Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்

முனைவர்.வே. பாண்டியன்

சற்றேறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்புவரை, தமிழில் புழக்கத்தில் இருந்த சொற்களில் 50 சதவிகிதத்திற்கு மேல் சமற்கிருத சொற்களாகவே இருந்தன. ஆயிரம் ஆண்டுகளான பார்ப்பன மேலாதிக்கத்தின் விளைவு இது. தங்களது மேலாண்மையை நிலைப்படுத்து வதற்காக திட்டமிட்டே செய்யப்பட்ட சமற்கிருத மயமாக்கல், ஆரியமயமாக்கலின் விளைவு இது. தமிழனின் தனித்த அடையாளங்களை அழித்தொழித்து, மொழியைச் சிதைத்து அதன்வழி தமிழின் மூலத்தை சமற்கிருதம் சார்ந்ததாகக் கொச்சைப் படுத்தி, தமிழன் என்றென்றும் அடிமைப்பட்ட, அனாதை குமூகமாக நிறுவுவதே ஆரியர்களின் பிழைப்பு உத்தி. இந்த உத்தியில் பெருமளவும் வெற்றியும் கண்டனர். அதோடல்லாமல், தமிழின் உண்மையான மேன்மையை உணர்ந்திருந்த அவர்கள், அதைப் பொறுக்க முடியாமல் தமிழை 'நீச பாஷை' என்று இழித்துரைத்தனர். ஒரு அடிமையின் மொழி நீசமாகத்தானே இருக்க முடியும். தமிழனுக்கென்று ஏதாவதொரு மாண்பு இருந்து விட்டாலும் அவன் தன்னை உயர்ந்தவனாக எண்ணி தனது அடிமைத் தனத்திற் கெதிராகக் கிளர்ச்சி செய்வானே! எனவே அவனது மொழியைக் கீழ்த்தரமான மொழியென்று மூளைச்சலவை செய்தனர்.

இந்த நீண்ட கால கட்டத்தின் இறுதியில்,1800களில், கால்டுவெல் என்ற, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அருட்தந்தை தமிழகம் வந்தார். தமிழ் கற்று, சமற்கிருதம் கற்று, தென்னிந்திய மொழிகளையும் கற்றுத் தௌிந்து, திராவிட மொழிகளின் மூலம் தமிழ் என்றும், அது சமற்கிருதத்திலிருந்து உருவான மொழி அல்லவென்றும் ஐயமின்றி நிறுவினார். இதை ஒரு வெளிநாட்டினர் தான் முதலில் சொல்ல வேண்டியிருந்தது என்பதிலேயே, ஒட்டு மொத்த தமிழினமும் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டிருந்தது என்பது சொல்லாமலேயே விளங்கும். அதன் பிறகு வந்த சூரியநாராயன சாஸ்திரியார் (பரிதிமாற் கலைஞர்) தமிழைச் செம்மொழி என்று ஆய்ந்துரைத்தார். சமற்கிருதத்தின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளான தமிழை மீட்கத் தனித்தமிழே சிறந்த வழியென்று முனைந்து மறைமலை அடிகளார் 'தனித்தமிழ்' இயக்கத்தைத் தோற்றுவித்தார். தேவநேயப்பாவாணரும் எண்ணற்ற அரும்பனிகளைச் செய்தார். தமிழின் மீட்சி தொடங்கியது. அதன் விளைவாக தமிழில் 50 விழுக்காடாக புழங்கி வந்த சமற்கிருதச் சொற்கள் தற்போது 20 விழுக்காடாகக் குறைந்துள்ளது. அந்த 20 விழுக்காடு அயல்மொழிச் சொற்களையும் அறவே நீக்கித் தமிழைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.

அதேநேரம், தொல்காப்பியர் காலத்திலேயே இசைவளிக்கப்பட்ட, அயல் மொழிக்குரிய ஒலிகளைக் குறித்த, எழுத்துக்களையும் தவிர்ப்பது எனக்கு நல்லதொரு கொள்கையாகப் படவில்லை. நான் முன்வைக்கும், தன்னியலான தமிழின் வளர்ச்சித் திட்டத்திற்கு இது உவந்ததாக இருக்காது. இதைப்பற்றி அலசி மொழி விரிவாக்கம் பற்றிய எனது கருத்தைப் பதிவு செய்வது தான் இக்கட்டுரையின் நோக்கம்.

இக்கட்டுரையை தொடரும் முன்பு ஒரு செய்தியை குறிப்பிட்டே ஆகவேண்டும். அன்று சமற்கிருதத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட இன்று ஆங்கிலத்தால் மிகுதியான பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகளின் பொருளாதார மேன்மையும், தமிழினிடத்தில் பார்ப்பனீயத்தால் ஏற்படுத்தப்பட்ட தம்மைப்பற்றிய தாழ்வு மனப்பாண்மையும் தான் இந்த ஆங்கிலக் கவர்ச்சிக்குக் காரணிகள். அதோடு தமிழின் மேன்மை, தொன்மை, பண்பாடு பற்றிய விழிப்புணர்வு பெருவாரியான தமிழிரிடத்தில் ஏற்படுத்தப் படாமையும் இந்த இழிவு நிலையின் மற்றொறு காரணி. நிற்க.

உலகிலுள்ள அனைத்து மொழியினங்களும் ஒரேமாதிரியான ஒலியமைப்புகளை தங்களது மொழிகளில் பயன்படுத்தவில்லை. பொதுவான ஒலிகள் பலப்பல இருந்தாலும் ஒவ்வொரு மொழிக் குடும்பத்திற்கென்றும் தன்னியலான ஒலிகளும் ஏராளம். இந்த தனித்தன்மைகள் அம்மொழியினங்கள் வாழ்ந்த இயற்கைச்சூழல், அச்சூழலில் வழ்ந்த பறவைகள், விலங்குகள் எழுப்பிய ஒலிகளின் அடிப்படையில் உருவானதாகும். இந்த மொழிகள் ஒவ்வொன்றும் நிறைவு பெற்றதாகவும் தமக்குத் தேவையான அனைத்து (அல்லது அனேக) ஒலிகளை வெளிப்படுத்தக் கூடியதாகவும் விளங்கின.

ஆனால், இந்த மொழியினங்கள் ஒன்றோடொன்று தொடர்பு கொள்ளும் போது தான் ஒவ்வொரு மொழியின் போதாமை உணரப்பட்டது. இன்றுள்ள எந்த ஒரு மொழியும் மற்ற அனைத்து மொழிகளின் அனைத்து பெயர் சொற்களையும் உச்சரிக்க வல்லமை அற்றதாகவே உள்ளது. அந்த வல்லமை ஒவ்வொரு மொழிக்கும் முகாமையான தேவை என்பதே எனது கருத்து. அந்த வகையில் தமிழும் அந்த இலக்கை நோக்கி செயல்பட வேண்டும் என்பது எனது விழைவு. இத்தகைய விரிவாக்கத்திற்கு தமிழும், தமிழ் சார்ந்த மொழிகள் தவிர ஏனைய அனைத்து உலக மொழிகளும் இசைவற்றதாகவே உள்ளன. அம்மொழிகளை விரிவாக்கம் செய்வதோ கற்பதோ எளிதல்ல. ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு, தமிழின் விரிவாக்கத்திற்கோ கற்பதற்கோ உகந்த முறையில் உள்ளது. நாம் அடுத்துக் காணப்போகும் மொழி பற்றிய செய்திகளில் இது தௌிவாகும்.

