Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜன்னல்களைத் திறந்து வைக்காதீர்கள் : கொள்ளையர்கள் குறித்துப் பொதுமக்களுக்குப் பொலிஸார் அவசர எச்சரிக்கை! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 02:32 PM (இணையத்தள செய்திப் பிரிவு) நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையால் இரவு நேரங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைத்து உறங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான செயற்பாடுகள் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வெப்பத்திலிருந்து தப்பிக்கக் காற்றோட்டத்திற்காக ஜன்னல்களைத் திறந்து வைப்பது இயல்பானதே. ஆனால், அவ்வாறு செய்யும் போது முறையான இரும்பு கிரில்கள் பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். உறங்கச் செல்வதற்கு முன்னர் அனைத்துக் கதவுகளும், வெளிப்பக்க வாயில்களும் சரியாகப் பூட்டப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும். வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதிய வெளிச்சத்தைப் பேணுவது ஊடுருவல்காரர்களைத் தடுக்க உதவும். உங்கள் வீட்டின் அருகாமையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடும் நபர்கள் அல்லது வாகனங்கள் குறித்து உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளீர்கள். https://www.virakesari.lk/article/242227
  2. "இரத்தக்கறை படிந்த கைகளுடன் செய்யும் பிரார்த்தனையை கடவுள் கேட்கமாட்டார்": போர் தொடுக்கும் தலைவர்களுக்கு பாப்பரசர் லியோ கடும் எச்சரிக்கை! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 05:09 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மீதான போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில், வத்திக்கான் பாப்பரசர் லியோ உலகத் தலைவர்களை நோக்கி மிகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். போரை நியாயப்படுத்த எவரும் இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முடியாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான விசுவாசிகள் திரண்டிருந்த புனித பேதுரு சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) உரையாற்றிய பாப்பரசர், "எமது கடவுளான இயேசு அமைதியின் அரசர். அவர் போரை வெறுக்கிறார். போரை நியாயப்படுத்த எவரும் அவரைப் பயன்படுத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். எந்தவொரு தலைவரின் பெயரையும் அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஈரானில் தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தலைவர்களையே அவர் சூசகமாகச் சாடியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். திருவிவிலியத்தின் வாசகங்களை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், "போர் புரியும் தலைவர்கள் எத்தனை பிரார்த்தனைகளைச் செய்தாலும் கடவுள் அவற்றைச் செவிமடுக்க மாட்டார். ஏனெனில் உங்களது கைகள் இரத்தத்தால் நிறைந்துள்ளன," எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) உள்ளிட்ட அதிகாரிகள், ஈரானுக்கு எதிரான போரை ஒரு 'கிறிஸ்தவ தேசத்தின் புனிதப் போர்' எனச் சித்தரித்து வருவதற்கு பாப்பரசர் லியோ மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். இயேசு தன்னை கைது செய்ய வந்தவர்கள் மீது வாள் வீசிய சீடரைத் தடுத்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பாப்பரசர், வன்முறை எப்போதும் கடவுளால் நிராகரிக்கப்படும் ஒன்றே என வலியுறுத்தியுள்ளார். அமெரிக்காவில் பிறந்த முதல் பாப்பரசர் என்ற பெருமைக்குரிய லியோ, தனது சொந்த நாட்டின் போர் நடவடிக்கைகளை இவ்வாறு பகிரங்கமாக விமர்சித்து வருவது சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பொதுமக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/242245
  3. நிலத்தடியில் 6,300 டன் தங்கத்தை சேமித்து வைத்துள்ள அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகள் கவலை கொள்வது ஏன்? பட மூலாதாரம்,Photos: New York Fed / Editing: Caroline Souza கட்டுரை தகவல் கில்லெர்மோ டி. ஓல்மோ பிபிசி முண்டோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் நியூயார்க்கில் உள்ள லிபர்ட்டி தெருவில், தரைக்குக் கீழே 25 மீட்டர் ஆழத்தில் ஃபெடரல் ரிசர்வ் தனது பிரதான கட்டடத்தின் அடித்தளத்தில் பெருமளவு தங்கத்தைப் பாதுகாத்து வருகிறது. இந்தத் தங்கம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் பல மத்திய வங்கிகள், அரசுகள் மற்றும் நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அங்கு அரை மில்லியனுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் சேமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலத்தடிப் பாதுகாப்புப் பெட்டகம், மிகவும் வலிமையான 90 டன் எடையுள்ள எஃகு கதவால் பாதுகாக்கப்படுகிறது. இந்தக் கதவு ஒருமுறை மூடப்பட்டால், அடுத்த நாள் வரை அதை மீண்டும் திறக்க முடியாது. இந்த இடம் ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகம் (Fed's Gold Vault) என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது உலகின் மிகப்பெரிய தங்கச் சேமிப்புக் கிடங்காக அறியப்படுகிறது. இது சுமார் 6,300 டன் தங்கத்தை வைத்துள்ளது. இன்றைய விலையில், இதன் மதிப்பு ஒரு டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கும். இது அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4% ஆகும். இந்தப் பாதுகாப்புப் பெட்டகம் உலகளாவிய நிதி அமைப்புக்கு மிகவும் முக்கியமானது. தங்கம் மிகவும் பாதுகாப்பான சொத்தாகக் கருதப்படுவதால், பல நாடுகள் தங்கள் தங்கத்தை இங்கு சேமித்து வைக்கின்றன. நாடுகள் தங்களது நாணயத்தை ஆதரிக்கவும், நிதி நெருக்கடிகளின்போது ஏற்படும் சிக்கல்களைக் கையாளவும் இதைப் பயன்படுத்துகின்றன. நிதி நெருக்கடி, அரசியல் பதற்றங்கள், பணவீக்கத்தால் பணத்தின் மதிப்பு குறைதல் ஆகிய காலங்களில், தங்கம் எப்போதுமே பணத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு "பாதுகாப்பான இடமாக" பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள், குறிப்பாக ஐரோப்பாவில் உள்ளவை, தங்களது கையிருப்பு நிதியில் பெரும் பகுதியைத் தங்கமாக வைத்திருக்கிறார்கள். கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தின் சர்வதேச பண அமைப்பு நிபுணரான பேரி ஐகென்கிரீன், பிபிசி முண்டோவிடம் பேசியபோது, "இது அவர்களின் மிக முக்கியமான சொத்துகளில் ஒன்று. ஏனெனில், பாதகமான புவிசார் அரசியல் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இறுதிப் புகலிடக் கடன் வழங்குநராகச் செயல்படவும், அந்நிய செலாவணி சந்தையில் தலையிடவும் இது அவர்களுக்கு உதவுகிறது," என்று கூறினார். பல ஆண்டுகளாக, அமெரிக்காவும் அதன் ஃபெடரல் ரிசர்வும் தங்கத்தைச் சேமித்து வைப்பதற்கு மிகவும் பாதுகாப்பான, நம்பகமான இடங்களாகக் கருதப்பட்டன. பல ஐரோப்பிய நாடுகள், குறிப்பாக சோவியத் யூனியனால் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்த காலகட்டத்தில், தங்கத்தின் பெரும் பகுதியை அமெரிக்காவில் வைத்திருந்தன. ஆனால், இப்போது டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சில ஐரோப்பிய தலைவர்களும் நிபுணர்களும் தங்களது தங்கத்தைத் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பக் கொண்டு வருவது பற்றிச் சிந்தித்து வருகின்றனர். சர்வதேச ஒப்பந்தங்களை முழுமையாகப் பின்பற்றாதது, வர்த்தக வரிகள், கிரீன்லாந்து மீதான டென்மார்க்கின் கட்டுப்பாடு, சமீபத்தில் இரானுடனான போர் போன்ற விவகாரங்களில் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பது போன்ற டிரம்பின் நடவடிக்கைகளால் அவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னைகள், அமெரிக்காவில் சேமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தங்கம் முழுமையாகப் பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்த கவலையை உருவாக்கியுள்ளன. பட மூலாதாரம்,Harry Benson / Getty படக்குறிப்பு,கடந்த 1950கள் முதல் சோவியத்தின் அச்சுறுத்தலுக்கு பயந்து ஐரோப்பிய நாடுகள் தங்கள் தங்கத்தை அமெரிக்காவில் குவித்து வைத்தன. ஐரோப்பிய தங்கம் அமெரிக்காவுக்கு வந்தது எப்படி? சாத்தியமான மேற்கத்திய தடைகளில் இருந்து தங்கத்தைப் பாதுகாக்க, ரஷ்யா தனது தங்கத்தைத் தனது நாட்டிலேயே வைத்திருப்பதைப் போலன்றி, பல ஐரோப்பிய நாடுகள் இன்றும் தங்கள் தங்கத்தைப் பிற நாடுகளில், குறிப்பாக நியூயார்க்கில் உள்ள நியூயார்க் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்திருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகள் 1950களில் இருந்து தங்களது தங்கத்தை அங்கு சேமிக்கத் தொடங்கின. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பல ஐரோப்பிய பொருளாதாரங்கள் மெதுவாக மீண்டு வந்து, அமெரிக்காவுக்கு அதிக பொருட்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கின. "ஜெர்மனி மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுத்துக் கொண்டிருந்த பிற ஐரோப்பிய நாடுகள், அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்து, தங்கம் மற்றும் டாலர்கள் கலந்த வடிவத்தில் பணத்தைப் பெற்று வந்தன," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார். மேலும், "தங்கத்தை ஒரு கப்பலிலோ அல்லது விமானத்திலோ ஏற்றி, அந்தப் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிக்கக் காப்பீடு எடுப்பதற்குப் பணம் செலவாகும். எனவே, அதை ஃபெடரல் ரிசர்வ் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமிப்பது ஒரு நல்ல யோசனை என்று அவர்கள் கருதினர். ஏனெனில், அது பாதுகாப்புக்காகக் கட்டணம் வசூலிப்பதில்லை," என்றும் அவர் விளக்கினார். கடந்த 1944இல், பிரெட்டன் வூட்ஸ் அமைப்பு என்றழைக்கப்படும் ஒரு சர்வதேச அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பில், அமெரிக்க டாலர் ஒரு நிலையான மதிப்பில் தங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதன் காரணமாக, தங்கமும் அமெரிக்க டாலரும் மிகவும் நம்பகமான, நிலையான பண வடிவங்களாக மாறின. போருக்குப் பிறகு பலவீனமடைந்திருந்த ஐரோப்பிய நாடுகள், தங்களது தங்கத்தை எந்த சேமிப்புக் கட்டணமும் செலுத்தாமல் ஃபெடரல் ரிசர்வில் பாதுகாத்து வைத்திருப்பதைப் பயனுள்ள விஷயமாகப் பார்த்தனர். பட மூலாதாரம்,New York Fed படக்குறிப்பு,பிற நாடுகள் அமெரிக்க ஃபெடரல் ரிசர்விடம் ஒப்படைக்கும் தங்கத்தை ஒரு பாதுகாப்புப் பெட்டகம் பாதுகாத்து வைக்கிறது. அந்தக் காலகட்டத்தில், இரும்புத் திரையின் மறுபுறத்தில் இருந்த சோவியத் யூனியன் குறித்த அச்சமும் இருந்தது. எனவே, தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது மிகவும் பாதுகாப்பானது எனக் கருதப்பட்டது. ஆனால் இப்போது சோவியத் யூனியன் இல்லை. மேலும் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதால், அமெரிக்காவுக்கும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நட்புறவு சில பதற்றங்களைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, உலகில் இரண்டாவது பெரிய தங்க இருப்பைக் கொண்டுள்ள ஜெர்மனியில் பல நிபுணர்கள் கவலை கொண்டுள்ளனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கம் இருப்பதால், ஏதேனும் தவறு நடந்தால் ஜெர்மனி அதிக ஆபத்தை எதிர்கொள்ளக்கூடும். முன்னர் பன்டெஸ்பேங்கில் (Bundesbank) தலைமை ஆய்வாளராகப் பணியாற்றிய பொருளாதார நிபுணர் இமானுவேல் மோன்ச், நியூயார்க்கில் வைத்துள்ள தங்கத்தை ஜெர்மனி திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று கூறினார். ஜெர்மன் ஊடகங்களின்படி, ஜெர்மனி அங்கு சுமார் 1,200 டன் தங்கத்தைச் சேமித்து வைத்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள். பட மூலாதாரம்,Chip Somodevilla / Getty படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெல் (வலது) மீது டிரம்ப் தொடுத்துள்ள தாக்குதல்கள், பிற நாடுகளின் தங்கத்தைப் பாதுகாக்கும் நிறுவனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. "தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இவ்வளவு தங்கத்தை அமெரிக்காவில் வைத்திருப்பது ஆபத்தானதாகத் தெரிகிறது. தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவது ஜெர்மனிக்கு அதிக மூலோபாய சுதந்திரத்தை அடைய உதவும்" என்று கூறுகிறார் மோன்ச். அதேபோல, ஜெர்மன் வரி செலுத்துவோர் சங்கத்தின் தலைவர் மைக்கேல் ஜாகர், "டிரம்ப் கணிக்க முடியாதவர் மற்றும் வருவாயை ஈட்டுவதற்காக எதையும் செய்யக்கூடியவர். அதனாலேயே நமது தங்கம் இனி ஃபெடரல் ரிசர்வின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பாதுகாப்பாக இருக்காது," என்று கூறினார். மேலும் அவர், "கிரீன்லாந்து மீதான ஆத்திரமூட்டல் தொடர்ந்தால் என்ன நடக்கும்? இது பன்டெஸ்பேங்க் தனது தங்கத்தை அணுக முடியாமல் போகக்கூடிய அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே அதன் கையிருப்பைத் திருப்பி அனுப்ப வேண்டியிருக்கும்," என்றும் அவர் கேட்டார். இந்தக் கவலைகள், அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் கட்சியான சி.டி.யு-வின் உறுப்பினர்கள் மற்றும் பிற அரசியல் குழுக்களாலும் எழுப்பப்படுகின்றன. இருப்பினும், பன்டெஸ்பேங்கின் தலைவர் ஜோக்கிம் நாகல், இந்த அச்சங்களைத் தணிக்க முயன்றுள்ளார். கடந்த அக்டோபரில் வாஷிங்டனில் நடந்த சர்வதேச நானய நிதியத்தின் கூட்டத்தில் அவர், "கவலைப்படத் தேவையில்லை" என்று கூறினார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... பிப்ரவரியில், அவர் மீண்டும் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, "இது என் தூக்கத்தைக் கெடுப்பதில்லை. அமெரிக்க மத்திய வங்கியில் உள்ள எங்கள் சகாக்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது" என்றார். ஆனால் அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் அல்லது டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஆகிய இரண்டுமே இந்த விவகாரம் குறித்து மற்றவர்களுக்குத் தெளிவாக உறுதியளிக்கவில்லை. பகுப்பாய்வாளர் பேரி ஐகென்கிரீன், "நான் எந்த உறுதியளிக்கும் வார்த்தைகளையும் கேட்கவில்லை. மேலும் இது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்றார். பிபிசி முண்டோ ஃபெடரல் ரிசர்வை தொடர்புகொள்ள முயன்றது. ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அமெரிக்காவுக்குள் ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பாவெலுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. வட்டி விகிதங்களைக் குறைக்க மறுத்ததால், டிரம்ப் பாவெலை பலமுறை விமர்சித்துள்ளார். நீதித் துறையும் பவலுக்கு எதிராக ஒரு குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஃபெடரல் ரிசர்வின் சுதந்திரத்தைக் குறைப்பதற்கும், அதை "அதிபரின் விருப்பங்களைப் பின்பற்றுமாறு" கட்டாயப்படுத்துவதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் "மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்களின்" ஒரு பகுதியே இந்த விசாரணை என்று பாவெல் கூறினார். பட மூலாதாரம்,New York Fed படக்குறிப்பு,ஃபெடரல் ரிசர்வின் தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சுமார் 6,000 டன் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. திடீரென வீழ்ந்த தங்கத்தின் மதிப்பு ஜெர்மனி மட்டுமே நியூயார்க்கில் தங்கத்தை வைத்திருக்கும் ஒரே ஐரோப்பிய நாடு இல்லை. இத்தாலி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் அங்கு அதிக அளவில் தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதாக அறியப்படுகிறது. சில நாடுகள் கடந்த காலங்களிலேயே தங்கள் தங்கத்தைத் தாய்நாட்டிற்குத் திரும்பக் கொண்டு வரத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, நெதர்லாந்து 2014இல் இதைச் செய்யத் தொடங்கியது. அது ஃபெடரல் ரிசர்வில் வைத்திருந்த தங்கத்தின் அளவை 51% என்பதில் இருந்து 31 சதவிகிதமாகக் குறைத்தது. ஏறக்குறைய அதேநேரத்தில், ஜெர்மனியும் தனது சில தங்கக் கட்டிகளைத் திரும்பக் கொண்டு வந்தது. ஆனால் அதன் பெரும்பாலான தங்கம் இன்னும் அமெரிக்காவிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ளது. "அது கிரேக்க கடன் நெருக்கடி, யூரோ நெருக்கடியின் காலம். மேலும் ஐரோப்பியர்கள் தங்கள் நாணயம் மற்றும் வங்கி வைப்புத் தொகைகள் உறுதியான ஒன்றால் ஆதரிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த விரும்பினர்," என்று பேரி ஐகென்கிரீன் விளக்குகிறார். இதற்கும் முன்னதாக, 1960களில், சார்லஸ் டி கோல் பிரான்சின் தங்கத்தை அமெரிக்காவில் இருந்து திரும்பக் கொண்டு வர முடிவு செய்தார். அமெரிக்க டாலர் திடீரென மதிப்பிழக்கக்கூடும் என்று அவர் அஞ்சியதாகப் பல வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்தக் காலகட்டத்தில் பிரெட்டன் வூட்ஸ் அமைப்பின்கீழ், டாலரின் மதிப்பு தங்கத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பிற்கால நிகழ்வுகள் அவரது கவலை சரியானது என்பதை நிரூபித்தன. 1971இல் டாலர்களை தங்கமாக மாற்றும் முறையை ரிச்சர்ட் நிக்சன் நிறுத்தினார். இந்த முடிவு, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலகளாவிய நிதி அமைப்பைப் பலவீனப்படுத்தியது. பிரான்ஸ் ஏற்கெனவே தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வந்திருந்ததால், அதுவொரு சிறந்த நிலையில் இருந்தது. தங்கள் தங்கத்தை நியூயார்க்கில் வைத்திருந்த பிற நாடுகள், டாலர் மதிப்பில் தங்களது தங்கத்தின் மதிப்பு திடீரென வீழ்ச்சியடைவதைக் கண்டன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப்பெரிய தங்க இருப்பைக் கொண்ட நாடாக ஜெர்மனி திகழ்கிறது. ஃபெடரல் ரிசர்வ் வசம் உள்ள தங்கத்தை மீண்டும் தனது நாட்டுக்கே கொண்டு வருவது குறித்த விவாதமும் எழுந்துள்ளது. தங்கத்தை இடம் மாற்றுவது செலவுமிக்க முயற்சி நியூயார்க்கில் உள்ள தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் இப்போது முன்பைவிடக் குறைவான தங்கமே உள்ளது. ஃபெடரல் ரிசர்வ் அமைப்பின்படி, 1973இல் 12,000 டன்களுக்கும் அதிகமாக இருந்த தங்கத்தின் அளவு, அன்று முதல் மெதுவாகக் குறைந்து வருகிறது. இருப்பினும், தங்கத்தை அங்கேயே வைத்திருப்பது நல்லது என சில நிபுணர்கள் நம்புகிறார்கள். ஜெர்மனியில் உள்ள ஐ.எஃப்.ஓ பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த கிளெமென்ஸ் ஃப்யூஸ்ட், தி கார்டியன் பத்திரிகையிடம் பேசுகையில், "தங்கத்தை மீண்டும் நாட்டிற்குக் கொண்டு வருவது, தற்போதைய சூழ்நிலையின் நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலாகும்" என்றும் எதிர்பாராத சிக்கல்களை அது உருவாக்கக்கூடும் எனவும் கூறினார். டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்திடம் இருந்து ஃபெடரல் ரிசர்வ் சுதந்திரமாகச் செயல்படுவதாகவும் சில நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, தங்கம் இன்னும் அங்கு பாதுகாப்பாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். இவ்வளவு பெரிய அளவிலான தங்கத்தை இடம் மாற்றுவது மிகவும் செலவுமிக்கது, கடினமானது மற்றும் ஆபத்தானது எனவும், அதற்கு வலுவான பாதுகாப்பும் கவனமான திட்டமிடலும் தேவை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இருப்பினும், ஐரோப்பிய தங்கத்தைப் பாதுகாக்க அமெரிக்காவை முழுமையாக நம்ப முடியுமா என்பது குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன. இது பல ஆண்டுகளாக இருந்து வரும் உலகளாவிய அமைப்பைப் பலவீனப்படுத்தக்கூடும். இதுகுறித்து விளக்கிய பேரி ஐகென்கிரீன், "தங்கத்தைத் திரும்பப் பெறுவதால் அமெரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க நிதிசார்ந்த பின்விளைவுகள் ஏற்படாது. இருந்தாலும், நேட்டோவின் பாதுகாப்புக் குடை அல்லது உலகளாவிய நாணயமாக டாலர் இருப்பது ஆகியவற்றைப் போலவே, நண்பர்களையும் வர்த்தகப் பங்காளிகளையும் உருவாக்கிக் கொள்வதற்கு ஈடாக தங்கம் ஓர் உலகளாவிய சொத்தாக உள்ளது. அதை அமெரிக்கா இலவசமாக வழங்கியுள்ளது," என்று கூறினார். படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் மேலும் பேசிய அவர், "அமெரிக்கா இலவசமாக சேவைகளை வழங்க வேண்டும் என்று இந்த அரசாங்கம் நம்பவில்லை. அதோடு அமெரிக்காவில் உள்ள தங்கள் வைப்புத் தொகைகளின் பாதுகாப்பு குறித்து நட்பு நாடுகளின் சந்தேகங்களைத் தூண்டும் எதுவும், நாட்டின் மீதான அவரகளின் நல்லெண்ணத்தை மேலும் சிதைக்கிறது. உதாரணமாக, மத்திய கிழக்கில் ஒரு போருக்கு அவர்களின் உதவி தேவைப்படும்போது இது அவசியமான ஒன்றாகும்," என்றும் தெரிவித்தார். இதுவரை டிரம்பின் இந்த இரண்டாவது பதவிக் காலத்தில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் தனது தங்கத்தைத் திரும்பக் கொண்டு வருவதாக அதிகாரபூர்வமாக முடிவு செய்யவில்லை. ஆனால் கிறிஸ்டின் லகார்டின் வார்த்தைகள் இன்னும் பல தலைவர்களின் மனதில் இருக்கலாம். அவர் கடந்த ஆண்டு ஓர் உரையில், "சர்வதேச நாணய நிதியத்தின் வரலாற்றில், அசைக்க முடியாததாகத் தோன்றிய அடித்தளங்கள் ஆட்டம் காணத் தொடங்கும் நேரங்கள் உண்டு" என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg05nn5pv8o
  4. ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 04:52 PM லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, உலக நாடுகளின் மனச்சாட்சியை உலுக்கும் ஒரு எச்சரிக்கை என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி தெரிவித்துள்ளார். லெபனானின் 'ஜெஸின்' நகரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பினால் நடத்தப்படும் 'அல் மனார்' தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் அலி ஷோயப், 'அல் மாயடீன்' ஊடகத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்பாத்திமா மற்றும் முகமது ஃபெடோனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர் இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள ஈரானிய வெளிவிவகார அமைச்சர், "இது தற்செயலான தாக்குதல் அல்ல, மாறாக உண்மையை உரக்கச் சொல்பவர்களின் குரல்களை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட படுகொலை எனச் சாடியுள்ளார். இதேவேளை, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் அமைந்துள்ள கத்தாரின் 'அல்-அரபி' செய்தி நிறுவனத்தின் அலுவலகம் இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் ஜன்னல்கள் மற்றும் தளபாடங்கள் முற்றாகச் சேதமடைந்ததால், அங்கிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த நேரலை ஒளிபரப்புகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. அலுவலகத்திற்கு வெளியேயிருந்த வாகனங்கள் மற்றும் வீதிகள் பாரிய அளவில் உருக்குலைந்துள்ளன. https://www.virakesari.lk/article/242244
  5. அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்! Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 12:12 PM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ட்ரம்ப் ட்ரம்ப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கொள்கைகள், அதிகரித்து வரும் விலைவாசி, ஈரானுக்கு எதிராக நடந்து வரும் போர் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சுமார் 70 இலட்சம் மக்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. "ட்ரம்ப் ஒரு சர்வாதிகாரியைப் போல எங்களை ஆள நினைக்கிறார். ஆனால் இது அமெரிக்கா, இங்கு அதிகாரம் மக்களுக்கே உரியது; மன்னர்களுக்கோ அல்லது அவர்களின் கோடீஸ்வர நண்பர்களுக்கோ அல்ல" எனப் போராட்ட அமைப்பாளர்கள் கோசமிட்டுள்ளனர். இந்தப் போராட்டங்களைக் கிண்டல் செய்துள்ள வெள்ளை மாளிகை ஊடகப் பேச்சாளர், இவை "ட்ரம்ப் மீதான மனநோய் சிகிச்சை அமர்வுகள்" எனச் சாடியுள்ளார். தேசிய நினைவிடங்கள் மற்றும் லிங்கன் நினைவிடம் அமைந்துள்ள பகுதிகள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிந்துள்ளன. டைம்ஸ் சதுக்கத்தில் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டதால், மன்ஹாட்டன் பகுதியின் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் குடிவரவு அதிகாரிகளால் கொல்லப்பட்ட அமெரிக்கப் பிரஜைகளான ரெனீ நிக்கோல் குட் மற்றும் அலெக்ஸ் பிரெட்டி ஆகியோரின் மரணத்திற்கு நீதி கோரி அங்குப் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். பிரபல பாடகர் புரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன் அங்குப் பாடல்களைப் பாடி போராட்டக்காரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். அமெரிக்காவில் மட்டுமன்றி, லண்டன், பாரிஸ் மற்றும் லிஸ்பன் போன்ற உலக நாடுகளின் தலைநகரங்களிலும் புலம்பெயர் அமெரிக்கர்கள் திரண்டு ட்ரம்ப்பிற்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர். அங்குப் ஜனாதிபதி ட்ரம்ப்பை "போர்க்குற்றவாளி" மற்றும் "பாசிசவாதி" எனப் போராட்டக்காரர்கள் விமர்சித்துள்ளனர். போராட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்று வந்தாலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் பல மாநிலங்களில் தேசிய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் எதிரிகளைத் தண்டிக்க முற்படுவதாகவும், இராணுவத்தை உள்நாட்டு நகரங்களில் நிலைநிறுத்துவதாகவும் எதிர்க்கட்சியினர் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/242214
  6. அமெரிக்க ஏகாதிபத்தியமும் சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் - புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி தெரிவிப்பு 29 Mar, 2026 | 01:06 PM (க.சிவலிங்கமூர்த்தி) மத்திய கிழக்கின் இறையாண்மை கொண்ட நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள ஆக்கிரமிப்புப் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், உலக மேலாதிக்கச் சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலும் தோற்கடிக்கப்பட வேண்டும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் விடுத்துள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது மத்திய கிழக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் நாட்டை ஆக்கிரமித்து, அங்கு தமக்குச் சாதகமான ஒரு கைப்பொம்மை ஆட்சியை நிறுவுவதே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் நோக்கமாகும். கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஈரானுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட இந்தக் கொடிய போர், தற்போது ஒரு மாதத்தை எட்டியுள்ளது. தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைக்க அமெரிக்காவும், தனது விரிவாக்கக் கனவை நனவாக்க இஸ்ரேலும் இணைந்து இந்த அநீதியான போரை முன்னெடுத்து வருகின்றன. அமெரிக்கா உலகின் முதல் நிலை வல்லரசு என்றும், இஸ்ரேல் அசைக்க முடியாத பலம் கொண்ட நாடு என்றும் கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள், ஈரானிய மக்களின் வீரமிக்க எதிர்ப்பினால் இன்று உடைந்து நொறுங்கி வருகின்றன. 'மக்களே உலக வரலாற்றின் உந்துசக்தி' என்பதை ஈரானிய மக்கள் இன்று உலகுக்கு நிரூ பித்துக் காட்டியுள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்பில் உறுதியாக நிற்கும் ஈரானிய மக்களுக்கும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கும் எமது கட்சியும் இலங்கை மக்களும் தமது முழுமையான ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்பது போர் மற்றும் இரத்தத்தால் ஆனது என்பதை நடப்பு நிகழ்வுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போரின் விளைவாக இலங்கை உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு, அநியாயமான விலை ஏற்றம் மற்றும் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது. பசி, பட்டினி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை உலக மக்களுக்குப் பரிசாக அளிக்கும் முதலாளித்துவ சக்திகள், மக்களின் வளங்களைச் சுரண்டி நவீன போராயுதங்களை உற்பத்தி செய்வதிலேயே குறியாக உள்ளனர். உலக மக்களின் பொது எதிரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும் அதன் கூட்டாளியான சியோனிச இஸ்ரேலையும் முறியடிப்பது இன்றைய காலத்தின் உடனடித் தேவையாகும். எனவே, ஏகாதிபத்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராட அனைத்து இடதுசாரி, முற்போக்கு மற்றும் ஜனநாயகச் சக்திகள் ஓரணியில் திரள வேண்டும் என எமது கட்சி கேட்டுக்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/242217
