ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்
Everything posted by ரஞ்சித்
-
யாழில். பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு – சிவில் சமூகம் புறக்கணிப்பு!
சுமந்திரனோ அல்லது அவரது தலைவர் சம்பந்தனோ தமிழ் பொதுவேட்பாளர் என்பதை முற்றாக நிராகரித்துவிட்டவர்கள். ரணிலை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் உறுதியாக நிற்பவர்கள். ஆகவே, சுமந்திரன் அழைத்திருக்கும் இந்தக் கலந்துரையாடல் என்பது தமிழ்ப் பொதுவேட்பாளர் எனும் கருதுகோள் மீது மக்களுக்கு ஐயத்தையும், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி, மக்களை அதிலிருந்து விலகிச் செல்ல வைக்கும் சூழ்ச்சியே அன்றி வேறில்லை. சுமந்திரனின் இந்தக் கோரிக்கையினை சிவில் அமைப்பினர் நிராகரித்தமை நியாயமானதே. சரியான முடிவு. இங்கு ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கவில்லை. சைவம், கத்தோலிக்கம் ஆகிய தமிழர்களின் இரு பிரதான மதங்களையும் சேர்ந்த மதத் தலைவர்கள் இருக்கிறார்கள். மக்களை வழிநடத்தவேண்டிய அரசியல்த் தலைவர்கள் அடுத்த சிங்கள ஜனாதிபதியை உருவாக்கும் நோக்கத்தில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கும்போது, மக்களுக்குத் தலைமை தாங்க மதத் தலைவர்கள் முன்வருவது வரவேற்கப்படவேண்டிய செயலே. பாராட்டுக்கள்.
-
அமெரிக்க ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரேனுக்கு அனுமதி!
வீம்பிற்குப் பிடிக்கும் இந்தச் சண்டையினை நிறுத்திவிட்டு அனைவரும் தத்தமது நாட்டின் நலன்களில் அக்கறை செலுத்துவதே செய்யவேண்டியது. ஒவ்வொரு குடிமகனும் உழைத்த பணத்தில் அரசுகள் எடுத்துக்கொள்ளும் வரிப்பணம் இச்சண்டையில் கரியாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப்பணத்தை சொந்த நாட்டு மக்களின் நலன்களுக்காகப் பாவித்திருக்கலாம். ரஸ்ஸியாவின் எஸ் 300 ஏவுகணைச் செலுத்தியை உக்ரேன் பாவித்த அமெரிக்காவின் ஹிமார்ஸ் ஏவுகணை அழித்துவிட்டது என்று மார்தட்ட, அமெரிக்கா வழங்கிய ஏப்ரகாம் மற்றும் ஜேர்மனின் லெப்பேர்ட் தாங்கிகளைக் கைப்பற்றிய ரஸ்ஸியா மொஸ்கோவில் அவற்றைக் காட்சிப்படுத்திவருகிறது. இந்த எதிரியின் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்துவதும், எதிரியின் உயர் ஆயுத மையங்களை அழிப்பதும் நாம் சரித்திரகாலம் கொண்டு பார்ப்பதுதான். மூடர்கள்.
-
தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - உருத்திரகுமாரன்
நாடுகடந்த அரசாங்கம் இதுவரையில் செய்ததென்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ருத்திரகுமாரைத் தவிர வேறு எவராவது இந்த அரசில் இருக்கிறார்களா என்றும் தெரியாது. இவர் அவ்வப்போது விடும் அறிக்கைகள் வாயிலாகத்தான் இப்படியொரு அமைப்பு இன்னமும் இருக்கிறதென்றே தெரிகிறது. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் குறித்து இவர் கூறும் விடயங்களை நான் எதிர்க்க விரும்பவில்லை. ஏனென்றால், நானும் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்பதைக் கொள்கையளவில் ஆதரிக்கிறேன். பலருக்கு தமிழ் வேட்பாளர் எனும் கருதுகோள் தேர்தல் அரசியல் அடிப்படையிலே மட்டும் அமைந்ததாகவே தெரிகிறது. ஏனென்றால், தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் தமிழருக்கு அரசியலில் அல்லது தேர்தலில் வரப்போகும் ஒரு சிங்கள வேட்பாளரினூடான சலுகைகள் மட்டுமே தெரிகின்றன. ஆனால், தமிழ் வேட்பாளர் எனும் கொள்கை தேர்தல் அரசியலுடன் சம்பந்தப்பட்டதல்ல. இது தமிழர்களின் ஒருமித்த உணர்வுகளுடன், கருத்துக்களுடன், அபிலாஷைகளுடன் சம்பந்தப்பட்டது. அப்படி இல்லையென்றால், அதனை சம்பந்தப்படுத்துவது தமிழர்களின் அனைவரினதும் கடமையென்றே நான் நினைக்கிறேன். இத்தேர்தலை தமிழர்கள் தமது உண்மையான அபிலாஷைகளை, ஒற்றுமையினை, தமது அடையாளத்தை நிரூபிக்கும் சர்வஜன வாக்கெடுப்பாக கருதுவது அவசியம். தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எந்தச் சிங்கள வேட்பாளர் வருவார், அல்லது எவர் வருவதற்கான வாய்ப்பு இல்லாதுபோய்விடும் என்று நாம் கவலைப்படுவது அநாவசியமானது. ஏனென்றால், நாம் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவது சிங்கள தேசத்தின் இன்னொரு சிங்கள பெளத்த இனவாதியைத் தலைவராக்குவதற்காக அல்ல. இந்தத் தெளிவு இருந்தால்ப் போதும்.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
சுமந்திரனை ஒரு மென்மையான அகிம்சாவாதியாக, ஜனநாயக அரசியல்வாதியாக நீங்கள் கருதலாம். அவரது நிலைப்பாடு குறித்து உங்களுக்கு ஆளமான நம்பிக்கையும், உற்சாகமும் இருக்கலாம். அவரது அரசியலினூடாக தமிழர்கள் தமது அபிலாஷைகளை அடைந்துவிடமுடியும் என்று நீங்களை உண்மையிலேயே நம்பலாம். அது உங்களது நிலைப்பாடு. எவரும் கேள்விகேட்க முடியாது. அவ்வாறே, சுமந்திரனை விமர்சிப்போரும், அவரது அரசியலுடன் முரண்படுவோரும் அதற்கான காரணங்களை வைத்திருப்பார்கள். தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அரசியல்வாதியான சுமந்திரன், அதே தமிழ் மக்களிடையே போவதற்கு விசேட அதிரடிப்படை எதற்காகக் காவலுக்கு வரவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? தாமே தெரிவுசெய்து பாராளுமன்றம் அனுப்பிய ஒருவரைத் தாக்குவதற்கான தேவை ஏன் தமிழர்களுக்கு வரவேண்டும்? சுமந்திரனுடன் கூடவே தெரிவுசெய்யப்பட்ட ஏனைய தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் தமது மக்களைப் பார்க்கச் செல்லும்போது விசேட அதிரடிப்படையினருடன் தான் செல்கிறார்களா? இல்லையென்றால், அது ஏன்? சுமந்திரனுக்கெதிரான நிலைப்பாட்டைக் கொண்ட வன்முறையினைக் கையாளும் தமிழர்களுக்கு நீங்கள் ஆதரவளிக்கத் தேவையில்லை. அதனை அவர்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
