Everything posted by kandiah Thillaivinayagalingam
-
"சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல"
"சிந்துவெளி ஒரு திராவிட நாகரிகம், கட்டாயம் ஆரிய நாகரிகம் அல்ல" சிந்துவெளி நாகரிகம் தமிழ் கலாச்சாரத்தை சேர்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது ஆய்விற்குரிய கருத்தாக, உதாரணமாக சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு உடந்தையாக இருக்கின்ற போதிலும் இன்னும் பலர் நான்கு [உண்மையில் மூன்று , நாலாவது அதிகமாக தனித்தே இருக்கிறது] வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்று தான் சிந்து வெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுகின்றனர். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், வேதகாலத்தவர் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை நாம் காணலாம். அதுமட்டும் அல்ல இந்த ஆரியர்கள் மேய்ச்சல் நிலங்கள் தேடி நாடோடியாக வந்த ஆயர் கூட்டத்தினர். கிராமப் புறக் கலாச்சாரம் கொண்டிருந்த இவர்கள் கி மு 500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சம வெளி மாதிரி நகர்ப்புறக் கலாச்சாரத்தை, நகரங்களை உருவாக்கவில்லை என்பது வரலாற்று உண்மையும் ஆகும். ஆகவே இந்தப் பின் புலத்தில் சிந்துவெளி நாகரிகத்திற்கும் வேதக் கலாச் சாரத்திற்குமான அடிப்படை வேறுபாடுகளை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அப்பத்தான் நாம் எது உண்மை எது பொய் என்பதை தீர்மானிக்கலாம். ஆரியரைப் பற்றி வேதத்தில் அவர்கள் ஓரளவாக இடையர்களாகவும் ஓரளவாக விவசாயம் சார்ந்த மக்களாகவும் காட்டுகிறது. மேலும் அவர்கள் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். அவர்களின் வீடுகள் பொதுவாக மூங்கிலால் கட்டப்பட்டவை. இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறுகள், வரிசையாக அமைக்கப் பட்ட வீதிகள், மழை நீர் வடிகால்கள் , சாக் கடைகள், மற்றும் குளியலறைகள் கொண்ட வீடுகளால் அவர்களின் நகர்ப்புற நாகரிக நகரம் நிறைந்திருந்தது. "தனக்கு படையல் கொண்டு வந்த, வேத கால காசி நாட்டின் மன்னன் "திவோதாச", விற்காக, நூறு கல் கோட்டைகளை இந்திரன் அழித்தான்" என்ற ரிக் வேதம் மண்டலம் 4 மந்திரம் 30 சுலோகம் 20 இதை மேலும் உறுதிப்படுத்துகிறது, ரிக் வேதத்தில் தஸ்யுக்கள் குறிப்பிட்ட இடத்தில், வலுவான நகரங்களில் அல்லது கோட்டைகளில் வசிப்பவர்களாகக் கூறப்படுகிறார்கள். மேலும் அவர்கள் வசம் 100 கோட்டைகள் இருந்தது இந்த சுலோகம் மூலம் தெரியவருகிறது. தசியூக்கள் என அழைக்கப் பட்ட, ஹரப்பாவிலிருந்த சாம்பன் என்னும் சம்பரன் எனும் பிற்காலச் சிந்துவெளியில் கோட்டை கட்டி ஆட்சி புரிந்த அரசனை வெற்றி கொள்வதற்கு, சம்பரனின் பழம்பகைவனான, ஆரிய மன்னரான திவோதாச விற்கு இந்திரன் உதவியதை இது கூறுகிறது. 2. ரிக் வேத காலத்தில் இந்தோ ஆரியர் பாவித்த உலோகங்கள் பொதுவாக பொன், செம்பு அல்லது வெண்கலம் ஆகும். அதன் சற்று பின் அதாவது யசுர்வேத, அதர்வவேத காலத்தில் இந்த உலோகங்கள் வெள்ளி, இரும்பு போன்றவற்றால் அதிகப்படுத்தப் பட்டன. ஆனால் சிந்து சம வெளி மக்களிடம் வெள்ளி, பொன்னை விட முதன்மையாக உபயோகத்தில் இருந்து உள்ளது. மேலும் கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் அவர்களிடம் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இருக்கவில்லை. ஆனால், இந்த ஆரியர்கள் இரும்பின் பயனை அறிந்திருந்தார்கள். இரும்பு ஆயுதங்களை உபயோகித்து ஆற்றங்கரைகளில் உள்ள காடுகளைத் திருத்திக் குடியிருப்புகளை உருவாக்கினவர்கள் என்பதும் குறிப் பிடத்தக்கது. இரும்பு வேதத்தில் அயஸ் [ayas] என்று அழைக்கப்பட்டது என பொதுவாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பொன் என்றால் இரும்பு, தங்கம், ஐந்து உலோகங்களில் எதையும் குறிக்கலாம். இதனால்த்தான் கோவிலில் உள்ள சிலைகளை ஐம்பொன் சிலைகள் என்று கூறுகிறோம். அதே போலத்தான் அயஸ் என்ற சொல்லும் ஆகும். இதனால்த்தான் போலும் வேதத்திலேயே கறுப்பு அயஸ் (இரும்பு), சிவப்பு அயஸ் (செம்பு) என்ற சொற்களும் உண்டு. 