Everything posted by கிருபன்
-
அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம்
அநுரவைக் கண்காணிக்க ’அனுர மீட்டர்’ அறிமுகம் வெரிட்டே ரிசர்ச்சின் ஒரு தளமான Manthri.lk, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்குறுதிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் நிகழ்நிலை கண்காணிப்புத் தளமாக அனுர மீட்டரை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள், நிர்வாகம், ஊழல் எதிர்ப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பாக அதிக பொது நலன் கொண்டதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படும் திட்டங்களில் கவனம் செலுத்துவதற்காக 22 வாக்குறுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அனுரா மீட்டரைப் புதுப்பிப்பதற்கான தகவல்கள் மூன்று மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன: 1) வெளியிடப்பட்ட ஆதாரங்களில் காணப்படுவது, 2) தகவல் அறியும் உரிமை கோரிக்கைகளுக்கு பெறப்பட்ட பதில்கள், மற்றும் 3) பயனர்களால் வழங்கப்படும் நம்பகமான தகவல்கள். Manthri.lk பக்கத்தில் உள்ள Anura Meter ஐப் பார்வையிடுவதன் மூலம் பயனர்கள், யோசனைகள் மற்றும் தகவல்களை வழங்குவதன் மூலம் பங்களிக்க அழைக்கப்படுகிறார்கள். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/அநுரவைக்-கண்காணிக்க-அனுர-மீட்டர்-அறிமுகம்/150-360993
-
"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு!
"சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" திறப்பு! "சிவபூமி திருவாசக அரங்கம் மண்டபம்" யாழ்.நாவற்குழி திருவாசக அரண்மனை வளாகத்தில் நேற்று(14) மாலை திறந்துவைக்கப்பட்டது. மருத்துவ கலாநிதி சண்முகநாதன் அருந்ததி தம்பதிகளின் நினைவாக மருத்துவ நிபுணர் மனோமோகன் சிவகௌரி தம்பதிகளால் நிறுவப்பெற்ற இந்த அரங்கம், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி. ஆறு திருமுருகன் தலைமையில், மருத்துவ நிபுணர் மனோமோகன் தம்பதிகளால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில், விருந்தினராக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குனராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சிவபூமி திருவாசக அரங்க மண்டப திறப்பு விழா மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. https://newuthayan.com/article/%22சிவபூமி_திருவாசக_அரங்கம்_மண்டபம்%22_திறப்பு!
-
வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்!
வட்டி பணம் செலுத்த தவறியவரை கடத்தி சென்று சித்திரவதை புரிந்த நால்வர் மறியலில்! adminJuly 15, 2025 யாழ்ப்பாணத்தில் கந்து வட்டி கும்பலை சேர்ந்த நால்வர் மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் குடும்பஸ்தர் ஒருவருக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுத்த நபர் ஒருவர், பணத்தினை பெற்றவர் மீள கொடுக்க தவறியமையால் மேலும் மூவருடன் இணைந்து, பணம் பெற்றவரை இளவாலை பகுதிக்கு கடத்தி சென்று, நிர்வாணமாக்கி , அவரை மோசமாக தாக்கி சித்திரவதைகள் புரிந்து அதனை தமது திறன்பேசியில் காணொளியாகவும் பதிவு செய்துள்ளனர். பின்னர் பணம் பெற்றவரை மிரட்டி விடுவித்த நிலையில், அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் தொடர்பில் காங்கேசன்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் ,குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி சென்றமை , தாக்கியமை, சித்திரவதை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வட்டிக்கு பணம் கொடுத்தவர் உள்ளிட்ட நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர் விசாரணைகளின் பின்னர் நால்வரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. அதேவேளை, சித்திரவதை மற்றும் தாக்குதலைகளை காணொளியாக பதிவு செய்த திறன் பேசிகளை பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் கந்து வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர் ஒருவர் கடந்த வருடம், தன்னிடம் பணம் பெற்று , அவற்றினை திருப்பு செலுத்த தவறியவர்களை கடத்தி சென்று தோட்ட வெளி ஒன்றில் நிர்வாணமாக்கி தாக்கி, சித்திரவதைகள் புரிந்து அவற்றை தனது தொலைபேசியில் காணொளியாக பதிவேற்றி வைத்துள்ளார். அவற்றில் சில காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியதை அடுத்து , அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சுன்னாக காவற்துறையினர் குறித்த கந்து வட்டி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இந்நிலையிலையே தற்போதும் அதே பாணியில் வட்டி பணம் வாங்க முற்பட்ட கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/217873/
-
ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்!
ஜேர்மனில் இருந்து யாழ் சென்றவர் இளைஞனை மூர்க்கத்தனமாக தாக்கினார்! adminJuly 15, 2025 ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வந்துள்ள நபர் ஒருவர் 10 பேர் கொண்ட கும்பலுடன் சேர்ந்து இளைஞன் ஒருவரை மூர்க்கத்தனமாக தாக்கியதில், தாக்குதலுக்கு இலக்கானவர் படுகாயங்களுடன் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈச்சமோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டில் இருந்து விடுமுறையை கழிப்பதற்காக சென்றுள்ளார். குறித்த நபர் சகோதரி குடும்பத்தினருடன் முரண்பட்டு, சகோதரியின் கணவருடனும் முரண்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (14.07.25) ஜேர்மன் நாட்டில் இருந்து சென்ற நபர் , தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் மது அருந்தியுள்ளார். அவ்வேளை, ஏற்கனவே முரண்பட்ட சகோதரியின் கணவனின் நண்பர் அவ்வழியே சென்ற வேளை நிறை போதையில் இருந்த கும்பல் அவ்விளைஞனை வம்புக்கு இழுத்து தர்க்கம் புரிந்து, மண்வெட்டி பிடி, கூரிய ஆயுதங்களால் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞனை அயலவர்கள் மீட்டு, யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஜேர்மன் நாட்டில் இருந்து வந்த நபர் மீண்டும் ஜேர்மன் நாட்டுக்கு தப்பி செல்லாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்னர். https://globaltamilnews.net/2025/217868/
-
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது
14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது adminJuly 14, 2025 புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/217863/
-
பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து!
பிள்ளையான் ஊடாக சாட்சியத்தை பெறவே அரசு முயற்சி - உதய கம்மன்பில கருத்து! அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரச தரப்பு எதிர்பார்க்கிறது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் , இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது. தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார். https://newuthayan.com/article/பிள்ளையான்_ஊடாக_சாட்சியத்தை_பெறவே_அரசு__முயற்சி_-_உதய_கம்மன்பில_கருத்து!
-
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில்
வெடிப்புச் சம்பவங்களில் இறந்தோரே கொக்குத்தொடுவாய் புதைகுழியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது கொக்குத்தொடுவாய்-முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டது. அதன்தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. முல்லைத்தீவு நீதிமன்றம், முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கே.வாசு தேவா மற்றும் யாழ்ப்பாணம் சட்ட மருத்துவ அதிகாரி செ.பிரணவன் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் பங்குபற்றுதல்களுடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கையில் 52 மனித என்புத்தொகுதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன. அத்துடன் ஆடைகள், துப்பாக்கி ரவைகள் உட்பட வேறு தடயப்பொருள்களும் மீட்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புத் தொகுதிகளின் பகுப்பாய்வு அறிக்கையில் இறந்தவர்கள் ஏன் இறந்தார்கள்? என்ன காரணத்தால் இறந்தார்கள் அவர்களின் வயது போன்ற விவரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட என்புத் தொகுதிகளில் 31 பெண்களுடையவை என்றும், 21 ஆண்களுடையவை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இறந்தவர்களின் வயது எல்லை 12 முதல் 53 வயது வரை உள்ளது. அதேநேரம் பெரும்பாலானவர்கள் 13 முதல் 30 வயதுடையவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 32 பேரின் உயிரிழப்புக்கு வெடிப்புச் சம்பவம் அல்லது வெடிப்புக்காயம் காரணமாகவுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக் காயத்தால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்புச் சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு காரணமாக 12 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலான உயிரிழப்புகள் வெடிப்புக் காயங்களால் ஏற்பட்டுள்ளன என்பது பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வெடிப்புச்_சம்பவங்களில்_இறந்தோரே_கொக்குத்தொடுவாய்_புதைகுழியில்
-
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்!
மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த களபயணம்! adminJuly 14, 2025 மன்னார் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறை படுத்துவது தொடர்பாக ஆராய அமைச்சர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த கள விஜயம் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ளாங்குளம் கிராமத்தில் பாலியாறு குடிநீர் திட்டம் நடைமுறைபடுத்துவதற்கான ஒருங்கிணைந்த கள விஜயம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மாலை இடம்பெற்றது குறித்த கள விஜயதில் வனவள மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர் மற்றும் வீடு அமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ,நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் அரச உயர் அதிகாரிகள் திணைக்களத் தலைவர்கள் கிராம் மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் தொடர்ந்து அரச திணைக்கள அதிகாரிகளால் திட்டம் தொடர்பான விளக்கம் அமைச்சர் உள்ளிட்ட குழுவினருக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த திட்டம் நடை முறைப் படுத்தப்படும் பிரதேசத்தினை அமைச்சர் குழுவினர் சென்று பார்வையிட்டனர் https://globaltamilnews.net/2025/217843/
-
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
செம்மணிக்கு நீதி? அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துள் இயங்கும் ஓர் அலுவலகமானது இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருப்பதன்மூலம் அணையா விளக்கு போராட்டமானது மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறையையும் நிபுணத்துவத்தையும் கோரி நிற்கின்றது. அதாவது, உள்நாட்டு பொறிமுறையை நம்பவில்லை என்று பொருள். ஐநாவில் 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அந்த அலுவலகம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் “ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP) இதன்படி சான்றுகளையும் சாட்சிகளையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வருகைக்குப்பின் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுமா ? ஆனால் தன்னுடைய இலங்கை வருகையின் இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடகங்கள் மத்தியில் ஆற்றிய உரையில் என்ன சொன்னவர் தெரியமா? “இறுதியிலும் இறுதியாக இது இலங்கை அரசின் பொறுப்பாகும், அதோடு,இந்த முன்னெடுப்பு இலங்கையின் தேசிய உடமை என்பது முக்கியம்.மேலும் இது சர்வதேச வழிமுறைகளால்,உதவிகளால் பூர்த்தி செய்யப்படலாம்,”அதாவது அவருடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில்,அவர் உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவது பற்றியே பேசுகிறார்.அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இயங்கிவரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அந்த அலுவலகத்தின் பொருள் என்ன?அது உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றா?ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வர விசா இல்லையே? சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்த அலுவலகத்தில் அடிப்படைப் பலவீனங்கள் உண்டு.இப்படி ஒரு பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது என்பதனை ஊகிகித்து 2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்தன.மூன்று கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் 2021 ஜனவரி மாதம் ஐநாவுக்கு எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கேட்கப்பட்டன.ஒன்று, பொறுப்புக் கூறலை ஐநா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து ஐநா பொதுச் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதைப் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.இரண்டாவது கோரிக்கை, மேற்சொன்ன பொறிமுறையானது குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அதன் செயற்பாடுகளை முடிக்கும் விதத்தில் வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.அந்த பொறிமுறைக்குரிய செயற்படு காலத்தை 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டாகக் குறைக்கும்படி கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.அக்கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்ட பின் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது குற்றஞ்சாட்டியது. அக்கூட்டத் தொடரின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன்படி ஒரு பொறிமுறை அதுதான் மேற்படி அலுவலகம் (OSLAP) உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ்த் தரப்பு கேட்டிருந்த ஒரு பொறிமுறை அல்ல.அதில் பின்வரும் அடிப்படைப் பலவீனங்கள் இருந்தன. முதலாவதாக,அது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உள்ளே இயங்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம்தான். அதாவது கூட்டுக் கடிதத்தில் கேட்டதுபோல பொறுப்புக்கூறலை அவர்கள் மனிதஉரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவில்லை. இரண்டாவது அதற்கு ஆறு மாத அல்லது ஒரு வருட கால நிர்ணயம் செய்து அதன் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படவில்லை. பதிலாக இன்றுவரை அது இயங்குகின்றது.இப்படித்தான் இருக்கிறது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஐநாவின் பதில் வினை. அது தமிழ் மக்கள் கேட்டதை விட,எதிர்பார்த்ததைவிட பலவீனமான ஒரு பொறிமுறை என்ற போதிலும் அப்பொறிமுறையைச் சேர்ந்த அலுவலர்கள் நாட்டுக்குள் வந்து சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் மற்றும் ராஜதந்திர பின்னணிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது அழுத்தங்களளைப் பிரயோகிக்கும் விதத்தில் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் விட்டது, அவருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் அந்தப் பொறிமுறையை அவரே பலவீனப்படுத்துவதாக அமையுமா? அது ஒரு பலவீனமான கட்டமைப்புத்தான். எனினும் அந்த அலுவலகமானது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது இப்பொழுது ஓர் அனைத்துலக நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயத்தில் தமிழ்மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துலக நிலைமைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமாக உள்ளன. மேலும் அந்த அலுவலகம் சேகரித்துவரும் சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிட்ட சில படைப் பிரதானிகளுக்கும் படை அலுவலர்களுக்கும் எதிராகப் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கேயும் தமிழ்த் தரப்பு நோக்கு நிலையில் இருந்து ஒரு கேள்வி உண்டு. அந்தப் படைப்பிரதானிகள் தாங்களாக அதைச் செய்யவில்லை அவர்களுக்கு உத்தரவிட்ட,அதற்கு வேண்டிய அரசியல் தீர்மானத்தை எடுத்த,அரசுக் கட்டமைப்பு உண்டு.அந்தக் கட்டமைப்பைக் குற்றஞ்சாட்டும் ஒரு நிலை இன்று வரை ஐநாவிலோ அல்லது மேற்கு நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. அதாவது இனப்படுகொலையைச் செய்தது ஒரு அரசுக் கட்டமைப்பு.இன அழிப்பு என்பது அந்த அரசுக் கட்டமைப்பின் கொள்கையாக இருந்தது என்ற அடிப்படையில் அந்த அரசுக் கட்டமைப்பைத் தான் விசாரிக்க வேண்டும்.அதற்கு எதிராகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கேட்கின்றது.ஆனால் அப்படி ஒரு வளர்ச்சி ஐநாவிலும் ஏற்படவில்லை,மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை. எனினும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு அது தமிழ் மக்கள் கேட்டதை விடப் பலவீனமானது என்ற போதிலும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு முன்னேற்றம்தான். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான்,செம்மணியும் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தமிழ்மக்கள் தமது சக்திக்கேற்ப சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் DNA பரிசோதனைகளைச் செய்வதற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.செம்மணி தொடர்பில் மட்டுமல்ல தமிழ் மக்களிடம் பெரும்பாலான விடயங்களில் விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் உண்டா? தன்னை பலிகடா ஆக்கிய தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு ராணுவ சார்ஜன் சொன்ன சாட்சியத்தை வைத்துதான் செம்மணியில் நானூறுக்கும் குறையாத உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த விடயத்தில் செம்மணியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்பதனை அதற்குரிய துறைசார் நிபுணர்கள் கண்டுபிடிக்கட்டும்.அதேசமயம்,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டவேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு.அவ்வாறான தரவுகளைத் திரட்டும் கட்டமைப்புகள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும், மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தைக் கொண்டிருந்த போதிலும், தமிழர்களால் ஏன் அவ்வாறான தரவுகளைத் திரட்டும் பொதுக் கட்டமைப்புக்களை உருவாக்க முடியாதிருக்கிறது?குறைந்தபட்சம் டிஜிட்டல் பரப்பிலாவது அவ்வாறு ஒரு பொதுவான தகவல்திரட்டும் வேலையைத் தொடங்கலாம்.இதுவிடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனிதஉரிமைகள் தகவல் பகுப்பாய்வு அமைப்பின் (Human Rights Data Analysis Group: HRDAG) நிபுணத்துவ உதவியைக் கேட்கலாம். இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டம் என்று கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.நீதிக்கான போராட்டத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்? குற்றச் செயல்களை, குற்றவாளிகளை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் அதைத் தொடங்கவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகள் எத்தனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு ? போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை இப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உறவினர்கள் கிராமங்கள் தோறும் உண்டு. அவ்வாறு உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் செம்மணிக்கு அருகே நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24தமிழர்களுக்கு நீதி கேட்டு ஒரு வழக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் விளைவாகத்தான் அந்த வழக்கை முன்னெடுத்த சட்டவாளர் கலாநிதி குருபரனுக்கு எதிராக நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முடிவில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கினார். நாட்டை விட்டும் சிறிது காலம் விலகியிருந்தார்.இப்பொழுது அந்த வழக்கு ஒரு தென்னிலங்கை சட்டவாளரால் முன்னெடுக்கப்படுகின்றது. நிலைமாறு கால நீதியின் கீழ் உள்நாட்டு நிதியின் விரிவை பரிசோதிக்க முற்படும் வழக்குகளில் அதுவும் ஒன்று. உள்நாட்டுப் பொறி முறையே பொருத்தமானது என்று கூறும் அரசாங்கத்துக்கும் உள்நாட்டுப் பொதுமுறையை அனைத்துலக தராதரத்துக்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா அதிகாரிகளுக்கும் உள்நாட்டுப் பொறிமுறையின் இயலாமையை நிரூபிக்கத் தேவையான வழக்குகளைத் தமிழ் மக்கள் தொடுக்கலாம். கிரிசாந்தியின் விடயத்தில் அப்போது இருந்த அரசாங்கம் தான் நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவாக,அதனால் தண்டிக்கப்பட்ட ஒரு படை ஆள் அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த வாக்குமூலம்தான் செம்மணியை வெளியே கொண்டு வந்தது. எனவே உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிப்பதற்கும் உள்நாட்டு நீதியின் போதாமைகளை உணர்த்துவதற்கும் வழக்குகளைத் தொடுப்பதற்கு சட்டச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு தேவையான எத்தனை சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உண்டு? தமிழ் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.அரசியல் செயல்பாட்டாளர்களாக மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் சட்டச் செயற்பாட்டு மையங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. கொழும்பை மையமாகக் கொண்ட சட்டவாளர் ரட்ணவேலும் அவருடைய அணியும் செம்மணியில் நிற்கிறார்கள்.இந்த விவகாரத்தில் மட்டுமல்ல சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகளையும் பெருமளவுக்கு ரட்ணவேல்தான் கையாண்டு வருகிறார்.