அதுவல்ல காரணம், மாறாக புலிகளால் செய்யப்பட்ட படுகொலைகளை விமர்சிக்கிறோம் என்கிற போர்வையில் இன்னமும் அதுகுறித்துத் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பதுதான். அமிர், யோகேஸ்வரன், நீலன், ரஜிணி (இது புலிகளாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்), செல்வி என்று நீண்ட பட்டியலே இருக்கின்றது. இப்படுகொலைகளை எவர் தலைகீழாக நின்றாலும் நியாயப்படுத்த முடியாது, அப்படிச் செய்வதிலும் அர்த்தமில்லை. இப்படுகொலைகளால் ஏற்பட்டிருக்கும் குற்றவுணர்வே தேசியம் சார்ந்து நிற்போரை இதுகுறித்து மெளனிக்க வைக்கிறது. எனென்றால், இவை தவறு என்பது அவர்களுக்குத் தெரியும். இவர்களின் மரணங்களை மலினப்படுத்துவது தவறுதான். ஆனால், இக்கொலைகளை எம்மை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப் பேரினவாதம் தனது பிரச்சாரத்திற்காகத் தொடர்ச்சியாகப் பயன்படுத்தியே வருகிறது. தமிழ்ப் புத்திஜீவிகளையும், மிதவாத அரசியல்வாதிகளையும் புலிகள் கொல்கிறார்கள், ஆகவே அவர்களின் போராட்டம் பயங்கரவாதம், அதுகுறித்து உலகம் கரிசணை கொல்லத் தேவையில்லை என்று கூறுகிறது. இதற்குச் சமாந்தரமாகவே தமிழர்களில் ஜனநாயகவாதிகள் என்று தம்மை அழைப்போரும் இப்படுகொலைகளை விமர்சனம் செய்கிறார்கள். சிலவேளைகளில் சிங்கள அரசின் பிரச்சாரங்களுக்கு இந்த தமிழ் ஜனநாயவாதிகளும் அவ்வப்போது உதவியிருக்கிறார்கள். உதாரணத்திற்கு மனிதவுரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், மனோரஞ்சன் போன்ற தமிழ்ப் புத்தி ஜீவிகள். புலிகள் விட்ட தவறுகளை விமர்சிப்பதில் தவறில்லை. ஆனால், எத்தனை காலத்திற்குச் செய்வதாக உத்தேசம்? புலிகள் போன்றதொரு ஆயுத அமைப்பு இனிமேல் உருவாகப்போவதில்லை என்கிற நிலை உறுதியாகிவிட்டபின்னரும், அவர்களின் தவறுகளிலிருந்து நாம் படித்துக்கொள்ளப்போகும் பாடங்கள் எமக்கு எந்தவிதத்தில் உதவப்போகின்றது? புலிகளை தொடர்ச்சியாக விமர்சிப்பதாலேயே அதற்கான எதிர்வினையினை ஆற்றவேண்டியிருக்கிறது. ஏனென்றால், தாம் இருக்கும்வரை தமிழ் மக்களின் விடுதலையினை மட்டுமே மூச்சாகக் கொண்டு அவர்கள் போரிட்டார்கள். அதற்காகவே மடிந்தார்கள். அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் அவர்களின் தியாகங்களாக இருக்கட்டும், அவர்கள் விட்ட தவறுகளை மட்டுமே பேசிக்கொண்டிருப்பதால் எமக்குக் கிடைக்கப்போவது ஏதுமில்லை.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இது சரியான தகவலா? எனென்னெறால், 1944 இல் ஜி ஜி பொன்னம்பலத்தால் உருவாக்கப்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படத் தீர்மானித்தபோது 1949 ஆம் ஆண்டு செல்வநாயகம் தலைமையிலான குழுவினர் பிரிந்து சென்று சமஷ்ட்டிக் கட்சியை ஆரம்பித்தனர். பின்னர் 1977 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவாகும்போது இக்கட்சிகள் ஒன்றுசேர்ந்தது வேறு கதை. 1960 ஆம் ஆண்டுவரை மட்டக்களப்பு மாவட்டத்தின் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றுவந்த நல்லையா 1960 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இணைந்தே போட்டியிட்டார். 1977 வரை தமிழரசுக் கட்சியிலும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியிலும் நின்று தேர்தலில் வென்று பாராளுமன்றம் சென்ற செல்லையா இராஜதுரை 1979 ஆம் ஆண்டு பாராளுமன்றத்திலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குத் தாவினார். 1970 இலிருந்து 1975 வரையான காலப்பகுதியில் தமிழர் விடுதலை முன்னணி எனும் ஒருமித்த தமிழ்க் கட்சிகளுடன் இணைந்துகொண்ட தொண்டைமானின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், 1975 இல் தனி ஈழம் நோக்கிய தமிழ்க் கட்சிகளின் முனைப்பினால் அதிலிருந்து விலகி தனியே அரசியல் நடத்திவருகிறது. ஆக, தமிழ் அரசியல்க் கட்சிகளுக்கிடையிலான பிளவும், சேர்க்கையும் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கும் முன்னரே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆயுதப் போராட்டமே மக்களை அரசியல் ரீதியாகப் பிரித்தது எனும் வாதம் சரியானது அல்ல.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
புலிகள் பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறினார்கள், அதனால்த்தான் முள்ளிவாய்க்கால் நடந்தது என்று கூறுபவர்கள் சற்று பின்னோக்கிச் சென்று பார்ப்பது நல்லது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து சிங்களத் தலைவர்களுக்கும் தமிழர் தரப்பிற்கும் இடையே , தந்தை செல்வா காலத்திலிருந்து, அமிர்தலிங்கம், பிரபாகரன் வரையான காலம் வரை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் எத்தனை? அவற்றுள் எத்தனை சிங்களத் தலைவர்களால் இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ளன? எத்தனை பேச்சுவார்த்தைகள் சிங்களத் தரப்பால் வேண்டுமென்றே முடக்கப்பட்டு தமிழர் தரப்பு வேறு வழியின்றி வெளியேறும் நிலையினை அடைந்திருந்தன? தமிழ் மக்களின் உண்மையான அரசியல் அபிலாஷைகளுக்கும் சிங்களம் தரமுடியும் என்று பேச்சளவில் கூறிய அதிகபட்ச அதிகார அலகிற்கும் இடையில் இருந்த வேறுபாடுகள் என்ன? இக்கேளவிகளுக்கான உண்மையான பதில் உங்கள் எவரிடமாவது இருக்கின்றதா? இருந்தால், தமிழரின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் சிங்களவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை இங்கே பட்டியலிடுங்கள், நான் எனது கருத்துக்களை முற்றாக மீளப்பெற்றுக்கொள்கிறேன். தமிழரின் அரசியல் அபிலாஷைகளை தீர்த்துவைக்கும் தீர்வுகள் முன்வைக்கப்பட்டு, புலிகள் அதனை தூக்கியெறிந்துவிட்டு வந்தார்கள் என்று கூறுபவர்கள் அவற்றை இங்கே தயவுசெய்து பதியுங்கள். நான் எனது கருத்துக்களை முற்றாக மீளப்பெற்றுக்கொள்கிறேன். நிச்சயம் செய்யப்பட வேண்டிய விடயம். ஆனால், தமது சொந்த இலாபங்களுக்காக இதனை அவர்கள் செய்யப்போவதில்லை. ஆனால், இவர்களைத் திருத்தப்போய், திலீபன் போன்ற துணைராணுவக் குழுக்களின் உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பி, தமிழர் தாயகத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றங்களுக்கு நாமே துணைபோவதாகிவிடக்கூடாது.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
