யாழில் சாதனை புரிந்த கூலித் தொழிலாளியின் மகள்! யாழ். ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி மாணவியான தேவதாஸ் கிலானி என்ற மாணவி உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 27 ஆவது இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவியின் தந்தை, மாணவி 10 மாத குழந்தையாக இருக்கும்போது உயிரிழந்துள்ளார். அதன்பின்னர் குறித்த மாணவியின் தாயாரே கூலி தொழில் செய்து அந்த மாணவியை கற்பித்து வந்த நிலையில் இவ்வாறு சாதனை புரிந்துள்ளார். நிம்மதியாக இருந்து கல்வி கற்பதற்கே ஒரு சீரான வீடு இல்லாத நிலையிலும் குறித்த மாணவி சாதித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnfvqn920000356pwrdjudu4
777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து கின்னஸில் இடம் பிடித்த பெண்! 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சிப்படுத்தி ஈழத்து பெண் உலக சாதனை மேற்கொண்டார். குறித்த காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று (02) இரவு 7 மணியளவில் நடைபெற்றது. கனடாவில் வாழும் ஈழத்து பெண்ணான ஆயுள்வேத வைத்தியர் குமுதினி கோபாலகிருஸ்ணன் குறித்த கின்னஸ் சாதனைக்காக குறித்த நிகழ்வை நடத்தினார். இதற்கு முன்னர் அமெரிக்கர் ஒருவர் 527 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து காட்சி படுத்தி கின்னஸில் இடம் பிடித்திருந்தார். குறித்த சாதனையை தாண்டி 777 மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து குறித்த சாதனையை இன்று பதிவு செய்தார். கனடாவில் வசித்து வரும் குமுதினி கோபாலகிருஸ்ணன் ஆயுள்வேத வைத்தியராக சேவை செய்து வருகின்றார். தனது வாழ்நாளில் கின்னஸ் சாதனை ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்ற கனவுடன் கடந்த 30 வருடமாக மெழுகுதிரி தாங்கிகளை சேகரித்து வந்தார். குறித்த கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருந்த அவர், தனது சாதனையை ஈழத்தில் நிகழ்த்தும் நோக்குடன் நேற்று தனது சாதனை பதிவினை மேற்கொண்டார். முறிகண்டி பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இல்லத்தில் குறித்த காட்சிப்படுத்தலும், உறுதிப்படுத்தும் நிகழ்வும் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnh0azbl0001356p7v76gqav
டிரம்பின் உரையைத் தொடர்ந்து அதிகரித்த கச்சா எண்ணெய் விலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் தொடர்பாக வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. முக்கிய கடல் வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் விரைவில் நீங்கும் என்ற எதிர்பார்ப்பு ட்ரம்ப்பின் உரையின் மூலம் தகர்க்கப்பட்டதே இதற்கு காரணமாகும். ஜனாதிபதி உரை தொடங்குவதற்கு முன்னர் ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சாய் எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்ட போதிலும், இறுதியில் அது சுமார் 4% இனால் அதிகரித்து, தற்போது ஒரு பீப்பாய் 105.38 டொலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் மொத்த எரிசக்தி தேவையில் சுமார் 20% இந்த குறுகிய கடல் வழிப்பாதை ஊடாகவே கொண்டு செல்லப்படுவதால், இது உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கடந்தபெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்தக் கடல் வழிப்பாதையைப் பயன்படுத்தும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் எச்சரித்ததையடுத்து, நிலைமை இன்னும் முழுமையாக வழமைக்குத் திரும்பவில்லை. ஆட்சி மாற்றம் அல்லது ஈரானின் உட்கட்டமைப்புகளை அழிப்பது குறித்து ட்ரம்ப் விடுத்த கடுமையான எச்சரிக்கைகள், விநியோகச் சங்கிலிக்கு மேலும் அச்சுறுத்தலாக அமையும் என முதலீட்டாளர்கள் அஞ்சுவதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். https://adaderanatamil.lk/news/cmngxywp00000356pohbpbtd6
ஆர்டெமிஸ்2 : நிலவை நோக்கி வெற்றிகரமாக புறப்பட்டது நாசாவின் விண்கலம் 2 ஏப்ரல் 2026, 00:49 GMT Reuters நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் கீழ் ஓரியான் விண்கலம், 50 ஆண்டுகளுக்கு பிறகு மனிதர்களை நிலவின் அருகே அனுப்பும் 10 நாள் விண்வெளி பயணமாக புறப்பட்டது. இந்திய நேரப்படி, வியாழன் அதிகாலை 4 மணியளவில், புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஓரியான் விண்கலம் புறப்பட்டது. இந்த பயணம் மனிதர்கள் இதுவரை சென்றதை விட பூமியிலிருந்து கூடுதல் தூரம் செல்லும் முயற்சியாகும். நான்கு விண்வெளி வீரர்களை ஏற்றிச் செல்லும் இந்த திட்டம், மனித விண்வெளி ஆய்வில் புதிய கட்டத்தைத் தொடங்குகிறது. ஆர்டெமிஸ் 2 திட்டக் குழுவின் தலைவர் ரீட் வைஸ்மேன், பைலட் விக்டர் க்ளோவர், மிஷன் சிறப்புப் பணியாளர் கிறிஸ்டினா கோக், மற்றொரு சிறப்புப் பணியாளர் ஜெரமி ஹான்சன் ஆகியோர் இந்த வரலாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். NASA நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் பத்திரிகையாளர் சந்திப்பை தொடங்கி, திட்டத்தின் செயல்பாட்டு நிலை குறித்து தகவல் வழங்கினார். முன்னதாக ஏற்பட்ட தொடர்பு சிக்கலை அவர் சுருக்கமாக குறிப்பிட்டார். தரையில் இருந்த குழுவினர் விண்கலத்தில் உள்ள குழுவினரை கேட்க முடியவில்லை. இந்த பிரச்னை தற்போது தீர்க்கப்பட்டுள்ளது என்றும், குழுவினர் "பாதுகாப்பாகவும், நிலையாகவும், உற்சாகமாகவும் உள்ளனர்" என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி அவர் பேசினார். "54 ஆண்டுகளாக இருந்த சிறிய இடைவெளிக்குப் பிறகு, நாசா மீண்டும் விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது," என்று அவர் கூறினார். "இந்த திட்டம் குழுவினருக்கு மட்டும் அல்ல, உங்களுக்கும் சொந்தமானது," என்று அவர் நாசா பணியாளர்களிடம் தெரிவித்தார். குழு முன்நிலையில் உள்ள சவால்களை அறிந்துள்ளது என்றும், திட்டம் முடிந்து விண்வெளி வீரர்கள் திரும்பிய பின்னரே கொண்டாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார். Reuters அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புறப்படும் தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்ததாக, பிபிசியின் அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே குறிப்பிட்டார். ராக்கெட்டின் கீழ் தீப்பொறிகள் பீறிட்டு, பெரும் முழக்கத்துடன் அது நீல வானில் உயர்ந்தது. அதன் பின்னால் புகை தடம் தென்பட்டது. இந்த காட்சியை நேரில் கண்ட மக்கள் உற்சாகக் குரலில் ஆரவாரம் செய்தனர். அறிவியல் ஆசிரியர் ரெபெக்கா மொரெல்லே, "இது பார்க்கவும் கேட்கவும் மட்டுமல்ல, அதன் சக்தியை உடலிலேயே உணர முடிகிறது" என்று கூறினார். நாசா இதுவரை உருவாக்கியதிலேயே மிக சக்திவாய்ந்த ராக்கெட் இதுவாகும்; விண்வெளி வீரர்களை சுமார் 400,000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சந்திரனை நோக்கி அனுப்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Getty Images புறப்பட்ட சில நிமிடங்களில், மொத்த உந்து விசையில் சுமார் 80 சதவிகிதத்தை வழங்கும் இரு துணை ராக்கெட்டுகள் தங்களது பணியை நிறைவேற்றி பிரிந்தன. அவை அட்லாண்டிக் பெருங்கடலில் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. புறப்படுவதற்கு முன் லாஞ்ச் அபார்ட் சிஸ்டம் (Launch Abort System) தொடர்பான சிக்கல் ஒன்று எழுந்தது. அவசரநிலையில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக வெளியேற்ற உதவும் இந்த அமைப்பு முக்கியமானதாகும். எனினும், பொறியாளர்கள் அந்த பிரச்னையை விரைவாக சரிசெய்தனர். இறுதியாக, "ஆர்டெமிஸ் II, நீங்கள் ஏவுதலுக்குத் தயாராக உள்ளீர்கள்" என்று குழுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன், "நாங்கள் முழு மனிதகுலத்துக்காகவும் செல்கிறோம்" என்று பதிலளித்தார். Reuters 80 சதவிகித உந்துவிசையை வழங்கும் அந்த இரண்டு திட எரிபொருள் ராக்கெட் பூஸ்டர்களும், விண்கலனை மணிக்கு 10,000 மைல்களுக்கும் அதிகமான வேகத்துக்கு எடுத்துச் செல்லும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தன. கென்னடி மையத்திலிருந்து தகவல்களைத் தரும் அறிவியல் செய்தியாளர் பல்லப் கோஷ், "கென்னடி விண்வெளி மையத்தில் பெரும் உற்சாகம் நிலவியது. பல ஆண்டுகளாக காத்திருந்த இந்த தருணத்தை பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்" என்று தெரிவித்தார். இருந்தாலும், பயணம் முழுமையாக நிறைவடையும் வரை இன்னும் பணிகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பயணத்தின் போது, விண்வெளி வீரர்கள் பூமியின் மேல் வளிமண்டலத்தை கடந்து செல்லும்போது அரிய காட்சிகளை கண்டனர். அறிவியல் செய்தியாளர் எஸ்மே ஸ்டல்லார்ட், கட்டுப்பாட்டாளர் ரீட் வைஸ்மேன் "அருமையான காட்சி... நமக்கு ஒரு அற்புதமான நிலவு உதயத்தை பார்க்க முடிந்தது." என்று கூறியதாக தெரிவித்தார். விண்கலத்திலிருந்து பூமியின் நீல நிறம் தொலைவில் தென்பட்டது. இந்த பயணம், மனிதர்களுக்கு மிகக் குறைவானோர் மட்டுமே அனுபவித்துள்ள விண்வெளி காட்சிகளை காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், சந்திரனை நோக்கிய மனித பயணங்களை மீண்டும் தொடங்கும் நாசாவின் முக்கியமான முன்னேற்றமாகவும் இது பார்க்கப்படுகிறது. NASA ஆர்டெமிஸ் 2 விண்கலனிலிருந்து பூமியின் காட்சி ஏவுதலுக்கு முன் நடைபெற்ற சோதனைகளில் termination system எனப்படும் அவசர அழிப்பு அமைப்பு தொடர்பாக ஒரு சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டது. இது ராக்கெட், பாதையிலிருந்து விலகினால், அது பூமியில் யாருக்கும் சேதம் ஏற்படாமல் இருக்க, வானில் இருந்தபடியே அதை அழிக்கும் ஒரு பாதுகாப்பு அமைப்பாகும். சிறிது நேரத்திலேயே மற்றொரு பிரச்னை கண்டறியப்பட்டது. விண்வெளி வீரர்களை அவசரநிலையில் பாதுகாப்பாக ராக்கெட்டிலிருந்து பிரித்தெடுக்கும் Launch Abort System-இல் உள்ள ஒரு பேட்டரியில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் கவுண்டவுனுக்குப் பிறகு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வை கண்டு ரசித்தனர். Reuters ஆர்டெமிஸின் அடுத்தடுத்த திட்டங்கள் என்ன? ரெபெக்கா மோரெல், அறிவியில் ஆசிரியர் ஆர்டெமிஸ் 1 திட்டம் 2022-இல் நிகழ்ந்தது. அதில் நாசாவின் பிரமாண்ட ராக்கெட்டும் ஓரியன் விண்கலமும் முதல்முறையான நிலவுக்கு அருகே 25 நாள் பயணத்தில் சென்றது. ஆனால் அதில் மனிதர்கள் இடம்பெறவில்லை. ஆர்டெமிஸ் 2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றனர். நாசாவின் ஸ்பேஸ் லான்ச் திட்டம் ஓரியன் விண்கலத்தில் பயணிக்கும் முதல் குழுவாக இவர்கள் உள்ளனர். இவர்களின் பயணம் 10 நாட்கள் நீடிக்கும். இந்தச் சூழலில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தை நாசா முழுவதும் மாற்றியமைத்துள்ளது. 2028-இல் திட்டமிடப்பட்டிருந்த ஆர்டெமிஸ் 3 திட்டத்தின்படி நிலவின் நிலப்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரை இறங்குவதாக இருந்தது. தற்போது அந்தக் குழு 2027-இல் தாழ் விண்வெளி பாதைக்குச் சென்று நிலவில் தரையிறங்குவது பரிசோதிக்கப்பட உள்ளது. Getty Images அதனைத் தொடர்ந்து, ஆர்டெமிஸ் 4 மற்றும் 5 நிலவில் தரையிறங்கும் திட்டமாக உள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் 2028-இல் நிகழ்த்த நாசா திட்டமிட்டுள்ளது. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஜெப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் நிறுவனங்களில் நிலவில் தரையிறங்க உதவும் லேண்டர்களை உருவாக்கி வருகின்றன. இதில் ஆர்டெமிஸ் 3 திட்டத்தில் தரையிறங்கும் பரிசோதனைக்கும் விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கும் எந்த லேண்டர்கள் பயன்படுத்தப்படும் என்பதில் தெளிவில்லை. நிலவில் ஒரு நிலையம் கட்டுவது நாசாவின் தொலைநோக்கு திட்டமாக உள்ளது. ஆனால் நிலவைச் சுற்றி வரும் கேட் வே என்கிற விண்வெளி நிலையத்தை கட்டும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலவுக்குத் திரும்ப 50 ஆண்டுகளுக்கும் மேலானது ஏன்? Getty Images நிலவில் தரையிறங்கும் நாசாவின் அபோல்லோ திட்டம் 1972-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. செலவினங்கள் அதிகரித்து, முக்கியத்துவம் மாறிவிட்டது. எனவே தான் செலவு குறைவான தாழ் விண்வெளி பாதையின்மீது கவனம் திரும்பியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக ஸ்கை லாப் தொடங்கி சர்வதேச விண்வெளி நிலைய திட்டம் வரை இதன் மீது தான் நாசாவின் கவனம் உள்ளது. 2005-ஆம் ஆண்டு கான்ஸ்டலேஷன் என்கிற திட்டத்தின் மூலம் நிலவு பற்றிய ஆராய்ச்சியை நாசா மீண்டும் தொடங்கியது. ஆனால், காலதாமதம் மற்றும் அதிகரித்த செலவு போன்ற காரணங்களால் 201-இல் இந்த திட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆனால், கான்ஸ்டலேஷன் திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பமான ஓரியன் விண்கலம் அந்த ராக்கெட்டின் பாகங்கள் ஆர்டெமிஸ் திட்டத்தில் இணைக்கப்பட்டன. இந்த திட்டம் 2017-இல் தொடங்கியது. 2024-இல் நிலவில் தரையிறங்குவது திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அடுத்தடுத்த தாமதங்களால் 2028-இல் நிலவில் தரையிறங்க திட்டமிடுவதாக நாசா தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9wqg2wx489o
