Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு தேர்தல் களம் - சம்பந்தனுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு தேர்தல் களம் - சம்பந்தனுக்கு வெற்றி வாய்ப்பு உண்டா?

முத்துக்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் இந்த தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரதிநிதித்துவம் கிடைக்குமா என்பது சந்தேகமே. சென்ற தேர்தலில் புலிகள் நேரடியாக வழிநடாத்தியதனால் 68,000 வரையிலான வாக்குகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தன. இந்த தடவை தமிழ் மக்களின் வாக்களிப்பு மட்டம் குறைவானதாகவே இருக்கும். மூதூர் கிழக்கு பிரதேச மக்கள் இன்னமும் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை. பலர் தொடர்ந்தும் இடம் பெயர்ந்த நிலையிலேயே உள்ளனர். வன்னிக்கு இடம் பெயர்ந்த குடும்பங்களும் குடியமர்த்தப்படவில்லை. எனவே இந்த தடவை 50,000 வரையிலான மக்களே வாக்களிக்க கூடியதாக இருக்கும்.

தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி சார்பில் கௌரி முகுந்தன் தலைமையில் ஒரு குழு போட்டியிடுவதனால் அது கணிசமான வாக்கினைப் பிரித்தெடுக்கும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலும் முக்கிய பிரமுகர்கள் பலர் போட்டியிடுவதனால் அதுவும் பிரித்தெடுக்கலாம். பிள்ளையானின் கட்சியும் சிறியளவில் பிரித்தெடுக்கும். ஈ.பி.டி.பியும் சிறியளவில் வாக்குகளைப் பிரிக்கலாம். இதனால் இவை பிரித்தெடுத்ததுபோக மீதியான வாக்குகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கிடைக்கப் போகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதால் தீவீர தமிழ்த் தேசிய சக்திகள் ஆதரிக்கப் போவதில்லை. இதைவிட சம்பந்தன் தொடர்பாக பாரிய அதிருப்தியும் தொகுதி மக்களிடையே காணப்படுகின்றது. கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்றவர்களில் பலர் கூட திருகோணமலை தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக வாக்களிப்பார்களே தவிர சம்பந்தனுக்காக வாக்களிக்கப்போவதில்லை.

எனவே தமிழ்ப் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற உணர்வு வேறு விடயங்களுக்கு அப்பால் மேலோங்கியிருந்தால் மட்டும் ஒரு ஆசனம் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைக்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதால் அதுவே முதலாவது நிலைக்கு வரும் இதனால் போனஸ் ஆசனம் அதற்கே கிடைக்கும். இரண்டு ஆசனங்கள் உறுதியாக அதற்கு கிடைக்கும். தற்போதைய புள்ளிவிபரக் கணக்கின்படி திருகோணமாலை மாவட்டத்தில் பெரும்பான்மையாக முஸ்லிம் மக்களே வாழ்கின்றனர்.

2004ம் ஆண்டு தே;தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு 65,000 வரையிலான வாக்குகளைப் பெற்றிருந்தது. இத்தடவை குறைந்தளவிலாவது சிங்கள வாக்குகளும் தமிழ் வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்க இருப்பதனால் அது முதல் நிலைக்கு வருவது தவிர்க்கமுடியாதது. ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வெற்றி பெறுபவர் இருவரும் முஸ்லிம்களாகவே இருப்பர்.

சிங்கள மக்களின் வாக்குகள் அதிகளவில் அரசாங்க கட்சிக்கே கிடைக்கும். ஜே.வி.பி இவ்வாக்குகளில் சிறியளவில் ஊடுருவல் செய்யலாம். ஆனால் ஆசனம் கிடைக்கக் கூடிய வாக்குகளைப் பெறுவது கடினம். அரசாங்கக் கட்சிக்கு நிச்சயம் ஒரு ஆசனம் கிடைக்கும். அவ்வாசனம் சிங்களவர் ஒருவருக்கு கிடைப்பதற்கே வாய்ப்புக்கள் அதிகம். சிலவேளைகளில் விருப்பு வாக்குகளின் வேறுபாடு காரணமாக முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறு நடைபெறுமானால் மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்படக் கூடியவர்களாக இருப்பர். முன்னரும் ஒருதடவை மூன்று முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள்ள ஒரேயொரு சாதகமான அம்சம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடாமைதான். அவ்வாறு போட்டியிட்டால் நான்கு முனைப் போட்டியாக இருக்கும். இப்போட்டியில் ஒருதரப்பு தோல்வியடையக்கூடிய நிலையே ஏற்படும். மும்முனைப் போட்டியாக இருப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு ஆசனத்தைப் பெறக் கூடிய சந்தரப்பம் சற்று அதிகமாக உள்ளது.

