Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kandiah Thillaivinayagalingam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by kandiah Thillaivinayagalingam

  1. "மனித மனம் திருப்தி அடையாது" "மனித மனம் திருப்தி அடையாது மகிழ்ச்சி கொள்ள உள்ளம் விடாது மஞ்சம் இல்லையெனில் படுக்கை வராது மற்றவரைத் தாழ்த்தாமல் வாழ முடியாது" "கதிரவன் கடுமையானால் முறை இடுகிறான் கடும் மழை பொழிந்தால் திட்டுகிறான் கங்கை வற்றினால் பஞ்சம் என்கிறான் கங்கை பெருக்கெடுத்தால் அழிவு என்கிறான்" "இறைச்சி இல்லையெனில் உணவு இறங்காது இல்லாமல் இருப்போருக்கு எல்லாம் இறங்கும் இல்லமே இல்லாதவனுக்கு எல்லாம் படுக்கை இச்சை கொண்டவன் இருந்தும் படுக்கான்" "சிலருக்கு அணிய ஆடைகள் இல்லை சிலருக்கு வைக்க இடமே இல்லை சிக்கனம் தெரிந்தவனுக்கு வாழ்வு மகிழ்வு சிம்மாசனம் தேடுபவனுக்கு மகிழ்ச்சி இல்லை" "பணக்காரன் மூட்டை முடிச்சு பதுக்குகிறான் பஞ்சம் பிடித்தவன் போல் அலைகிறான் பட்டினி கிடக்கிறான் சாதாரண மனிதன் பங்கிட்டு அதையும் கொடுத்துச் சாப்பிடுகிறான்" "உன்னிடம் எவ்வளவு இருக்கிறது என்பதல்ல உன்னிடம் என்ன இருக்கிறதுதான் முக்கியம் உலோபியாக சேர்த்து வைப்பதை விட உரிமையுடன் கொஞ்சத்தையும் சரியாக அனுபவி !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  2. "கோபத்தைக் குறைத்துவிடு" "கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும் கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்" கண்டது ஒரு [அழகு] வடிவத்தை, அதை கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு உருகி நிட்குதே, ஆனால், இவள் [இவர்] பேசுவதோ பைத்தியக்காரி [பைத்தியகாரன்] மாதிரி இருக்கிறது, அதை கேட்டவுடன் உடனே கோபம் வருகிறதே!. என் மனம் இப்படித்தான் ஊசல் ஆடிக்கொண்டு இருந்தது. காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் அது வந்து விடலாம்?. அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு. மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும். மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல், அப்படியே முடிவு செய்து விடும். இதைத்தான் நான் இப்ப அனுபவிக்கிறேன். இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள். பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் ஒன்று சேருகிறது. என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன். இங்கு மூளைக்கு இடம் இருக்கவில்லை. பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன். "பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணித்து, ஒருவரை ஒருவர் தம் உள்ளம் ஈர்த்தலால், வரி சிலை அண்ணலும் வாள் கண் நங்கையும் இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார்." இப்படித்தான் நாம் ஒருவரை ஒருவர் எம் பணிமனையில் முதல் முதல் கண்டபொழுது இருவர் மனதிலும் உடலிலும், ஒரே நேரத்தில் ஏற்பட்ட சில சொல்லமுடியாத உணர்வுகளால் ஒன்றிணைந்தோம். இன்னும் அதை மறக்க முடியவில்லை. "கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்" அவள் தனது முதல் உத்தியோகமாக, எனக்கு கீழ் ஒரு தொழில்நுட்ப உதவியாளராக அங்கு இணைந்தாள். அந்த அறிமுகம் தான் எம்மையும் அன்றே இணைக்க காரணமானது. என்றாலும் அது எவ்வளவு தவறு என்பதை இன்று உணர்கிறேன். இராமாயணத்தில் சீதை தனது வாழ்வை சந்தோசமாக களித்தாளா என்று கேட்டால் இல்லை என்றே பதில் வரும். அப்படித்தான் இப்ப என் வாழ்வும். அடிக்கடி நம் கோபத்தில் சிக்கிக்கொள்ளும் போது, நாம் உணரும் ஒரே உணர்ச்சி இது என்று நினைக்கிறோம், ஒருவேளை, அங்கே கொஞ்சம் மனக் காயமும் பயமும் கலந்திருக்கலாம். அந்த தருவாயில், நமது கோபத்தின், காயத்தின், பயத்தின் குரலை மட்டுமே நாம் கேட்கிறோம் , இதனால் நாம் அநேகமாக தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதே உண்மை. அப்படித்தான் என் மனைவியின் நிலை இன்று இருக்கிறது. அன்று நாம் திருமணம் செய்து முதல் நாள். நாம் இருவரும் தேன்நிலவுக்கு போய் இருந்தோம். அன்று இரவு அவள் உடை மாற்றிக்கொண்டு, என்னிடம் வந்த அழகை, மகிழ்வை எப்படி சொல்வேன்? பஞ்சு போன்ற மென்மை. இளந்தளிரின் வெதுவெதுப்பான அந்த ஈரம். மயில் போல சாயல். தாமரை மலர் போல சிவப்பு. அன்னம் போன்ற தூய்மை. இத்தனையும் அவள் தன்னகத்தே கொண்டு அங்கு வந்தாள். “பஞ்சியொளிர் விஞ்சுகுளிர்ப் பல்லவ மனுங்கச் செஞ்செவிய கஞ்சநிமிர் சீரடி யளாகி அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென” ஆனால் அதன் பின் ஒழிந்து இருந்த "மின்னும் வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் " அப்பொழுது எனக்குத் தெரியவில்லை? ஒரு வேளை என் தவறால் அது அவளிடம் இன்று வந்ததா எனக்குத் தெரியாது? என்னுடன் ஒரு இரு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவள், இன்று திருமணத்தில் மகிழ்ச்சியற்றவளாக எரிஞ்சு விழுகிறாள்? ' நான் அவரை இனிமேலும் காதலிக்கவோ, கணவராக ஏற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை, தீவிரமாக விவாகரத்து செய்ய சிந்திக்கிறேன்' என தன் தோழியிடம் கோபமாக கூறுவது என் காதில் விழுந்தது. இப்ப கொஞ்ச நாளாக என்னைக் கண்டால் கோபமாகத்தான் பார்க்கிறாள், விலத்தி விலத்தி போகிறாள். ஏன் இப்ப என்னுடன் ஒரே கட்டிலில் கூட படுப்பதும் இல்லை. பக்கத்து அறையில் தனிய படுத்துவிடுவார். "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும்" என்ற திருக்குறள் எனக்கு வலிமையைக் கொடுத்து, அவளின் கோபத்தின் முன் தோற்றவராக என்னைச் சரிபடுத்திக் கொண்டாலும், அவளின் அந்த ஊடல், கோபம் எப்ப முடியும்? எப்ப நான் கூடி மகிழும் நிலை வரும் என்பது இப்ப ஐயப்பாடாக எனக்குத் தோன்றியது. சமாதானமாக, அன்பாக விட்டுக்கொடுத்து வாழும் சாத்தியத்தை பரிசீலிக்க நான் அவளை எவ்வளவோ ஊக்கப்படுத்தினாலும் அதை அவள் உதாசீனப்படுத்தியதுடன் என்ன கேவலமாகவும் கோபமாகவும் பார்த்தாள். அப்படி என்ன தவறு நான் செய்தேன் ? ' அவர் வீட்டுக்கு வெளியே அதிக நேரம் செலவிடுகிறார். அவர் தெளிவாக, குடும்பத்தை விட வேலைக்கு முன்னுரிமை அளித்துள்ளார் போல்த்தான் எனக்கு தெரிகிறது. அவருக்கு நானோ, நாமோ முக்கியம் இல்லை போல் உணர்கிறேன்' இப்படித்தான் அவள் சமதனப் படுத்த வந்த தோழிக்கு சொன்னாள். 'நாம் இரண்டு ஆண்டுகள் நன்றாக சுற்றித்திரிந்து ஒன்றாக ஆனந்தமாக காலம் போக்கிவிட்டோம். இனி குடும்பத்தை கட்டி எழுப்பவேண்டும். பிள்ளைகள் வரும் முன் அதற்கு தேவையான நிதி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கு நான் இப்ப, இன்னும் ஒன்று இரண்டு ஆண்டுக்கு கடுமையாக உழைக்க முயற்சிக்கிறேன், அவ்வளவு தான், இது எம் இருவரின் வாழ்வுக்கே' நான் அவளின் தோழிக்கு, அவளுக்கு முன்னாலேயே விளங்கப்படுத்தினேன். ஆனால் அவளோ, நான் இப்ப கல்யாண வாழ்வில் தனிமையை உணருகிறேன், வாழ்வில் வெறுப்பு வெறுப்பாக வருகுது, நாம் விலகி போகிறமோ என்று பயப்படுகிறேன், அது கட்டுக்கடங்கா கோபம் கோபமாக வருகுது. நான் உண்மையை சொல்வதென்றால், இப்ப வேறொருவர் எனக்கு காதலையும் என் மேல் தனிப்பட்ட கவனத்தையும் தருவார் என்றால், நான் கவலைப்படாமல் அதை ஏற்றாலும் ஏற்பேன் என்று அவள் கோபமாக கூறியது என்னைத் தூக்கி வாரிப் போட்டது. எனக்கு ஆசை இல்லையா ? காதல் காமம் இல்லையா ? ஆனால் அதிலேயே முழுதாக தொடர்ந்து இருந்தால், வாழ்வை எப்படி கட்டி எழுப்புவது?, அது ஒன்று தான் என் கேள்வி ? அதை அவள் புரியாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் விவாகரத்து எடுத்து இன்னும் ஒருவருடன் போகவும் தயார், அதுக்கே முயற்சிக்கிறேன் என கூறியது தான் வியப்பாக இருந்தது! கல்யாணம் [marriage] என்றால் என்ன ? கூடி வாழ்வது [just living together] என்றால் என்ன ? இந்த அடிப்படையே தெரியாத ஒருவளை, அழகில் மயங்கி கல்யாணம் கட்டினேனே என்று எனக்கும் இப்ப, இதுவரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த கோபம் வெளியே வந்தது. என்னடா இவனும் சேர்ந்து கோபப்படுகிறான் என்று யாரும் யோசிக்கலாம். ஆனால் பெரிதாக ஒண்ணுமில்லாத. சமாளிக்கக் கூடிய விடயத்துக்குக் கூட தேவையில்லாமல் வீண் வாக்குவாதம் செய்து பிரியும் மனப்போக்கை காட்டும் பொழுது, எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. நான் முற்றும் துறந்த முனிவராக வாழப்போகிறோம் என்று சொல்லவில்லை, கட்டாயம் எல்லா நிலை வாழ்வும் இருக்கும், ஆனால் கொஞ்சம் கூடுதலாக வேலையில் நேரம், கவனம் , எம் வாழ்வின் பொருளாதார உறுதிக்கு தற்காலிகமாக எடுத்தேன் என்பதே உண்மை. ஒரு மனிதன் கோபமே கொள்ளாமல் இருக்க முடியாது. சிலவேளை நம் குழந்தைகளை, மாணவர்களை நல்வழிப்படுத்த, அதிகாரிகள் தன் கீழ் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்க கோபத்தை குறைந்த அளவில் ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். அப்படித்தான் நான் அவளிடம் என் கோபத்தைக் காட்டினேன். அவள் நல்லவள், அறிவு உள்ளவள், என் கோபத்தை பார்த்தாள் சிந்திப்பாள். தன் கோபத்தை குறைப்பாள். அதில் எனக்கு நம்பிக்கை உண்டு. அது தான் அந்த ஆயுதத்தை நானும் இறுதியாக எடுத்தேன்! ஒன்றை ஞாபகப் படுத்துங்கள் 'கோபம் வந்தால்தான் மனிதன் உயிரோடு இருக்கலாம். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். அதனால் கோபம் உயர்ந்ததாகாது' அதைத்தான் நான் காட்டினேன். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. கன்னிப்பிறப்பு கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல் (Parthenogenesis) எனப்படுவது கருக்கட்டல் நிகழாமல் முளையமாக மாறி, வளர்ச்சியடையும் கலவியற்ற இனப்பெருக்க வடிவமாகும். விலங்குகளில் கன்னிப்பிறப்பு என்பது இனப்பெருக்கமற்ற முட்டைக்கருவில் இருந்து முளைய வளருதலையும், இனக்கலப்பிலா படிமுறையையும் குறிக்கும். கன்னிப்பிறப்பு இயற்கையாக பல தாவரங்களிலும் முதுகெலும்பிலிகளில் உருளைப்புழு, நீர்த்தெள்ளு, சில தேள்கள், செடிப்பேன்கள், சில அந்தோபிலாக்கள்,சில குளவி இனங்கள் மற்றும் முதுகெலும்பிகளான சில மீன் இனங்கள்,[ "Female Sharks Can Reproduce Alone, Researchers Find", Washington Post, Wednesday, May 23, 2007; Page A02] நீர்நில வாழ்வன, ஊர்வன மற்றும் மிக அரிதாகச் சில பறவைகளில் காணப்படுகின்றன.[Savage, Thomas F. (September 12, 2005). "A Guide to the Recognition of Parthenogenesis in Incubated Turkey Eggs"] பெரும்பாலான உயிரினங்களில் ஒரு ஆண் உயிரணுவும், பெண் சினை முட்டையும் சேர்ந்து கரு உருவாகுகிறது. ஆண், பெண் உயிரணுக்கள் ஒன்றாக இணைந்து ஒரு கரு வளச்சியடைவைதன் மூலம் தான் புதிதாக ஓர் உயிரி ஜணிக்க முடியும். இதில் ஆண் உயிரினத்தின் துணையின்றிப் பெண் உயிரினமே கரு உருவாக்குவதை தன்கருவுறுவாதல் என்பர். உதாரணமாக குருட்டுப் பாம்பு எனும் புழுப் பாம்பு (Worm Snake) இனத்தில் ஆணே கிடையாது. பெண் மட்டும்தான் உள்ளது. பெண் பாம்பே தானாகக் கருவை உருவாக்கிக்கொள்ளும். மேலும் ஊர்வன வகைகளில் பெரும்பாலும் ஒருமுறை ஆணுடன் இணை சேர்ந்துவிட்டது என்றால் தங்களின் கருப்பாதையில் உள்ள குழாயில் விந்தணுக்களை நீண்ட காலம் சேகரித்து வைத்துக்கொள்ளும். தனக்குச் சாதகமான சூழல் வரும்போது கருசேர்ந்து முட்டைகளிட்டோ, குட்டிகள் ஈன்றோ புதிய உயிரை உருவாக்கும். ஊர்வனவற்றில் இது மிகவும் இயல்பானது. மேலும் தன் கருவுறுவாதல் எறும்புகள், குளவிகள், தேனீக்கள் போன்ற முதுகெலும்பு அற்ற உயிரினங்களில் இது இயல்பாக உள்ளது. கலவியற்ற இனப்பெருக்க வகைகள் 1] உயிரணுப்பிளவு இனப்பெருக்கம் (Fission) 2] அரும்புதல் முறை இனப்பெருக்கம் (Budding) 3] பதியமுறை இனம்பெருக்கம் (Vegetative reproduction) 4] நுண்வித்தி முறை இனப்பெருக்கம் (Sporrogenesis) 5] துண்டாதல்முறை இனப்பெருக்கம் (Fragmentation) 6] பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் (Agamogenesis) [பால்கலப்பில்லாத முறை இனப்பெருக்கம் என்பது ஆண் பாலணு இன்றியே இனப்பெருக்கம் நிகழ்தலாகும் . இவற்றிற்கான எடுத்துக்காட்டுகளாக கன்னிப் பிறப்பையும் கலப்பில்லா வித்தாக்கத்தையும் கூறலாம். கன்னிப்பிறப்பு (Parthenogenesis) எனப்படுவது பெண் பாலணுவானது கருக்கட்டல் நிகழாமலேயே முளையமாக மாறி முளைய விருத்தி க்கு உட்பட்டு புதிய தனியனை உருவாக்குவதாகும். தாவரங்கள், முதுகெலும்பிலிகளான எறும்பு, தேனீ போன்ற பூச்சி வகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள், முதுகெலும்பிகளான சில ஊர்வன, நீர்நில வாழ்வன, மீன்கள், மிக அரிதாக பறவைகள் போன்றவற்றில் இவ்வகை இனப்பெருக்கம் நிகழ்கின்றது.] உதாரணம்: ஆண் துணை இல்லாமல் தனக்குத்தானே கர்ப்பமான பெண் முதலை ஆண் முதலையின் துணை இல்லாமலேயே பெண் முதலை கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் முதல்முறையாக கோஸ்டா ரிகாவில் உள்ள காட்டுயிர் காப்பகம் ஒன்றில் பதிவாகியுள்ளது. 