து ‘சிறுதுளி’ என்ற ஒரு சிறு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சில உதவிகளைச் செய்கிறார்கள். மற்றும்படி ஏறக்குறைய இந்த மக்கள் கைவிடப்பட்ட நிலையில்தான்.

யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் மக்கள் அமைப்புகள் வன்னி மீள் குடியேற்றம் பற்றி ஒரு சரியான கவனத்தைச் செலுத்தவில்லை என்பது இவர்களின் கவலை. பத்திரிகைகள் கூட இதை ஒரு முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கவில்லை என்று இந்தப் பகுதியில் வேலை செய்யும் ஒரு அரச ஊழியர் கவலையோடு சொன்னார்.

‘வெள்ளைக்காரர் இருந்தாலாவது ஏதோ கொஞ்ச உதவியாவது கிடைக்கும். அரசாங்கம் அதுக்கும் விடேல்லை’ என்கிறார் ஒரு குடும்பப் பெண். இவர் குறிப்பிட்டது சர்வதேச தொண்டு நிறுவனத்தினரை. இந்தப் பிரதேசங்களில் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் பணி செய்வதற்கான அனுமதியை அரசாங்கம் மறுத்து வருகிறது.

இந்தப் பெண்ணினுடைய கணவருக்கு ஒரு கால் இல்லை. விசுவமடு என்ற இடத்தில் எறிகணை வீச்சில் அவர் காலை இழந்துவிட்டார். ஒரு மகள் (19 வயது) புலிகளில் அமைப்பில் இருந்து இப்போது வவுனியாவிலிருக்கும் தடுப்பு முகாமில் இருக்கிறார். இன்னும் மூன்று பிள்ளைகள் கூடவே இருக்கிறார்கள். மூன்று பேரும் பள்ளிக்குச் செல்ல வேண்டியவர்கள். ‘தொடர்ந்து இவர்களைப் படிக்க அனுப்பவில்லையா?’ என்று கேட்டேன்.

‘எப்படி அனுப்பமுடியும்? எங்கே அனுப்ப முடியும்? அனுப்பித்தான் என்ன? என்பது மாதிரி ஆயிரம் கேள்விகளோடு என்னை அவர் பார்த்தார்.

இப்படி, மக்கள் வாழ்வதற்கான அடிப்படையான விசயங்கள் எதுவுமே இல்லாத நிலையில்தான் வன்னியின் மீள்குடியேற்றம் நடந்து கொண்டிருக்கிறது. சனங்களைப் பொறுத்தவரை, இன்னும் அவர்கள் போரின் பாதிப்புகளிலிருந்து மீளவில்லை. சரியாகச் சொன்னால், இன்னும் போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. குண்டு வீச்சில்லை. துப்பாக்கிகள் வெடிப்பதில்லை. இரத்தம் பெருக்கில்லை. மரணங்கள் நிகழ்வதில்லை. ஆனால், மனக்காயங்கள் தாராளமாக உண்டு. அலைச்சலும் துயரமும் வேதனையும் உண்டு. ஆகப் போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, அது வேறு வடிவங்களில், வெவ்வேறு ரூபங்களில்.

‘மீள் குடியேற்றம் எப்படி இருக்கு?’ என்று கேட்டபோது அதைப்பற்றி இடம்பெயர்ந்தவர் சொன்னார்- ‘மழைக்குப் பிடிக்கக் குடையில்லை. காலில் போடச் செருப்பில்லை. உதவிக்கொரு சைக்கிள்கூட இல்லை. இப்படித்தானிருக்கு மீள்குடியேற்றம்’ என்று.

இரணைப்பாலை என்ற இடத்தில் நடந்த எறிகணை வீச்சின்போது குடும்பத்திலிருந்த நான்கு பேரை இழந்த குடும்பம் ஒன்றை எதிர்பாரத விதமாகச் சந்தித்தேன். இவர்கள் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள். இப்போது அங்கேதான் இருக்கிறார்கள். இறந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவுக்காக ஒரு மரநிழலின் கீழே சமைத்துக் கொண்டிருந்தார்கள். சமையல் என்றால் அதிகமாக யோசித்து விடாதீர்கள். ஒரு மீன்கறி மட்டும்தான். இவ்வளவுக்கும் அவர்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு ‘ஒரு கறிக்கு மேல் வைக்க வசதியில்லை. ஏதோ செய்ய வேண்டும் என்ற உணர்வுக்காக இதைச் செய்கிறம்’ என்று அந்த வீட்டுப் பெண் சொன்னார். போருக்கு முன்னர் தாங்கள் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் இருந்தபோது வாழ்ந்த அந்த நாட்களைப் பற்றிச் சொன்னார். எல்லாத்தரப்பையும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