  7. மோடிக்கு நன்றி கூறிய அநுர Mar 29, 2026 - 03:41 PM எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இந்தியாவில் இருந்து எரிபொருள் கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எக்ஸ் கணக்கில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன். இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38,000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இதனை கிடைப்பதற்கு ஒருங்கிணைத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் நன்றிகள் என தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnblnbxc000n356p0byh5vr2
  8. ஹோர்முஸ் நீரிணை வழியாக 20 பாகிஸ்தான் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி! Mar 29, 2026 - 02:39 PM பாகிஸ்தான் கொடியுடன் கூடிய 20 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகப் பயணிப்பதற்கு ஈரான் இணக்கம் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த உடன்படிக்கையின் கீழ், தினசரி இரண்டு பாகிஸ்தான் கப்பல்கள் வீதம் இந்த கடல் வழிப்பாதையின் ஊடாகப் பயணிக்கும் என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். "இது ஈரானால் எடுக்கப்பட்ட மிகவும் சாதகமான மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஒரு நடவடிக்கையாகும், இது பாராட்டப்பட வேண்டும்... இது அமைதிக்கான ஒரு முன்னோடியாகும் மற்றும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த உதவும்" என இஷாக் தார் அங்கு குறிப்பிட்டுள்ளார். தற்போதைய பதற்றமான சூழ்நிலைகளைத் தணிப்பதற்கான ஒரு அர்த்தமுள்ள நடவடிக்கையாக இது அமைந்துள்ளதாகவும், அமைதிக்கான முயற்சிகளை வலுப்படுத்த இது வழிவகுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmnbik3dy000m356ph638jyp3
  9. மாகாணசபைத் தேர்தல் குறித்த பாராளுமன்ற விசேட குழுவில் சட்டமா அதிபர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னிலை 29 Mar, 2026 | 01:07 PM (இராஜதுரை ஹஷான்) மாகாணசபைத் தேர்தல் குறித்து ஆராய்ந்து விதப்புரைகளை முன்வைக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் முன்னிலையாகவுள்ளனர். கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும். பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செயற்குழுவில் முன்மொழிந்தனர். மாகாண சபைத் தேர்தல்களை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர் அமைச்சர் விஜித ஹேரத் தலைமையில் கடந்த 17 ஆம் திகதி முதல் தடவையாகக் கூடியது. மாகாணசபைத் தேர்தல்கள் சட்டம் திருத்தப்பட்டு தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 2017ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க சட்டத்தின் ஏற்படுகளுக்கு அமைய அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வட்டார எல்லைகளை தீர்மானிக்கும் நடைமுறை இதுவரையில் பூர்த்திசெய்யப்படாமையால் உருவாகியுள்ள சட்டரீதியான தடையின் காரணமாக மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவர் அமைச்சர் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நிறுவனங்கள் மாகாண சபைகள் மூலமே நிர்வகிக்கப்படுகின்றன என்று எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டினர். இதற்கமைய கடந்த 9 ஆண்டுகளாக மாகாண சபைகள் கூட்டப்படாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே மாகாண சபைத் தேர்தல்களை பழைய விகிதாசார முறைப்படி நடத்த வேண்டும் என்றும், பின்னர் தேர்தல் முறையைத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்தனர். மாகாணசபைத் தேர்தல்களில் பெண்களின் பிரதிநிதித்துவத்தையும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தையும் கட்டாயமாக்கும் ஒரு தேர்தல் முறையை உருவாக்குவத தொடர்பில் பரந்த, ஆழமான கலந்துரையாடல்களை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை குழுவின் தலைவர் வலியுறுத்தினார். அதன்படி, மாகாணசபைத் நடத்துவதற்கு தற்போதைய சட்ட நிலைமை குறித்த அடிப்படைப் புரிதலைப் பெறுவதன் முக்கியத்துவத்தை தலைவர் வலியுறுத்தியுள்ளதுடன், இது தொடர்பான சட்ட ரீதியான வாய்ப்புக்கள் குறித்த கருத்துக்களைப் பெறுவதற்காக சட்டமாஅதிபர் அலுவலகம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகளை அழைப்பதற்கும் குழுவின் தலைவர் முன்மொழிந்தார்.இதற்கமைய சட்டமா அதிபர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதிகாரிகள் எதிர்வரும் 7 ஆம் திகதி குழுவில் முன்னிலையாகவுள்ளனர். https://www.virakesari.lk/article/242218
  10. "நரகத்திற்கு வரவேற்கிறோம்" - அமெரிக்காவின் தரைவழித் தாக்குதல் ஊகங்களுக்கு இரான் கூறும் பதில் என்ன? பட மூலாதாரம்,American marin VANO SHLAMOV AFP via Getty Images படக்குறிப்பு,இரான் நாட்டில் தரைவழித் தாக்குதலைத் தொடங்க அமெரிக்கா தயாராகி வருவதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது (கோப்புப் படம்). 16 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இந்தியாவிலுள்ள இரான் தூதரகம், 'தெஹ்ரான் டைம்ஸ்' பத்திரிகையின் ஒரு சிறப்புப் பதிப்பின் பக்கத்தைப் பகிர்ந்து, 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்று எழுதியுள்ளது. தெஹ்ரான் டைம்ஸின் அந்தப் பக்கத்தின் தலைப்பே 'நரகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்' என்பதுதான். அதில், "இரான் மண்ணில் கால் வைக்கும் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிகளில் மட்டுமே திரும்புவார்கள்" என்றும் எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக 'வாஷிங்டன் போஸ்ட்' ஆங்கில இதழ் எழுதியிருந்தது. "பேச்சுவார்த்தை ஒருபுறம், தாக்குதல் சதி மறுபுறம்" பட மூலாதாரம்,Ghalibaf NurPhoto via Getty Images படக்குறிப்பு,இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த இரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப், இரான் "அவமானத்தை" ஏற்காது என்று கூறினார் (கோப்புப் படம்). இரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் விடுத்த செய்தியை இரான் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ உள்ளிட்ட பல இரான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. போர் தொடங்கி 30 நாட்கள் நிறைவடைந்ததையொட்டி விடுத்த இந்தச் செய்தியில் காலிபாஃப் கூறுகையில், "எதிரி பகிரங்கமாகப் பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளைத் தருகிறதி, ஆனால் திரைக்குப் பின்னால் தரைவழித் தாக்குதலுக்கான சதியைத் தீட்டுகிறது" என்றார். மேலும் அவர், அமெரிக்கா "போரின் மூலம் அடைய முடியாத 15 அம்சப் பட்டியலுடன் தனது விருப்பங்களை முன்வைக்கிறது" என்றும் கூறினார். " அவர்கள் மீது நெருப்பை மழை எனப் பொழிவதற்காக அமெரிக்க வீரர்கள் தரை இறங்குவதற்காக இரான் படைகள் காத்திருக்கின்றன, " என்றும் காலிபாஃப் கூறினார். இரான் சரணடைவது குறித்த கேள்விக்கு, அரபு மொழியில் பதிலளித்த காலிபாஃப், இரான் வழங்கும் செய்தி 'மிகவும் தெளிவானது' என்றும் அது 'அவமானத்தை' ஏற்காது என்றும் கூறினார். இதற்கிடையில், சில உறுதிப்படுத்தப்படாத செய்திகள், டிரம்ப் நிர்வாகம் காலிபாஃப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், வருங்காலத் தலைவராகவும் கருதுவதாகக் கூறுகின்றன. தரைவழித் தாக்குதலுக்குத் தயாரிப்பா? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளது. ஆங்கில நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, பென்டகன் இரான் மீது பல வாரங்களுக்கு தரைவழித் தாக்குதல் நடத்தத் தயாராகி வருகிறது. அப்பத்திரிகையின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தாக்குதல் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தால், போரின் ஒரு புதிய கட்டம் தொடங்கும். இது முதல் நான்கு வாரங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க வீரர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். அமெரிக்க சென்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமையன்று, 'யுஎஸ்எஸ் திரிப்போலி' போர்க்கப்பல் இப்பகுதிக்கு வந்து சேர்ந்ததாகத் தெரிவித்துள்ளது. சமூக வலைதளப் பதிவின்படி, யுஎஸ்எஸ் திரிப்போலி தலைமையிலான பிரிவில் 5,000 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்கள் உள்ளனர், அவர்கள் பல போர்க்கப்பல்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... தற்போதைய திட்டங்களின்படி, இத்தகைய தரைவழி நடவடிக்கைகள் முழு அளவிலான தாக்குதலாக இருக்காது, மாறாக சிறப்பு அதிரடிப் படைகள் மற்றும் வழக்கமான காலாட்படை வீரர்களின் கூட்டுத் தாக்குதல் நடவடிக்கைகளாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடலில் உள்ள கப்பல்களில் 4,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க கடற்படை வீரர்கள் இருப்பதாகவும், அவர்கள் வளைகுடா பகுதியை நோக்கி முன்னேறி வருவதாகவும் கருதப்படுகிறது. இது தவிர, 82-வது ஏர் போர்ன் டிவிஷனின் பாராட்ரூப்பர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் கூடுதல் வீரர்களை அனுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மத்தியில் எகிப்து, செளதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மத்திய கிழக்கின் நிலைமை குறித்து விவாதிக்க பாகிஸ்தானில் கூடியுள்ளனர். அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க பாகிஸ்தான் முன்வந்துள்ளது. இதுவரை அமெரிக்கா என்ன கூறியுள்ளது? பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே அமெரிக்கா தனது இலக்குகளை எட்ட முடியும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ வெள்ளிக்கிழமையன்று கூறினார். இந்த மாதத்தில் முன்னதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நான் எங்கும் படைகளை அனுப்பவில்லை" என்றார், ஆனால் உடனடியாக அவர், "ஒருவேளை நான் அனுப்பிக் கொண்டிருந்தால், நிச்சயமாக உங்களிடம் சொல்ல மாட்டேன்" என்றும் சேர்த்துக் கொண்டார். வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறுகையில், "எந்தவொரு தரைவழிப் படையும் இல்லாமலேயே" அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார். சமீபத்திய ராணுவ நகர்வுகள் டிரம்பிற்கு வாய்ப்புகளை வழங்குவதற்காகவே என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார். அவர் கூறுகையில், "சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகளை மாற்ற அதிபருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை வழங்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்" என்றார். யுஎஸ்எஸ் திரிபோலி போர்க்கப்பல் அந்தப் பகுதியை அடைந்துவிட்டதாக அமெரிக்க செண்ட்ரல் கமாண்ட் சனிக்கிழமை தெரிவித்தது. அமெரிக்கா மீதான அவநம்பிக்கை புதியதல்ல அமெரிக்கா மீது காலிபாஃப் அவநம்பிக்கை தெரிவிப்பது இது முதல் முறையல்ல. திரைக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பது குறித்த விரிவான தகவல்கள் பிபிசிக்குத் தெரியவில்லை என்றாலும், ஒரு விஷயம் தெளிவாக உள்ளது. 1979 புரட்சிக்குப் பிறகு, இரான் கொள்கைகள் பெருமளவிற்கு மேற்கத்திய அரசியல், கலாச்சார மற்றும் கருத்தியல் செல்வாக்கிற்கு எதிரானதாகவே இருந்து வருகின்றன. மேலும் அது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைத் தனது முக்கிய எதிரிகளாகப் பார்க்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய தற்போதைய போர், ஜெனிவாவில் அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தையின் மூன்றாவது சுற்று முடிந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடங்கியது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,முகமது பாகர் காலிபாஃப், இரான் நாடாளுமன்றத்தின் சபாநாயகர். கடந்த கோடைகாலத்திலும், அமெரிக்காவும் இரான் நாடும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தபோது இரான் மீதான தாக்குதல்கள் தொடங்கின. இதன் காரணமாக இரான் மற்றும் இஸ்ரேல் இடையே 12 நாட்கள் போர் நடந்தது, மேலும் அமெரிக்கா இரான் நாட்டின் மூன்று முக்கியமான அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. 2015 ஒப்பந்தத்திலிருந்து டிரம்ப் வெளியேறிய பிறகு, அமெரிக்காவை நம்ப முடியுமா இல்லையா என்ற அளவுகோலிலேயே இரான் அதிகாரிகள் எந்தவொரு ஒப்பந்தத்தையும் பார்க்கிறார்கள். இப்போது அவர்கள் முன்பை விட அதிக சந்தேகத்துடன் உள்ளனர். கத்தார் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடத்திய 10 ட்ரோன்களை செளதி அரேபியா தடுத்தது இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் செளதி அரேபியா கடந்த சில மணி நேரங்களில் 10 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்தது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் உள்ளிட்ட பிற வளைகுடா நாடுகளும் இரவு முழுவதும் தாக்குதல்கள் நடந்ததாகக் கூறியுள்ளன. கத்தாரின் அல் அரபி தொலைக்காட்சி நிறுவனம், தெஹ்ரானிலுள்ள அதன் அலுவலகம் ஏவுகணைத் தாக்குதலால் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த நிறுவனம் எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது, அதில் உடைந்த கண்ணாடித் துண்டுகள் மற்றும் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்த ஏவுகணையை யார் ஏவினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. துபையிலுள்ள எமது செய்தியாளரின் கூற்றுப்படி, கடந்த 24 மணிநேரத்தில் இப்பகுதியில் பலமுறை தாக்குதல்கள் நடந்துள்ளன. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cddqy1l8238o
  11. எரிபொருள் செலவைக் குறைக்க அவுஸ்திரேலியாவின் 02 மாநிலங்களில் இலவசப் பொதுப் போக்குவரத்து Published By: Digital Desk 3 29 Mar, 2026 | 11:36 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போரினால் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெற்றோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. இந்நிலையில், பொதுமக்களின் குடும்பச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் தாஸ்மேனியா மாநில அரசுகள் பொது போக்குவரத்தை முற்றிலும் இலவசமாக வழங்க முன்வந்துள்ளன. விக்டோரியா மாநில அரசாங்கம் எதிர்வரும் மார்ச் 31 முதல் ஏப்ரல் இறுதி வரை ஒரு மாத காலத்திற்கு அனைத்து ரயில்கள், டிராம்கள் மற்றும் பஸ்களை இலவசமாக வழங்குகிறது. பயணிகள் தங்களது பயண அட்டைகளைப் பயன்படுத்தத் தேவையில்லை. அனைத்து நுழைவு வாயில்களும் திறந்து விடப்படும். இதன் மூலம் ஒரு சாதாரண பயணி மாதம் சுமார் 220 முதல் 250 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என மாநில முதல்வர் ஜசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார். தாஸ்மேனியா மாநிலத்தில் பஸ்கள் மற்றும் படகு சேவைகள் மார்ச் 30 முதல் ஜூலை 1 ஆம் திகதி வரை இலவசமாக அமுலில் இருக்கும். இதன்மூலம், டாட்ஜஸ் ஃபெரியிலிருந்து ஹோபார்ட்டிற்கு வேலைக்குச் செல்லும் ஒருவர் வாரத்திற்கு 88 டொலர்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிக்க அவுஸ்திரேலிய மத்திய அரசாங்கம் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு எரிபொருளைக் கொள்வனவு செய்யும் போது, அதற்கான காப்புறுதியை அரசாங்கம் ஏற்கும். தற்போது அவுஸ்திரேலியாவிடம் 39 நாட்களுக்கான ப பெற்றோலும், 30 நாட்களுக்கான டீசலும் கையிருப்பில் உள்ளதாகப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உறுதிப்படுத்தியுள்ளார். வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்து, முடிந்தவரை வீடுகளிலிருந்து வேலை செய்யுமாறும், தேவையற்ற முறையில் எரிபொருளைச் சேமித்து வைக்க வேண்டாம் எனவும் அவுஸ்திரேலிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/242192
