Everything posted by ரஞ்சித்
-
திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா?
ஆம்
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
பெளத்த மதத்தினை மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னிலைப்படுத்தி அதற்கான அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்குவது சிறிலங்காவின் அரசியலமைப்பு பெளத்த மதம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்கும். ஆகவே பெளத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும்". தம்மை மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கூறிக்கொண்டபோதிலும், அடிப்படையில் அவர்களும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதிகள் தான் என்பதனையே அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. தனது கட்சியின் இந்த நிலைப்பாட்டினை அநுரவும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்தி வருகிறார். அரசியலமைப்பினை மாற்றக்கூடிய பாராளுமன்றப் பலம் தற்போது அநுரவிற்குக் கிடைத்திருக்கின்ற போதிலும் அவரோ அவரது கட்சியோ அதற்கெதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் நாடைபெறுவதற்கு சில தினங்கள் இருக்கும் வரையிலும் பெளத்த மதத் துறவிகளைப் போற்றிப் புகழ்வதிலும், கெளரவிப்பதிலும் அநுர சிரத்தையெடுத்து நடந்துகொண்டார். அவ்வாறான சந்தர்ப்பமொன்றான மகரகமவில் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வொன்றில் சுமார் 1500 பெளத்த பிக்குகள் முன்னிலையில் பேசிய அநுர, "பெளத்த மதத்திற்குரிய அதி உன்னத ஸ்த்தானத்தினை வழங்குவேன், அதன் புனிதத்தினை எப்பாடுபட்டாவது பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி வழங்கினார். மேலும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினை எக்காரணத்திற்காகவும் தனது அரசு கைவிடாது என்றும் அவர் உறுதியளித்தார். அநுரவின் பெளத்த மதம் சார்ந்த நிலைப்பாடே கட்சிக்குள்ளும் பரவிக் கிடக்கின்றது. கட்சியின் முக்கியஸ்த்தரான கே.டி.லால்காந்த, இனவாதப் பிக்குகள் அமைப்பான பொதுபல சேனவின் ஸ்த்தாபகர் ஞானசாரத் தேரவுடன் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்பதுடன் வெளிப்படையாகவே அவருடன் இணைந்து செயற்பட்டும் வருபவர். இவ்வருடம் மாசியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் மிச்செல் பாக்லெட் இலங்கை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். "இலங்கையில் இராணுவமயமாக்கல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அரச நிறுவனங்களிலும் நிர்வாக அமைப்புக்களிலும் சிங்களத் தேசியவாதமும், பெளத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது சிறுபான்மையினங்களிடையே அச்சத்தினையும், ஸ்த்திரத்தன்மையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன், அச்சமூகங்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவும் இந்நிலைமை அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் சமூகங்களுக்கிடையே இணக்கப்பட்டினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவது கடிணமாக்கப்பட்டு வருகின்றது" என்று அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
இனக்கொலைக்கான பொறுப்புக்கூறல் முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்போது சிறிலங்கா இராணுவம் 167,676 தமிழர்களைப் படுகொலை செய்திருக்கிறது என்று கணிப்பிடப்பட்டிருக்கிறது. உணவும், மருந்துப்பொருட்களும் தடைசெய்யப்பட்டிருந்ததுடன், காயப்பட்டவர்களைப் பராமரித்து வந்த வைத்தியசாலைகளும் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டு வந்தன. தமிழ்ப்பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் சிங்கள இராணுவத்தினரால் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன், சரணடைந்தவர்களில் ஆயிரக்கணக்காணோர் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்காணோர் காணாமலாக்கப்பட்டதோடு இன்றுவரை அவர்களைத் தேடி அவர்களின் உறவுகள் வடக்குக் கிழக்கில் நீதிகோரிப் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கைகளும், போராட்டங்களும் இன்றுவரை உதாசீனம் செய்யப்பட்டே வருகின்றன. இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பாக பல ஐ.நா அறிக்கைகள் வெளிவந்திருப்பதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் பல தீர்மானங்களும் காலத்திற்குக் காலம் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. தமிழ் மக்கள் ஒரு இனமாகவும், ஐ. நா மனிதவுரிமைச் சபையினூடாகவும் இறுதி யுத்தத்தில் தம்மீது நடத்தப்பட்ட பாரிய போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக நீதியின் முன் நிறுத்தி தண்டனை வழங்கவேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சர்வதேச மயப்படுத்தப்பட்ட யுத்தக் குற்ற விசாரணைகளுக்கெதிராக அநுர குமார திசாநாயக்கவும் அவரது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியும் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டினையே எடுத்திருக்கின்றனர். இவ்வருட ஆரம்பத்தில் பேசிய அநுர குமார திசாநாயக்க, "இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்டதாக நம்பப்படும் போர்க்குற்றங்களையோ, மனிதவுரிமை மீறல்களையோ செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டப்படுவோரை தமது அரசு ஒருபோதும் தண்டிக்கப்போவதில்லை" என்று உறுதிபடக் கூறியிருந்தார். "போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களே தமக்கான நீதியினைக் கோரவோ, யுத்தக் குற்றங்களை விசாரிக்கும்படியோ என்னிடம் கோரவில்லையே" என்றுகூட அவர் வெளிப்படையாகப் பேசியிருந்தார். ஆனால், தம்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணை ஒன்றினூடாக விசாரித்து நீதி வழங்குங்கள், குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள் என்கிற ஒட்டுமொத்தக் கோரிக்கையினை தமிழ் மக்கள் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்ற பின்புலத்தில் அநுரவினால் இவ்வாறான கூற்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதேவேளை இறுதி யுத்த காலத்தில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்று நன்கு அறியப்பட்ட பல முன்னாள்த் தளபதிகளை அநுரவின் கட்சி அரவணைத்து வருகிறது. ஹெயிட்டியில் சமாதானப் பணிகளில் ஈடுபட்டு பல சிறுமிகளை பாலியல் தொழிலுக்காகக் கடத்தியவர்கள் என்று கண்டறியப்பட்ட இலங்கையின் மூன்றாவது பட்டாலியன் படைப்பிரிவின் தளபதியான ஜெனரல் அனுர ஜயசேகரவை அநுர தனது அரசின் பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமித்திருக்கிறார். மேலும் இலங்கை விமானப்படை தாக்குதல்ப் பிரிவின் தளபதியாக இருந்து இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் படுகொலைகளில் நேரடியாகப் பங்காற்றிய ஒருவனை படைகளின் பிரதானியாக அநுர நியமித்து கெளரவித்திருக்கிறார். அநுர ஜனாதிபதியாகப் பதிவியேற்று சில தினங்களுக்குள் மேற்கொண்ட முக்கியமான இராஜதந்திர நகர்வாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்தை தனது அரசு முற்றாக நிராகரிக்கிறது என்று உத்தியோகபூர்வமாக அறிவித்ததைக் காணலாம். சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளைப் பாவித்து இறுதி யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களுக்கான சாட்சியங்களைத் தேடும் காலத்தை நீடிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அதனை நிராகரித்தே அநுர குமார இந்த அறிவிப்பை மேற்கொண்டிருந்தார். சென்றமாதம் பேசிய இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், சர்வதேச விசாரணைகள் தொடர்பான தனது அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை மீள உறுதிப்படுத்தியதோடு, தமிழ் மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூர் விசாரணைப் பொறிமுறை ஒன்றினூடாக குற்றச்சாட்டுக்களை தமது அரசு விசாரிக்க முன்வரும் என்று கூறியிருந்தார்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
13 ஆம் திருத்தச் சட்டம் குறித்த தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினருடனான சந்திப்பொன்றில் பேசும்போது 13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தனது ஆதரவு இருக்கும் என்று அநுர கூறியிருந்தார். ஆனால், அநுரவின் இந்தக் கூற்றினை அவரே மறுதலிக்குமாற்போல் அவரது யாழ்ப்பாணக் கூட்டத்தின் உரை அமைந்திருந்தது. "13 ஆம் திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவேன் என்று பொய்கூறிக்கொண்டு உங்களிடம் வாக்குக் கேட்டு நான் வரவில்லை" என்று அவர் யாழ்ப்பாணத்தில் கூறினார். 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே செய்யப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்த மாகாணசபை அடிப்படையிலான தீர்விற்கான ஒப்பந்தத்தை தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைத் தீர்க்கப்போதுமானது அல்ல என்று நிராகரித்திருந்த அதேவேளை, சிங்களவர்கள் 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக நாடு பிளவுபடும் என்று அதனை எதிர்த்து வந்தார்கள். 1987 ஆம் ஆண்டு இவ்வொப்பந்தம் நிறைவேற்றப்பட்ட காலத்திலிருந்து அநுர தலைமை தாங்கிவரும் மக்கள் விடுதலை முன்னணியினரால் அது மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறது. மக்கள் விடுதலை முன்னணி அரசிற்கெதிராக நடத்திய இரு ஆயுதக் கிளர்ச்சிகளில் 80 களின் இறுதிப்பகுதியில் நடத்தப்பட்ட இரத்தக்களறி நிறைந்த ஆயுதக் கிளர்ச்சி இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினை எதிர்த்தே நடத்தப்பட்டது. 