3. வேதங்கள் மூலம் இந்தோ ஆரியன் வில், அம்பு, ஈட்டி, குத்துவாள், கோடாரி போன்ற தாக்குதலிற் பயன் படுத்துகிற ஆயுதங்களும் தடுப்பு நடவடிக்கைக்கு தலைக் கவசங்களும் உடல் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப் படுகிறது. ஆனால் சிந்து சமவெளி மக்களிடம் மேல்கூறிய ஆயுதங்களுடன் தண்டாயுதமும் இருந்தன. ஆனால் தற்காப்புக் கவசங்கள் காணப்படவில்லை. உதாரணமாக ‘ரிக் வேத’த்தின் பத்தாம் மண்டலத்தில் [ மண்டலம் 10 மந்திரம் 95 சுலோகம் 03] புரூரவா: "நீ இல்லாவிட்டால் என் அம்புப் பொதியிலிருந்து அம்பு எய்ய முடியாது. செல்வம் கிடைக்காது. நூற்றுக் கணக்கான பசுக்களை வெற்றி கொண்டு நான் கொண்டு வர இயலாது. வீரர்களில்லாமல் என் செயல்கள் சோபிக்காது. நீ இல்லா விட்டால் என் வீரர்கள் வீர முழக்கமிடவும் தயங்குகிறார்கள்."] என்ற புரூரவா-ஊர்வசியின் காதல் உரையாடலைக் காண்கிறோம். 4. வேத கால ஆரியர்கள் இறைச்சி உண்பவர்கள். மேலும் பொதுவாக மீனை வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். இதனால் மீன் பிடிப்பதைப் பற்றி நேரடியாக வேதத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சிந்து சம வெளி மக்களுக்கு மீன் பொதுவான உணவு. அங்கு மீன் அதிக அளவில் உள்ளது. அது போல மிக மெலிதான ஓடுகளைக் கொண்ட மெல்லுடலி, ஆமை போன்ற மற்ற கடல் உணவுகளும் அங்கு காணப்படுகின்றன. சோமா என்பது ஒரு பானத்தின் பெயர் மட்டு மல்ல. அது ஒரு கடவுளின் பெயராகவும் விளங்கியது. அந்தக் கடவுளுக்கு கால் நடைகள் உட்பட விலங்கினங்கள் உணவாகப் படைக்கப்பட்டன. அக்னிக்குக் குதிரைகள், எருமைகள், காளைகள், பசுக்கள் பலியிடப் பட்டன என்று ரிக்வேதம் 10.91.14 சொல்கிறது. மேலும் மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 4, பாடல் (சுலோகம்) 9 இதை உறுதிப் படுத்துகிறது. அதாவது, "இந்திரனே! போர் செய்வதிலே வல்லமை படைத்த உனக்கு நாங்கள் (ஆரியர்கள்) அவியை (ஆட்டைக்கொன்று அதன் கறியைச் சமைத்துச் செய்யும் விருந்து) அளிக்கிறோம்" என்கிறது. ஆரியர்கள் கிழக்கு பாரசீகத்தில் (Persia) இருந்து இந்தியா வந்தவர்கள் என்பதால் அவர்களின் முக்கிய உணவாக மாமிச உணவே இருந்தது என்பது இதனால் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. 5. வேத காலத்தில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை வேதங்களில் குறிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சிந்து சமவெளி மக்களுக்கு குதிரை பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்களது முத்திரைகளில் குதிரை காணப்படவில்லை. மேலும் மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 96,பாடல் (சுலோகம்) 8 இப்படி கூறுகிறது: ‘சோமக் குடியனான இந்திரன், நீண்ட கழுத்தை யுடையவன். அகன்ற மார்பையும் பெற்றவன். அவனும் மஞ்சள். அவன் தாடியும் மஞ்சள். அவன் குடுமியும் மஞ்சள். அவன் இதயம் செம்பு போன்றது. அவன் குடிக்கும் சோமக்கள்ளும் மஞ்சள். அந்த மஞ்சள் நிறக்கள்ளை ஒரே மடக்கில் குடித்து விடுவான். அந்தக் கள்ளோ அவனைப் போதை ஏறிய வெறியனாக்கும். அந்த வெறியோடு குதிரையில் ஏறி, துரிதமாகச் சென்று, அளவற்ற யாகப் பொருளைக் கொண்டு வருவான். குதிரை அந்தப் பாவிகளால் (தமிழர்களால்) தடைப்படுத்தப்படாமல், மஞ்சள் வண்ணத்தானைப் பாதுகாப்புடன் கொண்டு வரட்டும்’ அது மட்டும் அல்ல ரிக் வேதத்தில் குதிரைகள் பற்றியும் அவற்றை வளர்த்தவர் பற்றியும் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன. அந்தச் சமூகத்தவர்க்கு குதிரை ஒரு முக்கியமான வளர்ப்பு மிருகம் என்பதால் அது கடவுளுக்கு பலியாகவும் கொடுக்கப்பட்டது. வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்துவெளி நாகரிகத்தில் வணிகர் பயன்படுத்திய சுடுமண், மாவுக்கல் முத்திரைகளில் ஆடு, மாடு, யானை, காண்டாமிருகம், பன்றி, ஒட்டகம், மயில் போன்ற உயிரினம் சித்தரிக்கப் பட்டதைக் காணலாம். அவற்றில் இல்லாத விலங்கு குதிரை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சிந்து வெளி நாகரிகத்துடன் தொடர்புடைய தொல்லியல் தடயங்களில் குதிரைகளோ குதிரை வண்டிகளோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சிந்து வெளியில் 1920இல் கண்டெடுக்கப்பட்ட ஒரு பாதி உடைந்த முத்திரையின் பதிவைக் காட்டி சிலர் அது குதிரையின் உருவம் என்றும், சிந்துவெளி நாகரிகத்தவர் குதிரைகளை வளர்த்தனர் என்பதைத் தாம் கண்டு பிடித்து விட்டதாகவும் அறிவித்தனர். சிந்துவெளி நாகரிகத்தில் குதிரைகள் வளர்க்கப்பட்டன என்பதற்கு அவர்கள் காட்டிய ஆதாரங்கள் போலியானவை என்பதை ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர் மைக்கேல் விட்ஸலும் (Michael Witzel), வரலாற் றாய்வாளர் ஸ்டீவ் ஃபார்மரும் (Steve Farmer) திறம்பட விளக்கித் தம் கடுமையான மறுப்புகளை ப்ரண்ட்லைன் (Frontline, அக். 