  12. அமெரிக்காவின் சதித்திட்டம் தொடர்பில் ஈரானின் வௌிப்படுத்தல் Mar 29, 2026 - 02:18 PM அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்திவிட்டு, இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்து வருவதாக ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப் தெரிவித்துள்ளார். ஈரான் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான IRNA இந்த செய்தியை இன்று (29) வௌியிட்டுள்ளது. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா பகிரங்கமாக பேச்சுவார்த்தைக்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. ஆனால் இரகசியமாக தரைவழித் தாக்குதலுக்குச் சதி செய்வதை அறியமுடிந்துள்ளது. அமெரிக்கா 15 அம்ச ஒப்பந்தம் ஒன்றை கொண்டு தமது விருப்பங்களை முன்வைப்பதன் மூலம், போரில் அடையத் தவறியதை நிலைநாட்ட முயல்கிறது என்றார். அமெரிக்க வீரர்கள் தரைவழியாக உள்ளே நுழைவதற்காக ஈரானியப் படைகள் காத்திருப்பதாகவும், அவர்கள் மீது நெருப்பு மழையைப் பொழிவோம் என்றும் கலிபாப் எச்சரித்துள்ளார். ஈரான் சரணடைவது குறித்த கேள்விக்கு அரபு மொழியில் பதிலளித்துள்ள கலிபாப், ஈரானின் செய்தி தெளிவானது என்றும், தாங்கள் ஒருபோதும் அவமானப்படுவதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கிடையில், ட்ரம்ப் நிர்வாகம் கலிபாப்பை ஒரு சாத்தியமான பங்காளியாகவும், ஒருவேளை எதிர்காலத் தலைவராகவும் கருதியதாக உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன. https://adaderanatamil.lk/news/cmnbiod140000356pm1cq3tv6
  13. 5 ஆண்டு கால எண்ணெய் ஒப்பந்தத்திற்கு ரஷ்யா அழைப்பு - அணுமின் நிலையத் திட்டத்தை அரசாங்கம் நிராகரித்தது 29 Mar, 2026 | 11:34 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் தற்போதைய எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்வனவு செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கைக்கு அணுமின் நிலையத் திட்டத்தை வழங்க ரஷ்யா முன்வைத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில், நீண்ட கால எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக ரஷ்யா நிபந்தனைகளை விதித்துள்ளது. ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் இலங்கை விஜயத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்களில் அணுமின் நிலையம் குறித்து பேசப்பட்டதா? என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் வினாவிய போது, இது தொடர்பான விபரங்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிடும் எனத் தெரிவித்தார். எனினும், வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன், ரஷ்யாவின் அணுமின் நிலையத் திட்டக் கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ள அதேவேளை, எண்ணெய் கொள்வனவுக்கான ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டது. தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க ரஷ்யாவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்ததற்குப் பதிலளித்துள்ள ரஷ்யா, ஆரம்பகட்டமாக இரண்டு எரிபொருள் கப்பல்களை வழங்க முன்வந்துள்ளது. ஆனால், இந்த இரண்டு கப்பல்களைப் பெற்ற பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெயைப் பெறுவதற்கான நிரந்தர ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைக்கு இலங்கை சம்மதித்தால் மட்டுமே, மேலதிக ஒப்பந்தங்களுக்காக ரஷ்ய அமைச்சர் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்வார். இருப்பினும், ரஷ்யா மீதான அமெரிக்காவின் தடைகள் தற்போது முப்பது நாட்களுக்கு மட்டுமே நீக்கப்பட்டுள்ள சூழலில், ஐந்து ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது இலங்கைக்குப் பாரிய இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. முப்பது நாட்களுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் தடைகளை விதித்தால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது சர்வதேச ரீதியில் இலங்கையைப் பாதிக்கலாம். இதற்கிடையில், அணுசக்தி திட்டத்தை மேம்படுத்தும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் 2025 ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் உறுதிப்படுத்தியது. அணுசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்த சர்வதேச அணுசக்தி நிறுவனம், குறிப்பாக உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மை கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்தி சட்ட வரைவையும் உருவாக்கி, 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்டகால எரிசக்தி திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளதையும் சுட்டிக்காட்டியது. ஆனால் ரஷ;ய தரப்பு இத்திட்டம் குறித்து கோரிக்கையை முன்வைத்த போது தற்போதைய அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/242202
  14. ஈரானில் சிவில் உடமைகளுக்கு பாரிய சேதம்: 93,000க்கும் அதிகமான இடங்கள் பாதிப்பு என ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை! 28 Mar, 2026 | 06:05 PM ( இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு ) அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மேற்கொண்டு வரும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் சிவில் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்த அறிக்கையொன்றை ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ளது. தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டு ஐந்து வாரங்களுக்குள் 93,000க்கும் அதிகமான சிவில் இடங்கள் சேதமடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 71,547 வீடுகளும், 20,779 வர்த்தக நிலையங்களும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ சேதமடைந்துள்ளன. தெஹ்ரான் நகரில் மாத்திரம் 31,562 வீடுகள் மற்றும் வர்த்தக அலகுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 600 பாடசாலைகளும், 295 சுகாதார நிலையங்களும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. யுத்த சூழ்நிலை காரணமாக 46 ஆம்புலன்ஸ் வண்டிகள், 48 அவசர விபத்து சேவை வாகனங்கள் மற்றும் 3 நிவாரண சேவை ஹெலிகொப்டர்கள் சேதமடைந்துள்ள அல்லது அழிக்கப்பட்டுள்ளதாக ஈரான் செஞ்சிலுவைச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242170
  15. 'நெடுந்தாரகை' படகுச் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! Mar 28, 2026 - 11:09 PM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (27) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் பழுதடைந்துள்ள 'நெடுந்தாரகை' படகினைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய, இன்றைய தினம் 'நெடுந்தாரகை' படகினை நேரடியாகப் பார்வையிட்ட வடபிராந்திய கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, அதனைத் தற்காலிகமாகத் திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் மூலம் குறித்த படகு நாளை முதல் மீண்டும் சேவையில் ஈடுபடவுள்ளது. மேலும், 'நெடுந்தாரகை' படகினை நிரந்தரமாகத் திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் கஜிந்தன்- https://adaderanatamil.lk/news/cmnalnz2r0001356polzyrie7
  16. சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஓம்கார் கரம்பேல்கர் பிபிசி மராத்தி 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள் சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது. மக்கள் பெரும்பாலும், இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும் பிரச்னை என்று கருதுகின்றனர். ஆனால் உண்மையில், இது இளம் வயதினர் மத்தியிலும் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. சிறுநீர் கழித்த பிறகு, சில துளிகள் வெளியேறித் தங்கள் உள்ளாடைகளை நனைப்பதையோ அல்லது அசௌகரியத்தை ஏற்படுத்துவதையோ பல ஆண்கள் கவனிக்கின்றனர். இது சாதாரணமாக நிகழும் ஒன்றாக இருந்தாலும், பெரும்பாலான ஆண்கள் இதைப் பற்றிப் பேச கூச்சப்படுகிறார்கள். "சிறுநீர் கழித்த பின் சொட்டுதல்" என்ற பிரச்னை பெரும்பாலும் விவாதிக்கப்படுவதில்லை. பொதுவாக, கூச்சம், மற்றவர்கள் கேலி செய்து விடுவார்களோ என்ற அச்சம், "இது வயதாகும்போது மட்டுமே ஏற்படும்" என்ற தவறான நம்பிக்கை அல்லது "இதுவொரு தீவிரமான பிரச்னை இல்லை" என்ற எண்ணம் ஆகியவை அதற்குக் காரணமாக அமைகின்றன. உண்மையில், பி.எம்.டி என்பது வயதானவர்கள் மட்டுமின்றி இளம் வயதினரும் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. பகல் நேரங்களில் சிறு துளி சிறுநீர் வெளியேறுவது, குறிப்பாகப் பணியிடத்திலோ அல்லது பயணம் செய்யும்போதோ, அதை அனுபவிப்பவருக்கு உள்ளாடை நனைந்த உணர்வையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தக்கூடும். அவர்கள் அடிக்கடி தங்கள் ஆடைகளைச் சரிபார்த்துக் கொண்டே இருக்க நேரிடலாம். இது மன அழுத்தத்தை அதிகரிக்கவும், தன்னம்பிக்கையைப் பாதிக்கவும் கூடும். நிபுணர்களின் கூற்றுப்படி, பி.எம்.டி என்பது ஒரு தீவிரமான நோய் அல்ல. முறையான உடற்பயிற்சிகள், எளிய நுட்பங்கள், சிறுநீர் கழிப்பதற்கான சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் பி.எம்.டி-யை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும். இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய, பி.எம்.டி ஏன் ஏற்படுகிறது, எத்தகைய அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும், எத்தகைய தீர்வுகள் உண்மையில் பலனளிக்கும் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி என்றால் என்ன? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் (PMD) என்பது ஒரு நபர் சிறுநீர் கழித்து முடித்த பிறகும் சிறுநீர் கசிவதைக் குறிக்கிறது. இந்தப் பிரச்னையின் முக்கிய அறிகுறி, கழிவறையைவிட்டு வெளியேறிய சில விநாடிகள் அல்லது சில நிமிடங்களுக்குப் பிறகு, சில துளிகள் சிறுநீர் திடீரென வெளியேறுவதாகும். பொதுவாக, சிறுநீர் வெளியேறும் குழாயின் (urethra) கீழ் பகுதியில், சிறிதளவு சிறுநீர் தேங்கி நிற்பதாலேயே இது நிகழ்கிறது. கிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அகில் கான், இது குறித்து பிபிசி மராத்திக்கு விரிவாக விளக்கினார். "சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் என்பது 'சிறுநீர் அடங்காமை' என்ற வழக்கமான வகைப்பாட்டின் கீழ் வருவதில்லை. மாறாக, இது 'சிறுநீர் வெளியேற்றச் செயல்பாட்டுக் குறைபாடு' (voiding dysfunction) என்ற தனி வகையின் கீழ் வருகிறது. இதில் சிறுநீர் கழித்த பிறகும் சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் புறக்குழாயிலேயே தங்கிவிட்டுப் பின்னர் கசிந்து வெளியேறுகிறது," என்று அவர் விவரித்தார். இந்தப் பிரச்னை சங்கடப்படுத்தக் கூடியதாகவோ அல்லது கூச்சத்தை ஏற்படுத்தக் கூடியதாகவோ தோன்றினாலும், இதுவொரு தீவிரமான பாதிப்பு இல்லை எனவும், சரியான உடற்பயிற்சிகள் மற்றும் எளிய வழிமுறைகளின் மூலம் இதை எளிதில் கட்டுப்படுத்த முடியும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images இடுப்புத் தளம் என்றால் என்ன? இடுப்புத் தளம் (Pelvic floor) என்பது, வயிற்றின் அடிப்பகுதியில் (கீழ் வயிறு) அமைந்துள்ள, வலிமையான அதேநேரம் நெகிழ்வுத்தன்மை கொண்ட தசைகள், திசுக்கள், தசைநார்கள் ஆகியவற்றின் ஒரு தொகுப்பாகும். இந்த அமைப்பானது, ஒரு தொட்டிலைப் போல அல்லது எடையைத் தாங்கும் பொருளைப் போலச் செயல்படுகிறது. இது இடுப்புப் பகுதியில் உள்ள முக்கியமான உறுப்புகளான சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய், குடல், ஆண்களில் பிராஸ்டேட் சுரப்பி போன்றவற்றைத் தாங்கிப் பிடித்து, அவற்றுக்கு ஆதரவளிக்கிறது. ஒருவர் நிற்கும்போதோ, நடக்கும்போதோ அல்லது அசைந்து இயங்கும்போதோ, இந்த உறுப்புகளின் எடையைச் சுமப்பதற்கும் அவற்றை அவற்றுக்குரிய சரியான இடத்தில் நிலைநிறுத்துவதற்கும் இந்தத் தசைகள் உதவுகின்றன. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக பிபிசியுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் சிறுநீர் மற்றும் மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் உறுப்புகளுக்கு ஆதரவளிப்பது இடுப்புத் தளத்தின் மற்றுமொரு முக்கியமான பணி. வயிற்றுப் பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும்போது, உதாரணமாக, ஆழமான மூச்சுவிடும்போது, இருமும்போது, தும்மும்போது, கனமான பொருட்களைத் தூக்கும்போது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது, இடுப்புத் தளத் தசைகள் அந்த அழுத்தத்தைத் தாங்கிக்கொண்டு உறுப்புகள் நிலையாக இருக்க உதவுகின்றன. சுருக்கமாகக் கூறுவதெனில், உடல் சமநிலை, உடலின் மையப்பகுதியுடைய வலிமை, சிறுநீர், மலம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இடுப்புத் தளம் மிகவும் இன்றியமையாதது. அன்றாட ஆரோக்கியத்தில் இது மிக முக்கியப் பங்காற்றினாலும், பலரும் இந்த அமைப்பின் மீது போதிய கவனம் செலுத்துவதில்லை. பி.எம்.டி யாருக்கு ஏற்படுகிறது? இது பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையதா? பி.எம்.