13 ஆம் திருத்தச் சட்டத்தினூடாக தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவதை எதிர்த்தே பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் பலியிடப்பட்ட கிளர்ச்சியை அது நடத்தியிருந்தது. "ஒரு அரசியட் கட்சியாக, சில தசாப்த்தங்களுக்கு முன்னர் செய்துகொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை நாம் முழுமையாக நிராகரிக்கிறோம், அது அமுல்ப்படுத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கிறோம். இலங்கையின் இறையாண்மையினைப் பாதுகாப்பதே எமது மிக முக்கிய கரிசணை என்பதோடு, அதனை அடைந்துகொள்வதற்காக எத்தனை உயிர்களைத் தியாகம் செய்யவும் நாம் தயாராக இருக்கிறோம்" என்று அக்கட்சியின் முக்கிய பிரமுகர் விஜித்த ஹேரத் இவ்வாண்டின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார். "இதுதொடர்பான எமது கட்சியின் நிலைப்பாடு இதுவரையிலும் மாறவில்லை, இனிமேலும் மாறப்போவதில்லை. இந்த நாட்டின் அரசியல்ச் சரித்திரத்தில் எமது நாட்டின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் எமது இலட்சியத்தின் மேல் நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாடு எப்போதும் ஒரேமாதிரியாகவே இருந்து வருகிறது, இனிமேலும் அது அப்படியே இருக்கும் என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இதுதொடர்பாக எமது கட்சியின் உறுதிப்பாடு எப்போதுமே மாறதென்பதை எமது நாட்டு மக்கள் நிச்சயமாக நம்பலாம்" என்று அவர் மேலும் கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு தி ஐலண்ட் எனும் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில், சமஷ்ட்டி அடிப்படையிலான எந்தத் தீர்வையும் தமது கட்சி எதிர்க்கும் என்று வெளிப்படையாகக் கூறியிருந்தார். மேலும், வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என்பதையும் அவர் தொடர்ச்சியாகக் கூறி வந்திருக்கிறார். "இந்திய இலங்கை ஒப்பந்தத்தினூடாக எழுந்தமானமாக இணைக்கப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாகப் பிரித்துப்போட்டதே எமது கட்சிதான். வடக்குக் கிழக்கு மாகாணஙகளைப் பிரிப்பதற்கு எமது கட்சி மூன்று வழக்குகளைப் பதிவுசெய்து போராடியது" என்றும் அவர் நினவுகூர்ந்தார். 2007 ஆம் ஆண்டு தை மாதம் 1 ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்றம் இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை தனித்தனியே வட மாகாணம் என்றும் கிழக்கு மாகாணம் என்றும் நிரந்தரமாகவே பிரித்துப் போட்டது. இத்தீர்ப்பு வெளியானபோது நீதிமன்ற முன்றலில் கூடியிருந்த மக்கள் விடுதலை முன்னணியினரும் அவர்களது ஆதரவாளர்களும் பெருத்த கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 2010 ஆம் ஆண்டு அநுர குமார திசாநாயக்க பேசும்போது, "வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கு அரசியலமைப்பினூடாக எடுக்கப்படும் எந்த முயற்சியையும் தமது கட்சி எதிர்க்கும்" என்று கூறியிருந்தார். அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்திலும் "இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் பாதுகாப்பதில் எந்த விட்டுக்கொடுப்பிற்கும் இடமில்லை" என்று மீளவும் ஆணித்தரமாகக் கூறியிருந்தார் என்பதும் நினைவிருக்கலாம்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இறுதியாக அதிகாரத்தில் இருக்கப்போவது அநுர குமார திசாநாயக்கவா? இலங்கையில் ஆட்சிக்கு வந்த பல ஜனாதிபதிகள் நீண்டகாலமாகவே ஒரு விடயத்தைக் கூறி வந்திருக்கின்றனர். அதுதான் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி முறையினை இல்லாதொழிப்பதென்பது. அந்தவழியில் அநுரவின் கட்சியினரும் தமது விஞ்ஞாபனத்தில் இம்முறையினை ஒழிக்கவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர். புரட்டாதி மாதவாக்கில் கூட்டமொன்றில் பேசிய அக்கட்சியின் பிரமுகர் சுனில் ஹந்துநெட்டி, அநுரவே இறுதியான நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக இருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார். "நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை நீக்கிவிடக்கூடிய ஜனாதிபதியொருவர் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கிறார். இதனைச் செயற்படுத்துவதற்கான ஆதரவினைத் தருமாறு மக்களை நாம் கேட்டுக்கொள்கிறோம்" என்று அவர் கோரியிருந்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியினை நீக்குவதனூடாக சர்ச்சைக்குரிய ஆட்சிமுறையொன்றினை இல்லாதொழிப்பது மட்டுமன்றி, ஜனநாயக ரீதியிலான மாற்றங்களையும் எம்மால் செய்யக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியிருந்தார். மக்களின் ஆதரவோடு இலங்கையின் அரசியல்ப் பாதையினை தம்மால் செப்பனிட முடியும் என்றும் அவர் கூறினார். "இது ஆரம்பம் மட்டும்தான், மக்களின் ஆதரவோடு இந்த நாட்டினை நாம் கட்டியெழுப்புவோம்" என்று அவர் கூறினார். மாகாண சபைகளை மீள செயற்படுத்துவது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தனது தேர்தல்ப் பிரச்சாரங்களின்போதும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைகளை ஒருவருட காலத்திற்குள் மீளவும் இயங்கச் செய்வதனூடாக மக்களும் அரசாட்சியில் பங்குகொள்ளும் சூழ்நிலையினை உருவாக்கப்போவதாக அநுர கூறியிருந்தார். இரத்தினபுரியில் பேசும்போது மாகாணசபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தையும், உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல்களை நடத்தும் தனது நோக்கத்தினையும் அவர் வெளிப்படையாகக் கூறியிருந்தார். "ஒரு ஜனாதிபதி, பலமான மந்திரிசபை, பாராளுமன்றம், மாகாணசபைகள், உள்ளூராட்சிச் சபைகள், நகர சபைகள் உள்ளிட்ட ஒரு அரசியல் பொறிமுறை இந்த நாட்டிற்கு மிகவும் அவசியம். நாம் ஆட்சிக்கு வந்த ஒருவருடத்திற்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவோம். அதுமட்டுமல்லாமல் உள்ளூராட்சிச் சபைகள், பிரதேச சபைகள், நகர சபைகள் போன்றவற்றிற்கான தேர்தல்களையும் நடத்தவிருக்கிறோம்" என்று அநுர அப்பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை இல்லாதொழித்தல் அநுர, தனது ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்கள் மீது அடக்குமுறையினைக் கட்டவிழ்த்துவிடும் சட்டங்களை நீக்கப்போவதாகக் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அகற்றப்படவிருக்கும் சட்டங்களுள் மக்களின் சுதந்திரமான பேச்சிற்கும், ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கும் எதிராக இருக்கும் கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டமும் உள்ளடக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 1979 ஆம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் பின்னர் நிரந்தரமாகவே அமுல்ப்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தினூடாக தனிநபர்களை காரணமின்றித் தடுத்து வைப்பது, அவர்களைக் கால வரையறையின்றித் தடுத்து வைப்பது ஆகிய அதிகாரங்கள் தமிழர்களைக் குறிவைத்தே அரசுகளால் உருவாக்கப்பட்டுப் பாவிக்கப்பட்டு வந்தன. சர்வதேச மனிதவுரிமைச் சட்டங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்தினூடாக எழுந்தமானமான கைதுகள், நீதிக்குப் புறம்பான விசாரணைகள், சித்திரவதைகள், அழுத்தங்களினூடான வாக்குமூலங்கள் ஆகியவற்றிற்கு காவல்த்துறையினருக்கும், இராணுவத்தினருக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியாக அநுர பதவியேற்ற சில நாட்களின் பின்னர் பேசிய ஜனாதிபதியின் செயலகத்தின் இயக்குநர் விஜேபண்டார இதுகுறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டினை இவ்வாறு தெரிவித்தார். "பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் இருக்கும் சிக்கல் என்னெவென்றால், அது சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராகப் பாவிக்கப்படுகிறதென்பதேயன்றி அச்சட்டமே தவறென்பதென்பதில்லை" என்று பொருள்படக் கூறியிருந்தார். மேலும், "சரியான ஆதராங்கள், சாட்சியங்களைப் பாவிப்பதனூடாக பயங்கரவாதத் தடைச்சட்டம் நீதியான முறையில் அமுல்ப்படுத்தப்படுதல் அவசியம். அரசியல்ப் பழிவாங்கல்களுக்காக இச்சட்டம் பாவிக்கப்படுவதையும் நாம் எதிர்க்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார். "இச்சட்டம் சரியான முறையில் பாவிக்கப்படுமிடத்து, எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை, அவ்வளவுதான்" என்று வெகு சாதாரணமாகக் கூறியிருந்தார். இதேவேளை பயங்கரவாதத் தடைச்சட்டம் குறித்துப் பேசிய அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் விஜித்த ஹேரத், "சட்டத்தை நீக்கவேண்டிய அவசியம் ஏதுமில்லை. சில மாற்றங்களைச் செய்யலாம், ஆனால் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நாம் பெறவேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அவர் அன்று கேட்டுக்கொண்ட பாராளுமன்றப் பெரும்பான்மையும் இப்போது அவருக்குக் கிடைத்திருக்கிறது. பயங்கரவாதத் தடைச் சட்டம் என்பது தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாஷைகளைக் கோருவதைத் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது என்பதுடன் பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்களால் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற அரச மயப்படுத்தப்பட்ட கொடூரமான அடக்குமுறை என்பதும் குறிப்பிடத் தக்கது.
