Everything posted by ரஞ்சித்
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
அதே சிறிலங்கா தேர்தல் திணைக்களம்தான் இதனையும் சொல்கிறது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிட்ட இடங்கள் 23. அவற்றுள் அவர்கள் வெற்றிபெற்ற இடங்கள் 18. 23 தொகுதிகளில் முன்னணியின் சராசரி வாக்கு வீதம் 64 ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்). இவற்றில் இருந்து முன்னணி வெற்றிபெறாத ஐந்து இடங்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் வீதம் 72.9 ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்). மட்டக்களப்பு - 34% சாவகச்சேரி - 73.9% யாழ்ப்பாணம் - 68.8% கல்க்குடா - 50% - தோல்வி கல்முனை - 30% - தோல்வி காங்கேசந்துறை - 97% ஊர்காவற்றுரை - 84.6% கிளிநொச்சி - 92% கோப்பாய் - 96.5% மன்னார் - 55.85% மானிப்பாய் - 94.5% மன்னார் - 55.85% முல்லைத்தீவு - 66% மூதூர் - 29.5% - தோல்வி நல்லூர் - 93% பட்டிருப்பு - 54.6% பருத்தித்துறை - 68.4% பொத்துவில் - 34% புத்தளம் - 12.5% - தோல்வி சம்மாந்துறை - 40% - தோல்வி திருகோணமலை - 63.3% உடுப்பிட்டி - 79.2% வட்டுக்கோட்டை - 85.7% வவுனியா - 71.7% சிங்களப் பேரினவாதத்திடம் சரணாகதி அடையவிரும்பும் நீங்கள் இதனைத்தவிர வேறு எதனைத்தான் சொல்லப்போகிறீர்கள். நடத்துங்கள், நடத்துங்கள். தமிழினம் அடையாளம் துரந்து இலங்கையராக சிங்கள பெளத்தத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிற ஒற்றை இலக்கு நோக்கிச் செயற்படும் கோடரிக் காம்புகள் இனத்திற்கெதிரான தகவல்களைச் சேகரிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருப்பது உண்மையே.
-
தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்- நிலாந்தன்
பொய்யான தகவல். இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்குக் கிடைத்த சராசரி தமிழ் வாக்குகள் மொத்தத் தமிழ் வாக்காளர்களில் 72%. அதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலிலேயே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து 18 உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினர். அம்முறை த.ஐ.வி.மு எதிர்க்கட்சியாக வந்தது. அதற்கான ஒற்றைக் காரணம் தனி ஈழமே. சிங்கள பெளத்தத்துடன் சரணாகதியாகி அடையாளம் துரக்கும் ஒருவரின் மன உளைச்சலே இது. கடந்து செல்வோம்.
-
தென்னாபிரிக்க தூதுவரை சந்தித்த சிறிதரன்; பேசியது என்ன?
இவ்வாறான சந்திப்புக்களில் மொழிபெயர்ப்பாளர்களும் அழைத்துச் செல்லப்படுவது வழமையான நடைமுறை. ஆகவே மொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தான் பேசப்போகும் விடயம் குறித்து சிறிதரன் நிச்சயம் சிலதடவைகளாவது ஆங்கிலத்தில் பேசிப் பார்த்திருக்கலாம். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்திருக்கிறார், ஆங்கிலம் ஓரளவிற்குத் தெரிந்திருக்கும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பஞ்சாப்பிற்கான தீர்வினை ஜெயாருக்குப் பரிந்துரைத்த ரஜீவும், ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயாரும் புரட்டாதி 19 ஆம் திகதி தன்னைச் சந்தித்த போராளித் தலைவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரொமேஷ் பண்டாரி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கும் மூன்று மாதகால யுத்த நிறுத்த நீட்டிப்புக் குறித்து போராளிகள் வரவேற்று செய்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த போராளிகள், இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினை ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்று கூறினர். இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களின் பட்டியலை பண்டாரியிடம் காட்டிய அவர்கள், யுத்த நிறுத்தத்தைக் கவசமாகப் பாவித்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களிலிருந்து அவர்களை இராணுவம் விரட்டி வருவதாகக் கூறினர். இந்தியாவையும், சர்வதேசத்தினையும் இருட்டில் வைத்திருக்கவே யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசு பாவிக்கின்றது என்று விளக்கிய போராளிகள் யுத்த நிறுத்தம் உண்மையிலேயே நீடிக்கப்பட வேண்டுமானால் அதனைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகளும் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர். போராளிகளின் கோரிக்கையினை பண்டாரி உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். போராளிகளால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த கண்காணிப்புப் பொறிமுறை குறித்து பண்டாரி தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். இதுகுறித்து அவர் லலித் அதுலத் முதலியுடன் பேசும்போது, அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். "அது ஒரு நல்ல யோசனைதான். ஆனாலும், இதுகுறித்து நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து மீண்டும் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்" என்று அவர் பண்டாரியிடம் கூறினார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த போராளிகளின் யோசனையினை ஜெயாருடன் கலந்தாலோசித்த லலித், தமது அரசாங்கம் கண்காணிப்புக் குழுவினை அமைக்க சம்மதிப்பதாகத் தெரிவித்தார். இக்குழு எப்படி இயங்கவேண்டும் என்பது குறித்த விடயங்களை புரட்டாதி 20 ஆம் திகதி போராளிகளுடனான தனது சந்திப்பில் பண்டாரி பகிர்ந்துகொண்டார். நடந்துவரும் விடயங்கள் ரஜீவ் காந்திக்குத் திருப்தியை அளித்திருந்தது. போராளிகளுடனான அவரது 90 நிமிட சந்திப்பில் ரஜீவ் இந்த ஏற்பாடுகள் குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசினார். 23 ஆம் திகதி நடந்த இந்தச் சந்திப்பில் பேசிய ரஜீவ், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு எனும் யோசனை பேச்சுக்களில் ஏற்பட்டிருக்கும் பெரிய முன்னேற்றகரமான நிகழ்வு என்று கூறினார். ஆனால், பிரபாகரன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த தனது அச்சங்களை ரஜீவிடம் வெளிப்படையாகவே கூறினார். "யுத்த நிறுத்தக் குழுவை இலங்கையரசு நேர்மையாக அமைக்குமா என்பது கேள்விக்குறிதான்" என்று அவர் கூறினார். உடனடியாக இடைமறித்த ரஜீவ், "எப்போதும் பழைய அனுபவங்களையே மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்துங்கள்" என்று பிரபாகரனிடம் கூறினார். "நாம் இதனை சரியாகச் செய்யலாம்" என்று ரஜீவ் கூறவும், "பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று பிரபாகரன் பதிலளித்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை அமைப்பது தொடர்பான பேரம்பேசலில் பண்டாரி ஈடுபடத் தொடங்கினார். போராளிகளின் தலைவர்கள் இரு அடிப்படை கோரிக்கைகளை இதன்போது முன்வைத்தார்கள். முதலாவது, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சிறைச்சாலைகளையும், தடுப்பு முகாம்களையும் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி. இரண்டாவது, யுத்த நிறுத்த மீறல்களை விசாரிப்பதற்கும் அவற்றினை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குமான அதிகாரத்தை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருத்தல். போராளிகளின் இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள லலித் அதுலத் முதலி மறுத்தார். ஆனால் தமது கோரிக்கையில் போராளிகள் தீவிரமாக இருந்தனர். மேலும், அதிகாரம் இல்லாத யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக பண்டாரியிடம் அவர்கள் கூறிவிட்டனர். ஆணைக்குழுக்களையும், விசாரணைக் கமிஷன்களையும் மக்களை ஏமாற்ற சிங்கள அரசியல்வாதிகள் காலம் காலமாக பாவித்துவரும் ஒரு யுக்தி என்றும் அவர்கள் பண்டாரியிடம் கூறினர். சுமார் ஒருவார கால இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் இலங்கையரசாங்கமும், போராளிகளும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு இணங்கினர். அரச தரப்பைச் சேர்ந்த மூவரும், போராளிகளால் தெரிவுசெய்யப்பட்ட இருவருமாக ஐந்து உறுப்பினர்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருந்தது. மேலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் தேவையேற்படின் மேலதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளலாம் என்கிற சரத்தையும் லலித் அதுலத் முதலி சேர்த்துக்கொண்டார். இவ்வாறு மேலதிக உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுமிடத்து போராளிகளால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் இருந்தும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அச்சரத்துக் கூறியது. ஆனால் இச்சரத்து எதற்காக அவசர அவசரமாக லலித்தினால் சேர்க்கப்பட்டது என்பதற்கான உண்மைக் காரணத்தை போராளிகளாலோ அல்லது பண்டாரியாலோ அந்த நேரத்தில் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அரசு மூன்று உறுப்பினர்களை கண்காணிப்புக் குழுவிற்கு தன் சார்பில் நியமித்தது. அவர்களின் பிரபல நிர்வாகி பீலிக்ஸ் டயஸ் அபெயசிங்கவும் ஒருவர். இவரே ஆணைக்குழுவின் தலைவராகவும் அமர்த்தப்பட்டார். போராளிகள் தமது சார்பில் வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் இணைப்பதிகாரியும் தலைவருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கந்தரட்ணம் சிவபாலன் ஆகியோரை நியமித்தனர். பேராசிரியர் சிவத்தம்பி - 2004 பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கையில் நடந்துவரும் பிரச்சினைக்கான தீர்வில் மிகமுக்கியமான செயற்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கத்தைக் குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் பிரச்சினையில் தனது அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி ஜெயவர்த்தனவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் ரஜீவ் காந்தியின் அறிவுருத்தும் வகையிலான கருத்துக்களை ஜெயார் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இலங்கைப் பிரச்சினையினை சீக்கியப் பிரச்சினையுடன் ஒப்பிடுவதையும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால், இந்தியாவின் ஒரு பகுதியாகவிருந்தபோதிலும் பஞ்சாப் மாநிலம் பெரும்பாலான சுயாட்சி அதிகாரங்களை அனுபவித்தே வந்தது. மேலும் பஞ்சாப் மாநிலத்திற்கென்று தனியான சட்டசபையும் இயங்கிவந்தது. ஆரம்பத்தில் தமக்கென்று விசேட அதிகாரங்கள் வேண்டும் என்று கோரிவந்த சீக்கியர்கள் காலப்போக்கில் சிக்கியர்களுக்கான தனிநாடான காலிஸ்த்தானைக் கோரிப் போராடத் தொடங்கியிருந்தனர். சீக்கியர்களின் பிரதான கட்சியான அகாலி தள் உடன் பேச்சுக்களில் ரஜீவ் இறங்கியிருந்தபோது, சீக்கியர்கள் தமக்கென்று தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். சீக்கியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை ரஜீவ் ஏற்றுக்கொண்டிருந்தார். கந்தரட்ணம் சிவபாலன் - 2003, இரண்டாமவர், இடமிருந்து வலமாக அகாலி தள் கட்சியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை சீக்கியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த ரஜீவ் உத்தரவிட்டார். ரஜீவ் காந்தியுடன் தமிழ்ப் போராளிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் பஞ்சாப்பில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரஜீவின் கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற அகாலி தள், மாநிலத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்டது. இத்தேர்தலில் அகாலி தள் அடைந்த வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென்று ரஜீவ் காந்தி பறைசாற்றியிருந்தார். அகாலி தள் தலைவர்களுடன் ரஜீவ் காந்தி ஆனால் இலங்கையிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த அரசுகள் தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 வரையான 20 வருட காலத்தில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் தமிழ் மக்களால் சுயாட்சி கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த அகிம்சை வழியிலான போராட்டங்களை சிங்கள பெளத்த அரசுகள் மிருகத்தனமாக அடக்கியிருந்தன. அரச ஆதரவுபெற்ற காடையர்கள் மற்றும் அரசின் நேரடிக் கருவிகளான முப்படையினரும், பொலீஸாரும் தமிழர் மீதான படுகொலைகளை பரந்துபட்ட அளவில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். அரசின் இவ்வாறான அடக்குமுறைகளே தமிழ் மக்கள் தமக்கென்று தனிநாடு ஒன்று தேவை எனும் கோரிக்கையினை முன்வைக்கவும், அதனை வென்றெடுக்க ஆயுதப் போராட்டம் ஒன்று அவசியம் எனும் நிலைப்பாட்டினை நோக்கியும் அவர்களை உந்தித் தள்ளியிருந்தது. ஆனால் தமிழ் மக்களின் உணர்வு வெளிப்படுத்தல்கள் கூட அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம்கொடுத்தன. ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் மீதான அரசு அடக்குமுறை முன்னெப்போதைக் காட்டிலும் மிகவும் கொடூரமானதாகக் காணப்பட்டது. 1977, 1981, 1983 ஆகிய வருடங்களில் தமிழ் மக்கள் மீது அரச திட்டமிடலுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்கள் தமிழர்களை பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அழித்துவிடும் ஒரே நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டிருந்தன. ஜெயவர்த்தன அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் ஆயுதப் போராட்டத்தினைப் பலப்படுத்த ஆரம்பித்திருந்தன. ஆனால், தமிழர் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிரான தமிழர்களின் ஆயுத ரீதியிலான எதிர்நடவடிக்கைகளை ஜெயார் மேலும் மேலும் குரூரமான அடக்குமுறைகள் மூலம் எதிர்கொள்ள விரும்பினார். தமிழர் மீது தனது முப்படைகளை ஏவி கண்மூடித்தனமான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயவர்த்தன, சர்வதேசத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நிறுவுவதிலும் அயராது ஈடுபட்டு வந்தார். ஆகவேதான், சீக்கியர்களின் பிரச்சினையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை ரஜீவ் ஒப்பிட்டபோது அதனை ஜெயார் முற்றாக வெறுத்தார். தமிழர்கள் தமது பிரதேசங்களைத் தாமே ஆட்சிசெய்யும் தீர்விற்கான பேச்சுக்களில் இதயசுத்தியுடன் ஈடுபடுவதை ஜெயார் எக்காலத்திலும் விரும்பவில்லை. அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் தமிழர்களில் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டத்தை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி முற்றாக அழித்துவிடுவது மட்டும்தான். மஞ்சள் வர்ணத்தில் காணப்படுவது பஞ்சாப் மாநிலம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஐப்பசி 17 ஆம் நாள் ஆரம்பமாகவிருந்த நாளில் லலித் அதுலத் முதலி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்திருப்பதாக திடீரென்று அறிவித்தார். போராளிகளுடனோ , இந்தியாவுடனோ கலந்தாலோசிக்காது சிங்கள அரசினால் இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களில் ஐந்து சிங்களவர்களும் ஒரு முஸ்லீமும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். பகமாஸ் நாட்டில் பொதுநலவாய நாடுகளில் அரசுத் தலைவர்களிடையே நடைபெறவிருக்கும் மாநாட்டு நடக்கும் நாளிலேயே அரசினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஜீவ் காந்தியைச் சந்திக்க முடிவெடுத்த தலைவர் பிரபாகரன் தான் தலைமறைவாக இருப்பதால் இலங்கையரசு அதனை தனது பிரச்சாரத்திற்குப் பாவிக்கின்றது என்பதை உணர்ந்த பிரபாகரன் 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி வெளியே வந்தார். தான் தலைமறைவாக இருப்பதைப் பாவித்து இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கினை உருவாக்கி அதனை ஆளப்படுத்தவும், சர்வதேசத்தில் போராளிகள் அமைதியில் நாட்டமில்லாதவர்கள், வன்முறை விரும்பிகள் என்று பிரச்சாரப்படுத்தவும் ஜெயவர்த்தன முயன்று வருகிறார் என்பதைப் பிரபாகரன் அறிந்தே இருந்தார். போராளிகள் மீது ஜெயவர்த்தன சிறுகச் சிறுக சர்வதேசத்தில் சுமத்தி வந்த அவப்பெயரை துடைக்கவும், இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கொன்று உருவாகிவருவதாக அவர் செய்துவந்த பிரச்சாரத்தை முறியடிக்கவும் பிரபாகரன் நடவடிக்கைளில் இறங்கினார். புரட்டாதி 10 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் பேசும்போது திம்புப் பேச்சுக்களின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக நிலையெடுத்துவரும் இந்தியாவை தமது பக்கம் சாய்ப்பதற்கு போராளிகள் ரஜீவுடன் ஒரு சந்திப்பைக் கோரவேண்டும் என்று அவர் வாதிட்டார். புரட்டாதி 29 ஆம் திகதி வெளிவந்த சண்டே மகசீன் எனும் இந்திய பத்திரிக்கையில் அதன் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிற்கு வழங்கிய நேர்காணலில், பாலசிங்கம் நாடுகடத்தப்பட்ட போது தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தொடர்பாக தனது தளபதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறவும், பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையினை நேரடியாக உணர்ந்துகொள்ளவுமே தான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் அங்கு தங்கியிருந்த வேளையில் தனது