டி ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணம், இடுப்புத் தளத் தசைகள் பலவீனமாக இருப்பது அல்லது சரியாகச் செயல்படாமல் இருப்பதாகும். இந்தத் தசைகள் சிறுநீரின் கடைசி சில துளிகளை வெளியே தள்ள உதவுகின்றன. அவை பலவீனமாக இருந்தால், சிறிதளவு சிறுநீர் சிறுநீர்ப் பாதையில் தங்கி, பின்னர் வெளியே கசியும். இந்தப் பிரச்னை வயது முதிர்ச்சியால் மட்டுமே ஏற்படுவதாகப் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது இளம் ஆண்களுக்கும் ஏற்படலாம். அதிக நேரம் உட்கார்ந்திருப்பது, உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக எடையுடன் இருப்பது, தவறான சிறுநீர் கழிக்கும் பழக்கங்களைக் கொண்டிருப்பது போன்றவை இந்த அபாயத்தை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி எப்போதும் பிராஸ்டேட் சுரப்பியுடன் தொடர்புடையது என்ற பொதுவானதொரு தவறான புரிதலும் உள்ளது. சில நேரங்களில் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைவது இந்தப் பிரச்னைக்குக் காரணமாக அமையலாம். ஆனால் பெரும்பாலும் ஆண்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, பிராஸ்டேட் நோய் இருப்பதில்லை. இத்தகைய சந்தர்ப்பங்களில், பி.எம்.டி உடலில் ஏற்படும் எந்தவொரு சேதம் அல்லது கட்டமைப்புப் பிரச்னையாலும் ஏற்படுவதில்லை. இதுவொரு "செயல்பாட்டு" பிரச்னையாகும். அதாவது, இது தசைகள் செயல்படும் விதத்துடன் தொடர்புடையது. பி.எம்.டி-யுடன் வேறு அறிகுறிகளும் இருந்தால், அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டுமென நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றில் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு, பலவீனமான சிறுநீர் ஓட்டம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி கழிவறைக்குச் செல்லுதல், சிறுநீரில் ரத்தம், அடிவயிற்றில் அதாவது இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது ஆகியவை அடங்கும். இந்த அறிகுறிகள் இருந்தால், மருத்துவர்கள் சிறுநீர்ப் பாதை தொற்று, சிறுநீர்க் குழாய் சுருக்கம், அல்லது பிராஸ்டேட் அழற்சி போன்ற பிற நிலைகள் குறித்தும் பரிசோதிக்கலாம். பட மூலாதாரம்,Getty Images கண்டறியும் வழிமுறையும் எளிய தீர்வும் ஒருவருக்கு சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளதா என்பதைக் கண்டறிய, மருத்துவர்கள் பொதுவாக முதலில் அந்த நபரின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டு, ஓர் எளிய உடல் பரிசோதனையைச் செய்வார்கள். சில நேரங்களில், அவர்கள் யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் எவ்வாறு பாய்கிறது என்பதைச் சரிபார்க்க) அல்லது சிறுநீர் பகுப்பாய்வு (சிறுநீரில் ஏதேனும் பிரச்னை உள்ளதா எனச் சரிபார்க்க) போன்ற சோதனைகளைப் பரிந்துரைக்கலாம். சிகிச்சையின் மிக முக்கியமான பகுதி, இடுப்புத் தளப் பயிற்சிகளைச் சரியாகச் செய்வதாகும். "இந்த நோயறிதல் மருத்துவரீதியாக, அறிகுறிகளின் வரலாறு மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சில நேரங்களில், சிறுநீர் பகுப்பாய்வு அல்லது யூரோஃப்ளோமெட்ரி போன்ற சோதனைகள் அறிவுறுத்தப்படலாம். சிறுநீர் கழிப்பதை நிறுத்திய பிறகும் தொடர்ந்து சிறுநீர் வடிதல் போன்ற சில விஷயங்களை அந்த நபரே கவனிக்கக்கூடும். இருப்பினும், தீவிரமான காரணம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்ய ஒரு முறையான மருத்துவப் பரிசோதனை அவசியம்," என்று தெரிவித்தார் மருத்துவர் அகில் கான். மேலும் அவர், "பி.எம்.டி-ஐ நிர்வகிப்பதில் இடுப்புத் தளத்திற்கான உடற்பயிற்சிகள் மிக முக்கியமானவை. 'சிறுநீர்க் குழாய் மில்கிங்' என்பது சிறுநீர் கழித்த பிறகு விதைப்பையின் பின்புறத்தில் மென்மையான அழுத்தத்தைக் கொடுப்பதாகும். இது மீதமுள்ள சிறுநீரை வெளியேற்ற உதவுகிறது. கெகல் பயிற்சிகளைத் தவறாகவோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ செய்வது பொதுவாக நடக்கும் ஒரு தவறு. அதற்குச் சரியான வழிகாட்டுதல் அவசியம். தொற்று அல்லது பிராஸ்டேட் வீக்கம் போன்ற தொடர்புடைய பிரச்னை இல்லாவிட்டால், இதற்கு மருந்து தேவையில்லை," என்றும் அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி-யுடன் காணப்படும் தீவிர பிரச்னைகளின் அறிகுறிகள் ஒருவருக்கு பி.எம்.டி-யுடன் மற்ற அறிகுறிகளும் இருந்தால், அதுவொரு தீவிரமான உடல்நலப் பிரச்னையாக இருக்கலாம். சிறுநீரில் ரத்தம், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், காய்ச்சல், அடிவயிற்றில் அல்லது கால்களுக்கு இடையில் வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் அல்லது அடிக்கடி ஏற்படும் தொற்றுகள் ஆகியவை எச்சரிக்கைக்கான அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவை சிறுநீர் பாதையில் அடைப்பு, தொற்று அல்லது சுருக்கம் போன்ற பிரச்னைகளைச் சுட்டிக்காட்டலாம். கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஷ்யாம் வர்மா இதுகுறித்து விரிவாக விளக்கினார். "பி.எம்.டி-யுடன் சிறுநீரில் ரத்தம், வலி, பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற அறிகுறிகள் இருந்தால், அது வெறும் பி.எம்.டி பிரச்னையாக மட்டுமே இருக்காது. வேறு சிக்கலாக இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே அது கவனிக்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். பி.எம்.டி மற்ற சிறுநீர் பிரச்னைகளுடன் சேர்ந்து ஏற்படலாம். உதாரணமாக, அதீத சிறுநீர்ப்பை செயல்பாட்டில், ஒருவருக்கு ஏற்கெனவே அடிக்கடி மற்றும் அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு இருக்கும். அதனால் சிறுநீர் கழித்த பிறகு சொட்டு சொட்டாக வெளியேறுவது இன்னும் மோசமாக உணரப்படும். சிறுநீர்க்குழாய் குறுகினால் (சிறுநீர்க்குழாய் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது), சிறுநீரின் கடைசிப் பகுதி சரியாக வெளியேறாமல் போகலாம். பிராஸ்டேட்டிடிஸ் நோயில், இடுப்புத் தசைகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலி சிறுநீர் சொட்டுசொட்டாக வெளியேறுவதை அதிகரிக்கலாம். "சிறுநீர்க் குழாய் முழுமையாகக் காலியாகாமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதால், சிறுநீர்ப் பையின் அதிக உணர்திறன், சுருக்கங்கள், பிராஸ்டேடிடிஸ் நோயால் ஏற்படும் அழற்சி ஆகிய அனைத்தும் சொட்டுசொட்டாக சிறுநீர் வெளியேறுவதற்கு காரணமாகலாம்," என்று கூறுகிறார் மருத்துவர் வர்மா. பட மூலாதாரம்,Getty Images பி.எம்.டி பிரச்னை எவ்வாறு கண்டறியப்படுகிறது? மருத்துவர்கள் முதலில் இதுகுறித்து விரிவான கேள்விகளைக் கேட்பதன் மூலம் பரிசோதனையைத் தொடங்குகின்றனர். சிறுநீர் வடிதல் எப்போது நிகழ்கிறது, எவ்வளவு சிறுநீர் கசிகிறது, சிறுநீர் கழிக்கும்போது ஏதேனும் எரிச்சல் அல்லது வலி உள்ளதா, இது அன்றாட வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பன போன்ற கேள்விகளை அவர்கள் கேட்கின்றனர். இதற்குப் பிறகு, உடல் பரிசோதனை மேற்கொள்கின்றனர். தேவைப்பட்டால், பிரோஸ்டேட் சுரப்பியையும் பரிசோதிக்கலாம். சிறுநீர் பரிசோதனை (சிறுநீரைச் சோதிக்க), யூரோஃப்ளோமெட்ரி (சிறுநீர் வெளியேறும் வேகத்தை அறிய), சிறுநீர் கழித்த பின் சிறுநீர்ப்பையில் எஞ்சியிருக்கும் சிறுநீரின் அளவை அளவிடுதல் (post-void residual measurement) போன்ற சில எளிய பரிசோதனைகளும் செய்யப்படலாம். ஏதேனும் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், மருத்துவர்கள் சிஸ்டோஸ்கோபி (Cystoscopy) அல்லது இமேஜிங் ஸ்கேன்கள் போன்ற இன்னும் விரிவான பரிசோதனைகளை மேற்கொள்ளப் பரிந்துரைக்கலாம். பி.எம்.டி நிலையாகத் தொடர்ந்தாலோ, தீவிரமடைந்தாலோ, அசௌகரியத்தை ஏற்படுத்தினாலோ, அல்லது எரிச்சல், வலி, சிறுநீரில் ரத்தம், அல்லது பலவீனமான சிறுநீர் ஓட்டம் போன்ற பிற அறிகுறிகளுடன் சேர்ந்து ஏற்பட்டாலோ, அதை முறையாகப் பரிசோதிக்க வேண்டும். குறிப்பாக இளம் ஆண்கள் இந்த அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. பெரும்பாலான நேரங்களில், லேசான அளவிலான பி.எம்.டி ஆபத்தானது அல்ல. ஆனால் இதுவொரு பெரிய உடல்நலப் பிரச்னையின் அறிகுறியாக இருக்குமாயின், நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம் மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும். பெரும்பாலும், பி.எம்.டி-யின் மிகப்பெரிய தாக்கம் மனநலத்தின் மீதே ஏற்படுகிறது. இது மன அழுத்தம் மற்றும் கூச்ச உணர்வை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,Getty Images வீட்டிலேயே அவதானிப்பது எப்படி? சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை உள்ளவர்கள், வீட்டில் ஓர் எளிய "சிறுநீர்ப்பை நாட்குறிப்பை" வைத்திருக்கலாம். அதில், எப்போது சொட்டுசொட்டாக சிறுநீர் வடிதல் ஏற்படுகிறது, அது எவ்வளவு அதிகமாக நிகழ்கிறது, எவ்வளவு தண்ணீர் குடிக்கிறார்கள், சிறுநீர் கழித்த பிறகு சிறிது நேரம் காத்திருப்பது ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்பனவற்றைக் குறித்து வைக்கலாம். ஆனால், இந்தக் குறிப்புகளை வைத்திருப்பதால் மருத்துவரை நாடுவதைத் தவிர்க்கலாம் என்று அர்த்தமல்ல. இந்தப் பிரச்னை மோசமடைந்தால், மருத்துவ உதவி நிச்சயமாக அவசியம். "இந்த நாட்குறிப்பு பயனுள்ளது. இந்தப் பிரச்னையின் போக்கு குறித்துத் தெளிவான புரிதலை ஏற்படுத்த இது உதவுகிறது. ஆனால் அறிகுறிகள் தொடர்ந்தால், சுய கவனிப்பு மட்டுமே போதாது, பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் ஷ்யாம் வர்மா விளக்குகிறார். மேலும் அவர், "சில சொட்டுகள் மட்டும் வடிந்தால், அதற்குப் பெரிய காரணம் இருந்தால் மட்டுமே மருந்து தேவைப்படும். தனிப்பட்ட அளவில் பி.எம்.டி மட்டும் இருந்தால் மருந்துகள் அரிதாகவே பரிந்துரைக்கப்படுகின்றன. இடுப்புத் தளப் பயிற்சி மற்றும் சிறுநீர்க் குழாய் மில்கிங் போன்ற பயிற்சிகள் பி.எம்.டி-க்கான மிகவும் பயனுள்ள, ஆதாரங்கள் அடிப்படையிலான பலனளிக்கும் நுட்பங்களாகும்," என்று கூறினார். மருத்துவர் வர்மா கெகல் பயிற்சிகள் பற்றிய சில முக்கியக் குறிப்புகளையும் விளக்கினார். "தவறான தசைகளை இறுக்குவது, வயிற்று, பிட்ட அல்லது தொடைத் தசைகளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவது, மூச்சை அடக்கி வைப்பது, ஒழுங்கற்ற முறையில் உடற்பயிற்சி செய்வது, சில நாட்களில் உடனடிப் பலன்களை எதிர்பார்ப்பது போன்றவை மிகப்பெரிய தவறுகளாகும். பல ஆண்கள் 'இறுக்குதல்' பயிற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் இடுப்புத் தளத்தை எவ்வாறு சரியாகச் சுருக்குவது என்று அவர்களுக்குக் கற்பிக்கப்படுவதில்லை. உடற்பயிற்சியின் தீவிரத்தைவிட, அவர்கள் செய்யும் பயிற்சியின் நுட்பமே மிகவும் முக்கியமானது." பி.எம்.டி-யால் ஏற்படும் மனநல சிக்கல்கள் சிறுநீர் கழித்தபின் சொட்டுதல் பிரச்னை ஒரு தீவிரமான மருத்துவ நோயல்ல என்றாலும், அது ஒருவரை உளவியல் ரீதியாகப் பாதிக்கக்கூடும். இதன் காரணமாகப் பல ஆண்கள் கூச்சம், பதற்றம், தன்னம்பிக்கை இழப்பு ஆகியவற்றை உணர்கின்றனர். தங்கள் ஆடை ஈரமாகிவிடுமோ அல்லது கறைபட்டுவிடுமோ என்ற கவலையில் சிலர் வெளியே செல்வதையோ அல்லது பிறரைச் சந்திப்பதையோகூட தவிர்க்கக்கூடும். இதுகுறித்துப் பேசிய மருத்துவர் ஷ்யாம் வர்மா, "பல நோயாளிகள், பி.எம்.டி பற்றிப் பேசத் தயங்குகிறார்கள். ஆனால் இதுவொரு பொதுவான, சிகிச்சை அளிக்கக்கூடிய குறைபாடு என்பதால், இதற்காக கூச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை" என்று கூறுகிறார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... ஒருவர் தனது அன்றாட வாழ்வில் உணவுமுறையை மாற்றுவது அல்லது உடற்பயிற்சிகளைச் செய்வது போன்ற பெரிய மாற்றங்களைச் செய்ய விரும்பினால், ஒரு மருத்துவர் மற்றும் தகுந்த பயிற்சி பெற்ற நிபுணரிடம் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம். முதலில் ஒரு மருத்துவரிடம் சென்று முறையான பரிசோதனைகளைச் செய்துகொள்வதே இதற்கான மிகச் சிறந்த வழிமுறை. அதன் மூலம் பிரச்னையைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, பின்னர் அவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றுவதற்கு உதவும். சுருக்கமாகக் கூறினால், பி.எம்.டி என்பது உயிருக்கோ உடலுக்கோ ஆபத்தான பிரச்னையல்ல என்றாலும், அது ஒருவரின் தன்னம்பிக்கையையும் மன அமைதியையும் பாதிக்கக்கூடியது. இதற்கு சரியான மருத்துவ உதவியைப் பெறுவதன் மூலம், இந்த நிலையை வெகுவாக மேம்படுத்திக்கொள்ள முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20344lrly6o
  17. கடந்த கால அரசாங்கத்திற்கு விளையாட்டு காட்டியது போல எமக்கு காட்ட வேண்டும் - கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை 29 Mar, 2026 | 09:27 AM வடக்கில் உள்ள மணல் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள், சில பொலிஸார் உள்ளனர் என்பது எமக்கு தெரியும். இவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் காட்டலாம் என நினைக்க வேண்டாம். அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை (28) இரவு இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், மணல் கொள்ளையர்களிடம் இருந்து எமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அண்மைய நாட்களில் மணல் கொள்ளையர்களினால் 06 உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளது. இன்று ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை கூட காவு வாங்கியுள்ளனர். இது ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்ச கதையாக பொலிஸ் உத்தியோகஸ்தரின் உயிரை பறிக்கும் அளவுக்கு சென்றுள்ளனர். இவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மணல் விநியோகத்தை ஒழுங்கு படுத்தி அனுமதி பத்திரங்கள் வழங்குவதன் ஊடாக ஒரு கியூப் மண் 7500 ரூபாய்க்கு வழங்க முடியும். அதனால் ஒரு டிப்பர் மண் 23 ஆயிரத்திற்கு பெற முடியும். யாழ்ப்பாணத்திற்கு அதனை கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவுகள் உள்ளிட்ட செலவுகளை கணித்தால், சுமார் 55 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரத்திற்கும் மண்ணை விநியோகிக்க முடியும். சட்டவிரோதமாக மணலை விற்பனை செய்யும் மணல் மாஃபியாக்கள் ஒரு டிப்பர் மண்ணை ஒரு இலட்சத்து 20ஆயிரம் ரூபாய் வரைக்கும் யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்கின்றனர். அவ்வாறான மண் மாஃபியாக்களின் பின்னால் சில அரசியல்வாதிகள் சில பொலிஸார் உள்ளனர் என்பதும் எமக்கும் தெரியும் கடந்த கால அரசாங்கங்களுக்கு விளையாட்டு காட்டியது போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் விளையாட்டு கட்டலாம் என நினைக்க வேண்டாம் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். சட்டவிரோத மணலுடன் முதல் தடவை கைப்பற்றப்படும் வாகனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். இரண்டாவது தடவையும் அதே தவறை செய்தால் 20 இலட்ச ரூபாய் வரையில் தண்டம் அறவிடப்படும். மூன்றாவது தடவையும் அதே தவறை செய்தால் வாகனம் அரசுடைமையாக்கப்படும். இது தொடர்பான சட்டங்கள் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். இது தொடர்பில் நீதி அமைச்சு உள்ளிட்ட தரப்புகளுடன் பேச்சுக்கள் நடாத்தியுள்ளோம். அத்துடன் பொலிசாரின் நடவடிக்கைகள் சாதாரண மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக இருக்காது , மாஃபியாக்கள் மீதான கடுமையான நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸாருக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மாஃபியாக்களுக்கு மக்கள் பயப்படுகின்றார்கள். அவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்க பயப்படுகிறார்கள். அதனால் இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிவிக்க மிக விரைவில் தொலைபேசி இலக்கங்களை அறிவிப்போம். அதனூடாக அவர்கள் தகவல்களை தெரியப்படுத்த முடியும். இவ்வாறான செயற்பாடுகளை தனியே பொலிஸாரோ , அரசாங்கமோ கட்டுப்படுத்த முடியாது. பொது மக்களின் பங்களிப்பு கட்டாயம் தேவை என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/242184