-
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்?
தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுள் பெரும்பான்மையினர் முதற்தடவையாக பாராளுமன்றம் வருபவர்கள். இவர்களுள் சிலர் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அரசியல்க் கைதிகளின் விடுதலை தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். தமிழர்களின் இரு முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் கூட்டங்களை அவர் நடத்தினார். வவுனியா கூட்டத்தில் பேசும்போது தமிழ் அரசியல்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கும் நோக்கம் தனக்கில்லை என்று பொருள்பட அவர் பேசினார். "பிரதம நீதியரசர் முன்வைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்" என்று அங்கு அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல் வவுனியா கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அநுர, முன்னைய அரசாங்கங்களினாலும், அரச அதிகாரிகளினாலும் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழருக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க தான் ஆவன செய்வதாகக் கூறியிருந்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிங்கள மொழி உரையில் தமிழர்களிடமிருந்து அடாத்தாக அரசுகளால் பிடுங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க விரும்புவதாகவும், தமிழ் மக்கள் பல தசாப்த்தங்களாக முகங்கொடுத்து வருகின்ற அரச அடக்குமுறைகளைத் தணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்."நாம் வடக்கில் காணிகளை வழங்கினால் தெற்குக் கொந்தளிக்கிறது, அவ்வாறே தெற்கிற்கு வழங்கினால் வடக்கு கொந்தளிக்கிறது" என்று அவர் பேசினார். வடக்குக் கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொனிப்படவே அவரது கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனது கருத்திற்கான ஆதாரங்களை அங்கு முன்வைப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் இனக்கொலை நடந்தேறி பதினைந்து வருடங்களை கடந்த நிலையிலும் இன்றுவரை வடக்குக் கிழக்கில் பெருமளவு பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தே வைத்திருக்கின்றன. இதே காலப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி மேலும் பல பிரதேசங்களை தொல்லியல்த் திணைக்களமும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. வடக்குத் தமிழரின் நிலங்கள் முன்னைய அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் நாம் அவற்றினை விடுவிக்க ஆவன செய்வோம் என்று அவர் வவுனியா உரையில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியில் விஞ்ஞாபனத்தில் "நிலப் பகிர்ந்தளிப்பில் காணப்படும் பாகுபாடுகள் தனியார்மயப்படுத்துவதனால் உருவாக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டிருந்தது. ஆக, காணிகள் தனியார்மயப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே அதுகுறித்த அரசியல்ப் பிரச்சினை உருவாகிறது என்று அது நியாயப்படுத்தியிருந்தது. ஆகவே இக்காணிப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க தற்காலிக நீதித்துறை அமைப்பொன்றினை உருவாக்கி, இப்பிரச்சினைக்கான நீதியானதும், விரைவானதுமான தீர்வுகளை வழங்க தான் விரும்புவதாக அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவித்திருந்தது. இன்றைய நாள்வரை தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டிலும் அருச்சுணாவிற்கே வாக்களித்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கின்ற காலம் விரைவில் வரும். அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
- பாராளுமன்றத்திற்குத் தெரிவான ரவிகரன் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்
படுதோல்வியடைந்த நிலையில் அநுரவிற்கு வகுப்பெடுக்கும் சுத்துமாத்து- அரசியல் சதிகள் அம்பலம்
அழைப்பிற்கு நன்றி சிறி, ஆனால் எதுவும் இங்கு எழுதத் தோன்றவில்லை, பார்க்கவும் பிடிக்கவில்லை. சிங்கள இனவாதிகளைத் தமிழர்களே தூக்கிக்கொண்டாடும் காலத்தில் இருக்கிறோம். இதில் பேசுவதற்கென்று எதுவுமில்லை. நடப்பதைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
"கென்ட் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எம்மைத் துன்புறுத்தி வந்த சிங்களக் காடையர்களே, மாறாக அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல" - தமிழ் மக்கள் ஜெயவர்த்தனவினதும் அவரது இனவாத அமைச்சரவையினதும் திட்டங்களுக்கான பதிலை 1984 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் திகதி பிரபாகரன் வழங்கினார். நன்கு ஆயுதம் தரித்த, பயிற்றப்பட்ட 50 புலிகள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் நோக்கி இரு பேரூந்துகளில் பயணமாகினர். ஒரு அணியினர் கென்ட் பண்ணை மீது தாக்குதல் நடத்த, மற்றைய அணி டொலர் பண்ணை மீது தாக்குதலை நடத்தியது. கென்ட் பண்ணை மீதான தாக்குதலில் 29 சிங்களக் கைதிகள் கொல்லப்பட டொலர் பண்ணையில் மேலும் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 62 பேரில் மூவர் சிறைக்காவலர்கள். மறுநாளான மார்கழி 1 ஆம் திகதி லோரன்ஸ் தலைமையிலான புலிகளின் அணியொன்று கொக்கிளாயிலிருந்து வெளியே நாள் ஒன்றிற்கு இருமுறை பயணம் செய்யும் எல்ப் ரக வாகனம் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்கிளாயில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம் நோக்கிப் பயணித்தனர். அப்போது மாலை 6:30 மணி. சில சிங்கள மீனவர்கள் ஆங்காங்கே வீதிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். சிலவிடங்களில் பெண்களும், சிறுவர்களும் வீதிகளில் காணப்பட்டனர். எல்பில் வந்த புலிகள், அங்கு நின்ற சிங்களக் குடியேற்றக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். மனுவேல் அந்தோணி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரும் வீதியில் நின்ற கூட்டத்தில் அடங்குவர். சூடுபட்டு கீழே வீழ்ந்த அந்தோணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கும் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரைக் காவிக்கொண்டு அந்தோணியின் மனைவி படகுகள் நோக்கி ஓடினார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் 14 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இன்னும் நால்வர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அகன்ற புலிகள் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றம் நோக்கிச் சென்றனர். இரவு 8:30 மணியளவில் நாயாறு குடியேற்றத்தை புலிகளின் அணி சென்றடைந்தது. அங்கு காணப்பட்ட மக்கலின் கொஸ்ட்டா வின் பலசரக்குக் கடைக்குச் சென்ற புலிகள் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வந்த சிங்களக் காடையர்களின் தலைவியாக மக்கலின் விளங்கினார். எல்ப் வாகனத்தில் இருந்து பாய்ந்திறங்கிய புலிகள் கடைக்குள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்தனர். மகலினை புலிகள் தேடினர், ஆனால் அவர் இருக்கவில்லை, தலைமறைவாகிப் போயிருந்தார். ஆகவே மக்கலினின் இரு புதல்விகளான மேரி திரேசா மற்றும் மேரி மார்கரெட் ஆகியோரைப் புலிகள் சுட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர். கொக்கிளாயில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது பல சிங்களக் குடியேற்றக்காரர்கள் கடலை நோக்கி ஓடியதுடன், படகுகளுக்குள்ளும், அவற்றின் பின்னாலும் ஒளிந்துகொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளின்போது நள்ளிரவு வரை சிங்களவர்கள் படகுகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் ஆறு கிலோமீட்டர்கள் கால்நடையாக புல்மோட்டையூடாக திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இராணுவத்தினருக்கு தாக்குதல் குறித்துத் தெரிவித்தனர். கொக்கிளாய் நோக்கி விரைந்துசென்ற இராணுவ அணிமீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியின் அருகிலும், மதகுகளின் கீழும் மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. நாயாறு குடியேற்றக் கிராமத்தின்மீது தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.