இரானை "கற்காலத்திற்கே" தள்ளுவோம் என எச்சரித்த டிரம்ப் - போர் குறித்த நிலைப்பாடு குழப்பம் தருகிறதா? Reuters தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் இருப்பதாக டிரம்ப் கூறினார். வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்கா இரான் மீது குண்டுவீசித் தாக்கி, அந்நாட்டை மீண்டும் 'கற்காலத்திற்கே' தள்ளிவிடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த வாரத்தின் தொடக்கத்திலும் டிரம்ப் இரான் மீது இதேபோன்றதொரு மிரட்டலை விடுத்திருந்தார். இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலையில் வெள்ளை மாளிகையில் இரான் போர் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "இரானின் கடற்படை அழிக்கப்பட்டுவிட்டது. அவர்களின் விமானப்படை பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. அவர்களின் தலைவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டனர்" என்று கூறினார். இரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு மிக நெருக்கமான நிலைக்கு வந்திருந்ததால், அதன் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் அவசியமானது என்றும் டிரம்ப் கூறினார். தனது 19 நிமிட உரையில், இரானுக்கு எதிரான போரின் நோக்கம் நிறைவேறுவதற்கு மிக அருகில் உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும், "அவர்கள் (இரான்) மீது அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நாங்கள் ஒரு பெரும் தாக்குதலைத் தொடுக்கவுள்ளோம். அவர்களை மீண்டும் கற்காலத்திற்கே தள்ளிவிடுவோம்; அதுதான் அவர்களுக்குரிய இடமும் கூட," என்று கூறினார். டிரம்பின் உரைக்குப் பிறகு உடனடியாக எண்ணெய் விலைகள் உயர்ந்தன மற்றும் ஆசியச் சந்தைகளும் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. "இஸ்ரேல் மற்றும் சௌதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எங்களது பிற மத்திய கிழக்கு நட்பு நாடுகளின் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவர் கூறினார். டிரம்பின் கூற்றுப்படி, எந்தத் தூண்டுதலும் இன்றி இரான் இந்த நாடுகளைத் தாக்கியது, இது அந்தப் பிராந்தியத்துக்கு இரான் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என்பதை நிரூபிக்கிறது. அமெரிக்கா மற்றும் உலகின் பாதுகாப்புக்கு "எபிக் ஃபியூரி" (அமெரிக்கா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை) ஏன் அவசியம் என்பதை விளக்குவதற்காக இந்த உரையை வழங்குவதாக டொனால்ட் டிரம்ப் கூறினார். இரானுக்கு எதிரான தனது ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா "எபிக் ஃபியூரி" என்று பெயரிட்டுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில், இரான் அல்லது அதன் ஆதரவு குழுக்கள் ஏராளமான பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறினார். இரானிய ஆட்சியை "கொலைகார ஆட்சி" என்று டிரம்ப் விவரித்தார். இரானில் சமீபத்தில் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டதையும், அதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார். இத்தகைய தலைவர்கள் அணு ஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது என்று கூறிய டிரம்ப், "அதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" என்றார். இந்தப் போர் ஒரு முதலீடு அமெரிக்கா ஒரு தோற்கடிக்க முடியாத ராணுவ சக்தி என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். இந்தப் போரை அமெரிக்காவின் எதிர்கால சந்ததியினருக்கான ஒரு "முதலீடு" என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் 20 மற்றும் 21-ஆம் நூற்றாண்டின் போர்களின் கால அளவைக் குறிப்பிட்ட அவர், அவை பல ஆண்டுகள் நீடித்தன என்றும், ஆனால் இந்த மோதல் இதுவரை 32 நாட்களாக மட்டுமே நடந்து வருவதாகவும் கூறினார். இரானிய ஆக்கிரமிப்பு மற்றும் "அணுசக்தி மிரட்டல்" ஆகியவற்றால் அமெரிக்க குடிமக்களுக்கு இனி ஆபத்து இல்லை என்று டிரம்ப் தெரிவித்தார். அவரைப் பொறுத்தவரை, அமெரிக்கா இப்போது முன்னெப்போதையும் விட பாதுகாப்பாகவும், வலிமையாகவும், செழிப்பாகவும் இருக்கும். எண்ணெய் விலை உயர்வு பிபிசி வணிகச் செய்தியாளர் பீட்டர் ஹோஸ்கின்ஸின் கூற்றுப்படி, ஹோர்மூஸ் நீரிணை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து டிரம்பின் உரை சர்வதேச எண்ணெய் சந்தைக்கு எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. அதிபர் பேசத் தொடங்குவதற்கு முன்பு, ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலராக இருந்தது. உரையின் போது விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன, ஆனால் இப்போது விலை மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 4% உயர்ந்து 105.38 டாலரை எட்டியுள்ளது. உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20% பொதுவாக இந்த குறுகிய கடல் பாதை வழியாகச் செல்வதால், ஹோர்மூஸ் நீரிணை உலகப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. பிப்ரவரி 28 அன்று மோதல் தொடங்கியதிலிருந்து இந்த வழித்தடம் கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இந்த நீர்வழியைப் பயன்படுத்தும் கப்பல்களைத் தாக்குவோம் என்று இரான் அச்சுறுத்தியிருந்தது. டிரம்பின் உரைக்குப் பிறகு, முன்னதாக ஏற்றம் கண்டிருந்த ஆசியாவின் முக்கிய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியைக் கண்டுள்ளன. ஜப்பானின் நிக்கி சுமார் 1.5% சரிந்துள்ளது, அதே சமயம் தென் கொரியாவின் கோஸ்பி 2.6% சரிந்துள்ளது மற்றும் ஹாங்காங்கின் ஹாங் செங் 1% சரிவுடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. இரான் போர் முடிவுக்கு வருவதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியையும் டிரம்பின் உரை வழங்காததால் முதலீட்டாளர்கள் கவலையடைந்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதியில் இரான் போர் தொடங்கியதிலிருந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. போர் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு சில நேரங்களில் கடும் உயர்வுக்கு வழிவகுத்தது, அதே சமயம் போர் தீவிரமடைவதற்கான அறிகுறிகள் பங்குகளை பெரும் விற்பனை சரிவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளன. இந்த மோதலின் தாக்கத்தால் ஆசியா குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. ஏனெனில் இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற இப்பிராந்தியத்தின் பல முக்கிய நாடுகள் எரிசக்தி விநியோகத்துக்காக மத்திய கிழக்கை பெரிதும் நம்பியுள்ளன. எனவே, போர் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் அல்லது எண்ணெய் விநியோகத் தடைகள் சந்தைகளில் நேரடியாக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. 'டிரம்பின் திட்டத்தில் எதுவும் தெளிவாக இல்லை' முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கனின் மூத்த ஆலோசகராக இருந்த மெலிசா டூஃபெனியன் பிபிசியிடம் கூறுகையில், டிரம்பின் உரைக்குப் பிறகு அமெரிக்க மக்கள் இரான் போர் குறித்து இன்னும் அதிக குழப்பமடைய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். "இன்று அந்த உரையைப் பார்க்கும் எந்தவொரு அமெரிக்கரும் ஒரு தெளிவான திட்டம் இருக்கிறது என்றோ, ஒரு தெளிவான காலக்கெடு இருக்கிறது என்றோ அல்லது நாம் முன்பை விட பாதுகாப்பாக இருக்கிறோம் என்றோ உணர்வார்கள் என நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். இதற்கிடையில், நேட்டோவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் ஐவோ டால்டர் கூறுகையில், டிரம்பின் உரை பல முக்கியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கவில்லை என்று குறிப்பிட்டார். அவற்றில் மிக முக்கியமான கேள்வி என்னவென்றால், இரானின் அணுசக்தி திறன், கடற்படை மற்றும் ஏவுகணை அமைப்புகள் அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் உரிமை கோரினால், அமெரிக்கா ஏன் இன்னும் இரானில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதுதான். "இது நம்மை எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளது என்று நான் நினைக்கவில்லை... அமெரிக்க பொதுமக்களுக்கும் இதே போன்ற சந்தேகங்கள் இருக்கும் என்று நான் கருதுகிறேன்," என்று அவர் பிபிசி செய்தியாளர் சுமி சோமஸ்கந்தாவிடம் கூறினார். இந்த உரையில் டிரம்ப் நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை அல்லது கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்த அச்சுறுத்தல்களை மீண்டும் கூறவில்லை, ஆனால் பின்னர் சமூக ஊடகங்களில் அவர் மீண்டும் அத்தகைய நிலைப்பாட்டை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது என்று டால்டர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmewggw3d0o
முன்னாள் அமைச்சர் மஹிந்த விஜேசேகர காலமானார் Lenin Raj / 2026 ஏப்ரல் 02 , மு.ப. 11:46 முன்னாள் அமைச்சரான மஹிந்த விஜேசேகர தனது 81 ஆவது வயதில் காலமானார். கடற்றொழில் உள்ளிட்ட பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள இவர், முன்னாள் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் தந்தையாவார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி, அக்குரஸ்ஸ - கொடபிட்டிய பகுதியில் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ (LTTE) தற்கொலை குண்டுத் தாக்குதலில் மஹிந்த விஜேசேகர அவர்கள் கடுமையாக காயமடைந்தார். அவர் உயிரிழக்கும் வரை அந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காகத் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/முன்னாள்-அமைச்சர்-மஹிந்த-விஜேசேகர-காலமானார்/175-374966
நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது ரியூசனில் ஆங்கிலம் படிப்பித்த கந்தையா மாஸ்ரர் அழகு சுப்பிரமணியத்தை சிறந்த சிறுகதை ஆசிரியர் என்று அறிமுகப்படுத்தியிருந்தார். ஆனால் அவரது கதைகள் இதுவரை வாசிக்கக் கிடைக்கவில்லை! ஆங்கிலத்தில் ஒரு தமிழர் சிறப்பாக எழுதுவது பெருமையாக இருந்ததால் அழகு சுப்பிரமணியத்தின் பெயர் மறக்காமல் மனதில் ஒட்டிவிட்டது. கந்தையா மாஸ்ரர் ஆங்கிலம் படிப்பிப்பதை விட அதிகம் சுவாரசியமான “கதைகள்” சொல்லிக்கொண்டிருப்பார். அவர் சொன்ன கதையில் ஒன்று. ஒருவர் தனது நண்பரை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தார். உணவு உண்டபின் தனது பிரமாண்டமான படிப்பறையைப் பெருமையாகக் காண்பித்தாராம். அங்கு பல அரிய நூல்கள் நிரம்பியிருந்தன. நண்பர் நூல்களைப் பிரமிப்புடன் பார்த்துக்கொண்டு வந்தபோது அவர் கனகாலமாகத் தேடிக்கொண்டிருந்த புத்தகம் ஒன்றைக் கண்டு, அதை இரவலாக படிக்க எடுத்துப்போகலாமா என்று கேட்டாராம். ஆனால் மற்றவரோ, அதை மறுத்து படிப்பறையில் இருக்கும் நூல்கள் எல்லாம் இரவல் வாங்கிச் சேர்த்தவையே என்றும் அதனால் அவர் நூல்கள் எதையும் பிறருக்கு இரவல் கொடுப்பதில்லை என்றும் சொன்னாராம்! நானும் எனது புத்தகங்களை (இரவல் வாங்கிச் சேர்த்தவை அல்ல, பணம்கொடுத்து வாங்கியவை!) பிறருக்கு இரவலாகக் கொடுக்க விரும்புவதில்லை. தவிர்க்கமுடியாமல் கொடுக்கவேண்டி வந்தாலும் ஒரு புத்தகம் மட்டும் கொடுப்பேன். அது திரும்ப வந்தபின்னர்தான் அடுத்ததைக் கொடுப்பேன்😇 குறிப்பு: தமிழாக்கம் செய்த எழுத்துக்கினியவனின் பெயர் அசோகன். அவரும் நானும் ஒரு காலத்தில் Nokia Research Center (NRC) இல் வேலை செய்திருக்கின்றோம். ஆனால் வேறு வேறு “ஆராய்ச்சிகள்” என்பதால் அவரை நான் நேரே சந்தித்திருக்கவில்லை. எனினும் தமிழருக்கு ஏன் தனிப்பெயர் என்ற அவருடைய குறிப்பை Nokia Bulletin Board இல் படித்திருந்தேன். https://asokan.org/asokan/name.php நானும் யாழில் எமது பெயர் வைக்கும்முறைகளைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன்!
மதமாற்றம் - அழகு சுப்பிரமணியம் தமிழில்: எழுத்துக்கினியவன் 1964இல் வெளியிடப் பட்ட “The Big Girl” என்ற அழகு சுப்பிரமணியம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “The Convert” என்ற கதையின் தமிழாக்கம். தமிழாக்கியவர்: எழுத்துக்கினியவன் (https://ezi.asokan.org/about/). இடது உள்ளங்கையில் ஏந்தியிருந்த சோற்றுக் கோப்பையில் இருந்து எடுத்த கவளங்களை வலது கையால் வாய்க்குள் போட்டபடி கொல்லப் பட்டறையில் இருந்த அந்தக் கருத்த இளைஞன் தனது சகோதரன் ரங்குவைப் பார்த்துக் கோபத்துடன் முறைத்து “நீ வேதக்காரை விட்டு விலகு,” என்றான். இரண்டு சகோதரர்களும் தங்கள் மைத்துனர்களுடன், பட்டறையில் எங்கெங்கே காலியாக இடமிருந்ததோ அங்கே அருகருகே இருந்தபடி அந்த நாளின் அவர்களது முதலாவது உணவை அருந்திக் கொண்டிருந்தார்கள். “வேதக்காரரை விட்டு விலகடா,” என்று மைத்துனர்களும் ஆமோதித்தார்கள். ரங்கு பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு கணம் அவர்களைப் பார்த்து விட்டுத் தன் பார்வையைத் தொலை தூரத்தில் பதிய விட்டான். அவனது உணர்ச்சிகள் கவலையில் ஆரம்பித்து ஒருவகையான ஒன்றிலும் ஒட்டாத விலகலான மனப்பாங்குக்கு உருமாறின. இந்த வகையான ஆலோசனை அவனுக்கு ஒன்றும் புதிதல்ல. அவனது உறவினர்களிடமிருந்து பல தடவைகள் ரங்குவை எதிர் கொண்டிருந்ததுதான். அந்த வேளைகளிலெல்லாம் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. கிறீத்தவ மிஷன் பாடசாலையில் படித்து முடிந்த கையோடு தன் சொந்தக் காரணங்களுக்காக ரங்கு மதமாற்றப்பட்டிருந்தான். அவனது சகோதரர்களை எல்லாம் பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பும் வசதி அவன் தந்தைக்கு ஒருபோதுமே இருந்ததில்லை. ஆனால் ஒரு நாள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே இருந்த ஒரு சந்தைத் திடலில் நடந்த திறந்த வெளிக் கூட்டத்துக்குப் பிறகு கந்தல் உடையிலிருந்த ஒரு சிறு பையன் கேட்ட சாதுரியமான கேள்விகளால் பிரமித்துப் போன மிஷன் பாடசாலை முகாமையாளர், அந்தப் பையனுக்குப் புலமைப் பரிசிலோடு பாடசாலை அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அந்தப் பையன்தான் ரங்கு. அந்தச் செய்தியைக் கேட்டதும் அவனுடைய பெற்றோருக்கு நல்ல மகிழ்ச்சி. இந்தக் கொல்லர் பட்டறையிலே மாய்வதை விட அவன் நன்றாக ஆங்கிலம் கற்றால் எப்போதாவது ஒரு நாள் ஏதாவது ஒரு அலுவலகத்தில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். விரைவிலேயே ரங்குவுக்குப் படிப்பில் ஆர்வம் பிறந்ததும் வேகமாக முன்னேறினான். பள்ளிக்கூடத்தில் சேர்வதற்கு முதல் ரங்கு கொல்லர் பட்டறையில் எடுபிடி வேலைகள் செய்தபடியால் அவனது உடல் திடகாத்திரமாகத் திரண்டு வளர்ந்திருந்தது. அது பாடசாலை விளையாட்டு மைதானத்தில் அவனுக்கு மிகவும் உதவியது. இந்தப் புதிய மாணவன் வெகு விரைவில் வகுப்பாசிரியருக்கும் விளையாட்டு ஆசிரியருக்கும் மிகவும் பிடித்தமான மாணவன் ஆகி விட்டான். வகுப்பாசிரியர் தானே மதமாற்றம் செய்து கொண்டவர். அவரை மதமாற்றம் செய்தவர்களை விடத் தீவிரமான மதப்பற்று கொண்டவராகத் திகழ்ந்தார். ரங்குவில் ஒரு வருங்கால மதமாற்ற வாய்ப்பை இனங்கண்டு கொண்டார். பாடசாலையில் முதலாவது பாடம், “சமய அறிவு.” மாணவர்களுக்கு முதலில் பழைய ஏற்பாட்டு விவிலிய நூலும் அதற்குப் பிறகு சுவிசேஷங்களும் புகட்டப்பட்டன. ரங்கு இவற்றை ஆர்வத்தோடும் விருப்பத்தோடும் கற்றுக் கொண்டான். இதைக் கண்டு மகிழ்ந்த மறைப்பணியாளர்கள் ரங்குவுக்குச் சிறுவருக்கேற்ற மொழியில் எழுதப்பட்ட அழகான மதக் கதைப் புத்தகங்களை அன்போடு கொடுத்தார்கள். பலவண்ணச் சால்வைகளையும் வெள்ளை வேட்டிகளையும் அன்பளித்தார்கள். ரங்கு தன் ஆசிரியரின் வழிகாட்டலில் செழித்து வளர்ந்தான். எட்டாம் வகுப்பை அடைந்தபோது அவனுக்குப் பொதுவான பாடங்களின் அடிப்படை அறிவு நன்றாக இருந்தது மட்டுமல்லாது, விவிலிய நூலில் உள்ள வார்த்தைகளை மனப்பாடமாக்கி ஓதுவதற்கும் முடிந்தது. பாடசாலையின் வருடாந்தரப் பரிசளிப்பு விழாவில் சமய அறிவுக்கான பரிசு அவனுக்கே கிடைத்தது. கிறீத்தவனல்லாத ஒரு மாணவன் இந்தப் பரிசை வென்றது குறிப்பிடத்தக்கது என்று பாராட்டிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களைத் தங்கள் வேலையைச் சீராகச் செய்ததற்கும் ரங்குவை அவன் கெட்டித்தனத்திற்கும் மெச்சினார். தனக்கிருந்த இந்த அறிவைப் பற்றி ரங்குவுக்கு மிகுந்த பெருமை. தனது அறிவைத் தன் பெற்றோருக்கும் முக்கியமாகச் சகோதரர், மைத்துனர்களுக்கும் காட்டிக் கொள்ள விரும்பினான். அவர்களுக்குப் படிப்பறிவு இல்லாததால் அவர்களோடு கணிதத்தைப் பற்றியோ சரித்திரத்தைப் பற்றியோ அளவளாவ முடியாது. ஆகவே, படிப்பறிவு இல்லாதவர்களுக்குக் கூட கதை கேட்பது சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்து அவர்களுக்கு விவிலியக் கதைகளைச் சொல்ல விழைந்தான். ஆனால் அந்த நடவடிக்கை அவனது உறவினர்களுக்குச் சந்தேகத்தையே கிளப்பியது. தங்களுடைய அன்பு மகன் பிழையான வழியில் போய் ஒரு நாள் கிறீத்தவ மதத்துக்கு மாறியே விடுவான் என்று பயந்தார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் அவன் ஓரளவு படித்தால் ஏதாவது மதிப்புக்குரிய வேலை கிடைக்கும் என்பது மட்டும்தான். அவனது ஆசிரியர்களின் மதத்தை உதாசீனம் செய்யும்படி உறவினர்கள் அடிக்கடி அவனுக்கு ஆலோசனை