Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய ஆண்டின் நிர்ப்பந்தம்?

Featured Replies

IMG_1391.JPG2012 ம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் காலடி எடுத்துவைக்க உலகம் தயாராகிக் கொண்டிருக்கின்ற வேளையில், ஈழத்தில் வாழும் தமிழர்களின் புத்தாண்டு பலகேள்விகளுடன் ஆரம்பிக்கப் போகின்றது. குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட மறுக்கப்பட்டதால் தோல்வியடைந்த பேச்சுவார்த்தை, சிங்களப் பேரினவாதத்திடமிருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என்பதை மீண்டும் தெளிவாகப் பறைசாற்றியுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, அதிலுள்ள பரிந்துரைகளைக்கூட நிறைவேற்றமாட்டோம் என்ற சிறிலங்கா ஆட்சியாளர்களின் பிடிவாதம், எதிர்பார்ப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஜ.நா மனித உரிமை சபையின் கூட்டம் போன்ற விடயங்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, பலவீனமான நிலையில் தொடரும் தாயக மக்களின் வாழ்க்கைக்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதை முன்னிலைப்பபடுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தையும் சுமந்து, இந்த ஆண்டு பிறக்கின்றது.

பல தசாப்தங்களாகத் தொடர்ந்த போர் அனர்த்தம் காரணமாக அனைத்தையும் இழந்த மக்கள் பொருளாதார ரீதியாகத் தலையெடுக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கும்; வேளையில் தொடரும் இயற்கை அனர்த்தம் 'பனையிலிருந்து விழுந்தவனை மாடு ஏறி மிதித்ததைப்போல' பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மறுபக்கமாக சிறிலங்கா அரச இயந்திரமும் தமிழ்மக்களை பொருளாதார ஏதிலிகளாக்கும் தனது செயற்திட்டத்தினை முனைப்புடன் செய்கின்றது.

முப்பது வருட காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்து, மக்கள் அனைவரும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றார்கள் என சிறிலங்கா அரசு பறைசாற்றிக்கொண்டு, மறுவளமாக, தமிழர் தாயகத்தில் நடாத்திவரும் அடக்குமுறை இராணுவ ஆட்சியை வலுப்படுத்தும் செயற்பாடுகளைச் செய்துவருகின்றது. தமிழ்மக்களின் அரசியற் கோட்பாடுகளைச் சிதைத்து, சிங்கள பௌத்த நாடாக்கும் தனது மேலாதிக்க செயற்பாடுகளை, இராணுவ மயப்படுத்தலூடாக நடைமுறைப்படுத்தி வருகின்றது. திறந்தவெளிச் சிறைச்சாலையில், அதிகமான இராணுவப் பிரசன்னத்திற்குள் தமிழ்மக்களை அடைத்தும் அச்சுறுத்தியும் வைத்திருக்கும் சிறிலங்கா அரசு, தமிழர் நிலங்களை இராணுவ முகாம்கள் என்ற போர்வையிலும் பாதுகாப்பு பிரதேசங்கள் என்ற போர்வையிலும் சுவீகரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ்ப் பிரதேசங்கள் சிங்களப் பிரதேசங்களாகக் கபளீகரம் செய்யப்படுகின்றன. இனச்சுத்திகரிப்புக்கள் மௌனமாக நடைபெறுகின்றன.

மறுபுறம், பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் பெயரால் பெறப்படும் நிதிகளும் சிங்களத்தின் குடியேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் இராணுவ நிலைப்படுத்தலுக்குள்ளும் அமுங்கிப்போகின்ற தற்போதைய சூழலில், தமிழ்மக்கள் தங்களின் நிலையான வாழ்வாதார நிலைப்படுத்தலுக்கான, பொருளாதார மேம்பாட்டிற்கான வழியின்றித் தவிக்கும் அவலம் தொடர்கின்றது.

இராணுவச் சட்டங்களிற்குள்ளால் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் தாயகத்தின் முதன்மை உற்பத்தித்துறைகளான மீன்பிடி, விவசாயம், என்பன சிங்கள முதலாளி வர்க்கத்தின் கைகளில் சென்றடைகின்றன. வாழ்வாதாரத்திற்கு வழியின்றி, ஒருவேளை உணவுடன் தாயகச் சமூகத்தின் ஒரு தொகுதி மக்கள் கூட்டம் வறுமைக்குள் வாழ்கின்றது.

