பாகம் இருபத்திரண்டு
அந்த நாள் ஏன் விடிந்தது என்று இருந்தது ராணியம்மாவுக்கு...
அதிகாலையிலேயே யுத்த தாங்கிகளின் ஓசையும் அந்த இடமெல்லாம் சுடுகாடாக்கும் வண்ணம் விழுந்த எறிகணைகளும் தான் ராணியம்மாவை துயில் எழுப்பின.
ஐயோ ..ஆமி சுட்டு கொண்டு வாறான்..பதுங்கு குழிகளுக்குள் கைக்குண்டுகள் வீசி கொண்டு வாறான் என்ற செய்தி காற்றுடன் மக்களோடு கலந்தது..
மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நின்றார்கள்...
ஆமி வரும் வரை ..பதுங்கு குழிக்குள் இருப்பம் என்ற கனவும் மண்ணாகி போனது அவர்களுக்கு...
உண்டியல் சந்தியை அண்மித்த வடக்கு பக்கத்தில் இன்னும் புலிகள் தீரமுடன் போரிடும் சத்தம் கேட்டு கொண்டிருந்தது...
கடற்கரை பக்கமாக வடக்கு ஆமியும் தெற்கு ஆமியும் இணைந்து மேற்கு பக்கமாக முன்னேறி வருவதையும் தடுத்தி நிறுத்தி புலிகள் போரிட்டு கொண்டிருந்தார்கள்..
இதுக்கெல்லாம் எவ்வளவு ஆன்ம பலம் வேண்டும்..
நான்கு பக்கமும் ராணுவத்தால் சூழப்பட்ட நிலையிலும்..
ஒரு இஞ்சி இடம் விடாமல் கொத்து குண்டுகளும் பொஸ்பரஸ் குண்டுகளும் எறிகணைகளும் ராணுவம் மிச்சம் விடாமல் தாக்கி கொண்டிருந்த நிலையிலும் ...
கைகளில் இருக்கும் துப்பாக்கியையும் ஒரு கொஞ்ச ரவைகளையும் வைத்து கொண்டு இரண்டு சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் சாகத்தான் போகிறோம் என்று தெரிந்து கொண்டு ..
மக்களையும் தலைவரையும் ராணுவம் அணுக விடாமல் சண்டை போடுவது என்பது சாதாரண காரியமா உறவுகளே..
எரிந்து கொண்டிருக்கும் ஆயுத லொறிகளுக்கு மத்தியிலும், பிணங்களுக்கு மத்தியிலும் , தலைவரை காப்பாற்றி விட்டால் போதும் நிச்சயமாக எங்களுக்கு ஈழம் கிடைத்து விடும் என்ற மன நிலை தான் அங்கெ இருந்த பெரும்பாலான போராளிகளுக்கு..
ராணுவம் வட்டுவாகலில் இருந்து பாரிய படை நகர்வை தொடங்கி இருந்தது. அதே வேளை கடற்கரை பக்கம் இருந்தும் நந்தி கடல் நோக்கி ஒரு நகர்வை தொடங்கி இருந்தது..
மக்கள் கூட்டம் கூட்டமாக முன்னேறி வரும் ராணுவத்தை நோக்கி நகர தொடங்கினார்கள்.
வீதியோரத்தில் இருந்த காயமடைந்த போராளிகளை ராணுவம் சுட்டு கொண்டு வருகிறது என்று கேள்வி பட்ட ஏனைய போராளிகள் மக்களை பார்த்து கெஞ்ச தொடங்கினார்கள்..
குறிப்பாக காயமடைந்த பெண் போராளிகள் ..எங்களை உங்களுடன் தூக்கி செல்லுங்கள் இல்லை என்றால் இங்கேயே கொன்று விட்டு போங்கள் என்று மக்களிடம் இறைஞ்சினார்கள்..
சிலர் சில போராளிகளை காவி சென்றார்கள்.. பெரும்பாலானவர்கள் இவர்களை பார்த்தும் பாராமலும் போய் கொண்டிருந்தார்கள்..
மக்களுக்காக தங்கள் அவையவங்களை இழந்து, மக்களின் காலை பிடித்து கெஞ்சும் அந்த பெண் போராளிகளின் நிலை உலகில் எந்த விடுதலை போராளிகளுக்கும் வர கூடாது..
எல்லாரையும் பார்த்து கெஞ்சினார்கள்...
கடுமையாக காயபட்ட போராளிகளுக்கு சயனைட் கொடுப்பதில்லை. வலி தாங்காமல் கடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில்.. அத்துடன் செஞ்சிலுவை சங்கம் பொறுப்பேற்கும் போது சொன்ன நிபந்தனைகளில் காயமடைந்த போராளிகள் எந்த விதமான இராணுவ அடையாளங்களையும் வைத்திருக்க கூடாது என்பதும் அடங்கி இருந்தது.
சாக கூட வழியில்லாமல் அந்த பெண் போராளிகள் மக்களை பார்த்து கெஞ்சினதை பார்த்த எவனுமே சாவின் வலியை ஆயிரம் தடவை உணர்ந்திருப்பான்.
நேற்று சென்ற மக்கள் கூட்டத்துடன் கலந்து சென்ற போராளிகள் கழட்டி வீசி விட்டு சென்ற சயனைட் குப்பிகளும் கழுத்து தகடுகளும் அந்த வீதி எங்கும் கிடந்தன...
