Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ரஞ்சித்

  1. தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது. இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான். தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்? இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா? இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா? சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன? பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான். இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை? இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர‌ தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை. உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது.. நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும். நன்றி.
  2. தமிழகத்தில் இந்து மதத்தில் காணப்படும் சாதிய ஏற்றத்தாழ்வுகள், குறைந்த சாதியினர் என்று உயர் சாதியினரால் கருதப்படும் ஒரு பகுதியினர் இழிவாக நடத்தப்படுவது போன்றவை அம்மக்கள் சாதிய வேற்றுமைகள் அற்றதாகக் கருதப்படும் பெளத்த மதத்திற்கோ அல்லது இஸ்லாமிய மதத்திற்கோ மாறுவது நடக்கிறது. அம்பேத்காரின் புரட்சியும் இதன் அடிப்படையில் அமைந்ததுதான். இதில் அரசியல் இருப்பதாக நான் நினைக்கவில்லை. வேண்டுமானால் உயர் சாதியினரின் முகத்தில் அறையும் முகமாக "உங்கள் மதம் வேண்டாம் போடா" என்று பெளத்த மதத்தைத் தழுவோர் இதன் மூலம் கூறுவதாகவும் எடுத்துக்கொள்ளலாம். தமிழ்நாட்டைப் போல் இல்லாவிட்டாலும் இலங்கைத் தமிழர்களின் மத்தியிலும் சாதிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஆலயங்களுக்கு வருவதற்கான தடை, வீடுகளுக்குள் வருவதற்கான தடை, உணவருந்துவதற்குத் தனியே சிறட்டைகள், வெளியில் வைக்கப்படும் கோப்பைகள் என்று இருந்தபோதிலும் தற்போது இது திருமணம் முடிக்கும்காலத்தில் மட்டும் பாவிக்கப்படுகின்ற, உயிர்ப்புடன் இருக்கின்ற, மறுக்கமுடியாத காரணியாக இருக்கிறது. ஆனால் இன்று இலங்கைத் தமிழர்கள் பெளத்தத்திற்கு மாறுவதற்குப் பின்னால் பெரிய அரசியல் இருக்கின்றது. சிங்கள பெளத்த பேரினவாதத்தினால் உந்தப்பட்ட அருண் சித்தார்த் போன்ற துணை இராணுவக் குழு முக்கியஸ்த்தரும், சுரேன் ராகவன் போன்ற சிங்களத்திற்குச் சேவை செய்யும் புத்தி ஜீவிகளும் இதனை முன்னெடுத்து வருகிறார்கள். சாதிய வேற்றுமையினைக் காரணம் காட்டி சிங்கள பெளத்த மயமாக்கல் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது.
  3. ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ . ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார். ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார். ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”. “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார். பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன? பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா? பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும். கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்...... கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா? பிரபாகரன் : ஆம், ஒருவகையில் 1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  4. இரு மாதங்களுக்கு முன்னர் தாய்வானிடமிரிந்து 3000 இற்கு அதிகமான, அமைவிடத்தையும் உரையாடலையும் கண்டுபிடிக்க முடியாத பேஜர்களை ஹிஸ்புள்ளா கொள்வனவு செய்திருக்கிறது. தாய்வானில் இருந்து லெபனானிற்கு அனுப்பப்படும் வழியில் இவை இடைமறிக்கப்பட்டு பற்றரியிற்கு அருகில் சிறிய வெடிபொருள் சேர்க்கப்பட்டபின் லெபனானிற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பின்னர், இப்பேஜர்களுக்கு ஒரே நேரத்தில் குருஞ்செய்தியொன்றினை அனுப்பி வெடிக்கச் செய்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவரிலும் காயப்பட்ட 2400 பேரிலும் பெரும்பாலானவர்கள் ஹிஸ்புள்ளா போராளிகள். இத்தாக்குதலின் பின்னால் மொசாட் இருப்பதாக நம்பப்படுகிறது. ஹிஸ்புள்ளாவை நிலைகுலைய வைத்துவிட்டு அதன்மீது பாரிய யுத்தம் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட இஸ்ரேல் முயல்கிறதா என்று சில ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன.
  5. தமிழர்களுக்கென்று அரசியல்ப் பிரச்சினைகள் எதுவும்கிடையாது. இருப்பதெல்லாம் ஏனைய இலங்கையர்களைப் போன்று பொருளாதாரப் பிரச்சினை மட்டும்தான் என்று கூறுகின்ற ஒரு கட்சிக்காக வாக்குக் கேட்கிறீர்கள். சரி, ஒரு பேச்சிற்கு தமிழர்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தீர்த்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பின்னர் இனித் தமிழர்களுக்குப் பிரச்சினையில்லை என்றுகையை விரித்தால் என்ன செய்வதாக உத்தேசம்? இதற்குத்தான், தமிழரின் அரசியல்ப் பிரச்சினைகளையும் சேர்த்தே பேசுங்கள் என்று கேட்கிறோம்.
  6. தமிழர்களின் அன்றாடப் பிரச்சினைகள் என்பது எப்போதுமே உயிர்ப்புடன் வைத்திருக்கப்பட்டே வருகின்றது. சிங்கள ஆளும்தரப்புக்கள் தொடர்ச்சியாகவே தமிழர்களை ஏதோவொரு அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைக்குள் அமிழ்த்தியே வைத்திருக்கின்றன. புலிகளின் காலத்தில் அரசியல்ப் பிரச்சினைபற்றிப் பேசலாம் என்று புலிகள் கேட்டபோதெல்லாம், அன்றாடப் பிரச்சினைகள் முதலில்பேசலாம் என்றே அரசுகள் அலைக்கழித்துவந்தன. அதனாலேயே புலிகளும் ஒரு கட்டத்தில் அரசின் வழியில் சென்று, சரி பேசலாம், இடைக்கால நிர்வாக சபையினைத் தாருங்கள் என்று கேட்டார்கள். உடனே அரசு சுதாரித்துக்கொண்டு அரசியல்ப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்றது. தமிழரின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளைத்தீர்த்தபின்னர்தான் அரசியல்ப் பிரச்சினை பற்றிப் பேசலாம்என்றால், தமிழருக்கு அரசியல்த் தீர்வு ஒருபோதுமே கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால், அன்றாடப்பிரச்சினைகளை அரசு ஒருபோதும் தீர்க்காது. இப்போது அரசியல் பேசவேண்டாம், அன்றாடப் பிரச்சினை பற்றிப்பேசலாம் என்கிறீர்கள். சரி, அப்போ எப்போதுதான் அரசியல்ப்பிரச்சினை குறித்துப் பேசலாம் என்று நினைக்கிறீர்கள்? இன்னும் 5 வருடங்களில்? 10 வருடங்களில்? 50 வருடங்களில்? அப்போதுமட்டும் தமிழர்களின் அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகள்தீர்க்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்கள்? அரசியல்ப் பிரச்சினையும், அன்றாடப் பிரச்சினையும் சமாந்தரமாகஒரே நேரத்தில் பேசப்பட வேண்டும்.
  7. புலிகள் அன்றாடப் பிரச்சினைகள் குறித்துப் பேசலாம் என்றுகேட்டது உண்மைதான். ஏனென்றால், நீண்டகாலப்பிரச்சினைகளான உரிமை, தாயக நிலம், அதிகாரம் என்பவற்றினைபெற்றுக்கொள்ளலாம் என்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. தமது ஆயுதப் போராட்ட ஊடாக அரசைப்பணியவைக்கவோஅல்லது தனிநாட்டை உருவாக்கவோ அவர்களிடம் வல்லமையும்நம்பிக்கையும் இருந்தது. அதனால் அன்றாடப் பிரச்சினைகள்குறித்து இப்போது பேசலாம், நீண்டகாலப் பிரச்சினைகளைபின்னர் பார்க்கலாம் என்று கூறினார்கள். மக்களுக்கும் அதுநம்பிக்கை தருவதாக இருந்தது. இன்று அன்றாடப் பிரச்சினைகளை மட்டுமே பேசிவிட்டு அரசியல்ப்பிரச்சினைகளை பின்னர் பேசலாம் என்கிற நம்பிக்கையோஅல்லது சிங்களவர்கள் அதனைத் தருவார்கள் என்கிறநம்பிக்கையோ உங்களுக்கு இருக்கிறதா? எதற்காக அவர்கள்அதனை உங்களுக்குத் தாரைவார்த்துத் தருவார்கள் என்றுநம்புகிறீர்கள்?
  8. எப்பிடி, வடக்குக் கிழக்கை பிரித்தே வைத்திருக்கலாம் என்று அவர்களுடன் ஒத்துப்போவதன் ஊடாகவா இருப்பைத் தக்கவைக்கப்போகிறீர்கள்? ஆக, வடக்குக் கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டு சிறுகச் சிறுக அரிக்கப்படுவது தமிழர்களின் இருப்பைப் பாதிக்கப்போவதில்லை என்கிறீர்கள். நீங்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும். அப்போது இதுகுறித்து எப்போதுதான் அவர்களுடன் பேசுவதாக உத்தேசம்?
  9. அதுசரி, கொள்கையளவில் இணைந்திருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத் தீர்ப்பொன்றின் ஊடாக பிரித்துப்போட்டது இவரது கட்சிதான். இலங்கையில் இருக்கும் அனைத்து இன மக்களுக்கும் இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினையே தமிழர்களுக்கும் இருக்கின்றது, அவர்களுக்கென்று இனரீதியாகப் பிரச்சிகள் இல்லை என்று கூறுவதும் இவரது கட்சிதான். இதுகுறித்த தமிழ் மக்களின் பதில் என்ன? இவரை ஆதரிப்பதால் 1. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்கத் தேவையில்லை 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான பிரச்சினைகள் இல்லை என்கிற முடிவிற்குத் தமிழர்கள் வந்துவிட்டோமா? இங்கே எழுதப்படும் கருத்துக்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தெரிகிறது. வாழ்த்துக்கள்.
  10. தர்மலிங்கத்தையும், ஆளாளசுந்தரத்தையும் நாம் கொல்லவில்லை. ஆனால், ஆனந்தராஜாவை நாமே கொன்றோம், அதற்கான அவசியம் எமக்கு இருந்தது ‍- தலைவர் பிரபாகரன் இந்தியாவில் பிரபாகரன் தங்கியிருந்த நாட்களில் "சண்டே" பத்திரிக்கை அவரைப் பேட்டி கண்டிருந்தது. கேள்வி : தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு முன்னாள் உறுப்பினர்களை புலிகள் இயக்கம் கொலை செய்ததா? இந்திய உளவுத்துறையினர் அவர்களை நீங்களே கொலை செய்ததாக நம்புகிறார்களே? பிரபாகரன் : நாம் அவர்களைக் கொல்லவில்லை. ஆனால் இந்திய உளவுத்துறையினர் அப்படியான முடிவிற்கு வந்தால் நாம் என்ன செய்ய முடியும்? அவர்கள் கொல்லப்பட்டவுடனேயே நாமே அவர்களைக் கொன்றதாக இலங்கையரசாங்கம் எம்மீது குற்றஞ்சாட்டியவேளை நாம் உடனடியாகவே அதனை மறுத்திருந்தோம். ஈழத்தேசிய விடுதலை முன்னணியும் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று அறிவித்திருந்தது. இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே புரிந்ததாகக் கூறினாலும்கூட யாழ்ப்பாணத்து மக்களுக்கு இதனைச் செய்தது யாரென்பது நன்றாகவே தெரியும். சாட்சிகள் எதனையும் தேடாது, கண்மூடித்தனமாக இந்திய உளவுத்துறை இக்கொலைகளை நாமே செய்ததாக நம்புகின்றது என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், இக்காலப்பகுதியில் நான் தலைமறைவாகியிருந்தேன், அதனை மனதிற்கொண்டே இக்கொலைகளை எனது இயக்கம் செய்ததாக இந்திய உளவுத்துறை நினைக்கிறது போலும். இதனை நாங்கள் செய்திருந்தால், அதனை உடனடியாகவே உரிமை கோரியிருப்போம். எமது செயலுக்கான காரணங்களையும் நாம் தெளிவாகக் குறிப்பிட்டிருப்போம். எமது விசாரணைகளின் ஊடாக ஒருவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டவிடத்தே அவருக்கான தண்டனையினை நாம் நிறைவேற்றுவோம். ஆகவே, நாம் இக்கொலைகளைப் புரிந்திருந்தால் நிச்சயம் அதற்கான காரணமும் எம்மால் வெளிப்படுத்தப்பட்டிருக்கும். ஒரு பேச்சிற்கு ஆளாளசுந்தரத்தை நாமே கொன்றிருந்தால், அதற்கான காரணத்தை நிச்சயமாக வெளிப்படுத்தியிருப்போம். ஆனால், அவரைக் கொல்லவேண்டும் என்கிற எந்தத் தேவையும் எமக்கு இருக்கவில்லை. யாழ்ப்பாணம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக அவர் இருந்த நாட்களில் பெருமளவு முறைகேடுகளில் அவர் ஈடுபட்டு வந்ததனால் அவருக்குச் சில தண்டனைகளை நாம் முன்னர் வழங்கியிருந்தோம். அவரது முறைகேடுகளை நாம் ஆதாரத்துடன் நிரூபித்திருந்தோம். அவரது முறைகேடுகள் தொடர்பான பல ஆவணங்கள் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் எரியூட்டப்பட்டபோது சேர்ந்தே எரிக்கப்பட்டு விட்டன. யாழ் பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவை நாம் தண்டித்தோம். ஆனந்தராஜாவைக் கொன்றவர்களைப் பற்றிய தகவல்களைத் தருவோருக்கு ரூபாய் ஐந்துலட்சங்களைத் தருவதாக இலங்கையரசாங்கம் அறிவித்தபோதே அவருக்கும் இலங்கையரசாங்கத்திற்கும் இடையே இருந்த நட்பினை யாழ்ப்பாண மக்கள் அறிந்துகொண்டனர். அவரை நாம் கொன்றதற்கான காரணத்தைத் தமிழ் மக்கள் முற்றாக உணர்ந்துகொண்டதனால் அக்கொலை குறித்து அவர்கள் பேசவில்லை. இலங்கை இராணுவம் எமது மக்களை தினமும் கொன்று குவித்துக்கொண்டும், இளைஞர்களைச் சகட்டுமேனிக்குக் கைதுசெய்து சித்திரவதை செய்துகொண்டும், எமது பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிக்கொண்டும், எமது சொத்துக்களை எரித்து நாசம் செய்துகொண்டும் இருந்த நாட்களில் அதே இராணுவத்துடன் சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை நடத்த ஆனந்தராஜா திட்டமிட்டு வந்தார். அவரால் திட்டமிடப்பட்டு வந்த கிரிக்கெட் போட்டியினை ஒரு பிரச்சாரப் பொருளாக முன்வைத்து, "தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்துடன் மிகவும் தோழமையுடன் பழகுகிறார்கள், அவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுகிறார்கள், ஆனால் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கின்றது என்று பொய்யான பிரச்சாரத்தோடு தமிழ்ப் பயங்கரவாதிகள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று உலகிற்குக் காட்ட இலங்கையரசாங்கம் முயன்று வந்ததை நாம் அறிவோம். ஆகவேதான் அவரை அகற்றவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. கேள்வி : அவர்கள் இருவரையும் உங்கள் இயக்கத்தில் உங்களின் சொல்லிற்குக் கட்டுப்படாத ஒரு பிரிவினர் கொன்றிருக்கச் சந்தர்ப்பம் இருக்கின்றதா? பிரபாகரன் : நிச்சயமாக‌ இல்லை. எனது அனுமதியின்றி புலிகள் இயக்கத்தில் எதுவுமே நடப்பதில்லை. சண்டே பத்திரிகைக்குப் பேட்டியளிக்கு முன்னர் பிரபாகரன் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு உறுப்பினர்களான யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் சந்தித்தார். ஆளாளசுந்தரத்தையும், தர்மலிங்கத்தையும் புலிகள் இயக்கம் கொல்லவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினார். குறிப்பாக, தர்மலிங்கம் மீது தான் மிகுந்த அபிமானம் கொண்டிருந்தவன் என்றும், அவரது கொலை தன்னை கவலைப்படச் செய்துள்ளதாகவும் பிரபாகரன் அவர்களிடம் கூறினார். யோகேஸ்வரனையும், தங்கத்துரையையும் தான் சந்தித்தது குறித்தும் சண்டே பத்திரிக்கையுடனான பேட்டியின்போது பிரபாகரன் பகிர்ந்துகொண்டார். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்களை நான் சந்தித்துப் பேசினேன். இவ்விரு கொலைகளையும் நாம் செய்யவில்லை என்பதை அவர்களிடம் உறுதிப்படுத்தினேன். எம்மிடமிருந்து அவ்வாறான தண்டனைகள் அவர்களுக்கு வழங்கப்படாது என்றும் அவர்களிடம் நான் கூறினேன். ஆளாளசுந்தரத்திற்கு நான் அச்சுருத்தும் தண்டனையொன்றினை முன்னர் வழங்கியிருந்தோம் என்பதற்காக நாம் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கு எதிரானவர்கள் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனாலும், அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி அச்சமூட்டும் வகையில் வளர்ந்துவருவதை அவர்களிடம் தெரிவித்தேன். தமிழ் ஈழத்திற்கான போராட்டத்தை அவர்கள் கைவிட்டு வேறு வழியில் சென்றுகொண்டிருப்பதனை தமிழினத்திற்கெதிரான துரோகம் என்று இளைய தலைமுறையினர் கருதுகிறார்கள். மேலும், தமிழ் மக்களுடன் இருந்து, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்காது, வெளியிலிருந்து அவர்கள் தமது அரசியலைச் செய்துவருவதால் அவர்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்கிறது. தமிழ் ஈழத்திற்கான நியாயத்தன்மையில் இருந்தும், அவசியத்திலிருந்தும், தவிர்க்கவியலாத் தன்மையிலிருந்தும் தம்மை அவர்கள் அந்நியப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடமிருந்து தம்மை மேலும் மேலும் அவர்கள் அந்நியப்படுத்தும் இடத்து, இளைய தலைமுறையினரிடமிருந்து அதற்கான எதிர்வினையினை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படுகிறது. யதார்த்தம் என்னவென்றால், நான் ஈழத்தைக் கைவிட்டாலும் அவர்களைப்போன்றே தண்டனைக்கு உட்படுத்தப்படுவேன் என்பதுதான். சண்டே பத்திரிக்கையின் நிருபரான அனீத்தா பிரதாப் தொடர்ந்தும் பிரபாகரனிடம் சில கேள்விகளைக் கேட்டார். அவற்றில் ஒன்றுதான் பாலசிங்கத்தை நாடுகடத்தும் தனது தீர்மானத்தை இறுதி நேரத்தில் இரத்துச் செய்ய ரஜீவ் எண்ணியிருந்தார் என்றும், ஆனால் இரு பாராளுமன்ற உறுப்பினர்களையும் புலிகளே கொன்றதாக இந்திய உளவுத்துறை ரஜீவிடம் தெரிவித்தபோது, நாடுகடத்தும் தீர்மானத்தை இரத்துச் செய்வதை ரஜீவ் கைவிட்டார் என்றும் கூறி இதுகுறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று பிரபாகரனைக் கேட்டார். இக்கேள்விக்கான பதிலை, இந்திய உளவுத்துறையின் தவறான ஆய்வினைச் சுட்டிக்காட்ட பிரபாகரன் பாவித்தார். "எமக்கும் இப்படுகொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், நாமே அவர்களைக் கொன்றதாகக் கற்பனை செய்துகொண்டு, பாலசிங்கத்தை நாடுகடத்தும் முயற்சியில் இந்திய அரசாங்கம் தீர்மானமாக இருந்திருந்தால், அது அவர்களின் பாரிய தவறேன்றே நான் நம்புகிறேன். இக்கொலைகளுக்காக எம்மைத் தண்டிக்கவேண்டிய எந்தத் தேவையும் இல்லை. இவ்வாறான தவறான தகவல்களை ரஜீவிற்கு வழங்கிய இந்திய உளவுத்துறையினைத்தான் அவர் தண்டித்திருக்கவேண்டும். குறைந்தது இவ்வாறான தவறுகளை ரோ எதிர்காலத்தில் செய்வதில் இருந்தாவது அவர்களைத் தடுக்க முடியும்" என்று பிரபாகரன் பதிலளித்தார்.
  11. ரஜீவைச் சந்தித்த தலைவர் பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் புரட்டாதி 18 ஆம் திகதி தில்லியை வந்தடைந்தனர். அங்கு ஐந்து சுற்றுப் பேச்சுக்களை அவர்கள் நடத்தினர். இரு சுற்றுப் பேச்சுக்கள் ரொமேஷ் பண்டாரியுடனும், ரஜீவ் காந்தியுடன் 90 நிமிட பேச்சுவார்த்தையும், இந்திய வெள்யுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் இரு சுற்றுப் பேச்சுக்களும் அவர்களால் நடத்தப்பட்டன. ரஜீவ் காந்தியுடனான ஈழத்தேசிய விடுதலை முன்னணித் தலைவர்களின் பேச்சுக்கள், ரஜீவின், தன்னை வந்து உடனடியாகச் சந்திப்பதற்கான கோரிக்கைக்கு தம்மால் ஏன் உடனடியாகப் பதிலளிக்க முடியாது போனது என்பதற்கான பிரபாகரனின் விளக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. ரஜீவின் கோரிக்கை விடுக்கப்பட்ட நாட்களில் தான் வட இலங்கையில் இருந்ததாகவும், பாலசிங்கத்தை இந்தியா நாடுகடத்தியிருந்ததாகவும் பிரபாகரன் ரஜீவிடம் தெரிவித்தார். அத்துடன் ரஜீவ் தன்னை வந்து சந்திக்குமாறு கோரிக்கை விடுத்த நாட்களின்போதும் பிரபாகரன் வட இலங்கையிலேயே தொடர்ச்சியாகத் தங்கியிருந்தார். பாலசிங்கத்தை இந்தியா நடுகடத்தியமையினை தான்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றும், அதற்கு ஆட்சேபணை தெரிவிக்கவே தான் ரஜீவின் கோரிக்கைக்கு உடனடியாகப் பதிலளிக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறினார். "நான் உங்களை வந்து சந்திப்பதை தவிர்க்க விரும்பவில்லை. உண்மையைச் சொல்வதானால் உங்களைச் சந்திக்கவே நான் விரும்பியிருந்தேன். அதனாலேயே இன்று நான் வந்திருக்கிறேன்" என்று தன்னைப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டு நின்ற ரஜீவிடம் பிரபாகரன் தெரிவித்தார். பின்னர், பாலசிங்கத்தை நாடுகடத்தும் இந்தியாவின் முடிவினை அவர் தவறென்று சுட்டிக் காட்டினார். திம்புப் பேச்சுக்களிலிருந்து வெளிநடப்புச் செய்வதாக தானும், ஏனைய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுமே முடிவெடுத்த‌தாகவும், பாலசிங்கம் செய்தது அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்பினருக்கு அறியத் தந்தது மட்டும்தான் என்றும் பிரபாகரன் கூறினார். "அது எம்மால் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவு. பாலசிங்கம் அம்முடிவினை பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த எமது பிரதிநிதிகளுக்கு அறியத் தந்தார்" என்று பிரபாகரன் கூறினார். "தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தனைகளையும் திட்டமிடல்களையும் செய்வது நானே. ஆங்கில மொழியில் எனக்கிருக்கும் மட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலால், பாலசிங்கமே எனது சிந்தனைகளை வெளியே கொண்டுவருவார். எனது முடிவுகளில் அவர் தலையிடுவதில்லை" என்று பிரபாகரன் ரஜீவைப் பார்த்துக் கூறினார். எம்.ஜி.ஆர் உடனனான பேச்சுக்களின்போது தாம் தெரிவித்த அதே கருத்துக்களையே ரஜீவுடனான சந்திப்பின்போதும் போராளிகளின் தலைவர்கள் வெளிப்படுத்தினர். குறிப்பாக இராணுவ அடக்குமுறைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருந்த‌ உப்புச் சப்பற்ற தீர்வு என்பன குறித்து அவர்கள் ரஜீவிடம் தமது ஆட்சேபணையினைத் தெரிவித்தனர். தமிழர்களின் தாயகக் கோரிக்கையினை நிராகரிக்கும் நோக்குடன் தமிழரின் தாயகத்தின் ஒரு பகுதியான கிழக்கு மாகாணத்தில் இருந்து அவர்களை நிரந்தரமாகவே அடித்து விரட்டிவிட்டு, தமிழர் தாயகத்தின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றியமைக்க இலங்கையரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையொன்றினையும் அவர்கள் ரஜீவிடம் சமர்ப்பித்தனர். போராளிகளின் தலைவர்களுடன் பேசிய ரஜீவும் பண்டாரியும், இலங்கையரசாங்கத்துடன் தாம் தொடர்ந்து பேசப்போவதாகவும், போராளிகளும் தமது பக்க தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். "ஆரம்ப ஆவணத்துடன் மீண்டும் வந்து சந்தியுங்கள்" என்று போராளிகளிடம் ரஜீவ் கூறினார். ரஜீவிடம் பேசிய பிரபாகரன், கடந்த கால அனுபவங்களூடாகவும், சரித்திரத்தினைப் பார்ப்பதூடாகவும் ஜெயவர்த்தன நேர்மையான தீர்வொன்றிற்கு ஒருபோதும் வரப்போவதில்லை என்பதை உங்களால் உணர்ந்துகொள்ள முடியும் என்று கூறினார். தான் அமைதியை விரும்பும் ஒரு மனிதர் என்று உலகிற்குக் காட்டவே நாடகமொன்றினை அவர் நடத்திக்கொண்டிருக்கிறார் என்று பிரபாகரன் மேலும் தெரிவித்தார். ஜெயாரை நம்பவேண்டாம் என்று ரஜீவை எச்சரித்த பிரபாகரன், அவர்குறித்து மிகுந்த அவதானத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழரின் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு ஒன்றினை அடைவது குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் இந்திய அரசாங்கத்தைப் பாராட்டிய பிரபாகரன், தமிழர் விரும்பும் தீர்வினை அடைய இந்தியா இன்னும் அதிகமாக உழைக்கவேண்டியிருக்கும் என்றும் கூறினார். தமிழர்களின் பிரச்சினைக்கான உண்மையானதும், தர்க்கரீதியானதுமான தீர்வு தமிழ் ஈழம் என்று தான் உறுதியாக நம்புவதாக ரஜீவிடமும் அங்கிருந்த ஏனைய இந்திய அதிகாரிகளிடமும் பிரபாகரன் கூறினார். இந்தியா மீது தான் வைத்திருக்கும் மரியாதையின் நிமித்தமே ஈழத்திற்கு மாற்றீடான தீர்வு குறித்து ஆராய ஏற்றுக்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஈழத்திற்கு மாற்றீடான தீர்வாக் தான் எதிர்பார்ப்பது பிரிக்கப்படாத இலங்கைக்குள் தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் முற்றான அதிகாரத்தைக் கொண்டதாக அமைதல் வேண்டும் என்று அவர் கூறினார். ஆனால், தமிழர்கள் தம்மைத்தாமே ஆளும் அதிகாரத்தினை சிங்கள தேசம் ஒருபோதும் வழங்கப்போவதில்லை என்பது தனக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் கூறினார். சென்னையிலும், தில்லியிலும் தான் தங்கியிருந்த நாட்களை தர்மலிங்கம் மற்றும் ஆளாளசுந்தரம் ஆகியோரின் படுகொலைகளில் புலிகள் இயக்கத்திற்கு பங்கேதும் இல்லை என்பதைத் தெளிவாகச் சொல்லும் செயற்பாடுகளுக்காகவும் பிரபாகரன் பயன்படுத்திக்கொண்டார்.
