Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் மூலம்தான் நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்

Featured Replies

போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும்: கா.வே.பாலகுமாரன்

[ஞாயிற்றுக்கிழமை, 8 சனவரி 2006, 00:51 ஈழம்] [புதினம் நிருபர்]

போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது என்று விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் கா.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார்.

வீரகேசரியின் வார வெளியீட்டுக்கு கா.வே.பாலகுமாரன் அளித்துள்ள நேர்காணல்:

கேள்வி: அரச படைகள் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை ஆயுத வன்முறையால் அடக்குகின்றனர். மக்களைத் தாக்குகின்றனர். இவ்வாறான சூழலில் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பொறுமை காத்துக் கொண்டிருக்கின்றது. மக்கள் எல்லோரின் மனங்களிலும் போர் எப்போது தொடங்குமோ என்ற அச்சத்தில் உள்ளனரே?.

பதில்: போர் மூலம் தான் சிங்களவரிடமிருந்து நீதியைப் பெற்றுக் கொள்ளமுடியும் என்று இப்போது முடிந்த முடிவாகிவிட்டது. அந்த வகையில் மக்கள் மனதில் உள்ள ஆதங்கத்தை நீங்கள் கேள்வியாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். பொதுவா சக மனிதர் எவரும் போரை விரும்புவதில்லை. அடக்கு முறையாளரைத் தவிர போருக்காக யாரும் போர் செய்வதில்லை.

ஆனால் எமக்குள்ள இறுதி வழியாக போரே வெளிப்படும் போது நாம் அதனை பின்பற்றியாக வேண்டும். இதற்கு இறுதியாக பொறுமையினையும் நிதானத்தையும் கடைப்பிடித்து எமது போராட்டத்தின் தார்மீக நியாயத்தை வெளிப்படுத்தி சிங்களத்தின் எவராலும் மாற்றமுடியாத கடும் போக்கினை அம்பலப்படுத்திய அதேவேளை இறுதிப் போருக்கான முழு ஆயத்தங்களையும் செய்து தேசியத் தலைவர் தமது வரலாற்றுப் பட்டறிவின் வழி உரியவர்களுக்கு உரிய காலத்தை வழங்கி தனது முடிவினை எடுக்கும் வேளை போர் தொடங்கும் என்று சொல்ல முடியும். ஆனால் இன்றைய நிலையில் மகிந்தர் முழு அளவிலான போர் ஒன்றை தமிழ் மக்கள் மீது விரைவில் தொடுப்பதற்கான சகல ஆயத்தங்களையும் செய்கின்றார் என்பதனை நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் என்பதனையும் சொல்ல முடியும்.

எமக்கு மகிழ்ச்சி என்னவென்றால் போரைத் தவிர்க்கவேண்டும் என்று விரும்புபவர்கள் தமது உள்மனதில் போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் என்பதுதான்.

கேள்வி: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறுகிய காலத்தில் ஒரு தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கும் படி மகிந்த ராஜபக்சவுக்கு ஒரு கால அவகாம் வழங்கியிருந்தார். அதை மகிந்தர் பயன்படுத்திய விதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: மகிந்தர் வித்தியாசமான புதிய பாதையில் செல்வேன் என தன்னை ஆரம்பத்தில் இனம் காட்டினார். ஆனால் ஓரிரு வாரத்திலேயே அவருடைய சுயரூபம் வெளித்தெரிய வந்தது. தலைவரின் கருத்தை அவர் கணக்கிலேயே எடுக்கவில்லை. அவர் ஒரு வெறுமையான பேச்சுவார்த்தை பற்றியே கதைக்கின்றார். போலியான சமாதானப் பேச்சு வார்த்தைகளில் பங்கு பற்றுவதில் புலிகளுக்கு உடன்பாடு இல்லை. வழமையான மரபுரீதியான தொடர்ச்சியான சிங்களத்தலைவராகத் தான் மகிந்தர்காணப்படுகின்றார்.

புதிய தலைவருக்கு ஒரு வாய்ப்பு அளிக்கவில்லை என நாளை உலகம் எம்மீது ஒரு குற்றச்சாட்டுசுமத்தக் கூடாது என்பதற்காக மகிந்தர் எம்மை அணுக முதலே நாம் 2001 முதல் போர்நிறுத்தம் செய்ததுபோல் மகிந்தருக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைப்பு விடுத்தோம்.

