Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன? சென்னை: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.17) காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் அவர், மகளிர் உரிமைத் தொகையோடு, ரூ.2000 கோடை கால சிறப்புத் தொகை வழங்கப்பட்டதால் ‘தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது’ என்று பெருமிதத்தை வெளிப்படுத்தினார். இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து தங்கம் தென்னரசு ஆற்றிய உரை: பெண்களின் வளர்ச்சியை மையப்படுத்தி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பேருந்து பயணத்தின் மூலம் பெண்கள் மாதத்துக்கு சராசரியாக ரூ.888 சேமிக்கிறார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவுக்கே முன்னோடியாக உள்ளது. ரூ.5000 வழங்கப்பட்டதால் தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உள்ளது. மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 10,469 புதிய வீடுகள் கட்ட ரூ.630 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றில், 6,010 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், மற்ற வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவியர்கள் கல்லூரிகளில் பயிலும் போது மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கி ஊக்கப்படுத்தும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ் இதுவரை 6,95,296 மாணவியர் பயன்பெற்றுள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளிப்படிப்பினைத் தொடர, மாதம் ரூ.2,000 வழங்கும் 'அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ், இதுவரை 10,637 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் 23,56,623 நபர்களுக்கு. வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆட்சேபணையற்ற அரசு புறம்போக்கு நிலங்களில், சென்னை மற்றும் இதர நகர்ப்புரப் பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு குடிமைப்பணித் தேர்வில் வென்ற தமிழ்நாட்டைச் சார்ந்த 59 நபர்களில் 52 நபர்கள், ‘நான் முதல்வன்’ திட்டப் பயனாளிகள் ஆவர். தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த 5,403 விளையாட்டு வீரர் / வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையாக ரூ.176 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.101 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்க பல்வேறு மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும் 199 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 101 நூலகம் மற்றும் அறிவுசார் மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்களும், தொழில் முனைவோரும் பயன்படுத்தும் வகையில் 104 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 30 முதல்வர் படைப்பகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. 19 தோழி விடுதிகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் வீடுகள் கட்டப்படும். இதுவரை 1.71 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன, மேலும் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 6 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 38 கலை, அறிவியல் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறைக்கு ரூ.718 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . கிராம சாலைகள் திட்டத்துக்கு ரூ.8,911 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உயர் கல்வித் துறைக்கு ரூ.8,505 கோடியும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடியும், ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.28,687 கோடியும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு ரூ.1,400 கோடியும், மருத்துவத் துறைக்கு ரூ.22,090 கோடியும், தொழிலாளர் நலத் துறைக்கு ரூ.1,996 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர். 25 இடங்களில் அன்புச் சோலைகள் அமைக்கப்பட்டுள்ளன. நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மூலம் 17 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். மின்னணு துறை உற்பத்தியில் 41 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செமி கண்டக்டர் திட்டத்துக்கு 5 ஆண்டு செயல் திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.19% வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கிறது. ரூ.285 கோடியில் தமிழகத்தில் சோழர், நொய்யல், வெண்கல அருங்காட்சியங்கள் அமைக்கப்படுகின்றன. நாட்டிலேயே தொழிற்சாலைகளில் அதிகம் பெண்கள் பணிபுரியும் மாநிலமாக தமிழகம் உள்ளது. பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துக்களுக்கான கட்டணம் 1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன. ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 8 பிற மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் தமிழ் படிப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாரதியின் கனவை நிறைவேற்றும் அரசாக திமுக உள்ளது. 19.34 லட்சம் மாணவர்கள் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தால் பயன் பெறுகின்றனர். தூய்மைப் பணியாளர்களுக்கு மேலும் 30 ஆயிரம் வீடுகள் கட்டித் தரப்படும் , தமிழகத்தில் உள்ள 1048 கோயில்களுக்கு சொந்தமான ரூ.8,363 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரூ.8,100 கோடி செலவில் திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. சுற்றுலா துறையில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. சுற்றுலாத் துறைக்கு ரூ.1394 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.374 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் வீடுகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்துதல், குடிநீர் வழங்கல், கடற்கரைகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் ரூ.6,045 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்ற பின்னர் 36 லட்சத்திற்கும் மேலான வேலைவாய்ப்புகள் உருவாகும் வகையில், ரூ.1,237 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான 1,179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட 'தமிழ்நாடு கப்பல் கட்டும் கொள்கை விரைவில் வெளியிடப்படும். அப்போது. கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய ஒரு மையமாக தமிழ்நாடு உருவெடுக்கும். தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டப் பணிகள், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் (TANFINET) மூலம், தற்போது 11,953 கிராம ஊராட்சிகளில் 95% முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் மூலம், நெய்தல் மீட்சி இயக்கம் மற்றும் தொடர்புடைய திட்டங்களின் கீழ் 3,733 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்திக் காடுகள் மீள்உருவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் மூன்று வழித்தடங்களில், 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ. தூரத்திற்கான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 14.6 கி.மீ. நீளமுள்ள 11 மெட்ரோ நிலையங்களைக் கொண்ட பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தடம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும். திறமையான மாணவர்கள் உலகப்புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க தொடங்கப்பட்ட, அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் கீழ், இதுவரை ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 385 மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். அண்ணல் அம்பேத்கர் தொழில்கள் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 4,948 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கு 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ. 16 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்களின் புனரமைப்பிற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அரசின் பல்வேறு திட்டங்களையும் பட்டியலிட்டுப் பேசினார். https://www.hindutamil.in/news/tamilnadu/tamil-nadu-government-interim-budget-2026-highlights
  2. பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப் பாதை இன்மை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு 17 Feb, 2026 | 06:28 PM அனர்த்தங்களின்போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி அமைக்கப்பட்டுள்ள பாடசாலை கட்டடங்கள் மூலம் பிள்ளைகளின் உயிராபத்து இன்றி வாழ்வதற்கான மற்றும் பாதுகாப்பான சூழலில் கல்வி பயில்வதற்கான உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தெரிவித்து ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான மு. தமிழ்ச்செல்வன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். இன்றைய தினம் (17) யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனராஜிடம் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை மனித உரிமையாகும். வாழ்வுரிமை என்பது அரசியலமைப்புச் சட்டத்தாலும் சர்வதேச மனித உரிமை உடன்படிக்கைகளாலும் பாதுகாக்கப்படும் முதன்மை உரிமையாகும். கல்வி நிறுவனங்கள், குறிப்பாக சிறுவர்கள் அதிக நேரம் தங்கும் இடங்களாக இருப்பதால், அவர்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்வது நிர்வாகத்தின் சட்டப்பூர்வ கடமையாகும். அவசர கால வெளியேற்றப் பாதை இல்லாதது அல்லது செயலற்ற நிலையில் இருப்பது, தீ விபத்து, நிலநடுக்கம் அல்லது பிற அனர்த்தங்கள் ஏற்படும் சூழலில் மாணவர்களின் உயிரை நேரடியாக ஆபத்தில் ஆழ்த்தும். இது பாதுகாப்பு அலட்சியமாக மட்டுமன்றி, மாணவர்களின் வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பு உரிமையை மீறும் செயலாகவும் கருதப்படக்கூடியது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கள் உட்பட பாரதூரமான இழப்புக்கள் ஏற்படுதற்கும் அது காரணமாக அமைகிறது. கடந்த 05.02.2026 அன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் ஏற்பட்ட குளவிக் கொட்டுக்கு இலக்காகி 44 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மூன்று மாடி வகுப்பறை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் அக்கட்டடத்தில் காணப்பட்ட ஒரே ஒரு பாதை ஊடாக வெளியேறுவதற்கு ஏற்பட்ட தாமதம் மற்றும் நெருக்கடி காரணமாக 44 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாக வேண்டியிருந்தது. இந்த கட்டடத்தில் Emergency Exit காணப்பட்டிருந்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையினை குறைத்திருக்கலாம். இதேவேளை ஏதோவொரு அனர்த்தம் இவ்வாறான கட்டடங்களில் காணப்படுகின்ற ஒரேயோரு பாதையில் ஏற்பட்டிருப்பின் மாணவர்களின் நிலைமை மிகவும் பாரதூரமானதாக அமைந்திருக்கும். எனவே, இந்த சூழ்நிலையினை கருத்தில் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் Emergency Exit இல்லாத பாடசாலை கட்டடங்களின் பாதுகாப்பு நிலையை உடனடியாக தொழில்நுட்ப ஆய்விற்கு உட்படுத்துதல், தேவையான இடங்களில் அவசர வெளியேற்ற படிக்கட்டு மற்றும் கதவுகள் அமைத்தல், தெளிவான சுட்டிக்காட்டி பலகைகள் மற்றும் அவசர ஒளி வசதி ஏற்படுத்தல், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அவசர வெளியேற்ற முன்னாயத்த பயிற்சி வழங்கல், புதிய கட்டட நிர்மானத்தில் Emergency Exit இல்லாத கட்டடங்களுக்கு கட்டட அனுமதி வழங்குவதனை தடை செய்தல், கட்டட வடிவமைப்பில் Emergency Exit கட்டாயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோருக்கு பணிப்புரை வழங்குமாறு தனது முறைப்பாட்டில் கோரியிருக்கின்றார். https://www.virakesari.lk/article/238900
  3. “கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு கட்சிகள் வர வேண்டும்” - தவாக தலைவர் வேல்முருகன் கோவை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு திமுக, அதிமுக வர வேண்டும் என, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்தார். கோவை புலியகுளம் பகுதியில், இளைஞர்கள் த.வா.க-வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெ ற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பல கட்சிகள் கூட்டணி பேசிவருகின்றன. ஆனால், நாங்கள் கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழீழ மண்ணில் நடந்த இனப் படுகொலைக்காக நீதி கேட்டு போராடி வருகிறோம். தேர்தல் அரசியல் என்பது மக்களுக்காக போராடுவது. அதனை எங்கள் கட்சி செய்யும். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை. தமிழ் சமூகத்திற்கு பிரதமர் மோடி அரசு எதுவும் செய்யவில்லை. அதிமுக 200 தொகுதிக்கு மேல் வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செய லாளர் பழனிசாமி கூறுகிறார். ஆனால், பழனிசாமி தான் முதல்வர் என மத்திய அமைச்சர் அமித்ஷா இதுவரை அறிவிக்க வில்லை. தமிழ்நாட்டில் பாஜக வர வாய்ப்பு இல்லை. கூட்டணி ஆட்சி என திமுக, அதிமுக இரண்டும் கூறவில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலைக்கு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். https://www.hindutamil.in/news/tamilnadu/velmurugan-says-parties-should-reach-level-of-coalition-government
