Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இறுவட்டு அட்டைகள் கோபுர வாசலிலே இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன.
  2. இறுவட்டு அட்டைகள் கிழக்கில் வீழ்ந்த வித்துக்கள் தென் தமிழீழத்தில் வீரச்சாவடைந்த கட்டளையாளர்களிற்கு நடைமுறையரசின் காலத்தில் வெளியிடப்பட்ட பாடல்களில் குறிப்பிட்ட சிலரிற்கான பாடல்களை மட்டும் தெரிந்தெடுத்து "தேசக்காற்று" என்ற வலைத்தளம் முதன் முதலில் "கிழக்கில் வீழ்ந்த வித்துக்கள்" என்ற பெயரில் ஒரு இறுவட்டாக நடைமுறையரசின் காலத்திற்குப் பிறகு வெளியிட்டது. அதன் பின் வேறு சில வலைத்தளங்கள் இவ்வெறுவட்டை சுட்டு வேறு வேறு பெயரில் வெளியிட்டன!
  3. இறுவட்டு அட்டைகள் காலம் எதிர்பார்த்த காலம் இவ்விரண்டில் எது முதலில் வெளிவந்த அட்டை என்பது தெரியவில்லை.
  4. இறுவட்டு அட்டைகள் கார்த்திகை 27 இவ்விறுவட்டின் மூல அட்டை எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. வணிக நோக்கில் வெளியிடப்பட்ட அட்டைகள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. எவ்வாறெயினும் இவ்விறுவட்டின் மெய்யான அட்டை என்று கருதப்படும் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துக்களை அழித்துவிட்டு பாவனைக்குட்படுத்தவும். எனினும் இதன் முழுப் படிமமும் கிடைக்கப்பெறவில்லை.
  5. இறுவட்டு அட்டைகள் களத்தில்நின்று வேங்கைகள்/ களத்தில் நிற்கும் வேங்கைகள் இவ்விரண்டு அட்டைகளில் எது முதலில் வெளிவந்து என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. களத்தில் நின்று வேங்கைகள் திறனாய்வு: செல்வன் மூலம்: விழிப்பு: 1992.03.23 பக்கம்: 5 எமது போராட்ட வரலாற்றில் 15- 03-92 ஞாயிற்றுக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். அன்று முழுக்க முழுக்க போராளிகளால் இயற்றப்பட்டு பாடப்பட்ட ஒலிப்பதிவு நாடா வெளியிடப்பட்டது. உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளைப் பார்க்கும் போது அன்னிய ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக மாத்திரமே போராடி வருகின்றன. ஆனால் எமது போராட்டமானது சிங்கள இனவாதத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து விடுபடுவது மாத்திரம் நோக்கமல்லாது சமூகத்தில் இருக்கின்ற அடக்குமுறைகளிலிருந்தும், பொருளாதார பாதிப்புக்களிலிருந்தும் விடுபட வேண்டும் என்று போராடி வருகின்ற போராளிகள் தமது உணர்வுகளை ஆயுதத்தால் மட்டும் வெளிப்படுத்தாமல் கலை இலக்கியங்களாலும் வெளிக்கொணர ஆரம்பித்தனர். அத்தகைய செயற்பாடு தான் ஒலிப்பதிவு நாடாவாக உருப்பெற்றது. இதற்கு முன்னரும் போராளிகளால் பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றதே என்ற கேள்வி எழ முடியும். அவ்வாறு எழுதப்பட்ட பாடல்கள் சீருடையணிந்த போராளிகளாலும் எழுதமுடியும் என்ற உண்மையைத்தான் வெளிக்காட்டியுள்ளதே தவிர சிறந்த பாடகர்களை விட உணர்வுபூர்வமாகப் பாடமுடியும் என்பதை இந்த ஒலிப்பதிவு நாடா