Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    14676
    Posts
  2. அபிராம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    173
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    87990
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    3
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/21/10 in all areas

  1. பாகம் பதினைந்து மக்கள் அலையலையாக சென்று கொண்டிருந்தார்கள். தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்தபடியும், வயதானவர்கள் காயமடைந்தவர்களை, துணிகளில் கட்டி தூக்கியபடியும், ஒடுங்கிய பாதையூடாகவும், கடல்நீரேரியூடகவும் மக்கள் ராணுவத்திடம் சென்ற வண்ணம் இருந்தார்கள். நான் கடவுளை வேண்டிக்கொண்டேன். "கடவுளே என் அம்மா அப்பா, என் குடும்பம் இப்படி இராணுவத்திடம் போக கூடாது" என்று. மனசை எதுவோ பிசைந்தது. எங்களின் இயலாமை அதில் தெளிவாக தெரிந்தது. கொள்கைக்கும் உயிராசைக்கும் இடையில் போட்டி நடந்தது. மானத்துக்கும் மனசுக்கும் போராட்டம் நடந்தது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் மனசில், கொண்ட கொள்கையை விட, தமிழனின் மானத்தை விட, உயிர் மேல் இருந்த ஆசை பெருசாகபட்டது. அப்போது தான் அந்த சம்பவம் நடந்தது. நாங்கள் யாருக்காக போரடினமோ அந்த மக்கள் கூட்டத்தில் இப்படியும் இருந்திருக்கிறார்கள் என்று நினைத்து என்னை அதிர வைத்த சம்பவம் அது. ஆமாம். மக்களை போகவேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டிருந்த இரண்டு இளம் பெண்போராளிகளை ஒரு மக்கள் (??) கும்பல், கதற கதற தூக்கி சென்று ராணுவத்திடம் ஒப்படைத்தது. அந்த கொலைவெறி பிடித்த ராணுவ அதிகாரி, அந்த மக்களுக்கு முன்னாலேயே இரு பெண் போராளிகளையும் தலையில் சுட்டு கொன்றான். மக்களுக்காக தங்கள் உயிரையும் மதிக்காது போராடிய அந்த போராளிகள், தங்கள் சொந்த மக்களாலேயே தூக்கி சென்று கொடுத்த போதே பாதி உயிரை விட்டிருப்பார்கள். அந்த துப்பாக்கி சன்னங்கள் அவர்களின் மீதி உயிரையும் எடுத்து, எங்கள் தாய் மண்ணில், ஈரமும் உப்பும் நிறைந்த அந்த வெளியில் அவர்கள் உடலை சாய்த்தது. தூக்கி சென்று கொடுத்த மக்கள் கும்பலுக்கு ஒரு ஆத்ம திருப்தி. ஒரு பழிக்கு பழி வாங்கிய மகிழ்ச்சி. யாருடைய கோபத்தை வேறு ஒருவரிடம் காட்டிய சந்தோசம். ராணுவத்திடம் பாராட்டு வாங்கி மென்பானம் வாங்கி குடித்தார்கள். மக்களுக்காக போராடியதை தவிர, எதுவுமே அறியாத அந்த இளம் பெண் போராளிகளின் உடல்கள், உள்ளே வந்த மக்களின் பார்வைக்காக போடப்பட்டிருந்தது. நெஞ்சையே கொதிக்க வைக்கும் இந்த சம்பத்தை சிலர் மனம் பதைபதைக்க, சிலர் இவங்களுக்கு வேண்டும் என்று சொல்ல, சிலர் கண்டும் காணததுமாக போக, சிலர் வழி தெரியாமல் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டு போனார்கள். அந்த மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக எதிரியிடம் சரணடைந்த போராளிகள் கூட எதுவுமே நடக்காதது போல வாழாவிருந்தார்கள். சொல்லுங்கள் உறவுகளே..