Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு அரசியலில் 'விக்கிலீக்ஸ்' கிளப்பிவிட்ட பூதம்

Featured Replies

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவுநர் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள போதிலும், விக்லீக்ஸ் கிளப்பிய சர்ச்சைகள் இலங்கை அரசியலில் இன்றும் புகைந்துகொண்டுதான் இருக்கின்றது. இலங்கை தொடர்பாக இதுவரையில் வெளிவராத ஆவணங்கள் வெளிவரும் பட்சத்தில் கொழும்பு அரசியலில் ஒரு பூகம்பம் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் ஜலியன் அசேஞ் லண்டனில் வைத்து செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை தொடர்பாக மூன்று வகையான தகவல்கள் உள்ளடங்கியிருந்தன.

ஒன்று, விடுதலைப் புலிகளுடனான போரில் இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் இதில் வெளியாகியிருக்கின்றது.

இரண்டாவது, அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புட்டர்னீசுடன்; தமிழ் அரசியல் தலைவர்கள் நடத்தியுள்ள பேச்சுக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

மூன்றாவது, இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானைப் பிரதான தளமாகக் கொண்டியங்கும் லக்ஷல் இ - தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்படுவதாக அமெரிக்க தூதுவர் அனுப்பிவைத்துள்ள தகவல்கள்.

இந்த மூன்றுமே கொழும்புக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. சர்வதேச சமூகத்தின் முன்பாக இலங்கையைத் தனிமைப்படுத்துவதற்கு அல்லது அவமானப்படுத்துவதற்கு அமெரிக்கா முற்பட்டிருக்கின்றது என்பதை இந்த ஆவணங்கள் உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. இன்னும் வெளியிடப்படாத ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ள ஆவணங்களைவிட மேலும் அதிர்ச்சியான தகவல்களைக் கொண்டவையாக இருக்கும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருப்பதன் மூலமாக இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் முன்னர் எப்போதும் இல்லாத வகையிலான ஒரு நெருக்கடி நிலையை விக்கிலீக்ஸ் இணையத்தளம் ஏற்படுத்தியிருக்கின்றது என நிச்சயமாகச் சொல்ல முடியும். மறுபுறத்தில் உள்ளுர் அரசியல் குழப்பங்கள் சிலவும் இதன் மூலம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுமே பிரதான காரண கர்த்தாக்கள் என்ற அமெரிக்காவின் கருத்தை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்த கொழும்பு பெரும் சீற்றமடைந்துள்ள அதேவேளையில், அமெரிக்கா தர்மசங்கடமான நிலைக்குள்ளாகியுள்ளது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வெளிப்படையாக எவ்வாறு அமைந்திருந்தாலும், உள்ளுக்குள் கொந்தளிப்பான ஒரு நிலைதான் காணப்பட்டது. அமெரிக்கா மீது இலங்கைக்கு எப்போதும் சந்தேகம் இருந்துகொண்டுள்ளது என்பது உண்மை. தற்போது விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள இரகசிய ஆவணங்கள் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா செயற்பட்டது என்பதை தெளிவாக உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அதேவேளையில் இராஜதந்திர மட்டத்தில் பரிமாறப்பட்ட பல வெளிவராத உண்மைகளையும் இந்த ஆவணங்கள் அம்பலமாக்கியுள்ளது.

வாஷிங்டனிலுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும் உலகம் முழுவதிலுமுள்ள அமெரிக்காவின் தூதரகங்களுக்கும் இடையில் பரிமாறிக்கொள்ளப்பட்ட சுமார் 2,50,000 இரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் கசியவிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் அனைத்தும் அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையை வகுத்துக்கொள்வதற்காகவும், சர்வதேச ரீதியாக அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு உதவும் வகையிலும் பெறப்பட்டவை என்பதால் இதன் பெறுமானம் அதிகரிக்கின்றது.