வாழ்வாதாரத்திற்கான அடிப்படைகள் இல்லாமல் போக, அதன் காரணமாக வலிமையில்லாத, நோயுற்ற, கல்வியறிவில் தாழ்ந்த ஒரு பலவீனமான, நலிவடைந்த ஈழத்தமிழ்ச்சமூகம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. பலகுடும்பங்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் அற்று வெறும் தகரங்கள், ஒலைக்குடில்களுக்குள் இயற்கையின் அனர்த்தங்களையும் தாங்கி செய்வதறியாது வாழ்ந்து கொண்டிருக்கின்றன. போரின் வடுக்கள் ஆறாத ரணங்களாக வலிக்க, ஒவ்வொரு நாளையும் ஏக்கத்துடன் கழிக்கும் அந்த மக்களின் வாழ்க்கை அவர்களை விரக்தியின் விளிம்பு நிலையில் தள்ளியிருக்கின்றது.

இறுதிக்கட்ட யுத்தம், ஈழச்சமூகத்தின் பெரும்பான்மையை ஒரு நலிவடைந்த (Vulnerable) சமூகமாக உருவாக்கிவிட்டது – அவயங்களை இழந்தவர், குடும்பத்தலைமையை இழந்த குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிஞ்சுகள், மன அழுத்தங்களிற்கு உள்ளானவர்கள் என சமூகத்தின் பெரும்பகுதி வலுவிழந்திருக்கின்றது. குடும்பத்தலைவரை இழந்த 89.000 குடும்பங்கள் பெண்களால் தலைமை தாங்கப்படும் குடும்பங்களாக வடக்கு கிழக்கில் வாழ்வதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான அமைப்பின் அண்மைய புள்ளிவிபரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் 'பெண்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பு மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் உதவிக்கான வாய்ப்பைப் பொறுத்தவரை பல பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார்கள், தமது வாழ்க்கை குறித்த கட்டுப்பாடு எதுவும் அவர்களது கையில் இல்லை, அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அங்கு கிடையாது' என்றும் தெரிவித்துள்ளது.

அங்கவீனமானவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், கல்விக்கான வசதியற்ற பிள்ளைகள், பொருளாதார முயற்சிக்கு வாய்ப்பில்லாத அல்லது முதலீட்டுப்பாய்ச்சல் இல்லாத நிலையில் இருப்பவர்கள் என எண்ணற்றவர்கள் தமது எதிர்காலம் தொடர்பாகத் தெளிவற்ற நிலையில் தற்போதும் போக்கிடமின்றி இருக்கின்றனர்.

மேலும், முக்கியமாகக் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள, காணாமற்போனோரில் தங்கியிருக்கும் குடும்பங்கள், இந்த மண்ணுக்காக மடிந்த ஆயிரமாயிரம் மாவீரர்களின் குடும்பங்கள், விடுவிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கு வழியற்றிருக்கும் முன்னாள் போராளிகள் என தாயகத்து சமூகத்தின் பலவேர்கள் பொருளாதாரத்திற்கான உதவி என்னும் நீரைப் பாய்ச்சுமாறு வேண்டி, எதிர்பார்த்துக் கருகிக்கொண்டிருக்கின்றன.

அதேவேளை, தமிழினத்தின் போராட்ட சிந்தனையை மழுங்கடிக்கும் பல செயற்பாடுகள், கலாச்சாரச் சீரழிவுகள், இளைய சமூதாயத்தைத் தவறான வழிகளில் தூண்டிவிடும் நோக்கத்துடனான செயற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன. பாலுணர்வைத்தூண்டும் வெளியீடுகள் இளைஞர் சமூகத்தின் கல்வி மற்றும் அரசியல் சிந்தனைகளை மழுங்கடிக்கின்றன. இதன் மறுவிளைவாக சிறுவயதுக் கர்ப்பங்கள் பெருகிவருகின்றன என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

இயற்கைச் சீற்றமும் இன்னும் மக்களைத் துரத்திக்கொண்டு வருகின்றது. தொடர்ந்து வரும் இயற்கையின் சினத்தால் ஏற்கனவே வசதியற்ற வாழ்விடங்களில் வாழும் மக்கள் மீண்டும் அகதிகளாக அலைகின்றனர். வாழ்க்கையை ஸ்திரப்படுத்தமுடியாத நிலை மேலும் மேலும் மக்களின் பொருளாதாரத்தையும் வாழ்க்கையையும் சீரழிக்கின்றது. ஈழத்தமிழினத்தின் வாழ்க்கை 'சாண் ஏற முழம் சறுக்குது' என்பதைப்போல தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த அவலநிலை தொடர அனுமதிக்கலாமா?