தான் விளக்கியுள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற கவிஞர்களான கண்ணதாசன், வைரமுத்து போன்றோர்கள் எல்லாம் ஆர்மோனியத்துடனே பாடல்களை எழுதுவார்கள். ஆனால் இந்தப் பாடலை எழுதிய போராளிக் கவிஞர் ஆயுதமும் பேனாவும் சேர்ததே பாடல்களை எழுதியிருப்பது அவர்களின் திறமையைப் பாடல்களைக் கேட்கும் போது புரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமன்று, இந்தப் பாடலுக்கான 'மெட்டு' அமைக்கும் பாரிய வேலைப்பழு இசையமைப்பாளருக்கு இருந்திருக்காது. ஏனெனில், இதற்கான மெட்டை அமைத்து நாடா வடிவம் பெற முன்னரே களத்தில் பாடி மகிழ்ந்திருக்கிறார்கள். இதற்கு எந்தப் பக்கவாத்தியங்களும் கிடையாது. அப்படி பாவிததிருந்தால் பாத்திரங்கள்தான் பயன்பட்டிருக்கும். கடலில் போகின்ற எவர் கரையை அடைவார்கள் என்பது திரும்பி வந்த பின்னரே அறிய முடியும். அவ்வாறான ஆபத்தையும் பொருட்படுத்தாமல் விடுதலைப் போராட்ட வளர்ச்சிக்காகக் கடலில் பவனி வருவதை "கடலலை மீதினிலோர் பயணம்" என்ற பாடல் விளக்குகிறது. ஒரு சிறு போராளி துள்ளிப் பள்ளிக்குப் போக வேண்டிய வயதில் களத்தில் நிற்கின்றான். அவன் தனது குடும்ப பாசங்களை அடக்கி வைத்திருக்கின்றான் என்பதையும் தலைவர் பிரபாகரனின் அன்பிற்குப் போராளிகள் அனைவரும் குழந்தைகள் என்பதையும் "குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்" என்ற பாடலை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளக் கூடியதாகவிருக்கிறது. இவ்வாறான ஏனைய பாடல்கள் போராட்டத்தின் ஒவ்வொரு பகுதியையும் குறித்து நிற்கின்றது. இவ்வாறான வரலாற்று நிகழ்வுகள் மேலும் மேலும் உருப்பெற வேண்டும். *****
  6. இறுவட்டு அட்டைகள் களத்தில் கேட்கும் கானங்கள் இது மூன்றாவது இறுவட்டு ஆகும். தமிழ்நாட்டிலிருந்து வெளியானது. முதலில் வெளியான அட்டை: இரண்டாவதாக வெளியான அட்டை: களத்தில் கேட்கும் கானங்கள் - பாடல் பிறந்த கதை திறனாய்வு: வஸந்தப்ரியன் மூலம்: ஈழநாதம்-1990.03.25 பக்கம்: 14-15 சில வாரங்களாக நம் யாழ். நகர கடைவீதியெங்கும் போவோர் வருவோரை சற்று நின்று நிதானித்து கேட்கத் தூண்டும் வகையில் சில புதிய பாடல்கள் காற்றோடு கலந்து வருவதை கேட்கக்கூடியதாகவுள்ளது. யாழ். நகரில் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள நகரங்கள், கிராமங்கள் மூலை முடுக்குகளெங்கும் இப் பாடல்கள் கேட்கின்றன. 'ராஜா கையை வச்சா', 'வா வா வஞ்சிமலரே ஒன்று தா தா கொஞ்சும் கிளியே' போன்ற பாடல்களின் ஆக்கிரமிப்பு தளர்ந்து இந்த புதிய பாடல்கள் இனிய குரல்களில், அற்புதமான இசையுடன் இசைந்து ஒலிக்கின்றன. "தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும் - நம் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னிமனம் மெல்ல மெல்ல மாறும் - அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்," சமகால பிரச்சினைகளை, அதனால் ஏற்பட்ட - ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற மாற்றங்கள் மனதைத் தைக்கும் வரிகளில் சொல்லப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டு என்னுள் ஏதோ நெருட, அண்மையிலுள்ள பாடல் பதிவுக் கூடத்தில் இப் பாடல்கள் அடங்கிய ஒலிப்பதிவு நாடாவொன்றை வாங்கினேன். 