Everything posted by கிருபன்
-
கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கரும்பாக இனிக்கும் கலைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉- தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...!
தளபதி கேணல் கிட்டு ஒரு பன்முக ஆளுமை...! வங்கக்கடலின் பொங்கும் அலைகளில் ஆடி அசைந்து வந்து கொண்டிருந்தது ஒரு கடற்கலம்! அது ஒரு புனிதப் பயணம்! ஈழத்து மண்ணில் பல ஆண்டுகளாகப் பாய்ந்தோடும் தமிழ் மக்களின் குருதி வெள்ளத்தை இல்லாமற் செய்ய பிரித்தானிய அமைப்பொன்றின் சமாதானத் திட்டத்தைச் சுமந்து நகர்ந்து கொண்டிருந்தது! அது! வங்கக் கடலும் வெண்புறா பறக்கும் நாட்களுக்காக ஆதரவளித்து அக்கப்பலை தொட்டு அரவணைந்தது! இந்திய உளவுப்பிரிவின் நச்சுக் கண்கள் அதன் மேல் பாய்கின்றன. பாரதக் கடற்படை அகத் கப்பலைச் சுற்றி வளைக்கிறது. ஆயுத பலத்தால் அதை பாரதக் கப்பல் தன் கடல் எல்லைக்குள் இழுத்துச் செல்கிறது. கப்பலில் பயணித்த போராளிகளை சரணடையும்படி கட்டளை பிறக்கிறது! உயிரணைந்து போனாலும் சரணடையாத புலிகள் கட்டளைக்குப் பணிய மறுக்கின்றனர். சரணடையாவிட்டால் கப்பலைத் தாக்கப் போவதாக மீண்டும் ஒரு கட்டளை! புலிகளின் முகங்களில் கேலிப்புன்னகை! கப்பல் வெடித்துச் சிதறுகிறது! விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியையும் தோழர்களையும் உயிருடன் பிடித்துவிடலாம் என்ற பாரதத்தின் நப்பாசை கப்பலுடன் சேர்ந்து சிதறிப்போகிறது! கிட்டுவும் அவருடன் வந்த 12தோழர்களும் நிலையாமை என்ற பூலோக வாழ்வுக்கு விடை கொடுத்துவிட்டு என்றும் தமிழ் மக்களின் நெஞ்சில் நின்று நிலைக்கும் பேரின்ப நிலையை எட்டுகின்றனர். ஆம்! கிட்டுவும் தோழர்களும் வங்கக்கடலில் சங்கமமாகி ஒரு மாபெரும் தியாக காவியம் வீர வரிகளால் எழுதி விட்டனர்! வஞ்சமனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் - இது வள்ளுவன் குறள். ஆகாய நீர், காற்று, பூமி, நெருப்பு எல்லாமே இந்தியாவை பார்த்து அகத்தை நகைக்கவில்லை! எல்லா மூலைக்கும் கேட்கும் விதமாக எள்ளி நகையாடின. எப்படியிருப்பினும் - நாம் மூத்த தளபதி கிட்டுவை இழந்தோம்! கிட்டு - எதிரிகளைக் கலங்க வைக்கும் ஒரு ஒப்பற்ற வீரத் தளபதி! கிட்டுவின் அணி வருகிறது என செய்தி கிடைத்தாலே சிங்களப் படை அஞ்சிப் பின்வாங்கும் அளவுக்கு அவனிடம் ஒரு ஆளுமை கொப்பளித்தது! களத்தில் கிட்டு இறங்கவிட்டால் சக போராளிகளிடம் பலம் பன்மடங்கு பெருகிவிடும். கிட்டு ஒரு அரசியல் வாதி! விடுதலையுணர்வை மக்களுக்கு விதைப்பது, போராட்டப் பணிகளில் மக்களை ஈடுபடுத்துவது, தெளிவான அரசியல் பார்வையை தோழர்களுக்கு ஊட்டுவது, எந்நேரமும் மக்களோடு மக்களாக உறவாடுவது - இவையெல்லாம் அவன் அரசியல் ஆளுமை! கிட்டு ஒரு ராஜதந்திரி! இந்திய இராணுவம் எமது மண்ணை ஆக்கிரமித்திருந்த போது இந்தியாவிலேயே தலைமறைவாக இருந்து கொண்டே எமது போராட்டத் நியாயங்களை வெளிநாட்டு தூதுவராலயங்களுக்கு விளக்கினான். ஆங்கில வெளியீடுகள் மூலம் பரப்புரை மேற்கொண்டான். இலண்டனில் இருந்து கொண்டு பன்னாட்டு போராட்ட அமைப்புகளுடனும் தொடர்புகளை மேற்கொண்டான். கிட்டு ஒரு ஊடகவியலாளன்! பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி எனப் பல்வேறு ஊடகங்களை ஆரம்பித்து தானே நெறிப்படுத்தி விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஊடகப் பலம் சேர்த்தவன் கிட்டு. கிட்டு ஒரு புகைப்படக் கலைஞன்! கிட்டுவின் கழுத்தில் என்றுமே இணைபிரியாமல் இருப்பவை இரண்டு. ஒன்று - சயனைட் குப்பி! மற்றது புகைப்படக் கருவி! எந்த நெருக்கடியான சண்டையிலும் அவன் ஒரு கையில் துப்பாகியுடனும் மறுகையில் கமெராவுடனும் நிற்பான். எந்த ஒரு சம்பவத்தையும் அவன் ஆவணப்படுத்த தவறுவதில்லை. கிட்டு ஒரு ஓவியன்! அவனின் ஓவியங்களில் கற்பனைகளும் கனவுகளும் சிறகடிக்கும்! ஆத்மார்த்த உணர்வுகள் கொப்புளிக்கும் விடுதலையுணர்வு வீறுகொண்டெழும்" அவனின் ஓவியங்கள் வெறும் படைப்புக்களல்ல! மனிதரை செயல் நோக்கி உந்தித்தள்ளும் விசைகள்! கிட்டு ஒரு கவிஞன்! அவனின் கவிதைகளில் மண் மணக்கும்! வல்லை வெளிப் பூவசரசும், உடல் தழுவும் உப்புக்காற்றும் மெல்ல நடை பயிலும். கள்ளிறக்கும் கந்தனும், மீன்பிடிக்கும் மரியானும் சமத்துவம் தேடி அவன் கவிதைகளில் சங்கமிப்பார்கள். காதல் உணர்வு கடல் கடந்தும் சிறகடிக்கும்! இப்படி இப்படியாக - கிட்டு ஒரு பன்முக ஆளுமையின் அவதாரம்! ஒரு விடுதலைப் போராட்டத் தளபதியின் தலைசிறந்த முன்னுதாரணம்! இந்தி அரசே! அந்த அற்புதத்தை வங்கக்கடலில் வைத்து அழித்தாய்! இப்போது கேட்கிறோம்! அவனை உன்னால் எமது நெஞ்சிலிருந்து அழிக்க முடியமா? எம், இதய நரம்புகளில் இன்றும் விடுதலை உணர்வை மீட்டிக்கொண்டிருக்கும் அவனின் நினைவுகளை அழிக்க முடியுமா? முடியாது! உன் இலட்சக்கணக்கான படையினராலும் முடியாது! உன் பலம் வாய்ந்த புலனாய்வு அமைப்புக்களாலும் முடியாது! ஏனெனில் - கிட்டு எங்கள் மண்ணில் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் வாழ்கிறான்! செண்பகப்பெருமாள். தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த சிறப்பு தளபதியும்,தேசியத் தலைவரின் உற்ற தோழமையுமான தளபதி கேணல் கிட்டு உட்பட ஏனைய பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்...! தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால் முற்றுகையிட்ட வேளை பாரத அரசின் நயவஞ்சகத்தால் 16.01.1993 அன்று கப்பலுடன் தம்மைத் தாமே தீயிட்டு அழித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ||தாய்மண்ணின் நினைவுகளுடன் வங்கத்திலே தீயுடன் சங்கமித்த வேங்கைகள்…… கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) லெப்.கேணல் குட்டிசிறி (இராசையா சிறிகணேசன் – சுதுமலை வடக்கு, மானிப்பாய்) மேஜர். வேலன் / மலரவன் (சுந்தரலிங்கம் சுந்தரவேல் – வியாபாரிமூலை, பருத்தித்துறை) கடற்புலி கப்டன் குணசீலன் / குணராஜ் (சேகரன்குருஸ் மைக்கல் ஜீவா – 2ம் குறுக்குத்தெரு, உதயபுரம், மணியம்தோட்டம்) கடற்புலி கப்டன் றொசான் (இரத்தினசிங்கம் அருணராசா – அரசடி வீதி, நல்லுர், யாழ்ப்பாணம்) கடற்புலி கப்டன் நாயகன் (சிவலிங்கம் கேசவன் – பொலிகண்டி, வல்வெட்டித்துறை) கடற்புலி கப்டன் ஜீவா (நடராசா மார்க்ஜெராஜ் – கொய்யத்தோட்ட ஒழுங்கை, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். தூயவன் (மகாலிங்கம் ஜெயலிங்கம – கண்டிவீதி, யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். நல்லவன் (சிலஞானசுந்தரம் ரமேஸ் – மணியந்தோட்டம், கொழும்புத்துறை யாழ்ப்பாணம்) கடற்புலி லெப். அமுதன் (அலோசியஸ் ஜான்சன் – 2.ம் குறுக்குத்தெரு, நாவாந்துறைவடக்கு, யாழ்ப்பாணம்) தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.battinaatham.net/description.php?art=18367- கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்திரி🎉🎉🎉- போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்!
போராட்ட வரலாற்றில் என்றும் எங்களுடன் சாள்ஸ்! 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? ” நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?” தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார். மன்னார் களமுனையின் பின்னணியில் எதிரியின் சிறப்பு அணிகள் நிலையெடுத்துள்ளன. பிரதான வீதிகளினூடான பயணம் பாதுகாப்பானதல்ல. இவை எதிரியின் வழமையான நகர்வுகள் என்பதாக எனது கருத்துகளைச் சொல்லி பயணத்திட்டத்தை முன்னெடுக்க முற்பட, தலைவர் தீர்மானமாக கூறுகின்றார். ~அங்கு நிற்கும் பாணு, சொர்ணம் ஆகியோருக்கும் பிரதான வீதி பாதுகாப்பானதல்ல எனச் சொல்லப்பட்டுள்ளது நீ போக வேண்டாம். எம் மன்னார் பயணத் திட்டத்தை தலைவர் தடுத்து நிறுத்திவிட்ட மறுநாள். அன்றைய மாலைப் பொழுதைப் பரபரப்பாக்கும் வகையில் மன்னாரில் எதிரியின் கிளைமோர் தாக்குதலொன்று நடைபெற்றுவிட்ட செய்தி வந்து சேர்ந்தது. அண்ணை சொன்ன புலனாய்வுத் தகவல் மிகச் சரியாகவே அமைந்திருந்தமை பற்றிய எண்ண ஓட்டத்துடன் எதிரியின் அத்தாக்குதலிற்கு உள்ளானவர் யார்? கேள்விக்குப் பதிலைத் தேடியபோது நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சியாகவும், வேதனைமிக்க பேரிடியாகவும் வந்து சேர்ந்தது அந்தச் செய்தி. அந்தத் தாக்குதலில் எங்களின் சாள்ஸ் வீரச்சாவு. படையப்புலனாய்வுப் பொறுப்பாளர், தளபதி சாள்ஸ் வீரச்சாவு. அன்றைய நாளின் பின் இரவில் சாள்சின் பிரிவின் வேதனையுடன் தனிமையில் இருந்தார் தலைவர் அவர்கள். சாள்சின் வித்துடலுக்கான வீரவணக்கத்திற்கு வரச்சொல்லிக் கேட்க ~அவனைக் கடைசியாகக் கண்ட அந்த முகமே நினைவில் இருக்கட்டும்| என்றதும், “சாதித்தவன் போய்ச் சேர்ந்துவிட்டான்” என்றதுமே தலைவரின் சுருக்கமான வார்த்தைகளின் சாரம்சமாகும். அதிகம் பேசாது தலைவர் தனது சட்டைப் பையில் இருந்ததை எடுத்துத் தந்தார். அது நாலாக மடிக்கப்பட்ட கணினியில் தட்டச்சுச் செய்யப்பட்ட அறிக்கைத்தாள். மூன்று நாட்களுக்கு முன்னர் சாள்ஸ் அனுப்பியிருந்த புலனாய்வு அறிக்கை அது. மன்னார் களமுனையின் பின்னணிச் சாலையைக் குறிவைத்து, ஊடுருவித் தாக்குதல் செய்ய எதிரியின் அணிகள் நிலையெடுத்துள்ளமையை, எடுத்து வெளிப்படுத்தி, வலியுறுத்தியிருந்தது. படையப்புலனாய்வின் முக்கிய மூலத்தில் இருந்து கிடைத்த ஆழமான தகவல்களைக் குறிப்பிட்டுத் தயாரிக்கப்பட்டிருந்த தீர்மானமான அறிக்கை அது. மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம் என்ற கணிப்பை முற்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ், அதே சாலையில் எதிரியின் கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா? இந்திய இராணுவம் எம் மண்ணை விட்டகன்று அமைதி நிலவிய நாட்கள். பிறேமதாசா அரசும் புலிகளும் பேச்சு நடத்தி வந்த நேரமது. எமது மக்களுக்கு ஏதோ ஒரு நன்மையைச் செய்ய பிறேமதாசா அரசு முன்வருமா? என்ற எண்ணத்தில் அனைவருமே ஆழ்ந்திருந்தனர். இந்திய இராணுவத்தினரின் நெருக்கடி மிக்க சுற்றிவளைப்புக் காலத்தில், பிரிந்திருந்த தலைவரின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்திருந்த காலமுமதுதான் – அவ்வேளையிற்தான் அவ் அறிக்கை கிடைத்தது – எம்மவர்களால் புறக்கணிக்க முடியாத முக்கியமான அறிக்கை. அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவும், பலாலியில் இருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியும் இணைந்து செயற்படுத்தும் திட்டத்தின் விபரங்கள் கிடைத்திருந்தன. அக் காலப்பகுதியில் தலைவர் அவர்களது துணைவியார் மதியக்கா நல்லூர் கோவிலுக்குச் சென்றிருந்ததை உதயன் பத்திரிகை சிறு செய்தியாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியை அடிப்படையாக வைத்து அமைந்திருந்தது சிறிலங்காவின் திட்டம்; மதியக்காவை பின்தொடர்ந்து கண்காணிப்பதற்கான ஏற்பாடும், அதனைத் தொடர்ந்து தலைவரின் இடத்தைக் கண்டறிவதும், தலைவரைக் கொலை செய்வதுமான திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கையது. தென்னிலங்கையில் எழுந்த ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்கியதன் மூலம் சிறிலங்காவின் அரச இயந்திரம் புத்தூக்கம் பெற்றிருந்த காலமது. எமது விடுதலைப் போரையும் அதே வழியிற் சென்று முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையுடன் நகர்வுகளில் இறங்கியிருந்தனர். ஜே.வி.