தலைவர் சொன்னது தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் படி. ஆனால் மகிந்தர் சொல்லுவது போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்வதுபற்றி. இது காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசு கையாளும் ஒரு உத்தியே. போர்நிறுத்தத்தை வலுப்படுத்துவது பற்றி பேச நாம் ஆயத்தமாகவுள்ளோம்.

கேள்வி: மகிந்தவின் அரசியல் நகர்வுகள் பற்றி உங்கள் பார்வை என்ன?

பதில்: மகிந்தர் வித்தியாமான பிரதேசத் தளத்திலிருந்து அரச தலைவராக வந்திருக்கின்றார். ஏழை மக்களின் பிரதிநிதி எனக் காட்டிக்கொள்ளுகிறார். அவர் தனது இருப்புக்காக போராடி இன்று அரச தலைவராகியுள்ளார். அவர் தலைவன் என்ற வகையில் சிந்திக்கின்றார்.

மகிந்தர் வித்தியாமான அணுகுமுறையினை கையாளுவார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஆரம்பத்தில் அப்படி காட்டிக் கொண்டார். ஆனால் அதை அவரால் தொடர்ந்தும் தக்கவைக்க முடியவில்லை. அவரிடம் புதிய உத்தி அல்லது நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வு பற்றிய சிந்தனை எதுவும் இல்லை. அவர் பழைய பண்டாரநாயக்கவாகவும் ஜெயவர்தனவாகவும் பிரேமதாவாகவும் சந்திரிகா போலவும் தான் சிந்திக்கின்றார்.

அவரின் நகர்வுகள் கைதேர்ந்த தந்திரமான குள்ள நரி போன்று உள்ளது. அவர் இரட்டை விளையாட்டை விளையாடுகின்றார்.

முன்னைய அரசாங்கங்களின் அடக்குமுறை கொள்கையினையே மகிந்தர் கையாளுகின்றார். அவரிடம் புதிய திட்டங்கள் எதுவும் இல்லை. மகாவம்ச கனவுலகில் இருந்து மீளவும் இல்லை. மகிந்தர் எமது பலம் பற்றி சரியாக புரிந்து கொள்ளவில்லை. எமக்கு அரசியல் கற்பிக்க முயல்கின்றார். புலிகளை ஏமாற்ற முடியும் என நினைக்கின்றார். மகிந்தரின் கொள்கை சந்திரிகாவின் அல்லது தனது கட்சியின் கொள்கை இல்லை. அது ஜே.ஆரின் கொள்கை. அரசாங்கத்தை இயக்குவதற்கு மகிந்தர் திண்டாடுகின்றார்.

தமிழருக்கு உருப்படியாக மகிந்தர் எதையும் செய்யப்போவதும் இல்லை. அதை நாம் நம்பவும் தயாராகவும் இல்லை. பேச்சுவார்த்தை என்று மகிந்தர் ஒரு நாடகம் ஆடுகின்றார். அவர் தனது பதவியினை தக்க வைப்பதற்காகவே எல்லாத்தரப்பினையும் ஆதரிக்கின்றார். புலிகளையும் அணைக்க முயல்கின்றார். ஜே.வி.பி.யையும் திருப்திப்படுத்த முயல்கின்றார். நோர்வே, இந்தியா, ஜப்பான், சீனா,பாகிஸ்தான் எல்லோரையும் அனுசரித்து தந்திரமாக காய்நகர்த்த முனைகின்றார். எல்லோரையும் பயன்படுத்த முனைகின்றார். எல்லோரையும் இராஜதந்திர ரீதியிலும் ஏமாற்ற முனைகின்றார். ஆனால் புலிகள், மகிந்தரின் பொறியில் விழமாட்டார்கள் என்பதனை அவருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் அனைத்தையுமே ஒரு அணிக்குள் கொண்டுவர தன்னால் முடியும் என சிங்கள மக்களுக்கு அவர் காட்ட முனைவது அவரது அனுபவமின்மையினை வெளிக்காட்டுகின்றது. இத்தகைய அணுகுமுறைகள் யாவும் ஏற்கனவே அவரது முன்னோரால் பின்பற்றப்பட்டவேயாகும். புறச்சூழலில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை கணக்கில் எடுக்காமல் சிறுபிள்ளைத்தனமாக அவர் செயற்படுவதனை பார்க்கும் போது பெரும் பரிதாபமாக உள்ளது. மிக வேகமாக அம்பலப்பட்ட அவரின் எதிர்காலம் மிகவும் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. அவர் வரும் காலத்தில் அடையப்போகும் அவமானங்கள் இலங்கை வரலாற்றில் எந்த அரச தலைவரும் பெற்றதாக இருக்காது. பிணத்தில் மொய்க்கும் "ஈபோல அவர் அதறிப் பதறி பதவி ஆசை கொண்டு அலைவதைப் பார்க்கும்போது ஒரு சக மனிதர் என்ற வகையில் மிகுந்த வெட்கம் அடைகின்றோம்.