இப்படி உங்கள் சகோதரிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்...? உங்களுகாக தங்கள் ஆசைகள், உறவுகளை விட்டுவிட்டு போராட வந்ததுக்கு இது தான் கைமாறா ..?? அந்த நிலையில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்..மனம் திறந்து சொல்லுங்கள். மக்களிடம் கொக்கரித்து கொண்டிருந்த சிங்கள வெறியன்களுக்கு பாடம் படிப்பிக்க விடுதலை புலிகளின் கரும்புலி அணி தீர்மானித்தது. சாதாரண பெண்கள் போல சட்டை அணிந்து, உடுப்பு பைகளுடன் இரண்டு பெண் கரும்புலிகள் ராணுவத்திடம் சரணடைய சென்றனர். தங்களை முன்னாள் போராளிகள் என்று இராணுவத்திடம் அறிமுகப்படுத்த அவர்களை தனியே கூட்டிகொண்டு, ராணுவ சகாக்கள் மத்தியில் விடும்போது, அந்த வீர தமிழிச்சிகள், தங்களை வெடிக்க வைத்து சிங்களவனுக்கு மானம் என்றால் என்ன, கொள்கை என்றால் என்ன என்று காட்டினார்கள். அந்த இடத்திலேயே இருபதுக்கும் மேற்பட்ட சிங்கள இனவெறியன்களும் சிதறிப்போய் இருந்தார்கள்.அந்த இரு இளம் பெண் போராளிகளை கதற கதற சுட்ட அதிகாரிகள் உட்பட. கொலைவெறி கொண்ட சிங்கள ராணுவம் எழுந்தமானதுக்கு மக்களை நோக்கி சுட தொடங்கியது. இனி தப்பி விட்டோம், இனி சாகமாட்டோம் என்று நினைத்த நாற்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கே உயிரை விட்டார்கள். விடுதலைப்போராட்டம் என்பது தனியே உயிர் சம்பந்தபட்ட விடயம் அல்ல. அது மானம் கொள்கை சம்பந்தபட்டது. சிங்களத்தின் தலைப்பு செய்தி : - மக்களோடு மக்களாக வந்து புலிகள், தப்பியோடும் மக்களை தாக்கியதில் நாற்பது பொதுமக்கள் பலி. எங்களை ஏற்றி செல்லவந்த படகுகளில் ஏறி நாங்கள் வலைஞர்மடத்தை அடைந்தபோது மணி பன்னிரண்டை தாண்டி இருந்தது. அங்கும் மக்கள் பதட்டமாக கைகளில் கிடைத்த பொருட்களை எடுத்து கொண்டு கடற்கரை வழியாக முள்ளிவாக்கால் நோக்கி பயணித்து கொண்டிருந்தார்கள். இராணுவத்தின் செல்களும், துப்பாக்கியில் இருந்து புறப்பட்டு வந்த சன்னங்களும் மக்கள் உயிர்களை குடித்து கொண்டிருந்தது. என் தோளில் துப்பாக்கியை சுமந்தபடி, வலைஞர்மட வைத்தியாலைக்கு முன்னால் இருந்த மண் பாதை வழியாக, இராணுவம் வலைஞர்மடத்தை நோக்கி முன்னேறுவதை தடுக்க பயணித்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு கர்ப்பிணிதாயை ஏற்றி கொண்டு, முகப்பு ஒளியை பாய்ச்சிய வண்ணம், ஒலி எழுப்பியபடி ஒரு நடுத்தர வயது கணவன், பிரசவ வலிதாங்காத தன் மனைவியை உந்துருளியில் ஏற்றிய வண்ணம் கத்தி வழி கேட்டபடி வந்து கொண்டிருந்தான். எங்கிருந்தோ வந்த சன்னம் ஒன்று