ஜே.பி.யினர் திருகோணமலை மாவட்டத்தில் ஒரு போட்டியாளராக இல்லை. அதனால் ஜே.வி.பியினை விட கூடுதலான வாக்குகளைப் பெறும் தரப்பிற்கு ஒரு ஆசனம் கிடைக்கவே செய்யும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாக்குகள் ஊடறுப்பு வாக்குகளினால் குறைந்தாலும் ஜே.வி.பியினை விட கூடுதலான வாக்குகளை எடுக்க கூடிய நிலையிருப்பதனால் ஒரு ஆசனம் கிடைக்கும் சாத்தியம் சற்று அதிகம்.

ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகளவில் சிங்களவர்களினதும், தமிழர்களினதும் வாக்குகள் கிடைக்குமானால் மீதி வாக்கு ஆசனமும் அதற்கு கிடைக்கலாம். அவ்வாறான நிலை வரின் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஆசனம் எதுவும் கிடையாது.

திருகோணமலை மாவட்டத் தேர்தலைப் பொறுத்தவரை இந்ததடவை ஐக்கிய தேசிய கட்சி மட்டுமே கோட்டா வாக்குகளுக்குள் (தகுதிகாண் எண் வாக்குகள்) வரக்கூடிய நிலையிலுள்ளது. ஏனைய கட்சிகள் மீதி வாக்குகளுக்குள் வரும் நிலையே உள்ளது. ஆனால் ஐக்கிய தேசிய கட்சி சுமார் 90,000 வாக்குகள் வரை கிடைக்குமானால் மீதி ஆசனங்களில் ஒன்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்து விடும். இந்நிலைவரின் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்று ஆசனங்களும், அரசாங்கக் கட்சிக்கு ஒரு ஆசனமும் கிடைக்கலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்த தடவை 30,000 தொடக்கம் 35,000 வரையிலான வாக்குகளே கிடைக்கும் வாய்ப்புண்டு.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினைத் தவிர ஏனைய கட்சிகளுக்கு ஆசனங்கள் எதுவும் கிடைக்ககூடிய வாய்ப்புக்கள் இல்லை.

மொத்தத்தில் திருகோணமலைக்கான தமிழ் பிரதிநிதித்துவம் மங்கலாகவே தெரிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் வாக்குகள் தமிழ்;த் தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் ஆகிய நான்கு தரப்புகளுக்கிடையே பிரிந்து செல்லும் நிலையுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் சசிதரன், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கணேசமூர்த்தி ஆகியோர் கணிசமான வாக்குகளை பிரிக்கலாம் ஆனால் இரண்டு கட்சிகள் சார்பிலும் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படக் கூடிய வாய்ப்புகள் அறவே இல்லை. தமிழ் வாக்குகள் மூலம் முஸ்லிம்கள் தெரிவுசெய்யப்பட் கூடிய நிலையே உண்டு.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் பிள்ளையானின் தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளிலிருந்தும் மட்டும்தான் தமிழர்கள் தெரிவு செய்யப்படலாம். இந்நிலைதான் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு சாதகமாக உள்ளது. முஸ்லிம்கள் தெரிவு செய்யப்பட்டு விடுவார்கள் என்பதற்காக தமிழர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க முற்படுவர். இதைவிட கருணாவின் பிளவினால் மட்டக்களப்பு மக்கள் தமிழத் தேசியத்துடன் இல்லை என்ற கருத்து மேலோங்கியிருந்தது. அந்த கறையிலிருந்து மீள்வதற்கும் மட்டக்களப்பு மக்கள் விரும்புகின்றனர். இதுவும் தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கு சாதகமாக உள்ளது.