  12. இலங்கை இராணுவம் சிங்கள இராணுவமாகவே இருக்கும். வடக்கையும் கிழக்கையும் இணைக்க முடியாது, விரும்பினால் மட்டக்களப்பு மாவட்டம் வட மாகாணத்துடன் இணையலாம் ‍- ஜெயார் ஜெயவர்த்தன‌ யுத்த நிறுத்தம் தோல்வியடைந்து வரும் நிலையிலும் கூட, பிரச்சினைக்கான தீர்வு குறித்து செயற்படுவதில் தில்லி ஈடுபட்டு வந்தது. தில்லி ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவதில் ரஜீவும் பண்டாரியும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்ட ஆறு போராளிகள் அமைப்புக்களின் தலைவர்களை தில்லி ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக தன்னை வந்து சந்திக்குமாறு ரஜீவ் கோரியிருந்தார். தில்லி ஒப்பந்தம் குறித்த அவர்களின் கருத்தினை அறிந்துகொண்டு பின்னர் கொழும்புடன் பேசுவதே அவரது எண்ணம். பேச்சுவார்த்தைகளின் அணுசரணையாளர் என்கிற ரீதியில் இரு தரப்புக்களையும் பேரம்பேசலில் ஈடுபட வைப்பதென்பது இயலாத காரியம் என்பதை திம்புப் பேச்சுக்களின் அனுபவத்திலிருந்து இந்தியா கற்றுக்கொண்டிருந்தது. விட்டுக்கொடுப்புக்களுக்குப் பதிலாக முரண்பாட்டுப் போக்கினையே அனுசரணையாளர் எனும் இந்தியாவின் பங்கு திம்புப் பேச்சுக்களில் ஏற்படுத்தியிருந்தது. ஆகவே, அணுசரணையாளர் எனும் அதுவரை தான் கடைப்பிடித்த போக்கினைக் கைவிட்டு பேச்சுக்களின் நடுவர் எனும் நிலையினைக் கைக்கொண்டு இரு தரப்புடனும் நேரடியாகப் பேசி, அழுத்தங்களைப் பிரயோகித்து இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை கண்டறிந்து, இரு தரப்பையும் இணங்கவைக்கும் சக்தி எனும் நிலைக்கு இந்தியா தன்னை உயர்த்திக்கொண்டது. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியும், புளொட் அமைப்பும் ரஜீவின் கோரிக்கையினை ஏற்றுக்கொண்ட நிலையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைமைகள் தலைமறைவாகியிருந்தனர். ஆளாளசுந்தரமும், தர்மலிங்கமும் டெலோ அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புரட்டாதி 2 ஆம் நாளன்று இரவு, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு தலைவர்களான அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் தில்லிக்குப் பயணமாகினர். தில்லியில் ரஜீவுடனும், பண்டாரியுடனும் அவர்கள் தில்லி ஒப்பந்தம் குறித்த ஆழமான‌ பேச்சுக்களில் ஈடுபட்டனர். தில்லி ஒப்பந்தம் குறித்த அமிரினதும், சிவசிதம்பரத்தினதும் கருத்துக்களை ரஜீவ் அறிந்துகொள்ள விரும்பினார். அதற்குப் பதிலளித்த அவர்கள் இருவரும் தில்லி ஒப்பந்தம் மூன்று முக்கிய விடயங்களில் திருப்திகரமானதாக இருக்கவில்லை என்று கூறினர். தமிழரின் தாயகம், காணி தொடர்பான அதிகாரப் பகிர்வு, சட்டம் ஒழுங்கு தொடர்பான அதிகாரப் பகிர்வே அவை மூன்றும் என்று அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவ்டம் தெரிவித்தபோது, தமது ஆட்சேபணைகளை எழுத்தில் தன்னிடம் வழங்குமாறு ரஜீவ் அவர்களிடம் தெரிவித்தார். சென்னை திரும்பிய அமிரும், சிவசிதம்பரமும் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் தாம் குறிப்பிட்ட மூன்று விடயங்கள் குறித்து தமிழர்கள் விட்டுக்கொடுப்பிற்குத் தயார் இல்லை என்று கூறியிருந்ததோடு தில்லி ஒப்பந்தம் குறித்த ஆட்சேபணைகளையும் வெளிப்படுத்தியிருந்தனர். அவர்கள் குறிப்பிட்ட ஆட்சேபணைகள் வருமாறு, ஆடி 26 ஆம் திகதி ரஜீவிற்கு தாம் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டதற்கு அமைய தமிழர்களின் தாயகம் தொடர்பாக கூட்டணியின் தலைவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தனர், 1. தமிழரின் பிரச்சினைக்குரிய எந்தத் தீர்வும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை ஏற்றுக்கொண்டதாக அமைந்திருத்தல் வேண்டும். சுதந்திரத்திற்குப் பின்னர் பதவியில் இருந்த அனைத்துச் சிங்கள அரசாங்கங்களும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களூடாக தமிழரின் தாயகத்தைச் சிதைத்து, அதன் எல்லைகளை மாற்றியமைப்பதில் முன்னெடுப்புடன் செயற்பட்டே வருகின்றன. பலஸ்த்தீன நிலப்பரப்பில் இஸ்ரேல் செய்துவரும் குடியேற்றங்களுக்குச் சற்றும் சளைக்காத வகையிலும், தமிழ் மக்களினது தொடர்ச்சியான எதிர்ப்பிற்கு மத்தியிலும், ஒவ்வொரு பிரதமரும் தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பின்னரும் தமிழரின் தாயகச் சிதைப்பென்பது நீண்டுகொண்டே செல்கிறது. இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும், காணியதிகாரம் என்பது நிச்சயம் தமிழருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், தமிழர் தாயகத்தில் சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த காணியதிகாரம் தமிழரிடம் இருப்பது இன்றியமையாதது என்றும் தெரிவித்தனர். 2. சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் குறித்து பேசும்போது, தில்லி ஒப்பந்தத்தின்படி மாநிலங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் பொலீஸ் அதிகாரம் எந்தவிதத்திலும் போதுமானதல்ல என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஒரு மாநிலத்தின் பொலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து காவல்த்துறையினரும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர்கள் கோரினர். 3. தமிழ் மக்களின் பாதுகாப்பும், நலனும் முக்கிய விடயங்களாக மாறியிருப்பதாகச் சுட்டிக் காட்டிய அவர்கள், தமிழரின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு மூன்று விடயங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரினர். அவையாவன, வடக்குக் கிழக்கிலிருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வது. ஐந்து வருடங்களுக்கொருமுறை மாநிலங்களின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக ஜனாதிபதியும், மாநில முதலமைச்சரும் கல‌ந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுப்பது. இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பின்பொழுது நாட்டின் இனவிகிதாசாரத்தின் அடிப்படையிலேயே ஆட்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதுடன், தமிழ் இராணுவத்தினருக்கான ரெஜிமெண்ட் ஒன்றும், முஸ்லீம் இராணுவத்திற்கான ரெஜிமெண்ட் ஒன்றும் தனித்தனியாக இராணுவத்தினுள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடமிருந்து தில்லி ஒப்பந்தம் குறித்த கருத்துக்களை எப்படியாவது பெற்றுக்கொள்வதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களினதும் பொதுவான கோரிக்கையினை சிங்களத் தலைவர்களின் பார்வைக்கு முன்வைக்க ரஜீவ் முயன்று வந்தார். தொண்டைமான் தனது பூர்வீக வாசஸ்த்தலம் அமைந்திருக்கும் தஞ்சாவூர் மாவட்டத்தின் மூனா புதூரிற்கு அடிக்கடி வந்துபோவதை வழமையாகக் கொண்டிருந்தார். அவரது வருகையினை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி, ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் தொண்டைமானைப் பேசவைத்து, தன்னை வந்து சந்திக்க அவர்களை இணங்கச் செய்வதே ரஜீவின் நோக்கம். இதனை செயற்படுத்தும் பணி ரொமேஷ் பண்டாரியிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், போராளிகளின் தலைவர்களைச் சந்திக்க தொண்டைமான் எடுத்த முயற்சி தோல்வியடையவே அவர் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஐயும், மின்வளத்துறை அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனையும் புரட்டாதி 6 ஆம் திகதி சந்தித்துவிட்டுச் சென்றார். இதற்கு முன்னர், புரட்டாதி 5 ஆம் திகதி ஜெயாரைச் சந்தித்த தொண்டைமான் மறுநாளான புரட்டாதி 6 ஆம் திகதி முதலமைச்சர் ராமச்சந்திரனைத் தான் சந்திக்கவிருப்பதாக அறிவித்தார். "தில்லி ஒப்பந்தம் குறித்து எம்.ஜி.ஆரி இடம் நான் என்ன கூறட்டும்?" என்று ஜெயாரிடம் வினவினார் தொண்டைமான். அதற்குப் பதிலளித்த ஜெயார், தில்லி ஒப்பந்தம் இறுதியானது என்று தான் ஏற்றுக்கொள்ளவில்லையென்றும், ஆனால் அதனை அடிப்படையாகக் கொண்டு பேச்சுக்களில் ஈடுபட முடியும் என்று தான் கருதுவதாக எம்.ஜி.ஆர் இடம் சொல்லுங்கள் என்றும் கூறினார். ஜெயாரின் செய்தியை எம்.ஜி.ஆர் இடம் அப்படியே தெரிவித்துவிட்டு பண்ருட்டியைச் சந்தித்த தொண்டைமான், தமிழ்நாட்டில் தலைமறைவாகியிருந்த ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களிடம் ரஜீவைச் சென்று சந்திக்குமாறு கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். தமிழ்நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துவிட்டு இந்துப் பத்திரிக்கைக்குப் பேட்டிகொடுத்த தொண்டைமான், "தில்லி ஒப்பந்தமே இறுதியானது அல்ல. பேச்சுவார்த்தைக்கான அடிப்படை ஆவணமே அது. இருதரப்பும் இணங்கும்பட்சத்தில் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் குறித்து மாற்றங்களைச் செய்து இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையினை அடைய முடியும்" என்று கூறினார். இதேவேளை, இலங்கை ராணுவத்தினரின் அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தி வைக்குமாறு இலங்கையரசாங்கத்தினை இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தனர். அதேவேளை போராளிகளிடம் தமது நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு கோரிய இந்திய அதிகாரிகள், குறிப்பாக புலிகளிடம் பேசும்போது இராணுவத்தினர் மீதான கண்ணிவெடித்தாக்குதல்கள், தொடரணி மீதான பதுங்கித் தாக்குதல்களையும் நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொண்டனர். தமிழர்களின் பிரச்சினையில் மிகவும் காத்திரமான முறையில் பங்களிக்கும் எண்ணத்துடன் தில்லி அந்நாட்களில் இயங்கிக்கொண்டிருந்தது. புரட்டாதி 7 ஆம் திகதியிலிருந்து 14 வரையான காலப்பகுதியில் டிக்ஷிட் தில்லிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகளில் ஈடுபடுத்தப்பட்டார். மேலும், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் தில்லி ஒப்பந்தம் குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஆராய ஜெயாரின் சகோதரர் ஹெக்டர் ஜயவர்த்தனவும் தில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தார். புரட்டாதி 10 இலிருந்து 13 வரை அவர் தில்லியில் தங்கியிருந்தார். தில்லியில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தில்லி ஒப்பந்தம் குறித்து மேலதிகப் பேச்சுக்களை நடத்தவே ஹெக்டர் வரவழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிவித்தனர். தில்லியில் பண்டாரியுடனும், இந்திய அரசியலமைப்பு நிபுணர் பாலகிருஷ்ணனுடனும் பேச்சுக்களில் ஈடுபட்ட ஹெக்டர், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட மூன்று முக்கிய விடயங்களான‌ தமிழரின் தாயகம், அதனை நிர்வகிக்கும் அதிகாரம் மற்றும் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியன குறித்து கலந்துரையாடினார். தமிழரின் தாயகம் குறித்த கேள்வியொன்றின்போது, வடக்கையும் கிழக்கையும் இணைத்துக்கொள்ளும் வழிமுறை ஒன்று பற்றி ஆராய்வது குறித்து ஹெக்டரிடம் வினவினார் பண்டாரி. ஆரம்பத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைப்பது குறித்த எந்தப் பேச்சுக்களுக்கும் இடமில்லை என்று திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர் பின்னர் ஜெயாருடன் தொலைபேசியில் கலந்துரையாடிவிட்டு, மாவட்ட அபிவிருத்திச் சபைகளே அடிப்படை அதிகாரப் பகிர்வு அலகுகளாக இருக்கும் என்றும், கிழக்கு மாகாணத்தில் தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டம் விரும்பினால் வட மாகாண சபையுடன் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறினார். காணியதிகாரம் குறித்த கலந்துரையாடல்களின்போது, இதுகுறித்த பேச்சுவார்த்தையில் தமது அரசாங்கம் நெகிழ்வுத்தன்மையினைக் கடைப்பிடிக்கும் என்று ஹெக்டர் கூறினார். ஆனால், சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் குறித்து கலந்துரையாடப்பட்டபோது, இலங்கையரசாங்கம் எந்த விட்டுக்கொடுப்பையும் மேற்கொள்ளாது என்று கடுமையான தொனியில் அவர் பேசினார். இலங்கை இராணுவத்தில் இனவிகிதாசார அடிப்படையில் ஆட்களை இணைத்துக்கொள்வதை திட்டவட்டமாக மறுத்த ஹெக்டர், தமிழ் மற்றும் முஸ்லீம் ரெஜிமெண்டுக்கள் என்கிற பேச்சிற்கே இடமில்லை என்று பிடிவாதமாக நின்றார்.
  13. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் கலைப்பும், யுத்த நிறுத்தத்தின் தோல்வியும் அரசியல்த் தீர்வு குறித்து பண்டாரியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த போராளிகளின் தலைவர்கள் இலங்கையரசின் ஒருதலைப்பட்சமான அறிவிப்புக் குறித்த தமது அதிருப்தியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை மேலும் சிங்களவர்களை உள்ளடக்கி விஸ்த்தரிப்பதான இலங்கையரசின் தாந்தோன்றித்தனமான முடிவு பண்டாரிக்கும் எரிச்சலை உணடுபண்ணியிருந்ததாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பேசிவந்தனர். ஆனால், பகாமாஸில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ரஜீவிற்கும் ஜெயாரிற்கும் இடையிலான பேச்சுக்களைப் பாதித்துவிடும் என்பதற்காக யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை விஸ்த்தரிக்கும் லலித்தின் அறிவிப்புக் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை பண்டாரியும் போராளிகளும் தவிர்த்தனர். மேலும், லலித்தின் இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் அறிந்திருந்தபோதிலும், அரசியல்த் தீர்வு குறித்தே அவர் அதிகம் அக்கறை கொண்டிருந்தமையினால், இந்த அறிவிப்புக் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ள அவர் விரும்பியிருக்கவில்லை. யுத்த நிறுத்த‌க் குழுவின் விஸ்த்தரிப்பினையடுத்து அது சிங்களவரின் நலன் பேணும் கருவியாக மாறிப்போனது. இக்குழுவில் பங்கேற்றிருந்த இரு தமிழ் உறுப்பினர்களும் என்னிடம் பேசும்போது தமது கருத்துக்களை குழுவிலிருந்த ஏனைய சிங்களவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று கூறியிருந்தனர். மேலும், இராணுவத்தினரின் யுத்த நிறுத்த மீறல்கள் குறித்து தமிழ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பியபோது அவர்கள் இராணுவத்தால் அச்சுருத்தப்பட்டிருந்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்பிலிருந்த சில சிங்களவர்கள் தமிழ் உறுப்பினர்களை நேரடியாகவே அச்சுருத்தவும் செய்தனர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவென்பது தமிழர்களைப் பொறுத்தவரை செயற்றிறன் அற்றதாகவும், சிங்களவரின் நலன் காப்பதாகவும் மாறிப்போயிருந்தது. யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தோல்வியென்பது மார்கழி மாத நடுப்பகுதியில் உருவானது. இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்க் கோட்டையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கான கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அப்பகுதியினை போராளிகள் சுற்றிவளைத்து முற்றுகை நிலைக்குள் வைத்திருந்தனர். "எனது நண்பர் ஒருவரின் வாகனத்தில் யாழ் கோட்டை இராணுவ முகாம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். நான் கோட்டைப்பகுதியினை அண்மித்தபோது, வானில் திடீரென்று தோன்றிய இலங்கை விமானப்படையின் உலங்குவானூர்தியொன்று கோட்டைப்பகுதியைச் சுற்றி வட்டமிடத் தொடங்கியது. சில நிமிடங்களில் எமது வாகனம் நோக்கித் தாழப்பறந்த உலங்குவானூர்தி எம்மீது சரமாரியான துப்பாக்கித்தாக்குதலை ஆரம்பித்தது. அப்பகுதியில் யாழ் வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்படவே அவர் எம் கண்முன்னே இறந்து வீழ்ந்தார். இச்சம்பவம் எனக்குக் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியது. இது ஒரு அப்பட்டமான யுத்த நிறுத்த மீறலாகும்". "கூட்டாத்தில் நான் இச்சம்பவம் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தேன். அங்கிருந்தோர் இது ஒரு சாதாரண விபத்து, அமைதியாகுங்கள் என்று என்னிடம் கூறினர். ஆனால் என்னால் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அங்கு பரிமாறப்பட்ட மதிய உணவை நான் நிராகரித்தேன். என்னால் இனிமேலும் இங்கு இருக்கமுடியாது. என்னை வெளியேற விடுங்கள் என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கூறினேன்" என்று இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் உறுப்பினரான பேராசிரியர் சிவத்தம்பி என்னிடம் கூறினார். சிங்கள இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணக் கோட்டை ஆனால், பேராசிரியர் கோட்டையிலிருந்து வெளியேறுவதென்பது அப்போது சாத்தியப்படவில்லை. அப்பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட உலங்குவானூர்தி மீது கோட்டையைச் சுற்றி நிலையெடுத்து நின்ற போராளிகள் பதில்த்தாக்குதலை ஆரம்பித்திருந்தனர். யாழ்நகரப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த போராளிகளின் நிலைகளில் இருந்து உலங்குவானூர்தி மீதான பதில்த்தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. யாழ்க் கோட்டையினுள் கடமையாற்றிய சிங்களத் தளபதிகளில் ஒருவரான கப்டன் கொத்தலாவல பேராசிரியர் சிவத்தம்பிக்கு ஆதரவாக வந்தார். புலிகளின் யாழ்ப்பாணத் தளபதியாகவிருந்த கிட்டுவுடன் அடிக்கடி தொடர்புகளை மேற்கொண்டு வந்தவர்தான் இந்த கொத்தலாவல. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட கொத்தலாவல, உடனடியாக கிட்டுவுடன் தொடர்புகொண்டு பேராசிரியரை பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியே கொண்டுவர விரும்புவதாகக் கூறினார். இதனையடுத்து உலங்குவானூர்தி மீதான தாக்குதல் புலிகளால் உடனடியாக நிறுத்தப்பட்டது. பேராசிரியர் சிவத்தம்பியும் பாதுகாப்பாக கோட்டையிலிருந்து வெளியேறினார். "நான் அக்கணமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை எடுத்தேன்" என்று பேராசிரியர் என்னிடம் பின்னாட்களில் தெரிவித்திருந்தார். கொழும்பு திரும்பிய சிவத்தம்பி, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான அபயசிங்கவிடம் தனது முடிவு குறித்து அறிவித்தார். தனது ராஜினாமாக் கடிதத்தினை ஜனாதிபதி ஜெயாரிடம் கையளிக்க விரும்புவதாக சிவத்தம்பி அபெயசிங்கவிடம் கூறினார். ஆனால், தன்னிடமே ராஜினாமாக் கடிதத்தை சிவத்தம்பி கையளிக்கவேண்டும் என்று அபெயசிங்க வற்புறுத்தியபோதும் சிவத்தம்பி அதனை மறுத்து விட்டார். "என்னை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவில் அமர்த்தியது ஜனாதிபதியே, ஆகவே அவரிடமே எனது இராஜினாமாவைக் கையளிப்பேன்" என்று சிவத்தம்பி கூறினார். "கண்காணிப்புக் குழுவின் செயலாளரும் நானே, ஆகவே கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி என்னைப் பணித்திருக்கிறார்" என்று அபெயசிங்க பதிலளித்தார். ஆனால், ஜெயாருக்கே தனது கடிதத்தை நேரடியாகச் சமர்ப்பித்து தனது உணர்வுகளை வெளிப்படுத்துவதில் சிவத்தம்பி உறுதிபூண்டிருந்தார். பின்னர் யுத்த நிறுத்தக் குழுவில் அங்கம் வகித்த இரண்டாவது தமிழ் உறுப்பினரான சிவபாலனையும் அழைத்துக்கொண்டு நீதிபதி சி. மாணிக்கவாசகரைச் சந்திக்கச் சென்றார் சிவத்தம்பி. நீதிபதி மாணிக்கவாசகர் அப்போது யாழ் பல்கலைக்கழகத்தின் பீடாதிபதியாகக் கடமையாற்றி வந்தார். பல்கலைக்கழகத்திலிருந்து ஜனாதிபதி ஜெயாருக்குத் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய மாணிக்கவாசகர், "பேராசிரியர் சிவத்தம்பி உங்களுடன் பேசவிரும்புகிறார்" என்று கூறி தொலைபேசியை சிவத்தம்பியிடம் கையளித்தார். தொலைபேசியை வாங்கிக்கொண்ட சிவத்தம்பி இவ்வாறு கூறினார், "கெளரவ ஜனாதிபதி அவர்கள் எமது கடமையினை மிகுந்த அவதானத்துடன் கையாள்வது அவசியமானது. எமது கடமையினை சரியாகச் செய்ய எம்மை அனுமதிக்காவிட்டால் இலங்கை இப்பிரச்சினையினைத் தீர்ப்பதற்கு எமக்குக் கிடைத்திருக்கும் இந்த இறுதிச் சந்தர்ப்பம் இல்லாது போய்விடும்" என்று கூறிவிட்டு தொலைபேசியினைத் துண்டித்துக்கொண்டார். இதேவகையான கருத்துக்களையே அவர் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அனைத்துக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருந்தார். மறுநாள் டிக்ஷிட்டைச் சந்தித்த பேராசிரியர் சிவத்தம்பி தனது இராஜினாமா குறித்து அவரிடம் தெரிவித்தார். "நீங்கள் கவலைப்பட வேண்டாம், எல்லாம் சரியாகிவிடும்" என்று டிக்ஷிட் அவரிடம் கூறினார். யுத்த நிறுத்தம் குறித்தே டிக்ஷிட் அவ்வாறு கூறினார். ஆனால், டிக்ஷிட்டின் குரலில் இருந்த கசப்பான தொனியை சட்டென்று சிவத்தம்பி கண்டுகொண்டார். தாம் எவ்வகைப்பட்ட ஆளும்வர்க்கத்துடன் பேரம்பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை இந்தியா மெதுமெதுவாக உணரத் தொடங்கியிருந்தது. இத்துடன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதுடன் எல்லாமே முடிந்துபோனது. இக்குழு அமைக்கப்பட்டிருந்த காலத்திலிருந்து ஜனாதிபதிக்கு அது கையளித்த ஒற்றை அறிக்கையில், தமிழ்ப் பிரதிநிதிகளின் பிரதிநித்துவம் இன்மையினால் கண்காணிப்புக் குழு தொடர்ந்து இயங்குவதில் அர்த்தமில்லை என்று கூறியிருந்தது. கண்காணிப்புக் குழுவின் உடைதலோடு யுத்த நிறுத்தமும் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. போராளிகள், இராணுவம் ஆகிய இரு தரப்புமே யுத்த நிறுத்தம் தோல்வியடைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். யுத்த நிறுத்த காலத்தில் இருதரப்புமே தம்மைப் பலப்படுத்தி ஆயுதமயமாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். தமிழர் மீதான யுத்தம் மூலம் அவர்களின் பிரச்சினையினைத் தீர்க்க ஜெயார் உறுதிபூண்ட அதேவேளை, அதனை எதிர்கொள்வதற்குத் தமிழ் மக்களைத் தயார்ப்படுத்துவதில் பிரபாகரன் ஈடுபட்டிருந்தார். அனீத்தா பிரதாப்புடன் புரட்டாதியில் பேசியிருந்த பிரபாகரன், யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி அரசாங்கம் தம்மைப் பலப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்வேளை, தாமும் அச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்திக் கொள்வது அவசியமானது என்று தெரிவித்திருந்தார். இக்காலத்தில் யாழ்க்குடாநாட்டின் அனைத்து இராணுவ முகாம்களையும் சுற்றிவளைத்துக்கொண்ட புலிகளும் ஏனைய போராளிகளும் இராணுவத்தின் நடமாட்டத்தினைக் கட்டுப்படுத்தி வந்தனர். பகமாசில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய ரஜீவிடம், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் இருந்த சிங்களவர்களின் எண்ணிக்கையினை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் அதிகரித்துக்கொண்டது தொடர்பான தமது கண்டனத்தை போராளிகளின் தலைவர்கள் முன்வைத்தனர். ஜெயவர்த்தன நம்பப்பட முடியாதவர் என்று ரஜீவிடம் அவர்கள் வலியுறுத்தினர். "யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கத்தையே சிதறடிப்பவர் எவ்வாறு தமிழ் மக்களுக்கான தீர்வைத் தருவதாகக் கூறும் எந்த ஒப்பந்தத்தையும் நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவீர்கள்?" என்று அவர்கள் ரஜீவிடம் வினவினர். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறித்து தில்லிப் பத்திரிக்கையாளர் ஒருவர் பிரபாகரனிடம் வினவியபோது எரிச்சலடைந்த அவர் பின்வருமாறு கூறினார், "எந்தக் கண்காணிப்புக் குழு குறித்து நீங்கள் பேசுகிறீர்கள்? இதுவரை ஒரு அறிக்கையினைத் தன்னும் இக்குழுவினரால் பிரசுரிக்க முடிந்திருக்கிறதா? ஜெயவர்த்தனவின் காட்டாட்சியில் அட்டூழியங்களில் ஈடுபட்டு வரும் அவரது இராணுவ மிருகங்களின் யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்றைத்தன்னும் இக்கண்காணிப்புக் குழுவினால் இதுவரை விசாரிக்க முடிந்திருக்கிறதா? உண்மையென்னவென்றால், எமது மீனவர்களைக் கொல்வதற்காக ஜெயவர்த்தன இக்காலப்பகுதியில் பல பீரங்கிப் படகுகளை சிங்கப்பூரிடமிருந்து கொள்வனவு செய்திருக்கிறார். உண்மையென்னவென்றால் பேச்சுக்கள் நடைபெற்றுவரும் அதே காலப்பகுதியில் மேலும் மேலும் தமிழ் மக்களை அவர் கொலைசெய்துவருகிறார். அவரது இராணுவமும், கடற்படையும், விமானப்படையும் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகின்றனர்" என்று கூறினார். போராளிகளின் தலைவர்கள் கார்த்திகையில் ரஜீவிற்கு அனுப்பிய தமது கடிதத்தில், தமிழ் மக்களை ஏமாற்றி அழிக்கும் ஜெயாரின் கைங்கரியத்தின் ஒரு அங்கமே யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கம் என்றும் விமர்சித்திருந்தனர்.