பியை ஒடுக்குவதில் நேரடியாக முன்னின்று செயற்பட்ட பாதுகாப்பு அமைச்சர் றஞ்சன் விஜயரட்ணாவின் மிக நேரடியான வார்த்தைகளில் அமைந்திருந்தது – அவ் அறிக்கையிலிருந்த திட்டம். அறிக்கை துல்லியமானதாக, தெளிவானதாக, இறுக்கமானதாக, இருந்தது. மதியக்கா அவர்களைப் பின்தொடர்ந்து தலைவர் அவர்களது இருப்பிடத்தைக் கண்டறிந்து தலைவரைக் கொன்றுவிட வேண்டும் எனும் நேரடியான கட்டளை என்பதாகவும் அமைந்திருந்தது. நிலைமை தெளிவாகத் தெரிந்தது. சிங்களம் உண்மையுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வஞ்சகத்தின் வழியிற் பேசுகின்றது என்பது தெளிவாகிவிட்டது. கொல்லும்வரை பேசுவோம் – ~கொல்லச் சந்தர்ப்பம் கிடைப்பதற்காகப் பேச்சுவார்த்தை நடத்துவோம்| என்பதாக அமைந்திருந்தது சிங்களத்தின் வியூகம். எமக்கு அதுவொரு சவால். சிறிலங்காவின் திட்டம் எமக்குத் தெரியுமென்பது இரகசியமாக வைக்கப்பட்டது. ஆனாலும் இனிச் செய்வது என்ன? என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தது. ஆம் அவர்களின் வழியிலேயே அவர்களுக்கு பதிலளிக்க வேண்டும். அதனை எப்படிச் செய்வது? யார் செய்வது? அவர்களது தலைநகரத்தில் அவர்கள் முடக்கப்பட வேண்டும். அவர்களது செயற்பாடுகளை கொழும்பிலும் முடக்க எம்மால் முடியுமென்பது நிரூபிக்கப்படவேண்டும். தலைவர் தனது வார்த்தைகளில் சொன்னார் இதுதான் எமக்கொரு ஆற்றல் மிக்க புலனாய்வு அமைப்பு வேண்டுமென்று சொல்வது. நாமோ… பெயரளவிலேயே புலனாய்வு என்ற பெயர் தரித்திருந்தோம். அக் காலப்பகுதியில் நாம் புலனாய்வு ரீதியாக எந்தவொரு அடிப்படையையுமே உருவாக்கியிருக்கவில்லை. சொல்லப்போனால் புலனாய்வு என்ற எண்ணக்கருவை மனதிற் கொண்டிருந்தோம் என்பதற்கு மேலாக புலனாய்வு ரீதியாக நாம் எந்தவொரு கட்டமைப்பையோ அல்லது அதற்கான ஆளணிகளையோ கூடக் கொண்டிருக்காத காலமது. சாள்ஸ் நினைவிற்கு வந்தான். 1988. யாழ். மாவட்டப் பணிக்காக, மணலாற்றில் இருந்து யாழ். நோக்கிப் பயணம் மேற்கொண்டிருந்தேன். விசுவமடுவில் உள்ள கிராமம் ஒன்றில் ஓய்விற்காக அமர்ந்திருந்தோம். எனது உதவியாளர்களில் ஒருவராய் இருந்த கிளி, சாள்சை எனக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது சாள்ஸ் கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய சண்டையணிப் போராளிகளில் ஒருவர். முதலாவது அறிமுகத்திலேயே சாள்சை அடையாளம் கண்டுவிட்டேன். சாள்சின் ஆற்றலை முழுமையாக அடையாளம் கண்டுவிட்டதாகக் கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட பொய். கொழும்பிற்குச் சென்று வரக்கூடிய துணிவும், அதற்குப் பொருத்தமாக சிறிலங்கா அரசால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டையும் கைவசம் வைத்திருக்கும் ஒரு போராளி. கொழும்பில் சில வேலைகள் செய்ய வேண்டி வரலாம் எனத் தலைவர் அவர்கள் கூறிவிட்டது நினைவிற்கு வர, அன்றே சாள்ஸ் என்வசம் ஆனான். ஆயுதங்கள் களைந்து பொதுமக்களின் உடை தரித்த போராளியானான். இந்திய இராணுவம் இங்கிருந்த காலத்திலேயே வேறு வேலையாகச் சென்று கொழும்புடன் ஓரளவு பரீட்சயத்தை ஏற்படுத்தியிருந்த சாள்ஸ் முன்வந்தான். நான் செய்கிறேன். ~என்னால் முடியும் அம்மான்| என்று முன்வந்தான். இருபது வயதே நிரம்பிய இளைஞன்; வஞ்சினம் பொங்கும் நெஞ்சினனாய் கொழும்பு நோக்கிப் பயணிக்கின்றான். இன்றும் நினைவில் மாறாத அன்றைய நாள். அதன்பின் யாழ்ப்பாணத்திற்கு வராமலேயே நின்றுவிட்ட அந்தப் புகையிரதம். – யாழ்;தேவி புகையிரதம் – சாவகச்சேரி நிலையத்திலிருந்து சாள்சையும் ஏற்றிக் கொழும்பு நோக்கிப் போகின்றது. புகையிரதம் திரும்ப வரவில்லை. சாள்ஸ் மீண்டு வந்தான். வெற்றி வீரனாக, தேசத்தை நோக்கி உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த சாதனையாளனாகத் திரும்பி வந்தான். 1990 கொழும்பில் சாள்ஸ்; அவனோ மிகவும் இளவயது இளைஞன்; கொழும்பிலோ சரியான தொடர்புகள் இல்லை. இலக்கற்ற வகையில் அலைச்சல், கொழும்பு சிங்களக் கொழும்பாக இருக்க அந்தக் கொழும்புக்குள் கால் பதிக்க முடியாமல் தனி இளைஞனாக அலைந்து திரிந்தான். ஆரம்பத்தில் அவனது கொழும்புப் பயணமும் கூட எல்லாம் நல்லபடியாக அமைந்துவிடவில்லை. அவனது ஆரம்பப் பயணத்திலேயே வழித்துணையாக புகையிரதம் ஏறிச்சென்ற மனிதன் கொழும்பு புகையிரத நிலையத் திலேயே தனியாக இறங்கி, மெதுவாகக் கழன்றுவிட தனித்துநின்று, பின் ஆசுவாசப்படுத்தி தெரிந்த ஓரிடத்தில் நிலைபெற்று தொடங்கியதுதான் அவனது செயற்பாடு. உள்ளுரில் முன்னரே அறிமுகமாகியிருந்த துரோகி – நல்லவேளையாக துரோகி என்று முன்னரே அடையாளம் தெரிந்த துரோகி – கண்டுவிட்டுப் பின்தொடர சுழித்துத் தப்பியோடினான் சாள்ஸ். துரோகியானவன் தொடர்ந்து முயற்சித்தும் முடியாமற் போகும் வரை சுழித்து விட்டு, ஓடித்தப்பி மூச்சுவிட்டு முன்னேறித்தப்பியிருந்தான் சாள்ஸ். ஆனாலும் கொழும்பை விட்டுவிட்டு வர முடியாதபடி கடமை முதன்மையானது. சாள்ஸ் மறைமுகச் செயற்பாட்டாளனாய் களத்தில் நின்ற காலத்தில் அவனுக்கு அதிர்ஷ்டம் என்று கூறப்படும் luck உம் கொஞ்சம் உதவி செய்யாமல் இல்லை. இந்திய இராணுவம் இருந்த காலத்தில், பயணத்தில் கட்டாய ஆட்சேர்ப்பிற்கு என்று கூறி ஈ.என்.டி.எல்.எஃப். ஆல் ஒருமுறையும், பின்னர் கொழும்பிற்குப் போகையில் வவுனியாவில் வைத்து புளொட் ஆல் இன்னொரு தடவையும், கொழும்பு விமான நிலையத்தில் சிறிலங்கா புலனாய்வாளர்களினால் மீண்டும் ஒரு தடவையுமாக கைதாகிப்போன அனுபவமும் பெற்றிருந்தான். அவனது உரையாடற்திறனும், சொன்ன மறைப்புக் கதைகளும் அவனது luck உம் ஒன்றாய் இணைந்து அவனை விடுவித்தன. அவனது உதவியாளர்கள் எல்லோரும் உத்தமமானவர்களாகவும் அமைந்து விடவில்லை. முதலாளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாக்குறுதிகள் தந்து சென்றவர். முதலாளி இங்கு நிற்கும் போது அவரைச் சந்திக்க இரவிரவாக, இரகசியமாக தொண்டமனாறு மற்றும் அச்சுவேலி நோக்கிப் போவோம். கொழும்பில் எல்லாம் செய்யலாம், வெல்லலாம் என்று அந்தமாதிரி வாக்குறுதி வழங்கினார் மனிசன்: நடவடிக்கைக்குத் தேவையான தவிர்க்க முடியாத உதவியைக்கேட்டு அவரது கடைவாசலில் தவமிருப்பான் சாள்ஸ். சந்திக்கும் வேளைகளில் மாலை அல்லது நாளை வாருங்கள் என்று சொன்னவர், நாளாக நாளாகச் சந்திப்பதையே தவிர்த்து காய்வெட்டித் திரியத் தொடங்கினார். நம்பிக்கை இழந்தாலும் வேறு வழியில்லாமல் கடைவாசலில் போய்க் குந்தியிருப்பான் இவன். தினமும் இவன் காத்திருப்பதைக் கண்ட பக்கத்துக்கடை முஸ்லீம் ஐயா, ‘இவனை நம்பி மினக்கெடாதீர்கள், அவன் சரியான சுத்துமாத்துப் பேர்வழி” என்று சொல்ல இறுதியாய் நம்பிக்கையிழந்து சோர்ந்துபோய் நின்றான். பணம் பறிப்பதிலேயே குறியாக இருக்கும் இன்னும் சில உதவியாளர்கள்; 300 ரூபா பொருளை 3000 ரூபா விலை சொல்லி பணம் கேட்கும்போது எல்லாம் தெரிந்தும் தெரியாததுபோல் பணத்தை எடுத்து கொடுப்பான் சாள்ஸ்; பணம் கேட்பவருக்குச் சிங்களக் காவற்ருறை, இராணுவத்தினரின் தொடர்பு உள்ளது சாள்சிற்குத் தெரியும். தனது பாதுகாப்பான செயற்பாட்டுத் தேவைக்கு அவரது நட்பு அவசியம் என்று உணர்ந்ததால் அதற்குக் கொடுக்கும்விலை அந்தப் பணமென்பது சாள்சினது கருத்து. ஆனால் பாவம் அந்த உதவியாளரோ வலு கெட்டித்தனமாக சாள்சை ஏமாற்றி அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதான நினைப்பு அவருக்குள். கொஞ்சம் கொஞ்சமாய் சாள்சிற்கு இடமும், ஆட்களும் பிடிபட இரகசியச் செயற்பாட்டில் முதிர்ந்தவனாகி விட்டான். யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இருந்த அவனது தோழர்கள் தொடர்புகளை தொட்டெடுத்துக் கொடுக்க இடங்களும் ஆட்களும் நெளிவு சுழிவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபட கொழும்பில் அகலச் சிறகு விரிக்கத் தொடங்கிவிட்டான் சாள்ஸ். கொழும்புத் தெருவெங்கும், அங்குள்ள ஒழுங்கையெங்கும், சிங்களத்துச் சேரிப்புறமெங்கும் சடசடத்து, சீறிப்பறக்கும் அவனது உந்துருளி. வீதிக்காவலர் மறிக்க நின்று கதைசொல்வதும் நிற்காமல் இழுத்து ஓடி மறைவதுமாக மாறி மாறி நடக்கும் அவனது பயணங்கள். கொழும்பில் நின்ற சாள்சிற்கான முகவர் ஒழுங்கு, பொருள் வழங்கல் என பின்னணிப் பணிகளைக் கவனித்தான் சுருளி. தாக்குதலிற்கான வெடிமருந்து இணைப்பை பரிசீலிக்கும் வேளையில் தவறு நடந்துவிட வெடிவிபத்தில் சுருளி வீரச்சாவு. மேஜர் சுருளியின் வீரச்சாவால் மனம் சோர்ந்து போனாலும், பணி சோராமல் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார் மாதவன் மாஸ்ரர். கீதனின் அறிமுகத்தில் மாதவன் மாஸ்ரர் நகர்த்திய நற்குணத்தாரும், விடுதலைப் புலிகள் ரவி அறிமுகப்படுத்திய வரதனும் சாள்சுடன் இணைந்துகொள்ள இருள் விலகி நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படத் தொடங்கியது. ~வரதன்| சாள்சிற்குக் கிடைத்த அரிய துணை. நடவடிக்கை நகர்வின் தடைகளைப் புரட்டி ஓரம்தள்ளி பாதை அமைத்துக்கொடுத்த துணையானான். முன்பு வேறொரு பின்னணியில் கொழும்புப் பரீட்சயமும், ஆளணி அறிமுகமும் கொண்ட வரதனின் புதிய வேகத்துடன் காரியங்கள் முன்னகர்ந்தன. அதைவிட சாள்சின் தனித்த முயற்சியாலும் கணிசமான வெற்றி; இலக்கு அடையாளம் காணப்பட்டு விட்டது. அதுவும் துல்லியமாய்; இனித் திட்டமிட வேண்டியதும் செயற்படுத்த வேண்டியதும்தான் பாக்கி. திட்டமிடல்கள்…, நகர்வுகள்…, கரும்புலிகள்…, பயிற்சிகள்;…, என்று புலனாய்வுச் சக்கரமும் – செயற்திட்டத்திற்கான சக்கரமும்- முன்னோக்கி நகர்ந்தன. நடவடிக்கையாளர்கள், மற்றும் கரும்புலிகள் சென்றனர். எங்களுக்கும் அது பட்டறிவுக்குறைவான காலம். நடவடிக்கைக்கென தெரிவு செய்யப்பட்ட ஆள் சறுக்கிப் பின்வாங்கிவிட, குழப்பமான நிலைமை. முன்னோக்கிய நகர்வு கீழிறங்கிவிட்ட நிலைவரம். புதிய கரும்புலிக்கு அவசர அவசரமாக பயிற்சியும், தேவையான நகர்வுகளுமாக திட்டம் முன்னகர்ந்தது. புதிய ஏற்பாடுகளுடன் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கிய முயற்சியில், கிடைத்தது வெற்றி! அந்த அரிய வெற்றி! கொழும்பை உலகெல்லாம் திரும்பிப் பார்க்க மகிழ்ச்சிக் கடலில் மிதந்தது தமிழர் தேசம். விடுதலைப் போராட்டத்திற்கு ஆப்புவைக்க முற்பட்ட சிங்களத்தின் கொழும்பில், அவர்களது தலைநகர் கொழும்பில் வைக்கப்பட்டது வெடி, அவர்களுக்கு அது மரண அடி. ~வீழ்ந்தான் எதிரி, – வென்றான் சாள்ஸ்| என்று இங்கு அவனது தோழர்கள் ஆளையாள் கட்டித்தழுவிக் கொண்டாடி மகிழ்ந்தது தனிக் கதை. வெற்றி தந்த மகிழ்ச்சியில், வெற்றி தந்த ஊக்கத்தில் அடுத்தடுத்த நகர்வுகள். சாள்சின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்க வரதனின் ஏற்பாட்டில் குவேந்தி, ரவியர், இந்திராக்கா என நல்ல பொருத்தமான உதவியாளர் வட்;டம் அமைந்து விட்டது. சாள்சின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தளத்தில் இருந்த ஏற்பாடுகளும் அந்த மாதிரி அமைந்துவிட ~அடுத்ததும் கிடைத்தது அற்புதமான வெற்றி|. முதலாவது சம்பவத்தைப்போல் இம்முறையும் நடவடிக்கையாளர்கள் சறுக்கிப் பின்வாங்கிவிட்ட நிலை. முன்னைய அனுபவம் தந்த பாடத்தால் அகிலாவின் ஏற்பாட்டில் முன்கூட்டியே நகர்ந்து காத்திருந்த இரண்டாவது கரும்புலி சந்திரன் முன்வந்தான். ~மனிசனாய்ப் பிறந்தவனுக்கு கொஞ்சமாவது ரோசம் இருக்கவேணும்| என்று சொல்லி சந்திரன் முன்வர தாமதமில்லாமலேயே உடனடியாக நகர்ந்தது திட்டம். தேர்ச்சி பெறாத கரும்புலிச் சாரதியான சந்திரனை அருகிருத்தி வெடிமருந்து வாகனத்தை ஓட்டிச்சென்றான் குவேந்தி. குவேந்தியை அழைத்துவரப் பின்தொடர்ந்து சென்றது சாள்சின் உந்துருளி. இம்முறை சிறிலங்கா கூட்டுப்படைத் தலைமையகம் தகர்ந்தழிந்தது. கூட்டுப்படைத் தலைமையகத்தின் வெற்றி. எல்லோரும் வெற்றி தந்த மகிழ்வில் திளைத்திருக்க, இந்தமுறை சறுக்கியது எங்களுக்கு. ~ஆயிரம் கிலோ வெடிமருந்துடன் வெடிக்கும் வாகனத்தில் தடயம் எங்கே மிஞ்சப்போகின்றது| என நாம் நினைத்ததற்கு மாறாக எம் கரும்புலியின் வாகனத்தின் – இலக்கத்தகடு – ~முழுத்தடயமாய்க் கிடைத்தது எதிரிக்கு|. வரதன் தேடப்பட வந்தது சிக்கல். மறைப்பிடங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்திராக்கா மட்டத்தில் கொஞ்சப்பேர் கைதாக, கூட்டுப்படைத் தலைமையக கரும்புலி நினைவாக போராளிப் பெயராய் சந்திரனின் பெயரை தனக்குச்சூட்டிய அப்போதைய குவேந்தியை ~தப்பிப்போ| என்று அனுப்பிவிட்டு வரதன் சயனைற் அருந்தி வீரச்சாவு. புலனாய்வுச் சக்கரத்தின் மறுபக்கம், வீரச்சாவுகள்…, கைதுகள்…, சித்திரவதைகள்…, என துயரமும் வலியும் கலந்த வேதனையான மறுபக்கம். – குழம்பியது கட்டமைப்பு. இளவயதுச் சாள்ஸ், நான்கு சகோதரர்களைக்கொண்ட ஐந்தாவது கடைசிச் செல்லப்பிள்ளை. ஓரளவு வளர்ந்து பெரியவனாகும் வரையிலும் அம்மாவின் உடையைப் பற்றிப் பின்தொடர்ந்து செல்லும் செல்லம். குடும்பத்தில் மற்றவர்களைப் போலவே படிப்பில் படுசுட்டி ஆனால் மற்றவர்களைப்போல்; படிப்பிற்கென நேரம் ஒதுக்கி மினக்கெடமாட்டான். செல்ல மகன் படிப்பில் பின்தங்கிவிடுவானோ என்று அம்மாவிற்குப் பயம். வயது ஏற ஏற எல்லாவற்றையும் அம்மாவிடம் கேட்டுச் செய்வது குறையத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அவனது சொந்த இடமான பருத்தித்துறை இராணுவ முகாம் வடபகுதியின் பெரிய இராணுவ முகாம்களில் ஒன்று. முற்றுகைக்கு உள்ளான நிலையில் முகாமைச் சுற்றி புலிகளுடன் காவல் நின்றனர் ஊரில் உள்ள இளைஞர்கள். தனது பாடசாலைப் பருவத்தின் இளைய காலத்திலேயே இராணுவ முகாம் காவலரண் இளைஞர் அணியுடன் தொடர்பு ஏற்பட, படிப்புப் பாழாகின்றதே என்று அம்மாவிற்கு படபடப்பு. படிப்பிற்கென்று நேரம் ஒதுக்கி மினக்கெடுவது கிட்டத்தட்ட நின்றே போய்விட்டது. ~நீ இப்படியிருந்தால் அக்காமார் உத்தியோகத்திற்குப் போக நீ அவர்களுக்கு ரைவராகத்தான் போகப் போகின்றாய்| என அம்மா செல்லமும் கண்டிப்புமாய் பகிடி பண்ணுவா. அவனது க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் நல்ல பெறுபேறு வந்தபோது குடும்பத்தில் எல்லோருக்கும் பெருமைதான். அம்மாவிற்கு மட்டும் ~இன்னும் கொஞ்சம் கவனம் எடுத்திருந்தால்| என்ற வழமையான ஆதங்கம். க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஒரு வாரம்கூட ஆகியிருக்கவில்லை. ~குஞ்சு கூட்டைவிட்டுப் பறந்து விட்டது.