  4. அதிகளவு மக்கள் செல்வாக்கு - மாகாண சபை தேர்தலை நடத்த முடியுமா? Feb 17, 2026 - 04:15 PM கருத்துக் கணிப்பில் அதிக சதவீத ஆதரவு கிடைத்ததால் அரசாங்கம் மகிழ்ச்சியில் திளைக்கிறது. அதிகளவான மக்கள் செல்வாக்கை பெற்றுள்ளோம் என அரசாங்கம் கருதுமானால், மாகாண சபை தேர்தலை உடன் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். குழுக்கள், தெரிவுக் குழுக்கள் என்று பல்வேறு தந்திரங்களை பயன்படுத்தி தேர்தல் முறையை மாற்றுவதாக கூறி, மாகாண சபை தேர்தலை தாமதப்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறேன். அரசாங்கத்திற்கு 65% மக்கள் ஆதரவு இருக்கிறது என்றால், கூட்டுறவு வாக்குகளை கருத்திற் கொள்வதில்லை என்றால் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் காணப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். அந்த நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருக்கிறேன். அதை நேரடியாகவே தெரிவிக்கின்றேன். உலகின் ஜனநாயக நாடுகளில் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது ஊழல் மற்றும் இலஞ்சத்தை குறைத்து அதனை இல்லாதொழிக்க வேண்டும் என்ற அடிப்படையிலாகும். இவர்களினது பதவிக்காலம் முடிந்த பின்பு இவர்களுக்கு ஒருவகையில் சமூக பாதுகாப்பை பெற்றுக் கொடுப்பதும் இதில் ஒரு அம்சமாக அமைந்து காணப்படுகின்றன. இந்த நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுதியாக இருக்கிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்து அக்கறை காட்டும் அரசாங்கம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ஓய்வு பெற்றவர்களின் ஊதியங்கள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவற்றதாக காணப்படுகின்றன. பி.சி. பெரேரா குழுவின் பரிந்துரைப்படி அரச ஊழியர்களுக்கு 60% சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டதில் ஆசிரியர், அதிபர், ஆலோசகர் சேவைகளுக்கு அது வழங்கப்படாமல் பெரும் ஏற்றத்தாழ்வு காணப்படுகின்றது. சுபோதனி குழுவின் 20% அதிகரிப்பு 2022 ஜனவரி 1-ஆம் திகதியிலிருந்து பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டதால், ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லாத நிலையும் காணப்படுகின்றது. ஜனாதிபதி ஓய்வூதியர்கள் தேசிய மாநாட்டில் இந்த பிரச்சினைகளை தீர்த்துத் தருவேன் என்று கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 2025-2027 சம்பள அதிகரிப்பு செய்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்ற 1 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு எந்த நிவாரணமும் இல்லை. 2025 ஏப்ரல் 1-க்கு முன் அதாவது, ஜனவரி-மார்ச் மாதங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு சலுகைகள் கிடைத்தாலும், 2020-2024 காலத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு சரிசெய்யப்படாமல் போனதால் அவர்கள் கஷ்டத்தில் உள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். 10,000 சம்பள அதிகரிப்பை ஓய்வூதியத்தில் இணைக்கும் செயல்முறையை கோட்டாபய அரசாங்கம் இரத்துச் செய்த பிறகு, இந்த அநீதியை சரிசெய்ய 3 ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை இல்லாமல் பல ஓய்வூதியர்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlqh5pnp001t356nzlrr1txl
  5. 'இஸ்லாமிய நேட்டோ': அரபு - முஸ்லிம் நாடுகள் ராணுவ கூட்டணி குறித்து மீண்டும் விவாதம் ஏன்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,துருக்கி அதிபர் எர்துவானின் சௌதி அரேபியா வருகையைத் தொடர்ந்து, இஸ்லாமிய நேட்டோவை உருவாக்குவது குறித்த விவாதங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. கட்டுரை தகவல் பிபிசி மானிடரிங் 17 பிப்ரவரி 2026, 09:49 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் இரான் மீதான ஒரு சாத்தியமான தாக்குதலுக்குத் தயாராகும் வகையில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரிப்பதாக வரும் செய்திகளுக்கு மத்தியில், அரபு - இஸ்லாமிய அரசியல் மற்றும் ராணுவக் கூட்டணியை உருவாக்கும் விவகாரம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது. முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் துருக்கி அதிபர் துருக்கி அதிபர் எர்துவானால் செப்டம்பர் 2024-இல் முன்மொழியப்பட்டது. அந்த நேரத்தில், இஸ்ரேலால் ஏற்படும் 'வளர்ந்து வரும் விரிவாக்க அச்சுறுத்தலுக்கு' எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். செப்டம்பர் 2025-இல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரும் 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை நிறுவுவது பற்றிப் பேசினார். கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, 'இஸ்லாமிய நேட்டோ' அமைப்பை உருவாக்கும் யோசனை வேகம் பெற்றுள்ளது. எர்துவானின் சமீபத்திய சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணங்களைத் தொடர்ந்து, அரபு ஊடகங்களில் 'இஸ்லாமிய நேட்டோ' முன்மொழிவு மீண்டும் விவாதிக்கப்படுகிறது. முக்கிய அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரிய கூட்டணி உருவாகக்கூடும் என்று ஊகங்கள் உள்ளன. இருப்பினும், துருக்கி மற்றும் பாகிஸ்தானை உள்ளடக்கிய சௌதி தலைமையிலான 'இஸ்லாமிய நேட்டோ'வை உருவாக்கும் திட்டம் தற்போது இல்லை என்று ஒரு சௌதி அதிகாரியின் கூற்றை மேற்கோள் காட்டி ஒரு செய்தி கூறுகிறது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி எகிப்துக்கு வருகை தந்த எர்துவானை வரவேற்க கெய்ரோ விமான நிலையத்திற்கு வந்தார். எந்த நாடுகள் சேர்க்கப்படலாம்? அரபு ஊடக செய்திகள், இந்த சாத்தியமான கூட்டணியில் துருக்கி, எகிப்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனீசியா ஆகியவை இடம்பெறலாம் என்று தெரிவித்துள்ளன. லண்டனைத் தளமாகக் கொண்ட ராய் அல்-யூம் செய்தி இணையதளம் பிப்ரவரி 5 அன்று வெளியிட்ட செய்தியின்படி, "எர்துவானின் ரியாத் மற்றும் கெய்ரோ பயணங்கள் 'மூன்று நாடுகளை மையமாகக் கொண்ட ஒரு அரசியல் மற்றும் ராணுவ இஸ்லாமியக் கூட்டணியை' உருவாக்கும் திட்டத்தின் பின்னணியில் வந்தவை. இது பின்னர் அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தான் மற்றும் அதிக முஸ்லிம் மக்கள் தொகையைக் கொண்ட இந்தோனீசியாவையும் உள்ளடக்கி விரிவடையக்கூடும்". துருக்கிய செய்தி வலைத்தளம் ஒன்றும், "முன்னெப்போதும் இல்லாத அரசியல் நெருக்கம் மற்றும் கருத்துகளின் ஒருங்கிணைப்புக்கு மத்தியில், எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கியை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கூட்டணிக்கான வரையறைகள் தென்படுகின்றன," என்று கூறியது. இருப்பினும், எர்துவானின் பயணங்கள் எந்தவொரு கூட்டணியையும் குறிக்கவில்லை, மாறாக அந்தப் பிராந்தியம் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் உள்ளது என்ற அதிகரித்து வரும் புரிதலைப் பிரதிபலிக்கிறது என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "எகிப்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கி இடையே அதிகரித்து வரும் நெருக்கம், கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பது மற்றும் பொதுவான நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் இணக்கத்தை குறிக்கிறது. ஆனால் அது இன்னும் ஒரு விரிவான உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை," என்று அரபிக் டிஃபென்ஸ் கூறியது. "எகிப்து-துருக்கி கூட்டணி பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான ஒரு பரந்த அரபு-இஸ்லாமிய கூட்டணிக்கு அடிப்படையாக அமையக்கூடும்," என்று சர்வதேச சட்டப் பேராசிரியர் முகமது மஹ்ரான், யூம் 7 என்ற எகிப்திய இணையதளத்திடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,US Department of Defense via Reuters படக்குறிப்பு,அமெரிக்க கடற்படை, அரபிக் கடலில் தனது ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது. இந்தக் கூட்டணியின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன? காஸாவில் இஸ்ரேலின் போர் மற்றும் இரானுடனான 12 நாள் மோதலுக்குப் பிறகு, அரபு - இஸ்லாமியக் கூட்டணி விவாதம் அரபு ஊடகங்களில் மீண்டும் உருவெடுத்துள்ளது. எகிப்திய தனியார் வலைத்தளமான அல்-ஒரூபா அல்-யூம், "அரபு மற்றும் முஸ்லிம் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள், சிரமங்கள் மற்றும் சூழ்ச்சிகள் காரணமாக, பிராந்தியத்தில் சமநிலையை மீட்டெடுக்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் சௌதி அரேபியா, எகிப்து, பாகிஸ்தான், துருக்கி மற்றும் கத்தாரை உள்ளடக்கிய ஓர் உத்தி கூட்டணியை உருவாக்குவது மிகவும் அவசியமாகிறது." என்று தெரிவித்துள்ளது. முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி கத்தார் தொலைக்காட்சி சேனலான அல் ஜசீரா முபாஷரிடம், "சாத்தியமான இந்த கூட்டணி பிராந்தியத்தை துண்டாடுவதை நோக்கமாகக் கொண்ட 'மேலாதிக்கத் திட்டங்களை' முறியடித்து, பிராந்தியத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும்" என்றார். துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும் அந்த ஊடகத்திடம் பேசுகையில், "இஸ்ரேல் பெற்றுள்ள மிகப்பெரிய ராணுவ சக்தியை எதிர்கொள்ள இத்தகைய இஸ்லாமியக் கூட்டணிக்கு குறிப்பிடத்தக்க முயற்சிகள் தேவைப்படும்." என்றார். லண்டனைச் சேர்ந்த அல்-குட்ஸ் அல்-அரபி தளத்தில்,'' இந்த சாத்தியமான இஸ்லாமிய நேட்டோ அமைப்பு என்பது இந்த நாடுகளின் மீது தாக்குதலை தடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டணி'' என்று லூத்ஃபி அல்-உபைதி விவரித்தார். இன்னும் பல ஊடக செய்திகள் இதே கருத்தை எதிரொலிக்கின்றன. "மெதுவாக உருவாகி வரும் ஒரு கூட்டணி, நேட்டோ என்று அழைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒரு தடுப்பு சக்தியாக செயல்படும்." என்று அவை தெரிவிக்கின்றன. பட மூலாதாரம்,Getty Images துருக்கியின் நிலைப்பாடு என்ன? பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் எர்துவானின் சௌதி அரேபியா மற்றும் எகிப்து பயணத்திற்கு முன்னதாக, துருக்கிய ஊடகங்களில் ஒரு சாத்தியமான 'இஸ்லாமிய நேட்டோ' பற்றிய பேச்சுகள் நிறைந்திருந்தன. இருப்பினும், கவனம் படிப்படியாக பரந்த பிராந்திய ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை நோக்கி நகர்ந்தது. துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் ஜனவரி இறுதியில் அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிகரிக்க 'பிராந்திய ஸ்திரத்தன்மைக்கான தளத்தை' உருவாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். "ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றுமில்லாத நிலையில் இருந்து உருவாகி இன்று இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது எப்படி என்று பாருங்கள். பின் ஏன் நம்மால் அதைச் செய்ய முடியாது?" என்றும் ஃபிடன் கூறினார். அரசுக்கு ஆதரவான ஊடகங்கள், இப்படியான கூட்டணியை பிராந்தியத்துக்கான ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகக் கூறுகின்றன. சிலர் இது இஸ்ரேலின் பிராந்திய குறிக்கோள்களை எதிர்கொள்ள உதவும் என்று வாதிடுகின்றனர். ஆய்வாளர் கெவ்ஹர் சலூல் பிப்ரவரி 9 அன்று, "இரான், சிரியா, காஸா மற்றும் பாலத்தீனம் போன்ற விவகாரங்களில் துருக்கி, சௌதி அரேபியா மற்றும் எகிப்து இடையே தெளிவான ஒருமித்த தன்மை வெளிப்பட்டுள்ளது'' என எழுதினார். இந்தக் கூட்டணி தற்போது பெரும்பாலும் பேச்சுவார்த்தைகளில் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தாலும், துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியாவுடனான ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி வருகிறது. எகிப்திற்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும், அங்கு ஒரு வெடிமருந்து உற்பத்தி கட்டமைப்பை உருவாக்கவும் துருக்கி ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. துருக்கியின் 'கான்' போர் விமானத் திட்டத்தில் முதலீட்டாளராகவும் அதை வாங்கக்கூடிய நாடாகவும் பங்கேற்க சௌதி அரேபியா ஆர்வமாக உள்ளதாக துருக்கிய ஊடகங்களும் கூறுகின்றன. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூட்டணியை உருவாக்குவதில் உள்ள சவால்கள் என்ன? அரபு-இஸ்லாமியக் கூட்டணியை உருவாக்குவதும் பல சிக்கலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சவால்களால் சூழப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. லண்டனைச் சேர்ந்த ராய் அல்-யூம் தளத்தின்படி, ''ஒரு முக்கிய சவால் என்னவென்றால், அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஒருபோதும் களத்தில் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை மற்றும் அவை பெரும்பாலும் 'ஆவணங்களில்' மட்டுமே இருந்துள்ளன. இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டவர்களில் சிலர் ஒருவருக்கொருவர் ராணுவ மோதல்களில் கூட ஈடுபட்டுள்ளனர்.'' துருக்கி, எகிப்து மற்றும் சௌதி அரேபியா இடையிலான தற்போதைய ஒத்துழைப்பு ஒரு பாரம்பரிய அல்லது உத்தி கூட்டணியின் நிலையை எட்டவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர், ஏனெனில் "பல விவகாரங்களில், குறிப்பாக பிராந்தியத்தின் அரசியல் மாற்றங்கள் தொடர்பானவற்றில் மூன்று நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன." முன்னாள் எகிப்திய தூதர் அலி அல்-அஷ்மாவி அல் ஜசீராவிடம் பேசுகையில், "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் சவால்களை எதிர்கொண்டு இந்தக் கூட்டணி எளிதாக முன்னேற முடியாது." என்றார். துருக்கிய ஆய்வாளர் அலி பகாரும், "இஸ்ரேல் இந்தக் கூட்டணி நடைமுறையில் உருவாக அனுமதிக்காது, ஏனெனில் அமெரிக்காவில் உள்ள அதன் இணைந்த லாபிகள் ஏற்கனவே அதைத் தடுக்கச் செயல்படத் தொடங்கிவிட்டன." என்றார். அரபு-யூரேசிய ஆய்வுகளுக்கான மையத்தின் ஆராய்ச்சியாளர் காதி கனில், இத்தகைய கூட்டணிக்கான சாத்தியமான எதிர்கால காட்சிகளை விளக்கினார். "மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவே அதிக வாய்ப்புள்ளது." என்றார். இந்த முகாம் ஒரு பெரிய நிறுவன ரீதியான கூட்டணியாக மாறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyzd0v97y2o
  6. பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு Published By: Digital Desk 3 17 Feb, 2026 | 02:39 PM கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை தொடர்ந்து பங்களாதேஷ் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட தேசியவாத கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை பதவியேற்றனர். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அந்நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையாளர் ஏ.எம்.எம். நசீர் உதீன் முன்னிலையில் பதவியேற்றனர். அவர்களைத் தவிர, தெரிவுசெய்யப்பட்ட சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற கட்சிகளின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவியேற்றனர். வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணையகத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, 297 இடங்களில் 209 இடங்களை பங்களாதேஷ் தேசியவாத கட்சி வென்றது. இன்றைய தினம் பிற்பகலில் பங்களாதேஷ் தேசியவாத கட்சி தனது புதிய அமைச்சரவையை அமைக்க உள்ளது. https://www.virakesari.lk/article/238860
  7. “இம்ரான் கானுக்கு மருத்துவ உதவிகளை உறுதி செய்யுங்கள்” - முன்னாள் கிரிக்கெட் கேப்டன்கள் கடிதம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் (கோப்புப் படம்) பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கானின் உடல்நிலை குறித்து முன்னாள் சர்வதேச கிரிக்கெட் கேப்டன்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர் சர்வதேச கிரிக்கெட் அணிகளின் 14 முன்னாள் கேப்டன்கள் கூட்டாக இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்கள் க்ரெக் சேப்பல் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோரும் இதில் அடங்குவர். “எல்லைக் கோட்டைக் கடந்த நியாயமான விளையாட்டு, கௌரவம் மற்றும் மரியாதையின் மதிப்பை புரிந்துகொள்ளும் சக கிரிக்கெட்டர்களான நாங்கள், இம்ரான் கானைப் போன்ற அந்தஸ்துள்ள ஒருவர், முன்னாள் தேசிய தலைவருக்கும் உலக விளையாட்டு பிரபலமத்துக்கும் உரிய கண்ணியத்துடனும் அடிப்படை மனித கருணையுடன் நடத்தப்பட வேண்டும்.” “இம்ரான் கானுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் மருத்துவ நிபுணர்களிடமிருந்து உடனடி, போதுமான மற்றும் தொடர்ச்சியான மருத்துவ சிகிச்சை அவருக்கு கிடைப்பதை பாகிஸ்தான் அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A1e8f4bbf-df2f-4542-b384-1e1ec70e0d26#asset:1e8f4bbf-df2f-4542-b384-1e1ec70e0d26
  8. யாழில் குடும்பஸ்தர் கொடூரமாக அடித்துக் கொலை - ஒருவர் கைது: இருவர் தலைமறைவு யாழில் (Jaffna) காணி பிணக்கு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் தலைமறைவாகி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . குறித்த சம்பவம் நேற்று (16.02.2026) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் - கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள பகுதியில் இடம்பெற்றுள்ளது. 59 வயதான இரு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மேலதிக விசாரணை சம்பவம் தொடர்பில்தெரிய வருவதாவது, குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மாலைவேளை தனது தோட்டக்காணிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்த சமயம் அருகில் இருந்த வீட்டு நபர்கள் காணி பிரச்சனை தொடர்பில் முரண்பட்டுள்ளனர். முரண்பாடு முற்றிய நிலையில் மண் வெட்டியால் குறித்த நபர் மீது தாக்கியதில் பிடரி பகுதியில் குருதி வெளியேறிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட கொலையாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் ஏனைய இருவரும் தலைமறைவாகி உள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://ibctamil.com/article/man-beaten-to-death-in-jaffna-one-arrested-1771295940
  9. 'கடவுளின் மடியில்...' : ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை - ஆஸ்திரேலிய கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 17 பிப்ரவரி 2026, 06:28 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் டி20 உலகக் கோப்பையின் லீக் சுற்றுப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை. இதன்மூலம் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குள் அதிகாரபூர்வமாக நுழைந்தது. தொடர்ந்து இரண்டாவது போட்டியைத் தோற்றிருக்கும் ஆஸ்திரேலியாவின் சூப்பர் 8 வாய்ப்பு தற்போது கேள்விக்குறியாகியிருக்கிறது. ஆஸ்திரேலியா 181 ரன்கள் எடுக்க, அதை இரண்டு ஓவர்கள் மீதமிருக்கும்போதே எட்டி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது. தொடக்க வீரர் நிசங்கா 52 பந்துகளில் சதமடித்து இலங்கை அணிக்கு மிகமுக்கிய வெற்றியை பெற்றுக்கொடுத்தார். 2007 முதல் நடந்துகொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 12 முறை மட்டுமே சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. 11 வீரர்களே அந்த மூன்று இலக்க ஸ்கோரை எட்டியிருக்கிறார்கள். அந்தப் பட்டியலில் இப்போது நிசங்காவும் இணைந்திருக்கிறார். நிசங்காவும் சரி, இலங்கையும் சரி... முதல் பந்து முதல் இலக்கை எட்டும் வரை மிகவும் நேர்த்தியாக இந்த சேஸை எதிர்கொண்டனர். பெரிய 'ரிஸ்க்' ஏதும் எடுக்கவில்லை. அடிப்பதற்கு ஏற்ற பந்துகள் கிடைத்தபோது அதை சரியாக பயன்படுத்திக்கொண்டனர். களத்தில் பனியின் தாக்கம் இருந்ததும் அவர்களுக்கு சாதகமாக அமைந்தது. அதனால் ஆரம்பத்திலிருந்தே தேவைப்படும் ரன்ரேட்டுக்கு அருகிலேயே பயணித்தது இலங்கை அணி. விக்கெட்டுகளும் கையில் இருந்ததால் எந்த இடத்திலும் இலங்கை அணி நெருக்கடியை உணராமல் சேஸ் செய்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார் நிசங்கா நெருக்கடிக்கு மேல் நெருக்கடி சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேவிடம் தோற்றது ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல, இலங்கைக்குமே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். ஏனெனில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்று, ஆஸ்திரேலியா ஓமனையும், ஜிம்பாப்வே அயர்லாந்தையும் வென்றால் ஜிம்பாப்வே vs இலங்கை போட்டி நாக் அவுட் போல ஆகிவிடும். அந்தப் போட்டியின் வென்றாலும் ரன்ரேட் முக்கியம் என்ற நிலை வந்திருக்கக்கூடும். அப்படியொரு நிலையில் தான் இந்தப் போட்டிக்குள் கால் வைத்தது இலங்கை அணி. டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தவர்களுக்கு முதல் ஓவரே கவலை தந்தது - 16 ரன்கள். இரண்டாவது ஓவரில் 9 ரன்கள். அதற்கடுத்து ஓவரிலோ அதைவிடப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான மதீஷா பதிரானா காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறினார். முக்கியமான ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கெதிராக இலங்கை பெரும் பின்னடைவைச் சந்தித்தது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான தோல்வியிலிருந்து மீண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் ஆடிய ஆஸ்திரேலியாவோ ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் டார்கெட் செய்து அடித்தது. பவர்பிளே முடிவிலேயே ஆஸ்திரேலியா 70 ரன்கள் எடுத்துவிட்டது. 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் எதுவும் இழக்காமல் அந்த அணி 97 ரன்கள் எடுத்திருந்தது அந்த அணி. அவர்களின் ரன்ரேட் 12.12 ஆக இருந்தது. டிராவிஸ் ஹெட் அரைசதம் அடித்திருந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷும் அதை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்படியொரு நிலையில் ஆஸ்திரேலிய அணி இருந்ததால், அதன்பிறகு கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், ஜாஷ் இங்லிஸ், டிம் டேவிட், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், கூப்பர் கானலி என அதிரடி வீரர்கள் நிறைந்திருந்ததால் அவர்கள் நிச்சயம் 220 - 230 ரன்களுக்கு மேலேயே எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இலங்கை பெரும் நெருக்கடியை சந்தித்துக்கொண்டிருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,டிராவிஸ் ஹெட் - மிட்செல் மார்ஷ் பார்ட்னர்ஷிப் 8.3 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்தது ஐந்தே ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய இலங்கை வேகமாகச் சென்றுகொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் இன்னிங்ஸுக்கு 9-வது ஓவர் ஒரு வேகத்தடையாக அமைந்தது. அந்த ஓவருக்குப் பிறகு இலங்கை அணி ஆட்டத்தை தங்கள் கைக்குள் கொண்டுவந்தது. ஹேமந்தா வீசிய ஒன்பதாவது ஓவரில் டிராவிஸ் ஹெட் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராகக் களமிறங்கிய கேமரூன் கிரீன் அந்த அதிரடியைத் தொடர நினைத்தார். ஆனால், அது அவருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் பாதகமாக முடிந்தது. இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொள்ள முனைந்த அவர், சில தருணங்களில் கிரீஸுக்கு வெளியே வந்தும் பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டார். ஹேமந்தா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஒரு ஸ்டம்பிங் அப்பீலை எதிர்கொண்டார். ஆனால், கிரீன் அந்த முறை தப்பிவிட்டார். ஆனால், டுனித் வெல்லாலகே வீசிய அடுத்த ஓவரில் அவரால் தப்பிக்க முடியவில்லை. பத்தாவது ஓவரின் கடைசிப் பந்தில் அவர் இறங்கி வந்து அடிக்க முற்பட, அந்தப் பந்து நன்கு வெளியே செல்ல, கிரீனால் அதை அடிக்க முடியவில்லை. பந்தை சட்டென்று பிடித்து ஸ்டம்பிங் செய்து கிரீனை வெளியேற்றினார் குசல் மெண்டிஸ். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது இலங்கைக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்தது. 11-வது ஓவரில் இரண்டு வாய்ப்புகளை உருவாக்கினார் ஹேமந்தா. நன்றாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் மிட்செல் மார்ஷ், அவர் வீசிய பந்தில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த பந்திலேயே புதிய பேட்டர் இங்லிஸை அவுட்டாக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஸ்டம்பிங் செய்வதற்கான வாய்ப்பை இம்முறை குசல் மெண்டிஸ் தவறவிட்டார். இப்படி தொடர்ச்சியாக அதிரடி மட்டுமே காட்டுவது என்ற மனநிலையில் வந்தது ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு பின்னடைவாக அமைந்தது. அதேநேரத்தில், நல்ல லைன் மற்றும் லென்த்தில் பந்துவீசி இலங்கை பௌலர்கள் விக்கெட்டுகளை சாய்த்தனர். 13-வது ஓவரில் பந்துவீச வந்த கமிந்து மெண்டிஸ், டிம் டேவிட்டை வெளியேற்ற ஆஸ்திரேலியா 130/4 என்ற நிலைக்கு வந்தது. 