தளபதிகளுக்கும், மக்களுக்கும் தான் கூறிய ஒரே விடயம் தனித் தமிழீழத்தை உருவாக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான விடுதலையினை அடைந்துகொள்ளமுடியும் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன் என்பதுதான் என்றும் அவர் கூறியிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் , ஜெயவர்த்தன தமக்கு தீர்வெதனையும் தரப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரனை செவ்வி காணும் அனீத்தா பிரதாப் "தலைமறைவாக இருக்கவேண்டும் என்று எனக்கு எண்ணம் இருக்கவில்லை. பாலசிங்கம் நாடுகடத்தப்பட்டவேளை நான் வெளியே வந்திருக்க முடியும். ஆனால் இந்தியா நடந்துகொண்ட விதத்திற்கெதிரான எனது எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு வெளியில் வருவதைத் தவிர்த்தேன்" என்று அவர் அனீத்தா பிரத்தாப்பிடம் கூறினார். போராளிகளின் தலைவர்களை ரஜீவ் காந்தி சந்திக்க விரும்புவதாக செய்தியனுப்பியபோது, தான் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை என்றும், அதனேலேயே ஏனைய ஈழத்தேசிய முன்னணியின் தலைவர்களும் ரஜீவுடனான சந்திப்பிற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றும், அதனாலேயே இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே அசெளகரியமான சூழ்நிலை உருவாகியது என்றும் அவர் விளக்கினார். ஆனால், பாலசிங்கத்தை நாடுகடத்தியதற்கான தனது எதிர்ப்பைக் காட்டவே ரஜீவுடனான சந்திப்பை தான் தவிர்த்ததாக அவர் மேலும் கூறினார். "பாலசிங்கத்தை நாடுகடத்த ரஜீவ் எடுத்த முடிவு தேவையற்றது என்று தான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் அவர் வாதிட்டார். தான் வெளியே வந்ததற்கான மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். கேள்வி : அப்படியானால் எதற்காக தற்போது வெளியே வந்தீர்கள்? பிரபாகரன் : இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், நான் தலைமறைவாக இருந்தபொழுது, எமது விடுதலைக்கு எதிரான சக்திகள் எம்மை பயங்கரவாதிகள் என்றும், சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தன. இரண்டாவது, தமிழ் மக்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாகவே வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்ற எம்மைப்போன்றவர்களை ஓரங்கட்டிவிட்டு சலுகைகளுக்காக பேரம் பேசும் சூழிநிலையினை சிலர் உருவாக்க விரும்பியிருந்தனர். பத்திரிக்கைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் எம்மை மிகவும் கொடிய பயங்கரவாதிகள் என்று மலினப்படுத்தியும், எம்மைப்பற்றிய தவறான செய்திகளையும் சிலர் வேண்டுமென்றே பரப்பி வர ஆரம்பித்திருந்தனர். மூன்றாவதாக, இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது எமது இயக்கமே என்றும், அதனாலேயே நான் தலைமறைவாக இருக்கிறேன் என்றும் இலங்கையரசாங்கம் பிரச்சாரம் செய்துவந்திருந்தது. தான் வெளியே வந்தமைக்கான இன்னொரு காரணத்தை பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். ரஜீவ் காந்தியுடனான போராளிகளின் தொடர்பாடல் என்பது ரோ அதிகாரிகள் ஊடாகவோ அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஊடாகவோதான் நடந்து வந்தது. ஆகவே, இவ்வதிகாரிகள் தன்னுடனும் நேரடியாகத் தொடர்புகொள்ளவேண்டும் என்பதற்காகவும், பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பின்னரான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தன்னிடம் நேரடியாக அவர்கள் தெரிவிக்க முடியும் என்பதற்காகவுமே தான் வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் தன்னைச் சந்திப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாக உணரும் ரஜீவ் காந்தி நிச்சயம் சினங்கொண்டிருப்பார் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். இந்தியாவின் சமாதான முன்னெடுப்புக்களை போராளிகளின் தாமதித்த சந்திப்பு பாதிக்கும் என்று பாலக்குமாரிடமும் பத்மநாபாவிடமும் ரோ அதிகாரிகள் பேசும்போது எச்சரித்திருந்தார்கள். போராளித் தலைவர்களின் தாமதத்தினாலேயே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், யுத்த நிறுத்த மீறல்களும் இடம்பெற்றன என்று கூறிய அதிகாரிகள், வன்முறைகள் ஆரம்பித்தமைக்கான பொறுப்பினை போராளிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தனர். புரட்டாதி 10 ஆம் திகதி கூடிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ரஜீவ் காந்தியைச் சந்திப்பதற்கு முன்னர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 13 ஆம் திகதி எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இரு விடயங்கள் குறித்து போராளிகள் வலியுறுத்தினர். முதலாவது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பொன்றினை ஜெயார் மேற்கொண்டு வருவதை எம்.ஜி.ஆர் இடம் உறுதிப்படுத்திய அவர்கள், அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடாக நிரூபித்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிராமங்களில் இருந்து இராணுவத்தினரும், கடற்படையினரையும் வன்முறையினைப் பயன்படுத்தி தமிழ் மக்களை நிரந்தரமாகவே விரட்டியடித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களில் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுவருவதையும் அவர்கள் சாட்சிகளூடு நிரூபித்தனர். அத்துடன், தமிழர்கள் வாழ்ந்துவந்த கிராமங்களில் குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டு, அவர்கள் அருகிலிருக்கும் ஏனைய தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் ஊக்குவித்துவருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். தமிழர்கள் மீது அரசாங்கம் முடிக்கிவிட்டிருக்கும் இனக்கொலையின் காரணமாகவே பெருமளவான தமிழ் அகதிகள் தமிழ்நாடு நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரண்டாவதாக அவர்கள் தெரிவித்த விடயம், தம்மைப் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசாங்கம் சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்துவருவது விசமத்தனமானது என்பது. தமிழ் மக்கள் தகுந்த பாதுகாப்புடனும், ஒடுக்குமுறைகள் குறித்த அச்சமின்றியும் வாழ்வதே தமது தலையாய விருப்பு என்றும், அதனை அடைவதற்காக தாம் நடத்திவருவது விடுதலைப் போராட்டமேயன்றி பயங்கரவாதம் இல்லையென்றும் வாதிட்டனர்.தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலத்தில், தமது வாழ்க்கையினை எவரினதும் இடையூறின்றி மேற்கொண்டு, சுயகெளரவத்துடன் வாழ வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கத்தினால் இன்றுவரை முன்வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பதை எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.தமிழ் மக்களுக்கு அதிகாரத்தினைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, மாவட்ட சபைகள் எனும் தீர்வினை முன்வைத்து மத்திய அரசாங்கத்திற்கே இன்னும் இன்னும் அதிகாரங்களை வழங்கி, தமிழ் மக்களை மேலும் தனது அடக்குமுறைக்குள் கொண்டுவர அரசு முயல்கிறது என்றும் அவர்கள் விளக்கினர். ஆகவே இந்தியா, ஜெயவர்த்தனவின் கபடத்தனத்தை சரியாக கண்டுணர்ந்து, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான தீர்வை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுத்தரவேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் கோரினர். தன்னைச் சந்தித்த போராளிகளின் தலைவர்களிடம் ரஜீவையும் சென்று சந்திக்குமாறு கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், தமிழரின் பிரச்சினை தொடர்பான தனது எண்ணங்களை ரஜீவிடம் தான் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அன்றைய தினமே தனது கருத்துக்களை ரஜீவிற்கு எம்.ஜி.ஆர் அனுப்பினார். அவர் அனுப்பிய அறிக்கையில் போராளித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பான தனது சொந்தக் கணிப்பையும் அவர் எழுதியிருந்தார். போராளித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், தான் ரஜீவிற்கு அனுப்பிய அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தார். தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்படட் வேண்டும்" என்று அவர் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையினைக் காட்டிலும் அகதிகள் பிரச்சினையினை அவர் மிகைப்படுத்திப் பேசினார். பின்னர், தமிழர்கள் கெளரவமாகவும், சுதந்திரமாகவும், தமது அலுவல்களைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலையினை உருவாக்க இலங்கையரசாங்கம் திம்புவில் முன்வைத்த தீர்வு உதவாது என்று அவர் கூறினார். "தமிழர்கள் தமது விடயங்களைத் தாமே பார்த்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். இலங்கை அகதிச் சிறுவர்கள் - தமிழ்நாடு 2003 இலங்கையரசாங்கத்திற்கும், போராளிகளுக்கும் இடையிலான மூன்று மாதகால யுத்த நிறுத்தம் நிறைவடையும் நாளான புரட்டாதி 18 ஆம் திகதி போராளித் தலைவர்கள் தில்லியை வந்தடைந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து தில்லி நோக்கிப் புறப்படுவதறுகுச் சற்று முன்னர் கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். அதன்படி யுத்தநிறுத்தம் மார்கழி 18 வரை இலங்கையரசால் ஒருதலைப்பட்சமாக நீட்டிக்கப்பட்டது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திரு சபாரட்ணம் அவர்கள் முன்னாள் டெலோ உறுப்பினருக்கு எழுதிய பதில் பங்குனி 30, 2005 நான் எழுதிய செய்தி தவறானது என்று நீங்கள் கருதினால், தற்போதைய டெலோ அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுடன் நீங்கள் அதனை சரிபார்த்துக் கொள்ளலாம். இப்படுகொலைகளை நடத்திய நபரை எனக்கு நன்றாகவே தெரியும். 1986 ஆம் ஆண்டு டெலோ அமைப்பை புலிகள் முற்றாகத் துடைத்தழித்தபோது, புலிகள் அவரைக் கைதுசெய்திருந்தனர். புலிகளால் அவர் பின்னாட்களில் விடுவிக்கப்பட்டபின்னர் அவர் நோர்வேயிற்குச் சென்றுவிட்டார். புலிகளின் முக்கிய உறுப்பினரும் 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் பொன்னம்மானுடன் பலியாகியவருமான வாசு, இப்படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விசாரித்தபோது இப்படுகொலைகள் குறித்து அறிந்துகொண்டார். இதுகுறித்து வாசுவே என்னிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். நான்கூட ஒரு காலத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்தவன் தான். இப்படுகொலைகளைச் செய்துவிட்டு தப்பியோடிய குழுவை புலிகள் துரத்திச் சென்றிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அக்குழு யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமை நோக்கியே வாகனத்தில் தப்பிச் சென்றதாக வாசு என்னிடம் கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஒரு அமைப்பைக் கொண்டு இலங்கை இராணுவமே இப்படுகொலைகளைச் செய்ததாக புலிகள் அன்று நினைத்திருந்தார்கள். ஆனால், இதனை வெளியே சொல்ல அவர்கள் விரும்பவியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குள் இராணுவம் நுழையவே முடியாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்த புலிகளுக்கு, தமது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினர் நுழைந்து, படுகொலைகளில் ஈடுபட்டுப் பின்னர் தப்பிச் செல்வதென்பது கெளரவப் பிரச்சினையாக இருந்திருக்கும். இப்படுகொலைகள் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வினவினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த வாசு, "இல்லை, இன்றைக்கு நீங்கள் அவர்களைக் கொன்றிருக்காவிட்டால், நாங்கள் எப்போதோ ஒரு நாள் அவர்களைக் கொல்லவேண்டி இருந்திருக்கும். ஆனால் சிறீ அவர்களைக் கொன்றதற்கும், நாம் அவர்களைக் கொல்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. சிறீ அவர்களைக் கொன்றது ரோவின் ஆதாயத்திற்காக. நாம் கொல்வதோ எமது (தமிழர்களின்) ஆதாயத்திற்காக" என்று என்னிடம் கூறினார். நன்றி த. சபாரட்ணம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் திரு சபாரட்ணம் அவர்களுக்கு எழுதிய கடிதம் பங்குனி 26, 2005 அன்பான ஆசிரியருக்கு, உங்களின் முன்னைய அத்தியாயத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பொறுப்பாளர் தாஸ் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். யாழ்ப்பாணத்தில் அன்று வாழ்ந்துவந்த அனைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்லவேண்டும் என்பதே சிறீசபாரட்ணம் எமக்கு விடுத்த கட்டளையாகும். ஆனால், வடமாராட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணத்தையோ, இராஜலிங்கத்தையோ கொல்வதற்கு தாஸ் மறுத்துவிட்டார். மேலும், டெலோவின் யாழ்ப்பாணப் பொறுப்பாளர் பொபி, வடமாராட்சியைச் சேர்ந்த எவரையும் கொல்வதையும் தான் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் எச்சரித்திருந்தார். இவர்கள் இருவரையும் கொன்றது பொபியின் குழுவினர் தான். இந்தத் திருத்தத்தினை உங்களின் பதிவில் இணைப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். நன்றி.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் நீக்கம் செய்யப்பட்ட திருகோணமலை இரு நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 4 ஆம் திகதி திருகோணமலையில் வன்முறைகள் மீண்டும் ஆரம்பித்தன. இராணுவ வாகனத் தொடரணிகள் முகாம்களை விட்டுப் புறப்படும் முன்னர் வீதிகளைப் பரிசோதிக்கும் நடைமுறையினை இராணுவத்தினர் அப்போது கடைப்பிடிக்க ஆரம்பித்திருந்தனர். இராணுவத்தினரின் குழுவொன்று வீதியின் இருமருங்கிலும் இருக்கும் பற்றைகள், மதகுகள், பாலங்கள் என்பவற்றை கண்ணிவெடிகளுக்காக பரிசோதித்துக்கொண்டே செல்வர். திருகோணமலை மாவட்டத்தில் வீதி பரிசோதனைகளுக்குப் பொறுப்பாகவிருந்த கடற்படையின் கொமடோர் ஜஸ்ட்டின் ஜயசூரிய வீதிப் பரிசோதனைகளைக் கடிணமான நடவடிக்கை என்று என்னிடம் ஒருமுறை கூறியிருந்தார். வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களிடம் ஒருமுறை பேசும்போது, "எமது படையினர் வீதியின் ஒவ்வொரு அங்குலத்தை மிகவும் கவனமாகப் பரிசோதிக்க வேண்டியிருக்கிறது" என்று கூறினார். புரட்டாதி 4 ஆம் திகதி இவ்வாறான வீதிப் பரிசோதனைக் குழுவொன்று வீதியின் இருமருங்கிலும் நடந்துசெல்கையில் காய்ந்த சருகுகளுக்குக் கீழே மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிமீது காலை வைத்துவிட்டார்கள். கண்ணிவெடி வெடித்தபோது அருகில் நின்ற மூன்று இராணுவத்தினர் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டனர். கண்ணிவெடியினைப் புதைத்துவிட்டு அருகிலிருந்த பற்றைக்குள் மறைந்திருந்த போராளிகள் மீதி இராணுவத்தினர் மீது துப்பாக்கித் தாக்குதலை நடத்த மேலும் நான்கு இராணுவத்தினர் காயமடைந்தனர். தமது இராணுவத்தினரில் மூவர் கொல்லப்பட்டமைக்காக திருகோணமலையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது கூட்டுப் பழிவாங்கலை நடத்த இராணுவம் முடிவெடுத்தது. ஆகவே இப்பழிவாங்கல்த் தாக்குதல்களை கச்சிதமாகத் திட்டமிட்ட இராணுவம், தனது நடவடிக்கைக்கு கடற்படையினர், பொலீஸார், சிங்கள ஊர்காவற்படையினர் மற்றும் சிங்களக் காடையர்கள் என்று பாரிய எண்ணிக்கையில் ஆட்களை ஒழுங்குபடுத்தியது. இராணுவத்தினரின் தலைமையில் இக்குழு திருகோணமலையில் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது மூர்க்கத்தனமான தாக்குதலில் இறங்கியது. திருகோணமலை நகரில் இருந்த தமிழர்களின் பல வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. புரட்டாதி 9 ஆம் திகதி திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான சம்பந்தனின் வீடு இலக்குவைத்து முற்றாக எரியூட்டப்பட்டது. கொழும்பில் திருகோணமலை தாக்குதல்கள் குறித்து செய்தி வெளியிட்ட பாதுகாப்பு அமைச்சு சம்பந்தனின் வீட்டை புலிகளே எரித்ததாக கூறியது. இதனை முற்றாக மறுத்த புலிகள், இராணுவத்தினர் தமது நாசகாரச் செயலை தம்மீது சுமத்துவதாகக் குற்றஞ்சாட்டியிருந்தனர். அம்மாதத்தின் இறுதி நாட்களில் சம்பந்தனை நான் கொழும்பில் சந்தித்தபோது, தனது வீட்டின் மீது குண்டுகளை எறிந்து தீயிட்டவர்கள் இராணுவத்தினர்தான் என்பதை தனது உறவினர்கள் தன்னிடம் உறுதிப்படுத்தியதாகக் கூறினார். திருகோணமலைத் தமிழர்களைப்பொறுத்தவரை புரட்டாதி 9 ஆம் திகதி இரவு என்பது குரூரம் நிறைந்த பொழுதாகக் கழிந்தது என்று கூறினார் சம்பந்தன. கடுமையான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும், குண்டுவெடிப்புக்களும் இரவு முழுவதும் கேட்டுக்கொண்டிருந்தது. அன்றிரவு முழுவதும் வீதிகளில் வெறியுடன் வலம்வந்த இராணுவத்தினர் கண்ணில் தென்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இராணுவத்தினரின் பாதுகாப்புடன் தமிழர்களின் வீடுகளுக்குள் நுழைந்த சிங்களக் காடையர்கள் அவற்றினுள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்ததுடன் பெற்றொல் ஊற்றித் தீமூட்டியபடியே சென்றனர். புரட்டாதி 22 ஆம் திகதி திருகோணமலைத் தாக்குதல் குறித்து செய்திவெளியிட்ட இந்து பத்திரிக்கை, "இரு மாதங்களில் திருகோணமலையில் 52 தமிழ்க் கிராமங்கள