Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரியாத இந்திய தேசியம்

Featured Replies

சில மாதங்களுக்கு முன்னால் தமிழகத்தின் எல்லையை கடந்து இந்தியா இருக்கிறதா என பார்க்கப்போகிறேன் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிவித்து, அதற்கான ஒரு இயக்கத்தை நடத்தினார். ஆனால் அவர் தமிழ்நாட்டு எல்லைக்குள்ளாக நிறுத்தி வைக்கப்பட்டு திரும்ப அனுப்பப்பட்டார். ஒன்று புரிந்தது, கர்நாடகா இந்தியாவிற்குள் இருக்கிறதா? இந்தியா தமிழ்நாட்டிற்குள் இருக்கிறதா? என்ற கேள்விக்கு இரு தேசிய இனங்களின் பிரச்சனையில் இந்திய தேசியம் ஒன்றும் செய்யமுடியாது. காரணம், என்னத்தான் கட்டிப்போட்டாலும், தேசிய ஒருமைப்பாடு குறித்து தொண்டைக்கிழிய கத்தி தீர்த்தாலும், தமக்கான தேசிய அடையாளத்தை காத்துக் கொள்ள, கன்னட தேசிய இனம் முழு மூச்சுடன் எதிர் தரப்பில் நின்றதை காணமுடிந்தது. அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரச்சனைகள் கர்நாடகாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் தொடர்ந்து நீடித்து வந்தது. குறிப்பாக காவிரி மற்றும் ஒகேனெக்கல் பிரச்சனை என்பது தமிழ்நாட்டு மக்களின் உயிர்வாழ்வு பிரச்சனையாக இருந்தும்கூட, நடுவண் அரசால் ஒன்றையும் செய்ய முடியவில்லை. முடிந்தவரை இப்பிரச்சனையிலிருந்து ஒதுங்கிக் கொள்வதையே நடுவண் அரசு பணியாக மேற்கொண்டது.

இப்படி ஒருநிலை இருக்கும்போதுதான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ கேரளாவிற்கு செல்ல முயற்சித்தப்போது கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார். தமிழர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தமிழர்களின் உயிர் வாழ்வுக்கு உத்திரவாதம் மறுக்கப்பட்ட உலகளவில் படும் துயர்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் தமிழர்களுக்கான ஒரு அரசு இல்லாததே, தமிழர்களின் இவ்வளவு கொடும்துயருக்கும் காரணம் என்பதை நம்மால் தெள்ளத்தெளிவாக கண்டுணர முடிகிறது. மலேசியாவில் எமது உறவுகள் மாதக் கணக்கில் கப்பலிலேயே காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது. இணையத்தளங்களில் இந்த செய்தி தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும்போதுகூட, தமிழர்கள் என்ற காரணத்தை மறந்து, மாந்த நேயத்தோடு இது மனித உறவு, மனித உயிர் அங்கே மடிந்து கொண்டு இருக்கிறதே, அதை தடுத்து நிறுத்த, குரல் எழுப்ப தமிழ்நாட்டிலிருந்து தமிழ் உறவுகளுக்கு எண்ணம் வராதது ஏன்? என்று விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் காரணங்கள் மாந்தநேய உரிமைகளில்கூட சித்து விளையாட்டு நடத்துகிறது என்பதற்கு, நளினி விடுதலை மறுப்பே ஒரு பெரும் உண்மையை நமக்கு எடுத்துரைக்கிறது. நளினியை விடுதலை செய்ய மறுத்து, அதற்கான காரணத்தை தமிழ்நாடு அரசு சொல்லியிருப்பது சிறுபிள்ளைகளைக் கூட சிரிக்க வைக்கும் காரணமாகும்.

ஆனாலும்கூட அதை குறித்து வீச்சு நிறைந்த ஒரு இயக்கத்தை நளினி தமிழ்பெண் என்பதற்காக அல்ல, மாந்தம் என்ற அடிப்படையிலாவது நடத்தியிருக்கலாம். மாந்த உரிமையை மீட்டெடுக்கும் களப்பணியாவது ஆற்றி இருக்கலாம். ஆனால் தமிழ்நாடே இந்த செய்தியை கேட்டு அமைதியாக இருக்கிறது என்றால், தமிழர் என்ற உறவு மட்டுமல்ல, தமிழ்நாட்டில் மாந்தநேயமே செத்தொழிந்துவிட்டது என்பதையே அடையாளப்படுத்துகிறது. இப்படி அடுக்கடுக்காய் தமிழர்கள்மீது திணிக்கப்படும் அடக்குமுறைகள், உரிமை பறிப்புகள், இவைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள அல்லது அந்த உரிமைகளை மீட்டெடுக்க, நாம் எவ்வாறு கடமையாற்றுகிறோம் என்பதை சிந்திக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் உயிராதாரப் பிரச்சனையான தண்ணீர் பிரச்சனை மேலோங்கி இருக்கும்போது, பாம்மாற்றின் குறுக்கே அணை கட்ட, கேரள அரசு தொடர்ந்து செயலாற்றிக் கொண்டிருக்கிறது. தமிழக-கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பாம்பாறு, அமராவதி நதியின் முக்கிய நீராதாரம். அப்படி இருக்க, பாம்மாற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்ட, கேரள அரசின் திட்டம் அமராவதி நதியை பாலைவனமாக்கும் திட்டம் மட்டுமல்ல, அது தமிழ்நாட்டு மக்களின் உயிர்வாங்கும் திட்டமும்கூட என்பதை கேரளா உணர்ந்திருந்தும்கூட, செயல்படுகிறது என்றால் தமிழ்நாடு வேறு, கேரளா வேறு என்பதை கேரளா உணர்ந்திருக்கும் அளவிற்கு இன்னும் தமிழ்நாடு உணர்ந்திருக்க வில்லை என்பதுதான் உண்மை.