9 முதல் 13 வரையிலான ஐந்து ஓவர்களில் 34 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. 12.12 என்றிருந்த ரன்ரேட் 10.07 ஆகக் குறைந்தது. அதன்பிறகு மேக்ஸ்வெல் மற்றும் இங்லிஸ் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினாலும், அவர்களால் ரன்ரேட்டை அதிகப்படுத்தவோ இல்லை அதே ரன்ரேட்டை தொடரவோ முடியவில்லை. களத்தில் பாய்ந்து மேக்ஸ்வெல் கேட்சை பிடித்து அந்த பார்ட்னர்ஷிப்பையும் உடைத்தார் நிசங்கா. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கிளென் மேக்ஸ்வெல் கேட்ச்சை பாய்ந்து பிடித்த நிசங்கா ரன்ரேட்டை அதிகரிக்கும் முயற்சியில் கடைசி கட்டத்திலும் ஆஸ்திரேலியா விக்கெட்டுகளை இழக்க, அந்த அணியால் 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி இரண்டு ஓவர்களில் அந்த அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. இப்படி உத்வேகமாக முதல் இன்னிங்ஸை முடித்த இலங்கை அணி, அதே உத்வேகத்தோடு பேட்டிங் செய்து வெற்றியையும் வசப்படுத்தியது. இதன் மூலம் பி பிரிவில் இருந்து முதல் அணியாக சூப்பர் 8 சுற்றை உறுதி செய்தது. "கடவுளின் மடியில்" இந்தத் தோல்வி ஆஸ்திரேலியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த அணி 3 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றிருக்கிறது. இனி ஓமன் உடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களால் 4 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடியும். அதனால், ஜிம்பாப்வே அணி அடுத்த இரு போட்டிகளிலும் தோற்றால் மட்டுமே அவர்கள் சூப்பர் 8 வாய்ப்பு பற்றி நினைத்துப் பார்க்க முடியும். அப்போதும் கூட ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய 3 அணிகளில் எந்த அணிக்கு நல்ல ரன்ரேட் இருக்கிறதோ, அந்த அணியே அடுத்து சுற்றுக்கு முன்னேறும். எனவே ஆஸ்திரேலியா தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பட மூலாதாரம்,Getty Images இந்தப் போட்டிக்குப் பிறகு பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ், "இலங்கை அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. எங்களுக்குக் கிடைத்த தொடக்கத்தை ஒப்பிடும்போது குறைவான ஸ்கோரே எடுத்தோம். நாங்கள் இப்போது கடவுளின் மடியில் இருக்கிறோம். டிரஸ்ஸிங் ரூமில் பல உணர்வுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அயர்லாந்து, ஜிம்பாப்வே போட்டியை நம்பிக்கையுடன் பார்ப்போம்" என்று கூறினார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் ஜிம்பாப்வே - அயர்லாந்து போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழக்கும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1kgj8w9r71o
  10. க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பம்; விசேட தேவையுடைய மாணவர்கள், கைதிகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:16 AM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 451 463 பேர் பரீட்சைக்கு தோற்றுவதற்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். மேலும் விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் சிறைச்சாலைகளிலுள்ள கைதிகளுக்கு பிரத்தியே பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்தார். கொழும்பிலுள்ள பரீட்சை திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் (2025) இன்று செவ்வாய்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 26ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்காக 3545 பரீட்சை நிலையங்களும், 531 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும், 33 பிரதேச ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை பரீட்சைகளுக்காக பாடசாலை ஊடாக 382 249 பரீட்சாத்திகளும், தனிப்பட்ட ரீதியில் 69 214 பரீட்சாத்திகளும் விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்தமாக 451 463 பரீட்சாத்திகள் விண்ணப்பித்துள்ளனர். முப்படை மற்றும் பொலிஸாருடன் கலந்துரையாடி பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளும் தயார்நிலையிலுள்ளன. சகல விண்ணப்பதாரர்களுக்கும் பரீட்சை அனுமதி அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பரீட்சைக்கான நேர அட்டவணை அனுமதி அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சாத்திகளை கேட்டுக் கொள்கின்றோம். கடந்த ஆண்டுகளை விட இம்முறை நேர அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 5, 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நேர அட்டவணை கடந்த ஆண்டுகளை விட வித்தியாசமான முறையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன. காலையில் 8.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும் பரீட்சைகள் ஆரம்பமாகும். எனவே பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு 1 மணித்தியாலத்துக்கு முன்னரே பரீட்சை நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கையடக்க தொலைபேசி, நவீன கைக்கடிகாரம் உள்ளிட்ட எவ்வித இலத்திரனியல் உபகரணங்களும் பரீட்சை நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட மாட்டாது. தமது அடையாளத்தை உறுதிப்படுத்தக் கூடிய தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்த முடியும். இவை இல்லாதவர்கள் தமது இரு புகைப்படங்களை அதிபர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் மூலம் உறுதிப்படுத்தி அதனை தற்காலிய அடையாள அட்டையாகப் பயன்படுத்த முடியும். விசேட தேவையுடைய பரீட்சாத்திகளுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை, சிலாபம், மஹரகம புற்று நோய் வைத்தியசாலை, கைதடி நவீல் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை என்பவற்றில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலுள்ள பரீட்சாத்திகளுக்காக வட்டரொக்க சுனீத வித்தியாலயத்தில் விசேட பரீட்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/238843
  11. ஜனாதிபதியை சந்தித்த, சர்வதேச நாணய நிதிய உயர் அதிகாரி Feb 17, 2026 - 05:18 PM சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவுக்கும் , ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் இன்று (17) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்புக்கு பின்னர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தமது எக்ஸ் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார், இலங்கை வெகுதூரம் கடந்து வந்துள்ளது. அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருகிறது. அனைவருக்கும் சுபீட்சத்தை வழங்கும் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில், சீர்திருத்தங்களைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை தாம் வலியுறுத்தியதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmlqjhp53001x356nmt847zdf
  12. பெத்தும் குவித்த அபார சதம் இலங்கையை சுப்பர் 8க்கு அழைத்துச் சென்றது; முதல் சுற்றுடன் அவுஸ்திரேலியா வெளியேற்றம் Published By: Vishnu 16 Feb, 2026 | 11:41 PM (பல்லேகலை அரங்கிலிருந்து நெவில் அன்தனி) கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தீர்மானம் மிக்க ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண பி குழு போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெற்றது. இந்தப் போட்டியில் சகலதுறைகளிலும் அற்புதமான ஆற்றல்களை வெளிப்படுத்திய இலங்கை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றி பெற்றது. இலங்கையின் இந்த வெற்றியானது அவுஸ்திரேலியாவை ரி20 உலகக் கிண்ணத்திலிருந்து முதல் சுற்றுடன் வெளியேற்றியது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், குசல் மெண்டிஸ் பெற்ற அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபமாக்கின. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ரி20 உலகக் கிண்ணத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும். அத்துடன் இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். ரி20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தனவுக்குப் பின்னர் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார். அது மட்டுமல்லாமல் பல்லேகலை மைதானத்தில் ரி20 உலகக் கிண்ண சதம் குவித்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார். சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் பெத்தும் நிஸ்ஸன்க பெற்ற இரண்டாவது சதம் இதுவாகும். இலங்கை சார்பாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் குவித்த முதலாவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க பெற்றுக்கொண்டார். இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் இரண்டு போட்டிகளில் பிரகாசிக்கத் தவறிய காமில் மிஷாரவுக்குப் பதிலாக இன்றைய போட்டிக்கு இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட மூத்த வீரர் குசல் ஜனித் பெரேரா ஒரு ஓட்டத்தை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார். (8 - 1) எனினும் பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டில் 66 பந்தகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். குசல் மெண்டிஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் நிலைநாட்டினார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவிப்பதற்கு மிகுந்து ஒத்துழைப்புடன் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பெத்தும் நிஸ்ஸன்கவும் பவன் ரட்நாயக்கவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவுக்கு ஓட்டங்களை அள்ளிக்கொடுத்த இலங்கை பந்துவீச்சாளர்கள் 9ஆவது ஓவரிலிருந்து துல்லியமாக பந்துவீசி எதிரணியைக் கட்டுப்படுத்தினர். அணிக்கு மீண்டும் திரும்பிய அணித் தலைவர் மிச்செல் மார்ஷ் (54), ட்ரவிஸ் ஹெட் (56) ஆகிய இருவரும் 51 பந்துகளில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஸ்திரமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அதன் பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து வீழ்ந்தன. (130 - 4 விக்.) இந் நிலையில் ஜொஷ் இங்லிஸ் (27), க்லென் மெக்ஸ்வெல் (22) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 30 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், க்ளென் மெக்ஸ்வெல் உட்பட 6 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. துஷான் ஹேமன்த 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வெ வ்வேறு வியூகங்களுடன் பந்துவீசிய துஷ்மன்த சமீர 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க. https://www.virakesari.lk/article/238839
  13. சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம் Feb 17, 2026 - 06:58 AM 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (17) ஆரம்பமாகிறது. நாடு பூராகவும் உள்ள 3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை 2025 (2026) சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை குறித்துத் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் உள்ள நேர அட்டவணையை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கடந்த வருடத்தை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் பாட ஒழுங்கு ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களில் மாற்றப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறும் இந்திகா குமாரி லியனகே மேலும் வலியுறுத்தினார். இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னரே பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குச் சமூகமளிக்க வேண்டும். பிற்பகல் வேளை பரீட்சை 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பரீட்சார்த்திகள் பகல் 12.30 மணியளவில் பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். பரீட்சை நிலையங்களுக்குக் கையடக்கத் தொலைபேசிகள், புளூடூத் சாதனங்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள் அல்லது எவ்வித ஆவணங்களையும் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. 'ஒவ்வொரு பரீட்சார்த்தியும் பரீட்சை முடியும் வரை தமது ஆள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும். பாடசாலை பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்தலாம். தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தேவைப்படின் இரண்டு புகைப்படங்களுடன் கிராம உத்தியோகத்தர் மூலம் சான்றளிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம். பரீட்சார்த்திகள் விடையளிக்கத் தொடங்கும் முன் வினாத்தாளில் உள்ள அறிவுறுத்தல்களை நன்கு வாசித்து, அனைத்துப் பகுதிகளும் தமக்குக் கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நேரத்தை சரியாக முகாமைத்துவம் செய்து, பரீட்சை சுட்டெண்ணைச் சரியாகக் குறிப்பிட்டு விடையளிக்க வேண்டும். கையெழுத்துத் தெளிவாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் திப்பெக்ஸ் பயன்படுத்தக் கூடாது. தவறு நேர்ந்தால் அதனை ஒரு கோட்டினால் வெட்டிவிட்டு மீண்டும் விடையளிக்க வேண்டும். விடைத்தாள்களைச் சரியாக இணைப்பதற்கு (நூலால் கட்டுவதற்கு) நடவடிக்கை எடுக்க வேண்டும். பரீட்சை மண்டபத்தினுள் பரீட்சார்த்திகள் சட்டதிட்டங்களைப் பேண வேண்டும் என்பதுடன், முகம் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும். வேறொரு பரீட்சார்த்திக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது. அவ்வாறு நடந்துகொண்டால் சில சமயங்களில் பரீட்சை பெறுபேறுகளை ரத்துச் செய்ய நேரிடும். இடைவேளை நேரத்திலும் ஏனைய பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும்' எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmlpxaszx0014356nu1kf60ut