  18. இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புதிய மைல்கல் Mar 29, 2026 - 10:51 AM இலங்கை நீதிமன்ற வரலாற்றில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், காகிதப் பயன்பாடற்ற மின்-முறைமை அடிப்படையிலான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 26ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் முதன்முறையாக நடைபெற்றது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த விசாரணை இடம்பெற்றது. 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய 3 மில்லியன் ரூபா நட்டஈட்டை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு குறித்த வழக்கினூடாக இந்த டிஜிட்டல் முறைமை பரிசீலிக்கப்பட்டது. திறந்த நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, வழக்கமான காகிதக் கோப்புகளுக்குப் பதிலாக உயர் நீதிமன்றத்தால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் கோப்புகளை நீதியரசர்கள் கணினி மூலம் பரிசீலித்தனர். பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்ற பதிவாளர் மனோதி ஹேவாவசம் தெளிவுபடுத்தியதுடன், அதன் மீது டிஜிட்டல் கையொப்பமிட்டு மின்-முறைமையில் பதிவேற்றியதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர் அக்குற்றப்பத்திரிகையைப் பெற்றுக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 2026 மே 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றக் கட்டமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் "E-court" திட்டத்தின் முக்கிய மைல்கல்லாக இது கருதப்படுகிறது. ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உயர் நீதிமன்றத்தாலேயே இந்தச் செயலி முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். இந்த E-filing முறைமை மூலம் வினைத்திறனான மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் சாத்தியமாவதுடன், காகிதங்களுக்காகச் செலவிடப்படும் பெருமளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணியையும் சேமிக்க முடியும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. 2026 பெப்ரவரி 10ஆம் திகதி முதல் சட்டத்தரணிகள் மின்-முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnbb5ai4000d356p2oaomw8t
  19. 3 விக்கெட், 3 கேட்ச், 3 அதிரடி இன்னிங்ஸ்: ஆர்சிபியின் சாதனை வெற்றிக்கு காரணமான 3 விஷயங்கள் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த ஐபிஎல் சீசனை வெற்றிகரமாக தொடங்கியிருக்கிறது. பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த சீசனின் முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தற்காலிக கேப்டன் இஷான் கிஷன் 80 ரன்கள் எடுத்தார். அடுத்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ், 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 15.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. ஐபிஎல் வரலாற்றில் 200+ இலக்கை ஒரு அணி செய்த அதிவிரைவான சேஸ் இதுதான். இந்தப் போட்டியில் ஆர்சிபி பௌலர் ஜேக்கப் டஃபியின் பவர்பிளே ஸ்பெல், ஃபில் சால்ட்டின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் அந்த அணி பேட்டர்களின் அதிரடி பேட்டிங் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக விளங்கின. டஃபி 3 விக்கெட் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோருக்கு எதிராக ஆட்டத்தின் முதல் ஓவரை வீசுவதற்குத் தயாராக இருந்தார் டஃபி. அப்போது வர்ணனையில் இருந்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டஃபி பற்றி "டி20 உலகக் கோப்பையில் டஃபியைப் போன்ற எண்கள் கொண்டிருந்தால், மறுபடியும் இங்கு வந்து பந்துவீசுவது எளிதாக இருக்காது. அவர் இங்கு தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் யாருக்கு எதிராகப் பந்துவீசப் போகிறார் என்று பாருங்கள்… இது அவருக்கு மிகமிகக் கடினமாக இருக்கப்போகிறது." என்று கூறினார்: பட மூலாதாரம்,Getty Images பீட்டர்சன் அப்படிச் சொன்னதுக்குக் காரணம் இருந்தது... சுமார் 20 நாட்களுக்கு முன்பு இந்தியாவுக்கு எதிராக நடந்த டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஜேக்கப் டஃபிக்கும் நியூசிலாந்தின் பிற பௌலர்களுக்கும் எதிர்பார்த்துபோல் செல்லவில்லை. அன்று ஆமதாபாத்தில் 3 ஓவர்கள் பந்துவீசி 42 ரன்கள் விட்டுக்கொடுத்தார் டஃபி. சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் டஃபியின் பந்துவீச்சை பதம்பார்த்தார்கள். அந்த செயல்பாட்டுக்குப் பின் ஜேக்கப் டஃபி விளையாடிய போட்டி இது. மறுபடியும் இந்தியாவில்… மறுபடியும் அபிஷேக்கிற்கு எதிராக. ஆனால், இவை மட்டுமே அவர் மீதான நெருக்கடியாக இருக்கவில்லை. சன்ரைசர்ஸுக்கு எதிரான இந்தப் போட்டியில் டஃபி அறிமுகம் ஆனதற்கான காரணம், ஜாஷ் ஹேசில்வுட் முழு உடல் தகுதியோடு இல்லாதது. 2025 ஐபிஎல் சீசனில் ஆர்சிபி கோப்பை வென்றதற்கான மிகமுக்கியக் காரணமாக விளங்கியவர் ஹேசில்வுட். அந்த சீசனில் 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அந்த அணியின் டாப் விக்கெட் டேக்கராக விளங்கினார். அப்படியொரு தாக்கம் ஏற்படுத்திய வீரரின் இடத்தில் விளையாடியதால், ஹேசில்வுட் கொடுத்தது போன்ற செயல்பாடு எதிர்பார்க்கப்படும் என்ற நெருக்கடியும் டஃபி மீது இருந்தது. ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அனைவருமே பீட்டர்சன் சொன்னது போலத்தான் நினைத்திருந்தார்கள். ஆனால், அப்படியொரு நிலையில் தான் டஃபியிடமிருந்து பெங்களூருவில் 'ஆட்ட நாயகன்' செயல்பாடு வந்தது. பவுன்ஸ் அதிகமாக இருந்த அந்த ஆடுகளத்தில் டெஸ்ட் போட்டிகளில் வீசுவதைப்போல் ஷார்ட் மற்றும் குட் லென்த்களுக்கு இடைப்பட்ட லென்த்திலேயே அதிகம் பந்துவீசினார் டஃபி. அவருடைய உயரத்தின் காரணமாக அவரது பந்துகள் கூடுதல் பவுன்சாக காரணமாக அமைந்தன. அதனால் அவர் பந்துவீச்சில் அடித்து ஆடுவது பேட்டர்களுக்குக் கடினமாக இருந்தது. பட மூலாதாரம்,Getty Images முதல் ஓவரிலேயே அபிஷேக்குக்கு எதிராக ஒரு வாய்ப்பை உருவாக்கியிருந்தார் டஃபி. ஆட்டத்தின் மூன்றாவது பந்தில், பந்து பேட்டை விட்டு சற்று தள்ளிச் சென்றதால் அவுட் ஆகாமல் தப்பித்தார் அபிஷேக் ஷர்மா. ஆனால், டஃபி வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்தார். இம்முறை டஃபி வீசிய ஷார்ட் பாலை அவர் பலமாக அடிக்க நினைக்க, பந்து டாப் எட்ஜாகி கீப்பர் ஜித்தேஷ் ஷர்மா கைகளில் விழுந்தது. டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டஃபிக்கு எதிராக 9 பந்துகளை சந்தித்த அபிஷேக் அதில் 29 ரன்கள் விளாசினார். அந்த அளவுக்கு டஃபிக்கு எதிராக அதிரடி காட்டினார் இந்திய ஓப்பனர் அபிஷேக். ஆனால், இந்த ஐபிஎல் போட்டியில் அபிஷேக்குக்கு எதிராக 5 பந்துகள் வீசி, 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அவர் விக்கெட்டையும் வீழ்த்தியிருக்கிறார் டஃபி. அதே ஓவரின் கடைசிப் பந்தில் அவர் டிராவிஸ் ஹெட் விக்கெட்டையும் வீழ்த்தினார். 'பேக் ஆஃப் லென்த்' பந்தை ஹெட் தூக்கி அடிக்க, டீப் பேக்வேர்ட் ஸ்கொயர் லெக் திசையில் இருந்த ஃபில் சால்ட் அதை கேட்ச் பிடித்தார். டஃபி வீசிய மூன்றாவது ஓவரில், இன்னொரு ஷார்ட் லென்த் பாலுக்கு இன்னொரு விக்கெட் கிடைத்தது - அவருடைய மூன்றாவது விக்கெட். மணிக்கு சுமார் 134 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட அந்த பந்தில் நித்திஷ் குமார் பெரிய ஷாட் அடிக்க முயற்சிக்க பந்து டாப் எட்ஜாகி மிட்விக்கெட் திசையில் நின்றிருந்த அபிநந்தன் சிங் கைகளில் தஞ்சமடைந்தது. தொடர்ந்து கடினமான அந்த டெஸ்ட் போட்டி லென்த்களில் வீசி பேட்டர்களுக்குக் கடுமையான சவால் கொடுத்தார் டஃபி. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரிடமிருந்து எதிர்பார்த்தது இதைத்தான்: ஹேசில்வுட் செய்யும் அதே வேலை. பட மூலாதாரம்,Getty Images சில தினங்களுக்கு முன்பு, மினி ஏலத்துக்கு தாங்கள் தயாரானது பற்றிய வீடியோக்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெளியிட்டது. அதில் ஜேக்கப் டஃபியை வாங்கும் முடிவுக்கு வந்த விவாதங்கள் பற்றியும் பார்க்க முடிந்தது. அதில், ஹேசில்வுட்டுக்கு மாற்றாக அவர்கள் வாங்க நினைத்த முதல் வீரர் ஜேக்கப் டஃபி. ஹேசில்வுட் போல் உயரமான வீரர் என்பதால், அவரைப் போலவே உயரத்திலிருந்து பந்தை ரிலீஸ் செய்வார் என்பதாலும், சமீபமாக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார் என்பதாலும், அவரையே முதல் இலக்காக வைத்திருந்தார்கள். அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கும் வாங்கினார்கள். அறிமுக போட்டியில், ஹேசில்வுட் போன்ற தாக்கத்தையே டஃபி ஏற்படுத்திவிட்டார். டஃபியின் செயல்பாடு பற்றி பிபிசி தமிழிடம் பேசிய சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரரும் வேகப்பந்துவீச்சாளருமான யோமஹேஷ், "ஹேசில்வுட் இந்தப் போட்டியை ஆடியிருந்தால் என்ன செய்திருப்பாரோ, அதையே டஃபி செய்தார். ஆனால், இது எளிதான விஷயம் இல்லை. ஆர்சிபி போன்ற ஒரு நடப்பு சாம்பியன் அணிக்கு வந்து, ஹேசில்வுட் போன்ற ஒரு உலகத்தர வீரரின் இடத்தை நிரப்பும்போது பெரும் நெருக்கடி ஏற்படும். அதை சமாளித்து டஃபி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்" என்றார். மேலும் பேசிய அவர், "அவர் தெளிவான ஒரு திட்டத்தோடு வந்திருந்தார். சின்னசாமி மைதானத்தில் புதிய பந்தில் பந்துவீசும்போது பவுன்ஸ் சற்று கூடுதலாகக் கிடைக்கும். சீம் மூவ்மென்ட் இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். மேலும், அபிஷேக் & ஹெட் இருவருக்கும் எதிராக அவர் ஒரேயொரு தவறான பந்தை மட்டுமே வீசினார். மற்றபடி பேட் (pad) லைனில் வீசி அவர்களுக்கு சவால் கொடுத்தார். ஒரு சரியான திட்டத்தைத் தீட்டி அதை சரியாக அரங்கேற்றவும் செய்தார்" என்றும் யோமஹேஷ் கூறினார். சால்ட் பிடித்த 3 கேட்ச்கள் பட மூலாதாரம்,Getty Images ஒரு விக்கெட் கீப்பர் ஃபீல்டிங்கில் ஜொலிப்பது அதிகம் பார்த்திட முடியாத விஷயம். அரிதாகவே நடப்பது. கீப்பிங் கடினம் என்றாலும், அதற்கென்று ஒரு எல்லை இருக்கிறது. கிளவுஸ் போட்டுக்கொண்டு, அதிகம் நகராமல் களத்தில் செயல்படும் கீப்பர்கள், அந்த கிளவுஸ் இல்லாமல் மைதானத்தின் முழு பரப்பிலும் செயல்படுவது முற்றிலும் வேறுபட்டது. ஆனால், விக்கெட் கீப்பர் ஃபில் சால்ட் ஃபீல்டிங் செய்வது கடினமே இல்லாத ஒரு விஷயம் என்பதைப் போல் காட்டியிருக்கிறார். சன்ரைசர்ஸுக்கு எதிராக அவர் பிடித்த 3 கேட்ச்கள் ஆட்டத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது. டிராவிஸ் ஹெட் அடித்த பந்து அவர் இடுப்பு உயரத்துக்கு வந்தது. விரைந்து வந்த பந்தின் வேகத்தை சரியாகக் கணித்து, தன் உயரத்தைக் குறைத்து 'ரிவர்ஸ் கப்' முறையில் சிறப்பாக அந்தப் பந்தைப் பிடித்தார் அவர். கிளாசன் கேட்சை சால்ட் பிடித்தது விவாதத்துக்கு உட்படக்கூடியதுதான். சிலர் அவர் பவுண்டரி எல்லையைத் தொடவில்லை என்றும், சிலர் அவர் தொட்டுவிட்டார் என்றும் கருதுகிறார்கள். அது எப்படியாக இருந்தாலும், சால்ட் அதைப் பிடித்த விதம் அசாத்தியமானது. அவர் முதலில் நின்றிருந்த இடத்துக்கும் பவுண்டரி எல்லைக்கும் பெரிய இடைவெளி இல்லை. அப்படியொரு நிலையில் அவர் பின்னால் தன் உடல் பாரத்தைத் தள்ளவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது அவரையும் பின்னுக்குத் தள்ளியது. பவுண்டரி எல்லையுடனான இடைவெளி குறைவாக இருக்கும்போது அதைத் தாண்டாமல் இருப்பது சாத்தியமில்லை. ஆனால், பின்னால் அப்படியே கரணம் அடித்து எல்லையைத் தாண்டாமல் மைதானத்துக்குள்ளேயே இருந்தார் சால்ட். பட மூலாதாரம்,Getty Images அவர் பிடித்த மூன்றாவது கேட்ச் அதையெல்லாம் விடக் கடினமானது. இஷான் கிஷன் அடித்த பந்தை டீப் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் நின்றிருந்த அவர் வலது புறம் ஓடி ஒற்றைக் கையை நீட்டி டைவ் அடித்துப் பிடித்தார் அவர். யாருமே அப்படியொரு கேட்ச் பிடிக்கப்படும் என்று நினைத்திருக்கவில்லை. ரசிகர்கள் மட்டுமல்லாதும் ஆர்சிபி வீரர்களுமே கூட அதை ஆச்சர்யத்துடனும் அதிர்ச்சியுடனுமே பார்த்தார்கள். ஹெட், கிளாசன், கிஷன் என மூன்றுமே மிகப் பெரிய விக்கெட்டுகள். அதிலும் கிளாசன் மற்றும் கிஷன் இருவரும் நன்கு ஆடிக்கொண்டிருந்த வீரர்கள். அந்தத் தருணங்களில் அப்படியான கடினமான கேட்ச்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயம் சன்ரைசர்ஸின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும். அதிரடியான 3 இன்னிங்ஸ்கள் 202 ரன்களை சேஸ் செய்த ஆர்சிபி அதை 15.4 ஓவர்களிலேயே எட்டி ஐபிஎல் சாதனை படைத்திருக்கிறது. அந்த அணியின் ரன்ரேட்டும் பெருமளவு (+ 2.907) அதிகமாகியிருக்கிறது. இந்தப் பெரும் வெற்றிக் காரணம் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் மற்றும் ரஜத் பட்டிதார் ஆடிய அதிரடி ஆட்டம். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய படிக்கல் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துத்தான் இன்னிங்ஸைத் தொடங்கினார். மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்த அவர் டேவிட் பெய்ன், ஹர்ஷல் பட்டேல், நித்திஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட் என அனைவரின் பந்துவீச்சையும் அடித்து ஆடினார். அவருடைய 'டைமிங்' மிகச் சிறப்பாக இருந்தது. 21 பந்துகளில் அரைசதம் கடந்த அவர், 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரஜத் பட்டிதார் ஒருவகையில் படிக்கலை விடவும் வேகமாக ஆடினார். அவர் 12 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு எதிராக அதீத அதிரடி காட்டும் பட்டிதார், இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அதே மாதிரியான அதிரடியைக் காட்டினார். அவர் அடித்த 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே ஸ்பின்னுக்கு எதிராக வந்தது. பட மூலாதாரம்,Getty Images படிக்கல் 234.61 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிச் சென்றிருக்க, பட்டிதாரோ 258.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருந்தார். அவர் அவுட்டானபோதே தேவைப்படும் ரன்ரேட் 6 ரன்களுக்கும் குறைவாகிவிட்டிருந்தது. கடைசி கட்டத்தில் விராட் கோலியுமே அதே அதிரடியைக் கையில் எடுத்து வழக்கம்போல் போட்டியை ஆர்சிபி-க்கு முடித்துக் கொடுத்தார். ஆரம்ப கட்டத்தில் சற்று நிதானமாக விளையாடியவர் மெல்ல ரன் ஸ்கோரிங் ரேட்டைக் கூட்டி ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 64வது அரைசதத்தைப் பூர்த்தி செய்தார். இந்த 3 அதிரடி இன்னிங்ஸ்கள் ஆர்சிபி அணி இந்த அதிரடி சேஸை அரங்கேற்றி சிறந்த ரன்ரேட்டும் பெற உதவியது. தங்கள் அணியின் அதிரடி பேட்டிங் பற்றிப் பேசிய கேப்டன் பட்டிதார், "சரியான திட்டமிடல் என்று எதுவும் இல்லை. ஆடுகளத்தை கணித்தோம், அது நன்றாக இருந்தது, அதற்கேற்ப ஆடினோம். படிக்கல் மற்றும் கோலியின் இன்னிங்ஸ் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது." என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c145jvz16ndo
