Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்கிறார் சீமான்!

Featured Replies

ஈழத்தமிழர்கள் தலையில்

மிளகாய் அரைக்கிறார் சீமான்!

-ஈழத்து எழுத்தாளர் ஷோபா சக்தி குமுறல்

வேலைக்காரிகளின் புத்தகம் என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர் ஷோபாசக்தியின் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது கருப்பு பிரதிகள் பதிப்பகம். அதில், தமிழ்சினிமா குறித்து எழுதியிருக்கும் ஷேபாசக்தி, இயக்குனர் சீமான் பற்றியும், அவரது Ôதம்பிÕ படம் பற்றியும் விமர்சனங்களை வைத்திருக்கிறார். அந்த கட்டுரையின் சில பகுதிகள் நமது வாசகர்களுக்காக... இக்கட்டுரை தொடர்பான விமர்சனங்களை வாசகர்கள் நமது இணையதள மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்...

தம்பி

தமிழ் தேசியமும் சே குவேரா பனியனும்

திரைப்பட நடிகர்களின் கட் அவுட்டுகளுக்குப் பாலாபிஷேகம் செய்வது, அபிமான நடிகைகளுக்காக கோயில் கட்டுவது, அபிமான நடிகர்களுக்காக விரலை வெட்டுவது, அரைவேக்காட்டுத் தனமான மிகை உணர்ச்சித் திரைப்படங்களுக்கும் மலிவுத்தனமாக பாலியல் கிளர்ச்சிகளை உருவாக்கும் விடலைத்தனமான 'காதல்' படங்களுக்கும் பல்கலைகழகப் பேராசிரியர்களும் திரைப்பட ஆய்வாளர்களும் பாராட்டுக் கட்டுரைகள் எழுதுவது, உலக இலக்கியத்தைச் சவால் செய்வதாய்ச் சொல்லிக்கொள்ளும் இலக்கிய எழுத்தாளன் பேய் பிசாசு நம்பிக்கைகளையும் சாதி பெருமிதங்களையும் தூக்கி நிறுத்தும், துப்பட்டாக்களைக் கண்காணிக்கும் சமூக விரோதத் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவது, திரைப்படப் புகழ் நட்சத்திரங்களைத் தேர்ந்த சமூக சிந்தனையாளர்களாக உருவகித்து ஊடகங்கள் நேர்காணல் செய்வது, உணர்ச்சிப் பாவலர்கள் ஆணிய வக்கிரத்துடன் ஆபாசமாகத் திரைப்படப் பாடல்கள் புனைவது, சினிமாக் கவர்ச்சி என்ற ஒன்றை ஆயுதத்தின் துணையுடன் மட்டுமே திரைப்படப் துறையினர் அரசியல், பண்பாட்டு தளங்களின் போக்குகளைத் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக மாறிவிடுவது போன்ற அட்டூழியங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே நிகழ முடியும் என அடிக்கடி எமது தமிழகத் தோழர்கள் வருத்தப்பட்டுக் கொள்வதுண்டு, தோழர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி என்னிடம் உண்டு தமிழ்நாட்டில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையேயும் இந்த அட்டூழியங்களில் சிலவாவது நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன..

பெப்ரவரி மாதத்தின் நடுப்பகுதியில் பாரிஸ் நகரத்தில் ஈழத் தமிழர்கள் நடமாடும் கடை வீதிகளில் எல்லாம் இயக்குனர் சீமானின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'தம்பி' திரைப்படத்துக்கான விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. நடிகர் மாதவனின் விதவிதமான தோற்ற நிலைகளின் கீழே 'அச்சந்தவிர்', ரௌத்திரம் பழகு' என்ற புதிய ஆத்திசூடியின் வரிகள் அச்சிடப்பட்டிருந்தன. அச்சுவரொட்டிகளில் இப்படியாகவும் ஒரு வரி இருந்தது 'முக்கிய குறிப்பு ; இத்திரைப்படம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியது''.