சொன்னார்கள். இப்போது ஒரு இடியாப்பச் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டு விட்டான் எனப் பயந்தார்கள். ஒரு நல்ல மாதச் சம்பளம் தரும் வேலையில் உள்ள கிறீத்தவனாக இருப்பதை விடப் படியாதவனாகக் கொல்லர் பட்டறையில் மாய்வது நன்று என்று நினைத்தார்கள். ஒரு நாள் தான் பாதிரிமாருடன் தேவாலயத்துக்குச் சென்றதாக ரங்கு சொன்ன போது அவனது அப்பா “விசுவாசமில்லாத முட்டாள்!” என்று ஏசினார். “மதம் மாறிப் போடாதையடா,” என்று அவனது அம்மா கெஞ்சினார். “இந்தப் பறங்கிப் பாதிரியளை நம்பாத. அவங்கள் உன்னை எங்களிட்டையிருந்து பிரிச்சுக் கொண்டு போகப் பாக்கினம். ஐயோ! நீ என்னை விட்டுட்டுப் போனா நான் என்ன செய்வனோ?” என்று புலம்பினார். “நான் ஒரு நாளுமே உங்களை விட்டுட்டுப் போக மாட்டன், அம்மா,” என்றான் ரங்கு, “நான் மதம் மாறினாலும் எப்பவுமே உங்கடை சொந்த மகனாத் தானே இருப்பன்.” “ஐயோ, மோனை, மதம் மாறப் போறன் எண்டு சொல்லாத. உன்ர சொந்த பந்தங்களின்ர மதத்தை, முக்கியமா உன்ர அம்மான்ர மதத்தை விட்டு மாறுவியா? ரங்கு, என்ர மூத்த பிள்ளை, நான் சாகேக்க எனக்கு என்ன நடக்கப் போகுதோ?” “என்னம்மா சொல்லுறீங்கள்?” “ஆர் எனக்குக் கொள்ளி வைக்கப் போகினம், பிள்ளை? கொள்ளி வைக்கிறது மூத்த மகனின்ர கடமை. இந்தத் தொந்தி வச்ச ஐயர்மார் ஒரு வேதக் காரனை அந்தப் புனித வேலையைச் செய்ய ஒரு நாளுமே விட மாட்டாங்கள்.” “அம்மா! சாவைப் பற்றிக் கதையாதையணை. நீ என்னைப் பயப்பிடுத்துறாய்.” “நீ மதம் மாற மாட்டன் எண்டு சத்தியம் பண்ணித் தந்தால் நான் உன்னைப் பயப்பிடுத்தேல்லை.” அம்மாவின் சொற்கள் ரங்குவின் மனத்தைத் தொட்டன. அவன் ஆணிவைத்து அடித்தாற் போல இருந்த இடத்திலேயே அசைய முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றான். “சரி ரங்கு,” என்று தொடர்ந்தாள் அம்மா, “நீ போய்ப் படி. அடுத்த கிழமை உனக்குப் பள்ளிக்கூடச் சோதினை இருக்கு.” ரங்கு பாடசாலைப் பரீட்சையில் வெற்றிகரமாகச் சித்தியடைந்தான். எட்டாம் வகுப்பு என்பதால் அவனுக்கு ஆங்கிலப் பள்ளி விடுகைச் சான்றிதழ் கிடைத்தது. ஒரு அடித்தர வேலை எடுக்க அது போதுமானது. அவனது இலட்சியங்கள் குறைவாகவே இருந்ததால் அவன் மேற்கொண்டு படிப்பதை விரும்பவில்லை. அந்த நாளிலிருந்து அவன் பழைய மாணவனாகவும் கீழ்மட்ட ஊழியர்களின் நண்பனாகவும் பாடசாலைக்குப் போய்வந்தான். இடைக்கிடை யாராவது ஆரம்பப் பாடசாலை ஆசிரியர் பள்ளிக்கூடத்துக்கு வர முடியவில்லை என்றால் அவர்களது வகுப்புகளுக்குப் போய் பிரதி ஆசிரியராகவும் பள்ளிக்கூட நிர்வாக வேலைகளுக்கு உதவியாளனாகவும் பணி செய்தான். கரடுமுரனான பாறை போல இருந்த படிப்பறிவில்லாத ஒரு கொல்லனைத் தாங்கள் செம்மை செய்து ஒரு சீரான சிற்பம் போலச் செதுக்கியதையிட்டுப் பள்ளிக்கூட நிர்வாகிகள் மிகவும் பெருமிதம் அடைந்தார்கள். பள்ளிக்கூடத்தின் எழுதுவினைஞர் குழாமில் ஒரு வெற்றிடம் வந்தபோது ரங்குவை உதவி எழுதுவினைஞனாக நியமனம் செய்தார்கள். ரங்குவுக்கோ நிரந்தரமான ஆசிரியனாக வருவதுதான் இலக்கு. ரங்கு அதுவரைச் செய்தது உண்மையாகவே ஒரு அற்புதமான சாதனை. அவனது நியமனத்துக்கு முன் ஒரு கொல்லன் எழுதுவினைஞனாக வருவான் என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத எட்டாக் கனியாக இருந்தது. படிப்பறிவில்லாதவர்கள் அவனை ஒரு மரியாதையுடன் பார்த்தார்கள். ஆனால் அவன் ஒரு ஆசிரியனாகினால் அதற்குக் கிடைக்கக்கூடிய மரியாதை இன்னும் பல மடங்கு அதிகம். அவர்கள் அறிவைத் தலைதாழ்த்தி வணங்கி மதிப்பவர்கள். அவன் ஆசிரியனானால் மரியாதையுடன், ‘பண்டிதர்’ என்று அழைப்பார்கள். ஒருநாள் ரங்கு மதம் மாறுவது என்ற முடிவைச் சடுதியாக எடுத்தான். உடனே அவனுக்கு ஞானஸ்நானம் செய்து தேவாலயத்தின் ஒரு உறுப்பினராக ஏற்றுக் கொண்டார்கள். அவனது அப்பாவின் கோபம் அனல் தெறித்துப் பறந்தது. அவனது அம்மா கவலையால் மனமுடைந்து போனாள். அவனது எதிரிகள் அவனை, “பாதிரிகளின் அடிமை,” என்று இகழ்ந்தார்கள். அவன் ஏன் மதம் மாறினான் என்பதற்குப் பலதும் பத்துமாகப் பல்வேறு கதைகள் உலாவின. “அவனுக்குப் பதவி உயர்வு கிடைக்க வேணுமெண்ட பேராசை. ஆனவடியா பாதிரிகளுக்கு வால் பிடிக்கப் பாக்கிறான். மதம் மாறாமலே பதவி உயர்வு எடுத்திருக்கலாம். அல்லது ஏதாவது ஒரு அலுவலக வேலை எடுத்திருக்கலாம். உதவாக்கரைப் பயல்!” என்று சிலர் அபாண்டமாகப் பழி சுமத்தினார்கள். “அவன் தாழ்த்தப்பட்ட சாதியில பிறந்தவன். அப்படியானவன் எப்பவும் தன்ர குணத்தைக் காட்டுவான். அவன் ஒரு கொல்லன் தானே. அவனுக்கு அடிமையா இருக்கிறதுதான் விருப்பம்,” என்றனர் வேறு சிலர். “அவன் நேர்மையானவன். உண்மையான கடவுளைச் சேர வேணுமெண்ட உந்துதல் அவனுக்கு வந்திருக்கு,” என்றனர் பள்ளிக்கூடத்திலுள்ள அவனது சக ஊழியர்கள். அவனது எதிரிகள் பொறாமையால் வாடினர். அவனையும் அவனது வெற்றிகளையும் வெறுத்தனர். பள்ளிக்கூடத்தில் அவனது பதவியைப் பற்றியோ அவனுக்குள்ள மரியாதையைப் பற்றியோ கேள்விப்படும் போதெல்லாம் கத்தியால் குத்தினது போல அவர்களின் பொறாமை அவர்களை வாட்டி வருத்தியது. ஒரு மாலை நேரம் அவர்கள் எல்லோரும் எப்படி ரங்குவை வீழ்த்துவது என்று சதித்திட்டம் போடுவதற்காக ஒன்று கூடினார்கள். ரங்குவை அறவே வெறுக்கும் ஒருவன் முதலில் பேசினான். ரங்கு ஒரு நேர்மையற்ற நயவஞ்சகன் என்றும் அவன் உண்மையிலேயே இந்துவாக இன்னும் இருந்து கொண்டாலும் கிறீத்தவன் போலத் தன் எசமானர்களுக்குக் காட்டிக் கொள்கிறான் என்றும் ஒரு முறைப்பாட்டைப் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கலாம் என்ற ஆலோசனையை முன்வைத்தான். இதற்கு அத்தாட்சியாக ரங்குவின் வாழ்க்கையின் பல சம்பவங்களை அவர்கள் இலகுவில் முன் வைக்கலாம். “இதை வலு கவனமாச் செய்ய வேணும்,” என்று இன்னொருவன் எச்சரித்தான், “இப்பிடி முறையீடு அனுப்பினால் அதால பெரிய விளைவொண்டும் வராமல் விடலாம். ரங்கு மதம் மாற முதலே அவனைக் கிளாக்கரா நியமிச்சவை எண்டதை மறந்திடாதேங்கோ. நாங்க நினைக்கிற மாதிரி அவன் மதம் மாறினது அவ்வளவு பெரிய விஷயமில்லாமல் இருக்கலாம். யோசிச்சுப் பாருங்கோ தம்பிமார், எங்கட சமயத்தவரைப் பற்றி யோசிச்சுப் பாருங்கோ. பள்ளிக்கூடத்தில அவையள் கொஞ்சப் பேர் தான் இருந்தாலும் நல்ல பதவியளில இருக்கினம். ஆனபடியா அந்தரப் பட்டு மொக்குத் தனமா ஒண்டும் செய்யாமல் கவனமா யோசிச்சுச் செய்வம்.” “நீங்கள் ரெண்டு பேரும் சொல்லுறது சரிதான்,” என்றான் இன்னுமொருவன், “இப்ப ரங்கு வேதக்காரன் ஆகிவிட்ட படியா, ‘அவன் உண்மையான வேதக்காரன் இல்லை, அவன் ஒரு கள்ளன், நயவஞ்சகன்,’ எண்டு சொல்லி ஒரு முறைப்பாடு அனுப்பினால், அது கட்டாயம் வேலை செய்யும். நயவஞ்சகம், நடிப்பு, பொய், இதுகளெல்லாம் வேதக்காரருக்குக் கொஞ்சமும் பிடியாத விஷயங்கள் எண்டதை மறந்துடாதேங்கோ. முறைப்பாடு கட்டாயம் வேலை செய்யும். அந்தக் கேடுகெட்ட படவான்ர வேலை பறிபோகும் எண்டதுக்கு நான் என்ன பந்தயமும் வைக்கத் தயார். சிவசிவா! அவன்ர வேலை பறிபோகும்!” “சரியாச் சொன்னீங்கள் அண்ணை, சரியாச் சொன்னீங்கள்,” என்று இரண்டாவதாகப் பேசியவனைத் தவிர மற்ற எல்லோரும் ஒருமித்த குரலில் ஆமோதித்தார்கள். முறையீடு அனுப்புவது என்று தீர்மானித்தார்கள். முறையீட்டுக் கடிதத்தை எழுதுவதற்காக அடுத்த முறை கூடுவதற்கு நாளும் குறித்தார்கள். அவர்கள் கலையத் தொடங்கும் போது ஒருவன், “முறைப்பாட்டுக் கடிதத்தில கையெழுத்து வைக்கக் கூடாது. மொட்டைக் கடிதமாத்தான் அனுப்ப வேணும்,” என்றான். “ஓமோம்!” என்று மற்றவர்கள் ஆமோதித்தார்கள். அவர்களின் கண்களில் ஏதோ ஒரு இனங்கண்டு கொள்ள முடியாத பீதி படர்ந்தது. பாடசாலை அதிபர் முதலில் அந்த முறையீட்டுக் கடிதத்தை உதாசீனம் செய்தார். இரண்டு காரணங்களுக்காக. முதலாவது அது ஒரு மொட்டைக் கடிதம். அவர் எப்போதுமே மொட்டைக் கடிதங்களைச் சந்தேகக் கண்களுடன் பார்ப்பவர். இரண்டாவது, அந்தக் கடிதத்திலிருந்த குற்றச்சாட்டுகள் நம்பத்தகுந்தவையாக இருக்கவில்லை. யார் மேலும் அப்படியான குற்றச்சாட்டுகள் திணிக்கப் படலாம். அவற்றை நிரூபித்துத் தண்டனை வழங்குவது முடியாத காரியம். இவையெல்லாம் தனித்தனி ஆட்களின் நேர்மைக்கே என்று விடப்பட வேண்டிய விடயங்கள். ஆனால் மொட்டைக்கடிதங்கள் இடைவிடாது வந்த வண்ணமே இருந்தன. ஒரு நாள் அலுப்புத் தாங்க முடியாமல் உதவி எழுதுவினைஞனைத் தன்னைச் சந்திக்க வருமாறு பணித்தார். ரங்கு எல்லாக் குற்றச்சாட்டுகளையும் மறுத்தான். அடுத்த ஞாயிறு தேவாலயத்தில் திருப்பலி பூசை முடிந்ததும் சபையிலிருந்த ஒரு தேவாலய உறுப்பினர் யாரையாவது பிரார்த்தனை செய்யும்படி பாதிரியார் வரவழைத்த போது ரங்குவே தன்னார்வத்துடன் எழும்பிப் போய்ப் பிரார்த்தனை செய்தான். கொஞ்ச நாள் பள்ளிக்கூடத்தில் எல்லாம் சுமுகமாக நடந்தது. ரங்குவின் எதிரிகள் இன்னுமொரு முறை அவனைக் குற்றம் சாட்ட முனைந்தார்கள். அவன் அடிக்கடி ‘சிவசிவா’ என்று சொல்கிறான் என்று முறையிட்டார்கள். “அவன் உதடுகளில் எப்பொழுதும் இருப்பது சிவபெருமானின் பெயர்தான், யேசுநாதரின் பெயரல்ல.” மீண்டும் அதிபரின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதங்கள் சரமாரியாகப் பொழியத் தொடங்கின. இந்தப் பிரச்சனை ஏதோ விதமாக மறைந்து போய் விட்டது என்று நினைத்திருந்த அதிபருக்கு இது மிகவும் எரிச்சல் ஊட்டியது. அவர் மொட்டைக் கடிதங்களைக் கவனமாகப் படிக்காமல் மேலோட்டமாகத் தான் பார்த்தார். பாடசாலைத் தலைவர் என்பதால் அவருக்கு இதற்கெல்லாம் நேரம் கிடையாது. ஒரு சனிக்கிழமை ஒரு மொட்டைக் கடிதம் அவரது கையைப் போய்ச் சேர்ந்தது. சனிக்கிழமைகள் தமிழ் இலக்கியத்துக்காக என்று அவர் ஒதுக்கிய நாட்கள். அந்த நாட்களில் அவர் திருக்குறளைத்தான் படிக்க விரும்பினார், மொட்டைக் கடிதம் எழுதுபவர்களின் கிறுக்கலான கையெழுத்துகளையல்ல! அவர் உதவி அதிபரை அழைத்து அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். உதவி அதிபவர் இந்த நாட்டுக்கு வந்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது. ரங்குவின் மேற் சுமத்தப் பட்ட குற்றச்சாட்டுகள் பாரதூரமானவை என்றுதான் அவருக்குப் பட்டது. இதை உடனேயே விசாரித்தறிய வேண்டும் என்று தீர்மானித்தார். அடுத்த நாள் அவர் ரங்குவின் வீட்டுக்குப் போனார். “வணக்கம், சேர்,” என்றான் ரங்கு. “வணக்கம், ரங்கு.” “கொஞ்சம் நிண்டு கொள்ளுங்கோ சேர், நான் ஒரு கதிரை கொண்டு வாறன்,” என்ற ரங்கு தன் குடிசைக்குள் போய் ஒரு நாற்காலியைக் கொண்டு வருவதற்காகத் திரும்பினான். “கதிரையை விடு. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை. இங்க ஒரு முக்கியமான விஷயம் இருக்குது,” என்றபடி தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை உப அதிபர் எடுத்து அதை ரங்குவின் கையில் கொடுத்து விட்டு, “இது உண்மையா?” என்று கேட்டார். ரங்கு கலக்கத்துடன் கடிதத்தை வாங்கிப் படிக்கும் போது அவனது உடல் நடுங்கத் தொடங்கியது. “இது முழுப் பொய் சேர்! முழுப் பொய்!” “பொய் எண்டா ஏன் இப்பிடி எழுதிறாங்கள்?” என்று உறுமினார் உப அதிபர். “அவங்களுக்கு என்னில பொறாமை சேர். நான் இங்கை நல்ல வேலையில இருக்கிறதால என்னை வெறுக்கிறாங்கள். எனக்கு வேலை தந்ததுக்காக அதிபர் ஐயாவிலையும் அவங்களுக்குக் கோவம். சேர், தயவு செய்து அவங்களை நம்பாதேங்கோ. அவங்கள் நான் கொல்லன் பட்டறையில மட்டும்தான் வேலை செய்யலாம் எண்டு நினைக்கிறாங்கள்,” ரங்கு கொஞ்சம் மௌனமாக இருந்து விட்டுத் திரும்பவும் அழுதான். “இவங்கள் கெட்ட மனசுள்ள மனிசர், சேர். இந்த ராஸ்கல்களை ஒரு நாளும் நம்பாதேங்கோ.” கையை முட்டியாக்கிக் குலுக்கியபடி, “எனக்கு மட்டும் ஒரு வாய்ப்புக் கிடைச்சா… அவங்களுக்கு நல்ல பாடம் படிப்பிச்சுத் தருவன்,” என்றான். பிறகு கைகள் இரண்டையும் மேலே தூக்கி, “சிவசிவா, நான் எப்பிடி யேசுநாதரை மறக்க முடியும்!” என்றான். இதைக் கேட்டதும் உப அதிபருக்குத் தூக்கி வாரிப் போட்டது. அவரது முகம் உடனே நெருப்பாகச் சிவந்தது. ரங்கு மேற்கொண்டும் விளக்க எத்தனிக்க, “இவ்வளவும் போதும். நான் கேக்க வேண்டியதெல்லாம் கேட்டாச்சு.” என்று சொல்லிவிட்டுக் கொல்லன் பட்டறையை விட்டு வெளியேறி நடந்தார். ரங்கு உப அதிபருக்குப் பின்னால் ஓடிப் போய் அவரது கையைப் பற்றி இரந்தான், “கோவிக்காதேங்கோ சேர். நான் என்னவோ பிழையாச் சொல்லீட்டனா? திருப்பிப் பட்டறைக்கு வாங்கோ, நான் எல்லாம் விளங்கப் படுத்திறன்.” “எனக்கு உன்னட்டை இருந்து இதுக்கு மேல எதையும் கேக்கிற தேவை இல்லை,” என்று உப அதிபர் கத்தினார். பிறகு தன் கையைப் பலவந்தமாக விடுவித்துக் கொண்டு நடந்து போய் விட்டார். ரங்கு குழப்பத்துடன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். பிறகு, கைகளைப் பிசைந்தபடி, “சிவசிவா, நான் அழிஞ்சன்!” என்ற சொல்லிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான். உப அதிபர் நேரடியாக அதிபரிடம் சென்று என்ன நடந்தது என்பதை விவரித்தார். ஆனால் அதிபர் ரங்குவின் நடத்தையைப் பற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அது உப அதிபரை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. ஏன் அதிபர் ஏதோ பெரிய நகைச்சுவை கேட்ட மாதிரி இப்படி வாய்விட்டுச் சிரித்தார் என்பது அவருக்குப் புரியவேயில்லை. “உமக்கு இந்த இடம் புதுசு,” என்றார் அதிபர், “நான் சிரிச்சதைத் தயவு செய்து கண்டு கொள்ள வேண்டாம். உமக்குக் காலம் போகப் போக ஏன் சிரிச்சன் எண்டு விளங்கும். இப்ப உமக்குக் களைப்பா இருக்கும். போய் ஓய்வு எடும்.” ரங்கு அன்றிரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து, அடுத்த நாள் விடிகாலையிலேயே வேலைக்குப் போய்க் கடுமையாக வேலை செய்தான். தன் வருங்காலத்தைப் பற்றி அவனுக்குப் பெருத்த யோசனையாக இருந்தது. ஏதோ தவறு செய்து விட்டது போன்ற உணர்வு அவனுக்கு மங்கலாக இருந்தாலும், அது என்ன தவறு என்பதை அவனால் இனங்கண்டு கொள்ளவே முடியவில்லை. அதிபரும் உப அதிபரும் வழமை போல் சரியாக நேரத்துக்கு வேலைக்கு வந்தார்கள். ரங்குவின் கை நடுங்கத் தொடங்க அவன் கையெழுத்துக் கோணிப் போனது. அதிபர் தனது இருக்கையிலிருந்தபடி இதைக் கவனித்தார். பிறகு அவர் எழும்பி உதவி எழுதுவினைஞன் இருந்த இடத்துக்குப் போய் ஒரு கடிதத்தை அவனிடம் கையளித்தார். ரங்கு அதிர்ந்து போனான். இப்படி இதற்கு முன் ஒரு போதும் நடந்ததில்லை. நடுங்கும் கைகளால் கடிதத்தைத் திறந்து படித்தான். கண்களை ஒரு முறை மூடித் திறந்து விட்டு, இன்னொரு முறை கடிதத்தைத் படித்தான். அது உண்மைதான்! அவன் கடிதத்தில் படித்தது உண்மைதான். அவன் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஆசிரியராகப் பதவி உயர்த்தப் பட்டிருக்கிறான். அவன் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை. “ஓ! இப்பேர்ப்பட்ட நல்ல சேதி,” என்றான் அவன், “நன்றி சேர், மிக்க நன்றி.” கைகளைத் தூக்கிக் கடிதத்தைத் தலைக்கு மேல் உயர்த்தி, உரத்த குரலில், “சிவசிவா. நான் ஒருநாளுமே யேசுநாதரை மறக்க மாட்டேன்!” என்று கத்தினான். உப அதிபர் தன் காதுகளை நம்ப முடியாமல் அவனை வெறித்துப் பார்த்தார். பிறகு அதிபரைத் திரும்பிப் பார்த்தார். அதிபர் தன் மகிழ்ச்சியை மறைப்பதற்காகத் தலையைத் திருப்பிக் கொண்டார். அழகு சுப்பிரமணியம் — ஒரு வாழ்க்கைக் குறிப்பு பிரேமிளா துரைரட்ணம் (தமிழாக்கம்: எழுத்துக்கினியவன்) 1947ஆம் ஆண்டு 37 வயதில் இலங்கை திரும்பிய போது எடுத்த படம். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட அழகு சுப்பிரமணியம் (1910-1971) வழக்கறிஞராகவும் (barrister-at-law), சிறுகதை, வானொலி நாடக எழுத்தாளராகவும், நாடகக் கதாசிரியராகவும் திகழ்ந்தார். அவரது தந்தையார் பிரித்தானிய காலனித்துவ இலங்கையில் நீதிபதியாகக் கடமையாற்றினார். அவரது பாட்டனார் ஒரு இலக்கிய கர்த்தா. இந்த இரண்டு தொழில்முறைகளையும் வெற்றிகரமாக ஒருமிக்க வைத்த அழகு சுப்பிரமணியம், தலை சிறந்த வழக்கறிஞராகவும் எழுத்தாளராகவும் விளங்கினார். 1933 ஆம் ஆண்டில் 23 வயதிலேயே இங்கிலாந்தின் லிங்கன் நீதிமன்ற அகத்தின் கௌரவக் கழகத்தில் (Honourable Society of Lincoln’s Inn) அனுமதிக்கப்பட்டார். 1941இல் இங்கிலாந்தில் வழக்கறிஞராகத் தொழில் புரியும் அனுமதி பெற்றார் (called to the bar). இலண்டன் மாநகரின் ப்ளூம்ஸ்பெரி இலக்கிய வட்டங்களில் ஏற்கெனவே நன்றாக அறியப்பட்டிருந்தவர், இலண்டன் எழுத்தாளர்களினதும் கலைஞர்களினதும் ஒன்றுகூடல்களில் ஒரு பெரிய ஆளுமையாக வரவேற்கப்பட்டார். Indian Writing என்ற இலக்கியச் சஞ்சிகையை நிறுவிய பத்திரிகாசிரியர்களில் ஒருவராக அழகு சுப்பிரமணியம் கடமையாற்றினார். இந்தச் சஞ்சிகையில் இரவீந்திரநாத் தாகூர், ஜவஹர்லால் நேரு போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளியிடப்பட்டன. விரைவிலேயே இந்தச் சஞ்சிகை இலண்டனில் இருந்த தெற்காசியாவைச் சேர்ந்த தீவிரமான காலனித்துவ எதிர்ப்புவாதிகளின் இயங்கு தளமாக உருவெடுத்தது. இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இலண்டன் கிளையின் செயலாளர் என்ற முறையில் அழகு சுப்பிரமணியம் இலண்டனைச் சேர்ந்த உள்ளாட்சி இல்லம் (Swaraj House) என்ற காலனித்துவ எதிர்ப்பு அமைப்பில் ஈடுபட்டிருந்தார். 1935ஆம் ஆண்டின் பனிக்கால மாதங்களில் Bibliophile என்ற புத்தகக் கடையைத் திறந்த சசதர் சின்ஹாவின் உதவியாளராகவும் பணியாற்றினார். 1947இல், இலங்கை சுதந்திரமடைவதற்குச் சற்று முன்னர், இலங்கை திரும்பினார். அழகு சுப்பிரமணியத்தின் கதைகள் பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனமான பிபிசியின் உள்ளக மற்றும் வெளிநாட்டுச் சேவைகளில் ஒலிபரப்பப் பட்டன. அவரது ஆக்கங்கள் தமிழுக்கும் மற்றும் ரஷ்ய, போலிய, இடாய்ச்சு (யேர்மன்), கன்னட மொழிகளுக்கும் மொழியாக்கப் பட்டன. நகைச்சுவை ததும்பும் ‘The Mathematician’ என்ற சிறுகதை உலகளாவிய ஆளுமையான அன்டன் செகோவின் எழுத்துக்கு நிகரானது எனக் கருதப்படுகிறது. இதன் இடாய்ச்சு மொழியாக்கம், ஹைடல்பேர்க் நகரத்தில் வெளியிடப்பட்ட Briefly Told: The Finest Stories, in World Literature என்ற தொகுப்பில் உள்ளடக்கப் பட்டது. ‘Lovely Day’ என்ற கதை Best Indian Short Stories என்ற தொகுப்பில் இடம்பெற்றது. இன்றும் இவரது ஆக்கங்கள் இலங்கையில் ஆங்கில இலக்கிய மாணவர்கள் பலரை, பல்கலைக்கழக இளமானி மாணவர்கள் உட்பட, உவக்க வைக்கின்றன. அழகு சுப்பிரமணியத்தின் சில சிறுகதைகள் ராஜ ஸ்ரீகாந்தன் அவர்களால் மொழிபெயர்ககப்பட்டு “நீதிபதியின் மகன்” என்ற தலைப்புள்ள சிறுகதைத் தொகுப்பாக 1999 இலும் 2003 இலும் இரண்டு பதிப்புகளாக வெளிவந்தது. இவை கொழும்பில் இலங்கை தேசிய நூலகத்திலும் இலண்டனில் பிரித்தானிய நூலகத்திலும் உள்ளன. இதுவரை தமிழாக்கப்படாத சிறுகதைகளை எழுத்துக்கினியவனும் அனுஜா பிரகாஷும் தமிழாக்கி வருகிறார்கள். இந்த இதழில் வெளியாகும் “மதமாறி” என்பது அப்படியான ஒரு கதையே. Art : Слава எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-convert-shorts-story/ அழகு சுப்பிரமணியம்- https://thuppahis.com/2022/03/07/the-extraordinary-alagu-subramaniam/
சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி April 1, 2026 11:10 am “சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள தந்தை செல்வா நினைவுச் சதுக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தந்தை செல்வாவின் ஜனன தின நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டியை அடிப்படையாக வைத்தே தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை உருவாக்கினார். அந்தச் சமஷ்டிக் கோட்பாட்டை முன்வைத்த காரணத்தினாலேயே தமிழரசுக் கட்சி ‘சமஷ்டிக் கட்சி’ என்று அழைக்கப்படுகின்றது. அன்று முதல் இன்று வரை அந்த அடிப்படை மாறாமல் தமிழர்களின் உரிமைகளுக்காக இக்கட்சி பயணித்து வருகின்றது. அத்தகைய உன்னத கொள்கையை எமக்குத் தந்த பெருந்தகையை இன்று நாம் உணர்வுபூர்வமாக நினைவு கூருகின்றோம். தந்தை செல்வாவின் பிறந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், தந்தை செல்வா அறக்கட்டளையின் ஏற்பாட்டில் இம்மாதம் 26 ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவு தினமும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நினைவு தின நிகழ்வின் ஓர் அங்கமாக, ‘இலங்கை அரசமைப்பு சீர்திருத்தம் சமஷ்டி வழியில்’ என்ற தலைப்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் விசேட சொற்பொழிவை ஆற்றவுள்ளார். சமஷ்டியை அடிப்படையாகக் கொண்டே தந்தை செல்வா அரசியலை முன்னெடுத்தார் என்பதால், அந்தத் தலைப்பில் உரையாற்றுவது மிகவும் பொருத்தமானதாகும்.” – என்றார். https://oruvan.com/the-tamil-nadu-government-will-never-deviate-from-the-federal-policy-sumanthirans-firm-determination-in-jaffna/
இயக்கச்சி இராணுவ முகாம் முன் பாரிய போராட்டம் புதன், 01 ஏப்ரல் 2026 05:52 AM கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இராணுவ தேவைக்காக 25ஏக்கர் காணியை சுவீகரிக்கும் முயற்சிக்கு எதிராக நாளைய தினம் வியாழக்கிழமை எதிர்ப்பு போராட்டத்திற்கு அனைவரையும் அணி திரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இயக்கச்சி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான 25ஏக்கர் காணியை இராணுவ முகாமினை அமைக்கும் நோக்குடன் நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காணி சுவீகரிப்பின் முதல்கட்டமாக காணியினை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவை திணைக்களத்தால் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்நிலையில் தனியார் காணிகளை இராணுவ தேவைக்கு சுவீகரிப்பதற்கு எதிராக இயக்கச்சி பகுதியில் பாரிய போராட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த போராட்டத்திற்கு வேறுபாடுகள் இன்றி அனைத்து தரப்பினரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. https://jaffnazone.com/news/55972
வட கிழக்கு கடற்பரப்பில் போதைப்பொருளுடன் சந்தேகத்திற்கிடாமான மற்றொரு ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது Published By: Vishnu 01 Apr, 2026 | 05:39 AM (செ. சுபதர்ஷனி) வட கிழக்கு ஆழ்கடலில் போதைப்பொருளுடன் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் ஆழ்கடல் மீன்பிடி படகொன்று கடற்படையினர் முன்னெடுத்திருந்த விசேட நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்டுள்ளது. மேற்படி ஆழ்கடலில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கரைக்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இலங்கைக்குச் சொந்தமான மேற்படி ஆழ்கடல் மீன்பிடி படகு நாட்டின் வட கிழக்கு கடற்பரப்புக்கு அப்பால் ஆழ்கடலில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டது. புலனாய்வுப்பிரிவு வழங்கியிருந்த தகவலுக்கமைய கடற்படையின் நீண்ட தூர கப்பல் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்து ஆழ்கடலில் வைத்து, சந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகை கைது செய்திருந்தனர். கடற்படையினரின் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த மீன்பிடி படகில் பயணித்த சந்தேக நபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஆழ்கடல் மீன்பிடி படகில் போதைப்பொருள் அடங்கியது என சந்தேகிக்கப்படும் பொதிகளும் மீட்கப்பட்டுள்ளன. எவ்வாறெனினும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்துக்கு புதன்கிழமை (1) அழைத்து வரப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/242450
இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டு 01 Apr, 2026 | 11:32 AM முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக தம்மால் கண்காணிக்கப்படுவதாகவும், அத்தகைய அத்துமீறல்களுக்கெதிரா தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடற்படை அதிகாரி பதிலளித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (31) கடற்றொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற, சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டத்திலேயே குறித்த விடயம் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடக்கு கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்திய இழுவைப் படகுகள் கடற்கரையை அண்மித்த பகுதிகளுக்கு வருகைதந்து அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எவ்வித தடையுமின்றி இந்திய இழுவைப்படகுகள் எமது கடற்கரையை அண்மித்து வருகைதந்து கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும்வரையில் கடற்படையினர் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றீர்கள். இவ்வாறு அத்துமீறி எமது கடற்பரப்பிற்குள் நுழைந்து எமது மீனவர்களின் வாழ்வாதார வளங்களை அழிக்கின்ற செயற்பாடுகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுகின்றனர். இது எமக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக அமைகின்றது. அத்து மீறி எமது கடற்பரப்புகளுக்குள் உள்நுழையும் இந்திய இழுவைப் படகுகளை கடற்படையினருக்குத் தெரிவதில்லையா? அல்லது அத்து மீறி எல்லைதாண்டி எமது நாட்டுக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக உள்நுழைபவர்களைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற கடற்படையினரிடமுள்ள கருவிகள் பழுதடைந்துள்ளனவா? அவ்வாறு கடற்படையினரிடமுள்ள கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்திருந்தால் அதனை வெளிப்படுத்துங்கள். நாம் ஜனாதிபதியுடன்பேசி புதிய கண்காணிப்பு கருவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடுக்கை மேற்கொள்வோமென நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இதன்போது கடற்படை அதிகாரி பதிலளிக்கையில், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் தொடர்பாக 24மணித்தியாலங்களும் கடற்படையினர் கண்காணிப்புக்களில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவ்வாறு அத்துமீறி எல்லைதாண்டிவரும் இந்திய இழுவைப்படகுகளை கடற்படையினர் ரேடார் கருவிகள்மூலம் கண்காணித்து அவர்களுக்கெதிராக உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் கடற்படை அதிகரியினால் இதன்போது பதிலளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/242467
கனடாவிலுள்ள அகதிகளுக்கான சட்டம் அமுல் கடடாவில் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு முறையில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரும் C-12 சட்ட மூலம் (Bill C-12) உத்தியோகபூர்வமாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது. கடந்த பல தசாப்தங்களில் மேற்கொள்ளப்பட்ட மிகக் கடுமையான இந்தச் சீர்திருத்தம், அகதித் தஞ்சக் கோரிக்கைகளுக்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதுடன், விசாக்களை இரத்து செய்யும் அதீத அதிகாரத்தை கனேடிய அரசாங்கத்திற்கு வழங்குகிறது. இந்தச் சட்டத்தின்படி, அகதித் தஞ்சம் கோருபவர்களுக்குப் புதிய ஓராண்டு விதி நடைமுறைக்கு வந்துள்ளது. கனடாவிற்குள் நுழைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் தஞ்சம் கோராதவர்கள், இனிமேல் அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாது என அறிவிகப்பட்டுள்ளது. இந்த விதி 2020-ஆம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு (Retroactive) அமல்படுத்தப்படுவதால், சுமார் 19,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ எல்லைச் சாவடிகள் அன்றி, மற்றைய வழிகளில் கனடாவுக்குள் நுழைபவர்கள் 14 நாட்களுக்குள் தஞ்சம் கோர வேண்டும் எனவும் இல்லையெனில் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், Bill C-12 எனப்படும் இந்த புதிய சட்டத்தின் மூலம், பொது நலன் அல்லது தேசியப் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி விசாக்களை இரத்து செய்யும் அல்லது இடைநிறுத்தும் அதிகாரம் ஆனது, மத்திய அரசின் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் இந்தச் சட்டத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. தஞ்சம் கோருபவர்களின் உரிமைகளை இது பறிப்பதாகவும், சித்திரவதைகளை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு மக்களைத் திருப்பி அனுப்பும் அபாயம் இருப்பதாகவும் அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன. நாட்டில் அதிகரித்து வரும் தற்காலிக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை 2026-ஆம் ஆண்டிற்குள் 5 சதவீதமாகக் குறைக்க கனேடிய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தைச் செயற்படுத்தவுள்ள இந்த Bill C-12 சட்டத்திற்கு ஆதரவாக எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் மற்றும் பிளக் கியூபெக்வா (Bloc Québécois) கட்சிகளும் வாக்களித்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/கனடாவிலுள்ள-அகதிகளுக்கான-சட்டம்-அமுல்/50-374882
கிளிநொச்சி மாணவனுக்கு ஆளுநர் பாராட்டு adminApril 1, 2026 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்ற ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோர் மாணவர்களை பாரட்டினர். இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் பிரிவில் தேசிய நிலையில் சாதனை படைத்துள்ள அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் ஆ.கிரிஷாந்த் மற்றும் வர்த்தகப் பிரிவில் க.மதுமினி ஆகியோர் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர். இந்தச் சாதனை மாணவர்களை ஆளுநர் பாராட்டியதுடன், இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்த பெற்றோர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். தமது கடின உழைப்பாலும் சுயமுயற்சியாலும் மாபெரும் வெற்றியீட்டிய மாணவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர், ‘கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து மாணவரொருவர் தேசிய நிலையில் முதலிடம் பெற்றுள்ளமை, மாகாணத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளது’ எனக் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘இந்தச் சாதனை மாணவர்கள் ஏனைய மாணவர்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்குவதோடு, எதிர்காலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டிகளாகவும் திகழ வேண்டும்’ எனவும் வலியுறுத்தினார். அத்துடன், இவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களையும் ஆளுநர் வெகுவாகப் பாராட்டினார். https://globaltamilnews.net/2026/231351/
காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினரை பின் தொடர்ந்து அச்சுறுத்தும் நபர்கள் adminApril 1, 2026 அல்லைப்பிட்டியில் காவல்துறையினாின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் நிலவுவதாக குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினா் குடும்பத்தினரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். அதேவேளை குற்ற சாட்டுக்கு உள்ளாகியுள்ள காவல்துறைப் பிரிவினரே அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெவ்ரவரி மாதம் 10ஆம் திகதி காவல்துறையினரின் கட்டளையை மீறி பயணித்த வாகனம் மீது காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அல்ஃபினோ அருள்பாய்ஸ் (வயது 17) எனும் சிறுவன் உயிரிழந்திருந்தாா். குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் , தமக்கு அச்சுறுத்தல்கள் காணப்படுவதாகவும் தம்மை மோட்டார் சைக்கிள்களில் இனம் தெரியாத நபர்கள் பின் தொடர்பாகவும் தமது சட்டத்தரணி ஊடாக நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது மன்றில் தெரிவித்திருந்தனர். அதேவேளை கடந்த 10ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் தம்மை அச்சுறுத்தும் வகையில் இருவர் பின் தொடர்ந்ததாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர் .முறைப்பாட்டின் போது , தம்மை பின் தொடர்பவர்கள் குறித்த ஒளிப்படம் மற்றும் காணொளி ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். குறித்த முறைப்பாட்டை அடுத்து, அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் யாழ்.மாவட்ட காவல்துறை அத்தியட்சகருக்கு பணித்துள்ளார். அது தொடர்பிலான விசாரணைக்காக , முறைப்பாட்டாளரான உயிரிழந்த சிறுவனின் தாயாரை இன்றைய தினம் புதன்கிழமை ஊர்காவற்துறை பிரிவுக்கான உதவி காவல்துறை ர் அத்தியட்சகர் வாக்கு மூலம் பெறுவதற்காக அழைத்துள்ளார். அதேவேளை குற்றம் சாட்டப்படும் காவல்துறைப் பிரிவினரே குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது தொடர்பில் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அச்சுறுத்தல் தொடர்பில் யாழ்ப்பாணத்தின் வேறு பிராந்திய காவல்துறையினரோ , மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரே விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. அதேவேளை சிறுவன் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றம் சாட்டுக்கு உள்ளாகியுள்ள ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொள்வதற்கும் , யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவினரின் விசாரணைகளில் திருப்தி இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் நலன்சார்ந்த மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்ததை அடுத்து , துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு துறையினருக்கு மாற்ற நீதிமன்று உத்தரவிட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231347/
மாகாண ஆட்சி முறையின் தேவையை தமிழர்களின் அரசியலே தீர்மானிக்க வேண்டும் March 29, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இப்போதும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களிலும் மாகாண ஆட்சிக் கட்டமைப்புகள் இருக்கின்றன – ஆளுநர்களின் ஆட்சி நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாகாணத்திலும் ஐந்து அமைச்சுக்களினதும் நிர்வாகங்கள் செயற்படுகின்றன. இலட்சக்கணக்கான அரச ஊழியர்கள் மாகாண ஆட்சியின் சேவகர்களாக பணி புரிகிறார்கள். இந்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மாறி மாறி வந்த மத்திய அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் ‘இந்த ஆண்டு இறுதியில் நடக்கும்’, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடக்கும்’ என கடந்த எட்டு ஆண்டுகளாக காலம் தள்ளிப் போட்டு வந்துள்ளன. ‘செவப்பா இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்’ என்பது சினிமா நகைச்சுவை மட்டுமல்ல, இப்போது மத்திய ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் கடந்த தேர்தல் கால பிரச்சாரங்களின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள். இவர்கள், ‘இடதுசாரிகள், சாதாரண மக்களிடையே இருந்து எழுந்து ஆட்சி பீடம் ஏறியவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் – தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளுக்கு நேர்மையாக இருப்பார்கள்’ என்று பொது மக்கள் குறிப்பாக தமிழ் பேசும் மக்கள் நம்பினார்கள், ஆனால் இவர்களும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தாமலே காலத்தைக் கடத்தியபடியே தமது அதிகார அரசியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்களா? அல்லது இந்த ஆண்டுக்குள் நடத்துவார்களா? இல்லாவிடினும் அடுத்த ஆண்டாவது நடத்துவார்களா? என இடைக்கிடை கேள்விகளோடு மக்கள் அன்றாடம் தாம் எதிர்நோக்கும் நெருக்கடிகளை சமாளிப்பதில் மூழ்கியபடியே தமது சீவியத்தை தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். இங்கு தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் தமது வாக்காளர் வங்கிகளைத் திருப்திப்படுத்துவதற்காக அவ்வப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருகிறார்களே தவிர, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் விரைந்து நடத்துவதற்கான அரசியல் அழுத்தங்களை ஏற்படுத்தக் கூடியதாக தமது செயற்பாடுகளை அவர்கள் மேற் கொள்வதாகத் தெரியவில்லை. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் தமது சுய மற்றும் தமது கட்சி நலன்களுக்கு சாதகமாக அமையுமா – தமக்கு அவசியம்தானா – இப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடந்து அதில் தாங்கள் படுதோல்வி அடைந்து விட்டால் அது தமது எதிர்கால அரசியல் கனவுகளை கலைத்து விடாதா என்ற கேள்விகளோடும் சந்தேகங்களோடும் தன்னம்பிக்கை தளர்ந்தவர்களாக தென்னிலங்கை எதிர்க் கட்சியினர் மாகாண சபைகள் தொடர்பில் ஓர் மென்மையான அரசியலை கடைப்பிடிப்பதாகவே தெரிகிறது. இதேவேளை, தமிழர்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் மாகாண சபைகள் தொடர்பாக பெரும் குழப்பமான கருத்துக்களையும், குழறுபடியான நிலைப்பாடுகளையுமே காண முடிகிறது. உழுபவன் ஏரை ஓரடி இழுக்க வக்கில்லாத மாடு நல்லூரான் தேரை தலையாலேயே தள்ளி விடுமாம் ஒரு பகுதியினர், இந்த மாகாண ஆட்சிக்கான தேர்தல் நடைபெற்றால் அதில் பங்குபற்றி மாகாண சபை உறுப்பினர்களாக தாங்கள் வந்துவிட வேண்டும் என்ற ஆசை கொண்டிருந்தாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை தமிழர்களுக்கு பாதகமே தவிர பயனில்லை என்கின்றனர், அத்துடன் ஒரு படி மேலே போய் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் எந்த வகையிலான அதிகாரப் பகிர்வு முறையையும் தாங்கள் ஏற்க மாட்டார்கள் என்கின்றனர். இவர்கள் அடைந்தால் சமஸ்டி ஆட்சி முறை அடைய வேண்டும் இல்லையென்றால் இந்த மாகாண ஆட்சி முறை மரணித்துப் போகட்டும் என்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரையில் இப்போது அரசியல் யாப்பில் இருக்கும் அதிகாரப் பகிர்வுக்கான சட்ட ஏற்பாடுகள் பற்றி இவர்கள் பேசும் போதெல்லாம் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் அமையும் மாகாண ஆட்சி முறையை ஏற்க முடியாது – ஏற்கக் கூடாது – அதில் ஒன்றுமில்லை – அதனால் தமிழர்களுக்கு எந்தவித பயனுமில்லை எனும் தமது கருத்து நிலைப்பாட்டை நிரூபிக்கும் உள் நோக்குடனேயே பேசுகிறார்கள் – பிரசங்கங்களை ஆற்றுகிறார்கள். இவர்கள் ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒரே ஆட்சி நிலப்பரப்பாக இணைத்து அதன் மீது தமிழர்களுக்கு உள்ள இறைமையின் அடிப்படையிலான சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சமஸ்டி ஆட்சி முறை’ அமைய வேண்டும் என்கிறார்கள். அதுவல்லாத எந்த அரசியல் ஏற்பாட்டையும் நிராகரிக்கிறார்கள் – எதிர்க்கிறார்கள். இவர்கள் இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறைக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிரவு ஏற்பாடுகளைப் பற்றி – அதிலுள்ள நிறைகள் குறைகள் பற்றி, அவற்றை எவ்வாறு திருத்தினால், மாற்றி அமைத்தால் எவ்வகையான ஏற்பாடுகளை உள்ளடக்கினால் இந்த மாகாண ஆட்சி முறையை முன்னேற்றகரமானதாக்கலாம், பயனுடையதாக்கலாம் என்பது பற்றி தாமாக பேசவோ அல்லது மற்றவர்களுடன் உரையாடவோ தயாராக இல்லை என்பதையே காண முடிகிறது. இவர்கள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடந்தால் தாங்கள் பங்குபற்றப் போவதாக கூறுகிறார்கள். ஆனால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான ஒரு மக்கள் இயக்கத்தை அணி திரட்டுதற்கு தயாராக இல்லை. அப்படி ஒரு மக்கள் இயக்கதை அணி திரட்ட தாங்கள் முற்பட்டால் அது தங்களது சமஸ்டிக் கோரிக்கையை பலயீனப்படுத்தும் என கூறுகிறார்கள். இவர்களின் இந்த வகையான நியாயம் மாகாண ஆட்சி முறையை நிராகரிக்கும் அல்லது இல்லாது செய்யும் தளத்திலிருந்தே பிறப்பதனால் இதனை இங்கு விவாதிப்பது பொருத்தமற்றதாகும். தமிழ்ப் பேசும் மக்களிடையே உள்ள அரசியல் சமூக பிரமுகர்களில், மேலே கூறப்பட்ட வகையினரைத் தவிர்ந்த ஏனையோரோ, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறை இலங்கையின் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் அரசியற் தீர்வாக அமையக் கூடியதல்ல எனவும் மேலும், சமஸ்டி அமைப்பு முறை மட்டுமே நிரந்தரமான அரசியற் தீர்வாக அமைய முடியும் எனவும் கூறுகிற அதேவேளை, அதுவரை, இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையானது இலங்கையின் அரசியல் யாப்பு மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக கொண்ட வகையாக செயற்படுவது தமிழ்ப் பேசும் மக்களின் உடனடியான தேவைகளுக்கு அவசியமானது என்கின்ற அரசியல் நிலைப்பாட்டை கொண்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என இலங்கை அரசைக் கோருவதோடு, அவற்றிற்கு இந்திய அரசின் துணையையும் அவ்வப்போது நாடுகிறார்கள்;. சாதித்துள்ள முன்னேற்றங்கள் அனைத்தும் உழைப்பாலும் போராட்டங்களாலும் அடைந்தவைகளே இந்த வகையினர் ஓரணியாக திரள முடியாதவர்களாக – ஒரு அரங்கத்தில் ஒன்று கூடி பேச முடியாதவர்களாக தமக்குத் தாமே தடைகளைப் போட்டு, பல கூறுகளாக உள்ளனர். இருப்பினும் இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் வாழும் மக்களிடம் கடைசியாக நடைபெற்ற தேர்தல்களின் போது பெற்ற வாக்குகளை கூட்டிப் பார்த்தால் கூட, தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் ஒட்டு மொத்தமாக இவர்களின் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கையே மிகப் பெரும்பான்மை. இந்த வகையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற தமிழ்ப் பேசும் மக்களில் மிகப் பெரும்பான்மையினர் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும் எனவும் அத்துடன் மாகாண ஆட்சிகளுக்கு இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் முழுமையாக மாகாண ஆட்சிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் இலங்கை அரசைக் கோருகிறார்கள் என்று கொள்வதே சரியாகும். மேலே குறிப்பிட்ட வகையைச் சேர்ந்தவற்றுள் உள்ள அரசியற் கட்சிகள் பெரும்பாலும், இப்போதிருக்கும் மாகாண ஆட்சி முறையினுடைய கட்டமைப்பிலுள்ள குறைபாடுகளும், மாகாண ஆட்சிக்கு அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் தொடர்பான குறைகள் மற்றும் குழறுபடிகள் காரணமாக இந்த மாகாண ஆட்சி முறையில் திருப்தி கொள்ளாவிட்டாலும், மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாண ஆட்சி அதிகாரத்தில் இருப்பது தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு குறிப்பிட்டளவு பாதுகாப்பை ஏற்படுத்தும் எனவும் அத்துடன் மக்களுக்கான சில அடிப்படையான பொருளாதார விடயங்களில் கரிசனை கொண்டு ஓரளவு முன்னேற்றங்களை ஏற்படுத்தும் வகையாக செயற்பட முடியும் என்றும் கூறுகின்றமை கவனத்துக்குரிய தொன்றாகும். பொதுவாக தேர்தல் அரசியற் கட்சிகளின் தலைவர்கள் தமது மற்றும் தமது கட்சியின் நலன்களின் நோக்குகளிலிருந்தே தேர்தல்களை அணுகுவர். இந்த வகையில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கை தளமாக கொண்ட கட்சிகளின் தலைவர்கள் மாகாண சபைத் தேர்தலுக்கும் தமது சொந்த நலன்களுக்கும் தமது கட்சியின் நலன்களுக்கும் இடையிலான பயன்பாடு மற்றும் நலன்களின் அவசியத்திலிருந்தே மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் தமது குரல்களை எழுப்புகின்றனர் என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைந்து நடக்க வேண்டியது இந்த நாட்டில் வாழும் சிறுபான்மையான தேசிய இனங்களின் நலன்களுக்கு கட்டாயமானதொரு தேவையாகும். இந்த நாட்டின் ஜனாதிபதியிடம், அவர் எவராயிருப்பினும், நிறைவேற்று அதிகாரங்கள் எல்லையற்ற அளவுக்கு குவிந்திருப்பதனால், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பானது அடிப்படையில் எதேச்சாதிகார கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றது என்பதே யதார்த்தமாகும். இந்த நிலைமையில் இலங்கையில் மாகாண ஆட்சிகள் முறையாகவும் முழுமையாகவும் சுயாதீன ஆற்றல்களுடனும் செயற்படுவது இந்த நாட்டின் ஜனநாயக பண்பாட்டின் முன்னேற்றத்துக்கு மிக மிக அவசியமாகும். இந்த வகையில் மாகாணங்களில் எப்போதும் மக்களாட்சிகள் செயற்படுவது முழு நாட்டினதும் அனைத்து இன மக்களினதும் பொது நலன்களோடு பின்னிப் பிணைந்தது என்பதையும் இவர்கள் உணர வேண்டும். அந்த வகையில் அரசாங்கம் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை தள்ளிப் போடும் தந்திரங்களை முழு மூச்சோடு எதிர்ப்பதுவும் தேர்தல்கள் விரைவாக நடப்பதற்கான அரசியல் நடவடிக்கைகளை பரந்த அளவில் முன்னெடுப்பதுவும் இன்றைக்கு முக்கியமானதாக உள்ளது. ஆனால் தமிழர்கள் மத்தியிலுள்ள அரசியல் யதார்த்தமானது, தமிழர்களின் அரசியல் சமூக சக்திகளில் எவராவது அதற்குரிய வகையில் அர்ப்பணிப்போடு செயற்படுகிறார்களா என்ற கேள்வியையே எழுப்புகிறது. எதிர்க்கட்சியாக இருக்கையில் வேற வாய் ஆளும் அதிகாரத்தில் இருக்கையில் நாற வாய் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் பெரிய கட்சி என்று சொல்லப்படுகிற தமிழரசுக் கட்சியினர் பெற்ற இடங்களுக்குச் சமமான பிரதிநிதித்துவ எண்ணிக்கையை இப்போது அரச அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களிடையேயிருந்து பெற்றிருக்கிறார்கள – யாரும் எதிர்பாரத்திருக்க முடியாத அளவுக்கு வாக்குளைப் பெற்றிருக்கிறார்கள். இது ஓர் அரசியல் வரலாற்று ஆச்சரியமே – சாதனையே. 