இவர்களில் எவரையும் தெரிவுசெய்யவோ அல்லது தெரிவுசெய்யாது விடவோ எமக்கிருக்கும் தேவையென்ன? ஒருவரை விட மற்றையவர் தீமைகளைக் குறைத்தே செய்வார் என்பதற்காக அவருக்கு வாக்களிக்கலாம் என்றால், 2005 இல் ரணில் சர்வதேச வலைப்பின்னலுக்குள் தம்மை வீழ்த்திவிட்டதால் முன்னர் அறிந்திராத மகிந்த வரட்டும் பார்க்கலாம் என்று புலிகள் எண்ணியதை ஏன் நீங்கள் தவறென்கிறீர்கள்? இத்தேர்தலினைத் தமிழர்கள் தமது ஒற்றுமையினைக் காட்ட, தமது கோரிக்கைகளை முன்வைத்து அதற்கான மக்கள் ஆணையாக இதனை மாற்ற வேண்டும். இத்தேர்தலால் எவர் ஆட்சிக்கு வருவார், எவர் தோற்பார் என்கிற கவலை எமக்குத் தேவையில்லை. ஏனென்றால், எப்படியும் ஒரு சிங்களவரே ஆட்சிக்கு வரவிருக்கிறார். சிங்கள மயமாக்கலும், பெளத்த மயமாக்கலும் இப்போது நடப்பது போலவே தொடர்ந்தும் நடக்கவிருக்கிறது. ஆனால், நாம் அவர்களைத் தெரிவுசெய்வதில் பங்கெடுக்கப்போவதில்லை. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாராளுமன்றத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்பதற்காக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தேர்தலில் மக்களிடம் வாக்குக் கேட்கவில்லை. மாறாக வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கான மக்கள் ஆணை கோரியே தேர்தலில் வாக்குக் கேட்டார்கள். இப்போது நடக்கவேண்டியதும் அதுவே.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
உங்கள் அவதானிப்பிற்கும் நிலத்தில் இருக்கும் நிலைமைக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது. ஏனென்றால், அந்த வேறுபாட்டை உயிர்ப்புடன் வைத்திருப்பது இன்றும் அங்கிருக்கும் பூரண சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பு. ஆக்கிரமிப்பு ஒன்றினுள் வாழும் இனம் நிச்சயம் அதற்கெதிரான உணர்வுகளைக் கொண்டேயிருக்கும். நீங்கள் கூறும் அதே அமைதியான பெரும்பான்மை. மக்கள் தமது மனங்களில் இருக்கும் உணர்வுகளை அவ்வப்போது வெளிப்படுத்தியே வருகின்றனர். இன்றிருக்கும் அரசியல்க் கட்சிகளுக்கு அவர்கள் வழங்கும் அல்லது வழங்க மறுக்கும் வாக்குகள் ஏமாற்றத்தினாலும், விரக்தியினாலும் வருபவை. உங்கள் வசதிக்காக இதனைத் தேசியத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்க்கிறீர்கள். ஒருவருக்கு எறியக் கல்லைக்கூட எடுக்காத மெந்தலைவர்களுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு ஏன் கொடுக்கவேண்டி வருகிறது என்று யோசித்தீர்களா? அதுவும் பொதுமக்களிடையே வலம்வரும்போது? இதற்கும் தேசியத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஒரு அரசியல்வாதி தனது இனத்தின் நலன்களை முன்னிறுத்தாமல், அந்த நலன்களுக்கு பாதகம் விளைவிக்கக கூடிய செயற்பாடுகளிலும், இனத்தின் கோரிக்கைகளை நலிவாக்கும் செயற்பாடுகளிலும் இறங்கினால் மக்கள் அதற்கு எவ்வாறான எதிர்வினையினை ஆற்றவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
பேசுவதற்கும், எழுதுவதற்கும் இது நன்றாக இருக்கலாம். ஆனால், நிச்சயமாக பேச்சுக்கள் முறிந்திருக்கும். தமிழரின் பிரச்சினைக்கான தீர்வைத் தேடி சரித்திர காலத்தில் செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் இருந்து ஒன்றில் தானே விலகியோ அல்லது புலிகள் விலகுவதற்கான சூழ்நிலையினையோ அரசுகள் செய்தே வந்திருக்கின்றன. 2002 பேச்சுக்கள் மட்டும் விதிவிலக்காக இருந்திருக்கும் என்று எப்படி உங்களால் நம்ப முடிந்தது? அமெரிக்கா தலைமையிலான மேற்குலகிற்கு தமிழருக்கான தீர்வொன்று கொடுக்கப்படவேண்டும் என்று உண்மையிலேயே நோக்கம் இருந்ததா? அப்படியானால், 80 களின் ஆரம்பத்திலிருந்தே புலிகளை அழிப்பதற்கான இராணுவ உதவைகளை அது ஏன் தொடர்ச்சியாக இலங்கைக்குச் செய்து வந்தது? 2002 முதல் 2004 வரையான பேச்சுவார்த்தைக் காலத்தில்க் கூட அமெரிக்கா இலங்கையுடன் குறைந்தது இரண்டு பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்து, அதனூடாக பயிற்சிகள், ஆயுதங்கள், போர்க்கப்பல்களுக்கான புதிய பீரங்கிகள், நீண்டதூர வேவு விமானங்கள் என்று ஏன் வழங்கியது? இவை யுத்தத்தில் எவ்வாறான விளைவினை ஏற்படுத்தியிருந்தன? அடுத்தது, பொதுமக்களினதும், தலைமை உட்பட புலிகளின் இழப்பும். யுத்தத்தினை நடத்தியது இந்தியா, மேற்கின் அனுசரணையுடன். அப்படியிருக்க, ஆட்சியில் இருப்பது ரணிலா , மகிந்தவா என்பது ஒரு பொருட்டல்லவே? மகிந்தவிற்கு யுத்தத்தில் வெல்வதற்கு இருந்த அதே விருப்பே ரணிலுக்கும் இருக்கின்றது. ஆனால், இந்த விருப்பு மட்டுமே அன்று போதவில்லை. இந்தியாவின் உதவியும், அதன் விருப்பும் தேவைப்பட்டது. மகிந்த ஆட்சியில் இருந்தான், இந்தியா அவனை மகிந்தவென்று பார்க்கவில்லை, இலங்கையில் ஆட்சியிலிருக்கும் ஒருவன் என்றே பார்த்தது. மீதி, இந்தியாவின் போர். ரணில் ஆட்சியில் இருந்திருந்தால், இந்தியா வாலைச் சுருட்டி வைத்திருக்கும் என்று நான் நம்பவில்லை. தமிழ் மக்களினதும், புலிகளினதும் இழப்பை நான் நியாயப்படுத்தவில்லை. அவர்களின் இழப்பினாலேயே இன்றுவரை எதையாவது செய்யவேண்டும் என்கிற எண்ணமும், கவலையும் இருக்கிறது. சிங்களவர்களில் நல்லவர்கள் என்று ஒரு பிரிவினர் இருக்கிறார்கள் என்றும் நான் நம்பவில்லை, குறிப்பாக அரசியல்வாதிகளில். தமிழர் மீதான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதே அவர்களின் மொத்த அரசியல். இதில் ரணில் நல்லவன், மகிந்த கெட்டவன் என்கிற வித்தியாசம் எனக்குத் தெரிவதில்லை.