அவருடைய மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள போற்றுதலுக்குரிய சட்டச் செயற்பாட்டு அமைப்பாகும். அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் சந்திப்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டது சட்டத்தரணி ரட்ணவேல்தான்.ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.பொது வேட்பாளருக்காக உழைத்த மக்கள் அமைப்போடு சிவில்சமூக செயற்பாட்டாளராகிய சட்டத்தரணி புவிதரன் இணைந்து வேலை செய்தார். குருபரன் சில குறிப்பிட்ட உதவிகளைச் செய்தார்.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சட்ட உதவி மையங்கள்,சட்டச் செயற்பாட்டு மையங்கள் எத்தனை உண்டு? இத்தனைக்கும் நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம். நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதன்மூலம் முதற்கட்டமாக உள்நாட்டு நீதியின் விரிவை பரிசோதிப்பதற்கான வழக்குகளைத் தொடுக்கலாம்.உள்நாட்டு நீதியின் போதாமை நிருபிக்கப்படும்போது அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கான தேவை மேலும் நிரூபிக்கப்படும்.அனைத்துலக அளவில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம்-அது பலவீனமானது என்ற போதிலும்-ஓர் அனைத்துலக யதார்த்தமாக மாறியிருக்கிறது.அது தமிழ் மக்களுக்குப் பலமானது. தமிழ் மக்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு கற்பனையில் திளைக்காமல் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்க வேண்டும்.முதலில் விஞ்ஞானபூர்வமாகத் தகவல்களைத் திரட்டும் தளங்களைத் திறக்க வேண்டும். இரண்டாவதாக,சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் கட்டமைப்புச் சார்ந்து சிந்திக்க வேண்டும்.கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதாவது தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டமைப்புகள். https://www.nillanthan.com/7526/
-
தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன்
தமிழ்த்தேசிய கட்சிகளின் ஒற்றுமை செயல் வடிவம் பெறவேண்டும் - சிறிதரன் 13 JUL, 2025 | 11:19 AM (நா.தனுஜா) தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாட்டு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து சகல தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேற்படி ஒற்றுமை முயற்சிகளில் தமிழரசுக்கட்சி பங்கெடுக்குமா என வினவியபோதே சிறிதரன் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அவர், அரசியல் தீர்வு விடயத்தில் சகல தமிழ்த்தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்துதான் பயணிக்கவேண்டும் எனவும், தமிழர்களுக்கான நியாயமான சுயாட்சியை உறுதிப்படுத்துவதற்கு கூட்டுமுயற்சி அவசியம் எனவும் குறிப்பிட்டார். இருப்பினும் கடந்த காலங்களில் தேர்தல் மேடைகளில் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் மிகமோசமான வார்த்தைப்பிரயோகங்களையும், கருத்துக்களையும் வெளியிட்டதன் பின்னர், மீண்டும் தற்போது ஒற்றுமை முயற்சி பற்றிப் பேசுகையில், ஏற்கனவே பேசிய மோசமான பேச்சுக்களே முன்னிலைப்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் ஒற்றுமை என்பது வெறுமனே பேச்சளவில் மாத்திரமன்றி, செயல் வடிவத்தில் இருக்கவேண்டும் என்றும், அதனை பரஸ்பரம் நிதானமாகவும், இதயசுத்தியுடனும் முன்னெடுக்கவேண்டும் என்றும் சிறிதரன் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/219843
-
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
இனவழிப்பின் பங்காளியான ஜே.வி.பி யிடம் செம்மணிக்கான நீதியை எதிர்பார்ப்பது எப்படி? - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி 13 JUL, 2025 | 09:13 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி பேரவலம் உள்ளடங்கலாக தமிழர்களுக்கு எதிரான யுத்தத்துக்கும், இனவழிப்புக்கும் அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்களுக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவு வழங்கியதாகவும், அப்போதைய இனவழிப்பின் பங்காளியாகத் திகழ்ந்த தற்போதைய அரசாங்கத்திடம் நீதியை எதிர்பார்க்கமுடியாது எனவும் சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே செம்மணி விவகாரத்தில் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டமுடியும் எனத் தெரிவித்தார். செம்மணி சித்துபாத்தியில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் விசாரணைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச தடயவியல் நிபுணர்களின் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டுவரும் பின்னணியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். செம்மணி மனிதப்புதைகுழி என்பது சாதாரணமானதொரு விடயமல்ல. அது ஏற்கனவே சர்ச்சைக்குரிய பேசுபொருளாக இருந்த ஒரு விடயமாகும். கிருஷாந்தி குமாராசுவாமியின் படுகொலை தொடர்பான விசாரணைகளை அடுத்து 1999 ஆம் ஆண்டு செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின்போது 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னர் சர்ச்சைக்குரிய அந்த மனிதப்புதைகுழி விவகாரம் தொடர் விசாரணைகளின்றி இடைநடுவே முடக்கப்பட்டது. இந்நிலையில் தற்போதும்கூட செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது தற்செயலாகத்தான் இந்த மனிதப்புதைகுழி கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் ஒருபோதும் நியாயமான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை' என அவர் குறிப்பிட்டார். அதேவேளை உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தைப் பொறுத்தமட்டில், அவ்வேளையில் ஆட்சிபீடத்தில் இருந்த மற்றும் அதனைத்தொடர்ந்து ஆட்சிபீடமேறிய தரப்பினர் மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிரான தரப்பினர் என்பதனால், அதுகுறித்த உண்மைகளை வெளிக்கொணரவேண்டிய தேவை தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்டு என்று சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார், இருப்பினும் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தையும், இனவழிப்பையும் அப்போதைய அரசாங்கங்களுடன் இணைந்து ஊக்குவித்து ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி, அக்காலப்பகுதியில் உருவான செம்மணி போன்ற மனிதப்புதைகுழிகள் தொடர்பில் எவ்வாறு நீதியான விசாரணைகளை முன்னெடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினார். ஆகவே செம்மணி விவகாரத்தைப் பொறுத்தமட்டில், சர்வதேசத்தின் தலையீடோ அல்லது சுயாதீன சர்வதேச விசாரணையோ இன்றி, அதுகுறித்த உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்தவே முடியாது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219830
-
முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு
முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு ; கைத்தொலைபேசியும் செயலிழப்பு 13 JUL, 2025 | 09:19 AM (எம்.வை.எம்.சியாம்) கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தது. இதற்கு பதிலளித்த கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்ட தடைகளும் இல்லையென அறிவித்தார். கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கான தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜூன் மாதம் 26 ஆம் திகதி முதல் தாம் வசித்த வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்தது. சந்தேகநபரான ராஜிதவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவை பெற்றுக் கொள்வதற்கான நகர்த்தல் பத்திரம் சமர்பித்து இதனை நேற்றுமுன்தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மன்றுக்கு அறிவித்தது. சந்தேகநபரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதனை தொடர்ச்சியாக தவிர்த்து வந்ததாக ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்தது. மேலும் 15 நாட்களாக சந்தேகநபரின் கைதொலைபேசியும் செயல் இழந்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்தது. சந்தேகநபருக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு அறிவித்து அனுப்பிய கடித்ததுக்கு அவர் வர முடியாது என தெரிவித்து பதில் அனுப்பட்ட கடிதம் அல்லது மருத்துவ அறிக்கை மன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளதா என நீதவான் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார். இதன்போது குறித்த ஆவணங்கள் முறைப்பாட்டு தரப்பினரிடம் இல்லை எனவும் அவை முறைப்பாட்டு கோப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டது. குறித்த ஆவணங்கள் நீதிமன்றுக்கு சமர்பிக்கப்பட வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டிய நீதவான் முன்னாள் அமைச்சர் இந்த வழக்கில் சந்தேகநபராயின் அவரை கைது செய்வதற்கு எவ்வித சட்டத்தடையும் இல்லை என குறிப்பிட்டார். அத்துடன் சந்தேக நபரை கைது செய்வதற்கு பிடியாணை உத்தரவு அவசியம் இல்லை எனவும் பிடியாணை அவசியமாயின் அதற்கான ஆவணங்களை தயாரித்து மன்றில் சமர்பிக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்தார். https://www.virakesari.lk/article/219831
-
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!
இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி! இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது, சர்வதேச மனிதாபிமானச் சட்டம் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக, காவல்துறை தலைமையகத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில், நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முறைப்பாட்டாளரான சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே தெரிவித்துள்ளார். தமது முறைப்பாடு குறித்து, காவல்துறையினர் இதுவரையில் உரிய பதில் வழங்காமையினால், மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடி, நீதிப்பேராணை மனுவொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக முறைப்பாட்டாளர் தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். அதற்கமைய, எதிர்வரும் வாரத்தை மாத்திரம் காவல்துறையினருக்கான கால அவகாசமாக வழங்கவுள்ளதாகவும், அதற்குள் பதில் கிடைக்காவிடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தனுக ரணஞ்சக கஹந்தகமகே என்ற சட்டத்தரணியினால், கடந்த ஜூன் மாதம் 13 ஆம் திகதி இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பான முறைப்பாடு, பதில் காவல்துறைமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலதிக நடவடிக்கைகளுக்காக, குறித்த முறைப்பாடு சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஏற்கனவே, சட்டத்தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போரின் போது, சரணடைந்தவர்கள், சட்டவிரோதமாகக் கொல்லப்பட்டுள்ளதாகக் குறித்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில், பிரதானமாக, இசைப்பிரியா எனப்படும் ஷோபா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இசைப்பிரியா 2009 ஆம் ஆண்டு மே மாதம் உயிருடன், நிராயுதபாணியாக, காவலில் இருந்ததாகவும், பின்னர் சந்தேகத்திற்கிடமான நிலையில் இறந்து கிடந்ததாகவும் காணொளி ஆதாரங்கள் காட்டுவதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகளின் அடிப்படையில், அவர் பாலியல் வன்புணர்வு மற்றும் மரணதண்டனை பாணியில் கொலை செய்யப்பட்டார் என்பதற்கான தடயங்களைக் காணமுடிகிறது. அதேநேரம், 12 வயதுடைய பாலச்சந்திரன், உயிருடன் ஆயுதமேந்திய படையினர் வசமிருந்தமையும், பின்னர் அவர் மார்பில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்து காணப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் உள்ளன. இதுபோன்ற செயல்கள் நிரூபிக்கப்பட்டால், சர்வதேசச் சட்டத்தின் கீழ், அவை போர்க்குற்றங்களாகக் கருதப்படும் எனவும், ஜெனீவா உடன்படிக்கைகள் மற்றும் ரோம் சாசனம் ஆகிய இரண்டையும் மீறுவதாக உள்ளதாகவும் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கை காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து, உண்மை மற்றும் பொறுப்புடன், நியாயத்துக்கு வழிவகுக்கும் வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டாளரான, சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கோரியுள்ளார். https://newuthayan.com/article/இறுதி_யுத்தத்தில்_மீறப்பட்ட_மனிதாபிமானச்_சட்டம்_-_நீதிமன்றத்தை_நாடவுள்ள_சிங்கள_சட்டத்தரணி!
-
வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்!
வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள்! நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தை தொடக்கி வைத்தவர்கள் வசந்த் சிவாஜிராசாந்த் மற்றும் ஜசிந்தா ஆகியோர், அத்துடன் ஜெர்மன் செஞ்சிலுவை சங்கம், வென்டோர்ஃப் கிளை மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ஆகியனவும் தமது ஆதரவை வழங்கினார்கள். புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தில் , ஒரு மருந்தகம், ஒரு தடுப்பூசி அறை, ஒரு பல் சிகிச்சை பிரிவு, ஒரு தாதியர்களுக்கான அறை, E.C. ஆகியவை அடங்கும். இது ஒரு தீவிர சிகிச்சை பிரிவு, ஒரு அறுவை சிகிச்சை பிரிவு, ஒரு முதன்மை பராமரிப்பு பிரிவு மற்றும் சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது. சுகாதார அமைச்சராக தீபகற்பத்திற்கு இது தான் முதல் வருகை என்றும், நாடு முழுவதும் இதுபோன்ற பிராந்திய சுகாதார மையங்களை நிறுவுவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பதற்கான விரிவான திட்டம் கடந்த சில மாதங்களாக தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இங்கு தெரிவித்தார். சுகாதார சேவை மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள சுகாதார சேவை வைத்தியர்களை மையமாகக் கொண்டது என்றும், மக்கள் மருத்துவ சேவைகளைப் பெற வெகுதூரம் செல்லப் பழகிவிட்டனர் என்றும், இந்த அணுகுமுறை யாழ்ப்பாண வைத்தியசாலையின் நோயாளிகளின் வருகைக்கு வழிவகுத்தது என்றும் கூறினார். இதுபோன்ற தீவுகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து சிறந்த தரமான சேவையை வழங்க முடியும் என்றும், இந்தக் கட்டிடத்தின் கட்டுமானத்தை மிகக் குறுகிய காலத்தில் முடிக்க கடற்படை உழைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம் என்றும் அவர் கூறினார். சிகிச்சை பெற வரும் மக்கள் வரிசையில் காத்திருக்காமல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இது மக்களுக்குத் தேவையான சேவை என்றும் அமைச்சர் கூறினார். வட மாகாணத்தில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன என்றும், எதிர்காலத்தில் புதிய செவிலியர்களை வழங்குவதன் மூலம் இந்த குறையை இல்லாது செய்ய நிரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் பராமரிப்பு விடயத்தில் சுகாதார அமைச்சகம் பலவீனமாக உள்ளது என்றும், எதிர்காலத்தில், விலையுயர்ந்த மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை வழங்கும்போது, அவற்றை தொடர்ந்து பராமரிக்கும் நிறுவனங்களுடன் அந்த பௌதீக சொத்துக்களை நிர்வகிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும், வைத்தியசாலைகளில் ஆம்புலன்ஸ்களின் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் ஜெர்மன் செஞ்சிலுவைச் சங்க வாரன்டோர்ஃப் கிளை மற்றும் ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து போன்ற நாடுகளின் நன்கொடையாளர்களால் நிதியளிக்கப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு இலங்கை கடற்படை மற்றும் இராணுவம், யாழ்ப்பாண மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் தமது ஆதரவை வழங்கின. https://www.samakalam.com/வடக்கில்-ஒரு-தாதியர்-கூட/
-
“விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்”
“விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்” adminJuly 12, 2025 தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் விடுதலையை வலியுறுத்தி, ” விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தளைத்திட ஒருகுவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம் ” எனும் தொனி பொருளில் யாழில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார். பிள்ளையின் நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, தாய் தந்தை இருவரும் உயிர்நீத்த நிலையில், பெற்றவர்களது இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் தண்டனை கைதியாக கைவிலங்குடன் கொண்டுவரப்பட்டு சிதைகளுக்கு கொள்ளியிட்ட பின்பு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், பார்த்தீபனின் தாயாரான அமரர் விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அம்மையார் அவர்களின் மூன்றாமாண்டு நினைவேந்தல் நாளான இன்றைய தினம் சனிக்கிழமை, திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில், பார்த்தீபன் உட்பட்ட சக தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டுமென்ற பிரார்த்தனையுடன், நூதன போராட்டம் ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பிரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது, குடும்பத்தின் உற்ற உறவுகளை இழந்தும் பிரிந்தும் நீண்ட நெடுங்காலங்களாக அடிமைச்சிறை அனுபவித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிர்ப்புடனான விடுதலையை வலியுறுத்தும் முகமாக “விடுதலை பெருவிருட்சம் வேரூன்றி தைளைத்திட ஒரு குவளை நீர் உவந்து உறவுகளை விடுவிப்போம்..! ” எனும் கருப்பொருளில், சமூக ஆர்வலர்களின் கரம் இணைத்து தொடர உள்ளனர். இப்போராட்டத்தில் நல்லெண்ணம் கொண்ட ஒவ்வொருவரும் தத்தமது வீடுகளில் இருந்து ஒரு குவளை தண்ணீரை பொதுக் குவளைக்கு உவந்தளிப்பதன் மூலம், நாட்டப்படும் ‘விடுதலைப் பெருவிருட்சம்’ வேரூன்றி தளைத்திட உங்களது பங்களிப்பையும் அர்ப்பணிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, இந்த மனிதநேயப் பணியில் இனம் மதம் மொழி கடந்து நல்லுள்ளம் கொண்ட அனைவரும் தம்மை இணைத்துக் கொள்ளவேண்டுமென ‘குரலற்றவர்களின் குரல்’ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/217802/
-
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!
யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியின் சாதனை - 120 9ஏ சித்திகள்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். https://newuthayan.com/article/யாழ்.வேம்படி_மகளீர்_கல்லூரியின்_சாதனை_-_120_9ஏ_சித்திகள்!
-
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி 11 JUL, 2025 | 10:13 AM மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவம் "ஹமாஸ் பயங்கரவாதி"யைத் தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் வருந்துவதாகவும் கூறியது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 66 பேரில் அவர்களும் அடங்குவர். ஊட்டச்சத்தின்மை தொற்றுநோய் உட்பட பல நோய்களிற்கான மருத்துகளை பெறுவதற்காக மருத்துவநிலையம் திறப்பதற்காக காத்திருந்த மக்கள் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என புரொஜெக்ட் ஹோப் தெரிவித்துள்ளது. திடீரென ஆளில்லா விமானங்களின் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் வெடிப்பு இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்த யூசுவ் அல் அய்டி என்பவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார். நிலத்திற்கடியில் பூமி அதிர்ந்தது,எங்களை சுற்றியிருந்த அனைத்தும் குருதியாகவும் பெரும் அலறல்களாகவும் மாறியது என அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலின் உடனடி விளைவுகளைக் காட்டின பெரியவர்களும் சிறு குழந்தைகளும் ஒரு தெருவில் கிடந்தனர்இ சிலர் பலத்த காயமடைந்தனர் மற்றவர்கள் நகரவில்லை. அருகிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் பிணவறையில் இறந்த குழந்தைகளின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு வெள்ளை துணிகள் மற்றும் உடல் பைகளில் போர்த்தி அழுதனர். ஒரு பெண் பிபிசியிடம் தனது கர்ப்பிணி மருமகள் மணாலும் அவரது மகள் பாத்திமாவும் அவர்களில் இருந்ததாகவும் மணலின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் கூறினார். "சம்பவம் நடந்தபோது குழந்தைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக அவர் வரிசையில் நின்றிருந்தார்" என்று இன்டிசார் கூறினார்.அருகில் நின்ற மற்றொரு பெண் "அவர்கள் என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டார்கள்?" என்று கேட்டாள். "நாங்கள் முழு உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் முன்பாக இறந்து கொண்டிருக்கிறோம். முழு உலகமும் காசா பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் மக்கள் கொல்லப்படாவிட்டால் அவர்கள் உதவி பெற முயற்சிக்கும் போது இறக்கிறார்கள்." புரொஜெக்ட் ஹோப் ப்ராஜெக்ட் ஹோப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரபிஹ் டோர்பே உதவி குழுவின் மருத்துவமனைகள் "காசாவில் ஒரு புகலிடமாக இருந்தன அங்கு மக்கள் தங்கள் சிறு குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு பெறுகிறார்கள்இமக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெறுகிறார்கள் மேலும் பல" என்று கூறினார். "ஆயினும்கூட இன்று காலை கதவுகள் திறக்கும் வரை வரிசையில் நின்ற அப்பாவி குடும்பங்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "திகிலடைந்து மனம் உடைந்து இனி நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சரியாகத் தெரிவிக்க முடியவில்லை." "இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் மேலும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் காசாவில் யாரும் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. இது தொடர முடியாது." யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்: "உயிர்காக்கும் உதவியைப் பெற முயற்சிக்கும் குடும்பங்களைக் கொல்வது மனசாட்சிக்கு விரோதமானது." https://www.virakesari.lk/article/219708
-
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு Published By: VISHNU 11 JUL, 2025 | 05:43 AM சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது. இற்றைவரை இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை. இவ்வாறாணதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம். அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல் கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம். இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம். இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/219702