எனினும் 3 ஆசனங்களுக்கு மேல் தமிழர்கள் பெற்றுக்கொள்வது இந்த தடவை கடினம். 3 ஆசனங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு ஆசனம் ஜக்கியதேசியக் கட்சிக்கும் ஒரு ஆசனம் அரசாங்கக்கட்சிக்கும் கிடைக்கலாம். பிள்ளையானின் கட்சி சற்று கூடுதலாக வாக்குகளைப் பெற்றால் இரண்டு ஆசனங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் ஒரு ஆசனம் பிள்ளையானின் கட்சிக்கும் கிடைக்கலாம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் பொன் செல்வராஜா, அரியனேந்திரன், ஆறுமுகம் ஆகியோர் தெரிவு செய்யப்படலாம். ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து முஸ்லிம் காங்கிரசினை சேர்ந்த பசீர் சேகுதாவுத் தெரிவு செய்யப்படலாம் அரசாங்கக் கட்சியிலிருந்து அமீர் அலி அல்லது ஹிஸ்புல்லா தெரிவு செய்யப்படலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்நோக்குகின்ற பிரதான நெருக்கடி பிரச்சாரத்தை ஒழுங்காக செய்ய முடியாத நிலைதான். ஆள்வளப் பற்றாக்குறை பிரச்சினைகளோடு பிள்ளையான் குழு, கருணா குழு என்பவற்றின் அச்சுறுத்தல்களும் உள்ளது. வாகரைப் பிரதேசங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்ள படையினரும் பெரியளவிற்கு அனுமதிக்கவில்லை.

பெரிய கூட்டங்களை நடாத்தும் நிலையும் இல்லை. சிறிய சிறிய கூட்டங்களே நடாத்தப்படுகின்றன. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு செல்வாக்கு அதிகம். கல்குடா தேர்தல் தொகுதியில் பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் செல்வாக்கு உண்டு. பிள்ளையானை இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமாராவ் சந்தித்ததை பெரும்பிரச்சாரமாக அவர் மேற்கொள்கின்றார்.

பட்டிருப்பு தேர்தல் தொகுதியின் பெரும்பகுதி புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்தமையால் தமிழ் தேசிய உணர்வு நிலை அங்கு சற்று அதிகம். ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு தொடர்பாக பெரும் அதிர்ச்சியிலேயே அவர்கள் உள்ளனர். எனினும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு அவர்கள் வாக்களிக்க முற்படலாம். கணிசமான வாக்காளர்கள் வாக்களிக்காமலும் விடலாம். மட்டகளப்பு மாவட்டத்திலேயே தனித் தமிழ் தொகுதி என்பது இத்தொகுதி தான்.

இத்தேர்தலைப் பொறுத்தவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கியத்துவம் இருவகைகளில் உண்டு. முதலாவது கருணா, பிள்ளையான் குழுக்களை அப்பறப்படுத்துவது இரண்டாவது. மீண்டும் தமிழ்த் தேசியத்திற்கான பிரதேச ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது இவ்விரண்டும் நிறைவேறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும், கருணா குழுவிற்குமிடையே கடும் போட்டி நிலவுகின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கல்முனை, காரைதீவு பகுதிகளிலேயே பிரச்சாரங்களை மேற்கொள்கின்றது. அக்கரைப்பற்றுக்கு தெற்கே பொத்துவில் வரை கருணா குழுவின் முக்கியஸ்தரான இனிய பாரதியின் குறுநில மன்னர் ஆட்சி நிலவுவதால் அப்பகுதிகளில் பிரச்சாரம் செய்ய முடிவதில்லை. பிரச்சாரம் செய்யச் சென்றவர்களும் இனிய பாரதியின் குழுவினரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