பொதுவாகவே வன்னி மீள் குடியேற்றம் என்பது சீழ்பிடித்திருக்கும் ஒரு புண்ணைப் போலவே இருக்கிறது. அங்கேயுள்ள சனங்கள், தங்கள் ஊர்களுக்கும் வீடுகளுக்கும் வந்து விட்டோம் என்று சந்தோசப்படுவதற்குப் பதிலாக வேதனைகளோடும் வலிகளோடும் இருக்கிறார்கள் என்பது இந்தக் காயத்தின் பிரமாண்டத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

வன்னிப் போர் முடிந்த பிற்பாடு இலங்கையில் இரண்டு விடயங்கள் பெரும் விவகாரங்களாகவிருந்தன. ஒன்று, தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் விடுதலை. அடுத்தது, மீள்குடியேற்றம். இந்த இரண்டு விடயங்களுமே இன்னும் சீர்ப்படுத்தப்படவில்லை. அதிலும் மீள் குடியேற்றம் என்பது அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் வெறும் புள்ளி விவரக் கணக்குடன் சரியாகி விட்டது.

ஏறக்குறைய அரைவாசிக்கும் மேற்பட்ட மக்கள் (ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர்) மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த மக்கள் எப்படி மீள் குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்? அவர்களுக்கான அடிப்படை வசதிகள் அங்கே செய்யப்பட்டிருக்கிறதா? என்றெல்லாம் அங்கேயுள்ள நிலைமைகள் குறித்து வெளிநாட்டுப்பிரதிநிதிகளோ ஊடகக்காரர்களோ, ஐ.நா. அதிகாரிகளோ நேரில் வந்து பார்த்ததும் இல்லை. இதையெல்லாம் உறுதி செய்ததும் இல்லை.

இப்போது இலங்கையில் தேர்தல்களைப் பற்றிய பரபரப்புகளில் எல்லோருடைய கவனமும் திரும்பி விட்டது. எல்லா ஊடகங்களும் தேர்தலைப் பற்றியே எழுதித்தள்ளுகின்றன. அரசாங்கத்தின் பொறியில், அகதிகள் விவகாரத்தைப் பற்றிய திசை திருப்பல்களில் அநேகமாக எல்லாத் தமிழ்க்கட்சிகளும், எல்லாத் தமிழ் ஊடகங்களும் சிக்கிவிட்டன. மீண்டும் கைவிடப்பட்டு விட்டனர் வன்னி அகதிகள்.

ஆக, பத்மினி சிதம்பரநாதன் எம்பி மட்டும் ஏதோ அதிசயமாக நாடாளுமன்றத்தில் இந்த அகதிகளைப் பற்றி கொஞ்சம் கதைத்திருக்கிறார். தங்கள் வாழ்க்கையையும் குடும்ப உறுப்பினர்களையும் தேடிக் கொண்டிருக்கும் இந்தச் சனங்களைப் பற்றி எதை எழுதுவது…. எதை விடுவது….?

‘அப்பாவை குண்டு வீச்சில் இழந்தோம்

அம்மாவின் கையை எறிகணை பறித்தது

அண்ணா எங்கே என்று தெரியவில்லை

எங்களுக்கு வீடில்லை

மரங்களுக்குக் கீழே எப்படி வாழ்வது?

படிக்க மனசில்லை

விளையாடுவதற்கு நண்பர்களில்லை

பக்கத்து வீட்டுக்காரர்கள்

உயிரோடு இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது

அம்மா எதுவும் சொல்வதில்லை

சண்டை முடிந்து விட்டதாகச் சொல்கிறார்கள்

ஆனால், இன்னும் துவக்கோடு ஆமிக்காரர்கள் திரிகிறார்கள்….’

இப்படி எழுதியிருந்தது முழங்காவில் கைவிடப்பட்டிருந்த ஒரு மலசல கூடத்தின் சுவரில்.

http://www.aathavanonline.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.