கடந்த இரண்டு மாதங்களாக இந்த அணை கட்டலுக்கு எதிராய் பல்வேறு இயக்கங்களை, பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும்போதுகூட, இந்திய தேசிய காங்கிரசும், இந்திய தேசிய திமுகவும் வாய்மூடி இருக்க காரணம் ஒன்று கேரளாவில் காங்கிரஸ் வாக்குகளை பெறவேண்டும். இரண்டு, கேரளாவில் காங்கிரசை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். தமிழ்நாட்டைக் குறித்து காங்கிரசுக்கும், சோனியாவுக்கும் கவலைஇல்லையா? என்று கேட்டால், அதை கருணாநிதி பார்த்துக் கொள்வார் என்கின்ற தைரியம் காங்கிரசிற்கு உண்டு. காரணம், கடந்த காலங்களில் தமிழீழ மக்களின் உயிர் பறிப்பு பிரச்சனை உயர்ந்தெழுந்தபோது, அதை அணைத்துப்போட்ட ஆற்றல்வாய்ந்த தலைவரை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. ஒகேனெக்கல் பிரச்சனை தமிழக மக்களிலிருந்து புதிய கிளர்ச்சியை உண்டாக்கியபோது, அதை ஒரே அறிக்கையில் அணைத்த பெருமை தமிழக முதல்வருக்கு இருக்கிறது. அவரை பக்கத்தில் வைத்திருக்கும்வரை தமிழ்நாட்டில் காங்கிரசிற்கு எந்த ஆபத்தும் நிகழப்போவது கிடையாது.

சோனியாவின் அதிகாரப்பூர்வ தமிழ்நாட்டு பேச்சாளராக தமிழக முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிற காரணத்தால், தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்களை காட்டிலும், தமிழக முதல்வரையே காங்கிரஸ் கட்சி பெரிதும் நம்பியிருக்கிறது. அந்த நம்பிக்கையின் அடையாளமாக பல்வேறு தருணங்களில் திமுகவை அது காப்பாற்றி இருக்கிறது. இந்தியாவே கிளர்ந்தெழுந்து ஸ்பெக்ட்ராம் குறித்து பேசியபோது, அமைதிகாத்த மன்மோகன்சிங், ராசாவை மீண்டும் அமைச்சராக்கியதின் மூலம் கருணாநிதிக்கு தாம் செய்த பேருதவி கருணாநிதி தமக்கு செய்யும் உதவிக்கு நன்றி கடனாய் அமைந்தது. இந்திய ஒருமைப்பாடு என்று, ஒவ்வொரு குடியரசு நாளன்றும், சுதந்திர நாளன்றும் வீர முழக்கம் செய்தும்கூட, கேரளாவிற்கோ, கர்நாடகாவிற்கோ இதில் நம்பிக்கை இல்லை என்பதைதான் இரு மாநிலத்தின் செயல்பாடுகளும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. தேசிய ஒருமைப்பாடு என்பது வாய் பேச்சுக்கு வேண்டுமானால் இனிக்கச் செய்யலாம். ஆனால் அவரவர் தேசிய இனப் பிரச்சனைக்கு, அவரவர்கள் மிகத் தெளிவாக இருப்பதையே தமிழ்நாட்டின் நீராதாரத் தேவையை இரு மாநிலங்களும் தொடர்ந்து நிராகரிப்பதிலிருந்தே புரிந்து கொள்ள முடிகிறது.

கேரளத்தின் அணை கட்டும் பிரச்சனையால், தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவதை கேரள அரசு அறியாதா என்றால் நிச்சயமாக அறிந்திருக்கும். தமிழக முதல்வருக்கு கேரள அரசின் செயல்பாடு புரியாதா? என்றால் நிச்சயமாக புரிந்திருக்கும். ஆனாலும் என்ன செய்வது? தமிழக முதல்வரை பொறுத்தமட்டில், இந்திய தேசிய திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவராக இருக்கிறார். ஆகவே கேரள மாநிலத்தைக் காட்டிலும் கர்நாடக மாநிலத்தைக் காட்டிலும் இந்திய தேசியத்தைக் குறித்து அதிக அக்கறைக் கொண்டவராக, சோனியா காந்தியைக் காட்டிலும், மன்மோகன் சிங்கைக் காட்டிலும் மிகுந்த பிடிப்புக் கொண்டவராக அவர் செயல்படுகின்ற காரணத்தினால் இதையெல்லாம் அவர் பொருட்படுத்த மாட்டார்.