| ஆம் சாள்ஸ் இயக்கத்தில் இணைந்துவிட்டான். சாள்ஸ்சின் தமையனார் தனது காலத்தில் 1980களில் இயக்கத்தில் இணையவென பாடசாலை நண்பனான ஜொனியுடன் சேர்ந்து பெயர் கொடுத்திருந்ததும், அம்மாவிற்குச் சொல்லாமல் போக மனமில்லாமல் கடைசியாய் ஒருமுறை அம்மாவிடம் சொல்லிவிடடுப் போக வந்ததும், அம்மா எல்லா அம்மாமாரையும்போல அழுது மன்றாடி மகனை மறித்ததுமான நிலை சாள்சிற்கு வரவில்லை. பதினைந்து, இருபது ஆண்டுகள் கழிந்த பின்னரும் தமையனை நக்கலடிப்பான். ~இயக்கத்திற்கு போறதுக்கும் அம்மாட்டைச் சொல்லிவிட்டுப் போகவந்த ஆளிவர்| என்று. குடும்பத்தினருடன் இவனுக்கான உறவு அதுவொரு அபூர்வமான உறவுநிலைப் பிணைப்பு. தந்தை, தாய், மகன், உறவுநிலைக்கு அப்பால் குடும்பத்தில் உள்ள அனைவரும் சாள்சின் ஆளமை வீச்சுக்குள் கட்டுப்பட்டிருந்தனர். இன்னும் சொல்வதானால் இவனொரு பெரிய பொறுப்பாளராகவும், அம்மா, அப்பா மற்றும் இவனது மூத்த சகோதரர்கள் அனைவரும் இயக்கத்தில் அப்போதுதான் சேர்ந்த புதிய போராளிகள் போல் ஓடுப்பட்டும், கட்டுப்பட்டும் நடப்பதைப் பார்க்க எங்களுக்கு வியப்பும், சிரிப்புமாய் இருக்கும். வளர்ந்து பெரியவனாகி, இயக்க முதிர்ச்சியும் சேர்ந்துவிட, சாள்ஸ் குடும்பத்தின் தலைமகனாய் ஆகிவிட்டான். குடும்பத்தினர் எல்லோரும் எதற்காகவும் அவனது ஆலோசனையைப் பெறுவது என்ற நிலைவந்து விட்டது. சாள்ஸ் தனது பெற்றோருடன், சகோதரர்களுடன் பழகுவதைப் பார்க்க அலாதியாய் இருக்கும். பெற்றோர், சகோதர உறவு என்ற நிலை அல்லாது நல்ல சினேகித வட்டம் ஒன்று ஒன்றாய்க் கூடியிருந்து பம்பலடிப்பது போலிருக்கும். சாள்சின் பணிகளில் இணைந்தும் சேர்ந்தும் அவனது பெற்றோர் குடும்பத்தினர் ஆற்றிய விடுதலைப் பணியும் பங்களிப்பும் இன்னொரு பக்க வரலாறாய் விரியும்…. சாள்சின் நண்பர்கள் அனைவரையும் தம் பிள்ளைகளாய், சகோதரராய் கொண்டாடி இன்பத்திலும் துன்பத்திலும் கூடி வாழ்ந்திருந்த குடும்பமது. எம்முடன் ஒன்றாயிருந்து வீரச்சாவடைந்த எம் தோழர்கள் நினைவாக நாம் அமைதியாய் உணர்வின் மௌனமாய் இருக்கும் நாள், இயல்பில் சாள்சின் பிறந்த நாளாயும் அமைந்தது. சாள்சின் பிறந்த நாளும் எம்மோடு அமைதியாய்க் கழியும். பிறந்த நாளன்று பிள்ளைக்கு உணவூட்டி மகிழ நினைக்கும் தாயின், குடும்பத்தின் உணர்வுகளும்கூட எம் நிலை கருதி இன்னொருநாளாய் அமையும். விடுதலைப் போராட்டப் பற்றுணர்வை எந்தவொரு கட்டத்திலும் எதற்காகவும் விட்டுக்கொடுக்காமல் வாழ்ந்தவன் சாள்ஸ். அவனது இள வயதுக்காதலி, உறவு முறைச் சொந்தக்காரியும்தான். இயக்க முகாமில் போராளிகளிடையே நடந்த சாதாரண விவாதம் ஒன்றில், போராளிகள் போராளிகளையே திருமணம் செய்தல் சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து முன்வைக்கப்பட, அக்கருத்தின் தாக்கத்துடன் சாள்ஸ் தன் காதலியிடம் சென்றான். அப்பெண்ணைப் போராளியாக்கும் முயற்சியில் சாள்சும், சாள்சை போராட்டத்தில் இருந்;து விலத்தி எடுக்கும் முயற்சியில் அப்பெண்ணுமாக உரையாடல் நடந்தது. அங்கு காதல் தோற்றது. இல்லையில்லை… சாள்சின் போராட்டப்பற்று வென்றது. காதற் பயணம் நின்றது. சாள்ஸ்சின் விடுதலைப் பயணம் தொடர்ந்தது. அதன்பின் அவன் கடமைக்குள்ளேயே ஆழமாய் மூழ்கிவிட்டான். குறித்த காலம் வரை தனிப்பட்ட தனது வாழ்க்கையைப்பற்றிக் கவலைப்படவோ, காதலிக்கவோ நேரமிருக்கவில்லை அவனுக்கு. காலம் ஓடியது. மட்டக்களப்பு சென்றுவந்து வெற்றிகரமான நடவடிக்கையாளன் என்ற வகையில் அவனது பரிமாணம் வளர்ந்திருந்த வேளையில், அவனது திருமணம் கனிந்தது. முன்னைய அனுபவத்தாலோ அல்லது தொடர்ச்சியான பணிசார்ந்து அவனுள் உருவாக்கியிருந்த இயல்பினாலோ என்னவோ பேச்சுத்திருமணம் என்றே நின்று கொண்டான். மருத்துவப் போராளியை மனையாட்டியாய்க் கொண்டு இனிதான வாழ்க்கையில் அழகான மூன்று பிள்ளைகள். துணையைச் சமமாய் மதித்து, வாழ்வையும் பொறுப்பையும் பகிர்ந்துகொள்ளும் நல்ல குடும்பத்தலைவனாயிருந்தான். வாழ்க்கைத்துணை மருத்துவக் கல்விக்காய் தூர இடம் சென்றிருந்த வேளையில் பல மாதங்களாக குழந்தையைப் பராமரிக்கும் நல்ல தந்தையாக, மிக நல்ல கணவனாக விளங்கினான். பணியால் இல்வாழ்விற்கும், வாழ்வினால் பணிக்கும் இடையூறின்றி இனிதாய் நகர்ந்தது அவனது வாழ்வு. புலனாய்வுத் தளத்தில் சாள்ஸ் ஒரு பொறுப்பாளர். எமது துறையின் வெளிக்களப் புலனாய்வின் ஒருபகுதிப் பொறுப்பாளனாய்ச் செயற்படத் தொடங்கிவிட்டான். கொழும்பில் பெற்ற வெற்றிகள் தந்த அனுபவமும், தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தந்த ஊக்கமும் அவனது செயற்பாட்டில் துணை நின்றன. உறுப்பினர்களைப் பயிற்றுவித்தல், மற்றும் எதிரிப் பிரதேசத்தில் தளங்களை உருவாக்குதல் என்ற வகையில் ஆரம்பித்தது சாள்சின் ஆரம்பகாலப் புலனாய்வுப் பணிகள். கொழும்பு அதிகார வர்க்கமும் எமது செயற்பாடுகளைத் தடுப்பதற்கான முறியடிப்புப் புலனாய்வு அமைப்பும் முன்புபோல் இல்லை. அவர்களது செயற்பாடுகளும் விரிவடைந்து செல்லத்தொடங்கிவிட்டது. எமது செயற்பாட்டாளர்களுக்கு முன்புபோல் அல்லாமல் இப்போது தீவிரமான பயிற்சியும் பெருமளவான அறிவுறுத்தல்களும் தேவைப்படுகின்ற நிலைமை. பயிற்சிகள்…, புலனாய்வு வகுப்புகள்…, புதிய தந்திரோபாயங்கள்… என்று சாள்சின் ஆளுமை விரிந்து சென்றது. கரும்புலி நடவடிக்கையாளர்களையும், உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பதிலும், பழகி ஊக்குவிப்பதிலும் சாள்சின் தனித்துவம் சக பொறுப்பாளர்கள் அனைவருக்கும் ஒரு பாடமாய் இருக்கும். பம்பலடித்து விளையாடியும், கண்டித்து அறிவுறுத்தியும் உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பான். விளையாட்டு மைதானத்திலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் அவர்களுடன் கூடி ஒன்றாய்ப்பழகி அவர்களை வென்றெடுப்பான். சாள்சின் பிரதான பயிற்சி ஆசிரியர் பிறேம்நாத் இன் பயிற்சி மைதானங்களிலும், சூட்டுக் களங்களிலுமாக கழியும் அவனது பொழுதுகள். அப் பொழுதுகளிலேயே கரும்புலிகளுடனான உறவும், மதிப்பீடுமாய் அவனது வேலை நகர்ந்திருக்கும். நீந்தத் தெரியாத ஒருவருக்கு இடுப்பில் கயிறு கட்டிக் கடலில் இறக்கி விடுவதாகட்டும், இளைய போராளிகளுடன் உடற்தகைமையிலும், ஆயுதத்திறனிலும் போட்டி போடுவதிலாகட்டும், ஒன்றாய் கூடி உண்டு மகிழ்வதிலாகட்டும் அவர்களுடன் பழகி அவர்களுடனேயே ஒன்றித்து விடுவான் சாள்ஸ். இராணுவத் திட்டமிடலிலும் கூட அவர்களது நிலையறிந்து, தகைமையறிந்து, திட்டம் வகுப்பதிலும், ஆயுத வெடிபொருளைத் தெரிவு செய்வதிலும், மொத்தமாய்க் கவனமெடுப்பான் சாள்ஸ். குறித்த ஆயுதத்தை, குறித்த முறையில், குறித்த போராளி இயக்குவானா? என்று பார்ப்பானே அல்லாமல் பொதுவான ஆயுதம் ஒன்றையெடுத்து ஆட்களிடம் கொடுத்தனுப்பி விடமாட்டான். அது – அதனால் – அவனுக்குப் பொருத்தம் – என்பதாய் அமையும் சாள்சின் திட்டமும் பொருட்களும். அதற்கேற்ப இருந்திருக்கும் போராளிகளுடனான அவனது பழக்கமும் மதிப்பீடும். சாள்சுடன் ஒன்றாயிருந்து, ஒன்றாய்ப் பயணித்து, அவனுடனேயே வீரச்சாவடைந்துவிட்ட லெப். காவலன், லெப். சுகந்தன், லெப். வீரமறவன் ஆகியோரை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவர்கள் அறிவும், ஆற்றலும் கொண்ட எதிர்காலச் சாதனையாளர்களாய் இருந்திருப்பர். ஏனெனில், சாள்சின் தெரிவு அப்படி இருந்திருக்கும். 1997. நாம் யாழ்ப்பாணத்தில் இருந்து பின்வாங்கி வன்னியில் தளம் அமைத்திருந்த காலம். ஜெயசிக்குறு படைநகர்வையும் எதிரி ஆரம்பித்திருந்தான். கொழும்பிற்கான திட்ட நகர்வுகளைச் செய்வதற்கான களச்சூழல் வன்னியில் தடங்கல்களைச் சந்தித்தது. இதேவேளை இந்நகர்வுகளைச் செயற்படுத்தச் சாதகமான களச்சூழல் மட்டக்களப்பில் உருவாகியிருந்த நேரமது. எம்மில் ஒரு பொறுப்பாளர் மட்டக்களப்பிற்குச் சென்று அங்கிருந்து செயற்படுவதென முடிவெடுத்தோம். மட்டக்களப்பு களப்பரீட்சயம் இல்லாத சாள்சை அனுப்ப நாம் தயங்கியபோது ~என்னால் முடியும்| என்று முன்நின்றான் சாள்ஸ். வெளியக வேலைகளிற்காகவும், புலனாய்வுப் பொறுப்பாளனாகவும் சாள்ஸ் மட்டக்களப்பிற்குப் பயணித்தான். மட்டக்களப்பில் நிக்சனின் ஆரம்பத் தொடர்புகளில் இருந்து காந்தி உருவாக்கி வைத்த புலனாய்வுக் கட்டமைப்புத் தளத்தில் நின்று சாள்ஸ் செயற்படத் தொடங்கினான். மட்டக்களப்பில் இருந்த கள நிலவரத்தை தனது ஆளுமை வீச்சிற்குள் எடுத்துக்கொண்டான் சாள்ஸ். விடுதலைப் புலிகளை முற்றுகைக்குட்படுத்திய பெருமிதத்துடன் நடந்த எதிரியின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பதிலடியாக சிங்களத்தின் நகரங்களில் வெடித்தன குண்டுகள்; ஒன்றல்ல, இரண்டல்ல, தொடர்ச்சியாக் வீழ்ந்தன இலக்குகள். காந்தியும் சின்னவனுமாய் கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைத்ததாய் உருவாக்கிய புலனாய்வுத் தளத்தில் சாள்சின் வெற்றிப்பயணம் நடந்தது. காந்தியால் உருவாக்கப்பட்ட அந்தக் கட்டமைப்பை வெற்றியென்ற மகுடத்தில் ஏற்றி ஒளிர வைத்தது சாள்சின் ஆளுமையும், இராணுவத் திட்டமிடல்களும். கரடியனாற்றில் இருந்து பழுகாமம் வரை நேரகாலமின்றி ஓடித்திரியும் அவனது உந்துருளி. இளங்கோ, மதன், அருள்ராஜ், தூயமணி மாஸ்ரர் என அவனது பொறுப்பாளர்களை உசுப்பிவிடும் சாள்ஸ்சின் கேள்விகளும், கட்டளைகளும்; சாள்சின் நேரடி வழிநடத்தலில் மட்டக்களப்பில் புலனாய்வுக் கட்டமைப்பு மெருகுபெற்று வளர்ந்தது. எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க அடி கொடுத்தும் ஊடுருவியும் உருவாக்கியிருந்தான் தனது கட்டமைப்பை. புலனாய்வின் கட்டமைப்புகள், நகர்வுகள் எவ்விதத்தில் நடந்தாலும் வெற்றிகரமான நடவடிக்கையாய் அவற்றைப் பொருத்தி நடாத்தி முடிப்பதுதான் மகுடம். இந்த மகுட வெற்றிமாலையை தொடுத்து முடிப்பதில் சாள்ஸ் ஒரு சமர்த்தன். ~எல்லாப் பாதைகளும் ரோமுக்கே| என்பதைப்போல் எல்லா வளங்களும் வெற்றியை நோக்கியே திரும்பும். நியூட்டனின் கட்டமைப்பு திட்ட வேவு முடித்து பொருள்நகர்வு வழிதேடிக் காத்திருக்கும். பயிற்சி கொடுத்து அணியைத் தயாராக வைத்திருப்பான் அன்பு. பொருள் நகர்வின் நோக்கமாய் அமைந்த காந்தியின் கட்டமைப்பு தனக்கான பணிமுடிக்கத் தயாராக நின்றிருக்கும். தடை தாண்டி கரும்புலியை இலக்குநோக்கி நகர்த்த வழியொன்றை கைவசமாய் வைத்திருப்பார் கபிலம்மான். அனைத்தையும் ஒருங்கிணைத்து நடவடிக்கையை நோக்கி நகர்த்த வேண்டும். என்னமாதிரி? செய்வாயா? என்று கேட்டால் ~என்னால் முடியும்| என்றுகூறி அந்த இடத்தில் பொறுப்பேற்பான் சாள்ஸ். – வேவை, – பொருள் நகர்வை, – ஆளணிப் பயணத்தை, – ஒன்றிணைத்து, ஒருங்கிணைத்து திட்டத்தின் வெற்றிவரை ஓயமாட்டான். தொடர்புபட்ட மற்றையோரை ஓய விடவும் மாட்டான். சொன்னவர் சொன்ன பணியைச் செய்து தரும் வரை மென்மையாகவும், கடுமையாகவும் நின்று அவர்களை அப்பணியைச் செய்விக்கும் ஆற்றல் சாள்சின் தனித்துவம். சாள்ஸ் பெற்ற வெற்றிகளும் அவனது ஆளுமை வீச்சுமாக புலனாய்வுத்துறையினுள்ளே அவன் தனித்துவமாய் ஒளிர்ந்தான். அந்த ஒளியை நோக்கி ஆளணி மற்றும் பிற வளங்களும் இணைந்துகொண்டன. புலனாய்வின் முதன்மை வளங்கள் அனைத்தையும் தன்வசம் ஈர்த்து ~என்னால் முடியும்| என்று கூறி வெற்றிக்கான