Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவோயிஸ்டுகளை ஒழிக்க கருணாநிதி ஐடியா!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவின் இதயம் ரணகளமாகி வருகிறது!

வட மாநிலங்கள் அனைத்துமே மாவோயிஸ்ட்டுகளால் வறுத்தெடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மாவோயிஸ்ட்டுகளுக்கும் வட மாநில அரசுகளுக்குமான உள்நாட்டு யுத்தம் தொடர்கிறது. இப்போது இன்னும் வீரியமாக!

சத்தீஸ்கர் மாநிலம், மாவோயிஸ்ட்டுகள் செல்வாக்குள்ள பகுதி. அதில் மிக முக்கியமானது தாந்தேவாடா மாவட்டம். இது முழுக்கக் காடுகளால் சூழப்பட்ட நிலம். அங்கு மாவோயிஸ்ட்டுகளைத் தேடி மத்திய ரிசர்வ் போலீஸ்காரர்கள் முகாமிட்டனர். தேடுதல் வேட்டையில் மும்முரமாக இருந்தபோது, மாவோயிஸ்ட்டுகளால் சுற்றிவளைக்கப்பட்டார்கள். 76 போலீஸார் சம்பவ இடத்தில் சாய்க்கப்பட்டார்கள். கடந்த வாரத்தில் ரத்தம் உறையவைத்திருக்கிறது இந்தச் செய்தி!

மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா, பீகார் ஆகிய ஏழு மாநிலங் களும் மாவோயிஸ்ட்டுகளின் கோட்டையாக இருக் கிறது. புரிகிற மாதிரி சொன்னால் இலங்கையின் தமிழீழப் பகுதியில் சுமார் 16 ஆயிரம் சதுர கி.மீ. தூரத்தைத் தனது ஆயுத பலத்தால் கைப்பற்றிவைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள். இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகளின் கட்டுப்பாட்டில் ஏறக்குறைய ஏழு மாநிலங்கள் இருக்கின்றன. இதில் 150 மாவட்டங்கள் போலீஸ் உள்ளே நுழைய முடியாத இரும்புக் கோட்டையாக இருக்கிறது. அதாவது, சுமார் 60 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு மாவோயிஸ்ட்டுகள் வசம் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த எல்லைக்குள் போலீஸ் நடமாட்டம் என்பதே முழுமையாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்த இடங்களை முற்றிலுமாக மாவோயிஸ்ட்டுகளிடம் இருந்து கைப்பற்றுவதற்காகத்தான் 'பசுமை வேட்டை' என்ற பெயரால் பெரும் போரை மத்திய அரசு திட்டமிட்டது. ஆறு மாநிலங்களின் போலீஸார், மாநில சிறப்பு போலீஸ் படைகள், மத்திய அரசின் சி.ஆர்.பி.எஃப். படை, பி.எஸ்.எஃப் படை, துணை ராணுவப் படைகள், ராணுவத்தின் மிக முக்கிய அமைப்பான நாகா பட்டாலியன் என 50,000 பேர் மாநில எல்லைகளின் பல்வேறு பாகங்களில் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டு உள்ளார்கள். இந்த வேட்டைக்காகவே வேட்டை நாய்கள், கருநாகங்கள், தேள்கள் ஆகிய மரபுச் சின்னங்களின் பெயரைத் தாங்கிய சிறப்புப் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. தவிர, பழங்குடியினரில் போலீசுக்கு ஆதரவான ஆட்களுக்கு பயிற்சி கொடுத்து, தனிப் படைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மிக முக்கியமானது சல்வா ஜுடும் அமைப்பு. இவர்கள் போலீஸ் பார்க்க வேண்டிய அனைத்து வேலைகளையும் பார்க்கிறார்கள். ''இந்த சல்வா ஜுடும் குரூப் ஏதாவது ஓர் ஊருக்குள் வந்து அங்கு உள்ள மக்களைக் கொல்லும். அல்லது விரட்டும். உடனே, ஊரைக் கொளுத்திவிடுவார்கள். இப்படி இந்தியப் படைபலம் மொத்தமாக இந்த மாநிலங் களில் குவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பார்த்து மாவோயிஸ்ட்டுகள் பயப்படவில்லை. 2004-ம் ஆண்டு செப்டம்பர் 21-ம் நாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உதயமானது. இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட், மக்கள் யுத்தம், இந்திய மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகியவை இணைந்து உருவானது இந்த அமைப்பு. கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகள் இருக்கிறார்கள். நக்சல்பாரி எழுச்சி என்று அவர்களால் வர்ணிக் கப்படும் நிகழ்வின்போது கிடைத்த பெயர் காலப்போக்கில் குறைந்து, முற்றிலுமாக மறையும் காலத்தில்தான் மாவோயிஸ்ட் கிளர்ச்சி ஆரம்பித்தது. நந்திகிராம், சிங்கூர், லால்கர் ஆகிய இடங்களில் பெரும் மோதலாக அவை வெடித்தன. இவை பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் மட்டும் வெடிப்பதற்கு என்ன காரணம்?

