அக்காவின் அக்கறை
அன்பாய் என்னை அருகிலிருத்தி
வலிக்காமல் தலைவாரி
வகிடெடுத்த பின்னாலே
சித்திரமாய் திலகமிட்டுடுவாள்
தந்தையே தடியெடுத்திடினும்
தானோடி வந்து தாவியெடுத்தென்னை
தன்னோடணைத்து தான் அடிவாங்கி
என்துயர் போக்கிடுவாள்
முழுபாவாடையை முன் இடுப்பில் சொருகி
எட்டுக்கால் கோட்டில் எம்பி எம்பி ஆடுகையில்
பின் எல்லோரையும் தள்ளி விட்டு
எஞ்ஞான்றும் அவளே ஜெயித்திடுவாள்
கபடி விளையாடுகையில்
கிளிபோலப் பறந்து பறந்து
காலாலே கலங்கடித்து
காளையரையும் விரட்டிடுவாள்
எதிர் வீட்டு முகுந்தனிடம் மட்டும்
எப்போதும் சண்டையும் சச்சரவும்
கேலிசெய்து கொண்டு அவன் ஓட ஓட
கோலிகுண்டால் எறிந்து கொண்டு பின்னாலே ஓடுவாள்
முற்றத்து மாமரத்தில் கொக்கத்டியெடுத்து
முற்றிய மாங்காய்களை நான் பறிக்கையில்
முன்னால் வந்த அக்காளும் தடியெடுத்து
தனக்கும் ரெண்டு பிஞ்சு பறித்துக்கொண்டாள்
அக்காளும் முன்போல் இல்லை
குறும்புத்தனமும் குறைஞ்சு போச்சு
தடியெடுத்த தந்தையும் "யாரடி அவன்" என்று
தளராமல் அடிக்கின்றார் அக்காளை
அன்று என்னைப் பொத்திக் காத்தவளை
அருகில் நெருங்கவும் என்னால் முடியவில்லை
குறுக்கேவந்த அம்மாவுக்கும் குறைவின்றி அடிவிழுது
வாடிய மலர்க்குவியலாய் மண்ணில் புரளும் அக்காள்
படலையை தள்ளியே பதற்றமாய் வந்தாள் மாமி
தந்தையிடம் தடியைப் பிடுங்கி எறிந்தாள்
உன்ர பிள்ளையை நீ அடி அல்லது கொல் -ஆனால்
என்ர வாரிசை வம்சத்தை அழிக்க உனக்கேது உரிமை
விக்கித்து நின்ற அப்பாவை விலக்கிவிட்டு -அக்காளை
அணைத்தெடுக்கையில் அருகே வருகின்றான் முகுந்தனும்
இரு இறக்கைக்குள் குஞ்சுபோல் கூடவே அக்காள் செல்ல
அம்மாவின் முகத்தில் நிம்மதி, அண்ணாந்து ஆகாசம் பார்க்கிறாள்......!
ஆக்கம் சுவி ......!
யாழ் அகவை 26 க்காக ........!