Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான வரைவுகளில் மேலும் கொடூரமான ஏற்பாடுகளை புகுத்துவதன் உள்நோக்கம் என்ன? February 16, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 2025 டிசம்பரில் வெளியிட்ட “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாப்பதற்கான உத்தேச சட்ட வரைவு” (protection of State from Terrorism Act – PSTA) கடந்த 47 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA ) பதிலீடு செய்வதற்காக முன்னெடுக்கப்படுகின்ற மூன்றாவது முயற்சியாகும். அந்தச் சட்ட வரைவு குறித்து பெப்ரவரி 28 ஆம் திகதி வரை பொதுக் கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசாங்கம் அவகாசம் வழங்கியிருக்கிறது. அண்மைய கடந்த காலத்தில் மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் 2018 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடுப்புச் சட்ட வரைவும் ( Counter Terrorism Act – CTA) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் 2023 ஆம் ஆண்டில் பயங்கரவாத எதிர்ப்பு சட்ட வரைவும் (Anti – Terrorism Act -ATA) முன்வைக்கப்பட்டன. முன்னைய இரு வரைவுகளையும் போன்றே தற்போதைய அரசாங்கத்தின் வரைவும் பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாக அரசியல் கட்சிகள், மனித உரிமைகள் அமைப்புக்கள், சட்டத்துறை சாரந்த அமைப்புக்கள், மத அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக இடம்பெற்று வந்திருக்கின்ற மக்களின் அடிப்படை உரிமை மீறல்களும் படுமோசமான துஷ்பிரயோகங்களும் இனிமேலும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்வதற்கான ஏற்பாடுகளை இந்த வரைவுகள் கொண்டிருக்கவில்லை என்பதே முன்வைக்கப்படுகின்ற முக்கியமான குற்றச்சாட்டாகும். நீதியமைச்சின் இணையத் தளத்தில் கடந்த டிசம்பரில் வெளியிடப்பட்ட புதிய வரைவும் ஜனாதிபதியினதும் பாதுகாப்புத்துறை அமைப்புக்களினதும் அதிகாரங்களை பெரியளவில் விரிவுபடுத்தும் ஏற்பாடுகளைப் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மக்களின் ஜனநாயக மற்றும் குடியியல் சுதந்திரங்களை பாரதூரமான அளவுக்கு கட்டுப்படுத்தக்கூடிய ஆபத்தையும் கொண்டிருக்கின்றன என்று சுட்டிக்காட்டப்படுகிறது. புதிய வரைவு தொடர்பில் தற்போது மூண்டிருக்கும் பொது விவாதத்தில் முன்வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களையும் மாற்று யோசனைகளையும் அரசாங்கம் எந்தளவுக்கு கவனத்தில் எடுத்து போதுமானளவு மாற்றங்களைச் செய்வதில் நாட்டம் காட்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முன்னைய இரு முயற்சிகளுக்கும் நேர்ந்த அதே கதி தற்போதைய முயற்சிக்கும் நேராது என்று எவராலும் உத்தரவாதம் கூறமுடியாது. பயங்கரவாதம் என்பதற்கு சட்ட வரைவில் கொடுக்கப்பட்டிருக்கும் வரைவிலக்கணம் ஜனநாயக ரீதியான எதிர்பியக்கங்களை ஒடுக்குவதற்கும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படக்கூடியதாக விசாலமானதாகவும் தெளிவற்றதாகவும் இருக்கிறது. பயங்கரவாதக் குற்றங்கள் என்று வரைவில் வகைப்படுத்தப்பட்டிருப்பவை சாதாரண குடிமக்களைக் கூட 20 வருடங்கள் வரை சிறைவைக்கக்கூடிய ஆபத்தைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இலங்கையில் இதுவரையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆபத்தான சட்டங்களில் ஒன்று என்று இதை வர்ணித்திருக்கும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இந்த வரைவு தற்போதைய வடிவில் நிறைவேற்றப்படுமானால் ஜனநாயக சுதந்திரங்களுக்கு சாவுமணியாக அமையும் என்பதுடன் சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். வீடுகளுக்குள் பிரவேசிப்பது, அந்தரங்கமான ஆவணங்களைக் கைப்பற்றுவது மற்றும் ஆட்களை சோதனை செய்வது உட்பட பரந்தளவிலான அதிகாரங்களை ஆயுதப் படைகள்,பொலிஸ் மற்றும் கரையோரக் காவல்படைக்கு வழங்கும் ஏற்பாடுகளை உத்தேச சட்டம் கொண்டிருக்கிறது. ஒரு வருடம் வரையான தடுப்புக்காவல் உத்தரவைப் பிறப்பிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளருக்கு அதிகாரமளிப்பதுடன் வழமையாக நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய சந்தேகநபர்களை பொலிஸ் காவலுக்கு மாற்றுவதற்கும் அனுமதிக்கும் ஏற்பாடுகளும் இருக்கின்றன. ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் மூலமாக எந்தவொரு அமைப்பையும் தடை செய்யலாம். தடை உத்தரவை ஜனாதிபதி விலக்கிக்கொள்ளும் வரை அத்தகைய அமைப்புக்கள் உறுப்பினர்களைச் சேர்ப்பதை, கூட்டங்களை நடத்துவதற்கு அல்லது வங்கிக்கணக்கு ஒன்றை கையாளுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. எந்தவொரு இடத்தையும் ஜனாதிபதி தடைசெய்யப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்து மக்கள் பிரவேசிப்பதை தடுக்க முடியும். அந்த தடையை மீறுபவர்கள் மூன்று வருட சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும் அல்லது 3 மில்லியன் ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும். முன்னைய இரு அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்ட பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட மூலங்களில் பயங்கரவாதத்துக்கு கொடுக்கப்பட்ட வரைவிலக்கணம் தொடர்பில் ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்ட பாரதூரமான குறைபாடுகளையும் நீதித்துறை விதந்துரைத்த திருத்தங்களையும் கருத்தில் எடுக்காமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய வரைவை வெளியிட்டிருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் சமர்ப்பித்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அரசியலமைப்புத் தகுதியை கேள்விக்கு உள்ளாக்கி தாக்கல் செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான மனுக்களை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் சட்டமூலத்தில் ‘பயங்கரவாதக் குற்றச்செயல்கள்’ என்று வர்ணிக்கப்பட்டிருந்தவை பெருமளவுக்கு சர்வதேச சட்டங்களுக்கு பொருத்தமான முறையில் அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு அந்த சட்டமூலம் கொடுத்த வரைவிலக்கணத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் ஐக்கிய