13, 2000) இதழில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் தன் வாழ்நாள் முழு வதையும் சிந்துவெளி ஆய்விற்கு அர்ப்பணித்திருக்கும் அஸ்கோ பர்ப்போலா (Asko Parpola) குதிரையின் பின்பாகம் என சித்தரித்த அந்த படம் உண்மையில் ஒற்றைக் கொம்புடன் சித்தரிக்கப்பட்ட மாட்டின் உருவமே என்பதைக் உறுதிப்படுத்தினார். 6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது. ரிக் வேதத்தில் சில மந்திரங்கள் எங்களுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பசுக்களைக் கொடு என வேண்டுகின்றன. ஓரிடத்தில் ரிஷி தனக்கு அறுபதினாயிரம் பசுக்கள் தானமாகக் கொடுக்கப்பட்டதைக் கூறுகிறார் [Horses of dusky colour stood beside me, ten chariots, Svanaya's gift, with mares to draw them. Kine [cows] numbering sixty thousand followed after. Kakṣīvān gained them when the days were closing.] (1.126.3). இவைகள் வேத காலத்தில் பசுவிற்கு எப்படி முக்கியம் கொடுக்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. 7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்து வெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன. உதாரணமாக, ரிக் வேதத்தில் இரண்டு பாடல்களில் [சுலோகங்களில்] ஒரு கை கொண்ட மிருகம்-Mrga Hastin-என யானை குறிக்கப்பட்டுள்ளது. பாடல், 1.64.7 "Mighty, with wondrous power and marvellously bright, self strong like mountains, ye glide swiftly on your way. Like the wild elephants ye eat the forests up when ye assume your strength among the bright red flames" என்று கூறுகிறது. யானையை சங்க காலத்தில் இதே மாதிரி ஒரு கை கொண்ட மிருகம் "கைம்மா" என்று கலித்தொகை 23 "இலங்கு ஒளி மருப்பின் கைம்மா" – பளபளப்பான பிரகாசமான தந்தங்களைக் கொண்ட யானை என்றும், புறநானுறு 368 "ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன" - ஒளியுடன் கூடிய மேகங்களைத் தடுக்கும் மலை போன்ற யானைகளெல்லாம் அம்பு பட்டு இறந்து கிடக்கின்றன என்றும் கூறுகிறது. 8. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர். உஷஸ் என்ற மிக பிரசித்தி பெற்ற சிறு தெய்வத்தை விட மேலும் அதிதி, ப்ரித்வி , இராத்திரி, சரஸ்வதி, வாக்கு போன்ற பெண் சிறு தெய்வங்களும் அங்கு காணப்படுகின்றன. அது மட்டும் அல்ல ஆரியர்கள் தந்தை வழிச் சமூகத்தினர். ஆகவே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படும் தாய்த் தெய்வ வழிபாட்டுக்கான ஆதாரங்கள் தாய்வழிச் சமூக அமைப்புடைய திராவிடர்களாவர் என்பதில் சந்தேகம் இல்லை. 9. அது மட்டும் அல்ல சிந்து வெளி எழுத்துகள் கட்டாயம் இந்தோ ஆரியன் மொழியை எழுத பாவிக்கப் படவில்லை. ஏனென்றால் ஆரியர்கள் கி மு 1700 ஆண்டுவரை இந்தியா வரவில்லை. கி.மு. 1600 போன்ற காலகட்டத்தில் சிந்துவெளி நாகரிகம் நலிவடைய ஆரம்பித்தது. இந்த நாகரிகத்தின் அழிவும் ஆரியக் குடியேற்றங்களும் ஒரே காலத்தில் நடந்தது என்று ஜான் மார்ஷல் கருதுகிறார். மேலும் வேதங்களுள் காலத்தால் முந்திய ரிக் வேதத்தில், பூர்வ குடியினரான தாசர்களுக்கும் ஆரியக் குடியேறிகளுக்கும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்தன என்றும், தாசர்கள் வாழ்ந்த பகுதிகளைத் தம் வசப்படுத்த உதவுமாறு இந்திரன், அக்னி போன்ற கடவுளரை வேண்டினர் என்றும் சில ரிக் வேதப் பாடல்கள் கூறுகின்றன, உதாரணமாக "இந்திரனே! உன்னுடைய பாதுகாப்புடன் எங்களுடைய எதிரிகளை (தாசர்களை) முற்றிலுமாக வெற்றி கொள்வதற்கு நாங்கள் கடினமான ஆயுதத்தைக் கையில் ஏந்துகிறோம்." என்று மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 8, பாடல் (சுலோகம்) 3 கூறுகிறது. 10. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட் டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப் படுகின்றன. ரிக் வேதம் 7,21,5 & 10,99,3 ஆகிய இரண்டு பாடல்களில் சிசின தேவர்களை அழி என்று வருகிறது. சிசினம் என்பது ஆண் குறி. ஆண்டவனை லிங்க வடிவில் வழிபட்டவனை அழி என பொருள் படுகிறது. 11. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப் பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப் படவில்லை. 12. வேத காலத்திற்கும் முற்பட்ட சிந்து வெளி நாகரிகத்தில் ஆரமில்லாச் சக்கரங்கள் கொண்ட மாட்டு வண்டிகள் இருந்தன என்பதற்கு அங்கு கிடைத்த சுடுமண் பொம்மைகள் ஆதாரம், ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பி கு : திராவிடம் என்ற சொல்லில் சில சர்ச்சைகள் தொடர்வது புரிகிறது. திராவிடம் என்பது உண்மையில் பழம் தமிழ். என்றாலும் இதில் இருந்து பிரிந்து / உருமாறி தோன்றிய மொழிகளை ஒரு குடும்பமாக உள்ளடக்க அன்று இந்த சொல் பாவிக்கப் பட்டு அது இன்னும் தொடர்கிறது. ஆகவே, நான் 'திராவிடம்' என்னும் வார்த்தையை தமிழ் / தமிழம் என்பதற்கான மாற்றுச்சொல் - தமிழக, ஆந்திர, கருநாடக, கேரளப்பகுதிகளை உள்ளடக்கிய தென்னாடு - போன்ற கருத்துக்களில் மட்டுமே பாவித்து உள்ளேன். உதாரணமாக திராவிடம் என்னும் சொல், தமிழ் மொழியை ஆரியர்கள் ஒலியிலே மாறுபாட்டுடன் குறித்த சொல். சமற்கிருதம் இல்லாமல் திராவிடம் இல்லை, திராவிடரும் இல்லை. ஆனால் சமற்கிருதம் நீக்கினால் ஏனைய திராவிட மொழிகள் அனை த்தும் தமிழ் மொழியே" என்றும் "ஆரியர் வருகைக்கு முன்பாகத் திராவிடர் என்று யாரும் குறிக்கப் பெறவில்லை. ஆரியர் வருகைக்குப் பின்பாகவே தமிழர்கள் 'த்ரமிளர்' என்றழைக்கப்பட்டு 'த்ரவிடர்' என்று மருவித் திராவிடர் என்பதாக உருப்பெற்று ள்ளது" என்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அதே போல கி.பி 17ம் நூற்றாண்டில், தாயுமானவர் "கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்" என்று படித்தவர்களின் போலியை நகைக்கிறார். அதில், "வடிமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந் [வடமொழியிலே வல்லவனான ஒருத்தன் வந்தால்] த்ராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன் [திராவிடத்திலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரமாக சொல்லுவேன்] வல்ல தமிழறிஞர் வரின் அங்ஙனே வடமொழியின் வசனங்கள் சிறிது புகல்வேன்" என்று கூறுகிறார்.'தமிழ் மொழியும் தெரியும்' என்று சொல்வதற்கு பதிலாக 'திராவிடமும்' தெரியும் என்று தான் பயன்படுத்துகிறார் என்பதையும் கவனிக்க.
-
"பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு"
"பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு" இலங்கை உள்நாட்டுப் போருக்குப் பின்னர், இலங்கையின் வடக்கு மாகாணம் மோதலின் நிழலில் இருந்து ஒரு பலவீனமான அமைதியைத் தழுவியது. இரண்டரை தசாப்தங்களாக நீடித்த போர், மே 2009 இல் முடிவுக்கு வந்தது, நிலத்திலும் அதன் மக்களிலும் கண்ணுக்கு தெரியும் மற்றும் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது. இடிபாடுகள் மற்றும் போர்நிறுத்தத்தின் அமைதிக்கு மத்தியில், ஒரு இதயத் துடிப்பு எதிரொலிக்கத் தொடங்கியது - பாரம்பரியம், நெகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் இதயத் துடிப்பு. வடக்குக் கரையோரமாக அமைந்திருந்த யாழ்ப்பாணத்தின் கடலோர காங்கேசன்துறை கிராமம் யுத்த அழிவுகளை நேரடியாகக் கண்டிருந்தது. ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்த மீன்பிடி குக்கிராமம் அதன் முந்தைய நிழலின் நிழலாக மாறிவிட்டது. கட்டிடங்கள் இடிந்து நின்றன, வயல்வெளிகள் தரிசாகக் கிடக்கின்றன, மோதலின் சத்தங்கள் ஒரு பயங்கரமான அமைதிக்கு வழிவகுத்தன. ஆயினும் கூட, இந்த பாழடைந்த நிலையில், வாழ்க்கையின் ஒரு பிரகாசம் இருந்தது - அங்கு கிராம மக்களால் "தாத்தா" என்று அழைக்கப்படும் சுந்தரம் என்ற முதியவர் அப்பொழுது வாழ்ந்து வந்தார். 