கேள்வி: ஜே.வி.-பி.க்கும் மகிந்த ராஜபக்சவுக்குமான உறவு பற்றி உங்கள் கணிப்பு என்ன?

பதில்: மகிந்தவின் முக்கிய நண்பர் இப்போது ஜாதிக ஹெல உறுமய. மகிந்தவின் நண்பன் ஜே.வி.பி. அல்ல. மகிந்தவின் மோசமான எதிரியே ஜே.வி.-பி.

கேள்வி: அதை எப்படி நீங்கள் கூறுவீர்கள்?

பதில்: இரண்டு தரப்பினரதும் வாக்கு வங்கி ஒன்று. இருவரினதும் அரசியல் தளமும் ஒன்று (தெற்கு). ஒரு உறையில் இரண்டு வாள் இருக்க முடியாது. ஒன்று தான் இருக்க முடியும். ஜே.வி.பி.க்கும் மகிந்தருக்கும் இடையில் இன்று பனிப்போர் தொடங்கிவிட்டது. அங்கு ஒரு நிழல் யுத்தம் நடைபெறுகிறது.

ஜே.வி.பி. தன் அரசியலை இலக்காகக் கொண்டு நகர்கின்றது. அதற்காக மகிந்தரைப் பயன்படுத்துகின்றது.

ஜே.வி.பி. தன் வீச்சுக்கு முடியாததை மகிந்தரைக் கொண்டு செய்கின்றது. குறிப்பாக சர்வதே விவகாரத்தை மகிந்தவைக் கொண்டு கையாளுகின்றது. உள்நாட்டில் ஆதரவு பெறக்கூடிய அல்லது வாக்கு வங்கியை பலப்படுத்தக்கூடிய அம்சங்களைத் தான் கையாளுகின்றது. புலிகள் விடயத்தை மகிந்தவைக் கொண்டு கையாளுகின்றது. மகிந்தர் ஆபத்தான அபாயமான சூழலில் சிக்குண்டுள்ளார்.

ஜே.வி.பி.. முதுகில் எப்போது குத்தும் என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றார். தலைக்கு மேல் வாள் தயாராக உள்ளது. மகிந்தர் தன்னிச்சையாக சுயமாக இயங்க முடியாத பொம்மையாகவும் உள்ளார். மகிந்தர் பாவம் பலிக்கடாவாக உள்ளார். அரசியலில் ஏற்படும் இலாபம் எல்லாம் ஜே.வி.பி. தனதாக்கிக் கொள்கின்றது.

அரசியல் அவமானம் நட்டம் எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர் மகிந்தர். மகிந்தரும் ஜே.வி.-பி.யும் யதார்த்தத்திற்கு புறம்பாகவே காய் நகர்த்துகின்றனர்.

உண்மையில் தங்களின் உண்மையான எதிரி பற்றி சிங்கள மக்களும் ஜே.வி.பியினரும் மகிந்தரும் உணராமல் இருப்பது அல்லது உணர்ந்து ஒத்துக்கொள்ள மறுப்பது இருபத்தொராம் நூற்றாண்டில் முன்னேற வேண்டிய சிங்கள தேசத்தின் சாபக்கேடாக மாறிவிட்டது. மகிந்தரின் உண்மையான நண்பர் ஜாதிக ஹெல உறுமய. அவரின் பாதுகாப்பு ஆலோகர் கொட்டகதெனிய. உண்மையில் ஜே.வி.பியின் பிரதானமான எதிரிகள் சிங்கள ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த இரு பிரதானமான முதலாளித்துவக் கட்சிகளும் தான்.