-
பிழையான தலைவர்கள் வர வாக்களிக்காமையே காரணம்:விஜயகலா மகேஸ்வரன்
சரி, பேசலாம். 2005 இல் வன்னியில் ரணிலுக்கு வாக்களிக்கவேண்டாம் என்று இயக்கம் கேட்டது உண்மைதானே? இதனை எவரும் மறுக்கவில்லையே? பிறகேன் இந்த Cherry picking கேலிகள்? ரணிலிலிருந்தே ஆரம்பிக்கலாம், 2002 மாசியில் ரணில் அரசாங்கம் புலிகளுடனான பேச்சுக்களை ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? தமிழர்களுக்குத் தீர்வொன்றினை வழங்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று இங்கு எவராவது உண்மையாகவே நம்புகிறீர்களா? போர்க்களத்தில் ஏற்பட்ட அடுத்தடுத்த தோல்விகள், கட்டுநாயக்க விமான நிலையம் மீதான தாக்குதல், அதனால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவுகள் என்பவற்றைத் தவிர இலங்கை அரசாங்கத்திற்கு பேச்சுவார்த்தைகளுக்குப் போகவேண்டிய தேவை இருந்ததா? சரி, பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தாயிற்று. பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்பொழுது, 2004 இல் பங்குனியில் கருணாவை புலிகள் இயக்கத்திடமிருந்து பிரித்தெடுத்து புலிகளைப் பலவீனமாக்கியது யார்? பேச்சுவார்த்தை, பேச்சுவார்த்தை என்று இழுத்தடித்து, நியாயமான தீர்வெதனையும் முன்வைக்காது, சர்வதேச வலைப்பின்னலுக்குள் புலிகளைச் சிக்கவைத்து, படிப்படியாக பேச்சுக்களில் புலிகளை வேண்டாத தரப்பாக ஓரங்கட்டியது யார்? ரணில் அரசாங்கத்தில் முக்கிய அமைச்சராகவிருந்த மிலிந்த மொரகொடை மற்றும் நவீன் திசாநாயக்கா ஆகியோர் அக்காலத்தில் வெளிப்படையாகவே கூறிய விடயங்களை எவராவது கவனித்தீர்களா? புலிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதற்காகவே கருணாவைப் பிரித்தெடுத்து, புலிகளை சர்வதேச வலைப்பின்னலுக்குல் வீழ்த்தி அமுக்கினோம், மகிந்த தானே புலிகளை அழித்தேன் என்று மார்தட்டலாம், ஆனால் புலிகளை நாம் பலவீனமாக்கி ஒடுக்கியிருக்கவிட்டால், மகிந்தவால் யுத்தத்தில் வெற்றிகொண்டிருக்க முடியாது என்று கூறினார்களே? ரணில், மிலிந்த மொரகொட, ரொகான் குணரட்ண, பீரிஸ், ரோகித்த போகொல்லாகம என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர்கள் புலிகளைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் பேச்சுவார்த்தைக் காலத்திலிருந்தே ஈடுபடவில்லையா? அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் , ஜப்பான், உதவி வழங்கும் நாடுகள் என்று அனைத்துமே புலிகளுக்கெதிராக ஐக்கியதேசியக் கட்சியினால் திருப்பிவிடப்படவில்லையா? அப்படியான நிலையில் 2005 இல் தம்மை வஞ்சித்த ரணிலை தேர்தலில் தோற்கடிக்க புலிகள் எடுத்த முடிவு எந்தவிதத்தில் தவறானதாக இருக்க முடியும்? நோர்வேயின் மத்தியஸ்த்தத்துடன் பேச்சுக்கள் நடைபெறப்போகின்றன எனும் செய்திகள் முதன்முதலில் வெளிவந்தபோதே 1993 இல் நோர்வே தலைமையில், அமெரிக்காவின் அனுசரணையுடன், பாலஸ்த்தீனத்திற்கும், இஸ்ரேலிற்கும் இடையிலான சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டது பற்றியும் அதன் முற்றான தோல்விபற்றியும் பலராலும் பிரஸ்த்தாபிக்கப்பட்டதே? அவ்வொப்பந்தம் முற்றாகக் கிழித்தெறியப்பட்டு, அரபாத் இஸ்ரேலியர்களால் நஞ்சூட்டப்பட்டுக் கொல்லப்பட்ட, இஸ்ரேல் சார்பாக சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதமரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்றுவரை பலஸ்த்தீனர்களுக்கு காஸாவிலும், ரபாவிலும் நடப்பது என்ன? இவ்வாறான ஒப்பந்தங்களை மேற்குலகு செய்வதன் காரணமே, தமது பிணாமிகளான நோர்வேஜியர்களை இறக்கி போரிடும் மக்களை சோர்வடையச் செய்து, பலவீனப்படுத்தி, ஈற்றில் போராட்டத்தைத் தோற்கடிப்பதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? 2005 தேர்தலில் மகிந்த ஆட்சிக்கு வந்தான். அவன் ஆட்சிக்கு வந்ததை இந்தியா உட்பட மேற்குலகு சற்றும் விரும்பியிருக்கவில்லையாயினும், புலிகளை அழிக்க அவனைப் பாவித்தன. பல தருணங்களில் மகிந்தவே "இந்தியாவின் யுத்தத்தையே நாம் நடத்தினோம்" என்று கூறியிருக்க மகிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவந்ததாலேயே நாம் அழிக்கப்பட்டோம் என்று கூறுவது எவ்விதத்தில் சரியாக இருக்கும்? ஆட்சியில் மகிந்த இருந்தாலென்ன, ரணில் இருந்தாலென்ன, முள்ளிவாய்க்கால் நிச்சயம் நடந்தேயிருக்கும். ஏனென்றால், அது மகிந்தவின் போரல்ல, மாறாக மேற்குலகின் முற்றான அனுசரணையோடு இந்தியாவால் நடத்திமுடிக்கப்பட்ட போர். ரணில் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்தியாவோ அல்லது மேற்குலகோ முள்ளிவாய்க்கால் யுத்தத்தினை நிச்சயம் நடத்தியிருக்காது என்று இங்கு எவராலும் உறுதியாகக் கூறமுடியுமா? மகிந்தவைக் காட்டிலும் ரணில் நல்லவனாக எம்மில் பலருக்குத் தெரிவது எப்படி? தீவிர இனவாதியான ஜெயவர்த்தனவினால் பயிற்றுவிக்கப்பட்ட ரணில் எப்படி தமிழர்களைப்பொறுத்தவரை நல்லவனா மாறினான்? 2002 இல் சமாதானப் பேச்சுகளில் அவன் ஈடுபட்டான் என்பதாலா? அதனால் நாம் அடைந்த நண்மையென்ன? 1977 ஆம் ஆண்டுப் பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இனவாதியான ஜெயாரின் அரசில் முக்கிய அமைச்சராக இருந்து வந்தவன். தமிழர்களுக்கெதிரான பல இனவாதச் செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட்டவன். யாழ் நூலக எரிப்பில் காமிணி, சிறில் மத்தியூவோடு களமிறங்கியவன். ஜெயாரின் அரசாங்கத்தில் இருந்த தீவிர இனவாதிகளான காமிணி, லலித் போன்றோருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்டவன். 1988 - 1989 ஆகிய காலப்பகுதியில் தெற்கில் சிங்கள இளைஞர்களைச் சித்திரவதை செய்து படுகொலை செய்தான் என்கிற வெளிப்படையான குற்றச்சாட்டுக்கள் பட்டலந்தை ஆணைக்குழுவால் இவன் மீது முன்வைக்கப்பட்டிருந்தன. 1994 இல் சந்திரிக்கா தமிழர்களுக்கு நாடு கொடுக்கப்போகிறாள் என்று பாராளுமன்றத்திலேயே தீர்வுப்பொதியினை எரித்து தனது இனவெறியைக் காட்டியவன். 