உத்தரவாதத்தை வழங்கும் ஆற்றல் சாள்சிடம் இருந்தது. நீர்கொழும்பைச் சூழ கட்டமைப்பு உருவாகி வேவு, பொருள் மற்றும் ஆளணி நகர்வு என எல்லாம் பொருந்தி வந்துவிட்ட வேளையிலும் கூட தளத்திலும், புலத்திலுமாக விநாயகத்தின் தோளில் அழுத்திக்கொண்டிருந்தது கட்டுநாயக்கா நடவடிக்கை. மன்னார் அரிப்பிற்கும், முல்லைத்தீவு- அன்புவின் பயிற்சி முகாமிற்குமாக இராணுவ வேலி தாண்டி மாறிமாறி அலைந்து திரிந்தார் விநாயகத்தார். சுற்றிவளைப்புகளில் கூடச்சென்றோர் வீரச்சாவடைகின்ற போதும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தனியே தானே சுமக்கும் விநாயகத்திற்கு கடிவாளம் போட்டு நட்புடன் கட்டிமேய்க்க பொருத்தமான நேரத்தில் மட்டக்களப்பில் இருந்து சாள்ஸ் வந்து சேர்ந்தான். ~நீங்கள் ஏன் ஓடித்திரிகின்றீர்கள் நான் பார்க்கின்றேன் அம்மான்| என்று தாங்கினான் சாள்ஸ். சாள்சின் வேகமான திட்டமிடலும், விநாயகத்துடனான நட்புரிமையான உறவும் சேர்ந்து வேலை முன்நகர்ந்தது. அந்நேரம் பார்த்து திட்டத்தின் களப் பொறுப்பாளராக விநாயகம் நியமித்த செட்டி வீரச்சாவடைந்தபோதும் கூட, ~என்னால் முடியும் அம்மான்| என்று சாள்ஸ் முன்வந்தான். அவனது பொறுப்பின் கீழிருந்த முத்தப்பன் பொறுப்பேற்க, திட்டம் தொடர்ந்தது. தலைவர் அவர்களது ஆலோசனைகளுடனான திட்டத்துடன், தூர வீச்சிற்கான கனரக ஆயுதப் பயன்பாடு…, இரவுச் சூட்டிற்கான தந்திரோபாயங்கள்…, பொருத்தமான வெடிமருந்துத் தெரிவுகள்…. என எங்கள் எண்ணங்கள் எல்லாவற்றையும் செயல்வடிவப் பொறுப்பேற்றான் சாள்ஸ். சாள்சின் கையாள்கையினால் திட்டம் புதுவேகம் பெற்றது. நடவடிக்கையென்று வந்துவிட்டால் வழமையாகச் செய்வது போல பொருளாதாரம், ஆவணம், தொழில் நுட்பம் என எல்லாக் கட்டமைப்பும் ~எள் என்று கேட்க எண்ணெய் ஆக| கை கொடுக்க நகர்வு வசமானது. தாக்குதல் அணி புது மெருகுபெற்றதும், கட்டுநாயக்காவில் எமது கரும்புலி வீரர்கள் களமாடி வென்றதும் வரலாறு. புலனாய்வின் அடிப்படையான ~இரகசியம் காப்பாற்றுவதில்| புலியாய் இருப்பான் சாள்ஸ். அவன் பெற்ற வெற்றிகள் போலவே அவனது கோபமும் புகழ்பெற்றது. ~ரௌத்திரம்; பழகு| என்றார் பாரதியார்; இரகசியப் பாதுகாப்பிலோ புலனாய்வு மற்றும் இராணுவ முன்நகர்விலோ தவறுகள் விடுவோருடன் மென்மையாக நடந்துகொண்டு சமாளித்துப் போக நினைப்பவர்கள் – சாள்சிடம் படித்துக்கொள்ள வேண்டியது இந்த ~ரௌத்திரம்; பழகுதல்.| இரகசியமான செய்தி ஒன்றை தொலைத்தொடர்புச் சாதனத்தில் பாதுகாப்பில்லாமல் அறிவித்துவிடுவார் யாரோ ஒருவர். உலுக்குகின்ற உலுக்கில் அவர் கொஞ்சம் எரிபொருள் தேவை என்றோ அல்லது மழைவரப்போகின்றது குடை தேவை என்றோ இருக்கக்கூடிய சாதாரண செய்திக்கே பாதுகாப்பான சங்கேதத்தாள் தேடித்தான் திரிவார். சிலவேளைகளில் ஒருவரையொருவர் அடையாளம் கண்டிருப்பர் அல்லது அடையாளம் காண வாய்ப்பு அங்கு இருந்திருக்கும். வெடித்துத் துளைப்பான் சாள்ஸ். குறித்த முகாமிற்குப் பொறுப்பாக இருந்தவர் ~பொறுப்பு வேண்டாம் ஆளை| விடு என்பார். அல்லது அடுத்த சந்திப்பு நேரத்தில் அன்னம், தண்ணீர் இல்லாமல் ஆளையாள் காணாதபடி காவல் காத்து நிற்பார். சமைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் உப் புப்புளி கூடிவிடுவது போல சாள்சின் கோபமும் அவ்வப்போது கொஞ்சம் எல்லை மீறிவிடுவதுமுண்டு. குறித்த திகதியில் தரப்படவேண்டிய ஏதாவது ஓர் அறிக்கை தரப்படவில்லையா? சம்மந்தப்பட்டவர் யாரென்று பாராமலும், முன்னுள்ளவர் எவரென்று நோக்காமலும் வார்த்தைகள் வெடிக்கும்; கோவைகள் பறக்கும். பின்னர் சமாதானம் செய்ய பொட்டம்மான்தான் தேவைப்படுவார். தோல்விகளைச் சந்திக்க மறுத்து, வெற்றிகளுக்காக முயன்று முன்நகர்வது சாள்சின் இரத்தத்தில் ஊறிய இயல்பு. சாதாரண நீச்சலிலோ அல்லது பந்து விளையாட்டிலோகூட அவன் தோல்விகளை ஏற்கமறுத்து முயல்வான். இந்த இயல்பே அவனது பல வெற்றிகளுக்கு அடிப்படையானதென்றாலும், நண்பர்களிடையேயும் கூட அவனது பிடிவாதம் வெளிப்பட்டு வெடித்து விடுவதுமுண்டு. கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கும், முன்கூட்டியே முடிவெடுத்து அதனைக் கட்டளையாக வழங்குவதற்கும் இடையேயான தெரிவில் அவ்வப்போது சிக்கல் வரும் சாள்சிற்கு. 1991 இல் கூட்டுப்படைத் தலைமையக நடவடிக்கைக்கு வீடு ஒன்றை எடுத்து வைத்திருந்தார் வரதன். அந்த வீட்டில் யார் யார் தங்குவதென வரதனுடன் ஆலோசிக்காது சாள்ஸ் கட்டளையாக வழங்க வந்தது உறவுச்சிக்கல். அது போலவே, 2001 இல் கட்டுநாயக்கா நடவடிக்கை அணிக்கு பிரதான பொறுப்பாளர் கண்ணனின் கருத்தின்றி இரண்டாவது பொறுப்பாளராக இருந்த கானகனை நீக்கி, முகிலனை நியமிக்க, வந்தது சிக்கல். விடுதலையை விரைவுபடுத்த வெற்றியின் தேவை பற்றிய தெளிவூட்டலும், மனிதர்களைவிட நாடு வணங்க வைத்தும் நகரும் திட்டங்கள். இராணுவ ரீதியான திட்டங்களில் சாள்ஸ் புதிய எண்ணங்களை முதன்மைப் படுத்துவான். வழமையான வழிகளில் அல்லாது வித்தியாசமான வழியில் சிந்தித்து நடைமுறைப்படுத்துதலும் சாள்சின் இயல்பு. அவனது அந்த இயல்பு எமக்குப் பல இடங்களில் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. கட்டுநாயக்கா திட்டமிடல்; சிறு வேவு அணி விமானத்தளத்திற்;குள் வெற்றிகரமாக உள்ளே சென்று வந்துவிட்டது. பெரிய அணியை உள்நகர்த்துவதிலும் பிரச்சினை இருக்காதென்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் கங்கர் எனப்படும் விமானக்கொட்டகைக்குள்ளும், வெளித்திடலிலும் நிற்கும் விமானங்களை அழிப்பதற்கான சிறந்த வழி எது என்ற விவாதம்; விமானங்களை நெருங்கிச் சென்று நேரக்கணிப்புக் குண்டுகளைப் பொருத்தலாம் என்றும், தவிர்க்கமுடியாத நெருக்கடி நிலை ஏற்பட்டால் உடலில் பொருத்தியிருக்கும் வெடிகுண்டின் மூலமாக விமானத்தை ஒட்டியபடி வெடிக்கவைத்து விமானத்தைத் தகர்க்கலாம் என்றும் கருத்துக் கூறப்பட்டது. தூரத்தில் இருந்தே விமானங்களை P.முஇ பு.P.ஆ.பு மற்றும் சு.P.புகளால் அடிப்பதே பொருத்தமானதாய் இருக்கும் என்பது சாள்ஸ்சின் வாதம். ~என்னால் முடியும்|. P.முஇ சு.P.பு பயிற்சியை என்னிடமே விட்டுவிடுங்கள். என்று நின்றுகொண்டான் சாள்ஸ். நான் சாள்;சின் பக்கமே நின்று கொண்டேன். சாள்சின் கருத்தே சரியானது என்பதை கட்டுநாயக்காவின் முடிவு நிரூபித்தது. ~பலமானதொரு பாதுகாப்பிற்குள்ளும் பலவீனமான நிலையிருக்கும்| என்பதை உணர்ந்த முன்னகர்த்தல்கள்; பணிசார்ந்த நகர்வுகளுக்காக தன்னுடன் தொடர்புபடும் மானிடர்களை முடுக்கி, இறுக்கி நகர்த்துவதில் சாள்சின் திறமை வெளிப்படும். ராஜகிரிய வழிநடத்தல் இதனை வெளிப்படுத்தும். கண்ணிவெடி ஒன்றை நிலைப்படுத்த ராஜகிரியவில் இடம் பார்த்து அறிவிக்கின்றான் முத்தப்பன். சாள்சின் மூளையில் திட்டம் மாற்றம். அணியொன்று நிலையெடுக்கப் பொருத்தமான இடம் பார்… மறைந்திருக்க வீடு பார்…, என்று பின்னர் சாள்சிடமிருந்து முத்தப்பனுக்கு யோசனைகளும், அழுத்தமான கட்டளைகளும் சென்றன. அது கடினம் என்றும், சாத்தியமில்லை என்றும் முத்தப்பனிடமிருந்து பதில். அப்படியானால் வேறு ஆளை அனுப்பி அதனைப் பார்க்க ~என்னால் முடியும்|. என்று சாள்ஸ் கறாராக, பதில் அனுப்ப, முத்தப்பன் மீண்டும் முயற்சித்தான். சாள்சின் எதிர்பார்ப்பு சரியென்பதை நிரூபித்தன அடுத்து வந்த நாட்களும், வகுக்கப்பட்ட திட்டமும். சிக்கலான இராணுவத் திட்டத்தில் இக்கட்டான நிலைமைகள் தோன்றும். அவ்வேளையில் பின் விளைவுகள் தொடர்பாக எதிர்மறை எண்ணம் தென்படும்போதும் அவற்றை எதிர்கொள்ளும் துணிவுடன் நேர்மறைச் சிந்தனையை முன்நிறுத்தி திட்டத்தை நகர்த்த ஒரு இரும்பு மனம் வேண்டும். வைரம் பாய்ந்த அந்த இரும்புமனம் சாள்சிற்கு வாய்த்திருந்தது. இது சாள்சின் பல வெற்றிகளின் சூட்சுமம். இப்படித்தான் ஒரு சந்தர்ப்பம். 1998. சிறிலங்கா ஜெயசிக்குறு படைகள் கிளிநொச்சியை நெருங்கிவிடலாம் என்ற வகையில் முன்நகர்வில் நின்றன. அதனை ஒரு அரசியல் வெற்றியுமாக்கி சிறிலங்காவின் 50 ஆவது சுதந்திர தினத்தைத் தமிழரை வெற்றிகொண்ட எழுச்சி நாளாக்க கங்கணம் கட்டி நின்றது கண்டிச் சிங்களத்தின் தலைமை. கண்டிச் சிங்களத்திற்கு பாடம் படிப்பிக்கத் தமிழரை அடிமைகொள்ளும் சிங்களத்தின் அதிகார மையத்திற்கு நல்லதொரு அடி கொடுக்கத் திட்டம் தயாரானது. குறுகிய அவகாசத்தில் குறுகிய நாட்களில் அது சாத்தியமா? என்று நாம் கேட்க ~என்னால் முடியும்| என்ற சாள்சின் பதிலுடன் வேகவேகமாக வகுக்கப்பட்டது திட்டம். முழுமையாக பயிற்சிபெற்ற கரும்புலி அணிகூட தயாராக இல்லாத நிலவரம். சாள்சின் நேரடி உதவியாளர்களும், வேறு பணிநிலைக்கு உரியோராகவும் நின்றிருந்த போராளிகளும் ஒன்றாக்கப்பட்டு அவசரக் கரும்புலி அணியும் தயாராகி விட்டது. திட்டம் உருவம்பெற்று வெடிமருந்து வாகனம் புறப்படச் சில மணிநேர அவகாசமே இருந்த ஒரு பகற்பொழுது. சிறிலங்கா வானொலியில் மதியச் செய்தியறிக்கை சொன்னது ~மட்டக்களப்பில் விடுதலைப் புலிகள் வாகனத்தில் வெடிமருந்து பொருத்துகின்றார்கள்… இப் புலனாய்வுத் தகவலின்படி வாகனத்தைப் பிடிக்க எல்லாப் படை நிலைகளும் உசார்படுத்தப்பட்டுள்ளன|. இது செய்தியின் சாராம்சம். இப்போது இக்கட்டான நிலைமை. செய்தியிற் சொன்னதுபோல் அதே மட்டக்களப்பு பழுகாமத்தில் நின்றே வெடிமருந்து பொருத்திய வாகனத்தில் இறுதிச் சரிபார்த்தலில் ஈடுபட்டிருந்தனர் சாள்சும் அவனது நண்பர்களும். எம்மைக் கலங்கடித்துத் எம்மிடம் உள்ள திட்டங்களைக் கைவிடச் செய்யும் பொதுவான தந்திரோபாயமாகவும் இருக்கலாம். அல்லது உண்மையான புலனாய்வு அறிக்கை தவறுதலாக செய்தி நிறுவனத்திற்கு கசிய, அங்கு அது வெளிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் இருக்கலாம். இதே விடயத்தையொட்டிய புலனாய்வு அறிக்கையொன்றும் வேறொரு இரகசியத் தகவல் மூலத்திலிருந்தும் அதே சமநேரத்தில் கிடைத்தது. ஆக எமது திட்டத்தை முன்னறிந்து முறியடிக்க எதிரி தயாராகிவிட்டான் என்பது தெளிவாகிவிட்டது. இதற்கிடையில் இன்னுமொரு புதிய சிக்கலாக இலக்கு நோக்கி நகர்ந்த கரும்புலிப் போராளியொருவர் எதிரிகளிடம் கைதாகி விட்டார். இலக்குப் பிரதேசத்தில் நடவடிக்கைப் பொறுப்பாளரும், மேற்படி கரும்புலியும் சந்திக்க ஓரிடத்திற்குச் சென்றிருந்தனர். தனது சந்திப்பு நேரத்திற்கு சற்று முன் – பின்னாக குறித்த போராளி கைதானதை தானே நேரில் உறுதிப்படுத்தியதாக நடவடிக்கைப் பொறுப்பாளர், சாள்சிற்கு அறிவிக்கின்றார். கைதானவருக்கு பொறுப்பாளரையும், அணியில் மற்றையோரையும் தெரியும் என்பதும், இலக்கு, திட்டம் என்பனவும் தெரியுமென்பதுமான நிலவரம். நெருக்கடியான ஆபத்தும் நிலவர அழுத்தமும் உச்சத்தில் இருந்த நேரமது. சாதாரண மனிதர்களுக்கு திட்டத்தை இடைநிறுத்தி, பிற்போட்டுவிட பொருத்தமான நிலவரம். ஆனால் சாள்ஸ் சாதாரணமானவன் அல்ல. அவன் பின் விளைவுகளை எதிர்மறையாக அல்லாது நேர்மறையாக சிந்திக்கும் ஆற்றல் கொண்டவன். விளைவுகளுக்கு அஞ்சாத இரும்பு மனம் கொண்ட மனிதன். ~அவசர அவசரமாகச் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் சிலவற்றுடன்| திட்டம் நகர்ந்தது. எதிரி வானொலியில் கூறிய அதே கிராமத்தில் இருந்து, எதிரி எதிர்பார்த்த அதே பாதையால், அதேநாளில், அதே திட்டம் நகர்ந்தது. – வெற்றி எமதானது. புலனாய்வின் நீண்டகால இரகசிய நடவடிக்கையாளனும், சாள்சின் அருகிருந்து அவனையுணர்ந்த கரும்புலிகளும் இணைந்த அர்ப்பணிப்பின் வெற்றி; சாள்சின் அயராத உழைப்பிற்கும், அசராத மனத்துணிவிற்கும் கிடைத்த வெற்றி ஆனது. சாள்சின் வழிநடத்தலின் பெறுபேறாய், அவனது ஆளுமையின் அடையாளமாய் ஆனது அந்த வெற்றி! புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராக விளங்கியவன் சாள்ஸ். நிர்வாக ரீதியாக அல்லாவிட்டாலும் நடைமுறை ரீதியாக எனக்கு அடுத்த பொறுப்புநிலையில் செயற்பட்டு, திட்டங்களை வீச்சுடனும், மூச்சுடனும் முன் நகர்த்தியவன். அவன் புலனாய்வுத்துறையில் இருந்து துறை மாறிச் சென்ற நினைவு பாரமாய்க் கனக்கும். தனிப்பட்ட உறவுகளுக்கு மேலாக, கட்டமைப்பின் மீதான பொறுப்புணர்வு மேலெழுந்தவேளை அது. எங்கள் நாட்டை சுனாமி தாக்கிய காலத்தில் எங்கள் உறவினுள்ளும் சோகம் சூழ்ந்தது. சாள்ஸ் தீவிரமான முன் முயல்வின் அடையாளமாய் தலைவர் அவர்களின் மதிப்பைப் பெற்றிருந்தவன். ஒரு இராணுவத் திட்டம் எவ்வாறு வகுக்கப்பட வேண்டும் எனத் தலைவர் அவர்களின் மனதில் உதிக்கும் எண்ணத்திற்குச் செயல்வடிவம் கொடுக்கும் சிந்தனைத் திறனும், செயலூக்கம் கொண்டவனுமாக சாள்ஸ் வளர்ந்திருந்தான். தனியானதொரு நிர்வாக அலகை இயக்குவதற்குத் தேவையான ஆற்றலும், அறிவும், திறனும் கொண்டிருந்த சாள்சிற்கு தனியானதொரு பணி வழங்க தலைவர் அவர்கள் முடிவுசெய்தார். 