-
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் ! 11 JUL, 2025 | 10:00 AM மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். இதேவேளை, தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு சம்பவதினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடையவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219707
-
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு 11 July 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் (Jeremy Laurence) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக ஜேர்மி லோரன்ஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமான காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/409807/91-percent-of-seized-lands-in-the-north-and-east-released
-
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்! adminJuly 11, 2025 மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர். அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். https://globaltamilnews.net/2025/217752/
-
காஸாவின் குழந்தைகள்
காஸாவின் குழந்தைகள் sudumanal Thanks: Aljazeera கடந்த சில மாதங்களாக எனது கைபேசித் திரையை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அந்தக் காட்சிகள் எனது வாழ்நாளின் எல்லைவரை என்னை துரத்தித் துரத்தி வேட்டையாடிக் கொண்டே இருக்கப் போகின்றன. காஸாவின் சிறிசுகள், பச்சைக் குழந்தைகள் திரையில் வரும் காட்சிகளைத்தான் குறிப்பிடுகிறேன். மரணித்தவர்கள், காயம்பட்டவர்கள், பசியால் உயிர்பிரிந்து கொண்டிருப்பவர்கள் என்பதான காட்சிகள் அவை. காயம்பட்ட குழந்தைகள் வலியால் கதறுகிறார்கள். தமக்கு பாதுகாப்பாயிருக்கிற தமது அப்பாக்களுக்காக அம்மாக்களுக்காக சகோதரங்களுக்காக என தமது குடும்ப உறவுகளுக்காகவும் சேர்த்து அவர்கள் அச்சப்படுகிறார்கள். குண்டு வீசும் விமானத்தின் பயங்கரம் ஒரு சிறுவனை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. வார்த்தைகளில் சொல்ல முடியாத பயங்கரத்தையும் வன்முறையையும் காவிவரும் இக் காட்சிகள் என்னை சிதைக்கின்றன. சிலவேளைகளில் காணச் சகிக்காமல் படங்களையும் காணொளிகளையும் எனது விரல்கள் கைபேசித் திரையில் வழுக்கிச் செல்ல வைக்கிறது. அடுத்த காட்சியாக எதையெதைப் பார்க்க நேரிடலாம் என்ற அச்சம் எழுகிறது. பெரும்பாலும் இவற்றை சகித்துக் கொள்ள நான் நிர்ப்பந்திக்கப் படுவதாக உணர்கிறேன். நான் தனியாக இல்லை என எனக்குத் தெரியும். வசதிவாய்ப்புகளும் பாதுகாப்பு உணர்வும் பெற்று வாழ்கிற நம்மில் பலரும் இந்தக் காஸா குழந்தைகளின் அவலத்தை சமூகவலைத் தளத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பாதுகாப்பாகவும் சிரித்து மகிழ்ந்தும் இருக்கும் மற்றக் குழந்தைகளையும், விளம்பரங்களையும், மீம்களையும் காவிவரும் திரைகளினூடு காஸா குழந்தைகளின் அவலத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அது இன்னும் கொடுமை நிறைந்த உணர்வை கிளர்த்துகிறது. அது உங்கள் குழந்தையாக இருந்திருக்கக் கூடும் அல்லது எனதாகவும் இருந்திருக்கக் கூடும் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒரு குழந்தையாகவும் இருந்திருக்கக் கூடும். அந்த கொடுமைக்குள் அகப்படாத, பிறப்பின் அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் எமது குழந்தைகள் என சொல்லத் தோன்றுகிறது. இந்த காஸா குழந்தைகளுக்காகவும் அவர்தம் குடும்பங்களுக்காகவும் பல்லாயிரக் கணக்கான மக்கள் குரலெழுப்பி வருகின்றனர். அரசியல்வாதிகளுக்கு எழுதுகின்றனர். உதவிப் பணி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவு நிதி வழங்குகின்றனர். இந்த அவலத்தை வீதிக்கு கொண்டுவந்து நியாயம் கேட்கின்றனர். ஆனாலும் இப்போதும் குழந்தைகள் மீதான இந்தப் போர் தொடர்கிறது. அவர்களுக்கு உதவ முடியாத நிலையிலுள்ள, எந்த அதிகாரமும் அற்ற மக்களின் திரட்சியான உணர்வலை ஓங்கியிருக்கிறது. இந்த குழந்தைகளின் நிலை இன்னும் எவளவு மோசமாகப் போகிறது என்பதை ஊகிக்க முடியாதிருக்கிறது. ஐநா இன் செய்திப்படி, இந்த வாரம் 14000 குழந்தைகள் ஊட்டச் சத்தின்மையால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவருகிறது. பட்டினிதான் காரணம். பசி போருக்கான ஓர் ஆயுதமாகப் பாவிக்கப்படுகிறது. அழித்தொழிப்பின் ஓர் ஆயுதமாக பட்டினி ஏவப்படுகிறது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. கற்பனை பண்ணமுடியாத பயங்கரத்தை எதிர்நோக்கும்போது, கவிழ்ந்துகொள்ளும் உணர்வானது மக்களின் கூட்டு உளவியலில் காயத்தை ஏற்படுத்துகிறது. இன்னொரு புறம் உதவிப் பணியாளர்கள் மற்றும் வைத்தியப் பணியாளர்கள் மனித பெறுமதிக்கும் உளக்கட்டமைப்புக்கும் எதிராக செயற்பட வேண்டிய கையறு நிலைக்கு தள்ளப்படும்போது, ஏன் செயற்படாமல் இருக்கும் நிலையிலும்கூட அவர்கள் உளவியல் நெருக்கடிக்கு உள்ளாக நேர்கிறது. கோவிட் தொற்று காலத்தில் வைத்தியர்கள் தாதிகள் பணியாளர்கள் பலர் இந்த நெருக்கடிக்கு உள்ளானார்கள். சிகிச்சை தேவையாயிருந்த நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க போதிய மருந்துகள், உபகரணங்கள், வளங்கள், தலைமைத்துவம் என்பன தடையாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனாலும் இந்தவகையான துன்பம் காஸாவைத் தவிர வேறெங்கும் இவளவு கூர்மையயாக உணரப்பட்டதாக இல்லை. வைத்தியத்துறை பணியாளர்களும் உதவிப் பணியாளர்களும் துயரத்தாலும், குற்றவுணர்வாலும், ஏமாற்றத்தாலும், ஏன் எல்லோருக்குமே உதவிசெய்ய முடியாமலிருக்கிற கையறுநிலையாலும் ஏற்படுகிற மனநெருக்கடிகளுக்கு உள்ளாகி வருகின்றனர். உதவுவதற்கும் உணவூட்டுவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் என்றாகிப்போன பணியில் இருக்கும் அவர்கள் அதையெல்லாம் செய்ய முடியாமல் போய்விடுகிறபோது உளநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். காஸா தாய் தந்தையர் தமது குழந்தை பசியில் துடிதுடித்து அழுகிறபோது, தாம் ஒரு பிடி உணவுகூட ஊட்ட முடியவில்லையே என்ற பெருந்துயருள் முழ்கிப் போகிறார்கள். குண்டுவீச்சுக்கு நடுவிலேயும் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் புதிதாய்ப் பிறந்த குழந்தைகளை நினைத்துப் பார்க்கிறேன். அல் ஷீபா மருத்துவமனையில் ஒரே கட்டிலில் கிடத்தப்பட்டிருக்கும் ஏழு பச்சைக் குழந்தைகளை புகைப்படத்தில் பார்க்கிறேன். உயிர் வேண்டி, சூடான கதகதப்பு வேண்டி அவர்கள் அந்த மெத்தையில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள். வலியைப் போக்கும் மருந்துகளோ மகப்பேற்றுச் சிகிச்சை உபகரணங்களோ வசதிகளோ இன்றி இந்தக் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களை நினைத்து ஆச்சரியப்படுகிறேன். அந்தத் தாய்மார்கள் இப்போ எங்கே? அவர்களில் எத்தனை பேர் தப்பிப் பிழைத்தார்கள்? அவர்களைக் காப்பாற்ற குறைந்த வளங்களுடன் போராடிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த முயற்சியெல்லாம் எதைப் பரிசளித்திருக்கும்? அவர்களின் இடத்தில் என்னை பதிலியாக்கி யோசித்துப் பார்க்கிறேன். அவர்கள் அடைந்திருக்கக் கூடிய உளக்காயங்களின் தாக்கங்களை எண்ணிப் பார்க்கிறேன். அதிசயமாக இருக்கிறது. கள அனுபவங்களில் நசிபடும் அவர்களின் இடத்தில் இணையாக நின்று முழுமையாக உணர எனக்கு எந்த வழியுமேயில்லை. ஆனால் அதிகாரமற்ற நிலையினை உணர்கிறேன். இந்தக் குற்றங்களுக்கு எல்லாம் நாமும் உடந்தையாக இருக்கிறோமா என்ற எண்ணப் பாதிப்பை உணர்கிறேன். காஸாவில் என்னதான் நடக்கிறது என அறியத் துடிப்பவர்களிடம் இந்த உணர்வுகள் எதை தொற்றவைக்கும்? காட்சித் திரையினூடாகத் தன்னும் இந்த பெருந்துயரை காண்பவர்களிடம் என்ன பாதிப்பு நிகழும்? இதற்கெதிராக எதையுமே செய்ய முடியாத அல்லது இதற்குக் காரணமாக இருப்பவர்களை நிர்ப்பந்திக்க முடியாத செயலறுநிலை தருகிற உணர்வு எத்தகையது? நான் பிறந்த அந்தக் காலங்களிலே எனது அம்மா செய்திகளை பார்ப்பதை ஏன் நிறுத்திக் கொண்டாள் என்பது இப்போ எனக்குப் புரிகிறது. அவளால் இப்படியானவற்றை சகித்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கு மகன் பிறந்தபோது நானும்கூட இவ்வாறானவற்றை உள்நுழைந்து பார்க்க முடியாதிருந்தது. எமக்குக் கிடைத்த சலுகைகொண்ட வாழ்வின் சூடான அரவணைப்பும் பாதுகாப்பும் கொண்ட கூட்டினுள் இருக்கவே விரும்பினோம். ஆனால் எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து எமது வாழ்வை துண்டித்து முடங்கிப் போக இணையம் விடவில்லை. செய்திகள் எமது வாழ்வுடன் சமாந்தரமாகவும் தொடர்ச்சியாகவும் பயணிக்கத் தொடங்கின. அது எல்லைக் கோடுகளை இல்லாமலாக்கியது. எனது குழந்தை வயிறார உண்டு, துப்பரவானதும் மென்மையானதுமான உடைகளின் சூட்டில் உறங்குகிற பல இரவுகளில் நான் மௌனமாக அழுதேன். படுக்கைகூட இல்லாத, பசியாற்ற முடியாத மற்றக் குழந்தைகளை நினைத்து அழுகை வந்தது. பால்வேண்டி அதிகாலையில் எழும் எனது மகனுக்காக நான் செய்ய வேண்டி இருந்ததெல்லாம் குளிருட்டி சாதனத்தைத் திறந்து பாலை எடுத்துக் கொடுப்பதுதான். குண்டுச் சந்தங்கள் கேட்பதில்லை. காற்றுவெளியை நிரப்பும் பறவைகளின் கீதத்தை கேட்டபடி நாம் சேர்ந்து இருப்போம். அவனை அரவணைத்திருக்கும் பாதுகாப்பும், காஸாக் குழந்தைகளினை சீண்டும் ஆபத்தும் எவளவு முரணாக இருக்கிறது. அது என்னை உலுக்குகிறது. இது உளக் காயத்தின் ஒருவகையா தெரியவில்லை. ஒரு குழந்தையுடன் இணைந்த நாளாந்த வாழ்வானது அப்பாவித்தனம், குளப்படி, குறும்புத்தனம், இயல்பான அன்பு என நடனமாடும் பொழுதுகளாலானது. இவ்வாறான குழந்தைமை உலகின் மீதான மோசமான தாக்குதலை காஸாவில் காணும்போது வலி ஏற்படுகிறது. அதேநேரம் ஒன்றை சொல்லலாம். காஸா குழந்தைகளின் மீது கவிழ்ந்திருக்கும் குரூரத்தை உணர நீங்கள் அவர்களின் பெற்றோராக இருக்க வேண்டிய அவசியமில்லை. மனிதஜீவி