அவன் தாடையை கிழித்து கொண்டு போனது. மனைவியுடன் வீதியில் விழுந்தான். வாய்க்குள் இருந்து தண்ணீர் குழாயில் வருவது போல குருதி கொப்பளித்து பாய்ந்து கொண்டிருந்தது. மூக்கின் கீழ்பகுதி தாடையுடன் இல்லை. ஓஒ என்று கத்தி அலறிய அந்த கர்ப்பிணி மனைவி, தன் பிரசவ வலியால் ஒரு கையை தன் வயிற்றிலும், மறுகையை தன் கணவனின் வாயிலும் வைத்தபடி கத்தி அழுதாள். "அண்ணே யாராவது ஓடி வாங்கோ, ஆராவது வந்து காப்பாத்துங்கோ" என்று தன் பிரசவ வலிக்கும் மத்தியில் பலமாக கத்தினாள். தொடர்ந்து வந்து கொண்டிருந்த சன்னகளுக்கு மத்தியில், யாருமே அவர்களுக்கு கிட்டே போகவில்லை. நான் அந்த இடத்துக்கு விரைந்தேன். வாய் பிளந்து குருதி வருவதால் என்னால் கட்டுப்போட முடியவில்லை. இன்னும் ஒரு மூன்னூறு மீட்டரில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு போக வேண்டும். அவரது உந்துருளியை நிமிர்த்தி அவரை உட்கார வைத்து நான் முன்னால் ஏறி கொண்டேன். இப்போ இன்னொருவர் பின்னால் இருந்து அவரை பிடிக்கவேண்டும். அந்த கர்ப்பிணி தாயால் இரண்டு பக்கமும் காலை போட்டு இருக்க முடியாது. அருகில் இருந்தவர்களை கெஞ்சினேன். யாருமே உதவிக்கு வரவில்லை. எனக்கு ஒரு கயிறு அல்லது துணி வேண்டும் என்று கேட்டேன். அந்த கர்ப்பிணித்தாய் ஓடி சென்று, ஒரு தரப்பாள் கூடாரத்தில் இருந்த சேலையை உருவி வந்து என்னுடன் தன் கணவரை சேர்த்து கட்டினாள். நான் வைத்தியசாலைக்கு அவரை கொண்டு வர அந்த பெண் கத்தியபடியே பின்னால் ஓடி வந்தாள். அவரை கொண்டு போய் நான் வைத்தியரிடம் ஒப்படைத்த போது, அந்த கணவனின் உயிர் பிரிந்திருந்தது. அந்த கர்ப்பிணி மனைவியை எதிர்கொள்ள மன தைரியமற்ற நான் ஒரு ஒரமாக வெளியேறினேன். என் உடலெங்கும் அப்பி இருந்த அவரின் இரத்ததை, ஒரு தொகுதி இலையான்கள் மொய்த்து கொண்டிருந்தன. (தொடரும்) பாகம் பதினாறு இங்கே அழுத்துங்கள்
  2. பாகம் பதினான்கு அந்த கடல்நீரேரியின் மறுபுறத்தில் அமைக்கபட்டிருந்த கிடுகு வேலியையே பார்த்து கொண்டிருந்தேன். புதுமாத்தளன் வைத்தியசாலையில் இருந்தது ஒரு முந்நூறு மீற்றர் தொலைவில்.. ஒரு இடிந்த கல் வீட்டுக்கு நடுவில்.. பச்சை குழைகளால் உருமறைப்பு செய்தபடி எங்கள் நிலை இருந்தது. ஆனந்தபுரம் வரலாற்று சமருக்கு பின்னர், எங்கள் தானை தளபதிகளை எதிர்கொள்ள திராணியற்று இரசாயன ஆயுதங்கள் கொண்டு அழித்து, கடல் நீரேரியின் மறுபுறத்தை கைப்பற்றியிருந்தான் எதிரி. அங்கிருந்து கொண்டு மக்கள் வாழிடங்களை நோக்கி சரமாரியான எறிகணை,குறிசூட்டு,விமான தாக்குதல்களை நடத்தி கொண்டிருந்தான். கடல்நீரேரியை கடக்க விடாமல் காக்கும் பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ ஓய்வு காலபகுதியில் வழங்கபட்ட குறிசூட்டு பயிற்சியின் பின்னர், ஒரு குறிசூட்டு (சினைப்பர்) ஆயுதத்துடன் நான் காத்திருந்தேன் எதிரின் வரவுக்காக. ஒவ்வொரு நாள் அதிகாலை வேளையிலும் ஒரு இருபது முப்பது பொதுமக்கள் நீரேரியை கடந்து இராணுவத்திடம் செல்வது வழக்கமாகிவிட்டது. எனக்கு அதை தடுத்து நிறுத்த சொல்லி கட்டளை இருந்தாலும், அவர்களின் நிலையை பார்த்து நான் போக அனுமதிப்பதுண்டு. அங்கிருந்த எல்லா மக்களுக்கும் புலிகளும் அவர்களின் நடவடிக்கைகளும் பிடித்திருக்கவோ அல்லது புரிந்து கொண்டிருக்கவோ அவசியம் இல்லைதானே. அதைவிடவும் எவ்வளவோ மக்கள் புலிகளுக்காக தங்கள் உயிரையும் கொடுக்க இருக்கும்போது, ஒரு பத்திருபது மக்கள் இராணுவத்திடம் ஓடுகிறார்கள் என்றால், அவர்கள் எப்படிபட்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் எங்கட பக்கம் இருப்பதை விட இராணுவத்தின் பக்கம் இருப்பது தான் சிறந்தது என்று எண்ணி, அவர்களை நான் கண்டும் காணாமலும் ஓட விடுவதுண்டு. இரவிரவாக கழுத்தளவு தண்ணீரில் எங்கள் நிலை கடந்து எதிரியிடம் போன மக்களை விடியும் வரை தண்ணீரிலேயே நிறுத்தி வைத்திருப்பான் எதிரி. நன்றாக விடிந்தபின்னர் ஆண் பெண் பேதமின்றி அனைவரையும் அனைத்து ஆடைகளையும் களைந்து தான் தனது நிலைக்குள் எடுப்பான். இதெல்லாம் மக்கள் சொல்லி தான் கேள்விபடிருந்தேன். ஆனால் அன்று அதிகாலை என் குறிசூடு கருவியின் தொலைநோக்கியூடாக பார்த்த போது தான், எங்கள் மக்கள் எதிரியிடம் படும் அவலத்தை நேரடியாக கண்டேன். தந்தைக்கு முன்னால் வயது வந்த மகளின் உடையெல்லாம் களைந்து நிர்வாணமாக, கணவனுக்கு முன்னால் மனைவியின் உடைகளைந்து நிர்வாணமாக , எங்கள் மக்கள் எதிரியிடம் சரணடைவதை நேரிலே கண்டேன். கட்டிய கணவனுக்கு முன்னால் கூட உடை மாற்றாத இனத்தில் பிறந்து, கண்டவனுக்கு முன்னால் நிர்வாணமாக எங்கள் மக்கள் நிற்பதை பார்க்க எல்லாரையும் சுட்டு கொன்றுவிடலாம் என்று கூட தோணியது. எங்கே ஒரு இராணுவ வீரன் தலை காட்டி இருந்தாலும் என் ஆத்திரம் அவன் தலையில் தெரிந்திருக்கும். என்ன செய்வது எல்லாம் எங்கள் மக்கள் என்று, ஆயுதத்தை மடித்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டேன். இதை போய் எங்கள் மக்களிடம் சொன்னாலும் சிலர் நம்ப மாட்டார்கள். எங்களை இராணுவத்திடம் போகவிடாமல் தடுப்பதற்கான ஒரு யுக்தி என்றே சொல்லுவார்கள். வேண்டாம்..என் சகோதரியின் நிர்வாண உடலை பார்த்ததை ஊரெல்லாம் சொல்லி, அவளை மேலும் நிர்வாணமாக்க நான் விரும்பவில்லை. உயிரை விட மானம் தான் பெரிது என்று வாழ்ந்தவர்கள் எங்கட பக்கம் இருக்க , மானம் என்ன மானம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று, உயிரை காக்க எதிரியின் பக்கம் போனவர்களை , தனது காமபசிக்கும், கூலி வேலைகளுக்கும் பயன்படுத்தினான் எதிரி. அன்றும் அப்படிதான்... பொக்கணையை அண்டிய நீரேரிபகுதியில்.. அதிகாலையில் பசியாலும், இரண்டு மூன்று நாள் இடைவிடாமல் கண்விழித்து காவல் இருந்ததாலும் சற்று கண்ணயர்ந்த போராளிகளின் நிலையை உளவு பார்த்து ஒரு மக்கள் கூட்டம் இராணுவத்திடம் சென்றடைந்தது. அத்துடன் முடிந்திருந்தால் பரவாயில்லை.