மலேசியாவில் தமிழன் துன்பப்பட்டால் என்ன? ஈழத்திலே தமிழன் செத்தொழிந்தால் என்ன? தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் தமிழன் நீரின்றி வறண்டுபோனால் என்ன? இந்திய தேசியம் சிதைவுப்படக் கூடாது என்ற கோட்பாட்டிலிருந்து ஒருபோதும் விலகிப்போகாத தேசிய ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கேரளாவை பொறுத்தமட்டில், பால், காய்கறிகள், உணவுப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களும் தமிழ்நாட்டிலிருந்துதான் அனுப்பப்படுகின்றன.

ஆனால் இத்தனையும் பெற்றுக் கொண்ட கேரளா, தமிழ்நாட்டிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, இதை நேரிடையாக உரிமையோடு கேட்க வேண்டிய தமிழ், தமிழர் நலன், தமிழர் வாழ்வு குறித்து பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த தமிழக முதல்வர், அமைதி காக்கிறார் என்றால் இதற்கான காரணம் என்னதென்றே புரியவில்லை. ஒருவேளை தமிழர் மக்கள்நலன் என்பதைவிட, தம் மக்கள் நலனே பெரிதாக நினைக்கிறாரோ என்கிற சந்தேகம் இயல்பாக எழுகிறது.இந்த நிலையிலிருந்து தமிழ்மக்களை காக்க வேண்டிய, தமிழ் தேசிய இனத்தை ஒன்றுபடுத்த வேண்டிய பெரும்கடமை தமிழர் நலன் குறித்து இயக்கம் நடத்தும் எல்லோருக்கும் ஏராளமாய் உண்டு. இவ்வளவும் நடைபெற்றும் நம்மால் ஒன்றும் செய்யாமல்போனதற்கு காரணம், நாம் நமது தமிழர் என்கின்ற உரிமையை ஓங்கி முழக்கம் செய்து பெற்றுக் கொள்ள தவறியதுதான்.

இனிவரும் காலங்களிலாவது இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டும். அதற்கு தமிழ்தேசிய இயக்கங்கள் பெரும் பங்காற்ற வேண்டி இருக்கிறது. கர்நாடகாவிற்கு சென்ற ராமதாசை தடுத்து நிறுத்தினீர்கள். கேரளாவிற்கு செல்ல முயன்ற வைகோவை தடுத்து நிறுத்துகிறீர்கள். நாம் கேட்கிறோம், கேரளாவும் கர்நாடகாவும் இந்தியாவில்தான் இருக்கிறதா? ஆம் என்றால், தமிழ்நாட்டிலிருந்து கேரளாவிற்கும் கர்நாடகாவிற்கும் செல்வதற்கு ஏன் தடை விதிக்கிறீர்கள். இல்லை என்றால், தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா? என்ன முரண்பாடு. இந்த நிலையிலிருந்து எப்படி நாம் இந்திய தேசியத்தை புரிந்து கொள்வது என்பதை இந்திய தேசியம் பேசும் தேசியவாதிகள் நமக்கு விளக்கினால் சிறப்பாக இருக்கும்.

ஆனால் அவர்களும் விளக்கப் போவது கிடையாது, தமிழர்களும் விளங்கப் போவது கிடையாது. ஏனென்றால் தமிழர்களுக்குள் புதைந்துள்ள கட்சி சார்ந்த அரசியல் பண்புகள் அவர்களின் குருதி படிமங்களாக மாறி இருக்கிறது. தமிழர்களுக்குள் சாதிய எச்சங்கள், அவர்களின் நுரையீரலில் சுவாசக் காற்றாய் ஏறி இறங்குகிறது. அவர்களின் விழிப் படலங்கள் சாதியத்தையும், கட்சியையும் உற்றுப் பார்க்கின்ற காரணத்தால், மறுபக்கம் தமிழ், தமிழர் நலன், தமிழ் தேசியம் குறித்து அவர்களால் பார்க்க முடியாது. ஒவ்வொரு முறையும் தமிழன் பிளவுப்பட்டுத்தான் செத்தொழிந்திருக்கிறான். இப்பொழுதும்நாம் பிளவுப்பட்டு நிற்போமேயானால் இனி எந்த காலத்திலும் நாம் ஒன்றிணையவே முடியாத நிலைக்கு தள்ளப்படுவோம்.

அது, நம்மைவிட நமது சந்ததிக்கு பெரும் இழப்பை தரும். நமது வாழ்வு, நமது செயல், நமது சந்ததிக்கு ஒரு சிறந்த வாழ்வை படைத்தளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், நமது சந்ததி சீர் குலைவிற்கு நாமே காரணமாகி விடுவோம். இந்த இழிச்சொல், இன்றைய தலைமுறைக்கு வராத வண்ணம் காக்க முயல்வோம். இதுவே வாழும் தமிழினத்திற்கும், எதிர்கால தமிழர் வாழ்வுக்கும் நாம் செய்யும் பெரும் கடமையாகும்.

http://meenakam.com/?p=11946

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.