கட்டுரையைத் தொடரும் முன்பு ஒரு சிறு விளக்கம்: சீனத்தைச் சார்ந்த அனைத்து கீழை மொழிகளும் ஒலிகளச் சார்ந்த எழுத்துகளைக் கொண்டிருக்க வில்லை. அவை கருத்துகளைத் தான் வெளிப்படுத்து கின்றன. ஒவ்வொரு கருத்திற்கும் ஒரு வரிவடிவம் (எழுத்துவடிவம்). கருத்தின் அடிப்படையில் எழுத்துகள் அமைவதால் அவை ஒவ்வொன்றின் தனிப்பட்ட உச்சரிப்புகளைக் கற்றல் இன்றியமையாதது. இயல்பாகவே, இம்மொழிகள் எல்லாம் மிகக் கடினமான மொழிகள். இம்மொழிகளும் விரிவாக்கத்திற்கு உவந்தவையல்ல. சீனமொழி பழம்பெரும் இலக்கியங்களைக் கொண்ட மொழி. எனினும், இக்குடும்பம் ஒரு வளர்ச்சி யடையாத மொழிக் குடும்பமே. ஆதிகால மனிதர்கள் பட எழுத்துகளைப் பயன்படுத்தினர். அதையொத்த எழுத்துகள் தாம் சீன எழுத்தமைப்பும். ஓரெழுத்துப்பேச்சு (Mono Sylabic) காலத்திலேயே தமிழகத்திலிருந்து பிரிந்து சென்ற இனம் தான் சீன மொழிக் குடும்பம். இக்குடும்ப மொழிகளில் ஒவ்வொரு புதிய கருத்திற்கும் (சொல்லிற்கும்) ஒரு புதிய வரிவடிவமும், உச்சரிப்பும் கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும். இது எளிதல்ல. தமிழும், ஏனைய உலக மொழிகளும் ஒலி சார்ந்த மொழிகள் என்பதாலும், நமது கட்டுரை அதை மையப்படுத்தியது என்பதாலும் சீன மொழிக்குடும்பம் பற்றிய இந்த விளக்கம் தேவைப்பட்டது. நிற்க.

ஒரு மொழியை கற்கின்றவர் மூன்று முகாமையான கூறுகளைக் கற்க வேண்டும். அவை முறையே;

1. எழுத்தும் அதன் ஒலியும்

2. சொல்லும் அதன் உச்சரிப்பும்

3. சொல்லின் பொருள்.

(இங்கே நான் கற்பது பற்றி எடுத்துக்கொண்டது எழுத, படிக்க என்ற நோக்கில் மட்டுமே.)

1. எழுத்தும் அதன் ஒலியும்

எளிமையானதாக இருக்க வேண்டும். கற்பதை எளிமைப் படுத்தும் நோக்கில், எண்ணிக்கையில் குறைவானதாக இருக்க வேண்டும் அல்லது, எழுத்துக்களை அமைக்கும் முறை அவற்றைக் கற்பது எளிதாயிருக்க வேண்டும். எழுத்துகளுக்கு நிலையான, மாறாத ஒலிகள் இருக்க வேண்டும்.

உலகில் புழக்கத்தில் உள்ள அத்தனை சொற்களையும் முறையாக உச்சரிக்க வேண்டு மெனில் தேவையான மிகு அளவிலான எழுத்துகளும் அதற்குரிய ஒலிகளும் இன்றியமையாதது. ஆனால், மிகு அளவிலான எழுத்துக்கள், எழுத்தை உருவாக்குவது முதல், கற்பது, கணணியில் பயன்படுத்துவது உட்பட எண்ணற்ற சிக்கல்களை உள்ளடக்கியது. எனவே, முரன்பட்ட இந்த இரண்டு எதிர்பார்ப்புகளுக்கும் (அதாவது, மிகு எண்ணிக்கை, பயன்படுத்தலில் எளிமை) தீர்வு உண்டா எனில் உண்டு; அது தமிழுக்கே உள்ள சிறப்பு. இதைப்பற்றி பிறகு விரிவாக காணலாம்.

2. சொல்லும் அதன் உச்சரிப்பும்

எழுத்துக்களின் கூட்டு தான் சொல். அந்த எழுத்துகளுக்குரிய ஒலிகளின் சேர்க்கை தான் அந்த சொல்லின் உச்சரிப்பு. எழுத்துகளையும் அவற்றின் ஒலிகளையும் முறையாக கற்ற எவரும் சொற்களில் உள்ள எழுத்துகளை (அவற்றின் ஒலிகளோடு) கூட்டிப் படிக்கும் போது மயக்கமற்ற உச்சரிப்புகளை உருவாக்க வேண்டும். எனவே, எழுத்துகளுக்கு நிலையான ஒலிகள் இருப்பின் (அதாவது, இடத்திற்கு தகுந்தவாறு பிறழ்ன்று ஒலிக்காத தன்மை) மயக்கமற்ற உச்சரிப்பு இயல்பானதாகும். மிகு எண்ணிக்கையிலான எழுத்துகளைப் பயன் படுத்தும் போது அவ்வெழுத்துகளுக்குரிய நிலையான, மாறாத ஒலிகள் இயல்பாகிவிடுகிறது. இங்கு முகாமையாக நாம் உணரவேண்டியது என்னவென்றால் சொல்லின் உச்சரிப்பை, சிறப்பித்துக் கற்பிக்கத் தேவையில்லை. இது கற்றலின் சிக்கலிளுள்ள ஒரு பரிமானத்தை எளிதாக்கி விடுகிறது. எனவே, சொல்லைக் கற்கின்ற ஒருவர் சொல்லிற்குரிய எழுத்துகளைக் (Spelling) கற்றாலே போதுமானது.சரியான உச்சரிப்பு இயல்பாகவே வந்துவிடும்.

ஆங்கில மொழியை இங்கு ஒப்பு நோக்கினால் நான் சொல்வது எளிதாகப் புரியும். ஆங்கிலத்தில் மொத்தமும் 26 எழுத்துகளே யுள்ளன, அததற்கு ஒதுக்கப்பட்ட ஒலிகளோடு. இந்த குறைவான ஒலிகளை வைத்துக்கொண்டு வகைவகையான சொற்களை ஒலிப்பது இயலாத செயல். எனவே, ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலிகளை மிகையேற்றம் (Over-Loading) செய்கின்றனர். எனவே, சொற்களைக் கற்கவேண்டிய ஒவ்வொருவரும் Spelling மட்டுமில்லாது உச்சரிப்புகளயும் (Pronunciation) கற்கவேண்டியுள்ளது. இது ஆங்கிலம் கற்பதை மிகவும் கடினமாக்கி விடுகிறது. சான்றாக, Bus என்பதை 'புஸ்' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். Card என்பதை 'சார்டு' என்றுதான் இயல்பாகப் படிக்க முடியும். ஆக, 26 எழுத்துகளயும் முறையாக பயின்ற பின்னும், எழுத்துகளைக் கூட்டி சொற்களைப் படிக்கும் போது, கிட்டத்தட்ட அனைத்து ஆங்கில சொற்களுக்கும், ஒரு ஆசானின் துணை இன்றியமையாதது. ஆனால், தமிழுக்கு இந்த அளவு கற்பித்தல் தேவையில்லை. இதைப்பற்றி பிறகு மேலும் பார்ப்போம். இந்தக் கட்டுரையாளர், சிறுவயதிலேயே சொந்த முயற்சியால் ஆங்கிலம் கற்றவர் என்ற முறையில் அது ஒரு Illogical (ஏரணமற்ற) மொழியென்பதை உணர்ந்தவர். அறிவியல் வழியாக முயன்று ஆங்கிலம் கற்க முடியாது. ஆனால், தமிழ் அறிவியல் அடிப்படையில் அமைந்த மொழி.