மறுநாள் காலை இராணுவத்தினர் அவர்களைக் கண்டு மீட்கும்வரை அவர்கள் காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்தனர். இத்தாக்குதலில் காயப்பட்ட சிங்களவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கும், குருநாகல் வைத்தியசாலைக்கும் இராணுவம் அழைத்துச் சென்றது. திருகோணமலைக்கும், முல்லைத்தீவிற்கும் இடையிலான கரையோரப் பகுதிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் வடக்காக அமைந்திருப்பது கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றமாகும். இங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் முதன்முதலாக சிங்களவர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து நான் விலாவாரியாக முன்னர் எழுதியிருந்தேன். அரசால் சேகரிக்கப்பட்ட இத்தாக்குதல் குறித்த ஆவணங்கள், மற்றும் இத்தாக்குதல் குறித்து அமைச்சரவையில் அங்கத்துவம் கொண்டிருந்த அமைச்சர் தொண்டைமானின் கருத்துக் குறித்தும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இரு காரணங்களுக்காக இச்சம்பவங்கள் நான் இங்கே மீளவும் பதிவிடுகிறேன். முதலாவது, இச்சம்பவங்கள் நடைபெற்ற காலக் கிரகத்தின் அடிப்படையில் பதிவது. இரண்டாவது இத்தாக்குதல் குறித்த தமிழ் மக்களின் மனவோட்டத்தினைப் பதிவது. தொண்டைமான் இத்தாக்குதல்களை வரவேற்றிருந்தார். அவ்வாறே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இதனை வரவேற்றிருந்தனர். கொல்லப்பட்டவர்களை அப்பாவிச் சிங்கள மக்கள் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, தினம் தோறும் சித்திரவதை செய்துவந்த காடையர்களே கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினர். அது மட்டுமல்லாமல் ஜெயவர்த்தன, லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரவி ஜெயவர்த்தன ஆகிய இனவாதிகளின் கொடூரங்களுக்கான பதிலடியாகவும் இதனை அவர்கள் பார்த்தனர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களினூடாக, தம்மை தனியான தேச மக்களாக தமிழர்கள் உறுதியாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு இனமாக தாம் உயிர்தப்பி வாழ்வதென்றால், சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தாம் திரண்டெழுந்து போராட வேண்டுமென்று அவர்கள் நம்பத் தொடங்கினர். இதனை செய்வதற்குப் பிரபாகரனைத் தவிர அவர்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழரின் தாயகத்தைக் கூறுபோட்டு, அவர்களின் வளங்களைச் சூறையாடவே அமைக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் கொக்கிளாய் சிங்களக் குடியேற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பெளத்த விகாரை வவுனியா மாவட்டத்தின் பதவிய பகுதியில் ஜெயவர்த்தனவின் அரசாங்கம் நடத்திவரும் அவசர அவசரமான சிங்கள் குடியேற்றங்கள் குறித்த தமது அதிருப்தியினைத் தெரிவிக்க அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் தலைமையிலான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஜெயவர்த்தனவையும், லலித் அதுலத் முதலியையும் கார்த்திகை மாதம் 13 ஆம் திகதி சந்தித்தனர். நடைபெற்றுவரும் சிங்களக் குடியேற்றத்தினை உடனடியாக நிறுத்துமாறு அவர்கள் கோரினர். இக்குடியேற்றம் முன்னெடுக்கப்படுவதால் தமிழர்கள் அடைந்துவரும் மனதளவிலான பாதிப்புக்களை அவர்கள் எடுத்துரைத்தனர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரின் செல்வாக்கு தமிழ் மக்கள் மத்தியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருவதையும் ஜெயாரிடம் அவர்கள் எடுத்துரைத்தனர். "இந்த அரசாங்கத்துடன் எதற்காகப் பேசி வருகிறீர்கள்? என்று தமிழ் மக்கள் எங்களிடம் கேட்கிறார்கள்" என்று அமிர்தலிங்கம் ஜெயாரிடம் தெரிவித்தார். ஜெயாருடனான சந்திப்பிற்குப் பின்னர் கடுந்தொனியில் ஒரு கடிதத்தையும் முன்னணியினர் ஜெயவர்த்தனவிற்கு அனுப்பினர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களச் சிறைக்கைதிகளும், சிறைக் காவலர்களும் அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்களுக்குள் நுழைந்து தமிழர்களை துன்புறுத்தி வருவதாக அவர்கள் அதில் தெரிவித்திருந்தனர். தமிழ்க் கிராமங்களுக்குள் நுழையும் சிங்களைச் சிறைக்கைதிகள் அக்கிராமங்களைக் கொள்ளையிட்டு வருவதாகவும், வீடுகளும் உடமைகளும் அவர்களால் அழிக்கப்பட்டு வருவதாகவும், பல தமிழ்ப் பெண்களை இவர்கள் பாலியல் வன்புணர்வு செய்துவருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். பாலியல் வன்புப்ணர்வுகள் தொடர்பான குறிப்பில் ஒவ்வொரு சம்பவமும் விலாவாரியாக முன்னணியினரால் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் முன்னணியினரின் எந்த வேண்டுகோளையும் ஜெயார் கண்டுகொள்ளவில்லை. மேலும் அவரது அமைச்சர்களால் முல்லைத்தீவுக் கரையோரப்பகுதிகளில் சிங்கள மீனவக் குடும்பங்களைக் குடியேற்றுவதற்காக 1,000 வீடுகளைக் கட்டப்போவதாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டபோது தமிழ் மக்கள் மேலும் கொதித்துப் போயினர். மீன்பிடி அமைச்சரான பெஸ்ற்றஸ் பெரேரா, இந்த ஆயிரம் வீடுகளும் கொக்கிளாய் நாயாறு ஆகிய தமிழ்க் கிராமங்களிலேயே அமைக்கப்படவிருப்பதாக அறிவித்தார். தமிழர் தாயகத்தில் சிங்கள அரசாங்கம் செய்யவிருக்கும் கைங்கரியம் பெஸ்ற்றஸ் பெரேராவின் முல்லைத்தீவுச் சிங்களக் குடியேற்றத் திட்ட அறிவிப்பினூடாக வெட்ட வெளிச்சமாகியது. வலி ஓய சிங்களக் குடியேற்றத்தினூடாக தமிழ் மக்களின் வளமான பயிர்ச்செய்கை நிலங்களை சிங்களவர்கள் ஆக்கிரமிக்க முல்லைத்தீவு கரையோரத்தில் திட்டமிடப்பட்டிருக்கும் சிங்கள மீனவக் குடியேற்றங்களால் தமிழரின் மீன்பிடி வளமும் சிங்களவர்களால் சூறையாடப்படும் நிலை உருவாக்கப்பட்டிருந்தது.