''பழங்குடியினரின் வன வளங்களைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் ஒப்பந்தங்களுக்குத் தடையாக அந்தப் பகுதி மக்கள் இருக்கிறார்கள். அவர்களை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கான முயற்சிகளை இந்த அரசாங்கம் பார்க்கிறது. இப்போது அரசாங்கத்துக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் நடக்கும் சண்டை, வன வளங்களைத் தனியாருக்குக் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதற்குத்தானே தவிர, இன்றைய அரசாங்கத்தை ஆயுதப் போராட்டத்தின் மூலம் கவிழ்ப்பதற்கான முயற்சி அல்ல'' என்று மனித உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், 'இயற்கைத் தாது வளம் மிக்க பகுதி களில் இடதுசாரித் தீவிரவாதம் தொடர்ந்து வளருமானால், முதலீடு களுக்கான சூழ்நிலை நிச்சயம் பாதிக்கப்படும்' என்கிறார்.

பழங்குடியின மக்கள் வாழும் மலைப் பகுதியில் உள்ள தாது வளங்களை கம்பெனிகள் எடுத்துக்கொள்ள கான்ட்ராக்ட் கொடுக்கும்போதுதான் மாவோயிஸ்ட்டுகள் மல்லுக்கு வருகிறார்கள். அப்பகுதி மக்கள் தங்களது நிலங்களை தர மறுக்கிறார்கள். அதை மாவோயிஸ்ட்டுகள் ஆதரிக்கிறார்கள். எனவேதான் ஊரே சேர்ந்து எதிர்ப்பைக் காட்டுகிறது!

இன்னொரு பக்கத்தில்...

மாவோயிஸ்ட்டுகளின் செயல்பாடுகள் அவர்களுக்கு மிகப் பெரிய கெட்ட பெயரைத்தான் அதிகம் விதைத்து வருகின்றன. அடக்குமுறைக்கு எதிராகப் பழங்குடி மக்கள் வில், அம்பு, வாள் ஏந்திப் போராடுவது காலங்காலமாக நடந்து வருகிறது. மேற்கு வங்க நக்சல்பாரி எழுச்சிக்கு முன்னதாகவே பழங்குடியினர் இப்படித்தான் தங்களது எதிர்ப்பைக் காட்டி வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கான கோரிக்கையை ஜனநாயகப்படுத்தி அனைத்து மக்களது பிரச்னையாக மாற்ற முயற்சிக்காமல் 'அழித்தொழிப்பில்' இறங்கியதால், பழங்குடியினரது நோக்கம் சிதைக்கப்பட்டுவிட்டது. சாகச வாதம், கெரில்லா போர் முறை, மக்கள் யுத்தம் ஆகிய எந்த வார்த்தையைச் சொல்லிப் போராடினாலும், தங்களது லட்சியத்தை வெகுஜன மக்களுக்கு உணர்த்தாத வரை அனைத்துமே 'வெறும் வன்முறை'யாகத்தான் பார்க்கப்படும். கண்ணிவெடிகள் மூலமாக போலீஸாரை வரிசையாக மாவோயிஸ்ட்டுகள் கொல்வது மக்களிடம் இருந்து அவர்களை இன்னும் அந்நியப்படுத்தும்.

'அரசாங்கம் தவிர, வேறு யாரும் ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, அது நியாயமான நோக்கமாக இருந்தாலும்' என்பதே இன்றைய உலகநியதியாக ஆகிவிட்டது. ஆயுதங்களைக் கையில் வைத்திருந்தாலே நீங்கள் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இந்த நிலையில் மாவோயிஸ்ட்டுகள் தங்களது வழிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டம் இது. 'மலை உச்சி மீது ஜாக்கிரதையாக அமர்ந்துகொண்டு யானைச் சண்டையைப் பார்ப்பதுபோல' மாவோயிஸ்ட்டுகளைத் தூண்டிவிடாமல் ஒருமுகப்படுத்த வேண்டிய கடமை மனித உரிமை யாளர்களுக்கு இருக்கிறது.

அருந்ததி ராயிடம் ஒரு போலீஸ் அதிகாரி எளிமையான ஒரு வழியைச் சொல்லியிருக்கிறார்...

''பாருங்க மேடம்! வெளிப்படையா பேசணும்னா... இந்தப் பிரச்னையை எங்களை மாதிரியான போலீஸோ, மிலிட்டரியோ தீர்க்க முடியாது. ஆதிவாசிகளிடம் இருக்கிற பிரச்னை என்னன்னா, அவங்களுக்கு பேராசைன்னா என்னன்னே தெரியல. அதனால, உயரதிகாரிங்ககிட்ட சொல்லிட்டேன், முதல்ல படைகளை வாபஸ் வாங்குங்க. அதுக்குப் பதிலா ஒவ்வொரு வீட்டுலயும் ஒரு டி.வி. பெட்டியைப் பொருத்துங்க. புரட்சி, மிரட்சி பத்திலாம் யோசிக்கவே அப்புறம் அவங்களுக்கு நேரம் இருக்காது. எல்லாப் பிரச்னையும் தன்னால தீந்துடும்'' என்று சொன்னதைத் தனது கட்டுரையில் அருந்ததி ராய் பதிவு செய்துள்ளார்.

'வீட்டுக்கு ஒரு இலவச கலர் டி.வி.' என்று அறிவித்து ஆட்சி யைப் பிடித்தார் முதல்வர் கருணாநிதி. இன்று மாவோயிஸ்ட் பிரச்னையைக் கட்டுப்படுத்தவே இந்த டி.வி. யோசனைதான் வந்தி ருக்கிறது. தமிழகத்தை முன்னோடி மாநிலம் என்று சும்மாவா சொன்னார்கள்!

நன்றி - ஆனந்த விகடன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.