99.9% மரபணு ரீதியாக தன்னைப் போலவே ஒரு கருவை இந்த பெண் முதலை உருவாக்கியுள்ளது. "தன் கருவுறுவாதல்" என்று அழைக்கப்படும் நிகழ்வு பறவைகள், மீன் மற்றும் பிற ஊர்வனவற்றில் கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் முதலைகளில் தற்போதுதான் முதன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பண்பு ஒரு பரிணாம மூதாதையரிடம் இருந்து பெறப்பட்டதாக இருக்கலாம் என்றும் எனவே டைனோசர்களும் சுய-இனப்பெருக்கம் செய்யும் திறன் பெற்றிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ராயல் சொசைட்டி இதழான பயோலஜி லட்டர்ஸ்சில் இந்த ஆராய்ச்சி வெளியிடப்பட்டுள்ளது. On human parthenogenesis [மனிதரில் கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்] Spontaneous parthenogenetic and androgenetic events occur in humans, but they result in tumours: the ovarian teratoma and the hydatidiform mole, respectively. with the creation of viable bi-maternal mice in the laboratory based on minor genetic interferences, raises the question of whether natural cases of clinically healthy human parthenotes have gone unnoticed to science?? சிறிய மரபணு குறுக்கீடுகளின் அடிப்படையில் ஆய்வகத்தில் சாத்தியமான இரு தாய்வழி எலிகளை [bi-maternal mice] உருவாக்கி இருப்பது, மருத்துவ ரீதியாக ஆரோக்கியமான மனிதனில் கன்னிப்பிறப்பு அல்லது தன் கருவுறுதல்களின் இயற்கையான நிகழ்வுகள் அறிவியலுக்கு கவனிக்கப்படாமல் போய்விட்டதா என்ற கேள்வியை எழுப்புகிறது?? மரியாள் கன்னியாக இருக்கும் போதே, ஆண் துணை எதுவுமின்றி, இயேசுவை கருத்தரித்து, ஈன்றளித்ததை கன்னிப்பிறப்பு என்று அழைக்கப்படுகிறது என்பதையும் கவனிக்க . என்றாலும் இது உண்மையா ? கற்பனையா என்பதை அறிவியல் தீர்மானிக்கட்டும் அதே போல, மகாபாரதத்தில் கர்ணன்: குந்தி தன் திருமணத்திற்கு முன்னரே , அதாவது ஆணுடன் குடும்ப உறவு வைக்காமலே பெற்றவர் தான் கர்ணன் என்று கூறுவதைக் காண்க. அதற்கான காரணம் , எதோ கற்பனையில் புனையப்படுள்ளதை, அறிவியல் தீர்மானிக்கட்டும்
  4. "நாம் ஆணா பெண்ணா.. ?" [வித்தியாசமாக இருக்கட்டும் என இப்படி வசன கவிதையில் ஒரு முயற்சி.] "மழலையாய் பிறந்தோம் தாய் தந்தை மகிழ்வில் விளக்கம் இல்லை நாம் வேறா வேறா.." "குழந்தையாய் வளர்ந்தோம் ஒன்றாய் கட்டி உருண்டோம் குழப்பம் இல்லை நாம் ஆணா பெண்ணா.." "சிறுவராய் வளர்ந்தோம் தாய் தந்தை பாசத்தில் குழப்பம் தளைத்தது நாம் பருவம் தாண்ட.." "மாறும் வளர்ச்சியில் மொட்டு மெல்ல பூக்க வேறு எண்ணங்கள் பட்டு மெல்ல மழர.." "இளைஞனாய் மாறினோம் தாய் தந்தை நேசத்தில் குழப்பம் முளைத்தது நாம் ஆணா பெண்ணா.." "துளைத்தது காதல் கண்கள் கவர்ந்தது அழகு இளைத்தது நெஞ்சம் அன்பு அணைத்தது உறவை.." "சுற்றத்தார் வாழ்த்த தாய் தந்தை மகிழ முற்றத்து பந்தலில் நாம் மணமக்கள் ஆனோம்.." "சற்றும் கவலையில்லை நாம் ஆணா பெண்ணா வேற்றுமையில் ஒற்றுமை நாம் மீண்டும் ஒன்றாக.." [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  5. "தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 20 விடியற்காலையில் அறிவியல் நிறைந்த பழக்க வழக்கங்கள் அல்லது மரபுகள் சிலவற்றை நீங்கள் தெரிந்தும் தெரியாமலும் பின்பற்றியிருக்கலாம். ஆங்கில பழமொழி ஒன்று நேரத்துடன் உறங்கி நேரத்துடன் விழித்தெழுவது ஒரு மனிதனை ஆரோக்கியமான, செல்வந்தனாக, ஞானமுள்ளவனாக [Early to bed and Early to rise, makes a man healthy, wealthy, and wise] மாற்றுகிறது என்கிறது. இப்படி அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்து நலமுடன் வாழ்ந்து வந்த நம் மூதாதையர்களின் பழக்கத்தை நாம் இன்று, இந்த மாறிவரும் நவீன உலகில் கைவிட்டு விட்டோம், அது இன்று பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு வழி அமைத்து விட்டது. அதிகாலை விழிப்பின் பின்னணியில், நோய்களைப் போக்கி ஆரோக்கியம் தரும் மிகப் பெரிய அறிவியல் புதைந்து இருக்கிறது. ஆங்கில பழ மொழிக்கு பல பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அதிகாலை விழிப்பின் குணத்தை தேரையர் சித்தர் தனது பாடலில் விளக்கமாக தந்துள்ளார். "புத்தி யதற்கு பொருந்து தெளிவளிக்கும் சுத்த நரம்பினறல் தூய்மையுறும்; -- பித்தொழியும் தாலவழி டாதபித்தம் தத்தம் நிலை மன்னும்; அதி காலை விழிப் பின் குணத்தைக் காண்" என்கிறார் அன்றே, அதாவது, அதிகாலை விழிப்பதினால் புத்தி தெளிவு உண்டாகும். இரத்தம் சுத்தமாகும். அதிக பித்தம் இருந்தால் அது நீங்கும், எனவே நோய்கள் வராது. என விடியற்காலையில் விழிப்ப தன் நன்மைகளை விளக்குகிறார். ஆசாரக்கோவை .தனது வைகறை இலக்கிய பாடல் [41] இல் : "வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும் நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின் தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே முந்தையார் கண்ட முறை" என மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கங்களை நீதி நூலாக கூறுகிறது, இவை எல்லாவற்றையும் ஒரு வரியில் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் "வைகறைத் துயில் எழு " என ஆத்தி சூடியில் கூறியிருப்பதையும் கவனிக்க. முன்பு இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நம் முன்னோர், சூரிய உதயத்தின்போது எழுந்திருப்பதும், சூரியன் மறைவின் போது, படுக்கைக்குச் செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால், இரவையும் பகலாக்கும் இன்றைய நவீன வாழ்க்கை முறையில், அவை வேலை நிமித்தம் மற்றும் பல காரணங்களால் தொலைந்து வருகின்றன. நாம் வழி வழியாக கடைபிடித்த நடை முறையும் மாறுகின்றன. இன்று, இரவில் நீண்ட நேரம் விழிப்பதும் பகலில் நெடுநேரம் கழித்து எழுவதும் இயலப்பாகி விட்டது. அதனால், உடலும் மனமும் புத்துணர்ச்சி யாகவும், மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் ஒரு கட்டுப்பாட்டிலும் [The body and mind will stay fresh, Constipation and indigestion will remain under control and etc ] இருக்கக் கூடிய பல நன்மைகளை நாம் தொலைத்து விட்டோம். வைகறை என்ற விடியற்காலையில் துயில் எழுவது தமிழர்களின் மரபாக இருந்ததை சிலப்பதிகாரம், ஊர் காண் காதையில், "புலரி வைகறைப் பொய்கைத் தாமரை , மலர்பொதி யவிழ்த்த வுலகுதொழு மண் டிலம், வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழி யன் ஓங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப" என்ற வரி உறுதி படுத்துகிறது. அதாவது புலர்கின்றதாகிய வைகறைப்பொழுதின்கண், குளங்களிலுள்ள தாமரைப் பூக்களின் கட்டவிழ்த்த உலகினுள்ளார் யாவரும் வணங்கும் ஞாயிறு, பகையரசர்கள் தலை நடுங்கும் வண்ணம், வாளினை ஏந்திய பாண்டியனது, வீரத்தான் மேம்பட்ட வண்மையான் உயர்ந்த மதுரை நகரத்தினைத் துயிலினின்றும் எழுப்ப என்கிறது. இன்னும் ஒரு காலை நிகழ்வையும், அவை இன்று குறைந்து கொண்டு வந்தாலும், சொல்லுவது அவசியம் என்று எண்கிறேன். பெரும் பாலும் தமிழ் கிராமப் புறங்களில், காலையில் சாப்பாடு செய்ததும், ஒரு கவளம் எடுத்து 'கா கா' என்று கூவி அழைத்து, அந்த உணவை காகத்திற்கு படைக்கும் மரபை இன்றும் காணக் கூடியதாக உள்ளது. பழம் பாடல் ஒன்று காகத்திடம் உலக மக்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில குணங்களை வரிசையில் கூறும் பொழுது முதலாவதாக 'காலை எழுந்திரு' என வலியுறுத்துவதையும் காண்க. "காலை எழுந்திருத்தல் காணமலே புணர்தல் மாலை குளித்து மனை புகுதல் – சால உற்றாரோடுண்ணல் உறவாடலிவ் வாறும் கற்றாயோ காக்கைக் குணம்" பாதணி என்ன கேவலமா? அதை வெளியே ஒதுக்குவதென்ன தர்மமா? என்று சிலர் கேட்கலாம், உண்மையில் செருப்பு என்றும் சப்பாத்து என்றும் நாம் அழைக்கும் எமது காலணியை நாம் சுத்தம் கருதியே கழட்டி வைத்து விட்டு வீட்டினுள், ஆலயத்தினுள் நுழைகின்றோம். யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலான விவிலியத்தில் [Bible], மோசஸ் [Moses] என்ற சமயத்தலைவர், எரியும் புதர் [“burning bush”] ஒன்றை அணுகும் பொழுது, அந்த எரியும் புதரில் இருந்து ஆண்டவனின் குரல் [“voice of God”], அவரை பாதணியை கழட்டுமாறு கட்டளை பிறப்பித்து, அவருக்கு இது ஒரு புனித நிலம் [“holy ground”] என்று சொன்னது. இன்றும் பெரும்பாலான மதங்களில், புனித தளத்திற்குள் போகும் முன் காலணியை கழட்டி வைத்து விட்டு செல்வது வழமையாக உள்ளது. உதாரணமாக, பக்தர்கள் நிலத்தில் அமர்ந்திருப்பார்கள். தியானம் செய்வார்கள். அங்கப் பிரதட்சணை செய்வார்கள். இவ்வாறான நடைமுறைகள் நடைபெறும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே பாதணி கோயிலினுள் அணிவதில்லை. வெளி அழுக்குகளைத் தானேற்று எமது பாதங்களைச் சுத்தமாகவே வைத்திருக்கும் பாதணியை முழுக்க முழுக்க சுத்தம் கருதியே கழட்டி விடுகிறோம், மற்றும்படி கடவுள் பாதணியை கழட்டி வந்தால் தான் தனக்கு மரியாதை என்று என்றும் சொல்லவில்லை, ஏன் ஒரு பாரதத்தையே ஆண்ட பாதணியின் காவியம் தெரியாதா ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 21 தொடரும்
  6. "தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 19 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள்" / "Food Habits of Ancient Sangam Tamils" சங்க கால உணவுகள் பற்றி சிந்திக்கும் போது, தமிழர்கள் அன்று உட்கொண்ட உணவு வகைகள் பற்றி சங்க இலக்கியங்கள் என்ன கூறுகின்றன என்ற கேள்வி மனதில் இயற்கையாகவே ஒருவரின் மனதில் எழும். அவ்வகையில், கிழங்குகள், அரிசி மற்றும் விலங்கு உணவுகள் அடிப்படையில் தமிழர்களின் தொன்மையான உணவாகும் என்பதை அங்கு அறிய முடிகிறது. ‘சோறு’ என்றால் சமைத்த அரிசி. சமைத்த அரிசி, காஞ்சி முதல் கன்னியாகுமரி வரை உள்ள தமிழர்களின் சாதாரண உணவாக தென்படுகிறது. கடியலூர் உருத்திரங் கண்ணனார் எழுதிய ‘பெரும்பாணாற்றுப்படை’ என்ற சங்க இலக்கியத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சி நகரின் அகலமான சாலை ஓரங்களில் மலைகள் போல யானைகளுக்கு உணவளிக்க சோறு சேகரித்து வைத்திருந்ததையும், அங்கு சில சமயங்களில் குரங்குகள் தலையிட்டு சோறை எடுத்துச் சென்றன என்றும் கவிஞர் கண்ணனார் தனது பாடலில் விவரிக்கிறார். காழோர் இகழ் பதம் நோக்கி கீழ, நெடும் கை யானை நெய் மிதி கவளம், கடும் சூல் மந்தி கவரும் காவில் . . . .[393 - 395] மற்றொரு புகழ்பெற்ற சங்க காலப் புலவரான மாங்குடி மருதனார், தனது 'மதுரைக்காஞ்சி'யில் வடநாட்டு மன்னர்களுடன் போர் புரிந்த ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தில் தமிழர்களின் நாகரீகமான வாழ்க்கை முறைகளையும் அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்களையும் எடுத்துரைத்துள்ளார். தமிழர்கள் அரிசி, பலாப்பழம் போன்ற பழங்கள் மற்றும் பல்வேறு வகையான மாம்பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுக்குப் பிறகு, வெற்றிலை, பாக்கு போன்றவை தமிழர்களின் உணவுப் பழக்கம் என்று கூறுகிறார். "தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய், நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்," [400 - 401] [உடலுக்கு அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரையுடைய பசிய பாக்குடன் நீண்ட கொடியில் வளர்ந்த வெற்றிலை உடையவர்களும்,] "சேறும் நாற்றமும் பலவின் சுளையும், வேறு படக் கவினிய தேம் மாங் கனியும், பல் வேறு உருவின் காயும், பழனும், கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி, மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும், அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும், புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும், கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு, பிறவும், இன் சோறு தருநர் பல் வயின் நுகர" [527 - 535] [சாற்றாலும் மணத்தாலும் வேறுபட அழகு கொண்ட பலாவின் சுளையும் இனிய மாவின் பழங்களையும், பல்வேறு வடிவில் உள்ள காய்களும், பழங்களும், முகில்கள் மழைபொழிந்து வளர்த்த கொடிகள் அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய கீரைகளும், அமுதை வார்த்தாற்போல் உள்ள இனிய சாற்றையுடைய கற்கண்டுத் துண்டுகளையும், பலரும் புகழும்படி சமைத்த பெரிய இறைச்சித் துண்டுகள் கலந்த சோற்றையும், கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குகளுடனும் பிற உணவுகளுடனும், இனிய சோற்றினை இடுபவர்கள் கொடுத்ததைப் பெற்றவர்கள் பல இடங்களிலும் உண்ண,] எனக் கூறுகிறது ஆனால், இன்று நாம் பெருபாலும் உண்ணும் வெள்ளை அரிசியானது சாதாரண உணவாக அன்று இருக்கவில்லை. இது அரிதாக கொண்டாட்டங்கள் மற்றும் மத நிகழ்வுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டது. சாதாரண உணவாக, வரகு, சாமை [Little Millet], தினை, கம்பு அரிசிகள் போன்றவை சாதாரண அரிசிக்கு பதிலாக அன்று பாவனையில் இருந்தது. நிறைய பருப்பு வகைகளும் மேலும் பச்சை மிளகாயை விட மிளகு அன்று கூடுதலாக விரும்பப் பட்டது. உணவில் நிறைய மருத்துவ மூலிகைகள் பயன்படுத்தப் பட்டன. தமிழர்களுக்கு உணவே மருந்தாக இருந்தது. தென்னிந்தியாவின் முற்கால குடிமக்களான திராவிடர்கள் எந்த வகையிலும் சைவ உணவு மட்டும் உண்பவர்கள் அல்ல. உதாரணமாக, 2000 ஆண்டுகளுக்கும் மேலான சங்கக் கவிதை, அகநானூறு 107, வரிகள், 5- 10 & சிறுபாணாற்றுப்படை - 195 சங்க காலத்தில் தமிழர்கள் தடையின்றி இறைச்சி உண்டனர் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. "இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல், நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண், ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு, ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட, வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு, புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்" என அகநானூறு 107, வரிகள், 5-10 கூறுகிறது. அதாவது ஆண் மானினை பெரும் புலி ஒன்று கொன்று தின்றது. எஞ்சிய இறைச்சி பாறையில் காய்ந்து கிடைகின்றது. அவ்வழியே சென்ற மக்கள் அந்த இறைச்சி துண்டை கண்டு மகிழ்ந்தனர். அந்த காய்ந்த ஊனையும் முங்கில் நெல்லின் அரிசியையும் தயிரையும் சேர்த்து வெண்சோறாக்கி, அதை தேக்கின் இலையில் வைத்து உண்டனர் என்கிறது இந்த சங்கப் பாடல். அதேபோல, சிறுபாணாற்றுப்படை 189-195 ம், "வலம்பட நடக்கும் வலி புணர் எருத்தின், உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை, பிடிக்கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத், தொடிக் கை மகடூஉ மகமுறை தடுப்ப, இருங்கா உலக்கை இரும்பு முகம் தேய்த்த, அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு,கவைத்தாள் அலவன் கலவையொடு பெறுகுவீர்;" (189-195) திண்ணிய கழுத்தினையுடைய ஊக்கம் மிகுந்த வலிய எருதுகளை வைத்திருக்கும் உழவரின் தங்கையான, பெண் யானையின் துதிக்கையினை ஒத்தப் பின்னல் தொங்குகின்ற சிறிய முதுகினையும், வளையணிந்த கைகளையுமுடைய பெண், தன் பிள்ளைகளைத் துணையாகக் கொண்டு உம்மைத் தடுத்து இரும்பாலான உலக்கையின் பூண் தேயுமாறு நன்றாக குற்றிய அரிசியைக் கொண்டு சமைத்த வெண்மையான சோற்றினைப் பிளந்த காலினையுடைய நண்டின் கறியோடு கலந்து சோற்றுக் கட்டியாகத் தர, நீவீர் உண்பீர் என்கிறது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 20 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 19 "Food Habits of Ancient Sangam Tamils" When anyone think about the food of Sangam period, the question arises in mind today is whether Sangam literature mentioned in details about the cuisine that the Tamil people had? Roots, Rice and Animal food are basically the Tamil’s ancient food as we are getting proof from Sangam literature. ‘soru’ means cooked rice. The rice in cooked form is normal food of Tamils from Kanchi to Kanyakumari tamils. This was mentioned in ‘Perumpaanaatruppadai’ a sangam literature written by Kannanar. Not only ‘soru’ is common food for tamils they even kept and stored like hills at the side of Kaanchi city’s broad roads for the purpose of feeding of elephants but some times the monkeys were intervening and taking away the food, says Poet Kannanaar as he was witnessing the scene. [The town is surrounded by protective forests.] In a grove, a monkey in her first pregnancy, eyes the elephant keeper when he is careless, and slyly steals a ball of food kept down, crushed with the feet and made with rice and ghee,[line, 393 - 395] Another famous Mangudi Marudhanar, a Sangam period Poet who wrote ‘ maduraikkanji’ which has been included in ‘Sangam Poems’ narrated the life styles of Tamils and their eating habits during the period of King Nedunchezhian who waged war with the kings belong to northern parts (The king was called as Ariyap padai kadantha Nedunchezhian in Tamil means the king who won over Arya’s big army) Tamils were familiar with rice, fruits like ‘Jack fruit’ and various type of Mango varieties, Vegetables and after food ‘paan’ i.e., Betel leaves and nuts are common as food habit for tamils. The said Tamil phrase from maduraikkanji’ is given below with english translation. "Some sold betel leaves from long vines along with areca nuts with sweet juice and pulp inside that" [400 - 401] "Food is served to many, with sweet rice, segments of jackfruits with juice and fragrance, beautiful, sweet mangoes of various kinds, vegetables and fruits in many different shapes that grow on beautiful plants, with delicate sprouts from properly grown branches, that have opened into leaves that are nurtured by the rains, sugar cubes that are like nectar, rice cooked with meat that is praised by many, tubers that go down into the earth and others." [527 - 535] However, the rice we eat today, the white one was not the standard edible crop. It was rare and used only for celebrations and religious occasions. The normal food was made with varagu, samai, thinai, kambu in place of rice today. Also the ate lot of pulses & Pepper was preferred over chilli. A lot of medicinal herbs used in food too. For Tamils medicine was not something different or a alien substance. The food itself was medicine and believe me it was tasty too. it is also understand that the early inhabitants of the south India - Dravidians - were by no means vegetarians. Over 2000 years old Sangam poem, Akananuru 107, lines, 5-10 & Sirupanatrupadai 189-195, clearly mentioned that, Tamils during the Sangam period had ate meat without any restrictions as: "where a big tiger killed a stag, ate to its full, and left the flesh to dry on a wide granite boulder, making those who go on the path happy, seeds of flourishing bamboo are cooked with curds from the villages of cow herders, along with melted fatty meat and white rice, and are eaten on wide leaves of teak trees" [Akananuru 107] "The younger sister of a farmer who owns mighty bulls with strong necks and victorious walk, a woman with braided hair on her small back resembling a female elephant’s trunk and bangles on her hand, will serve white rice balls, from rice pounded with an iron pestle whose ends have been blunted, served with split-legged crabs, with the help of her children, blocking you from leaving." (Sirupanatrupadai - 195). A poem by: KariKannanar, KaveryPumPattinam. The text is belongs to second century B.C. or earlier. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 20 WILL FOLLOW
  7. "எல்லாமாய் அவளே" "எல்லாமாய் அவளே இறைவியும் அவளே! சொல்ல முடியா அழகில் வந்து வெல்ல முடியா நெஞ்சைக் கவர்ந்து நல்லாய் வாழ தன்னைத் தந்தவளே!" "கள்ளம் இல்லா நெஞ்சம் கொண்டவளே! உள்ளம் தேடும் அன்பு தந்து அள்ள அள்ள இன்பம் சொரிந்து உள்ளது எல்லாம் எமக்கு கொடுத்தவளே!" "ஆழ் கடலில் மலர்ந்த முத்தே! வாழ்வு தர உன்னையே கொடுத்து தாழ்வு மனப்பான்மை எம்மிடம் அகற்றி சூழ்ச்சி சூது அறியா இல்லத்தரிசியே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. "திருந்தாத உள்ளம்" "திருந்தாத முழுமூடர் இந்த நாட்டில் தீமைபல புரிகின்றார், எனவே அன்பே உருவான பெண்டிரெல்லாம்அடிமை யாகி உறைக் கிணறு செய்கின்றார் கண்ணீராலே!" எங்கேயோ நான் கேட்ட வார்த்தை இது. என் முன்னைய உயர் வகுப்பு ஆசிரியையை தற்செயலாக நான் லண்டனில் கண்ட பொழுது என் மனதில் அது மீண்டும் எதிரொலித்தது. அவர் பெயர் நகுலா, படித்தவர், பட்டம் பெற்றவர், தமிழ் ஆசிரியை. சைவ சமயத்தில் முழு ஈடுபாடுடன், ஆலய வழிபாடு முதல் விரதங்கள் வரை, ஒவ்வொன்றுக்கும் விளக்கங்கள் கொடுத்து, அவ்வற்றை அந்ததந்த முறைகளின் படி ஒழுகுவதில் அவருக்கு அவளே நிகர். நான் சமயத்தில் பெரிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் என் ஆசிரியரின் ஒழுங்கு முறை கடைப்பிடிப்பதை கண்டு ஆச்சரியப் பட்டுள்ளேன். நான் பல்கலைக்கழகம் போனபின், ஒரு முறை என் நண்பனுடன் கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா ஒன்றுக்கு சென்ற பொழுது, என் ஆசிரியரை அங்கு தம்பதியர்களாக ஒரு பெண் குழந்தையுடன், கிருஸ்தவ மத கோலத்தில் கண்டு திடுக்கிட்டேன். அதை அவரும் உணர்ந்திருக்கவேண்டும். என்றாலும் அதை சமாளித்தபடி. ' என் கணவர் பிரான்சிஸ், மத்திய கிழக்கில் வேலைசெய்கிறார்' என அறிமுகப் படுத்தினார். நான் அதன் பின் என் கொழும்பு நண்பரிடம் விசாரித்ததில், பிரான்சிஸ் என்பவர் பெரிதாகப் படிக்கவில்லை என்றும், ஆனால் வசதியான குடும்பத்தில் கொஞ்சம் துடி துடிப்பான இளைஞராக, மும்மொழியும் தாராளமாக பேசுவதால், பெண்களுடன் இலகுவில் பழகக் கூடியவர் என்றும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில், ஆசிரியைக்கும் இவருக்கும் எதிர்பாராதவிதமாக தொடர்பு வந்து, கிறிஸ்தவ முறைப்படி கல்யாணத்தில் முடிந்ததாக கேள்விப்பட்டேன். அதில் எந்த தவறும் இல்லை. தன் நிலைக்கு தக்கதாக, கணவருடன் விட்டுக்கொடுத்து வாழ்வதையிட்டு, நான் உண்மையில், என் ஆசிரியர் பற்றி பெருமை கொண்டேன்! அதன் பின் பல ஆண்டுகள் கழித்து, மீண்டும் அவரை லண்டனில் இரண்டு வளர்ந்த பிள்ளைகளுடன், ஆசைக்கு ஒரு பெண்ணும் ஆஸ்திக்கு ஒரு பிள்ளையுமாக லண்டன் ஈலிங் துர்க்கை அம்மன் இந்து ஆலயத்தில் நெற்றியில் திருநீறுடன், சந்தனப் பொட்டு பளபளக்க கண்டேன். அப்பொழுது அங்கு கணவரைக் காணவில்லை. பிரான்ஸிஸை நான் ஒரு முறைதான் கண்டாலும், அவர் இலகுவில் மனதில் பதிந்துவிட்டார். கலகலப்பாய் அன்னியோன்னியமாக அந்த கொஞ்ச நேரத்துக்குள் கதைத்தது இன்னும் நினைவில் உண்டு. அவ்வளவு விரைவாக அடுத்தவர்களை கவர்ந்து விடுகிறார். ஆகவே ஆசிரியையை கவர்ந்தது அன்று எனக்கு அதிசயமாக இருக்கவில்லை. பிள்ளைகள் இருவரும் தங்கள் மற்ற நண்பர்களுடன் ஆங்கில மொழியில் கதைத்த படி, வெளியில் ஒரு இடத்தில் போய் அமர்ந்து விட்டார்கள். ஆசிரியை இன்னும் அதே முன்னைய பார்வையிலேயே, அழகாக, அதே மற்றவர்களை கவரும் சிரிப்புடன் காணப்பட்டார். அவர் என்னை விட ஏழு, எட்டு வயது கூடவென்றாலும், தோற்றத்துக்கு அப்படி இல்லை! ஒருவேளை அவரை முன்பின் தெரியாது என்றால், நானே சிலவேளை பெண் நண்பி அழைப்பு கேட்டிருக்கலாம்? ஆசிரியை ' நீங்க பிஸியா?' என்று கேட்டார். நான் இல்லை என்றதும், 'நான் இன்று 12 மணிக்குள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி பாயாசம் வெண்பொங்கல் நைவேத்யம் படைக்க வேண்டும். இன்று வெள்ளிக்கு கிழமை தானே , அதுதான்!, கொஞ்சம் நில்லுங்கள், நான் வந்து கதைக்கிறேன்' என்று கூறிவிட்டு, ஆனால் இரு கண்களிலும் கண்ணீர் மெல்ல சுரக்க விடை பெற்று சென்றார். நான் உண்மையில் லண்டன் வந்தது இடம் சுற்றி பார்க்கவும், தமிழர்களின் வாழ்வு அங்கு எப்படி என பொதுவாக அறியவே. ஆகவே அவர் ஆலயம் சுற்றி கும்பிட்டு வரும் வரை, நான் ஆலயத்தின் முக்கிய இடங்களை படம் பிடிப்பதுடன், அங்கு வந்திருந்த சில அடியார்களுடன் கதைப்பதிலும் பொழுது போக்கினேன். அப்படி சந்தர்ப்பத்தில் நான் என்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாய் படித்த குமரநாயகம், அவரின் குடும்பம், அதே போல யாழ் மத்திய கல்லூரியில் என்னுடன் படித்த வாமதேவ அவரின் குடும்பம் இப்படி சில முன்னைய நண்பர்களையும் காணக் கூடியதாக இருந்தது. அங்கு மாலை கட்டி தொண்டுகள் செய்துகொண்டு இருந்த ஒரு அம்மாவுடன் கதைத்தபொழுது தான் எனக்கு புரிந்தது, தீர்க்க முடியாத துன்பங்கள் தீரவும் மற்றும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கவுமே இன்றைய காலை வழிபாடு முக்கியமாக கருதப் படுகிறது என்று. இது மற்றும் ஆசிரியரின் கண்ணீரும், அவர் திருமண உறவில் குழம்பி இருக்கிறார் என மேலோட்டமாக எனக்கு கூறியது! 