அதே நேரத்தில் அய்ரோப்பியத் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தம்பி திரைப்பட முன்னோட்டம் அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை காண்பிக்கப்பட்டது. முன்னோட்டத்தில் முத்தாய்ப்பாய் சேகுவேரா, மாவோ இருவரது புகழ்பெற்ற இரண்டு கூற்றுக்கள் திரையில் எழுத்துக்களாய் மின்னின. தம்பி திரைப்படம் வெளியானதும் புலம்பெயர் வாரப் பத்திரிக்கைகள் தம்பி படத்தைக் கொண்டாடின. மின் இலத்திரனியல் ஊடகங்களில் தம்பி திரைப்படமும் இயக்குனர் சீமானும் சேகுவேரா பனியனும் முக்கிய பேசு பொருட்களாயின. மார்க்ஸின் மாணவன், பெரியாரின் பேரன், தம்பியின் தம்பி என்று கிறுக்குத்தனமாகச் சீமான் பெரிய சாமானாக வர்ணிக்கப்பட்டார்.

இந்த அமளிதுமளிக்குள் சீமான் அவுஸ்ரேலியாவிலுருந்து ஒலிபரப்பாகும் 'இன்பத்தமிழ்' வானொலிக்கு 20.10.2005 அன்று வழக்கியிருந்த நேர்காணலை இணையத்தளம் ஊடாகச் சற்றே தாமதமாகக் கேட்க நேர்ந்தது. அந்நேர்காணலில் சீமான் இவ்வாறு கூறினார்; ''சிங்கள அரசு முழுப் பலத்துடன் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் போது அதை ஒரு அரசின் இறையாண்மையாக உலகம் பாக்க்கிறது, ஆனால் நாங்கள் கையில் ஆயுதத்தை எடுக்கும் போது அதை வன்முறையாகத் தீவிரவாதமாக உலகம் சொல்கிறது. அப்படிச் சொல்லக் கூடாது என்பதையே உள்ளர்த்தமாகக் கொண்டு தம்பி திரைப்படத்தை எடுத்து வருகிறேன்''. இவை எல்லாவற்றினதும் உச்சமாகத் தம்பி வெளியானதும் சீமான் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய நேர்காணலில் ''தம்பியின் வெற்றியைப் பெரியாருக்கும் பிரபாகரனுக்கும் அர்ப்பணிக்கிறேன்'' என்றார். இனி வருவது தம்பி திரைப்படத்தின் கதை;

அன்பே உருவான பெற்றோரும் பாசமுள்ள ஒரேயரு தங்கையும் உள்ள தமிழ் சினிமாவின் மாதிரிக் குடும்பமொன்றில் பிறந்தவன் தம்பி என்ற வேலுத் தொண்டைமான். இவனுக்கு முன்னதாகச் 'சகலகலாவல்லவன்', 'நான் சிவப்பு மனிதன்', 'பரமசிவன்', 'திருப்பாச்சி' போன்றவர்களும் இத்தகைய மாதிரிக் குடும்பத்தில் பிறந்தவர்களே. கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவனான தம்பி மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துடன் உத்தியோகம் பார்க்க தொடங்குகிறான். வேலைக்குப் போய்க் கொண்டிருக்கையில் தெருச்சண்டியன் பாண்டியனின் தம்பி செய்யும் கொலையன்றைத் தற்செயலாகச் சீமானின் தம்பி பார்த்துவிடுகிறான். தம்பி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததால் பாண்டியனின் தம்பி உள்ளே தள்ளப்படுகிறான். இதனால் வெகுண்டெழுந்த தெருச்சண்டியன் பாண்டியன், தம்பியின் மாதிரிக் குடும்பத்தைக் கொன்றொழித்து விடுகிறான்.