நாடுகளின் வரைவிலக்கணத்தின் வழியில் அமைய வேண்டும் என்கிற அதேவேளை, அந்த வரைவிலக்கணத்தை தீர்மானிக்கும்போது ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளின் சட்டங்களில் கூறப்பட்டிருக்கும் வரைவிலக்கணத்தை பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. பயங்கரவாதத்துக்கு வரைவிலக்கணம் வகுப்பது என்பது உண்மையில் ஒரு சர்வதேசப் பிரச்சினை. அது விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையினால் கூட இதுவரையில் உலகளாவிய கருத்தொருமிப்பைக் காணமுடியவில்லை என்பதே யதார்த்தம். ஒருவருக்கு பயங்கரவாதியாகத் தோன்றுபவர் இன்னொருவருக்கு விடுதலை போராளியாக தென்படுவார் என்று நாம் வழமையாக பேசுவதுண்டு. நாடுகள் அவை எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் பாதுகாப்பு நெருக்கடிகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் அடிப்படையிலேயே பயங்கரவாதத்துக்கு வியாக்கியானம் செய்கின்றன. இலங்கை அதற்கு விதிவிலக்கு அல்ல. நியூயோர்க் இரட்டைக் கோபுரங்கள் மீதான 2001 செப்டெம்பர் 11 விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அமெரிக்கா தலைமையில் மேற்குலகம் பயங்கவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரைப் பிரகடனம் செய்தபோது அன்றைய கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தெரிவித்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்தை இந்த இடத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமானது. பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போர் என்ற போர்வையில் அவர்கள் அப்பட்டமான பயங்கரவாதத்துக்கும் (naked terrorism) நியாயபூர்வமான ஆயுதப் போராட்டத்துக்கும் (Legitimate Armed struggle) இடையிலான வேறுபாட்டை அழிக்கப் போகிறார்கள் என்று அவர் எச்சரிக்கை செய்தார். இது இவ்வாறிருக்க, பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவரைவு ஒன்றை வெளியிட்டிருப்பதில் ஒரு முரண்நிலை இருக்கிறது. ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டம் உட்பட சகல ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழித்து நாட்டின் சகல பாகங்களிலும் மக்களின் குடியியல் உரிமைகளை உறுதிசெய்வதாக வாக்குறுதியளித்தார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், திசநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சில வாரங்களில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தங்களது அரசாங்கம் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது திருத்தவோ போவதில்லை என்று அறிவித்தார். புதிய அரசாங்கம் உள்நாட்டிலும் வெளியுலகிலும் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகிவந்திருக்கும் அந்த சட்டத்தை துஷ்பிரயோகம் செய்யாது என்று அவர் உறுதியளித்தார். தேசிய மக்கள் சக்தி மீறிய முதல் தேர்தல் வாக்குறுதி பெரும்பாலும் அதுவாகவே இருக்கலாம். இன்னொரு விசித்திரம் என்னவென்றால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கப்போவதாக வாக்குறுதியளித்த ஒரு அரசாங்கம் அதே சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக தற்போது வெளியிட்டிருக்கும் சட்ட வரைவு முன்னைய இரு அரசாங்கங்கள் கொண்டுவந்த சட்டமூலங்களை விடவும் கொடூரமான ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகும். இதுவரையான மூன்று சட்ட வரைவுகளுமே எந்தச் சட்டத்தை பதிலீடு செய்வதற்கான நோக்கத்துடன் முன்வைக்கப்பட்டனவோ அதே சட்டத்தில் உள்ளதை விடவும் கொடூரமான ஏற்பாடுகளை கொண்டிருப்பதை நோக்கும்போது அதுவே தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்ற சூழ்ச்சித்தனமான நோக்கத்துடனேயே அரசாங்கங்கள் செயற்படுகின்றன என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. https://arangamnews.com/?p=12680
  2. அரசியலையே அவமதிக்கும் நடிகர் விஜயை பொதுமன்றம் கண்டிக்க வேண்டாமா? 16 Feb 2026, 7:00 AM ராஜன் குறை நடிகர் விஜய் பிற அரசியல் கட்சி தலைவர்கள் போல பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஊடகங்களுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. நாட்டில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளுக்கு, மக்களைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதில்லை. தன் கருத்துக்களைக் கூறுவதில்லை. அரசியலை மல்டிபிள் சாய்ஸ் குவெஸ்டின் பேப்பர் போல எடுத்துக்கொண்டு அவ்வப்போது ஒரு சில பிரச்சினைகளைப் பற்றி மட்டும் கருத்து தெரிவிக்கிறார். பிற பிரச்சினைகளில் அவர் கருத்துக் கூறவில்லையே என்று விமர்சித்தால், நீங்கள் சொல்வதற்காகவெல்லாம் நான் பேசமுடியாது என்று சிறுபிள்ளைத்தனமாகக் கூறுகிறார். அதைவிட மிகப்பெரிய சிக்கல் அவரால் மக்களை இயல்பாகச் சென்று சந்திக்க முடிவதில்லை. அவர் ஒரு ஊருக்குச் செல்வதே பெரியதொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடுகிறது.காரணம் அவரது நட்சத்திர பிம்பம் கலையாததுதான். அவர் அதைக் கலைக்க விரும்புவதில்லை; ஏனெனில் அதுதான் அவரது முதலீடு என நினைக்கிறார். அரசியல் தலைவராக மாறாமல் சினிமா நட்சத்திரமாகவே அரசியல் செய்ய நினைக்கிறார். அவர் நினைத்தால் தொடர்ந்து பொதுவெளியில் பயணம் செய்வதன் மூலம் அவரைக் காண்பது அவ்வளவு அரிதானதல்ல என்ற எண்ணத்தை ஏற்படுத்த முடியும். அப்படி செய்தால்தான் அவரால் இயல்பாக மக்களிடையே பயணம் செய்ய முடியும். ஆனால் அவருக்கு தன்னைக் காண பெருந்திரள் கூடிக் காத்திருக்கிறது என்ற நட்சத்திர மனமயக்கம் தேவைப்படுகிறது. அதிலிருந்து வெளியே வர அவருக்கு இயலவில்லை. எப்போதாவது பெரிய மேடைகளில் தோன்றி பல ஆயிரம் மக்களிடம் பத்து நிமிடமோ, பதினைந்து நிமிடமோ பேசுகிறார். ஆவேசமான பஞ்ச் டயலாக்குகளை எழுதி வைத்துப் படிக்கிறார். அதைக் கடந்து அவர் மக்களை நேரடியாக சந்தித்துப் பேசும், உரையாடும் வாய்ப்புகள் எதுவுமே இருப்பதில்லை. அப்படி அவர் அபூர்வமாக பொதுவெளியில் தோன்றும் சமயத்தில் அவரது ரசிகர்கள் அவரை நேரில் பார்த்துவிட வேண்டும் என்று கூடுகிறார்கள். கூட்ட நெரிசலிலோ, வெயிலில் வாடியோ உயிரிழக்கிறார்கள். விஜயின் கட்சி அமைப்பு என்பதும் தெளிவாக