'என்ன செய்கிறாயடா?, இப்ப எந்த நாடு?. தனியவா வந்தது ? மனைவி பிள்ளைகள்?' ஆசிரியை என்ற அதிகாரம் அப்படியே இருந்தது. அதில் மாற்றம் இல்லை. ஆனால் ... அந்தக் கண்ணீர் ? நான் ' பிரான்சிஸ் சார் எங்கே?, வரவில்லையா மேடம் ?' கதையை ஆரம்பித்தேன். அவர் கண்கள் மீண்டும் மழை பொழியத் தொடங்கியது. தன் கதையை ஒவ்வொன்றாக பிரான்ஸிஸை சந்தித்ததில் இருந்து சொல்லத் தொடங்கினார். தான் முதல் ஆசிரியர் உத்தியோகமாக யாழ் மத்திய கல்லூரியில் நகரில் ஆரம்பித்தாலும், ஓர் சில ஆண்டுகளின் பின் 4000 மாணவர்களும் 300 ஆசிரியர்களும் கொண்ட, ஒரு தேசியத் தமிழ்ப் பாடசாலையான. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றதாகவும், அப்பொழுது தான் தற்காலிகமாக இருந்த வீட்டுக்காரியுடன், சிலவேளை காலிமுக திடலுக்கு அல்லது மவுண்ட் லாவினியா [கல்கிசை] கடற்கரைக்கு போவதாகவும், அப்படியான ஒரு சந்தர்ப்பத்திலேயே பிரான்ஸிஸை சந்தித்ததாக கூறினார். 'அதைப்பற்றி இனி பேசிப் பிரயோசனம் இல்லை, உண்மையில் காதலோ காமமோ வரவில்லை. பிரான்சிஸ், எதிர்பாராத நேரத்தில் உடலை தீண்டியதால், அந்த வீட்டுக்கார அம்மா இவன் சரி இல்லாதவன் எனக் எடுத்துக்கூறியும், இவன் இனி என் கணவன் என்று - கண்ணகி. சீதை .... இப்படியான சரித்திர பாத்திரங்களை விரும்பியவள், நானும் என்னை அவர்களைப் போல் எண்ணியவள் என்பதால் - பட்டிக்காட்டாய் முடிவெடுத்தேன். இவனை, இவன் உள்ளத்தை என்னால், என் உண்மையான அன்பால், என் இளமை அழகால், கவர்ச்சியால் என்னுடனே அவன் வாழ்வு இனி தொடரத் செய்ய முடியும் என்று எண்ணினேன்' என்று கண்ணை துடைத்துக்கொண்டு கூறி ' கடுமையான சட்டங்கள் பிரான்ஸிஸால் போடப்பட்டு, கிருஸ்தவ முறைப்படி திருமணம் செய்தேன்' என்றார். 'இலங்கையில் இருக்கும் மட்டும் சிற்சில சம்பவங்களில் வேறு பெண்களுடன் பிரான்சிஸ் தொடர்பு கொண்டாலும், எல்லை மீறினாலும் இரு பக்க பெற்றோர்களின் கவனிப்பால் அது பெரிதாக குடும்ப வாழ்வை பாதிக்கவில்லை, மற்றும் அவரின் தொடர்புகள் சிங்கள, பரங்கி பெண்களாக இருந்ததால், அது, அந்த செய்திகள் எம் சமூகத்துக்குள், பரவவும் இல்லை. நானும் இந்தக் காலத்தில் இவை கொஞ்சம் சகயம் தானே என கண்டும் காணாததாகவும் இருந்துவிட்டேன்' என்று தொடர்ந்தவர், 'ஆனால் லண்டனுக்கு வந்தபின், தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில், சமயம் பரப்புவதிலும் மற்றும் பொதுவாக. ஆண்கள் வேலைக்கு போவதால், பகல் நேரத்தில் பெண்களை தேவாலயத்துக்கு ஏற்றி இறக்கும் தொண்டு வேலையும் செய்யத் தொடங்கினார். இது அவருக்கு மீண்டும் பெண்களுடனான காதல் / காமம் தொடர்புகளுக்கு வழிவகுத்தது' என்று அழுது கொண்டு சொன்னார். 'அவரை மட்டும் பிழை சொல்ல முடியாது - திருந்தாத உள்ளம் என்று எதுவும் இல்லை மாறாக திருந்தவிடாமல் அழுத்தும் அழுக்கு உள்ளங்களே அதிகம்' என்று தன் கதையை முடித்தார். 'அவர் பிரிவதும் வேறு பெண்களுடன் வாழ்க்கை நடத்துவதும், நானும் விடாமல் அவரை துரத்தி வீடு கொண்டுவருவதும் ஒரு தொடர்கதையாக போய்விட்டது' பெருமூச்சுக்கு இடையில் தொடர்ந்தார். 'நான் இதற்கிடையில், மனநிலை பாதிப்பு அடைந்து ஒரு மனநல மருத்துவமனையில் நீண்ட பல பரிசோதனைகள் செய்து, இறுதியாக அங்கு மூன்று மாதம் தங்கி சிகிச்சையும் செய்தேன். அப்பொழுது, அதை கேள்விப்பட்டு பிரான்சிஸ் என்னைப் பார்க்க அங்கு வந்தார். தான் இனி பிரியமாடேன் என்று சபதமும் செய்தார். ஆனால் பிள்ளைகளுக்கு அவரின் போக்கு அறவே பிடிக்கவில்லை. எனவே மகனுக்கும் பிரான்ஸிஸுக்கும் நடந்த வாக்கு வாதத்தில் அவர் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறினார். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிய கதைதான். யாரோ ஒரு பெண்ணுடன் குடும்ப வாழ்வு நடத்த தொடங்கினார். ஆனால் 2 வருடத்தில் பிரிந்து இருக்க இடம் இல்லாமல் அலைந்தார். அதைக் கேள்விப்பட்ட நான் திருந்துவார் என்று மீண்டும் சந்தர்ப்பம் கொடுத்து, பிள்ளைகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், என்னுடன் சேர்த்துக்கொண்டேன். எவ்வளவு நான் முட்டாள் என்பதை பின்பு தான் அறிந்தேன்' என்று ஆசிரியர் என் முகத்தை பார்க்க முடியாமல், ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமர்ந்து இருந்த அம்மனை பார்த்து சொன்னார். இதற்கு மேல் அவரின் கதையை நான் கேட்கவில்லை. "திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்? வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்? இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்! இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்! கண் போன போக்கிலே கால் போகலாமா? கால் போன போக்கிலே மனம் போகலாமா?" நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  9. "அலைபாயும் மனது நான் அல்ல" "அலைபாயும் மனது நான் அல்ல அனைத்தையும் துறந்த ஏகாந்தம் நான்! அன்பாய், கனிவாய், அக்கறையாய் வருபவரை அதிகாரம் அற்று நேசிப்பவன் நான்!" "ஆழ்ந்த அறிவு அகன்ற பார்வை ஆய்வு செய்திகள் விரும்புபவன் நான்! ஆறுதல் தேடி நட்பு நாடுபவரை ஆனந்தமாய் அணைத்து மதிப்பவன் நான்!" "அத்திவாரம் வாழ்க்கைக்கு தேவை என்று அன்றும் இன்றும் உணர்பவன் நான்! அறிவு ஒற்றுமை காணாத கூட்டத்தை அண்டி வாழாமல் புறக்கணிப்பவன் நான்!" "ஆடைகளை கழட்டுவது போடுவது போல ஆட்களை கொள்கைகளை மாற்றுபவனல்ல நான்! ஆசை ஒன்றைப் பெற்று நிறைவேற்ற ஆரத்தி எடுத்து பந்தம்பிடிப்பவனல்ல நான்!" "அனைவரும் ஒன்றே குலம் என்று அகிலம் முழுவதும் நேசிப்பவன் நான்! அனுபவம் ஆற்றல் நிறைந்த தலைவர்களை அச்சம் இன்றித் பின்தொடருபவன் நான்!" "ஆட்டமாய் ஆடினாலும் கூட்டத்தை சேர்த்தாலும் ஆத்திரமடையாமல் உண்மையை தேடுபவன் நான்!. ஆவேசம் கொண்டாலும் ஆற அமர்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பவன் நான்!" "அடுத் தடுத்து துன்பங்கள் வந்தாலும் அறிவுடன் சிந்தித்து செயலாற்றுபவன் நான்! அசிங்கம் என நினைத்து ஒதுங்காது அன்புடன் அனைவருடனும் பேசுபவன் நான்!" "ஆனந்த வாழ்வின் அர்த்தம் புரிந்து ஆறறிவு கொண்டு செயல்படுபவன் நான்! ஆழம் அறிந்து கால் பதித்து ஆபத்தை தவிர்த்து வாழ்பவன் நான்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  10. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 09 குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததா இல்லையா என்பதை பற்றிய முழு வீச்சான ஆய்வுகள் அல்லது முயற்சிகள் இன்னும் தொடங்கப்படாத நிலையில், குமரிக்கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற ஒரு கேள்வி பலரின் மனதில் எழுவது இயற்கையே? இந்த நிலையில் பண்டைய இலக்கியங்களிலும் காவியங்களிலும் கூறிய தகவல்களையும் மேலும் மதுரை ஆதீனத்தின் [ஆதினத்தின்] அதிகாரப் பூர்வமான கணினி இணையத்தில் பதியப்பட்ட தகவல்களையும் கிழே தருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் மூழ்கிப் போன குமரிக் கண்டம் பற்றிய பல முக்கிய சான்றுகள் காணப்படுகின்றன. கிழே தரப்பட்ட குறிப்புகள் 2000 - 2700 ஆண்டு பழமை வாய்ந்த முன்றாவது சங்க இலக்கியத்தில் இருந்து எடுக்கப்பட்டவையும். உதாரணமாக, புறநானுறு 9, 6 & 67, கலித்தொகை 4 & 7 மற்றும் தொல் காப்பியமும், 1900-1800 ஆண்டு பழமை வாய்ந்த சிலப்பதிகாரமும் ஆகும். "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9) சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை கூத்தர்க்கு வழங்கிய மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பலகாலம் வாழ்வானாக” என்கிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த [குமரி கண்டம் என கருதப்படும் பழந்தமிழ் நாடு] ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும். "வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்" (புறம் 6) வடக்கே பனி நிலைபெற்றிருக்கும் நெடிய மலைக்கு (இமய மலைக்கு) வடக்கிலும், தெற்கே அச்சம் பொருந்திய குமரி ஆற்றுக்குத் தெற்கிலும், கிழக்கே கரையை முட்டும் ஆழமான (தோண்டப்பட்ட) கடலுக்கு கிழக்கிலும், என்கிறது. "முகிழ்நிலா விளங்கும் மையல் மாலையாம் கையறுபு இனையக் குமரிஅம் பெருந்துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின் " [புறம் 67] முழுமதி ஒளியுடன் விளங்கி மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு, வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் சென்றாயாயின், என்கிறது. "மலிதரை யூர்ந்துதன்மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்றுமேவார் நாடிடம்படப் புலியோடு வின்னீக்கிப்புகழ்பொறிந்த கிளர்கெண்ட வலியினான் வணக்கியவாடாச்சீர்த் தென்னவன்" (கலித். 104) முற்காலத்தில் கடல்பொங்கிப் பாண்டியனின் நாட்டை விழுங்கியது. ஆனாலும் பாண்டியன் தளர்ந்து விடவில்லை. அருகிலுள்ள சேர, சோழ நாடுகளை வென்று புலிக்கொடி, வில்கொடியை நீக்கி அவைகளைப் பாண்டிய நாட்டுடன் சேர்த்துக் கொண்டான் என்கிறது. "வட வேங்கடந் தென்குமரி" [தொல்காப்பியம்] "பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி" (சிலப். 11:19-22) கடல் சினந்து எழுந்து பஃறுளி என்னும் ஆற்றையும் பல மலைகளையும் குமரிக் கோட்டையையும் மூழ்கடித்தது. அதற்குப் பின்னர் பாண்டிய மன்னன் வடதிசைக்குச் சென்று கங்கை ஆற்றையும் இமயமலையையும் வெற்றி கொண்டான் என்கிறது. ராவணனின் பேரரசு, 25 மாளிகைகளுடனும் 400000 வீதிகளுடனும், வரலாற்றின் ஒரு காலகட்டமான துவாபர யுகத்தில் [இந்து காலக் கணிப்பு முறையின் படி இதற்கு அடுத்த யுகம் தான் இப்ப நடக்கும் கலியுகம் ஆகும்] கடலில் மூழ்கியது என ராமாயணம் கூறுகிறது. சிங்களர்களைப் புகழ்வதற்காகவே எழுதப்பட்ட "மகாவம்சம்'' நூலிலும் பின்னர் "ராஜாவலிய" என்ற வரலாற்று நூலிலும் பாரிய கடற்கோள் ஒன்று ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. ஆனால் 2004 சுனாமியின் தாக்குதலின் பின், இந்த உப கண்டத்தில் இன்று எலோருக்கும் நன்றாகத் தெரியும் சிலப்பதிகாரம் , கலித்தொகை, ராமாயணம், மகாவம்சம் ஆகியவற்றில் கூறிய 'கடற்கோள். என்றால், எப்படி இருந்து இருக்கும் என்று என நம்புகிறேன். நாம் மேலே சுட்டிக்காட்டியவாறு, பண்டைத்தமிழ் இலக்கியம், ஆகக் குறைந்தது 14 இடங்களில், கடலில் மூழ்கிய ஒரு நிலப்பரப்பு பற்றி எடுத்து காட்டுகிறது. அது மாட்டு அல்ல, எல்லாம் ஒரே கருத்தையே முன் வைக்கிறது. அதாவது பாண்டிய அரசனால் ஆளப்பட்ட இந்த பண்டைய தமிழ் நாகரிகம், ஒரு பெரும் சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால் அல்லது கடல்கோளால் அழிவிற்குட்பட்டது என்பதேயாகும். இது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கட்டுக் கதையாகவும் இருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், நிலத்தையும் கடலையும் தொடர்பு படுத்தி ஏதாவது ஒரு சம்பவம் பண்டைய காலத்தில் நடைபெற்று இருக்க வேண்டும். அதுவே பிற் காலத்தில் அவர்களை பல இடங்களில் பலரால் எழுத தூண்டி இருக்கலாம். இந்த சம்பவம் தலை முறை, தலை முறையாக கடந்து வந்து இருக்கலாம். அப்படி வரும் போது அந்த கதையே மாற்றம் அடைந்து இப்ப சங்க இலக்கியங்களில் கூறப்படும் வடிவத்தை அடைந்து இருக்கலாம், அல்லது இது இப்ப கூறப்படுவது போல உண்மையாகவே நடந்து இருக்கலாம். அது மட்டும் அல்ல, இது மாதிரியான கதைகள் வேறு இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது. உதாரணமாக இலங்கையில் மகாவம்சம், இந்தியாவில் இராமாயணம், சுமேரியாவில் கில்கமெஷ் காவியம் போன்றவையாகும். இதில் நாம் கவனிக்க வேண்டியது இவை அனைத்தும் பண்டைய தமிழர்களுடனோ அல்லது அவர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடங்களுடனோ தொடர்புடையது என்பதே ஆகும். ஆகவே நாம் இலகுவாக ஊகிக்க முடியும் அவர்கள் இந்த வெள்ளம் சம்பந்தமான கதையை அங்கு வாழ்ந்த அல்லது அங்கு குடியேறிய தமிழர்களான தமது மூதாதையர்களிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பதாகும். இவை எல்லாம் சுட்டி காட்டுவது ஒரு நிலப்பரப்பு முன்பு ஒரு காலம் கடலில் மூழ்கியது என்பதாகும். அது குமரி நாடு போல் ஒரு பெரும் கண்டமாக இருக்கலாம் அல்லது கரையோர கிராமமான ஒரு சிறு நிலப்பரப்பாக கூட இருக்கலாம் ? இவைகளை உறுதிப்படுத்த எம்மிடம் இன்னும் போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. இது வரை, குமரி கண்டத்தை பற்றிய ஏதாவது நேரடியான தகவல்கள் இலக்கியம் மற்றும் இதிகாசங்களில் உள்ளனவா என்று பார்த்தோம். ஆனால், மகாவம்சத்தையும் மற்றும் 'Daily News 2020/08/10 › features › இல் We were here before the arrival of Vijaya' என்ற கட்டுரையையும் பார்த்தபின், ஏன் நாமும் மறைமுகமாக அவை மேலும் எதாவது கூடுதலாக சொல்கின்றனவா என தேடக் கூடாது என்று யோசிக்கிறேன் உதாரணமாக, மகாவம்சத்தில், விஜயன் இலங்கைக்கு வரும் பொழுது, அங்கு ஏற்கனவே நான்கு முக்கிய இனம் அல்லது குலம் [clan] வாழ்ந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இவர்கள் இயக்கர், நாகர், தேவர் மற்றும் அரக்கர் [Yaksha (Yakku), Naga, Deva, and Raksha (Rakus)] ஆகும். இது