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியில் சிங்களச் சிறைக்கைதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடியேற்றம் தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த தாயகம் என்றும் நிறுவும் நோக்கத்திற்காக தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்த கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு மட்டுமன்றி, அதனுடன் தொடர்புபட்ட் ஏனைய அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் ஆகியவற்றிற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்றும் வளங்களைப் பாவித்து வந்தார். ஆனால் ஜெயவர்த்தனவின் திட்டமான தமிழர் தாயகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைப் பூரணமாக இராணுவமயப்படுத்துவதற்கு அவருக்கு பெருமளவு நிதியும், வளங்களும் தேவைப்பட்டது. 1983 ஆம் ஆண்டின் தமிழினத்தின் மீதான இனவழிப்பு அரசின் நிதியிருப்பை வெகுவாகப் பாதித்திருந்தது. திறைசேரி முற்றாகக் காலியாகியிருந்தது. ஆகவே "தெற்கில் ஏற்பட்டுவரும் கலவர நிலையினை கட்டுப்படுத்துவதற்கு அப்பகுதியில் வாழும் நிலமற்ற சிங்கள மக்களை வட கிழக்குப் பகுதியான வெலி ஓயவில் குடியேற்ற நிதியுதவி" என்கிற போர்வையில் குடியேற்றங்களை இராணுவமயப்படுத்தும் தனது திட்டத்திற்கு உலக வங்கியிடம் கோரிக்கை ஒன்றும் ஜெயாரின் அரசால் முன்வைக்கப்பட்டது. ஜெயாரின் நோக்கத்தினை நடைமுறைப்படுத்தும் திட்டம் ஒன்று குறித்து நான் அறிந்திருந்தேன். மகவலி அபிவிருத்தித் திட்டத்தில் "L" பிரிவில் பணப்பயிர்களான மரமுந்திரிகை மற்றும் சோயா ஆகியவற்றைப் பயிரிடுவதற்கான ஆலோசனைகளை வழங்கவென்று இரு இஸ்ரேலிய விவசாய நிபுணர்களை அரசு அமர்த்தியது. அவர்களுள் ஒருவர் ஜெருசலேம் பல்கலைக்கழகத்தில் விவசாயத்துறைப் பேராசிரியராகக் கடமையாற்றியவர். மற்றையவர் சோயா பயிற்ச்செய்கையில் இஸ்ரேலின் நெகேவ் பாலைவன பயிர்ச்செய்கைத் திட்டத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனால் 1984 ஆம் ஆண்டு கென்ட் மற்றும் டொலர் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலினால் இம்முயற்சி கைவிடப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பங்குனி 24 ஆம் திகதி லலித் அதுலத் முதலி தேசியப் பந்தோபஸ்த்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இணைந்த படைகளின் கட்டளை மையத்திற்கு வழங்கப்பட்ட கடமையினை அவர் பொறுப்பெடுத்தார். வைகாசி முதலாம் வாரத்தில் அவர் மாங்குளத்திற்குச் சென்றிருந்தார். வவுனியாவில் மலையகத் தமிழர்கள் குடியமர்த்தப்பட்டிருந்த பகுதிகளுக்கு வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் ஆர்தர் ஹேரத்தையும் லலித் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றார். அவரது பயணத்தை பதியும் அரச ஊடகவியலாளராக நானும் அவருடன் சென்றிருந்தேன். தமிழ் தொழிலதிபர்களால் அமைக்கப்பட்ட பல பண்ணைகளில் இரு பண்ணைகளான கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளுக்கும் நாம் சென்றோம். லலித்தின் விஜயத்தின் பின்னர் ஓரிரு மாதங்களிலேயே அங்கு குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை அரசு அடித்து விரட்டியிருந்தது. ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தனவும் அவரது அணியினரும் எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருந்தனர். ரவி ஜெயவர்த்தன ஆனி 21 இலிருந்து ஆடி 1 ஆம் திகதிவரை இஸ்ரேலிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இஸ்ரேலினால் பலஸ்த்தீனர்களின் தாயகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எல்லையோரக் கிராமங்கள் அனைத்திற்கும் அவர் சென்று பார்வையிட்டார். மேற்க்குக்கரையில் ஆயுதமயப்படுத்தப்பட்டிருக்கும் யூதக் குடியேற்றவாசிகளையும் அவர் சந்தித்தார். யூதக் குடியேற்றங்களை உருவாக்குவதில் இஸ்ரேலிய அரசுகள் கைக்கொண்ட நடைமுறையினை நன்கு அறிந்துகொண்டதுடன், பலஸ்த்தீன ஆயுத அமைப்புக்களின் தாக்குதல்களிலிருந்து தம்மைக் காத்துக்கொள்ள யூதக் குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் இராணுவப் பயிற்சிகள் மற்றும் ஆயுதங்கள் குறித்தும் அவர் அறிந்துகொண்டார். சட்டர்டே ரிவியூவில் வந்த அறிக்கையின்படி, இஸ்ரேலுக்கு ரவி ஜயவர்த்தனவும் அவரது குழுவினரும் மேற்கொண்ட விஜயத்திற்குப் பின்னர் பதவியா பகுதியில் மிக மும்முரமான சிங்களக் குடியேற்றங்கள ஏற்படுத்தப்படலாயின. பலஸ்த்தீனப் பகுதிகளை ஆக்கிரமித்து இஸ்ரேல் செய்துவரும் அவசர அவசரமான யூதக் குடியேற்றங்களுக்கு ஒப்பான பாணியில் இச்சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட ஆரம்பித்தன. 1984 ஆம் ஆண்டு ஆவணி மாதம் கொழும்பில் இடம்பெற்ற அரச மற்றும் பாதுகாப்பு உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமொன்றில் வவுனியா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்துவந்த பதவியாவை அநுராதபுர மாவட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பிரதேசத்தின் நிர்வாகம் இணைந்த பாதுகாப்புப் படைகள் கட்டளைத் தலைமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், தமிழர்கள் இப்பகுதிக்குள் நுழைவதும் முற்றாகத் தடைசெய்யப்பட்டது. இப்பிரதேசமும் வலி ஓய என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது ஒரு புதிய பெயர் அல்ல. மணல் ஆறு எனும் தமிழ்ப் பெயரின் நேரடிச் சிங்கள மொழிபெயர்ப்பே இந்தப் பெயர் ஆகும். மணல் என்பது சிங்களத்தில் வலி என்றும், ஆறு என்பது ஓய என்றும் அழைக்கப்படுவது தெரிந்ததே. மலையகத் தமிழர்கள் குடியேறி வாழ்ந்துவந்த பகுதிகளுக்குள் ஐப்பசி 1984 இல் நுழைந்த சிங்கள அதிகாரிகளும், இராணுவத்தினரும் அங்கிருந்து அவர்களை உடனடியாக வெளியேறவேண்டும் என்று அச்சுருத்தினார்கள். பல தமிழ்க் குடியேற்றவாசிகள் இராணுவத்தினரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டனர். அவர்களின் குடிசைகள் எரியூட்டப்பட்டதுடன், பயிரிடப்பட்ட நிலங்களும் இராணுவத்தினரால் அழிக்கப்பட்டன. இவ்வாறே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் குடியேறி வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களும் அடித்து விரட்டப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு,ஐப்பசி மாதம் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமாணி அறிவிப்பின்படி கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டதுடன் அவை திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்துப் பத்திரிக்கையாளர்களுடன் சில நாட்களின் பின்னர் பேசிய லலித் அதுலத் முதலி, திறந்தவெளிச் சிறைச்சாலை ஒன்றிற்கான நிலம் ஒன்று நெடுங்காலமாகத் தேடப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான நிலம் இவ்விரு பண்ணைகளிலும் கிடைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் தெல்கொடவினால் அறிமுகப்படுத்தப்பட்ட கைதிகளுக்கான முன்மாதிரியான திறந்தவெளிச் சிறைச்சாலைத் திட்டம் குறித்து லலித் கிலாகித்துப் பேசினார். சிறைச்சாலைகளில் நன்நடத்தையினை வெளிக்காட்டும் கைதிகளுக்கு அரச காணிகளில் குடியேறி தமது வாழ்க்கையினை தமது குடும்பங்களுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கும் திட்டமே அதுவாகும். ஆனால் இத்திட்டத்திற்கான காணிகளைத் தொடர்ச்சியாக சிறைச்சாலைகள் அமைச்சு கண்டுபிடிப்பதில் இருந்த சிக்கலினால் இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. ஆகவே கென்ட் மற்றும் டொலர் பண்ணைகளில் ஆதுமீறி ஆக்கிரமித்து