Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகுல்காந்தி அப்பாவியா? அரசியல்வாதியா?

Featured Replies

ராகுல்காந்தி அப்பாவியா? அரசியல்வாதியா?

போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் கடந்த வாரம் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி.

சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா விடுதியில் சுமார் 120பல்வேறு துறைசார் வல்லுனர்களை சந்தித்தபோது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்காதது கவலையளிப்பதாக உள்ளது. இது தொடர்பாகப் பிரதமரிடம் பேசி, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறியிருந்தார்.

போர் முடிவடைந்து சுமார் ஒன்றரை வருடங்களுக்குப் பின்னர், முதல் முறையாக இலங்கைத் தமிழர் நிலை பற்றி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

அதுமட்டுமன்றி மதுரையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்தித்த போது ராகுல் காந்தியிடம் ஒருவர், நான் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்றும்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தூக்கில் போட வேண்டும்என்றும் கடிதம் எழுதினேன். ஆனால் அதற்குத் தாங்கள் எந்தப் பதிலும் தெரிவிக்க வில்லையே என்று கேள்வி எழுப்பினார்.

அவரது இந்த கேள்விக்குப் பதில் சொல்ல மறுத்து விட்டார் ராகுல்காந்தி.அது பற்றி இப்போது பேச வேண்டியதில்லை என்றும் அவர் கூறி விட்டார்.

ராகுல்காந்தியின் இந்தக் கருத்து தமிழ்நாட்டிலும், கொழும்பிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்பட்டது.

தமிழர்களுக்கு நீதி வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளதன் மூலம் அவர்களுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராகுல். இது பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுக்கின்ற விடயமாக உள்ளது.

ராகுல்காந்தி இந்தியாவை ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர். அவரது தாயார் சோனியா காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் தலைவி. இப்படியிருக்கும் போது ராகுல்காந்தி இலங்கைப் பிரச்சனை பற்றி வெளிப்படுத்திய கருத்து முக்கியத்துவமாகவே நோக்கப்படும்.

ஆனால், அதைப் பலரும் எதிர்மறையான கண்ணோட்டத்துடனேயே நோக்குகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர் ஆதரவுத் தளத்தை தன்பக்கம் இழுப்பதற்கு முனைகிறார் என்பதே அந்தக் கருத்து. அரசியல் உள்நோக்கத்துடனேயே இவர் இவ்வாறு கூறியுள்ளார் என்பது அந்தத் தரப்பினரின் வாதம். இலங்கையிலும் பலர் அவ்வாறு தான் கருதுகின்றனர். தமிழ்நாட்டிலும் கூட அதே கருத்துத் தான் உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டில் சட்டசபைத் தேர்தல் நடக்கப் போகிறது.

இந்தநிலையில் இந்தத் தேர்தலில் இலங்கைத் தமிழர் விவகாரத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு வாக்கு வேட்டையாடுவதற்குப் பல்வேறு தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் போரை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிச்சயமாக காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்கொள்ளப் போகிறது. அதை எதிர்கொள்வதற்கு இப்போதே இந்தக் கூட்டணி தயார்படுத்தல்களைச் செய்யத் தொடங்கி விட்டது.

அதிமுக தலைமையிலான அணியில் இருந்தாலும் மதிமுக இந்த விவகாரத்தை நிச்சயம் எழுப்பும். அதைவிடச் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் தேர்தலில் போட்டியிடப் போகிறது.

தமிழர் விவகாரத்தில் அக்கறை கொண்டுள்ள மற்றொரு கடசியான பா.ம.க இப்போது மதில்மேல் பூனையாக இருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் திமுக கூட்டணியில் இருந்தாலும் இலங்கைத் தமிழர் பிரச்சினையை அதுவும் அரசியலாக்கக் கூடிதொன்று தான்.

இப்படியாக தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இலங்கைத் தமிழர் விவகாரத்தை அரசியலாக்குவதற்கு சாத்தியங்கள் உள்ளதால், மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குச் சில சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன.

ராகுல்காந்தி தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் என்ற கருத்து இப்போது வலுப்பெறத் தொடங்கியுள்ள நிலையில், அவர் தமிழ்நாட்டில் வைத்து தெரிவித்துள்ள கருத்துகள் தேர்தலை முன்னிறுத்திய கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

இலங்கைத் தமிழருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று அவர் கூறியுள்ளதானது தற்போதுள்ள மத்திய அரசு கவனத்தில் கொள்ளாதிருக்கின்றது என்ற அர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதே இந்திய மத்திய அரசு தான் இலங்கை அரசுக்குப் போரின்போது துணை நின்றது வரலாறு. இப்போதும் கூட சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் கால் வைப்பதைத் தடுப்பதற்காக இந்திய மத்திய அரசு ஆயுதங்களைக் கொடுக்கவும் தயக்கம் காண்பிக்கவில்லை.

டிசெம்பர் 27 ஆம் திகதி கொழும்புக்கு வந்த இந்திய பாதுகாப்புச் செயலர் பிரதீப்குமார் ஒரு தொகுதி ஏவுகணைகள் ரேடர்கள் போன்ற ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்குவது பற்றி அறிவிக்கவுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியா போரின் போது ரேடர்களையும், கடற்படைக் கப்பலையும் வழங்கியதாகச் செய்திகள் வெளியாகியிருந்தது. ஆனால், இப்போது இக்லா எனப்படும் ரஸ்யத் தயாரிப்பு ஏவுகணைகளை வழங்கிய விவகாரத்தையும் இந்திய ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளது.