இல்லை. நாலைந்து பேர் மட்டுமே அவருடன் தினசரி தொடர்பில் இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. அவர்கள்தான் கட்சியில் பிற நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார்கள். அவருக்கு வசனங்களை எழுதிக் கொடுப்பவர், இயக்குபவர் தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி என்பவர் என்று கூறப்படுகிறது. பாண்டிச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த் என்பவர் கட்சியின் பொதுச்செயலாளர். இவர்தான் கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கிறார். விஜயின் வலதுகரம் எனலாம். அதைத்தவிர ஆதவ் அர்ஜுனா என்ற தேர்தல் வியூக வகுப்பாளர் இருக்கிறார். இவரும் பிரபல தொழில்முறை அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரிடம் பணியாற்றியவர்; லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன். அரசியல் தொடர்புகள், செல்வாக்கு மிக்கவர். பிறகு வருமான வரித்துறை பணியை விட்டுவிட்டு வந்துள்ள அருண் ராஜ் என்பவரும் உள்வட்டத்தில் இருக்கிறார். புதிதாகச் சேர்ந்துள்ள மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் தினசரி விஜயுடன் தொடர்புகொள்ளும் வாய்ப்புடன் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இப்படி ஒரு கட்சியின் தலைவர் தன் எண்ணங்களை பொதுவெளியில் பகிராமல், மக்களுக்கும், கட்சி அணியினருக்கும், ஊடகங்களுக்கும் எட்டாதவராக மன்னராட்சிக் காலத்தில் அந்தப்புரத்திலிருந்து திரைமறைவு ஆட்சி செய்த அரசிகளைப் போல செயல்படுவது மக்களாட்சியை ஏளனம் செய்வதாகவே உள்ளது. கட்சி அணியினருடன் அவருக்கு அன்றாடம் நேரடித் தொடர்பு இல்லையென்றால் அவர்களது செயல்பாடுகளை எப்படி வழிநடத்துவார், எப்படி அவர்களிடமிருந்து அவர் தகவல்களைப் பெறுவார் என்று தெரியவில்லை. அதற்குள்ளாகவே கட்சிக்குள் பல கோஷ்டிப் பூசல்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் என்று சீரழிவுகள் பெருகியுள்ளன. விஜய்க்கு எந்த அளவு அதெல்லாம் தெரியும் என்பதே மர்மமாகத்தான் இருக்கிறது. ஏனெனில் அவர்தான் பத்திரிகையாளர்களையே சந்திப்பதில்லையே. இப்படியாக இழிந்து நிற்கும் நடிகர் விஜயின் பக்குவமற்ற, அரசியல் பண்பாடுகளை பாழாக்கும் செயல்பாடுகளை பிற அரசியல் கட்சிகள் கண்டிப்பது தேர்தல் கள முரண் அரசியல் தொடர்பானதாகத்தான் கருதப்படும். மக்களாட்சியின் விழுமியங்களை பாதுகாக்கும் பொறுப்பு குடிமைச் சமூகம் கட்டமைக்கும் பொதுமன்றத்திற்கு உள்ளது. அது உரத்த குரல் எழுப்ப வேண்டும். விஜயை நோக்கி பேசவேண்டும். விமர்சிக்க வேண்டும். அரசியல் விமர்சகர்களும், சிந்தனையாளர்களும் ஒருமித்த குரலில் கண்டனங்களை எழுப்ப வேண்டும். இது கட்சி அரசியல் பிரச்சினையல்ல. மக்களாட்சி என்ற அற்புதமான வரலாற்று விளைபொருள் சார்ந்த பிரச்சினை. இப்படியெல்லாம் கூறும்போது சிலர் அப்படியென்ன பெரிய தவறிழைக்கிறார் விஜய் என்று வியப்புக் கூட அடையலாம். அவர் என்ன தவறு செய்கிறார் என்பதை விளக்கவே இந்தக் கட்டுரை. நான் பொதுவாக தி.மு.க-வை ஆதரித்து எழுதுவதால் அந்தக் கோணத்திலிருந்து விஜயை விமர்சிக்கிறேன் என்று சிலர் அவசரப்பட்டு புரிந்துகொள்ளலாம். அது மிகவும் பிழையான புரிதல் என்பதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, நான் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் அரசியலை ஆராய்வதன் பகுதியாகத்தான் தி.மு.க-வை ஆதரிக்கிறேன். இதை ஆங்கிலத்திலும், தமிழிலும் விரிவாக விளக்கி எழுதியுள்ளேன். இரண்டாவது, எதிர்வரும் தேர்தலில் விஜய் தி.மு.க-விற்கு எதிரான வாக்குகளைத்தான் பிரிப்பார் என்பதால் தி.மு.க ஆதரவாளர்கள் அவரைக்குறித்து கவலைப்படத் தேவையில்லை. எனவே என்னுடைய கண்டனம் மக்களாட்சி விழுமியங்களை காப்பது குறித்தது என்பதை விளக்கவே இந்த கட்டுரை. ஊடகங்கள்தான் (குறிப்பாக தொலைக்காட்சி ஊடகம்) பொதுமன்றத்தை சமூக அளவில் கட்டமைக்கின்றன. ஆனால் ஊடகங்கள் தேர்தல் ஆரூடங்களை சொல்வதுடன் பல சமயங்களில் நின்றுவிடுகின்றன. விஜய்க்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும்? அவர் எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார்? ஆகிய கேள்விகளுடன் ஊடக அக்கறை நின்றுவிடுகிறது. ஊடகங்களை விஜய் முற்றிலும் புறக்கணிக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பையே முற்றாகத் தவிர்க்கிறார். இது மக்களாட்சிக்கு செய்யப்படும் மிகப்பெரிய அவமானம் என்பதைக் கூட மக்களாட்சியின் நான்காவது தூண் எனப்படும் ஊடகங்கள் உரத்துச் சொல்வதில்லை. ஆங்கில ஊடகங்கள் கூட கண்டிப்பதில்லை. வெட்கமில்லாமல் அவருடன் பேசியவரை நேர்காணல் செய்து வெளியிடுகின்றன. ஒரு நேர்காணலை எதிர்கொள்ள முடியாதவரெல்லாம் முதல்வராக அருகதையுள்ளவரா என்று ஆங்கில ஊடகங்கள் கூட கேட்பதில்லை. அதற்கு மேல் விஜயின் செயல்பாடுகள் சரியானவையா, நாட்டில் அரசியல் கலாசாரத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டவையா அல்லது ஒட்டுமொத்தமாக அரசியலை அவமதித்து, சீரழிக்கும் தன்மை கொண்டவையா என்பதை பொதுமன்றம்தான் விவாதிக்க வேண்டும். ஊடகங்களையும் விவாதிக்க நிர்பந்திக்க வேண்டும். சமூக ஊடகங்களில் பலரும் மனம் வெதும்பிப் பதிவிடுகிறார்கள். அவர்களை விஜய் ரசிகர்கள் மிக மோசமாக வசை பாடுகிறார்கள். எந்த நாகரீகமும், தர்க்கமும் அவர்கள் எதிர்வினைகளில் இருப்பதில்லை. இந்தக் கட்டுரையில் நாம் விரிவாக அவர் செயல்பாடுகளின் பிரச்சினை என்னவென்பதை விவாதிப்போம். அரசியலில் ஈடுபடுவது என்றால் என்ன? அரசியலில் ஈடுபடுவது என்றால் மக்கள் பணி செய்வது என்று பொருள். ஏற்கனவே இயங்கி வரும் கட்சியில், இயக்கத்தில் இணைபவர்கள் ஒரு குறிப்பிட்ட ஊரில், அல்லது மாவட்டத்தில் மக்களுக்கும் அந்த கட்சிக்கும், மக்களுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக இருப்பார்கள். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார்கள். அப்படியில்லாமல் ஒரு புதிய கட்சியை, இயக்கத்தைத் தொடங்குபவர்கள் மக்களை ஒரு சில இலட்சியங்கள், கோரிக்கைகள் அடிப்படையில் அணி திரட்டுவார்கள். வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கைக்காக உருவான வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றினார் மருத்துவர் ராமதாஸ். அது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாகத் தேங்கிவிடக்கூடாது என்று தலித் எழில்மலையை ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறச் செய்தார். ஆனாலும் அவர் நினைத்தபடி அது வெகுஜன கட்சியாகப் பரிணமிக்கவில்லை எனலாம். ஆனால் ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் நலன்களைப் பேசும் கட்சியாக தொடர்ந்தது. ஒரு சில கட்சிகள் விவசாயிகளை அணிதிரட்டும்; தொழிலாளர்களை அணி திரட்டும்; ஒரு பின்தங்கிய பிரதேசத்தை சார்ந்தவர்களை அணிதிரட்டும். வேறு சில அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் அனைத்து மக்கள் தொகுதிகளையும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினருக்கு எதிராக அணி திரட்டும். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலித் தொகுதிகளை வேர் மட்டத்தில் அணிதிரட்டுவதில் கணிசமான வெற்றி கண்டுள்ளார். அதனை வெகுஜன கட்சியாக விரிவாக்கவும் விரும்புகிறார். இது அனைத்திலுமே முக்கியமான வார்த்தை அணி திரட்டல் என்பதுதான். இந்த அணி திரட்டல் என்பது நிலத்தில் பள்ளம் தோண்டி, அஸ்திவாரம் இட்டு, அதன் மேல் செங்கற்களை அடுக்கி கட்டடம் எழுப்புவது போன்றது. அதன் முக்கியமான பகுதியே அந்த வேர்மட்ட அணிதிரட்டல்தான். அண்ணாவும், அவருடைய தளகர்த்தர்களும் தமிழ்நாடு முழுவதும் ஒயாமல் பயணம் செய்து, மரத்தடிகளிலும், பேருந்து நிலையங்களிலும், திண்ணைகளிலும் படுத்து உறங்கி கட்சியின் வேர்மட்ட அணிகளை உருவாக்கினார்கள். அதற்கு முன்னால் சமூகப் பரப்பை சுயமரியாதைக் கலப்பையால் பெரியார் சலியா உழைப்பால் உழுது விதைப்பிற்கு தயார் செய்திருந்தார். திராவிட இயக்கத்தின் வரலாறு உலக மக்களாட்சி வரலாற்றின் மகத்தான அத்தியாயம். இவற்றிற்கெல்லாம் மாறாக திரைப்பட நடிகர்கள் தங்களைப் பார்க்கக் கூடும் ரசிகர்கள் கட்சியின் அஸ்திவாரமாக மாறுவார்கள் என்று நினைப்பது, அணிதிரட்டல் என்பதன் பொருளையே அர்த்தமற்றதாக்குகிறது. ரசிகர்களுக்கு என்று என்ன அரசியல் கோரிக்கை இருக்கிறது? அவர்கள் நட்சத்திரக் கவர்ச்சிக்காக வருகிறார்கள். அந்த கவர்ச்சி அவர்களை ஒருங்கிணைப்பதற்கு போதுமான சிமெண்ட் கிடையாது. அவர்கள் உதிரிகளாகவே இருப்பார்கள். அவர்களை அஸ்திவாரமாக்கினால் கட்டிடம் சரிந்துவிடும். எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் முன்னுதாரணங்களா? இதில் பெரிய பிரச்சினை என்னவென்றால் எம்.ஜி.ஆர் தலைவராகவில்லையா, என்.டி.ஆர் தலைவராகவில்லையா என்பது போன்ற அரைவேக்காட்டு கேள்விகள்தான். எம்.ஜி.ஆர் தி.மு.க என்ற வலுவான அஸ்திவாரத்தில் கட்டப்பட்ட மாளிகையின் நடுவில் சுவரெழுப்பி பாகம் போட்டுக்கொண்டார். அவருடைய நட்சத்திர பிம்பமே தி.மு.க சொல்லாடலால், கதையாடலால் உருவானதுதான். அவர் பாடல்கள், வசனங்கள் எல்லாமே தி.மு.க அரசியல் அணிதிரட்டலின் அங்கமாகவே புரிந்துகொள்ளப்பட்டன. அவருடன் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் சேர்ந்து வெளியேறி அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்தார்கள். என்.டி.ஆர் அதேபோலவே காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியைத்தான் தன் கட்சியாக்கிக் கொண்டார். பாஸ்கர ராவ், சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல காங்கிரஸ் மந்திரிகள் அவர் கட்சியின் தூண்களாக விளங்கினார்கள். ஆந்திராவில் காங்கிரசிற்கு மாற்றாக கட்சிகள் எதுவும் இல்லாததால், தெலுகு தேசம் உருவாக இடமிருந்தது. மாநில அரசியல் இரு துருவ அரசியலாக மாறியது. ஆனால் அந்த என்.டி.ஆரால் கூட தன் கட்சியை முழுவதும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலவில்லை. விஜய்காந்த்தால் ஓரளவு கட்சிக்காரர்களுடன் பழக முடிந்தது. கட்சி அணிகளை உருவாக்க முடிந்தது. ஆனால் அவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் முதல் முறை தேர்தலில் வென்றவுடனேயே அ.இ.அ.தி.மு.க-விற்கு சென்றார்கள். அந்த அளவுதான் விசுவாசம்; காரணம் அணிதிரட்டலுக்கு எந்த வலுவான சமூகவியல் வரலாற்றுப் பின்னணியும் இருக்கவில்லை. அவரை முதல்வர் வேட்பாளராகக் கொண்டு 2016-இல் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப் பட்டபோது அது படு தோல்வியைத் தழுவியது. அவரே அவர் தொகுதியில் வெற்றிபெற இயலவில்லை என்பது முக்கியமான உண்மை. பத்தே ஆண்டுகளில் கட்சி கலகலத்து விட்டது. ஆந்திராவில் என்.டி.ஆரை பின்பற்ற முயன்ற மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரே தேர்தலுக்குப் பிறகு கட்சியைக் கலைத்துவிட்டார். இத்தனைக்கும் பிறகு விஜயைப் பார்க்க கூட்டம் வருகிறது என்று கூறுவதும், கருத்துக் கணிப்பில் அவருக்கு வாக்களிக்கப் போவதாகக் கணிசமானவர்கள் கூறுகிறார்கள் என்பதும் அரசியல் அணிதிரட்டல் என்பதன் அடிப்படைகளையே புரிந்துகொள்ளாத ஊடகப் பேச்சாகும். ஊடகங்கள் தங்கள் வணிகத்திற்காக இது போன்ற பரபரப்புகளை உருவாக்குகின்றன. மக்கள் நலக் கூட்டணி பற்றி எத்தனை பரபரப்பு உருவாக்கப்பட்டது என்பதை யாரேனும் அந்த ஆண்டின் ஊடக வெளிப்பாடுகளை வைத்துக்கொண்டு ஆராய வேண்டும். அப்போதுதான் ஊடகம் உருவாக்கும் சோப்புக் குமிழ்கள் எப்படிப்பட்டவை என்பதை உணர முடியும். விஜய் அரசியலின் தீமை என்ன? விஜய் அரசியலின் தீமை என்னவென்றால் அவர் எந்த வகையிலும் அரசியல் தலைவராகத் தகுதியற்றவராக இருப்பதுதான். அவருக்கு அரசியல் பிரச்சினைகளை புரிந்துகொள்ளும் ஆற்றலே இருக்கிறதா என்பது ஐயமாக இருக்கிறது. அவர் தி.மு.