அவர்களின் தொழிலை குறித்து காட்ட ஒரு உருவகமாகக் [metaphorically] கூறப்படுகிறது எனலாம். உதாரணமாக, இயக்கர்கள் இரும்பை உருக்கி வார்பவர்களாகவும் [mould iron], நாகர்கள் வர்த்தகர்களாகவும் [traders], தேவ[ர்] மக்கள் ஆட்சியாளர்களாகவும் [rulers], அரக்கர்கள் விவசாயிகளாகவும் [ farmers] நம்பப்படுகிறது. [Yakshas can be believed lived on mountains where they had used monsoon wind to mould iron, because a derivative from the word yakka is yakaḍayā / යකඩයා means the iron. Rakshas (Sanskrit: राक्षस, rākṣasa: Pali: rakkhaso) were supposed to be farmers who used the steel products of the Yaksha people in their farming endeavours (the name Raksha is derived from the two syllables ra+kus. In Sinhala, kus means stomach [කුස් - Stomach];] மகாவம்சத்தில் கூறப்படும் இயக்கர் [Yakkhas] தான் இன்றைய வேடர்களின் [Veddas] மூதாதையர்கள் ஆவார்கள். ஆகவே, ஒரு நாகரிக சமுதாயத்திற்கு வேண்டிய அமைப்பை காண்கிறோம். இயக்கர்கள் தொழிற்சாலைகளை இயக்குவதையும், அங்கு உற்பத்தி செய்யப்படும் கருவிகள் அரக்கர்களின் விவசாயத்திற்கு ஊக்கமளித்து உதவுவதையும், இரண்டிலும் உற்பத்தியாகும் பொருட்களை நாகர்கள் வர்த்தகம் செய்வதையும், இவை எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு படுத்தி, ஒரு கட்டுப்பாட்டுடன் தேவர்கள் ஆட்சி செய்வதையும், விஜயன் இலங்கைக்கு வரும் முன்பே இலங்கை மண்ணில் காண்கிறோம். மேலும் Veddas என்ற ஆங்கில, சிங்கள சொல்லின் மூலம் தமிழ் 'வேடர்' ஆகும். ஆரியர்களுக்கு முற்பட்ட ‘hunters’ ஐ குறிப்பிட இங்கு தமிழ் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, கட்டாயம் இது ஒரு வரலாற்றை மறைமுகமாக எடுத்து கூறுகிறது என்றே எண்ணுகிறேன். இயக்கர்கள் உண்மையில் ஒரு மனித இனமே, ஏன் என்றால், விஜயன் குவேனியின் தலைமுடியை பிடித்து இழுத்து, அவளைக் கொலை செய்வதாக அச்சுறுத்தி, வாளை உயர்த்தியபோது, அவள் பயந்துபோய் தன் உயிருக்காக கெஞ்சியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பயம் என்பது, மனிதரல்லாத, இயற்கைக்கு அப்பாற்பட்ட குணங்கள் கொண்டதாக கருதப்படும் இயக்கர்களின் பண்பு அல்ல என்பது அனைவரும் அறிந்ததே, அது மட்டும் அல்ல, குவேனியை யக்கினி [Yakkhini] என்று அழைக்கப்படுவது உண்மையெனில், அதாவது அவள் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவி என்றால், அவள் விஜயனின் பிடியில் இருந்து இலகுவாக வெளியேறியிருக்க முடியும்?, ஆனால் அவளால் முடியவில்லை, பயந்து கெஞ்சுகிறாள். மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் நாடு கடத்தப் பட்டு இலங்கைக்கு வந்து இறங்கும் பொழுது, அவன் முதல் குவேனி துணி நூற்பதைக் காண்கிறான். பட்டினப் பாலையின் "துணைப் புணர்ந்த மடமங்கையர், பட்டு நீக்கித் துகில் உடுத்து ,... " என்ற வரியில் நாம் காணும் நாகரிக மங்கை போல் குவேனியும் தன் அழகிய உடலுக்கு அணிந்து கொள்ள, உடை ஒன்றை பின்னுவதற்க்காக, நூற்பதை காட்டுகிறது. இது அன்று ஒரு முன்னேறிய நாகரிகம் இருந்தது என்பதை கட்டாயம் காட்டுகிறது. இவைகள் எல்லாம் இயக்கர்களும் மனிதர்கள் தான் என்பதை மெய்ப்பிக்கிறது ! மேலும் ஒரு உதாரணமாக நாகர்கள் யார் என்று கொஞ்சம் ஆழமாக பார்ப்போமானால், கார்த்திகேசு இந்திரபாலா (Karthigesu Indrapala, பிறப்பு: 22 அக்டோபர் 1938) போன்ற அறிஞர்கள் அவர்களைப் பழங்கால பழங்குடியினராகக் கருத்துவதுடன், அவர்கள் கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியுடன் இணைந்தனர் என்கிறார். வி.கனகசபையின் கூற்றுப்படி, தென்னிந்தியாவிலும் வடகிழக்கு இலங்கையிலும் பரவியிருந்த ஒலியர், பரதவர், மறவர், பறையர் மற்றும் எயினார் [The Oliyar, Parathavar, Maravar, Paraiyar and Eyinar ] ஆகியோர் நாகர் பழங்குடியினர் ஆவார்கள். பல ஆசிரியர்களின் கூற்றுப்படி அவர்கள் திராவிட பழங்குடியினராக இருக்கலாம் என்கிறது. சங்க இலக்கியங்களுக்குப் பங்களித்த பல தமிழ்ப் புலவர்கள் தங்கள் நாக வம்சாவளியைக் குறிக்க நாகா முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் தங்கள் பெயர்களுடன் இணைத்தனர் என்பது வரலாறு. உதாரணம்: மருதன் இளநாகனார், முரஞ்சியூர் முடிநாகனார், முப்பேர் நாகனார் .... நாகர்கள் என்பவர்கள் தென்னிந்திய வம்சாவளியினரை சேர்ந்த பாம்புவை வணங்கும் மக்களாகும் என்றும் எச். பார்க்கர், [H. Parker] பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும், "பண்டைய சிலோன்" [“Ancient Ceylon”] ஆசிரியருமான இவர், நாகர்களை கேரளாவின் நாயர்களின் கிளையினராகக் கருதுகிறார். இவை எல்லாம் காட்டுவது, விஜயன் என்ற புராண தலைவன் இலங்கைக்கு நாடு கடத்தப்பட முன் அங்கு தமிழர்களும் பூர்விக குடிகளாக வாழ்ந்தனர் என்பதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 10 தொடரும்
  11. "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 18 5] இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் [Pleasure Uber Alles Culture / pleasure is above all Culture] தொடர்கிறது இன்பம் என்றால் என்ன ? உண்மையில் இன்பம் என்பது நம் இயல்பே ஆகும். உதாரணமாக சர்க்கரை இனிப்பானது என்றாலும், அதன் இனிப்பை ஒருவன் நுகர ஆயத்தமாக உள்ள அளவே, அது ஆனந்தம் தருகிறது. எனவே இன்பதுன்ப நுகர்ச்சிக்கு மனப்பான்மையே பொதுவாக காரணமாகிறது. பொதுவாக எல்லா உயிர்களும் சுவையான பண்டங்களைப் புசித்து வாழ்வதுதான் இயல்பு. அப்பொருளில் உள்ள சுவையை ரசித்து உண்ணும் பொழுது ஆனந்தம் அடைவதையே இன்பம் என்கிறோம். இப்படி சுவைத்துப் பழகியவர்களுக்கு அது கிடைகாகாத பொழுது துன்பம் என்கிற உணர்வு ஏற்படுகின்றது. எனவே இந்த இன்ப துன்ப நுகர்வுகளில் இருந்து ஒருவன் விடுபட வேண்டும் அல்லது அதை கட்டுப்படுத்த வேண்டும் என்றால், பொறிவாயில் ஐந்தையும் கையாளவும் கட்டுப்படுத்தவும் பழக வேண்டும். சுவை என்கிற பொழுது நாவடக்கம் என்கிற புலனடக்கம் தேவைப்படுகிறது. இப்படி ஒவ்வொரு புலன்கள் மூலம் நுகரும் இன்ப நுகர்வுகளைப் பழக்கப்படுத்திக் கொண்டு, அதற்கு அடிமையாகி விடுவதைத் தவிர்ப்பதற்கே புலனடக்கம் தேவைப்படுகிறது. இயல்பாய் ஒருவரை இரு என்றால், அது புலனடக்கம் என்பதையும் சேர்த்தே குறிக்கிறது. புலன் இச்சை வழி சென்று, அளவு முறையின்றி, இயங்குவது உங்கள் இயல்பல்ல. அதை நீங்கள் புரிய வேண்டும் . பொதுவாக தன் மனதை வென்றுவன் உலகையே வென்றவனாவான் என்பது கோட்பாடு. இச்சை அல்லது ஆசை என்பது ஒரு பொருளை அடைவதற்கான அல்லது ஒரு உணர்வைத் தீர்ப்பதற்கான, ஆழ்ந்த ஆர்வத்தை அல்லது ஏக்கத்தை உருவாக்குகின்ற ஒரு உளவியல் சக்தியாகும். [Lust is a psychological force producing intense wanting or longing for an object, or circumstance fulfilling the emotion]. இச்சை என்பது பாலியல், போதை, பணம் அல்லது சக்தி போன்ற எந்த வடிவத்தையும் எடுக்க முடியும். சாதாரணமாக உணவின் மீதான இச்சை என்பது தேவைக்கான உணவைத் தேடுவதிலிருந்து வேறுபட்டதாகும். உதாரணமாக தொல்காப்பியத்தில் இன்பவியல் கோட்பாட்டில், 'தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணா னுலகு' [காமத்துப்பால், 1103] என்ற பாடல் “தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் தூக்கத்திற்குத் தாமரைக்கண்ணனான திருமாலின் உலகம் ஈடாகுமா?” எனக் கடவுளின் உலகத்தை விட காதலியின் மெல்லிய தோள்களில் தூங்கும் இன்பம் உயர்ந்தது என கூறுகிறது. இங்கு ஒரு அன்புக்கான ஒரு துணையின் தேடுதலை காண்கிறோம், இது கட்டாயம் "தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன், தெருவில் பெண்களுக்கு ஓயாத தொல்லை" என்றும் "பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து மன்மதன் போல் லீலை செய்தான் தாலேலோ" என்பதில் இருந்தும் வேறுபட்டது. வாழ்வது ஒரு முறை வாழுங்கள் கவர்ச்சியாய் என்று சிலவேளை விளம்பரங்களை, குறிப்பாக ஆடை விளம்பரங்களைக் காண்கிறோம். அதே போலத்தான் இதுவும், வாழ்வது ஒருமுறை , எனவே எமக்கு பிடித்ததில் விடாமல் தொடர்ந்து இன்பமாக களிப்போம் என்கிறது. ஆனால் அதனால் வரும் கேடுகளை அது கவனிப்பதில்லை. ஐந்து புலன்கள் வழியாகப் பெறும் இன்பங்களில் மயங்கி, மூழ்கி அறிவு துன்பத்துக்குள்ளாகின்றது. புலன்கள் இருப்பதே இன்பத்தை அனுபவிக்கும் கருவிகள் தானே என ஐயம் எழலாம். புறப்பொருட்களிலோ அல்லது புறநிகழ்ச்சிகளிலோ இருந்து வரும் இன்பத்தை அனுபவிக்கத்தான் புலன்கள் உள்ளன என்பதில் ஐயமில்லை. ஆனால் புலன்கள் வழியாக அனுபவிக்கும் இன்பம் அளவு மீறும்போதும், முறை மாறும் போதும் அவை துன்பத்தில் முடிவடைகின்றன. அதனைக் கவனியாமல், அதில் பழக்கமாகி, ஒரு காலகட்டத்தில் புலன்களுக்கு அடிமையாகி விடுகிறான் மனிதன். எனவே அளவு மீறியும் முறை மாறியும் புலன் இன்பம் துய்க்கும் மனிதனை புலன் மயக்கத்தில் இருக்கிறான் என்கின்றனர் பொதுவாக. மேலும் ஏன் அவர்கள் இந்த நிலைக்கு வந்தார்கள் என்பதற்கான சரியான காரணத்தை அல்லது விளக்கத்தை கொடுத்து, அதற்கான பயிற்சிகளை கொடுத்தாலும், அவர்கள் தமது பழையப் பழக்கத்திலிருந்து விடுபட கடுமையான தளரா விடாமுயற்சி (பிரம்ம பிரயத்தனம்) செய்ய வேண்டியிருக்கும். அதில் எல்லோராலும் வெற்றி பெறவும் முடிவதில்லை. இது தான் இன்று கவலைக்குரிய விடயமாகும். எனினும் நேரத்துடன் இவையை உணர்ந்து செயல் பட்டால், அவை சாத்தியமாகும். கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவரான எபிகியூரசு [Epicurus /341 கிமு – 270 கிமு], "சாப்பிடுகையில், மிகுதியாக ஒருவர் சாப்பிடக்கூடாது, ஏனென்றால் அது பின்னர் அதிருப்திக்கு வழிவகுக்கும், இதனால் அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற சுவையான உணவை வாங்க விருப்பம் இல்லாத ஒரு கடுமையான உணர்வை பெறுகிறார்" என்று வாதிடுகிறார். எனவே அவர் "புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் நியாயமானதாகவும் வாழாமல், ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழ முடியாது, அதேபோல, ஒருவர் ஒரு இனிமையான வாழ்க்கையை வாழாமல், அவர் புத்திசாலித்தனமாகவும் நேர்மையாகவும் நியாயமானதாகவும் வாழமுடியாது" [“It is impossible to live a pleasant life without living wisely, honorably, and justly, and it is impossible to live wisely, honorably and justly without living pleasantly.”] என்று ஆணித்தரமாக சொல்லுகிறார். அவரை அடிக்கடி இன்பவுணர்ச்சி அனுபவிப்போன் அல்லது சுகக்காரன் அல்லது ஸுகி [hedonist] என்று குற்றஞ்சாட்டினாலும், இது உண்மையில் அப்படி இல்லை என்பதைக் காட்டுகிறது. இவ்வுலகில் தோன்றிய உயிரினங்கள் யாவற்றிற்கும் இன்பம் தோன்றுவது இயற்கையே எனினும் அது மனம் பொருந்தியவழி மட்டும் இன்பமுள தாகும் என 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியரும் “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும்.”[தொல்.பொருளதிகாரம்-219] என கூறுகிறார். இந்தியாவில் கி மு 600 இல் தோன்றிய சாவகம் [Charvaka / சார்வாகம்] என அழைக்கப்படும் உலகாயதம், வாழ்வில் வீடு காண்பதை விட இன்பத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இதை தாழ்மையுறச் செய்ய, மகாபாரதத்தில் தீயவன் ஒருவனுக்கு சார்வாகன் எனப் பெயரிடப்பட்டது என சில அறிஞர் கூறுவார். இன்பம் எல்லாவற்றிற்கும் மேல் என கருதும் கலாச்சாரம் இன்று நேற்று தோன்றியது அல்ல, உதாரணமாக, கி.பி. 37லிருந்து கி.பி. 41 வரை ரோமப் பேரரசராக இருந்த, மிகப் பெரிய சுக போஜன சிற்றின்பப்பிரியரான காலிகுலா [Caligula] ஒரு பித்துப்பிடித்த அரசராக வரலாறு சித்தரிப்பதுடன், கி.பி.41 இல் இவரது மெய்க்காவல் படை, அமைச்சர்கள் மற்றும் அரசவையினர் சேர்ந்து செய்த கூட்டுச்சதியில் இவர் தனது 29 ஆவது வயதில் படுகொலை செய்யப்பட்டார். அதே போல இன்றைய நவீன உலகில், எர்ரோல் பிளின் [Errol Flynn] என்ற ஒரு ஹாலிவுட் நட்சத்திர நடிகர், அவருடைய "அனைத்தையும் முயற்சி செய்" தத்துவம் அவரை ஹெராயின் மற்றும் கோகோயின் [heroin and cocaine] உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாக்கி, அவரை 50 வயதில் இவ்வுலகத்தை விட்டு மறையச் செய்துவிட்டது. அவரின் வாழ்வு மகிழ்ச்சியின் போலித்தனத்தை எடுத்துரைக்கிறது. எல்விஸ் பிரெஸ்லி, மைக்கேல் ஜாக்சன், விட்னி ஹூஸ்டன் [Elvis Presley, Michael Jackson, Whitney Houston] மற்றும் பல பிரபலங்கள் இப்படித்தான் வாழ்வை முடித்தார்கள். தற்போதைய நேரத்தில் ஒரு "நல்ல இன்ப நேரம்" முழுக்க முழுக்க இருக்க வேண்டும் என்று அனுபவிப்பது உண்மையில் நல்வாழ்வின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று உளவியலாளர்கள் இன்று நிறுவியுள்ளனர். ஒருவர் தனக்கு வேண்டிய மகிழ்ச்சியை, முழுக்க முழுக்க இன்பவியல் [Hedonism] மூலம் மட்டுமே கண்டு எடுக்க முயல்வது, ஒரு நீண்ட காலத்திற்கு நின்று பிடிக்காது, அது உங்களை ஒரு அர்த்தமற்ற தன்மைக்கும். வெறுமைக்கும் [sense of meaninglessness and emptiness] இட்டு செல்ல வழிவகுக்கிறது எனலாம். மறுதலையாக, வாழ்வில் முழு ஈடுபாடும், பொது நலப்பண்பும் மற்றும் சுய-வளர்ச்சியும் இருப்பின், அல்லது அவையின் அடிப்படையில் அமைத்தால், கவனமாக பயிரிடப்பட்ட ஒரு தோட்டம், எப்படி வளமான மற்றும் ஏராளமானதாக மாறுமோ அப்படியே இதுவும் வாழ்விற்கு உயர்ந்த கருத்தை, மகிழ்வை கொடுத்து நிறைவேற்றுகிறது எனலாம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 19 தொடரும்