  14. புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சர்வதேச தரங்களுக்கு முழுமையாக ஏற்பில்லை - ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கவலை Published By: Vishnu 16 Feb, 2026 | 10:47 PM (நா.தனுஜா) அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் அமையவில்லை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையாளர்கள் எழுவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கடிதம் மூலம் கூட்டாகத் தமது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். அதேவேளை இப்புதிய வரைவு எவ்வாறு சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றியும், இவ்வரைவு குறித்த பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியும் தமக்கு விளக்கமளிக்குமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை இம்மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார். இந்நிலையில் இப்புதிய சட்டவரைவு தொடர்பில் தமது கரிசனைகளை வெளிப்படுத்தி பயங்கரவாதத்தை ஒழிப்பதுடன் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் பென் சோல், வலுகட்டாயத் தடுத்துவைப்பு தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் பிரதித்தலைவர் மத்தியூ கில்லெற், வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான ஐ.நா நடவடிக்கைக்குழுவின் தலைமை அறிக்கையாளர் கேப்ரியெல்லா சிற்ரொனி, சட்டவிரோத மற்றும் வலுகட்டாய தண்டனை வழங்கல்கள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மொரிஸ் ரிட்போல்-பின்ஸ், மனித உரிமைகள் பாதுகாவலர்களின் நிலை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் மேரி லோலர், தனியுரிமைக்கான உரிமை தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அனா பிரையன் நௌக்ரெரெஸ் மற்றும் சித்திரவதைகள், மிகமோசமானதும், மனிதாபிமானமற்றதுமான தண்டனைகள் தொடர்பான ஐ.நா விசேட அறிக்கையாளர் அலிஸ் ஜில் எட்வட்ஸ் ஆகிய எழுவரும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கூட்டாக அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது; உங்களது அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்பில் தீவிர கரிசனையை வெளிக்காட்டும் வகையிலான தகவல்கள் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன என்பதை உங்களது கவனத்துக்குக் கொண்டுவருகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதில் மேற்கொள்வதற்கென கடந்த 2023 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நாம் ஏற்கனவே தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தோம். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை மீளாய்வுக்கு உட்படுத்துவதிலும், பொதுமக்களின் கருத்தறியும் நோக்கில் புதிய வரைவை வெளியிட்டதிலும் உங்களது அரசாங்கம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டை பெரிதும் வரவேற்கிறோம். அதேபோன்று சட்டவாட்சி பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகள், சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கப்படவேண்டியதன் அவசியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் சில சரத்துக்களின் ஊடாக சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சட்டப்பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளமை என்பன உள்ளடங்கலாக இப்புதிய வரைவில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றங்களைப் பாராட்டுகிறோம். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் காணப்பட்ட முக்கிய குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்பதுடன், சர்வதேச சட்டத்துக்கு முழுவதும் ஏற்புடைய விதத்திலும் தயாரிக்கப்படவில்லை. குறிப்பாக இச்சட்டவரைவின் 3 ஆம் பிரிவில் 'பயங்கரவாதம்' எனும் பதத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம், பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அளிக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை விட முன்னேற்றகரமானதாக இருப்பினும், இதுவும் மிகப்பரந்துபட்டதாகவும் சர்வதேச நியமங்களுக்கு உட்படாததாகவுமே காணப்படுகிறது. இவ்வாறான பரந்துபட்ட வரைவிலக்கணங்கள் திட்டமிடப்படாத எதிர்மறை விளைவுகளுக்கும், திட்டமிடப்பட்ட வன்முறைகள் மற்றும் உரிமை மீறல்களுக்கும் வழிகோலும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 15(1) ஆம் சரத்தின் பிரகாரம் குற்றவியல் சட்டங்கள் மிகவும் 'குறிப்பானதாக' இருக்கவேண்டும். அதனூடாகவே எவ்வாறான நடவடிக்கைகளைக் குற்றவியல் குற்றமாகக் கருதமுடியும் என்பது குறித்தும், அவ்வாறான குற்றங்களைப் புரிவதனால் ஏற்படக்கூடிய சட்ட ரீதியான பின்விளைவுகள் குறித்தும் தெளிவான புரிதலை ஏற்படுத்தமுடியும். இருப்பினும் இத்தகைய விரிவான வரைவிலக்கணமானது சிவில் செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், அரசியல் விமர்சகர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக அச்சட்டம் பிரயோகிக்கப்படுவதற்கும், அதன்விளைவாக அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன ஒடுக்கப்படுவதற்கும் காரணமாக அமையும். அதேவேளை இப்புதிய வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சில குற்றங்கள், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19 ஆவது சரத்தின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரத்துக்கான உரிமைக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மீது பிரயோகிக்கப்படும் எந்தவொரு மட்டுப்பாடும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் 19(3) ஆம் பிரிவில் வலியுறுத்தப்பட்டுள்ள தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவேண்டும். கருத்து வெளிப்பாடு மற்றும் தகவல்களை அறிதல் ஆகியவற்றின்மீது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதத்தை ஒழித்தல் எனக்கூறி மட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அரசாங்கம் முற்படுமேயானால், அதற்கு நியாயமான நோக்கம் இருப்பதுடன் இவ்வாறு மட்டுப்பாடு விதிப்பதன் ஊடாக அந்நோக்கங்கள் நிறைவேறும் என்பதை நிரூபிக்கவேண்டும். இருப்பினும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவின் 8(2) ஆம் பிரிவை 78 ஆம் பிரிவுடன் இணைத்து நோக்குகையில், அதனூடாக கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் முடக்கப்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி இப்புதிய சட்ட வரைவின் ஊடாக நபரொருவரின் (சந்தேகநபர்) உரிமைகள் மற்றும் சுதந்திரம் என்பன போதியளவுக்கு உறுதிப்படுத்தப்படாத வேளை, அவரைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்குமான மட்டுமீறிய அதிகாரிகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளமை தீவிர கரிசனைக்குரிய விடயமாகும். இவ்வாறானதொரு பின்னணியில் புதிதாக முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு எவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச அகதிகள் சட்டம் உள்ளிட்ட சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாகக் காணப்படுகிறது என்பது பற்றி எமக்கு விளக்கமளிக்குமாறு கோருகிறோம். அதேபோன்று தற்போது இவ்வரைவு தொடர்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளடங்கலாக சகல தரப்பினராலும் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் உரியவாறு மீளாய்வுக்கு உட்படுத்தப்படுமா எனவும், இவ்வரைவு தொடர்பான பொதுக்கலந்துரையாடல் செயன்முறை சகலரையும் உள்ளடக்கியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் அமைவதற்கு அரசாங்கத்தினால் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் தெளிவுபடுத்துமாறு வேண்டுகோள்விடுக்கிறோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/238836
  15. பிரித்தானிய துணைப் பிரதமர் இலங்கையில்... Feb 17, 2026 - 10:59 AM பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தார். டேவிட் லாமியுடன் அவரது அலுவலகத்தைச் சேர்ந்த 7 உயர்மட்ட அதிகாரிகள் தூதுக்குழுவினராக வருகை தந்துள்ளனர். தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR-664 என்ற விமானம் மூலம், இன்று (17) காலை 09:11 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்களை வரவேற்பதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன உள்ளிட்டோர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர்கள் அறைக்கு வருகை தந்திருந்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலேயே பிரித்தானிய துணைப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது, பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். 'டித்வா' புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய இராச்சியத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகள் மற்றும் அந்த வேலைத்திட்டங்களை மேற்பார்வை செய்வதும் துணைப் பிரதமரின் விஜயத்தின் நோக்கமாகும். மேலும், சிறுவர் பராமரிப்புக்கான பூகோள சாசனத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதும் பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் இந்த விஜயத்தின் போது இடம்பெறவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlq5ullj001e356n6v814sxk
  16. யாழில். காணி பிரச்சனையில் ஒருவர் அடித்துக்கொலை - மூவர் தலைமறைவு Published By: Vishnu 16 Feb, 2026 | 11:03 PM யாழ்ப்பாணத்தில் காணி பிரச்சனை ஒன்றில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சந்தேகநபர்கள் மூவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கோப்பாய் கல்வியல் கல்லூரிக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற குறித்த கொலை சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பிறிதொரு நபருக்கும் இடையில் நீண்ட காலமாக காணி பிரச்சனை ஒன்று நிலவி வந்த நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை பிரச்சனை முற்றி , கைக்கலப்பாக மாறியுள்ளது. அதன் போது மூவர் இணைந்து தாக்குலை மேற்கொண்டதில் அந்நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தாக்குதலாளிகள் மூவரையும் அடையாளம் கொண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதேவேளை சடலத்தை மீட்டு , உடற்கூற்று பரிசோதனைக்கு யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/238837
  17. என் மகன் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் – நவால்னியின் தாய் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் மரணம் விஷம் கொடுத்து நிகழ்த்தப்பட்டதாக வெளியான மதிப்பீடு, “என் மகன் கொலை செய்யப்பட்டார்” என்ற தனது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் மகனின் கல்லறையை அவரது மரணத்தின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளில் பார்வையிட்ட லியுட்மிலா நவால்னயா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு உயிரிழந்த நவால்னி, தவளை விஷத்திலிருந்து உருவாக்கப்பட்ட நச்சுப் பொருள் மூலம் கொல்லப்பட்டார் எனவும், “இந்த உயிர்க்கொல்லி நச்சை பயன்படுத்தும் திறன், நோக்கம் மற்றும் வாய்ப்பு ரஷ்ய அரசுக்கு மட்டுமே இருந்தது” எனவும் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆரம்பத்திலிருந்தே எங்களுக்கு இது தெரியும் எனவும் தமது மகன் சிறையில் இயல்பாக இறக்கவில்லை எனவும் அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தமக்குத் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டுகளை ரஷ்யா தீவிரமாக மறுத்துள்ளது. ரஷ்ய அரசாஙக்ப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் “இந்த குற்றச்சாட்டுகளை எங்களால் ஏற்க முடியாது. அவை ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். நாம் உண்மையை அடைந்துள்ளோம்; ஒருநாள் நீதியையும் பெறுவோம்,” என நவால்னியின் மனைவி யுலியா நவால்னயா சமூக ஊடகத்தில் குறிப்பிட்டுள்ளார். 47 வயதான நவால்னி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/navalny-s-mother-says-knew-he-was-murdered-1771266916