க-வை தீவிரமாக எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார். அதை அவரால் பொறுப்பான ஒரு அரசியல் சொல்லாடலாக மாற்ற முடியவில்லை. கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவில் அவர் பேசியது பெரும் அதிர்ச்சியளிக்கும் காட்சியாக இருந்தது. கட்சியின் வெற்றி வாய்ப்பினை விளக்க அவர் சிறுபிள்ளைத்தனமான நாடகத்தை நடித்துக் காட்டுகிறார். அது என்னவென்று பார்ப்போம். முதல்வர் ஸ்டாலின் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கிறாராம். அவர் அருகில் சென்று “அங்கிள், அங்கிள்” என்று கூப்பிடவேண்டுமாம். அவர் தூக்கம் முழுமையாகக் கலையும் முன்னால் நீங்கள் என்ன சின்னத்திற்கு ஓட்டுப்போடுவீர்கள் என்று கேட்க வேண்டுமாம். அவர் “விசில் சின்னம்” என்று கூறிவிடுவாராம். அப்படி அவரே விசில் சின்னத்தைத்தான் நினைத்திருக்கிறார் என்பதால் அனைவருமே விசில் சின்னத்திற்குத்தான் வாக்களிப்பார்களாம். திரைப்படங்களில் சிறுவர்களை, முதிரா மனதினரைக் கவர அவர் செய்யும் கோமாளித்தனம் போலவே இதைப் பேசிக் காட்டுகிறார். தமிழ்நாட்டின் மக்கள் தொகுதி, எட்டு கோடி பேருக்கு மேல் கொண்ட மக்கள் தொகுதி. இந்திய மாநிலங்களை தனி மக்கள் தொகுதிகளாக கணக்கிட்டால், உலக அளவில், 195 நாடுகளில் 24-ஆவது பெரிய மக்கள் தொகுதியாகும். உலக பொருளாதாரத்திலும் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடுகள் 20 நாடுகள்தான். அதில் ஒன்றாக இடம்பெற முன்னேறுகிறது தமிழ்நாடு. அத்தகைய ஒரு மாநிலத்தை ஆட்சி செய்ய விரும்புபவர் பேசுகிற பேச்சா இது என்று அயர்ச்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டு ஊடகங்களை அவர் சந்திக்காவிட்டாலும் என்.டி.டி.வி, இந்தியா டுடே ஆகிய அகில இந்திய ஊடகங்கள் சென்னையில் நடத்திய விவாத அரங்கங்களில் பங்கேற்க விஜய்க்கு என்ன தடை என்று புரியவில்லை. இன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி உட்பட எல்லோரும் கலந்து கொண்டார்கள். ஆனால் விஜய் மட்டும் பனையூருக்கே அவர்களை வரச்சொல்லி விட்டார். அங்கேயும் அவர்கள் காமிராவில் நேர்காணலை பதிவு செய்ய அனுமதிக்கவில்லை. அவர்களுடன் பேசிவிட்டு அனுப்பிவிட்டார். அவருடன் பேசியவர்களைத்தான் அந்த ஊடகங்கள் நேர்காணல் செய்து அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டறிந்தன. இது இந்தியக் குடியரசு இதுவரை காணாத அதிசயம் எனலாம்; பேரவலம் எனலாம். இத்தனைக்கும் விஜய் காமிரா முன் வெளிச்சத்தில் இயங்கி பழகியவர். அவருக்குக் கூச்சம் இருக்க வாய்ப்பில்லை. பிறகு ஏன் ஆங்கில ஊடகங்களின் மேடையில் தோன்ற மறுக்கிறார் என்று சிந்தித்தால் திடுக்கிடும் எண்ணமொன்று தோன்றுகிறது. அவரால் வசனங்களை பிறர் சொல்லிக்கொடுக்காமல், எப்படி பேச வேண்டுமென்று இயக்காமல் எதையும் பேச முடியாதோ என்ற ஐயம்தான் அது. அதாவது ஒரு நடிகராகத்தான் அவரால் எந்த நேரமும் இருக்க முடியுமோ என்ற அச்சமூட்டும் எண்ணம் பிறக்கிறது. அப்படியானால் விஜய் கட்சி துவங்க முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற பதவி மோகம் தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்றுதான் தோன்றுகிறது. அதற்கு அடிப்படையாக ஆங்கிலத்தில் நார்சிஸம் எனப்படும் சுயமோகம் விளங்குகிறது. அவரது தந்தை சந்திரசேகர் சிறுவயதிலேயே கதாநாயக நடிகனாகவேண்டும், அரசாளவேண்டும் என்பது போன்ற ஆசைகளை அவர் மனதில் விதைத்திருக்கலாம். அதனால் உலக அனுபவம் எதுவும் இல்லாமல், உலகத்தை எதிர்கொள்ளும் ஆற்றலும் இல்லாமல், தன் திரைபிம்பத்தை மட்டுமே பணயம் வைத்து மக்களாட்சி அனுமதிக்கும் சுதந்திரத்தை பயன்படுத்திக்கொண்டு கட்சி துவங்கியுள்ளார் என்றுதான் கருத முடிகிறது. அப்படி ஒரு தனிநபரின் மனமயக்கத்திற்கு, அதனால் ஏற்படும் குழப்பங்களுக்கு, உலகின் முதிய பண்பாடுகளில் ஒன்றைக் கொண்ட தமிழ்நாடு இடம் கொடுப்பது என்பது வருந்தத்தக்கது. அதற்கு முக்கிய காரணம் ஊடகங்களின் அறமற்ற வணிக நோக்கு என்றுதான் தோன்றுகிறது. தங்களுடன் பேசவே மறுக்கும் ஒரு மனிதருக்குக் கண்டன ங்களைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் வெட்கமற்றுத் தரும் முக்கியத்துவம், மக்களாட்சியின் தூண்கள் செல்லரித்துப் போயுள்ளன என்பதைத்தான் காட்டுகிறது. அவருடைய பொறுப்பற்ற காட்சிப்பிம்ப அரசியலால் கரூரில் நாற்பத்தோரு உயிர்கள் பலியாயின. சென்ற வாரம் சேலத்தில் ஒருவர் இறந்துள்ளார். அவர் தன் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை. என்னதான் நினைக்கிறார் என்றும் யாருக்கும் தெரிவதில்லை. அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த மூடுமந்திர அரசியலை கண்டிப்பது அவசியம். கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/actor-vijay-is-insulting-politics-shouldnt-the-public-forum-condemn-him/
  3. திம்பு கோட்பாடுகளுடன் புதிய அரசமைப்பு வரைவு: யாழில் தமிழ்த் தரப்புகள் ஒருமனதாகத் தீர்மானம் February 17, 2026 12:33 pm தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் வகையில், திம்பு கோட்பாடுகளை முழுமையாக உள்ளடக்கிய சுயாட்சி அம்சங்களுடன் கூடிய புதிய அரசமைப்பு யோசனைகளை தயாரிப்பது யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ள, 2015 – 2019 காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட ‘ஏக்கிய ராஜ்ய’ (ஒற்றையாட்சி) அரசமைப்பு முறையை அடியோடு நிராகரிப்பதாக இக்கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர். தமிழ்த் தேசம், இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் தீர்வே எட்டப்பட வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது. கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ” கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தரப்புகள் மற்றும் அமைப்புகளைக் கொண்ட ஒரு ‘பொதுச் சபை’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு விசேட ‘அரசியல் குழு’ அமைக்கப்படும். இக்குழுவானது திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில், தமிழ் மக்கள் சுயாட்சியை முழுமையாக அனுபவிக்கக்கூடிய அரசமைப்பு யோசனைகளைத் தயாரிக்கும் பணியை முன்னெடுக்கும். முக்கியமாக, தமிழ் மக்கள் பேரவையால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகள் பெறப்படும். மேலதிகமாக ஏனைய தரப்புகளிடம் உள்ள சிறந்த யோசனைகளும் உள்வாங்கப்பட்டு, ஒரு பொதுவான வரைவு தயாரிக்கப்படும். இந்த வரைவு மீண்டும் பொதுச் சபையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் மக்கள் மட்டத்துக்குக் கொண்டு செல்லப்படும்.” – என்றார். கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஏனைய தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் புத்திஜீவிகள் எதிர்காலத்தில் இந்த முயற்சியில் இணைய விரும்பினால் அவர்களுக்கான கதவுகள் திறந்தே இருக்கும் என்றும், அனைவரையும் அரவணைத்துத் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைப் பலப்படுத்துவதே தமது நோக்கம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். https://oruvan.com/draft-new-constitution-with-thimpu-principles-tamil-parties-in-jaffna-unanimously-decide/
