Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!''

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!''

அனல் கக்கும் அமீர் அணி

இரா.சரவணன்

மீனவர் பிரச்னையில் சிங்கள அரசுக்கு எதிராகப் பேசியதற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் அடைக்கப்பட்ட நேரம், 'சீமானின் பேச்சுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட பிரச்னை!’ எனக் கை கழுவினார் இயக்குநர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. அதற்கு பதிலடியாகப் பேசிய இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளர் அமீர், 'பாரதிராஜாவா... பசில்ராஜாவா?’ எனப் பேட்டி கொடுத்துப் பிரளயம் கிளப்பினார். பாரதிராஜாவுக்கும் அமீருக்கும் அன்றைக்கு வெடித்த மோதல், இயக்குநர் சங்கத் தேர்தல் வரை இன்றும் நீள்கிறது!

வருகிற 19-ம் தேதி இயக்குநர்கள் சங்கத் தேர்தல். 'இதுவரை இயக்குநர்கள் சங்கத்தை அரசியல் சமாசாரங்கள் ஆட்டுவித்தன. எந்த அரசியல் கட்சியின் சார்பும் இல்லாமல் சங்கத்தை நடத்த, புதிய தலைமுறை இயக்குநர்களைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும்!’ என இயக்குநர்கள் அமீர், சேரன், கௌதம் மேனன், கரு.பழனியப்பன், சமுத்திரக்கனி உள்ளிட்ட இளைய தலைமுறை இயக்குநர்கள் முடிவு எடுத்தனர். அதன்படி, தலைவராக அமீர், செயலாளராக சேரன், பொருளாளராக ஜனநாதன், இதரப் பொறுப்புகளுக்கு சமுத்திரக்கனி, வசந்தபாலன், பிரபு சாலமன், 'மதராசபட்டினம்’ விஜய், சிம்புதேவன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, கதிர், பாலசேகரன், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் களம் இறங்கினார்கள். மாற்று முகாமில் கே.எஸ்.ரவிகுமாரைத் தலைவர் பதவிக்கு நிறுத்த கடுமையான முயற்சி நடந்தது. அவர் மறுத்துவிட, செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆர்.கே.செல்வமணி மீண்டும் பாரதிராஜாவையே போட்டியிடச் சொல்லி வற்புறுத்தினார். 'எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம்’ என மறுத்து வந்த பாரதிராஜா, பி.வாசு உள்ளிட்டவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகு கோதாவில் குதித்தார்.

அமீர் தலைமையிலான இளைய தலைமுறையா, பாரதிராஜா தலைமையிலான சீனியர் தலைமுறையா என எந்தத் தேர்தலிலும் ஏற்படாத போட்டி இப்போது!

'தேர்தல் சம்பந்தமாக மீடியாக்களிடம் யாரும் பேசக் கூடாது’ என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஏரியாவில் விசாரணையில் இறங்கினோம்.

''கடந்த தேர்தலில் பாரதிராஜா, செல்வமணி அணி அமோக வெற்றி பெற்றது. அதையும் மீறி எதிர் அணியைச் சேர்ந்த சேது என்கிற உதவி இயக்குநர், செயற்குழு உறுப்பினராக ஜெயித்தார். ஆனால், ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்துவதாகச் சொல்லி, செல்வமணி அணியைச் சேர்ந்த ரவி, கந்தசாமியை வெற்றி பெற்றதாக அறிவித்தார்கள். ஆரம்பத்திலேயே ஏற்பட்ட ஜனநாயக அத்துமீறல் இது. எந்த அணியையும் சாராமல், தனியாகப் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்டு ஜெயித்தார் ஆர்.சுந்தர்ராஜன். ஆனால், திட்டமிட்டுக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், அவர் பாதியிலேயே பதவி விலகினார். துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்ரமனும் அதிருப்தி காரணமாகப் பதவியை ராஜினாமா செய்தார்.

இயக்குநர் சங்கத் தலைவராக பாரதிராஜா இருந்தாலும், முழுப் பொறுப்புகளையும் கையில் எடுத்துச் செயல்பட்டவர் செல்வமணிதான். சங்கத்தின் கூட்டங்களுக்குக்கூட பெரும்பாலும் பாரதிராஜா வர மாட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ ஆதரவுக் கட்சிகளை ஆதரித்தது தொடங்கி... கடந்த சட்டமன்றத் தேர்தலில் கப்சிப்பானது வரை இயக்குநர்கள் சங்கத்தில் ஏற்பட்ட முரண்பட்ட நிலை எல்லோரையும் கொதிக்கவைத்தது.

சீமான் கைதான நேரத்தில் பல இயக்குநர்கள் வலியுறுத்தியும் வேலூருக்குப் போய் அவரைப் பார்க்கவோ, முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து அவரை விடுவிக்க வலியுறுத்தவோ, இயக்குநர்கள் சங்கம் முன்வரவில்லை. சீமானைச் சந்தித்தால், ஆளும் கட்சிக்கு எதிரான நிலைப்பாடாகிவிடும் என்கிற அச்சமே அதற்குக் காரணம்.