'களத்தில் கேட்கும் கானங்கள்' என மகுடமிடப்பட்டிருந்த அந்த நாடாவின் உறையைப் பிரித்துப்பார்த்தேன். "இது நினைவுகளின் அலங்காரமல்ல உறுதியின் உருவாக்கம்" என்று உள்ளே குறிப்பிடப்பட்டிருந்ததோடு "இந்திய-சிறீலங்கா கூட்டுச் சதியால் பலாலியில் பலியாகி தீருவில் வெளியில் தீயாகிவிட்ட பன்னிரு வேங்கைகளின் நினைவாலயத்தில் இதை காணிக்கையாக்குகிறோம்" எனவும் அதில் எழுதப்பட்டிருந்தது. அந்த நாடாவில் பதிவு செய்யப்பட்டிருந்த ஒன்பது பாடல்களில் ஏழு பாடல்களை இயற்றியவர் நம் நாட்டுக் கவிஞர் புதுவை இரத்தினதுரை, நமது உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் ஒரு பாடலும் தமிழகக்கவிஞர் இன்குலாப் ஒரு பாடலும் இயற்றியுள்ளனர். நகர இரைச்சல்கள் அடங்கிப்போயிந்த ஓர் இரவுப்பொழுது. பதினொரு மணியிருக்கும் குளித்துவிட்டுக் கரையேறிவரும் ஒரு பெண்ணைப் போல் ஈரமாக வந்து ஜன்னலில் என்னை எட்டிப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தது நிலா. அந்தயௌவன வேளையில் - தொந்தரவற்ற மௌன இரவில் - தனிமையாக பாடல்கள் முழுவதையும் அனுபவித்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் எனக்கு ஏற்பட்ட சுகானுபவம் இது. "கண்மணியே கண்ணுறங்கு காவியமே நீயுறங்கு..." நிம்மதியற்ற ஈழ மண்ணில் ஒரு தாய் தன் குழந்தையை தூங்க வைக்கும் தாலாட்டுப் பாடல். அதன் ஒவ்வொரு வரிகளும் உணர்வோடு கூடிய உன்னத வரிகளாக அமைந்துள்ளது. இன்னொரு பாடல்... கவிஞர் காசிஆனந்தன் இயற்றியது. "அடைக்கலம் தந்த வீடுகளே போய் வருகின்றோம் நன்றி – நெஞ்சை அடைக்கும் துயர் சுமந்து செல்கின்றோம் உங்கள் அன்புக்குப் புலிகளின் நன்றி," தமக்குப் பாதுகாப்புத் தந்து, உணவளித்து உபசரித்த வீடுகட்கு (மக்களுக்கு) போராளியால் நன்றி கூறி விடைபெறுவதாக அமையும் பாடல் வரிகள்... "எங்கள் உடல்களில் ஓடும் செங்குருதி உங்கள் சோறல்லவா - நாங்கள் தங்கியிருந்த நாள் சிலநாள் என்றாலும் நினைவு நூறல்லவா..." கண்களில் நீரை வரவழைக்கும் இந்த வரிகள் போராட்டப் பாதையில் எதிர்நோக்கும் இன்னல்களையும் ஆனால் தளர்ந்து போகாத உறுதியையும் சோகம் கலந்த இசையில் சொல்கிறது. இன்னும்... "வீசும் காற்றே தூது செல்லு தமிழ்நாட்டில் எழுந்தொரு சேதிசொல்லு.." "காகங்களே காகங்களே காட்டுக்குப் போறீர்களா காட்டுக்குப்போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு வருவீர்களா..." "பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே... " "நடந்து வந்த பாதை தன்னை திரும்பிப்பாரடா – நீ நாசவேலைசெய்த பின்பு வருந்துவாயடா..." "ஏழு கடல்கள் பாடட்டும் - அந்த எட்டாத வானமும் கேட்கட்டும்," "தீயினில் எரியாத தீபங்களே – எங்கள் தேசத்தை உருவாக்க வாருங்கள்..." பாடல்களை கேட்டு முடித்த பின் மனதுக்குள் வித்தியாசமான