அம்மா ...அக்கா ...அண்ணா ....தம்பி ..அந்த குப்பியையாவது பொறுக்கி தந்துவிட்டு போங்கள் ..கெஞ்சினார்கள் உங்களுக்காக போராடிய அந்த வீர பெண் புலிகள்..
சொல்லுங்கள் உறவுகளே...
உங்கள் மனசை தொட்டு சொல்லுங்கள் ..
உங்கள் ஆன்மாவை உலுக்கவில்லையா ...
தங்கள் குடும்ப உறவுகளை விலகி உங்களுக்காக போராடி, தங்கள் அவையவங்களை உங்களுக்காக கொடுத்து விட்டு இன்று எதிரியிடம் கையகலாமல் கொல்லபடுவதை தடுக்க உங்களால் முடியவில்லை என்று நினைக்கும் போது உங்களால் எப்படி இயல்பாக இருக்க முடிகிறது ...
சாவோம் என்று தெரிந்து தான் போராட்டத்திற்கு வந்தார்கள்..
அவர்கள் இன்று சாவுக்காக பயப்படவில்லை ..எதிரியின் காம பசிக்கு இரையாகாமல் மானத்தோடு சாகத்தான் அவர்கள் கெஞ்சினார்கள்..
ஒரு சின்ன பையன் தன்னால் ஆனமட்டும் குப்பிகளை பொறுக்கி ஒவ்வொருவருக்கும் கொடுத்துவிட்டு போனான்..
அந்த பையனின் முகம் வாழ் நாளுக்கும் மறக்க முடியாது..
அவன் அந்த பெண் போராளிகளுக்கு ஆற்றிய உதவி ..ஆயிரம் விடுதலை போராட்டத்தில் பங்கு கொண்டமைக்கு சமன்.
அந்த சிறுவன் அந்த பெண்புலிகளின் மானத்தை மட்டுமல்ல உங்களின் எங்களின்..ஏன் இந்த உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களின் மானத்தை காத்தவன்...
எங்கிருந்தோ வந்த ஒரு எறிகணை ராணியம்மாவின் கணவனின் காலை பதம் பார்த்தது...
ஒரு சீலையை எடுத்து வழியும் குருதியை சுத்தி கட்டினார்.
அம்மா ..இனி இங்கே இருந்து அண்ணாவை தேடினால் ..அப்பாவையும் இழக்க வேண்டி வரும்..என்று நா தழுவி தழுக்க சுபா கூறினாள்..
இன்னும் கொஞ்ச நேரம் ...என்று ராணியம்மா இழுக்க ..இல்லை அம்மா ..அப்பாவுக்கு இரத்தம் ஓடுது ..வைச்சிருந்தால் இங்கேயே இழக்க வேண்டி வரும் என்று குண்டை தூக்கி போட்டாள் மற்றவள் மதி ..
என்ன செய்வது என்றே புரியவில்லை ராணியம்மாவுக்கு ...மகனும் மண்ணுமா இல்லை கணவனும் மற்றைய பிள்ளைகளுமா ..
சரி ஆமியிடம் போவோம் .. அரை மனசோடு சொன்னாள் ராணியம்மா ..
ராணுவம் முன்னேறும் திசை நோக்கி தந்தையை காவியபடி நடந்தார்கள் தாயும் பிள்ளைகளும் ..
அந்த வேளையில் ..
எங்கள் வீர குல பெண்களின் உயிரை விட மானமே பெரிது என்று வாழ் நாள் முழுவதும் நினைக்கும் ஒரு சம்பவம் நடந்தது ..
ஈர குலையே கருகியது..
குப்பி கிடைக்காத பெண்புலிகள் சிலர் ..எங்கள் தமிழ் மானத்தை காப்பாற்ற ..எங்கள் புலிகளின் கொள்கைக்காக ..அத்தனை மக்கள் கண் முன்னாலேயே ..எரிந்து கொண்டிருந்த ஒரு வெடி குண்டு வாகனத்தினுள் ஒன்றன் பின் ஒன்றாக பாய்ந்தார்கள் ..
கருகி மடிந்தார்கள் ..
என் இனிய பெண் உறவுகளே ... நீங்கள் இவர்கள் பிறந்த இனத்தில் தான் பிறந்தீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள்..
மானத்துக்காக ..கொள்கைக்காக உயிரையும் கொடுக்கும் பெண்கள் எங்கள் சகோதரங்கள் என்று வாழ் நாள் முழுவதும் மனசிலே நிறுத்துங்கள்..
எதுக்காகவும் மானத்தையும் கொள்கையையும் விட்டு கொடுக்காதீர்கள் ..
இது தான் அந்த வீர பெண்களுக்கு நீங்கள் செய்யும் இறுதி மரியாதை...
இந்த காட்சியை நேரில் பார்த்த ராணியம்மாவுக்கு இதயமே உறைந்தது ..கண்ணீர் வரவில்லை ..மனசு மட்டுமல்ல உடம்பே கல்லானது..
சாலையோரத்திலே வாயிலே குப்பியுடன் மேலும் பல பெண் போராளிகளின் உயிரற்ற வெற்று உடல்கள்..
மக்களுக்காகவும் மானத்துக்காவும் மரணித்த அந்த வேங்கைகளின் கண்கள் இராணுவத்திடம் போய் கொண்டிருந்த மக்களை வெறித்து பார்த்தபடி இருந்தன..
இந்த நாள் இன்று விடிந்திருக்க கூடாதோ ..??
(தொடரும்)