ஜே.வி.பியின் பிரதான எதிரி மகிந்தர். அவ்வாறே மகிந்தருக்கும் பிரதான எதிரி ஜே.வி.பி ஆகும் .

இன்று ஏதோ பொது எதிரியான தமிழ் மக்களுக்கு எதிராக தாம் ஒன்றாக இருப்பது போல தோற்றம் காட்டுகின்றனர். உண்மையில் ஆழமாக நோக்கில் தாம் பதவிக்கு வருவதாக ஒரு நிழல் திரையாக பகடைக்காயாக இருப்பவர்கள் எம்மை பயன்படுத்துகின்றனர். விரைவில் புலிகள் நிகழ்த்தப் போகும் புரட்சியின் விளைவாக சிங்கள மக்களுக்கும் சிங்களத்தின் ஒடுக்கு முறை ஆட்சியாளர்களுக்கும் இடையே இருக்கும் நிழல் திரை அகன்று விடும்.

அப்போது அவரவர் தமது உண்மையான எதிரிகளை அவரவர் நேரடியாக சந்திப்பர். அப்போது நாம் முதலில் சொன்னதே நடந்தேறும். இப்போது மகிந்தரின் உண்மையான எதிரி ஜே.வி.பி தான்.

புலிகளுக்கு பயந்து அவர் செயற்படுகின்றமைக்கு அப்பால் ஜே.வி.பிக்கு பயந்து அவர் செயல்படுவதை கவனிக்கமுடியும். மகிந்தர் எத்தனை காலம் தான் ஜே.வி.பிக்கு அஞ்சி செயல்பட முடியும் என்று பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

கேள்வி: இலங்கை இனவிவகாரத்தில் இந்தியாவின் அணுகுமுறை எவ்வாறு உள்ளது?

பதில்: இந்தியாவின் கடந்தகால இலங்கை இனப்பிரச்சினை அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இந்தியா இன்று நாகரிகமாகவும், நிதானமாகவும் செயற்படுகின்றது போல உள்ளது. இலங்கை இனவிவகாரத்தில் தலைநீட்ட விரும்பவில்லை. மகிந்தர் அரசாங்கம் ஜே.வி.பி.யின் அழுத்தத்தால் நோர்வேயை ஓரம் கட்டி இந்தியாவை இழுக்க முனைந்தது. ஆனால் இந்தியா அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை உள் இழுக்கும் முயற்சியில் மகிந்தருக்கு தோல்வி. அதனாலேயே மீண்டும் நோர்வேயினை சமாதான முயற்சியில் ஈடுபடும்படி மகிந்தர்கோரியிருக்கின்றார்.

மகிந்தர் அரசாங்கத்தையே அழைத்துக்கொண்டு டில்லிக்குப் போயிருக்கின்றார். இந்தியாவின் அழுத்தத்திலிருந்து தப்பவே ஜே.வி.பி. செல்லவில்லை. மகிந்தவின் சதியில் இந்தியா மாட்டிக்கொள்ளாது. மீண்டும் ஒருமுறை இந்தியா இலங்கையிடம் ஏமாற தயாரில்லை. அது கடந்த காலத்தை மறக்கவில்லை. 1987- 90 அனுபவத்தை அது மறக்காது. இந்தியா முட்டாள் இல்லை என்பதை மகிந்தர் புரிய வேண்டும்.

கேள்வி: பேச்சு வார்த்தை தொடங்குமா?

பதில்: மகிந்தர் பரிதாப நிலையில் உள்ளார். அவரின் சுயரூபம் தெரிந்து விட்டது. அவர்கள் தமிழருக்கு எதுவும் வழங்க தயாரில்லை. அரச படை பலவீனமாகவுள்ளது. அரச புலனாய்வுப்பிரிவு சீர்கெட்டுள்ளது. தெளிவான வெளிநாட்டுக்கொள்கை அரசிடம் இல்லை. உள்நாட்டுப் பொருளாதாரம் சீரழியத் தொடங்கிவிட்டது. பேச்சுவார்த்தைக்கு உருப்படியான திட்டம் எதுவும் அராங்கத்திடம் இல்லை.

கேள்வி: மேற்குலகின் நகர்வு பற்றி புலிகளின் நிலைப்பாடு என்ன?