அழித்துத் தரமட்டமாக்கப்பட்டிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தது. கொழும்பில் தங்கியிருந்து செய்திகளை சேகரித்துவந்த பிரெஸ் ஸ்ட்ரஸ்ட் ஒப் இந்தியா மற்றும் யுனைட்டட் பிரெஸ் ஒப் இந்தியா ஆகிய பத்திரிக்கை நிருபர்களின் செய்திகளை ஆவணமாகத் தொகுத்தே இந்து இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இச்செய்தியின் முதலாவது பகுதி பிரெஸ் ட்ரஸ்ட் ஒப் இந்தியாவின் நிருபர் திருகோணமலைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களைச் செவ்வியெடுத்து வெளியிட்ட ஆவணத்திலிருந்து எடுக்கப்பட்டிருந்தது. இரண்டாவது பகுதி யுனைட்டட் பிரெஸ் ஒப் இந்தியா நிருபர் ஜெயராம் அவர்களின் சம்பந்தனுடனான செவ்வியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தது. இந்து வெளியிட்ட செய்தி நாட்டிலிருந்து உயிர்காக்க வெளியேறிச் சென்ற தமிழர்களின் செய்திகளின்படி திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் மட்டும் 52 தமிழ்க் கிராமங்களை இராணுவத்தினர் முற்றாகத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை நகரிலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றிவிடவென்று இலங்கையரசு எடுத்துவரும் இராணுவ தாக்குதல்களில் தப்பியோடும் தமிழர்கள் சிலருக்கு அரச அதிகாரிகளே தப்பிச் செல்வதற்கான உதவிகள் சிலவற்றை செய்ததாக அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தால் கொல்லப்படுவீர்கள், ஆகவே தப்பியோடுங்கள் என்பதே அவர்களின் செய்தியாகவிருந்தது. இவாறு தப்பி வந்த நடுத்தர வயதுத் தமிழர் ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்கையில் பலநூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகளும், கடைகளும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீடுகளை இழந்து நிர்க்கதி நிலைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர் என்று கூறினார். திருகோணமலையில் பலவருடங்களாக வாழ்ந்துவரும் சிங்களக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கையில், புரட்டாதி 4 ஆம் திகதி சிங்கள ஊர்காவற்படையினரின் கடுமையான தாக்குதலில் தனது கிராமமும் பாதிக்கப்பட்டதாகவும், தமிழர்களைப்போல தாமும் அங்கிருந்து தப்பியோடவேண்டியிருந்ததாகவும் கூறினார். அப்பகுதியில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்க நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு வீட்டையும் சிங்கள இராணுவத்தினர் தலைமையிலான ஊர்காவற்படை விட்டுவைக்கவில்லை என்று கூறிய அச்சிங்களவர், தமிழர்கள் ஆயிரக்கணக்கில் அகதி முகாம்கள் நோக்கி ஓடியதையும், இன்னும் பெரும் எண்ணைக்கையானோர் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொள்வதையும் தான் கண்டதாகவும் கூறினார். தமிழர்களின் 12 கோயில்களும் சில பள்ளிவாசல்களும் சிங்களவர்களால் எரிக்கப்பட்டது, அப்பகுதியில் இருந்த பட்டாம்குறிச்சி எனும் தமிழ்க் கிராமம் முற்றாக எரியூட்டப்பட்டிருந்தது. அக்கிராமத்தில் இனிமேல் வாழமுடியாது என்கிற நிலை ஏற்பட்டதால் நாமும் அங்கிருந்து வெளியேறி வந்துவிட்டோம் என்று அவர் மேலும் கூறினார். கொல்லப்பட்ட தமிழர்கள் எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. ஆனால், திருகோணமலையில் புரட்டாதி 4 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து அப்பகுதி பாடசாலையொன்று அகதிமுகாமாக மாற்றப்பட்டதாகவும், குறைந்தது 6,000 தமிழர்கள் அங்கு தஞ்சமடைந்திருந்தமை தனக்குத் தெரியும் என்றும் கூறினார். அங்கு நடக்கு எவையுமே வெளியே தெரியக் கூடாது என்பதற்காக அப்பகுதிக்கான அனைத்துத் தொலைத் தொடர்பும், போக்குவரத்துக்களும் இராணுவத்தால் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்தன என்றும் அவர் மேலும் கூறினார். இத்தாக்குதல்களின்போது இராணுவத்தினர் கையாண்ட நடைமுறை குறித்துப் பேசும்போது அச்சிங்களவர், "முதலில் சீருடைகள் இன்றி ஒரு பகுதிக்கு வரும் சில இராணுவத்தினர் அப்பகுதியில் குண்டொன்றினை எறிந்துவிட்டோ அல்லது வீடொன்றிற்குத் தீ மூட்டி விட்டோ மறைந்துவிடுவர். பின்னர் அப்பகுதிக்கு பாரிய ஆட்பலத்துடன் வரும் இராணுவத்தினர் அப்பகுதியில் புலிகள் தாக்குதல் நடத்தியதாக கூறிக்கொண்டே தாக்குதலில் இறங்குவார்கள். ஆகவே, தமிழர்களே இராணுவத்தினர் மீது முதலில் தாக்குதல் நடத்தினார்கள், ஆகவேதான் இராணுவம் பதில்த் தாக்குதல்களில் இறங்கினார்கள் என்று அரசாங்கம் கூறுவது பொய். இப்பகுதிகளில் முதலில் குண்டுகளை எறிந்துவிட்டு மறைந்துகொள்வது ஊர்காவற்படையினரும், இராணுவத்தினரும் தான். புலிகளுக்கும் இத்தாக்குதல்களுக்கும் தொடர்பில்லை. புரட்டாதி 9 ஆம் திகதி சம்பந்தனின் வீட்டை எரித்தவர்களும் இராணுவத்தினர்தான். இப்பகுதியில் இருந்த தமிழர்களின் வீடுகளை எரித்து நாசம் செய்தவர்கள் சிங்களவர்களே, நான் அவர்களின் செயலைக் கண்ணால்க் கண்டேன்" என்று அச்சிங்களவர் தொடர்ந்தார். "தனது இராணுவத்தையும், ஊர்காவற்படையினரையும், சிங்களக் காடையர்களையும் கொண்டு தமிழரின் தாயகப்பகுதியான இலங்கையின் வட கிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர்கள் அகலத்திற்கு தனக்கான பாதுகாப்பான வலயம் ஒன்றினை, தமிழர்களை அப்பகுதியில் இருது முற்றாக அழித்தோ அல்லது விரட்டியடித்துவிட்டோ அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நடவடிக்கையில் அது முற்றான வெற்றி கண்டிருக்கிறது என்று தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் அரசியல்த்துறை உறுப்பினர் சம்பந்தன் தெரிவித்தார். தமிழர்களை திருகோணமலை மாவட்டத்திலிருந்து நிரந்தரமாகவே துரத்திவிடும் நோக்கில் கடந்த மூன்று மாத காலமாக அரசால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் கரையோரத் தமிழ்க் கிராமங்களான குச்சவெளி, நிலாவெளி, உப்புவெளி, முருகபுரி, திருக்கடலூர், வீரநகர் ஆகியவையும் திருகோணமலை நகரின் பகுதி 10 எனும் கிராமமும் முற்றாக அழிக்கப்பட்டிருக்கின்றன. தாக்குதல்கள் முடிவடைந்தபின்னர் தமது பகுதிகளுக்குத் திரும்ப முயன்ற தமிழர்களை இராணுவத்தினரும், சிங்கள ஊர்காவற்படையினர் அடித்து விரட்டுகின்றனர். இரு நாட்களுக்கு முன்னர் முருகபுரி பகுதியில் தமது வீடுகளைப் பார்க்கச் சென்ற சில தமிழர்களை ஊர்காவற்படையினர் வெட்டிக்கொன்றிருக்கின்றனர்" என்று சம்பந்தன் மேலும் தெரிவித்தார் என்று இந்துவின் செய்தி கூறுகிறது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
சிறீசபாரட்ணத்தின் உத்தரவில் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் சுட்டுக் கொன்ற தாஸ் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கான கலந்துரையாடல்களில் ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் கலந்துகொள்வதற்காக பிரபாகாரன் வெளியே வந்திருந்தார். புரட்டாதி 18 ஆம் திகதியுடன் மூன்று மாத கால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரவிருப்பதனால், அதற்கு முன்னர் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் சந்திப்பொன்றினை நடத்த இந்தியா முயன்று வந்தது. தலைவர் பிரபாகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட பாலக்குமார் பிரபாகரனைப் பார்த்து "உங்களின் பொடியன்கள் தான் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் கொன்றதாக மக்கள் பேசுகிறார்கள்" என்று கூறினார். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த பிரபாகரன், "அதே மக்கள்தான் சிறியின் பொடியன்களே அவர்களைச் சுட்டதாகவும் கூறுகிறார்களே?" என்று பாலக்குமாரைப் பார்த்துக் கூறினார். இதனைக் கேட்டுக்கொண்டிருந்த சிறீசபாரட்ணம் உடனடியாக சுதாரித்துக்கொண்டு, "இல்லையில்லை, எனது பொடியன்கள் இதனைச் செய்யவில்லை" என்று மறுதலித்தார். ஆனால், இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொன்றது சிறீ சபாரட்ணத்தின் டெலோ உறுப்பினர்கள் தான். சிறீசபாரட்ணத்தின் நேரடி அறிவுருத்தலின்படியே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கான உத்தரவு சிறீசபாரட்ணத்தால் பின்வருமாறு வழங்கப்பட்டிருந்தது, "இரண்டு கூட்டணிக்காரர்களுக்கு மண்டையில் போடுங்கள்". டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பகுதிக்குப் பொறுப்பாகவிருந்த தாஸிற்கே சிறீசபாரட்ணத்தினால் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தாஸ் இரு குழுக்களை இக்கொலைகளைச் செய்ய அனுப்பி வைத்திருந்தார். தர்மலிங்கத்தின் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த புளொட் அமைப்பின் சென்றியில் இருந்த உறுப்பினர்கள் அன்று வீட்டிற்கு வந்த காரினை அடையாளம் கண்டிருந்தனர். புளொட் சார்பாக திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்டவரான தர்மலிங்கத்தின் மகன் சித்தார்த்தன் தனது தகப்பனாரின் படுகொலையில் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதை முற்றாகத் தவிர்த்திருந்தார். சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், "ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அமைப்புக்களில் ஒன்றே எனது தகப்பனாரைப் படுகொலை செய்தது" என்று மட்டும் கூறினார். ஈழத்தேசிய விடுதலை முன்னணி தனது அமைப்பிற்கும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பு இல்லை என்று அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அவ்வறிக்கையில் டெலோ அமைப்பும் கைய்யொப்பம் இட்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் எதற்காக சிறீசபாரட்ணம் கொல்வதற்கு முடிவெடுத்தார் என்பது இன்றுவரை தெரியாத புதிராகவே இருக்கிறது. சில காரணங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வந்தன. ஒரு தரப்பின் செய்தியின்படி ஏதோ ஒரு உளவுத்துறையின் ஏவலின்படியே சிறீசபாரட்ணம் இக்கொலைகளைச் செய்தார் என்று கூறப்பட்டது. இன்னொரு தரப்போ, புலிகளும் டெலோ அமைப்பும் கலந்துகொள்ளாத நிலையில், ஈழத்தேசிய விடுதலை முன்னணி ரஜீவுடன் பேச்சுக்களில் ஈடுபடப் போவதில்லை என்று தெரிந்த பின்னரும், கூட்டணி பேச்சுக்களில் கலந்துகொள்ளச் சம்மதித்தமைக்காகவே அவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறியது. மூன்றாவதும், முக்கியமானதுமான காரணம், புலிகள் மீது தமிழ் மக்களிடையே ஏற்பட்டு வந்த நன்மதிப்பினையும், அவர்களுக்கான ஆதரவினையும் களங்கப்படுத்தவே இப்படுகொலைகளைப் புரிந்துவிட்டு அவற்றினை புலிகள் மீது சுமத்த சிறீ எத்தனித்ததாகக் கூறப்பட்டது. ஆனால், இக்கொலைகளுக்கான காரணங்கள் எவ்வாறானவையாக இருந்தபோதும், இக்கொலைகளை தனது ஆதாயத்திற்காக இலங்கையரசு பாவித்துக்கொண்டது. தில்லி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான ஒற்றைக் காரணமாக ஆளாளசுந்தரம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகளைப் பாவித்த ஜெயார், தமிழர் மீதான யுத்தத்தில் புதிய உத்தியொன்றைனை அறிமுகப்படுத்தினார். புரட்டாதி 2 ஆம் திகதி மாலை பருத்தித்துறை இராணுவ முகாமிற்கு உணவுப் பொருட்களை காவிச் சென்ற இராணுவ வாகனம் மீது போராளிகள் தாக்குதல் நடத்த எத்தனித்த போது, அண்மையில் வாங்கப்பட்ட புதிய உலங்குவானூர்திகளைக் கொண்டு போராளிகள் மீது இலங்கை விமானப்படை தாக்குதல் நடத்தியது. மிகவும் தாழ்வாகப் பறந்துவந்த உலங்கு வானூர்திகள் அப்பகுதியெங்கும் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டன. இத்தாக்குதலில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்ட மேலும் பலர் காயமடைந்தனர். பருத்தித்துறையில் உலங்குவானூர்திகளைப் பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டமை அதுவரை நடந்துவந்த போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. போராளிகளுடனான சண்டைகளில் நிலப்பரப்பு மீதான ஆதிக்கத்தைச் சிறுகச் சிறுக இழக்கத் தொடங்கியிருந்த இராணுவத்தினருக்கு வானில் இருந்து தாக்குதல் நடத்தும் வல்லமை கிடைத்தமையானது, போராளிகள் மீது தமது ஆதிக்கம் மீள நிலைநாட்டப்பட்டுவிட்டது என்கிற மனோநிலையினை ஏற்படுத்தியது. 1985 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து அரச படைகள் போராளிகளின் நிலைகள் என்று தாம் கணிப்பிட்ட பகுதிகள் மீது தொடர்ச்சியாக வாந்தாக்குதல்களை நடத்துவதை வாடிக்கையாக்கிக் கொண்டன. ஆனால், நிலப்பரப்பு மீதான போராளிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது. புரட்டாதி 2 ஆம் திகதி ஏறாவூர் பொலீஸ் நிலையத்தைத் தாக்கிய நன்கு ஆயுதம் தரித்த போராளிகள் ஏழு பொலீஸாரைக் கொன்றதோடு இன்னும் 12 பேரைக் காயப்படுத்தியிருந்தனர். பொலீஸ் நிலையம் மீதான தாக்குதலின்போது போராளிகளால் கிர்ணேட்டுக்கள், ஆர்,பி.ஜி உந்துகணைகள், மோட்டார்கள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதாக அரசு கூறியது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ரஜீவ் வடிவமைத்த தில்லி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் கொலைகளைச் சாட்டாகப் பாவித்த ஜெயார் பிரபாகரனின் அறிக்கையினை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிக்கை உட்பக்கச் செய்தியாக வெளியிட்டிருந்தது என்று நான் நினைக்கிறேன். கொழும்பை மையமாகக் கொண்டியங்கும் பத்திரிக்கைகள் அதனை முற்றாக இருட்டடிப்புச் செய்திருந்தன. யாழ்ப்பாணத் தமிழர்களும், பொலீஸாரும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக குற்றஞ்சாட்டி வந்தனர். அவர்களின் மரணச் சடங்குகளில் உரையாற்றிய பலரும் புலிகளை இக்கொலைகளுக்குக் காரணம் என்று மறைமுகமாக விமர்சிக்கத் தவறவில்லை. இக்கொலைகளையடுத்து இலங்கை அரசும், இந்தியாவும் தமது அதிர்ச்சியையும், கவலையினையும் வெளியிட்டன. செய்தியாளர்களுடன் பேசிய ரஜீவ் காந்தி "சில தமிழ்த் தீவிரவாதிகள் ஏனைய தமிழர்களைப் படுகொலை செய்து வருகிறார்கள்" என்று ஆத்திரத்துடன் கூறினார். ஆனால், இக்கொலைகளை புலிகளே செய்தார்கள் என்று முடிப்பதிலிருந்து தவிர்த்துக்கொண்டார். ஆனால், கொழும்பில் இலங்கையரசு இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக வெளிப்படையாகவே கூறத் தொடங்கியிருந்தது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தி, மலினப்படுத்துவதற்கான பிரச்சாரத்தில் ஜெயவர்த்தன இறங்கினார். தமிழீழ விடுதலை அமைப்புக்களை, "ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய வந்திருக்கும் பயங்கரவாதிகள்" என்று அவர் அழைத்தார். அதுலத் முதலியோ இன்னொரு படி மேலே சென்று புலிகளை "கொலைக்குழு " என்று வர்ணித்தார். ரஜீவ் காந்தியினால் உருவாக்கப்பட்ட தில்லி ஒப்பந்தத்திற்கு பெளத்த துறவிகளும், எதிர்கட்சியினரும் கொடுத்த கடுமையான எதிர்ப்பினையடுத்து அதிலிருந்து எப்படியாவது வெளியேறிவிட ஜெயவர்த்தன முயன்று வருகையில், அதற்கான ஆயத்தங்களை லலித் அதுலத் முதலி செய்யத் தொடங்கியிருந்தார். அந்நாட்களில் பிரதான பெளத்த துறவிகளும், சிங்கள இனவாதக் கட்சிகளும் இணைந்து சிங்கள இனத்தையும் நாட்டையும் காப்பதற்கான தேசிய முன்னணி எனும் அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவும் முக்கிய உறுப்பினராக இணைந்துகொண்டிருந்தார். தில்லி ஒப்பந்தத்தை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று செயலில் இறங்கியிருந்த கொழும்பின் சிங்கள, ஆங்கிலப் பத்திரிக்கைகள் சிங்களவர்களின் அச்சமான மாகாண சபைகள் எனும் பேயிற்கு உயிர்கொடுத்து, ரஜீவ் காந்தி மாகாண சபைகளூடாக சமஷ்ட்டி ஆட்சியை இலங்கையில் கொண்டுவரப்போகிறார் என்றும், அதனூடாக நாடு இரண்டாக பிளவுபடப் போகின்றது என்றும் புலம்ப ஆரம்பித்தன. மந்திரிசபையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் விடயங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருக்காத போதும், புரட்டாதி 4 ஆம் திகதி கூடிய மந்திரி சபையில் ரஜீவின் தில்லி ஒப்பந்தம் குறித்து ஜெயவர்த்தன பேசினார். உடனடியாகப் பேசிய பிரேமதாச மாகாணசபைகளை அமைக்க விடமாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய லலித், அரசியல் தீர்வுகுறித்துப் பேசுவதற்கான சூழ்நிலை தற்போது நாட்டில் இல்லை என்று கூறினார். இவர்கள் இருவரையும் தொடர்ந்து மந்திரிசபையில் இருந்த ஏனைய இனவாதிகள் தமிழர்களுக்கு தீர்வு எதுவும் வழங்கப்படக் கூடாது என்று தம் பங்கிற்கு ஆர்ப்பரித்து அமர்ந்தனர். அன்று மாலையே இந்திய தூதர் டிக்ஷிட்டை தனது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலமான வோர்ட் பிளேசிற்கு அழைத்த ஜெயார் யாழ்ப்பாணத்தில் இரு ஜனநாயக அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டமையானது நாட்டில் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்றும் சிங்கள மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள் என்றும் முறையிட்டார். மேலும், தமிழர்களுக்கு அரசியல்த் தீர்வினை வழங்குவதற்கு முன்னர் பயங்கரவாதிகளை முற்றாகத் துடைத்தழிக்க வேண்டும் என்று சிங்கள மக்கள் தனது அரசாங்கத்தின்மீது அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். ஆகவே, தனது இளைய சகோதரரும் இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான ஹெக்டர் ஜெயவர்த்தன தில்லியில் ரஜீவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில்லை என்று தமது அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக டிக்ஷிட்டிடம் தீர்க்கமாக ஜெயார் கூறினார். தில்லி ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருக்கும் அரசியல் யாப்பு மாற்றங்களும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பும், வழங்கப்படவிருக்கும் அதிகாரங்களும் தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியல் யாப்பிற்கு எதிரானது என்றும், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கும், ஒற்றையாட்சித் தன்மைக்கும் ஆபத்தானது என்றும், ஆகவே அவற்றினை நடைமுறைப்படுத்தினால் நாடு பிளவுபடுவதைத் தடுக்க முடியாது போய்விடும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். அன்று இரவு டிக்ஷிட்டுடன் பேசிய வெளிவிவகார அமைச்சர் ஹமீதும் ஜெயாரின் தீர்மானத்தை மீளவும் வலியுறுத்தினார். தான் வடிவமைத்த தில்லித் தீர்மானத்தை ஜெயவர்த்தன உதாசீனம் செய்து நிராகரித்தமை ரஜீவிற்கு கடுமையான எரிச்சலை உண்டாக்கியது. ஆகவே, உடனடியாக தன்னை வந்து சந்திக்குமாறு டிக்ஷிட்டடம் அவர் கூறினார். புரட்டாதி 7 முதல் 14 வரையான ஒருவார காலப்பகுதியில் தில்லியில் தங்கியிருந்த டிக்ஷிட், ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடனும் நீண்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார். கொழும்பு திரும்பிய டிக்ஷிட்டிடம் ரஜீவ் ஒரு செய்தியை அனுப்பினார். அதாவது, தில்லி ஒப்பந்தத்தினை மேலும் மெருகூட்டி, வரவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் தன்னை ஜெயார் சந்திக்கும்போது ஒப்பந்தம் குறித்து பேசவேண்டும் என்று ரஜீவ் கோரியிருந்தார். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தினை முற்றாக அழித்துவிட தனக்கு இன்னும் சிறிது கால அவகாசம் ஒன்று ரஜீவினால் வழங்கப்பட்டிருப்பது கண்டு ஜெயார் மகிழ்ச்சியடைந்திருந்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல் கையாலாகத்தனத்தை விமர்சித்த தலைவர் எமது அரசியல்த் தலைமைகளின் கையாகாலத் தன்மையும், எதிரியின் சூட்சுமங்களை அவர்கள் தீர்க்கதரிசனத்துடன் உணர்ந்துகொள்ளத் தவறியமையுமே நாம் இன்றிருக்கும் அவல நிலைக்குக் காரணமாகும். அரச பயங்கரவாதம் தனது கொலைநகங்களை கூறாக்கிக்கொண்டும், இனவாதப் பேய் எமதினத்தை அழித்துக்கொண்டும் இருக்கையில் எமது பாராளுமன்ற தலைவர்கள் தமது ஆசனங்களில் இறுக ஒட்டிக்கொண்டும், அற்பச் சலுகைகளுக்காக இனவாதிகளுக்கு சாமரமும் வீசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடுத்துச் செய்த தவறு வளர்ந்துவரும் தமிழ் இளைஞர்களின் உயிர்ப்பான ஆயுதப் போராட்டத்தினை மலினப்படுத்த முயன்றது. எமது உயிரைக் கொடுத்து நாம் முன்னெடுத்துவரும் தவிர்க்கமுடியாததும், அவசியமானதுமான எமது தேச விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தினை அவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. எங்களைத் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் அழைக்கிறார்கள். அரசியல் சலுகைகளுகளுக்காக எமது தியாகம் செறிந்த ஆயுதப் போராட்டத்தினை அழுத்தம் கொடுக்கும் ஒரு கருவியாகப் பாவித்து எம்மை மலினப்படுத்தி வருகிறார்கள். எமக்கான சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்கு நாம் ஆயுதமேந்திப் போராடுவதைத்தவிர வேறு வழியில்லை என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள மறுத்துவருகிறார்கள். அவர்களுக்குத் தன்னம்பிக்கை என்பது சற்றும் கிடையாது.அதனால்த்தான் எமது நாட்டை ஆக்கிரமிக்க இந்திய இராணுவத்தினை வரும்படி அழைக்கிறார்கள். எமக்கு இந்தியாவின் உதவி வேண்டும். அவர்களின் ஆதரவு வேண்டும். அவர்களின் நன்மதிப்பு வேண்டும். எமது தனிநாட்டிற்கான ஆதரவினை நல்குவதற்கு இந்தியாவை நாம் வற்புறுத்த வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கையினை இந்தியா ஏற்றுக்கொள்ளும்படி நாம் கோரவேண்டும். தமிழர்களின் பிரச்சினைக்கான ஒரே தீர்வு தனித் தமீழீழமே என்பதை இந்தியாவுக்கு நாம் உணர்த்த வேண்டும். ஆனால், இவற்றைச் செய்யாது, எமது பிரச்சினையில் தலையிடுங்கள், தீர்வைத் தாருங்கள் என்று இந்தியாவிடம் கெஞ்சுவது அவர்களின் அரைசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகிறது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் கொலைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், புளொட் அமைப்பும் ரஜீவ் காந்தியின் அழைப்பினை ஏற்றுக்கொணடனர். இரு நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 2 ஆம் திகதி, 83 படுகொலைகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்த இரு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டார்கள். யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் அமைந்திருக்கும் கல்வியங்காடு பகுதியில், பிரதான வீதியில் இருந்து உள்ளாகச் செல்லும் ஒழுங்கையில் அமைந்திருந்த ஆளாளசுந்தரத்தின் வீட்டிற்குச் சென்ற இளைஞர்கள் சிலர் அவரது கதவைத் தட்டினர். ஆளாளசுந்தரம் கதவினைத் திறக்கவும், "அண்ணை, உங்களோட ஒரு முக்கியமான விசயம் பற்றிக் கதைக்க வேணும், எங்களோட வாங்கோ" என்று அவரை அழைத்தனர். இளைஞர்கள் கேட்டதற்கமைய வீட்டினுள் சென்று உடைகளை அணிந்துகொண்டு ஆளாளசுந்தரம் அவர்களுடன் வெளியேறிச் சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டிறு அருகில் இருக்கும் பற்றைகளுக்குள் இருந்து நெற்றியில் இரு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. திருமதி அமிர்தலிங்கத்துடன் இணைந்து சுவரொட்டிகளை ஒட்டும் தர்மலிங்கம் - 1972 அதேநேரத்தில் இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கத்தை இன்னொரு இளைஞர் குழு அழைத்துச் சென்றது. மறுநாள் அவரது உடலும் தலையில் சூட்டுக் காயங்களுடன் சேமக்காலை ஒன்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. ஒருவரால் எழுதப்பட்ட இரு காகிதங்கள் இருவரது உடல்களுக்கருகிலும் காணப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் துரோகத்திற்காகவே இவர்கள் இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அடியில் "சுய கெளரவம் மிக்க தமிழர்கள்" என்று கைய்யொப்பம் இடப்பட்டிருந்தது. இந்தச்க் கொலைகள், குறிப்பாக தர்மலிங்கத்தினது கொலை இலங்கை மட்டுமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேசமெங்கும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தர்மலிங்கம் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி. மிகுந்த பணக்காரரான தர்மலிங்கம் மக்களால் மிகவும் நேசிக்கப்பட்டவர் என்பதுடன், சோசலிஷ அடிப்படைகளை ஏற்று நடந்தவர். சோவியத் - இலங்கை நட்புறவுச் சமூகத்தின் மிக முக்கிய உறுப்பினராக விளங்கியவர். முதலாளித்துவவாதிகளாகவும், தமக்குள் மோதுண்டும் வந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரிடையே சோசலிஷவாதியாக அவர் வலம் வந்தார். ஆளாளசுந்தரம் என்னுடன் பாடசாலையில் ஒன்றாகப் படித்தவர்.என்னிலும் வயதில் இளையவர். தர்மலிங்கத்தை 1957 ஆம் ஆண்டிலிருந்தே எனக்குத் தெரிந்திருந்தது. லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிக்கையான தினகரனுக்காகப் பாராளுமன்றச் செயற்பாடுகளை செய்தியாக்க நான் செல்லும்பொழுது அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். பழைய பாராளுமன்றக் கட்டடத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்றினை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். கட்டடத்தின் இரண்டாவது மாடியில் அமைந்திருக்கும் நூலகத்தில் தர்மலிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் அங்கிருந்து பாராளுமன்ற உணவகத்தில் தேநீர் அருந்துவதற்காக நாம் இருவரும் மிந்தூக்கியில் நுழைந்து கீழ்த் தளத்திற்குச் சென்றோம். நாம் தூக்கியில் நுழைந்தபொழுது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயார் ஜெயவர்த்தனவும் இன்னொருவரும் அதற்குள் இருந்தனர். எம்மைக் கண்டதும் ஜெயாருடன் இருந்தவர் அவரைப் பார்த்து, "சேர், தர்மா (தர்மலிங்கம்) யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்கவும், "இதில் அதிசயம் என்னவிருக்கிறது, அவர் ஒரு சோசலிஷவாதியல்லவா?" என்று சிரித்துக்கொண்டே ஜெயார் பதிலளித்தார். இதனைக் கேட்டதும் தர்மலிங்கம் விழுந்து விழுந்து சிரித்தார். நான் இச்சம்பவத்தை தர்மலிங்கத்தின் மகனும், திம்புப் பேச்சுக்களில் புளொட் சார்பாகக் கலந்துகொண்டவருமான சித்தார்த்தனுடன் தொடர்புபடுத்துவதற்காகவே கூறுகிறேன். என்னுடன் பின்னாட்களில் பேசிய சித்தார்த்தனும் ஜெயார் கூறிய விடயம் குறித்து தனது தந்தையார் வீட்டில் கூறிச் சிரித்ததாக கூறியிருந்தார். மக்களால் மதிக்கப்பட்ட இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலை மிகுந்த சோகத்தினை ஏற்படுத்தவே, அவர்களின் இறுதி நிகழ்வுகளில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண மக்களும், யாழ் பொலீஸாரும், புலநாய்வுத் துறையினரும் இக்கொலைகளைப் புலிகளே செய்ததாக கூறத் தொடங்கினர். ஆளாளசுந்தரம் மீது புலிகள் சிலகாலமாகவே விமர்சனங்களை முன்வைத்து வந்ததை யாழ் மக்கள் அறிந்திருந்தனர். யாழ்ப்பாணக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக ஆளாளசுந்தரம் பதவி வகித்த காலத்தில் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டார் என்று குற்றச்சாட்டிற்குள்ளாகியிருந்தார். இதற்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் அவரது பாதத்தில் புலிகள் ஒருமுறை சுட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஏக பிரதிநிதிகளாக செயற்படுவதையும் பிரபாகரன் கடுமையாக எதிர்த்து வந்திருந்தார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி மீது 80 களின் நடுப்பகுதியில் இருந்தே பிரபாகரன் விமர்சனங்களை முன்வைத்து வந்தார். வடக்குக் கிழக்கில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்த இந்தியாவின் இராணுவ உதவியை அமிர்தலிங்கம் எதிர்பார்த்து வந்தது பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் அரசியல்க் கையாலாகத்தனத்தை கடுமையாகச் சாடி அறிக்கையொன்றினை அவர் விடுத்திருந்தார். போர்நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த அறிக்கையில் முன்னணியினர் மீதான பிரபாகரனின் கடுமையான அதிருப்தி தெளிவாகத் தெரிந்தது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் நாட்டை ஆட்கொண்ட ஈழத் தமிழர் ஆதரவு உணர்வு 1985 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்து மக்கள் போராட்டத்திற்கான ஆதரவாளர்கள் என்கிற நிலைப்பாட்டிலிருந்து போராட்டத்தின் பங்காளிகள் என்கிற நிலைக்கு மாறியிருந்தார்கள். இராணுவ முகாம்களுக்கு வெளியே அவர்களின் நடமாட்டத்தை அவதானிப்பதில் சிறுவர்கள் பங்கெடுத்தார்கள். மரங்கள் மீது ஏறி மறைந்திருந்த அவர்கள் இராணுவம் முகாம்களை விட்டு வெளியே வர எத்தனிக்கும்போது அதுகுறித்துப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் உடனுக்குடன் அறியத் தந்தார்கள். இதனையடுத்துச் செயலில் இறங்கிய பொதுமக்கள் வீதிகளுக்குக் குறுக்கே சீமேந்துத் தூண்களையும் மரக்குற்றிகளையும் இழுத்துப் போட்டு, பழைய டயர்களுக்குத் தீமூட்டீனார்கள். போராளிகள், முன்னேறி வரும் இராணுவம் மீது கிர்ணேட்டுக்கள், கண்ணிவெடிகள், மோட்டார்கள் போன்றவற்றைப் பயன்படுத்தித் தாக்குதலைத் தொடங்குவார்கள்.பொதுமக்கள் கூடும் இடங்கள், மற்றும் முக்கிய சந்திகளில் பாடசாலை மாணவர்கள் அறிவித்தற் பலகைகளை நிறுவி போராளிகளிடமிருந்து வரும் தகவல்களை மக்கள் படிக்கும்படி அவற்றில் எழுதினார்கள். சமூகத்தின் அனைத்து நிலை மக்களும் போராட்டத்தில் ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுத்திருந்தார்கள். இலங்கையில் தமிழ் மக்களிடையே எழுந்துவந்த தமிழ்த் தேசிய உணர்வு சிறுகச் சிறுகத் தமிழ்நாட்டையும் பற்றத் தொடங்கியிருந்தது. கருநாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகமும், அக்கட்சியின் ஆதரவுக் கட்சிகளும் இதில் முன்னிலை வகித்தன. பாலசிங்கத்திற்கும், ஏனையவர்களுக்கும் நாடுகடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 48 மணிநேரத்திற்குள் தமிழகக் கட்சிகள் வீதியில் இறங்கின. ஜெயவர்த்தனவும், ரஜீவ் காந்தியும் தமிழ் மக்களைக் கொல்கிறார்கள் என்கிற பிரச்சாரத்தை முன்வைத்து சென்னையின் முக்கிய வீதிகளூடாக பெரும் பேரணியொன்றினை கருநாநிதி நடத்தினார். "ரஜீவ் காந்தி ஒழிக, ஜெயவர்த்தன ஒழிக, அவர்களுக்கு ஆதரவு தருவோர் ஒழிக" என்று பேரணியின் முன்னால் அவர் ஆவேசமாகப் பேசியபடி சென்றார். ரஜீவ் காந்தி ஒழிக எனும் சுவரொட்டிகள் தமிழ்நாடெங்கிலும் பரவலாக ஒட்டப்பட்டது. கே.வீரமணி 2004 தமிழ்ப் போராளிகளின் தலைவர்கள் நாடுகடத்தியதில் எம் ஜி ஆரின் கட்சியும் பங்களித்திருக்கிறது என்று திராவிடர் கழகத்தின் வீரமணி பேசியபோது பலத்தச் கரகோஷம் மக்களால் எழுப்பப்பட்டது. "போராளித் தலைவர்களை நாடுகடத்தும் உத்தரவினை ரஜீவ் காந்தி விலக்கிக் கொள்ளாவிட்டால் பஞ்சாப், அசாம் போன்ற நிலை இங்கும் உருவாகும், ஒரு வட இந்தியனையும் எமது மண்ணில் கால்ப்பதிக்க நாம் விடமாட்டோம்" என்று வீரமணி சூளுரைத்தபோது கூட்டத்திற்கு வந்திருந்தோர் எழுந்துநின்று பலத்த கரகோஷம் செய்தார்கள். தமிழ் நாட்டில் மக்கள அனைவரையும் ஒருங்கிணைத்து உருவாகி வந்த ஈழத்தமிழர் அனுதாப அலையில் இருந்து விலகியிருக்க எம் ஜி ஆர் இனால் முடியவில்லை. தமிழ்நாட்டில் இயங்கிவந்த காங்கிரஸ் கட்சியினாலும் அது இயலவில்லை. அவர்களும் அதற்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு பேரணியோ, மக்கள் கூட்டமோ நடந்துகொண்டுதான் இருந்தது. புரட்டாதி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் ஆர்ப்பாட்டங்கள் உச்சம் பெற்றன. தமிழ் ஈழ ஆதரவாளர்கள் (டெசோ அமைப்பு) அமைப்பினால் நடத்தப்பட்ட மாபெரும் பேரணியால் முழுத் தமிழ்நாடுமே முற்றான ஸ்த்தம்பித நிலைக்குக் கொண்டுவரப்பட்டது. அதற்குப் பதிலளிக்கும் விதமாகச் செயற்பட்ட எம்.ஜி.ஆர் புரட்டாதி 24 ஆம் திகதி ஈழத்தமிழருக்கு ஆதரவான செயற்பாட்டில் தானே இறங்கினார். மரீனா கடற்கரையில் 12 மணிநேர மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்தை எம்.ஜி.ஆர் ஆரம்பித்து வைத்தார். கலை 6 மணிக்கு மரீனாவிலும், தமிழ் நாட்டின் ஏனைய முக்கிய நகரங்களிலும் ஒரே நேரத்தில் இச்சத்தியாக்கிரகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மரீனாவில் இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்களுடன் எம்.ஜி.ஆர் உம் ஈடுபட்டிருந்தார். செங்கல்ப்பட்டில் இடம்பெற்ற சத்தியாக் கிரகப் போராட்டத்தை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா முன்னின்று நடத்தினார். தமிழ்நாடு செயலகத்தில் முதலமைச்சர் நன்கொடை நிதியம் என்கிற பெயரில் ஈழத்தமிழருக்கான நிதிச் சேகரிப்பு செயற்பாட்டினையும் எம்.ஜி.ஆர் ஆரம்பித்து வைத்தார். அந்த நிதியத்தில் தனது நன்கொடையாக 2000 ரூபாய்களை இட்டு அதனை அவர் ஆரம்பித்து வைத்தார். அரச ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் தமது பத்து இலட்சம் உறுப்பினர்கள் தமது ஒருநாளைய சம்பளத்தினை முதலமைச்சர் நிதியத்திற்குக் கொடுப்பதாக அறிவித்தபோது எம்.ஜி. ஆர் நெகிழ்ந்துபோனார். உடனடியாக ஒலிவாங்கிய கையில் எடுத்த எம்.ஜி.ஆர், "தமிழ் வாழ்க, தமிழர் வாழ்க, ஈழத் தமிழர் வெல்க" என்று உணர்ச்சிவசப்பட்டு முழங்கினார். அதே நாளில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் கோயில்கள் மற்றும் தேவாலய முன்றல்களில் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தியதுடன், யாழ்ப்பாணச் செயலகம் நோக்கி பாரிய பேரணியொன்றையும் நடத்தினார்கள். செயலகத்தில் ஜனாதிபதிக்கு அரச அதிபரூடாக மகஜர் ஒன்றினைக் கையளித்தார்கள். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாகக் கைதுசெய்யப்பட்டு அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு அம்மகஜர் கோரியது. போராட்டக்காரர்களிடமிருந்து அரச அதிபர் மகஜரைப் பெற்றுக்கொள்ளும்போது, செயலகத்தில் கூரையில் ஏறிய சில போராட்டக்காரர்கள் அதன்மீது புலிகளின் கொடியினை ஏற்றினார்கள். கே.