ஓர் உணர்வு குடிகொண்டது. கொதித்துக் கொண்டிருந்த இதயத்துள் ஒரு குளிர்நதி பிரவாகிப்பது போலவும்... பழுதாய்போய் இருந்த இதய வீணையின் தந்திகள் செப்பனிடப்பட்டு இனிய விரல்களால் மீட்டப்படுவது போலவும்... விடுதலைப்புலிகள் ஈழ மண்ணில் இந்தியப் படையினரோடு போராடிக் கொண்டிருந்த காலம்.. தமிழ்நாட்டில் பொலிசார் புலிகளை வலை வீசித் தேடிக்கொண்டிருந்த காலம். இக் காலத்தில் தான் இந்த 'களத்தில் கேட்கும் கானம்' பாடல்கள் உருவாகின. இரவு நேரங்களிலேயே எவருக்கும் தெரியாமல் பாடல்கள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தின் பிரபல பாடகர்கள் டி.எம்.செளந்தரராஜன் மலேசிய வாசுதேவன், ஜெயச்சந்திரன், நாகூர் பாபு (மனோ), தினேஷ், பி. சுசீலா, வாணிஜெயராம், ராஜேஸ்வரி ஆகியோர் பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் மலேசிய வாசுதேவன், பி. சுசீலா வாணிஜெயராம் ஆகியோர் வேதனத்தை எதிர்பார்க்காமல் இலவசமாகவே பாடல்களைப் பாடி உதவினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பி.சுசீலா 'கண்மணியே கண்ணுறங்கு' பாடலைப் பாட மூவாயிரத்து ஐநூறு ரூபா வேதனம் முதலில் பேசப்பட்டது. ஒலிப்பதிவுக் கூடத்தில் இப்பாடலைப் பாடிவிட்டு வெளியே வந்த போது உணர்ச்சி வசப்பட்ட நிலையில் கண்கள் கலங்க கைகூப்பிய வண்ணம் "எனக்கு பணம் வேண்டாம் இதை எனது பங்களிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறினார். மூன்று பாடல்களைப் பாடிய திருமதி வாணி ஜெயராம் இந்தப் பாடல்களைத் தாம் பாடுவதை ஈழப் போராட்டத்தில் கொண்ட அக்கறையாக கருதுமாறு கூறியதோடு மிகுந்த ஆர்வத்தோடு பாடியும் உதவினார். 'வீசும் காற்றே தூது செல்லு' பாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டு வீடுசென்ற திருமதி வாணி ஜெயராம் இரவு பத்துமணிக்கு கவிஞர் புதுவை இரத்தினதுரைக்கு தொலைபேசியில் பேசினார். "இந்தப் பாடலைப் பாடிவிட்டு வந்ததும் என் மனதுக்குள் ஏதோ செய்கிறது. ஈழ மண்ணில் மக்கள்படும் வேதனைகளை என் மனமும் அனுபவிக்கிறது." என்று கவலையோடு கூறினார். தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக வந்த வதந்திகளையடுத்து அடிக்கடி இது உண்மையா என இவர் விசாரிப்பாராம். அந்த அளவிற்கு ஆத்மார்த்த மான ஈடுபாடு இவருக்கு இருப்பதை கவிஞர் புதுவை இரத்தினதுரை அடிக்கடி நினைவுபடுத்துவர். பாடகர் மலேசியா வாசுதேவன் இலவசமாக பாடல்களைப் பாடியதுமல்லாமல் இன்னுமொரு ஒலிப்பதிவு நாடா தாமே பொறுப்பெடுத்து இலவசமாக செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார். இப்பாடல்கள் யாவற்றிற்கும் இனிமையாக இசையமைத்துத் தந்த இசையமைப்பாளர் திரு. தேவேந்திரனைப் பற்றி இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டியுள்ளது. 