  14. மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா? [TamilNet, Sunday, 18 August 2024, 11:27 GMT] இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், இது தொடர்பாக ஈழத்தமிழர் தேசம் கடைப்பிடிக்கவேண்டிய அரசியல் நிலைப்பாடு என்ன என்ற கேள்வியை முன்வைத்து, தேர்தல் அரசியல் தொடர்பான எண்ணங்களும் முடிவுகளும் மூன்று முனைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று முனைகளும் ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான கொள்கை சார் அரசியலில் இருந்து ஏற்கனவே வழுவியுள்ளன அல்லது அவ்வாறு வழுவுவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளன. மேலெழுந்தவாரியாக ஊடக அறிக்கைகளையும் உடன்படிக்கைகளையும் படிக்கும்போது ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்கான அடிப்படைகளைச் சரியாகக் கையாண்டிருப்பது போன்ற சொற்பொருட் தோற்றம் ஏற்படலாம். ஆனால், கொள்கைசார் விடுதலை அரசியல் பற்றிய அறிவோடு உற்று நோக்கும் போது இவற்றுக்குப் பின்னால் வைக்கப்பட்டுள்ள பொறிகளைத் துல்லியமாக அடையாளம் காண முடியும். அந்த அறிவைப் பகிர்ந்துகொள்வது விடுதலை அரசியலின் செல்நெறியை இனியாதல் சரியாக வழிப்படுத்த ஆக்கபூர்வமானதாக அமையும். ஆக்கிரமித்துள்ள இன அழிப்பு இலங்கை அரசின் தேர்தல் அரசியலுக்குள் நடைமுறைச்சாத்திய அரசியல் (pragmatic politics) செய்கிறோம் என்ற போர்வையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் அரசியலை (principled politics) அவ்வரசின் ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நிரந்தரமாகத் தொலைத்துவிடும் விளைவையே இந்த மூன்று முனைகளும் உருவாக்கிவருகின்றன. இதுவே இலங்கை அரசின் உத்தியும் கூட. இலங்கை அரசியலமைப்பிற்குள் எதைக் கையாள்வது என்பதை விட அதற்கு வெளியில் வைத்து எதைக் கையாள்வது என்பது பற்றிய தெளிவு ஈழத்தமிழர்களுக்கு முக்கியமானது. இது தந்தை செல்வாவின் காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு வரை ஈழத்தமிழர் விடுதலை அரசியலில் கூர்ப்புரீதியாகப் பொருத்தமான முறையிற் கையாளப்பட்டுவந்தது. 2009 ஆம் ஆண்டின் பின் தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ் மக்கள் பேரவை போன்ற முன்னெடுப்புகள் ஊடாக விடுதலை அரசியல் மீண்டும் முளைவிட்டபோதும், அவையும் இறுதியில் அச்சுத்தவறின. 2016 ஆம் ஆண்டளவில் முற்றாக மங்கிவிட்டன. விளைவாக, இலங்கை அரசியலமைப்புக்கு வெளியே சுயநிர்ணய உரிமையை எடுத்தாளும் மூலோபாய அச்சில் இருந்து தாயகத்திலுள்ள ஈழத்தமிழர் அரசியல் ஒட்டுமொத்தமாக விலகியுள்ளது. அதே அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல் அரசியலை எதற்கு, எவ்வாறு பயன்படுத்துவது என்ற தந்திரோபாயப் போக்கில் இருந்து அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் நிலைதடுமாறி விலகியுள்ளன. இந்த மூலோபாயக் குறைபாடுகளும் தந்திரோபாயக் குறைபாடுகளும் விரைந்து களையப்படவேண்டியவை. மூலோபாயக் குறைபாடுகள் எவை என்பதையும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் விரிவாகப் பார்க்க முன்னர், தந்திரோபாயக் குறைபாட்டையும் அதைத் தவிர்க்கும் வழிவகையையும் சுருக்கமாக நோக்குவோம். 1. தந்திரோபாயக் குறைபாடும் அதைத் தவிர்க்கும் வழிவகையும் இலங்கையில் தேர்தல் அரசியலைத் தனி வழியாகக்கொண்டு ஈழத்தமிழர் அரசியல் விடுதலையைக் காணலாம் என்று அரசியற் கட்சிகளின் தலைமைகள் கருதுவதும், மக்கள் அவ்வாறு நம்பவைக்கப்படுவதும், கொள்கை சார் விடுதலை அரசியலின் மூலோபாயத்துக்கு முரணானது. இலங்கை அரசோடு அரசியல் தீர்வு தொடர்பான முதன்மைப் பேச்சுவார்த்தையாளராகத் (Chief Negotiator) தாம் ஈடுபடுவதற்கான ஆணையைத் தமக்கு ஈழத்தமிழர் வாக்குகள் தருகின்றன என்று தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் சிந்திப்பதும், அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதும், பெரிய குறைபாடாகக் காணப்படுகிறது. தேர்தல் அரசியற் கட்சிகள் விடுதலை அரசியலுக்கும், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கும் குந்தகம் விளைவிக்காது செயற்பட்டால் அதுவே பெரிய சாதனை என்பதாகத் தற்போதுள்ள நிலைமை காணப்படுகிறது. உண்மையில், ஈழத்தமிழர் தேசிய விடுதலைக்குக் குந்தகம் விளைவிக்கக்கூடிய சக்திகள் தேர்தல் அரசியல் ஊடாக தமிழ் மக்களின் ஆணை பெற்ற பிரதிநிதிகள் போலத் தெரிவு செய்யப்பட்டு, ஈழத்தமிழர் தமது மக்களாணையின் பாற்பட்ட சுய நிர்ணய உரிமையை எடுத்தாள்வதற்குத் தடங்கலாக இடமளிக்கக்கூடாது என்ற தந்திரோபாயத்துக்காக மட்டுமே நல்ல சக்திகளாக ஈழத்தமிழ்த் தேசியப் பிரதிநிதிகள் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களில் பங்கேற்கவேண்டும். அன்றேல், தேர்தல் அரசியல் ஊடாக எவரும் தேர்ந்தெடுக்கப்படாவண்ணம் தமிழர்கள் முற்றிலும் தேர்தல் அரசியலைப் புறக்கணிக்கவேண்டும். இந்த இரண்டு தேர்வுகளில் எதை முன்னெடுப்பதென்றாலும் அதற்குத் தேர்தல் அரசியலுக்கு அப்பால், தேர்தல் அரசியல் கட்சிகளால் எதுவகையிலும் கட்டுப்படுத்த இயலாத பலமான ஒரு மக்கள் இயக்கம் தேவைப்படும். 1947, 1972, 1978 ஆகிய ஆண்டுகளில் தமிழ் மக்களின் ஆணைக்குப் புறம்பாக இயற்றப்பட்டு நடாத்தப்படுகின்ற ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு உட்பட்ட தேர்தல்களிற் பங்கேற்போர் எவரும் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியற் தீர்வைக் காணபதற்கான ஆணைபெற்ற ஏக பிரதிநிதிகளாகத் (sole representatives) தம்மைப் பாவனை செய்துகொள்ளாது, அவ்வாறான இலங்கை அரசியலமைப்புக்கு உட்படாத மூலோபாய நகர்வுக்குரிய ஏக பிரதிநிகள் யார் என்பதை நிறுவுவதற்கு அவ்வப்போது தேவைப்படும் மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கும் பதிலாளிகளாக (proxies) மட்டுமே தம்மை, ஆறாம் சட்டத்திருத்தத்துக்கு உட்பட்டுப் பயணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சரி மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களும் சரி, பாவனை செய்து கொள்ளவேண்டும். அரசியல் வேணவாவை ஜனநாயக வழியில் வெளிப்படுத்துவது தொடர்பாக 1947 சோல்பரி அரசியலமைப்புக்குள் ஏதோ ஒரு வகையில் 1977 ஆம் ஆண்டு வரை நீடித்த சொற்பக் கருத்துச் சுதந்திர வெளியும் ஆறாம் சட்டத்திருத்தத்தின் ஊடாக 1983 ஆம் ஆண்டோடு முற்றாக இல்லாதொழிக்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போதுள்ள தேர்தல் அரசியல் வெளி எதற்கு உதவும், எதற்கு உதவாது என்பதில் தெளிவான பொது நிலைப்பாடு இருக்கவேண்டியது அவசியம். சுயநிர்ணய உரிமையை மட்டுப்படுத்தாமல், அதாவது எதுவிதத்திலும் சுதந்திரத்தை (பிரிவினையை) மறுக்காமல் அல்லது குறைக்காமல் தமது பிரேரிப்புகளை தேர்தல் அரசியற் கட்சிகள் முன்வைக்கலாம். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைமையொன்றுக்கான மக்களாணையைப் பெற்றுக்கொடுக்கலாம். இதற்கு முரணான அமிலப் பரிசோதனைகளில் தேர்தல் அரசியல் கட்சிகள் ஈடுபடக்கூடாது. நடைமுறையில், தேசக்கட்டலுக்கு (nation-building) ஆக்கபூர்வமாகப் பங்களிப்பதைத் தமது உத்தியாகக் கொண்டு தேர்தல் அரசியற் கட்சிகள் செயற்படுவது நல்லது. தேசக்கட்டல் பற்றிய தெளிவான செயற்திட்டம் அவசியம். தாயகத்தில் சமூக விடுதலை, பிரதேச வேறுபாடுகளுக்கு மேலான ஒற்றுமை, சமூக மட்டத்தில் முன்னெடுக்கப்படும் பொருண்மியத் திட்டங்கள், கூட்டு நினைவுத்திறம் ஆகியவை மக்கள் மத்தியில் முறையாகப் பேணப்படாதுவிடின் ஆக்கிரமிப்பு அரசின் தேர்தல் அரசியல் மக்களைத் திண்டாட்டமான தெரிவுகளுக்குள் இட்டுச் செல்லும். ஈழத்தமிழர் தேசத்துக்கான சர்வதேச ஏக பிரதிநிதித்துவத்துக்குரிய கூட்டுத் தலைமையாகவோ தலைமைப் பேச்சுவார்த்தையாளர்களாகவோ இலங்கைத் தேர்தல் அரசியலில் ஈடுபடுவோர் தம்மை உருவகித்துச் செயற்படுவது கொள்கை சார் விடுதலை அரசியலுக்கு ஆபத்தைத் தருவதாகவே போய்முடியும். ஈழத்தமிழர் தேசம் என்பது ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தை மட்டும் கொண்டதல்ல, புலம்பெயர் சமூகத்தையும் இணைபிரியா அங்கமாகக் கொண்டது. தாயகத்திலான தேர்தல் அரசியலுக்குள் புலம்பெயர் சமூகமும் விடுதலை அரசியலைத் தொலைத்துவிட நிர்ப்பந்திக்காது தேசக்கட்டல் முன்னெடுக்கப்படவேண்டும். 2. மூலோபாயம் தொடர்பான குறைபாடுகளும் அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளும் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு ஐரோப்பிய காலனித்துவக் காலத்தை உள்ளடக்கியதான நியாயப்பாடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நிறுவப்படுவது. 1945 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டபோது, அதன் சாசனத்தில், உலகில் அந்நிய காலனித்துவத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பகுதிகளில் சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட தன்னாட்சியை (Self-Government) எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பதற்கு இரண்டு விதமாகப் பொறுப்புகள் பிரிக்கப்பட்டு அப்போதிருந்த உறுப்பு நாடுகளிடம் அப் பொறுப்புக் கையளிக்கப்பட்டிருந்தது. இவ்விரு பொறுப்புகளையும் ஐ.நா. சாசனத்தின் பதினோராம் அத்தியாயமான தன்னாட்சி அதிகாரமற்ற பிரதேசங்கள் ("Declaration regarding Non-Self-Governing Territories") என்பதன் கீழுள்ள 73-74 வரையான உறுப்புரைகளாகவும், பன்னிரண்டாம் அத்தியாயமான சர்வதேச அறங்காவலர் அமைப்பு (International Trusteeship System) என்பதன் கீழுள்ள 75-85 வரையான உறுப்புரைகளாகவும் ஐ.நா. சாசனம் வகுத்திருந்தது. ஐ.நா.வின் பொறுப்பில் பொதுவாக்கெடுப்பு, சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்படல் ஆகியவை மேற்குறித்த பொறிமுறைகளுக்குள் அடையாளப்படுத்தப்பட்டு நிரலிடப்பட்ட உலகப் பகுதிகளுக்கு மட்டுமே உரியது என்பதாகவும், இதர பகுதிகள் சுய ஆட்சியைப் பெறும் பயணத்தில் ஏற்கனவே இருப்பதால் விரைவில் ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றுவிடும் என்ற அடிப்படையில் மேற்குறித்த நிரல்களுக்குள் அவை சேர்க்கப்படாத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அப்பொழுது, இலங்கையில் தன்னாட்சி ஜனநாயக முறையில் உருவாக்கப்படும் பொறிமுறைக்கான வேலைத்திட்டத்தை சர்வஜன வாக்குரிமையோடு பிரித்தானியா முன்னெடுத்துக்கொண்டிருந்தமையால் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் ஈழத்தமிழர் தாயகத்தை, பிரிட்டிஷ் இந்தியா உள்ளிட்ட வேறு பல உலகப் பகுதிகளைப் போல, அக் காலனித்துவ நாடு பாரப்படுத்தியிருக்கவில்லை. அதுமட்டுமல்ல, ஈழத்தமிழர் தேசம் தனியான சுயநிர்ணய உரிமை அலகென்ற நடைமுறையையும் 1833 ஆம் ஆண்டில் பிரித்தானியா ஏற்கனவே இல்லாது செய்திருந்தது. மேற்குறித்த இரு பொறுப்புகளுக்குள்ளும் பாரப்படுத்தப்படாத பகுதிகளில், ஏற்கனவே காலனித்துவ தரப்புகளால் வகுக்கப்பட்ட நாடுகளுக்கான எல்லைகளுக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறு தேசிய இனங்கள் தமக்கென்று தனிவேறான சுயநிர்ணய உரிமையைக் கோர இயலாது எனும் நடைமுறை ஐ.நா. மன்றில் உருவாக்கப்பட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பாக நோக்கவேண்டும். இதற்கான கோட்பாட்டு அடிப்படை நீலக் கடல் விதி (Blue Water Rule) அல்லது உப்புக் கடல் ஆய்வுரை (Salt Water Thesis) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஐ.நா. பொதுச் சபையின் 637 ஆவது தீர்மானத்தின் ஏழாம் உறுப்புரை 1952 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இதை வரைபுபடுத்தியுள்ளது. சட்ட மொழியில் இது uti possidetis juris என்ற இலத்தீன் மொழிக் கலைச் சொல்லால் சித்தரிக்கப்படுகிறது. இதன் ஆங்கில மொழியிலான விளக்கம் பின்வருமாறு இருக்கும்: “Emerging states presumptively inherit their pre-independence administrative boundaries.” ஒரு நாடு காலனித்துவத்தில் இருந்து ‘விடுதலை’ பெற்று ஐ.நா. உறுப்புரிமை பெற்றபின், அதன் எல்லைக்குள் இருக்கும் அனைவரும் ‘ஒரு மக்கள்’ என்றும் அந்த ஒரு மக்களுக்குப் பொதுவான ‘ஒரு சுயநிர்ணய உரிமை’ மாத்திரமே அதற்கு ஒட்டுமொத்தமாக இருக்குமென்றும், அந்த நாட்டின் முழுமையான பிரதேச ஒருமைப்பாட்டுடன் (territorial integrity) ஒத்துப்போவதாக மட்டுமே அந்தச் சுயநிர்ணய உரிமை கையாளப்படவேண்டும் என்பதே ஐ.நா. கடைப்பிடித்த ஈழத்தமிழருக்கு ஒவ்வாத நடைமுறை. இவ்வாறு, ஈழத்தமிழர் தாயகம் மேற்குறித்த இரண்டு பொறுப்புகளுக்குள்ளும் உள்ளடக்கப்படாமைக்கும் அல்லது தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகாகக் கருதப்படாமைக்குமான முழுப் பொறுப்பும் பிரித்தானியாவுக்கே இருக்கிறது. அதாவது, வேறுவிதமாக இதைச் சொல்வதானால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுத்த முதலாவது சர்வதேசத் தரப்பு பிரித்தானியா ஆகும். பிரித்தானியா மேற்குறித்தவகையில் சுயநிர்ணய உரிமையை மறுத்த போது அதை எதிர்த்து ஈழத்தமிழர் தலைவர்கள் சுயநிர்ணய உரிமையைக் கோரினார்கள். இதைச் சரியாக விளங்கியிருத்தல் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பிரதானமானது. ஈழத்தமிழர் டொனமூர் சீர்திருத்தங்களை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை, பின்னர் சோல்பரி ஆணைக்குழுவின் முடிவுகளையும் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. இப்படியாக, இலங்கையில் முழுமையான தன்னாட்சி அதிகாரம் ஏற்பட முன்னரே அரசியலமைப்புத் தொடர்பான சமூக உடன்படிக்கை (social-contract) ஒன்று ஜனநாயக முறையில் உருவாக்கப்படாது புறக்கணிக்கப்பட்டது. ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையை முதலில் மறுத்த பிரித்தானியாவுக்கு இது தொடர்பில் வரலாற்றுரீதியான பொறுப்புக்கூறல் இருக்கிறது. ஐ.நா. சபைக்கு இது தொடர்பில் நேரடிப் பொறுப்பில்லை. ஆகவே, ஐ.நா. சபையின் நடைமுறைகளதும் விதிகளதும் பிரகாரம் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமையைக் கோருகிறார்கள் என்று மட்டுப்படுத்திச் சொல்லிக்கொள்வது ஈழத்தமிழர் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டுக்கு ஆபத்தானது. 1924 ஆம் ஆண்டிலே சுயநிர்ணய உரிமை அலகுக்கான நியாயப்பாடு ஈழத்தமிழர் தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறபோதும் அதுகுறித்து அக் காலத்திலே பதியப்பட்ட நம்பகமான எழுத்து மூல ஆதாரங்கள் இதுவரை சரியாக முன்வைக்கப்படவில்லை. 1970களின் நடுப்பகுதியில் வெளியான சில நூல்களை அடிப்படையாகக் கொண்டு 1924 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை ஆதாரபூர்வமாகவும் சட்ட அடிப்படையிலும் எடுத்தாளமுடியாது. அவ்வாறு செய்ய முனைவது மகாவம்ச வரலாறு போல் ஆகிவிடும். உரிய காலத்திலே மேற்கொள்ளப்பட்ட பதிவு ஆதாரங்களே உலக நீதிமன்று போன்ற இடங்களில் ஏற்புடையதாகக் கருதப்படும் என்பதால் அவை உரியமுறையில் தேடிக் கண்டுபிடிக்கப்படவேண்டும் (இதைப் போல, இறுதித் தமிழரசனின் பிரதானிகளுடன் போர்த்துக்கேயக் காலனித்துவம் சார்பாக ஸ்பானிய மன்னனின் பிரதானிகள் 1612 ஆம் ஆண்டு நல்லூரில் வைத்து எழுதிய உடன்படிக்கையின் உள்ளடக்கம் எழுத்தாதாரமாக பொதுவெளியில் இல்லாதுள்ளது). இருப்பினும், 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பை ஈழத்தமிழர்கள் மிகத் துல்லியமாக நிராகரித்தது மட்டுமல்ல, அப்போதே ஈழத்தமிழர் தலைவர்கள் தனித்துவமான தேசிய சுயநிர்ணய உரிமை தொடர்பான நிலைப்பாட்டைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார்கள் என்பதும் மறுக்கமுடியாத வரலாற்று உண்மையாகிறது. 1947 நவம்பர் 20 ஆம் நாள் தமிழர் தரப்பினர் பிரித்தானிய ஆளும் தரப்பை நோக்கி, “இப்பொழுது இருப்பதைப் போன்ற, சட்டசபை - மந்திரிசபைகளுடன் கூடிய ஒற்றையாட்சி அரசாங்கத்தைத் தமிழர்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தகுந்த மாற்றுமுறை இல்லாதபடியால் நாங்கள் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை கோருகிறோம்,” என்ற செய்தியை எழுத்துமூலமாக வழங்கியிருந்தனர். இந்தவகையில், ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் காலனித்துவத்துக்கு முன்னான ‘இறைமையை மீட்டுக்கொள்ளல்’ (Reversion to sovereignty) என்ற அடிப்படை எடுத்தாளப்படவேண்டியது என்பது குறிப்பாக நோக்கப்படவேண்டியது. பிரித்தானியாவுக்கு இதுதொடர்பில் பொறுப்புக்கூறல் உள்ளது என்பதும் சிறப்பாக நோக்கப்படவேண்டியது. இலங்கையின் சர்ச்சைக்குரிய ‘சுதந்திரத்தின்’ பின், 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் நாள் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தலைமைப் பேருரையில் சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள், தனித் தேசிய இனம், சுதந்திரத் தமிழரசு என்பவற்றோடு சமஷ்டி என்ற பெயரில் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளை அரசியற் தீர்வுக்கான மாதிரிகளாக எடுத்துக்காட்டியிருந்தார். ஐரிஷ் விடுதலைப் போராட்டத்தையும் முன்னுதாரணமாக செல்வநாயகம் எடுத்தாண்டிருந்தார். இதன் மூலம், தொடர்ச்சியாகச் சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் இணைப்பாட்சிக்கு ஒப்பான ஒரு கூட்டாட்சியைக் கொள்கையாக அவர் முன்வைக்க முற்பட்டமை தென்படுகிறது. அதை சமஷ்டி என்ற பெயரில் அப்போது அவர் குறிப்பிட்டுவந்தார். கனடாவும் சுவிற்சர்லாந்தும் அரசியலமைப்புகளை உருவாக்கிக்கொண்டமை கூட்டாட்சியை (Federation) விடவும் இணைப்பாட்சிக்கு (Confederation) உரிய முன்னுதாரணங்களாகும். இணைப்பாட்சி என்பது காலப்போக்கில் கூட்டாட்சி நோக்கி அல்லது சுதந்திரம் நோக்கிப் பயணிப்பதற்கான ஒரு வழிவரைபட அரசியலமைப்புப் பொறிமுறை. 1951 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் முதலாம் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முதலாம் தீர்மானத்தில் தனிவேறான தேசம் என்ற அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்கு மறுக்கவொண்ணா உரிமையாகச் சுயநிர்ணய உரிமை அடிப்படையானது என்பது குறிப்பிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, பொதுசன வாக்கெடுப்பும் அதே தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இதற்கும் மேல், அம் மாநாட்டின் இரண்டாம் தீர்மானம் சோல்பரி அரசியலமைப்புத் திட்டத்தை “அறிவுக்கொவ்வாததெனவும் தமிழ் பேசும் மக்களை அடிமைகொள்வதற்கேதுவானதெனவும் இம்மாநாடு கண்டிக்கிறது,” என்று கடுமையான தொனியில் நிராகரித்திருந்தது. இது ஆதாரபூர்வமான வரலாறு. இலங்கை ஐ.