நின்ற மலையகத் தமிழர்களை தம்மால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பண்ணைகளில் 150 சிங்களக் கைதிகளையும் அவர்களின் குடும்பங்களையும் குடியேற்றப்போவதாக லலித் அதுலத் முதலி அறிவித்தார். பதவியா சிங்களக் குடியேற்றத்தில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் சிங்கள இராணுவ கொமாண்டோ அணி ஆனால் திறந்த சிறைச்சாலை எனும் திட்டத்தினூடாக சிங்கள அரசு செய்ய நினைப்பது தமிழர் தாயகத்தின் இதயப்பகுதியினை அரச ஆதரவில் சிங்களமயப்படுத்துவதுதான் என்பதை தமிழர்கள் மிகவும் தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். இக்காலப்பகுதியில் சர்வகட்சி மாநாட்டிற்காக கொழும்பில் தங்கியிருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவரான அமிர்தலிங்கம் அரசின் இந்தத் திட்டத்தினை கடுமையாகக் கண்டித்தார். பி பி சி இன் தமிழ்ச்சேவைக்கு அவர் வழங்கிய செவ்வியில், "இந்த திறந்த சிறைச்சாலைத் திட்டம் தெற்கின் எங்கோ ஒரு பகுதியில் உருவாக்கப்பட்டிருந்தால் நாம் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் தமிழர் தாயகத்தின் இதயப்பகுதிக்குள் அப்பட்டமான சிங்களக் குடியேற்றத்தினை திறந்தவெளிச் சிறைச்சாலை எனும் போர்வைக்குள் அரசு நடத்துகிறது" என்று கூறினார். மலையகத் தமிழர்களை அடக்குமுறையினைப் பாவித்து பலவந்தமாக கென்ட் - டொலர் பண்ணைகளில் இருந்து அரசும் இராணுவமும் அடித்துவிரட்டியதை தொண்டைமானும் கடுமையாகக் கண்டித்திருந்தார். தனது கண்டனத்தை அமைச்சரவையில் அவர் பதிவுசெய்தார். தமிழர் தாயகத்தில் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் அப்பட்டமான சிங்களக் குடியேற்றம் தமிழர்களைப் பெரிதும் கோபப்பட வைத்திருந்தது. சென்னையில் இதுகுறித்து அறிக்கையொன்றினை வெளியிட்ட ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலக்குமார், "இது ஒரு முற்றான ஆக்கிரமிப்பு" என்று கூறியிருந்தார். ஏனைய போராளி அமைப்புக்களும் இதுகுறித்த தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தன. ஆனால் பிரபாகரன் மெளனமாக இருந்தார். அவர் தனது போராளிகளை இதற்கான பதிலை வழங்குவதற்குத் தயார்ப்படுத்தியிருந்தார்.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
குரந்தன் ஐய்யனார் ஆலயத்தை சிங்கள பெளத்த விகாரையாக்க ஒன்றுசேர்ந்த சிறில் மத்தியூ, முல்லைத்தீவு இராணுவம் மற்றும் ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை நிர்வாகம் - சட்டர்டே ரிவியூ கட்டுரை சிங்கள பெளத்த இனவாதிகளின் திட்டத்தினை தமிழர்கள் நன்கு அறிந்தே இருந்தனர். சிங்கள அரசுகளால் நிதியளிக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்த சிங்கள பெளத்த மயமாக்கலினை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இயலாமையும், ஆத்திரமும் அவர்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. 1982 ஆம் ஆண்டு, ஆவணி மாதம், யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஆங்கிலப் பத்திரிக்கையான சட்டர்டே ரிவியூ வில் வெளிவந்த கட்டுரை ஒன்றினை இங்கு பதிகிறேன். சைவத் தமிழர்களின் கவலைகள் இக்கட்டுரையில் பரவிக் கிடந்தது. பிரபாகரன் சிங்கள பெளத்த மயமாக்கலினை எதிர்க்கத் துணிந்தபோது தமிழர்கள் அவரின் பின்னால் நின்று ஆதரவளிக்கத் தொடங்கினர். "தமிழர்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தின் குரந்தன் மலைப் பகுதி மிகவும் அமைதியான ஒரு பிரதேசம். இங்கே சைவ மற்றும் பெளத்த மதத்தின் புராதனச் சின்னங்கள் காணப்படுகின்றன. ஆனால் வெகுவிரைவில் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சினால் இப்பகுதி தனியே சிங்கள பெளத்தர்களுக்கான ஏக வணக்கஸ்த்தலமாகவும், ஒரு சிங்களக் குடியேற்றமாகவும் மாற்றப்படப் போகின்றது". "இவ்வமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் முன்னாள் பொதுக் கூட்டுத்தாபன நிர்வாக அதிகாரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் பலம்பொருந்திய தொழிற்சங்கத்தின் தலைவருமான முக்கியஸ்த்தர் ஒருவர், இச்சிங்கள மயமாக்கல்த் திட்டத்தினை முன்னெடுத்து வருகிறார். அவருக்குத் துணையாக பெருமளவு இராணுவத்தினர் களமிறக்கப்பட்டு வருகின்றனர்". "இப்பகுதியில் இருந்து 20 மைல்கள் தொலைவில் இருக்கும் ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்திருக்கும் ஓட்டுத் தொழிற்சாலையில் பணிபுரியும் பல பணியாளர்கள் இப்புதிய விகாரை நிர்மானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வமைச்சின் கீழ் வழங்கப்படுள்ள பல வாகனங்களும், ஏனைய வளங்களும் விகாரை நிர்மாணத்திற்கு அமைச்சால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன". "கடந்த கார்த்திகை மாதத்திலிருந்து இப்பகுதியில் காணப்பட்டு வந்த பல சைவ ஆலயங்களின் எச்சங்களை இராணுவத்தினர் அங்கிருந்து அகற்றி தமது வாகனங்களில் ஏற்றிச் செல்வதை இப்பகுதி மக்கள் பார்த்திருக்கின்றனர். வன்னிப்பகுதித் தமிழர்களால் தமது குலதெய்வம் என்று வணங்கப்பட்டு வரும் குரந்தூர் ஐய்யனார் ஆலயம் அமைந்திருக்கும் குரந்தன் மலைப்பகுதி, நாகஞ்சோலை எனும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கிறது. இப்பகுதியில் விகாரைக் கட்டுமானப் பணிகள் பல மாதங்களுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அருகிலிருக்கும் ஓட்டுத்தொழிற்சாலையில் பணிபுரியும் பல ஊழியர்கள் இக்கட்டுமானப் பணிகளில் அரசால் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். விகாரை அமைக்கும் பணிகளை மிகவும் இரகசியமாகப் பேணிவரும் அரசு, இதுகுறித்து தகவல்கள் வெளியே கசிவதையும் தடுத்து வருகிறது". "இதனையடுத்து இப்பகுதியில் வாழும் தமிழர்கள் சிலர் விகாரை கட்டுமானம் நடக்கும் பகுதியில் சைவர்களின் சூலம் ஒன்றினை நாட்டி, அதனைச் சூழ குடில் ஒன்றினையும் அமைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் முல்லைத்தீவு இராணுவ முகாமில் கடமையாற்றிக்கொண்டு, விகாரை கட்டுமானத்திலும் பங்கெடுக்கும் இராணுவத்தினர், அச்சூலத்தை பிடுங்கி எறிந்துள்ளதுடன், குடிலையும் அழித்திருக்கிறார்கள். மேலும் இப்பகுதியில் வாழ்ந்துவந்த தமிழர்களை இராணுவம் அடித்து விரட்டியுள்ளதுடன், பல தமிழ் இளைஞர்களையும் கைதுசெய்து இழுத்துச் சென்றிருக்கின்றது. அத்துடன், வனப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இவ்விகாரைக்கான கட்டுமானப் பொருட்களை இலகுவாக எடுத்துச் செல்லும் நோக்கில் ஒட்டுசுட்டானிலிருந்து விகாரை அமைக்கப்பட்டு வரும் நாகஞ்சோலை வனப்பகுதி வரைக்கும் புதிய தார் வீதியொன்றும் அரசால் இடப்பட்டு வருகிறது". “தமிழரின் தாயகமான இப்பகுதியில் சிங்கள பெளத்தர்களுக்கென்று ஏகமாகக் கட்டப்பட்டு வரும் விகாரையின் மூலம் மூன்று முக்கிய விடயங்களை கைத்தொழில், விஞ்ஞான அலுவல்கள் அமைச்சு செய்துவருகிறது. 1. இப்பகுதியில் காணப்பட்டு வந்த வரலாற்றுச் சான்றுகளை முழுமையாக அழித்தன் ஊடாக வரலாற்றினைக் கண்டறிய எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படக்கூடிய அனைத்து முகாந்திரங்களையும் அடியோடு இல்லாதொழித்திருக்கிறது. 