'வேதம் புதிது', 'கனம் கோட்டார் அவர்களே', 'மண்ணுக்கேத்த பொண்ணு', போன்ற படங்களுக்கு இனிமையாக இசையமைத்தவர் இவர். ஒரு படத்திற்கு இசையமைக்க சுமார் நான்குலட்சம் ரூபா வேதனமாக வாங்கும் இவர் இப்பாடல்களை இலவசமாகவே இசையமைத்துக் கொடுத்துள்ளார். அடுத்ததாக குறிப்பிடப்பட வேண்டியவர், ஒலிப்பதிவுத் துறையில் பிரபலமான தொழில்நுட்பவியலார் திரு. பங்காரு. இவரிடம் உதவி கேட்டுச் சென்ற போது மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். "நான் ஏதாவது ஒரு வகையில் உங்கள் போராட்டத்திற்கு பங்களிப்பு நல்க வேண்டுமென்று காத்திருந்தேன். அதனால், எனது ஒலிப்பதிவுக் கூடத்தில் இப்பாடல்களை இலவசமாகவே பதிவு செய்து தருகின்றேன்." என்று கூறியதோடு இரவு பகலென்று பாராது உழைத்தும் உதவினார். 'அச்சமில்லை அச்சமில்லை' படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளரான திரு. எம். சி. நரசிம்மன் தாமும் ஏதாவது பங்களிப்புச் செய்ய வேண்டுமென கூறி பாடல்களுக்கு வயலின் வாசித்து உதவினார். ஒரு இசையமைப்பாளர் வயலின் வாசித்துதவியது போற்றத்தக்க ஓர் விடயமாகும். இன்னுமொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்தப் பாடல் பதிவு விடயமாக பல கலைஞர்களிடமும் தொடர்பு கொள்ளப்பட்டது. அந்த வகையில் பிரபல கவிஞர் கவியரசு (?) வைரமுத்துவிடம் பாடல் எழுதித்தர முடியுமா என்று கேட்கப்பட்ட போது "உங்கள் போராட்டங்களை பாடலில் எழுதுவது கடினம்" என்று கூறி தட்டிக் கழித்து விட்டாராம். சில நேரம் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியிருந்தால் பாடல்கள் இந்த அளவுக்கு அழகாக இருந்திருக்குமோ என்பது சந்தேகமே. இந்தப் பாடல் பிறந்த கதையை எழுதுவதற்கு எனக்குத் தகவல்களை தந்துதவியவர் கவிஞர் புதுவை இரத்தினதுரையவர்கள். அத்துடன் இப்பாடல்கள் உருவாக உதவி புரிந்த் தமிழக கவிஞர்களுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளதாகவும் இவர் கூறினார். இந்த 'பாடல் நாடா' லண்டனில் நடந்த உலகத்தமிழர் மாநாட்டில் வெளியிட்டு வைக்கப்பட்டது. இவ்விழாவில் நாற்பத்தெட்டு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இதன் 'அறிமுக' விழாவொன்று ‘முரசொலி' பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். திருசெல்வம் அவர்கள் தலைமையில் கனடா ரொரன்டோ நகரில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
  7. இறுவட்டு அட்டைகள் கரும்புலிகள் பாகம் 2 இவ்விறுவட்டுத்தான் தமிழீழத்தில் முதன்முதலில் எண்ணிம ஒலிப்பதிவு மூலம் உருவாக்கப்பட்ட இறுவட்டு ஆகும்.
  8. இறுவட்டு அட்டைகள் கரும்புலிகள் இவ் ஒலிநாடாவின் கீழ் போடா தமிழா போடா, கண்ணே கண்ணே கதைகேளு, சாகத்துணிந்தவர் கூட்டம் மற்றும் கரும்புலி என்றொரு பெயர் கொண்டு ஆகிய 4 பாடல்கள் வெளிநாட்டு இணையங்களில் பிழையாக இணைக்கப்பட்டவை. மூலம்: வெளிச்சம் திகதி: 1993.07 திறனாய்வு: கா.சி. பக்கம்: 27-29 'கரும்புலிகள்' நினைவு ஒலிநாடா - "கசெற்" இலக்கியத்தின் இன்னொரு வெளிப்பாடு - மதிப்பீட்டுரை - யாழ்ப்பாணத்தின் அண்மைக்கால இலக்கிய வெளிப்பாடுகளின் தன்மை பற்றியும் அவற்றின் மக்கள் நிலை ரசனை பற்றியும் விசாரித்தறிந்த ஓர் இலக்கிய மாணவர் "கசெற் இலக்கியங்கள்" என்ற சொற்றொடரைப் பயன்படுத்தினார். இது கருத்துள்ள ஒரு சொற்றொடராகும். 