நா. உறுப்புரிமையைப் பெற்றது 1955 ஆம் ஆண்டின் இறுதியிலாகும். அதைப் பெற்று ஒரு சில மாதங்களுக்குள் தனிச்சிங்களச் சட்டமும் இன அழிப்பு வேலைத்திட்டமும் இலங்கை அரசால் முன்னெடுக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது. 1960 ஆம் ஆண்டு ஐ. நா. பொதுச் சபை சுயநிர்ணய உரிமை தொடர்பாக அடுத்த கட்டமாக 1514(XV) ஆம் இலக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. அந்தத் தீர்மானத்தின் இரண்டாம் உறுப்புரையானது அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய உரிமை உண்டென்று அகலமாக வரையறை செய்துவிட்டு, அதை மட்டுப்படுத்தும் விதமாகத் தனது ஆறாம் உறுப்புரையில் வேறொரு விடயத்தைப் புகுத்தியது. அதாவது, ஏற்கனவே உறுப்புரிமை பெற்றுவிட்ட நாடுகளின் நாட்டு எல்லைகளை மாற்றும் வகையில் அந்த நாடுகளுக்குள் இருக்கும் எவரும் தனிவேறான சுயநிர்ணய உரிமை அலகொன்றைக் கோர முற்பட்டால் அது ஐ. நா. சாசனத்துக்கு முரணானது என்று கருதப்படும் என்றது அந்த ஆறாம் உறுப்புரை. ஆக, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை என்பது, ஐ.நா. நடைமுறைக்கும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டுக்கும் மாறாக, காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்குரிய தேசிய சுயநிர்ணய உரிமையாக (national self-determination) ஆரம்பத்திலேயே ஈழத்தமிழர்களால் வரையறை செய்யப்பட்டுவிட்டது. இலங்கை ஐ. நா. உறுப்புரிமை பெற முன்னரே, ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்தமை குறிப்பாக நோக்கப்படவேண்டியது. அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் பார்க்கப்படவேண்டியது. இந்தப் பின்னணியை மறைத்துவிட்டு, அல்லது வரலாற்றைக் கத்தரித்துவிட்டு, புதிய விளக்கங்களைச் சுயநிர்ணய உரிமைக்குப் போட்டுக்கொள்ளவேண்டும் என்று சிந்திப்பது அடிப்படையில் கோளாறானது. 2009 ஆம் ஆண்டில் இன அழிப்புப் போரினால் மெய்நடப்பு அரசும் இராணுவப் பலமும் அழிக்கப்பட்டதால், சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான பௌதிக பலம் இல்லாது போய்விட்டதென்றும், அதனால் சுயநிர்ணய உரிமையை இனிமேல் ஏதோ ஒரு வகையில் மட்டுப்படுத்தித்தான் சித்தரிக்கவேண்டும் என்றும் சிந்திப்பது கோட்பாட்டு ரீதியாக மேலும் கோளாறானது. தந்தை செல்வா கூட்டாட்சி கோரிய காலத்தில் இருந்தது சோல்பரி அரசியலமைப்பு. அதை இலங்கை அரசு ஒரு தலைப்பட்சமாக இல்லாதொழித்து புதிய அரசியலமைப்பைக் கொண்டுவந்தவுடன் அந்த நகர்வை அவர் நிராகரித்து, தனது பிரதிநிதித்துவத்தைத் துறந்து, காங்கேசன்துறைத் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சூழலை உருவாக்கி, தமிழ் மக்களின் நிராகரிப்புக்குரிய தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துப் போட்டியிட்டு அதற்குரிய மக்களாணையை வென்றெடுத்துக் காட்டியிருந்தார் என்பதும் வரலாறு. 1972 ஆம் ஆண்டுக் குடியரசு யாப்பு, 1978 ஆம் ஆண்டில் ஜே. ஆர். ஜெயவர்த்தனா மீண்டும் ஒருதலைப்பட்சமாகக் கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆகிய இரண்டின் சட்டகங்களுக்குள்ளும் கூட்டாட்சிக் கோரிக்கையை தந்தை செல்வா முன்வைக்கவில்லை. அவர் தொடர்ந்து உயிர்வாழ்ந்திருந்தால் அவ்வாறு முன்வைத்திருக்கவும் மாட்டார். இந்தவகையில், தற்போது கூட்டாட்சி என்ற கொள்கையை மீண்டும் தூசிதட்டி எடுத்து முன்வைத்திருக்கும் இக்காலத்துத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட அனைத்துத் தேர்தல் அரசியற் கட்சியினரும் தந்தை செல்வாவுக்கு நேர் விரோதமான அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவர்களே. கூட்டாட்சி என்பதற்குப் பதிலாக இணைப்பாட்சி என்று கொள்கையை முன்வைப்பதே சுயநிர்ணய உரிமையைத் தொடர்ந்தும் தக்கவைக்க இடமளிக்கும். இணைப்பாட்சி முறையூடாகப் பயணித்து, பின்னர் கூட்டாட்சியாக நீடிக்கும் கனடா, சுவிற்சர்லாந்து போன்ற நாடுகளையே தந்தை செல்வா கூட முன்னுதாரணமாகக் கொண்டிருந்தார் என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட ஒன்று. இணைப்பாட்சி என்ற வழிவரைபடத்தின் ஊடாகப் பயணிக்காது சமஷ்டி என்ற கூட்டாட்சியை சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி உருவாக்க முற்பட்டால், கூட்டாட்சி உருவாக்கப்பட்டாலும் சுயநிர்ணய உரிமையைத் தனியான அலகாகத் தக்கவைக்க இயலாத நிலைதான் ஏற்படும். இதனால், சுதந்திரத்தை (பிரிவினையை) ஒருபோதும் மறுக்காமல், அதேவேளை அதை நேரடியாகவும் கோராமல் தீவுக்குள் இருக்கும் தேர்தல் அரசியலைத் தந்திரமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, கூட்டாட்சி என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களாணையை நிராகரிப்பது அடிப்படையிலேயே தவறானது. தந்தை செல்வாவின் அமைதிவழிப் போராட்டத்துக்கும் தலைவர் பிரபாவின் ஆயுதவழிப் போராட்டத்துக்கும் முற்றிலும் முரணானது. எனவே, முழுமையான சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமூக உடன்படிக்கை ஒன்றின் பின்னரே அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்றும், அவ்வரசியலமைப்பிலும் தனி அலகுக்கான சுயநிர்ணய உரிமை முழுமையாகத் தக்கவைக்கப்படவேண்டும் என்றும் தெளிவான கொள்கை தாயகத்திலுள்ள பொது அமைப்புகளால் வகுக்கப்படுவது காலத்தின் தேவையாகிறது. ஏற்கனவே குறிப்பிடப்பட்ட ஐ.நா. மன்றுக்குள்ளான uti possidetis juris என்ற நடைமுறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் ஈழத்தமிழர் சுய நிர்ணயக் கோரிக்கை முன்னெடுக்கப்பட ஏதுவாக இன்னோர் நியாயப்பாட்டினையும் எடுத்தாளலாம். தன்னாட்சியதிகாரத்துக்கான சமாதான வழிமுறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு அவை ஏற்கனவே மறுக்கப்பட்டுள்ள சூழலில், இறுதி வழிமுறையாக (last resort) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்பதாக சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தும் சர்வதேச வழமைச் சட்டத்தின் (Customary International Law) பாற்பட்டதே அந்த வழி. அதாவது, நேரடியாக எழுத்து மூலமாக யாக்கப்பட்ட சர்வதேசச் சட்டத்துக்கு (codified International Law) அப்பாற்பட்ட சர்வதேச வழமைச் சட்டம் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளையும் அடியொற்றிப் பின்பற்றப்படுவது. பிரித்தானியாவுக்கு எதிராக முன்வைத்த சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையின் நியாயத்தோடு (Reversion to sovereignty) பரிகாரப் பிரிவினை (Remedial Secession) என்ற சர்வதேச வழமைச் சட்ட நியாயத்தையும் தந்தை செல்வா வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் சேர்த்து இரட்டித்த நியாயப்பாடாக கூர்ப்பெய்தவைத்து சுயநிர்ணய உரிமையை நியாயப்படுத்தினார். அதேவேளை, அளப்பரிய தியாகங்களைச் செய்ய முன்வருமாறும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஈழத்தமிழர்களை வேண்டியது. இந்த மக்களாணை பெற்ற தீர்மான முடிவின் படி போராடிப் பெற்ற இறைமை (Earned sovereignty) என்ற அடிப்படை 2009 ஆம் ஆண்டுவரை ஈழத்தமிழர்களின் ஒப்பற்ற தலைமையால் முன்னெடுக்கப்பட்டது. சோல்பரி யாப்பின் 29(2) உபவிதி தரும் குறைந்தபட்ச நீக்கப்படவியலாக் காப்புரிமை (entrenched safeguard) மீறப்பட்டது தொடர்பாக பிரித்தானிய கோமறை மன்றின் தீர்ப்புகளையும், அவற்றில் இருந்து தப்பும் முகமாக இலங்கை மேற்கொண்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளும் தந்தை செல்வா எடுத்தாண்ட பரிகாரப் பிரிவினைக்கு இடமளிக்கும் சுயநிர்ணய உரிமையைப் பலப்படுத்துகின்றன. இது தொடர்பாகவும் பிரித்தானியாவுக்கு ஈழத்தமிழர் தேசம் தொடர்பான பொறுப்புக்கூறல் உண்டு. இவை தொடர்பில், பிரித்தானியாவின் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட Ceylon Independence Bill 1947, Sri Lanka Republic Act 1972 ஆகிய சட்டவாக்கங்கள் குறித்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் எதிர்ப்பியக்கங்களை முன்னெடுக்கவேண்டிய தேவையுள்ளது. இந்த அடிப்படைகளை உணர்ந்து, எந்தவிதத்திலும் சுயநிர்ணய உரிமையைக் கீழிறக்காமல் முழுமையானதாக அது எடுத்தாளப்படவேண்டும். காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறாமல், ஐரோப்பிய காலனித்துவம் சிங்கள காலனித்துவத்தால் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பிரகடனம் செய்ததிலும், வரலாற்று இறைமை, பண்பாட்டு இன அழிப்பு என்பவற்றை எடுத்தாண்டதிலும், சர்வதேச வழமைச் சட்டத்தின் பாற்பட்ட பரிகாரப் பிரிவினைக்குரிய கடைசி வழியாக சுயநிர்ணய உரிமையை நிறுவியதிலும் முன்மாதிரியாக வட்டுக்கோட்டைத் தீர்மானம் 1976 ஆம் ஆண்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவே ஈழத்தமிழரின் Magna carta. காலப் போக்கில், சர்வதேச வழமைச் சட்டத்தில் மீறவொண்ணா வழமை (jus cogens norm) என்ற அடுத்த கட்ட நியாயப்பாட்டு வளர்ச்சியை சுயநிர்ணய உரிமை பெற்றுவருகிறது. அதாவது, இன அழிப்பு தொடர்பான அரச பொறுப்பு எவ்வாறு விசாரணைக்கு உலக நீதிமன்றில் உட்படுத்தப்படலாமோ, அதேபோல சுயநிர்ணய உரிமையை ஆக்கிரமிப்பு அரசொன்று மறுத்துவருவது பற்றிய அரச பொறுப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் சூழல் விரைவில் தோன்றும் வகையில் சர்வதேச நீதிச் சூழல் வளர்ச்சிபெற்று வருகின்றது. சுயநிர்ணய உரிமை தொடர்பில் சர்வதேசச் சட்டம் சார்ந்த, எமது வரலாற்று நிலைப்பாடுகளைப் பற்றுக்கோடாகக் கொண்டு அனைத்தையும் கூர்ப்பியற் போக்கில் ஒன்றிணைத்து முன்னெடுப்பதற்குப் பதிலாக, சுயநிர்ணய உரிமையில் “குறைந்தபட்சம் - அதியுச்ச பட்சம்” என்றவாறு அளவுகோற் பிரிப்பை மேற்கொள்வதும், ஆறாம் சட்டத்திருத்தம் என்ற பூச்சாண்டியைப் பார்த்து மிரளுவதும் கொள்கை சார் விடுதலை அரசியலுக்கும் ஈழத்தமிழர் தேசக்கட்டலுக்கும் முற்றிலும் முரணானது. 1947, 1972, 1978 ஆம் ஆண்டுகளில் தமிழ் மக்கள் ஆணையின்றி நிறைவேற்றப்பட்ட ஒற்றையாட்சி இன அழிப்பு இலங்கை அரசின் அரசியலமைப்புக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தமோ, அல்லது கூட்டாட்சி என்ற கோரிக்கையை எழுந்தமானதாக முன்வைக்கும் நகர்வோ ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிப்பதாகவும், வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணைக்கும் திம்புக் கோட்பாடுகளுக்கும் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை (ISGA) என்ற தீர்வுத் திட்ட வரைபுக்கும் ஒவ்வாததாகவும் ஆகிவிடுகிறது. “சிந்தனையானது மொழியைக் கேடாக்கினால், மொழி சிந்தனையைக் கேடாக்கும்” (“But if thought corrupts language, language can also corrupt thought”) என்று ஜோர்ஜ் ஓர்வல் எடுத்தியம்பியது அரசியற் தமிழின் கேடுற்ற நிலையைச் சிந்திக்கையில் நினைவுக்கு வருகிறது. தமிழ் ஆட்சி மொழியாக இல்லாமையாலும், தமிழர்களுக்கென்று ஓர் அரசு இன்மையாலும், அரசியற் தமிழ் உலக வளர்ச்சிக்கேற்ப வளரவில்லை. இதனால், சர்வதேசச் சட்டங்களைப் புரிந்துகொள்வதும், அரசறிவியலில் தெளிவாகச் சிந்திப்பதும், சர்வதேச அரசியலின் சூட்சுமங்களை விளங்கிக்கொள்வதும் தமிழிலே சிந்திக்கவேண்டியவர்களிற் பலருக்குச் சரிவரக் கைகூடுவதில்லை. கிணற்றுத் தவளைகள் போல, தமக்குத் தாமே போட்டுக்கொண்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிவு எல்லைகளுக்குள்ளும் மொழிச் சிக்கலுக்குள்ளும் சிக்குண்டு, போதாமைக்குச் சமூக வலைத்தளங்களில் பரவுபவற்றில் நல்லது எது தீயது எது என்று பிரித்தறிய இயலாத நிலைக்குள் நின்று, தமக்குத் தெரிந்தது கைமண் அளவு என்பதை மறந்து, தற்செருக்கோடு செயற்படும் தன்மை பொது முயற்சிகளில் ஈடுபடுவோரிடையே பாரிய அவல நிலையாக உருவெடுத்துள்ளது. தேற்றங்களை நிறுவுதலைப் போன்று கொள்கைகள் வடிவமைக்கப்படவும், எழுதப்படும் வரிகளுக்கிடையில் இரத்தினச் சுருக்கமாகச் சொல்விரயமின்றித் தெளிவாகப் புரியவைக்கவேண்டியதைச் சர்வதேசத் தரப்புகள் புரிந்துகொள்ளும் வண்ணம் வெளிப்படுத்தவும், சிந்தனையும் மொழியும் பின்னிப்பிணைந்த, சட்டமும் அரசியலும் இணைந்த, மொழிப் புலமை முக்கியமானது. 2013-2014 ஆம் ஆண்டுப்பகுதியில் தமிழ் சிவில் சமூக நகர்வு முன்னெடுக்கப்பட ஆரம்பித்த போது இந்தத் திறமை முன்மாதிரியாக வெளிப்பட ஆரம்பித்திருந்தது. ஆனால், ஒரு சில ஆண்டுகளுக்குள் அந்தப் போக்கு மங்கிவிட்டது. சட்டம், கல்வி, ஊடகத்துறைகளில் இருந்து இராணுவத் துறைவரை “unambiguity”, “to the point”, “less is more”, “KISS (Keep It Simple, Stupid) method” என்று பலவிதமாக இந்த நுட்பம் எடுத்தியம்பப்படுகிறது. ஆங்கில மொழியில் வேண்டிய சுருக்கத் தன்மைக்கு இடமில்லாத போது, சட்டத்துறையில் இலத்தீன் மொழியிலான கலைச் சொற்களைக் கையாளும் வழமை இருப்பதை ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்ட சில உதாரணங்கள் எடுத்துக்காட்டியிருக்கும். இவை சார்ந்த அறிவியற் திறமைகளை வளர்த்துக்கொள்ளாது, கொள்கைகளை நீட்டி விரித்து எழுதப் புறப்பட்டு, அவற்றைப் பலவாய் இலக்கமிட்டுப் பெருக்கி, புலம்பலாக ‘அலம்புவது’ புலமையற்ற செயற்பாடாகும். இந்தக் கைங்கரியத்தில் ‘தமிழ் மக்கள் பொதுச்சபை’ என்ற அமைப்பு தற்போது களம் இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதைத் திருத்தவேண்டியது அவ்வமைப்பில் ஈடுபடுவோருக்கும் ஈழத்தமிழர் சமூகத்துக்குமான ஒட்டுமொத்தச் சவாலாக அமைகிறது. அரசியற் தமிழ் மொழியின் நிலை கேடாயிருப்பதும், ஆங்கில மொழிப் புலமை குறைவாயிருப்பதும், திரிபுவாதத்தை கருவியாக்கி அரசியல் செய்யும் இரு மொழித் திறமை கொண்ட அரசியல்வாதிகளுக்கு மேலும் வாய்ப்பாகிவிடுகிறது. ஆதலால், மொழியிலும் சிந்தனையிலும் ஆழமான கரிசனையோடு கொள்கைகள் வெளிப்படுத்தப்படவேண்டும். புலம்பல்களாக அன்றி, தேற்றங்கள் போல அவை வெளிப்படவேண்டும். வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஒன்றே உறுதியும் இறுதியுமான ஈழத்தமிழர் அரசியல் வேணவா (அரசியல் அபிலாசை) பற்றிய மக்களாணை கொண்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். அதை விடுத்து, வட்டுக்கோட்டைத் தீர்மானம் அதியுயர் இலக்கு என்றும் திம்புக்கோட்பாடுகள் குறைந்த இலக்கு என்றும் கூடியது-குறைந்தது (maximum vs minimum) என்று சுயநிர்ணய உரிமைக்கு அளவுகோலிடுவதும், ஈழத்தமிழர் சுய நிர்ணயத்தை வெளியகம்-உள்ளகம் என்று பிரித்துச் சித்தரிப்பதும், அரசியற் தீர்வு குறித்த புதிய மக்களாணை பற்றிப் பேசுவதும் ஜோர்ஜ் ஓர்வல் சொன்னது போல் ஊழற் சிந்தனையாகும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர் தாயகத்தில் உள்ள எந்தப் பொது அமைப்பாயினும் முதலில் ஈழத்தமிழர் தேசத்தின் சுயநிர்ணய அலகுக்குரிய (self-determining unit) மறுக்கவொண்ணா சுயநிர்ணய உரிமையைச் (inalienable right of self-determination) சரிவரப் புரிந்து கையாளத் தன்னைப் பழக்கிக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு மூன்றுவிதமான இறைமைப் பின்னணிகள் உள்ளன: (1) வரலாற்றுவழிவந்த இறைமை, (2) போராடிப்பெற்ற இறைமை, (3) இன அழிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காக உலகத்தால் வழங்கப்படவேண்டிய (பரிகார) இறைமை. இதை ஈழத்தமிழர் இறைமைப் புரிந்துணர்வு எனலாம். இது 2012 ஆம் ஆண்டிலே வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. முழுமையான சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்கும் வழியில் மூலோபாயக் கொள்கை இலங்கை அரசியலமைப்பின் எந்தக் கட்டுப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டதாக நியாயப்படுத்தப்படவேண்டும். ஈழத்தமிழர் தேசம் எனும் போது, புலம்பெயர் ஈழத்தமிழர் அதில் ஓர் இணைபிரியா அங்கம் என்பதும் வெளிப்படுத்தப்படவேண்டும். தீவுக்கு வெளியேயுள்ள தமிழீழரும், தமிழ் நாட்டவரும் ஏனைய உலகத் தமிழரும் வட்டுக்கோட்டைத் தீர்மான மக்களாணையின் படி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கோடு, ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் கூட்டாட்சி கதைக்கும் கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒவ்வா நிலையை ஏற்படுத்துகின்றன. இதைப் போலவே, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பான நிலைப்பாடும் முக்கியமானது. இன அழிப்புக்கான நீதிகோரல் பற்றிய கொள்கை பேசப்படும் போது, அதன் சட்ட நியாயாதிக்கத்தை ஆள்புல நியாயாதிக்க (territorial jurisdiction) அடிப்படையிலும், காலவெல்லை நியாயாதிக்க (temporal jurisdiction) அடிப்படையிலும் செல்லுபடியாகும் உச்ச நியாயாதிக்கங்களை உள்ளடக்குவதாக வரையறுக்கவேண்டும். இன அழிப்புக்கான நீதிகோரலை மேற்கொள்ளும் போது அதற்குள் உள்ளடங்கும் ஏனைய குற்றங்களை (போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள்) அதற்குச் சமாந்தரமாக அதுவும் இதுவும் என்ற தோரணையில் அடுக்கக் கூடாது. அதைப் போலவே அவை அனைத்துக்கும் பொதுமையான பெருங்குற்றங்கள் (mass atrocities) போன்ற பொதுச் சொல்லாடலுக்குள் இன அழிப்பு என்ற அதியுயர்க் குற்றத்தைப் புதைத்தல் ஆகாது. தெளிவற்ற பலபொருள்படும் தன்மைக்கு (ambiguity) ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது போல, ஐ.நா.