2015 இல் தமிழர்களின் தயவில் நல்லிணக்க அரசாங்கம் என்று ஒன்றை அமைத்துக்கொண்டு, தமிழர்களுக்கு 100 நாட்களில் தீர்வு தருவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தான், ஆனால் நான்கு வருடகால ஆட்சியில் அவனால் செய்யப்பட்டவை என்று எதுவுமே இல்லை. இன்றும் ஆட்சியில் இருக்கிறான். தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக எதனையும் தருவேன் என்று இதுவரை சொல்லவுமில்லை, இனிமேலும் அப்படித்தான். இவனது ஆட்சியிலேயே முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்கான பொலீஸ், இராணுவத்தினது அடாவடித்தனங்களும், அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆக, இவனை 2005 இல் தோற்கடித்தமைக்காகவே தமிழர்கள் அழிக்கப்பட்டார்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இவனிருந்தாலும் முள்ளிவாய்க்கால் நடந்துதான் இருக்கும். ஏனென்றால், அதற்கான புறச்சூழலை உருவாக்கி, புலிகளைப் பலவீனப்படுத்தியது இவனே. ரணில் அமைத்துக்கொடுத்த கொலைக்களத்தில் மகிந்த சுதந்திரமாக தமிழர்களைக் கொன்று முடித்தான். இல்லை, ரணில் மிகவும் நல்லவன், அவனிருந்தால் தமிழர்கள் அழிக்கப்பட்டிருக்கவே மாட்டார்கள் என்றால், 2009 இற்கு முன்னதாக, இவன் அங்கம் வகித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் கொல்லப்படவே இல்லையா? உங்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதற்கு குற்றஞ்சுமத்த ஒருவர், இருக்கவே இருக்கிறார்கள் புலிகள். ஆகவே, அவர்கள் மீது இலகுவாகப் பழியினைப் போட்டுவிட்டு உங்கள் கடமை முடிந்ததாக நீங்கள் ஆறுதல்ப் பட்டுக்கொள்ளலாம். உங்களுக்காகப் புலிகள் போராடும்வரை அவர்கள் தேவையானவர்கள், இன்று போராட்டம் முற்றுப்பெற்று விட்டதால் அவர்கள் குற்றவாளிகள். நன்றாக இருக்கிறது உங்களின் வாதம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
புலிகளை ஜனநாயக விரோதிகளாக, போர்வெறியர்களாக, படுகொலையாளர்களாக காட்டியாயிற்று. பலருக்கு இதுநாள்வரை மனதிற்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை வெளியே கொட்டிக்கொள்ள இப்போது தருணம் வந்திருக்கிறது. 1. புலிகள் போராடியது பிழை 2. ஜனநாயக அரசியல்வாதிகளையும், பிற இயக்கத்தினரையும், அமைப்பிற்குள்ளேயே இயக்கத்தினரையும் கொன்றது பிழை 3. தமிழர்களுக்கிருந்த அரசியல்ப் பாதைகளை முற்றாக மூடி தமிழர்களை அநாதைகளாக விட்டிருப்பது புலிகளே 4. தமிழ்க் கூட்டமைப்பின்மீது சவாரிசெய்து போலிவேஷம் காட்டியது புலிகளின் தந்திரம் 5. புலி வால்கள் தமிழ் மக்களையே துரோகிகளாக்குகிறார்கள், இனிமேல்த் தம்மைத்தாமே கண்ணாடி முன் நின்று கழுத்தை அறுத்துக் கொல்லட்டும். அன்பர்கள் அனைவருக்கும், இன்னும் இந்த பட்டியலில் நீங்கள் நீட்டி அடுக்குங்கள். உங்களின் இச்சைகள் தீர வன்மம் கொட்டித் தீருங்கள். உங்களின் வேஷம் களைந்து புலிவன்மம் பாடுங்கள். முடிந்தவரை செய்யுங்கள். எவருமே கேட்கப்போவதில்லை. உணர்வுள்ளவர்கள் உங்களின் ஜனநாயகப் பிதற்றல்களுக்குப் பயந்து தமக்குள் ஒடுங்கிப் போக தேசிய நீக்கம் செய்து இன்புருங்கள். நீங்கள் இதுவரை எழுதியவற்றை நினைத்துப் பார்க்கிறேன், எதுவுமே நினைவில் இல்லை, நேற்று நீங்கள் எழுதியதைத் தவிர.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர் தாயகம் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வில் உள்ளடக்கப்பட வேண்டிய இரண்டாவது அடிப்படை அம்சம் எதுவென்பதைத் தமிழர் தரப்பு முன்வைத்தது. தமிழ் மக்கள் இலங்கையில் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்ந்து, தமது இருப்பினைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, அவர்கள் சரித்திர காலம் முதல் வாழ்ந்துவரும் நிலப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, அப்பகுதி தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்று அங்கீகரிக்கப்படவேண்டும் என்று கோரினர். இலங்கையில் தமிழர்களுக்கென்று தாயகம் ஒன்று இருக்கின்றது என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். தமிழர்களின் தாயகம் என்பது யதார்த்த ரீதியில், சரித்திர ரீதியில், நிர்வாக ரீதியில், நடைமுறையில் இயங்குவதாக அவர்கள் மேலும் எடுத்துக் கூறினர். சரித்திர ரீதியில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது பூர்வீகத் தாயகங்களிலேயே வாழ்ந்துவருவதாக அவர்கள் கூறினர். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சரித்திர ரீதியில் வாழ்ந்துவருகையில், சிங்களவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்துவருவதாக அவர்கள் எடுத்துரைத்தனர். 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் இலங்கையினை ஆக்கிரமித்தபோது வடக்குக் கிழக்கினை யாழ்ப்பாண இராஜ்ஜியம் ஆண்டு வந்ததாகவும், இலங்கையில் கரையோரப் பகுதிகளான மேற்கையும், தெற்கையும் கோட்டே இராஜதானி ஆண்டுவந்ததாகவும், நாட்டின் மத்திய மலைப்பகுதியினை கண்டி இராஜ்ஜியம் ஆண்டுவந்ததாகவும் அவர்கள் சான்றுகளுடன் வெளிப்படுத்தினர். யாழ்ப்பாண இராஜ்ஜியம் அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் கோட்டே இராஜ்ஜியமே முதன் முதலாக கொண்டுவரப்பட்டதுடன், அதன் ஆட்சியாளர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தமது இராஜ்ஜியத்தின் இறையாண்மையினை போர்த்துக்கேய மன்னனிடம் தாரைவார்த்தனர். யாழ்ப்பாண இராஜ்ஜியம் 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் வெற்றிக்கொள்ளப்பட்டதுடன், கண்டி இராஜ்ஜியம் 1815 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது. காலணித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் இறையாண்மை, இலங்கை சுதந்திரம் அடைந்த தருணத்தில் தமிழ் மக்களிடத்திலேயே கொடுக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். நிர்வாக ரீதியில், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கும் கிழக்கும் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் தனியாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1621 ஆம் ஆண்டிலிருந்து 1815 வரையான இரு நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயரை ஒல்லாந்தர் வெற்றிகொள்ள, பிற்காலத்தில் ஒல்லாந்தரை ஆங்கிலேயர்கள் வெற்றிகொண்டிருந்தனர். 