2. இப்பகுதியில் சரித்திர காலம் தொட்டு வாழ்ந்து வரும் தமிழர்கள் இங்கிருந்து விரட்டப்பட்டு அவர்களின் நிலங்கள் புதிய சிங்களக் குடியேற்றக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. 3. இங்கு காணப்பட்ட சைவ ஆலயங்களின் எச்சங்கள் முற்றிலுமாக பிடுங்கி எடுக்கப்பட்டு, பத்திரமாக அகற்றப்பட்டு, இப்பகுதியில் சைவர்கள் வாழ்ந்ததற்கான சாட்சியங்கள் அடியோடு இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இவை எல்லாவற்றினைக் காட்டிலும் மிகுந்த அச்சந்தரும் செயற்பாடொன்று நடப்பில் இருக்கும் அரசின் கீழ் மிக மூர்க்கமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதுதான் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தமிழரின் இருப்பிற்கான தொடர்ச்சி பாரிய திட்டமொன்றின் ஊடாக சிதைக்கப்பட்டு வருகின்றமை". "வவுனியாவில் உருவாக்கப்பட்டிருக்கும் பதவியா சிங்கள் குடியேற்றம் கிழக்கு நோக்கி விஸ்த்தரிக்கப்பட்டு கொக்கிளாய்க் குளம் நோக்கி விரிவடைந்து வருகிறது. இப்பகுதியில் இருந்து வட கிழக்கில் அமைக்கப்பட்டிருக்கும் முல்லைத்தீவு இராணுவ முகாம் மற்றும் வட மேற்கில் அமைக்கப்பட்டிருக்கும் ஒட்டுசுட்டான் தொழிற்சாலை ஆகிய இரு பிரதான அரச அமைப்புக்களின் அழுத்தங்களினால், அண்மைய காலங்களில் தமிழர் தாயகத்தின் ஏனைய இடங்களில் நடைபெற்றதைப் போன்று, பதவியாவில் பொங்கிவழியும் சிங்களவர்களின் எண்ணிக்கை இப்பகுதிவரை நீட்டிப் பரவப்படப்போகின்றது என்பது நிதர்சனமாகிறது". "இது நடக்கும் பட்சத்தில் இம்மூன்று மாவட்டங்களிலும் வாழும் தமிழர்களுக்கிடையிலான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்படப் போகின்றது. இது தனியே தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டுவிடும் என்பதற்கு அப்பால், இப்பகுதிகளில் இனிவரும் காலங்களில் நடக்கப்போகும் சிங்களக் குடியேற்றங்களை எதிர்க்கும் திராணியும் இப்பகுதிவாழ் தமிழர்களிடத்தில் இல்லாதொழிக்கப்பட்டிருக்கின்றது". என்று பதிவுசெய்யப்பட்டிருந்தது.- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழ் பெளத்தர்களின் எச்சங்களைத் தமதென்று உரிமைகோரி, தமிழர் தாயகத்தில் சிங்கள பெளத்த குடியேற்றங்களை முடுக்கிவிட்ட இனவாதிகள் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலையில் அமைக்கப்பட்டுவரும் சிங்கள பெளத்த விகாரை ஜெயவர்த்தனவும் அவரது ஆலோசகர்களும் தமிழரின் தாயகக் கோட்பாட்டினை, அதன் அடிப்படையினைச் சிதைப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, அவரது அரசின் கைத்தொழில் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவிருந்தவரும் ஜெயாரினால் இனவாதம் கக்குவதற்காக களமிறக்கப்பட்டவருமான சிறில் மத்தியு, வடக்குக் கிழக்கை சிங்கள - பெளத்த தாயகமாக மாற்றும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தத் தொடங்கியிருந்தார். சிங்கள பெளத்த வெறி தலைக்கேறிய, நடுத்தரவர்க்கத்தை சேர்ந்த, சிங்கள சாதிய அமைப்பில் இடைநிலை மற்றும் சிறில் மத்தியூவின் சாதியான கரவா வகுப்பிலிருந்து வரும் பல கல்விமான்கள் வடக்குக் கிழக்கில் பெளத்த எச்சங்கள் என்று தாம் கருதுபவற்றை மீள உருவாக்கி அவற்றைச் சுற்றி சிங்கள மக்களைக் குடியேற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டு வரலாயினர். இவ்வாறு அவர்களால் அடையாளம் காணப்பட்ட பலவிடங்களில் புதிதாக விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு அவற்றைச் சூழவும் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். ஆனால் இவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட புராதன பெளத்த எச்சங்கள் தமிழ் பெளத்தர்களுக்குச் சொந்தமானவை என்றும், ஒருகாலத்தில் தமிழர்களில் ஒரு பகுதியினர் பெளத்தர்களாக இருந்தனர் என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட சரித்திரத் தகவல்கள் இருந்தபோதிலும், இந்தச் சிங்களக் கல்விமான்களால் இந்த உண்மை வேண்டுமென்றே மறைக்கப்பட்டு வந்தது. வவுனியா வடக்கில் தமிழ் பெளத்தர்களின் புராதனச் சின்னமொன்றும் சிங்கள மயமாக்கப்பட்டு வரும் காட்சி தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகள் அசோகச் சக்கரவர்த்தியின் காலத்தில் இருந்து 13 ஆம் நூற்றாண்டின் சோழர் காலம் வரைக்கும் தமிழ் பெளத்தர்கள் வாழும் பகுதியாக இருந்திருக்கிறது. இதனால் இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பெளத்த தமிழர்கள் உருவாக இது காரணமாக அமைந்திருந்தது. தமிழ் பெளத்தர்களின் பிரசன்னமும், ஆதிக்கமும் அநுராதபுர காலத்து மன்னராட்சியின் அவைகளிலும் கணிசனமான அளவு காணப்பட்டு வந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நூலாகக் கருதப்படும் மகாவம்சத்தில் சோழ பெளத்தர்கள் என்று அழைக்கப்பட்ட தமிழ் பெளத்தர்களுக்கும் சிங்கள பெளத்தர்களுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்று வந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் இருக்கும் இராஜராஜ நூதணசாலையில் வைக்கப்பட்டிருக்கும் 14 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை பெளத்த நூல்களும், ஓலைகளும் பாளி மொழியிலேயே எழுதப்பட்டு வந்தமையினால், தமிழ் பெளத்தர்களால் உருவாக்கப்பட்ட நூல்களை சிங்கள பெளத்தர்களின் நூல்கள் என்று உரிமை கோருவது பெளத்த இனவாதிகளுக்கு வசதியாகிப் போயிற்று. தமிழ் பெளத்தர்களால் சிங்கள மொழிக்கும் அதன் இலக்கணத் திருத்தத்திற்கும் ஆற்றப்பட்ட பணி மகத்தானது என்பதைப் பறைசாற்றச் சான்றுகளும் இருக்கின்றன.தமிழ் பெளத்தர்களால் எழுதப்பட்ட வீரசோலியம் எனும் நூலில் காணப்படும் பல இலக்கணத் திருத்தங்கள் சிங்கள இலக்கணப் பயன்படுத்தலில் எங்கும் பரவிக் கிடக்கின்றன. சோழர் காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர் தாயகத்தில் வளர்ந்துவந்த சைவ மதத்தின் தாக்கத்தால் அக்காலத்தில் காணப்பட்ட தமிழ் பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு சைவர்களின் ஆலயங்கள் அமைக்கப்பட்டு வரலாயின. இதனையே மத்தியூவும் அவரது இனவாத நண்பர்களும் சிங்கள பெளத்தர்களின் விகாரைகள் அழிக்கப்பட்டு, சைவ ஆலயங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக சாதாரணச் சிங்கள மக்களிடையே பெரியளவில் பிரச்சாரம் செய்து வந்தனர். பெளத்த மதத்தினை விரும்பாத தமிழர்கள் புராதண பெளத்த விகாரைகளை அழித்து சைவக் கோயில்களை நிர்மாணித்து வருவதால், அக்கோயில்களை இடித்து, அங்கே மீளவும் பெளத்த விகாரைகளை அரச செலவில் நிர்மாணிப்பது என்பது அவசியமாகிறது என்று தமது செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்து வந்தனர் மத்தியுவும் அவரது சகபாடிகளும். இவ்வாறு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட புதிய விகாரைகளைச் சுற்றித் தவறாது சிங்கள மக்களை அவர்கள் குடியேற்றி வந்தனர். ரணிலின் நல்லிணக்க அரசாங்கத்தால் 500 மில்லியன் செலவில் தமிழர் தாயகத்தில் உருவாக்கப்பட்ட 1000 விகாரைகள் திட்டம் இன்றும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. சிறில் மத்தியூவின் பெளத்த சிங்களக் குடியேற்றங்களுக்கு சிங்கள ஊடகங்கள் பெருமளவு முக்கியத்துவம் கொடுத்து