2002. சமாதான காலத்தின் ஒருநாள் கொழும்பில் இருந்து முதலாளி ஒருவர் பெரிய வெற்றிகளைப் பெறலாம், கொஞ்சம் காசுதான் வேண்டும் என்று கூறி வந்திருந்தார். – அவரது மொழியில் கொஞ்சக்காசு. அவர் கேட்ட தொகை மூன்று கோடிரூபா – அவர் வேறு யாருமல்ல 1991 இல் உதவி செய்யலாம் என்று எம்மை இழுத்தடித்து, கொழும்பில் சாள்சை பல தடவை சந்தித்து, அலைக்களித்து ஏமாற்றிய அதே தொண்டமனாற்று முதலாளி. இப்போது கிளிநொச்சியில் தன்னை நேரில் சந்திக்க வந்த சாள்சிடமே சொன்னார். ~என்னைப்பற்றியும், கூட்டுப்படைத் தலைமையக தாக்குதலில் எனது பங்களிப்புப்பற்றியும் அவருக்கு நான் செய்த உதவி பற்றியும் சாள்சிடம் போய்க் கேட்டுப்பாருங்கள்| என்று. இந்த நகைச்சுவையின் பின்னே மறைந்திருந்தது நாம் சந்தித்த மனிதர்களின் ஏமாற்றுத்தனம் மட்டுமல்ல நீண்ட, நெடிய புலனாய்வு வாழ்வில் சாள்சின் அனுபவமும், வரலாறும். தாக்குதல்கள், இராணுவ நடவடிக்கைகள் ஆகியவற்றிற்கு அப்பாலான ஊடுருவல், மனம் மாற்றுதல் சார்ந்த ஆழமான புலனாய்வும், அதன் தளமும் சாள்சிற்கு அந்நியமானதல்ல. ஆழமான புலனாய்வுத் தளத்தில் செயற்படுவதற்கான அவகாசம் இல்லாதபடி இராணுவ நடவடிக்கை சார்ந்த தொடர்ச்சியான அழுத்தத்திற்குள் சாள்ஸ் ஆழ்ந்திருந்தான் என்பதே இன்னொரு உண்மையாகும். ~வெட்டொன்று துண்டு இரண்டாய்| பேசும் அவனது இயல்பும், ~உன்னால் முடியுமா? முடியாதா? இப்போதே சொல்லு| என்று உரையாடும் அவனது பாங்கும், இதுபோன்ற ஆழமான புலனாய்வுகளில் அவன் நேரடியாய் இறங்கி நின்று செய்வதில் இடைஞ்சலாய் இருந்ததையும் மறுப்பதற்கில்லைத்தான். ஆனால் தனது ஆளுகையின் கீழிருந்த பொறுப்பு நிலைப் புலனாய்வாளர்களுக்கு ஆழமான புலனாய்வு பற்றிய நுட்பங்களை விளங்கவைத்து, நகர்வுகளை திட்டமிட்டு, முன்நகர்த்தி, வெற்றிமிகு பெறுபேற்றை எட்டுவதில் சாள்ஸ் கணிசமாகவே சாதித்திருந்தான். எதிரியின் இராணுவத் தலைமையகத்திற்குள்ளும், எதிரியின் புலனாய்வுக் கட்டமைப்பிற்குள்ளும் பயனுள்ள மனிதர்களை கண்டறிந்தோம். அவர்களை மனம்மாற்றி, விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பெரும் வெற்றிகளை ஈட்டியதில் சாள்சின் வழிநடத்தலும், புலனாய்வின் முன்நகர்த்தல்களும் அவனது புலனாய்வு வரலாற்றின் பொன்னான பக்கங்கள். புலனாய்வில் வழமையான பணிகளில் உள்ள அழுத்தத்தின் அளவும்கூடக் குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என்ற போதிலும், கூட புலனாய்வு நகர்வுகள் நடந்துகொண்டிருக்கும் போது பின்னணி நிலை அழுத்தங்கள் உச்ச நிலையில் இருக்கும். எதிரியின் முழுச் சுற்றிவளைப்பிலும், தேர்ந்த கண்காணிப்பாளர்களால் அமைக்கப்பட்ட நெருக்கடிக்குள்ளும், ஆயுதங்கள், வெடிபொருட்களுடனோ அல்லது வேறு திட்டங்களுடனோ நகரவேண்டியிருக்கும். அந்த நகர்வுகளின் நிலைபற்றி இங்கிருந்து சிந்தித்துக்கொண்டிருந்தால் தூக்கம் வருவதே அரிதாக இருக்கும். அதுவும் சில வேளைகளில் குறித்த கரும்புலி உறுப்பினர்கள் நகர வாழ்விற்கு அவ்வளவாக தேர்ச்சிபெறாத கிராமியத் தன்மையுடையவர்களாகவும் இருந்து விட்டாலோ சொல்லவேண்டியதில்லை. நாம் சந்தித்த அழுத்தங்களை விபரிக்க முற்பட்டால் அவை பெரும் விவரணமாய் நீளும். இவ்வகை அழுத்தம் எப்போதாவது என்பதாக அல்லாமல், எப்போதுமே என்பதாகும்போது அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையொன்றை நாடும் எனது மனம். அவ் அழுத்தங்களின் தாங்குசக்தித் துணையாகச் செயற்பட்டான் சாள்ஸ். சாள்ஸ் நல்ல அழகியல் உணர்வு கொண்டவன். பூங்கன்றுகள் வளர்ப்பதிலும், செல்லப்பிராணிகளைப் பராமரிப்பதிலும் ஆர்வம் கொண்டவன். அதேபோல் இயல்பான ஆற்றலுடன் முகாம்கள், வீடுகள் மற்றும் கட்டடங்களை வடிவமைக்கும் திறனையும் பெற்றிருந்தான். அவனது பணி சார்ந்த இறுக்கங்கள் முன்நின்று இவற்றில் பொழுதுபோக்க விடாமல் வைத்திருந்தபோதும் கூட, கிடைக்கும் வாய்ப்புகளில் தனது அழகியல் ஆர்வத்தை வெளிப்படுத்துவான். தேர்ந்த வாசிப்பு ஆர்வத்தையும், சிறந்த எழுத்தாற்றலையும் கொண்டிருந்த சாள்சின் எழுத்தாக்கங்கள் எமது இளைய போராளிகளுக்கு புலனாய்வுச் செயற்பாட்டிலும், நிர்வாகவியல் ஒழுங்கமைப்பிலும் நல்ல பாடங்களாய் அமைந்திருந்தன. எமது தேசியத்தலைவர் அவர்களது 50 ஆவது அகவை மலரில் ~தலைவரது கோட்பாடு| என்ற பெயரில் சாள்ஸ் எழுதிய கட்டுரையானது இங்கு நினைவிற்கொள்ளத்தக்கது. தலைவர் அவர்கள் பற்றிய சாள்சின் புரிந்துணர்வின் அடிப்படையிலும், சாள்சின் காத்திரமான எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது மேற்படி ஆக்கம். தன்னோடு பணிபுரிவோருக்குக் கட்டளைகளை வழங்கும்போது குறிக்கோளை நோக்கியே முழுதாய் வழி நடத்துவான் சாள்ஸ்;. மனித உணர்வுகளுக்கு ஆட்பட்டு வேறு தெரிவுகளுக்கு இடம்கொடுக்க வாய்ப்பளிக்காமல் கோடுபோட்டது போல் துல்லியமாய் அமைந்திருக்கும் சாள்சின் கட்டளைகள். தன்கீழ் பணிபுரிவோருக்கு போராட்டத்தை முதன்மைப்படுத்தி கட்டளைகளை வழங்குவதைப்போலவே அவன் தனது வாழ்விலும் போராட்டத்தை முதன்மைப்படுத்தியே வாழ்ந்தான். சிந்தித்தான். நேரடிக் களச் செயற்பாட்டாளனாகவும், பின்னணி இயக்குனராகவும் அவன் பெற்ற பட்டறிவுகள்; எண்ணற்றவை. தமிழீழப் புலனாய்வுப் பட்டறிவினதும், இராணுவச் செயற்பாட்டுப் பட்டறிவினதும் களஞ்சியமான அவன்; வாழ்ந்த காலம் முழுவதும் தேசியம் பற்றியும், தேச விடுதலை பற்றியுமே சிந்தித்தான். புலனாய்வு வழிமுறையில் எதிரிகளைச் செயலிழக்கச் செய்வது பற்றியே அவனது சிந்தனை சுழலும். அவனுடைய எண்ணம் முழுவதும் கரும்புலிகளும், அவர்களது வெற்றிக்குத் தேவையான திட்ட நகர்வுகளுமே நிறைந்திருந்தன. அவன் இன்னமும் வாழ்ந்து சாதித்திருக்க வேண்டியவன். தமிழீழத்தின் திறவுகோல்களாய் அமைந்திருக்கக்கூடிய இராணுவ வெற்றிகளை நோக்கியே அவனது படையப்புலனாய்வுச் செயற்பாட்டுக்காலச் சிந்தனைகள் இருந்திருக்கும். அதற்கான அறிவும், ஆற்றலும், பட்டறிவும் அவனிடம் இருந்தது. மன்னாருக்கான முதன்மைச் சாலையில் எதிரியின் தாக்குதல் நடைபெறலாம், என்ற கணிப்பை முன்கூட்டியே அறிக்கையாகக் கொடுத்த சாள்ஸ் அதே சாலையில் எதிரியின் கிளைமோர் தாக்குதலுக்கு உள்ளாகிவிட்டான். ஆபத்திருப்பது தெரிந்தும் அவ்விடத்தை நோக்கி அவனை பயணிக்க வைத்த சக்தி எது? அது விதியின் கொடிய கரமா? இல்லை. அவனால் வழிநடத்தப்பட்ட போராளிகள் தொடர்புபட்ட பணி. தாயக மண்ணிலிருந்து வெகுதூரம் சென்று எதிரியின் கோட்டைக்குள் நிலைபெற்று நின்றார்கள் அவர்கள். அவர்களது நிலையை அவன் அறிவான். அவர்களது துடிப்பை…, அவர்களுக்கான நெருக்கடியை…, அவர்களைச் சுற்றி எதிரிகளின் விய+கத்தை…, அவன் அறிவான். – நெருக்கடி ஒன்றின் பின்னால் அவர்களுக்கு தனது வழிநடத்தலின் தேவையை – அவன் அறிவான். எதிரியின் தலைமை மையத்தினுள் நெருக்கடிக்குள் உறைந்திருக்கும் இளைய போராளி ஒருவனுக்கு – தனது பொறுப்பாளரின் குரல் – எப்படி இருக்கின்றாய்? என்ற விசாரிப்பு – உனக்கு ஏதாவது தேவையா? என்ற கனிவான கேள்வி – எப்படியாவது செய்யத்தான் வேண்டும் என்ற கறாரான அறிவுறுத்தல் – என்பன அவனை முடுக்கி, இயக்கி விடும் மந்திரங்கள் என்பதை அவன் அறிவான். அந்தத் தேவை – அந்தக் கட்டாயக் கடமை – அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. காலம் அவனுக்கிட்ட கடமை பாதுகாப்பு நோக்கிய சிந்தனையைப் புறந்தள்ளி, அவனை மன்னாரை நோக்கிப் பயணிக்க வைத்தது. சாள்ஸ் ஒரு இளம் செயற்பாட்டுக்கள வீரனாக கொழும்பில் நின்ற காலத்தில் திட்டத்திற்குத் தெரிவுசெய்த கரும்புலி பிசகியபோது தானே கரும்புலியாய்ச் செல்லும் தயார் நிலையில் நின்றான். தனது பணிமுடிக்க உச்ச அர்ப்பணிப்பின் தயாரான நிலை அது. அந்த நிலையிலேயே இப்போதும் தன் பணிமுடிக்க ஆபத்தைப் புறம்தள்ளி முன்நகர்ந்தான். வெடிமருந்து வாகனத்தில் கரும்புலியுடன் தயாராகப் போகையில் எதிர்பாராமல் இலக்குவர, ~வெடிக்கவை| என்ற சாள்சின் கட்டளையைப் புறக்கணித்து அன்று அந்தக் கரும்புலி சாள்சை எம்மிடம் அனுப்பி வைத்தான். ~இந்த வேலை தொடர்ந்து நடக்கவேணும்| என்ற அந்தக் கரும்புலியின் வார்த்தையை மெய்யாக்கி அதற்காக வாழ்ந்தான். மாவீரனாகி அவர்களோடு கலந்துவிட்டான். கரும்புலியாய் வாழ்ந்து…………, கரும்புலியால் வாழ்ந்து…………., கரும்புலிகளோடு வாழ்ந்து…………, கரும்புலிகளுக்காக வாழ்ந்து…………, இறுதிவரை கரும்புலிகளோடு கலந்திருந்தான். கரும்புலிகள் கண்ட தமிழீழ தேசத்தின் விடுதலைக்கனவு நனவாகி சரித்திரத்தின் நாயகனாக வாழ்வான் சாள்ஸ். கேணல் சாள்ஸ் அவர்களின் வீரவணக்க நிகழ்வில் 06.01.2008 அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு அம்மான் அவர்கள் ஆற்றிய உரையில் இருந்து… http://www.battinaatham.net/description.php?art=18233- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராசவன்னியன் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாட்டு அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் படம் பார்த்த நினைவில்லை. யூரியூப்பில் இருக்கும் என்று நினைக்கின்றேன். இந்த வாரம் பார்த்தால் போச்சு!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நண்பர் ஐ.வி. சசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! எப்போதும் ஶ்ரீதேவி நடித்த குரு படம் ஐ.வி. சசியை யாழில் கண்டபோதெல்லாம் நினைவுக்கு வந்திருக்கு!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்னியஷ்த்ரா🎉🎉🎉- மனதைக் கவர்ந்த கவிதைகள்
அன்பின் தீக்கொடி அன்பின் தீக்கொடி மரணித்த மழலை கைவிட்ட முலைகளாய் விம்மி வலித்து கசிகிறது எனதன்பு-நீயோ அதனை கழிவறையில் பீய்ச்சியடிக்க பணிக்கிறாய் வறண்ட உன் பாலையில் ஒற்றை மலர் தேடி ஓயாமல் அலைகின்றேன்-நீயோ மனப் பிறழ்வுக்கான மருந்தொன்றை சிபாரிசு செய்கிறாய் இயந்திரத்திற்கு சிக்கிய செங்கரும்பாய் வெம்மையில் நசுங்கி வழிகிறது இரவு புயல் தின்ற முதிர்ந்த நெற்கதிரென உன் வயலெங்கும் உதிரும் எனது இருப்பு … செ.சுஜாதா, பெங்களூர். http://puthu.thinnai.com/?p=12069- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கவனிக்கவில்லை! பொன்மொழிகள், தத்துவங்கள் எல்லாம் ஒவ்வொருவரின் மனம் சோர்வடையும்போது தெம்பைக் கொடுக்கும்😎- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அப்படியே நீங்களும் சில தத்துவங்களை சொல்லலாமே!- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!🎉🎉🎉- மனதைக் கவர்ந்த கவிதைகள்
தனிமையை வரைபவன் ஏ.நஸ்புள்ளாஹ் ♪ நேற்றும் தனிமையை வரைய வேண்டியிருந்தது தனிமையை ஓர் இரவாக வரைந்தேன் இரவிற்குள் சில நட்சத்திரங்கள் வந்தமர்ந்தன இன்னும் சில பறவைகளும் வந்து சேர்ந்தன நிலா ராஜகுமாரி மேகத்திற்குள் மறைந்து மறைந்து புதிது புதிதாய் காட்சி தந்தாள் பேச்சுக்கு துணை கிடைத்தது ஒரு யுகத்தைக் கடந்தது போல் இருந்தது தனிமை கறுப்பு நிறத்தையொத்தது அது ஒரு பெரும் வனத்தின் இருளை என் மீது சுமத்தியிருக்கிறது இருள் என்பதும் ஒரு வகை வலிதான் அதனைத்தான் பல நேரங்களில் தலையணைக்கடியில் மறைத்து வைக்க வேண்டியிருக்கிறது எப்படி மறைத்து வைத்த போதும் அறை முழுக்க அது பரவிடுகிறது இப்போது மூன்றாம் சாமம் தாண்டியிருந்தது தனிமையை ஒரு பகலாக வரையத் தொடங்குகிறேன் பகலுக்குள் சில மனிதர்கள் நடமாடலாம். ♪ https://padhaakai.com/2018/12/02/nasbullah-poetry/- மனதைக் கவர்ந்த கவிதைகள்
வேடிக்கை - லீனா மணிமேகலை நீ உன் சொற்களை என்னை வல்லுறவு செய்ய ஏவினாய் மலம் மூத்திரம் கழுவப்படாத கழிப்பறை அழுகல் அலறல் செத்த எலி வீச்சம் நிணம் ஊசிய மீன் வலி உதிரம் கறை இருள் பிடுங்கி எறியப்பட்ட உன் விதைப்பைகள் என்னிடமும் சொற்கள் இருந்தன அவர்களிடமும் சொற்கள் இருந்தன அவரவர் விதைப்பைகளின் பாதுகாப்பை சரி பார்த்துக் கொண்டு வாளா விருந்தன https://www.jeyamohan.in/115850#.XArepy-nxR4- மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...!