'தோணி போனாலும் துறை போகாது'. இது எம் முன்னோரின் அனுபவ மொழி. அன்று யாழ் குடா நாடு துறைமுகங்கள் பலவற்றைக் கொண்டு கடல் வாணிபத்தில் சிறப்பாக இருந்தது. சிறியளவிலான துறை முகங்கள் பல அங்கு இருந்தன. அவை இன்னமும் பெருமளவில் மீன்பிடி துறைமுகங்களாக மட்டுமே இன்று இயங்குகின்றன. தூங்காத நகரமாக ஒரு காலம் காங்கேசன்துறை, பண்டைய இலக்கியத்தில் கூறிய 'மதுரை' போல் விளங்கியது. பண்டைய காலத்தில், 'கயாத்துறை' என அழைக்கப்பட்டது இவ்விடம். "மழைகொளக் குறையாது, புனல்புக மிகாது கரைபொருது இரங்கும் முந்நீர் போல, கொளக்கொளக் குறையாது. தரத்தர மிகாது." [மதுரைக் காஞ்சி / Mathuraikkanci / சங்க காலத்திலும் மதுரை தூங்கா நகராய் விளங்கியதை மருதனார் மூலம் அறிய முடிகிறது. பகல் நேரக் கடைகளாகிய நாளங்காடி பற்றியும் இரவு நேரத்தில் திறக்கப்படும் அல்லங்காடி (அல் - இரவு; அல்லும் பகலும்) பற்றியும் விளக்குகிறார். கடல் நீர் ஆவியாகி மேகமாவதால் கடல் வற்றி விடுவதில்லை. ஆறுகள் பல கடலில் வந்து கலப்பதால் கடல் பொங்கி வழிவது மில்லை. அது போல் மக்கள் திரளாக வந்து பொருட்களை வாங்குவதால் பொருட்கள் தீர்ந்து விடுவதும் இல்லை; பல இடத்திலிருந்தும் வணிகர்கள் விற்பனைக்குப் பொருட்களைக் கொண்டு வருவதால் பொருட்கள் மிகுந்து விடுவதும் இல்லை என்கிறார்.அப்படித்தான் காங்கேசன்துறை இருந்தது] இளவரசி மாருதப்புரவீகவல்லி குதிரை முகம் நீங்கத், தென் இந்தியாவில் இருந்து கடல் வழியாகக் காங்கேயன் என்று அழைக்கப்படும் முருகப் பெருமானின் சிலைகளைக் கொண்டு வந்தார். காங்கேயன் (முருகன்) சிலைகள் இறங்கிய இடம் தான், பின்னாளில் காங்கேசன்துறை என வந்து என்பது ஒரு மரபு வழி வந்த கதை. இங்கு பின்னாளில், சீமெந்து தொழிற்சாலை, புகையிரத நிலையம், மாவிட்டபுரம் கந்தசாமி கோயில், கீரிமலை நகுலேஸ்வரம் , கீரிமலை புனித தீர்த்தக் கேணி, மயிலிட்டி மார்பு நோய் சிகிச்சை நிலையம் என்பனவற்றைக் பிரதானமாகக் கொண்டு இருந்தது. ஆனால் இவை எல்லாம் அல்லது பெரும்பாலானவை இன்று பழைய கதையாகிவிட்டது. இந்த சுந்தரம் என்ற தாத்தா மரபுகளைக் காப்பவராகவும், இப்பகுதியின் கலாச்சார பாரம்பரியத்தின் உயிருள்ள களஞ்சியமாகவும் இருந்தார். முதுமை காரணமாக அவரது தோலில் சுருக்குகள் மடிந்த இன்றைய கைகள், அன்று எண்ணற்ற வீணைகளை வடிவமைத்துள்ளன, அவை தலைமுறை தலைமுறையாக தமிழ் பாரம்பரியத்தின் பாடல்களைப் பாடும் பாரம்பரிய இசைக்கருவிகள். போரின் அழிவின் போதும், தத்தாவின் உற்சாகம் என்றும் தளரவில்லை. போர்க்காலத்தில் பிரிந்து அங்கும் இங்கும் அலைந்த மக்களை அல்லது ஏதாவது ஒன்றைச் பொய்யாகச் சொல்லி, கொடுத்து பிரிக்கப் பட்ட மக்களை, உண்மையை வெளிப்படுத்தி, சாட்சி பகிர்ந்து, ஒன்றிணைப்பதற்கும் தமிழ் பாரம்பரியத்தின் சக்தி ஒன்றையே அவர் நம்பினார். அதில் உறுதியாகவும் இருந்தார். தூசி படிந்த, சின்னாபின்னம் ஆக்கப்பட்ட கிராமம் மீண்டும் கட்டமைக்கத் தொடங்கியதும், தாத்தா அங்கிருந்த குழந்தைகளை ஒரு ஆலமரத்தின் நிழலில் கூட்டிச் சென்றார். தனது வீணையில் படிந்திருந்த தூசிகளை தட்டிவிட்டு, வீணையின் ஒவ்வொரு இனிமையான தாளத்திலும், அவர் கடந்த கால கதைகளை கொஞ்சம் கொஞ்சமாகக் கூறினார் - மன்னர்கள் மற்றும் கடவுள்கள், காதல் மற்றும் வீரம். போரின் நிச்சயமற்ற தன்மையை மட்டுமே அறிந்த குழந்தைகள், கண்களை விரித்து ஆச்சரியத்துடன் கேட்டனர். மெதுவாக, வீணையின் மெல்லிசைகள் அன்றாட வாழ்க்கையின் சிறகுக்குள் புகுந்து குழந்தைகள் மனதிலும் பறக்கத் தொடங்கின. தாத்தாவின் பேரன் அர்ஜுன் வீணையில் தனி ஆர்வம் காட்டினான். பன்னிரண்டு வயதில், அர்ஜுனின் ஆவல் ஒரு எல்லையைத் தாண்டி பெரிதாக இருந்தது. அந்த கொடூர போரில் அவனது தந்தை, ஆலயத்தின் மேல் கண்மூடித்தனமாக குண்டு வீசியதில், அங்கு அடைக்கலம் புகுந்து இருந்த மற்ற பல மக்களுடன் தன் உயிரையும், உடல் சிதறி பறிகொடுத்தார். அதன் பின் அவரது தாயார் தனது வாழ்க்கையைச் சமாளிக்க இன்னும் போராடிக் கொண்டே இருக்கிறார். பிஞ்சு உள்ளத்தில் ஏற்பட்ட அந்த கவலையால் இப்ப வீணை அர்ஜுனின் புகலிடமாக மாறியது, அதன் சரங்கள் தரும் இனிய இசைகள் அவனின் நெஞ்சைத் தொட்டு ஆறுதல் கொடுத்தன. 2012 இல், போர் முடிவடைந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, பழைய பாரம்பரியத்தை, தமிழனின் ஒற்றுமையை மீட்டெடுக்க வேண்டிய நேரம் இது என்று தாத்தா முடிவு செய்தார் - அதற்கான நேரம் ஆடிப் பெருக்கு திருவிழா என்று முடிவு செய்தார். அதற்க்கு