1990 முதல் மக்களின் மகிழ்வளிப்புச் சாதனங்களின் பயில்வு முடக்கப்பட்டதன் பின்னர் 'கசெற் இலக்கியங்கள்' சில புதிய பரிமாணங்களை எட்டிப்பிடித்துள்ளன. தமிழ் சினிமா வழியாகக் கடந்த இரு பத்தாண்டுகளுக்கு மேல் ரஞ்சகப்படுத்தப்பட்ட கவிதை - இசை இணைவு 1990 இல் ஏற்பட்ட புதிய சவாலை ஏற்றுக்கொள்வதற்கான கலைவடிவப் பின்புலத்தைத் தந்தது. முதலில் தமிழகத்து இசைக்கலைஞர்களைப் பயன்படுத்தி வெளிவந்த ஒலிநாடாக்கள் போகப் படிப்படியாக உள்ளூர்க் கலைஞர்களையே பயன்படுத்தும் முறைமை தொடங்கிற்று. அந்த முயற்சியுடன் இன்றைய போராட்ட நிலையினை இசையில் வடித்தெடுக்கும் கலை முயற்சி கோட்பாட்டு முறையிலும் செயல்முறை நிலையிலும் வெற்றிபெறத் தொடங்கியதெனலாம். இந்த வெற்றிக்குக் காரணமாக அமைந்தது, மூன்று 'தனிமங்களி'ன் இணைவு ஆகும். புதுவை இரத்தினதுரை என்ற கவிஞன், கண்ணன் என்ற இசையமைப்பாளன், சுந்தரலிங்கம் முதல் சாந்தன் வரை என வரும் சாஸ்திரிய - மெல்லிசைக் கலைஞர் ஆகியோரின் இணைவு இந்த 'இலக்கிய இசை'க்குப் பொருளும் வடிவும் கொடுத்தது. "நெய்தல்" என்னும் ஒலிநாடா இந்தக் கலைக்கோலத்தின் உன்னத உதாரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இப்பொழுது "கரும்புலிகள்" என்ற இந்த ஒலிநாடா (பாடல்கள்) வெளியாகியுள்ளது. விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த ஒலிநாடாவில் புதுவை இரத்தினதுரையின் ஒன்பது "இசையாக்கங்கள்" இடம்பெற்றுள்ளன. கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் எடுத்துக்கூறும் வகையிலமைந்த இந்தப் பாடல்களில் புதுவை - கண்ணன் இணைவின் இன்னொரு கலை உயிர்ப்பினைக் கண்டுகொள்ளக் கூடியதாகவுள்ளது. இக்கட்டத்தில், புதுவை இரத்தினதுரையினதும், கண்ணனினதும் படைப்புத் திறன்களின் தளங்கள் பற்றி (மிகச்சுருக்கமாக) அறிந்து கொள்வது அவசியமாகும். புதுவை இரத்தினதுரையின் கவிதா வன்மை அவர் வாசகர் - கேட்போர் மனதிலெழுப்பும் உணர்ச்சி படிமங்களிலேயே தங்கியுள்ளது. சொற்களின் ஒலி வீச்சும் அவற்றின் உணர்ச்சி வீச்சும் இணைகின்றபொழுது கேட்போர், வாசிப்போர் உள்ளங்களிலே அந்தச்சொற்கள் சுட்டும் விடயங்கள் "காட்சிகளாக" விரியும். பாரம்பரிய வாழ்க்கை முறையின் உணர்ச்சிக்கட்டங்களை - உணர்வு மையங்களைச் சுட்டுவதன் மூலம், இழக்கப்பட்டவற்றினால் ஏற்படும் சோகத்தை எடுத்துக் கூறுவது, இவரது அண்மைக்காலத்து கவிதைகளின் ஒரு முக்கிய பண்பு. இவர் கவிதைகளிலிருந்து மேற்கிளம்பும் படிமங்கள் வெறுமனே கட்புலக்காட்சிகளாகவோ, செவிப்புலக் கிளர்வுகளாகவோ இருந்து விடாமல், அவற்றுக்கு மேற்சென்று "ஸ்பரிச உணர்வுகளாக" (அதாவது நமது உடலிலே உணரப்படுவனவான "மெய்ப்பாடு"களாக) நம்மைக் கவர்வன. "வாசலிற் காற்றென வீசுங்கள்"; "காவியச்சந்தன மேனிகளே" என வரும் வரிகள் நமது புலப்பதிவில் ஏற்படுத்தும் நுண்ணிய தாக்கத்தினை விளங்கிக் கொண்டால் புதுவை இரத்தினதுரையின் 'நதிமூலம்' தெளிவாகிவிடும். இந்தக் கவிதையாக்க