அரசியல் பொருளாதார மீட்சியற்ற நிலையில் தொடரும் சமூகத்தின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த வேண்டிய கடப்பாடு எம்முன்னால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

தற்போது நிலவும் ஜனநாயகவழி அரசியற் போராட்டத்தில் எவ்வாறு அரசியல், பொருளாதார, கலாச்சார ரீதியாக ஈழத்தமிழினம் தக்கவைக்கப்படுகின்றதோ அன்றி காப்பாற்றப்படுகின்றதோ, அதுவே எமது அரசியல் அடிப்படைகளுக்கான தளத்தைக் கொடுக்கும். ஈழத்தமிழினத்தை இலங்கைத்தீவில் தக்கவைக்கும் முயற்சியில் நாம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் அல்லது தள்ளப்பட்டிருக்கின்றோம் அல்லது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம் என்பது களநிலை யதார்த்தம்.

2012 ம் ஆண்டை எப்படிப் பிரகடனப்படுத்தப்போகின்றோம்?

'ஈழத்தமிழினத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைகொடுத்து, சுயசார்பு சமூகமாக்கி, வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி விடுவோம்'

IMG_1394.JPG

முப்பது வருடங்களுக்கு மேலான ஈழவிடுதலைப் போராட்டதின் சுமைகளைத் தாங்கக் கரம் கொடுத்து நின்ற புலம்பெயர்தேசத்தில், இன்று குறிப்பிட்டளவு தொகையினர் மட்டும் சிறிய அமைப்புக்கள் மூலமோ தன்னிச்சையாகவோ தம்மால் முடிந்தவரை இன்னும் தாயக மக்களின் மறுவாழ்வுக்காகப் பங்களித்துக் கொண்டிருக்கின்றனர். அடிப்படை வாழ்வியல் ஆதாரங்கள் அனைத்தும் முற்றாக அழிக்கப்பட்ட, வலுவிழந்த சமூகத்தின் மீள்கட்டுமானம் என்பது முழுஅளவில் முன்னெடுக்கப்பட வேண்டுமானால் ஒட்டுமொத்த புலம்பெயர்தேசமும் பங்களிக்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர், முனைப்படைந்து நிற்கும் குழப்பநிலைகள், நம்பிக்கைத் துரோகங்கள், ஏமாற்றுக்கள் போன்றவற்றைக் காரணம் காட்டி குறிப்பிட்ட தொகையிலான சமூகம் ஒதுங்கியுள்ளதுடன் இன்னோரு பகுதியினர் தமது தார்மீகக் கடமையைப்பற்றி அதிக அக்கறை கொள்ளவில்லை என்ற கசப்பான உண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இவற்றையெல்லாம் கடந்து, எமது உறவுகளின் வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதில் எமக்கான பொறுப்பினை உணர்ந்து, பயணிப்பதற்கான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசியல் தீர்வற்ற, பொருளாதார நிமிர்வற்ற சூழ்நிலையில் திசையற்ற எதிர்காலச் சக்கரத்திற்குள் பயணிக்கும் எம்மக்களின் மறுவாழ்விற்குப் பொறுப்புக்கூற சிறிலங்கா அரசாங்கம் தயாரில்லை. வலுவிழந்த அவர்களின் கரங்களைப் பற்றி தூக்கிவிட வேண்டிய முழுப்பொறுப்பும் புலம்பெயர் தமிழராகிய எங்களிடம் மட்டும்தான் உண்டு. எம் உறவுகள் எங்களுக்காக அடமானம் வைக்கப்பட்டவர்கள். அவர்களை மீட்கவேண்டியது எங்கள் கடமை. தமிழீழக் கனவைத் தோள்மீது சுமந்த அந்த ஜீவன்களுக்கு ஒரு வாழ்க்கையிருக்கின்றது.

புலம்பெயர்தேசம் ஒருமுனையில் செயற்படுவதில் உள்ள குழப்பநிலைகள் போல, மறுபுறம், நிறுவனமயப்படுத்தப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட, கூட்டிணைவான செயற்பாடுகளைத் தாயகத்தில் முன்னெடுப்பதற்கான எந்தவிதமான சாத்தியக்கூறுகளும் இல்லை. தாயகம் முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் கட்டுண்டு இருக்கின்றது. ஆயுதமுனையிலான அச்சுறுத்தல்கள் மத்தியில் ஒருமைப்படுத்தப்பட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. அதற்கான உத்தரவாதங்கள் இல்லை. எனவே புலத்திலும் களத்திலும் உள்ள வாய்ப்பற்ற சூழல்களைக் கடந்து, சிங்கள அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காமல் தனிநபர்களாகவோ குழுக்களாகவோ செயற்படுவதே சாத்தியமானது. அவ்வாறு முன்னெடுக்கப்படும் உதவி செயற்பாடுகளின் பங்கேற்பு பன்மடங்காக உயர்த்தப்பட வேண்டும்.