  20. அமெரிக்கா முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய போராட்டம் Mar 29, 2026 - 11:30 AM அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக பாரிய எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. இது முன்னதாக மில்லியன் கணக்கான மக்கள் பங்கேற்ற "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தின் மூன்றாம் கட்டத்தை குறிப்பதாக அமைந்துள்ளது. ஈரானுடனான போர், கூட்டாட்சி குடியேற்ற சட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு உள்ளிட்ட ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த கொள்கைகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். நியூயோர்க், வொஷிங்டன் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது போராட்டக்காரர்கள், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஏனைய நிர்வாக அதிகாரிகளின் உருவப்பொம்மைகளை ஏந்தி, அவர்களை பதவிகளில் இருந்து நீக்குமாறும் கைது செய்யுமாறும் கோஷங்களை எழுப்பி வருவதாகக் கூறப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmnbcna85000f356puzf7zq5a
  21. ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார் Mar 29, 2026 - 08:02 AM ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக 'வொஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது பல வாரங்களாக நீடிக்கக்கூடிய ஒரு பாரிய இராணுவ நடவடிக்கையாக அமையுமென அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான போர்த் திட்டங்கள் அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகத்தினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி தனது அனுமதியை வழங்குவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, சுமார் 4,000 மெரைன் படைவீரர்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை நோக்கிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. அத்துடன், அமெரிக்காவின் 82ஆவது வான்வழிப் படையின் பாரசூட் படைவீரர்களும் இந்த இராணுவ நடவடிக்கைக்குத் தயாராக உள்ளதாக அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmnb4kgfl0007356pb4v79e4v
  22. ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் இருப்பதற்கான காரணம் என்ன? பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,(க்ரெடிட்ஸ்: கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்) கட்டுரை தகவல் ஜோஸ்லின் டிம்பர்லி 3 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள் 5,000 ஆண்டுகள் பழமையான ஒரு மர்மமான முடிவு, இன்றும் நாம் நேரத்தைக் கணக்கிடும் முறைக்கு நேரடி காரணமாக அமைந்தது. அக்டோபர் 1793-இல், புதிதாக நிறுவப்பட்ட பிரெஞ்சு குடியரசு ஒரு துரதிர்ஷ்டவசமான சோதனையைத் தொடங்கியது. அந்த சோதனை நேரத்தை மாற்ற முடிவு செய்தது. இனி ஒரு நாள் 24 மணிநேரத்திற்குப் பதிலாக 10 மணிநேரங்களாகப் பிரிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மணிநேரமும் 100 ' நிமிடங்களை' கொண்டிருக்கும், அவை ஒவ்வொன்றும் 100 ' விநாடிகளால்'ஆனவை என்றும் புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். இந்த நேர முறைமை ஒரு விரிவான புரட்சிகர காலண்டரின் ஒரு பகுதியாகும், இது புதிய 10 நாள் வாரத்தை உள்ளடக்கிய ஆண்டின் கட்டமைப்பை பகுத்தறிவு ரீதியாக்குவதை (மற்றும் கிறிஸ்தவமயமாக்கலை நீக்குவதை) நோக்கமாகக் கொண்டது. தற்போதுள்ள கடிகாரங்களை இந்த தசம முறைக்கு மாற்றும் பணிகள் விரைவில் தொடங்கின. நகர அரங்குகளில் தசம கடிகாரங்கள் பொருத்தப்பட்டன மற்றும் அதிகாரப்பூர்வ நடவடிக்கைகள் புதிய காலண்டரைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்டன. இது விரைவில் தீராத தலைவலியை ஏற்படுத்தத் தொடங்கியது என்று பிரிட்டனின் லண்டனில் உள்ள ராயல் மியூசியம்ஸ் கிரீன்விச்சின் அறிவியல் தொடர்பாளர் ஃபின் புரிட்ஜ் கூறுகிறார். இந்த அருங்காட்சியகம் தான் ராயல் வானியல் ஆய்வகம் அமைந்துள்ள இடம் மற்றும் கிரீன்விச் மீன்டைம் நிறுவப்பட்ட இடமாகும். ஏற்கனவே இருந்த கடிகாரங்களை மறுவடிவமைப்பு செய்வதும் மாற்றுவதும் மிகவும் கடினமாக இருந்தது. இந்த முறை பிரான்சை அண்டை நாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தியது, அதே நேரத்தில் கிராமப்புற மக்கள் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே ஓய்வு நாள் வருவதை வெறுத்தனர். இறுதியில், இந்த தசம நேர முறை பிரான்சில் ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்கவில்லை. இருப்பினும், ஒரு நாளைக்கு 24 மணிநேரம், ஒரு மணிநேரத்திற்கு 60 நிமிடங்கள் மற்றும் ஒரு நிமிடத்திற்கு 60 விநாடிகள் என்று நாம் எவ்வாறு கணக்கிடத் தொடங்கினோம், இன்றும் எப்படி கணக்கிடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள, காலக்கணிப்பு முறை தோன்றுவதற்கு முந்தைய காலத்திற்கு நாம் திரும்பிச் செல்ல வேண்டும். ஏனெனில் இது ஆரம்பகால எண் முறைமைகளில் ஒன்றின் கதையாகும். இது தான் நம்மை இந்தப் பாதையில் பயணிக்கத் தூண்டியது. மேலும் இந்தச் சிக்கலான முறை அதனை உருவாக்கிய நாகரிகங்களை விட நீண்ட காலம் நீடித்திருப்பதையும் இது விளக்குகிறது. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... அறுபதின்ம முறையின் அடித்தளம் இதன் தொடக்கத்தில் இருப்பவர்கள் சுமேரியர்கள். மெசபடோமியாவில் (தற்போதைய இராக் பகுதி) சுமார் கி.மு. 5300-1940 வரை வாழ்ந்த பழங்கால மக்கள் மற்றும் நகரங்களை உருவாக்கிய முதல் நாகரிகங்களில் சுமேரியர்களும் அடங்குவர். நீர்ப்பாசனம் மற்றும் ஏர் உழுதல் உள்ளிட்ட பல கண்டுபிடிப்புகளுடன், முதன்முதலில் அறியப்பட்ட எழுத்து முறையை உருவாக்கிய பெருமையும் இவர்களையே சாரும். இது 60-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு எண் முறையை உள்ளடக்கியிருந்தது. உங்கள் கையை உங்களுக்கு முன்னால் உயர்த்திப் பிடித்து, ஒரு விரலை மடக்கிப் பார்த்தால் அதில் மூன்று மூட்டுகள் இருப்பதைக் காண்பீர்கள். ஒரு கையின் விரல்களில் உள்ள அனைத்து மூட்டுகளையும் (கட்டைவிரலைத் தவிர) எண்ணினால் 12 வரும். உங்கள் மற்றொரு கையின் ஒரு விரலைப் பயன்படுத்தி இந்த 12-ஐ ஒன்று எனக் கணக்கிட்டு, மீண்டும் முதல் கையில் 12 வரை எண்ணைத் தொடங்குங்கள். உங்கள் இரண்டாவது கையின் ஐந்து விரல்களும் பயன்படுத்தப்படும் வரை இதைச் செய்யுங்கள். இப்போது நீங்கள் எதை எட்டியிருப்பீர்கள்? அறுபது. சுமேரியர்கள் தங்களின் வளர்ந்து வரும் கணித முறையை 10-ஐ அடிப்படையாகக் கொள்ளாமல், 60-ஐ அடிப்படையாகக் கொண்டு ஏன் உருவாக்கினார்கள் என்பது குறித்த ஊகக் கோட்பாடுகளில் இதுவும் ஒன்று. இந்த முடிவு இன்றும் நாம் நேரத்தை அளவிடும் முறையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பட மூலாதாரம்,The Fitzwilliam Museum, University of Cambridge படக்குறிப்பு,18-ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சு புரட்சிகர அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நேர முறையை ஒரு தசம கடிகாரம் காட்டுகிறது (படம் : தி ஃபிட்ஸ்வில்லியம் மியூசியம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்). வளர்ந்து வரும் தங்கள் நகரங்களுக்கு ஆதாரமாக விளங்கிய, மேலும் பெரிதாகவும் சிக்கலாகவும் மாறிய விவசாய முறையைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமே, அவர்கள் எண்களை எழுதத் தூண்டுகோலாக இருந்தது என்கிறார் கனடாவின் நியூ பிரன்சுவிக் பல்கலைக்கழகத்தின் கியூனிஃபார்ம் (பண்டைய மத்திய கிழக்கின் ஆரம்பகால எழுத்து முறைகள்) கலாச்சார நிபுணர் மார்ட்டின் வில்லிஸ் மன்ரோ. எண்களைக் குறித்து வைப்பதற்காக, அவர்கள் பெரும்பாலும் ஸ்மார்ட்போன் அளவு அல்லது அதைவிட சிறியதான சிறிய களிமண் பலகைகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். மென்மையான களிமண்ணில் விவரங்களைப் பொறித்தனர். விரைவில் மற்ற சித்திரக் குறியீடுகளும் தோன்றி, சுமேரியர்களின் புகழ்பெற்ற கியூனிஃபார்ம் வடிவ எழுத்துகளாக வளர்ந்தன . 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இந்த களிமண் பலகைகள் கண்டறியப்பட்டு அதன் பொருள் அறியப்படத் தொடங்கியது. சுமேரியர்கள் பலவிதமான எண் முறைகளைப் பயன்படுத்தியதை அவை காட்டுகின்றன. ஆனால் கணிதத்திற்கும், அதன் மூலம் வானியல் மற்றும் நேரத்திற்கும் மிக முக்கியமானதாக 'செக்ஸாஜெசிமல்' எனப்படும் அறுபதின்ம முறை (60-ஐ அடிப்படையாகக் கொண்ட) முறை உருவானது என்கிறார் மன்ரோ. நாம் இப்போது 10-ஐப் பயன்படுத்துவது போன்றே சுமேரியர்கள் 60-ஐப் பயன்படுத்தினர். நாம் ஒன்பதை எட்டும்போது, இடதுபுறம் ஒரு இடத்திற்கு நகர்ந்து ஒன்றை எழுதி, வலதுபுறம் பூஜ்ஜியத்தைச் சேர்க்கிறோம் என்று அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் துல்லியமான அறிவியல் மற்றும் தொல்பொருள் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்ற எரிகா மெஸாரோஸ் கூறுகிறார். "அறுபதின்ம முறைமைக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் 59 வரை சென்றுவிட்டு, 59-ஐ விட அதிக எண்ணைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஒரு இடத்திற்குத் தள்ளி ஒன்றை மட்டும் பயன்படுத்துகிறார்கள்"என்று அவர் குறிப்பிட்டார். மேலே கூறப்பட்ட விரல் எண்ணும் கோட்பாடு கவர்ச்சிகரமாக இருந்தாலும், சுமேரியர்கள் ஏன் 60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. "60 எங்கிருந்து வந்தது என்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை" என்று மன்ரோ கூறுகிறார். இந்த முறை சுமேரியர்களுக்கு முன்பே இருந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் பயன்பாட்டு எளிமை தெளிவாக உள்ளது. பின்னங்கள் அல்லது தசமங்கள் தேவையின்றி 60-ஐ ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, 10, 12, 15, 20, 30 மற்றும் 60 ஆகிய எண்களால் வகுக்க முடியும். 10-ஐ ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10-ஆல் மட்டுமே வகுக்க முடியும் என்பதோடு ஒப்பிடும்போது இதன் நன்மைகள் புரியத் தொடங்கும். "கணக்கியல், வரிகள் அல்லது நிலங்களை அளவிடுதல் மற்றும் வாரிசுரிமைக்காக நிலங்களைப் பிரித்தல் போன்ற நடைமுறை நோக்கங்களுக்காக நீங்கள் எண்களை உருவாக்குகிறீர்கள் என்றால், இந்த கணிதச் செயல்பாடுகளைச் செய்ய எளிதான வழி இருப்பது மிகவும் உதவியாக இருக்கும்" என்கிறார் மெஸாரோஸ். காலத்தின் தோற்றம் சுமேரியர்கள் நேரத்தைப் பயன்படுத்தியதற்கான தெளிவான சான்றுகள் இல்லை என்றாலும், கி.மு. 1000-இல் பாபிலோனியர்களால் (சுமேரியர்களுக்குப் பிறகு வந்த ஒரு பண்டைய மெசபடோமிய நாகரிகம்) சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் முதன்முதலில் ஆவணப்படுத்தப்படுவதற்கு முன்னரே அந்தப் பிராந்தியத்தில் காலக்கணிப்பு முறை இருந்திருக்க வாய்ப்புள்ளது என்று மன்ரோ கூறுகிறார். ஒரு நாளை மணிநேரங்களாகப் பிரித்ததாக அறியப்படும் முதல் நாகரிகம் பண்டைய எகிப்தியர்களுடையது தான் என்று சுவிட்சர்லாந்தின் பாசல் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் வானியலாளர் ரீட்டா கௌட்ச்சி கூறுகிறார். இது கி.மு. 2500-ஆம் ஆண்டைச் சேர்ந்த மத நூல்களில் காணப்படுகிறது. மணிநேரங்கள் தொடர்பாக முதலில் அறியப்பட்ட பொருட்கள் ஆரம்பத்தில் இரவின் 12 மணிநேரங்களைக் குறிக்கின்றன. இவை கி.மு. 2100 மற்றும் 1800-க்கு இடைப்பட்ட காலத்தில் எகிப்திய பிரபுக்களின் சவப்பெட்டிகளின் உட்புற மூடியில் காணப்பட்ட டயகனால் ஸ்டார் கிளாக் என்று கௌட்ச்சி விளக்குகிறார். பட மூலாதாரம்,The Board of Trustees of the Science Museum, London படக்குறிப்பு,நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளில் ஒன்றான சூரியக் கடிகாரங்கள், கி.மு. 1500 வாக்கில் எகிப்தில் தோன்றத் தொடங்கின (படம் : தி போர்டு ஆஃப் டிரஸ்டீஸ் ஆஃப் தி சயின்ஸ் மியூசியம், லண்டன்). எகிப்தியர்கள் ஏன் சரியாக 12 என்ற உட்பிரிவைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பது உறுதியாகத் தெரியவில்லை . இதுவே இறுதியில் முழு நாளிலும் 24 மணிநேரங்கள் ஏற்பட வழிவகுத்தது. எகிப்தியர்கள் 12 விண்மீன் தொகுப்புகளைக் கொண்ட ஒரு ராசி சுழற்சியைக் கொண்டிருந்தனர், ஆனால் இது 12 மணிநேரங்கள் குறித்த முதல் குறிப்புகளுக்குப் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கலாம். ஒரு கையின் விரல்கள் மற்றும் மூட்டுகளைப் பயன்படுத்தி 12 வரை எண்ணுவது மற்றொரு சாத்தியமாகும். அவர்கள் தேர்ந்தெடுத்த 10 நாள் வாரம் என்ற கணக்கு சில நட்சத்திரங்களின் தெரிவுநிலையுடன் எவ்வாறு இணைந்தது என்பதன் காரணமாகவும் இது இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர். நேரத்தை அளவிடுவதற்கான ஆரம்பகால கருவிகளான சூரியக் கடிகாரங்கள் மற்றும் நீர்க்கடிகாரங்கள் கி.