ஒரு இராணுவ அணி அவர்களை வந்த பாதையை காட்டுவதற்காக கூட்டிவந்திருந்தது . பாதை காட்ட மறுத்த மக்களை சுட்டு அடிபணிய வைத்தது . வந்த எதிரி அணி அந்த நிலையில் கண்ணயர்ந்திருந்த போராளிகளை கழுத்தை வெட்டி கொன்றுவிட்டு, எங்கள் நிலைகளை ஊடறுத்து ஒரு பெரிய படை நடவடிக்கையை செய்தான். வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதியும், சாலை பொக்கணை மாத்தளன் பகுதியும் துண்டாடப்பட்டது. அம்பலவன் பொக்கணை ஊடக இராணுவம் கடற்கரை வரை சென்று மக்களை துண்டாடியது. தொடர்பு அறுபட்ட நிலையிலும் போராளிகள் தீரமாக போராடினார்கள். இராணுவம் இடைவிடாத செல் மழை பொழிந்தது. ஒரு கோர தாண்டவமாடியது. இராணுவம் வந்துவிட்டதை உணர்த்த மக்கள் புலிகளின் பகுதிக்கு ஓட முற்படுவதை தடுக்க இரசாயன ஆயுதங்கள், கொத்து குண்டுகள் கொண்டு மக்களை கொன்று குவித்தது ராணுவம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உயிரை விடிருந்தார்கள். தெருவெங்கும் பிணக்கோலங்கள். உடம்பில் பட்ட இரசாயன (பொஸ்பரஸ்) குண்டின் எரிவு தாங்காமல் கடலுக்கு ஓடி வந்து பாய்ந்தார்கள். முகங்கள் எரிந்த நிலையில் வழி தெரியாமல் பிஞ்சு குழந்தைகள், கடற்கரை மண்ணில் முகம் புதைச்சு தேய்த்தார்கள். எங்கும் மரண ஓலமும், புகை மூட்டங்களும், காணமல் போன தங்கள் உறவுகளின் பெயரை கூவி கத்தியபடி பித்து பிடித்தது போல மக்கள், அங்கும் இங்கும் அலைந்து ஓடினார்கள். நாங்களும் எங்கள் நிலையும் பிரதான எங்கள் தளத்திலிருந்து துண்டாடப்பட்டிருந்தது. தரைவழி தொடர்பறுந்த நிலையில் நாங்கள் மாத்தளன் துண்டுக்குள் மாட்டுபட்டிருந்தோம். எங்களுக்கான கட்டளைகள் தொடர்ந்து கிடைத்து கொண்டிருந்தது. தப்பிபோக வழி இல்லாமல் ராணுவத்திடம் சரணடையும் பொதுமக்களை தடுத்து நிறுத்தி நிலைமை சொல்லி, கடல் வழியாக அவர்களை முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுப்புமாறு பணிக்கபடிருந்தோம். சாரை சாரையாக ராணுவத்திடம் சென்று கொண்டிருந்த மக்களிடம் ஒரு சொற்ப போராளிகளுடன் நானும் கெஞ்சி கொண்டிருந்தேன். "அண்ணே நில்லுங்கோ போகாதேங்கோ.." "அக்கா.. அக்கா.. தயவு செய்து நில்லுங்கோ ஆமியிடம் போகாதேங்கோ..." "பொறுமையா இருங்கள்..