காரணம் இல்லாமல் இல்லை. தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். அப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் தெய்வமாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே 'ஆடிப்பட்டம் தேடிவிதை' என்ற பழமொழியும் விளைந்தது. அதேபோல ஒரு பாரம்பரியப் பட்டம் தேடி விதைக்கும் காலம் இன்று வந்துவிட்டது. போதைப்பொருள், வாள்வெட்டு, கல்வியில் வீழ்ச்சி, விபசாரம், ஏமாற்றிப் பணம் பறித்தல், பொய் காதல்கள், குடும்ப முறிவுகள் ... என பல சீரழிவுகள் மே 19, 2009 இன் பின் கூட கூடத் தொடங்கிவிட்டன. அதுமட்டும் அல்ல, மே மாத நினைவு நாள் முடிந்து ஒரு, இரு திங்களின் பின் ஆடிப்பெருக்குவருவதால், அவர்களின் நினைவு கண்ணீர் பெருக்கும் கொஞ்சம் காய்ந்து, ஆனால் நினைவுகள் மறையாது, ஆறுதலடையும் காலமும் அது என்பதும் ஆகும். மழைக்காலத்தின் கொண்டாட்டமான இந்த ஆடிப் பெருக்கு திருவிழாவை, காங்கேசன்துறையில் பல ஆண்டுகளாக கொண்டாடப் படாத இவ்விழா, மீண்டும் ஏற்பாடு செய்து, கிராம மக்களுக்கு நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக இதை மாற்றி அதனூடாக பாரம்பரியத்தின் மேன்மையை தெளிவு படுத்த வேண்டும் எனத் தத்தா நம்பினார். பேரன் அர்ஜுன் மற்றும் பிற கிராமவாசிகளின் உதவியுடன், ஏற்பாடுகள் தொடங்கியது. பெண்கள் மல்லிகை மற்றும் சாமந்தி மலர் மாலைகளை நெய்தனர், ஆண்கள் பழைய கோவில் மைதானத்தில் இருந்து குப்பைகளை அகற்றினர், குழந்தைகள் பாரம்பரிய நடனங்களை ஒத்திகை செய்தனர். ஒருமுறை அமைதியாகவும் சோகமாகவும் இருந்த கிராமம், சிரிப்பு, இசை மற்றும் எதிர்பார்ப்புகளின் ஒலிகளால் சலசலத்தது. திருவிழா நாளில், கோயில் மைதானம் வண்ண வண்ண அலங்காரங்களால், மகிழ்ச்சி தரும் சூழலாக ஏற்படுத்தப் பட்டது. தாத்தா, தனது பெருமைக்குரிய பழைய வீணையுடன், மைதானத்தில் அமைக்கப்பட்ட மேடையில் ஏறினார். அர்ஜுன் அவர் அருகில் இன்னும் ஒரு சின்ன வீணையுடன் நின்றான். பழங்கால மெல்லிசைகளின் முதல் இசைகள் காற்றை நிரப்பியபோது, கிராம மக்கள் அவசரம் அவசரமாக மேடையைச் சுற்றி கூடினர், அவர்களின் முகங்கள் புன்னகை மற்றும் கண்ணீரால் ஒளிர்ந்தன. இசை அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியையும் மற்றும் புது உற்சாகத்தையும் கொடுத்தது. அந்த இசை, அந்த பாடல், போரின் இருளைப் பொருட்படுத்தாமல், தங்கள் மரபுகளை உயிர்நாடியாகப் பிடித்துக் கொண்ட ஒரு மக்களின் கதையை சரங்களில் மீட்டுக் கூறியது. தாத்தாவும் அர்ஜுனும் வீணையில் வாசிக்கும் பொழுது, பாரம்பரியத்தின் இதயத் துடிப்பு கிராமத்தில் எங்கும் எதிரொலித்தது, இது கடந்த காலத்தின் வலிமை மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய வரலாற்றின் பாடங்களை ஒவ்வொருவர் இதயத்திலும் துடிக்க வைத்தது. இந்த தாத்தாவின் ஆடிப் பெருக்கு விழா காங்கேசன்துறைக்கும் அயல் கிராமங்களுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு காலத்தில் போரினால் அழிக்கப்பட்ட கிராமம், அதன் கட்டமைப்புகளை மட்டுமல்ல, அதன் மனநிலை அல்லது உணர்வுகளையும் மீண்டும் கட்டத் தொடங்கியது. தாத்தா தன்னுடன் என்றும், உயிருடன் துடிப்புடன் வைத்திருந்த, மரபுகள் ஒரு புதிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக மாறியது. அர்ஜுன், தனது தாத்தாவின் தூண்டுதலால், வீணையைக் கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தார். வீணையின் சரங்களில் அவன் வாசிக்கும் இசை, பாடல் தாத்தாவைப் போலவே, பாரம்பரியத்தின் ஒரு வண்ணமாகவே, ஒளியாகவே இருந்தது. வட மாகாணம் முழுவதிலுமிருந்து குழந்தைகள் அவனின் இந்த பாரம்பரியத்தின் இதயத் துடிப்பில், இசையில் இழுக்கப்படத்துடன், அதனுடன் சேர்ந்து ஒரு மாற்றமும் மெல்ல முளைவிடத் தொடங்கியது. ஒரு விதை என்பது ஒருதுளி விருட்சம்! ஒரு பெரிய ஆலமரமானாலும் சரி, ஒரு சிறிய கடலைச் செடியானாலும் சரி, அது ஒரு விதைக்குள்தான் அடங்கி இருக்கிறது. விதைகள், தாங்கள் நல்லமுறையில் முளைத்து வருவதற்கு தகுந்த பருவகாலம் வரை மண்ணுக்குள் பல வருடங்கள் கூட காத்துக்கிடக்கின்றன. ஆடிப்பெருக்கு என சொல்லப்படும் ஆடிப்பதினெட்டாம் நாள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆடிப்பட்டத்தை உறுதிசெய்யும் என்பது