மட்டு அம்பாறை மாவட்ட துணைத் தளபதி லெப். கேணல் ஜீவன்...! ஜீவனுள்ள நினைவுகள்….. கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்கிப் பிடிக்கப்படுகின்றன. ஆபத்தைத் தவிர்க்கும் அளவிற்கு தேவையான இடைவெளி விட்டு முன்னே செல்பவரின் சிறு அரவத்தைக் கொண்டு திசையறிந்து செல்வதே ஒரு கலை. தென் ஈழக் காடுகளிலே இந்தக் காலைதான் தேவையான அரிச்சுவடி. கத்தி வெட்டுப் போல் ஒரு நகர்வு… கை வீசும் தென்றல் போல் ஒரு நகர்வு… இப்படி புத்தியையும் பலத்தையும் எடைபோட்டு நடந்ததாலேயே அங்கு போராட்டம் தாக்குப்பிடித்து, தளிர்கொண்டது. கத்தியையும் புத்தியையும் இடம்மாறி வைத்தவர்களை காலம் மட்டுமல்ல, காடுகள் கூட கை கழுவி விடும். ஒரு பத்தாண்டிற்கு மேலாக கொழும்பு ரோட்டிற்கு குறுக்காக நடந்த பெரும்பாலான நகர்வுகளை ஜீவன் தான் வழி நடத்தியிருக்கிறான். தவழ்ந்து திரிந்து வேவு பார்ப்பதும், தாக்குதல் செய்து தலை நிமிர்ந்ததும், தவறு செய்து தண்டனை பெற்றதும், உயிரைப் பணயம் வைத்து உறுதியை நாட்டியதும் எல்லாமே இந்த கொழும்பு ரோட்டில்தான். அதன் இரு மருங்கிலும் நிற்கும் மரங்கள், வயல் வரம்புகள், மின் கோபுரங்கள், மண் மேடுகள் என்று எல்லாமே ஜீவனின் மனதுக்குள் அடக்கம். அணியின் நகர்வு தடைப்படுகின்றது. பாதை தவறியது தெரியவருகிறது. பெரியதொரு காவு அணியையும் அதற்கேற்ற சண்டை அணியையும் கொண்ட அந்த நீண்ட மனிதக் கோடு மீண்டும் நகரத் தொடங்கியது. இப்போது அதன் முதல் ஆளாக ஜீவன் நடந்து கொண்டிருக்கிறான். இது ஜீவனது வழமையான பாணி என்பதால் ஒரு தளபதியை முதல் ஆளாக விட்டு பின்னே செல்லும் போது உண்டாகும் கூச்சம் பலருக்கு ஏற்படுவதில்லை. ஆபத்தை நாடிச் செல்லும் ஜீவனின் இயல்பிற்கு சிங்கபுர நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. சிங்கபுர தங்கக பகுதி படையினருக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவே இருந்து வருகிறது. ஒரு இடத்தில் பல தடவை பதுங்கித் தாக்குதல் செய்யப்பட்டதே அதன் காரணம். அதிலே இரண்டாவது தாக்குதல் 1992ம் ஆண்டு இடம் பெற்றது அதிலே ஜீவன் களத்தளபதி. இதற்கு முன்பு நிகழ்ந்த தாக்குதலிலே கொல்லப்பட்ட எதிரிகளின் நினைவாக அமைக்கப்பட்ட சிறிய நினைவுத் தூபியை நிலையெடுத்த இடத்தில் இருந்தே பார்க்கக் கூடியதாக இருந்தது. எதிரி அதிலே காப்பு நிலையெடுத்து எம்மைத் தாக்கினாலே தவிர, அதைச் சேதப்படுத்த வேண்டாம் என்று இறுதி முதற் கொகுப்புரையில் எமக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தாக்குதல் தொடங்கியது. எதிரியின் கவச ஊர்தியை நோக்கி ஆர்.பி.ஜி. கணையொன்று சீறிச்சென்று வெடிக்க எங்கும் புகைமயம். பவள் உடைந்து விட்டதா? என்ற கூச்சலும் பொறிகளின் உறுமலுடன் வேட்டொலியுமாக சிறு குழப்பம் நிலவினாலும் ஆங்காங்கே தென்பட்ட எதிரிகள் சுட்டு விழுத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். புகை விலகிய போது பவளிற்கு மிக நெருக்கமாக ஜீவன் ரீ56 -2 உடன் நிற்பதையும் அவனின் தலையின் மேலாக 50 கலிபரால் சிவப்பாக தும்பியபடி பவள் பின்வாங்கி ஓடுவதையும் காணக் கூடியதாக இருந்தது. எந்தச் சமரின் போதும் இறுக்கமான பகுதிக்கே ஜீவன் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம், அந்தப் பகுதியிலும் மிக இறுக்கமான இடம் நோக்கியே ஜீவன் ஈர்க்கப்பட்டதற்கு அவனது போரார்வமும் மாசற்ற வீரமுமே காரணம். “எங்கும் செல்வோம்” என்று எம் படைகள் எழுந்து நடந்ததும் “எதிலும் வெல்வோம்” என்று சூழ் கொட்டி நிமிர்ந்ததும் ஜீவன்களாலே அன்றி வேறு வழிகளில் அல்ல. ஜீவனின் வாழ்க்கைத் தடத்தில் பயத்திற்கு மட்டுமல்லாது பகட்டிற்கும் இடமிருக்கவில்லை. தலைமைத்துவப் பாடநெறியொன்றில் எல்லோரையும் விட அதிக புள்ளிகளை ஜீவன் பெற்றபோது, பகட்டு ஏதுமின்றி தனிமையிலிருந்து ஜீவன் கற்றதையும் தலைவரின் பேச்சடங்கிய ஒலிநாடாக்களை பரபரப்பின்றி கேட்டு வந்ததையும் அறியாத பலர் மூக்கிலே விரல் வைத்தார்கள். நடையுடை பாவனைகளில் கூட ஜீவன் எளிமையானவன். போராளிகளுடன் சேர்ந்து பதுங்கு அகழி வெட்டிக் கொண்டிருந்த ஜீவன் சற்றுக் களையாற, சராசரிப் போராளியின் உடையில் தனது தளபதி இருப்பார் என்பதைச் சற்றும் எதிர்பாராத புதிய போராளி தொடர்ந்து ஜீவனை ஏவியதும் அடுத்த தேனீர் இடைவேளை வரை ஜீவன் பதுங்கு அகழி வெட்டியதும் மங்கிப் போக முடியாத மனப்பதிவுகள். வன்னியிலே நடந்த பல மறிப்புச் சமர்களிலே இறுக்கமானவை எனக் கருதப்பட்ட இடங்களிலும் ‘ஓயாத அலைகள் – 2′ நடவடிக்கையிலும் முக்கிய பங்கு வகித்து, பின் மட்டு – அம்பாறை மாவட்ட இணைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின் – ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் வெடிப்புகையையும், சமர்ப் புழுதியையும் சுவாசித்ததால் முப்பதாவது வயதில் முதற் தடவையாக ஈழை நோயால் பாதிக்கப்பட்ட பின் நிகழ்கிறது இச் சம்பவம். இந்த எளிமை கலந்த ஈகை உழைப்புக்களாலேயே பெரு வெற்றிகள் சாத்தியமாகின என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. 1987ன் தொடக்கத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்ட ஜீவன் 90ன் பிற்பகுதியில் ஒரு தனிச் சண்டை அணியின் தலைமையாளனாக வளர்ந்திருந்தான். தானே வேவு பார்த்து, திட்டமிட்டு, களத்தில் வழி நடத்துவதையே அவன் எப்போதும் விரும்பினான். வெற்றியும் அவனையே விரும்பியது. எதிரியின் மீது தாக்குதல், போர்க் கருவிகள் பறிப்பு என்ற செய்தி கிடைக்கும் போதெல்லாம், அத் தாக்குதல்களின் தன்மையை ஒப்பிட்டு இது ஜீவனுடைய பாணியில் அல்லவா அமைந்திருக்கிறது என்று பேசுகின்ற அளவிற்கு சிறு தாக்குதல்களில் தனி முத்திரை பதித்திருந்தான் ஜீவன். இது எந்த வீரனுக்கும் இலகுவில் கிடைத்துவிடாத மிகவுயர்ந்த பேறு. மூன்றாம் ஈழப்போர் தொடங்கி 97ன் தொடக்கத்திற்கும் இடையேயான காலத்தில் ஜீவன் வாகரை பிரதேச கட்டளை மேலாளராக இருந்த போதே பல சிறு தாக்குதல்களின் மூலம் கிடைக்கக் கூடிய பெரிய நன்மைகள் அவனால் ஏற்படுத்தப்பட கதிரவெளிவரை பரவியிருந்த எதிரி முகாம்கள் ஐந்து காயான்கேணிப் பகுதியையும் கடந்து பின்வாங்கப்பட்டன. மக்களின் கல்வி பண்பாட்டு முறைகள் சீர் பெற்றன. மருத்துவமனை அடங்கலான எமது முகாம்கள் பல குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டன. வாகரை முதன்மைச் சாலைக்கு அருகே (திருமலை வீதி) மாவீரர் துயிலும் இல்லம் நிறுவப்பட்டது. அங்கே நிகழ்த்தப்பட்ட போர்ச் சாதனை பற்றி அக்காலத்தில் மாவட்ட அறிக்கைப் பிரிவின் மேலாளராகவிருந்த மேஜர் லோகசுந்தரம் (வீரச்சாவு: 05.03.1999 மாவடி முன்மாரிப் பகுதியில் சிறப்பு அதிரடிப் படையினருடனான மோதலில்) அவர்கள் கூறியது: “அந்த அறிக்கைகளை ஒப்பிடுவது ஒரு புதிய அனுபவம். 20 மாத காலத்தினுள் வாகரைப் பிரதேச ‘விசாலகன் படையணி’ சந்திவெளி, சித்தாண்டிப் பகுதிகளில் நிகழ்த்திய நான்கு பெரும் தாக்குதல்கள், மாவடி முன்மாரிப் பிரதேசத்தில் நிகழ்ந்த நடுத்தர அளவிலான சில தாக்குதல்களிலும் கலந்து கொண்டது போக தமது பகுதிகளில் மட்டும் தனியாகச் செய்த நடுத்தர மற்றும் சிறிய தாக்குதல்களில் 340ற்கும் மேற்பட்ட படைக்கலங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இப்படியொரு விடயத்தை இதற்கு முன் நான் கேள்விப்பட்டதில்லை.” சாதனைகள் பொதித்த ஜீவனின் போரியல் வாழ்வில் சோதனைகளுக்கும் குறைவில்லை. குடும்பிமலைப் பகுதியில் கொமாண்டோக்களுக்கு எதிரான தாக்குதலிலும், பூநகரித் தவளைச் சமரிலும் பின்பு கூமாஞ்சோலை முகாம் தாக்குதலிலும் உடலின் எடையில் ஈயமும் பங்கேற்கும் அளவிற்கு செம்மையாகக் காயப்பட்டிருந்தான். “ஜீவன் உன்ர குப்பியையும், தகட்டையும் வாங்கிப் போட்டு தண்டித்து சமைக்க விடும்படி பொறுப்பாளர் சொல்லியிருக்கிறார்.” இதே கொழும்பு ரோட்டிலேயே, போராளிகளின் சுமைகருதி, தவிர்க்கவேண்டிய பாதையொன்றினூடாக வழி நடாத்தியதால் ஏற்பட்ட இழப்பிற்கான தண்டனை அறிவித்தலை தனது உணர்வுகளைச் சிரமப்பட்டு அடக்கியபடி இன்னுமொரு தளபதி ஜீவனிடம் கூறியபோது மிக அமைதியாகப் பதில் வந்தது. “சரி நிறைவேற்றுங்கள்” அதைத் தொடர்ந்து ஒரு புதியை போராளியைப் போல ‘புளுக்குணாவ’ முகாம் தகர்ப்பிற்கான தடையுடைப்புப் பயிற்சி பெறுகிறான் ஜீவன். தொட்டாற் சுருங்கி முட்கள் முழங்காலிலும், முழங்கையிலும் புண்களை ஏற்படுத்துகின்றன. தன்னைத் தோள் பிடித்து தூக்கி நிறுத்திய தளபதி, அரவணைத்து ஆறுதல் தந்த தோழன், முன் நடந்து வீரம் காட்டி விழுப்புண் சுமந்த பெருமகன் – மண் தேய்ந்த காயத்துடன் பயிற்சி பெறுவதைக் காண பயிற்சிப் பொறுப்பாளனின் மனம் விம்முகின்றது. “ஜீவண்ணன்…… நீங்கள் எழுந்து போய் சற்று ஓய்வெடுக்கலாம்.” புலிக்குறோளில் போய்க் கொண்டிருந்த ஜீவனிடமிருந்து நிமிர்ந்து பார்க்காமலே பதில் வருகின்றது. “எல்லோருக்கும் பொதுவான விதிகளே எனக்கும் பொருந்தும்” இறுக்கமான முகத்துடன் தொடர்ந்து நகரும் ஜீவனைப் பார்க்க பயிற்சி பொறுப்பாசிரியனின் உதடுகள் துடித்து விழிகள் பொங்க குரல் தளம்பாமல் சமாளித்தபடி கூறுகிறான். “பயிற்சிப் புண் அதிகமாகி விட்ட போராளிகளுக்கு நாங்கள் பயிற்சி தருவதில்லை. இங்கு நானே பொறுப்பாளன். இது என்னுடைய கட்டளை. நீங்கள் எழும்பலாம்.” இதுவரை தங்கள் உணர்வுகளை மரக்க வைத்து ஜீவனுடன் நகர்ந்து கொண்டிருந்த அத்தனை போராளிகளும் நன்றிப் பெருக்கோடும் நிம்மதிப் பெருமூச்சோடும் பயிற்சிப் பொறுப்பாசிரியனை நிமிர்ந்து பார்க்கிறார்கள். ஒவ்வொரு சோடிக் கண்களிலும் ஒவ்வொரு சோடிக் கண்ணீர் துளிகள். ஜீவனுடைய எளிமையையும் ஈகையும் போலவே குறும்புகைளையும் குறைவான பக்கங்களையும் கூடத் தலைவர் அறிந்திருந்தார். இருப்பினும் சுற்றாரைக், கற்றோரே காமுறுவர் என்பது போல, பலம் பலத்திற்கு மரியாதை செய்யும் என்பது போல வீரம் வீரத்தால் ஈர்க்கப்படுவதும் தவிர்க்க முடியாததது என்பதை ஜீவனின் சாவிற்குப் பின்னான தலைவனின் உணர்வு வெளிப்பாடுகள் திரைவிலக்கித் தெரியவைத்தன – தெளிய வைத்தன. சராசரிக்கும் மேலான ஜீவனின் போரியல் பண்புகளை தலைவர் அவதானித்தே வைத்திருக்கிறார். சாலையில் ஜீவன் மிடுக்காய் கால்பாரவி நிற்க நிழல்போலக் கடந்து செல்கிறார்கள் போராளிகள். அந்த இருட்டிலும் ஆட்களை அடையாளம் கண்டு காதோடு நலம் விசாரித்து, தூரம் சொல்லி, தோள் தட்டி துரிதப்படுத்தி நிற்கிறான் ஜீவன். ஆபத்தை நோக்கி முதல் ஆளாய்ச் சென்று அதன் நடுவில் நின்று நம்பிக்கை தருவதும் கடைசி ஆளாகவே அவ்விடத்தை விட்டு அகலுவதும் போராளிகள் ஜீவன் மேல் பற்று வைப்பதற்கு முதன்மைக் காரணங்கள். வீரமுள்ள எவராலும் ஜீவனை வெறுக்க முடியாது. “நாங்கள் சுமந்து திரியும் ரவைகளில் எந்தெந்த ரவை எந்தெந்தச் படையாளின் உடலுக்குரியதோ தெரியவில்லை. இதே போல எனக்குரிய ரவையையும் ஒரு படையாள் இப்போது சுமந்து திரிவான். அது எப்போது புறப்படும் என்பது எவருக்கும் தெரியாது.” சண்டைகளின் முன்னான நகைச்சுவைப் பொழுதுகளில் சிரித்தபடி ஜீவன் சொல்வது வழக்கம். அன்று, கொழும்பு ரோட்டின் மையிருளிலே ஈழப்போரின் இன்னுமொரு அத்தியாயம் முடிய இருந்த சூழ்நிலையில், பதுங்கிக் கிடந்த படையாள் ஒருவனின் தொடக்க ரவையாக அது புறப்படும் என்பதையும் எவரும் அறிந்திருக்கவில்லை. ஜீவனின் நினைவுகளை மீட்கும் போது, தனக்குக் கீழுள்ள படைத் தலைவர்களின் உணவுத் தட்டுகளைக் கூட கழுவி வைத்து ஒழுக்கம் பழக்கும் எளிமையா? அல்லது முன் செல்லும் போது முதல்வனாகவும் பின் வலிக்கும் போது இறுதி ஆளாகவும் வரும் தலைமைத்துவமா? எது மேலோங்கி நிற்கிறது என்று அலசினால் அவையிரண்டையும் விட அவனின் களவீரமே எல்லோர் மனதிலும் ஆழப்பதிந்து கிடக்கிறது. பிறந்த போது குடிசையில் பிறந்த ஜீவன் இறந்தபோது ஈழத்தின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருந்ததற்கும் அவனது ஏழ்மையற்ற மிடுக்கே காரணம். பிறப்பினால், எவருக்கும் பெருமைவருவதாக நாம் நம்புவதில்லை. ஜீவன் தன் நடப்பினால் தாய் மண்ணின் தலையைப் பலமுறை நிமிர வைத்திருக்கிறான். அவன் இழப்பினால் தாய் மண்ணே துயரம் ததும்பும் பெருமையுடன் ஒரு கணம் தலை குனிந்து நிற்கிறது. ஜீவனின் இரத்தம் தோய்ந்த கொழும்புச் சாலையில் இருக்கும் எதிரிச் சுவடுகள் ஒரு நாள் துடைத்தழிக்கப்படும். அந்த உன்னத விடுதலை திருநாளின் போது தாயகப் பெருஞ்சாலைகள் கருந்தாரிட்டு செவ்வனே மெழுகப்படும். ஆனால் ஜீவனின் உணர்வு சுமந்து நிற்கும் ஒவ்வொரு தோழனுக்கும் அது செஞ்சாலை. நினைவுப்பகிர்வு:- இராசமைந்தன். விடுதலைப்புலிகள் (தை – மாசி 2002) இதழிலிருந்து. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.battinaatham.net/description.php?art=17841- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சகாறா அக்காவுக்கும், ரகுநாதனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்???- இன்று மாவீரர் தினம்!
- இன்று மாவீரர் தினம்!