இந்த நிலையில் போரின் பின்னரும் இலங்கை அரசுடன் இந்தியா நெருக்கமான உறவையே வைத்துள்ளது. அண்மையில் கூட இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் இந்தியா தலையிடாது. அதையெல்லாம் இலங்கையே பார்த்துக் கொள்ளும் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியிருந்தார்.

சீனா- பாகிஸ்தான் போன்ற நாடுகளின் அரவணைப்பில் இருந்து இலங்கையை தன்பிடிக்குள் கொண்டு வருவதற்காக இந்தியா எப்படியெல்லாம் தன்னை மாற்றிக் கொள்ள முடியுமோ அந்தளவுக்கு மாறிக்கொள்கிறது.

இது அண்மைக்கால அரசியல் நகர்வுகளின் ஊடாகத் தெளிவாக உணரப்பட்ட விடயம்.

இந்த நிலையில் ராகுல் காந்தியின் கருத்து இந்திய மத்திய அரசின் போக்குடன் முரண்படுவதாகவே இருக்கும். ஆனால், ராகுல் காந்திக்கு இது தவிர்க்க முடியாத ஒன்று.

எதிர்காலத்தில் இந்தியாவின் பிரதமராகும் கனவுடன் இருக்கும் அவருக்கு அண்மையில் பீகாரில் சந்தித்த தோல்வி மிக மோசமானது. அதுபோன்ற தோல்வி தமிழ்நாட்டிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.

எனவே தான் இலங்கை விவகாரத்தில் தமிழர்களுக்கு ஆதரவு காட்டுவது போன்று அவரது கருத்து அமைந்துள்ளது.புலிகள் விவகாரத்தில் கூட அவர் கருத்து வெளியிட மறுத்திருப்பது இதைத் தெளிவாகக் காட்டுகிறது. பிரபாகரன் விவகாரத்தை இனிமேலும் அரசியலாக்குவதை அவர் விரும்பவில்லை. அதில் கருத்து வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவதானமாகவே நடந்து கொண்டுள்ளார்.

இவையெல்லாம் திமுக கூட்டணியில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு கொஞ்சம் நிம்மதி. குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பிக்கலாம் என்று அவை நம்பிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ராகுல்காந்தி தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கப் பிரதமருடன் பேசுவாரா என்ற கேள்வி முக்கியமானது. அவர் அதைப் பற்றிப் பேசலாம். சில வேளைகளில் பேசாமலும் விடலாம்.

ராகுல்காந்தி அதுபற்றிப் பேசினால் அது அதிகார மட்டத்தில் நிச்சயமாக எடுபடாமல் போகாது. ஏனென்றால் அவர் தான் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்பது மட்டுமல்ல அவரது அன்னை தான் கட்சியின் தலைவியும். அரசாங்கத்தைப் பின்புறம் இருந்து இயக்கும் கருவியாக அவரே உள்ளார்.

தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க இந்தியா நினைத்தால் அதை இலகுவாக சாதிக்கலாம் என்ற கருத்து பெரும்பாலான தமிழர்களிடம் உள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் ராகுல்காந்தி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், சென்னையில் கூறிய கருத்தை நினைவில் வைத்திருக்கிறாரா என்பதை அவர்கள் நிச்சயம் அவதானிக்கவே செய்வார்கள்.

என்னதான் இருந்தாலும் இது அவரது அரசியல் ஆதாயம் கருதிய கருத்து என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இது எந்தளவுக்கு அவரது கட்சிக்குக் கைகொடுக்கப் போகிறது என்பது தான் சந்தேகமாக உள்ளது.

ஏனென்றால் ராகுல்காந்தி தனது கருத்தைச் செயலில் நிரூபிப்பதற்கான சக்தி பெற்றவராக உள்ளார். அதைப் பிரயோகிக்கும் ஆற்றல் அல்லது சக்தி அவரிடம் உள்ளது. ஆனால் அதைப் பிரயோகிக்கத் தவறினால் அவரும் வெறும்வாய்ச்சொல் வீரர் தான் என்பது தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் நிரூபணமாகி விடும்.

அதேவேளை ராகுல்காந்தியின் இந்தக் கருத்து இலங்கை அரசாங்கத்தை சினங்கொள்ள வைத்துள்ளது. இதனால் தான் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இலங்கை விவகாரம் பற்றி அவருக்கு சரியான புரிந்துணர்வு இல்லை என்று சாடியுள்ளார்.

அதாவது இலங்கை விவகாரம் பற்றி ராகுல் ஒன்றுமே தெரியாத அப்பாவி என்பது தான் அதன் உள்ளார்ந்த அர்த்தம்.

ஒரு பக்கத்தில் இலங்கை விவகாரம பற்றி எதுவுமே தெரியாத அப்பாவி என்ற குற்றச்சாட்டு இன்னொரு பக்கத்தில் அரசியல் நலனுக்காக வாயைத் திறந்துள்ளார் என்றொரு குற்றச்சாட்டு.

இந்தநிலையில் ராகுல்காந்தி அப்பாவியா அல்லது அரசியல்வாதியா என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.

- கே. சஞ்சயன்

http://www.tamil.dailymirror.lk/index.php/2010-08-31-14-50-37/13796-2010-12-27-20-16-01.html

  • கருத்துக்கள உறவுகள்

ராகுல்காந்தி, அரசியல்வாதியுமல்ல அப்பாவியுமல்ல போர்க்குற்றவாளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.