இன்னும் கொஞ்ச நாளில் எங்களுக்கு விடிவு கிடைச்சிடும்.." என்று ஆண் பெண் போராளிகள் பேதமின்றி மக்களின் கால்களை பிடித்து கெஞ்சி கொண்டிருந்தார்கள். அனைவரும் முடிவு செய்து கைகோர்த்து மக்களை மறித்தோம். எங்களை தள்ளி விழுத்தி எங்களுக்கு மேலால் மக்கள் ஏறி சென்றார்கள். நான் ஒரு ஐயாவை மறித்தேன். இரண்டு குழந்தைகளை தூக்கி கொண்டு வந்திருந்தார். பசியால் மெலிந்து எலும்புகள் தெரிந்த இரண்டு குழந்தைகள்.. தலை எல்லாம் நரைத்து எலும்பு கூடாக அந்த ஐயா.. "ஐயா தயவு செய்து போகாதீங்கள்.." "நாங்கள் எல்லாம் ஒற்றுமையாக புலிகளின் பக்கம் நின்றால் தான் உலகம் எங்களுக்கு ஒரு தீர்வை தரும்" "தம்பி என்னடா விசர் கதை கதைக்கிறாய்..இன்னும் இரண்டு நாள் இங்கே இருந்தால் நாங்கள் சாப்பாடு இல்லாமலே செத்து போயிடுவம், அதுக்கு பிறகு உங்கட தீர்வை கொண்டே என்ன செய்ய போறீங்கள்" "அப்படி இல்லை ஐயா, உங்களுக்காக தானே நாங்கள் வீட்டை எல்லாம் விட்டிட்டு போராட வந்தனாங்கள், நீங்கள் போய்விட்டால் இவ்வளவும் தான் மக்கள் என்று, எங்களோட இருக்கிற மக்கள் எல்லாரையும் புலி என்று அழிச்சிடுவான், இது நீங்கள் மிச்ச மக்களுக்கு செய்கிற துரோகம் இல்லையா" "தம்பி எனக்கு துரோகமா இல்லையா என்று வாதிட கூட தெம்பு இல்லை. இந்த பிள்ளைகளின்ட அம்மா, அப்பா எல்லாரும் செத்து போட்டினம், என்ர மனுசி கூட நேற்று தான் செல்லடியிலே செத்தவ..செல்லுக்கு கூட தாக்கு பிடிக்கலாம்.. சாப்பிடாமல் பசிக்கு தாக்குபிடிக்க முடியலை தம்பி" "தம்பி எனக்கு நல்லா தெரியும்.நீங்கள் எங்களுக்காக தான் போராடுறீங்கள். சிங்களவன் கெட்டவன் என்றும் தெரியும். ஆனால் இப்போ பசிக்கு, உயிரை காப்பாத்த வேற வழி தெரியலை தம்பி." "தம்பி எனக்கும் தமிழீழம் வேண்டும். நீங்கள் போராடி வெல்ல வேண்டும். நான் கடவுளை ஒவ்வொருநாளும் கும்பிடுறேன். நீங்கள் நாளைக்கு ஆமிக்கு ஓடி எங்கள் வீட்டுக்கு வந்தால் ஒளிச்சு வைச்சு சாப்பாடு குடுக்கிறேன். எனக்கு இந்த மண் மீது இப்பவும் பற்று இருக்கு.. என்னை போக விடு தம்பி. மூன்று உயிரை காப்பாத்தின புண்ணியமாவது உனக்கு கிடைக்கும்" என்று என் காலில் விழுந்து அழுதார். சொல்லுங்கள் உறவுகளே..இராணுவத்திடம் ஓடிய மக்கள் எல்லாரும் எங்களை வெறுத்த மக்களா..? எங்களை வேண்டாம் என்று ஓடிய மக்களா..?? எங்களை உயிராய் நேசிச்ச மக்கள் தான்..பசியாலும் பட்டினியாலும் சிங்கள் கொலைவெறி அரக்கனின் கோர தாண்டவத்தாலும் உயிரை காப்பாற்ற தான் எதிரியிடம் ஓடுகிறார்கள் என்று புரிந்துகொண்டேன். அவர்கள் எதிரியிடம் விரும்பி ஓடனும் என்றால் மன்னாரில் சண்டை தொடங்கும்போதே ஓடி இருப்பார்களே. இவ்வளவு காலம் தங்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு எங்களுடனே வரவேண்டிய தேவை என்ன..?? "ஐயா ..எழும்புங்கோ ..நீங்க போயிற்று வாங்கோ..நாங்கள் நிச்சயம் வெல்லுவோம் அப்போ திரும்பி வாங்கோ .." அவர் கண்ணில் மட்டுமல்ல என் கண்ணிலிருந்தும் ஒரு துளி கண்ணீர் அந்த மண்ணை நனைத்தது.. (தொடரும்) பாகம் பதினைந்து இங்கே அழுத்துங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.