இப்போது தம்பி சினந்தெழுந்து பாண்டியனைப் பழிவாங்க பாண்டியனின் வீட்டுக்குச் செல்லும் போது அங்கே பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தைக் காண்கிறான். அக்குடும்பம் தான் பாண்டியனைக் கொலை செய்வதால் பாதிக்கப்படக் கூடாது என எண்ணும் தம்பி பாண்டியனைச் சந்தித்து ''நிறுத்திக் கொள்வோம்'' என்கிறான். பாண்டியனோ தம்பியை அடித்து முள்ளுக் கம்பியில் காயப் போட்டுவிடுகிறான். காயங்கள் ஆறியதும் தம்பி வன்முறையை ஒழிக்கப் புறப்படுகிறான். வில்லன் குழுவினரை துரத்தி துரத்தி மரண அடி அடிக்கிறான் தம்பி. தம்பி கொலை செய்வதில்லை ஆனால் கொலைக்கும் கோமாவுக்கும் உள்ள மயிரிழையில் தம்பியிடம் அடி வாங்கியவர்களின் உயிர் ஊசலாடுகிறது. இந்த மயிர் இழையில் தான் படமே நிற்கிறது. வன்முறைக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட வன்முறைத் தம்பி கையில் எடுக்கிறான். ''உதைக்கணும் உதைக்கணும் உதைப்பேன்'' என்று முழிகளைப் புரட்டியவாறு ஒரு சைக்கோ மாதிரித் தம்பி அலைய தம்பியின் சைக்கோவையும் தெருச் சண்டித்தனத்தையும் மாவீரம் என அர்த்தப்படுத்திக் கொள்ளும் அர்ச்சனா, தம்பியை விரட்டி விரட்டிக் காதல் செய்கிறாள். தம்பிக்கு உலகைத் திருத்தும் வேலையிருப்பதால் அவன் அர்ச்சனாவின் திடீர்க் காதலை நிராகரிக்கிறான். என்றாலும், அர்ச்சனா விடாப்பிடியாகக் கனவில் தம்பியோடு இரண்டு காதற் பாடல்களை ஊரைச் சுற்றி மரத்தைச் சுற்றி பாடிவிடுகிறாள்.

இடையில் தம்பிக்கு மதியுரைஞராக வந்து வாய்க்கிறார் மணிவண்ணன். பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை இடிக்கும் வாலிப வயோதிக அன்பர்களை அடக்கிய தம்பியின் தீரச் செயல்களுக்குப் புரட்சிகர \தத்துவார்த்தரீதியான விளக்கங்களை மதியுரைஞர் வழங்குகிறார். ''நான் ஏன் தெருச்சண்டியன் ஆனேன்'' என்று பல்கலைக்கழகப் பரிசளிப்பு விழா மேடையில் தம்பி உருக்கமாக உரை நிகழ்த்துகிறான். அப்போது மேடையில் இருக்கும் செட் ப்ரொப்பர்டிகள் பின் வருமாறு; மூன்று நாற்காலிகள், ஒரு மேசை, எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி, ஒரு மைக் ஸ்டாண்ட், பாவலர் அறிவுமதி, ஒரு மின்விசிறி.

மீண்டும் தோன்றும் மதியுரைஞர் தம்பியிடம், கார்ல் மார்க்ஸ், சே குவேரா, பிரபாகரன் எல்லோரும் கல்யாணம் செய்ததால் தம்பியும் அர்ச்சனாவை காதலிக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார். உடனே தம்பி அர்ச்சனாவின் காதலை ஏற்றுக்கொள்ள, அர்ச்சனா தம்பியின் காலில் தடாலென விழுந்து கும்பிடுகிறாள். கடைசி நேரக் கலவரத்தில் பாண்டியனின் மாதிரிக் குடும்பத்தை சீமானின் தம்பி ஆபத்திலிருந்து காப்பாற்றுவதோடு பாண்டியனுக்கு அறிவுரையும் சொல்கிறான். மனம் திருந்திய பாண்டியன் சீமானின் தம்பியைத் தனது குலசாமியாக ஏற்றுக்கொள்கிறான் இது தெரியாத பாண்டியனின் தம்பி சீமானின் தம்பியைவெட்டி விடுகிறான். தம்பி குற்றுயிராக ஆஸ்பத்திரிப் படுக்கையில் கிடக்கத் தம்பியின் காதலியும் நண்பர்களும் சோகத்துடன் நிற்க்கிறார்கள். இவர்களை விடப் படுசோகத்துடன் வில்லனும் வெட்டியவனும் கண்களைக் கசக்கிக் கொண்டு நிற்கிறார்கள். அப்போது அங்கே தோன்றும் மதியுரைஞர் தம்பியின் காதிற்குள் '' தம்பி எழுந்திரு! இன்னமும் பஸ்ஸில் இடித்தபடியேதான் பயணம் செய்கிறார்கள் எழுந்திரு! நமக்கு இன்னமும் வேலையிருக்கிறது.'' என்று கூறத் ''தம்பி'' பொழைச்சிட்டான்''.