1833 ஆம் ஆண்டு முழு இலங்கையினையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் கொழும்பிலிருந்தே மாகாணங்களை ஆண்டுவந்தனர். அப்படியிருந்தபோதிலும், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனி அலகாகக் கருதப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வேறாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதே நிர்வாக நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டே வருகின்றன. சிங்கள அரசுகள் தமது அரசியல் தீர்வுப் பொதிகள் ஊடாக, சட்டங்கள் ஊடாக, அரசியல் யாப்புக்களூடாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமென்றே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1958 ஆம் ஆண்டு செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கில் பிராந்திய சபைகளை ஏற்படுத்துவதென்றும், அப்பிராந்தியங்களில் வாழும் மக்கள் விரும்பினால் வடக்கும் கிழக்கும் இணைந்துகொள்ளமுடியும் என்றும், அப்பிராந்தியங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் ஒத்துக்கொண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தில், "உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கும்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும், 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை 1965 இல் செய்துகொள்ளப்பட்ட செல்வா டட்லி ஒப்பந்தம் மேலும் மெருகூட்டியிருந்தது. தமிழ் மொழியினை ஆவணங்களை உருவாக்கும் மொழியாக ஏற்றுக்கொள்ளவும் டட்லி அரசு இணங்கியிருந்தது. 1966 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் தமிழ் மொழி ஆவண உருவாக்கல் மொழியாக பிரகடணப்படுத்தப்பட்டது. 1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகம் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1972 ஆம் ஆண்டின் யாப்பு, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பாவிக்க அனுமதி வழங்கியிருந்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மொழியினை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தேசிய மொழியான தமிழ் மொழியினை நிர்வாகத்திற்குப் பாவிக்கவும் ஏற்றுக்கொண்டிருந்தது. இவற்றுள் மிகவும் தீர்க்கமான வாதமாக முன்வைக்கப்பட்டது மூன்றாவதாகும். சிங்கள அரசுகளும், சிங்கள மக்களும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமாகவே கருதிவருகின்றனர் என்பதே அந்த வாதமாகும். 1950 களின்போது தமிழர்கள் தமது மொழிக்கான அந்தஸ்த்துக் கோரி கூக்குரலிட்டபோது, "உங்களின் தாயகத்திற்கே ஓடுங்கள்" என்று கூறியே சிங்களவர்கள் அவர்களை அடித்து விரட்டினர். உங்களின் தாயகம் என்று அவர்கள் குறிப்பிட்டது வடக்குக் கிழக்கினையே. மேலும், 1958, 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளின்போது, ஆட்சியில் இருந்த ஒவ்வொரு சிங்கள அரசுகளும், தமிழர்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு ரயில்களிலும், கப்பல்களிலும் அனுப்பி வைத்தன. தமிழர் தரப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் ஒருவர் பின்வருமாறு உணர்வுபொங்கக் கேட்டார், "இலங்கையின் தெற்கில் நாம் தமிழர்கள் என்கிற காரணத்திற்காகத் தாக்கப்படும்போது எமது பாதுகாப்பிற்காக நாம் எங்கு செல்வோம்? கொழும்பில் எமக்கெதிரான படுகொலைகள் நடைபெறும்பொழுது சிங்கள அரசாங்கங்கள் எம்மை எங்கே அனுப்பிவைத்தன? நாம் வடக்குக் கிழக்கிலேயே தஞ்சமடைந்தோம், ஏனென்றால் அதுவே எங்களின் தாயகம்".
- Three kingdoms.JPG
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
தேசிய நீக்கம், புலிநீக்கம் செய்யும் ஜனநாயக, இணக்க அரசியல்வாதிகள் இதுகுறித்துக் கவலைப்படப் போவதில்லை. தமிழர்களின் பிரதேச அபிவிருத்தி நோக்கிப் பயன்படுத்தப்பட வேண்டிய பணம் சிங்களக் குடியேற்றத்திற்கும், பெளத்த மயமாக்கலுக்கும் பயன்படுத்தப்படுவது கண்டு தமிழர்கள் பெருமைப்பட வேண்டும். இனியென்ன, அடையாளம் துறந்து, இலங்கையர்களாக இணைந்து, சிங்களவர்களுடன் ஒன்றுபட்டு, எமது சுய நலன்களைக் காத்துக்கொள்வோம். நீங்கள் எப்படி?
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
இவருக்கு வாக்களித்த கிளிநொச்சி வாக்காளர்கள்தான் இதுகுறித்துக் கேட்கவேண்டும்.
-
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வேட்பாளர் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களித்துக் கண்ட பலன்கள்
தமிழ் வேட்பாளர் ஒருவர் வருவதால் ரணிலின் வெற்றிவாய்ப்புக் குறைந்துவிடும் அல்லது கூடிவிடும் என்றோ, அநுர குமார வந்துவிடுவார் என்றோ, சஜித் வராது போய்விடுவார் என்றோ கவலைப்பட்டு "சிங்ஹள ஜனாதிபதிதுமாவை ஆதரிக்கக் காத்திருக்கும் தெமலர்கள்" இதனைப் பார்ப்பது நல்லது. இந்த இனக்கொலையாளிகளை ஆதரிப்பதோ புறக்கணிப்பதோ இல்லை இதன் பொருள் என்பதும், அது தமிழ் மக்களின் ஒற்றுமை சார்ந்த விடயமென்பதும் இந்த "சிங்ஹள தெமலர்களுக்குப்" புரிய வாய்ப்பில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
தமிழர்களும் அவர்களின் தேசமும் ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையினையடுத்து, இலங்கையரச பிரதிநிதிகள் தமது ஆலோசனைகளை முன்வைக்க தமிழர் தரப்பினர் அனுமதிக்கவில்லை. அரச தரப்பு தமது ஆலோசனைகளை முன்வைப்பதற்கு முன்னர் ஹெக்டர் ஜெயவர்த்தனவின் ஆரம்ப உரையில் காணப்பட்ட இரு விடயங்கள் குறித்து தமது ஆட்சேபணையினைப் பதிவுசெய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இவ்விரு விடயங்கள் தொடர்பில் அரச தரப்பு தரப்போகும் விளக்கங்களைப் பொறுத்தே தாம் தொடர்ந்தும் பேச்சுக்களில் பங்கேற்பதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப்போவதாகவும் தெரிவித்தனர். தமிழர் தரப்பினர் குறிப்பிட்ட இரு விடயங்களாவன, 1. அரசியல்த் தீர்வும் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகளை உள்ளடக்கியிருக்குமா, இல்லையா? 