இன்று மாவீரர் தினம்! November 27, 2018 இன்று மாவீரர் தினம் ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளை பெற்று, சுதந்திர இனமாக வாழ வேண்டுமென்பதற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவுகூரும் நாள். ஈழ விடுதலை வரலாற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்தும், அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புக்களில் இருந்தும் மொத்தமான 30,000 வரையான மாவீரர்கள் ஆகுதியாகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து உயிர்நீத்த முதல் மாவீரன் லெப். சங்கர் (சத்தியநாதன்) உயிர்நீத்த நவம்வர் 27ம் திகதியையே புலிகள் மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தினார்கள். தமது அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் உடல்களை எந்த சந்தர்ப்பத்திலும் எதிரியின் கைகளில் சிக்க அனுமதிக்ககூடாது, உயிர்நீத்தவர்களை முழுமையான இராணுவ மரியாதைகளுடன் விதைப்பது, அவர்களை ஆத்மார்த்தமாக அஞ்சலிப்பது என விடுதலைப்புலிகள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து உயரிய நடைமுறையை புலிகள் பேணினார்கள். இதுவே, 1989ஆம் ஆண்டு மாவீரர் தினமாக பரிணமித்தது. இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த சமயத்தில் புலிகளின் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. மணலாற்று காட்டுக்குள் இருந்த ஜீவன் முகாமின் ஒரு பகுதியில் விதைக்கப்பட்ட மாவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அங்குதான் முதலாவது மாவீரர்தினம் அனுட்டிக்கப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ம் திகதி மாவீரர் தினமாக அனுட்டிக்கப்படுகிறது. அன்றைய தினமே விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் உரை இடம்பெறும். வருடத்தில் ஒருமுறை மட்டுமே அவரது உரை இடம்பெறுமென்பதால், மாவீரர்தின உரைக்கு உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மாவீரர் வாரத்தில் மாவீரர் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல் உள்ளிட்ட அந்த குடும்பங்களின் நலனோம்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவீரர் தினத்திலும், அந்த வருடத்தின் மாவீரர் தொகையை புலிகள் வெளியிடுவார்கள். உரிமைகோர முடியாத தாங்குதல்களில் மரணமானவர்கள், அப்படியான விபத்துக்களில் மரணமானவர்கள் தொகையை இதில் இணைப்பதில்லை. அது புலிகளால் இரகசியமாக பேணப்பட்ட பட்டியலாக இருந்தது. 2008ஆம் ஆண்டு மாவீரர்தினமே புலிகளால் அனுட்டிக்கட்ட இறுதி மாவீரர்தினமாகும். அந்த வருடத்தின் ஒக்ரோபர் 30ம் திகதி வரை 22,114 மாவீரர்கள் வீரச்சாவடைந்ததாக புலிகள் அறிவித்தனர். 2009 மே 19ம் திகதி வரையான யுத்தத்தின் இறுதிநாள் வரை சுமார் 30,000 போராளிகள் வீரச்சாவடைந்திருக்கலாமென கருதப்படுகிறது. 2009 ஜனவரியில் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த இறுதி துயிலுமில்லத்தையும் இராணுவம் கைப்பற்றியது. இதன் பின்னர் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் இரணைப்பாலையில் விதைக்கப்பட்டன. 2009 பெப்ரவரி இறுதியில் அந்த பகுதியும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வர, அதன் பின்னர் இரட்டைவாய்க்கால் சந்திக்கு அண்மையாக இருந்த கடற்புலிகளின் தளத்திற்கு அருகில் உடல்கள் விதைக்கப்பட்டன. இந்த பகுதிக்கும் இராணுவம் வந்ததன் பின்னர், புலிகளின் இறுதி துயிலுமில்லத் முள்ளிவாய்க்கால் கப்பலடியில் அமைக்கப்பட்டது. 2009 மே 13ம் திகதி காலை வரை இந்த துயிலுமில்லத்தில் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் விதைக்கப்பட்டன. 2009 யுத்தம் முடிந்த பின்னர், உயிர்நீத்த மறவர்களை அஞ்சலிப்பதை தடுக்க அரசுகள் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டன. சட்டம், பாதுகாப்புத்துறை ஆன மட்டும் முயற்சித்தன. கல்லறைகளும், நினைவிடங்களும் சிதைக்கப்பட்டன. இருந்தாலும், தமிழர்கள் நெஞ்சில் சுமக்கும் துயிலுமிடங்களில் அந்த தியாகிகளை விதைத்து அஞ்சலித்து வருகிறார்கள். http://www.pagetamil.com/25248/- வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்!
வவுனியாவில், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 நினைவேந்தல்! அகரன்November 24, 2018 in: நிகழ்வுகள் தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுக்கும் விசமத்தனமான பிரசாரத்தில் கயமைக்கூட்டம் ஒன்று ஈடுபட்டிருக்கும் சூழலில், ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி, கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துமாறு தமிழீழ மக்களிடம் வலியுறுத்தி கூறியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் என்றும் அறிவித்துள்ளது. குறித்த நினைவேந்தல் எழுச்சி தொடர்பாக, பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஊடக அறிக்கை 2018 நவம்பர் 27 தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மான மாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற நாள், ‘தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27′. ‘எங்களின் சாவு உங்களின் வாழ்வு’ எனச்சொல்லி வீழ்ந்தவர்களை, விசுவாசமாகவும் – நன்றியுணர்வாகவும் நினைந்துருகி வழிபடும் உயர்குலப்பண்பாட்டின் செல்நெறிநின்று, மாவீரத்தெய்வங்களை நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து கர்வத்தோடும் – பெருமையோடும் அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்தியே வந்திருக்கிறது தமிழர் தேசம்! கார்த்திகை மாதம் பிறந்து விட்டாலே போதும். தாயகம் – தமிழகம் – புலம்பெயர் தேசங்கள் எங்கும் சுயமாகவே எழுச்சி கொண்டு ‘விடுதலைக்கான வேட்கையோடு’ நிற்கிறார்கள் தமிழர்கள். எங்கிருந்து தான் வந்து சேருகிறதோ? இதற்கான பலம் – நலம் – சக்தி. இந்த மிடுக்கையும், அழகையும் கொடுக்கும் ஆதிமூலமே ‘துயிலறைக் காவியங்கள் தான்!’ தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை ‘நினைவு கூருதலுக்கான பொதுநாளாக’ தேர்ந்தெடுத்து, அந்நாளில் இந்திய மற்றும் சிறீலங்கா அரச பயங்கரவாதத்தோடு கூட்டுச்சேர்ந்து தமிழ் இனப்படுகொலைகளை நிகழ்த்திய ‘புளொட், ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ’ போன்ற ஆயுத குழுக்களில் இருந்து மரணமடைந்தவர்களையும் இணைத்து வழிபாடு செய்தல் வேண்டும் என்று, தமது அரசியல் பதவி, அதிகாரங்களை பயன்படுத்தி கடுமையான பிரயத்தனங்களை எடுத்து வருகின்றது ஒரு கயமைக்கூட்டம். ரெலோ கட்சியின் செயலாளர் சிறீகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் செயலாளர் மாவை.சேனாதிராசா, ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் கட்சியின் தலைவர் சித்தார்த்தன் போன்றவர்கள் இந்த விசமத்தனமானதும் – விசித்திரமானதும் ஆன கருத்துகளை பரப்பி வந்துள்ளனர். தற்போது இந்த கூட்டணியில் தமிழ் இனத்துரோகிகள் கருணா, பிள்ளையான் உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டு, தமிழீழ தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 21 தொடக்கம் 27 வரையான ‘நினைவேந்தல் வாரத்தை’ மாற்றி அமைத்தே ஆக வேண்டும் என்றும், தேர்ந்தெடுக்கும் ‘நினைவு கூருதலுக்கான அந்தப் பொதுநாளில்’ தமது குழுக்களில் இருந்து ‘தேசவள துரோகத்துக்காக’ மரண தண்டனை வழங்கப்பட்டவர்களையும் தமிழ் சமூகம் அஞ்சலிக்க வேண்டும் என்றும் வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதில் புளொட் கட்சியின் பொருளாளர் சிவநேசன் (பவான்) இன்னும் ஒருபடி மேலே சென்று, வடக்கு மாகாண சபையால் மரநடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு ‘கார்த்திகை’ மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மரநடுகையை, தனது புளொட் கட்சியிலிருந்து மரணித்த தோழர்களை நினைவுகூரும் ஜூலை மாதத்திற்கு மாற்ற வேண்டும் என்று துடிக்கிறார். ஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, (எண்ணிக்கையில் ஆகக்கூடிய) பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை பிரசவித்து, இனமானப்போருக்கு உவந்தளித்து, உலகெல்லாம் வியாபித்திருக்கும் தமிழ் மக்கள் குழுமம், தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினால் நெறிப்படுத்தப்பட்ட மரபுகளுக்கு அமைய வழிந்தொழுகி, உணர்வுபூர்வமாக அனுஷ்டித்து வரும் ‘மாவீரர் நாள் எழுச்சி வாரத்தை’ இல்லாமல் செய்து வரலாற்றை திரிபுபடுத்த முனையும் இந்தக் கயமைகளுக்கு, வலிமையான எதிர்ப்பை தெரிவிப்பதோடு தமிழீழ மக்களின் சார்பாக ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’ கடும்தொனியில் வலியுறுத்தி கூறுவது யாதெனில், ‘தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தரகர்கள் அல்ல. அவர்கள் போராளிகள்!’ அன்றே இந்திய மனோநிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள். யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் – குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள். வீழ்ந்தவர்கள். பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள், தமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக – மீட்பர்களாக – மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒன்றே, தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர்! தமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் – அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற – மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்: நவம்பர் 27. ஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகையர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும் நெஞ்சத்தில் இன்னும் இன்னும் உயர உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக! மாவீர ஆத்மாக்களின் வீரம் செறிந்த கதைகளை ஆவணமாக்கி – பத்திரப்படுத்தி அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கும் எடுத்தியம்பும் தேசியப் பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுவோம் என்று உறுதி ஏற்குமாறும், தாயகம் – தேசியம் – சுயநிர்ணயம் கோட்பாடுகளில் பற்றுறிதியோடு நிற்கும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அறிவுபூர்வமான இத்தகைய செயல்பாடு ஒன்றே வரலாற்றை மாற்றி எழுதிவிட எத்தனிக்கும், பரிசுத்த நாளுக்கு களங்கம் கற்பிக்க முயற்சிக்கும் கயமைக்கூட்டங்களுக்கு தகுந்த பதிலடி நடவடிக்கையாக அமையும். 2018 நவம்பர் 27 செவ்வாய் கிழமை அன்று, வழமை போன்றே இம்முறையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் மாவீரத்தெய்வங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்படும் திருக்கோவிலில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு, மாவீரர் உறுதியுரை கீதம் இசைக்க மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு மாதிரிக் கல்லறைகளுக்கு முன்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும். வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப்படாத நிலைமையிலும், தூரப்பிரதேசங்களில் இருந்து நினைவேந்தலில் கலந்து கொள்ளும் உறவுகளின் இரவு நேரம் மற்றும் மழைக்கால போக்குவரத்துகளை வசதிப்படுத்துவதை கவனத்தில் கொண்டும், நகரசபை உள்ளக மண்டபத்தில் நினைவேந்தலை அனுட்டிப்பதென வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழுவால் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறும், தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து நினைவேந்தல் இடம்பெறும் கிட்டிய தூரத்திலுள்ள மாவீரர் துயிலுமில்லங்களுக்கு முடிந்தவரை நேரில் வருகை தருமாறும் அழைக்கின்றோம். கூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6 மணி 5 நிமிடத்துக்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்… மக்கள் நலப்பணியில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர் http://akkinikkunchu.com/?p=68370- மனதைக் கவர்ந்த கவிதைகள்
மந்திரம் கவிதைகள் மந்திரம் 21ஆம் நூற்றாண்டின் சந்தர்ப்பவாதி நான் ஒரு நாடோடி என்னிடம் ஒரு மடிக்கணினி உண்டு. இரண்டு தொடுதிரை கைபேசிகள் ஒன்று அலுவலுக்கு. மற்றது அந்தரங்கத்திற்கு. 8மணி நேரம் தண்டுவடம் மடித்து பணம் பண்ணுகிறேன் மீதி நேரங்களில் பயணம், உறக்கம், கலவி ஆம் திருமணமாணவன் -கரணம் நான் ஒரு 90களின் சிறுவன். ஒரு கையால் பம்பரம் விட்டுக்கொண்டே இன்னொரு கையால் தற்படம் எடுத்து நிலை தெரிவிக்கும் விநோதன். வாய்ப்புகளை நோக்கி ஓடும் பகடையாளன் எப்போதும் விருத்தங்கள் வேண்டி வாழ்வை உருட்டி கொண்டிருப்பவன். எங்கும் வேர் விடாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு மணிபிளாண்ட் மனிதன். எனது இளமை நினைவுக்குள் ஒரு ஊர் சுமப்பவன் என் மகனின் நினைவுகளோ ஒரு அடுக்ககத்தின் பல நகரங்களை ஏற்றிருக்கும். சந்தர்ப்பவாதத்தின் தத்துவம் கொண்ட என் வாழ்வில் என் அப்பா ஒரு வாகை மரத்தின் செம்பூக்களோடும், நான் ஒரு வேப்ப மரத்தின் மஞ்சள் பூக்களோடும், என் பிள்ளையோ வண்ணம் குழைந்த குரோட்டன்ஸ் இலையோடும் பால்யத்தை பகிர்ந்து கொண்டிருப்போம். oOo கீழ்மையின் ஒளி அகாலமாய் நீள்கிறது நாட்கள். நான்கு சுவர் ஒரு கூரை கைபேசி திரைஒளியில் ஒளிர்கிறது இருளறை. பெருவிரலின் அசைவுகளில் தொடுதிரையில் நுற்றுக்கணக்கானவர்களின் காலம் உயிர் பெறுகிறது. காலக்கோடு ஒரு தற்பெருமை அட்டவணை. முகப்புத்தகத்தின் இடுகைகளில் மின்னும் விருப்பக்குறிகளில் பொறாமையின் இயலாமையின் நுண்ணிய ரேகை பதிந்திருக்கிறது கீச்சுகளின் கருத்துலகில் உரையாடும் மறுமொழிகளில் வக்கிரத்தின் விரசத்தின் ஆழ்மன முகமூடி கள்ள புன்னகை பொதிந்திருக்கிறது. தேடுபொறியின் வலை வரலாற்றில் அந்தரங்கங்களின் ரகசியங்கள் வால் தீண்டும் நாகமென தீரா காமத்தின் பின்னிரவுகளை முடிவற்று சூழ்ந்திருக்கிறது. அணையா இருண்மையின் கீழ்உணர்ச்சிகள் கரும் இரவின் போர்வையாக எல்லா அறைகளிலும் திரையிட்டிருக்கிறது. ஆதி மிருகத்தின் உயிர்விசையை அத்திரையொளி தனித்த சுடர் போல் நகரின் எல்லா மனிதருக்குள்ளும் ஒளிர செய்து கொண்டிருக்கிறது https://padhaakai.com/2018/11/16/mandiram-poems/- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழரசு???- வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! லெப்கேணல் மணிவண்ணன்