  12. எல்லோருக்கும் நன்றிகள்
  13. "துரோகம்...!" துரோகம் என்றால் என்ன ? கூடவே இருந்து குழி பறித்தல் அல்லது நம்பிக்கை கொடுத்து ஏமாற்றுதல். அதே நேரம் வாழ்க்கை, காதல் இரண்டும் ரோசாக்களின் படுக்கை அல்ல! இது அவளுக்கு எனோ புரியவில்லை. அவள் தன் காதலனை அந்த ஆற்றங்கரை ஓரத்தில் இன்னும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக காணுவாள் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டாள். அவள் ஒன்றாக கூடி வாழ்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. என்றுமே அவள் ஐயப்படும் மாதிரி அவன் நடந்ததும் இல்லை! என்றாலும் அவன், அவளுடன் கணவன் மனைவி உறவுடனே, காதல், காமம் இரண்டிலும் நெருக்கமாக அனுபவித்தே வாழ்ந்தான். அவளும் அவன் மேல் உள்ள நம்பிக்கையில், அவனின் விருப்பங்களுக்கு விட்டுக் கொடுத்தே தினம் தினம் வாழ்ந்தாள். ஒரு கட்டத்தில் பாடசாலையை கூட விட்டு விட்டு முழுநேர காதலியாகவே, திருமணம் செய்யா மனைவியாகவே, வாழத் தொடங்கினாள். ஒரு இரு சந்தர்ப்பங்களில், அவர்களின் பாதுகாப்பை மீறி கருவுற்றாலும், அவனின் வேண்டுதலின் படி அதை அவள் விருப்பம் இல்லாமலே கவலையுடன் கலைத்து விட்டாள். என்றாலும் அவனோ அவளின் தொடர் வேண்டுகோளான திருமணத்தை, அன்று இருந்த போர் சூழலில், தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தான். தான் பெரிய ஆடம்பரமாக செய்யவேண்டும், மற்றும் தன் பெற்றோரிடம் நேரம் பார்த்து சொல்ல வேண்டும் இப்படி அப்படி அவளுக்கும், அவளின் பெற்றோருக்கும் காரணங்கள் சொல்லிக் கடத்திக் கொண்டும், அதே நேரம் அவர்களுக்கு நல்ல நம்பிக்கை வரக்கூடியதாக பழகிக் கொண்டும் இருந்தான். அது தான் அவளால் இன்னும் நம்பமுடியாமல் திகைத்து நின்றாள்! அவள் பதினோராம் வகுப்பில் படிக்கும் பொழுது தான் தன் காதலனை முதல் முதல் சந்தித்தாள். அவன் பட்டம் பெற்று தனது முதல் உத்தியோகமாக அந்த பாடசாலைக்கு ஆசிரியராக வந்திருந்தான். அவனின் முதல் பாடம் அவளுடன் தான் ஆரம்பித்தது. அவள் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தாள். அதனாலோ என்னவோ அவளே முதல் முதல் 'காலை வணக்கம் சார்' சொன்னது இன்னும் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. அவனின் கண்கள் ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டது! அவள் அப்படி ஒரு அழகு! பெயர் கூட ரோசா தான்!! பாடசாலை விட்டவுடன் தன் வீட்டிற்கு அவள் பொதுவாக நடந்தே போவாள். அவளின் அப்பா, அம்மா ஒரு சாதாரண நாள் கூலி வேலையே பார்த்து வந்தனர். அன்றும் அப்படியே நடந்து போனாள். அவள் பாடசாலையில் இருந்து கொஞ்ச தூரம் போய், ஒரு ஒழுங்கையில் திரும்பி நடக்கும் பொழுது ஒரு மோட்டார் சைக்கிளின் சத்தம் பின்னால் கேட்பதை உணர்ந்து கொஞ்சம் தள்ளி ஒழுங்கையின் கரைக்கு போனாள். ஆனால் அது அவளை கடந்து போகாமல், மெதுவாகி அவளுக்கு அருகில் நின்றது. 'ஹாய் ரோசா, உன் வீடு இந்தப் பக்கமா?' கதையை ஆரம்பித்தான் அவன். 'நானும் இந்தப்பக்கம் தான் போகிறேன், வீட்டை காட்டினால், உன்னை இறக்கிவிட்டு போகிறேன்' அவன் மீண்டும் கதையை ஆரம்பித்தான். ஆசிரியர் என்ற மதிப்பும், அதேவேளை கொஞ்சம் பயமும் அவளிடம் இருந்தது. 'வேண்டாம் சார், நான் தினம் நடப்பது போலவே நடந்து போய் விடுவேன்' அவள் அவனிடம் கூறி விட்டு கொஞ்சம் கெதியாக நடக்கத் தொடங்கினாள். பொல்லாத காலத்துக்கு மழையும் திடீரென தூவ தொடங்கி விட்டது.'எவ்வளவு தூரம் உன் வீடு?' அவன் மீண்டும் கேட்டான்.' ம்ம் இரண்டு மைல் சார்' அவள் கொஞ்சம் நனைந்தபடி கூறினாள். அவன் தன்னிடம் இருந்த கூடுதல் ஹெல்மெட்டை அவளிடம் கொடுத்து 'இதை போடு ரோசா, மழை பெருத்தாலும் பெருக்கும், பின்னால் ஏறு. இல்லா விட்டால் முழுக்க நனைந்துதான் வீடுபோவாய்' கொஞ்சம் உருக்கமாக சொன்னான். அவளும் மழை கூடத் தொடங்குவதை கண்டு, மோட்டார் சைக்கிளில் ஏறினாள். இது ஒரு கிராமப்புற ஒழுங்கை வீதி என்பதால் பள்ளங்கள் அங்கொன்று இங்கொன்றாக இருந்தன. எனவே மோட்டார் சைக்கிளும் அதில் ஏறி இறங்கி குலுங்கித் தான் சென்றது. இன்னும் ஒரு பக்கம் மின்னலும் இடிமுழக்கமும். ரோசாவின் கை தன்னை அறியாமலே, தன் பாதுகாப்புக்கு அவனின் இடையை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அவளின் மார்பும் அவனின் முதுகோடு முட்டி மோதிக் கொண்டு இருந்தன. இருவரின் மனமும் பல காதல் உணர்வுகளை தங்களுக்குள் தேடிக்கொண்டும் ஆனால் மௌனமாக இருந்தன. அவளின் வீடு வந்ததும், அவளை அவன் இறக்கி விட்டான். இருவரும் அதற்கிடையில் ஓரளவு நனைத்து விட்டார்கள். ஆகவே, ரோசா அவனை பார்த்து ' சார், நீங்க உள்ளே வந்து ஈரத்தை துடைத்துவிட்டு போங்க, நல்ல நனைந்து விட்டீர்கள்' என்று கூப்பிட்டாள். அவனும் அப்படியே உள்ளே போனான். அன்று ஆரம்பித்த இருவருக்கும் இடையிலான நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாக வளரத் தொடங்கி, அது அவர்களின் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அளவுக்கு போய்விட்டது. அவளுக்கு அவனிடம் நல்ல நம்பிக்கை மேலோங்க, மற்றும், தாயும் தந்தையும் நாள் கூலிக்கு வேலை செய்வதால், அவர்கள் வீடு பொதுவாக பிந்திவருவதால், அவன் அவளை இறக்கிவிடுவதுடன், அவளுடன் அவள் வீட்டில் தனிய கொஞ்ச நேரம் பேசி பொழுது போக்கவும் தொடங்கிவிட்டான். அதுமட்டும் அல்ல, அவன் அவளுக்கு நிறைய நம்பிக்கை வரக்கூடியதாக பேசிப் பழகவும் தொடங்கினான். எனவே அவள் எந்த வித பயமோ அல்லது ஐயப்பாடோ இல்லாமல், அவன் நெருங்கி பழக அனுமதித்தாள். ஏன் அவளும் உண்மையில் அவனை இதயபூர்வமாக காதலிக்க தொடங்கினாள். அவளின் குடிசை ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்ததால், அது அவளின் பெற்றோருக்கும் ஆரம்பத்தில் தெரியவும் இல்லை. ஆனால், ஒரு ஆண்டு போக அவள் ஒரு குழந்தைக்கு கருவுற்றாள். அவள் மிகவும் மகிழ்வாக அந்த செய்தியை அவனிடம் கூறியதுடன், இனி பெற்றோரிடமும் சொல்லவேண்டும் என்றும், அவன் ஊர் அறிய தாலி கட்ட வேண்டும் என்றும் கெஞ்சி கொஞ்சி ஆலோசனையும் வழங்கினாள். ஆனால் அவனோ அதைக் கலைக்க அவளை தனியார் டாக்டர் இடம் கூட்டிப்போக முடிவு எடுத்தான். என்றாலும் அவன் அவளின் பெற்றோரை சந்தித்து, தான் கட்டாயம் அவளைத்தான் திருமணம் செய்வேன் என் உறுதி அளித்ததுடன், அவளை பாடசாலையில் இருந்து உடனடியாக விலக அறிவுறுத்தினான். அவளும் பெற்றோரும் அவனின் வார்த்தையை முற்றாக நம்பினர். அவன் அப்படித்தான் நன்றாக, பண்பாக அவர்களுடனும் அவளுடனும் பழகினான். அது மட்டும் அல்ல, அவளின் பெற்றோர் பெரிய படிப்பு படித்தவர்களும் அல்ல, ஒரு சாதாரண ஏழைக் கூலி வேலை செய்யும் குடும்பமே. அது அவனுக்கு வசதியாகவும் இருந்தது! அவளுக்கும் பெற்றோருக்கும் விருப்பம் இல்லாவிட்டாலும், அவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவள் கருவை கலைத்தாள். அவன் இப்ப வெளிப்படையாகவே பெற்றோர் அறிய வந்து போவான். சிலவேளை அங்கேயே தங்குவான். அவர்களும் அவனை கணவனாக, மருமகனாகவே பழக தொடங்கினர், அவனும் மனைவியாக, மாமா மாமியாக பழகினான். அவன் இன்னும் தாலி கட்டவில்லை என்றாலும், தனிக்குடித்தனம் போகவில்லை என்றாலும், அவன் அவளை தன்னுடையவள் என்பது போலவே அன்பாக நடத்தினான். இருவரும் நெருக்கமாக கணவன் மனைவியாகவே தினம் அனுபவித்து வாழ்ந்ததுடன், அவள் அவன் மேல் உள்ள நேர்மையான அன்பு, பாசம், நம்பிக்கையால், தன் குடிசையில் பெரிய வசதி இல்லாவிட்டாலும், அவனுடன் சமாளித்து அங்கு வாழ்ந்தாள். அவனுடன் ஒரு தனி வீட்டில் வாழ, அவள் விரும்பினாலும், அதற்கு பெற்றோரின் முன் தாலி கட்டிய பின்பே செய்யலாம், இல்லாவிட்டால் பெற்றோரின் சம்மதம் கஷ்டம் என்று ஏதேதோ கூறி சமாளித்துவிடுவான். அப்படி என்றால் ஏன் கணவன் மனைவி போல் உறவு வைக்கிறாய், பெற்றோரின் அனுமதி இன்றி எனக் கேட்க அவளுக்கு துணிவு வரவில்லை. அது தான் அவளின் காதலின், நம்பிக்கையின் பலவீனமாக இருந்தது! அவள் என்றுமே அவன் தன்னை விட, இன்னும் ஒரு பெண்ணை காதலிப்பன் என்றோ அல்லது தனக்கு புறம்பான வேறு ஒரு உறவு வைத்திருப்பான் என்றோ கனவிலும் நம்பவில்லை. அவன் மிக தந்திரமாக, மற்ற பெண்கள் எல்லாம் தனக்கு சகோதரிகள் மாதிரி என்று சந்தர்ப்பங்கள் வரும் பொழுது கூறிவிடுவான். அது மட்டும் அல்ல, வேறு ஆண்களுடன் அல்லது மற்ற பெண்களின் கணவருடன் உறவு கொள்ளும் பெண்களை கண்டாலே தனக்கு அருவருப்பு என்று கதைகூட விடுவான். பாவம் அவள் எல்லாம் நம்பிவிடுவாள்! 'எனக்கு என் மனைவியே முக்கியம் , அவளின் வாழ்வே என் வாழ்வு, மற்றவர்கள் எனக்கு முக்கியம் அல்ல, நீயே என் மகாராணி!' அவன் அடிக்கடி கூறும் வசனம் இது! அவள் திகைத்தபடி அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே அந்த ஆற்றங் கரை ஓரத்தில் நின்றாள். அவனின் புதிய நண்பி மிக நேர்த்தியான உடையுடன், வசதியான குடும்பத்தில் வாழ்பவள் போல் தெரிந்தது. அவள் ரோசாவை ஒரு நையாண்டியாக பார்த்தாள். 'நீங்க இவளை சட்டப்படி கல்யாணம் செய்யவில்லை தானே ? உங்களின் அறிவையும் வசதியையும் பார்த்து, தன் பெற்றோருடன் சேர்ந்து உங்களை ஏமாற்றி இருப்பாள் ?' அவனைப் பார்த்து கேட்டாள். அவன் தன் புது நண்பியின் கூந்தலை வருடியபடி, 'ம்ம் ஆமாம், நானும் கொஞ்சம் ஏமாந்து விட்டேன். அவள் அந்த முதல் நாள் ஈரம் துடைக்க குடிசைக்குள் கூப்பிடும் பொழுது, அவளை நல்ல ஒரு மாணவியாக நினைத்தே, அவளின் வேண்டுகோளை ஆமோதித்து உள்ளே போனேன்!' என்று கூறி புது நண்பியிடம் 'சொரியடா' என்றான். அவன் ரோசாவை பார்த்தான். 'இவளின் [ரோசாவின்] உள்நோக்கம் அப்ப எனக்குப் புரியவில்லை. துவாயை தந்துவிட்டு போய் இருக்கலாம். அதை விட்டு என் உடலை தானே இழுத்து துடைத்ததுடன், தன் உடலை, அதே துவாயால் என்னை துடைக்கும் படி கெஞ்சியும் கேட்டாள். அந்த பெண்மை அழகு என்னை அறியாமலே உணர்வைத் தூண்டி அவளுடன் இணைத்துவிட்டது' அவன் முற்றிலும் எதிர்மாறான பொய் ஒன்றை கட்டவிழ்த்து விட்டான். அவன் இந்த நிமிடம் வரை ஏமாற்றி ஆடிய நாடகம், நடிப்பு அவளால் இன்னும் நம்பவே முடியவில்லை. இப்படி ஒரு மனிதனா? அவளை அறியாமலே கண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. 'வாங்க என் அம்மா, அப்பா என் பிறந்த நாள் கொண்டாட பார்த்துக் கொண்டு இருக்கினம், இம் முறை உங்களையும் எல்லோருக்கும் அறிமுகப் படுத்தி பெரிதாக செய்யப் போகிறார்கள், உங்க அம்மா, அப்பாவையும் அழைத்துள்ளார்கள், இவளுக்கு காசு கொடுத்தால் பேசாமல் போகிறாள், இதுகள் எல்லாம் ஏன் தான் பிறந்ததுகளோ? ' என அவன் கையை உரிமையுடன் பிடித்து தனக்கு நெருக்கமாக அவனை இழுத்தாள்! 'இது பழைய பிற்போக்கு காலம் அல்ல, நம்பினேன், காதலித்தேன் என ஒருவனை அறியாமல் கல்யாணத்தின் முன் தன்னைக் கொடுக்க, இளம் வயதில் பெண் நண்பி, ஆண் நண்பன் இன்று சகயம். இதில் துரோகம் என்று ஒன்றும் இல்லை. அவரவர் தங்கள் எல்லைகளை, பாதுகாப்பை உணரவேண்டும், அதை விட்டுவிட்டு ... ' ரோசாவை பார்த்து அவள் கூறினாள். 