வந்ததுடன் சிங்கள தமிழ் இனங்களுக்கிடையிலான பிணக்கிற்கு மத ரீதியிலான இன்னொரு களம் ஒன்றினையும் ஏற்படுத்திக் கொடுத்தனர். இதனூடாக பெளத்த சைவ மோதல் ஒன்றிற்கான களமுனை திறக்கப்பட்டலாயிற்று. அரச மரத்தின் கிளை ஒன்றினை தமிழர் ஒருவர் தறிப்பதாகப் பிரச்சாரப்படுத்தப்பட்ட நிகழ்வொன்று, பெளத்த மதச் சின்னங்களை தமிழ்ப் பயங்கரவாதிகள் அவமதித்து வருகிறார்கள் என்கிற தொனியில் சிங்கள ஊடகங்களால் தொடர்ச்சியாகப் பாவிக்கப்பட்டு வந்தது. தமிழர் தாயகத்தில் பெளத்த எச்சங்களைத் தேடும் சிங்கள இனவாதிகளின் நடவடிக்கைகள் அரசியல் புதையல்களைத் தேடும் முயற்சியாக அன்று காணப்பட்டது. இதன் அடிப்படையிலேயே சிங்கள இனவாதிகள், தமிழர்களின் தாயகத்தின் ஒரு அங்கமான கிழக்கு மாகாணத்தில் புராதண சிங்கள பெளத்த நாகரீகம் காணப்பட்டதகாக் கூறி, அதனைத் தமது தாயகம் என்று உரிமை கோரி, அங்கு மீண்டும் பெளத்த விகாரைகளையும் சிங்களக் குடியேற்றங்களையும் உருவாக்குவதில் ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு செய்வதனால் சைவத் தமிழர்கள் மீது அது செலுத்தப்போகும் தாக்கத்தினை சிங்கள அரசியல்வாதிகளோ, கல்விமான்களோ சற்றேனும் உணரமறுத்துவந்தமை பெரு வருத்தத்தினை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
சரித்திரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் மிகப்பெரிய தாக்குதல் என்று வர்ணிக்கப்படும் தாக்குதலில் 140 யுத்த விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதல்களில் இதுவரை இராணுவ மையங்கள், ஏவுகணை நிலைகள், ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் தயாரிக்கும் நிலையங்கள் மற்றும் விமான எதிர்ப்பு நிலைகள் என்பனவும் இலக்குவைக்கப்பட்டிருக்கின்றன. உள்ளூர் தகவல்களின்படி ஈரானின் முக்கிய படையணியான இஸ்லாமிய புரட்சிகர ராணுவத்தின் பிரதான தலைமையகமும் தாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. முதலாவது தாக்குதல்கள் தலைநகர் டெஹ்ரான் மற்றும் கராஜ் ஆகிய பகுதிகளிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. தன்மீது ஈரானும், அதன் முகவர்களும் கடந்த சில வருடங்களாக நடத்திவரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இதனை தான் நடத்துவதாக இஸ்ரேல் கூறுகிறது. இத்தாக்குதல்கள் குறித்து அமெரிக்க அதிபர் பைடனுக்கும், உப அதிபர் கமலா ஹரிஸிற்கும் முறைப்படி அறிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
https://x.com/Sherin27964181/status/1849969321373798560- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் தலைநகர் டெஹ்ரானிலிருந்து 30 மைல்கள் தொலைவில் இருக்கும் கராஜ் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் அணுமின் நிலையத்திற்கு அருகிலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. ஈரான் மீதான தாக்குதலை டெல் அவிவில் அமைந்திருக்கும் இராணுவத் தளம் ஒன்றிலிருந்து தளபதிகளுடன் மேற்பார்வையிடும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது , சேதங்கள் இல்லை என்று ஈரானின் அரசச் செய்திச்சேவை தொடர்ச்சியாகக் கூறிக்கொண்டு வந்தபோதிலும், டெஹ்ரானில் நடக்கும் பாரிய குண்டுவெடிப்புக்களால் மக்கள் பீதியுடன் காணப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. ஜெருசலேம் போஸ்ட் எனும் இஸ்ரேலிய இணையப் பத்திரிக்கை டெஹ்ரான் மீதான தாக்குதலின்போது எடுக்கப்பட்ட குண்டுவெடிப்பொன்றினை வெளியிட்டிருக்கிறது. https://www.jpost.com/breaking-news/article-826117 ஈரானின் விமான எதிர்ப்பு பொறிமுறையினைக் கடந்து சில குண்டுகள் இலக்குகள் மீது பாய்ந்திருக்கின்றன. எண்ணெய்க் கிணருகல் மீதான தாக்குதலைத் தவிர்த்து வெறுமனே இராணுவ இலக்குகள் மீது மட்டும்தான் இத்தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளங்களும் இலக்குவைக்கப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீது இரண்டாவது வலிந்த தாக்குதலில் இஸ்ரேல் தற்போது ஈடுபட்டு வருகிறது. https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
உண்மைதான், பி பி சி செய்திகளின்படி தாக்குதலுக்குப் பாவிக்கப்படக் கூடிய ஆயுதங்கள் பற்றிய விடயங்களே கசியவிடப்பட்டுள்ளன. இடங்கள் அல்ல. எனது தவறான புரிதல் என்றுதான் நினைக்கிறேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. உண்மை, இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் உளவுத்தகவல்களே கசிய விடப்பட்டுள்ளன.- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரானின் முக்கிய இலக்குகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றின் பட்டியலொன்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் இஸ்ரேலினால் சில தினங்களுக்கு முன்னர் கையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தப்பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் வேண்டுமென்றே வெளியே கசியவிட்டதால் இலக்குகள் குறித்த தகவல்களை ஈரானும் அதன் முகவர்களும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது. அதனால் இப்பாட்டியலிற்குள் அடங்காத வேறு இலக்குகள் சிலவற்றை இஸ்ரேல் இனங்கண்டு தாக்குதலை நடத்தியிருக்கிறது. தாக்குதல் நடத்தப்படுவதற்குச் சற்று முன்னர்தான் அமெரிக்காவிற்கு இதுபற்றிய தகவல்களை இஸ்ரேல் வழங்கியிருக்கிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் முக்கிய இடங்களில் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக மக்கள் கூறியிருக்கின்றனர். ஆனால் அச்சத்தங்கள் இஸ்ரேலிய ஏவுகணைகளை தமது ஏவுகணை எதிர்ப்பு பொறிமுறை வானில் வைத்து தாக்கியழிக்கும்போது ஏற்பட்ட வெடிப்புச் சத்தங்கள் என்று ஈரான் கூறியிருக்கிறது. மேலும் இஸ்ரேலின் தாக்குதலினால் தமக்கு அவ்வளவாகப் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் ஈரான் கூறுகிறது. https://edition.cnn.com/world/live-news/israel-iran-lebanon-gaza-war-10-25-24-intl-hnk/index.html https://www.foxnews.com/world/israel-begins-retaliatory-strikes-against-iran-following-missile-barrage-targeting-israelis https://www.bbc.com/news/live/cn4v67j88e0t https://www.reuters.com/world/middle-east/explosions-heard-iran-syria-middle-east-braces-israeli-retaliation-2024-10-25/- ஈரான் மீதான தனது பதில் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல்
ஈரான் மீதான தனது பதில்த் தாக்குதலை ஆரம்பித்த இஸ்ரேல் இம்மாத ஆரம்பத்தில் தன்மீது நடத்தப்பட்ட 180 இற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்கும், ஈரானின் கூலிகளான ஹமாஸ், ஹிஸ்புள்ளா, ஹூத்தீக்கள், ஈராக்கிலும் சிரியாவிலும் இயங்கும் இஸ்லாமியக் குழுக்கள் ஆகியவற்றின் ஊடாக தன்மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களுக்கும் பதிலடியாக இஸ்ரேல் சனி அதிகாலையிலிருந்து ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகிறது - பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Important Information
By using this site, you agree to our Terms of Use.