நமது கலாச்சாரத்தில் ஒரு நம்பிக்கையாக இருக்கிறது. என்னதான் ஆடிப்பட்டம் வந்துவிட்டாலும் நம்மிடம் விதைப்பதற்கு விதை இருப்பது மிக மிக முக்கியம். எனவே நமக்கான விதைகளை நாமே சேகரித்து தரமான இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்வது அவசியமாகிறது. அப்படியான தரமான பாரம்பரியத்தை தாத்தாவிடம் இருந்து பெற்று, அர்ஜுன் தன் வீணை மூலம் விதைக்கத் தொடங்கினான். அவனின் வீணையின் ஒலிகள், இசைகள் ஒரு காலத்தில் மோதலால் அமைதியிழந்து மக்களின் மனதில், கிராமத்தின் காற்றில் நிரப்பியது, இது பாரம்பரியத்தின் நீடித்த இதயத் துடிப்புக்கு ஒரு சான்றாகியது. இலங்கையின் வடக்கு மாகாணத்தில், மே 2009 இல் போர் முடிவுக்கு வந்தது வெறும் முடிவு அல்ல, ஒரு தமிழன் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ளும் ஆரம்பம். பாரம்பரியத்தின் சக்தி, ஒற்றுமை மற்றும் அதில் மக்களின் இன்றைய பின்னடைவு ஏன் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து, மேலோங்கும் எதிர்காலத்தை நோக்கி, பாரம்பரியத்தின் இதயத் துடிப்பாக அவர்களை வழிநடத்தியது, அவன், அவனின் தாத்தா தேடி விதைத்த வீணையின் மெல்லிசைகள்.! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"அவளுக்கென ஓர் இலட்சியம்"
"அவளுக்கென ஓர் இலட்சியம்" ஆதிகாலத்தில் வயல்வெளிகளிலும், சேரிப்புறங்களிலும், ஆங்காங்கே வாழ்ந்து வந்த மக்கள் தமது தேவைகள் கருதியும், ஒருவருக்கு ஒருவரான தொடர்புகளை இலகுவாக்கிக் கொள்ளவும், ஒரு இடத்தை மையமாக வைத்து கூடி வாழ்ந்தார்கள், அது காலப்போக்கில் ஊர், அல்லது கிராமம், என பல பெயர்களில் அழைக்கப்படலாயிற்று, பின்னர் காலம் செல்லச் செல்ல மனிதர்கள் தமது தேவைகள் அதிகரிக்க, அதிகரிக்க கிராமங்களிலிருந்து சற்று நகர்ந்து வாழத் தொடங்கினார்கள், அது காலப்போக்கில் நகரமாக மாறிவிட்டது. ஆனால் இன்றும் சில கிராமங்கள் எதுவித முன்னேற்றங்களுமின்றி இலங்கையில் இருப்பதைக் காண்கிறோம். அப்படியான ஒரு கிராமம் தான் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்குப் பக்கமாக மட்டு நகரிலிருந்து சுமார் 35 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது கோளறைப்பற்று (வாழைச்சேனை) பிரதேசமாகும், வாழைச்சேனைப் பிரதேசத்தில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட பகுதிதான் நாசிவன்தீவு கிராமமாகும். இந்த கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடியாகும். அதிலும் குறிப்பாக 75சதவீதமானவர்கள் வாவி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனையவர்கள் கடல் மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு கல்வி நிலைமையும் போதியளவில் இல்லை . ஒரே ஒரு பாடசாலை தான் இங்கு உள்ளது. அதுமட்டும் அல்ல, இங்கு விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான் படித்தவர்கள். அப்படியான இந்த கிராமத்தில் தான் மீரா என்ற உறுதியான பெண் வாழ்ந்தாள். அவள் தன் கிராமத்தில் வேறு எவரையும் போலல்லாமல், அவளது தளராத மனப்பான்மை மற்றும் அறிவுக்கான தீராத தாகத்துடன் காணப்பட்டாள். எனினும் அங்கு நிலவும் கல்வி வசதிகள் மிக மிகக் குறைவு. குறிப்பாக ஆசிரியர் பற்றாக்குறை, தளபாட வசதிகள், கட்டிட வசதி மற்றும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கான பொருட்கள் பற்றாக்குறை எனப் பல சொல்லிக்கொண்டு போகலாம். இருப்பதோ ஒரே ஒரு பாடசாலை , அதுவும் உயர் வகுப்பு அங்கு இல்லை. இந்த சூழலில் தான் சிறு வயதிலிருந்தே, மீரா தனது கிராமத்தின் எல்லையைத் தாண்டிய ஒரு கனவைக் கொண்டிருந்தாள். பெண்களை பாரம்பரிய பாத்திரங்களுக்குள் கட்டுப்படுத்தும் ஒரே மாதிரியான மற்றும் சமூக எதிர்பார்ப்புகளை உடைத்து, ஒரு திறமையான விஞ்ஞானியாக மாற அவள் ஏங்கினாள். அவளுடைய தாழ்மையான படிப்பிற்கான ஆரம்பம் அவளுடைய அபிலாஷைகளை மட்டுப்படுத்தக்கூடாது என்று அவள் முழுக்க முழுக்க நம்பினாள். ஒவ்வொரு நாளும், மீரா தனது வீட்டிற்கு அருகிலுள்ள பழங்கால ஆலமரத்தின் அடியில் மணிக்கணக்கில் செலவழிப்பாள், அவள் முழு மன உறுதியுடன் அவள் தந்தை மூலம் நகரத்தில் இருந்து பெற்ற புத்தகங்களில் ஆழ்ந்தாள். அவள் பக்கங்களைத் அறிவு பசிக்கு