வில் எது சாத்தியம் எது சாத்தியமில்லை என்பதை வைத்து ஈழத்தமிழர் கோரிக்கைகளும் அவர்தம் கொள்கை சார் விடுதலை அரசியலின் படிமுறைகளும் வடிவமைக்கப்படல் ஆகாது. எமது விடுதலைப் போராட்ட அரசியல் வரலாற்று நியாயப்பாடுகளின் வெவ்வேறுபட்ட படிநிலைகளின் கூர்ப்புத் தன்மையோடு உலகப் பரப்பை நோக்கிய கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும். சாத்தியமில்லை என்று வல்லாதிக்க உலக ஒழுங்கு கருதுவதைச் சாத்தியமாக்குவதே போராட்டமும் அதற்கான கொள்கை சார் விடுதலை அரசியலுமாகும். “பதின்மூன்றாம் சட்டத்திருத்தத்தில் ஆரம்பம்”, “பதின்மூன்றுக்கும் மேலிருந்து ஆரம்பம்”, “கூட்டாட்சி”, “ஜனாதிபதி ஆட்சியென்றால் இணைப்பாட்சி, நாடாளுமன்ற ஆட்சியென்றால் கூட்டாட்சி,” போன்ற இரண்டுங்கெட்டான் நிலைப்பாடுகளை ஒவ்வொரு தரப்பும் தமக்கேற்ற வகையில் கையாண்டு பலபொருள்படும் தன்மையை சர்வதேச அரங்கில் உருவாக்குவதற்கு இனிமேலும் இடமளித்தல் ஆகாது. அத்தோடு, நீட்சியான இன அழிப்பு (protracted genocide) தொடர்பாகவும், காலத்துக்குக் காலம் ஈழத்தமிழர் தாயக எல்லைகள் குடியமைவை (demography) மாற்றும் நோக்கோடும், தமிழர் தாயக ஆட்சிப்புல ஒருமைப்பாட்டை (territorial integrity) சிதைக்கும் நோக்கோடும் முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டமிட்ட குடியேற்ற காலனித்துவம் (Sinhala Settler Colonialism) தொடர்பாகவும் தெளிவான வரையறைகள் மேற்கொள்ளப்படவேண்டும். சுயநிர்ணய உரிமையின் பாற்பட்ட பொதுவாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமைக்குரியவர்கள் யார், எந்த ஆண்டுக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றம் தமிழர் தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதென்ற திட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அந்த ஆண்டுக்குப் பின்னர் குடியேறியவர்களும் அவர்வழி வந்தோரும் அவ்வாறான பொதுவாக்கெடுப்பில் கலந்துகொள்ள முடியாது போன்ற நிலைப்பாடுகள் தொடர்பாகவும் தெளிவான எல்லைகளும் வரம்புகளும் வெளிப்படுத்தப்படவேண்டும். இவ்வாறு நிறுவப்படும் கொள்கைகளை சர்வதேச மட்டத்தில் ஏற்புடையதாக்கும் வகையில் படிநிலைச் செயற்பாடுகள் நடைபெற வேண்டும். இதற்கு ஏதுவான முதற்படியாக ஈழத்தமிழர் தாயகம் ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட தாயகம் (Occupied Homeland) என்பதைக் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து ஈழத்தமிழர் தரப்புகளும் இணைந்து பிரகடனப்படுத்த முன்வர வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட தாயகமும் அதன் தேசமும் எனப்படுவதன் நியாயப்பாடு நிறுவப்படவேண்டும். அடுத்த படிநிலையாக, நீட்சியான இன அழிப்புத் தொடர்பாக ஏற்கனவே வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானத்தை விட மேலும் தெளிவாகவும் கச்சிதமாகவும் நிறுவப்படுவதாக தாயகத்துக்கு உள்ளே முழுத் தமிழர் தாயகத்தையும் இணைத்ததாக அடுத்தகட்டத் தீர்மானம் வெளியாகவேண்டும். இந்த இரண்டு படிநிலைகளும் கொள்கை ரீதியான இணக்கப்பாட்டோடு இணைந்து முன்னெடுக்கப்பட்டால் பொதுவாக்கெடுப்பு (referendum) என்ற நிலைப்பாடு தீவுக்குள்ளிருந்து தெளிவாக வலியுறுத்தப்படுவது சாத்தியமாகும். கூட்டாட்சிக்குப் (federation) பதிலாக இணைப்பாட்சி (confederation) என்ற நிலைப்பாட்டை ஐயந்திரிபறவும் மனவுரத்தோடும் தீவுக்குள்ளிருந்து வலியுறுத்த இந்தப் படிமுறைகள் இடமளிக்கும். மாறாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சொல்வது போலவோ, தற்போதுள்ள தமிழரசுக்கட்சி சொல்வது போலவோ எழுந்தமானமாகக் கூட்டாட்சி என்று கொள்கை வகுக்கப்பட்டால், சுயநிர்ணய உரிமையைத் தக்கவைக்க முடியாத தீர்வுத்திட்டங்களே பிரேரிக்கப்படும். பல விதங்களில் மேற்குறித்த புரிதலோடும் திறமையோடும் தமிழ் சிவில் சமூகம், தமிழ் மக்கள் பேரவை ஆகிய முன்னெடுப்புகள் 2013-2014 காலப்பகுதியில் சிறப்பாக ஆரம்பித்திருந்தன. ஆனால், அவையும் நாளடைவில் மூலோபாய ரீதியில் தவறிழைத்தன. அதற்கு எடுத்துக்காட்டு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த கூட்டாட்சித் தீர்வுத்திட்டத்தின் அவசர கால அதிகாரம் பற்றிய உறுப்புரை 21.1. ஒருபுறம் சுயநிர்ணய உரிமையை எடுத்தாள்வதான எடுகோளுடன் எழுதப்பட்ட அந்தத் தீர்வுத் திட்டம் மறுபுறம் அதே சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகவும் எழுதப்பட்டுள்ளது. எழுந்தமானமான கூட்டாட்சிக் கோரிக்கையும் தேர்தல் அரசியலும் ஈழத்தமிழரை எங்கே இட்டுச் செல்லும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இதையே இன்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது தீர்வுத்திட்டமாகச் செப்பித்துக் கொண்டிருக்கிறது என்பது விந்தையிலும் விந்தை! அதை நினைவுபடுத்தி இந்தக் கட்டுரையை முடிவுசெய்யலாம்: எமது தலையில் நாமே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும் வரைபுகளை நாமே முன்வைப்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு எதுவும் தேவையில்லை. இவ்வாறான விஷப்பரீட்சைகளில் தமிழ் மக்கள் பொதுச்சபை ஈடுபடாது ஆக்கபூர்வமான திசையில் அதன் நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அதை உறுதிப் படுத்திக்கொள்வது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகிறது. https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39988
  15. ‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல் [TamilNet, Friday, 30 August 2024, 09:08 GMT] இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாயிருந்த எம். கே. நாராயணன் (2005-2010), சீவ்சங்கர் மேனன் (2010-2014) இருவரின் கட்டளையேற்றுத் தடம்புரண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் மூலோபாய அச்சுத் தவறிய அரசியலின் விளைவாக 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோன்றியது. மறுபுறம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னெடுப்புகளாக ‘தமிழ் சிவில் சமூக அமையம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பவை 2013-2014 காலகட்டத்தில் தோன்றின. நாளடைவில், கட்சி அரசியல் உள்ளிட்ட பல காரணிகளால் அந்தச் சமூக முன்னெடுப்புகள் தேக்கமுற்றன. 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ‘பொது வேட்பாளர்’ என்ற கருத்தை முன்வைத்து ‘தமிழ் மக்கள் பொதுச் சபை’ தொடக்கப்பட்டுள்ளது. ‘எல்லாவற்றுக்கும் இந்தியாவை எதிர்பார்க்கவேண்டும்’ என்று சிந்திக்கும் இயக்குநர்கள் பின்னணியில் ‘ரிமோட் கொன்ரோல்’களாக மறைந்திருந்து முன்னெடுக்கும் பரிசோதனை என்ற விமர்சனத்தோடு இது ஆரம்பமாகியுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்காலத்திலிருந்த ‘பாலக்காட்டு’ பாதுகாப்பு ஆலோசகர்களின் காலம் போய், பாரதிய சனதா கட்சியின் ஆட்சி நிலவுகின்ற தற்கால இந்தியாவின் உள்விவகார அமைச்சர் அமித் சாவையும் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலையும் வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜய்சங்கரையும் நோக்கிய முனைப்புகளில் நாட்டம் செலுத்துவோருக்கு முதலில் ஒரு செய்தி அழுத்தமாகச் சொல்லப்படவேண்டும். ‘சாவையும் டோவலையும் ஜய்சங்கரையும் நோக்கிய எலியோட்டப் போட்டியில் காட்டும் நாட்டத்தை விடவும் ஈழத்தமிழர் விடுதலை அரசியலின் பாற்பட்ட கொள்கை நிலைப்பாட்டில் நாட்டம் காட்டப்படுவது முக்கியம்,’ என்பதே அந்தச் செய்தி. எலியோட்டத்தில் ஈடுபடும் சிலர் ஜய்சங்கரை ‘வெட்டியோட’ டோவல் அல்லது சா பயன்படுவார் என்றுவேறு கதையளக்கிறார்கள். அதுவும், புலியோட்டத்தில் வந்தவர்கள் செய்யும் எலியோட்ட விந்தைகள் மிக வேடிக்கையானவை! மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தமிழக சட்டசபையில் ஏகமனதாக முன்வைத்த தீர்மானத்தில் இருந்து ஈழத்தமிழர் தொடர்பான இந்திய வெளியுறவுக்கொள்கை தமிழ்நாட்டின் ஊடாக அணுகப்படவேண்டும். இதற்குத் தி.மு.க தலைமையிலான தமிழ்நாட்டு அரசு கைகொடுக்காது என்றால், அதற்கு அப்பாற்பட்ட, அதுவும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட, குடிசார் சமூகத் தளம் ஒன்றின் ஊடாக அல்லது அதையும் விடக் காத்திரமான அடிமட்டத் தளம் ஒன்றின் ஊடாக ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு நீதி, சுயநிர்ணய உரிமை தொடர்பான தமிழ்நாட்டு அணுகுமுறை கட்டமைக்கப்படவேண்டும். பேராளர்களதும் பிரமுகர்களதும் அரசியலை விட அறிவின் பாற்பட்டு எழுச்சி கொள்ளும் அடிமட்ட மக்கள் தளம் ஈழத் தமிழர் விடுதலை அரசியலுக்கு முக்கியமானது. இந்தியா குறித்து மட்டுமல்ல, அமெரிக்காவையோ, தற்போது அதன் முழு அடிவருடிகளாகக் கட்டுண்டுபோயிருக்கும் ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையோ, அல்லது மாற்றுத் துருவமாகியுள்ள சீனாவையோ, ரசியாவையோ, ஏன் வேறெந்தத் தென்னுலக நாடுகளில் எவற்றையேனுமோ நோக்கி ‘எலியோட்ட அரசியல்’ செய்வதில் காட்டும் நாட்டத்தை விட, ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் விடுதலை அரசியலில் நாட்டம் செலுத்துவது முக்கியமானது. ‘இந்தியாவால் மட்டுந்தான் இனிமேல் அரசியற் தீர்வைக் கொண்டுவர இயலும்’ என்று சிந்திக்கும் ‘மறைமுக இயக்குநர்கள்’ மட்டுமல்ல, ஏற்கனவே ஈழத் தமிழர்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை மேற்கின் திரிபுவாதிகள் சிலருடன் சேர்ந்து முடக்கும் நோக்கோடு இயங்கியதில் செயற்தடம் (track record) பதித்த விற்பன்னர்கள் சிலரும் நேரடி இயக்குநர்களாகவும் மறைமுகங்களாகவும் தற்போது உருவாகியுள்ள ‘தமிழ் மக்கள் பொதுச் சபை’ என்ற நகர்வுக்குள் பொதிந்துள்ளமை ‘பாம்பின் கால்’ அறிந்தவர்களுக்கு மட்டும் தெரிந்த உண்மை. அதேவேளை, நல்ல நோக்குடையோரும் இப் பொதுச்சபைக்குள் அடங்கியுள்ளனர். முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் பலராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவர். ம. ஆ. சுமந்திரனும் இராசமாணிக்கம் சாணக்கியனும் பயணிக்கும் திரிபுவாதப் பயணத்துக்கு ஒத்துப்போகாதவர். இதனால், மக்கள் மத்தியில் அவருக்கான ஓர் அலை எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனினும், பொதுவேட்பாளர் மீதான அன்புணர்வுக்கு அப்பால், பொதுச்சபையின் கொள்கை நிலைப்பாடு தொடர்பான கேள்விகள் மிக முக்கியமானவை. இந்தக் கேள்விகள் முன்வைக்கப்பட்டு வேண்டிய தடவழித் திருத்தம் மேற்கொள்ளப்படாவிடின், விடுதலை அரசியல் அறிவு இல்லாது, விடுதலை உணர்வை மட்டும் கொண்டு இயங்குவோரை ‘உசார் மடையர்கள்’ என்று வகைப்படுத்திவிட்டு சுமந்திரனோடு இரகசியமாகக் ‘கூழ்குடித்துக் கொண்டாடும்’ பேச்சாளப் பேராளர்கள் பொதிந்திருக்கும் பொதுச்சபை உள்ளிருந்து பொறிவைக்கும் கெடுவினைக்குத் தளமாகும் நிலை ஏற்படும். பொதுச் சபையின் கொள்கை நிலைப்பாடுகள் எவையென்பது இதுவரை முன்வைக்கப்படவில்லை. பொதுச்சபையின் கொள்கை நிலைப்பாடு என்பது நாணயத்தின் ஒரு பக்கம் போன்றது. பொதுவேட்பாளரின் நிலைப்பாடு அதனோடு ஒத்துப்போகவேண்டிய இன்னொரு பக்கம். பொதுவேட்பாளரின் கொள்கைப் பிரகடனம் வெளிவருவதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரை பொதுவேட்பாளரின் தேவை பற்றிய கருத்துநிலை மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது. பொதுவேட்பாளருக்கான தேர்தற் பிரகடனம் இறுதி நேரம் வரை இழுபறிப் பட்டு எழுதப்படுவது என்பது கொள்கையைத் தெளிவுபடுத்தாத பொதுச்சபைக்குப் பின்னாலிருக்கும் அவலநிலைக்கு ஓர் அறிகுறி. இது ஓர் இந்திய சார்பு ‘முஸ்தீபு’; இதன் கொள்கையும் அணுகுமுறையும் கடல் கடந்த ‘ரிமோட் கொன்ரோல்’ ஒன்றினால் இயக்கப்படுகிறது; குந்தகமான மேற்கு மற்றும் சீனத் தொடர்புடைய வெளித்தரப்புகளுக்கு விசுவாசமான சிலர் இதற்குள் பொதிந்துள்ளனர்; பீடையான பதின்மூன்றாம் திருத்தத்தைப் பற்றியே பேசியும் எழுதியும் உழலுவோர் இதற்குள் கை பிசைந்துள்ளனர்; வெளிநாட்டுத் தன்னார்வ நிறுவன உதவியில் இயங்குவோர் இதற்கு இயக்குநர்களாக உள்ளனர் என்பது போன்ற பல தனிமனிதர்கள் சார்ந்த பார்வைகளைக் காணமுடிகிறது. இவை தொடர்பாகக் கண்காணிக்கப்பட்ட உறுதிப்படுத்தலுக்கும் அப்பாற் சென்று, வெறும் குற்றச்சாட்டுகளாக மட்டும் அவற்றை மட்டுப்படுத்திப் ‘பாசாங்கு’ செய்தவண்ணம் இந்த முன்னெடுப்பை ஆராய்வது பொருத்தமானது. இவ்வாறான ஆராய்வு, விடுதலை உணர்வு கொண்டோரை ‘உசார் மடையர்கள்’ ஆகக் கையாளப்படாமல் விடுதலை அரசியல் நோக்கி நகர்த்த உதவும். ஆக, பொதுச்சபைக்குப் பின்னாலுள்ள தொலை இயக்கிகளும் சிக்கலான இயக்குநர்களும் மறைமுகங்களும் யாவர், இவர்களின் கடந்தகாலச் செயற்தடங்கள் தான் என்ன என்பவற்றைப் பட்டியலிட்டு, ‘முயல் பிடிக்கும் நாயை முகத்தில் தெரியும்’ என்ற அடிப்படையில் தனிநபர்கள் சார்ந்த செயற்தடங்களின் அடிப்படையில் பொதுச்சபையை மதிப்பீடு செய்வதைக் காட்டிலும், இந்தப் பரிசோதனையை ஆக்கபூர்வமான திசைக்குத் திருப்பலாமா என்ற கேள்வியை முன்வைத்துக் கருத்துகளை முன்வைக்கும் கோணத்தில் இதை ஆராய்வுக்காக அணுகலாம். இந்த அடிப்படையில், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான கடந்தகாலப் படிப்பினைகளில் விடுதலை அரசியலுக்குத் தேவையான அறிவியல் முக்கியத்துவம் கொண்டவற்றை எடுத்து நோக்குவது காலத்தின் தேவை. ‘சிவில் சமூகம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ ஆகிய முன்னைய முன்னெடுப்புகள் சர்வதேசச் சட்டங்கள் பற்றிய கணிசமான அறிவியற் புரிதலும், ஆங்கிலம் தமிழ் ஆகிய இருமொழிகளிலும் நிலைப்பாட்டு வரைபுகளை மேற்கொள்ளும் திறமையும் கொண்டோரால் இயன்றளவு சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு இந்திய சார்பு நிலைக்குப் பறிபோகாமல் 2013-2014 காலகட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன. இறுதியில், 2016 ஆம் ஆண்டு தமிழ்மக்கள் பேரவை முன்வைத்த தீர்வுத்திட்ட யோசனைகளோடு இந்தப் போக்கின் இறுதியான முரண்நிலைகள் வெளிப்பட்டன. 2013 தொடக்கும் 2016 வரையான இம் முயற்சிகளில் கொள்கை வகுப்பாளர்களாகச் செயற்பட்டவர்கள் இந்திய மாயைக்குள் மாட்டிக்கொள்ளவில்லை. ஆனால், மேற்குலகு கடைப்பிடித்துவருகின்ற இலங்கை தொடர்பான தாராளவாத மேலாதிக்கத்துக்கு உட்பட்ட வெளியுறவுக்கொள்கையால் ஏற்படுத்தப்பட்ட தாக்கம், மயக்கம், தயக்கம் என்பவையும் அவரவர் ஈர்ப்புகளாலும் தெரிவுகளாலும் ஏற்பட்ட சார்புநிலைகளும் அவர்களைப் பீடித்திருந்தன. அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் தாராளவாத மேலாதிக்கம் உலகளாவி ‘அழுகிப்போயிருக்கும்’ காலம் இது. ஆதலால், இனியாவது இதை உணர்ந்து மேற்குறித்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் தம்மைச் சுதாகரித்துக்கொண்டு மீண்டும் சரிவர இயங்குவார்களா என்ற கேள்வி எழலாம். ‘முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை கொள்வது’ போன்றது இக் கேள்விக்கான விடை. இன்னொருவகையில் சொல்வதானால், கொள்கையை வெளிப்படுத்தாத பொதுச் சபையைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாது, கடந்தகாலத்தில், குறிப்பாக 2009 ஆண்டுக்குப் பின்னர், வெளிப்படுத்தப்பட்ட கொள்கை நிலைப்பாடுகளை மீள்வாசிப்புச் செய்வது இக் கேள்வியைக் கேட்போருக்கும் விடையளிக்க முற்படுவோருக்குமான ஒருவித மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சியாக அமையலாம். ‘தேசிய இனப் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை கண்டடைவது தொடர்பிலான தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட யோசனைகள்’ என்ற தலைப்பில் 2016 ஆம் ஆண்டில் வெளியான தீர்வுத் திட்டத்தை தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற அரசியற் கட்சித் தரப்புகள் இலங்கை அரசையும் சர்வதேச தரப்புகளையும் நோக்கி எடுத்தாண்டுவருகின்றன. ஆகவே, அவர்களுக்கும் அவர்களின் மாயாஜால வித்தைகளை நம்புவோருக்கும் கூட இந்த மனக்கட்டுப்பாட்டுப் பயிற்சி அவசியமாகிறது. • • • தமிழ் மக்கள் பேரவை 2016 ஆம் ஆண்டு முன்வைத்த தீர்வுத்திட்ட யோசனைககள் தீர்வுத்திட்டத்தின் முன்னுரை பின்வரும் கருத்துநிலைப்பாட்டை முன்வைக்கிறது: இவ்வாறு சமூக ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை தொடர்பாகக் குறிப்பிடும் அறிமுகத்தைத் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட அரசியலமைப்புக்கான வரைபு முன்மொழிவில், ‘இலங்கை அரசின் தன்மை’ என்ற முதலாம் உறுப்புரையிலேயே மேற்குறித்த சமூக உடன்படிக்கை நோக்கத்துக்கு முரண்பாடான கருத்துகள் வெளிப்படுகின்றன. தமிழில் ‘பல்-தேசிய அரசு’ என்று குறிப்பிடும் முதலாம் உறுப்புரையானது ஆங்கிலத்தில் அதற்குரிய சொல்லாடலான Multi-national State என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, சிக்கலான பொருள் பொதிந்த Pluri-national State (பன்மைத்துவத் தேசிய அரசு) என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது. பல்தேசிய அரசு என்பது வேறு, பன்மைத்துவத் தேசிய அரசு என்பது வேறு. முன்னையது சரிசீரமைவுடைய (symmetric) தேசங்களைக் கொண்ட அரசைக் குறிப்பிடுவது. பின்னையது சரிசீரமைவற்ற (asymmetric) அரசைக் குறிப்பிடுவது. ஈழத்தமிழர் தேசமானது சிங்கள தேசத்துடன் சரிசீரமைவுடைய தேசம். சரிசீரமைவற்ற தேசிய அரசு என்றால் என்ன? நில ஒருமைப்பாடற்ற (நில-நீர்த் தொடர்ச்சியற்ற) ஆள்புலப் பரப்புகளை ஆங்காங்கே கொண்டதாகச் சிதறி வாழும் பழங்குடி மக்களையும் அதேவேளை நில ஒருமைப்பாடுள்ள ஆள்புலங்களைக் கொண்ட ஏனைய மக்களையும் சமவுரிமையோடு உள்ளடக்கியிருப்பதை அங்கீகரிப்பதாக பொலிவீயா, எக்வாடோர் போன்ற நாடுகள் தம்மை Pluri-national State என்று குறியீட்டளவில் அழைத்துக்கொள்கின்றன. இலத்தீன் அமெரிக்கச் சூழமைவுக்கு ஏற்றதான நல்லதொரு கோட்பாடு எனினும் ஈழத்தமிழர் விடயத்தில் இது பொருத்தமற்றது. ‘உள்ளக சுயநிர்ணய உரிமை’ என்று சுமந்திரன் 2003 தொடக்கம் சொல்லிவருவதற்கு ஈடானது. இந்தவகையில், ஈழத்தமிழர்களின் தேசக் கோட்பாட்டுக்கும் பன்மைத்துவத் தேசிய அரசுக்கும் கொள்கைப் பொருத்தம் இல்லை. உறுப்புரை 1.3 தமிழ்த் தேசத்தின் ஆள்புலப் பரப்பை வடக்கு-கிழக்கு என்று வரையறுப்பதில் தவறவில்லை. அதேபோல, உறுப்புரை 1.4 தமிழ் மக்கள் பராதீனப்படுத்தப்பட முடியாத (மறுக்கவொண்ணா) சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடுவதிலும் தவறவில்லை. ‘தனது சுயநிர்ணய உரிமையை ஏற்று அங்கீகரிக்கும் இடத்து ஐக்கிய இலங்கை அரசிற்கு தமிழ் மக்கள் தமது பற்றுறுதியை வெளிப்படுத்துகின்றனர்,’ என்று தமிழ் மொழியில் அது குறிப்பிடுகிறது. ஆனால், ஆங்கிலத்தில் அதற்கு மாறாக, இரா. சம்பந்தன் பாணியில் “The Tamil People pledge their commitment to a united and undivided Sri Lanka which respects and affirms the right to selfdetermination of the Tamils,” என்று குறிப்பிடுகிறது. சம்பந்தன் பிரிவினையை மறுப்பதை இரட்டிப்பாக அழுத்திச் சொல்வதற்கு ‘indivisible and undivided Sri Lanka’ என்ற சொற்தொடரைப் பயன்படுத்திவந்தார். இவற்றுக்கிடையில் மிக நுட்பமான வித்தியாசம் மட்டுமே உள்ளது. இந்த இரண்டு பாணிகளும் பராதீனப்படுத்த இயலாத (மறுக்கவொண்ணா, inalienable) சுயநிர்ணய உரிமையை நிராகரிக்கின்றன. அதேவேளை, இறுதிப்படுத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆங்கில வரைபு எது என்பது பற்றிய தெளிவும் பொதுவெளியில் இல்லாதுள்ளது. இவற்றை விட, அவசரகால உறுப்புரை 21.1 பராதீனப்படுத்தப்பட முடியாத சுயநிர்ணய உரிமைக்கு முற்றிலும் புறம்பானதாக, அதை மறுதலிப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய பார்வை ஏற்கனவே வெளியான மூலோபாயத்தையும் தந்திரோபாயத்தையும் தொலைத்த தேர்தல் அரசியலைத் திருத்த இயலுமா என்ற கட்டுரையில் விளக்கமாக எடுத்துக்காட்டப்பட்டிருந்தது. இவ்வாறு குழப்பமான சொற்பதங்களும், மொழிக்கு மொழி வேறுபடும் இரட்டை நிலைப்பாடுகளும் வெளியானமைக்கான காரணம் என்ன என்பதற்கு அவர்களே ஏதாவது மொட்டை விளக்கம் தருவார்கள். ஆகவே, அந்த ஆராய்ச்சி தற்போது அவசியமற்றது. * * * தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட யோசனை 2016 ஆம் ஆண்டு வெளிப்பட்டதென்றால், அதற்கான முதற்படிநிலை ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் சிவில் சமூக முனைப்பில் ஆரம்பித்திருந்தது. 