  18. கடலடி மலைகள் சுறாக்களை ஈர்ப்பதன் மர்மம் என்ன? பட மூலாதாரம்,AIG Conservation Dept கட்டுரை தகவல் கேத்தரீன் லேதம்‎ 16 பிப்ரவரி 2026 வாசிக்கும் நேரம்: 9 நிமிடங்கள் பரந்து விரிந்து, அலைபாய்ந்து கொண்டிருக்கும் கடலின் மேற்பரப்புக்குக் கீழே, பிரமாண்டமான கடலடி மலைகள் பரவியுள்ளன. அந்த நிலவியல் அமைப்புகள் சுறாக்களால் நிரம்பி வழிகின்றன. நீண்டகாலமாகச் செயலற்றுக் கிடக்கும் எரிமலை சிகரங்களின் மீது கடல் நீரோட்டங்கள் காற்றைப் போல கர்ஜிக்கின்றன. இந்தக் கடலடி மலைகள், கடலின் தரையில் இருந்து செங்குத்தாக உயர்ந்து, 3,300 அடி உயரம் வரை செல்கின்றன. சில மலைகளில் பள்ளங்கள் உள்ளன அல்லது முகடுகள் வரிசையாக அமைந்துள்ளன. மற்றவற்றின் உச்சியில் பெரிய, தட்டையான பீடபூமிகள் உள்ளன. சில நேரங்களில் இந்தச் சிகரங்கள் கடலின் மேற்பரப்புக்கு மேலே எட்டிப் பார்த்து, தீவுகளை உருவாக்குகின்றன. கடல் மலைகள் என்பவை ஆழ்கடல் மற்றும் திறந்தவெளிப் பெருங்கடல் உயிரினங்கள் சந்திக்கும் நீருக்கு அடியிலுள்ள மலைத் தொடர்களாகும். சிறிய மிதவை உயிரினங்களை உண்ணும் மீன்கள் முதல் பெரிய வேட்டையாடி உயிரினங்கள் வரை அனைத்துமே இங்கு கூடுகின்றன. இது கடல் உணவுச் சங்கிலியில் ஒரு பரபரப்பான இடமாக உள்ளது. இப்படியான கடல் மலை ஒவ்வொன்றும் தனித்துவமானது, நிரம்பி வழியும் உயிர் சூழலைக் கொண்டது. அவை பவளப் பாறைகள், ஓடுள்ள கணுக்காலிகள், கடற்பஞ்சுகள், கடல் நட்சத்திர மீன், மீன்கள், ஆக்டோபஸ்கள், ஆமைகள், திமிங்கிலங்கள், டால்பின்கள், சுறாக்கள் எனப் பலவற்றால் செழித்துக் காணப்படுகின்றன. தட்டையான கடல் தரையுடன் ஒப்பிடும்போது, கடல் மலைகள் அதிக எண்ணிக்கையிலும் பன்முகத்தன்மையுடனும் அதிக உயிரினங்களைக் கொண்டுள்ளன. அவற்றில் பலவும் உலகில் வேறு எங்குமே காணப்படாதவை. மேலும், இந்த இடங்களில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் இருக்கக்கூடும். வடக்கு அட்லான்டிக்கின் உறைந்த நீரில் இருந்து வெப்பமண்டல பசிபிக்கின் ஆழமான பகுதிகள் வரை, உலகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடலடி மலைகள் பரவியுள்ளதாகக் கருதப்படுகிறது. ஆனால், அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன. "கடந்த சில தசாப்தங்களாக கடல் தரையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான எரிமலை சிகரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன" என்கிறார் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் காலநிலை இயக்கவியல் துறை இணை பேராசிரியர் அலி மஷாயெக். இன்று, கடல் குறித்த ஆய்வு வேகமடைந்து வருவதால், மேன்மேலும் கடலடி மலைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அட்லான்டிக் பெருங்கடலின் கடல் மலைகளை ஆய்வு செய்வதற்காக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு பயணத்தின்போது, விஞ்ஞானிகள் கடலின் உணவுச் சங்கிலியில் உச்சத்தில் இருக்கும் வேட்டையாடிகளான சுறா மீன்களை அசாதாரணமான எண்ணிக்கையில் கண்டுபிடித்தனர். "அது எங்கோ தொலைவில் ஒரு சிறிய கிராமத்தில் வசிப்பது போல் இருந்தது," என்கிறார் அசென்ஷன் தீவில் ஏழு ஆண்டுகள் முதன்மைப் பாதுகாப்பு விஞ்ஞானியாகப் பணியாற்றிய சாம் வெப்பர். அசென்ஷன் தீவு என்பது ஆப்பிரிக்காவுக்கும் பிரேசிலுக்கும் இடையே உள்ள தீவு. வெப்பமண்டல மத்திய அட்லான்டிக்கில் தனிமையிலுள்ள ஒரு நிலப்பரப்பு. ஆனால், அந்தத் தீவைச் சூழ்ந்துள்ள கடல் அலைகளுக்குக் கீழே பார்த்தால், ஒரு வித்தியாசமான கதை வெளிப்படுகிறது. கடலுக்கு அடியில் உள்ள ஓர் எரிமலையின் உச்சியே அசென்ஷன் தீவின் நிலப்பகுதி. பட மூலாதாரம்,AIG Conservation Dept படக்குறிப்பு,அசென்ஷன் தீவின் கடற்கரைக்கு அப்பால், ஆராய்ச்சியாளர்கள் ஒரு பட்டுச் சுறாவை டேக் செய்வதற்காக இழுக்கின்றனர் அது, "கடல் மட்டத்தைத் தாண்டி ஒரு தீவாக மாறியுள்ளது" என்று வெப்பர் கூறுகிறார். இது நூற்றுக்கணக்கான மைல்களுக்கு நீண்டு கிடக்கும் கடல் மலைகளின் சங்கிலியில் உள்ள ஒன்று. "அது செயின்ட் ஹெலினா வழியாகச் சென்று, அட்லான்டிக் பெருங்கடலைக் கடந்து ஆப்பிரிக்கா வரை செல்கிறது." தற்போது பிரிட்டனில் உள்ள எக்ஸிடர் பல்கலைக் கழகத்தில் கடல் முதுகெலும்புயிரி சூழலியல் மற்றும் பாதுகாப்புத் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் வெப்பர், அசென்ஷன் தீவின் கடற்கரையில் இருந்து சுமார் 300கி.மீ தொலைவிலுள்ள மூன்று கடலடி மலைகளை ஆய்வு செய்தார். ஹாரிஸ் ஸ்டீவர்ட் கடல் மலையின் உச்சி ஆழமாக உள்ளது. மறுபுறம், கிராட்டன், யங் ஆகிய 'தெற்கு கடல் மலைகள்' ஒப்பீட்டளவில் ஆழம் குறைந்தவையாக உள்ளன. அவற்றின் சிகரங்கள், கடல் மட்டத்தில் இருந்து 330 அடி ஆழம் வரை உயர்ந்துள்ளன. அதோடு, அவை வெறும் 80கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளன. அந்த இடம் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது என்கிறார் வெப்பர். பிரிட்டிஷ் அன்டார்டிக் ஆய்வின் ஜேம்ஸ் கிளார்க் ராஸ் என்ற ஆய்வுக் கப்பலுடன் இணைந்து, வெப்பர் தனது 16 நாட்களில் பெரும்பாலான நாட்களை ஒரு சிறிய நீளமான மீன்பிடிப் படகில் கழித்தார். அப்போது அவர், தனது ஆய்வுக்காக சுறாக்களைப் பிடித்து டேக் செய்துகொண்டிருந்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 41 மடங்கு அதிகமான சுறாக்கள் "நாங்கள் மீனவர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றினோம். அவர்கள் மீன்களை மிகத் திறமையாகப் பிடித்தார்கள். பின்னர், நாங்கள் அதை டேக் செய்யும் வேலையைச் செய்தோம். அனைவரும் ஒன்றாக வேலை செய்தோம், சமைத்துச் சாப்பிட்டோம், ஒன்றாகத் தூங்கினோம்." இந்தத் தெற்கு கடல் மலைகளில்தான் வெப்பர் மற்றும் அவரது சகாக்கள், திறந்த பெருங்கடலுடன் ஒப்பிடும்போது, 41 மடங்கு அதிகமான சுறாக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். சுற்றியுள்ள கடல் நீருடன் ஒப்பிடுகையில், வெப்பரும் அவரது குழுவும் தெற்கு கடல் மலைகளில் சுறாக்கள் மற்றும் இதர பெரிய வேட்டையாடி மீன்களின் மொத்த பன்முகத்தன்மை ஐந்து மடங்கு அதிகமாகவும் உயிர்க்கூளம் 30 மடங்கு அதிகமாகவும் இருந்ததைக் கண்டறிந்தனர். பல அழியும் அபாயத்தில் உள்ள இனங்களின் எண்ணிக்கையும் மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற வணிக ரீதியாகப் பிடிக்கப்படும் இனங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகளவில் இருந்தது. "ஆழ்கடல் மற்றும் வலசை செல்லும் சுறாக்கள் உள்பட, சுறாக்கள் உலகப் பெருங்கடல்கள் அனைத்திலும் கடல் மலைகளைச் சுற்றி இருக்கவே விரும்புகின்றன" என்று பிரிட்டனில் உள்ள பிளைமௌத் பல்கலைக் கழக உயிரியல் மற்றும் கடல் அறிவியல் பள்ளியின் கடல் ஆளுகை நிபுணரும் இணை விரிவுரையாளருமான லிடியா கோலர் தெரிவித்தார். இருப்பினும், கடலடி மலைகள் ஏன் இத்தனை சிறந்த கடல் வேட்டையாடிகளைத் தம்மை நோக்கி இழுக்கின்றன என்பது ஓரளவுக்கு மர்மமாகவே உள்ளது. பட மூலாதாரம்,AIG Conservation Dept/ Univ of Exeter/ Univ of W Australia படக்குறிப்பு,அசென்ஷன் தீவு கடல் மலைக்கு அருகில், நீருக்கடியில் கேமராவால் படம்பிடிக்கப்பட்டபோது, ஒரு ஷார்ட்ஃபின் மேக்கோ சுறா இரையை ஆராய்வது பதிவானது கடலடி மலைகளும் புவி காந்தப்புலமும் கடல்வாழ் உயிரினங்கள் தங்குமிடம், சுத்தம் செய்துகொள்வது, உணவு எனப் பல காரணங்களுக்காக கடலடி மலைகளுக்குச் செல்லக்கூடும் என்று கருதப்படுகிறது. அதோடு, அவற்றை அவை வழிசெலுத்தலுக்கான அடையாளமாகவும் பயன்படுத்தக்கூடும். சிறிய இரும்பு அணுக்களைக் கொண்ட எரிமலைப் பாறை குளிர்ந்து திடமாகும்போது ஒரு கடலடி மலை உருவாகிறது. பூமியின் காந்தப்புலத்துடன் சீரமைக்கப்படும் இந்த இரும்பு அணுக்கள், காலத்தால் உறைந்து போகின்றன. மேலும், அந்தக் கடலடி மலையின் தனித்துவமான காந்தப்புலம் அதில் நிலைநிறுத்தப்படுகிறது. திமிங்கிலம், சுறா ஆகிய இரு இனங்களும் கடலடி மலைகளின் தனித்துவமான புவிகாந்த அடையாளங்களை பாதை கண்டறியப் பயன்படுத்தக்கூடும் என்று வெப்பர் கூறுகிறார். "கடலடி மலைகள் மிகவும் வலுவான காந்த அடையாளத்தைக் கொண்டுள்ளன. மீன்கள் பலவும் அதை உணரக்கூடியவையாக உள்ளன. நாங்கள் ஆய்வு செய்த கடலடி மலைகள், சுமார் 100 முதல் 200 கி.மீ இடைவெளியில் அமைந்துள்ள ஒரு மிக நீண்ட கடலடி மலைத்தொடரின் முனையில் உள்ளன. கடல்வாழ் உயிரினங்கள் தங்கள் வலசைப் பாதையில் அவற்றை இடைத்தங்கல் இடங்களாகப் பயன்படுத்துகின்றனவா என்பதைக் கண்டறிய நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம்." "உணவுச் சங்கிலியின் உச்சியில் உள்ள வேட்டையாடிகள் உள்பட, கடலடி மலைகளில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஆற்றலின் ஒரு செறிவாகும்," என்று வெப்பர் விளக்குகிறார். அவரது கூற்றுப்படி, அந்த ஆற்றல் இரண்டு முக்கிய இடங்களில் இருந்து வரலாம். "முதலாவதாக, கடலடி மலையிலேயே அது உருவாக்கப்படலாம். அதாவது, கடலடி மலை ஆற்றலை உருவாக்குகிறது அல்லது செறிவூட்டுகிறது. இதுவே சோலை கருதுகோள். அதாவது கடலடி மலை என்பது உயிர்ச்சூழலை ஆதரித்து வளர்க்கும் ஒரு சோலையைப் போன்றது." "இரண்டாவதாக, கடலடி மலைகள், வேறு இடங்களில் உணவருந்திவிட்டு, அந்த ஆற்றலை கடலடி மலைக்குக் கொண்டு வரும் உயிரினங்களுக்கான கூடுமிடங்களாகச் செயல்படுகின்றன. இதுவே சேவை மையம் கருதுகோள்." பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,பூமியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கடலடி மலைகள் இருப்பதாகக் கருதப்படுகிறது, ஆனால் அவற்றில் 0.1%-க்கும் குறைவானவையே ஆராயப்பட்டுள்ளன பெருங்கடலை கலக்கி விடும் கடலடி மலைகள் கடந்த 1998இல், பெருங்கடல் ஆய்வில் முன்னோடி ஆராய்ச்சியாளரான வால்டர் மங்க், கடல் மலைகளை "பெருங்கடலை கலக்கி விடும் தண்டுகள்" என்று விவரித்தார். ஒரு கடல் மலை எவ்வாறு வளமான, ஊட்டமளிக்கும் சோலையாக மாறக்கூடும் என்பதை விளக்குவதற்கு இது உதவக்கூடும். கடல் மலையைச் சுற்றியுள்ள ஆழ்கடலில் நீர் கொந்தளிப்பாகவும் சீரற்றதாகவும் இருக்கலாம். கடல் நீரோட்டங்கள் நீருக்கு அடியில் உள்ள செங்குத்தான சரிவுகளில் மோதும்போது, நீர் உச்சிக்குத் தள்ளப்படுகிறது. இதனால், குளிர்ந்த ஊட்டச்சத்து நிறைந்த நீரை சூரிய ஒளி படக்கூடிய மேற்பரப்பை நோக்கித் தள்ளுகிறது. "பெருங்கடலின் ஆழமான நீரோட்டங்கள் இந்தக் கடல் மலைகளுடன் இடைவினை புரிவதால் உருவாகும் கொந்தளிப்பு, ஆழ்கடல் நீரோட்ட இயக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு வகிப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம்" என்கிறார் மஷாயெக். உண்மையில், மஷாயெக் மற்றும் அவரது குழுவின் கூற்றுப்படி, மலைகளைச் சுற்றி நடக்கும் இந்தக் கலக்குதல், உலகளாவிய பெருங்கடல் கலவையின் மொத்த அளவில் மூன்றில் ஒரு பங்குக்குப் பங்காற்றுகிறது. "கடல் மலையால் தூண்டப்படும் இந்தக் கலவையானது ஊட்டச்சத்துகள், ஆக்ஸிஜன், வெப்பம், கரிமம் போன்ற இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பண்புகளின் ஆழ்கடல் சேமிப்பைக் கட்டுப்படுத்துகிறது" என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் பெருங்கடல் ஆய்வாளரும் ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியருமான லாரா சிமோலி. ஆழ்கடல் நீர் மேற்பரப்புக்குத் தள்ளப்படும்போது, ஊட்டச்சத்துகள் மேல்நோக்கி வருகிறது. இது ஃபைட்டோபிளாங்டன்களின் பெருக்கத்திற்கு வித்திடுகிறது. இவை பெருங்கடல் உணவுச் சங்கிலியில் முதன்மையாக இருப்பதால், கடல் மலை ஒரு வளமான சோலையாக மாறுகிறது. இது சுறாக்கள் போன்ற பெரிய வேட்டையாடிகளை ஈர்க்கிறது. "கடல் மலைகள், அதன் மீது தொடர்ந்து அடித்துச் செல்லப்படும் பிளாங்டன் உயிரிகளுக்கு ஒரு மாபெரும் பொறியாகச் செயல்பட முடியும்" என்கிறார் வெப்பர். அதோடு, "இந்த பிளாங்டன் மேலும் கீழுமாக நகரும்போது, கடல் மலையால் அதை உச்சியில் சிக்க வைக்க முடியும். அந்த அற்றல், பின்னர் உணவு வலையின் ஊடாக, அதற்கு மேலே உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் பரவுகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,பொதுவாக தனிமையில் வாழும் மார்பிள் மின்சாரத் திருக்கை மீன்கள், போர்ச்சுகல் கடற்கரைக்கு அப்பால் உள்ள கோரிங்கே கடலடி மலையில் கூடுகின்றன 'சேவை மையம் கருதுகோள்' சில உயிரினங்கள் கடல் மலையைத் தங்கள் வீடாகக் கொண்டு, "நிரந்தரமாக வசிப்பதாகவும்" வெப்பரின் கண்டுபிடிப்புகள் கூறுகின்றன. அதோடு, கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு மற்றும் பெரிய கண் சூரை மீன்கள் போன்ற சில இனங்கள், திறந்தவெளி பெருங்கடலில் இரை தேடிய பிறகு கடல் மலைகளில் கூடுவதையும் காட்டுகின்றன. "ஆற்றல் கடல் மலைக்கு வெளியே உருவாக்கப்பட்டு, இரை தேடும், இடம்பெயரும் வேட்டையாடிகள் அதைச் சேகரித்து கடல் மலைகளுக்குக் கொண்டு வருகின்றன." இங்குதான் "சேவை மையக் கோட்பாடு" வருகிறது. கடல் மலைகள் ஒன்று கூடுவதற்கும், சமூக நடத்தைகளில் ஈடுபடுவதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்குமான ஓர் இடமாகச் செயல்படலாம். அல்லது திறந்தவெளிப் பெருங்கடலில் வேட்டையாடிய பிறகு திரும்புவதற்கான ஒரு தளமாகக்கூட இருக்கலாம். கடல் மலைகளில் சுறாக்கள் விரும்புவதாகத் தோன்றும் சில குறிப்பிட்ட இடங்கள் உள்ளதாகக் கூறுகிறார் வெப்பர். "அவை மிக அதிக எண்ணிக்கையில் அந்த ஓர் இடத்தில் ஒன்று கூடுகின்றன." இதுதான் வெப்பருக்கு மிகவும் பிடித்தமான கருதுகோள். இதை அவர் 'சேவை மையக் கருதுகோள்" என்று அழைக்கிறார். மேலும், இதை அவர் விரிவாக ஆராய விரும்புவதாகவும் தெரிவித்தார்: "அவை கடல் மலைகளை ஆற்றல் சேமிப்புப் புகலிடமாகப் பயன்படுத்துகின்றனவா என்பதை நாங்கள் சோதிக்க விரும்புகிறோம்." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,ஒவ்வொரு கடலடி மலையும் தனித்துவமானது மற்றும் உயிர்ச்சூழல் நிரம்பியுள்ளது பல சுறா இனங்கள் தங்கள் செவுள்களுக்கு தொடர்ந்து தண்ணீரைச் செலுத்திக்கொண்டே இருக்க இடைவிடாமல் நீந்த வேண்டியுள்ளது. "அவற்றால் நீந்துவதை நிறுத்த முடியாது. இதுவொரு ஆற்றல் செலவை ஏற்படுத்துகிறது." வானத்தில் ஒரு கழுகு வெப்பக் காற்றோட்டத்தில் வட்டமிடுவதைப் போல, கடல் மலைகளைச் சுற்றி நீர் மேலே எழும்போது, அதேபோன்ற ஒரு நிகழ்வு சுறாக்களிடையே நடக்கக்கூடும் என்று வெப்பர் கருதுகிறார். இந்த மேல்நோக்கிய நீரோட்டம், சுறாக்கள் உணவு உண்ணாத நேரங்களில் மிதந்து ஆற்றலைச் சேமிக்க அனுமதிக்கும். "பின்னர் அவை மீண்டும் வெளியே சென்று நீலக்கடலில் இரை தேடுகின்றன." வெப்பரின் குழுவால் டேக் செய்யப்பட்ட ஒரு குறிப்பிட்ட பட்டு சுறா, ஒவ்வோர் இரவும் இரை தேடுவதற்காகக் கடல் மலையை விட்டு வெளியேறி, 100 கி.மீ வரை பயணிக்கிறது. "அவற்றால் இந்தக் கடல் மலைகளுக்கு மிகத் திறமையாகப் பாதையைக் கண்டறிய முடிகிறது. அவற்றால் நீண்ட நேரம் நீந்த முடியும், மிக விரைவாக மீண்டும் அதே இடத்திற்குத் திரும்பவும் முடியும்," என்கிறார் வெப்பர். ஆய்வாளர்களுக்குத் தெரிந்த மற்றொரு விஷயம் என்னவெனில், டேக் செய்யப்பட்ட சில பட்டுச் சுறாக்கள், சுமார் ஓராண்டுக்கு அந்தக் கடலடி மலையில் இருந்து காணாமல் போயின. அவை அவற்றை ஒரு சேவை மையம் போலப் பயன்படுத்துகின்றன என்பதை இது உணர்த்துவதாகக் கூறுகிறார் வெப்பர். "ஒரு நீண்ட பயணத்தில், அவை அங்கு வந்து, ஒருவேளை உணவுண்டு, பின்னர் தங்கள் வலசைப் பயணத்தைத் தொடர்கின்றன. அவை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. மேலும் கடலடி மலைகளில் ஏராளமான உணவு உள்ளது. எனவே, அவை செல்லும் வழியில் இங்கு தங்கிச் செல்கின்றன." பட மூலாதாரம்,Oceano Azul Foundation படக்குறிப்பு,கோரின்ஜ் கடல்மலையின் வாழ்விடங்கள் ஏறக்குறைய 5 கிலோமீட்டர் ஆழம் வரை பரவியுள்ளன. மேலும் அவற்றில் கடற்பாசி காடுகள், குளிர்ந்த நீர் பவளப்பாறைகள், ஆழ்கடல் கடற்பஞ்சுப் படுக்கைகள் ஆகியவை அடங்கும் ஒளிவட்ட விளைவு கடல் மலைகளுக்கு சோலை, சேவை மையம் ஆகிய இரண்டு கருதுகோள்களும் பொருந்தக்கூடும் எனத் தெரிகிறது. அங்கு நிரந்தரமாக வசிக்கும் உயிரினங்கள், வழக்கமாக வந்து செல்லும் உயிரினங்கள், அவ்வழியாகச் செல்லும் சில உயிரினங்கள் எனக் கலந்து காணப்படுகின்றன. இவற்றின் விளைவாக கடல் உயிரினங்களின் எண்ணிக்கை இந்தப் பகுதிகளில் மலைகளின் உச்சிகளுக்கு அப்பால் வெகுதூரம் வரை பரவியிருப்பது கண்டறியப்பட்டது. அதாவது, ஒரு கடலடி மலையைச் சுற்றி கிட்டத்தட்ட ஓர் ஒளிவட்டத்தைப் போல, உயிரினங்களின் செறிவு அதிகமாகக் காணப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது திறந்தவெளிப் பெருங்கடலில் 6கி.மீ வரை பரவியிருந்தது. இந்த ஒளிவட்ட விளைவு சுமார் 40 கி.மீ வரைகூட பரவக்கூடும் என்று பிற ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. "உச்சியில் இருந்து பல கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்றாலும், அதிக எண்ணிக்கையிலான வேட்டையாடிகளை காணலாம். அந்த இடத்தில் கடல் ஆயிரக்கணக்கான மீட்டர்கள் ஆழமாக இருக்கும்," என்கிறார் வெப்பர். பட்டு சுறாக்கள், மஞ்சள் துடுப்பு சூரை மீன்கள், பெரிய கண் சூரை மீன்கள் கடல் மலை உச்சிகளில் இருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பயணித்தன. ஆனால், அவை "ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒட்டியே" இருந்ததாகத் தெரிகிறது, என்கிறார் வெப்பர். ஒலி அலைகள் மூலம் டேக் செய்யப்பட்ட கேலபேகோஸ் மற்றும் பட்டு சுறாக்கள் இரண்டு தெற்கு கடல் மலைகளுக்கு இடையே உள்ள 80கி.மீ தூரத்திலும் பயணிப்பது காணப்பட்டது. அவை அந்த இரண்டு உச்சிகளையுமே தங்கள் வீடாகக் கருதுவது போல அது இருந்தது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இதற்கிடையே, பட்டு சுறாக்கள் இரவில் கடல் மலை உச்சிகளில் இருந்து விலகிச் சென்று, விடியற்காலையில் மீண்டும் திரும்பின. இது வேட்டையாடிகளின் எண்ணிக்கைப் பெருக்கம் நிறைந்த ஒளிவட்டம், இரவு மற்றும் பகலுக்கு ஏற்ப விரிவடைந்து, சுருங்குவதைக் காட்டுகிறது. கடல் மலைகள் ஆழ்கடலில் பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஈடு செய்ய முடியாத சோலைகளாகும். மேலும் சுறாக்கள், திருக்கை மீன்கள், ஸ்கேட் மீன்கள் போன்ற அழியும் அபாயத்தில் உள்ள மீன்கள் உள்படப் பலவற்றுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்பதை நிரூபிக்கும் சான்றுகளும் அதிகரித்து வருகின்றன. "ஆழமற்ற கடல் முதல் ஆழ்கடல் வரை, கடலோரப் பகுதி முதல் ஆழ்கடல் வரை, முழு கடல் சூழலியல் அமைப்பிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டிருக்கும் சுறா இனங்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன" என்கிறார் கோலர். ஆனால், அவையனைத்தும் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது ஆபத்தானது. பல தசாப்தங்களாக, பெரிய கண் சூரை மீன் போன்ற விரும்பத்தக்க மீன்களை எளிதில் காணக்கூடிய கடல் மலைகள், டிராலர் எனப்படும் ஆழ்கடல் இழுவை வலை மீன்பிடித்தலுக்கு உள்ளாகி வருகின்றன. "சுறாக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது அதிகப்படியான மீன்பிடித்தல்தான்" என்கிறார் கோலர். "இதில் வணிகரீதியாக அவற்றை இலக்கு வைத்துப் பிடிப்பது மட்டுமின்றி தற்செயலாக இழுவை வலைகளில் சிக்குவதும் அடங்கும்" என்கிறார் அவர். "அவர்கள் வேண்டுமென்றே சுறாக்களைப் பிடிக்கச் செல்வதில்லை. ஆனால் அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், செல்லும் இடங்கள் காரணமாக, அதிக எண்ணிக்கையிலான சுறாக்களைப் பிடிக்கிறார்கள். மேலும், அவற்றை கரைக்குக் கொண்டு வந்து சந்தைப்படுத்துகிறார்கள்." பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கடல்வாழ் உயிரினங்களுக்கு இருக்கும் ஐந்து பெரிய அச்சுறுத்தல்களில், இழுவை வலை மீன்பிடித்தலும் ஒன்று. மேலும், இதனால் பாதிக்கப்படக்கூடிய உயிரினங்களில் சுறாக்களும் அடங்கும். ஒவ்வோர் ஆண்டும் மீன்பிடித் தொழில்களால் எத்தனை சுறாக்கள் கொல்லப்படுகின்றன என்பதில் தெளிவில்லை. ஆனால், அந்த எண்ணிக்கை நூற்றுக்கணக்கான மில்லியன்களில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக, கடல் தரையில் வலைகளைப் போட்டு இழுத்துக்கொண்டே செல்வதன் மூலம் மீன்பிடிப்பது அழிவுகரமான மீன்பிடி முறை என்கிறார் கோலர். "கனமான ஒரு வலை, கடல் தரை முழுவதும் இழுத்துச் செல்லப்படுகிறது. மென்மையான கடற்பஞ்சுகள், பவளப் பாறைகள் போன்ற எளிதில் உடையக்கூடிய அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் அது பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் அவை அடியோடு அகற்றப்படுகின்றன. இறுதியில் மிஞ்சுவது ஒன்றுமில்லாத வெற்று நிலப்பரப்பு மட்டுமே." அனைத்தும் கடல் தரையில் இருந்து சுரண்டி எடுக்கப்படுகின்றன. அங்கு இருக்கும் எந்தவொரு உயிரினமும் அகற்றப்படுகிறது. "கடல் தரையில் இழுவை வலைகளை வைத்து மீன்பிடிப்பது, அடிமட்ட சுற்றுச்சூழல் அமைப்பையே தகர்த்துவிடுகிறது. இதனால் முழு உணவுச் சங்கிலியும் அழிக்கப்படுகிறது" என்கிறார் வெப்பர். மேலும், "கடல் மலைகளில் வாழும் உயிரினங்களில் பலவும் மிக மெதுவாக வளரக்கூடியவை. அவை மிக மெதுவான வாழ்க்கை சுழற்சியைக் கொண்டவை. இழுவை வலையால் நிகழும் திடீர் மீன் பிடித்தல் முறை அவற்றை முழுதாக அள்ளிச் செல்கின்றன. இதனால் அவை முற்றிலுமாகக் காணாமல் போய்விடுகின்றன" என்றும் வெப்பர் குறிப்பிட்டார். இழுவை வலை மீன் பிடித்தலின் தாக்கம் கடலடி மலைகளில் பல தசாப்தங்களுக்கு நீடிக்கும் என்கிறார் கோலர். "இந்தச் சூழல் அமைப்புகள் மீண்டும் உருவாகி மீண்டு வருவதற்கு மனித வாழ்நாளைவிட அதிக காலம் எடுக்கும். இதற்கிடையே, உணவு ஆதாரங்கள், இனப்பெருக்கப் பகுதிகள் போன்ற மிக முக்கியமான அவற்றின் சேவைகளை கடல் உயிரினங்கள் இழக்க நேரிடும்." இருப்பினும், சுறாக்கள் எங்கு கூடுகின்றன என்பதை அறிவது, பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தேவையான முக்கிய ஞானமாக உள்ளது. அசென்ஷன் தீவுகளிலும், 2019இல் முழு பிரத்யேக பொருளாதார மண்டலம் வணிக மீன்பிடித்தலுக்காக மூடப்பட்டது. 2021இல் ஐ.நா சபையின் இரண்டாவது உலகப் பெருங்கடல் மதிப்பீடு, "மீன்பிடிப்பு, கடலடி மலைச் சூழல் அமைப்புகளுக்குத் தற்போதுள்ள மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறியது. மேலும், அக்டோபர் 2025இல் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் "தீர்மானம் 032" ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் கடலடி மலைகளில் இழுவை வலை மீன்பிடித்தல் முறையில் உலகளாவிய மாற்றத்திற்கு அழைப்பு விடுத்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8d0j884vlyo
  19. இனவாதத்திற்கு இடமில்லை; மாற்றத்தை முன்னெடுக்கப் பெண்கள் முன்வர வேண்டும் - பிரதமர் ஹரிணி அமரசூரிய! Published By: Digital Desk 1 16 Feb, 2026 | 03:30 PM இனவாதத்தைத் தூண்டி, நாடு முன்னெடுத்துச் செல்லும் பயணத்தைப் பின்னோக்கித் தள்ள எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும், ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மன்னார், அடம்பன் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எமது அரசாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். புள்ளிவிபரங்களின்படி, மொத்த சனத்தொகையில் சுமார் 52 சதவீதமானோர் பெண்கள். அதன் அர்த்தம், எமது நாட்டின் மக்கள் தொகையில் பலம்மிக்க ஒரு தரப்பினர் பெண்களே என்பதாகும். ஆயினும், பல்வேறு துறைகளை எடுத்துக்கொண்டால் அல்லது அன்றாட வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பார்த்தால், அந்தப் பலம் நடைமுறையில் பெண்களாகிய எமக்கு இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கின்றது. எமது நாட்டில் நீண்டகாலமாக இருந்த பிரதான பிரச்சினை யுத்தமும் வன்முறையுமே ஆகும். நாம் ஒருவரையொருவர் சந்தேகக் கண்ணோட்டத்துடனேயே பார்த்து வந்தோம். உண்மையில் யுத்தம் காரணமாக நாம் பிளவுபட்ட ஒரு நாடாகவே இருந்தோம். இதன் காரணமாகப் பெண்களே அதிகளவான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். இந்நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் தமது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உடன்பிறப்புகளை இழந்து துயரப்படுவதை நாம் அறிவோம். இந்தப் பகுதியிலும் அவ்வாறு துயரப்படும் பல பெண்கள் இருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். யுத்தம் முடிவடைந்து நீண்ட காலம் கடந்துவிட்ட போதிலும், அந்த அமைதி இன்றும் எமது இதயங்களில் ஏற்படவில்லை. இப்போதும் கூட, தமது குடும்ப உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியாது தவிக்கும் பெண்கள் இருக்கவே செய்கின்றார்கள். தனித்து நின்று தமது குடும்பத்தைப் பாதுகாக்கப் போராடும் பல பெண்களும் இருக்கிறார்கள். எமது அரசாங்கம் இனவாதத்திற்கு எதிராகப் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இந்நாட்டின் சகலரும் பாதுகாப்பாக, சம உரிமைகளுடன் வாழ வேண்டும் என்பதே எமது நோக்கம். ஆயினும், சில இனவாதக் கும்பல்கள் மக்களிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றன. அவர்களுக்கு ஊழலை ஒழித்து, ஜனநாயகத்தைப் பாதுகாத்து, சட்டத்தைச் சமமாக நடைமுறைப்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அவர்களுக்குத் தேவை அதிகாரம் மட்டுமே. அதுவும் சாதாரண மக்களுக்காக அல்ல, அவர்களது சுயநலத்திற்காகவே. அவர்கள் இந்நாட்டின் வளங்களை எந்த அளவுக்கு அழித்திருக்கிறார்கள் என்பது எமக்குத் தெரியும். 