பதில்: வரலாற்று ரீதியில் சர்வதே மூகம் எப்போதுமே அடக்குமுறை அரசுகளின் படையின் வலுவைப் பேணுவதற்கே உறுதுணையாக உள்ளது. அடக்கப்படும் மக்களின் போராட்ட பலம் பலவீனப்படுத்துவது பற்றியே அவர்கள் முயற்சி எடுக்கின்றார்கள். இதுபற்றி நாம் கவலைப்படவில்லை. இதுதான் உலக நியதி. மேற்குலகின் அனைத்துச் செயற்பாடும் அரசைக் காப்பாற்றுவதாக உள்ளது. அரசின் நிதி வளத்தை பேணுவதிலும் அதன் பொருளாதாரத்தை காப்பாற்றுவதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளது.

அடிமைப்படுத்தப்படும் மக்கள் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. சிங்கள இராணுவப் பலம் அதிகரிப்பது பற்றி கேள்வி கேட்கவில்லை. ஆனால் புலிகளின் படைபலம் வலுப்பெறுவதுபற்றிதான் கேள்வி கேட்கின்றனர். இது அநீதியானது.

ஆயினும் தற்போதைய நிலையில் மேற்குலகம் கள நிலைவரங்கள் பற்றிய உண்மைத் தன்மையினை உணர்ந்திருக்கும் என நம்புகின்றேன். தமிழ் மக்களின் போராட்ட சக்தியின் வலு அதிகரிக்கப்படுவதன் ஊடாகவே இலங்கையில் அமைதி பிறக்க முடியும் என்கின்ற யதார்த்தமான ஆனால் அவர்களுக்கு கசப்பான உண்மை. இப்போது உணர்த்தப்பட்டுள்ளது என நான் நம்புகின்றேன்.

கேள்வி: நோர்வேயின் நிலைப்பாடு பற்றிய யதார்த்த பூர்வமான உண்மை என்ன ?

பதில்: நோர்வே எம்மை பொறுத்த வரையில் நேர்மையாகவும் உண்மையான நடுநிலையுடன் இது வரை செயல்படுகிறது. ஆகவே தான் சிங்கள தேசம் நோர்வே மீது கொதிப்படைந்துள்ளது. சிங்கள தேசத்தைப் பொறுத்தளவில் நடு நிலையாக அல்லது அனுசரணையாளராக வருகின்ற நாடு எதுவாக இருந்தாலும் தமக்கு ஆதரவாக இருந்தாலேயொழிய நீதியை பேசுபவர்கள் அனைவரையும் புலிகளின் ஆதரவாளராக கண்டிக்கப்படுவர்.

இந்தியாவையும், கதிர்காமர் போன்றவர்களையும் இலங்கை தலையில் தூக்கி வைத்து ஆடியமைக்கு இதுவே காரணமாகும்.

நோர்வேக்கு இது மிகவும் கசப்பான அனுபவமாகவே இருந்திருக்கும் என நாம் கருதுகின்றோம். ஏன் என்றால் அனுசரணையாளராக வரும்படி அழைப்பு விடுத்து அதே வேளை அனுசரணைப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்காது தடங்கல்கள் செய்து தாங்கள் இழுத்த இழுப்படிப்பு எல்லாம் நோர்வே வராதபோதும் தூக்கி எறிந்து நோர்வேயினை மிகுந்த அவமானத்துக்கு சிறிலங்கா உள்ளாக்கியுள்ளது.

ஒரு நல்ல இணக்கமான நடு நிலை மனிதனாக கருதப்படும் எரிக் சொஹெய்மை சந்திரிகாவும் அவமானப்படுத்தினார். தற்பொழுது மகிந்தரும் அவமானப்படுத்துகிறார். ஜே.வி.பி யை திருப்திப்படுத்தவும் சிங்கள மக்களை ஏமாற்றவும் மகிந்தர்தன் இயலாமையினை மறைக்கவும் நோர்வே ஒரு பகடையாகவே அல்லது எரிக் சொல்ஹெய்மையும் ஒரு பகடைக்காயாக பயன்படுத்தப்பார்க்கின்றது.

நோர்வே இவ் உண்மையை உணர்ந்திருக்க கூடும். இருந்த போதும் இத் தீவில் அமைதி வரவேண்டும் என்பதற்காக எத்தகைய அவமானத்தையும் சகித்துக் கொள்ளும் நோர்வேயை தமிழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் நினைவில் வைத்துக் கொள்வார்கள் என்றார் கா.வே. பாலகுமாரன்.

Puthinam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.