பத்மநாபா இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், தமிழ்நாட்டிலும் உருவாகி வந்த தமிழ்த் தேசிய உண்ர்வு உலகெங்கிலும் வாழ்ந்துவந்த தமிழர்களையும் ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. புலம்பெயர்ந்து வாழ்ந்துவந்த தமிழ்ச் சமூகம் உடனடியாகச் செயலில் இறங்கியது. ஈழத்தமிழ்ரின் போராட்டத்திற்கு ஆதரவான செயற்பாடுகளும், கூட்டங்களும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளின் முக்கிய நகரங்களில் முன்னெடுக்கப்பட்டன. கூட்டங்கள், கலந்துரையாடல்கள், தீர்மானங்கள், பேரணிகள், பெட்டிசன்கள், நன்கொடைகள் என்று பல வழிகளில் போராட்டத்திற்கான பங்களிப்புக்களை புலம்பெயர்ந்த தமிழச் சமூகம் வழங்கத் தொடங்கியது. உலகம் முழுவதிலும் வாழ்ந்துவந்த தமிழ் மக்கள் ஈழப்போராட்டத்திற்கான தமது ஆதரவினை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்த நிலையில், ரஜீவ் காந்தியும், ஜெயவர்த்தனவும் தமது அரசிய சதுரங்கப் போட்டியில் மூழ்கிப்போயிருந்தனர். தில்லி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் ரஜீவ் ஈடுபடலானார். அதன்படி, திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளி அமைப்புக்களின் தலைவர்களையும் தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரினார். புளொட் மற்றும் கூட்டணியுடன் தொடர்புகொண்ட ரோ அதிகாரிகள் ரஜீவுடனான சந்திப்பிற்கு அவர்களை அழைத்தார்கள். ஆனால், பிரபாகரனையும், சிறீ சபாரட்ணத்தையும் அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. போராளி அமைப்புக்களில் பலமானவை என்று அப்போது கருதப்பட்ட புலிகள் மற்றும் டெலோ அமைப்புக்களின் தலைவர்கள் இன்றி தம்மால் ரஜீவுடன் பேச முடியாது என்று பாலகுமாரும், பத்மநாபாவும் ரோ அதிகாரிகளிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்தி போராளிகளுக்கான ஆதரவுத்தளத்தினை வியாப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் போராளிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர்கள் நாடுகடத்தப்பட்ட சம்பவம் கொழும்பில் மிகுந்த மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருந்தது. ஆவணி 24 ஆம் திகதி இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையினை வெகுவாகப் பாராட்டிய இராஜாங்க அமைச்சரும், அரசாங்கத்தின் பேச்சாளருமான ஆனந்த திஸ்ஸ தி அல்விஸ், "நடந்துவரும் சம்பவங்களால் நாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்திருக்கிறோம், இலங்கையில் சமாதானத்திற்கு ஊறுவிளைவிப்பவர்கள் யாரென்பதை இந்தியா இப்போது புரிந்துகொள்க்ள ஆரம்பித்திருக்கின்றது" என்று பூரிப்புடன் கூறினார். பாலசிங்கமும் ஏனையோரும் நாடுகடத்தப்பட்ட விடயம் கொழும்பில் பெருத்த மகிழ்வினை ஏற்படுத்திவிட்டிருந்தது. நாடுகடத்தல் விவகாரமே சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களிலு தலைப்புச் செய்தியாக தீட்டப்பட்டு பரப்புரை செய்யப்பட்டது. தமிழ்ப் போராளிகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஆப்பினைச் சொருகும் இலங்கை அரசின் கைங்கரியம் வெற்றிபெறத் தொடங்கியிருந்ததுடன் அதன் விருப்பின்படியே நிலைபெறவும் ஆரம்பித்திருந்தது. இதனால் மிகவும் உற்சாகமடைந்து காணப்பட்ட ஜெயார் அன்று பிற்பகல் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில், "சமாதானம் என்றால் நாமும் சமாதானத்திற்குத் தயார், போரென்றால், நாம் போருக்கும் தயார்தான்" என்று மிகுந்த அகம்பாவத்துடன் சூளுரைத்தார். திருக்கோயிலில் தமிழர்களைத் தொடர்ச்சியாக வேட்டையாடும் சிங்களத்தின் விசேட அதிரடிப்படை மிருகங்கள் அதன்படி அவர் போருக்கே தன்னையும் தனது அரசாங்கத்தையும் தயார்ப்படுத்தி வரலானார். இருநாட்களுக்குப் பின்னர், ஆவணி 26 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில், அம்பாறை மாவட்டத்தின் தமிழ்க் கிராமமான திருக்கோயிலுக்குள் பிரவேசித்த விசேட அதிரடிப்படையினர் கிராமத்தைச் சுற்றிவளைத்து, அங்கிருந்த 26 இளைஞர்களை இழுத்து வந்து சுட்டுக் கொன்றனர். பின்னர் தம்மால் கொல்லப்பட்டவர்கள் அனைவரையும் போராளிகள் என்று அரசாங்கம் அறிவித்தது. ஆனால், இப்படுகொலை குறித்து அறிக்கை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பு கொல்லப்பட்ட தமிழர்கள் அனைவரும் வயல்களில் வேலை செய்துகொண்டிருந்த அப்பாவிகள் என்று உறுதிப்படுத்தியிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கிய புலிகள் திருகோணமலை கடற்படை முகாமிற்கு அருகில் நடத்திய தாக்குதலில் ஆறு கடற்படையினரும் முகாமில் பணியாற்றிவந்த பெண் சிவிலியன் ஒருவரும் கொல்லப்பட்டனர். இலங்கையின் வடக்குக் கிழக்கிலும், தமிழ்நாட்டிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டன. போராளிகளுக்கான ஆதரவுத்தளம் வியாப்பித்து வளர ஆரம்பித்திருந்தது. ஆவணி 27 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பாலசிங்கத்தை மீளவும் சென்னைக்கு வரவழைக்க வேண்டுமென்று கோரியும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு வெலிக்கடைச் சிறைச் சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இளைஞர் யுவதிகளை விடுவிக்குமாறு கோரியும் சத்தியாக்கிரக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அவர்கள் இந்தியாவிடம் "பாலா அண்ணையை மீளவும் சென்னைக்குக் கொண்டுவாருங்கள்" என்கிற கோரிக்கையினை இந்தியாவிடமும், "தடுத்துவைக்கப்பட்டிருக்கும் எமது சகோதரர்களை விடுதலை செய் அல்லது நீதிமன்றில் நிறுத்து" என்று இலங்கை அரசையும் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது சத்தியாக்கிரக நிகழ்வினையடுத்து ஏழு நாள் பாதயாத்திரை நிகழ்வினையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்தனர். புரட்டாதி மாதத்தின் இறுத்திப்பகுதியில் ஆரம்பித்த பல்கலைக்கழக மாணவர்களின் பாத யாத்திரை யாழ்க்குடாநாட்டின் கிராமங்கள் அனைத்தினூடாகவும் வலம் வந்தது. இரவுவேளைகளை பிரதான கோயில்கள், ஆலயங்களில் களித்த அவர்கள் வீதி நாடகங்கள், வில்லுப்பாட்டு, கதாப்பிரசங்கம் மற்றும் பட்டி மன்றம் ஆகிய படைப்புகளையும் மக்கள் முன் நடத்தினார்கள். யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய கலை கலாசார நடைமுறைகளும், வழக்கங்களும் முழுமூச்சாக மக்களை விழிப்படைய வைப்பதில் ஈடுபடுத்தப்பட்டன. பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட பாத யாத்திரை தமிழ் மக்களை அரசிற்கெதிராகவும், அதன் கருவிகளான படைகளுக்கெதிராகவும் வெகுண்டெழ வைத்திருந்தது. ஒரு மாதகாலமாக தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்த உணர்வெழுச்சி நிகழ்வுகள் சமூகத்தின் அனைத்து அமைப்புக்களையும் வீதியில் முழுமூச்சுடன் செயற்பட வைத்திருந்தது. மாணவர்கள் பாடசாலைகளைப் பகிஷ்கரிக்க, அன்னையர் முன்னணியினர் அன்னையர் பேரணிகளில் முன்னின்று செயற்பட்டார்கள். மீனவர்கள், விவசாயிகள், வலைஞர்கள், ஆசிரியர்கள், வர்த்தகர்கள் மற்றும் வேலைவாய்ப்பின்றி இருந்தவர்கள் என்று அனைவருமே தம் பங்கிற்கு பேரணிகளை ஒருங்கிணைத்து நடத்தினர். போராளிகளுக்கு மக்கள் மத்தியில் இருந்துவந்த ஆதரவுத்தளம் ஆளமாகவும், விரிந்தும் வளர்ந்து வரலாயிற்று. தமிழ்த் தேசிய உணர்வு அனைவரிடத்திலும் தகன்றுகொண்டிருந்தது. இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றில் இதுவே மிகவும் முக்கியமான திருப்பம் என்று நான் நினைக்கின்றேன். அவர்கள் தம்மை தனியான தேசம் என்று எண்ணிச் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். இலங்கை நாட்டின் ஒரு அங்கமாக தாம் கருதப்படுவதை அவர்கள் முற்றாக வெறுத்தார்கள். தொடர்ச்சியாக அவர்கள் மீது நடத்தப்பட்டு வந்த செல்த் தாக்குதல்கள், தாழப்பறந்த விமானங்களில் இருந்து பொழியப்பட்ட குண்டுகள், மக்கள் வாழிடங்களைத் தகர்த்த குண்டுகள், இலக்குவைத்து அழிக்கப்பட்ட அவர்களின் வாழ்வாதாரம், படுகொலைகள் ஊடாக கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டமை ஆகிய அடகுமுறைகள் போன்றவை அவர்கள் தமக்கென்று தனியான தேசம் ஒன்று நிச்சயமாகத் தேவை எனும் மனோநிலைக்குத் தள்ளிவிட்டிருந்தன. சிங்களப் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் 40 வருடங்கள் பணியாற்றியவன் என்கிற வகையில், அவர்களுள் தமிழ் மக்கள் அன்று நடத்திய போராட்டங்களினதும் அவர்களின் மனோநிலையினதும் தீவிரத்தினை புரிந்துகொண்டவர் என்று ஒருவரை மட்டுமே என்னால் அடையாளம் காணமுடிந்திருந்தது. 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 15 ஆம் திகதி வெளிவந்த லங்கா கார்டியன் பத்திரிக்கையில் மேர்வின் சில்வா தனது ஆக்கத்தில் "நிகழ்வுகளின் போக்கும், கடிதங்களும்" என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையினை எழுதியிருந்தார். "விரிவடைந்து வரும் தளம்" எனும் பந்தியில் அவர் இவ்வாறு எழுதுகிறார், "வடக்கில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் புதிய குணாதிசயத்தினைக் கொண்டிருப்பதனை நாம் கவனத்தில் கொள்வது வசியமானது. உண்மையிலேயே இந்த குணாதிசயம் புதியதுதான் என்றால் அதுகுறித்து ஆரய்வதும், அது ஏற்படுத்தப்போகும் பாதிப்புக்கள் குறித்தும் நாம் சிந்திப்பதும் அவசியம்" என்று அவர் எழுதினார். ஆனால் ஏனைய சிங்களப் பத்திரிக்கையாளர்களோ அரசியல் அவதானிகளோ அவர் கூறுவதைச் சற்றும் சட்டைசெய்ய மறுத்திருந்தனர்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பழிவாங்க பாலசிங்கத்தை நாடுகடத்திய இந்தியாவும், நடுவானில் நாடகமாடிய சந்திரகாசனும் தலைவருடன் பாலா அண்ணா பாலசிங்கம் விடுத்த அறிவிப்பைச் சாட்டாக வைத்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் செயலில் இறங்கினார்கள். பாலசிங்கம் தனது மதிய உணவிற்காக தான் தங்கியிருந்த தொடர்மாடிக் குடியிருப்பிற்குத் திரும்பியிருந்தார். இச்சம்பவம் குறித்து தனது புத்தகத்தில் எழுதும் அடேல், "அன்று சென்னையில் வெய்யில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது. சோர்வு மிகுதியால் பாலா தூங்கச் சென்றுவிட்டார். தூக்கம் கலைந்து எழுந்து, குளித்துவிட்டு மீளவும் அலுவலகம் நோக்கிச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தவேளை திடீரென்று நாம் தங்கியிருந்த தொடர்மாடியை நான்கைந்து பொலீஸ் ஜீப் வண்டிகள் சுற்றிவளைத்துக் கொண்டன". "காக்கி சீருடையணிந்த பொலீஸார் எமது தொடர்மாடியிலிருந்து வெளியேறும் வழிகள் அனைத்தையும் அடைத்துக்கொண்டனர். பாலசிங்கத்திற்கு நன்கு பரீட்சயமான உயர் பொலீஸ் அதிகாரியான ஜம்போ குமார் முன்னே வர அவர் பின்னால் இன்னும் சில அதிகாரிகள் வந்து எமது தொடர்மாடியின் கதவைத் தட்டினர். பாலசிங்கம் கதவைத் திறந்தவுடன், அதிகாரி உங்களை நாடுகடத்தியிருக்கிறோம் என்று அறிவித்தார். நீங்கள் இங்கிலாந்துக் கடவுச் சீட்டினைக் கொண்டிருப்பதால் இங்கிலாந்து செல்லும் அடுத்த விமானத்தில் உங்களை ஏற்றி அனுப்பப் போகிறோம் என்று கூறிவிட்டு அவரை அவசர அவசரமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அவரை அவர்கள் இழுத்துச் சென்றபின்னர், நாம் ஆட்டோ ஒன்றில் ஏறி எமது அரசியல் அலுவலகத்திற்குச் சென்றோம். அங்கிருந்த மூத்த போராளிகளிடம் பாலாவின் நாடுகடத்தல் விடயத்தைக் கூறினேன். பிரபாகரன் அந்த நாட்களில் இலங்கையின் வட பகுதியில் அமைந்திருந்த புலிகளின் பயிற்சி முகாம் ஒன்றில் தங்கியிருந்தார். தன்னையும் இந்தியா பழிவாங்கக்கூடும் என்று அனுமானித்திருந்த பிரபாகரன் அப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு வருவதைத் தவிர்த்து வந்தார்". பாலசிங்கத்திற்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக புலிகளின் அரசியல் அலுவலகத்திலேயே அடேல் காத்திருந்தார். அவரை எங்கே அழைத்துச் சென்றார்கள் என்கிற தகவல்கள் எதனையும் இந்திய அதிகாரிகள் தனக்குத் தர மறுத்தமையினால் மரீனாவில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு அடேல் சென்றார். பாலசிங்கத்திற்கு ஒவ்வொரு நாளும் கொடுக்கப்பட வேண்டிய இன்சுலின் மருந்துபற்றி பொலீஸாரிடம் பேசினார் அடேல். இதனையடுத்து சென்னையின் இரகசியமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலசிங்கத்திடம் அடேலை பொலீஸார் அழைத்துச் சென்றனர். பாலசிங்கத்தை பொலீஸார் சித்திரவதை செய்யவில்லை, கண்ணியமாகவே நடத்தியிருந்தார்கள். ஆனால், அந்தக் கட்டிடத்தைச் சுற்றி நூற்றுக்கண்க்கான பொலீஸார் காவலுக்கு நின்றிருந்தனர். பாலசிங்கத்தை மீட்டெடுக்க புலிகள் அதிரடியான தாக்குதல் ஒன்றினை நடத்தலாம் என்கிற அச்சத்தினாலேயே பொலீஸாரைக் குவித்துவைக்கவேண்டியிருப்பதாக அதிகாரிகள் அடேலிடம் தெரிவித்திருக்கிறார்கள். மறுநாளான ஆவணி 24 ஆம் திகதி மாலை இலண்டன் நோக்கிச் செல்லும் விமானத்தில் பாலசிங்கத்தை ஏற்றி நாடுகடத்தியது இந்தியா. தான் விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் புலிகளின் அரசியல் அலுவலகத்திற்குச் செல்ல அனுமதி தருமாறு பாலசிங்கம் பொலீஸாரிடம் கேட்டார். அனுமதியும் வழங்கப்பட்டது. அலுவலகத்திலிருந்த மூத்த போராளிகளுடன் சிறிய கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார். தன்னை நாடுகடத்துவது பற்றி கலவரம் அடைய வேண்டாம் என்று போராளிகளிடம் கூறிய அவர், இந்தச் சம்பவத்தை மூலமாக வைத்து தமிழ்நாட்டிலும், இலங்கையின் வடக்குக் கிழக்கிலும் மக்களை ஒன்றிணையுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அடேலுடன் பேசும்போது, "சென்னையிலேயே தங்கியிருங்கள், இன்னும் சில வாரங்களில் திரும்பி வருவேன்" என்றும் கூறினார். டெலோ அமைப்புச் சார்பாக பேச்சுக்களில் ஜகலந்துகொண்ட நடேசன் சத்தியேந்திரா மற்றும் சந்திரகாசன் ஆகியோரும் நாடுகடத்தப்பட்டனர். இங்கிலாந்துக் கடவுச் சீட்டினை வைத்திருந்த சத்தியேந்திரா எதிர்ப்பெதுவும் இன்றி இன்னொரு விமானத்தில் ஏற்றி அனுப்பப்பட்டார். பின்னாட்களில் இந்திய விசுவாசியாக மாறிப்போன தந்தை செல்வாவின் புத்திரன் சந்திரகாசன் இலங்கைக் கடவுச் சீட்டினை வைத்திருந்தபோதிலும் அமெரிக்காவிற்கு எந்நேரமும் வந்துசெல்லும் அனுமதி சந்திரகாசனுக்கு வழங்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து பொம்பே செல்லும் விமானத்தில் அவரை பலவந்தமாக அதிகாரிகள் ஏற்றியனுப்பினர். பொம்பே நோக்கிச் செல்லும் விமானத்தில் பலவந்தமாக ஏற்றப்பட்ட சந்திரகாசன், அதிகாரிகளின் கடும்போக்கினைக் கண்டித்து விமானத்தினுள்ளேயே சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டார். எதனையும் கண்டுகொள்ளாத அதிகாரிகள் அவரை பலவந்தமாக இழுத்துச் சென்று நியு யோர்க் நோக்கிச் செல்லும் எயர் இந்தியா விமானத்தில் ஏற்றினார்கள். நியூ யோர்க் செல்லும் வழியில் அசாதாரணமான காலநிலையினால் பொஸ்ட்டன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியபோது, விமானத்திலிருந்து இறங்கமாட்டேன் என்று அவர் அடம்பிடித்தார். தன்னை மீளவும் சென்னைக்கே அழைத்துச் செல்லுமாறு பிடிவாதம் பிடித்த அவர், "நான் இந்தியாவிற்கு எதிராக எதனையும் செய்யவில்லையே? பிறகு ஏன் நாடு கடத்துகிறீர்கள்?" என்று கேட்டார். பொஸ்ட்டன் விமான நிலையத்தில் அவருடன் பேசிய இந்திய அதிகாரிகள், சில வாரங்களுக்கு அமெரிக்காவிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக்கொண்டதுடன், தாம் அவரை நிச்சயம் இந்தியாவிற்கு மீள அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார்கள். ஆனால், அவர் மசியவில்லை. பிடிவாதமாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு அடம்பிடித்தார். வேறு வழியின்றி ஆவணி 26 ஆம் திகதி இந்திய அதிகாரிகள் அவரை மீளவும் பொம்பே நோக்கி அழைத்துச் சென்றார்கள். பொம்பே விமான நிலையத்திலும் விமானத்தை விட்டுக் கீழிறங்க மறுத்த சந்திரகாசன் தன்னை சென்னைக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று மீண்டும் பிடிவாதம் பிடிக்கத் தொடங்கினார். நாடுகடத்தல் நாடகம் ஆரம்பித்து சரியாக மூன்று நாட்களின் பின்னர் சந்திரகாசன் மீளவும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்.
-
Trump rally shooting LIVE updates: Former US President injured after Pennsylvania shooting