ஆற்றல் இணையும் இசையுடன் இயைந்து உயிர்ப்புக் கொடுக்கும் குரல்கள் மூலமாக வெளிவரும் பொழுது, இந்தக் காலகட்டத்தின் மானுடதாகங்களும், மனித ஓலங்களும் கலைப்பதிவு பெற்று விடுகின்றன. புதுவை இரத்தினதுரையின் கவிதையின் உயிர்ப்பை எடுத்துக் காட்டுவதாகவும் அந்தக் கவிதைக்குள்ளிருக்கும் ஒத்திசையின் கருத்துத்தொனிகளை வெளிக்கொணருவதாகவும் அமைவது கண்ணனின் இசை. கண்ணனின் இசையாக்கத்தில் அவர் 'மெட்டு'க்களை (MELODY) உருவாக்கும் முறைமை முக்கியமானதாகின்றது. அரூபமான ஒலிக்கு ஒரு ஒழுங்கமைதிப்பட்ட 'உருவம்' அமைக்க முனையும் பொழுது 'மெட்டு' உருவாகின்றது. இந்த உருவாக்கத்தின் அழுத்தங்கள், மிடற்றால், வாத்தியங்களால் வெளிப்படுத்தப்படுகின்றன. கண்ணன் தனது இசையாக்கத்தின் உயிர்ப்பு மையங்களை அழுத்திக் காட்டுவதற்கு நரம்பு வாத்தியங்களையே பெரும்பாலும் பயன்படுத்துவார். வயலின், சித்தார், 'ஓகனி'ல் வரும் கலப்போசைகள் இவரின் இசையமைப்புக்கான வாத்தியங்களாகவும் ஏற்ற இறக்கக் குறியீடுகளாகவும் அமைகின்றன. கர்நாடக சங்கீதத்தின் சாஸ்திரிய வளத்துக்குள் நின்றுகொண்டு இந்த உணர்ச்சி நெகிழ்வுகளைக் கண்ணன் ஏற்படுத்துகின்றார். கண்ணனின் இந்த இசையாக்க முறைமை, புதுவை இரத்தினதுரையின் அடிநாதமான மானுடதாக வெளிப்பாடு, பண்பாட்டுப் படிமச்சித்திரிப்புடன் இணைகின்ற பொழுது அற்புதமானதோர் இலக்கிய-இசைக்கலவை ஏற்படுகின்றது. இந்த ஒலிநாடாவில் அந்தக் கலவை ரெண்டு பாடல்களில் அற்புதமாக இணைந்துள்ளது. "இங்குவந்து பிறந்த பின்பே இருந்த இடம் தெரியும்" என்ற பாடலும், "போரம்மா" என்ற பாடலும் இந்த இசைவைக் காட்டுகின்றன. இவற்றின் இந்த வெற்றிக்குக் காரணம் இந்தக் கவிதையும், இந்த இசையமைப்பும் வேண்டி நிற்கும் "குரல்" வந்து பொருந்தியுள்ளமைதான். மற்றைய பாடல்களில் ஒன்றையொன்று தங்கி நிற்க, இந்த இரண்டு பாடல்களிலும் அந்தக் கலவை (MIXTURE) சேர்வை (COMPOUND) ஆகிறது. ஆனால் புதுவை - கண்ணனின் இந்த இணைவு ஒட்டுமொத்தமான ஒரு ஒத்திசைவுத் தோற்றத்தினை (ENSEMBLE- அதாவது இன்னொரு நிகழ்வின் இசைப் படிமமாகத் தருதலை) ஏற்படுத்துகின்றன. "போரம்மா" என்ற பாடல் இதனை நன்கு புலப்படுத்தும். இத்தகைய இசையமைப்புக்கள் கேட்பதற்கு ரம்மியமானவை. ஆனால் அதைக் கேட்பவர்கள் தங்கள் வாய் விட்டுப்பாட முடியாத அளவுக்கு இசைச்சிக்கலானவை. ஆனால் வெகுசன நிலையில் வாய்விட்டுப் பாடப்படக்கூடியவையே சமூக ஒருங்கிணைப்புக்கான பாடல் முறையாகும். அந்த அம்சம் மிகமுக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. கரும்புலிகள் ஒலிநாடாவின் வெற்றிக்கு ஒலிப்பதிவுத் தொழில்நுட்பம் பெரிதும் உதவியுள்ளது என்பது அதனைக் கேட்கும்பொழுது நன்கு மனதிற் பதிவாகின்றது. தனிப்பட்ட கலைத்திறன்கள் இணையும்பொழுது சமூக ஒருங்கிணைப்பினையும் ஒத்தியைபினையும் எடுத்துக்காட்டும், வற்புறுத்தும் கலையாக்கங்கள் தோன்றுகின்றன. அதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு "கரும்புலிகள்" ஒலிநாடா.