  4. மீண்டும் பதவியேற்பேன்..! நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கும் சிறீதரன் எம்.பி Vhg பிப்ரவரி 17, 2026 இலங்கை தமிழரசுக் கட்சியின், நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு பதவியில் இருந்து சிவஞானம் சிறீதரன் விலக்கப்பட்டதிலிருந்தது அக்கட்சிக்குள் நடக்கும் பல விடயங்கள் அம்பலமாகி வருகின்றன. இந்நிலையில், லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவஞானம் சிறீதரன், தான் தெரிவு நிலை பதவியில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் அவர், திருகோணமலை நீதிமன்றத்தில் என் மீதான தடை எப்போது நீக்கப்படுகின்றதோ, அப்போது அடுத்த நொடியே நான் பதவியேற்கலாம். ஆகவே, நான் அந்த நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றேன். அவ்வாறு நான் மீண்டும் பதவியேற்கும் போது, அனைவரையும் அரவணைத்து தான் செல்ல வேண்டும்” என கூறினார். https://www.battinatham.com/2026/02/blog-post_17.html
  5. செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இன்று இந்தியா பயணம் 17 Feb, 2026 | 06:26 AM இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'செயற்கை நுண்ணறிவு தாக்கம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை (17) மாலை இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாநாட்டினை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலக நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். செயற்கை நுண்ணறிவை (AI) மனிதகுலத்தின் நன்மைக்காகப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை மறுதினம் (19) உரையாற்றவுள்ளார். ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் 20 நாடுகளின் அரச தலைவர்களும், 45ற்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர். அத்துடன், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்கால முன்னெடுப்புகள் மற்றும் உலகளாவிய சவால்களை முறியடிக்க அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. இந்த இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல நாட்டுத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/238845
  6. யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நாளை மறுதினம் adminFebruary 17, 2026 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, அதன் 50-ஆவது ஆண்டுப் பூர்த்தியைஒட்டி நடைபெறும் 40-ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நாளை மறுதினம்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தகைசார் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் அவர்களின் தலைமையில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது. 📅 முக்கிய விபரங்கள்: காலப்பகுதி: நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை (4 நாட்கள்). அமர்வுகள்: மொத்தம் 12 அமர்வுகள். மொத்தப் பட்டதாரிகள்: 3,252 பேர். 📊 பட்டதாரிகளின் விபரம்: வகைப்பாடு எண்ணிக்கை பட்டப்பின் தகைமை பெற்றவர்கள் (Postgraduate) 376 உள்வாரி மாணவர்கள் (Internal) 2,557 வெளிவாரி மாணவர்கள் (External) 252 உயர் தகைமை & ஏனைய சான்றிதழ்கள் 67 மொத்தம் 3,252 🏆 உயர்தனிச் சிறப்புகள் மற்றும் விருதுகள் இம்முறை பட்டமளிப்பு விழாவில் மாணவர்களின் கல்வியார்ந்த சாதனைகளுக்காகப் பல கௌரவங்கள் வழங்கப்படவுள்ளன: தங்கப் பதக்கங்கள்: 94 பரிசில்கள்: 69 புலமைப்பரிசில்கள்: 15 🥇 பேராசிரியர் அழகையா துரைராசா தங்கப்பதக்கம்: பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதான இது பின்வருமாறு வழங்கப்படுகிறது: பல்கலைக்கழக மட்டம் (2021 கல்வியாண்டு): கலைப்பீட மாணவர் ஒருவர். பீட மட்டம் (2022 கல்வியாண்டு): கலைப்பீடம் (1), விஞ்ஞான பீடம் (1). பீட மட்டம் (2023 கல்வியாண்டு): முகாமைத்துவக் கற்கைகள் பீடம் (1), மருத்துவ பீடம் (1). பேராசிரியர் கந்தையா குணரட்ணம் தங்கப்பதக்கம் (2022): விஞ்ஞான பீட மாணவர் ஒருவருக்கு வழங்கப்படுகிறது. 🔬 சிறப்பு நினைவுப் பேருரைகள் (Memorial Lectures) பட்டமளிப்பு விழாவிற்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இரண்டு முக்கிய உரைகள் நடைபெறவுள்ளன: சேர். பொன் இராமநாதன் நினைவுப் பேருரை: உரையாளர்: ஓய்வுபெற்ற துணைப் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா (UK). தலைப்பு: “சமூக ஈடுபாட்டுடன் செயற்படும் பல்கலைக்கழகம்: ஆய்வு, உரையாடல் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு”. சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை: உரையாளர்: இருக்கைப் பேராசிரியர் கீதாஞ்சலி சத்தியதாஸ். தலைப்பு: “அடுத்த தலைமுறையைப் பேணிப் பாதுகாப்பது: குழந்தைகள் ஆரோக்கியம் குறித்த சமகாலக் கண்ணோட்டங்கள்”. https://globaltamilnews.net/2026/229172/
  7. நாளை செவ்வாய் 17 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா எல்லோருக்கும் முட்டைகள் பரிமாற வாய்ப்புள்ளதா? 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 10 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் 13 பேர் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து வசீ புலவர் நியூ பலன்ஸ் சுவி கோஷான் சே நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நந்தன் ஸிம்பாப்வே செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 17 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் ஆறு பேர் மாத்திரம் நேபாளம் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நேபாளம் சுவைப்பிரியன் அல்வாயன் கறுப்பி கிருபன் கோஷான் சே கந்தப்பு இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
  8. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார். சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!