கிட்டத்தட்ட டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. பைடினோ அல்லது டிரம்போ, எவர் வந்தாலும் எமது வாழ்வு மாறப்போவதில்லை. குடியரசுக் கட்சியின் ஜனாதிபதியாக ஜோர்ஜ் புஷ் வந்தபோதுதான் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்கிற பெயரில் விடுதலைக்காகப் போராடிய இனங்களின் போராட்டங்கள் நசுக்கப்பட்டன. அடக்குமுறையாளர்களுக்கு பணமும், ஆயுதங்களும், பயிற்சியும் புஷ்ஷினால் வழங்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி ஆட்சியில் இருந்தபோதுதான் 2009 முள்ளிவாய்க்கால் அரங்கேறியது, தடுத்திருக்க பலமும் அதிகாரமும் இருந்தபோதிலும் ஒபாமா அதனைச் செய்யவில்லை. எமது அவலங்களுடன், இழப்புக்களுடன் தமது நலன்களுக்கான வியாபாரத்தை ஜனநாயகக் கட்சி நடத்தி வருகிறது.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் மக்களின் அபிலாஷைகளை ஏறெடுத்தும் பார்க்கமறுத்த ஒப்பந்தங்களில் பத்தோடு பதினொன்றாவதாக சேர்க்கப்பட்ட ரஜீவ் காந்தியின் தில்லி ஒப்பந்தம் திம்புப் பேச்சுக்களில் கலந்துகொண்ட புலிகளின் உறுப்பினர் லோரன்ஸ் திலகருடன் பாலசிங்கம், தலைவர் பிரபாகரன் மற்றும் இந்தியாவின் டிக்ஷிட் தில்லியில் தொடர்ச்சிய ஒருவார காலம் கலந்துரையாடல்களில் ஈடுபட்ட இந்திய அதிகாரிகளும், இலங்கை அதிகாரிகளும் பேச்சுக்களுக்கான அடிப்படை ஆவணமாக ஒன்றைத் தயாரித்துக்கொண்டனர். அதற்கு "ஒப்பந்தத்திற்கான அடிப்படைகளை வரையறுத்துக்கொள்ளுதலும் அதனை புரிந்துக்கொளுவதற்குமான வரைபு" என்று பெயரிட்டனர். பின்னாட்களில் அதுவே தில்லி ஒப்பந்தம் என்று அழைக்கப்படலாயிற்று. மேலதிகப் பேச்சுக்களுக்கான ஆரம்ப ஆவணமாக இது அமையவேண்டும் என்று ரஜீவ் விரும்பியிருந்தமையினால் அதனை "தொடக்க ஆவணம்" என்று அவர் அழைத்தார். இந்த ஆவணத்தில் இலங்கை சார்பாக ஹெக்டர் ஜெயவர்த்தனவும் இந்தியா சார்பாக ரொமேஷ் பண்டாரியும் கைய்யெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் இருவரது கைய்யொப்பங்களும் இடப்படுவதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்திக்கொண்டனர். ஜெயாருடனான முன்னைய கசப்பான அனுபவங்களையடுத்தே இந்திய அதிகாரிகளை இதனைச் செய்தனர். முன்னர் அனெக்ஸ் சி (இணைப்பு சி) இயில் தான் கையொப்பம் இடவில்லை என்று அதிலிருந்து ஜெயார் தன்னை அந்நியப்படுத்தி நாடகமாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆனி 2 ஆம் திகதிய ஆவணம் எழுத்துவடிவில் இடம்பெறவில்லையென்பதாலும், அதில் தான் கையொப்பம் இடவில்லையென்பதாலும் அவ்விணக்கப்பாட்டினை தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆகவே, ஜெயாரின் சொந்தச் சகோதரரான ஹெக்டருடன் தாம் செய்துகொள்ளும் ஒப்பந்தத்தினைக் கூட ஜெயவர்த்தன மிக எளிதாக தட்டிக் கழித்துவிடலாம் என்று இந்திய அதிகாரிகள் ஓரளவிற்கு ஊகித்தே இருந்தனர். இணைப்பு சி இனை மேம்படுத்திய தீர்வாகவே தில்லி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருந்தது. மாகாண சபைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக தில்லி ஒப்பந்தம் பரிந்துரை செய்திருந்தது. மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க தில்லி ஒப்பந்தத்தில் ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று உருவாக்கப்பட்டு, தமிழரின் நலன்களைப் பாதிக்கும் எந்தச் சட்டமும் இக்குழுவின் ஒப்புதல் இன்றி நடைமுறைப்படுத்தப்படமுடியாது என்கிற சரத்தையும் அரசியல் யாப்பினூடாக இவ்வாலோசனைகளில் உள்ளடக்குவதென்றும் இவ்வொப்பந்தம் பரிந்துரை செய்தது. தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய மிக அடிப்படையான விடயங்களைக் கூட பூர்த்தி செய்ய தில்லி ஒப்பந்தம் தவறியிருந்தது. முதலாவதாக, தமிழரின் தயகக் கோரிக்கையான வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தில்லி ஒப்பந்தம் நிராகரித்திருந்தது. அரசியல் யாப்பு மாற்றங்களுக்கூடாகவன்றி, பாராளுமன்றத்திற்கூடாகவே மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று தில்லி ஒப்பந்தம் கூறியது. இதன்படி சிங்களக் கட்சிகள் மிகச் சிறிய பெரும்பான்மையினூடாக சட்டம் ஒன்றினை உருவாக்கி மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை எப்போது வேண்டுமானாலும் இரத்துச் செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. தேசிய கொள்கைகளை வகுக்கும் அதிகாரமும், கோட்பாடுகளை வழங்கும் அதிகாரமும் மத்திய அரசிடமே விடப்பட்டிருந்தது. சட்டம் ஒழுங்கினை பரவலாக்கம் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்த போதிலும், காவல்த்துறையினை மத்திய அரசின் கட்டுப்பாட்டிலேயே விடுவதென்று தில்லி ஒப்பந்தம் கூறியது. காணி மற்றும் குடியேற்றங்கள் தொடர்பான விடயங்கள் குறித்து இவ்வொப்பந்தம் எதனையும் குறிப்பிடவில்லை. மேலும் மாகாணங்களுக்கான ஆளுனருக்கும் முதலமைச்சருக்குமிடையினால தொடர்பாடல், நீதிமன்றங்கள் மற்றும் அவற்றின் கட்டமைப்புக்கள் குறித்தும் தெளிவான வரையறைகளை இவ்வொப்பந்தம் முன்வைக்கத் தவறியிருந்தது. தில்லியில் இந்திய இலங்கை அதிகாரிகளைடையே தீவிரமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்த வேளையில் சென்னையிலும் இலங்கையிலும் சில விடயங்கள் நடக்க ஆரம்பித்திருந்தன. ஆவணி 22 ஆம் திகதி திருகோணமலையில் இராணுவ ஜீப் ஒன்றின்மீது புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். மறுநாளான ஆவணி 23 ஆம் திகதி சென்னை அடையாறில் அமைந்திருந்த புலிகளின் அரசியல் அலுவலகத்தில் கூடியிருந்த பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அன்டன் பாலசிங்கம், " இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினைக் கடைப்பிடிக்கத் தவறி வருவதனால், எமது மக்களைக் காப்பதற்கான பதில்த் தாக்குதல்களில் நாம் இறங்குவதற்கான முழு உரிமையும் எமக்கு இருக்கிறது" என்று அறிவித்தார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்காக போராளிகளைப் பழிவாங்கிய ரஜீவ் காந்தி போராளிகளின் நிலைப்பாடு குறித்து இந்தியா கடுமையாக அதிருப்தியடைந்தது. குறிப்பாக பாலசிங்கத்தின் மீதே அதன் முழுக் கவனமும் திரும்பியிருந்தது. பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட தமிழர் தரப்பின் குழுவினருக்கும் சென்னையில் தங்கியிருந்த போராளிகளின் தலைவர்களுக்குமிடையிலும் தொடர்பாடலைப் பேணுவதற்கென்று இந்திய அரசால் செய்துகொடுக்கப்பட்டிருந்த நேரடித் தொலைபேசித் தொடர்பினை ரோ அதிகாரிகள் தொடர்ச்சியாக ஒட்டுக் கேட்டுவந்தனர். அதன் அடிப்படையில் பேச்சுக்களில் இருந்து விலகும் அழுத்தத்தினை பாலசிங்கமே தமிழர் தரப்புக் குழுவினருக்கு வழங்கினார் என்று ரோ அதிகாரிகள் ரொமேஷ் பணடாரியிடமும் ஏனைய அதிகாரிகளிடமும் தெரிவித்தனர். இந்தியாவின் சமரச முயற்சிகளை தோற்கடித்தவர் என்கிற பிரச்சாரம் பாலசிங்கம் மீது இந்தியர்களால் நிகழ்த்தப்பட்டது. சத்தியேந்திராவும் பண்டாரியுடன் திம்புப் பேச்சுக்களின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். சிறீசபாரட்ணத்தின் மீது செல்வாக்குச் செலுத்திவந்த சந்திரகாசனை அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ. ஏ யின் முகவர் என்றும் இந்திய அதிகாரிகள் சந்தேகித்து வந்தனர். அதுவரை ரோவின் செல்லப்பிள்ளையாக வலம்வந்துகொண்டிருந்த சிறீசபாரடணம் திடீரென்று அவர்களுக்கெதிராகப் பேச ஆரம்பித்திருந்தார்.ரோ அதிகாரிகளைப் பொறுத்தவரையில் சிறீசபாரடணம் தீவிர நிலைப்பாட்டை வரிந்துகொண்டவரைப் போல் தெரியத் தொடங்கினார். பிரபாகரனைப் போல அவரும் தலைமறைவு வாழ்க்கையினை வாழத் தொடங்கியிருந்தார். இதற்குச் சந்திரகாசனே காரணமாக இருக்கலாம் என்று ரோ அதிகாரிகள் நம்பத் தொடங்கினர். தமிழ்ப் போராளி அமைப்புக்கள் பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்தமைக்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியது. அதனடிப்படையில் பாலசிங்கம், அடேல் மற்று நடேசன் சத்தியேந்திரா ஆகிய மூவரையும் அது நாடுகடத்தியது. இவர்களை நாடு கடத்தும் முடிவினை தானே எடுத்ததாக இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி மத்திய கிழக்கிலிருந்து வெளிவரும் செய்தித்தாளான கல்ப் நியூஸிற்கு ஆவணி மாதத்தின் இறுதிப்பகுதியில் வழங்கிய செவ்வியில் வெளிப்படையாகக் கூறியிருந்தார். "அவர்கள் இந்தியர்களோ, இலங்கையர்களோ கிடையாது, அதனாலேயே அவர்களை நாடு கடத்தும் முடிவினை எடுத்தேன். அவர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்கள்" என்று ரஜீவ் விமர்சித்திருந்தார். இந்தியாவை விட்டு வெளியேறும் பாலசிங்கமும், அடேலும் இவர்கள் மூவருக்கு எதிராகவும் கடுமையான தண்டனைகளை வழங்கும் தருணத்திற்காக இந்திய அதிகாரிகள் காத்திருந்தார்கள். தமது எண்ணத்தை இந்திய மத்திய அரசும் நடைமுறைப்படுத்தவேண்டும் என்று அவ்வதிகாரிகள் எண்ணியிருந்தார்கள் என்றுஅடேல் தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கைகளை பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறிய நாளிலிருந்தே இந்திய அதிகாரிகள் திட்டமிட்டு வந்தது தமக்குத் தெரிந்தே இருந்தது என்றும் அவர் எழுதுகிறார். ஆவணி 23 ஆம் திகதி மதிய உணவு வேளையின்போது தம்மீதான பழிவாங்கல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தம்மை நாடுகடத்த இந்திய மத்திய அரசு முனையலாம் என்று பேசிக்கொண்டதாகவும், அன்றே இந்திய மத்திய அரசு தம்மை நாடுகடத்தும் உத்தரவினைப் பிறப்பித்தத்து என்றும் அவர் மேலும் குறிப்பிடுகிறார். பேச்சுக்களிலிருந்து தமிழர் தரப்பு வெளியேறியதையடுத்து திம்புவில் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்த இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக் குழுவினரை தில்லியில் வந்து தன்னைச் சந்திக்குமாறு ரஜீவ் காந்தி பணித்தார். கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் பேசிய ரஜீவ் காந்தி பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு இரு காரணங்களை முன்வைத்தார். அவர் முன்வைத்த முதலாவது காரணம், பேச்சுக்களுக்களை ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கான ஆரம்ப்பத் தீர்வு ஒன்றினை முன்வைக்க இலங்கையரசு தவறியமை என்று அவர் கூறினார். இரண்டாவது காரணமாக தமிழ் மக்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர்ச்சியான வன்முறைகளை அவர் குறிப்பிட்டார். ஆகவே, தான் குறிப்பிட்ட முதலாவது காரணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். மேலும், வருங்காலப் பேச்சுக்களுக்கு ஏற்ப நியாயமான அடிப்படைகளை முன்வைக்குமாறு இலங்கைப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜயவர்த்தனவிடம் அவர் கோரிக்கை முன்வைத்தார். திம்புவிலிருந்து தில்லிக்கு ஆவணி 23 ஆம் திகதி பயணமான ஹெக்டர் ஜயவர்த்தன, ஆவணி 30 வரை அங்கேயே தங்கியிருந்து ரஜீவ் காந்தியுடனும், ஏனைய இந்திய அதிகாரிகளுடனும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வந்தார். ஹெக்டருடனான தனது முதலாவது சந்திப்பில் பேசிய ரஜீவ், பங்களாதேசின் தலைநகரான டாக்கவிற்கான பயணத்தின்போது தன்னுடன் உடனிருந்த ஜெயார் ஜெயவர்த்தனவுடன் தான் பேசும்போது அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படை அலகாக மாகாண சபைகளை அவர் ஏற்றுக்கொள்வதாக தன்னிடம் உறுதியளித்திருந்ததைக் குறிப்பிட்டுப் பேசினார். "நாம் அந்தக் கலந்துரையாடல்களை எழுத்துவடிவில் ஒரு ஒப்பந்தமாகத் தயாரிக்க அப்போது விரும்பியிருக்கவில்லை. அது இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழருக்கும் இடையிலான பிரச்சினை என்பதால் நான் அது எழுத்துவடிவில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை" என்று ரஜீவ் கூறினார். தொடர்ந்து ஹெக்டருடன் பேசிய ரஜீவ், அடுத்த பேச்சுக்களுக்கான அடிப்படையாக மாகாணசபைகளை அதிகாரப் பரவலாக்க அலகாக முன்வைத்து ஆவணங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
-
சம்பந்தர் காலமானார்
இப்படியான நம்பிக்கையினை, கோட்பாட்டினைக் கொண்டவரா உங்களின் பெருந்தலைவர்?
-
சம்பந்தர் காலமானார்
2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது சுயநிர்ணய உரிமையினையும், தனிநாட்டையும் வலியுறுத்தியே உருவாக்கப்பட்டது. இலங்கையரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையினை வெகுவாக வரவேற்ற கூட்டமைப்பு, புலிகளைத் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றும் ஏற்றுக்கொண்டது. இன்னொருவகையில் சொல்லப்போனால் புலிகளின் ஆயுதபோராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயப்படுத்தல்களை செய்யும் அமைப்பாகவும் இயங்கியது. இதனாலேயே 2001 மார்கழி மற்றும் 2004 சித்திரை ஆகிய காலங்களில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முன்னரை விடவும் அதிகமான வாக்குகளை அக்கட்சியினால் பெற முடிந்தது. அதாவது புலிகளின் ஆசீர்வாதத்துடன் அரசியலில் ஈடுபட்டமையினால் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவினையும் இக்கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிந்தது. சம்பந்தரை ஆறு தடவைகள் தமிழ் மக்கள் தவறாது பாராளுமன்றம் அனுப்பி அழகுபார்த்தார்கள் என்று அகமகிழும் அவரின் ஆதரவாளர்கள் அவர் உண்மையிலேயே 8 - 9 தடவைகள் பாராளுமன்றத் தேர்தல்களில் பங்குபற்றியிருந்தார் என்பதையும், அவர் 2-3 தடவைகள் தோல்வியடைந்தார் என்பதனையும் சொல்லப்போவதில்லை. இதுகூட "Cherry Picking" என்று கடந்து சென்றுவிடலாம். அவ்வாறு அவர் தோற்ற மூன்று வருடங்களாவன 1989, 1994 மற்றும் 2000 ஆகும். இதில் விசேஷம் என்னவென்றால் 1989 தேர்தல் இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆயுதமுனையில் அதன் கூலிகளான டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய ஆயுத அமைப்புக்களுடன் இணைந்து சம்பந்தரின் கூட்டணியும் போட்டியிட்டிருந்தது. சம்பந்தர் இதுவரையில் போட்டியிட்ட தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பார்த்தால் 1977 இல் 15,144 வாக்குகள்(வெற்றி). 1989 இல் 6,048 வாக்குகள்(தோல்வி). 1994 இல் 19,525 வாக்குகள் (தோல்வி). 2000 தேர்தலில் தெரிவுசெய்யப்படவில்லை. 2001 தேர்தலில் 40,110 வாக்குகள் (வெற்றி). 2004 தேர்தலில் 47,735 வாக்குகள் (வெற்றி). 2010 தேர்தலில் 24,488 வாக்குகள் (வெற்றி). 2015 தேர்தலில் 33,834 வாக்குகள் (வெற்றி). 2020 தேர்தலில் 21,422 வாக்குகள் (வெற்றி). இவற்றுள் குறிப்பிடப்படவேண்டிய விடயம் யாதெனில் புலிகளுக்கு அனுசரணை வழங்கியும், அவர்களை ஏகபிரதிநிதிகள் என்று ஏற்றுக்கொண்டும் சம்பந்தர் அரசியல் நடத்திய 2001 (40,110) மற்றும் 2004(47,735) ஆகிய வருடங்களிலேயே அவரது அரசியல் சரித்திரத்தில் அதிகமான வாக்குகளைத் தமிழர்கள் அளித்தார்கள் என்பது. ஆக, பெருந்தலைவர் சம்பந்தனுக்கு புலிகளின் ஆசீர்வாதத்தினாலேயே இந்த அதிகரித்த வாக்குகள் கிடைத்தன. இதனை இல்லையென்றும், சம்பந்தனின் மேல் தமிழ் மக்கள் கொண்ட ஒப்பற்ற அன்பினாலேயே அவ்வருடங்களில் அவ்வாறு வாக்களித்தார்கள் என்றும் அவரது புகழ்பாடிகள் சொல்லக்கூடும். அவர்களைத் தவறென்று நிறுவுவதில் எனது நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. அப்படிப் புகழ்பாடி இன்புறுவது அவர்களின் விருப்பம். புலிகளின் அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்த சம்பந்தன், போர் முடிவுற்று பல வருடங்களுக்குப் பின்னர் வழங்கிய அறிக்கையொன்றில் "புலிகளை அழித்துவிட்டு தீர்வு தருவோம் என்று எமக்கு வாக்குறுதியளித்தார்கள். அதனாலேயே அது நடக்கும்வரை பேசாதிருந்தோம்" என்று கூறியிருந்தார். புலிகளை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டு , அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ரீதியிலான நியாயத்தன்மையினை அதுவரை வழங்கிவந்த சம்பந்தன் இறுதிப்போரின்போது பேசாமல் இருந்தது ஏன்? தமிழ் அரசியல்த் தலைவர்களில் மிகவும் அனுபவமும், முதிர்ச்சியும் வாய்ந்தவராக அன்று காணப்பட்ட அவர், மக்களை இணைத்துக்கொண்டு யுத்தத்தினை நிறுத்து என்று இலங்கையரசையும், இந்தியாவையும், சர்வதேசத்தையும் நோக்கிக் கூக்குரல் இட்டிருக்க வேண்டுமா இல்லையா? அவரும் அவரது கட்சியும் செய்யும் அரசியல் மக்களுக்கானதென்றால் 2009 இல் மக்களை இலங்கையரசு பலியிட்டு வருகையில் அதுகுறித்துப் பேசவேண்டியது அம்மக்களின் அரசியல்த் தலைவரின் கடமையல்லவா? தந்தை செல்வா, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய மூத்த அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தமிழரின் ஆரம்ப கால அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவரான சம்பந்தனுக்கு இலங்கையரசும், இந்திய அரசும் ஈழத்தமிழர் நலன் தொடர்பாக எவ்வாறான கொள்கைகளைக் கொண்டிருந்தன என்பது தெரியாமல் இருந்திருக்கும் என்பது நம்பக்கூடியதா? அப்படியானால், புலிகளை முற்றாக அழித்துவிட்டு அரசியல்த் தீர்வினை தங்கத் தட்டில் வைத்துத் தருவோம் என்று அவர்கள் கூறியபோது எப்படி நம்பினார்? இறுதிநாட்களில் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்பொழுது அம்மக்களினதும், போராளிகளினதும் அரசியல் முகமாக இருந்த கூட்டமைப்பு செய்தது என்ன? தொலைபேசிகளை அணைத்துவைத்துவிட்டு தமிழ்நாட்டில் சென்று தஞ்சம் புகவேண்டிய தேவையென்ன சம்பந்தனுக்கு? 1987 இல் இந்திய ஆக்கிரமிப்புப் படை ஈழத்தில் நரவேட்டையாடிக்கொண்டிருந்தவேளை அமிர்தலிங்கம் தலைமையிலான கூட்டணியினர் தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்துகொண்டு இந்திய ஆக்கிரமிப்பை ஆதரித்தமையினை விடவும் சம்பந்தனும் அவரது கட்சியினரும் செய்தது கோழைத்தனமானதா இல்லையா? தனது மக்கள் கொல்லப்பட்டிருக்கும்போது, சாகட்டும், புலிகள் அழிந்தால்ச் சரி, மீதமிருப்போருக்குத் தீர்வை வாங்கிக் கொடுக்கலாம் என்று சம்பந்தர் இருந்தமை சரியானதா? 2001 இல் சுயநிர்ணய உரிமை, தனிநாடு, ஏகபிரதிநிதித்துவம் என்று கர்ஜித்த சம்பந்தன் 2009 களில் புலிகள் அழியட்டும், மீதியைப் பின்னர் பார்க்கலாம் என்றும், 2009 இற்குப் பின்னர் ஒன்றுபட்ட இலங்கை, பிரிக்கப்பட முடியாத இலங்கை, இலங்கையர்களாக அடையாளம் காணுவோம், எமக்குள் தமிழர் சிங்களவர் என்று பிரிவு வேண்டாம் என்றும் கூறத் தலைப்பட்டது எங்கணம்? ஆக, தமிழரின் நலன்கள் தொடர்பான சம்பந்தரின் அக்கறையென்பது தன்னெழுச்சியானால் வந்தது அல்லவென்பதும், புலிகளின் இருப்பினாலேயே அவர் செயற்கையாக அதனை வரிந்துகொண்டிருந்தார் என்பதும் நிரூபணமாகிறது அல்லவா? சமத்துவம், சம பங்கு, ஐம்பதிற்கு ஐம்பது என்று ஆரம்பித்து பின்னர் சமரச அரசியலாகவும், இறுதியில் சரணாகதி அரசியலாகவும் சம்பந்தனின் அரசியல் ஆனதேன்? இவர்தான் தமிழர்களின் பெருந்தலைவரா??? நம்பீட்டம்!!! நேரத்திற்கொருமுறை வேஷம் கலைக்கும் சிலருக்கு ஆரம்பத்தில் புலிகள் தமிழர்களின் காவலர்களாகவும், பின்னர் தமிழர்களை அழித்தவர்களில் அவர்களே முதன்மையானவர்களாகவும் தெரிவதில் வியப்பில்லை. அவர்கள் அப்படிச் செய்யாதுவிட்டால்த்தான் வியக்கவேண்டும், ஆகவே கடந்து சென்றுவிடலாம்.