2024ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதும் பாராளுமன்னறத் தேர்தலின் போதும் மக்கள் விடுதலை முன்னணியினர் ‘ஊழல் மோசடிகளற்ற ஆட்சி’, ‘இனவாத கருத்துகளுக்கோ செயல்களுக்கோ இடமளிக்காத ஆட்சி’, ‘தமிழ்ப் பேசும் மக்களுக்கு கடந்த காலத்தில் நடந்த அநீதிக் கெல்லாம் நீதியை நிலை நாட்டும் ஆட்சி’, ‘இனங்களுக்கிடையில் சமத்துவத்தையும் நல்லிணக்கமான உறவுகளையும் நாட்டும் ஆட்சி’, ‘தமிழர்கள் போராடிப் பெற்ற மாகாண ஆட்சி முறையை அங்கீகரித்து பாதுகாப்பது தமது கடமை’ என்றே தமது பிரச்சாரங்களை தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் பரப்பினார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாண ஆட்சிக்கான தேர்தல்கள் நடத்தப்படும் என்றார்கள். இப்போது அவர்களின் அரசியல் காட்சிகள் மாறி விட்டதற்கான சாட்சியங்களே அதிகமாக உள்ளன. இவர்கள் இப்போதாயினும் மாகாண ஆட்சிகளுக்கான தேர்தல்களை நடத்தினால் வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமது ஆட்சிகளை அமைப்பார்களோ இல்லையோ, நிச்சயமாக வலுவான எதிர்க்கட்சியாக ஆவார்கள் என்றே அரசியற் கணிப்புகள் உள்ளன. மாகாண சபைத் தேர்தல்கள் நடந்தால் மக்கள் விடுதலை முன்னணியினரும் மிகுந்த உற்சாகத்துடன் நாடு முழுவதும் தேர்தல் களத்தில் இறங்குவார்கள் என்பது தெரிந்ததே. இருப்பினும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த மக்கள் விடுதலை முன்னணியினர் மாகாண சபைகளுக்கான தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தும்படி மத்திய ஆட்சியிலுள்ள தமது கட்சித் தலைமையை வலியுறுத்துவார்கள் என எதிரபார்க்க முடியாத நிலைமையே இங்கு உள்ளது. மதிப்பிற்குரிய ஜனாதிபதி அநுரா அவர்களும் அவரது மக்கள் விடுதலை முன்னணியினரும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் வேறெந்தவொரு தேர்தலை நடத்தினாலும் அது தமக்கு வேதனையாக முடியக் கூடிய சோதனையாக அமைந்து விடக்கூடும் என்ற எச்சரிக்கைகளுக்கே உள்ளாகியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு வகையிலும் பலயீனமாக இருக்கும் இன்றைய நிலையிலேயே ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் அரசியல் யாப்பின் மீது தாம் சத்தியம் செய்து ஏற்றுக்கொண்டுள்ள ஜனநாயகக் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற தயங்குவார்களேயானால், பொருளாதார நெருக்கடிகளால் மக்கள் மத்தியில் ஏற்படக் கூடிய விரக்திகள் வெறுப்புகள், அண்மைக்காலமாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்லும் ஊழல் மோசடி குற்றச் சாட்டுகள், உட்கட்சிக்குள் வளர்ந்து வரும் உரசல்கள் முறுகல்கள் என்பன அதிகரிக்க அதிகரிக்க மக்கள் விடுதலை முன்னணியினரின் துணிச்சல்களும் தன்னம்பிக்கைகளும் ஆதரவு சக்திகளின் திரட்சிகளும் பலயீனமடைந்து செல்வது இயல்பாகி விடும். மாகாண சபைத் தேர்தல்களை இப்பொழுதே விரைவாக மக்கள் விடுதலை முன்னணியினர் துணிந்து நடத்த வேண்டும், இல்லையென்றால், இவர்கள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் எந்த தேர்தலையும் நடத்த மாட்டார்கள் என்பதே உண்மையாகும். தேசிய மக்கள் சக்தியின் அணியில் இல்லாத எந்தவொரு சிங்கள சமூக அரசியல் பிரமுகரும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தைக் கோருவதில் முனைப்போடு செயற்பட மாட்டார்கள் என்பது தெளிவான ஒன்றாகும் -பெயரளவில் அவ்வப்போது குரல் கொடுப்பார்கள். எனவே இலங்கையின் சிறுபான்மையான தேசிய இனங்களாக உள்ள தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் சமூக சக்திகளே மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடாத்தப்பட வேண்டும் என்ற விடயத்துக்கான அரசியல் செயற்பாடுகளை நோக்கி திரள வேண்டும், முனைப்போடு விடா முயற்சியாக செயற்பட வேண்டும். அத்துடன், மாகாண ஆட்சிகளுக்காக அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான அனைத்து வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும். நல்ல யானைகளை சரியாக பராமரித்து முழுமையாக பயன்படுத்தாமல் கட்டிப் போட்டால் நல்ல யானைகளும் ‘வெள்ளை யானைகளே’ மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் வழங்காமல் அவற்றை பயனெதுவுமற்றவை, வீண் செலவுச் சுமைகளை ஏற்படுத்துபவை என காட்டி சிங்கள மக்களுக்கு அதன் மீது வெறுப்பை ஏற்படுத்தி, தமிழ்ப் பேசும் மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தியதைத்தான் இதுகாலவரை சிங்கள பேரின மேலாதிக்க வாதிகள் செய்து வந்திருக்கிறார்கள். நாளைக்கு இப்போது ஆட்சியிலிருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரும். ‘மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நாங்கள் நடாத்தி விட்டோம், இனி அதனை மாகாண ஆட்சியாளர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என அதே பழைய ஒழித்து பிடித்து விளையாடும் ஆட்டத்தில் இறங்கி விட மாட்டார்கள் என்றில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் யார் யார் முதலமைச்சர்களாக ஆக விரும்புகிறார்கள் – முதலமைச்சர்களாய் ஆவதற்கு யார் யார் போட்டியிடக் கூடும் – யார் யார் முதலமைச்சர்கள் ஆவார்கள் என்பவை இங்கு முக்கியமானவையல்ல. கடந்த கால அநுபவங்கள் – ஏமாற்றங்கள் காரணமாக மாகாண ஆட்சி முறை மீதும் தமிழ் அரசியற் பிரமுகர்கள் மீதும் எந்த அளவுக்கு தமிழ்ப் பேசும் மக்கள் பொதுவாகவே விரக்தியும் நம்பிக்கையீனமும் வெறுப்பும் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் உள்ள சக்திகள் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மாகாண ஆட்சிகளுக்கான அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் பெற்றுக் கொள்வது மிக அவசியமாகும். அதன் மூலமே மாகாண ஆட்சி முறையானது அர்த்தமுடையதாகவும் பயனுடையதாகவும் காத்திரமான செயற்பாடுகள் கொண்டதாகவும் அமைய முடியும். இதனை தெளிவாக புரிந்து கொண்டு, இப்போதிருந்தே அதை நோக்கிய செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பதில் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியிலுள்ள அனைத்து அரசியல் சமூக சக்திகளும் ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் கொள்ள வேண்டும் https://arangamnews.com/?p=12789
வரலாற்றுப் பெருமை தேடித்தந்த மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய சிறீதரன் எம்.பி! நேற்றைய தினம் வெளியான க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, அகில இலங்கை ரீதியில் கணிதப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் தெய்வேந்திரன் திருக்குமரன், கிளிநொச்சி மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வன் ஆனந்த் கிருசோந் மற்றும் வர்த்தகப் பிரிவில் முதலிடம் பெற்ற செல்வி கமலநாதன் மதுமினி ஆகிய மாணவச் செல்வங்களை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் நேரில் சந்தித்துத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள், "இது கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி வரலாற்றில் ஒரு புதிய அடையாளத்தைப் பதித்துள்ளது. கல்வி ரீதியாகவும், வளங்கள் ரீதியாகவும் பின்தங்கிய மாவட்டம் என்று பலரால் விமர்சிக்கப்பட்ட நிலையில், இங்கிருந்து ஒரு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்திருப்பது எமக்குக் கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாகும்" என்று குறிப்பிட்டார். பெருமை தேடித்தந்த மாணவர்களுக்கும், இந்த வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார். வாட்ஸப் மூலம்
மத்திய கிழக்கில் போரில் இருந்து விடுபடமுடியாமல் தடமாறும் ட்ரம்ப் March 30, 2026 — வீரகத்தி தனபாலசிங்கம் — 2025 ஜனவரியில் இரண்டாவது தடவையாக வெள்ளை மாளிகைக்குள் பிரவேசித்த பிறகு பத்து மாதகாலப் பகுதிக்குள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் எட்டுப் போர்களை தடுத்து நிறுத்தியதாக பெருமையுடன் உரிமை கோரிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமாக தன்னைத் தவிர, வேறு எவரினால் அவ்வாறு போர்களை நிறுத்த முடியும் என்று கேள்வியெழுப்பி கர்வம் காட்டினார். ஆனால், தற்போது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடன் சேர்ந்து ஈரானுக்கு எதிராக தான் தொடுத்த போரை நிறுத்த முடியாமல் அவர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். போரைத் தொடங்குவதற்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் மூன்று குறிக்கோள்கள் இருந்தன. அணுத் திட்டத்தை மூடுவதற்கு ஈரானை நிர்ப்பந்திப்பது, உயர்ந்தளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை ஈரானில் இருந்து வெளியே கொண்டு போக வைப்பது, மேற்காசியாவில் அரசு அல்லாத திரட்டல் படைகளுக்கு ஈரான் வழங்கிவரும் ஆதரவைத் துண்டிப்பதுடன் அதன் ஏவுகணை ஆற்றல்களை நிர்மூலம் செய்வது. ஆனால், சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டியிருப்பதே ட்ரம்பின் முக்கியமான முன்னுரிமைக்குரிய விடயங்களில் ஒன்றாக இருக்கிறது. போர் வெடித்த பின்னர் ஈரான் மூடிய அந்த நீரிணையை திறப்பதற்கு அவருக்கு எளிதான தெரிவுகள் இல்லை. ஒன்றில் தெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை நடத்தி உடன்பாடொன்றுக்கு வேண்டியிருக்கிறது அல்லது தரையில் இராணுவ நடவடிக்கைக்கு அதிகாரமளிக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான துருப்புகளை ஏற்கெனவே அமெரிக்கா வளைகுடாவுக்கு அனுப்பி வைத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஈரானின் எரிசக்திவள உட்கட்டமைப்புக்கள் மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்துவதாக ட்ரம்ப அறிவித்திருப்பது பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் நாட்டம் இருப்பதாக உலகிற்கு காண்பித்துக்கொண்டு மறுபுறத்தில் ஈரான் மீதான தாக்குதல்களை கடுமையாக தீவிரப்படுத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கு காலஅவகாசத்தைப் பெறும் ஒரு தந்திரோபாயமாகவும் சந்தேகிக்கப்படுகிறது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அமெரிக்கா பாகிஸ்தான் ஊடாக 15 அம்ச சமாதான யோசனையை கடந்த வாரம் ஈரானுக்கு அனுப்பியது. அதை நிராகரித்த தெஹ்ரான் அதன் சொந்த நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஈரான் அதன் அணுத் திட்டத்தைக் கைவிட்டு ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்தால் அதற்கு பிரதியுபகாரமாக 30 நாட் களுக்கு போர்நிறுத்தம் செய்து தடைகளில் தளர்வுகளைச் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், பெப்ரவரி 28 அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனியையும் வேறுபல தலைவர்களையும் விமானக்குண்டு வீச்சுக்களின் மூலம் படுகொலை செய்து அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் ஐந்து நிபந்தனைகளை முன்வைத்திருக்கிறது. ஆக்கிரமிப்பையும் படுகொலைகளையும் முற்றுமுழுதாக நிறுத்த வேண்டும்; எதிர்காலத் தாக்குதல்களை தடுப்பதற்கு உறுதியான செயற்பாட்டு முறைகள் வகுக்கப்படவேண்டும்; போரின் விளைவான அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்; சகல முனைகளிலும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்; ஹேரர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பவையே அந்த நிபந்தனைகள். அதியுயர் தலைவர் உட்பட தலைவர்களும் படைத்தளபதிகளும் கொல்லப்பட்ட பின்னரும் கூட தலைமைத்துவக் கட்டமைப்பு முற்றாக நிலைகுலையாமல் இஸ்ரேலுக்கும் அமெரிக்கப் படைத் தளங்களைக் கொண்டிருக்கும் வளைகுடா அரபு நாடுகளுக்கும் எதிரான ஏவுகணைத் தாக்குதல்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல, மிலேச்சத்தனமான ஒரு மாதகாலக் குண்டு வீச்சுகளின் விளைவான முன்னென்றுமில்லாத அழிவுகளுக்கு மத்தியிலும் கூட அமெரிக்காவின் நிபந்தனைகளின் அடிப்படையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்ற உறுதிப்பாட்டுடன் ஈரான் அடிபணியாமல் நிற்பது உலகை வியக்க வைக்கிறது. எந்த நேரத்தில் எந்த விதமாக நடந்து கொள்வார் என்றோ அல்லது பேசுவார் என்றோ கூறமுடியாத, தான்தோன்றித்தனமான பேர்வழியான ட்ரம்ப் போர் நிலைவரம் குறித்து தெரிவித்து வரும் கருத்துக்களை உலகினால் நம்ப முடியாமல் இருக்கிறது. போரில் அமெரிக்கா ஏற்கெனவே வெற்றி பெற்றுவிட்டது என்று ஒரு தடவை கூறிய அவர் சில நாட்கள் கழித்து ஹோர்முஸ் நீரிணையைத் மீண்டும் திறப்பதற்கு போர்க் கப்பல்களை அனுப்பி வைக்குமாறு மற்றைய நாடுகளை குறிப்பாக, வட அத்திலாந்திக் ஒப்பந்த இராணுவக் கூட்டணியின் (நேட்டோ) உறுப்பு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நாடுகள் அமெரிக்காவுடன் போரில் இணைந்து கொள்வதற்கு திட்டவட்டமாக மறுத்து விட்டன. போர் தொடங்கியதற்கு பிறகு முதற்தடவையாக கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் ட்ரம்ப் தனது வேண்டுகோளை நிராகரித்தமைக்காக நேட்டோ நாடுகளை கடுமையாகக் கண்டனம் செய்தார். திட்டமிடப்பட்ட கால அட்டவணைக்கு முன்னதாகவே போரில் அமெரிக்கா வெற்றியை நோக்கிச் செல்வதாக அமைச்சரவையில் கூறிய அவர் உடன்பாடொன்றுக்கு வருவதற்கு ஈரான் தன்னைக் கெஞ்சிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் . இதனிடையே, ஈரானுக்கு எதிரான போர் மாதங்களில் அல்ல வாரங்களில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அதன் இராஜாங்க அமைச்சர் மக்றோ ரூபியோ கடந்த வெள்ளக்கிழமை பிரான்சில் ஜி- 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பின்போது கூறியிருக்கிறார். ஹோர்முஸ் நீரிணைபை் பயன்படுத்துவதற்கு கப்பல்களுக்கு கட்டணம் அறவிடும் முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து ஈரான் தீர்மானிக்கக்கூடும் என்று அவர் அங்கு செய்த எச்சரிக்கை அந்த நீரிணையை திறப்பதற்கு மற்றைய நாடுகளின் உதவி அமெரிக்காவுக்கு அவசியமாகத் தேவைப்படுகிறது என்பதை உண்ர்த்துகிறது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, இது இன்னொரு பின்னடைவுப் போராக அமையப் போகிறது என்பதையே இதுவரையான நிகழ்வுப்போக்குகள் கட்டியம் கூறுகின்றன. அதனால், ஈரானை மீண்டும் தலையெடுக்காமல் செய்வதற்காக அதன் இராணுவ மற்றும் பொருளாதாரக் கடமைப்புக்களை இயன்றவரை நிர்மூலம் செய்வதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முனைப்புக் காட்டக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதற்கு பதிலடியாக வளைகுடா அரபு நாடுகளின் எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தீவிரப்படுத்தும் சாத்தியம் இருக்கிறது. இதனால் ஒட்டு மொத்ததில் மத்திய கிழக்கின் எண்ணெய் வளமே அழியப் போகிறது. போருக்காக இதுவரையில் அமெரிக்காவுக்கு 30 — 40 பில்லியன் டொலர்களும் இஸ்ரேலுக்கு 300 மில்லியன் டொலர்களும் நாளொன்றுக்கு செலவாகுவதாக ‘த கார்டியன்’ செய்தி வெளியிட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு ஈரான் எந்தவிதமான உடனடி ஆபத்தையும் தோற்றுவித்திருக்கவில்லை என்றும் இன்றைய போர். இஸ்ரேலின் தயாரிப்பு என்றும் கூறி போர் தொடங்கிய மூன்று வாரங்களில் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்பு நிலையத்தின் பணிப்பாளரான ஜோ கென்ற் தனது பதவியை இராஜினாமா செய்தமை போரை தொடங்கியமைக்காக ட்ரம்ப் தனது நிருவாகத்திற்குள் எந்தளவுக்கு அதிருப்தியை எதிர்நோக்குகிறார் என்பதைக் காட்டுகிறது. 2025 ஜூலையில் பணிப்பாளராக நியமிக்கப்பட்ட குடியரசு கட்சிக்காரரான கென்ற், “இஸ்ரேலிடமிருந்தும் அதற்கு ஆதரவான செல்வாக்குமிக்க யூத ஆதரவுக் குழுக்களிடமிருந்தும் வந்த நெருக்குதலின் விளைவாகவே இந்தப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவானது. இதை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் படைகளை தரைப் போரில் இறக்கியதன் விளைவாக அதன் வரலாற்றில் பெற்ற படுமோசமான அனுபவங்களில் இருந்து அமெரிக்கா இன்னமும் படிப்பினை எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன. இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதான்யாகுவை அவர் அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். https://arangamnews.com/?p=12792