சமீபத்தில் இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக நடந்த டீ பார்ட்டிக்கான வரவு - செலவுக் குளறுபடிகளும் சங்கத்தின் மீது சர்ச்சையை உண்டாக்கின. செயலாளர் செல்வமணியோ, பொருளாளர் எழிலோ, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு உரிய பதில் சொல்லவில்லை.

தி.மு.க-வின் வாரிசுகள் கையில் சிக்கி தமிழ் சினிமா உலகமே தத்தளித்தபோது, உரிய எதிர்ப்பை இயக்குநர்கள் சங்கம் பதிவு செய்யவில்லை. அப்போதைய முதல்வரைச் சந்தித்தும் கோரிக்கை வைக்கவில்லை. அரசியல் சூழலுக்குத் தகுந்தாற்போல் அட்ஜஸ்ட் செய்யும் தயாரிப்பாளர் சங்கத்தைப்போலத்தான் இயக்குநர்கள் சங்கமும் இருந்தது. இனியும் அந்த நிலை தொடரக் கூடாது என்பதைத்தான் இளைய தலைமுறை இயக்குநர்கள் வலியுறுத்துகிறார்கள். இளைய தலைமுறையின் இந்தக் கொதிப்பை அடக்க, அமீர் தரப்பினரை செல்வமணி தரப்பினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பொறுப்புகளைப் பங்கிட்டுக்கொள்வதன் மூலமாகத் தேர்தலையே தவிர்க்கலாம் என செல்வமணி தரப்பு சொல்ல, அமீர் தரப்பினர் அந்த அழைப்பையே புறக்கணித்தனர். இதனால் அமீர் அணியைச் சிதைக்கும் வேலைகள் ஆரம்பமாகவே, ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் ஆகியோர் சமீபத்தில் பின்வாங்கிவிட்டனர். மொத்தத்தில் பணமும் பாலிடிக்ஸும்தான் இயக்குநர்கள் சங்கத்தைப் பாடாய்ப்படுத்துகிறது!'' என்கிறார்கள் ஆதங்கமாக.

இன்னும் சிலரோ, ''அமீர் சினிமா உலகுக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன? சினிமா உலகில் நடக்கும் பிரச்னைகளைத் தீர்க்கிற அளவுக்கு அவருக்கு அனுபவம் இருக்கிறதா? சீமானுக்காக பாரதிராஜாவைக் கேள்வி கேட்ட அமீர், அடுத்தடுத்து சீமானுக் குச் சிக்கல் வந்தபோது எங்கே போனார்? யாரிடமும் இறங்கிப் பேசாத சேரன், உதவி இயக்குநர்களின் சிரமங்களை எப்படி உணர்வார்? புதிய தலைமுறையின் வரவு சரியானது தான் என்றாலும், எல்லாவித வல்லமையும் அந்த அணிக்கு இருந்தால் வரவேற்கலாம்!'' என்கிறார் கள். அமீர் அணியில் பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் ஜனநாதன் மீது எல்லோருக்கும் நல்ல அபிப்பிராயம்.

''எதையும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிடுவார்'' என்கிற குற்றச்சாட்டு அமீர் மீதும், ''எதையுமே உணர்ந்து பேச மாட்டார்!'' என்கிற குற்றச்சாட்டு பாரதிராஜா மீதும் இருக்கிறது.

இதற்கிடையில், பல இயக்குநர்களின் அபிமானத்தைப் பெற்றிருக்கும் 'நாம் தமிழர்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீமானை இந்தத் தேர்தலில் தலைவர் பொறுப்புக்கு நிறுத்த பலரும் மெனக்கெட்டார்கள். 'பாரதிராஜா தலைவராகத் தேர்ந்தெடுக்கப் படக் கூடாது என்பதுதான் என் கோரிக்கை. அவரைவைத்து ஆதாயப்பட நினைப்பவர்களின் நோக்கம் நிறைவேறக் கூடாது. சீமான் போட்டியிட்டால் நான் தாராளமாக விலகிக்கொள்கிறேன்!’ என அமீர் சொன்னதாகவும் பேச்சு உலவுகிறது!

அதே நேரம், எதிர் அணியில் இருக்கும் ஆர்.கே.செல்வமணி, சீமானுக்கு நெருக்கமானவர். அதனால், சீமானின் ஆதரவு யாருக்கு என்பதிலும் குடுமிப்பிடி தொடங்கி இருக்கிறது.

இரு தரப்பு பிரசாரங்களும் சூடு பிடித்திருக்கும் நிலையில், ''நேற்று வந்த பொடிப் பையன் அமீர் எனக்குப் போட்டியா?'' எனச் சீறுகிறார் பாரதிராஜா. ''பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவோம்!'' எனக் கங்கணம் கட்டிக் களத்தில் சுழல்கிறது அமீர் அணி.

அமீரா... பாரதிராஜாவா? சேரனா... செல்வமணியா? என்ற போட்டியில் அதிர்கிறது கோடம்பாக்கம்!

vikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.