-
யாழில் நிர்க்கதியாய் விடப்பட்ட சம்பந்தனின் உடல்! சுமந்திரனின் பிடிவாதத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம்
Sampanthan indirectly implicates India, US, EU, UK, Japan, Norway for Tamil predicament post-2009 [TamilNet, Friday, 10 January 2020, 23:10 GMT] Despite all the valid criticisms against the revisionist TNA hierarchy, which has misled the occupied nation of Eezham Tamils by deviating from the fundamentals of the democratically mandated aspiration after 2009, one should appreciate TNA Parliamentary Group Leader R. Sampanthan for strait-forwardly reiterating, especially in recent times, the names of the regional and international formations ultimately responsible to crush the Liberation Tigers of Tamil Eelam (LTTE). The countries and the alliances mentioned by Mr Sampanthan include India, USA, Japan, Norway and the European Union with the UK. Sampanthan refers to the block of countries excluding India as the “international community”, and these countries were formally represented by identifiable individuals who served the formation of Tokyo Co-Chair Donors. A troika of diplomats was representing India at the height of the war. HANSARD, House of Commons Debates, 08 January 2020, pp 183-186 Sampanthan has also named two of the Indian trio by name, “Mr M.K. Narayanan, the then National Security Adviser of India, Mr Shivshankar Menon, the then Foreign Secretary and India’s Defence Secretary.” The third person Mr Sampanthan didn't mention was India's Defence Secretary at that time, Mr Vijay Singh. “The military defeat of the LTTE was seen as a precursor to a reasonable political solution,” by Sri Lanka and India, Mr Sampanthan said. Colombo government under the leadership of Mahinda Rajapaksa had made commitments to “India and other members of the international community, including the Co-Chairs, in regard to a political solution,” Mr Sampanthan told the SL Parliament on Wednesday. The Island paper carried the text of the speech made by Mr R. Sampanthan at the SL Parliament on Wednesday. The statement is yet to appear in the online Hansard. “The military defeat of the LTTE is also substantially attributable to the assistance of both India and the international community to achieve that objective,” Sampanthan said. “The said commitments need to be honoured. They cannot be reneged upon. If the commitments made to the international community are not implemented – these are all a matter of record that cannot be disputed – it would mean that the international community was used to obtain the necessary assistance to defeat the LTTE militarily, but the commitments made to the international community are now being reneged upon,” Mr Sampanthan added. Mr Sampanthan was wisely putting the names of the countries, formations and even some Indian individuals that pulled strings on behalf of the outside Establishments at a time when the peace process was formally in force. The Rajapaksa siblings have also revealed the same facts in the past. The role of the external powers during the peace process was partly assessed by the 2011 evaluation of the Norwegian peace process conducted by two academic institutions in Norway and the UK. The evaluation of the Norwegian-led peace process concluded that Norway was not only facilitating, but it was playing the role of a mediator in practice. Since the mediator failed to withdraw from the process by 2006, it could be held responsible for the consequences of the discourse, hinted the evaluation. The Permanent Peoples’ Tribunal (PPT) in Dublin in 2010 and Bremen in 2013 has dealt with the issue in more detail. The judges of the PPT noted that the USA’s military-to-military relationship with Sri Lanka enhanced the capacity of the latter to commit genocide. However, the Tribunal wished to postpone deliberations on India's role in the genocide pending submission of potential evidence. The US role was exposed through WikiLeaks and Hillary Clinton emails released to the public domain in 2015. One email has revealed the role of diplomats associated with the IMF and the World Bank. Also, the UN was abetting the genocide. The UN Secretary-General was watering down the criticism through instructing a review of the process in 2012. The assessment was known as Petrie Report and paved the way for the Human Rights up Front (HRUF) which was created based on the UN failure on its Responsibility to Protect and for the subsequent launch of 2014 OHCHR Investigation on Sri Lanka (OISL). At the same time, the powers that abetted Colombo's genocidal war were waging war on Tamil diaspora as well as coercing sections of Tamil diaspora and the TNA through the so-called Singapore Principles roadmap in 2013. However, the octogenarian TNA leader addressing the SL Parliament on Wednesday was reiterating his “commitment” to a “united, undivided, indivisible Sri Lanka”. In doing so, he was violating the principles of Tamils Right of Self-Determination. Mr Sampanthan said that the Tamil people had decided “at every election held since 1988 that they will work for sharing of powers of governance within the framework of a united, undivided, indivisible Sri Lanka”. The above statement is total fallacy. The last ever democratic election where Tamils had the freedom to articulate their aspiration without any prohibition was in 1977. In that election, the majority of Tamil speaking peoples gave their democratic mandate for Vaddukkoaddai Resolution. In 1983, the SL State unilaterally imposed the 6th Amendment to the SL Constitution which said “[n]o person shall, directly or indirectly, in or outside Sri Lanka, support, espouse, promote, finance, encourage or advocate the establishment of a separate State within the territory of Sri Lanka.” Tamil parliamentarians elected on 1977 mandate could not take the oath imposed under the Sixth Amendment, and they were forced to drop out of the SL Parliament en masse. Since then there was no freedom of expression to articulate the real Tamil aspiration in the election manifesto of any party and the ‘new mandate’ that Mr Sampanthan talks about is illogical and has nothing to do with the Tamil aspiration. Another problem with Mr Sampanthan's speech was his inability to accuse or pass the responsibility to the external actors to whom he was listening from the run-up to the genocidal onslaught in 2009 and after, especially since the 2013 Singapore principles. However, Sampanthan was right when he observed the following: “The Constitution of a country is the primary and supreme law of the country. In many instances in many countries which are pluralistic in character, Constitutions have been framed on the basis of a consensus amongst the different peoples to accommodate such pluralism. Such accommodation has united distinct peoples with distinct identities, who, while preserving their distinct identities, have constituted a single nation within one country. The Policy Statement enunciated by the President envisages the adoption of a new Constitution. No Constitution has thus far been framed in this country on the basis of such national consensus.” The TNA hierarchy committed a big blunder when it went for the “united, undivided and indivisible” Sri Lanka, before such a constitution was made possible. The unwarranted act amounts to the self-denial of the Right of Self-Determination.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்கள் திம்புப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கான காரணங்களாக நான்கு விடயங்களை பாலசிங்கம் தனது புத்தகமான போரும் சமாதானமும் என்பதில் குறிப்பிட்டிருக்கிறார். முதலாவது காரணம் இந்திய வெளியுறவுச் செயலாளரான ரொமேஷ் பண்டாரி. "இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினை குறித்த அடிப்படை அறிவினை அவர் கொண்டிருக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்கள தேசங்கள் இரண்டிலும் நிலவிவரும் வேறுபட்ட நிலைப்பாடுகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ளும் அறிவும் அவரிடம் இருக்கவில்லை. சிக்கலானதும் , கடிணமானதுமான இனச்சிக்கலுக்கு உடனடியான இலகுத் தீர்வுகளை வழங்கமுடியும் என்று அவர் பொறுப்பற்ற விதத்தில் அழுத்தங்களைப் பிரயோகித்து வந்தார்" என்று பாலசிங்கம் கூறுகிறார். பண்டாரி தொடர்பான தொண்டைமானின் அவதானிப்பும் இதனையே கூறியிருந்தது. நான் முன்னர் கூறியதுபோல, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை குறித்து ரொமேஷ் பண்டாரிக்கு அடிப்படை அறிவெதுவும் கிடையாது என்று தொண்டைமான் என்னிடம் ஒருதடவை கூறியிருந்தார். பேச்சுக்களின் தோல்விக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது இந்திய உளவுத்துறையும், அதிகாரிகளும் ஆகும். தமிழ்ப் போராளிகளுடனான அவர்களின் தொடர்பாடல்களின்போது ஆண்டான் - அடிமை மனநிலையே அவர்களிடம் காணப்பட்டது. "நாம் சொல்வதன்படி கேட்டு நடவுங்கள், அல்லது இந்தியாவிலிருந்து வெளியேறுங்கள்" என்பதே அவர்களின் எச்சரிக்கையாக இருந்து வந்தது. அவர்கள் வெளிப்படையாகவே இந்திய நலன்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்ததை தமது செயற்பாடுகளில் காட்டிவந்தார்கள் . தமிழர்களின் நலன்கள் குறித்த சிறிதளவு கரிசணையும் அவர்களிடத்தில் இருக்கவில்லை. மூன்றாவது காரணம் இலங்கை அரசாங்கம் நடந்துகொண்ட முறை. பேச்சுவார்த்தையில் ஜெயவர்த்தன கலந்துகொண்டதன் ஒற்றை நோக்கமே தான் சமாதானத்தில் நாட்டம் கொண்டிருக்கிறேன், ஆனால் தமிழர்கள்தான் விட்டுக்கொடுப்பின்றிப் பிடிவாதம் பிடிக்கிறார்கள் என்று உலகிற்கும், இந்தியாவிற்கும் காட்டுவதுதான். பேச்சுவார்த்தைக்காக தான் தேர்ந்தெடுத்த சிங்களப் பிரதிநிதிகள், அப்பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் காட்டிய கடும்போக்கு, பேச்சுவார்த்தையில் அவர்கள் முன்வைத்த தீர்வு ஆகியன சர்வதேச சமூகத்தினை ஏமாற்றி தமிழர்கள் மீது இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிட ஏதுவான களநிலையினை உருவாக்கிக் கொள்வதற்காக அவர் ஏற்படுத்திய நாடகம் என்றால் அது மிகையில்லை. இவற்றுள் மிகவும் முக்கியமான காரணி என்னவெனில் தமிழீழ விடுதலைப் போராளிகள் தமக்கென்று தனியான இலட்சியம் ஒன்றினைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், அவ்விலட்சியத்தில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பதனையும் இந்தியாவும், இலங்கையும் உணரத் தவறியமைதான். தனது தேசிய நலன்களுக்காக பேச்சுவார்த்தையினையும், போராளிகளையும் இந்தியா பாவிக்க விரும்பியது. இந்தியாவிற்கும் தமிழ்ப் போராளிகளுக்கும் இடையில் பகைமையினை உருவாக்கி, அதன்மூலம் தமிழர்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கிவிட இப்பேச்சுவார்த்தை நாடகத்தை இலங்கையரசு பாவிக்க விரும்பியது. பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த போதிலும், தமிழீழ விடுதலைப் போராட்டச் சரித்திரத்தில் அது முக்கியமான திருப்புமுனையாக மாறியது. முதன்முறையாக இந்தியாவும், இலங்கையும் தமிழீழ மக்களின் அரசியல்த் தலைமைத்துவம் ஜனநாயக அரசியல்வாதிகளிடமிருந்து போராளித் தலைமைகளுக்கு மாறியிருப்பதை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டிருந்தன. மேலும், ஆயுதப் போராட்டத்தினையும் மறைமுகமாக அவை ஏற்றுக்கொண்டிருந்தன. இந்த அங்கீகாரத்தின் மூலம் சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்திற்கான நியாயத்தன்மை உருவாக வழியேற்படுத்தப்பட்டிருந்தது. அடுத்ததாக, திம்புப் பேச்சுக்களின் ஊடாக, தமிழீழத்திற்கு மாற்றான தீர்விற்கான அடிப்படைகள் 1976 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைப் பிரகடணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இறுதியாக, தமிழ் மக்களின் எந்தத் தீர்விலும் பிரபாகரனே தீர்மானிக்கும் சக்தியாக இருப்பார் என்கிற நிலையினையும் இப்பேசுவார்த்தைகள் ஏற்படுத்தியிருந்தன.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதன் காரணத்தை மக்களுக்கு விளக்கிய தலைவர் பிரபாகரன் தலைவர் பிரபாகரன் - 1987 தீர்வொன்று நோக்கிப் பயணிக்கலாம் என்கிற நம்பிக்கையினை தந்த திம்புப் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியைத் தழுவியிருந்தன. எதிர்பார்த்தது போலவே ஜெயவர்த்தன அரசாங்கம் கடுமையான பிரச்சாரத்தில் இறங்கியது. பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கான முழுப்பொறுப்பினையும் தமிழ்ப் போராளிகளின் மீது அது சுமத்தியது. தமிழர்களை உறுதியற்றவர்கள், விட்டுக் கொடுக்காதவர்கள் என்று அது குற்றஞ்சுமத்தியது. பேச்சுக்கள் தோல்வியடைந்தமையினால், தனக்கு முன்னால் இருக்கும் ஒரே தெரிவு இராணுவ முறையில் தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதுதான் என்று அது கொக்கரித்தது. இதனையடுத்து, அதுலத் முதிலியினால் "பயங்கரவாதிகளின் இடங்கள்" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழர்களின் எல்லையோரக் கிராமங்களில் இருந்து தமிழர்களை முற்றாகத் துடைத்தழிக்கும் செயற்பாடுகளில் இராணுவம் இறங்கியது. இலங்கையரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மிகவும் தீர்க்கமான பதிலை பிரபாகரன் வழங்கினார். பேச்சுவார்த்தைகளில் இருந்து தாம் வெளிநடப்புச் செய்ததன் காரணத்தை விளக்கி தமிழில் அறிக்கையொன்றினை அவர் வெளியிட்டார். அவரது அறிக்கை வருமாறு. "இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக இதயசுத்தியுடன் முயன்ற இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் முயற்சிகளுக்குத் தடையாக இருக்கக் கூடாது எனும் நோக்கத்திற்காக மட்டுமே திம்புப் பேச்சுக்களில் ஈடுபடுவது என்று நாம் முடிவெடுத்தோம். ஆனாலும், அவரின் அந்த முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்பதனை நாம் அறிந்தே இருந்தோம். ஏனென்றால், சர்வாதிகாரத்தனமும், அடக்குமுறையும் கொண்ட ஜெயவர்த்தனவின் அரசாங்கம் ஒருபோதுமே சமாதானத்தில் அக்கறை காட்டப்போவதில்லை என்பது எமக்கு நன்கு தெரிந்தே இருந்தது. ஆனாலும், யுத்தநிறுத்தத்தைக் கடைப்பிடித்து பேச்சுவார்த்தைகளில் பங்கெடுப்பது என்று நாம் முடிவெடுத்தோம். தமிழ் மக்கள் மீதான ஜெயவர்த்தன அரசாங்கத்தின் அடக்குமுறையினையும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியானதும் நேர்மையானதுமான தீர்வொன்றினை வழங்குவதில் அவருக்கு இருக்கும் வெறுப்பினையும் உலகிற்கும், இந்தியாவிற்கும் எடுத்துக்காட்டுவதற்கான ஒரு சந்தர்ப்பமாக இப்பேச்சுவார்த்தையினைப் பயன்படுத்துவது என்று நாம் தீர்மானித்தோம். நாம் எதிர்பார்த்தவாறே, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக எந்தவித அடிப்படைகளையும் முன்வைக்க ஜெயவர்த்தன அரசாங்கம் தவறியிருந்தது. விடுதலைப் போராட்ட வீரர்களான எம்மை சமாதானப் பொறிக்குள் வீழ்த்துவதன் மூலம் அடிமைகளாக்குவதே ஜெயவர்த்தனவின் திட்டம். தமிழ்ப் புலிகளான நாங்கள் ஜெயாரின் வலைக்குள் வீழ்ந்திடப்போவதில்லை. தான் ஆடும் சமாதான நாடகத்தின் மூலம் தமிழர்கள் மீது தான் கட்டவிழ்த்து விட்டிருக்கும் இனக்கொலையினை இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் கவனத்திலிருந்து மறைத்துவிட இலங்கை முயல்கிறது. சிங்கள இனவெறியர்களின் அழிவுத் திட்டத்தை இந்தியா உணர்ந்துகொள்ளுமா என்று நாங்கள் ஆதங்கப்படுகிறோம். முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்தி, ஜெயாரின் கபடத் தனத்தையும், ஏமாற்றல் முயற்சிகளையும் நன்கு அறிந்தே இருந்தார். புதிய பிரதமரான ரஜீவ் காந்தி சமாதானத்தை விரும்புகிறார். தமிழ் மக்களின் நலனில் அவர் தனியான அக்கறை கொண்டுள்ளார். தமிழ் மக்கள் கெளரவமாகவும், பாதுகாப்புடனும் வாழ்வேண்டும் என்று அவர் விரும்புகின்றார். ரஜீவின் விருப்பங்களை தான் ஆதரிப்பதாக இலங்கை அரசாங்கம் பாசாங்கம் செய்கிறது. இந்தியாவிற்கும், தமிழீழ விடுதலை அமைப்புக்களுக்கும் இடையே பகைமையினை உருவாக்க அது முயன்று வருகிறது. இலங்கையின் சூழ்ச்சியை இந்தியா விரைவில் புரிந்துகொள்ளும் என்று நாம் நம்புகிறோம். சுதந்திரத் தமிழீழமே எமது ஒற்றை விருப்பாகும். அதனை எவராலும் அசைக்க முடியாது. அவ்விருப்பினை அடைவதற்காக எமது உயிரையும் விலையாகக் கொடுத்துப் போராடி வருகிறோம். தமிழ் ஈழத்தைத் தவிர வேறு எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். உலகில் ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு தனது ஆதரவினை வழங்கிவரும் இந்திய நாடு, தமிழீழ மக்களினது விடுதலைப் போராட்டத்திற்கும் தனது ஆதரவினை வழங்கவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எமது போராட்டத்திற்கு தமது கரங்களை நீட்டி உதவுவதற்கு இந்திய மக்களுக்குச் சற்றுக் காலம் எடுக்கலாம். அதுவரை அதற்கான ஆதரவு வேண்டி நாம் போராடிக்கொண்டிருப்போம்".