மேலேயுள்ளது தம்பி திரைப்படத்தின் கதைச் சுருக்கம் என்று நினைத்து விடாதீர்கள். தம்பி திரைப்படத்தின் முழுக்கதையும் இதைவிடச் சுருங்கியது. நான்தான் வாசிப்புச் சுவாரசியத்துக்காகக் கதையைச் சற்றே மினுக்கி எழுதியுள்ளேன். தறுதலைத் தம்பிக்கும் தாதா பாண்டியனுக்கும் இடையில் நடக்கும் நாய்ச் சண்டையில் தமிழீழ மக்களின் போராட்டம் எங்கே வருகிறது? காதலை ஏற்றுக் கொண்டவுடன் தம்பியின் கால்களில் காதலி விழுந்து தொழும் அசிங்கமான திரைப்படத்தில் ஈரோடுச் சிங்கத்துக்கு என்ன வேலை? இந்த வெங்காயச் சினிமாவை வீரமணி, கொளத்தூர் மணிக்குக் கூட அர்ப்பணிக்க முடியாதே? இதை எந்தத் துணிச்சலில் சீமான் பெரியாருக்கு அர்ப்பணிக்கிறார்?

''தமிழ்த் திரைப்படங்களைக் குறித்துப் பேசுவது சிரங்கைச் சொறிந்து கொடுப்பதைப் போன்றது'' எனப் பேராசிரியர் சிவசேகரம் ஒருமுறை எழுதியதாக நினைவு. பேராசிரியர் விரக்தியின் விளிம்பில் நின்று இதை எழுதியிருந்தாலும் கூடத் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் நேர்முறைப் பண்புகளும் இல்லாமல் இல்லை. திராவிட இயக்கத்தினரின் திரைப்படங்களும் 'பாதை தெரியுது பார்', 'ஏழாவது மனிதன்', 'கண் சிவந்தால் மண் சிவக்கும்' போன்று மாற்றுத் திரைப்படங்களைக் கண்டடைவதற்கான எத்தனங்களிற்குள்ளால் உருவாக்கப்பட்ட திரைப்படங்களும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முக்கியமானவை. இது தவிர வணிக நோக்கில் தயாரிக்கப்படும் சனரஞ்சக மனோரதியத் திரைப்படங்களிற்கும் பரந்துபட்ட தமிழ்ப் பார்வையாளர்கள் திரளிற்குமிடையே உள்ள உறவும் ரசிக உளவியலும் குறித்த ஒரு உரையாடலை 'நிறப்பிரிகை' சில வருடங்களிற்கு முன்பு தொடங்கி வைத்தது. எனினும் அவை குறித்த சிந்தனை வளர்ச்சியும் ஆய்வு முயற்சிகளும், தமிழில் தொடராமலேயே போய் விட்டன. பாடல்கள், நடனங்கள், சண்டைக் காட்சிகள், மிகை உணர்ச்சிகள், போன்ற கேளிக்கைக்கான நேர்மறைக் கூறுகளுடன் நடிகைகளைப் பாலியல் பிரதிமைகளாகக் கட்டமைப்பது, ஆதிக்க சாதிச் சாய்வு, மூடநம்பிக்கைகள், ஆண் மையவாதச் சிந்தனை முறைமை போன்ற எதிர்மறைக் கூறுகளும் சேர்ந்ததாகவே தமிழ்ச் சினிமாவின் பரப்பு இயங்கி வருகிறது. இந்தப் போக்கு தமிழ்ச் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகச் சினிமாவிலும் தொழிற்படும் ஒரு போக்குதான்.

ஆனால் பொதுவாகவே தமிழ்த் திரைப்படத் துறையில் மாபெரும் வணிக வெற்றிகளைச் சாதித்த இயக்குனர்கள் தமது திரைப்படங்களுக்கு வெளியே புரட்சிகரமான வாய்ச் சொற்களை உதிர்ப்பதில்லை. 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தின் வெற்றியைக் கத்தாருக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கங்கை அமரன் சொன்ன தில்லை. 'கப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றியை ஈழப்போராளிகளுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று செல்வமணி சொன்னதில்லை. ஆனால் மேற்சொன்ன படங்களையே கருத்துத் தளத்தில் ஒத்ததாக உள்ள தம்பி திரைப்படத்தின் வெற்றியைப் பெரியாருக்கும், பிரபாகரனுக்கும், அர்ப்பணிக்கிறேன் என்று கூறும் சீமானின் வாய்த் துடுக்குக்குப் பின்னால் இருப்பது எது?