  9. "இனவாதமும் பாகுபாடும் இனி செல்லாது!" - அடம்பனில் பிரதமர் அதிரடி 15 February 2026 இனவாதம் உள்ளிட்ட அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்வாறான அநீதிகளால் அதிகளவில் பாதிக்கப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். மன்னார், அடம்பன் பகுதியில் இன்று (15) நடைபெற்ற மன்னார் மாவட்டப் பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது இவ்விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள மாற்றத்தை உறுதியாக முன்னெடுத்துச் செல்வதற்கு, பலமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பெண் தலைமைத்துவம் அவசியமானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை வடிவமைப்பதில் பெண்கள் முன்வந்து தீவிரமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது பிரதமர் அழைப்பு விடுத்தார். வன்முறைகள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்குப் பாரிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அவை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் இங்கு வலியுறுத்தப்பட்டது. https://hirunews.lk/tm/446680/racism-and-discrimination-will-no-longer-be-tolerated-prime-minister-takes-action-in-adampan
  10. வெடுக்கு நாறிமலையில் சிவாரத்திரி தின வழிபாடுகள்! வடக்கு வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் சிவராத்திரி தின வழிபாடுகள் நேற்று (15) சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது நேற்று மதியம் 2.00 மணியளவில் ஆதி இலிங்கேஸ்வரருக்கு விசேடபூஜை அனுஷ்டானங்கள் இடம்பெற்றது. அதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் பொலிஸார் அந்த பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதும் வழிபாடுகளுக்கு எந்தவித தடைகளும் விதித்திருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmlop6dhc0004356ny5ebog49
  11. Sorting பண்ணி unofficial rankings கொடுக்க உதவி தேவைப்படலாம்!
  12. சுப்பர் 8 இறுதி சில மட்சுகளுக்கு புள்ளிகள் கணக்கிட நேரம் கிடைக்காது. தம்பர் ஈரானுக்கு அடிக்கிறாரோ இல்லையோ, நான் மத்திய கிழக்கில் நாலைந்து நாட்கள் நிற்பேன்! கூகிள் ஷீற் அப்பில் sort செய்யும் வசதியை ஏன் வைக்கவில்லை என்று தெரியவில்லை!
  13. நிறுத்தி வைக்கப்பட்ட சந்திப்பு? - நிலாந்தன் கொழும்பில் உள்ள சுவிற்சலாந்து தூதரகம் வரும் 19ஆம் தமிழ் கட்சிகளுக்கு இடையில் ஒரு சந்திப்பை ஒழுங்குப்படுத்தியிருந்தது. இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஒருமித்த நிலைப்பாட்டை எட்டுவது இந்த அழைப்பின் நோக்கம் என்று கருதப்படுகிறது. எனினும் அந்தச் சந்திப்பு இடம்பெறாது என்று தெரிய வருகிறது. அதற்கு காரணம், சுமந்திரன் அதை விரும்பவில்லை என்ற பொருள்பட சிங்கள ஊடகமான TTV.Lk தகவல் வெளியிட்டுள்ளது. 19ஆம் தேதி நடக்கவிருந்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் சுவிற்சலாந்து தூதரகம் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிகிறது. கட்சிகளுடைய வேண்டுகோளின் அடிப்படையில்தான் தூதரகம் மேற்படி சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேசமயம்,மேற்சொன்ன சந்திப்பு நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு அதாவது இன்று 15ஆம் திகதி குடிமக்கள் சமூகங்களையும் கட்சிகளையும் ஒரு சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்திருந்தது. ”எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படும் இடைக்கால வரைபை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்ப்பாக முன்வைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதினால், அதனை எதிர்த்து தமிழ்த் தரப்பு ஒரே குரலில் சமஷ்டித் தீர்வை அதாவது கூட்டாட்சித் தீர்வை வலியுறுத்த வேண்டும் என்றும், அது தொடர்பான ஒரு பொது நிலைப்பாட்டை எட்டுவதற்காகவே அச்சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் அந்த அழைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 15ஆம் திகதி,அதாவது இன்றைய சந்திப்பு இடம்பெறுவதும் சுவிற்சலாந்து தூதரகத்தின் சந்திப்பை தமிழரசுக் கட்சி ஆர்வத்தோடு அணுகாமைக்கு ஒரு காரணம் என்று தெரிகிறது. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சுவிற்சலாந்து அண்மை ஆண்டுகளாக அதிகம் ஆர்வம் காட்டிவருகிறது. இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் இடையிலான ராஜிய தொடர்புகளின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறான நல்லிணக்க முயற்சிகளில் தாம் ஈடுபடுவதாக தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நாலாம் கட்ட ஈழப் போருக்கு முன்னரான நோர்வேயின் சமாதான முயற்சிகள் தோல்வியடைந்த பின்னணியில், இப்பொழுது சுவிற்சலாந்து, தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் புதிய முயற்சிகளை ஆரம்பித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் நம்பப்படுகிறது. சுவிற்சலாந் இதற்கு முன்னரும் இமாலயப் பிரகடனத்தின் பின்னணியில் நின்றது. மகா சங்கத்துக்கும் சில புலம்பெயர்ந்த அமைப்புகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் விளைவாக அந்த பிரகடனம் உருவாக்கப்பட்டது. அது அடுத்தடுத்த கட்டத்துக்கு வளராத ஒரு முயற்சி. அதன்பின் சுவிற்சலாந்து கடந்த ஆண்டு அரசாங்கமும் உட்பட தமிழ் கட்சிகளை தனது நாட்டுக்கு அழைத்து இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு தொடர்பில் உரையாட வைத்தது. அந்த உரையாடல்களின் அடுத்தடுத்த கட்டமாக கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தமிழ் கட்சிகளை அழைத்து உரையாடியது. இந்த முயற்சிகளின் ஆகப்பிந்திய நகர்வாக இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. சுவிற்சலாந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு,இமாலயப் பிரகடனம் போன்ற முயற்சிகளில் மட்டும் ஆர்வங் காட்டவில்லை. அதற்குமப்பால்,வடக்கிலிருந்து அகற்றப்பட்ட முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் செயற்பாட்டாளர்களுக்கும் தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான உரையாடல்களுக்கும் நிதி அனுசரணை புரிந்து வருகிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் இயங்கும் சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்திற்கும் சில செயற்பாடுகளுக்கு நிதி அனுசரனை புரிகிறது. இவ்வாறு கட்சிகள் செயற்பாட்டாளர்கள் உட்பட பல்வேறு தரப்புகளுக்கும் சுவிட்சர்லாந்து நிதி உதவிகளைச் செய்கிறது. நல்லிணக்கம்,சமாதானம் மனித உரிமைகள்,நிலைமாறு கால நீதி அல்லது பொறுப்பு கூறல் போன்ற வார்த்தைகள் கவர்ச்சியானவை. ஆனால் நவீன அரசியலில் அவை தெளிவான அரசியல்,ராஜதந்திர,பொருளாதார இலக்குகளைக் கொண்டவை. இவ்வாறான நகர்வுகளின் ஒரு பகுதியாகவே இம்மாதம் 19ஆம் திகதி நடக்கவிருந்த சந்திப்பும் ஒழுங்குசெய்யப்பட்டது. அந்தச் சந்திப்பின் நோக்கம் இனப்பிரச்சினைக்கான பொதுவான ஒரு தீர்வை நோக்கி வருமாறு தமிழ் கட்சிகளை ஊக்குவிப்பது என்று விளங்கிக் கொள்ளப்பட்டது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தமக்கு என்ன வேண்டும் என்பதை ஏன் ஒரே குரலில் கூற முடியவில்லை? தீர்வு விடயத்தில் தமிழ்த் தரப்பு ஒரு பொது உடன்பாட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு தூதரக மட்டங்களில் உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளை சிவில் சமூகங்கள் சந்தித்தபோது இது சுட்டிக்காட்டப்பட்டது. அப்பொழுது சிவில் சமூக உறுப்பினர்கள் சிலர் ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக்காட்டினர். 