என்ற வகையில் இந்தக் குழந்தைகளின் இருத்தல் மீது நாம் ஒரு கூட்டுப் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருக்கிறோம் என நான் நம்புகிறேன் அல்லது நம்ப முயற்சிக்கிறேன். இந்தக் கூட்டு பொறுப்புணர்வு எல்லைகளைத் தாண்டி விரியக்கூடியது. இந்த மாதிரியான நீதியற்ற செயல்களின் முன் அதிகாரமற்றவர்களாக நிற்கிறோம் நாம். அது ஏற்படுத்துகிற உணர்வானது உண்மையின்மீதும் நம்பிக்கையின் மீதும் இழப்புகளை ஏற்படுத்தவல்லது. அது அரசாங்கங்கள் மற்றும் அதன் நிறுவனங்களின் மீது மட்டுமல்ல, உலகின் அறவொழுக்கத்தின் மீதும்தான். அதுமட்டுமல்ல இக் குழந்தைகளை காப்பாற்றுவதில் அவர்களது இயலாமையையையும் அது வெளிப்படுத்துகிறது. இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம்தான் என்ன. சில அரசியல்வாதிகள் சந்தேகமின்றி நம்புவதுபோல, எந்த தாக்கத்தையும் உண்டுபண்ணா மந்தநிலைக்கு இட்டுச் செல்லலாம். இவ்வாறான மந்தநிலையும் உளச்சிதைவு நிலையும் உருப்படியான தாக்கத்தை ஏற்படுத்த தடையாக அமைவதோடு, அதன் வீரியத்தையும் அழித்துவிடக் கூடியது. எனவே மில்லியன் கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராட வேண்டும். தமது குரலை உயர்த்த வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களின் நியாயமான கோப உணர்ச்சி வெளிப்படக்கூடிய வாய்ப்பும் இருக்கத்தான் செய்யும். பெருமளவுக்கு நம்பிக்கை இழந்த நிலைமையை நான் உணர்கிறேன். இந்த யுத்தத்தில் மனிதநேயம், மனித விழுமியம் எல்லாம் பெயர்த்தெறியப்பட்டிருக்கிறது. நான் அசைக்க முடியாத கனத்த மனதுடன் உலவுகிறேன். காஸாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கிறேன். கடந்த 18 மாத காலமும் என்னை மாற்றியிருக்கிறது. நான் கண்டுகொண்டது என்னவெனில், சில மனிதர்களிடம் குழந்தைகள் மீதான இரக்கவுணர்வு என்பது அரசியல் எல்லைக் கோடுகளால் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதையே. இவ்வாறான குரூரமான அறிவு ஒருவரது மூளைக்குள் கல்போல் குந்தியிருக்கிறபோது என்ன செய்ய முடியும்? இதற்கான விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை! ravindran.pa 07072025 Thanks: the guardian .com Thanks for image: Aljazeera https://sudumanal.com/2025/07/07/காஸாவின்-குழந்தைகள்/#more-7286
-
தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் — டி.பி.எஸ். ஜெயராஜ் —
தமிழரசுக்கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் July 9, 2025 — டி.பி.எஸ். ஜெயராஜ் — ஒய்வுபெறும் உயர்நீதிமன்ற நீதியரசர் காமினி அமரசேகர அண்மையில் நீதிமன்றத்தில் உரையாற்றியபோது முக்கியமான பல கருத்துக்களை வெளியிட்டார். பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் பிரகாரம் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு வருகின்ற வெளி அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்துநிற்க முடியும் என்கிற அதேவேளை, உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு நயவஞ்சகத்தனமான ஆபத்தை தோற்றுவிக்கின்றன. ” சரியான நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு நீதிபதியினால் வெளி நெருக்குதல்களை எதிர்த்துநிற்க முடியும். ஆனால், முறைமைக்குள் இருந்தே அச்சுறுத்தல்கள் வரும்போது அவற்றை எதிர்கொள்வது கடடினமானதாக இருக்கும்” என்று மாண்புமிக்க நீதியரசர் அமரசேகர கூறியதாக தெரிவிக்கப்பட்டது. உள்ளிருந்து வருகின்ற ஒரு அச்சுறுத்தல் வெளியில் இருந்து வருகின்ற ஒரு சவாலை விடவும் பெருமளவுக்கு ஆபத்தானது என்று நீதியரசர் தெரிவித்த மிகவும் பொருத்தமான கருத்து பரவலாக பொருந்துவதாகும். அதற்கு பல சந்தர்ப்பங்களை கூறமுடியும். இலங்கையில் தற்போது இலங்கை தமிழரசுக்கட்சி நீதியரசர் வார்த்தைகளில் பொதிந்திருக்கும் மெய்யறிவை அனுபவிக்கின்றது. இலங்கை தமிழ் மக்களின் பிரதான அரசியல் கட்சி தற்போது உள்ளிருந்து வரும் சவால்களையும் வெளியில் இருந்து வரும் சவால்களையும் எதிர்கொள்கிறது. வெளிச்சவால்களை கட்சியினால் தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்த அதேவேளை, பெருமளவுக்கு ஆபத்தான தன்மையுடன் கூடிய அச்சுறுத்தல் உள்ளிருந்தே வெளிக்கிளம்புகின்றது போன்றே தோன்றுகிறது. கடுமையான அரசியல் சச்சரவுக்கு மத்தியிலும், தேர்தல்களில் அண்மைக் காலங்களில் தமிழரசு சிறப்பான வெற்றிகளை பெற்றிருக்கிறது. 2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் பல தமிழ் அரசியல் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்கிய போதிலும், தமிழரசுக்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தது. தேசிய மட்டத்தில் சஜித் பிரேமதாச அநுர குமார திசநாயக்கவுக்கு அடுத்ததாக இரண்டாவதாக வந்தார். ஆனால், ஒரு பிராந்திய மட்டத்தில், தமிழரசுக் கட்சியின் உறுதியான ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவே வடக்கு, கிழக்கின் மாவட்டங்களில் கூடுதல் வாக்குகளைப் பெற்று முதலாவதாக வந்தார். 2024 நவம்பர் பாராளுமன்ற தேர்தலிலில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 225 ஆசனங்களைக் கொண்ட பாசாளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றியது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஏழு பேர் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களாவர். மீண்டும் தமிழரசு கட்சியே வடக்கிலும் கிழக்கிலும் “திசைகாட்டி” கட்சியை உறுதியான முறையில் எதிர்த்து நின்ற ஒரேயொரு இலங்கை தமிழ்க்கட்சியாகும். வடக்கு, கிழக்கில் இருந்து பாராளுமன்றத்துக்கு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) தமிழரசு கட்சியில் இருந்துதெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (7) சமமானதாக இருந்தது. தமிழரசு கட்சிக்கு தேசியப்பட்டியலில் இருந்து மேலதிகமாக ஒரு ஆசனமும் கிடைத்தது. அதனால் எட்டு உறுப்பினர்களுடன் பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழரசு கட்சி விளங்குகிறது. அண்மையில் நடைபெற்ற 2025 உள்ளூராட்சி தேர்தல்களில் வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட உள்ளூராட்சி சபைகளில் (மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள்) 35 சபைகளில் தமிழரசு கட்சி முதலாவதாக வந்தது. தமிழர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் ஒரு டசின் சபைகளில் இரண்டாவதாக வந்த தமிழரசு கட்சி முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பெரும்பானமையாகக் கொண்ட சபைகளில் பத்து சபைகளில் வட்டாரங்களிலும் வெற்றிபெற்றது. மேலும் சில தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் உதவியுடன் தமிழரசு கட்சியினால் 34 உள்ளூராட்சி சபைகளில் ஒப்பேறக்கூடிய நிருவாகங்களை அமைக்கக்கூடியதாகவும் இருந்தது. தேர்தல் களத்தில் போட்டி தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதிராக மெச்சத்தக்க வெற்றிகளை பெற்ற போதிலும், தமிழரசு கட்சி அதன் உள்ளக அரசியல் நிலைவரத்தை பொறுத்தவரை, ஒரு பாதகமான தோற்றத்திலேயே இருக்கிறது. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அதன் பாராளுமன்றக்குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரனின் சர்ச்சைக்குரிய நடத்தையே இதற்கு பிரதான காரணமாகும். முன்னாள் பாடசாலை அதிபரான அவர் பொதுவில் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழுவுக்கும் குறிப்பாக முக்கியமான நிருவாகிகளுக்கும் எதிராக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கெடுதி விளைவிக்கக்கூடிய முறையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றார். மிகவும் மூத்த தமிழரசு கட்சி எம்.பி: தற்போது பாராளுமன்றத்தில் இருக்கின்ற தமிழரசு கட்சியின் உறுப்பினர்களில் மிகவும் மூத்தவராக சிறீதரன் விளங்குகிறார் என்பது பிரச்சினையை மேலும் கூர்மையானதாக்குகிறது. 57 வயதான அவர் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக 2010 ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். அன்றிலிருந்து 2015, 2020, 2024 பொதுத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று சிறீதரன் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறூப்பினராக இருந்துவருகிறார். 2015 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழரசு கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மத்தியில் மிகவும் கூடுதலான விருப்புவாக்குகளையும் சிறீதரன் பெற்று வந்திருக்கிறார். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்ற போதிலும், பிரதானமாக சிறீதரனின் வாக்குவங்கியாக கிளிநொச்சியே விளங்குகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி என்ற இரு நிருவாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டம் இருக்கிறது. சிறீதரனும் அவரது உதவியாளர்களும் விடுதலை புலிகளுக்கு ஆதரவான தமிழ்த் தேசியவாத பேச்சுக்கள், ஆட்களுக்கு உதவிகளைச் செய்கின்ற அரசியல் மற்றும் வலுக்கட்டாயமான அணுகுமுறைகள் என்று ஒரு கலப்பான தந்திரோபாயத்தின் மூலமாக கிளிநொச்சி வாக்காளர்கள் மீது ஒரு வலிமையான பிடியை வைத்திருக்கிறார்கள். புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் விடுதலை புலிகளுக்கு சார்பான செல்வாக்குமிக்க ஒரு பிரிவினரும் சிறீதரனுக்கு பல வழிகளில் ஆதரவாக இருக்கிறார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளும் அவரின் ஆட்களினாலேயே நிரப்பப்படடிருக்கிறது. கிளிநொச்சியில் அவரின் அரசியல் ஆதிக்கத்தை தமிழ் ஊடகங்களும் ஏற்றுக்கொண்டு அவரை “கிளிநொச்சி ஜமீந்தார்” என்று வர்ணிக்கின்றன. தெளிவாகக் காணக்கூடிய திடடம்: தற்போதைய இலங்கை அரசியல் விவகாரங்களின் ஆய்வாளர்களும் அவதானிகளும் தமிழரசு கட்சி தொடர்பான சிறீதரனின் செயற்பாடுகளில் தெளிவாகக் காணக்கூடிய ஒரு திட்டத்தை அடையாளம் கண்டிருக்கிறார்கள். ஒரு மட்டத்தில், அவரும் அவரது ஆதரவாளர்களும் தமிழரசு கட்சியை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். இன்னொரு மட்டத்தில், அவரின் உதவியுடனும் ஆதரவுடனும் செயற்படுகின்றவர்கள் கட்சிக்கு பாதகமானதும் கட்சியை மலினப்படுத்தக்கூடியதுமான வெளிப்படையானதும் மறைமுகமானதுமான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். இந்த இரு அணுகுமுறைகளிலுமே முனானாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தற்போதைய பதில் பொதுச் ஙெயலாளருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மீதான சிறீதரனின் கடுமையான வெறுப்பு பொதுவான ஒரு காரணியாக இருக்கிறது. சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான இந்தத் தகராறு குறித்து கடந்த காலத்தில் நான் அடிக்கடி எழுதியிருக்கிறேன். இந்த விவகாரம் பல்பரிமாணங்களையும் பல அடுக்குகளையும் கொண்டது. புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியிலும் இலங்கையிலும் இருக்கின்ற சுமந்திரனுக்கு எதிரான பிரிவினரிடமிருந்து சிறீதரனுக்கு கிடைக்கின்ற பரந்த ஆதரவு சுமந்திரனுக்கு எதிரான சிறீதரனின் அரசியலில் முக்கியமான ஒரு அம்சமாகும். இது விடயத்தில் சுமந்திரனுக்கு எதிரான தன்னல அக்கறைச் சக்திகள் தங்களுக்கு வசதியான கருவியாக சிறீதரனைப் பயன்படுத்துவதாக சிலர் உணருகிறார்கள். உட்கட்சித் தேர்தல் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையில் நடந்தது சாராம்சத்தில் இதுதான். 