2. தமிழர் தரப்பில் பங்கேற்கும் பிரநிதிகள் தொடர்பாக அரசினது நிலைப்பாடு என்ன? எதிர்வந்த மூன்று நாட்களான ஆவணி 13 முதல் 15 வரையான நாட்கள் இவ்விரு விடயங்கள் தொடர்பாக விவாதிப்பதிலேயே கழிந்தது. தமிழ்த் தரப்பினர் பேச்சுக்களின் நகர்வு குறித்தும், தமது நான்கு அடிப்படை அம்சக் கோரிக்கைகள் குறித்தும் தமது பக்க கூட்டறிக்கையினை முதலில் முன்வைத்தனர். இவற்றினை பேச்சுவடிவிலும் விளக்கமாக அவர்கள் வழங்கினர். தாம் திம்புவிற்குப் பேச வந்திருப்பதே நிலைத்து நிற்கக்கூடிய தீர்வொன்றினை எட்டுவதற்காகத்தான் என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் தெரிவித்தனர். அத்தீர்வு அடிப்படைக் கட்டமைப்புக்களைக் கொண்டு அமையவேண்டும் என்றும் அவர்கள் கோரினர். ஆடி 13 ஆம் திகதி தமிழ்த்தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களே இந்த கட்டமைப்பின் பிரதான கூறுகளாக காணப்பட்டன. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய எந்தத் தீர்விற்கும் இவையே அடிக்கற்காளாக இருக்க வேண்டும். பேச்சுவார்த்தைகள் பலந்தரவல்லைவையாக இருப்பதற்கு முன்வைக்கப்படும் தீர்வுகள் இந்த அடிப்படை அமசங்களைக் கொண்டிருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். தமிழர்களால் முன்வைக்கப்பட்ட நான்கு அடிப்படை அம்சங்களில் முதலாவது, இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசமாகக் கணிக்கப்பட வேண்டியவர்கள் என்பது. இது நடைமுறையில் உள்ள யதார்த்தம் என்று அவர்கள் வாதிட்டனர். தேசம் எனும் சொல் இரு அர்த்தங்களைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறினர். தேசம் எனும் சொல் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தின் ஒருங்கிணைந்த அடையாளமாகக் கருதப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்கள் தமது அடையாளமாக உணர்வுகள், உணர்ச்சிகள், ஒற்றுமையாக வாழுதல், தமது அடையாளத்தை காத்துக்கொள்ளுதல் ஆகியவற்றினைத் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதாக அவர்கள் விளக்கினர். இதன் ஒரு அங்கமாகவே ஆயிரக்கணக்கான தமிழ் இழ்ளைஞர்கள் தமது இனத்தின் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒன்றாகக் கூடி, தமது உணர்வுகளை வெளிப்படுத்தி ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் வாதிட்டனர். தமது அடையாளத்தை பாதுகாக்க உறுதிபூண்டிருக்கும் தமிழர்கள், தமது உயிரைக் கொடுத்தேனும் அதனைக் காத்துக்கொள்ள முன்வந்திருப்பதாக அவர்கள் மேலும் வாதிட்டனர். இவ்வாதத்தினை முன்வைத்த நடேசன் சத்தியேந்திரா, இரு பிரபல பிரகடணங்களை இதற்கு மேற்கோள் காட்டிப் பேசினார். ருபேர்ட் எமேர்சன் என்பவர் தேசம் என்பதனை பின்வருமாறு வரையறை செய்கிறார், "தேசம் எனும் சொல்லின் மிகவும் எளிமையான பிரகடனமாக, ஒரு மக்கள் கூட்டம் தம்மை ஒரு தேசமாக உணர்ந்துகொள்வதைக் குறிப்பிட முடியும். இதனை நீங்கள் எவ்வாறான சுழல் ஆராய்ச்சிகளுக்கூடாக ஆராய்ந்து முடித்தபின்னரும்கூட, மக்களின் இந்த உணர்வே இறுதியானதாக இருக்கும்" என்று கூறுகிறார். பேராசிரியர் டெயிலர் எழுதும்போது, "தேசம் என்றால் என்ன, அது எங்கு இருக்கிறது? அப்படியொன்று உண்மையிலேயே இருக்கின்றதா? உண்மையிலேயே தேசம் என்பது மக்களின் மனங்களிலும், இதயங்களிலும் தான் இருக்கின்றது என்று ஒருவரால் கூறமுடியும். அது ஒரு எண்ணக்கரு. ஆகவே, அது நீதிமன்றங்களைக் காட்டிலும், இராணுவங்களைக் காட்டிலும் உண்மையானது. உங்களையும், என்னையும் காட்டிலும் உறுதியானது. எங்கள் தந்தைகளின் மனங்களில் இருந்ததுபோல எங்களின் பிள்ளைகளின் மனங்களிலும் அது இருக்கப்போகிறது. அது ஒரு எண்ணம், அது ஒரு கற்பனை" என்று வெளிப்படுத்துகிறார். இலங்கையின் தமிழ் மக்கள் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்வதற்கு அப்பால், காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் அரசியல் தேற்றங்களின் அடிப்படையிலும் ஒரு தேசத்திற்கு உரித்துடையவர்கள் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கென்று தனியான பாரம்பரியம் ஒன்றிருக்கிறது. பொதுவான கலாசாரப் பண்பாடு ஒன்று இருக்கிறது. அவர்களுக்கென்று தனித்துவமான மொழி ஒன்று இருக்கிறது. தெளிவாக அடையாளம் காணப்பட்ட பூர்வீகத் தாயகமும் பொருளாதார வாழ்க்கையும் அவர்களுக்கு இருக்கிறது. தாம் தனியான தேசமாக வாழும் விருப்பினை தமது நீண்டலாக வரலாற்றில் வெளி ஆக்கிரமிப்பிற்கெதிரான அவர்களின் போராட்டங்கள் காட்டிநிற்கின்றன. மேலும் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1970 வரையான காலப்பகுதியில் சமஷ்ட்டி கோரியும், பின்னர் 1977 ஆம் ஆண்டில் தனிநாடு கோரியும் அவர்கள் வக்களித்திருக்கிறார்கள். இதைவிடவும் 1972 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசுகளால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்புக்களுக்கெதிரான தமது உணர்வுகளையும் தமிழர்கள் தெளிவாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
எனது நோக்கம் இதுதான். எம் கண்முன்னே நடக்கும் சிங்கள பெளத்த செயற்பாடுகளின் சூட்சுமத்தை நாம் பார்க்கத்தவறிவிடுகிறோம். எம்மை இன்று பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் சிலரின் இணக்க அரசியலினாலும், தேசியத் துறப்பினாலும் மக்கள் அரசியலில் இருந்து விலகிவருகிறார்கள், அல்லது நடக்கும் சூட்சுமத்தைக் கண்டுகொள்ள மறுக்கிறார்கள். நான் மக்களைத் துரோகிகளாக ஒருபோதும் நினைத்ததுமில்லை, எழுதியதுமில்லை. இது தவறாக என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. 25/11/2023
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
80 களில் தேசியத்திற்கு எதிராகச் செயற்பட்டார்கள் என்று பல ஜனநாயக அரசியல்வாதிகளை புலிகள், டெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் என்று பல அமைப்புக்கள் மண்டையில் போட்டன. மறுக்கவில்லை. . ஆனால், ஜனநாயகவழியில் எமது அரசியலைச் செய்யக் கூடிய சூழ்நிலை 2009 இற்குப் பின்னர் எமக்குக் கிடைத்தது. புலிகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழர்களுக்கு அடையாளம் காட்டப்பட்டவர்கள் அரசியலில் பாரிய பங்கினைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இன்று செய்துகொண்டிருப்பது என்ன? கடந்த 15 வருட காலத்தில் அவர்களால் தமிழினம் அடைந்துகொண்டவை என்ன? கடந்த 15 வருட காலத்தில் சிங்கள மயமாக்கலினை அவர்களால் எவ்வளவு தூரத்திற்குத் தடுக்க முடிந்தது? பல கட்சிகளைக் கொண்ட தமிழர்களின் ஒரே தெரிவாகவிருந்த கூட்டமைப்பு இன்று ஒற்றைக்கட்சியாகவும், அக்கட்சி இரண்டாக உடைந்து செயற்படுவதற்கே நீதிமன்றத் தடை