தம்பி திரைப்படத்துக்குப் புறத்தே இயக்குனர் சீமான் கட்டமைத்த, கட்டமைக்கும் போலிப் புரட்சிகரப் படிமங்களின் பின்னே, அவர் உதிர்க்கும் வெற்று வீர வசனங்களின் பின்னே இயங்கும் சின்னத்தனமான அரசியலின் வியாபார இலக்கு எது? அந்த வியாபாரத்தின் அரசியல் என்ன? இந்தக் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு முன்னதாகத் தம்பி படத்தின் திரைக்கதை வசனத்தைப் பற்றியும் அவற்றுள் பொதிந்திருக்கும் ஆபத்தான சாதிய ஆண்மையவாத அராஜகக் கூறுகளைப் பற்றியும் பார்த்து விடுவோம்.

தம்பி திரைப்படம் பழிக்குப் பழி என்ற வழமையான தமிழ்த் திரைப்படப் பாணியிலிருந்து வேறுபட்டது, அதனாலேயே அது முக்கியமானது என்று திராவிடப் பாசறையிலிருந்து வரும் 'உண்மை' இதழும் எழுதுகிறது. தமிழ்த் தேசியவாதப் பாசறையிலிருந்து வரும் 'தென் செய்தி' இதழும் எழுதுகிறது. என்ன இழவு இது? எம்.ஜி.ஆர் நடித்த 136 படங்களில் 130 படங்களில் இந்த கதை தானே நடந்தது! எழுந்தமானமான எடுத்துக்காட்டாய் கஜேந்திரா பிலிம்ஸின் 'நாளை நமதே' திரைப்படத்தை எடுத்துக்கொள்வோம். அன்பே உருவான தாய், அறிவே உருவான தந்தை, சங்கர், வி.ஜே, கண்ணன் என மூன்று குழந்தைகள்! தென்றல் நடைபயின்ற குடும்பத்தில் திடீரெனப் புகுந்தான் கொள்ளைக்காரன் ரஞ்சித். தென்றல்கள் ஒவ்வொன்றும் திசைக்கொன்றாகப் பிரிந்தன... முடிவு என்ன? எம்.ஜி.ஆர் பெரியவனாக வளரவில்லையா? தன் குடும்பத்தையே நாசமாக்கிய நம்பியாரைக் கண்டுப் பிடிக்கவில்லையா? நம்பியாரைத் தண்டவாளத்தில் ஓடவிட்டுத் துரத்தித் துரத்தி நீதி மொழிகள் பேசவில்லையா? நம்பியாரைப் பழிவாங்க எல்லா வாய்ப்புகள் இருந்தும் இறுதியில் எம்.ஜி.ஆர் நம்பியாரின் உயிரைக் காப்பாற்றி சட்டத்தின் கையில் ஒப்புவிக்கவில்லையா? அப்போது நாகேஷ் போலீசாரை ஜீப்பில் ஆழைத்துக்கொண்டு வரவில்லையா? எல்லாமே நடந்தன. ஒன்று மட்டும்தான் நடக்கவில்லை. இத் திரைப்படத்தின் வெற்றியை அண்ணாத்துரைக்கு அர்ப்பணிப்பதாக எம்.ஜி.ஆர் சொல்லவில்லை!