'எதோ உன்னைப் பார்க்க பாவமாய் தோன்றுகிறது, இந்த கொஞ்ச காசு, இனியாவது ஒழுங்காக வாழு ரோசா! ' என்று அவள் கூறிக்கொண்டு, காசோலை ஏடு ஒன்று எடுத்து எழுத தொடங்கினாள். அவனோ தன் புது நண்பியை அணைத்தபடி மறு பக்கம் பார்த்தபடி நின்றான். காசோலை எழுதி முடிந்ததும், அவள் அதை கொடுப்பதற்கு நிமிர்ந்தாள், ஆனால் ரோசா அங்கு இல்லை, அவள் அவர்களை விட்டு விலகி பல தூரம் போய்விட்டாள்! உடலில் மட்டும் அல்ல, மனதளவிலும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  14. "பெண் எனும் பிரபஞ்சம்" "பெண் எனும் பிரபஞ்சம் மண் வாழ்வின் இறைவி! கண்ணின் இமையும் அவளே உண்மைத் துணையும் இவளே!" "திண்ணையில் அரட்டையும் செய்வாள் வண்ணத்தில் அழகும் காட்டுவாள்! எண்ணம் என்றும் குடும்பமே கண்ணாய் காப்பாள் என்றுமே!" "உண்ண உணவும் தருவாள் வீண் வம்புக்கும் இழுக்காள்! ஊண் உறக்கமும் பார்க்காள் ஆண்களின் சொர்க்கமும் அவளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. "The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 01 https://www.facebook.com/groups/978753388866632/posts/9564108346997717/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/9600878159987402/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/9638876056187612/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 04 https://www.facebook.com/groups/978753388866632/posts/9679551822120035/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 05 https://www.facebook.com/groups/978753388866632/posts/9719732041435346/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 06 https://www.facebook.com/groups/978753388866632/posts/9756879647720585/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 07 https://www.facebook.com/groups/978753388866632/posts/9797984360276780/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 08 https://www.facebook.com/groups/978753388866632/posts/9840268999381649/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 09 https://www.facebook.com/groups/978753388866632/posts/9867390243336191/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 10 https://www.facebook.com/groups/978753388866632/posts/9902567736485108/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 11 https://www.facebook.com/groups/978753388866632/posts/9939135942828287/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 12 https://www.facebook.com/groups/978753388866632/posts/9959688194106395/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 13 https://www.facebook.com/groups/978753388866632/posts/10007944625947418/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 14 https://www.facebook.com/groups/978753388866632/posts/10047737095301504/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 15 https://www.facebook.com/groups/978753388866632/posts/23864680959847217/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 16 https://www.facebook.com/groups/978753388866632/posts/23884767157838597/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 17 https://www.facebook.com/groups/978753388866632/posts/23986856534296325/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 18 https://www.facebook.com/groups/978753388866632/posts/24027010520280926/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 19 https://www.facebook.com/groups/978753388866632/posts/24102926682689309/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 20 https://www.facebook.com/groups/978753388866632/posts/24148156724832971/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 21 https://www.facebook.com/groups/978753388866632/posts/24198246736490636/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 22 https://www.facebook.com/groups/978753388866632/posts/24241916592123650/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 23 https://www.facebook.com/groups/978753388866632/posts/24293753150273327/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 24 https://www.facebook.com/groups/978753388866632/posts/24340890602226248/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 25 https://www.facebook.com/groups/978753388866632/posts/24388637950784846/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 26 https://www.facebook.com/groups/978753388866632/posts/24433965519585422/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 27 https://www.facebook.com/groups/978753388866632/posts/24479740805007893/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 28 https://www.facebook.com/groups/978753388866632/posts/24521816720800301/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences" / Part 29 https://www.facebook.com/groups/978753388866632/posts/24566341346347838/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 30 https://www.facebook.com/groups/978753388866632/posts/24610044775310828/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 31 https://www.facebook.com/groups/978753388866632/posts/24657589823889656/? ["The truth & false of Mahavamsa with the historical & scientific evidences"] / Part 32 https://www.facebook.com/groups/978753388866632/posts/24708333482148623/?
  16. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 42 மூன்று வகையான போதனைத் திரட்டுகளை உள்ளடக்கிய திரிபிடகம் [Tripitaka] கௌதம புத்தரின் பல்வேறுபட்ட போதனைகள் கொண்ட பௌத்தர்களின் மூலமான புனித நூல். இதுவும் மகாவம்சமும் பாளி மொழியில் எழுதப் பட்டவை. எனவே பாளி மொழியியை நன்கு தெரியாத சாதாரண பொதுமக்கள் இந்த இரண்டிற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அறிய மாட்டார்கள். எனவே புத்த பிக்குகள் மகாவம்சத்தை போதிக்கும் பொழுது, பாமர மக்கள் எந்த கேள்வியும் எழுப்பாமல், அவை புத்தரின் உண்மை வாக்கியங்கள் என ஏற்றுக் கொள்கிறார்கள். உதாரணமாக, புத்தர் அல்ல, மகாநாம தேரர் தான் சொல்கிறார், புத்த மதம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலோங்கி இருக்கும், சிங்களவர்கள் மட்டுமே அதை "பாதுகாக்க" வேண்டும் [Mahanama said, (NOT the Buddha), that Buddhism will prevail, for five-thousand years, and the Sinhalese alone, must “protect” it.] என்று! ஆயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, இலங்கையின் புத்த தேரர்கள், புத்த தத்துவத்தை சிங்கள இனத்தின் மதமாக மாற்றி, அதன் வரலாற்றை, உதாரணமாக மகாவம்சப்படி பிரச்சாரம் செய்தது. எனவே இந்த காலப் பகுதியில், பௌத்தர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, ஏமாற்றப்பட்டு, புத்த தேரர்களால் பொய் பரப்புரை செய்யப் பட்டுள்ளார்கள். இவர்கள், தத்துவத்தை மதமாக ஆக்கி, புத்தரையும் கடவுளாக மாற்றி, தம்மை அவரின் மதிப்பிற்கும் வழிபாட்டிற்கும் உரிய தூதர்களாக மாற்றி, புத்தரின் உண்மையான போதனைகளை புறக்கணித்துள்ளார்கள். [By converting the philosophy into a religion, Buddhist monks, also converted the Buddha, into a ‘God’, and themselves, as his ‘Messengers’, who must be revered and worshiped; totally disregarding the Buddha’s words]. எனவே மகாவம்ச பௌத்தத்தில், உண்மையில் புத்தரின் அறநெறியான சகிப்புத்தன்மை மற்றும் இரக்கம் என்பனவற்றிற்கு இடமே இல்லை. [In Mahavamsa Buddhism, there is no place, for the Buddha’s Dhamma, of tolerance and compassion!]. அதை இன்று இலங்கையில் தமிழர்களுக்கு, தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் அரச இயந்திரங்களின் அல்லது புத்த குருமார்களின் செயல்களில் இருந்து அறியலாம், உதாரணமாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஏப்ரல் மாதம், 25 ஆம் திகதி 2023, செய்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் தமிழ் பேசும் இனத்திற்கு பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், தமிழ் பேசும் இனத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட, தமிழரின் சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் தமிழர் தாயக மண்ணில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலை சிதைத்தல், தமிழர் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுககளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் மக்களின் தொன்மையை வெளிப்படுத்தும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும், அழித்தும், பௌத்த சின்னங்களை நிறுவியும், இந்நாட்டின் பூர்வீக குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றை சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாட்டை எதிர்த்தும், அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பொது கட்டமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்கள் மற்றும் தமிழ் தேசியப் பற்றாளர்கள் என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 25.04.2023 அன்று தமிழர் தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக நிர்வாக சேவைகளை முடக்கி வடக்கு – கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தால் ஏற்பாடு செய்ததை கூறலாம். ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளை மட்டும் உள்ளடக்கிய மகாவம்சம் என்ற புராணக் கதைகளை [mythical narrations] அடிப்படையாக வரிந்து கட்டிக் கொண்டு, ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக மகிழ்வாக அனுபவித்த பன்மொழி நடைமுறை, பன்முக கலாச்சாரம் மற்றும் சர்வதேச வரலாறுகள் [multilingual, multicultural and even international history] எல்லாவற்றையும் மூடி மறைக்கப் பட்டுள்ளது. எனவே நாம் சரியான வரலாற்றை விஞ்ஞான, தொல்பொருள், கல்வெட்டு மற்றும் பயண சான்றுகளுடன் எங்கள் வருங்கால சந்ததியினருக்கு, இளைஞர்களுக்கு வழங்க நேரம் வந்துவிட்டது. அப்படியானால் தான் தேசிய மட்டத்தில் விதைக்கப்படுள்ள வெறுப்புகளும் மற்றும் அடிமைப்படுத்தும் செயல்களும் [nationalistic hatred and enslavement] முடிவுக்கு கொண்டுவர முடியும். "எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்ப தறிவு" என்ற இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட குறள் 423 யை மனதில் கொண்டும் , "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்ற குறள் 424 வழியில், இந்த நூறாண்டு வங்காள பல்துறையறிஞர் இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore), எமக்கு இன்று தந்துள்ள தேவையான மெய்யறிவு இலங்கைக்கும் பொருந்தும். 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அவர் உண்மையில் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பை ஒரு சுதந்திர இந்தியா பற்றிய அவரது கனவுகளை கவிதைகளாக சாமர்ப்பித்தாலும், அது அனைத்துத் தரப்பிற்கும், ஏன் இன்று இலங்கைக்கும் கூட பொருந்தக் கூடியதாகவே உள்ளது. எல்லா இனங்கள் மற்றும் மத மக்களும் தங்களை தேசிய அடிமை என்ற சங்கிலிகளிலிருந்து தங்களை விடுவிக்க [for people of all breeds and creeds, to free themselves from the chains of nationalistic enslavement] இப்ப தருணம் வந்து விட்டது என்று எண்ணுகிறேன்!! "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்! "Where The Mind Is Without Fear" "Where the mind is without fear and the head is held high Where knowledge is free Where the world has not been broken up into fragments By narrow domestic walls Where words come out from the depth of truth Where tireless striving stretches its arms towards perfection Where the clear stream of reason has not lost its way Into the dreary desert sand of dead habit Where the mind is led forward by thee Into ever-widening thought and action Into that heaven of freedom, my Father, let my country awake" [இந்தியக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் வங்காள மொழியில் எழுதிய “Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;" கவிதைத் தொகுப்பு கீதாஞ்சலி (Gitanjali) / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] முடிவுற்றது