2020 பாராளுமன்ற தேர்தலில் இருவரும் ஒன்றுசேர்ந்து பிரசாரம் செய்தார்கள். இருவரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவானார்கள். ஆனால், இந்த உறவுமுறை தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற உட்கட்சி தேர்தலுக்கு பிறகு முறிவடைந்தது. தலைவர் பதவிக்கு சுமந்திரனும் சிறீதரனும் போட்டியிட்டார்கள். 2024 ஜனவரி 21 திருகோணமலையில் நடைபெற்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் 321 பொதுச்சபை உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். 184 வாக்குகளைப் பெற்ற சிறீதரன் சுமந்திரனை 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். சுமந்திரனுக்கு 137 வாக்குகள் கிடைத்தன. ஜனவரி 27 தமிழரசு கட்சியின் முக்கியமான தீர்மானங்களை எடுக்கும் பொறுப்புடைய மத்திய செயற்குழுவுக்கு தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து திருகோணமலையைச் சேர்ந்த தமிழரசு கட்சியின் ஒரு உறுப்பினரான பரா. சந்திரசேகரம் கட்சியின் யாப்பின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுச்சபை கொண்டிருக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை விடவும் கூடுதலான உறுப்பினர்கள் கட்சியின் தலைவர் தேர்தலில் வாக்களித்தார்கள் என்ற அடிப்படையில் சட்ட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தார். கட்சியின் யாப்பில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற அடிப்படையில் கட்சி நிருவாகிகளை தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தலின் சட்டபூர்வத்தன்மை சவாலுக்கு உட்டுத்தப்பட்டது. இடைக்காலத்தடை ஒன்றை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரப்பட்டது. நீதிமற்றத்தின் உத்தரவு 2024 ஜனவரி 21, 27 ஆம் திகதிகளில் பொதுச்சபை யின் கூட்டங்களில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு தீர்மானமும் இடைக்காலத் தடையுத்தரவைக் கோரிய மனுவின் விசாரணை முடிவடையும் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை தடைசெய்து திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரச்சினை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும்வரை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் நிருவாகிகளோ அல்லது மத்திய செயற்குழுவோ செயற்பட முடியாது என்பதே நீதிமன்ற உத்தரவின் அர்த்தமாகும். கட்சி யாப்பின் பிரகாரம் பொதுச்சபையின் 150 — 160 உறுப்பினர்கள் மாத்திரமே கட்சி தேர்தல்களில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது..ஆனால், 2024 ஜனவரியில் 321 பேர் வாக்களித்திருந்தார்கள். பழைய கரங்களில் அதனால், விதிவசமாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட தமிழரசு கட்சியின் தலைவரும் ஏனைய நிருவாகிகளும் பதவியேற்பதில் இருந்து தடுக்கப்பட்டனர். “புதிய” மத்திய செயற்குழுவும் இயங்க முடியவில்லை. “பழைய” மத்திய செயற்குழுவும் நிருவாகிகளுமே தொடர்ந்து செயற்படுகின்றனர். அதனால் தமிழரசு கட்சி “பழைய” மத்திய குழுவினதும் நிருவாகிகளினதும் கரங்களிலேயே இருக்கிறது. பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவராக இருந்த “மாவை”சேனாதிராஜா அதற்கு பிறகு தனது பதவியை துறந்தார். கட்சியின் மூத்த துணைத் தலைவரான சி.வி.கே சிவஞானம் மத்திய செயற்குழுவினால் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இன்னொரு நிகழ்வுப் போக்காக கட்சியின் செயலாளர் மருத்துவர் பி.சத்தியலிங்கம் பதவியில் இருந்து விலகவே அவரின் இடத்துக்கு சுமந்திரன் செயலாளராக வந்தார். இடைக்கால தடையுத்தரவு கோரும் தமிழரசு கட்சியின் வழக்கு இழுபட்டுக் கொண்டுபோகும் நிலையில், “பழைய” நிரவாகிகளும் மத்திய செயற்குழுவுமே கட்சியின் விவகாரங்களை கவனித்தது. கட்சியை மறுசீரமைத்து அதன் வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்காக தலைவர் சிவஞானமும் செயலாளர் சுமந்திரனும் ஒன்றிணைந்து பணியாற்றினார்கள். மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழு வின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு அவர்கள் இருவருக்கும் ஆதரவை வழங்கினார்கள். கட்சியின் சகல தீர்மானங்களுமே மத்திய செயற்குழுவினதும் அரசியல் குழுவினதும் பெரும்பான்மையான உறுப்பினர்களின் அங்கீகாரத்துடன் எடுக்கப்பட்டன. செல்வாக்கமிக்க நால்வர் தலைவர் சிவஞானம், செயலாளர் சுமந்திரன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் மற்றும் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய நால்வரும் தமிழரசு கட்சிக்குள் செல்வாக்கு மிகுந்தவர்களாக மாறினார்கள். சிறீதரனும் மத்திய செயற்குழுவில் இருக்கும் சொற்ப எண்ணிக்கையான அவரது ஆதரவாளர்களும் உண்மையில் அதிகாரமற்றவர்களாகவும் பயனற்றவர்களாகவும் போனார்கள். கட்சிக்கு எதிராக போட்டித்தனமான தந்திரோபாயங்களை கடைப்பிடிப்பதன் மூலமாக சிறீதரன் மேலும் நிலைவரத்தை பழுதாக்கினார். 2024 ஜனாதிபதி தேர்தல் இதற்கு தெளிவான ஒரு உதாரணமாகும். தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசவை வெளிப்படையாக ஆதரித்த அதேவேளை, சிறீதரன் பொது தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறப்பட்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரனை வெளிப்படையாக ஆதரித்தார். இது கட்சிக்கு எதிரான வெளிப்படையான ஒரு செயலாகும். தனியாள் 2024 நவம்பரில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது சிறீதரன் தமிழரசு கட்சிக்குள் இருந்த அதேவேளை தனியாளாகவே செயற்பட்டார். கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்காக பிரசாரக் கூட்டங்களில் அவர் பங்குபற்றவில்லை. தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்களில் இருவர் மாத்திரமே அவரது மேடைகளில் பங்கேற்பதற்கு இடம் கொடுக்கப்பட்டது. சிறீதரனின் பிரசாரம் தமிழரசு கட்சியின் ஏனைய வேட்பாளர்களுக்கு அல்ல, தனக்கு மாத்திரமே மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார் என்பதை மறைமுகமாக உணர்த்தியது. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியில் இருந்து அவர் மாத்திரமே பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். தமிழரசு கட்சியின் பாராளுமன்ற குழுவின் தலைவராகவும் வந்த சிறீதரன் அரசியலமைப்பு பேரவையின் (Constitutional Council) ஒரு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இவ்வாறாக உயர்ந்த போதிலும், அவரால் கட்சிக்குள் அதிகாரத்தைச் செலுத்த முடியாமல் இருக்கிறது. தமிழரசு கட்சியின் எட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் கூட, இருவர் அவரது ஆதரவாளர்களாகவோ அல்லது எதிராளிகளாகவோ இல்லை. தற்போது சிறீதரனின் ஆதரவாளராக கட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே கருதப்படுகிறார். 37 உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசு கட்சியின் மத்திய செற்குழுவிலும் 11 உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் குழுவிலும் பெரும்பான்மையானவர்கள் சிறீதரனின் முகாமில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. தமிழரசு கட்சியின் மத்திய செயற் குழுவையும் அரசியல் குழுவையும் சேர்ந்த பெருமளவு உறுப்பினர்கள் தமிழ்த்தேசியவாத இலட்சியங்களை தங்களுடன் வரித்துக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் தீவிரவாத நிலைப்பாட்டைக் கொண்டவர்களாகவோ அலாலது விடுதலை புலிகளுக்கு சார்பானவர்களாகவோ இல்லை. அதனால் அவர்கள் சிறீதரனின் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான வெற்றுக் கடும்போக்கு ஆரவாரப் பேச்சுக்களுக்கு ஆதரவானவர்கள் இல்லை. சிறீதரனை அறிவாழமும் செயற்திறனும் நேர்மையும் கொண்ட ஒரு அரசியல்வாதியாக பலர் நோக்கவில்லை என்பது மற்றைய காரணமாகும். அவரை அவர்கள் ஒரு வாய்ச்சொல் வீரராகவே பார்க்கிறார்கள். வாக்குகளைப் பெறுவதில் சிறீதரன் கெட்டிக்காரராக இருக்கலாம், ஆனால், ஆக்கபூர்வமானதும் அறிவார்ந்ததுமான தலைமைத்துவத்தை வழங்க இயலாதவராக அவர் விளங்குகிறார். தமிழரசு கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ்கொண்டுவர இயலாதவராக சிறீதரன் கட்சியை மலினப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சிறுபிள்ளைத்தனமான அரசியலில் ஈடுபடுகிறார். அதையும் வெளிப்படையாகச் செய்வதற்கு பதிலாக அவர் தனது ஆட்களையும் ஆதரவாளர்களையும் பயன்படுத்தி எதிர்மறையான காரியங்களைச் செய்ய வைக்கிறார். செம்மணி சம்பவம் யாழ்ப்பாணத்தில் அரியாலை பகுதியில் செம்மணியில் சித்துப்பாத்தி மயானத்தில் மனித புதைகுழிகளில் தோண்டியெடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பில் உலகின் அனுதாபத்தைக் கவரும் நோக்கில் நடத்தப்பட்ட “அணையா விளக்கு” அமைதிவழிப் போராட்டத்தின்போது இடம்பெற்ற சம்பவம் இதை பளிச்சிட்டுக் காட்டுகிறது. சிறீதரனின் ஆதரவாளர்கள் கிளிநொச்சியில் இருந்து இருபது பஸ்களில் செம்மணிக்கு வந்தனர். கிளிநொச்சியில் இருந்து ஜீவராஜா என்று கூறப்படும் ஒருவரின் தலைமையில் வந்தவர்களில் சிலர் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் போராட்ட அரங்கில் இருந்து வெளியேறியபோது அவரை எதிர்கொண்டு ஆபாச வார்த்தைகளில திட்டி துரோகி என்று கூச்சல் போட்டனர். எண்பது வயதைக் கடந்தவரான சிவஞானம் எதிர்த்து எதையும் கூறாமல் மிகுந்த நிதானத்துடன் தனது வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார். அந்த சம்பவம் ஒளிப்பதிவு செய்யப்பட்டு பெருவாரியான யூரியூப் அலைவரிசைகளில் வெளியானது. தமிழரசு கட்சியின் தலைவர் சிவஞானத்தை பொதுமக்கள் அணிதிரண்டு விரட்டியடித்த ஒரு சம்பவமாக அது தவறான முறையால் காண்பிக்கப்பட்டது. ‘பாதுகாவலர்’ சி.