அமைப்புக்களினூடான செயற்பாடுகளின் நம்பிக்கையீனங்கள் இருக்குமிடத்து, நியாயத்தன்மையைப் பேணக்கூடியவகையில் தனிநபராக, பாதிக்கப்பட்ட கடைநிலைக் குடும்பம் ஒன்றைப் பொறுப்பெடுத்து நேரடியாக உதவலாம். உதவிகளின் தன்மை, கால அடிப்படையைப் பயனாளர்களுடன் இணைந்து தீர்மானிப்பதுடன், அவை சுயசார்புப் பொருளாதாரத்தை நோக்கிய அடிப்படையைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

உதவிகளை வலுப்படுத்தி முன்னெடுக்கக்கூடிய வகையில் குழுக்களாக இணைந்து செயற்படலாம். நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என ஒன்று சேர்ந்து குழுக்களை அமைப்பதன் மூலம் இணைந்து செயற்பட முடியும். இன்றைய இணைய யுகத்தில் இது கடினமான ஒன்றாக இருக்காது மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமிடையிலான நம்பிக்கைகளும் பாதுகாக்கப்படும். குழுவாக இணைந்து குடும்பங்களைப் பொறுப்பெடுக்கலாம் அல்லது துறைசார் உதவிகளை (கல்வி, தொழில்வாய்ப்புக்கள், பெண்கள் முன்னேற்றம்) முன்னெடுக்கலாம். வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் கிராமத்தவர்கள் இணைந்து, அவர்களது கிராமத்தின் மேம்பாட்டுப்பணிகளை நகர்த்தலாம். ஒரே கிராமத்தவர்களாக இருப்பதால் புலத்தில் மட்டுமல்ல தாயகத்திலும் உள்ள அவர்களது உறவும், பழக்கமும் சிறந்த பலமாக அமையும்.

சில கிராமங்களைப் பொறுத்தவரை பாதிப்புக்கள் குறைவாக இருக்கலாம் அல்லது உங்களது கிராமம் ஓரளவிற்கான திருப்திகரமான வாழ்க்கைநிலையில் இருக்கலாம். அவ்வாறான கிராமங்களை, ஊர்களைச் சேர்ந்தவர்கள் குழுக்களாக இணைந்து, பாதிக்கப்பட்டு மறுவாழ்வுக்காகத் தவிக்கும் ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து உதவலாம். தொலைவில் உள்ள இரு கிராமங்களின் அன்பு உறவுப்பாலத்தை நிச்சயம் இச்செயற்பாடுகள் கட்டியெழுப்பும்.

உங்களது உதவிகள் சரியான இடத்தைச் சென்றடையக்கூடிய வகையில் பயனாளர்களைத் தெரிவு செய்வதில் நிதானமாகச் செயற்படுவதில் அதிக முக்கியத்துவம் தேவை. தெரிந்தவர்கள் மூலமாகவோ நண்பர்கள் மூலமாகவோ அமைப்புகள், நலன்விரும்பிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் அல்லது பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மூலமாகவோ ஏற்படுத்தும் தொடர்புகள் மூலம் பொருத்தமானவர்களை அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, நலிவடைந்த கடைநிலைக் குடும்பங்களை உள்வாங்குவதில் அதிகமான அக்கறை தேவை. உதவிகளின் இரட்டைத்தன்மைகள் (இரண்டுக்கு மேற்பட்ட இடங்களிலிருந்து உதவிகளைப் பெற்றுக்கொள்ளல்) முடிந்தவரை தவிர்க்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட யாரும் உதவிகளில் இருந்து வெளியேற்றப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்ட, நலிவுற்ற சமூகத்துடன் ஒப்பிடும்போது புலம்பெயர்தேச சமூகம் எண்ணிக்கையில் பெரியது. எனவே ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றிணைந்தால் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் என்பது இந்த வருடத்தில் நிறைவேற்ற முடியாத பெரிய இலக்கு அல்ல. தாயகத்தின் அவலங்கள் என வந்துகொண்டிருக்கும் செய்திகளை நிறுத்தி, மறுவாழ்வில் தலைநிமிரும் தாயகம் என்ற செய்திகளை உருவாக்குவதில் இணைவோம். மலரும் புத்தாண்டில் அதற்கான வாசலைத் திறப்போம்.