அரசாங்கமும் ஏனைய இடங்களில் கருணா குழுவினரின் ஆதிக்கத்தை தடுத்தாலும் அம்பாறை மாவட்டத்தில் தடுப்பதில்லை. பிள்ளையான் குழுவினரும் அங்கு பிரச்சாரம் செய்ய பெரிதும் சிரமப்படுகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 70,000 வரையிலான தமிழ் வாக்குகள்தான் உள்ளன. இந்த வாக்குகளை கருணா குழுவினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் பிரிக்க இருப்பதால் தமிழ் தரப்பிற்கான ஒரு ஆசனம் கிடைப்பது மிகவும் கடினம். ஐக்கிய தேசிய கட்சி, பிள்ளையான் கட்சி கூட வாக்குகளை சிறியளவில் பிரிக்கலாம். கருணா குழுவினர் அரசாங்க கட்சியில் போட்டியிடுவதால் அவர்களுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகள் சிங்களப் பிரதிநிதி தெரிவுச் செய்யப்படுவதற்கே உதவக் கூடியதாக இருக்கும்.

அம்பாறை மாவட்டத்தில் சிங்கள வாக்காளர்களும் முஸ்லிம் வாக்காளர்களும் ஏறத்தாழ சமனாகவே உள்ளனர். சிங்கள வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் அரசாங்க கட்சிக்கே வாக்களிப்பர். ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் தயாரட்னாவும் அரசாங்க கட்சிக்கு மாறியுள்ளதால் குறைந்தளவிலாவது சிங்கள வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிப் பெறுவது கடினம்.

முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதால் முஸ்லீம் வாக்குகள் பெருமளவிற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கே கிடைக்கும். எனினும் மாவட்டமட்டத்தில் கூடுதலான வாக்குகளை பெறும் நிலையில் அரசாங்க கட்சியே உள்ளது. இதனால் போனஸ் ஆசனம் அதற்கே கிடைக்கும். அரசாங்க கட்சிக்கு அளிக்கும் வாக்கு சிங்களவர் தெரிவு செய்யப்படுவதற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு அளிக்கும் வாக்கு முஸ்லிம்கள் தெரிவு செய்யபடுவதற்கும் உதவும் என்பதே அங்குள்ள நிலை.

இந்த வகையில் பார்க்கும் போது அரசாங்கத்திற்கு நான்கு ஆசனங்களும் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்று ஆசனங்களும் கிடைக்கலாம். அரசாங்கக் கட்சி சார்பில் 3 சிங்களவர்களும் 1 முஸ்லிமும் தெரிவு செய்யப்படலாம். பெரும்பாலும் அந்த முஸ்லீம் பேரியல் அஸ்ரபாகவே இருப்பார். ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவு செய்யப்படுபவர்கள் மூவரும் முஸ்லீம்களாகவே இருப்பர். முஸ்லீம் காங்கிரசை சேர்ந்தவர்கள் மூவர் தெரிவு செய்யப்படுவதற்கே சந்தரப்பங்கள் அதிகம். இம்மாவட்டத்திலிருந்து தமிழர்கள் எவரும் தெரிவு செய்யப்பட போவதில்லை.

தற்போது தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க வேண்டுமென்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது. முன்னரும் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. பொதுப் பட்டியல் மூலம் கேட்கலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. பிள்ளையான் இது தொடர்பாக சம்பந்தனுடன் பேசியிருந்தார். ”எமது கட்சி ஒரு பழம்பெரும் கட்சி. அது ஒருபோதும் போட்டியிடுவதை நிறுத்தப் போவதில்லை” என சம்பந்தனால் பதிலளிக்கப்பட்டது.

தற்போதைய பிரச்சாரம் வெற்றி பெறுமானால் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு ஒரு ஆசனம் கிடைக்கலாம். வில்லியம் தோமஸ் அல்லது சந்திர நேரு - சந்திரகாந்தன் தெரிவு செய்யப்படலாம்.