3. சொல்லின் பொருள்

சொல்லின் பொருளைக் கற்பது ஒவ்வொரு மொழிக்கும் இன்றியமையாத அடிப்படைத் தேவை. வேர்ச்சொல்லின் அடிப்படையில் அமைந்த சொல்லமைதிகளக் கொண்ட சிறந்த மொழிகளுக்கு சொற்களையும் அதன் பொருளையும் நினைவில் இருத்துவது ஒப்பீட்டளவில் எளிதானது. அந்த சிறப்பும் தமிழுக்கு இயல்பாகவே அமைந்த ஒன்றாகும். தமிழில் அனைத்து சொற்களும் வேர்கொண்டு எழுந்தவையே. மற்றபடி, சொற்களைக் கற்றல் என்பது அனைத்து மொழிகளுக்குமான இன்றியமையாத பரிமாணம் தான்.

மொழி விரிவாக்கத்தைப் பற்றி கருதுகின்ற போது, எழுத்துகள் அதிகமாவதால், தமிழர்களைப் பொருத்தவரை, சொற்கள் மிகுதியாக வேண்டிய தேவை இல்லை. ஆனால், புதிய கலைச்சொற்களை உருவாக்கும் போது புதிதாக உருவாக்கப்பட்ட எழுத்துகளும் பெருமளவில் உதவும். மொழி விரிவாக்கத்தின் முதன்மை தேவை என்னவெனில், மாற்று மொழிகளில் உள்ள அனைத்து பெயர்களையும் (பெயர்ச் சொற்களையும்) பிழையின்றி எழுதி உச்சரிப்பதே. இன்று நாம் அனைத்தும் தமிழில் என்று முன்னேற விரும்பும்போது இது ஒரு இன்றியமையாத தேவையாகும்.

நாம் மேலே கண்டவற்றிலிருந்து, உலகின் அனைத்து சொற்களின் மயக்கமில்லாத உச்சரிப்பை இயல்பாக்க நிறைய எழுத்துகளும் அதேநேரம் அவற்றைக் கற்பதை எளிமைப் படுத்தக்கூடிய தாகவும் அமையவேண்டும். இந்த வசதி தமிழுக்குள்ள இயல்பான தகுதியாகும். இதை நாம் எண்ணி எண்ணிப் பூரிப்படையலாம்.

தமிழில் பண்டைய முறைப்படி 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், இவற்றின் சேர்க்கையால் உருவான 216 (12*18 = 216) உயிர்மெய் எழுத்துக்களும் உள்ளன. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என்ற வகைப்பாடே சுவையான அறிவியல் அடிப்படையினால் செய்யப்பட்டது. அ முதல் ஔ வரையிலான ஒலிகளை நாம் ஏற்படுத்தும்போது உதடுகள் ஒட்டாமல், மேலண்ணத்தை நாக்கு எங்கும் தொடாமல், காற்றுக் குழாயை அல்லது உதடுகளைக் குறுக்கியோ, விரித்தோ காற்றை ஒழுங்குபடுத்தி ஒலிக்கின்றோம். உயிருக்கு முதன்மையானது காற்றுதானே! எனவே, காற்றை மட்டும் பயன்படுத்தி உருவாக்கும் ஒலிகள் உயிரொலிகள் எனப்பட்டன. மெய்யொலிகளை உருவாக்கும்போது (க், ங்,ச் . . . . ) நாவானது மேலண்ணத்தைத் தொட்டோ அல்லது உதடுகள் ஒட்டியோ ஒலிக்க வேண்டியுள்ளது. அதாவது, காற்றைவிட உடலின் (மெய்யின்) பங்கே அதிகம். அவை மெய்யொலிகள் எனப்பட்டன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் ஒவ்வொரு உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது வகைவகையான புதிய ஒலிகளை உருவாக்க முடியும். அவ்வெழுத்துக்கள் (ஒலிகள்) உயிர்-மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. அத்தகையவை எத்தனை எழுத்துக்கள் என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்துகளின் எண்ணிக்கையைப் பொருத்தது.

இதில் குறிப்பிட வேண்டிய சிறப்பு என்னவெனில் ஒவ்வொரு மெய்யெழுத்தும், ஒரு குறிப்பிட்ட உயிரெழுத்தோடு சேர்த்தொலிக்கும்போது, அதன் மெய்யெழுத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மாற்றத்தை அடைகின்றன. சான்றாக, ஆ என்ற உயிரெழுத்தோடு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தொலிக்கும்போது, கா, ஙா, சா, நா, மா......என்ற உயிர்மெய்கள் ஒரே மாதிரியான மாற்றங்களைப் பெருகின்றன. ஒருசில தேவையான வேறுபாடுகளைத்தவிர, இது அனைத்து உயிரெழுத்துகளுக்கும் பொருந்தும். இதன்மூலம் நாம் உணரும் உண்மை என்னவெனில் உயிர்மெய்களுக்கு எழுத்து, வடிவங்களை உருவாக்குவதோ, கற்பிப்பதோ மிகவும் எளிது. அது மட்டுமல்லாமல் உயிர்மெய்கள் கூட்டொலிகள் என்பதும் அவை உயிரெழுத்துகளுடன் மெய்யெழுத்துக்கள் தனித்தனியே கூடுவதால் உருவாவதாலும் இவற்றின் ஒலிகளை, அவற்றினோடு கூடிய எழுத்துக்களோடு நினைவில் இறுத்துவதும் எளிது. இவை மிகமிக முகாமையான உண்மைகள். தமிழின் சிறப்பின் அடிப்படையே இவைதான்.

பாவாணரின் வேற்சொல் ஆய்வு தமிழினத்தை வியக்க வைத்தது. தமிழ்ச்சமூகம் உலகின் தொன்மையானது. முதன்முதலில் பேசத்தொடங்கிய தமிழ்மாந்தன், ஒவ்வொரு சொல்லையும் காரணத்தோடே உருவாக்கிக் கையாண்டிருகின்றான். அதோடு சங்கம் வைத்து ஆய்ந்து செம்மைப் படுத்தப்பட்ட மொழி தமிழ் என்பதும் இச்சிறப்புகளின் அடிப்படை.