கொழும்பு மைய அரசியலும் இணக்க அரசியலும் குற்றமா? March 28, 2026 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலை ‘கொழும்பு மைய அரசியல்’ பலவீனப்படுத்துகிறது என்ற பெருங்கவலை ‘தீவிரத் தமிழ்த்தேசிய அரசியல் விருப்பாளர்’களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த இரா. சம்பந்தனும் அவரால் தமிழ் அரசியற் பரப்பிற்குள் கொண்டு வரப்பட்ட மதியாபரணம் சுமந்திரனும்தான் கொழும்பு மைய அரசியலுக்கான கதவைத் திறந்தவர்கள் என்ற அபிப்பிராயமும் கோபமும் இவர்களிடமுண்டு. தங்களுடைய இந்தக் கவலையையும் கோபத்தையும் பல்வேறு வழிகளில் அவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ‘கொழும்பு மைய அரசியல்’ என்று இப்பொழுது அடையாளப்படுத்துவது, சுமந்திரனை மனதில் கொண்டே. சுமந்திரனுக்கு முன்பு, சம்பந்தன் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனால்தான் சம்பந்தன் இறந்தபோது, ஒரு தலைவர் இறந்த உணர்வை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் சம்பந்தனின் மறைவுக்கு மதிப்பளிக்கவும் இந்தத் தரப்பினர் பின்னின்றனர். மட்டுமல்ல, சம்பந்தனின் இறுதி நிகழ்வைப் புறக்கணித்து, தங்கள் வன்மத்தைத் தீர்த்துக் கொண்டனர். சம்பந்தன் மறைந்த பிறகு, சுமந்திரன் மீது அந்தக் கோபம் மடைமாற்றம் செய்யப்படுகிறது. இவர்களுடைய கருத்தின்படி ‘கொழும்பு மைய அரசியல்’ என்பது, தமிழீழத்துக்கு எதிரானது; விடுதலைப்புலிகளுக்கு எதிரானது. ஒரு நாடு இரு தேசம் என்பதற்கு எதிரானது. தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது. சமஸ்டிக்கு எதிரானது… என்றெல்லாம் வியாக்கியானப் படுத்தப்படுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், சம்பந்தனும் சுமந்திரனும் செய்து வருவது விட்டுக்கொடுப்பு அரசியல். மறுவளமாக அது ஒடுக்குமுறையை ஏற்றுக் கொள்ளும் அரசியல். அதாவது தமிழ் மக்களின் அபிலாஷைகளை விட்டுக் கொடுத்தல். சிங்கள மேலாதிக்கத்தை நிபந்தனைகளின்றி ஏற்றுக் கொள்ளல் என. இதனை இவர்கள் எங்கே இருந்து கண்டுபிடித்தார்கள் என்றால், ‘நல்லாட்சி’க் காலத்தில் (2015 – 2019) ‘ஏக்கிய ராஜ்ய’ என்ற அடிப்படையில் அரசியல் அமைப்புக்கான வரைபை இலங்கை அரசு முன்வைக்க முயன்றபோது, அதனை நியாயப்படுத்தும் வகையில் சம்பந்தனும் சுமந்திரனும் செயற்பட்டனர், அன்றைய ரணில் – மைத்திரிபால அரசாங்கத்துக்கு நிபந்தனையின்றி ஆதவளித்தனர் என்பதிலிருந்தே. அப்பொழுது சுமந்திரன், சம்பந்தன் ஆகியோரின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன என்பதை நினைவிற் கொள்ளலாம். அப்பொழுதான் மேற்படி இருவரும் கொழும்பை மகிழ்ச்சிப்படுத்த விரும்புகின்றனர் என்ற அபிப்பிராயம் அல்லது சந்தேகம் தீவிர தமிழ்த்தேசியவாதிகளிடத்தில் உருவானது. அது பின்னர் அவர்கள் இருவருக்கும் எதிரான அரசியலாக வளர்த்தெடுக்கப்பட்டது. என்பதால் சம்பந்தனையும் சுமந்திரனையும் அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள மறுத்தவர்களும் எதிர்கொள்ள முடியாதிருந்தோரும் அதனைப் பெரிதாக்கினர். இப்பொழுதும் இதுவே நிலைமை. இவர்களுடைய அபிப்பிராயத்தின்படி பார்த்தால் ‘கொழும்பு மைய அரசியலை’ச் செய்வதன் மூலம் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் கிடைத்த லாபங்கள் என்ன? இதன் மூலம் தொடர்ந்து சுமந்திரன் பெற்றுக் கொள்வதென்ன? அதை எவரும் இதுவரையில் முன்வைத்தில்லை. பதிலாக தீவிரத் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை முன்னெடுப்பதாகத் தோற்றம் காட்டும் வடமாகாண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன், சிறிதரன் போன்றோர் பல சந்தர்ப்பங்களில் அரசுடன் இணங்கி சில பல சலுகைகளைப் பெற்றுள்ளனர் என்பது பலராலும் கூறப்பட்டு வருவதை இவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஒரு அரசியல் நிலைப்பாட்டை ஒருவரோ அல்லது ஒரு தரப்பினரோ எடுப்பதன் மூலம் நன்மைகளும் தீமைகளும் நிகழ்வதுண்டு. ஒன்று, அந்த நபருக்கு அல்லது அவருடைய அணிக்கு நன்மைகள் கிட்டும். அல்லது அந்தக் கட்சிக்கு நன்மைகள் கிடைக்கும். அதைப்போலவே தீமைகளும் ஏற்படும். சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுடைய உரிமைகளுக்கும் அபிலாஷைகளுக்கும் எதிரானதா? அப்படியென்றால் அது எந்த வகையில் எதிரானது? என்பதை குற்றச்சாட்டை முன்வைப்போர் சொல்ல வேண்டும். பதிலாக அதற்கு மாற்றான அரசியல் நிலைப்பாட்டையும் அதனுடைய சாத்தியத்தையும் அதற்கான வழிமுறைகளையும் அவர்கள் தெளிவுறுத்துவது அவசியமாகும். ஜனநாயக அரசியற் களத்தில் பல்வேறு சிந்தனைப் போக்குகளும் நிலைப்பாடுகளும் உருவாகுவது இயல்பு. அது தவிர்க்க முடியாதது. இந்தப் புரிதலற்று, இந்த அடிப்படையை மறுதலிப்பதும் மாற்று அபிப்பிராயத்தை அல்லது மாற்று நிலைப்பாட்டை துரோகமாக – எதிராகப் பார்ப்பது ஜனநாயக விரோதமாகும். அது பாசிச உணர்வின் அடிப்படையைச் சேரும். நான் மட்டும் சரி, என்னுடைய நிலைப்பாடு மட்டுமே உண்மையானது, மற்றதெல்லாம் தவறானது, ஏற்றுக் கொள்ள முடியாதது என்பது பாசிசமே. சம்மந்தனும் சுமந்திரனும் மேற்கொண்டது ‘கொழும்பு மைய அரசியல்’ அல்ல. அவர்கள் இருவரும் யதார்த்த நிலை அரசியலையே மேற்கொண்டனர். போருக்குப் பிந்திய சூழல், சர்வதேச, பிராந்திய நிலைப்பாடுகள், நடைமுறை அனுபவங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிநேகபூர்வமான அரசியல். விட்டுக் கொடுப்புகளற்ற, அதேவேளை முரண்பிடிக்காத ஒரு மென்னிலை அரசியல். இன்னொரு விதமாகச் சொன்னால், சிங்களத் தரப்பை வளைத்துப் பிடிக்கும் ஒருவகையான தந்திரோபாய அரசியலை முயற்சித்தனர். அதில் போதாமைகளும் குறைபாடுகளும் இருந்தன. ஆகவே, அதில் விமர்சனத்துக்கும் கவனத்திற்கும் உரிய இடங்கள் உண்டு. இந்தக் கட்டுரையாளர் அதைத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்திருக்கிறார். இப்பொழுதும் விமர்சனத்துக்குரிய இடங்கள் இருக்கிறது. ஆனால், விட்டுக் கொடுப்புகள் ஏதும் அதில் இல்லை என்பது கவனத்திற்குரியது. சம்பந்தனுடைய பாராளுமன்ற உரைகளும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள், தலைவர்களுடனான சந்திப்புகளின்போது சம்பந்தன் தெரிவித்த விடயங்களும் வெளியிட்ட அறிக்கைகளும் இதற்கு ஆதாரம். என்பதால்தான் சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இலங்கையில் சிங்கள, மலையக, முஸ்லிம் அரசியற் தரப்புகளிடத்திலும் அந்தச் சமூகங்களிடத்திலும் மதிப்பு உண்டாகியது. மட்டுமல்ல, சர்வதேச ரீதியான மதிப்பும் (கவனிப்பும்) தமிழ் அரசியற்பரப்பில் இவர்கள் இருவருக்குமே இருந்தது. இப்பொழுது சுமந்திரனையே அவர்கள் தமிழ்ப் பரப்பின் பிரதிநிதியாக நோக்கும் – கருதும் நிலை உண்டு. இவ்வளவுக்கும் சுமந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஒரு கட்சியின் செயலாளர் மட்டுமே. இதற்கு அப்பால், கடந்த கால ஆட்சித்தரப்புகளோடும் எதிரணிகளோடும் சம்பந்தனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் நடந்து கொண்ட முறைமைகள், உடன்பாடுகள் (இரகசிய – வெளிப்படையான) பற்றி விவாதிப்பதற்கு நிறைய உண்டு. எளிய உதாரணங்கள் இரண்டு. 1. யுத்தத்தைத் தலைமையேற்று நடத்திய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்தது. 2. ‘நல்லாட்சி’ என்ற பேரில் ரணில் – மைத்திரிபால சேனநாயக்க ஆட்சிக்காலத்தில் அந்த ஆட்சியுடன் நெருக்கிச் செயற்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்திருக்க வேண்டிய, செயற்படுத்தியிருக்க வேண்டிய பல விடயங்களைச் செய்யத் தவறியமை. இது சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் மீதான தனியான குற்றச்சாட்டு மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியினுடைய இயல்பின் மீதும் அதனுடைய அரசியல் நிலைப்பாட்டின் மீதும் வைக்கப்பட வேண்டிய குற்றச்சாட்டாகும். தமிழரசுக் கட்சி தலைமை தாங்கியதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் ஆகிறது. அப்படையில் தமிழரசுக் கட்சியானது, கொழும்புடன் (ஐக்கிய தேசியக் கட்சியுடன்)நெருக்கமான உள நிலையையும் உறவையும் கொண்டது. இது அதனுடைய தொடக்க காலத் தலைவரான எஸ். ஜே. வி. செல்வநாயம் காலத்திலிருந்து வழிவழியாக வருகின்ற ஒரு நிலையாகும். செல்வநாயகத்துக்குப் பின்னர் தமிழர்களின் அரசியலுக்குத் தலைமை தாங்கிய அல்லது தமிழர்களால் தலைவராகக் கருதப்பட்ட அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கமும் இதே வழிமுறையைப் பின்பற்றினார். அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, கொழும்புடன் இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக் கொண்டது இதற்கு உதாரணம். இதனை அன்றைய ஆயுதமேந்திய விடுதலை இயக்கங்கள் கடுமையாக எதிர்த்தன என்பது வரலாறு. ஆகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாட்டின் மீதும் அதனுடைய இயல்பின் மீதுமே விமர்சனத்தை வைக்க முடியுமே தவிர, அதைத் தவிர்த்து, அதில் உள்ள தனியான (தலைமை) உறுப்பினர்களின் மீது விமர்சனங்களை வைப்பது பொருத்தமானதல்ல. அது பயனுடையதும் அல்ல. தமிழரசுக் கட்சியில் சம்பந்தன், சுமந்திரன், சி.வி.கே. சிவஞானம், சாணக்கியன் போன்றோர் மென்போக்கிலான அரசியலை மேற்கொள்கின்றனர். கொழும்பில் உள்ள சிங்களக் கட்சிகளோடும் தலைவர்களோடும் நெருக்கமான உறவில் உள்ளனர். அதைப்போல முஸ்லிம், மலையகக் கட்சிகளோடும் அவற்றின் தலைவர்களோடும் நெருக்கமாக அல்லது புரிந்துணர்வுடன் கூடிய உறவில் உள்ளனர். அப்படித்தான் தமிழரசுக் கட்சிக்கு வெளியே உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், சமத்துவக் கட்சி, ரெலோ, ஜனநாயகப்போராளிகள் போன்ற கட்சிகளோடும் உறவைப் பேணுகின்றனர். ஒரு கட்டத்தில் யாழ்ப்பாண மாநகர சபையில் தமது தரப்பை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பணிமனைக்குச் சென்று, அதனுடைய தலைவரான டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்தார். இதெல்லாம் யதார்த்த அரசியலின்பாற்பட்ட விளைவுகள் – நடவடிக்கைகளாகும். இவற்றையெல்லாம் புறக்கணித்து விட்டு, தனியே நின்று ‘அடைந்தால் மகாதேவி, இல்லையென்றால் மரணதேவி’என வீம்புக்குக் கம்பு சுத்தலாம். அப்படித்தான் தீவிரத் தமிழ்த் தேசியவாத தரப்புகள் கற்பனையில் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் முன்வைக்கின்ற ஒரு நாடு இரு தேசம் என்பதற்கும் சமஸ்டிக்கு மேலான தீர்வுக்கும் சாத்தியமென்ன? அதற்கான வழிமுறை என்ன? அதற்கான பிராந்திய – சர்வதேச ஆதரவு அல்லது மதிப்பு என்ன? என்று இதுவரையில் எவரும் சொன்னதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. அல்லது தாம் கருதுகின்ற – சொல்கின்ற அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்கு அவர்கள் அதற்கான வழியில் செயற்படுவதாகவும் இல்லை. இதற்காக அவ்வப்போது புதிய புதிய அமைப்புகளை உருவாக்குவது, அறிக்கைகளை வெளியிடுவது, ஊடகச் சந்திப்புகளை நடத்துவது. ஊடகங்களில் பிரகடனங்களைச் செய்வது, ‘கருத்துருவாக்கம்’ என்ற கற்பனையில் புனைவுக் கட்டுரைகளை எழுதுவதோடு தங்களுடைய மேலான புரட்சிகரப் பணிகளை நிறைவு செய்து கொள்கின்றனர். மிகவும் வலுப்பெற்றிருக்கும் இனவாதத்தையும் அந்த இனவாதத்தை மீறிச் செயற்பட முடியாமல் தடுமாறும் ஆட்சித் தரப்புகளையும் சிங்களக் கட்சிகளையும் எப்படிக் கையாள்வது என்று புரிதலற்றிருக்கும் வரையில் தமிழ் அரசியலில் முன்னேற்றத்தையோ மாற்றத்தையோ காண முடியாது. இன்றைய யதார்த்தம், மாகாணசபைகளை இயங்க வைக்கவே முடியாத நிலையாகும். இன்றைய உண்மை, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியாத சூழலாகும். இந்த நிலையில் ‘தாயகக் கோட்பாடு’என்பதை 1970, 1980, 1990, 2000 போன்ற காலகட்டத்தில் கருதியதைப்போல இப்பொழுதும் கொள்ள முடியுமா? கொழும்பு மைய அரசியலும் தமிழீழ தாயகக் கோட்பாடும் என்று இரண்டு வேறு கொள்கை நிலைகள் உள்ளதாக சுவாரசியத்துக்காகப் பட்டிமன்ற விவாதங்களை நடத்திக் கொள்ளலாம். நடைமுறை அரசியலில் சாத்தியமானவற்றுக்கே வலிமை அதிகம். வரலாறும் உண்டு. கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை. களைப்பதுமில்லை. அப்படியான குதிரைகளை ஓட்டிக் கொள்வோர் சுய இன்பம் காண்பதன்றி வேறொன்றும் நிகழ்வதில்லை. https://arangamnews.com/?p=12784
இலங்கையின் மத்திய ஆட்சியே மாகாண ஆட்சியை அர்த்தமுள்ளதாக்க வேண்டும் March 28, 2026 — அ. வரதராஜா பெருமாள் — (இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்) மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தைக் கொண்ட மாகாண ஆட்சி இப்போது இலங்கையின் எந்தப்பாகத்திலும் நடைமுறையில் இல்லை.. அவை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர்களின் தலைமையில் செயற்படுகின்றன. மாகாண ஆட்சியானது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் கீழ் செயற்பட்டாலென்ன அல்லது ஆளுநரின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தாலென்ன அது அரசியல் யாப்பின்படி – வரையறுக்கப்பட்ட அளவிலாயினும் – சுயாதீனமானமாக செயற்பட வேண்டிய அரச கட்டமைப்பாகும். மக்களால் தெரிவு செய்யப்படும் மாகாண அரசாங்கங்கள் செயற்படுகின்ற நிலைமை எப்போது இலங்கையில் ஏற்படும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை. அது ஒருபுறமிருக்க, மாகாண ஆட்சி அமைப்பானது அரசியல் யாப்பின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும கொண்டதாக ஆளுநர் ஆட்சியின் போதும் செயற்பட முடியும் – செயற்பட வேண்டும். இங்கே அது பற்றி சில விடயங்களை அவதானிக்கலாம். ஆளுநர் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவராயிருப்பினும் அவர் அந்தப் பதவியில் இருக்கும் போது எந்தக் கட்சியினதும் பிரதிநிதியாக, எந்தக் கட்சிக்கும் சார்பானவராக, எந்தக் கட்சியினது நலன்களையும் பிரதிபலிப்பவராக அல்லது எந்தக் கட்சியினதும் செல்வாக்குக்கு வெளிப்படையாக உட்பட்டவராக இருக்க முடியாது – இருக்கக் கூடாது. மாகாண ஆட்சியின் ஆளுநராக இருக்கும் ஒருவர் அந்தப் பதவியைப் பெறுவதற்கு முதலில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தார் என்பதோ அரசாங்கத்தின் எந்த உத்தியோக பதவியில் இருந்தார் என்பதோ முக்கியமில்லை. ஆளுநராக அமர்ந்திருக்கும் காலகட்டத்தில் அவர் எந்தக் கட்சியையும் சாராதவரராக இருக்க வேண்டும்.– எந்தக் கட்சிக்கும் சார்பானவராக இருக்க கூடாது. 