2015ல் நிலைமாறு கால நீதி செய்முறைகளின் கீழ் புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அங்கிருந்து தொடங்கி கோத்தபாயாவின் நிபுணர் குழு வரையிலுமான சுமார் 6 ஆண்டு ஆண்டு கால பகுதிக்குள் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வெவ்வேறு தரப்புகள் தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைத்தன. அப்பொழுது இயங்கிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வு முன்மொழிவை வெளியிட்டது. அது ஒரு சமஷ்டி முன்மொழிவு. அதன் பின் வடமாகாண சபை ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அதுவும் சமஸ்டி.தவிர வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனின் கட்சி ஒரு முன்மொழிவை வெளியிட்டது. அது சமஸ்டியை விட உயர்வான, கொன்பெடரேஷன் என்று அழைக்கப்படுகின்ற ஒரு தீர்வு. இவை தவிர புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் தீர்வு முன்மொழிவுகளை முன்வைத்தன. இப்படிப் பார்த்தால் இலங்கைத் தீவின் நவீன வரலாற்றில் இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அதிகளவு முன்மொழிவுகள் மேசையில் வைக்கப்பட்ட ஒரு காலகட்டமாக அந்த ஆறு ஆண்டுகாலப் பகுதியைக் கூறலாம். இவ்வாறு முன்வைக்கப்பட்ட எல்லா முன்மொழிவுகளிலும் ஒரு பொதுப் பண்பு இருந்தது. அது என்னவென்றால் அவை அனைத்தும் சமஷ்டிப் பண்பைக் கொண்டிருந்தவை என்பதுதான். இது சிவில் சமூகங்களால் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்டார், நீங்கள் குறிப்பிடும் அத்தனை தீர்வு முன்மொழிவுகளையும் தமிழ்த் தரப்பு ஒன்றாக ஒரு மேசையில் அமர்ந்திருந்து ஒரே ஆவணமாகக் கொடுத்ததா? என்று. இல்லை. கொடுக்கவில்லை. ஏன் அப்படிக் கொடுக்க முடியவில்லை என்றால், மேற்சொன்ன அனைத்து தீர்வு முயற்சிகளிலும் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. தமிழ் மக்கள் பேரவையில் தமிழரசு கட்சி இருக்கவில்லை. வட மாகாண சபையின் முன்மொழிவிலும் அது தமிழரசுக்கட்சியின் முன்னொளிவாக வைக்கப்படவில்லை. மாகாண சபையின் முன்மொழிவுதான். எனவே மேற்கண்ட அனைத்து தீர்வு முன்மொழிவுகளிலும் தமிழரசுக் கட்சி உத்தியோகபூர்வமாக பங்கெடுக்கவில்லை. ஆனால் அப்போதைய யாப்புருவாக்க முயற்சிகளில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்தோடு பங்காளியாகச் செயல்பட்டது. அப்பொழுது தமிழ் மக்கள் பேரவையில் காணப்பட்ட சில கட்சிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற கொடியின் கீழ் யாப்புருவாக்க முயற்சிகளில் ஈடுபட்டன. அந்த முயற்சிகளின் விளைவாக உருவாக்கப்பட்டதுதான் “எகிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற இடைக்கால வரைபு ஆகும். அந்த வரைபானது மைத்திரிபால சிறிசேனவின் வார்த்தைகளில் சொன்னால்,சிங்கள மக்களையும் பயமுறுத்தாத தமிழ் மக்களையும் பயமுறுத்தாத வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதைத்தான் இப்பொழுது கஜேந்திரக்குமார் கேள்விக்கு உள்ளாக்குகிறார். வெளிப்படைத் தன்மையற்ற அந்த இடைக்கால வரைபானது ஒற்றையாட்சிப் பண்பு மிக்கது என்று கஜன் குற்றச்சாட்டுகிறார். அதை சுமந்திரன் மறுக்கிறார். அந்த இடைக்கால வரைபை உருவாக்கியதில் ஜேவிபி,தமிழரசுக் கட்சி, புளட் ,டெலோ ஆகியவற்றுக்கும் பங்குண்டு. ஆனால் அண்மை மாதங்களாக தமிழரசுக் கட்சியானது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு பேசி வருகிறது. அதன் விளைவாக இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி ஒரு பொது ஆவணத்தைத் தயாரிக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் தொகுத்துப் பார்த்தால் தெரிவது என்னவென்றால், தமிழ்த் தரப்பு ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு வர முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் தமிழரசுக் கட்சிதான். எனவே இப்பொழுது தமிழ்த் தரப்பு ஏன் ஒருமித்த குரலில் தீர்வை முன்வைக்க முடியவில்லை என்பதற்கு விளக்கம் கிடைக்கிறது. எல்லாருமே சமஸ்டியைத்தான் கேட்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தோடு இணைந்து அதாவது சிங்கள மக்களையும் பயமுறுத்தாமல் ஒரு தீர்வைக் கொண்டு வருவது என்றால் அது வெளிப்படையான சமஷ்டியாக இருக்கும் வாய்ப்புகள் குறைவு என்று தமிழரசுக் கட்சி கருதுவதாகத் தெரிகிறது. இதை இன்னும் பிழிந்து சொன்னால்,சிங்களப் பிரதிநிதிகளை பெரும்பான்மையாகக் கொண்ட நாடாளுமன்றத்துக்கு ஊடாக கிடைக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படைத்தன்மை மிக்கதாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதுதான். இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால், மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல், தமிழ்த் தரப்பு போராடாமல். உள்நாட்டுக்குள்ளேயே கண்டுபிடிக்கக்கூடிய எந்த ஒரு தீர்வும் வெளிப்படையான சமஷ்டியாக இருக்க முடியாது. இந்த இடத்தில்தான் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னமும் கண்காணிப்பும் அழுத்தமும் தேவைப்படுகிறது. இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு தமிழ்த் தரப்பு போராடவில்லையென்றால், மூன்றாவது தரப்புகள் அழுத்தத்தை பிரயோகிக்கவில்லை என்றால் இரண்டு தரப்பையும் சமாதானப்படுத்தும் ஒரு தீர்வை கொண்டுவர முடியாது. இந்திய இலங்கை உடன்படிக்கை அதைத்தான் உணர்த்துகின்றது. ஆனால் 13ஆவது திருத்தம் சமஸ்ரியல்ல. எனவே தமிழ் சிங்கள முஸ்லிம், மலையக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற வெளிப்படைத்தன்மை மிக்க எந்த ஒரு தீர்வும் மூன்றாவது தரப்புகளின் பிரசன்னம், அழுத்தம்,கண்காணிப்பு இல்லாமல் கிடைக்காது என்பதுதான் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் ஆகும். இப்பொழுது சுவிற்சலாந்து அப்படி ஒரு மூன்றாவது தரப்பாகச் செயல்படுமா? அதை இந்தியா ஆர்வத்தோடு பார்க்குமா? https://www.nillanthan.com/8140/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.