வந்திருப்பதற்கும் யார் காரணம்? இதற்குக் கூட புலிகள் மண்டையில் போட்டதுதான் காரணம் என்கிறீர்களா? இல்லையே? கூட்டமைப்பை உருவாக்கியவர்களே புலிகள் தானே? தாமே உருவாக்கியவர்களை, தாம் அழிக்கப்பட்டு 15 வருடங்களின் பின்னரும் அவர்களால் மண்டையில் போடமுடியுமா என்ன? எமது ஜனநாயக அரசியல்வாதிகளின் கையாலாகத்தனத்தை இன்னும் எவ்வளவு காலத்திற்கு புலிகளின் மண்டையில் போடுதலால்த்தான் நான் இந்த நிலைக்கு வந்தோம் என்று கூறிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? நான் பொதுமக்களைத் துரோகிகள் என்று எண்ணவுமில்லை, அப்படி எழுதவுமில்லை. அவர்களின் இனம்சார்ந்த அரசியல் சூனியமாக்கப்பட்டு, எமது இருப்புக் குறித்த பிரக்ஞையற்ற அரசியல் ஒன்று அவர்கள் மேல் திட்டமிட்டு திணிக்கப்படுகிறது. இதனை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள் இல்லையென்பதே எனது வருத்தம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இதுவும் தவறான கணிப்பே. வெசாக் பந்தலைப் பார்க்கப்போனவர்கள் இணக்க அரசியல் பேசுவதாகவும், தேசிய நீக்கம் செய்வதாகவும், இலங்கையராக இணைவதாகவும் நான் எங்கே கூறினேன்? அப்படிப் பேசிப்பேசியே இன்றைய தலைமுறையினை இன்றிருக்கும் அரசியல்வாதிகளும், நடுநிலைவாதிகளும், இணக்கவாதிகளும் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றுதான் ஆதங்கப்படுகிறேன். மக்கள் தாமாக இணக்க அரசியலும், தேசிய நீக்கமும், சரணாகதி அரசியலும் செய்யப்போவதில்லை. அரசியல்வாதிகள் அவ்வாறு செய்வதாலேயே உங்களின் அரசியலும் வேண்டாம், நீங்களும் வேண்டாம் என்று மக்கள் ஒதுங்கிப் போகிறார்கள். இன்றிருக்கும் அரசியல் மயமற்ற தன்மையினை உருவாக்கியவர்கள் இந்த அரசியல்வாதிகள்தான்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நீங்கள் என்னை முற்றாகத் தவறாகவே ஆரம்பத்திலிருந்து கணித்து எழுதுகிறீர்கள். எனது ஆதங்கம் யாழ்ப்பாணத்தில் இன்றிருக்கும் இளைய தலைமுறை அரசியல் மயப்படுத்தப்படவில்லை. கடந்த 20 ஆண்டுகளுக்குள் உருவான இந்தத் தலைமுறை எமது அவலங்கள் குறித்தோ, அரசியல்த் தேவைகள் குறித்தோ சரியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. இன்னும் சில வருடங்களின் பின்னர் முள்ளிவாய்க்காலும் பலருக்கு மறந்துபோகும். எமது தாயகத்தில் ஆக்கிரமிப்பாளனினால் இறக்கிவிடப்படும் வானவேடிக்கைகள் மட்டுமே மனதில் நிறைந்திருக்கும். இதனைச் சுட்டிக் காட்டவே நான் இவ்வாறு எழுதுகிறேன். இவர்கள் எல்லோருமே ஒரே மக்களாக இருக்கலாம். வாதிடவில்லை. எனக்கிருந்த கேள்வி, சில நாட்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் அழுது புரண்ட மக்களால் சிங்கள பெளத்த வேடிக்கை நிகழ்வையும் தரிசிக்க முடியுமா என்பதுதான். அது கடிணமாக இருக்கும் என்பதாலேயே அப்படி நினைத்து எழுதினேன். அது சரியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். இதுகுறித்து வாதிடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நிச்சயமாக இல்லை. ஒரு பகுதியினர் தமது இழப்புக்களுக்காக வருந்தும்போது, அதுகுறித்த பிரக்ஞையில்லாமல் சமூகத்தின் இன்னொரு பகுதி வளர்ந்து வருகிறது என்பதைத்தான் நான் கூற வந்தேன். அவர்களை நான் எதற்காகத் துரோகிகளாக்கவேண்டும்? அப்படி அவர்கள் என்ன துரோகம் செய்துவிட்டார்கள்? அவர்கள் ஆக்கிரமிப்புப் படையினை ஆதரிக்கிறார்கள் என்று நான் எழுதியதாகக் கூறுகிறீர்கள். எங்கே அப்படி எழுதினேன் என்பதைக் காட்ட முடியுமா? திருத்திக் கொள்கிறேன். நான் கூற வந்தது ஆக்கிரமிப்புப் படையின் சூட்சுமத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான். அவர்களின் இந்த அரசியல் தெளிவற்ற மனநிலையினைத்தான் நான் விமர்சிக்கிறேன். எவ்வளவு தவறான கருத்து. ஆரியகுளத்தில் விடுப்புப் பார்க்கச் சென்றவர்களை துரோகிகளாகக் காட்டி அவர்களை மண்டையில் போடவேண்டும் என்று நான் சொன்னேனா? ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? ஆக்கிரமிப்புப் படையினருக்கு ஆதரவாக இருந்து, சொந்த இனத்தின் இருப்பை அழித்தவர்களை மண்டையில் போட்டபோது நீங்களும், நானும் சரியென்றுதான் வாதிட்டோம். ஆனால், ஆரியகுளத்தில் வேடிக்கை பார்த்தவர்கள் ஆக்கிரமிப்புப் படைக்கு ஆதரவாகச் செயற்பட்டார்கள் என்று நான் எங்கு எழுதினேன்? அப்படியிருந்தால் திருத்திக்கொள்கிறேன்.
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
அட, இதை இன்னுமாடா சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறீர்கள்? 2009 இற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா அரசுகளுடனும் சமாதனாம் குறித்துப் பேசிக்கொண்டுதானே வருகிறோம்? அரசுகள், பிறநாட்டு அரசுகள், சர்வதேச அமைப்புக்கள் என்று தமிழர்கள் பேசாத இடம் என்று ஒன்றிருக்கிறதா? தமிழர்கள் சமாதானக் கதவினை இறுக மூடிவைத்திருக்கிறார்கள் என்று இவருக்கு யார் சொன்னது? இல்லாத காரணத்தைக் கண்டுபிடித்து அரசியல் பந்தி எழுதுகிறார் என்று நினைக்கிறேன்.
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
இதுதான் உண்மையான காரணமா? கண்ணுக்கு முன்னால் இருக்கும் ஒற்றைக் காரணத்தை விட்டிவிட்டு இல்லாத காரணம் ஒன்றை ஏன் இவர் தேடுகிறார்? அரகலய சிங்களவர்களால் தமது பொருளாதார பிரச்சினைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு எதிர்ப்பு. தமிழர்கள் சிங்கள அரசிற்கெதிரான போராட்டம் ஒன்றைச் செய்வதைக் கனவிலும் நினைக்க முடியுமா? காணாமலாக்கப்பட்டவர்கள், காணி விடுவிப்பு என்று சில நடத்தும் போராட்டங்களே நசுக்கப்படும் நிலையில், அரகலய போன்றதொரு போராட்டத்தைத் தமிழர்கள் நடத்தினால் அரசு என்ன செய்யும் என்கிற விவஸ்த்தை வேண்டாமா? அதுசரி, அந்த அரகலயவைக் கூட அரசு எப்படி அடித்து துரத்தியது என்பதாவது இந்த பத்தி எழுத்தாளருக்குத் தெரியுமா? ஆக, பாதிக்கப்பட்ட தமிழர் தரப்பே நல்லிணக்கத்தையும் ஆரம்பிக்க வேண்டும். சரி, என்ன செய்யலாம் என்பதையாவது இவர் கூறுவாரா? அரசுடன் நல்லிணக்கமாகப் போய்க்கொண்டே அதன் ஆக்கிரமிப்பை எப்படித் தடுப்பது என்பதையாவது இவர் கூறுவாரா? அரசு செய்யும் என்று தமிழர்கள் ஒருபோதுமே நம்பியிருக்கவில்லை. தம்மைத்தாமேதான் பார்த்துக்கொள்கிறார்கள்.