1978ம் ஆண்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் உருவாக்கிய நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை என்பது அமெரிக்க அரசியல் முறையையும் பிரெஞ்சு அரசியல் முறையையும் கலந்து ஆக்கப்பட்ட கலவையே என அரசியல் விஞ்ஞான அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இலங்கையின் அரசியற் கட்டமைப்பில் உள்ள மாகாண ஆட்சி முறை அவ்வாறானதல்ல இந்திய அரசியலமைப்பு முறைப்படி – இங்கிலாந்து பாராளுமன்ற ஆட்சிமுறையின் அடிப்படையில் செயற்பட வகுக்கப்பட்டதாகும். இங்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரும் மாகாண அமைச்சர்களும் இருக்கும்போது ஆளுநர் என்பவர் மாகாண ஆட்சியின் பெயரளவிலான தலைவரே. மாகாண சபைகளுக்கான தேர்தல் திருத்த சட்டத்தை தவறான முறையிலும் தீய நோக்கங்களோடும் பிரயோகித்து மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களின் அரசாங்கத்தைக் கொண்டதான மாகாண ஆட்சிகள் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறைக்கு வர முடியாமல் ஆக்கப்பட்டிருப்பதோடு, மத்திய அரசாங்கத்தினர் தங்களது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழானதாக மாகாண ஆட்சிகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். மாகாணங்களின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இல்லாத போது மாகாண ஆட்சிக்கான அரசாங்கமாக இருக்கும் ஆளுநர் ஜனாதிபதியின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற்று மாகாண ஆட்சிக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால் இங்கு மத்திய அரசாங்கம் மாகாண ஆட்சியை கபளீகரம் செய்து விட்டதாகவே உள்ளது. மாகாண ஆட்சியின் அமைச்சு நிர்வாக கட்டமைப்புகளை மத்திய அமைச்சர்கள் தமது அமைச்சுகளின் நிர்வாக கட்டமைப்புகளின் பகுதிகளாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆளுநர் என்பவர் மாவட்டச் செயலாளர்களுக்கு சற்று மேலான தரம் கொண்ட ஓர் அரச அதிகாரியாகவே ஆக்கப்பட்டிருக்கிறார். இது மாகாண ஆட்சி முறையையே சிறுமைப் படுத்திவிடுகிற – அர்த்தமிழக்கச் செய்கிற வேலையே. இதனையே ராஜபக்சாக்களும், விக்கிரமசிங்காக்களும் செய்தார்கள் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினரும் அதனையே செய்கிறார்கள். மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களிலும், பிரதேச அபிவிருத்திக் கூட்டங்களிலும் அமைச்சர்களே முதற் பிரஜைகளாக – தலைவர்களாக அமர்கிறார்கள். எந்தவொரு மாவட்டத்தினதும் ஒட்டுமொத்த அபிவிருத்தி தொடர்பாக உறுதி செய்யவோ, உத்தரவாதம் வழங்கவோ அல்லது ஆணையிடவோ எந்தவொரு மத்திய அமைச்சருக்கும் சட்டரீதியான அதிகாரம் கிடையாது. இப்போதுள்ள விதமான மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்கள் எந்தவகையிலும் உருப்படியான செயற்பாடுகளுக்கான அரச கட்டமைப்பாக அமைய மாட்டாது என்பதோடு, இவ்வகையான கூட்டங்கள் ஆளுநர்களின் தராதரங்களை குறைக்கின்றன -அவர்களின் பெறுமதிகளையும் அர்த்தமற்றதாக்குகின்றன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்களின் கீழ்:- ● சுமார் 80000 அரச உத்தியேகத்தர்கள் மற்றும் அரச ஊழியர்கள் சேவை செய்கிறார்கள், ● இதை விட 1800 க்கு மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்கள் என கல்வி நிலையங்கள் உள்ளன, ● போதனா வைத்திய சாலைகள் மற்றும் விரல் விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கைகள் கொண்ட விசேட வைத்திய சாலைகள் என்பவை தவிர ஏனைய வகைகளில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அத்தனை வைத்திய சாலைகளினதும் ஆட்சி மாகாண ஆட்சியிடமே உள்ளன. ● அரசியல் யாப்பின்படி மாகாணத்திலுள்ள பொலிஸ் அமைப்பானது ஆளுநருக்கு கட்டுப்பட்டது – மாகாண பொலிஸ் மாகாண ஆளுநருக்கு பொறுப்புக் கூற வேண்டியது: ● தனியார் உடைமைகளாக உள்ள காணிகள் அனைத்தினதும் மீதான அனைத்து அதிகாரங்களும் மாகாண ஆட்சிக்கே உண்டு: ● மது விற்பனைகளை, போக்குவரத்துக்களை நெறிப்படுத்தவும் கட்டுப்படுத்தவுமான அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. ● அத்தனை கூட்டுறவு அமைப்புகளையும் அத்தனை உள்ளுராட்சி சபைகளையும் நெறிப்படுத்தவும் வழிப்படுத்தவும் அதிகாரங்கள் மாகாண ஆட்சிக்கு உண்டு. இப்படியாக மாகாணங்களுக்கு வெளிப்படையாகவும் தெளிவாகவும் உள்ள அதிகாரங்களை அடுக்கினால் நீண்டு போகும். ஆனால் இவ்வளவு விடயங்கள் இப்போதும் நடைமுறையில் மாகாண ஆட்சியின் கீழ் – ஆளுநரின் கீழ் உள்ளனவா? தமக்குரிய அதிகாரங்களை பிரயோகித்து தமது பொறுப்புகளையும் கடமைகளையும் ஆளுநர்கள் நிறைவேற்றுகிறார்களா? நிறைவேற்றுவதை ஜனாதிபதி உறுதிபபடுத்துகிறாரா? ஆளுநருக்கு என்ன தடை? அமைச்சர்கள் தடையா? அதிகாரங்கள் இல்லாமை தடையா? இலங்கையின் அரசமைப்பில் ஜனாதிபதிதானே அனைத்துமாக இருக்கிறார். அப்படியிருக்கையில் அவரது விருப்பத்துக்கும் அரவணைப்புக்கும் உரிய ஆளுநருக்கு ஏது பிரச்சினைகள்? அபிவிருத்திக் கூட்டங்கள் நடக்கின்றன! ஆலோசனைக் கூட்டங்கள் நாழும் பொழுதும் நடக்கின்றன! அரசாங்கத்தால் அடிக்கல் நாட்டல்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. ஆனால் உருப்படியாக நிறைவேற்றப்பட்ட அபிவிருத்திகளின் பட்டியலை இன்னமும் காணமுடியவில்லை. அபிவிருத்தி செயற்பாடுகள் அனைத்துக்கும் ஒரே கால அளவு தேவைப்படுபவதில்லை. ஒரே வாரத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன ஒரே மாதத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன! ஒரே வருடத்தில் செய்யக் கூடியவைகளும் இருக்கின்றன. மாகாண ஆட்சிகளை ஜனாதிபதியே நேரடியாக வழிகாட்டி ஆளுநரைக் கொண்டு செயற்படுத்துகின்ற போதிலும் மாகாண ஆட்சி முறை மக்களுக்கு பயனற்றவை – அவற்றால் காத்திரமாக செயற்பட முடியாது – அவை வெள்ளை யானைகள் என முன்னிருந்தவர்களைப் போல இப்போதுள்ள ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் நிரூபிக்க முயலுகிறார்களா என்ற கேள்வி இங்கு நியாயமாகவே எழுகிறது. இதுதான் இன்றைய அரசாங்கத்தின் இலக்காக இருந்தால் இது இலங்கையில் ஜனநாயக கட்டமைப்பின் முன்னேற்றத்துக்கு தடையாகவே அமையும் – அதிகாரங்கள் அனைத்தும் குவிந்த மத்திய ஆட்சியின் எதேச்சாதிகாதிகாரம் தொடரும் இலக்கையே வெளிப்படுத்தும். இலங்கையில் வாழும் இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளில் முன்னேற்றகரமான வளர்ச்சிக்குத் தடையாகும். இலங்கைவாழ் சிறுபான்மையான தேசிய இனங்களின் அடிப்படையான அரசியல் பொருளாதார அபிலாஸைகள் தொடர்பான குறைந்த பட்ச அரசியல் ஏற்பாடாக இந்த மாகாண ஆட்சி முறையே சாத்தியமாக உள்ளது. சிங்கள பேரினவாத சகதியில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி வெளியே வந்துவிட்டதா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு இந்த மாகாண ஆட்சி முறையில் ஏற்படக்கூடிய முன்னேற்றங்களே சாட்சியாகும். பல்லினங்கள் வாழும் இலங்கை ஒரு நாடாக – அழகான நாடாக – வளமான நாடாக வளர்ச்சி அடைவதை உண்மையாக்குவதற்கு மாகாண ஆட்சி அமைப்பின் பயன்பாட்டையும், அதன் காத்திரமான செயற் திறன்களையும் உறுதிப்படுத்துவதும் மேம்படுத்துவதும், இலங்கையின் மத்திய ஆட்சி அமைப்பில் அமர்ந்திருக்கும் தலைவர்களின் குறிப்பாக ஜனாதிபதியின் பொறுப்பும் கடமையும் ஆகும். https://arangamnews.com/?p=12781
மத்திய கிழக்கு போர்: 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அலுமினியம் விலை அதிகரித்தது 31 Mar, 2026 | 11:41 AM (இணையத்தள சர்வதேச செய்திப் பிரிவு) ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கின் முக்கிய அலுமினிய உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களினால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அலுமினியத்தின் விலை 4.7 சதவீதம் அதிகரித்து, ஒரு மெற்றிக் தொன் 3,453 டொலர்களாகப் பதிவாகியுள்ளது. வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் இது 3,492 டொலர் வரையிலும் அதிகரித்தது. இதற்கு முன்னர் 2022 மார்ச் மாதம் ரஷ்யா - உக்ரேன் போரின் போது ஒரு தொன் அலுமினியம் 4,073.50 டொலர் என்ற உச்சத்தைத் தொட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அலுமினியத்தைத் தொடர்ந்து செம்பு ஒரு தொன் 12,231 டொலராகவும், துத்தநாகம் 3,168 டொலராகவும் விலை அதிகரித்துள்ளன. மத்திய கிழக்கின் இரு பெரும் உற்பத்தி நிறுவனங்கள் ஈரானின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப்பெரிய அலுமினிய உருக்காலைகளில் ஒன்றான பஹ்ரைனிலுள்ள அல்பா நிறுவனம் தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிட்டு வருகிறது. ஏற்கனவே தனது உற்பத்தித் திறனில் 19 சதவீதத்தை மூடுவதாக அல்பா நிறுவனம் அறிவித்துள்ளது. எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம், தனது ஆலை சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் போரினால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டமை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைகளுக்கான அலுமினிய ஏற்றுமதியை முடக்கியுள்ளது. லண்டன் உலோகச் சந்தையின் களஞ்சியங்களில் உள்ள அலுமினிய கையிருப்பு கடந்த மே மாதத்திலிருந்து 60 சதவீதத்துக்கும் மேல் சரிந்துள்ளதால், சந்தையில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. உலகின் மிகப்பெரிய நுகர்வு நாடான சீனாவில் தொழிற்சாலை நடவடிக்கைகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், அலுமினியத்திற்கான தேவை அதிகரித்துள்ளது. போக்குவரத்து, கட்டுமானம் மற்றும் பொதியிடல் துறைகளில் அலுமினியம் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால், இந்த விலை அதிகரிப்பு சர்வதேச ரீதியில் பல பொருட்களின் விலையேற்றத்திற்கு வழிவகுக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். https://www.virakesari.lk/article/242380
மட்டக்களப்பு கடத்தல் விவகாரம்: மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல் மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழாவது சந்தேக நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர், கொழும்பு - வத்தளைப் பகுதியில் வைத்து இந்த 7ஆவது சந்தேக நபரை கைது செய்தனர். குறித்த நபர் இந்த கடத்தல் கும்பலுக்கு மயக்க மருந்துகளை விநியோகித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. விசாரணைகளின் பின்னர், கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் சந்தேக நபர்கள் நேற்று மாலை (30) மட்டக்களப்பு நீதிவான் நீதமன்ற நீதிபதி அ.தர்சினியின் அறையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது முதலாவது மற்றும் ஏழாவது சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். பொலிஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி, ஏழாவது சந்தேக நபரை ஏப்ரல் 02ஆம் திகதி வரை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்ய உத்தரவிட்டார். கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் தாய் ஒருவர் உயிருடனும், காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். அத்துடன் அந்த இளம் தாயின் 3 வயது சிறுமி வயல் பகுதியில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில், மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்னவின் கண்காணிப்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவாக, காஞ்சரம்குடா பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், அவர்களின் உறவினர், கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இரு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி என ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது 7ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸாரும் கிழக்கு மாகாண பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். https://adaderanatamil.lk/news/cmne27vza0007356p5d6v6mnr
வடக்கில் அதிகாரத்தில் இருப்பவர்கள் செயற்திறனற்றவர்கள் – ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு adminMarch 30, 2026 அதிகாரத்தில் இருப்போரின் செயற்றிறன் இன்மையும், எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமையுமே அண்மைக் காலமாக எமது பிரசேத்தில் சமூக விரோத செயற்பாடுகளும் போதை பாவனையும் அதிகரிக்க காரணம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக செயலாளர் பன்னீர்ச்செல்வம் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “எமது பிரதேசங்களில் அண்மையில் நடைபெற்று வருகின்ற சம்பவங்கள் வெளிவருகின்ற செய்திகள் எல்லாம் அச்சம் ஊட்டுபவையாக காணப்படுகின்றன. அப்பாவி பெண்கள் மயக்கமுறச் செய்து அவர்களிடம் இருக்கின்ற நகைகளை கொள்ளையிட்டுவிட்டு கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்யபடுகின்றனர். தாயின் கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மகள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுகின்றவர்கள் தடுக்கச் செல்கின்ற காவல்துறையினரை இடித்துக் கொலை செய்கின்றனர். நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களை கணக்கில் எடுக்காமல் ஆலயம் ஒன்றின் கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சிறுமி ஒருவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளநிலை பௌத்த மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இவையெல்லாம், சட்டவிரோதச் செயற்பாடுகளும் போதைப் பொருள் பாவனையும் எமது பிரசேதங்களில் அதிகரித்துச் செல்கின்றன. இவை எமது பிரதேசங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன என்பதையே வெளிப்படுத்தி இருக்கின்றன. எமது பிரதேசங்களில் காணப்படுகின்ற சமூக விரோதச் செயற்பாடுகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்படும்.போதைப் பொருள் இல்லாமல் செய்யப்படும். சிறப்பான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்டும் என்ற நம்பிக்கையில்தான், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் கணிசமான வாக்குகளை தேசிய மக்கள் சக்திக்கு வழங்கி இருந்தார்கள். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளிப்படுத்திய கருத்துக்கள் மீது நம்பிகை வைத்து எமது மக்கள் வாக்களித்த போதிலும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக எமது பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வினைத்திறன் இல்லாதவர்களாகவும், உணர்வு ரீதியான புரிதல் இல்லாதவர்களாகவும் இருப்பதே, எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற ஏமாற்றங்களுக்கு காரணமாக அமைந்து வருகின்றது. அண்மையிலே காவல்துறைஅதிகாரி உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றினை நடத்திய அமைச்சர் சந்திரசேகரர், மணல் மாபியாக்கள் தொடர்பாக தெரிவித்திருக்கின்றார். மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதனை கட்டுப்படுத்த வேண்டியது யார்? உரிய நியமங்களை பின்பற்றி மணல் அகழ்வை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், நியாயமான விலையில் மக்களுக்கு தேவையான மணல் சட்டரீதியாக அகழப்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின், சட்டவிரோத மணல் அகழ்வும் இடம்பெறாது, காவல்துறை அதிகாரியின் உயிரிழப்பும் ஏற்பட்டிருக்காது. கடந்த காலங்களில் நாம் ஆட்சியில் இருந்த காலத்தில், மகேஸ்வரி நிதியத்தின் ஊடாக உரிய நியமங்களை பின்பற்றி நியாயமான விலையில் தேவையானளவு மணல் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான நிலை இன்மையே மணல் மாபியா உருவாக காரணமாகவுள்ளது. இதுபோன்றே யாழ் மலசலகூட விவகாரமும் அமைந்துள்ளது. எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த காலத்தில் யாழ் நகரில் மலசலக்கூட கட்டிடத் தொகுதியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதுதொடர்பாக இலங்கை போக்குவரத்து சபையினருக்கும் மாநகர சபைக்கும் இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்கும் சரியான தலைமை இன்மையே காரணமாக இருக்கின்றது என தெரிவித்தார். https://globaltamilnews.net/2026/231269/