சர்வதேச ரீதியாக வல்லரசு நாடுகளுக்கும் நெருக்கடியைக் கொடுத்துவரும் 'விக்கிலீக்ஸ்' இணையத்தளத்தின் வசமுள்ள 251,287 அமெரிக்க இராஜதந்திர இரகசிய ஆவணங்களில் 3000 இற்கும் அதிகமானவை இலங்கையுடன் தெடர்பானவை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது எனபதைக் கண்டறியுமாறு அமெரிக்கா ஐ.நா.விலுள்ள அதன் இராஜதந்திரிகளைக் கேட்டிந்தது எனவும் விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போரை இலங்கைப் படைகள் முடிவுக்குக் கொண்டுவந்த இரண்டு மாதங்களின் பின்னர் - அதாவது 2009 ஜுலையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்ட காலப்பகுதியில் இவ்வாறான இரகசியச் செய்தி முதல் முறையாக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த ஆவணங்கள் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் பற்றீசியாவினால் வாஷிங்டனுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இவை இப்போது வெளியாகியிருப்பது அமெரிக்காவை பெரிதும் சங்கடத்துக்குள்ளாககியுள்ளது.

இந்த நிலையில் இந்த ஆவணங்களில் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியிருக்கும் நிலையில் அவற்றை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் கொழும்பு இறங்கியுள்ளது. சர்வதேச ரீதியாக பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் நிலையில் இவை வெளிவந்திருப்பது மகிந்த அரசுக்கு சர்வதேச ரீதியாக பெரும் அழுத்தங்களைக் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுவரையில் வெளிவராத ஆவணங்களில் மேலும் பல இரகசியத் தகவல்கள் இருக்கலாம் என்பதால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது எனத் தெரியாது கொழும்பு தடுமாறுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்ற தமிழ்மக்கள் மீதான படுகொலைகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவே பொறுப்பு என அமெரிக்க இராஜதந்திரிகள் நம்புவதாக அண்மையில் வெளியிடப்பட்ட விக்கி லீக்ஸ் ஆவணங்களிலிருந்து அறிய முடிவதாக லண்டன் கார்டியன் பத்திரிகை தெரிவித்துள்ளமைதான் கொழும்புக்குப் பேரிடியாக வந்திருக்கின்றது. சர்வதேச ரீதியாகத் தெரிவிக்கப்படும் போர்க் குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதாக இது அமைந்திருப்பதுதான் அதற்கக் காரணம்.

விக்கி லீக்ஸ் ஆவணங்களை மேற்கோள் காட்டி கார்டியன் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இவ்வருடம் ஜனவரி 15 ம் திகதி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் பற்றீஷியா வோஷிங்ரனுக்கு அனுப்பி வைத்த தகவலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இப்படுகொலைகளுக்கு பெருமளவில் பொறுப்பு வகிப்பதே, இப்படுகொலைகள் குறித்த விசாரணைகள் பெருமளவு முன்னேற்றமின்றி இருப்பதற்கு, காரணம் எனக் கூறியுள்ளார்.

பதவியில் தொடர்ந்து நீடித்திருக்கும் ஒரு அரசு அல்லது ஒரு ஆட்சிக்குழு தனது படைகளும் இராணுவ அதிகாரிகளும் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து, தாமே ஒரு முழுமையான விசாரணைகளை மேற்கொண்டதற்கு நான் அறிந்தவரை உதாரணங்கள் ஏதுமில்லை என அமெரிக்க தூதுவர் இக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

இலங்கையில் இவ்விடயம் மேலும் சிக்கலாக இருப்பதற்கு காரணம், நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜக்பக்ச அவரது சகோதரர்கள், எதிரணி வேட்பாளர் (ஜனவரி 2010 ஜனாதிபதித் தேர்தலில்) சரத் பொன்சேகா மற்றம் பல மூத்த அதிகாரிகள் இப் போர்க் குற்றச்சாட்க்களில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருப்பதுதான். இதில் சரத் பொன்சேகா ஊழல் குற்றச்சாட்டில் தற்போது இராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்" என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது நாட்டின் “யுத்த வீரர்களை“ எவ்வித சர்வதேச விசாரணைகளுக்கும் உட்படுத்த விடமாட்டேன் என தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறியிருந்தார். அரசு மட்டுமன்றி இலங்கையில் உள்ள தமிழர்களும் அரசாங்கத்தின் பழிவாங்கலுக்கு உள்ளாகலாம் என்ற பயத்தில் இப்பிரச்சனைகள் தொடர்பாக ஆர்வமின்றியே உள்ளனர். புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் மட்டுமே இப்பிரச்சனைகளையிட்டுப் பேசி வருகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் அமெரிக்க தூதுவர் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்:

நாம் கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் உள்ள தமிழ் தலைவர்களுடன் உரையாடிய அளவில், இப்பிரச்சனையையிட்டு இப்போது பேசுவது தமக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மௌனமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனாலும் எதிர்காலத்தில் இப் போர்க்குற்ற விடயங்களையிட்டு ஏதாவது செய்யமுடியும் என்பதால் இப்பிரச்சனையை அணையாது வைத்திருக்கவே விரும்புகின்றனர் எனத் தெரிவித்தனர். எனினும் இந்த விடயங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியது இலங்கை சமூகத்தின் ஒட்டுமொத்த அரசியல் மற்றும் சமூக நீதிக்கு அவசியமானது. ஆனாலும் இம்மாற்றம் உடனடியாக நடந்துவிடும் என நான் நம்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த இரகசிய ஆவணங்கள் தொடர்பாக கருத்துக்களை வெளியிட இலங்கை அரசாங்கம் மறுத்துள்ள அதேவேளையில் இந்தத் தகவல்களை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்காக விக்கிலீக்ஸ் இணையத்தளத்துடன் தொடர்புகொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளது. அதேவேளை, இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளை இது வெளிப்படுத்தியிருப்பதால் அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ஆளும் கட்சியின் அமைச்சரான விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.

விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தொடர்பில் கொழும்பின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக அமையும் என்பதையிட்டு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்துவருகின்றது. இந்த இரகசிய ஆவணங்களைக் கசிய விட்ட விக்கிலீக்ஸின் செயற்பாட்டைக் கண்டித்து கொழும்பை கொஞ்சம் சாந்தப்படுத்த அமெரிக்க தூதரகம் முயன்றுள்ள போதிலும், கசிந்துள்ள தகவல்களை மறுப்பதற்கு தூதுவர் முன்வரவில்லை. இது கசிந்துள்ள தகவல்கள் உண்மையானவை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்வதாகவே அமைந்திருக்கின்றது.

இதேவேளையில், இலங்கையின் தமிழ் அரசியல்வாதிகள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பது குறித்த அபிப்பிராயங்கள் விக்கிலீக்ஸ் இணையத் தளம் கசியவிட்டுள்ள இரகசிய ஆவணங்களின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் பற்றிசியா புட்டெனிஸ் அமெரிக்க வெளியுறவு அமைச்சு அலுவலகத்துக்கு அனுப்பிவைத்த அறிக்கை ஒன்றிலேயே தமிழ் அரசியல்வாதிகள் குறித்து தன்னுடைய அபிப்பிராயங்களைத் தெரியப்படுத்தியிருக்கின்றார். இதேவேளையில் அமெரிக்க தூதுவராக றொபேர்ட் ஓ பிளேக் இருந்த காலத்தைய தகவல்கள் வெளியிடப்படும் போது இது தொடர்பாக மேலும் பல பரபரப்பான தகவல்கள் வெளிவரலாம்.

அமெரிக்க தூதுவரின் இவ்வறிக்கையில் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் ஆர். சம்பந்தன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் குறித்த அபிப்பிராயங்கள் உள்ளன. போர்க் குற்றங்கள் தொடர்பாக இவர்கள் தெரிவித்த பல்வேறு தகவல்களும் இந்த ஆவணங்கள் மூலமாக வெளிவந்திருக்கும் அதேவேளையில், அந்தத் தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.

தமிழ் அரசியல் தலைவர்களின் இந்த செயற்பாடு கொழும்புக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளையில், இது தொடர்பில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றது. சிறுபான்மையினக் கட்சிகளை ஒடுக்குவதற்கு இந்த ஆதாரங்களையும் அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற சந்தேகத்தை இது அதிகரிப்பதாக அமைந்திருக்கின்றது.

விக்கிலீக்ஸ் பல சிக்கல்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியிருக்கும் அதேவேளையில், பல உண்மைகளைப் போட்டுடைத்து இலங்கை அரசு உட்பட பல அரசுகளைச் சங்கடமான நிலைக்குள் தள்ளிவிட்டுள்ளது என்பதும் உண்மை.

http://pooraayam.com/news-analysis/1663-2010-12-07-20-43-50

பூராயத்துக்காக

கொழும்பிலிருந்து சத்தியன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.