மீண்டும் ஆங்கிலத்தை ஆய்வு செய்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களும் அவற்றிற்குரிய அடிப்படை ஒலிகளுமே உள்ளன. இந்த 26 எழுத்துக்களுமே ஒன்றிற்கொன்று எந்த தொடர்பும் அற்ற தனித்தனி எழுத்து, ஒலிகளே. எனவே, இம்மொழியை விரிவாக்கம் செய்ய வேண்டுமெனில், எத்தனை புதிய எழுத்துகள் தேவையோ அத்துனை எழுத்துகளுக்கும் புதிய வரி (எழுத்து) வடிவங்களை உருவாக்க வேண்டும். அவையும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற தனித்தனி வடிவங்களாகத்தான் இருக்க முடியும். (இல்லையென்றால் ஆங்கிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பே மாறிவிடும்.) இவற்றின் வடிவங்களையும் ஒலிகளையும் உருவாக்குவதும் கற்பதும் ஒப்பீட்டளவில் தமிழைவிட மிகமிகக் கடினமானதாகும். எல்லாவற்றையும்விட முகாமையான செய்தி என்னவென்றால் அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட, ஆங்கிலம் போன்ற, மொழிகளை கணணியில் பயன்படுத்துவது இயலாததாகிவிடும். ஆனால், தமிழின் அடிப்படை அமைப்பு கணணி பயன்பாட்டுக்கு மிகவும் உவந்ததாக உள்ளது. உயிரும், மெய்யும் சேர்ந்து உயிர்மெய் உருவாக்கப் படுவதால் கணணியின் விசைப் பலகையில் உயிரெழுத்துகளுக்கும், மெய்யெழுத்துகளுக்கும் மட்டும் விசைகள் இருந்தாலே பொதுமானது. தற்போதுள்ள முறைப்படி, 12+18 = 30 விசைகளே போதுமானது. உற்று நோக்குங்கால், தமிழின் எழுத்துமுறை ஏதோ கணணிக்கென்றே உருவாக்கப்பட்டது போல் உள்ளது. இப்படித் தொன்மையான மொழியாக இருப்பினும், தமிழ் அரியபல மேன்மைகளைப் பெற்றிருக்கும்போது, இதன் விரிவாக்கம் பற்றிய தயக்கம் ஏன்?

கட்டுரையைத் தொடரும்முன்பு ஒரு விளக்கம் அளிப்பது தேவையாகிறது. தமிழ் ஒரு அறிவியல் மொழிதான். கணணி பயன்பாட்டுக்கு உவந்ததுதான். ஆனால், கணணியில் தட்டச்சு செய்யும்போது பெரும்பாலான எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளை அழுத்த வேண்டியுள்ளதே (அதாவது உயிரும், மெய்யும்) . அதனால், ஒரே கருத்தை கணணியில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சேற்றும்போது தமிழுக்கு கூடுதல் விசைகளை அழுத்த வேண்டியிருக்குமே என்று கேட்கலாம். அது தான் இல்லை!!!! எப்படி? ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் அதிக எழுத்துக்களைக் கொண்ட நீண்ட சொற்கள். ஆனால், தமிழில் பெரும்பாலான சொற்கள் குறைந்த எழுத்துக்களைக் கொண்ட சிறிய சொற்களே. இது எதனால் எற்பட்டது என்றால், மீண்டும், ஆங்கிலத்தின் எழுத்துப் பற்றாக்குறைதான். இதைக் கணித ஆய்வு வழியாக விளக்குகின்றேன்.

மூன்றெழுத்து சொற்களை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஆங்கிலத்தில் 26 எழுத்துகளிலிருந்து ஒவ்வொரு முறையும் வெவ்வேறான 3 எழுத்துக் குழுக்களை (Combinations) எடுத்து அவற்றை வெவ்வேறாக இடவமைதி (Permutations) செய்து மேலளவாக எத்தனை சொற்களை உருவாக்கமுடியும் என்றால், அவை மொத்தம் 15,600 மட்டுமே. அதே நேரம் தமிழில் 247 மொத்த எழுத்துக்களிலிருந்து 1,48,86,690 எண்ணிக்கையான 3 எழுத்து சொற்களை உருவாக்க முடியும். இந்த இரண்டு எண்ணிக்கைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த இரண்டு மொழிகளிலுமே இந்த எண்ணிக்கை களிலிருந்து மிகச்சிறிய விழுக்காடு தான் பயன்படு சொற்களாகும். ஏனென்றால் அத்துனை சொற்களுக்கும் சொற்களுக்கான ஓசையமைதி இருக்காது; வேர்ச்சொல் தொடர்பும் இருக்காது. இங்கு நாம் காணவேண்டியது வாய்ப்புகளைப் பற்றியதுதான். குறைந்த எழுத்துகளையுடைய ஆங்கிலத்திற்கு சிறிய சொற்களுக்கான வாய்ப்புகள், ஒப்பீட்டளவில், தமிழைவிட மிகமிகக் குறைவு. ஆகவே, ஆங்கிலத்தில் பெரும்பாலான சொற்கள் நீண்ட சொற்களே. சான்றாக, சிலவற்றைப் பார்ப்போம்.

Complication சிக்கல்

Beauty அழகு

Stop நில்

Compettition போட்டி

Compare ஒப்பிடு

Listen கவனி

Statue சிலை

Uncomparable ஒப்பற்ற

Go போ

Difficulty கடினம்

Situation சூழ்நிலை

Silence அமைதி

Sound ஒலி

Comfort வசதி

Exhibition காட்சி

Shadow நிழல்

Doubt ஐயம்

Place இடம்

Concentration கவனம்

Install நிறுவு

House வீடு

Come வா

Government அரசு

Justice நீதி

மேலும், ஓரெழுத்துச் சொற்கள் இந்த இரண்டு மொழிகளிலும் எத்துனை உள்ளன என்று பார்த்தாலே விளங்கிவிடும். ஆங்கிலத்தில் ஓரெழுத்துச் சொற்கள் இரண்டே இரண்டு தான். அவை A (ஒரு), I (நான்) என்பன. ஆனால், தமிழில் எத்துனை என்று பாருங்கள்.

நீ, வை, கை, தை, போ, வா, கோ, மா, மை, பா, நா, பை, தா, தீ, ஈ, ...............

இந்தப் பட்டியல் முடிவானதல்ல. இதற்கு இணையான ஆங்கில சொற்கள் அனைத்தும் பல்லெழுத்துச் சொற்களே. ஆக, சராசரியாக, ஒரே கருத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சேற்றும் போது, ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறைவான விசையழுத்தங்களே தேவைப்படும் என்பது உண்மை. அதோடு, தமிழ் மென் பொருளில் சுயமாக புள்ளியிடும் வசதியும் உண்டு. நிற்க.

இக்கருத்துக்கு உரம் சேர்க்க, திருக்குறளையும், அதன் ஆங்கில மொழியாக்கமும் (கவிதை வடிவிலேயே, G. U. Pope) ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். இங்கு சான்றாக எடுத்துக் காட்டும் குறள், நேரடியாக பொருள் கொள்ளக் கூடிய எளிய குறளே.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு. (35 எழுத்துக்கள்)

The loveless to themselves belong alone;

The loving men are others' to the very bone. (68 எழுத்துக்கள்)

வேறு ஏதாவதொரு சொற்றொடரை மொழிபெயர்த்தாலும் இதே போன்ற முடிவே கிடைக்கும். (34 எழுத்துக்கள்)

If any different sentence is translated, similar result would be arrived at. (62 எழுத்துக்கள்)

ஆக, நான் முன்பே குறிப்பிட்டதுபோல் தொல்காப்பியர் இசைவளித்த ஸ, ஷ, ஜ, ஹ, க்ஷ எழுத்துகளைக்கூட தவிர்ப்பது முறையன்று. பார்ப்பனீயத்தின் மீதுள்ள வெறுப்பால் தமிழை முடக்குவது எள்ளளவும் சரியன்று. அழகிய தமிழின் தூய்மையைக் காப்பதாக எண்ணி, தமிழை தேக்கி வைப்பது ஒரு அடிப்படை வாதமே. அடிப்படை வாதங்கள் முன்னேற்றத்தின் எதிரிகள்.