2013 ஆம் ஆண்டு வெளியான தமிழ் சிவில் சமூகத்தின் ஐந்து பரிந்துரைகள், 2014 ஆம் ஆண்டில் மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு யோசப் முன்னிலையில் வெளியான தமிழ் சிவில் சமூக அமையத்தின் 14 புள்ளிக் கொள்கைகள் ஆகியவையும், இன அழிப்புத் தொடர்பாக சிவில் சமூகம் மேற்கொண்ட முடிவுகளும் எதிர்கால நகர்வுகளுக்கான சில அடிப்படையான அடித்தளங்களையும் அளவுகோல்களையும் முன்வைத்திருந்தன. அதுமட்டுமல்ல, தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட நிலைப்பாடுகளிலும் பரிந்துரைகளிலும் இரு மொழித் திறன் வெளிப்பட்டிருந்தது. கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும்போது அவற்றைக் கச்சிதமான மொழி நடையில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமல்ல, சிங்களத்திலும் வெளிப்படுத்துவது நல்லது. நிலைப்பாடுகள் திரிபுபடுத்தப்படாமல் இருப்பதற்காகவும், அவை பொருத்தமான சட்டகங்கள் ஊடாக அனைத்துத் தரப்புகளும் விளங்கிக்கொள்வதற்கு ஏதுவாகவும் முகவாசகங்கள் கட்டமைக்கப்படவேண்டும். இந்தத் திறமைகளை தமிழ் சிவில் சமூக அமைய வரைபுகளில் காணலாம். 2013 ஆம் ஆண்டு வெளிப்படுத்தப்பட்ட சிவில் சமூக ‘முன்னோடி’ நிலைப்பாடு சிவில் சமூகம் என்ற அமைப்பு தனது கொள்கைப் பிரகடனத்தை 2014 ஆம் ஆண்டு முன்வைப்பதற்கு முன்னதாக, அதன் அமைப்பாளர்கள் ஜேர்மனியிலுள்ள Berghof Foundation என்ற நிறுவனத்தால் தமிழ் அமைப்புகளையும் கட்சிகளையும் ஒன்றுகூட்டி விவாதிக்கும் அமைதி முயற்சிகள் தொடர்பான பேர்லின் மாநாட்டுக்கு 2013 ஜனவரியில் அழைக்கப்பட்டிருந்த போது, ஐந்து பரிந்துரைகளை அவர்கள் அங்கு முன்வைத்திருந்தனர். முதலாவது பரிந்துரையில் மிகத் தெளிவாக இலங்கையில் அரசியலமைப்புக்கு-முற்பட்ட தேசங்களுக்கிடையிலான சமூக உடன்படிக்கை (pre-constitutional social contract drawn between the different constituent nations) ஒன்று உருவாக்கப்படவேண்டும் என்பதும், அதன் ஏற்புக்குப் பின்னரே அரசியல் தீர்வைக் காண இயலும் என்பதும் விளக்கப்பட்டிருந்தது. பதின்மூன்றாம் சட்டத்திருத்தப் பொறிமுறையை இனச் சிக்கலின் அரசியற் தீர்வுக்கான ஆரம்பப் புள்ளியாகவும் எடுத்துக்கொள்ள இயலாது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிட்டது மட்டுமல்ல, கூட்டாட்சி (சமஷ்டி) கூட சிங்கள் பௌத்த முதன்மைவாதப் படிநிலைச் சிந்தனையுடனான அரசியலமைப்புக்குள் செயற்படுத்துவதற்கு இயலாததாகவே இருக்கும் என்ற நிலைப்பாட்டையும் அந்த முதலாவது பரிந்துரை பின்வருமாறு எடுத்துவிளக்கியது: இவ்வாறு சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட முதலாவது பரிந்துரையில், சுயநிர்ணய உரிமை என்பதைப் பிரிவினை என்று அர்த்தப்படுத்த வேண்டியதில்லை என்ற கருத்தை முன்வைக்க முற்பட்ட கூற்று சரியாக அமைந்திருக்கவில்லை. அதாவது சுதந்திரத்தை (பிரிவினையைக்) கோராத சுயநிர்ணய உரிமை என்பதான தோரணையில் அந்த வசனம் கோளாறானதாகப் பின்வருமாறு அமைந்திருந்தது: “Needless to say this does NOT mean a separate state”. இரண்டாவது பரிந்துரையில், பன்மைத்துவத் தேசிய அரசு (Pluri-nationalist state) என்ற கோட்பாட்டை இலங்கை அரசு மறுத்துவருவது பற்றிய விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது. இந்தச் சொற்பதம் பயன்படுத்தப்படுவது தொடர்பான சிக்கல் ஏற்கனவே இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புக்கு அப்பாற்பட்ட வழிவரைபடம் பற்றித் தெளிவான முதலாவது பரிந்துரையை முன்வைத்த அதேவேளை, நான்காவது பரிந்துரையில் பிரித்தானியாவிலான ஸ்கொட்லண்ட் சட்டவாக்கம் (Scotland Act 1998) நோக்கிய நகர்வை மக்கள் இயக்கத்துக்கான முன்மாதிரியாக சிவில் சமூக முன்னெடுப்பாளர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர். எழுத்து மூலமான ஓர் அரசியலமைப்பைக் கொண்டிருக்காத ஐக்கிய இராச்சியத்தின் ஒற்றையாட்சிக்குள் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை, சுயாட்சித் தன்மையை அல்லது ஒரு தேசிய இனத்துக்குத் தனித்துவமான சுயநிர்ணய உரிமையைக் கூட புதிய சட்டவாக்கத்தால் உறுதிப்படுத்தலாம். அதனாற் தான் 1998 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ஸ்கொட்லான்ட் சட்டம் போன்ற சட்டங்களூடாக படிப்படியாக ஸ்கொட்லான்டுக்கான ஆட்சிமுறையை அங்கு உருவாக்கமுடிந்தது. ஆனால், இலங்கையில் வேண்டுமென்றே இறுக்கமாக எழுத்து மூல உறுப்புரையாக வடிவமைக்கப்பட்டுள்ள, ஒற்றையாட்சித் தன்மையையும் பௌத்த மத முன்னுரிமையையும் அவ்வரசியலமைப்பைப் பின்பற்றிச் செய்யப்படும் எந்தச் சட்டவாக்கத்தின் ஊடாகவும் மாற்றியமைக்க இயலாத உறுப்புரைகள் கொண்டு இயற்றப்பட்டதாகவும் அழுந்தியதாகவும் (codified and entrenched) ஒற்றையாட்சி அரசியலமைப்பு அமைந்துள்ளது. ஆகவே, அவ்வரசியலமைப்புக்கு அப்பாற்பட்டதாகவே ஈழத்தமிழர் தேசத்தின் கொள்கை சார் விடுதலை அரசியல் முன்னெடுக்கப்படவேண்டும். ஈழத்தமிழர் தேசத்தின் இறைமையின் பாற்பட்ட சுயநிர்ணய உரிமை மறுக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பில், பிரித்தானியாவின் எழுதப்படாத ஒற்றையாட்சி அமைப்பில் ஸ்கொட்லான்ட் சட்டவாக்கம் செய்யப்பட்டதைப் போலச் செய்வது இயலாத கைங்கரியம். முற்றிலும் புதிதான அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும். அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் (constitutional amendments) ஊடாக அன்றி முழுமையான அரசியலமைப்பு மறுசீரமைப்பு (reconfiguration of the constitution) ஊடாகவே இனப்பிரச்சனைக்கான தீர்வு காணப்படலாம். ஆகவே, ஸ்கொட்லான்ட் வழிவரைபட மாதிரியை ஈழத்தமிழர்கள் கைக்கொள்ளலாம் என்பதாக எமது மக்களிடம் சிந்தனைகளைத் தூண்டி தவறான அரசியலமைப்பு வழிவரைபடங்களைத் தயாரிக்க இடமளித்துவிடக் கூடாது. தமிழ் அரசியற் கட்சிகளும் குடிசார் சமூகங்களும் இணைந்து செயற்படுவதற்கான முன்னுதாரணமாக ஸ்கொட்லண்ட் மாதிரியைக் கையாளலாம் என்று உள்ளார்ந்த சமூகத்திற்குச் சொல்லப்படும் செய்தி சர்வதேச மட்டத்தில் வேறு விதமாகப் புரிந்துகொள்ளப்படும். எனவே, எதை முன்னுதாரணமாகக் காட்டுகிறோம் என்பதில் அதிக சிரத்தை வேண்டும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறைபாடுகள் இருப்பினும், ஒட்டுமொத்தமான மதிப்பீட்டில் இந்த ஐந்து பரிந்துரைகளை 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னான கொள்கை சார் அரசியலின் மீளெழுச்சிக்கான காத்திரமான வரைபு நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகக் கணிப்பிடலாம். ஈழத்தமிழர்களிடம் விடுதலை அரசியலுக்கான இராசதந்திர அறிவு 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னரும் முளைவிடும் என்ற நம்பிக்கையை அந்த ஐந்து நிலைப்பாடுகளை முன்வைத்தவர்களின் முனைப்புத் தந்தது. அதிலும் குறிப்பாக, ஐந்தாவது பரிந்துரை பொதுவாக்கெடுப்பு நோக்கியதாகவும் இருந்தது. பிற்காலத்தில், ‘சிங்கப்பூர்க் கோட்பாடு’, அதன் பின்னான ‘இமாலயப் பிரகடனம்’ என்ற ஆபத்தான அமிலப் பரிசோதனைகளுக்குள் ஈழத்தமிழர்களைத் தள்ளிவிட்ட மேற்குலக ‘அரச சார்பற்ற’ தன்னார்வ ஆய்வு மற்றும் நிதி நிறுவன மாயாவிகள் கூட்டியிருந்த ‘பேர்லின் மாநாடு’ அது. அதுவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய பரப்புரைச் செயற்பாட்டளர்களிற் சிலரை சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்துக்கும் முன்னதாகவே தனது வியூகத்துக்குள் வளைத்துப் போட்டுக்கொண்டிருந்த நிறுவனம் அது. அவ்வாறான நிறுவனம் கூட்டியிருந்த மாநாடொன்றில், மேற்குறித்த நிலைப்பாடு 2013 ஆம் ஆண்டில் ஆணித்தரமாக முன்வைக்கப்பட்டதென்பது சிவில் சமூக நிலைப்பாட்டைத் தயாரித்தோரின் மதிநுட்பத்தை மட்டுமல்ல மனவுரத்தையும் வெளிப்படுத்தியது. இதே மாநாட்டில், தமிழ் சிவில் சமூகத்தின் பரிந்துரைகளுக்கு எதிரான மாற்றுக்கருத்தைக் கொண்டிருந்த மக்கள் அங்கீகாரமற்ற ஒரு சில புலம்பெயர்ப் ‘பேராளர்கள்’ பிற்காலத்தில் சிங்கப்பூர்த் தீர்மானங்களின் பின்னாலும், தற்போது இமாலயப் பிரகடனத்தோடும் தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதும் இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டும். மேற்குறித்த ஐந்து பரிந்துரைகளையும் முழுமையாக உள்ளடங்கிய அறிக்கையை Civil Society insists on pre-constitutional recognition of Tamil nation, self-determination, என்ற ஆங்கில மொழியிலான தமிழ்நெற் செய்தியின் இணைப்பில் பார்வையிடலாம். வேண்டிய திருத்தங்களையும் மேலதிக தெளிவையும் மேற்குறித்த அடிப்படை நிலைப்பாடுகளில் ஏற்படுத்தி அதை மெருகூட்ட முற்படாத 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னரான எந்த ஒரு பொது முன்னெடுப்பும் ஆழமான கேள்விகளுக்கு உள்ளாக்கப்படவேண்டியது என்பதில் எதுவித ஐயமும் இல்லை. தமிழ் சிவில் சமூக அமையத்தின் 2014 ஆம் ஆண்டுப் 14 புள்ளிக் கொள்கைப் பிரகடனம் தமிழ் சிவில் சமூகம் என்ற பொதுவான பெயரில் இயங்க ஆரம்பித்திருந்த மேற்குறித்த முன்னெடுப்பு மறைந்த மன்னார் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் அவர்களின் அழைப்பின் பேரில் 2014 நவம்பர் மாதம் தனது 14 புள்ளிக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டது. இதன் ஆங்கில வடிவத்தை Tamil civil society formalises TCSF organisation, என்ற தமிழ்நெற் செய்தியின் இணைப்பில் காணலாம். குறித்த அமைப்பைக் கட்டிய முயற்சியில் ஈடுபட்டவர்கள் இரு மொழித் திறமையாளர்கள் என்ற வகையில் அவர்களிடம் தமிழ் மொழியிலான கொள்கைப் பிரகடனமும் இருப்பதற்கு வாய்ப்புள்ளது. இதன் முதலாம் புள்ளி நிலைப்பாட்டில், இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்குப் பகுதி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அலகு (self determining unit of the Tamil Nation) என்ற தெளிவுபடுத்தலும், இந்தப் பாரம்பரிய தாயகத்தில் இறைமைக்குரிய தேசமாக தமிழர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டுள்ளனர் என்பதோடு சுயநிர்ணய உரிமைக்கும் இறைமைக்குரிய தேசம் என்பதற்கும் தமிழர்களைப் பொறுத்தவரை ஒன்றுக்கொன்றான இரு திசைத் தொடுப்பு உள்ளதென்ற தெளிவுபடுத்தலும் வெளிப்படுத்தப்பட்டது (Owing to their right to self-determination, the Tamil people are a sovereign nation and vice versa). இருப்பினும், அறிந்தோ அறியாமலோ, திம்புக் கோட்பாடுகளை அடியொற்றி ஆரம்பித்திருந்தது மறைமுகமாக மக்களாணை பெற்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை நுட்பமாகத் தவிர்ப்பதான ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது. இந்திய உளவுத் துறையின் மூத்தவரொருவரால் திம்புவில் வரைபாக்கம் செய்யப்பட்டு, அப்போதைய தமிழீழ விடுதலைப் போராட்ட இயக்கங்களாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியாலும் விவாதிக்கப்பட்டு மெருகூட்டப் பட்டவையே திம்புக் கோட்பாடுகள். 2024 ஜூலை மாதம் 23 ஆம் நாளன்று சீனத் தலைவர் சீ சின்பிங்கின் தலைமையில் 14 பலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட பெய்ஜிங் தீர்மானத்தை விடவும் சிறப்பான முக்கியத்துவம் ஈழத்தமிழர் போராட்டத்தில் திம்புக் கோட்பாடுகளுக்கு இருக்கக்கூடும். ஆனால், திம்பு முழுமையான மக்களாணையின் பாற்பட்ட அரசியல் வேணவாவைப் பிரதிபலிக்கும் ஒன்றல்ல. இந்திய மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது சமரசம் நோக்கிய இறுதிச் சவால் (ultimatum) நிலைப்பாடாக அது அமைகிறது. இன அழிப்புக்கான சர்வதேச நீதி போன்ற முக்கியமான தன்மைகளை அது உள்ளடக்கியிருக்கவில்லை. சமரசம் நோக்கிய இறுதிச் சவால் நிலைப்பாடுகளில் இருந்து கொள்கைகள் வகுக்கப்படுவதில்லை. அவை பேச்சுவார்த்தை மேசைக்குரிய நிலைப்பாடுகள் மட்டுமே. வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை எடுத்தாள்வதில் தயக்கம் ஏற்பட்டவுடன் திம்புக் கோட்பாடுகளை எடுத்தாள்வது சிலருக்குப் ‘பழக்க தோஷம்’. இன அழிப்பு என்ற சர்வதேசக் குற்றத்தைத் தனித்துவமாக அடையாளப்படுத்தி அதை மையப்படுத்திய நீதிக்கான நியாயப்பாட்டைச் சரிவர முன்வைப்பதில் சிவில் சமூகத்தின் பதினோராம் புள்ளி தவறியிருந்தது: கடந்தகால அநீதிகளுக்கான பொறுப்புக்கூறலை மட்டுமே அது பேசியிருந்தது. இது ஒரு பாரிய குறைபாடு. எனினும், மேற்குறித்த பதினோராம் புள்ளி நிலைப்பாட்டில் அரசியல் தீர்வுக்காக பொறுப்புக்கூறலை பண்டமாற்றம் செய்யவோ பேரம் பேசவோ இயலாது என்பது மிகத் தெளிவாக எடுத்தியம்பப்பட்டிருந்தது. அதேவேளை, உள்நாட்டுப் பொறிமுறைகள் எதுவும் பொறுப்புக்கூறல் தொடர்பில் நம்பகத்தன்மையற்றவை என்பதையும் அந்தப் புள்ளி தவறாமல் விளக்கியிருந்தது. ஈழத்தமிழரிடையே இன அழிப்புக்கான நீதி பற்றிச் சளைக்காது பேசுபவர்களிற் பலர் இன அழிப்புக்கான நீதிகோரலை அரசியற் தீர்வோடு பண்டமாற்றம் செய்துவிடலாம் என்ற விளக்கமற்ற கோளாற்றுத் தனத்தை அவ்வப்போது வெளிப்படுத்திவருகின்றனர். இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரும் பயணம் அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தை ஏற்படுத்தலாம். ஆனால், ஏற்புடைய அரசியல் தீர்வு ஒன்று உருவாகினாலும், ஏன் தமிழீழமே தங்கத் தட்டில் வைத்துத் தரப்பட்டாற் கூட, இன அழிப்புக்கான சர்வதேச நீதி கைவிடப்படல் ஆகாது. இந்த அறம்சார் அறிவியற் தெளிவு பலருக்கும் இல்லாதிருக்கும் சூழலில் பதினோராம் புள்ளி நீதி பேரம்பேசலுக்கு அப்பாற்பட்டது என்பதைத் தொட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தபடியாக, அதன் 12 ஆம் புள்ளி நிலைப்பாடு இன்னொரு விடயத்தை நேரடியாகத் தெளிவுபடுத்தியிருந்தது. எந்த ஒரு சர்வதேசத் தரப்போடும் சார்புநிலை மேற்கொள்ளாமல் சுயாதீனமான தளத்தில் இருந்து பொறுப்புக்கூறலுக்கும் அரசியற் தீர்வுக்குமான தமிழர் பயணம் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதே அந்த நிலைப்பாடு. இன அழிப்பை மையப்படுத்திய நீதிகோரலை முன்னிலைப்படுத்திச் செயற்படுவதில் பரவலான தயக்கம் தமிழ்ச் செயற்பாட்டுத் தளத்துக்குள் வெளிச்சக்திகளால் பரப்பப்பட்டிருந்த காலம் அது. ஆனால், இப்போது அப்படியான நிலை இல்லை. உலகளாவிய சர்வதேச நீதிப் பரப்பில் இன அழிப்பு என்ற பெருங்குற்றம், அதுவும் அரச பொறுப்பு, தனித்துவத்தோடு மியான்மாரின் ரொஹிங்யா இன அழிப்புத் தொடக்கம் இஸ்ரேலின் பலஸ்தீனர் மீதான இன அழிப்பு வரை கையாளப்படுகிறது. இன அழிப்பு என்ற பெருங்குற்றத்தை யூதர்களைத் தவிர்ந்த எவரும் பேசக்கூடாது என்று கருதிய யூத சியோனிஸ்டுகளே இன அழிப்பைப் புரிகிறார்கள் என்பது நம்பகமானதாகக் கருதப்படும் நிலை உலக நீதிமன்ற மட்டத்தில் மட்டுமல்ல, அமெரிக்காவில் 30 வயதுக்குக் கீட்பட்ட பெரும்பான்மை இளையோரிடம் கூட உருவாகிவிட்டது. இன அழிப்புக் குறித்த சர்வதேச நீதி தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையம் 2014 ஆம் ஆண்டு வெளிப்படுத்திய நிலைப்பாடு 2011 ஆம் ஆண்டில் ஐ.நா. மேற்கொண்ட விசாரணை அறிக்கையிலோ, 2012 ஆம் ஆண்டில் மேற்கொண்ட உள்ளக அறிக்கையிலோ, அல்லது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களிலோ இன அழிப்பு என்ற குற்றத்தை மையப்படுத்திய ஆய்வுகள் எதுவும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை. தொடர்ந்து, இலங்கையில் தமக்குத் தேவையான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேவைக்கு மட்டும் மட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கா தலைமையிலான இலங்கைக்கான முதன்மைக் குழு (Core Group on Sri Lanka) ஊடாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படலாயின. இந்தத் தீர்மானங்கள் பேரவையால் நியமிக்கப்பட்ட விசாரணைப் பொறிமுறைகளின் ஆய்வெல்லைகளைத் (Terms of Reference) தீர்மானிக்கையில் இன அழிப்பை விசாரிப்பதற்கான ஆய்வெல்லையை வழங்காது புறக்கணித்திருந்தன. பொதுவாக, தீர்மானங்களால் வழங்கப்படாத ஆய்வெல்லைக்குள் விசாரணைப் பொறிமுறை தனது ஆணையை (Mandate) விரிவுபடுத்தாது. ஆகவே, குறித்த ஆய்வெல்லைகளைக் கெட்டிப்படுத்துமாறு தமிழ்த் தரப்புக் கோரிக்கைகள் தெளிவாகக் கோரிக்கைகளை முன்வைத்திருக்கவேண்டும். 