மு. 1500-இல் எகிப்தில் தோன்றின. அவற்றில் சில அன்றாட வேலைகளின் போது பயன்படுத்தப்பட்டன, ஆனால் பெரும்பாலானவை காலக்கணிப்பை விட "மத ரீதியான சடங்குகள் மற்றும் வழிபாடுகளுடன் தொடர்புடையதாகவே" இருந்திருக்கலாம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "தனிப்பட்ட முறையில், அவற்றில் பல கடவுள்களுக்கு வழங்கப்பட்ட காணிக்கைகள் அல்லது நேர்த்திக்கடன்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று கூறும் அவர், "அந்தக் காலத்தின் அறிவியல் பூர்வமான காலக்கணிப்பு குறித்து எங்களிடம் அதிக தகவல்கள் இல்லை"என்றும் குறிப்பிட்டார். ஆரம்பத்தில், அன்றாட வாழ்க்கை மற்றும் வணிகம் குறித்த நூல்களில், மிகச்சிறிய நேர அலகு பொதுவாக வேலை மாற்றமாகவே இருந்தது, இது பொதுவாகக் காலை அல்லது மதியம் என்று கற்பனை செய்யப்பட்டது என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் பண்டைய எகிப்தின் ரோமானிய காலத்திலிருந்து (கி.மு. 30 முதல்), மணிநேரங்கள் ஒரு தரநிலையாக மாறின, அதனுடன் அரை மணிநேரங்களும் தோன்றத் தொடங்கின என்றும் அவர் தெரிவித்தார். நிமிடங்களின் வருகை இதற்கிடையில், பாபிலோனியர்களும் மணிநேரங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுவந்தனர். நேரத்தைக் கணக்கிடும் நோக்கத்திற்காக இல்லாவிட்டாலும், ஒரு மணிநேரத்தை மிகச்சிறிய அலகுகளாகப் பிரித்த முதல் நபர்களாக இறுதியில் அவர்களே இருந்தனர். கி.மு. 2000 முதல் கி.மு. 540 வரை செழித்தோங்கிய பாபிலோனியர்கள், சுமேரியர்களிடமிருந்து கியூனிஃபார்ம் எழுத்து முறை மற்றும் அறுபதின்ம எண் முறை ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டனர். கி.மு. 1000-ஆம் ஆண்டில், சூரியன் வானில் மீண்டும் அதே நிலைக்குத் திரும்ப எடுக்கும் காலத்தை (360 நாட்களுக்குச் சற்று அதிகம்) அடிப்படையாகக் கொண்ட ஒரு காலண்டரை அவர்கள் உருவாக்கியிருந்தனர் என்று மெஸாரோஸ் கூறுகிறார். ஏற்கனவே 60-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணும் முறையைப் பயன்படுத்தும் ஒரு நாகரிகத்திற்கு இது ஒரு வசதியான எண்ணாக இருந்தது. "60-ஐ அடிப்படையாகக் கொண்ட முறையில் இது எவ்வளவு சிறப்பாக இருக்கிறது பாருங்கள்" என்கிறார் மெஸாரோஸ். "உண்மையில், இது தலா 30 நாட்களைக் கொண்ட 12 மாதங்களுக்கு மிகச் சரியாக வழிவகுத்தது" இது நிலவு சுழற்சியுடனும் ஒத்துப்போனது என்றும் அவர் கூறுகிறார். எகிப்தியர்களைப் போலவே, பகலையும் இரவையும் தலா 12 ஆகப் பிரிக்கும் அன்றாட பயன்பாட்டிற்கான நடைமுறை நேர முறையை பாபிலோனியர்கள் உருவாக்கினர். இந்த "பருவகால மணிநேரங்களின்" நீளம், பகல் மற்றும் இரவின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும். "இரவு வானத்தை 12 மாதங்களாகவும் 12 ராசிகளாகவும் பிரிப்பதால், பகலையும் 12 ஆகப் பிரித்தோம்" என்கிறார் மெஸாரோஸ். வேறு பல பண்டைய நாகரிகங்களும் பருவகால மணிநேரங்களைப் பயன்படுத்தின, அவை 15-ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவிலும் 19-ஆம் நூற்றாண்டு ஜப்பானிலும் பயன்பாட்டில் இருந்தன. இருப்பினும், இந்த பருவகால நேரம் நடைமுறை பயன்பாட்டிற்காக ஒருபோதும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்படவில்லை என்று மன்ரோ குறிப்பிடுகிறார். "[அது] நவீன காலத்தின் ஆரம்பம் வரை ஒரு விஷயமாகவே இல்லை... மெசபடோமியா மற்றும் பிற பண்டைய கலாச்சாரங்களில் அது இல்லை, ஏனென்றால் அதற்கு உண்மையில் எந்தத் தேவையும் இருக்கவில்லை"என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,Cuneiform Digital Library Initiative படக்குறிப்பு,கி.மு. 3200 காலத்தைச் சேர்ந்த இந்தச் சுமேரியப் பலகை, மிகப் பழமையான கணிதப் பயிற்சிகளைக் கொண்டுள்ளது (படம் : கியூனிஃபார்ம் டிஜிட்டல் லைப்ரரி இனிஷியேடிவ்). பாபிலோனியர்கள் வானியல் நிகழ்வுகளைக் கணக்கிடுவதற்கும் அளவிடுவதற்கும் மற்றொரு நேர முறையை உருவாக்கினர், ஆனால் இது அன்றாட பயன்பாட்டிற்கானது அல்ல. இது ஒரு நாளை 12 "பெரு" ஆகப் பிரித்தது, இதனை நவீன காலத்தின் இரண்டு மணிநேரங்களுக்குச் சமமாகக் கருதலாம். இதைப் பயன்படுத்திய ஒரே பண்டைய கலாச்சாரம் பாபிலோனியா மட்டுமல்ல. உதாரணமாக, இவை பண்டைய சீனா மற்றும் ஜப்பானிலும் காணப்பட்டன. தங்கள் கணக்கீடுகளில் இன்னும் நுணுக்கமான அளவீடுகளின் தேவை காரணமாக, பாபிலோனியர்கள் இந்த இரண்டு மணிநேர 'பெரு' அலகுகளை 'உஷ்' எனப்படும் 30 பண்டைய நிமிடங்களாகப் பிரிக்கத் தொடங்கினர். இதில் ஒவ்வொரு நிமிடமும் நமது தற்போதைய நான்கு நிமிடங்களுக்குச் சமம். இவை மேலும் 60-ஆல் வகுக்கப்பட்டு 'நிண்டா' எனப்படும் சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டன, அவை ஒவ்வொன்றும் சுமார் நான்கு நவீன வினாடிகளுக்குச் சமம். "அறுபதின்ம முறைமையில் நாம் விஷயங்களை 60 குழுக்களாகப் பிரிப்பதாலேயே" இந்த உட்பிரிவுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மெஸாரோஸ் கூறுகிறார். இருப்பினும், பாபிலோனியர்கள் இதனை "நேரத்தைப் பிரிப்பதாக நினைக்கவில்லை" என்றும், "அவர்கள் இதனை வானில் தூரத்தை அளவிடும் எண்களை அல்லது கிரகங்களின் வேகத்தைப் பிரிப்பதாகவே நினைத்தார்கள்"என்றும் மன்ரோ குறிப்பிடுகிறார். இதுபோன்ற அனைத்து பண்டைய கால வளர்ச்சி முறைகளிலும் யார் யாருடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள் என்று துல்லியமாகக் கூறுவது கடினம் என்று கௌட்ச்சி கூறுகிறார். "சுமார் கி.மு. 330 முதல், அலெக்ஸாண்ட்ரியாவில் புதிய அறிவியல் மையம் உருவானதால், எகிப்து, அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் மற்றும் அவர்களின் கருத்துக்கள் ஒன்றிணைந்த ஒரு சங்கமமாக மாறியது," என்று கூறும் அவர், "இதைத்தான் நாம் ஹெலனிஸ்டிக் உலகம் என்று அழைக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பண்டைய கிரேக்கர்கள் பாபிலோனிய வானியல் நேர முறையை ஏற்றுக்கொண்டனர் என்பது தெளிவாகிறது என்று மெஸாரோஸ் கூறுகிறார். மேலும், "அவர்கள் அதே பிரிவை வைத்திருந்தனர், ஏனெனில் இது ஏற்கனவே உள்ள கண்டுபிடிப்புகளுடன் புதியவற்றைச் சேர்க்க அவர்களுக்கு அனுமதி அளித்தது... இது பாபிலோனியர்களுக்கு நன்றாக வேலை செய்த ஒரு அமைப்பாக இருந்ததால், அவர்களுக்குப் பின் வந்தவர்கள் வானியல் தரவு மற்றும் மரபுகளைப் பெறுவதற்காக அதை அதை முழுமையாக ஏற்றுக்கொண்டனர்"என்றும் அவர் விளக்கினார். வினாடிகளை எண்ணுதல் "மக்கள் பேசுவதற்கு சமமான நேரம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக" கிரேக்கர்கள் தங்கள் அரசவையில் மணல் கடிகாரங்களை வைத்திருந்தாலும், அவர்கள் ஏற்றுக்கொண்ட பாபிலோனிய நேர முறையானது ஜோதிடர்களால் கருத்தியல் ரீதியாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலும் "அன்றாட வாழ்க்கைக்கு உண்மையில் பொருத்தமற்றதாக இருந்தது" என்று கௌட்ச்சி கூறுகிறார். ஆனால் ஹெலனிஸ்டிக் கலாச்சார சங்கமத்திலிருந்து உருவான மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் போன்ற கருத்துக்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்து இன்றைய நாள் வரை வந்துள்ளன. இருப்பினும், சில நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் நிமிடங்களும் விநாடிகளும் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படும் அளவிற்கு காலக்கணிப்புக் கருவிகள் துல்லியமானதாக மாறின. வினாடி என்பது இப்போது எண்ணற்ற அறிவியல் வரையறைகளில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் வினாடியை விடச் சிறிய நேர அலகுகளைக் கணக்கிடத் தொடங்கியவுடன், விஞ்ஞானிகள் மெட்ரிக் முறைக்கு மாறி, அதனை மில்லி மற்றும் மைக்ரோ விநாடிகளாக (முறையே ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு மற்றும் மில்லியனில் ஒரு பங்கு) பிரித்தனர். 20-ஆம் நூற்றாண்டில், அணு கடிகாரங்கள் வினாடியை துல்லியமாக மறுவரையறை செய்யசெய்ய விஞ்ஞானிகளுக்கு உதவின. சூரியனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட வரையறையிலிருந்து, சீசியம்-133 அணுக்களால் மைக்ரோவேவ் கதிர்வீச்சை உறிஞ்சுதல் மற்றும் உமிழ்தல் அடிப்படையிலான துல்லியமான மதிப்பிற்கு அது மாறியது. இன்று, நமது உலகளாவிய அணு கடிகாரங்களின் வலையமைப்பு கிட்டத்தட்ட அனைத்து நவீன கடிகாரங்களின் நேரத்தையும் பராமரிக்கிறது, மேலும் இது இணையம் முதல் ஜிபிஎஸ் மற்றும் அதிநவீன எம்ஆர்ஐ இமேஜிங் வரை அனைத்திற்கும் பின்னணியாக உள்ளது . படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் இருப்பினும், கால கணக்கீட்டின் வரலாற்றைக் கண்டறியும்போது, அது உண்மையில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒன்று என்பதும், மனித முடிவுகளால் தீர்மானிக்கப்பட்டது என்பதும் வெளிப்படுகிறது. மணிநேரம், நிமிடங்கள் மற்றும் வினாடிகள் ஆகியவை தொடர்ச்சியான தேர்வுகள், தற்செயல்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாக நம்மிடம் வந்தடைந்தன. ஆனால் அவை பல நூற்றாண்டுகளாகப் பயனுள்ள பாரம்பரியமாக நம்மிடம் நிலைத்துவிட்டன. பண்டைய காலத்தின் இந்தத் தாக்கம் எவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளது என்றால், இப்போது இந்த அமைப்பை மாற்றுவது கையாளுவதற்கு மிகவும் கடினமான ஒன்றாக இருக்கலாம். 18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நேரத்தைத் தசம முறைப்படுத்த முயன்றபோது கூட, நடைமுறையில் அந்தப் புதிய முறை அரிதாகவே பயன்படுத்தப்பட்டது . அதே சமயம் , குடியரசின் தூர அளவீடுகளையும் நாணயத்தையும் தசம முறைப்படுத்துவதற்கான இதே போன்ற முயற்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தசம நேர முறை வெறும் 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது, இருப்பினும் அந்த நாட்காட்டி சுமார் ஒரு தசாப்த காலத்திற்கு ஓரளவு பயன்பாட்டில் இருந்தது. "இது தொடர்பாக முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால் அது தோல்வியடைந்தது,அது மக்களிடையே எடுபடவில்லை," என்று புரிட்ஜ் கூறுகிறார். 1795-ஆம் ஆண்டு பிரெஞ்சு தேசிய மாநாட்டின் உறுப்பினரான கிளாட்-அன்டோயின் பிரியர் ஆற்றிய உரையே, தசம நேர முறைக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக இருந்திருக்கலாம். இது யாருக்கும் எந்தவிதமான குறிப்பிடத்தக்க நன்மையும் அளிக்கவில்லை என்பதோடு மட்டுமல்லாமல், மற்ற புதிய மெட்ரிக் அளவீட்டு முறைகள் மீது இது ஒரு கெட்ட பெயரை உருவாக்குவதாகவும், அவை இதற்கு மாறாகப் பயனுள்ளவை என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk14g8vj06o
  23. RMV ஆணையாளர் நாயகம் விளக்கமறியலில் Mar 28, 2026 - 07:39 PM மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குருநாகல் பிலஸ்ஸ நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கெப் ரக வாகனமொன்றின் சேஸி இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியாகப் பதிவு செய்வதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார். https://adaderanatamil.lk/news/cmnaemvku000t356phszh55eo
  24. அர்ச்சுனா மீதான அவதூறு வழக்கு: நீதிமன்றில் கேதீஸ்வரன் சாட்சியம்! Mar 28, 2026 - 08:40 PM யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் அவர்களால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராகத் தொடரப்பட்ட அவதூறு வழக்கு, நேற்றைய தினம் (27) பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பணிப்பாளர் கேதீஸ்வரன் சாட்சியமளித்தார். கடந்த 04.07.2024 அன்று சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா பணியாற்றிய போது, யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேதீஸ்வரன் வலி நிவாரணிகளை போதைப்பொருட்களாக மருந்தகங்கள் ஊடாகப் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாக அடிப்படையற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். இந்தக் கூற்றுத் தொடர்பாகவே இந்த அவதூறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கின் ஆரம்ப விசாரணைகளின் போது, குறித்த காணொளி தன்னாலேயே பதிவேற்றம் செய்யப்பட்டதையும், அந்தத் தகவல் தன்னாலேயே கூறப்பட்டதையும் அர்ச்சுனா ஏற்றுக்கொண்டிருந்தார். மேலும், அக்குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை நீதிமன்றில் நிரூபிப்பதாகத் தமது தரப்பு நியாயத்திலும் அவர் குறிப்பிட்டிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை சாட்சியமளித்த வைத்தியர் கேதீஸ்வரன், தமது பணிக்காலத்தில் வலி நிவாரணிகள் மருத்துவச் சீட்டு இன்றி வழங்கப்படுவது தொடர்பாகக் கிடைத்த முறைப்பாடுகள் குறித்தும், அது தொடர்பில் 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கையொன்றை நீதிமன்றில் சமர்ப்பித்தார். மருந்தகங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் சான்றாதாரங்களுடன் விளக்கமளித்தார். விசாரணையின் போது அர்ச்சுனாவினால் வெளியிடப்பட்ட காணொளி நீதிமன்றில் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. இதன்போது அர்ச்சுனாவும் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார். சாட்சியமளித்த பணிப்பாளர் கேதீஸ்வரன், தமது 35 ஆண்டுகால மருத்துவச் சேவையில் எவ்விதக் களங்கமும் ஏற்படாத நிலையில், திட்டமிட்டு முன்வைக்கப்பட்ட இக்குற்றச்சாட்டானது தமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக இந்தக் காணொளி வெளியானதன் பின்னர், வெளிநாடுகளிலிருந்து பலர் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் சாட்சியத்தில் குறிப்பிட்டார். அடுத்த அமர்வின் போது பணிப்பாளர் கேதீஸ்வரன், அர்ச்சுனாவின் சட்டத்தரணியால் குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். பணிப்பாளர் கேதீஸ்வரன் சார்பில் சட்டத்தரணிகளான க. குமணன், த. தினேஷ், சி. அபினாஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் முன்னிலையாகியிருந்தார். அர்ச்சுனா சார்பில் சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரனின் அறிவுறுத்தலில் சிரேஷ்ட சட்டத்தரணி சி. கனகசிங்கம் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmnags05d000v356pylfilq5q

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.