  9. செய்திகள் வலைத்தளம்: தமிழ்நெற் கொழுவி: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10105 திகதி: 13/10/2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன் திராய்க்கேணியில் மண்டை ஓடுகள், எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன மட்டக்களப்பு - பொத்துவில் வீதியில் மட்டக்களப்பு நகருக்கு தெற்கே 57 கிலோமீற்றர் தொலைவில் உள்ள திராய்க்கேணி பெரியதம்பிரான் கோவிலின் ஆலய வளாகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அவ்வூர் வாசிகள் தூய்மை செய்து கொண்டிருந்த போது அருகில் உள்ள குழி ஒன்றில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. படிமப்புரவு: தமிழ்நெற் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மற்றும் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 48 தமிழ் பொதுமக்களின் எச்சங்கள் இருக்கலாமென குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். ஒலுவில் மற்றும் பாலமுனை முஸ்லிம் ஊர்கள் முறையே திராய்க்கேணிக்கு வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளன. இரண்டாம் ஈழப் போரின் போது, திராய்க்கேணியில் வசிக்கும் தமிழர்களுக்கு முஸ்லிம் ஊர் மக்களிடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் வந்தன. 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் திகதி, திராய்க்கேணிக்கு மேற்கே சில கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள தீகவாவி என்ற கிராமத்தில் இருந்து, ஒலிவில் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த ஒன்பது முஸ்லிம் பொதுமக்கள் சிங்கள குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக வதந்திகள் பரவியதாக கோட்டவாசிகள் தெரிவிக்கின்றனர். மறுநாள் முஸ்லிம் இளைஞர்கள் திரைக்கேணிக்குள் நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை உதவியுடன் தமிழர்களை தாக்க ஆரம்பித்தனர். கோயிலில் தஞ்சம் புகுந்த ஊர் மக்கள் கத்திகள் மற்றும் பொல்லுகளால் கொல்லப்பட்டனர். முஸ்லிம் இளைஞர்கள் சரோஜா என்ற 13 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து அருகில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்று வன்புணர்ச்சி செய்த பின்னர் வீட்டை தீ வைத்து எரித்தனர். படிமப்புரவு: தமிழ்நெற் காலை 7 மணிக்கு ஆரம்பித்து மதியம் வரை நடந்த இந்த கொலைகளில் கோவில் வளாகத்தின் சுற்றாடலில் 48 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த இருபது பேரில் நால்வர் கல்முனை மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். தப்பியோடிய மக்கள் சிறப்பு அதிரடிப்படையின் பாரவூர்திகளில் காரைதீவு அகதிகள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த அகதிகளில் பலர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர். 46 வயதான சின்னத்தம்பி கார்த்திகேசு மற்றும் பிற குடியிருப்பாளர்கள் 1990 ஆம் ஆண்டு நிகழ்வுகளை தமிழ்நெற் செய்தியாளரிடம் விளக்கமாக விரித்ததோடு ஞாயிற்றுக்கிழமை தோண்டியெடுக்கப்பட்ட எச்சங்களையும் காண்பித்தனர். திராய்க்கேணி படுகொலைகள் தொடர்பில் உசாவல்களை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்திடம் ஊர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகம், சத்துருகொண்டான், மகிழடித்தீவு, புல்லுமலை, வீரமுனை மற்றும் கிழக்கின் ஏனைய கோட்டங்களில் இருந்து தமிழர்கள் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகள் தொடர்பிலும் உசாவல் நடத்தப்பட வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்டவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் படிமப்புரவு: தமிழ்நெற் *****

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.