உலகின் அனேக மொழிகள் விரிவாக்கத்திற்கு இயைந்த மொழிகள் அல்ல. தமிழுக்கு மட்டுமே இந்தத் தகுதியுண்டு. விரிவாக்கதின் மூலம் தமிழை உலகின் முதன்மை மொழியாக்க முடியும். அதற்குரிய அத்துனை தகுதிகளும் தமிழுக்குண்டு.

மொழி விரிவாக்கம் பற்றிய கருத்தை ஒரு சான்றோடு விளக்குவோம். ஆடுகள் தமிழ் மண்ணிற்குரிய விலங்கு. இருந்தும் ஆடு கத்தும் ஒலியை தமிழில் எழுத முடியாதென்பதே வருந்தக்கூடிய செய்தி. தற்போது ஆடு கத்துவதை 'மே' (ம்+ஏ = மே) என்றே எழுதுகின்றோம். இது May என்பதில் உள்ள ஏ தான். ஆனால், Man என்பதில் உள்ள ஏ தான் சரியான உச்சரிப்பு. அதற்குரிய உச்சரிப்பு (எழுத்து) தற்போது நம்மிடத்தில் இல்லை. மாறுபட்ட இந்த 'ஏ' க்கான ஒரு உயிரெழுத்தை உருவாக்கினால் இந்த புதிய 'மே' மட்டுமல்ல 18 புதிய உயர்மெய்கள் கிடைக்கும்.

சரி. எவ்வாறு விரிவாக்கம் செய்யலாம் என்று இப்போது பார்ப்போம். நமது குறிக்கோள், உலகிலுள்ள அனைத்து மொழியினங்களின் பெயர்ச் சொற்களை அவ்வினங்களின் உரிய உச்சரிப்புகளோடு எழுதிப் படிப்பதே. எனவே, அத்தகைய மொழிகளைக்கற்ற தமிழர்களின் உதவியோடு என்னென்ன ஒலிகள் தமிழில் சேர்க்கப்பட வேண்டும் என்பதைப் பட்டியலிட வேண்டும். பிறகு, அப்புதிய ஒலிகளை உருவாக்க என்னென்ன புதிய உயிரொலிகள், மெய்யொலிகள் தேவையென்பதை ஆய்ந்தறிய வேண்டும். இந்த ஆய்வின்பின் அவ்வுயிர் மெய்களுக்குறிய, தமிழின் தன்மையோடு இயைந்த, புதிய வரிவடிவங்களை உருவாக்க வேண்டும். இதைச்செய்த உடனேயே பட்டியலிட்ட அனைத்து ஒலிகளுக்கும் வரிவடிவங்கள் எளிதாக உருவாகிவிடும்.

தற்போது உள்ள செந்தமிழின் அமைப்பில் உயிரும், மெய்யும் உயிர்மெய்யும் சேர்த்து 12+18+(12*18=216)+1 = 247 எழுத்துக்கள் உள்ளன. இதனுடன், எடுத்துக் காட்டுக்காக, 8 உயிரெழுத்துக்களையும், 2 மெய்களையும் சேர்த்தால் 20+20+(20*20 = 400)+1 = 441 மொத்த ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறமுடியும். வெறும் 10 புதிய ஒலிகளையும், வரி வடிவங்களையும் மட்டும் உருவாக்கி கிட்டத்தட்ட 200 பதிய ஒலிகளையும், எழுத்துக்களையும் பெறுவது என்பது எப்பேர்ப்பட்ட விந்தை! அதுதான் தமிழ். இதற்குரிய, புதிய எழுத்துக்களுக்கு, விசைகளாக விசைப்பலகையில் Num Lock பகுதியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தலாம்.

நான் மேற்கூறியது ஒரு எடுத்துக்காட்டே. எத்தனை உயிர்கள், எத்தனை மெய்கள் என்பது மொழி வல்லுனர்கள் முடிவு செய்ய வேண்டியது. விரிவாக்கம் செய்யப்பட்ட தமிழுக்கு 'பெருந்தமிழ்' என்று பெயரிடலாம். ஐந்தாம் வகுப்பு வரை செந்தமிழும் அதன்பிறகு பெருந்தமிழும் மாணவர்களுக்கு கற்பிக்கலாம். தமிழின் இலக்கணத்தில், இந்த விரிவாக்கத்தால், ஏதேனும் மாறுதல் வேண்டின் அதனையும் கவனிக்க வேண்டும். தொல்காப்பியர் ஏற்படுத்திய வட எழுத்துக்கள் இப்பெரும் விரிவாக்கத்தின் ஒரு சிறிய அங்கமாக இருக்கும். பெருந்தமிழ் என்பதற்கு பதிலாக "உலகத்தமிழ்" என்றும் பெயரிடலாம்!

இக்கட்டுரையாளர் ஒரு மொழி வல்லுனரல்லர், ஒரு இயற்பியல் அறிஞர் தாம். ஆனால், அறிவியல் கண்ணோட்டத்தில் மொழியை அனுகும்போது, மேற்குறிப்பிட்ட தமிழின் 'வியத்தகு' மேண்மைகள் புலப்பட்டன. இத்தகைய விந்தை மொழியை மேலும் செழுமையுறச் செய்ய வேண்டியது, இந்தத் தலைமுறையின் கடப்பாடு அல்லவா? இக்கட்டுரையின் நோக்கம், அந்தத் திசையில், இன்றியமையாததொரு தருக்கத்தை ஏற்படுத்துவது தான். காலம் தாழாமல் அப்படியொரு தருக்கம் தொடங்கினால் தமிழும், தமிழுலகமும் மேன்மையடையும். இணையத் தமிழ் அறிஞர்களும், மாநாட்டுக் குழுக்களும் இக்கருத்துக்களை பரிசீலிப்பர் என்று கருதுகிறேன். தமிழுக்கு Unicode ல் உயிரெழுத்துக்கும், மெய்யெழுத்துக்குமான குறியீடுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்க் கோப்புகளை சேமிக்க மிகையான இடமும், அவற்றைக் கையாள மிகையான கணணி நேரமும் தேவை என்ற ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அனைத்து எழுத்துக்களுக்கும் தனித்தனி குறியீடுகள் கொடுக்கப்பட்டால், இடத்தேவையும், கையாளும் நேரமும் குறையும் என்பது தமிழை மட்டும் வைத்துப்பார்த்தால் உண்மையே. ஆனால், தற்போதிருக்கும் முறையிலேயேகூட ஆங்கிலத்தைவிட தமிழுக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படியான மிகையான இடங்களும், கையாளும் நேரமும் தேவையில்லை என்ற உண்மையை, இக்கட்டுரையின் மூலமாக வெளிக்கொணர்ந்துள்ளேன்.

வெல்க தமிழ்.

http://www.keetru.com/literature/essays/pandiyan_4.php

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின் வியத்தகு மாண்புகளும், அதன் வளர்ச்சித் திசைவழியும்

தமிழ் ஓக்கே... தமிழரின் மாண்புகள் ரைட்டு..

தமிழரின் வியத்தகு மாண்புகளும் .. அதன் வளர்ச்சி திசைவழியும்

Kattabomman-2.jpg

நாள் : 17.10.1799

இடம் : ஆங்கிலேயர்களின் கயத்தாறு இராணுவ முகாம்

“விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை, வீரமும் பெருமிதமும் நிறைந்ததாயிருந்தது. அவன் தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தான்.