2021 ஆம் ஆண்டு வரை அது நடைபெறவில்லை. இன அழிப்பு என்பது பெருத்த விவாதங்களின் பின் உள்ளடக்கப்பட்டபோதும் 2021 ஆம் ஆண்டிலும் தெளிவற்ற கோரிக்கைகளாகவே நிலைப்பாடு வெளிப்பட்டிருந்தது என்பது வேறு கதை. ஈழத்தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் நீட்சியான இன அழிப்புக் குற்றங்களைப் போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள் என்ற இரண்டு வகைகளுக்குள் மட்டும் குறைத்து, பொறுப்புக்கூறலை கலப்புப் பொறிமுறையாக மட்டுப்படுத்தி, இலங்கையில் தமக்குத் தேவையான புவிசார் நலன்கள் அடிப்படையிலான ஓர் ஆட்சியை உருவாக்கும் தேவைக்காக உள்ளக ‘நல்லிணக்கப் பொறிமுறை’ ஒன்றை ஏற்படுத்தி, சர்வதேச நீதியை உள்ளகப் பொறிமுறைகளோடு பண்டமாற்றுச் செய்துகொள்வது அமெரிக்கா தலைமையிலான் மேற்குலகின் நிகழ்ச்சிநிரலாக இருந்தது. இதற்கேற்ப அமெரிக்காவின் இலங்கை தொடர்பான தாராளவாத மேலாதிக்க வெளியுறவுக் கொள்கை வகுக்கப்பட்டிருந்தது. இதை விளங்கியிருந்த தமிழ் சிவில் சமூக அமையம் மேற்குறித்த நியதி தொடர்பில் தயக்கத்துள்ளாகியிருந்தது. இவ்வாறு, மேற்குலகின் வெளியுறவுக் கொள்கை திணித்த நியதிகளோடு ஏதோ ஒரு வகையில் ஒத்து ஓடவேண்டும் என்று தனக்குத் தானே ஏற்படுத்திக்கொண்ட தயக்க நிலையில் இருந்தபோதும், ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் மேற்கு நாடுகளின் முதன்மைக் குழு முன்வைத்த தீர்மானங்களின் வரைபுகளில் நீர்த்துப் போகும் தன்மைகள் வெளிப்பட்டபோது அவற்றைச் சுட்டிக்காட்டவும் தமிழ் சிவில் சமூக அமையம் தவறவில்லை. இன அழிப்புக்கான சர்வதேச நீதியின் அவசியம் குறித்து வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவேண்டும் என்ற நகர்வு முன்னெடுக்கப்பட்டபோது, அதற்கு எதிரான செயற்பாடுகளை ம. ஆ. சுமந்திரன் மிகக் கடுமையாக ஒரு புறம் கட்டவிழ்த்துவிடலானார். இதற்குச் சமூக மட்டத்தில் பதிலிறுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, தமிழ் சிவில் சமூக அமையம் 2014 ஒக்ரோபர் 24 ஆம் நாளன்று தனது மேற்குலகு சார்ந்த தயக்கத்துக்கும் அப்பாற் சென்று ஐந்து-புள்ளிக் கருத்துநிலையை வெளிக்கொணர்ந்தது. • • • இக்கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகள் தொடர்பான முழுப் பொறுப்பையும் சிவில் சமூக அமைய முன்னெடுப்பில் இதய சுத்தியோடும் நேர்மையோடும் செயற்படப் புறப்பட்டவர்கள் மீது சுமத்திவிடமுடியாது. ஆக்கிரமிக்கப்பட்ட தாயகத்தில் சமூக மட்டத்தில் இன அழிப்பு நீதியை மையப்படுத்திய செயற்பாடு தெளிவாக மேலெழுந்திருந்தால் தமிழ் சிவில் சமூக அமையம் போன்ற அமைப்புகள் கொள்கை சார் விடுதலை அரசியலைப் பொருத்தமாக மேற்கொண்டிருக்கும். ‘சட்டியில் இருந்தாற் தானே அகப்பையில் வரும்’. அதுவும், தக்க தலைமை இல்லாதவிடத்து ‘அகப்பையை’ விட ‘சட்டியின்’ பங்கு முக்கியமாகிறது. இன அழிப்பு நீதி குறித்து மட்டுமல்ல, ஈழத்தமிழர் என்ற தமது அடையாளத்தைக் கூட எடுத்தியம்பும் துணிவு தாயகத்தில் இருப்போருக்கு 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இருக்கவில்லை. ஈழத்தமிழர் என்ற அடையாளப்படுத்தலை மேற்கொள்வதற்குப் பதிலாக ‘அடையாளம்’ என்று மட்டுப்படுத்தித் தன்னை அடையாளப்படுத்திச் செயற்பாடுகளை முன்னெடுப்பதிலும், அதற்குத் தேவையான நிதிமூலங்களை மேற்குலக, குறிப்பாக அமெரிக்க வெளியுறவுக்கொள்கைக்கு உட்பட்ட அரச மற்றும் அரச சார்பற்ற என்ற போர்வையில் வேறு நிகழ்ச்சிநிரல்களோடு இயங்கும் தன்னார்வ நிறுவன வட்டாரங்களுக்குள் தேடுவதிலுமாகத் தனது எல்லையை தமிழ் சிவில் சமூக அமைய முன்னோடிகள் மட்டுப்படுத்திக்கொண்டது கவலைக்குரியது. தன்னார்வ நிறுவனர்களின் சட்டைப்பைக் கடதாசி அமைப்புகளாகக் குடிசார் முன்னெடுப்பை மாறவிடாமற் காப்பாற்றியிருக்க வேண்டிய முதன்மைப் பொறுப்பு பரந்துபட்ட சமூகத்துக்கு உரியது. சமூகத்தின் இந்த நிலைக்கான காரணத்தைத் தேடினால், ‘எஸ்பொ’ என அறியப்பட்ட மூத்த ஈழத்தமிழ் எழுத்தாளர் மறைந்த எஸ். பொன்னுத்துரை அவர்கள் கனடாவில் ஓர் இலக்கியச் சந்திப்பில் முன்வைத்த விளக்கமே மிகப் பொருத்தமான பதிலாகக் கிடைக்கும். அது தலைமை பற்றியதோ, ‘அகப்பை’ பற்றியதோ அல்ல, ‘சட்டி’ பற்றியது. அந்த விளக்கத்தை எடுத்தியம்புவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல. போர்க்குற்றங்கள், மானுடத்துக்கெதிரான குற்றங்கள் என்பவை எல்லாம் ஈழத்தமிழர் பார்வையில் இன அழிப்பு என்ற ஒற்றைப் பெருங்குற்றத்துக்குள் அடக்கப்படவேண்டியவை. ஆனால், இன அழிப்பு என்பதை மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாம் நிலையில் நிரற்படுத்துவதோ அல்லது பரந்துபட்ட பொதுச்சொல்லாடலுக்குள் புதைப்பதோ கோளாறான அணுகுமுறை. இந்தப் படிப்பினைகளைக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படவேண்டும். அகப்பையைப் பற்றிய கரிசனையை விட சட்டியைப் பற்றிய கரிசனை மேலோங்கவேண்டும். இன அழிப்பு, சுயநிர்ணய உரிமை, அரசியற் தீர்வு போன்றவை வெறும் சுலோகங்களாக மட்டும் மக்களால் அணுகப்படும் நிலையில் இருந்து, அரசியற் தெளிவு பெற்ற மக்களால் அணுகப்படும் நிலையாக மாற்றுவது பொது முன்னெடுப்புகளில் நாட்டம் கொண்டோர் மேற்கொள்ளவேண்டிய அடிமட்ட வினைத்திட்பம் (grassroots activism) ஆகவேண்டும். ‘பொங்கு தமிழ்’, ‘சங்கு தமிழ்’ என்ற உணர்வெழுச்சி அரசியல் மட்டும் போதாது. சரியானதொரு தலைமை இருந்தபோது பொங்குதமிழ் என்று உணர்வெழுச்சி அரசியல் மக்கள் ஆற்றலை வெளிப்படுத்த உதவியது. இந்த உணர்வெழுச்சி, தலைமையற்ற காலத்தில் அறிவார்ந்த விடுதலை எழுச்சியாக மாறவேண்டும். சிவில் சமூக அமைய நிலைப்பாடுகளிலிருந்த குறைகளைப் போக்கி அவற்றை மேலும் செழுமைப்படுத்தவல்ல கொள்கை நிலைப்பாட்டைக் கூர்ப்பியல் ரீதியாகச் செப்பனிடுவதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் புதிதாகச் சக்கரத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவது கற்றுக்குட்டித்தனமானது. இந்தக் கற்றுக்குட்டித்தனத்தை தற்போது தமிழ் மக்கள் பொதுச் சபை தாரளமாக வெளிப்படுத்திவருகிறது என்பது அதன் இயக்குநர்களின் கூற்றுகளில் வெளிப்பட்டுள்ளது. இது ஆரோக்கியமான அறிகுறி அல்ல. தேர்தல் அரசியற் கட்சிகள் பொதுக் கட்டமைப்பைக் கொள்கையளவில் ஏற்றாலும் நடைமுறையில் அதனைச் சிதைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை உள்ளிருந்து சிதைத்தன. ஆதலால், தேர்தல் அரசியல் கட்சிகளோடு சமதரப்பு அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவது உசிதமற்றது. இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் பொதுச் சபை ஆரம்பத்திலேயே தவறியுள்ளது. தவறுகளில் இருந்து விரைவாகப் பாடத்தைக் கற்றுக்கொண்டு தடவழித்திருத்தம் மேற்கொள்ளும் ஆற்றல் ‘பொதுச்சபைக்கு’ இருக்கிறதா என்பது தொக்குநிற்கும் கேள்வி. தேர்தல் அரசியற் கட்சிகளைக் கட்டுப்படுத்தி ஆற்றுப்படுத்த வல்ல ஆற்றலைப் பெருக்கக்கூடிய மக்கள் இயக்கம் கட்டப்படுவது, கடினமான பாதையெனிலும், அதுவே ஆரோக்கியமானது. மக்களிடம் விடுதலை உணர்வு சரியாகத் தான் இருக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன. ஆனால், விடுதலை அரசியல் பற்றிய அறிவு மிகக் குறைவாயுள்ளது. உணர்வு மட்டும் சட்டியில் இருந்தாற் போதாது. விடுதலை அரசியலுக்கான அறிவும் சட்டியில் இருந்தாற் தான் அகப்பை சரியாக இயங்கும். ஆக, மக்கள் மட்டத்தில் விடுதலை அரசியலின் அறிவைக் கொண்டு செல்வது காலம் தந்துள்ள வரலாற்றுக் கடமை. https://www.tamilnet.com/art.html?catid=25&artid=39992
  16. உண்மை. ஆனால் அவர் உழைப்பதே அந்த அத்துமீறலை நியாயப்படுத்தத்தான் எனும்போது, சர்வஜன வாக்கெடுப்பில் ஆக்கிரமிப்பாளரும் பங்குபற்றவேண்டும் என்று அவர் அடம்பிடிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்யமுடியும்?
  17. சிங்களத்தின் விரிவாக்கத்திற்காக உழைக்கும் ஐலண்டிடம், சிங்களக் முடியேற்றங்கள் நடப்பதே இனப்பரம்பலை மாற்றியமைக்கத்தான் என்று நீங்கள் கூறுவது கல்லில் நாருரிப்பதற்குச் சமனானது. ஏனென்றால் குடியேற்றத்தை நியாயப்படுத்துவதென்பது அவரது இலக்குகளில் ஒன்று!
  18. அதே சிறிலங்கா தேர்தல் திணைக்களம்தான் இதனையும் சொல்கிறது. 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போட்டியிட்ட இடங்கள் 23. அவற்றுள் அவர்கள் வெற்றிபெற்ற இடங்கள் 18. 23 தொகுதிகளில் முன்னணியின் சராசரி வாக்கு வீதம் 64 ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்). இவற்றில் இருந்து முன்னணி வெற்றிபெறாத ஐந்து இடங்களையும் நீக்கிவிட்டுப் பார்த்தால் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குகளின் வீதம் 72.9 ( பதியப்பட்ட மொத்த வாக்குகளின் அடிப்படையில்). மட்டக்களப்பு - 34% சாவகச்சேரி - 73.9% யாழ்ப்பாணம் - 68.8% கல்க்குடா - 50% - தோல்வி கல்முனை - 30% - தோல்வி காங்கேசந்துறை - 97% ஊர்காவற்றுரை - 84.6% கிளிநொச்சி - 92% கோப்பாய் - 96.5% மன்னார் - 55.85% மானிப்பாய் - 94.5% மன்னார் - 55.85% முல்லைத்தீவு - 66% மூதூர் - 29.5% - தோல்வி நல்லூர் - 93% பட்டிருப்பு - 54.6% பருத்தித்துறை - 68.4% பொத்துவில் - 34% புத்தளம் - 12.5% - தோல்வி சம்மாந்துறை - 40% - தோல்வி திருகோணமலை - 63.3% உடுப்பிட்டி - 79.2% வட்டுக்கோட்டை - 85.7% வவுனியா - 71.7% சிங்களப் பேரினவாதத்திடம் சரணாகதி அடையவிரும்பும் நீங்கள் இதனைத்தவிர வேறு எதனைத்தான் சொல்லப்போகிறீர்கள். நடத்துங்கள், நடத்துங்கள். தமிழினம் அடையாளம் துரந்து இலங்கையராக சிங்கள பெளத்தத்திற்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்கிற ஒற்றை இலக்கு நோக்கிச் செயற்படும் கோடரிக் காம்புகள் இனத்திற்கெதிரான தகவல்களைச் சேகரிக்கப் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியிருப்பது உண்மையே.
  19. பொய்யான தகவல். இத்தேர்தலில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்குக் கிடைத்த சராசரி தமிழ் வாக்குகள் மொத்தத் தமிழ் வாக்காளர்களில் 72%. அதுவரை நடந்த தேர்தல்களில் இத்தேர்தலிலேயே தமிழர்கள் பெருமளவில் வாக்களித்து 18 உறுப்பினர்களை பாராளுமன்றம் அனுப்பினர். அம்முறை த.ஐ.வி.மு எதிர்க்கட்சியாக வந்தது. அதற்கான ஒற்றைக் காரணம் தனி ஈழமே. சிங்கள பெளத்தத்துடன் சரணாகதியாகி அடையாளம் துரக்கும் ஒருவரின் மன உளைச்சலே இது. கடந்து செல்வோம்.
  20. இவ்வாறான சந்திப்புக்களில் மொழிபெயர்ப்பாளர்களும் அழைத்துச் செல்லப்படுவது வழமையான நடைமுறை. ஆகவே மொழி ஒரு பிரச்சினையாக இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்லாமல் தான் பேசப்போகும் விடயம் குறித்து சிறிதரன் நிச்சயம் சிலதடவைகளாவது ஆங்கிலத்தில் பேசிப் பார்த்திருக்கலாம். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் அதிபராக இருந்திருக்கிறார், ஆங்கிலம் ஓரளவிற்குத் தெரிந்திருக்கும்.
  21. பஞ்சாப்பிற்கான தீர்வினை ஜெயாருக்குப் பரிந்துரைத்த ரஜீவும், ஏற்றுக்கொள்ள மறுத்த ஜெயாரும் புரட்டாதி 19 ஆம் திகதி தன்னைச் சந்தித்த போராளித் தலைவர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரொமேஷ் பண்டாரி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருக்கும் மூன்று மாதகால யுத்த நிறுத்த நீட்டிப்புக் குறித்து போராளிகள் வரவேற்று செய்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளித்த போராளிகள், இலங்கை இராணுவம் யுத்த நிறுத்தத்தினை ஒருபோதும் கடைப்பிடித்ததில்லை என்று கூறினர். இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த மீறல்களின் பட்டியலை பண்டாரியிடம் காட்டிய அவர்கள், யுத்த நிறுத்தத்தைக் கவசமாகப் பாவித்து கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்களிலிருந்து அவர்களை இராணுவம் விரட்டி வருவதாகக் கூறினர். இந்தியாவையும், சர்வதேசத்தினையும் இருட்டில் வைத்திருக்கவே யுத்த நிறுத்தத்தினை இலங்கையரசு பாவிக்கின்றது என்று விளக்கிய போராளிகள் யுத்த நிறுத்தம் உண்மையிலேயே நீடிக்கப்பட வேண்டுமானால் அதனைக் கண்காணிப்பதற்கான நடைமுறைகளும் அமுல்ப்படுத்தப்பட வேண்டும் என்று கோரினர். போராளிகளின் கோரிக்கையினை பண்டாரி உடனடியாகவே ஏற்றுக்கொண்டார். போராளிகளால் முன்வைக்கப்பட்ட யுத்த நிறுத்த கண்காணிப்புப் பொறிமுறை குறித்து பண்டாரி தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். இதுகுறித்து அவர் லலித் அதுலத் முதலியுடன் பேசும்போது, அவரும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். "அது ஒரு நல்ல யோசனைதான். ஆனாலும், இதுகுறித்து நான் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து மீண்டும் உங்களுடன் தொடர்புகொள்கிறேன்" என்று அவர் பண்டாரியிடம் கூறினார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த போராளிகளின் யோசனையினை ஜெயாருடன் கலந்தாலோசித்த லலித், தமது அரசாங்கம் கண்காணிப்புக் குழுவினை அமைக்க சம்மதிப்பதாகத் தெரிவித்தார். இக்குழு எப்படி இயங்கவேண்டும் என்பது குறித்த விடயங்களை புரட்டாதி 20 ஆம் திகதி போராளிகளுடனான தனது சந்திப்பில் பண்டாரி பகிர்ந்துகொண்டார். நடந்துவரும் விடயங்கள் ரஜீவ் காந்திக்குத் திருப்தியை அளித்திருந்தது. போராளிகளுடனான அவரது 90 நிமிட சந்திப்பில் ரஜீவ் இந்த ஏற்பாடுகள் குறித்து அழுத்தம் கொடுத்துப் பேசினார். 23 ஆம் திகதி நடந்த இந்தச் சந்திப்பில் பேசிய ரஜீவ், யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு எனும் யோசனை பேச்சுக்களில் ஏற்பட்டிருக்கும் பெரிய முன்னேற்றகரமான நிகழ்வு என்று கூறினார். ஆனால், பிரபாகரன் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு குறித்த தனது அச்சங்களை ரஜீவிடம் வெளிப்படையாகவே கூறினார். "யுத்த நிறுத்தக் குழுவை இலங்கையரசு நேர்மையாக அமைக்குமா என்பது கேள்விக்குறிதான்" என்று அவர் கூறினார். உடனடியாக இடைமறித்த ரஜீவ், "எப்போதும் பழைய அனுபவங்களையே மீண்டும் மீண்டும் பேசுவதை நிறுத்துங்கள்" என்று பிரபாகரனிடம் கூறினார். "நாம் இதனை சரியாகச் செய்யலாம்" என்று ரஜீவ் கூறவும், "பொறுத்திருந்து பார்க்கலாம்" என்று பிரபாகரன் பதிலளித்தார். யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினை அமைப்பது தொடர்பான பேரம்பேசலில் பண்டாரி ஈடுபடத் தொடங்கினார். போராளிகளின் தலைவர்கள் இரு அடிப்படை கோரிக்கைகளை இதன்போது முன்வைத்தார்கள். முதலாவது, யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் சிறைச்சாலைகளையும், தடுப்பு முகாம்களையும் சென்று பார்வையிடுவதற்கான அனுமதி. இரண்டாவது, யுத்த நிறுத்த மீறல்களை விசாரிப்பதற்கும் அவற்றினை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குமான அதிகாரத்தை யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருத்தல். போராளிகளின் இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்ள லலித் அதுலத் முதலி மறுத்தார். ஆனால் தமது கோரிக்கையில் போராளிகள் தீவிரமாக இருந்தனர். மேலும், அதிகாரம் இல்லாத யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவைத் தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் திட்டவட்டமாக பண்டாரியிடம் அவர்கள் கூறிவிட்டனர். ஆணைக்குழுக்களையும், விசாரணைக் கமிஷன்களையும் மக்களை ஏமாற்ற சிங்கள அரசியல்வாதிகள் காலம் காலமாக பாவித்துவரும் ஒரு யுக்தி என்றும் அவர்கள் பண்டாரியிடம் கூறினர். சுமார் ஒருவார கால இழுத்தடிப்புக்களுக்குப் பின்னர் இலங்கையரசாங்கமும், போராளிகளும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு இணங்கினர். அரச தரப்பைச் சேர்ந்த மூவரும், போராளிகளால் தெரிவுசெய்யப்பட்ட இருவருமாக ஐந்து உறுப்பினர்களை யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழு கொண்டிருந்தது. மேலும் யுத்த நிறுத்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் தேவையேற்படின் மேலதிக உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளலாம் என்கிற சரத்தையும் லலித் அதுலத் முதலி சேர்த்துக்கொண்டார். இவ்வாறு மேலதிக உறுப்பினர்கள் சேர்த்துக்கொள்ளப்படுமிடத்து போராளிகளால் வழங்கப்பட்ட பெயர்ப்பட்டியலில் இருந்தும் உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்று அச்சரத்துக் கூறியது. ஆனால் இச்சரத்து எதற்காக அவசர அவசரமாக லலித்தினால் சேர்க்கப்பட்டது என்பதற்கான உண்மைக் காரணத்தை போராளிகளாலோ அல்லது பண்டாரியாலோ அந்த நேரத்தில் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அரசு மூன்று உறுப்பினர்களை கண்காணிப்புக் குழுவிற்கு தன் சார்பில் நியமித்தது. அவர்களின் பிரபல நிர்வாகி பீலிக்ஸ் டயஸ் அபெயசிங்கவும் ஒருவர். இவரே ஆணைக்குழுவின் தலைவராகவும் அமர்த்தப்பட்டார். போராளிகள் தமது சார்பில் வடக்குக் கிழக்கு பிரஜைகள் குழுவின் இணைப்பதிகாரியும் தலைவருமான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, திருகோணமலை மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கந்தரட்ணம் சிவபாலன் ஆகியோரை நியமித்தனர். பேராசிரியர் சிவத்தம்பி - 2004 பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரஜீவ் காந்தி, இலங்கையில் நடந்துவரும் பிரச்சினைக்கான தீர்வில் மிகமுக்கியமான செயற்பாடு என்று யுத்தநிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உருவாக்கத்தைக் குறிப்பிட்டார். மேலும் பஞ்சாப் பிரச்சினையில் தனது அரசு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளைப் பின்பற்றி ஜெயவர்த்தனவும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வினை முன்வைக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். ஆனால் ரஜீவ் காந்தியின் அறிவுருத்தும் வகையிலான கருத்துக்களை ஜெயார் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இலங்கைப் பிரச்சினையினை சீக்கியப் பிரச்சினையுடன் ஒப்பிடுவதையும் அவர் விரும்பவில்லை. ஏனென்றால், இந்தியாவின் ஒரு பகுதியாகவிருந்தபோதிலும் பஞ்சாப் மாநிலம் பெரும்பாலான சுயாட்சி அதிகாரங்களை அனுபவித்தே வந்தது. மேலும் பஞ்சாப் மாநிலத்திற்கென்று தனியான சட்டசபையும் இயங்கிவந்தது. ஆரம்பத்தில் தமக்கென்று விசேட அதிகாரங்கள் வேண்டும் என்று கோரிவந்த சீக்கியர்கள் காலப்போக்கில் சிக்கியர்களுக்கான தனிநாடான காலிஸ்த்தானைக் கோரிப் போராடத் தொடங்கியிருந்தனர். சீக்கியர்களின் பிரதான கட்சியான அகாலி தள் உடன் பேச்சுக்களில் ரஜீவ் இறங்கியிருந்தபோது, சீக்கியர்கள் தமக்கென்று தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். சீக்கியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் தனியான தலைநகர் உட்பட பல கோரிக்கைகளை ரஜீவ் ஏற்றுக்கொண்டிருந்தார். கந்தரட்ணம் சிவபாலன் - 2003, இரண்டாமவர், இடமிருந்து வலமாக‌ அகாலி தள் கட்சியுடன் தான் செய்துகொண்ட ஒப்பந்தத்தினை சீக்கியர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக பஞ்சாப் மாநிலத்தில் பொதுத் தேர்தல் ஒன்றினை நடத்த ரஜீவ் உத்தரவிட்டார். ரஜீவ் காந்தியுடன் தமிழ்ப் போராளிகள் நடத்திய பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து இரு நாட்களின் பின்னர் பஞ்சாப்பில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரஜீவின் கட்சியான காங்கிரஸும் போட்டியிட்டது. தேர்தலில் வெற்றிபெற்ற அகாலி தள், மாநிலத்தின் நிர்வாகத்தைப் பொறுப்பெடுத்துக்கொண்டது. இத்தேர்தலில் அகாலி தள் அடைந்த‌ வெற்றி ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றியென்று ரஜீவ் காந்தி பறைசாற்றியிருந்தார். அகாலி தள் தலைவர்களுடன் ரஜீவ் காந்தி ஆனால் இலங்கையிலோ நிலைமை மிகவும் வித்தியாசமாகக் காணப்பட்டது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை சிங்கள பெளத்த அரசுகள் தமது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 வரையான 20 வருட காலத்தில் பாராளுமன்றத்திற்குள்ளும், வெளியேயும் தமிழ் மக்களால் சுயாட்சி கோரி மேற்கொள்ளப்பட்டு வந்த அகிம்சை வழியிலான போராட்டங்களை சிங்கள பெளத்த அரசுகள் மிருகத்தனமாக அடக்கியிருந்தன. அரச ஆதரவுபெற்ற காடையர்கள் மற்றும் அரசின் நேரடிக் கருவிகளான முப்படையினரும், பொலீஸாரும் தமிழர் மீதான படுகொலைகளை பரந்துபட்ட அளவில் கட்டவிழ்த்துவிட்டிருந்தனர். அரசின் இவ்வாறான அடக்குமுறைகளே தமிழ் மக்கள் தமக்கென்று தனிநாடு ஒன்று தேவை எனும் கோரிக்கையினை முன்வைக்கவும், அதனை வென்றெடுக்க ஆயுதப் போராட்டம் ஒன்று அவசியம் எனும் நிலைப்பாட்டினை நோக்கியும் அவர்களை உந்தித் தள்ளியிருந்தது. ஆனால் தமிழ் மக்களின் உணர்வு வெளிப்படுத்தல்கள் கூட அரசின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு முகம்கொடுத்தன. ஜெயவர்த்தனவின் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் மீதான அரசு அடக்குமுறை முன்னெப்போதைக் காட்டிலும் மிகவும் கொடூரமானதாகக் காணப்பட்டது. 1977, 1981, 1983 ஆகிய வருடங்களில் தமிழ் மக்கள் மீது அரச திட்டமிடலுடன் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல்கள் தமிழர்களை பலவீனப்படுத்தி ஈற்றில் முற்றாக அழித்துவிடும் ஒரே நோக்கத்துடன் அரங்கேற்றப்பட்டிருந்தன. ஜெயவர்த்தன அரசினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் ஆயுதப் போராட்டத்தினைப் பலப்படுத்த ஆரம்பித்திருந்தன. ஆனால், தமிழர் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறைகளுக்கெதிரான தமிழர்களின் ஆயுத ரீதியிலான எதிர்நடவடிக்கைகளை ஜெயார் மேலும் மேலும் குரூரமான அடக்குமுறைகள் மூலம் எதிர்கொள்ள விரும்பினார். தமிழர் மீது தனது முப்படைகளை ஏவி கண்மூடித்தனமான இனவழிப்பில் ஈடுபட்ட ஜெயவர்த்தன, சர்வதேசத்தில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று நிறுவுவதிலும் அயராது ஈடுபட்டு வந்தார். ஆகவேதான், சீக்கியர்களின் பிரச்சினையுடன் தமிழ் மக்களின் பிரச்சினையினை ரஜீவ் ஒப்பிட்டபோது அதனை ஜெயார் முற்றாக வெறுத்தார். தமிழர்கள் தமது பிரதேசங்களைத் தாமே ஆட்சிசெய்யும் தீர்விற்கான பேச்சுக்களில் இதயசுத்தியுடன் ஈடுபடுவதை ஜெயார் எக்காலத்திலும் விரும்பவில்லை. அவருக்குத் தேவைப்பட்டதெல்லாம் தமிழர்களில் அபிலாஷைகளை வென்றெடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப் போராட்டத்தை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்தி முற்றாக அழித்துவிடுவது மட்டும்தான். மஞ்சள் வர்ணத்தில் காணப்படுவது பஞ்சாப் மாநிலம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு ஐப்பசி 17 ஆம் நாள் ஆரம்பமாகவிருந்த நாளில் லலித் அதுலத் முதலி யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையினை 5 இலிருந்து 11 ஆக அதிகரிக்க அரசு தீர்மானித்திருப்பதாக திடீரென்று அறிவித்தார். போராளிகளுடனோ , இந்தியாவுடனோ கலந்தாலோசிக்காது சிங்கள அரசினால் இந்த முடிவு ஒருதலைப்பட்சமாக அறிவிக்கப்பட்டது. புதிதாக அறிவிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களில் ஐந்து சிங்களவர்களும் ஒரு முஸ்லீமும் உள்ளடக்கப்பட்டிருந்தனர். பகமாஸ் நாட்டில் பொதுநலவாய நாடுகளில் அரசுத் தலைவர்களிடையே நடைபெறவிருக்கும் மாநாட்டு நடக்கும் நாளிலேயே அரசினால் இந்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