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! லெப்கேணல் மணிவண்ணன் அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பயிற்சிகளைப் பெறவேண்டுமாயின் இந்தப் பயணம் முடிந்தாக வேண்டும். மணிவண்ணன் எதற்கும் அஞ்சியவனல்ல. அவனிடம் துணிவு என்பது ஏராளமாக இருந்தது. அது ஒன்றே அவன் மட்டக்களப்பிலிருந்து வன்னிவரை பயிற்சிக்காகப் பயணிப்பதற்குத் துணை புரிந்தது. இந்தப் பயணத்தில் மட்டுமல்ல மணிவண்ணனின் போராட்டப் பயணம் முழுவதிலும் துணிச்சலும் வீரமும் ஓயாத உழைப்பின் வடுக்களும்தான் நிறைந்திருக்கின்றன. ஜெயசிக்குறு படைநகர்வை எதிரி மேற்கொண்டிருந்த காலம். ஓய்ந்திராமல் போராளிகள் சமரிட்ட நாட்கள். புளியங்குளத்தில் வலிமையான ஒரு தடுப்புச்சமர். ஒரு வாழ்வுக்காக சாவின் கனதியைப் புறந்தள்ளி விட்டு எதிரியுடன் மோதிய நாட்கள். 19.08.1997இன் காலைப்பொழுது. ஒரு சமர் மூளப் போவதற்கான அறிகுறிகள் அப்பட்டமாய்த் தெரிந்தன. எறிகணைகளின் இரைச்சல்களும் அவை வெடித்துச் சிதறும் அதிர்வுகளும் செவிப்பறைகளைத் துளைத்தன. காப்பரண்களில் நின்ற வீரர்கள் தங்கள் துப்பாக்கிகளைச் சுடும் நிலைக்குக் கொண்டு வந்தனர். அப்போது ஒரு சம்பவம் நடந்தது. எதிரியின் கவச டாங்கிகள் சடுதியாக எங்கள் காப்பரண்களை ஊடறுத்து உள் நுழைகின்றன. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பழைய வாடிப் பகுதியால் ஊடுருவிய டாங்கிகளும் துருப்புக் காவிகளும் ஏ-9 நெடுஞ்சாலையில் ஏறி புளியங்குளத்தில் புலிகளின் கட்டளைத் தளபதி தரித்திருந்த பக்கமாய்ச் சென்றன. கொஞ்ச நேரத்திற்குள் புலிவீரர்கள் விழித்துக்கொண்டார்கள். சண்டை இப்போது முகாமுக்கு உள்ளும் வெளியுமாக எல்லா இடமும் நடந்தது. காப்பரண்களில் இருந்தோர் தங்கள் நிலைகளை விட்டு விடாமல் இருக்க கடும்சமர் புரிந்தார்கள். சிறப்புக் கவச எதிர்ப்புப் போராளிகள் முகாமுக்குள் டாங்கிகளைத் தேடினார்கள். தனது அணியுடன் தூரத்தே நின்ற மணிவண்ணன் சண்டை நடந்த பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். எறிகணைகள் அந்த அணியை நகரவிடாமல் தடுத்தன. பலமுறை நிலத்தில் விழுந்தார்கள். மணிவண்ணன் சாதுரியமாக டாங்கி வந்த பகுதிகளுக்குத் தனது போராளிகளைக் கூட்டிச் சென்றான். டாங்கிகள் உண்மையிலேயே பலமானவை. துல்லியமான தாக்குதிறன் கொண்டவை. வேகமாக இலக்கை இனங்கண்டு தாக்கக்கூடியவை. இந்த டாங்கிகளின் கண்ணுக்குள் வெட்ட வெளியில் இனங்காணப்பட்டு விட்டோமானால் அது இலகுவாக எம்மை இல்லாதொழிக்கும். எனவே கொஞ்ச நேரத்திற்குள் யார் முந்துகிறார்களோ அவர்கள்தான் வெல்லமுடியும். மணிவண்ணன் தனது போராளிகளைத் தந்திரோபாயமாக நகர்த்திய படி நகர்ந்து எதிரியின் டாங்கியைக் குறி வைத்துத் தாக்கினான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தியை வாங்கித் தானே ஒரு டாங்கியை அடித்தான். மணிவண்ணன் முந்திக் கொண்டதால் உலகின் வல்லரசுகளின் உருவாக்கத்தில் வந்த அசைக்க முடியாக் கவசம் தனது அத்தனை செயற் திறன்களையும் இழந்து அப்பாவித்தனமாய் எரிந்து கொண்டிருந்தது. இன்னுமொரு டாங்கியையும் புலிவீரர்கள் அடித்து எரித்தார்கள். ஒரு படைக்காவி கவச ஊர்தியும் எம்மிடம் சரணடைந்து கொண்டது. அதிலிருந்து இறங்கியோடிய படையாட்களைத் தப்பிச் செல்ல அனுமதிக்காமல் களத்திலேயே அவர்களைச் சுட்டு வீழ்த்தினார்கள். எரிந்த டாங்கிகளுடன் சேர்ந்து படையினரின் முன்னேறும் கனவு எரிந்து போனது. அன்றைய நாளில் காலடிக்குள் எதிரி வந்தபோது அவன் பந்தாடப்பட்டான். இந்த நாளின் வெற்றிக்கு மணிவண்ணனின் துணிச்சலும் மதிநுட்பமான சண்டைத் திறனும் முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு அணித்தலைவன் தனியே சண்டைகளை மட்டும் வழி நடத்துபவன் அல்ல. அவன்தான் தனக்குக் கீழுள்ள போராளிகளுக்கு எல்லாமுமாகிறான். சிறப்பு கவச எதிர்ப்பு அணிப் போராளிகளுக்கு முகாமில் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். பயிற்சிகளோ கடுமையானவை. சிலவேளைகளில் களைப்பில் நாக்குத் தொங்கும். ஆனால் இவை போராளிகளை வருத்துவதற்காக அல்ல.சண்டைக் களங்களில் தங்கள் உயிர்களை வீணே இழந்து விடாமல் இருப்பதற்காகவே. இந்தப் பயிற்சிகளால் ஏற்படும் உடற்சோர்வைப் போக்க ஏதாவது நல்ல உணவு கொடுக்க வேண்டுமென்றால் சமையற் கூடத்தில் மணிவண்ணன் நிற்பான். அவனே கறிசமைப்பான். போராளிகளுக்குச் சுவையான சாப்பாடு கொடுப்பான். அப்போது அவன் ஒரு அணித்தலைவனாக அல்ல. ஒரு தாயாகவே இருப்பான். அவன் வெளிப்படுத்தும் அன்பு உணர்வு கூட ஒரு தாய்க்கு நிகரானது. 1998 இரண்டாம் மாதத்தின் முதலாம் நாள். கிளிநொச்சியில் அமைந்திருந்த எதிரியின் படைத்தளம் மீது ஒரு வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஏனைய படையணிகளுடன் சேர்ந்து விக்டர் சிறப்புக் கவச எதிர்ப்பு அணியும் களமிறங்கியது. சண்டைகள் கடுமையாக நடந்தது. எதிரியின் அரண்களை ஊடறுத்து உள்நுழைந்த அணிகள் இறுக்கமாகச் சண்டையிட்டன. சிறப்பு கவச அணியின் இன்னொரு அணித்தலைவன் நவச்சந்திரனின் அணி எதிரியின் முகாமிற்குள் முற்றுகையிடப் படுகின்றது. தொலைத் தொடர்புக்கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலிக்கின்றது. “நாங்கள் கடைசி வரைக்கும் சண்டை பிடிப்பம்” இது நவச்சந்திரனின் குரல். அந்த அணிக்கு ஏதோ நடக்கப் போகின்றது என்பதை மணிவண்ணனால் உணர முடிந்தது. கைகளைப் பிசைந்தான். அந்தச்சூழலில் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. காலை தொடங்கிய சண்டை மாலைவரை எதிரியின் குகைக்குள் நடந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் தொலைத் தொடர்புக் கருவியில் நவச்சந்திரனின் குரல் ஒலித்தது. “20 மீற்றரில ஆமி. என்னட்ட ஒண்டுமில்ல. புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற வார்த்தைகளோடு நவச்சந்திரனின் குரல் அடங்கிப் போனது. மணிவண்ணனின் இதயம் கனத்தது. போராட்ட வாழ்வில் இருவரும் ஒன்றாகியவர்கள். நீண்ட களவாழ்க்கையில் ஒன்றாய்ச் சாதித்தவர்கள். வேதனைகளைத் துயரங்களைக் கடந்து போராட்டப் படகில் ஒன்றாய்ப் பயணித்தவர்கள். இன்று நவச்சந்திரன் இல்லாமல் போய்விட்டான். அவனோடு சேர்ந்து ஒன்பது வீரர்களை கவச எதிர்ப்புக் குடும்பம் இழந்தது. இழப்பின் துயரம் நெருப்பின் வெப்பக் கனலை அவனுக்குள் உருவாக்கியது. இந்த வலியை இன்னும் வலிமை உள்ளதாய் எதிரிக்குப் புகட்ட வேண்டும். அவன் இன்னுமொரு களத்திற்காகக் காத்திருந்தான். 20.04.1998. அது ஒலுமடுவில் ஜயசிக்குறுப் படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் தடுப்புவேலி. இன்று எதிரி முன்னகரப் போகின்றான். மணிவண்ணன் தனது கவச அணிப் போராளிகளுடன் எதிரியின் டாங்கிகளுக்காகக் காத்திருந்தான். காலை 7.00 மணி. சமருக்கான அறிகுறியாய் எறிகணைகள் கணக்கற்ற விதத்தில் அந்த நிலம் முழுவதும் விழுந்து சிதறிக் கொண்டிருந்தது. பேரிரைச்சலுடன் 20ற்கு மேற்பட்ட டாங்கிகளும் படைக்காவிகளும் அவர்களுடன் சேர்ந்து பெருமளவான படையினரும் முன்னநகர்ந்தனர். டாங்கிகள் நெருப்பைக் கக்கித் தள்ளின. அவை போராளிகளின் காப்பரண்களைச் சல்லடை போடத் தொடங்கின. போராளிகளின் காப்பரண்களுக்கு மிகநெருக்கமாகவும் காப்பரண்களுக்கு மேலாகவும் டாங்கிகள் நகர்ந்தன. அங்கிருந்த போராளிகள் குண்டு மழைக்குள் நனைந்தபடி சமரிட்டார்கள். மணிவண்ணன் தன் அணியை வழிநடத்தி டாங்கிகளைத் தாக்கினான். ஆர்.பி.ஜியால் டாங்கிகளைத் தாக்கினார்கள். அருகில் வந்தபோது எறிகுண்டைக் கழற்றி வீசினார்கள். எதிரியின் குண்டு பட்டுக் களத்திலே வீழ்ந்தார்கள். எல்லாம் முடிந்து களம் ஓய்விற்கு வந்தது. எதிரி தன் கவசங்களோடு ஓட்டம் எடுத்தான். மூன்று டாங்கிகள் எரிந்தழிந்தன. இரண்டிற்கு மேற்பட்டடாங்கிகள் சேதமடைந்தன. பல படையினர் கொல்லப் பட்டனர். இந்தத் தாக்குதலில் மணிவண்ணனின் சாதனையிருந்தது. ஆனாலும் அவன் நிறைவடையவில்லை. இன்னும் இன்னும் சாதிக்கத் துடித்தான். அவன் துடிப்பிற்கேற்ப இன்னுமொரு களம் அவனுக்குக் கிடைத்தது. அவன் எதிர்பார்த்திருந்த களம் இதுதான். நவச்சந்திரன் மடிந்த அதே கிளிநொச்சித் தளம் மீது மீண்டும் ஒரு படைநடவடிக்கை. தலைவரின் திட்டம் தளபதிகளால் விளக்கப் படுகின்றது. கிளிநொச்சித் தளத்தை வீழ்த்துவதற்காகப் பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் எதிரியின் எல்லைக்குள் ஊடறுத்து நின்று, முன்னும் பின்னுமாக வரும் எதிரியைத் தாக்கியழிக்கும் நடவடிக்கைக்குக் கவச டாங்கிகளைத் தாக்குவதற்காக விக்டர் சிறப்பு கவச எதிர்ப்பு அணியும் தெரிவு செய்யப் பட்டது. நவச்சந்திரன் உட்பட அறுபதிற்கும் மேற்பட்ட போராளிகள் மடிந்த அதேயிடம். சண்டை தொடங்கியதும் அணி உள் நுழையும் பாதையில் நின்றவாறு அணியை வழிநடத்தும் படி அவனுக்குச் சொன்ன போது அவன் அதற்குச் ஏற்புத் தெரிவிக்கவில்லை. நவச்சந்திரன் எந்தக் கவசங்களை அழிக்கச் சென்று அந்தக் கனவோடு மடிந்தானோ அதே கனவை அந்த மண்ணில் அதேயிடத்தில் வைத்து நிறைவேற்றாமல் திரும்புவதில்லை என உறுதியாகத் தெரிவித்தான். அவனிடம் இரண்டு தெரிவுகள் மட்டும்தான் இருந்தன. வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்வது. 26.09.1998 இன் அதிகாலைப் பொழுதில் கிளிநொச்சிப் படைத்தளம் மீது பாரிய தாக்குதல் தொடங்கியது. முகாமில் எல்லா முனைகளிலும் சண்டை தொடங்கியது. சமநேரத்தில் எதிரியின் முன்னரண்களைத் தாக்கி ஊடறுத்து நிலை கொள்ளும் அணிகள் உள் நுழைகின்றன. துப்பாக்கி ரவைகள் பல முனைகளில் இருந்து போராளிகளைக் குறிவைத்த போதும் அவர்கள் இலக்கு நோக்கி நகர்ந்தார்கள். மணிவண்ணன் தனது கவச எதிர்ப்புப் போராளிகளுடன் நகர்ந்து பரந்தனிற்கும் கரடிப்போக்கிற்கும் இடையில் நிலை கொண்டிருந்த போராளிகளுடன் தனது அணியையும் நிலைப்படுத்தினான். சண்டை கடுமையாக நடந்தது. முன்பக்கமாய் முன்னேறிய புலிகளின் அணிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கிளிநொச்சிப் படைத்தளம் ஊசலாடிக் கொண்டிருந்தது. இரண்டாம் நாள் கடந்து மூன்றாம் நாள் (28.09.1998) காலை ஒன்பது மணியளவில் பரந்தன் படைத்தளத்திலிருந்து பாரிய தாக்குதலைத் தொடுத்தவாறு டாங்கிகளுடன் படையினர் முன்னேறினர். துண்டாடப்பட்டிருக்கும் கிளிநொச்சிப் படைத்தளத்தை மீண்டும் இணைத்துக் கொள்வதுதான் அவர்களின் திட்டம். ஊடறுத்து நிலை கொண்டிருந்த அணிகளை டாங்கிகளும் படைகளும் நெருங்கித் தாக்கின. வாழ்விற்கான ஒரு சண்டை அதில் நடந்தது. மணிவண்ணன் தனது அணியைத் தயார்ப்படுத்திச் சண்டையிட்டான். போராளி ஒருவனின் ஆர்.பி.ஜி உந்துகணையைத் தானே வாங்கி ஓடிச்சென்று நிலையெடுத்து டாங்கியைத் தாக்கியழித்தான். எல்லாப் போராளிகளினதும் கடுமையான தாக்குதலால் இரண்டு டாங்கிகளை இழந்ததும் பரந்தனில் இருந்து முன்னேறிய படையினர் பின்வாங்கி ஓடினர். இந்தத் தோல்வியால் நிர்க்கதியான கிளிநொச்சிப் படைத்தளப் படையினர் அன்று மாலையே படைத்தளத்தை விட்டு ஓட்டமெடுத்தனர். புற்றிலிருந்து புறப்படும் ஈசலைப்போல் படையினர் ஓடிவந்தனர். ஓடிவந்த படையினரை, ஊடறுத்துக் காத்திருந்த புலிவீரர்கள் தமது சுடுகலன்களிற்கு இரையாக்கினர். தங்கள் துப்பாக்கிகளில் ரவைகள் முடியும்வரை படையினரைக் கொன்றொழித்தனர். இறுதியில் கைகலப்புச் சண்டையாக அது மாறியது. பல புலிவீரர்கள் உயிர் கொடுத்த இந்தச் சமரில் மணிவண்ணன் குண்டுச் சிதறலில் விழுப்புண்பட்டான். ஆனால் அவன் நினைத்ததைச் சாதித்தான். நவச்சந்திரனும் அறுபதிற்கும் மேற்பட்ட புலிவீரர்களும் மடிந்த அதே இடத்தில் 200இற்கு மேற்பட்ட படையினரைச் சுட்டு வீழ்த்தியதுடன் இன்னும் உச்சமாய் நவச்சந்திரனின் அணி பயன்படுத்திய ஆயுதங்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றிலிருந்து பத்திரமாய் மீட்கப்பட்டது. இந்த மீட்பு நவச்சந்திரனுக்கு அவன் தீர்த்த நன்றிக்கடன் போன்றிருந்தது. மணிவண்ணன் இப்படித்தான் களங்களில் வாழ்ந்தவன். அதிகம் பேசாத அமைதியான தோற்றம். அவன் பேசிக்கழித்த நாட்களை விட செயலில் சாதித்த நாட்கள்தான் அதிகம். 1998ஆம் ஆண்டு கடைசி மாதம். ஒட்டுசுட்டான் பகுதியை நோக்கி சிங்களப் படைகள் முன்னேறின. முகாமில் பயிற்சியில் நின்ற மணிவண்ணன் ஒரு தாக்குதல் அணியை வழிநடத்திக் கொண்டு முன்னேறும் படைகளைத் தடுத்து நிறுத்தும் சண்டையில் ஈடுபட்டான். அன்றிலிருந்து அவனது வாழ்க்கை முழுமையாய்க் களத்தில்தான். காடுகளுக்குள் நின்றபடி இயற்கையின் எல்லாவிதமான அசைவுகளுக்கும் முகம் கொடுத்தான். மழை, பனி, சேறு, சகதி, முட்கள், பற்றைகள் என எல்லாவற்றிற்குள்ளும் வாழ்ந்தான். அடிக்கடி மூழும் சண்டைகளுக்குள் உயிர் பிரியும் வேளைவரை சென்று வந்தான். ஒருசிறு அணியுடன் களம் வந்தவன் களத்தில் ஒரு கொம்பனி மேலாளராக வளர்ந்தான். இந்த நீண்டகள வாழ்க்கையில் அவன் ஓய்விற்காக முகாம் திரும்பியதேயில்லை. ஓயாத அலைகள்-03 பெரும் பாய்ச்சல் ஜயசிக்குறுப் படைமீது தொடங்கியது. படைத்தளங்கள் புலிகளிடம் சடுதியாய்ச் சரிந்துவீழ்ந்தன. மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் என தொடர்ந்த சண்டைகளில் ஒதியமலைப் பகுதிகளில் தனது அணியுடன் இடங்களை மீட்டபடி முன்னேறினான். எதிரி ஓடிக் கொண்டிருந்தான். சண்டை ஓரிடத்தில் இறுக்கமடைந்தது. எதிரி தனது கவசங்களை ஒருங்கிணைத்து இழந்த இடங்களைக் கைப்பற்ற முன்னேற முயற்சித்தான். விடுதலைப் புலிகளின் மோட்டார் எறிகணை வீச்செல்லையையும் தாண்டி மணிவண்ணன் முன்னேறியிருந்தான். மணிவண்ணன் மோட்டார் எறிகணை உதவி கேட்டான். ஆனால் அந்த எறிகணை செலுத்தியை முன்னகர்த்த முனைந்த போது அதைக் கொண்டு சென்ற ஊர்தி கண்ணிவெடியில் சிக்கியது. மணிவண்ணனின் அணி மோட்டார் எறிகணையின் சூட்டாதரவை இழந்த போது அவன் தொலைத் தொடர்புக் கருவியில் உறுதியாய்த் தெரிவித்தான் “நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசி வரை சண்டை பிடிப்பன்.” அவன் சொன்னதுபோலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான். தன் தேசத்திற்குத் தன் இயலுமைக்கும் அதிகமாய்ச் சாதித்த அந்த அமைதியான போர்வீரன் வெற்றி அல்லது வெற்றிக்காக வீழ்தல் என்ற தன் வாதத்தினைச் செயலில் மெய்ப்பித்தான். நினைவுப்பகிர்வு:- ச.புரட்சிமாறன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” http://www.battinaatham.net/description.php?art=17411- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்? சபேசனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்? - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.