நலிவடைந்த சமூகத்தை அடையாளம் காட்டும் பணியில் இருப்போருக்கான அன்பான வேண்டுகோள்: தயவுசெய்து உங்கள் கரங்களைச் சரியான இடம் நோக்கி நீட்டுங்கள். நலிந்தோரின் அவலங்களைக் காட்டிப் பிழைக்கும் இழிநிலை வாழ்க்கை வேண்டாம். கருணை உள்ளம் கொண்டு உதவுவோரின் கரங்களை நியாயமாக நிலைப்படுத்திய திருப்தியை உங்களிடம் வைத்துக்கொள்வதில் உறுதியாகச் செயற்படுங்கள். புலம்பெயர்தேசத்து உதவிகளின் உன்னதத்தை உணர்ந்து கொள்ளுங்கள். குளிரிலும் உறைபனியிலும் உறக்கமின்றி உழைத்து, தமக்கான தேவைகளைச் சுருக்கிச் சேமித்த பணம். ஒவ்வொரு ரூபாயிலும் அவர்களின் இரத்தம் இருக்கின்றது.

கைகளை இழந்து ஒற்றைக் கையால் விறகு வெட்டிவிற்று தன் குடும்பத்தின் வயிற்றைக்கழுவும் அண்ணன், பள்ளி செல்லும் வயதில், வெடித்துச் சிதறிய செல் துண்டுகளைப் பொறுக்கி விற்றுப் பிழைக்கும் சிறுவன், வெள்ளம் புகுந்த ஓலைக்குடிலுக்குள் தூங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருக்கும், தமது நான்கு மகன்களையும் மாவீரராகக் கொடுத்துவிட்ட வயதான பெற்றோர், தந்தையை பறிகொடுத்த தனது மூன்று பெண்குழந்தைகளையும் வளர்த்தெடுக்கப் போராடும் தாய், பெற்றோரை இழந்த தன் பேரக்குழந்தைகளின் பட்டினிக்கு நாவற்பழங்களைப் பொறுக்கிக்கொடுக்கும் கையறுநிலையில் இருக்கும் அம்மம்மா என தொடர்ந்து கொண்டேயிருக்கும் எம் உறவிகளின் கண்ணீரைத் துடைக்க எம்மைத் தவிர யாருமில்லை.

தாயக மக்களின் மீது பொருளாதாரவலுவுக்கான மேம்பாட்டு உதவி என்னும் ஒளியைப் பாய்ச்சி, அந்தவேர்கள் மீள்புத்துயிர் பெற்று வலுப்பெற கைகொடுத்தால் அவர்கள் தலைநிமிர்ந்து, கௌரவமாக எழுந்துநிற்பதற்கான தளம் கிடைக்கும். அதன் திரட்சியாய்ப் புத்துயிர் பெறும் தாயகத்தமிழினம் எதிர்காலத்தில் அரசியல் பொருளாதார இருப்பை உலகத்தின் ஜனநாயக வாய்பாட்டிற்குள் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கை தெளிவாக உள்ளது.

உறவுகளே! நாம் காக்கைக் கூட்டமாக இருப்போம். பகிர்ந்து உண்போம். தத்தளித்துக் கொண்டிருக்கும் எம் தாயக உறவுகளைக் கரைசேர்ப்போம். சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கிணங்க, தனித்தனியாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கால ஓட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு என்னும் பெருவெள்ளமாக பெருகி வாழ்வாதாரத்தை வளம்பெறச் செய்வதுடன் ஒற்றுமையுள்ள பலம்பொருந்திய இனத்தை உருவாக்கும்.

எனவே, போரின் கோரப்பிடியில் சிக்கி, அடுத்தவேளை உணவிற்காகவும் எதிர்காலத்திற்காகவும் ஏங்கி நிற்கும் தாயகமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முற்படுவோம். எமது உடன்பிறப்புகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டுவது தார்மீகக் கடமை என்பது மட்டுமல்ல காலத்தின் கட்டாயமும் ஆகும்.

அபிஷேகா

abishaka@gmail.com

http://www.eelampakk...-post_8492.html

Edited by அபிஷேகா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.