இருபுறமும் நின்றிருந்த பாளையக்காரர்களைக் கடுமை நிறைந்த வெறுப்புடன் பார்த்த வண்ணம் தூக்குமேடையை நோக்கிச் சென்ற அவனுடைய நடையில் உறுதியும் துணிவும் தெரிந்தது.”

“மரத்தின் கீழே நின்ற தருணத்தில் வாய்பேச முடியாத தன்னுடைய தம்பியைப் பற்றி மட்டும் அவன் சிறிது வருத்தப்பட்டானென்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. தூக்குமேடை ஏறியபோது, ‘இப்படிச் சாவதைவிட கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்’ என்று அவன் மனம் நொந்து கூறியிருக்கிறான்”.

- கட்டபொம்மன் திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை நினைவுபடுத்தும் இந்தச் சம்பவம் கற்பனையல்ல. கட்டபொம்மனைத் தூக்கிலேற்றிய ஆங்கிலேயத் தளபதி மேஜர் பானர்மென் தனது இராணுவ நிர்வாகக் கடிதமொன்றில் இப்படித்தான் குறிப்பிட்டிருக்கின்றான்.

அடுத்துவந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது. தமிழகத்தில் தமது நேரடி ஆட்சியை நிறுவுவதற்குத் தடையாக இருந்த பாளையங்கள் எனும் நிர்வாக அமைப்பை ஒழிப்பதற்கு கட்டபொம்மனின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார்கள் வெள்ளையர்கள்.

_______________________________________________

மதுரையை நாயக்க மன்னர்கள் கைப்பற்றிய 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்தமிழகத்தில் 72 பாளையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. உள்நாட்டுக் குழப்பங்களாலும், போர்களாலும் சீர்குலைந்த நாட்டுப்புறங்களில் இந்தப் பாளையங்கள் ஓரளவிற்கு அமைதியைக் கொண்டு வந்தன. பாளையக்காரர்கள் ஒரு சிற்றரசருக்குரிய உரிமைகளை அனுபவித்து வந்தனர். வரி தண்டும் உரிமை, காவல் உரிமை, நீதி வழங்கும் உரிமை முதலானவற்றை வாழையடி வாழையாகப் பெற்று வந்தனர். வசூலிக்கும் வரியில் மூன்றில் ஒரு பங்கு மன்னனுக்கும், ஒரு பங்கு படைவீரர்களைப் பராமரிப்பதற்கும், ஒரு பங்கு தனது செலவிற்கும் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். தேவைப்படும் சமயங்களில் தனது படை வீரர்களை மன்னனது ஆணைக்கிணங்க அனுப்பவேண்டும். பாளையக்காரர்களை ஐரோப்பாவிலும், சீனாவிலும் இருந்த யுத்தப்பிரபுக்களோடும் ஒப்பிடலாம்.

18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாயக்க மன்னர்கள் வீழ்ச்சியடைய பாளையக்காரர்கள் தங்களது சுயேச்சைத்தன்மையை வளர்த்துக் கொண்டார்கள். இதற்கும் சற்று முன்பாகவே முகலாயப் பேரரசு தமிழகத்தைப் போரில் வென்று ஆற்காட்டு நவாப்பை தமிழகத்தின் கவர்னராக நியமித்தது. 1707இல் ஒளரங்கசீப்பின் மரணத்திற்குப் பின்னர் முகலாயப் பேரரசும் வீழ்ச்சியடைய நவாப்பு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான். பாளையக்காரர்கள் அவனது கட்டுப்பாட்டின் கீழ் வந்தார்கள். பேரரசன் ஒளரங்கசீப்புக்கு முன்னதாகவே விவசாயிகள் மீதான முகலாயப் பேரரசின் வரிவிதிப்பு கட்டுக்கடங்காத நிலைக்குச் சென்றது.

இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட படைகளுக்கு வேலையும், கூலியும் கொடுக்க இயலாத நிலையில் வீரர்கள் நாட்டுப்புறங்களைக் கொள்ளையடித்து காலம் தள்ளினர். மறுபுறம் மையஅரசு கேட்கும் அதிக வரிக்காக நிலக்கிழார்கள் விவசாயிகளைக் கசக்கிப் பிழிந்தனர். விவசாயத்தை மையமாகக் கொண்ட நாட்டுப்புற மக்களுக்கு விளைச்சலில் மிஞ்சியது ஓரளவே. இத்துடன் பஞ்சங்களும் படாதபாடுபடுத்தின. இந்தப் பின்னணியில்தான் முகலாயர்களால் நியமிக்கப்பட்ட ஆற்காட்டு நவாப் பாளையக்காரர்களிடம் அதிகவரி வசூலிக்க ஆரம்பித்தான். எதிர்த்தவர்களை அடக்க கம்பெனியின் படையை வாடகை கொடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தான்.

வணிகம் செய்ய வந்த கம்பெனியோ தனது பொருட்களுக்குரிய சந்தை குறுகிய அளவில் இருந்ததால் லாபம் பெறுவதற்கும் தனது வணிக ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கும் உள்நாட்டு மன்னர்களின் ஆட்சி விவகாரங்களில் நுழைய ஆரம்பித்தது. தனக்காகக் கம்பெனி செய்த போர்களுக்காகச் செலுத்தவேண்டிய பணத்தை அடைக்கமுடியாத நவாப், இறுதியில் வரிவசூலிக்கும் உரிமையை நேரடியாகக் கம்பெனிக்கே கொடுக்க ஆரம்பித்தான். 1792ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தென்தமிழகத்தின் ஆட்சியுரிமை நேரடியாகக் கம்பெனிக்குச் சென்றது. இது ஒப்பந்தமல்ல. கம்பெனியின் நிபந்தனையை நவாப் ஏற்றுக் கொண்டான் என்பதே உண்மை.

ஏற்கெனவே பாளையக்காரர்கள் வசூலித்து வந்த வரியும் அதிகமாகத்தான் இருந்தது. எனினும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால் அவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், கம்பெனி ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஆயுத பலங்கொண்டு கறாராக வரி வசூலிக்கப்பட்டது. நவாப் மற்றும் கம்பெனியின் இந்தக்கொடுமையினை எதிர்த்து 1750களில் பூலித்தேவன் தலைமையில் சில பாளையங்கள் போரிட்டன.

1772இல் சிவகங்கைச் சீமையின் முத்து வடுகநாதர், கம்பெனிப் படைகளை எதிர்த்துப் போரிட்டு மரணமடைந்தார். அதன் பின் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்லும் வேலுநாச்சியாரும், மருது சகோதரர்களும் ஹைதர் அலியின் பாதுகாப்பில் 7 ஆண்டுகள் இருந்துவிட்டு அவரது உதவியுடன் சிவகங்கையை மீண்டும் கைப்பற்றி நவாப்பின் படையை வெளியேற்றுகிறார்கள். கட்டபொம்மனது தாத்தாவும், தந்தையும் கூட கட்டபொம்மனைப் போலப் போராடவில்லை என்றாலும் கப்பம் கட்ட இயலாமல் தலைமறைவாயிருந்திருக்கிறார்கள், கப்பம் கட்டும் வரை சில பணயக்கைதிகளையும் அளித்திருக்கிறார்கள். இப்படிப் பாளையக்காரர்கள் மட்டுமல்ல, மக்களும் கம்பெனியின் கொடூர ஆட்சி குறித்து வெறுப்படைய ஆரம்பித்தார்கள். கம்பெனி முன்னேறிய ராணுவத்தைக் வைத்திருந்த போதிலும் அவர்கள் வெல்லப்படமுடியாதவர்கள் அல்ல என்பதை ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் தென்னிந்திய மக்களுக்கு நிரூபித்துக் கொண்டிருந்த நேரம்.