'தென்செய்தி' இதழில் சுப. வீரபாண்டியன் தம்பி திரைப்படத்தைக் குறித்து எழுதும் போது தம்பியின் வீட்டில் பெரியார், கார்ல் மார்க்ஸ், பாரதிதாசன் படங்கள் தொங்குவதாக மகிழ்ந்து போகிறார். இவையெல்லாம் தம்பியின் உள் வீட்டில் மாட்டியிருந்த படங்கள். ஆனால் தம்பியின் வீட்டின் முகப்பில் மாட்டப்பட்டிருந்த ஒரு புகைப்படம் அண்மைக் காட்சிக்குள் ஒன்றுக்கு இரண்டு தடவைகள் வரும் ஒரு புகைப்படம் எப்படித்தான் பேராசிரியரின் கண்களுக்குப் படாமல் போனதோ தெரியவில்லை. அம்முகப்புப் படத்திலிருப்பவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். மார்க்ஸின் மாணவர்கள், பெரியாரின் பேரர்கள், ஒரு போதும் முத்துராமலிங்கத்தின் படத்தைத் தூக்கிப்பிடிப்பதில்லை. தலித் மக்களின் தலைமைப் போராளி இம்மனுவேல் சேகரனின் படுகொலைக்கு நேரடிக் காரணியாக இருந்தவர் முத்துராமலிங்கம். முத்துராமலிங்கத்திற்கு அடிப்படைவாத இந்துத்துவ முகமும் உண்டு. இந்து மகாசபைத் தலைவராகவும் முத்துராமலிங்கம் இருந்தார். ''ஒரு வேளை இன்று முத்துராமலிங்கர் உயிருடன் இருந்திருந்தால் அவரே இன்றைய தமிழக இந்துத்துவ சக்திகளின் தலைவராக இருந்திருப்பாரோ என்று ஊகிக்கவும் இடமுண்டு'' என்பார் அ.மார்க்ஸ் (அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவோம் பக். 107) இன்று தென் மாவட்டங்களில் சாதி ஒடுக்குமுறையாளர்களாக விளங்கும் முக்குலத்தோரின் சாதிப் பெருமிதப் படிமமாக, வரலாற்று நாயகனாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஆக முத்துராமலிங்கத்தின் படத்தைத் தம்பியின் வீட்டில் சீமான் மாட்டி விட்டதற்குப் பின்னாலிருப்பது சுய சாதி அபிமானத்தைத் தவிர வேறென்ன?

இந்த இடத்தில் இயக்குனர் சீமான் திரைப்படத் துறையினுள் நுழைந்த விதத்தையும் நாம் கவனிக்க வேண்டும். சீமான் பாரதிராஜாவின் 'பசும்பொன்' திரைப்படத்திற்குக் கதை - உரையாடல் எழுதித்தான் திரைப்படத் துறையில் அறிமுகமாகிறார். தமிழ்ச் சினிமாவின் மொழியை மாற்றிப் போட்ட வகையிலும் 'கிழக்கே போகும் ரயில்', 'கருத்தம்மா', போன்ற சில படங்களில் சமூகப் பிரச்சனைகளைச் சற்றே ஆழமாகப் பேசியவர் என்ற வகையிலும் தமிழ்த் திரைப்படத் வரலாற்றில் பாரதிராஜாவின் வகிபாகம் முதன்மையானதாக இருக்கிறது. இதற்கு அப்பால் சுயசாதிப் பெருமிதங்களைப் பேசும் படங்களைப் எடுத்ததோடு மட்டுமல்லாமல் சாதிச் சங்கத்தின் நிகழ்வுகளிலும் கலந்து கொள்பவர் பாரதிராஜா. சீமான் கதை உரையாடல் எழுதிய பசும்பொன் திரைப்படமும் சுயசாதிப் பெருமைகளைப் பேசிய ஒரு வன்கொடுமைத் திரைப்படம்தான். இத்திரைப்படத்தின் நாயகப் பாத்திரமான துரைராசுத் தேவர் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் சிவாஜி கணேசன் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. அத்திரைப்படத்தில் தான் ''தென்பாண்டிச் சிங்கமே தேவர் அய்யா எங்கள் தேவர் குலத் தங்கமே தேவர் அய்யா'' என்ற பாடல் வருகிறது. இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து என்பது கூடுதற் தகவல்.

''நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி'' என்பார் பெரியார். நமது மொழியின் அடுக்குகளில் சாதி நுட்பமாகப் படிந்துள்ளது. சீமானின் தம்பி திரைப்படத்தில் பாத்திரங்கள் பிற பாத்திரங்களைத் திட்டும் போது 'சண்டாளா' எனத் திட்டுகிறார்கள். படம் நெடுகவும் இந்த சண்டாளா என்ற சொற்பிரயோகம் வருகிறது. சண்டாளர் என்பது புராணங்கள், இதிகாசங்கள் தோன்றிய காலங்களிலிருந்தே தலித்துக்களை இழித்துரைப்பதற்காக ஆதிக்கச் சாதியினர் பயன் படுத்தும் சொல். மதுரை மீனாட்சி கோயில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தபோது அடையாளமாகப் பறையர், பள்ளர், நாடார் சாதிகளிலிருந்து இரண்டிரண்டு பேர்களென ஆறு பேர்கள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். 'ஆறு சண்டாளர்கள்' என இவர்களைப் பற்றி 'பிகிரதி' என்ற பார்ப்பனப் பெண் வசைப்பாடல் இயற்றிய கொடுமையைத் தமிழவேள் இம்மானுவேல் 'தேவேந்திரர் வரலாறு' என்ற நூலிற் குறிப்பிடுகிறார். இவற்றுக்கு மேலாகச் சண்டாளரென்பது இந்தியாவின் அட்டவணைச் சாதிகளுள் உள்ள ஒரு தீண்டப்படாத சாதியின் பெயர் என்பதும் அறிய வருகிறது, இச்சாதியின் பெயரை வசைச் சொல்லாகச் சீமான் தம்பி திரைப்படத்தில் உபயோகித்திருப்பதைத் திரைப்படத் தணிக்கை குழுவினர் எப்படி அனுபதித்தனர்? தணிக்கைக் குழு அனுமதித்திருப்பினும் உண்மையும் தென்செய்தியும் சுபவீயும் கோவி.லெனினும் எப்படி இதைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்? சீமான் சார்ந்திருக்கும் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் குஷ்புவிடம் இருந்து மட்டும்தான் தமிழைக் காப்பாற்றுமா? சாதியிடமிருந்து தமிழைக் காப்பாற்றாதா?

பெரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்திலும் 'கதாநாயகி', கதைக்குச் சம்மந்தமில்லாமல் வந்துபோன அறிவுமதி, ஆண்டாள் பிரியதர்சினி போலவே அவளும் வந்து போகிறாள். சற்றுக் காலத்திற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், பனியன் போன்ற உடைகளை அணியக் கூடாது என்ற ஒரு கலாச்சார அடிப்படைவாத விதி கொண்டுவரப்பட்டதே, அதை மாணவிகள் கடைப்பிடிக்கிறார்களோ இல்லையோ சீமான் செம்மையாகக் கடைப்பிடிக்கிறார். படம் முழுவதும் கல்லூரி மாணவியான நாயகி சேலையிலேயே வருகிறாள். சீமானைப் போல மாதவனைப் போல அவளால் சே குவேரா படம் பொறித்த பனியன் அணிய முடியாது. விரும்பினால் சே குவேரா படத்தைச் சேலையில் பிரிண்ட் போட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

புரட்சியாளனைக் காதலிக்கும் குற்றத்துக்காக அவள் புரட்சியாளனிடமிருந்து லூசு, இம்சை, பேய் போன்ற வசைகளைப் பெறுகிறாள். கடைசியில் சீமானின் தம்பி காதலை எற்றுக் கொண்டதும் அவனின் கால்களில் விழுகிறாள். முற்று முழுதாக ஆணாதிக்கச் சிந்தனை வழியிலேயே சீமான் நாயகியின் பாத்திரத்தைக் கட்டமைத்திருக்கிறார். வெட்கத்தை விட்டு ஒன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது; கே.பாலச்சந்தர் போன்ற பார்ப்பனப் பிற்போக்குவாதிகள் 'அவள் ஒரு தொடர் கதை', 'அவர்கள்', 'மனதில் உறுதி வேண்டும்', 'அச்சமில்லை அச்சமில்லை', 'அக்னி சாட்சி', ஆகிய திரைப்படங்களில் அரைகுறையாகவேனும் சித்தரித்துக் காட்டிய பெண் ஆளுமைகளைக் கூட நமது பெரியாரின் பேர்ர்களாலும் தம்பியின் தம்பிகளாலும் உருவாக்க முடியாமலுள்ளது. அவர்கள் தமிழ்க் கலாச்சாரம் என்ற பெயரில் காலில் விழும் கலாச்சாரத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறார்