வி.கே. சிவஞானம் சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஒரு துரோகச் செயலாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் கட்சிக்குள் சிறீதரனைப் “பாதுகாப்பவராக” சிவஞானமே இருந்து வருகிறார். தமிழரசு கட்சிக்குள் சிவஞானம் ஒரு மத்திய பாதையை கடைப்பிடிக்கிறார். ஒரு புறத்தில் அவர் சுமந்திரனுடன் கட்சி விவகாரங்களில் ஒத்துழைத்துச் செயற்படுகின்ற அதேவேளை, மறுபுறத்தில் சிறீதரனைப் பழிவாங்க வேண்டும் என்று கூச்சல்போடுகிறவர்களையும் அடக்கி வைத்திருக்கிறார். அதனால் சிறீதரன் சிவஞானத்துடன் உறவுகளைச் சீர்செய்வதற்கு அவசரப்பட்டு ஓடினார். சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கு செம்மணி சம்பவம் இவ்வருடம் பெப்ரவரியில் மாவிட்டபுரத்தில் நடைபெற்ற தமிழரசு கட்சியின் முக்கிய தலைவரான மாவை சேனாதிராஜாவின் இறுதிச்சடங்கின்போது இடம்பெற்ற சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அந்த இறுதிச்சடங்கின் ஏற்பாடுகளுக்கு பொறுப்பாக இருந்த சிறீதரன் இரங்கல் உரை நிகழ்வுக்கும் தலைமை தாங்கினார். சேனாதிராஜாவுக்கு தங்களது இறுதி அஞ்சலியைச் செலுத்தி இரங்கலுரை ஆற்றுவதற்கு விரும்பிய சிலரை சிறீதரன் தடுத்ததாகக் கூறப்பட்ட அதேவேளை, தமிழரசு கட்சியின் சில உறுப்பினர்களை பகிரங்கமாக கண்டனம் செய்வதற்கு அவர் அனுமதித்தார். மேலும் கிளிநொச்சியில் இருந்து வாகனங்களில் கூட்டி வரப்பட்டதாகக் கூறப்பட்ட கறுப்புச்சட்டை அணிந்த கும்பல் ஒன்று இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பலரை அச்சுறுத்தியது. அவ்வாறு அச்சுறுத்தப்பட்டவர்களில் பலர் கட்சிக்குள் சிறீதரனை விமர்சிப்பவர்களாக கருதப்படுபவர்கள். தமிழரசு குழப்பம் இலங்கையின் பிரதான தமிழ் அரசியல் கட்சியாக தமிழரசு கட்சி இருக்கலாம், ஆனால், அது பிளவுபட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது என்ற உண்மையை மறுதலிக்க முடியாது. அது உள்ளிருந்து வருகின்ற சவால்களுக்கும் வெளியில் இருந்து வருகின்ற சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய ஒரு கட்சியாக இருக்கிறது. நீதியரசர் அமரசேகர குறிப்பிட்டதைப் போன்று உள்ளிருந்து வருகின்ற சவால்கள் பெருமளவுக்கு கெடுதியை விளைவிக்கக்கூடிய ஆபத்தை தோற்றுவிக்கின்றன.” யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் எவ்வளவு காலத்துக்கு கட்சிக்கு எதிரான இந்த நடவடிக்கைகளை தொடரப்போகிறார்? 1949 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட அந்த கட்சி அதன் வைரவிழா வருடத்தில் என்ன செய்யப்போகிறது? (நன்றி ; வீரகேசரி ) https://arangamnews.com/?p=12147
-
தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..?
தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? July 10, 2025 தேசியத் தலைவருக்கு சுடரேற்றிவிட்டு என்ன செய்யப்போகிறீர்கள்..? இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது என்பதை நாம் அறிகிறோம். ஏன் இந்தப் பதற்றம். தேசியத் தலைவர் தனது வீரச்சாவின் மூலம் தமிழீழக் கொள்கையினை ஒவ்வொரு மானமுள்ள தமிழர் நெஞ்சங்களிலும் ஆணியடித்தாற் போல் பதித்துவிட்டார். தமது அரசியற் கொள்கைகளை அடிக்கடி மாற்றிக்கொள்வோர் தேசியத்தலைவரின் வீரமாண்பை மறைத்துவிடவே முயற்சிப்பார்கள். தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வு நடைபெற்றுவிட்டால் தலைவர் இறுதிவரை அடிபணியாது கட்டிக்காத்த தமிழீழக் கொள்கை ஈழத்தமிழினத்தின் அசைக்கமுடியாத அரசியற் கொள்கையாக நிலைபெற்றுவிடும். தலைவரது உயிர்த்தியாகத்தை முன்னிறுத்தியே அரசியல் பேரம்பேசல்கள் நடத்தியாகவேண்டும் எனும் கட்டாயத்திற்குள் தமிழர் அரசியற் தலைமைகள் தள்ளப்படுவர். எம்மினத்திற்கான அரசியல்தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டம் போன்ற அரைகுறையான தீர்வுகளுக்குள்ளோ அல்லது 13பிளஸ் மற்றும் ஒற்றையாட்சி முறைமைகளுக்குள்ளோ தமிழ்மக்களை தள்ளிவிடலாமென நினைக்கும் சிங்கள-இந்திய மற்றும் தென்னாசிய பிராந்தியத்தில் தமது வல்லாதிக்கத்தை நிலைநாட்டத் துடிக்கும் சக்திகளுக்கும்,அதற்குத் துணைபோகும் தமிழர் தரப்புகளுக்கும் தமிழீழக் கொள்கையினை சாகடித்துவிட்டு நகரமுடியாத நிலை உருவாக்கப்பட்டுவிடும். தேசியத் தலைவர் அவர்களுக்கான வீரவணக்க நிகழ்வு தொடர்பாக முன்வைக்கப்படும் உண்மைக்குப் புறம்பான விமர்சனங்கள் உருவாகவும் அதனை உருவாக்குவதற்குமான அடிப்படைக் காரணங்கள் இவையே. இதனாலேயே இந்தப் பதற்றம் பலரை பீடித்துள்ளது. தமிழர் நிலத்தை,தமிழர் வளத்தை தமது தேவைக்குப் பயன்படுத்த முனையும் தென்னாசியப் பிராந்தியப் போட்டியாளர்களுக்கும், தற்போதைய தமிழர் அரசியற் தலைமைகளுக்கும் தேசியத்தலைவர் போட்ட கடிவாளம் இது.அதன் வெளிப்பாடே இப்போது ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம். அதேவேளை தேசியத் தலைவருக்கான வீரவணக்க நிகழ்வுக்குச் சென்று சுடரேற்றினால் அவர்மீது உறுதியெடுத்து தமிழீழக் கொள்கைவழி பயணிக்கவேண்டும். தமிழீழக் கொள்கைவழி பயணித்தால், பிழைப்புவாத அரசியலை முன்னெடுக்க முடியாது.மே18க்குப் பின்னர் தாம் கட்டியெழுப்பிய சோரம்போன அரசியல் அத்திவாரங்கள் தகர்க்கப்பட்டுவிடும் எனவே இந்த நிகழ்வை எப்பாடுபட்டேனும் தடுத்துவிடவும் அதன் கனதியை வலுவிழக்கச் செய்யவும் இந்த சக்திகள் முயற்சிப்பர். தலைவரின் தத்துவார்த்தம்,சித்தாந்தம் என்றும் அதன்வழி தாம் நடப்போம் என்றும் கூறிக்கொண்டு தலைவரின் வீரச்சாவை மீண்டும் மீண்டும் புதைத்துவிட பலர் களமிறக்கப்பட்டுள்ள பின்னணியும் இதுவேதான். தலைவர் தனது வீரச்சாவின்மூலம் தமிழ் மக்களுக்கும் தமிழின விடுதலைக்காக போராடப்போகும் அடுத்த தலைமுறைக்கும்,தமிழீழத்தை வெல்லும்வரை அதன் விடுதலைக்காக அடிபணியாது தொடர்ந்து போராடு எனும் செய்தியையே கொடுத்துள்ளார். தனது வீரச்சாவை 16 ஆண்டுகாலமாக புதைத்து வைத்திருக்கும் மர்மத்தை உடைத்துக்கொண்டு மீண்டும் உயிர்பெறப் போகிறார் எங்கள் தேசியத்தலைவர் எமது இனத்திற்கு வழிகாட்டியாக… புலவர். https://www.uyirpu.com/?p=19632
-
தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது
தமிழ் எம்.பி.-இன் தலையீட்டால், காணியை அபகரிக்கும் பொலிஸாரின் முயற்சி தடுக்கப்பட்டது July 10, 2025 10:47 am வடக்கில் ஒரு தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்துவதைத் தடுக்கும் வகையில், அரசாங்கத்தின் உயர்மட்டத்திடமிருந்து உத்தரவைப் பெறுவதற்கு, ஒரு தமிழ் மக்களின் தலைவர் ஒருவர் நாடாளுமன்றம் வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள தனக்குச் சொந்தமான சுமார் அரை ஏக்கர் தனியார் காணியை பொலிஸார் கையகப்படுத்த முயற்சிப்பது குறித்து காணி உரிமையாளர் வவுனியா பிரதேச செயலாளரிடம் முறைப்பாடு செய்திருந்தார். ஜூலை 7ஆம் திகதி, வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன், பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியை கையகப்படுத்தி மேம்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். ஜனநாயக்க தமிழ் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கேள்விகளுக்கு முகங்கொடுத்த நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு முக்கிய அமைச்சர்கள் ஜூலை 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் காணியை கையகப்படுத்தும் முயற்சியை நிறுத்துமாறு பொலிஸாரிடம் தெரிவித்ததாக குறிப்பிட்டனர். காணியை அபகரிக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சி குறித்து சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, கூட்டுறவு அமைச்சர் உபாலி சமரசிங்கவால் ‘தனியார் காணியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் சுத்தப்படுத்தும் பணியை’ மேற்கொள்ள வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். காணி கையகப்படுத்துதலை நிறுத்த பொலிஸார் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் தெரிவித்தார். “வவுனியாவில் உள்ள ஓமந்தை பொலிஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள காணியை, பொலிஸார் துப்பரவாக்குவதாக தான் நினைப்பதாக, அந்த பிரதேசத்தைச் சேர்ந்த எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்குத் தெரிவித்தனர். இது குறித்து இன்று ஐஜிபியிடம் தெரிவித்தேன். அது நிறுத்தப்பட்டது. இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. அதன் சட்டரீதியிலான நிலைமையின் கீழ் நீங்கள் மேலும் நடவடிக்கை எடுக்கலாம். அது தனியார் காணியாக இருந்தால், அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதை கையகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள்.” முப்படைகள், மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரச் சபை, தொல்லியல் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதாக தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/tamil-mps-intervention-thwarted-police-attempt-to-seize-land/