  22. ரஜீவ் காந்தியைச் சந்திக்க முடிவெடுத்த தலைவர் பிரபாகரன் தான் தலைமறைவாக இருப்பதால் இலங்கையரசு அதனை தனது பிரச்சாரத்திற்குப் பாவிக்கின்றது என்பதை உணர்ந்த பிரபாகரன் 1985 ஆம் ஆண்டு புரட்டாதி 10 ஆம் திகதி வெளியே வந்தார். தான் தலைமறைவாக இருப்பதைப் பாவித்து இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கினை உருவாக்கி அதனை ஆளப்படுத்தவும், சர்வதேசத்தில் போராளிகள் அமைதியில் நாட்டமில்லாதவர்கள், வன்முறை விரும்பிகள் என்று பிரச்சாரப்படுத்தவும் ஜெயவர்த்தன முயன்று வருகிறார் என்பதைப் பிரபாகரன் அறிந்தே இருந்தார். போராளிகள் மீது ஜெயவர்த்தன சிறுகச் சிறுக சர்வதேசத்தில் சுமத்தி வந்த அவப்பெயரை துடைக்கவும், இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே பிணக்கொன்று உருவாகிவருவதாக அவர் செய்துவந்த பிரச்சாரத்தை முறியடிக்கவும் பிரபாகரன் நடவடிக்கைளில் இறங்கினார். புரட்டாதி 10 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடன் பேசும்போது திம்புப் பேச்சுக்களின் பின்னர் இலங்கைக்கு ஆதரவாக‌ நிலையெடுத்துவரும் இந்தியாவை தமது பக்கம் சாய்ப்பதற்கு போராளிகள் ரஜீவுடன் ஒரு சந்திப்பைக் கோரவேண்டும் என்று அவர் வாதிட்டார். புரட்டாதி 29 ஆம் திகதி வெளிவந்த ச‌ண்டே மகசீன் எனும் இந்திய பத்திரிக்கையில் அதன் செய்தியாளர் அனித்தா பிரத்தாப்பிற்கு வழங்கிய நேர்காணலில், பாலசிங்கம் நாடுகடத்தப்பட்ட போது தான் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தொடர்பாக தனது தளபதிகளுக்கும் மக்களுக்கும் எடுத்துக் கூறவும், பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் தாயகத்தில் நிலவும் சூழ்நிலையினை நேரடியாக உணர்ந்துகொள்ளவுமே தான் யாழ்ப்பாணம் சென்றிருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், தான் அங்கு தங்கியிருந்த வேளையில் தனது தளபதிகளுக்கும், மக்களுக்கும் தான் கூறிய ஒரே விடயம் தனித் தமிழீழத்தை உருவாக்குவதன் ஊடாகவே தமிழ் மக்களுக்கான விடுதலையினை அடைந்துகொள்ளமுடியும் என்பதில் தான் உறுதியாக இருக்கிறேன் என்பதுதான் என்றும் அவர் கூறியிருந்தார். திம்புப் பேச்சுக்கள் தோல்வியடைந்த நிலையில் , ஜெயவர்த்தன தமக்கு தீர்வெதனையும் தரப்போவதில்லை என்பதைத் தமிழ் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பிரபாகரனை செவ்வி காணும் அனீத்தா பிரதாப் "தலைமறைவாக இருக்கவேண்டும் என்று எனக்கு எண்ணம் இருக்கவில்லை. பாலசிங்கம் நாடுகடத்தப்பட்டவேளை நான் வெளியே வந்திருக்க முடியும். ஆனால் இந்தியா நடந்துகொண்ட விதத்திற்கெதிரான எனது எதிர்ப்பைக் காட்டவே அவ்வாறு வெளியில் வருவதைத் தவிர்த்தேன்" என்று அவர் அனீத்தா பிரத்தாப்பிடம் கூறினார். போராளிகளின் தலைவர்களை ரஜீவ் காந்தி சந்திக்க விரும்புவதாக செய்தியனுப்பியபோது, தான் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை என்றும், அதனேலேயே ஏனைய ஈழத்தேசிய முன்னணியின் தலைவர்களும் ரஜீவுடனான சந்திப்பிற்கு ஒத்துக்கொள்ளவில்லையென்றும், அதனாலேயே இந்தியாவிற்கும் போராளிகளுக்கும் இடையே அசெளகரியமான சூழ்நிலை உருவாகியது என்றும் அவர் விளக்கினார். ஆனால், பாலசிங்கத்தை நாடுகடத்தியதற்கான தனது எதிர்ப்பைக் காட்டவே ரஜீவுடனான சந்திப்பை தான் தவிர்த்ததாக அவர் மேலும் கூறினார். "பாலசிங்கத்தை நாடுகடத்த ரஜீவ் எடுத்த முடிவு தேவையற்றது என்று தான் உறுதியாக நம்புகிறேன்" என்றும் அவர் வாதிட்டார். தான் வெளியே வந்ததற்கான மூன்று காரணங்களை அவர் முன்வைத்தார். கேள்வி : அப்படியானால் எதற்காக தற்போது வெளியே வந்தீர்கள்? பிரபாகரன் : இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது காரணம், நான் தலைமறைவாக இருந்தபொழுது, எமது விடுதலைக்கு எதிரான சக்திகள் எம்மை பயங்கரவாதிகள் என்றும், சமாதானத்திற்கு எதிரானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தன. இரண்டாவது, தமிழ் மக்களின் விடுதலையினை ஆயுதப் போராட்டம் ஒன்றின் மூலமாகவே வென்றெடுக்க முடியும் என்று நம்புகின்ற எம்மைப்போன்றவர்களை ஓரங்கட்டிவிட்டு சலுகைகளுக்காக பேரம் பேசும் சூழிநிலையினை சிலர் உருவாக்க விரும்பியிருந்தனர். பத்திரிக்கைகளிலும், ஏனைய ஊடகங்களிலும் எம்மை மிகவும் கொடிய பயங்கரவாதிகள் என்று மலினப்படுத்தியும், எம்மைப்பற்றிய தவறான செய்திகளையும் சிலர் வேண்டுமென்றே பரப்பி வர ஆரம்பித்திருந்தனர். மூன்றாவதாக, இரண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது எமது இயக்கமே என்றும், அதனாலேயே நான் தலைமறைவாக இருக்கிறேன் என்றும் இலங்கையரசாங்கம் பிரச்சாரம் செய்துவந்திருந்தது. தான் வெளியே வந்தமைக்கான இன்னொரு காரணத்தை பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் ஏனைய தலைவர்களுடனான சந்திப்பின்போது தெரிவித்தார். ரஜீவ் காந்தியுடனான போராளிகளின் தொடர்பாடல் என்பது ரோ அதிகாரிகள் ஊடாகவோ அல்லது வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஊடாகவோதான் நடந்து வந்தது. ஆகவே, இவ்வதிகாரிகள் தன்னுடனும் நேரடியாகத் தொடர்புகொள்ளவேண்டும் என்பதற்காகவும், பேச்சுவார்த்தைத் தோல்விக்குப் பின்னரான இந்தியாவின் நிலைப்பாடு பற்றி தன்னிடம் நேரடியாக அவர்கள் தெரிவிக்க முடியும் என்பதற்காகவுமே தான் வெளியே வந்ததாகவும் அவர் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் தன்னைச் சந்திப்பதை ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் வேண்டுமென்றே பிற்போட்டுவருவதாக உணரும் ரஜீவ் காந்தி நிச்சயம் சினங்கொண்டிருப்பார் என்பதை பிரபாகரன் நன்கு உணர்ந்தே இருந்தார். இந்தியாவின் சமாதான முன்னெடுப்புக்களை போராளிகளின் தாமதித்த சந்திப்பு பாதிக்கும் என்று பாலக்குமாரிடமும் பத்மநாபாவிடமும் ரோ அதிகாரிகள் பேசும்போது எச்சரித்திருந்தார்கள். போராளித் தலைவர்களின் தாமதத்தினாலேயே தமிழ் மக்கள் மீதான படுகொலைகளும், யுத்த நிறுத்த மீறல்களும் இடம்பெற்றன என்று கூறிய அதிகாரிகள், வன்முறைகள் ஆரம்பித்தமைக்கான பொறுப்பினை போராளிகளே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கூறியிருந்தனர். புரட்டாதி 10 ஆம் திகதி கூடிய ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ரஜீவ் காந்தியைச் சந்திப்பதற்கு முன்னர் எம்.ஜி.ஆரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தனர். மூன்று நாட்களுக்குப் பின்னர், புரட்டாதி 13 ஆம் திகதி எம்.ஜி.ஆர் உடனான சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் இரு விடயங்கள் குறித்து போராளிகள் வலியுறுத்தினர். முதலாவது, இலங்கையில் தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பொன்றினை ஜெயார் மேற்கொண்டு வருவதை எம்.ஜி.ஆர் இடம் உறுதிப்படுத்திய அவர்கள், அதனை வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஊடாக நிரூபித்தனர். மேலும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிராமங்களில் இருந்து இராணுவத்தினரும், கடற்படையினரையும் வன்முறையினைப் பயன்படுத்தி தமிழ் மக்களை நிரந்தரமாகவே விரட்டியடித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தனர். மேலும் இவ்வாறு தமிழ்மக்கள் விரட்டியடிக்கப்பட்ட கிராமங்களில் அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுவருவதையும் அவர்கள் சாட்சிகளூடு நிரூபித்தனர். அத்துடன், தமிழர்கள் வாழ்ந்துவந்த கிராமங்களில் குடியேற்றப்படும் சிங்கள குடியேற்றக்காரர்களுக்கு ஆயுதங்களும் பயிற்சியும் வழங்கப்பட்டு, அவர்கள் அருகிலிருக்கும் ஏனைய தமிழ்க் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்த அரசாங்கம் ஊக்குவித்துவருவதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர். தமிழர்கள் மீது அரசாங்கம் முடிக்கிவிட்டிருக்கும் இனக்கொலையின் காரணமாகவே பெருமளவான தமிழ் அகதிகள் தமிழ்நாடு நோக்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இரண்டாவதாக அவர்கள் தெரிவித்த விடயம், தம்மைப் பயங்கரவாதிகள் என்று இலங்கையரசாங்கம் சர்வதேசத்தில் பிரச்சாரம் செய்துவருவது விசமத்தனமானது என்பது. தமிழ் மக்கள் தகுந்த பாதுகாப்புடனும், ஒடுக்குமுறைகள் குறித்த அச்சமின்றியும் வாழ்வதே தமது தலையாய விருப்பு என்றும், அதனை அடைவதற்காக தாம் நடத்திவருவது விடுதலைப் போராட்டமேயன்றி பயங்கரவாதம் இல்லையென்றும் வாதிட்டனர்.தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலத்தில், தமது வாழ்க்கையினை எவரினதும் இடையூறின்றி மேற்கொண்டு, சுயகெளரவத்துடன் வாழ‌ வேண்டும் என்பதே தமது குறிக்கோள் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இலங்கை அரசாங்கத்தினால் இன்றுவரை முன்வைக்கப்பட்டிருக்கும் எந்தத் தீர்வும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதற்கு எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பதை எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.தமிழ் மக்களுக்கு அதிகாரத்தினைப் பகிர்ந்தளிப்பதற்குப் பதிலாக, மாவட்ட சபைகள் எனும் தீர்வினை முன்வைத்து மத்திய அரசாங்கத்திற்கே இன்னும் இன்னும் அதிகாரங்களை வழங்கி, தமிழ் மக்களை மேலும் தனது அடக்குமுறைக்குள் கொண்டுவர‌ அரசு முயல்கிறது என்றும் அவர்கள் விளக்கினர். ஆகவே இந்தியா, ஜெயவர்த்தனவின் கபடத்தனத்தை சரியாக கண்டுணர்ந்து, தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நிரந்தரமான தீர்வை இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுத்தரவேண்டும் என்றும் எம்.ஜி.ஆர் இடம் அவர்கள் கோரினர். தன்னைச் சந்தித்த போராளிகளின் தலைவர்களிடம் ரஜீவையும் சென்று சந்திக்குமாறு கேட்டுக்கொண்ட எம்.ஜி.ஆர், தமிழரின் பிரச்சினை தொடர்பான தனது எண்ணங்களை ரஜீவிடம் தான் அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அன்றைய தினமே தனது கருத்துக்களை ரஜீவிற்கு எம்.ஜி.ஆர் அனுப்பினார். அவர் அனுப்பிய அறிக்கையில் போராளித் தலைவர்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலை தொடர்பான தனது சொந்தக் கணிப்பையும் அவர் எழுதியிருந்தார். போராளித் தலைவர்களுடனான சந்திப்பின் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய எம்.ஜி.ஆர், தான் ரஜீவிற்கு அனுப்பிய அறிக்கை குறித்து கருத்துத் தெரிவித்தார். தமிழ் மக்கள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கையரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். "ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அடைக்கலம் தேடி வருகிறார்கள். இது உடனடியாக நிறுத்தப்படட் வேண்டும்" என்று அவர் கூறினார். இவ்வாறு கூறியதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினையினைக் காட்டிலும் அகதிகள் பிரச்சினையினை அவர் மிகைப்படுத்திப் பேசினார். பின்னர், தமிழர்கள் கெளர‌வமாகவும், சுதந்திர‌மாகவும், தமது அலுவல்களைத் தாமே பார்த்துக்கொள்ளும் நிலையினை உருவாக்க இலங்கையரசாங்கம் திம்புவில் முன்வைத்த தீர்வு உதவாது என்று அவர் கூறினார். "தமிழர்கள் தமது விடயங்களைத் தாமே பார்த்துக்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்" என்றும் அவர் கூறினார். இலங்கை அகதிச் சிறுவர்கள் ‍- தமிழ்நாடு 2003 இலங்கையரசாங்கத்திற்கும், போராளிகளுக்கும் இடையிலான மூன்று மாதகால யுத்த நிறுத்தம் நிறைவடையும் நாளான புரட்டாதி 18 ஆம் திகதி போராளித் தலைவர்கள் தில்லியை வந்தடைந்தனர். அவர்கள் சென்னையிலிருந்து தில்லி நோக்கிப் புறப்படுவதறுகுச் சற்று முன்னர் கொழும்பில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய லலித் அதுலத் முதலி, இலங்கையரசாங்கம் ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்க முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். அதன்படி யுத்தநிறுத்தம் மார்கழி 18 வரை இலங்கையரசால் ஒருதலைப்பட்சமாக நீட்டிக்கப்பட்டது.
  23. திரு சபாரட்ணம் அவர்கள் முன்னாள் டெலோ உறுப்பினருக்கு எழுதிய பதில் பங்குனி 30, 2005 நான் எழுதிய செய்தி தவறானது என்று நீங்கள் கருதினால், தற்போதைய டெலோ அமைப்பின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனுடன் நீங்கள் அதனை சரிபார்த்துக் கொள்ளலாம். இப்படுகொலைகளை நடத்திய நபரை எனக்கு நன்றாகவே தெரியும். 1986 ஆம் ஆண்டு டெலோ அமைப்பை புலிகள் முற்றாகத் துடைத்தழித்தபோது, புலிகள் அவரைக் கைதுசெய்திருந்தனர். புலிகளால் அவர் பின்னாட்களில் விடுவிக்கப்பட்டபின்னர் அவர் நோர்வேயிற்குச் சென்றுவிட்டார். புலிகளின் முக்கிய உறுப்பினரும் 1987 ஆம் ஆண்டு நாவற்குழியில் பொன்னம்மானுடன் பலியாகியவருமான வாசு, இப்படுகொலைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த டெலோ அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விசாரித்தபோது இப்படுகொலைகள் குறித்து அறிந்துகொண்டார். இதுகுறித்து வாசுவே என்னிடம் சில விடயங்களைத் தெரிவித்திருந்தார். நான்கூட ஒரு காலத்தில் புலிகளின் பாதுகாப்பில் இருந்தவன் தான். இப்படுகொலைகளைச் செய்துவிட்டு தப்பியோடிய குழுவை புலிகள் துரத்திச் சென்றிருக்கிறார்கள், ஆனாலும் அவர்களைப் பிடிக்க முடியவில்லை. அக்குழு யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமை நோக்கியே வாகனத்தில் தப்பிச் சென்றதாக வாசு என்னிடம் கூறினார். ஆகவே, யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஒரு அமைப்பைக் கொண்டு இலங்கை இராணுவமே இப்படுகொலைகளைச் செய்ததாக புலிகள் அன்று நினைத்திருந்தார்கள். ஆனால், இதனை வெளியே சொல்ல அவர்கள் விரும்பவியிருக்கவில்லை. யாழ்ப்பாணத்திற்குள் இராணுவம் நுழையவே முடியாது என்று மக்களிடம் பிரச்சாரம் செய்துவந்த புலிகளுக்கு, தமது கட்டுப்பாட்டுப் பகுதியினுள் இராணுவத்தினர் நுழைந்து, படுகொலைகளில் ஈடுபட்டுப் பின்னர் தப்பிச் செல்வதென்பது கெளரவப் பிரச்சினையாக இருந்திருக்கும். இப்படுகொலைகள் ஈடுபட்டவர்களுக்கு எதிராக புலிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்று வினவினேன். அதற்குச் சிரித்துக்கொண்டே பதிலளித்த வாசு, "இல்லை, இன்றைக்கு நீங்கள் அவர்களைக் கொன்றிருக்காவிட்டால், நாங்கள் எப்போதோ ஒரு நாள் அவர்களைக் கொல்லவேண்டி இருந்திருக்கும். ஆனால் சிறீ அவர்களைக் கொன்றதற்கும், நாம் அவர்களைக் கொல்வதற்கும் இடையே பெரிய வேறுபாடு ஒன்று இருக்கிறது. சிறீ அவர்களைக் கொன்றது ரோவின் ஆதாயத்திற்காக. நாம் கொல்வதோ எமது (தமிழர்களின்) ஆதாயத்திற்காக" என்று என்னிடம் கூறினார். நன்றி த. சபாரட்ணம்.
  24. தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆளாளசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக முன்னாள் டெலோ உறுப்பினர் ஒருவர் திரு சபாரட்ணம் அவர்களுக்கு எழுதிய கடிதம் பங்குனி 26, 2005 அன்பான ஆசிரியருக்கு, உங்களின் முன்னைய அத்தியாயத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்தது டெலோ அமைப்பின் வடமாராட்சிப் பொறுப்பாளர் தாஸ் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது முற்றிலும் தவறான தகவலாகும். யாழ்ப்பாணத்தில் அன்று வாழ்ந்துவந்த அனைத்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்லவேண்டும் என்பதே சிறீசபாரட்ணம் எமக்கு விடுத்த கட்டளையாகும். ஆனால், வடமாராட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான துரைரட்ணத்தையோ, இராஜலிங்கத்தையோ கொல்வதற்கு தாஸ் மறுத்துவிட்டார். மேலும், டெலோவின் யாழ்ப்பாணப் பொறுப்பாளர் பொபி, வடமாராட்சியைச் சேர்ந்த எவரையும் கொல்வதையும் தான் அனுமதிக்கப் போவதில்லையென்றும் அவர் எச்சரித்திருந்தார். இவர்கள் இருவரையும் கொன்றது பொபியின் குழுவினர் தான். இந்தத் திருத்தத்தினை உங்களின் பதிவில் இணைப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் முடிக்கிறேன். நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.