இதற்காக இவர் இவ்வளவு பெரிதாக சத்தியெடுத்திருக்கத் தேவையில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீமான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தம்பி,பெரியார், கார்ல் மார்க்ஸ்,பாரதிதாசன் ஒப்பிடுவது தானய ------

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சோபா சக்தி விடுதலைப் போராட்டத்தை எதிர்க்கும் ஒரு கபோதி. அவன் தமிழீழத்தை ஆதரிக்கும் ஒருவரைப் பற்றி எழுதினதை இப்படி முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. அவனின் வார்த்தைகளில் சூதும் வாதும் தான் நிறையவே உண்டு.

தனது படவெற்றியை தமிழீழத்திற்கு சீமான் அர்ப்பணிப்பது என்பது அவரது மனச்சாந்திக்கு, அன்புக்கு எடுத்துக்காட்டு. ஏதாவது ஒரு வெற்றியை, தாய்நாட்டுக்கு அர்பணிக்கின்றேன் என்று ஒரு வீரன் சொல்வதைப் போலவே இதுவும்.

தமிழீழத்திற்கு ஆதரவான சக்திகளை, வெறுக்க வைக்கும் இந்த சூதுக்காரனின் கட்டுரை கணக்கில் எடுக்கத் தேவையில்லை. அவன அவ்வளவு முக்கியத்துவமானவனும் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த சோபாசக்தி யாரென்று எனக்கு இதுவரை காலமும் தெரியாது. ஆனால் இதை வாசிக்கும் போது இவன் ஒரு கொள்கையில்லாத ஒரு தமிழன் என்று புரிகிறது. இவன் எழுதிய தூஷணத்தை வாசிக்க வேண்டாம் என எனது அன்பிற்குரிய இந்திய சகோதரர்களை கேட்டுக்கொள்கிறேன்.

குட்ட குட்ட தமிழன் குனிவதைவிட வேற வளியே இல்லை என்னும் அற்புதமான அறிவாளி "சோபாசக்தி"

முன்பு ஒருகாலத்தில் தலைமைக்கு தவறான தகவல்களை எல்லாம் வளங்கி மாற்றியக்க அப்புறப்படுத்தலை சிறப்பாக விளங்கிக்கொண்டு படுகொலைகளில் பங்கு கொண்டவர் எண்றும் பெருமையாக அறிமுகம் செய்து கொள்ளும் ஒரு சிறந்த மனிதர்.... ( அதுகாறும் ஏற்பட்ட பிணக்குகளால் இயக்கதில் இருந்து விலகியவர்களில் தானும் ஒருவர் என்பதை அவர் ஒத்துக்கொண்டது இல்லை)

முக்கியமாக இங்கே அவரின் கவலையாக தெரிவது என்ன எண்றால். தம்பி படத்தின் வருகையும் அதன் வெற்றியும், புலம்பெயர் தமிழர்களின் வெற்றிக்கான பங்களிப்பும் ஒருசில நெருடல்களை இந்த மாற்று கருத்து மேதாவிகளுக்கு கொண்டு வந்து இருக்கிறது என்பது நண்றாக தெரிகிறது...!

சினிமா என்பது தகவல்களையும் உணர்வுகளையும், பிரதிபலிக்க அப்படியே மக்களிடம் ஆர்வத்தோடு காணுமாறு கொண்டு சேர்க்கும் அற்புத மீடியா...! இந்த தம்பி பட வெற்றி என்பது ஈழத்தமிழர்கள் சம்பந்த படுத்து அவர்களின் வேதனைகளை சொல்லுவதுபோலவும் மேலும் படங்கள் வருவது தமிழக மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் எண்று கவலை கொள்கிறார்கள் என்பது புரிகிறது...!

  • கருத்துக்கள உறவுகள்

சோபா சக்தி இப்பிடித்தான் அடிக்கடி சத்தியெடுப்பார் அவர் ஒரு பேனா விபச்சாரி காசுக்காக எதையும் எழுதுபவர் எனவே அவரின்ரை சத்தியை இங்கை போட்டு நாற்றமெடுக்க வைப்பது அவசியமா?? சில நேரம் அவசியமாகிறது அவரை பற்றி பலரும் தெரிந்து கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.