2022 ஆம் ஆண்டில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆயினும் 2025 ஆம் ஆண்டளவில், திருட்டு, ஊழல் மற்றும் வீண்விரயங்களைத் தடுத்துப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எமது அரசாங்கத்தால் முடிந்தது. அதனாலேயே, 'தித்வா' சூறாவளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் யாரிடமும் கடன் பெறாது மக்களுக்கு உதவ எம்மால் முடிந்தது. 21 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் பால் பண்ணையாளர்களுக்கு 'மில்கோ' நிறுவனத்தின் இலாபத்தைப் பகிர்ந்து அளிக்க முடிந்தது. ஒரு வருட காலத்திற்குள் வருமான வழிகளை அதிகரித்து, நிறுவனங்களின் வீண்விரயங்களைக் குறைத்ததாலேயே இந்த இலாபத்தை வழங்க முடிந்தது. வீழ்ச்சியடைந்த நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பி, மோசடி மற்றும் ஊழலை நிறுத்தி, அரசியல்வாதிகளின் வீண்விரயங்களைத் தடுத்து, அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டை இனவாதத்தைத் தூண்டிப் பின்னோக்கித் தள்ளச் சிலர் முயற்சிக்கின்றனர். இனவாதத்தினால் அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெண்களே ஆவர். நாம் மீண்டும் பிளவுபட்டு, ஒற்றுமையின்மையை ஏற்படுத்த இடமளிக்க வேண்டுமா? வேண்டாம் என்றால் அதற்குப் பெண்களின் தலைமைத்துவம் அவசியம். நாம் ஆரம்பித்துள்ள மாற்றத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லப் பெண்களாகிய நீங்களும் முன்வர வேண்டும். நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆகையினால் முன்னோக்கிச் செல்லும் எமது பயணத்தைப் பின்னோக்கித் தள்ள நாம் இடமளிக்க மாட்டோம். நாம் எதிர்நோக்கும் மற்றொரு பிரதான பிரச்சினை போதைப்பொருள். எமது பிள்ளைகள் அதற்குப் பலியாகிவிடுவார்களோ என்ற அச்சத்திலேயே நாம் இருக்கிறோம். இதனால் குடும்பத் தகராறுகள் ஏற்படுகின்றன. போதைப்பொருள் பாவனையாளர்கள் காரணமாக வீதிகளில் நடப்பதற்கும், வீடுகளைப் பூட்டிவிட்டுச் செல்வதற்கும் அச்சமாக இருக்கிறது. போதைப்பொருளை நாட்டிலிருந்து ஒழிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார். இது வரை அதிகாரத்தில் இருந்தவர்கள் போதைப்பொருள் வியாபாரிகளுக்குப் பாதுகாப்பு வழங்கினார்கள். பொலிஸாருக்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தச் சந்தர்ப்பம் இருக்கவில்லை. ஆனால் இன்று சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸாருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம். இன்று பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்ய முடிகிறது. நீதிமன்றங்கள் சுயாதீனமான தீர்மானங்களை எடுக்கின்றன. தவறு செய்தால் தண்டனை கிடைக்க வேண்டும், சட்டம் அனைவருக்கும் சமம். இருப்பினும் சட்டப் பாதுகாப்பு சரியாக நடைமுறைப்படுத்தப்படாத இடங்கள் இன்னும் இருப்பதை நாம் அறிவோம். வன்முறைக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தச் சட்டம் இன்னும் வினைத்திறனானதாக இருக்க வேண்டும். நாம் நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இவ்வாறான வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிள்ளைகளின் கல்வியில் நம்பிக்கை வைத்துத் தாய்மார்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். அதனால்தான் அனைத்துப் பிள்ளைகளுக்கும் தரமான கல்வியை வழங்க நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஐந்து வருட இடைவேளையின் பின்னர் இந்த ஆண்டு நாம் பட்டதாரி ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துகிறோம். நிச்சயமாக அந்த ஆசிரியர்கள் வெற்றிடங்கள் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். இன்னும் அதிபர்கள் முறையாக நியமிக்கப்படாத நிலைமை இருந்து வருகின்றது. இந்த வெற்றிடங்கள் அனைத்தையும் நிரப்ப நாம் கடந்த ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகின்றோம். அத்துடன் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். பெரிய பாடசாலை, சிறிய பாடசாலை என்ற வேறுபாடு இல்லாது, அனைத்துப் பாடசாலைகளிலும் இருப்பது எமது பிள்ளைகளே என்ற சமத்துவ நிலைமையை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு கல்வி வலையத்திலும் ஒரு பாடசாலையை நாம் அபிவிருத்தி செய்வோம். அந்தப் பாடசாலைகளைத் தெரிவு செய்து அனுப்புமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். ஒவ்வொரு இரண்டாம் நிலை பாடசாலையிலும் 'திறன் வகுப்பறை' ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அத்துடன் இந்த ஆண்டு முதல் முதலாம் தரத்திற்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் கல்வியை வழங்க ஆரம்பித்துள்ளோம். இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே எம்மை மக்கள் ஆட்சிக்குக் கொண்டுவந்தார்கள், அதை நாம் செய்தே தீருவோம். பொருளாதாரத்திற்காகப் பெண்களே அதிகளவு உழைக்கிறார்கள். ஆனால் பெண்களுக்கே மிகக் குறைந்த ஊதியம் கிடைக்கிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளனர். எனவே, வீட்டிலிருந்தே சுயதொழில் செய்வதற்கு அல்லது வேலையில் ஈடுபடும்போது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கான பகல்நேர பராமரிப்பு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் உட்பட மாநகர சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளின் மக்கள் பிரதிநிதிகளும் பெருமளவிலான பெண்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238799
  20. எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம் Feb 17, 2026 - 07:35 AM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) பாராளுமன்றில் நடைபெறவுள்ளது. இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதற்கான விவாதம் நடைபெறும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்றைய முக்கிய அலுவல்கள்: பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம். தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmlpy6b7e0015356nrfo0o5bq
  21. அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்! Feb 16, 2026 - 09:58 PM தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று பிற்பகல் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற "டுடூ" மற்றும் "மோதர நிபுண" ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது. "சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்" என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர். இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 - 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே. இக்கொலைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார். வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. https://adaderanatamil.lk/news/cmlpdxq310010356nmaiy04yq
  22. ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து Published By: Vishnu 16 Feb, 2026 | 10:41 PM (நெவில் அன்தனி) இத்தாலிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் சிரமத்திற்கு மத்தியில் இங்கிலாந்து 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இக் குழுவிலிருந்து இரண்டாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட இங்கிலாந்து தகுதிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. 13 ஆவது ஓவரில் இங்கிலாந்தை 5 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்களுக்கு இத்தாலி பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி இருந்தனர். ஆனால், வில் ஜெக்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்துக்கு 200 ஓட்டங்களைக் கடக்க உதவினார். இதனிடையே சாம் கரனுடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களை வில் ஜெக்ஸ் பகிர்ந்தார். வில் ஜெக்ஸ் 22 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரைவிட டொம் பென்டன் (30), பில் சோல்ட் (28), சாம் கரன் (25), ஜேக்கப் பெத்தெல் (23) ஆகியோர் 20க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் க்ரிஷான் கலுகமகே 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்ட் ஸ்டுவர்ட் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்து சவால் விடுத்த இத்தாலி, 15ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இத்தாலி 43 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கெட்களை இழந்தது. ஆரம்பத்தில் 4 ஓவர்கள் நிறைவில் இத்தாலி 3 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், ஜஸ்டின் மொஸ்கா (43), பென் மெனெட்டி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சவால் விடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. பென் மெனெட்டி 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய வரிசையில் க்ரான்ட் ஸ்டுவர்ட் 23 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாம் கரன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் https://www.virakesari.lk/article/238835
  23. 76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில் 16 Feb, 2026 | 06:35 PM (க.சிவலிங்கமூர்த்தி) நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது. இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 76 வருடங்களாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான அரசியல் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர். 2022 மக்களின் அரகலய போராட்டத்தின் நேரடி விளைவே இந்த மாற்றமாகும். எனினும் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியாளர்களின் அதே 'நவதாராளவாத' பொருளாதாரப் பாதையிலேயே பயணிக்கிறது. மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றனர். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசாங்கம் இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் இல்லாதொழிக்க முற்படுகிறது. 3000 கிராமப்புற பாடசாலைகளை மூடும் திட்டம் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என்பன மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன. மறுபுறம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும் சக்திவள பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதைவிடக் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முடக்குவதே இவர்களின் நோக்கம். கல்வி சுகாதார உரிமைகள் பறிக்கப்படும் போது தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிஊழியர் சேமலாப நிதி ஆகிய நிதியங்கள் சூறையாடப்படும் போது மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி 'வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி' எனும் தொனிப்பொருளில் எமது 4வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது. வெறும் ஆட்சி மாற்றங்கள் எமது மக்களுக்கு விடிவைத் தரவில்லை. இனிவரும் அரசியல் சூழல் என்பது உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் கைம்மாறும் ஒரு தருணமாக அமைய வேண்டும். மலையக மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மாற்றீட்டை எமது மாநாட்டின் மூலம் முன்வைப்போம். உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உக்ரைன் மற்றும் காசாவில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மாநாட்டில் சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். எனவே இந்த மாற்றத்தை விரும்பும் தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் மார்ச் 1ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார். https://www.virakesari.lk/article/238829
  24. வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல் 16 Feb, 2026 | 05:36 PM வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார். கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன: மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04) ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05) வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06) மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விபரங்கள் அடங்கிய முழுமையான தகவல்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் "Exam and Recruitment Advertisement" எனும் பகுதியில் பார்வையிட முடியும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். https://www.virakesari.lk/article/238794
  25. RESULT 30th Match, Group B (N), Pallekele, February 16, 2026, ICC Men's T20 World Cup Australia 181 Sri Lanka (18/20 ov, T:182) 184/2 Sri Lanka won by 8 wickets (with 12 balls remaining)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.