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பேச்சுவார்த்தை மேசையிலிருந்து வெளியேறிய தமிழ் தரப்பும், இந்திய அதிகாரிகளின் கெஞ்சலுக்கு மசிந்த வரதராஜப் பெருமாளும் தமிழர் தரப்பு அறிக்கையின் இறுதிப்பகுதி அந்த நேரத்தின் இலங்கையிலும், சென்னையிலும் நடந்துவரும் விடயங்கள் குறித்தே பேச விழைந்திருந்தது என்பது வெளிப்படை. ஆவணி 17 ஆம் நாள் காலையில் வவுனியாவிலும், திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருந்தது. திருகோணமலையில் தமிழ்க் கிராமங்களுக்குள் புகுந்த ஆயிரக்கணக்கான சிங்கள இராணுவமும், சிங்கள ஊர்காவல்ப் படையினரும் அங்கிருந்த தமிழ் இளைஞர்களை வீடுகளுக்குள் இருந்து இழுத்துவந்து வரிசைகளில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றனர். அன்று நாள் முழுதும் நடைபெற்ற படுகொலைகள் ஆவணி 18 காலை, கொலையாளிகள் தமிழ்க் கிராமங்களை விட்டகன்றபோதே முடிவிற்கு வந்தன. சென்னையில் தமிழ்ப் போராளிகளின் தலைவர்கள் தீவிரமான ஆலோசனைகள் ஈடுபட்டிருந்தனர். பிரபாகரன் மிகுந்த சினத்துடன் காணப்பட்டார். மற்றையவர்களும் அப்படித்தான். தமிழ் மக்களை இனவழிப்புச் செய்யும் தனது திட்டத்தினை மறைக்கவே திம்புவில் ஜெயவர்த்தன பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரபாகரன் தெரிவித்தார். அதனால், ஜெயவர்த்தனவின் சதித்திட்டத்தினை உலகறியச் செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஆகவே, உலகளவில் பேசப்பட்டு வந்த திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எனும் முடிவினை அவர்கள் எடுத்தனர். அவசரகால சூழ்நிலைமை நிலவியபோதிலும் பிரபாகரன் நிதானத்துடன் காணப்பட்டார். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் பேச்சுக்களில் புளொட் அமைப்பும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும் கலந்துகொள்ள விரும்புகின்றனவா என்பதை அறிந்துவருமாறு பாலசிங்கம் பணிக்கப்பட்டார். அவர்களும் ஆலோசனைகளில் கலந்துகொள்ள இணங்கினர். அதன் பின்னர், தமிழ் நாட்டில் இயங்கிவந்த பயிற்சி முகாம்களை இந்திய அரசு நிறுத்திவுடுமா என்பதை அறிந்துகொள்ளுமாறு பாலசிங்கத்தைப் பிரபாகரன் பணித்தார். ஆனால், முகாம்களை மூடிவிடப்போவதில்லை என்றி ரோ உறுதியளித்தது. அதன்பின்னர் பேச்சுக்களில் ஈடுபட்டு வந்த தமிழ்த் தரப்பை பேச்சுக்களில் இருந்து வெளியேறுமாறு நேரடித் தொலைபேசி அழைப்பினூடாக சென்னையிலிருந்த போராளிகளின் தலைமைகள் பணித்தன. பிரபாகரனின் பணிப்பின் பேரில் திலகருடன் பேசிய பாலசிங்கம், புளொட் அமைப்பே வெளிநடப்பினை முதலில் செய்யும் என்றும் கூறியிருந்தார். திம்புவில் தமிழ்த் தரப்புடன் பேசிய ஹெக்டர் ஜயவர்த்தன, தமது தரப்பால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகள் பேச்சுக்களுக்கான அடிப்படையாக இருக்கும் என்றும், அதனைத் அதிகாரத் தீர்வுப் பொதியாக தமிழர்தரப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறினார். ஆனால், பேச்சுக்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் ஆரம்பித்தவேளை சூழ்நிலை முற்றாக மாறிப்போயிருந்தது. வவுனியாவில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலும் அதனைத் தொடர்ந்து தமிழமக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களும் பி.பி.சி செய்திச் சேவையில் ஒலிபரப்பாகியபோது தமிழர் தரப்பு கொதிப்படைந்தது. பதற்றமாகி வந்த சூழ்நிலையினைத் தணிப்பதற்கு ஹெக்டர் ஜயவர்த்தன முயன்றார். அரசாங்கத்தால் பரப்பப்பட்ட செய்தியான "வவுனியாவில் குண்டுத் தாக்குதல், பத்தொன்பது பொதுமக்கள் பலி" என்று அச்செய்தியை அவர் வாசித்துக் காட்டினார். மேலும், பொதுமக்களை இராணுவத்தினரே சுட்டுக் கொன்றதாக பரப்பட்டுவருவது திட்டமிட்ட சதி என்றும் அவர் வாதாடினார். ஆனால், பேச்சுக்களில் புளொட் அமைப்புச் சார்பாகக் கலந்துகொண்டிருந்த வாசுதேவா, வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவத்தினரின் தாக்குதல்களில் அதுவரை 250 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதன்பின்னர் தனது அறிக்கையினை அவர் படித்தார், ஆவணி 16 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் முன்வைத்த புதிய ஆலோசனைகளுக்கு நாம் அளித்த பதில் அறிக்கையில் குறித்த விடயம் ஒன்று தொடர்பாக பிறிதொரு அறிக்கையில் விளக்குவோம் என்று கூறியிருந்தோம். அதன்படி அவ்விடயம் குறித்து இங்கே விளக்கவுள்ளோம் என்று அவர் கூறினார். நாம் முன்னர் இங்கு குறிப்பிட்டதுபோல், இலங்கையரசாங்கம் தமிழர்கள் மீது திட்டமிட்ட வகையில் இனக்கொலை ஒன்றினை நடத்திவருகிறது என்பதை கடந்த சில நாட்களாக தமிழர் தாயகத்தில் நிகழ்த்தப்பட்டுவரும் படுகொலைகள் உறுதிப்படுத்துகின்றன. வவுனியாவிலும், ஏனைய இடங்களிலும், தமிழர் என்கின்ற காரணத்தினால் அப்பாவிகளான சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் , வயோதிபர்கள் என்று இருநூற்றிற்கும் அதிகமான தமிழர்களை இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களில் படுகொலை செய்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு அவர்களின் தாயகத்திலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ முடியாத சூழ்நிலை நிலவும் நிலையில் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபடுவது கேலிக்குரியதாகும். பேச்சுக்களில் இருந்து வெளியேறுவது எமது விருப்பாக இல்லாத போதும். இப்பேச்சுக்களுக்கான அடிப்படையான யுத்தநிறுத்தத்தினை உதாசீனம் செய்து, எமது மக்கள் மீது படுகொலைகளை இலங்கையரசு கட்டவிழ்த்துவிட்டுள்ளமையானது இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் எம்மால் ஈடுபட முடியாத சூழ்நிலையினைத் தோற்றுவித்திருக்கிறது. வாசுதேவா தனது அறிக்கையினைப் படித்து முடித்தவுடன் தமிழர் தரப்பினர் பேச்சுக்களுக்குத் தாம் கொண்டுவந்திருந்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு பேச்சுவார்த்தை மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்றனர். இதனைக் கண்ணுற்ற பேச்சுக்களில் மேற்பார்வையாளர்களாகக் கலந்துகொண்டிருந்த இந்திய அதிகாரிகள் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர். அவர்களைப்போன்றே இலங்கை அரச தரப்பினர் அதிர்ச்சியடைந்திருந்தனர். பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைத் தழுவுவதைத் தடுக்க இந்திய அதிகாரிகள் முயன்றனர். ஆகவே, சென்னைக்குத் திரும்பிச் செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்த தமிழர் தரப்பினரை தொடர்ந்தும் திம்புவில் தங்கியிருந்து பேச்சுக்களில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து சென்னையின் கோடாம்பக்கத்தில் இரகசிய இடமொன்றில் கூடியிருந்த தமது தலைவர்களுடன் நிலைமையினை விளக்கி நேரடித் தொலைபேசியூடாக அவர்கள் பேசினர். ஆனால், பேச்சுக்களைக் கைவிட்டு விட்டு உடனடியாக சென்னை திரும்புமாறு தமிழர் தரப்பினருக்கு சென்னையிலிருந்த தலைவர்களால் பணிப்புரை வழங்கப்பட்டது. இதனையடுத்து பேச்சுக்களில் தம்மால் தொடர்ந்தும் பங்குபற்ற முடியாது என்றும், தம்மை சென்னை திரும்புமாறு தலைவர்கள் அழைத்திருப்பதாகவும் தமிழர் தரப்பினர் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் அனைத்துப் பிரதிநிதிகளும் சென்னை திரும்ப ஆயத்தமாகி வந்தவேளை ஒரேயொரு உறுப்பினர் மட்டும் சென்னை திரும்பும் முடிவிற்கு எதிராக நின்றார். அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் பிரதிநிதியான வரதராஜப் பெருமாள். தனது சகாவான கேதீஸ்வரனுடன் பேசிய வரதர், "பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கெடுங்கள் என்று இந்திய அதிகாரிகள் கெஞ்சும்போது நாம் எப்படி சென்னைக்குத் திரும்பிச் செல்ல முடியும்?" என்று கேட்டார். இதனையடுத்து கேதீஸ்வரன் சென்னையில் தங்கியிருந்த பத்மநாபாவிடம் வரதரின் முடிவுகுறித்துப் பேசினார். இதன்பின்னர் வரதருடன் நேரடியாகப் பேசிய பத்மநாபா, "மற்றையவர்களுடன் நீங்களும் சென்னைக்குத் திரும்பி வரவேண்டும், இல்லாவிட்டால் தெரியும் தானே?" என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
திம்புப் பேச்சுக்களில் இருந்து வெளியேறும் தமது நிலைப்பாட்டினை அறிவித்த தமிழ்த்தரப்பு திம்புவில் பேச்சுவார்த்தைகள் குழம்பும் நிலை உருவாகி வந்த அதேவேளை, வவுனியாவிலும் திருகோணமலையிலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட படுகொலைகள் பற்றிய செய்தி பிரபாரகரனின் காதுகளுக்கு எட்டியது.இப்பகுதிகளில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்கள் குறித்து விரிவாக அவருக்குத் தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் அனைவரையும் சந்திக்க கூட்டமொன்றினை ஏற்பாடு செய்யுமாறு பாலசிங்கத்தை அவர் பணித்தார். மேலும், அக்கூட்டத்தில் பங்கேற்கத் தான் சென்றுகொண்டிருப்பதாகவும் பாலசிங்கத்திடம் அவர் அறியத் தந்தார். தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையிலான உறவின் சரித்திரத்தில் 1985 ஆம் ஆண்டு ஆவணி 17 ஆம் திகதி ஒரு முக்கிய நாளாகும். வழமை போல திம்புப் பேச்சுக்கள் அன்று காலையும் பத்து மணிக்கு ஆரம்பமாகின. அதே நேரம் சென்னையில் போராளிகளின் தலைவர்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவொன்றினை எட்டுவதற்காகக் கூடியிருந்தார்கள். திம்புவில் தமிழர் தரப்பு தாம் அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகளை நிராகரிப்பதாகக் கூறும் கூட்டு அறிக்கையினை வாசித்தார்கள். சென்னையில் சிறீ சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலக்குமாருடன் பேசிய பிரபாகரன் "தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போரிடுவதைத்தவிர வேறு வழியில்லை" என்று தீர்க்கமாகக் கூறினார். "தமிழர்களை அழிப்பதற்குச் சிங்களவர்கள் கங்கணம் கட்டியிருப்பதால், அவர்களிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பது போராளிகளின் கடமை" என்று அவர் கூறினார். அன்று பிரபாகரன் தீர்க்கமான முடிவொன்றினை எடுத்தார். தமிழர்களின் உரிமைகளை ஆயுதப் போராட்டத்தின் ஊடாக மட்டுமே அடைய முடியும் என்பதுதான் அது. திம்புவில் இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனைகளை நிராகரித்திருந்த தமிழர் தரப்பின் கூட்டறிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது, தமிழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்கிற ஸ்த்தானத்தில் இருந்து திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டு வரும் நாம், இலங்கை அரசாங்கத்தால் ஆவணி 16 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தீவிரமாகப் பரிசீலினை செய்திருக்கிறோம். தமிழ் மக்களின் சட்டபூர்வமான அரசியல் அபிலாஷைகளை புதிய ஆலோசனைகள் எந்தவிதத்திலும் பூர்த்தி செய்யாமையினால் அவற்றை நிராகரிப்பதாக நாம் முடிவெடுத்திருக்கிறோம். இந்திய அரசாங்கத்தின் முயற்சியினாலேயே திம்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. இந்த முயற்சியினை நாம் பாராட்டி வரவேற்றிருந்தோம். குறிப்பாக தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றினைக் காண இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி எடுத்திருந்த முயற்சிகளை நாம் நன்றியுடன் பாராட்டுகிறோம். இப்பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் இலங்கை அரசாங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது. அவ்வாலோசனைகள் கடந்த வருடம் சர்வகட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்டிருந்த அதே ஆலோசனைகள் தான் என்பது தெளிவானது. சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் இவ்வாலோசனைகளை முற்றாக நிராகரித்திருந்த நிலையில், அதே ஆலோசனைகளை மீளவும் திம்புப் பேச்சுக்களில் முன்வைத்திருப்பதானது இனப்பிரச்சினைக்கான தீர்வைக் காண்பதில் இலங்கை அரசாங்கத்திருக்கும் உறுதிப்பாடு குறித்தும், அதன் நம்பகத்தன்மை குறித்தும் கடுமையான சந்தேகங்களை எமக்கு எழுப்பியிருக்கிறது. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளின் உண்மையான நோக்கம் என்னவென்பது குறித்து எம்மால் தெளிவாக உணர்ந்துகொள்ள முடிகிறது. மாவட்ட சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்று ஆலோசனைகளில் குறிப்பிட்டிருந்தபோதிலும், மாவட்ட சபையினால் எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை. கட்டுப்படுத்தப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு மாவட்ட சபைகள் எடுக்கும் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே தொடர்ந்து இருக்கும் என்றும் ஆலோசனை மேலும் கூறுகிறது. மேலும், மாவட்ட சபைக்கு ஒதுக்கப்படும் நிதி எவ்விதத்தில் பாவிக்கப்படுதல் வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது கூட ஜனாதிபதியினால் உருவாக்கப்படும் ஆணைக்குழு ஒன்றுதான் என்று கூறப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் ஆலோசனைகளில், மத்தியிலிருந்து மாவட்டங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதற்குப் பதிலாக, மாவட்ட சபைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டிருக்கும் அதிகாரங்களை மேலும் பலப்படுத்தும் வகையிலேயே புதிய ஆலோசனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாவட்ட சபைகளுக்குக் கொடுப்பதாகக் கூறும் மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு தமிழ் மக்களை அடக்கியாளவே அரசாங்கம் எத்தனிக்கிறது என்பது இதன்மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்க்கக் கூடிய தீர்வு அவர்களின் ஏக பிரதிநிதிகளான ஆறு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களான எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கையின் ஊடாகவே உருவாக்கப்படமுடியும் என்பதனால், அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கும் இவ்வாலோசனைகளை ஏகமனதாக நிராகரிக்கிறோம். பேச்சுக்களை ஆவணி 12 ஆம் திகதிக்குப் பின்போடுவதாகப் பின்னர் முடிவெடுக்கப்பட்டது. அன்றைய தினம் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கு அம்சக் கோரிக்கையினை விமர்சித்த அரசாங்கம், இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் இல்லை என்றும், அவர்களுக்கென்று சரித்திர ரீதியான தாயகம் என்று ஒன்று இலங்கையினுள் இல்லை என்றும், அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை கிடையாது என்றும் கூறி நிராகரித்திருந்தது. மேலும், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்ய எமக்கிருக்கும் சட்டபூர்வத் தன்மை குறித்தும் அது கேள்வியெழுப்பியிருந்தது. நாம் ஆவணி 13 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மக்களின் சரித்திர ரீதியான, உறுதியான அரசியல்ப் போராட்டங்களின் முடிவாகவே சுயநிர்ணய உரிமைக்கான எமது கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதனைத் தெளிவுபடுத்தியிருந்தோம். தமிழ் ஈழத்தைச் சேர்ந்த மக்களான தமிழர்கள் தமக்கென்று தனியான தேசத்தையும், தனியான சரித்திரத்தினையும், தனியான கலாசாரத்தினையும், எம்மக்களுக்கிடையிலான பொதுவான மொழியினையும், அடையாளப்படுத்தக் கூடிய தாயகத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும், தொடர்ச்சியான ஆடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டுவரும் சமூகம் என்கிற ரீதியில் அந்த அடக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளும் சகல உரிமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதனையும் விளக்கியிருந்தோம். சர்வதேசத்தில் நடைமுறையில் இருக்கும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்கள் பிரிந்துசெல்வதற்குத் தேவையான அனைத்துத் தகமைகளையும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கியிருந்தோம். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களாகிய நாம் எமது அரசியலைத் தீர்மானிக்கும் அதிகாரத்தினையும், சிங்கள் தேசத்துடன் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பூரண இறைமையுள்ள தனி நாடாக எம்மை உருவாக்கிக்கொள்ள வேண்டுமா என்று தீர்மானிக்கும் அதிகாரத்தினையும் கொண்டிருப்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். அதேவேளை, தனியாகப் பிரிந்துசெல்லும் தகமையினைக் கொண்டிருந்தபோதும், நியாயமான தீர்வினை அரசு வழங்கும் பட்சத்தில் அதனைப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதனையும் நாம் அரசிற்குத் தெளிவுபடுத்தியிருந்தோம். ஆனால், ஆவணி 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற பேச்சுக்களின்பொழுது நாம் முன்வைத்திருந்த அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய தீர்வொன்றினை முன்வைக்க அரசாங்கம் தவறியிருந்தது. ஆக்கபூர்வமான தீர்வுகளை முன்வைய்யுங்கள் என்கிற தமிழர் தரப்பின் நியாயமான கோரிக்கைகளுக்குப் பின்னரும் அரச தரப்பு விடாப்பிடியாக முன்னர் தான் முன்வைத்த தீர்வினையே மீண்டும் வேறு பெயரில் முன்வைத்திருந்தது. ஆவணி 16 ஆம் திகதி அரச தரப்பு முன்வைத்த புதிய ஆலோசனைகள் ஏற்கனவே அரசால் முன்வைக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் சேர்ந்து மாகாண சபைகளாக இயங்க முடியும் என்கிற அடிப்படையிலே அமைந்திருந்தது. அரசு முன்வைத்த இப்புதிய ஆலோசனைகள் தமிழ் மக்களை ஒரு தேசமாக அங்கீகரிக்கவில்லை. இலங்கையில் தமிழ் மக்களுக்கென்று தனியான தாயகம் இருப்பதை இந்த புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையினை புதிய ஆலோசனைகள் அங்கீகரிக்கவில்லை. இறுதியாக, தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கூட இப்புதிய ஆலோசனைகள் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் ஒன்றுதான் என்பதனையும் இந்த ஆலோசனைகள் ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தன. ஆகவேதான், இவ்வாலோசனைகள் தமிழ் மக்களின் நீதியான அரசியல் அபிலாஷைகளை எவ்விதத்திலும் பூர்த்தி செய்யப்போவதில்லை என்கிற முடிவிற்கு நாம் வரவேண்டியதாயிற்று. மேலும், எம்மைப்பொறுத்தவரையில் புதிய யோசனைகள் என்று அரச தரப்பினால் முன்வைக்கப்பட்டிருப்பவை புதியன அல்ல என்பதனையும் கூறிக்கொள்கிறோம். ஒரு பாரிய நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகளை அறிந்துகொண்டு, அப்பிரதேசத்தில் உள்ளவர்களால் நிர்வகிக்கப்படும் மாகாண ரீதியிலான தீர்வொன்றினை 1928 ஆம் ஆண்டிலேயே டொனமூர் ஆணைக்குழு முன்வைத்திருந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பண்டாரநாயக்க தலைமையில் உருவாக்கப்பட்ட உள்ளூர் சபைகளின் அதியுயர் ஆணைக்குழு டொனமூர் ஆணைக்குழுவின் ஆலோசனைகளின் அடிப்படையில் மாகாண சபைகளை ஏற்றுக்கொள்ளமுடியும் என்று 1940 ஆம் ஆண்டு கூறியிருந்தது. 1947 ஆம் ஆண்டு பண்டார்நாயக்க மீளவும் மாகாண சபை நடைமுறையினை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தபோதிலும் இன்றுவரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கைகளும் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டு சொக்ஸி தலைமையிலான ஆணைக்குழு கச்சேரிகளின் செயற்பாடுகளை பிராந்திய சபைகள் முன்னெடுக்கமுடியும் என்று பரிந்துரை வழங்க, 1957 ஆம் ஆண்டில் பண்டாரநாயக்க பிராந்திய சபைகள் எனும் ஆலோசனையினை முன்வைத்திருந்தார். இதனடிப்படையில் 1957 ஆம் ஆண்டு பண்டா செல்வா ஒப்பந்தத்தினூடாக பிராந்திய சபைகளுக்கு நேரடியான தேர்தல்களை நடத்துவதென்றும், இப்பிராந்திய சபைகளுக்கு விவசாயம், கூட்டுறவு, காணி மற்றும் காணி அபிவிருத்தி, குடியேற்றம் மற்றும் கல்வி ஆகிய அதிகாரங்களும் வழங்கப்படும் என்று ஒத்துக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட சிங்களக் கடும்போக்காளர்களின் எதிர்ப்பினால் அவ்வொப்பந்தம் கிழித்தெறியப்பட்டது. அவ்வாறே 1963 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சிறிமா, கச்சேரிகளுக்குப் பதிலாக மாவட்ட சபைகளை உருவாக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறியதுடன், இதனை ஆராயவென்று மாவட்ட சபைகள் ஆணைக்குழுவினையும் நியமித்திருந்தார். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையினை சிறிமாவிடம் சமர்ப்பித்திருந்தபோதும் கூட, அதுகுறித்து எந்த நடவடிக்கையினையும் எடுக்க அவர் மறுத்திருந்தார். 1965 இல் பதவிக்கு வந்த டட்லி சேனநாயக்க மாவட்ட சபைகளை உருவாக்குவதற்குத் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார். அதன்படி அவரது அரசாங்கத்தினால் 1968 ஆம் ஆண்டு மாவட்ட சபைகளுக்கான யோசனையும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவரையில் பண்டாரநாயக்க தலைமையில் மாவட்ட சபைகளையும், பிராந்திய சபைகளையும் தீர்வாக 1940, 1947 மற்றும் 1957 ஆகிய ஆண்டுகளில் முன்வைத்த சுதந்திரக் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சி, 1968 இல் டட்லி தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி முன்வைத்த மாவட்ட சபைகளை முன்னின்று எதிர்த்துத் தோற்கடித்தது. எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பினால் கலக்கமடைந்த டட்லியும் தான் முன்வைத்த மாவட்ட சபைகள் எனும் யோசனையினை மீளப்பெற்றுக்கொண்டார். 1928 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஐம்பது ஆண்டுகள் உருண்டோடி விட்ட நிலையில் நாம் மாகாண சபைகளுக்கும், மாகாண சபைகளில் இருந்து பிராந்திய சபைகளுக்கும், பிராந்திய சபைகளில் இருந்து மாவட்ட சபைகளுக்கும், தற்போது மீளவும் மாவட்ட சபைகள் / மாகாண சபைகளுக்கும் வந்து நிற்கிறோம். இவற்றிற்குள் சிறிமாவின் "உடனடி நடவடிக்கைகளையும்" டட்லியின் "தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும்" நாம் பார்த்துவிட்டோம். இக்காலத்தில் ஆணைக்குழுக்களுக்கும், பரிந்துரைகளுக்கும், அறிக்கைகளுக்கும் குறைவே இருக்கவில்லை. தாமே முன்வைத்த தீர்வுகளை நடைமுறைப்படுத்தி தமிழர்களின் தாயகத்தின் இருப்பினை ஏற்றுக்கொள்ளும் அரசியல்த் தைரியமும், நாகரீகமும் சிங்களத் தலைமகளிடம் இன்றுவரை உருவாகவில்லை. ஆனால், இதே காலப்பகுதியில் தமிழர்களுடன் தாம் செய்துகொன்ட அனைத்து உடன்படிக்கைகளையும் கிழித்தெறிந்த அதேவேளை, தமிழரின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைக்கும் கைங்கரியத்துடன் தமிழ் மக்களை முற்றான அரச அடக்குமுறைக்குள் சிங்கள அரசுகள் தள்ளிவிட்டிருக்கின்றன. திம்புப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்கள் உள்ளடக்கிய தீர்வென்பது வெறுமனே கோட்பாட்டு அடிப்படையிலானது மட்டுமல்ல. அது தமிழ் மக்கள் தமது அடிப்படை உரிமைகளை அடைந்துகொள்ள முன்னெடுத்திருக்கும் இடையறாத போராட்டத்தின் அடிப்படையில் இருந்து, நிதர்சனத்திலிருந்து உருவாக்கப்பட்டிருப்பது என்பதை ஆணித்தரமாகக் கூறிக்கொள்கிறோம். தமிழர்களின் கோரிக்கைகள் 1950 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட் சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்விலிருந்து ஆரம்பித்து, தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முகங்கொடுத்துவரும் அரச இராணுவ அடக்குமுறைகளினூடாக உருவாக்கப்பட்டிருக்கும் நியாயமான, தர்க்கரீதியிலான அவசியத்திலிருந்து தனிநாடு எனும் தவிர்க்கமுடியாத கோரிக்கையில் வந்து நிற்கின்றன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமது இன்னுயிரை ஈர்ந்து, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது உடைமைகளையும், வாழ்வாதாரத்தினையும் இழந்து நடத்திவரும் போராட்டம் இது. தமது சகோதரர்கள் நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தமது இன்னுயிரை ஈர்ந்தும், வாழ்வினை இழந்தும் அவர்கள் தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள். ஆகவே, திம்புவில் நாம் அறிவிக்க விரும்புவது, தமிழ் மக்களின் தேசம் குறித்து மட்டுமே திம்புவிலோ அல்லது வேறு எங்கிலோ எம்மால் பேசமுடியும் என்பதனையும், அது தவிர்த்து வேறு எது குறித்தும் எவ்விடத்திலும், எப்பொழுதிலும் நாம் இனிமேல்ப் பேசப்போவதில்லை என்பதை வெறுப்புக்கள் இன்றியும், நிதானமாகவும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். மேலும், இலங்கை அரசு இனிமேல் எம்முடன் பேசுவதானால் எம்மால் முன்வைக்கப்பட்ட நான்கம்சக் கோரிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தீர்வொன்றிற்கூடாக மட்டுமே பேசமுடியும் என்பதனையும் ஐய்யந்திரிபுற தெரிவித்துக்கொள்கிறோம். இதைத்தவிரவும் இன்னுமொரு விடயம் குறித்தும் நாம் கருத்துக்குற விரும்புகிறோம். அதனை பிறிதொரு அறிக்கையினூடாக நாம் தெரிவிப்போம்.