_______________________________________________

இந்தச் சூழ்நிலையில்தான் 1791 ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது முப்பதாவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறுகிறார். இதே காலத்தில்தான் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது. வரிவசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர். இன்றைக்கும் இருக்கும் மாவட்டக் கலெக்டர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தின் தோற்றுவாய் இதுதான். அன்று கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது. அதற்குத் தோதாக அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிகவரியும் விதிக்கப்படுகின்றது.

இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள் துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன. அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது. கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.

தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரிவசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை ‘கொள்ளை’ என்று குற்றம் சாட்டியது. இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் எனும் ரவுடி கலெக்டராக நியமிக்கப்படுகிறான். வணிகம் செய்து லாபமீட்டுவதைக் காட்டிலும் மக்களை நேரடியாகக் கொள்ளையடிப்பதையே தனது வணிகக் கொள்கையாக வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனி, அதற்குப் பொருத்தமான நபர்களையே அதிகாரிகளாக இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. வரிவசூல் இலக்கை வசூல் செய்து தர அதிகாரிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, அவர்கள் சொந்த முறையில் கொள்ளையடித்துச் சொத்து சேர்த்துக் கொள்ளவும் அனுமதித்தது.

தன்னுடைய அடாவடித்தனங்களுக்குப் பணிய மறுத்த கட்டபொம்மன் மீது உடனே படையெடுக்க வேண்டுமென்று ஜாக்சன் மேலிடத்திற்கு கடிதம் எழுதுகின்றான். திப்புவை ஒழிக்க தன் சக்திகள் அனைத்தையும் திரட்டிக் கொண்டிருந்த கம்பெனி நிர்வாகம், ஜாக்சனின் கோரிக்கையை வேறு வழியின்றி மறுத்தது. கட்டபொம்மனிடம் பேசித் தீர்க்குமாறு அறிவுறுத்தியது. உடனே, ஜாக்சன் அநாகரீகமான மொழியில் கட்டபொம்மனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். அதில் வரிபாக்கி நிறைய சேர்ந்து விட்டதென்றும், கட்டபொம்மனது நடவடிக்கைகள் கம்பெனிக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியுள்ளதெனவும், அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் தன்னை இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் சந்திக்க வேண்டுமெனவும் குறிப்பிடுகின்றான்.

இச்சம்பவம் நடைபெற்ற 1798ஆம் ஆண்டு தென்மாவட்டங்கள் மழையின்றிப் பஞ்சத்தால் தவித்த காலம். வடமாவட்டங்களில் இருந்து மக்கள் உணவுத் தானியங்களைக் கொண்டு வருவதற்குக்கூட மாட்டு வண்டிகள் இல்லை. அத்தனையும் கம்பெனியின் மைசூர் படையெடுப்பிற்காகக் கொண்டு செல்லப்பட்டு விட்டன. சோற்றுக்கே வழியில்லாமல் தென்மாவட்ட மக்கள் மடிந்து கொண்டிருந்த சூழ்நிலையில்தான் கட்டபொம்மனது வரிபாக்கியை ஜாக்சன் ஈவிரக்கமின்றி வசூலிக்க முற்படுகிறான்.

இந்தச் சூழ்நிலை பாளையக்காரர்கள் மத்தியில் கம்பெனி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு வித்திடுகிறது. எனினும் கிளர்ச்சிப் பாளையங்களின் ஒருங்கிணைவு உறுதியடையாதலால், தனியொரு பாளையமாய் வெள்ளையர்களை எதிர்ப்பதில் உள்ள சிக்கலை உணர்ந்த கட்டபொம்மன், ஜாக்சனை தன் படை பரிவாரங்களுடன் சந்திக்க முடிவு செய்கிறார். நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப்பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறான்.

பேசவந்த கட்டபொம்மன் மற்றும் அவரது மந்திரி தானாதிபதி சிவசுப்ரமணியபிள்ளை இருவரையும் நிற்கவைத்து மூன்று மணிநேரம் விசாரணை செய்கிறான். இறுதியில் கணக்கு பார்த்ததில் வரிபாக்கி அதிகமில்லை என்று தெரியவருகிறது. இருப்பினும் கட்டபொம்மனைக் கைது செய்ய ஜாக்சன் முற்படுகையில் அவர் தன் வீரர்களுடன் ஆங்கிலேய வீரர்களைத் தாக்கிவிட்டுத் தப்பிக்கிறார். பாஞ்சாலங்குறிச்சி திரும்பும் வழியில் பழிவாங்கும் நடவடிக்கையாக கம்பெனியின் ஊர்களைச் சூறையாடுகிறது கட்டபொம்மனின் படை. தானாதிபதிப்பிள்ளை மட்டும் வெள்ளையர்கள் கையில் சிக்குகிறார். அவரைச் சித்ரவதை செய்து திருச்சி சிறையில் அடைக்கிறார்கள்.

தன்னை அவமானப்படுத்திய ஜாக்சனுக்கு வீரத்துடன் பாடம் கற்பித்த கட்டபொம்மனை அடக்குவதற்கு அப்போதும் கம்பெனி தயங்கியது. காரணம், மைசூர்ப் போர் முடியவில்லை. எனவே, கட்டபொம்மனை சென்னை வந்து விளக்கமளிக்குமாறு கோரியது. அவரது நல்லெண்ணத்தைப் பெறும் வகையில் தானாதிபதியை சிறையில் இருந்து விடுவித்ததோடு, அடாவடி ஜாக்சனைப் பதவியிலிருந்தும் நீக்கியது. இதே ஜாக்சன் பின்னாளில் கம்பெனியாலேயே பொறுக்கமுடியாத அளவிற்கு ஊழல் செய்ததனால் வெளியேற்றப்படுகிறான். கட்டபொம்மனும் சென்னை சென்று சுயமரியாதையுடன் விளக்கமளித்துத் திரும்புகிறார்.

_______________________________________________

கம்பெனியின் ஒரு கலெக்டரையே மாற்றவைத்த கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறான். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது.

1799ஆம் ஆண்டின் துவக்கத்தில்தான் ஆங்கிலேயர்களை எதிர்த்த பாளையக்காரர்கள் தென்னிந்திய அளவில் கூட்டணிகளை ஏற்படுத்த முயல்கின்றனர். இதில் திண்டுக்கல் சீமைக்கு கோபால நாயக்கரும், இராமநாதபுரம் சிவகங்கைச் சீமைக்கு மருது சகோதரர்களும், நெல்லைச் சீமைக்கு கட்டபொம்மனும் தலைமையேற்கிறார்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்பு ஏற்படுகின்றது. சிவகங்கையுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளக்கூடாது என்ற லூஷிங்டனது எச்சரிக்கையை மீறி மருது சகோதரர்களின் தூதர்களை பழவனேரி எனும் இடத்தில் சந்தித்து அவர்கள் அனுப்பிய 500 வீரர்களுடன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி திரும்புகிறார்.