அவ்வாறான நிலை ஏற்படின் மூன்று சிங்களவர்களும், மூன்று முஸ்லிம்களும், ஒரு தமிழரும் அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்படலாம். உண்மையில் அம்பாறை மாவட்டத்தின் தேர்தல் சூத்திரம் இதுதான். தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்படும் நிலை வந்தால் பேரியல் அஸ்ரப் தெரிவு செய்யப்படப் போவதில்லை.

அம்பாறை மாவட்டத்தில் இத்தேர்தலின் முக்கியத்துவம் அரசாங்கக்கட்சியின் முஸ்லிம் ஜாம்பவான்களான பேரியல் அஸ்ரபும், அதாவுல்லாவும் தோற்கும் நிலை ஏற்படுவது தான்.

மொத்தத்தில் இத்தேர்தல் கிழக்கு மாகாணத்தில் அரசாங்கத்திற்கு சார்பாக நின்ற தமிழ், முஸ்லீம் பிரமுகர்களை வெளியேற்றப்போகின்றது. இதுதான் தமிழ் முஸ்லீம் தேசியவாதங்களுக்கு ஒரு ஆறுதல் தரும் செய்தி.

வடக்கு - கிழக்கு முழுவதிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு குறைந்தது யாழ்பாணம் - 4, வன்னி - 3, மட்டகளப்பு - 3, தேசியப்பட்டியல் - 1 என 11 ஆசனங்கள் கிடைக்கலாம். உறுதியாகக் கூறக்கூடிய ஆசனங்கள் இவைதான். அதிஉயர் அளவில் பார்ப்போமாக இருந்தால் யாழ்ப்பாணம் - 5, வன்னி - 4, திருகோணமலை - 1, மட்டக்களப்பு - 3, தேசியப்பட்டியல் - 1 என மொத்தம் 14 ஆசனங்களை எதிர்பார்க்கலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டிருக்காவிட்டால் யாழ்ப்பாணம் - 8, வன்னி - 5, திருகோணமலை - 1, மட்டக்களப்பு - 4, அம்பாறை - 1, தேசியப் பட்டியல் - 1 என மொத்தம் 20 ஆசனங்களை எதிர்பார்த்திருக்கலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியவர்கள் தமது இரத்தத்தினாலேயே அதனை உருவாக்கி இருந்தனர். அதனை உருவாக்கியவர்களில் சிவராம், நடேசன், தம்பையா ஆகியோர் தமிழ்த் தேசிய எதிரிகளினால் கொலை செய்யப்பட்டிருந்தனர். கட்சிக்குள் பிளவினை உருவாக்கிவிட்டு தற்போது ஒருமைப்பாடு பற்றிப் பேசுவதில் எந்தவித அர்த்தமுமில்லை.

சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு இந்தத் தேர்தலில் 10 ஆசனங்கள் கிடைக்கலாம். அம்பாறை - 3, மட்டகளப்பு - 1, திருக்கோணமலை - 2, வன்னி - 1, கண்டி - 1, தேசியபட்டியல் - 2 என 10 ஆசனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புக்கள் உண்டு. முழு இலங்கையிலும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்திலேயே முஸ்லீம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது. 10 ஆசனங்கள் பெற்றுக் கொள்ளும் வகையில் வியூகம் அமைந்து போட்டியிடுவதாக ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். அவ்வியூகம் நிச்சயம் வெற்றி பெறும். ரவூப் ஹக்கீம் போன்று சரியான வியூகங்களை வகுக்க சம்பந்தனால் முடியவில்லை என்பது தான் கவலைக்குரிய விடயம்.

வெற்றிப் பெறும் முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு மாறுவதைத் தடுப்பதற்காக எல்லா வேட்பாளர்களிடமும் இராஜினாமாக் கடிதம் வாங்கப்பட்டுள்ளது.

எனவே இந்தத் தடவை வெற்றிபெறுபவர்கள் கட்சி மாறுவது கடினம் என்றே கூற வேண்டும்

இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – முத்துக்குமார் ' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள்

http://www.ponguthamil.com/paarvai/paarvaicontent.asp?sectionid=2&contentid={67B55768-81E4-4142-8344-E066043DDADF}

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.