  17. 'மகாவம்சத்தில் புதைந்துள்ள உண்மைகளும் வரலாற்று சான்றுகளும்' / பகுதி 41 இலங்கை வரலாற்றை ஓலையில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் [Ola manuscripts], நீண்ட காலத்துக்கு நின்றுபிடிக்காது. அத்துடன் புத்த பிக்குகள், பொது மக்கள் வழங்கும் அன்னதானத்தில் வாழ்வதால், அவர்கள் சமைப்பது இல்லை. ஆகவே அவர்களின் மடம் அல்லது தங்கும் இடம் சமையல் அற்ற, வெப்பம் புகைகள் அற்ற இடமாகும். இதனால் அவர்களே அதைப் பாது காத்தனர். என்றாலும் இவையும் ஒரு காலத்தின் பின் கெடலாம். ஆகவே திருப்பி திருப்பி புதுப்பிக்க வேண்டும் [Ola manuscripts need to be copied before they become friable and crumbling]. இந்த பொறுப்பும் அவர்களை சார்ந்ததாக மாறியது அல்லது அவர்களே எடுத்துக் கொண்டார்கள். இந்த நேரங்களில் தான் அவை மூலப்பிரதியில் இருந்து சிலவற்றை அழிக்கவும், தமக்கு விரும்பியதை செருகவும் மற்றும் சிதைக்கவும் அவர்களால் முடிந்து இருக்கும் என்று நம்புகிறேன். இதனால் தான் தமிழர் விரோத உணர்வு மெல்ல மெல்ல கட்டப்பட்டது எனலாம். இதை தீபவம்சம், மகாவம்சம் , சூளவம்சம், இராசாவலி ஊடாக அறியலாம். தமிழர் விரோத உணர்வு அற்ற தீபவம்சம், பிற்பாடு வந்த நூல்களில் கூடிக்கொண்டு போவதை எவரும் இலகுவாக அறியலாம். நான் இந்த நீண்ட கட்டுரையை முடிக்க முன்பு, பௌத்தத்தைப் பற்றி, புத்தரைப் பற்றி சில வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணுகிறேன். உண்மையான புத்த போதனையில் சாதி இல்லை; கடவுள் இல்லை. புத்தம் என்பதன் பொருளே அறிவு (புத்தி) என்பதுதான். புத்தர் அன்பினை வலியுறுத்தியவர். சாதிகளுக்கு எதிரானவர். அன்புதான் உலக ஜோதி, அன்பு தான் இன்ப ஊற்று, அன்புதான் உலக மகா சக்தி என்று மக்களுக்குப் போதித்து வந்தவர் சித்தார்த்தன் எனும் பெயர் கொண்ட இந்த புத்த பெருமான் என்பது குறிப்பிடத் தக்கது. புத்தரை பற்றி கூறுவது என்றால், அவருக்கு முதலில் அரண்மனை வாழ்க்கை பிடிக்கவில்லை. அமைதியை இழந்தார். இவ்வுலக வாழ்க்கையில் கண்ணுற்ற துன்பங்களைப் பற்றி ஆராயத் தொடங்கினார். ஒரு நாள் இவர் வெளியே சென்றுக் கொண்டிருந்த போது கண்ட காட்சிகள் இவர் மனதை வெகுவாக புண்படுத்தின. வயது முதிர்ந்த ஒரு மனிதரையும், நோயாளி ஒருவரையும், பிணம் ஒன்றையும், துறவி ஒருவரையும் கண்டார். இதனால் மனம் கலங்கினார். இதற்கு முன்னால் இது போன்ற காட்சிகளையும் இவர் நேரில் கண்டதில்லை. ஆகையால் இத்தகைய காட்சிகள் இவரது சிந்தனைகளை வெகுவாகத் தாக்கியது. இதன் விளைவே அவரின் துறவறம் ஆகும். அதன் பின் ஞானோதயம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார். அப்படியே, கபிலவஸ்துவில் ராகுல், மகா பிரஜாபதி ஆகியோரை தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பௌத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தை தழுவிட வழிகோலினார். இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80-வது வயதில், குசி நகரத்தில் கி.மு. 486-ல் உயிர் நீத்தார். கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா, கிழக்கிந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் புத்த மதம் பரவி இருந்தது. கி.பி. முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. ஒரு சமயம் புத்தரைப் பல சித்திகள் தெரிந்த சித்தர் ஒருவர் சந்தித்தார். புத்தரிடம் உயிருள்ள சிப்பி ஒன்றைக் கொடுத்த அந்த சித்தர், "இந்த சிப்பிக்குள் விலை உயர்ந்த முத்து உள்ளது. சிப்பியை உடைத்து முத்தை எடுத்துக் கொள்ளுங்கள்" என்றார். அதற்கு புத்தர்,"முத்து எவ்வளவு விலை உயர்ந்ததாகவும் இருக்கட்டுமே! ஓர் உயிரைக் கொல்வது என்பது என்னால் முடியாது! சிப்பியை நீயே எடுத்துச் செல்" என்று சொல்லி விட்டார். இன்னும் ஒருமுறை, பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது. இதை அறிந்து அந்த பெரியவர் புத்தரை வழிமறித்து திட்டத் தொடங்கினார். வாய்க்கு வந்தபடி அசிங்கமான வார்த்தைகளை பிரயோகித்து திட்டினார். புத்தர் கொஞ்சமும் கோபப்படவில்லை. வெகுநேரம் வழிமறித்து திட்டிக் கொண்டே இருந்ததால் போதனைக்கு செல்ல நேரமாகியது. உடனே திட்டிய பெரியவரின் கையைப் பிடித்து, “பெரியவரே எனக்கு சொற்பொழிவாற்ற நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது என்னை போக விடுங்கள். இன்று மாலை இதே வழியில்தான் சொற்பொழிவு முடிந்து திரும்பி வருவேன். திட்டுவதற்கு இன்னமும் இருந்தால் அப்போது திட்டுங்கள்,” என்றார். இது தான் உண்மையான புத்தரின் செயல்பாடும் அவரின் போதனைகளும் ஆகும். ஆகவே நாம் இந்த நோக்கில் மகாவம்சத்தை படித்தால், அதில் உள்ள உண்மையும் பொய்யும் தானே வெளிப்படும். அதுமட்டும் அல்ல, இலங்கை புத்தரை போற்றும் வெறும் வழிபாட்டாளர்களாக மாறினார்கள் தவிர, அவரின் எந்த முதன்மை கொள்கையையும் பின்பற்றுபவர்களாக மாறவில்லை. [But Srilanka now have become mere worshipers of buddha but not true followers. That is the primary misleading conception is that Sri Lanka is a mere worshiping-nation but not a thinking-nation.] இப்படியான சூழலில் இலங்கை புத்த சமய மக்கள் தங்களது அறியாமை, சமய அடிப்படைவாதம் மற்றும் தேசியவாதத்தால் [with their ignorance, religious fundamentalism, and nationalism] அவர்கள் உண்மையான புத்தர் போதனையை பிரதிபலிக்க அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள் என்று நான் நம்பவில்லை. அதனால் தான் இன்று தமிழர் வாழ்விடங்கள் எங்கும் புத்தர் சிலைகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசநிறுவனங்கள், புத்தகுருமார்கள், அரசு படைகள் துணையுடன் பல்பொருள் அங்காடிகள் போல் முளைக்கின்றன, இது புத்தரின் எடுத்துக்காட்டுக்கு முற்றிலும் வேறுபட்டது [Buddha led a life of self-emptying. It was His praxis of liberation.] . [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] இறுதி பகுதி: 42 தொடரும்
  18. "கார்த்திகை தீபம்" "கார்த்திகை திருநாள் தீபம் ஒளிர்ந்து காலத்தின் வரலாற்றை இன்று சொல்லுது! கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் காரிருளை அகற்றி வெளிச்சம் தருகுது!" "காக்கை வன்னியன் இன்றும் இருக்கிறான் காசுக்கு தன் இனத்தையே விற்கிறான் காட்டிக் கொடுத்து அடிமை ஆக்கிறான் காரணம் கேட்டால் எதோ மழுப்புறான்!" "காணும் காட்சிகள் இருளை கொடுக்குது காது கேட்பதும் பொய்யாய் தெரியுது காதல் புரிந்தே கொலையும் செய்கிறான் கார்த்திகை தீபம் உண்மை பரப்பட்டும்!" "ஈன்றவள் இல்லை இணைந்தவள் இல்லை இருந்ததும் இல்லை நிலமும் இல்லை சிதைந்து போராடி வெற்றியும் இல்லை புதைந்து போனது மண்ணின் மைந்தர்களே" "கார்த்திகை தீபம் அன்றும் ஏற்றினோம் நடுகல் நட்டு வாழ்த்தி வணங்கினோம் நீதி வேண்டி சிலம்பை உடைத்தோம் நியாயம் வேண்டி உலகை கேட்கிறோம்" "ஒன்றாய் கூடு உண்மையை உரை நியாயம் நிறுத்து விசாரணை எடு கவலை மறக்க தீர்வை தா கேள்வி கேட்டு நடுக்கல் முழங்குது!” "வேலி நோக்கிய விளக்கு நிலையும் போலித் தலைவரைக் சுட்டிக் காட்டட்டும் நீலிக் கண்ணீர் வடிப்பவரைச் சொல்லட்டும் வாலிப உள்ளங்களுக்கு உற்சாகம் கொட்டட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 'வேலி நோக்கிய விளக்கு நிலையும்' [தொல்.பொருள்.புறத்திணை இயல்-35] – என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்
  19. "கலங்காதே மகனே" கவலைப்படாதே / கலங்காதே நாம் அடிக்கடி கேட்கும் ஒரு ஆறுதல் வார்த்தை. எமது மனதை அறியக்கூடிய ஒரு கருவி இருக்குமாயின், எம் வாழ்வில் பலதடவை கட்டாயம் இந்த வார்த்தை எதிர் ஒலித்து இருக்கும். கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மிக மகிழ்வாக இருந்த என் மகன் இன்று கவலையுடன் கணனியில் இருப்பதைக் கண்டேன். எனக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. எது எப்படியாகினும் அவன் அருகில் சென்று, முதுகில் தட்டி ஆறுதல் படுத்தி 'கலங்காதே மகனே' என அவனுக்கு ஒரு தெம்பு கொடுத்தேன். அது நாம் முதல் கட்டாயம் செய்யவேண்டிய ஒன்று! இரு ஆண்டுக்கு முன்பு, அவன் உயிருக்கு உயிராய் காதலித்த அவனின் சக மாணவி, இறுதி ஆண்டில் மிக திறமையாக சித்தியடைந்தாள். அதுவரை அவளும் என் மகனையே விரும்பி, அன்னியோன்னியமாக நெருக்கமாக இருந்தவள், இப்ப அதே பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராக பதவி பெற்றதும், என் மகனில் இருந்து ஒரேயடியாக விலக தொடங்கினாள். மகன் சந்திக்கப் போனால், யாரோ தெரியாதவன் போல. கண்டும் காணாமல் விலகி விலகிப் போனாள். பிறகு தான் மகனுக்கு தெரிய வந்தது, அவள் ஒரு மூத்த விரிவுரையாளர் ஒருவரை இப்ப காதலிக்க தொடங்கி விட்டாள் என்று! தாய் இல்லாமல் வளர்ந்தவன் என்பதால், நான் செல்லமாகவே அவனை வளர்த்து விட்டேன். அது தான் அவனால் எந்த சோகங்களையும் தாங்கும் வல்லமை குறைவாக காணப்பட்டது. அவன் அன்று வீட்டிற்கு வந்து கட்டிலின் ஒரு மூலையில் முடங்கி கிடந்துவிட்டான். காதலையே பணத்துக்கும் பதவிக்கும் மாற்றும் இப்படியானவளை கல்யாணம் கட்டி வாழ்வதை விட, அவளை மறந்து ஒரு புது வாழ்வை ஆரம்பிப்பதே நல்லது என்று ஆறுதல் கூறி, அவனை ஒரு பொழுதுபோக்காக, நடந்தவற்றை மறக்கவும் வெளியே கூட்டிச் சென்றேன். நான் பொதுவாக சமயத்திலோ ஆண்டவனிலோ நம்பிக்கை இல்லை. ஆனால் என் மனைவி அதற்கு எதிர் மாறு. அவள் எதாவது துக்கம் அல்லது மகிழ்வு நடந்தால், நயினாதீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் போய் வழிபடுவது வழமை. அவள் எப்பவும் தன் மகனையும் அங்கு கூட்டிப் போவார். ஆகவே மகனுக்கும் அந்தப் பழக்கம், தாயின் மேல் உள்ள அதி உயர் மதிப்பினால் தானாகவே வந்துவிட்டது. நான் அதை தடுக்கவில்லை. அவன் இப்ப தான் அங்கேதான் தான் போகவேண்டும் என்று கூறினான். நானும் சம்மதித்து அங்கு சென்றோம். அப்படி அன்று போகும் பொழுதுதான் தனது இன்றைய நண்பியை ஒரு ஆண்டுக்கு முன் சந்தித்தான். அவள் பாலர் பாடசாலை இளம் ஆசிரியை. உயர் வகுப்பு வரையும் தான் படித்து இருந்தாலும், மிகவும் பண்பாக மரியாதையாக காணப்பட்டாள். அவள் அந்த ஊரையே சேர்ந்தவளும், அந்த ஆலயத்துக்கு அண்மையில் வாழ்பவளும் ஆவாள். அவளின் தந்தை ஒரு போலீஸ் உத்தியோகத்தர் என்றாலும், ஒரு விபத்தில் அவர் இறந்துவிட்டார் என்று அறிந்தோம். அவள் தாய் சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தாள். அவளின் பெயர் கூட நாகபூசணி அம்மனின் பெயரையே பிரதிபலித்தது. அன்று தற்செயலாக ஆலயத்தில் சந்தித்த இருவரும், நாம் கொழும்பு திரும்பிய பிற்பாடு முகநூலிலும் தொலை பேசியிலும் தமது நட்பை வளர்த்தார்கள். எனக்கு மகன் மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதாலும், அவளை நேரடியாக பார்த்தத்தாலும் அவர்களின் நட்பிற்கு நான் எந்த இடையூறும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் மீண்டும் சோர்ந்து இருப்பது எனக்கு புதிராக இருந்தது. திறந்து இருந்த கணணியை பார்த்தேன், அது அவளின் முகநூல் பக்கம் தான். அவன் மீண்டும் மீண்டும் ஹாய் / ஹலோ என அவளுக்கு அழைப்பு விட்டிருப்பது அதில் பதியப் பட்டிருந்தது. ஆனால் எந்த மறுமொழியையும் காணவில்லை. மகனிடம் இனி இல்லை என்ற அளவுக்கு நண்பியாக தினம் கதைத்துக் கொண்டு இருந்தவள், ஒரு ஆண்டு முடிந்து சில மாதங்களிலேயே மாறி விட்டாள் என்பது புரியாத புதிராக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்குள் மகனின் வாழ்வில் இரண்டாவது தோல்வி. அதுவும் இது ஆண்டவன் சன்னதியில் ஏற்பட்ட காதல்! அவள் இப்ப மகனை தவிர்ப்பது வெளிப்படையாக தெரிகிறது. ஏன் ? எதற்கு என மகன் அறிய விரும்பினாலும் நான் ஆராய விரும்பவில்லை. புவனமுழுதாடுகின்ற புவனேஸ்வரி.. புறமிருந்தோர் புறமிருக்கும் பரமேஸ்வரி.. நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி.. ஆமாம் புதுமை புதுமையாய் உருவெடுக்கும் அவள், இன்று என்ன உருவத்தில் எங்கே, யாருடன் ... அது எமக்கு அப்பாற்பட்டது! நான் மகனைப் பார்த்தேன். அவன் அந்த முகநூலை முறைத்து பார்த்துக்கொண்டு இருந்தான். அவன் நான் பின்னால் நிற்பதை கவனிக்கவில்லை. நான் அவனின் முதுகில் தட்டி ஆறுதல் படுத்தும் பொழுது தான் அவனுக்கு உணர்வே வந்தது. அவனின் கண்களில் கண்ணீர் நிறைந்து இருந்தது. அது என்னை பார்த்ததும் ஆறாக பெருகியது. அவன் என்னை பார்த்து, 'இந்த பெண்ணுக்கு என்ன நடந்தது?, ஏன் இப்படி செய்கிறாள்? என் நட்பு , காதல் தேவை இல்லை என்றால், வெளிப்படையாக கூறலாம் தானே? நான் அவளின் புது நட்பு யார் என்று கேட்கப்போவதில்லை ?, உண்மையை கூறி ஒதுங்கலாம் தானே?' என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டான். எனக்கு என்ன சொல்வது என்று புரியவே இல்லை. இன்று இவை எல்லாம் சகயமாக வந்துவிட்டது. நான் அவனுடன் கதைத்ததில், இதற்கு என்ன செய்வது என்று அவனுக்கே தெரியவில்லை என்பதை அறிந்தேன். நான் அவனை பார்த்தேன், இதற்கு தீர்வு உன்னிடமே என்றேன். அவன் உடனே என்னைப் பார்த்து, என்னிடமே விடை இருக்கு என்றால், நான் ஏன் கவலைப் படுகிறேன் என்றான்! 'மகனே எல்லாவற்றுக்கும் மறுமொழியோ அல்லது தீர்வோ காணமுடியாது. சிலவேளை அதை கைகழுவி விடுவதே தீர்வாக இருக்கும். உன்னால் இனி ஒன்றும் செய்யமுடியாது என் நீ நம்பும் பொழுது அல்லது எண்ணும் பொழுது, எப்படி நீ மட்டும் தீர்வு காண கவலைப்பட முடியும், கொஞ்சம் சிந்தி , கலங்காதே மகனே!' நான் மகனிடம் உருக்கமாக கேட்டேன். மகன் கொஞ்ச நேரம் என் முகத்தையும், தாயின் படத்தையும் உற்றுப் பார்த்தான், பின் அவளின் முகநூலை எடுத்து தன் நட்பை அதில் இருந்து அகற்றினான். இனிமேல் தனக்கு ஒரு காதலும் வேண்டாம், பெண் நட்பும் வேண்டாம். நீங்கள் பார்த்து தெரிந்து எடுக்கும் பெண்ணே உங்கள் மருமகள் ஆகட்டும்! என்று கூறிவிட்டு தன் படுக்கைக்கு சென்றுவிட்டான்! ஒன்றை கவனத்தில் வையுங்கள், நீங்கள் எதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி இருந்தீர்கள் என்றால், ' இதற்க்கு என்னால் தீர்வு காண முடியுமா ?' உங்களை நீங்களே கேளுங்கள், இல்லை என்றால், அதை உங்கள் மனதில் இருந்து அகற்றி விடுங்கள். அது உங்களுக்கு நிம்மதி கொடுக்கும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.