நெல்லைச்சீமையில் இருக்கும் கோலார்பட்டி, காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை முதலிய பாளையக்காரர்கள் கட்டபொம்மனுடன் அணிசேருகின்றனர். கட்டபொம்மனுக்கு ஆதரவளிப்பதாக அவரது தூதர்களிடம் கள்ளர் நாட்டைச்சேர்ந்த பாளையக்காரர்களும் உறுதியளிக்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலிருந்த சிவகிரிப் பாளையம் போர்த்தந்திர ரீதியில் முக்கியமான பகுதி. இதன் பாளையக்காரன், கம்பெனியை ஆதரித்த போதிலும் இவனது மகன் கட்டபொம்மனை ஆதரித்தார். எனவே இவரையே பாளையக்காரராக மாற்ற முயற்சிக்கிறார் கட்டபொம்மன். மேலும் கம்பெனியின் இராணுவ நடமாட்டத்தை ஒற்றறிய தானாதிபதிப் பிள்ளையின் சகோதரரையும் சென்னைக்கு அனுப்பி வைக்கிறார். கட்டபொம்மனது இத்தகைய அரசியல் நடவடிக்கைகளால் ஆத்திரமடைகின்றனர் கம்பெனிக்காரர்கள். இனியும் சகிக்கமுடியாது என்ற நிலைக்கு லூஷிங்டன் வருகிறான். பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன.

_______________________________________________

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறான் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார். போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப்போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார். ஆனால், கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப்படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. இவ்வளவு சீக்கிரம் படையெடுப்பு இருக்கும் என்று கட்டபொம்மன் எதிர்பார்க்கவில்லை. பெருமளவு வீரர்களும், ஊமைத்துரையும், தானாதிபதியும் திருச்செந்தூரில் நடக்கும் ஆவணிமாதத் திருவிழாவுக்குச் சென்றிருந்த நேரமது. இராமலிங்க முதலியார் என்பவனைத் தூது அனுப்பி கட்டபொம்மனைச் சரணடையச் சொல்கிறான் பானர்மேன். சரணடைய மறுத்து கோட்டையிலிருந்த 1500 வீரர்களுடன் போரிடுகிறார் கட்டபொம்மன். தூது செல்லும் சாக்கில் கோட்டையின் பலவீனங்களை இராமலிங்க முதலியார் வேவு பார்த்துச் சொல்லியிருந்தும் பானர்மென்னால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.

முற்றுகையைப் பற்றிக் கேள்விப்பட்ட ஊமைத்துரையும், தானாதிபதிப்பிள்ளையும் சில வீரர்களும் வெள்ளையர்களின் அணிவகுப்பை உடைத்துக்கொண்டு கோட்டைக்குள் நுழைகிறார்கள். போர் தீவிரமடைகிறது. சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் முதலான வீரர்கள் வீரமரணம் அடைகிறார்கள். சில வெள்ளைத் தளபதிகளும் கொல்லப்படுகிறார்கள். இன்னும் பல இடங்களிலிருந்து வரும் கம்பெனியின் படைகளுக்காக பானர்மென் காத்திருக்கிறான். இனிமேலும் கோட்டையில் இருப்பது உசிதமல்ல என்று கட்டபொம்மனும் ஏனையோரும் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிக்கின்றனர்.

தப்பிச் சென்றவர்களை கோலார்பட்டியில் எட்டப்பனின் படை எதிர் கொள்கிறது. அந்தச் சண்டையில் நாகலாபுரத்தின் சௌந்தரபாண்டியனும், தானாதிபதிப்பிள்ளையும் பிடிபடுகின்றனர். இருவரையும் பானர்மென் தூக்கிலிடுகிறான். தானாபதியின் தலையைத் துண்டித்து பாஞ்சாலங் குறிச்சியில் நட்டு வைக்கிறான். தனது மன்னனை விவேகத்துடன் வழிநடத்தி, அவனது துன்பங்களில் பங்கெடுத்த தானாதிபதி முதல் தியாகியானார். மருதிருவருடன் இணைந்து போரைத் தொடர்ந்து நடத்தும் நோக்கத்தில் கட்டபொம்மனும் அவரது இளவல்களும் சிவகங்கை நோக்கி விரைகின்றனர்.

இதனை எதிர்பார்த்து சிவகங்கை எல்லையில் காளாப்பூர் காட்டில் பதுங்கியிருந்த துரோகி தொண்டைமானின் படை அனைவரையும் கைது செய்கிறது. வெள்ளையனின் கையால் சாவதைவிட தற்கொலையே மேல் என்று கத்தியை எடுத்த கட்டபொம்மனின் கையை முறுக்கி கட்டி இழுத்துச் செல்கிறது தொண்டைமானின் படை.கயத்தாறில் தன் மீது சுமத்தப்பட்ட ‘குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு “ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். கட்டபொம்மன் அணியிலிருந்த நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணைப் பாளையக்காரர்கள் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே இறந்தனர். குளத்தூர் பாளையக்காரர் வயதானவர் என்பதாலும், கோலார்பட்டிப் பாளையக்காரர் கண் பார்வையற்ற இளைஞர் என்பதாலும் விடுவிக்கப்பட்டனர். கிளர்ச்சியாளர்களது பாளையங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டன. பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை இடித்து உழுதுவிட்டு ஊரின் பெயரையே கூட மாற்றினார்கள் வெள்ளையர்கள்.

தனது அடிவருடிப் பாளையங்களையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களது கோட்டைகளும் இடிக்கப்பட்டன. பாளையக்காரர்கள் அனைவரும் வெறும் ஜமீன்தார்கள் ஆக்கப்பட்டனர். “படை வைத்துக் கொள்ளக்கூடாது, அலங்காரத்துக்காகக் கூட இடுப்பில் வாள் இருக்கக்கூடாது, குடிமக்கள் கூட ஆயுதம் வைத்திருக்கக் கூடாது, மீறினால் மரணதண்டனை” என்று அறிவித்தான் பானர்மேன்.

இரண்டே ஆண்டுகளில் மரணத்தை வென்றது பாஞ்சாலங்குறிச்சி. பாளையங்கோட்டை சிறையைத் தகர்த்துவிட்டு ஊமைத்துரையும், சிவத்தையாவும் கட்டபொம்மனது கோட்டையை மீண்டும் எழுப்பினார்கள். மருது சகோதரர்களுடன் சேர்ந்து மீண்டும் போர் தொடங்கினார்கள்.

கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீரவரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சித்திரைமாதம் அங்கே நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.

இதோ, வெள்ளி முளைக்கும் நேரத்தில் தொடங்குகிறது வெள்ளையத் தேவன் மனைவி வெள்ளையம்மாளின் ஒப்பாரி. அது ஆங்கிலேயர் காலக் கொடுமைகளை எண்ணி அழும் மக்களின் இயலாமை தோற்றுவிக்கும் சோகம். காலனியாதிக்க அடக்கு முறைக்கு எதிராகப் போராடி வீழ்ந்த வீரர்களின் காப்பியச் சோகம். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. அந்தக் கண்ணீரும் நிற்கவில்லை.

http://www.vinavu.com/2010/12/06/kattabomman/

டிஸ்கி:

இது எட்டப்ப கோஸ்டிவாளுக்கு.. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.