தின்று, பிரபஞ்சம், வேதியியல் மற்றும் கணிதம் பற்றி கற்றுக்கொண்டாள். அறிவியலின் அற்புதங்களை அவள் உள்வாங்கும்போது அவள் கண்கள் ஒளிர்ந்தன. தான் அவர்களைப்போல கிராமங்களுக்கு எதாவது சொந்த கண்டுபிடிப்புகள் செய்து பங்களிப்பு அளிக்கவேண்டும் என்று நினைத்து உற்சாகத்தில் அவள் இதயம் மூழ்கியது. மீரா வயதாகி உயர் வகுப்புக்கு நகரத்துக்கு போகவேண்டிய சூழல் வரும்பொழுது, அவரைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து எதிர்ப்பையும் ஏளனத்தையும் எதிர்கொண்டார். ஆனால் மீரா அசையாமல் உறுதியாக இருந்தாள். நாலாயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய குலா இறைவிக்கான இலக்கிய பாடல் ஒன்றில் [In a hymn, the goddess Gula], ஒரு பெண்ணின் வாழ்க்கையின் நிலையை பின்வருமாறு விவரிக்கிறது: "நான் ஒரு மகள், நான் ஒரு மணமகள், நான் ஒரு மனைவி, நான் ஒரு வீட்டு காவலாளி" ["I am a daughter, I am a bride, I am a spouse, I am a house keeper"]. அதே போல இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் தனது புறநானுறு 312 இல் "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே" என்றும் குறுந்தொகை -135 இல் பெண்ணை 'மனை உறை மகளிர்' என்றும் கருதுகிறது. அந்த மனநிலையில் தான் அவளது அந்த கிராம மக்கள் பலர் இருந்தது கவலை அளித்தாலும், மீரா அவர்களைக் குறை கூறவில்லை. உயர்வகுப்பில் மிக திறமையாக சித்தியடைந்த மீரா, சில அவளுடன் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களின் ஆதரவுடனும், பெற்றோரின் அசைக்க முடியாத ஊக்கத்துடனும், யாழ் நகரத்தில் உள்ள புகழ்பெற்ற யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உதவித்தொகையைப் பெற்று, தனது கிழக்கு மாகாண கிராமத்தை விட்டு வெளியேறிய அவள், தனக்குக் காத்திருக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக, தன் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத்தை யாழ்ப்பாணத்தில் தொடங்கினாள். மீராவிற்கு பல்கலைக் கழக வாழ்க்கை எளிதாக இருக்கவில்லை. அவர் பெரும்பாலும் அறிவியல் வகுப்புகளில் ஒரே ஒரு பின்தங்கிய கிராமத்து பெண்மணியாக இருந்தார், இதனால் சில சமயங்களில் அவரது சகாக்களிடமிருந்து ஏளனத்தை எதிர்கொண்டார். ஆனால் மீராவின் அறிவின் மேல் உள்ள மோகம் அவளிடம் இருந்து பிரிக்க முடியாததாக இருந்தது. அவள் படிப்பில் சிறந்து விளங்கினத்துடன், தன் பாடம் சம்பந்தமான ஆராய்ச்சி மற்றும் சோதனைகளில் தன்னை முழுதாக அர்ப்பணித்துக் கொண்டாள். மீனவர்களிடையே தசைக்கூட்டு அறிகுறிகள் [musculoskeletal symptoms], தோல் கோளாறுகள் மற்றும் பார்வைக் குறைபாடு பொதுவாக அதிகமாக காணப்படுவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துவதை அறிந்த மீரா, அந்த துறையில் தனது கவனத்தைக் கூடுதலாக செலுத்தினார். வருடங்கள் ஓடின, மீராவின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. அவர் தனது துறையில் ஒரு முன்னணி புகழ் பெற்ற வல்லுனராக மாறினார். தனக்கான தடைகளை உடைத்து, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக தன் கனவை, இலட்சியத்தை அடைந்து எல்லோருக்கும் ஒரு உதாரணமாகவும், தன் கிராமத்துக்கு, அங்கு வாழும் அவளின் உறவுகளுக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். என்றாலும் மீராவின் பயணம் தியாகங்கள் இல்லாமல் இல்லை. அவள் தனது கிராமத்தின் வசதியையும், அவளுடைய குடும்பத்தின் அரவணைப்பையும், அவளுடைய கலாச்சாரத்தின் பரிச்சயத்தையும் வெகு தூரம் தவறவிட்டாள். ஆனாலும், அவளது அறிவின் நாட்டமும், மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவளது உறுதியும் என்றும் சோர்வடைய வில்லை. இறுதியில், மீரா ஒரு புகழ்பெற்ற அறிஞராக, மருத்துவராக நாசிவன்தீவு உள்ளடங்கிய 32 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (வாழைச்சேனை) க்கு திரும்பினார். மீராவின் இந்த இலட்சிய வெற்றி, சமூக எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் கனவு காணத் துணிந்த ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு உத்வேகம் கொடுக்கக் கூடியதாக அமைந்தது. அவர் தனது கிராமத்தில் ஒரு தனியார் மருத்துவ ஆராய்ச்சி மையத்தையும் தனது பொருளாதார வசதிக்கு ஏற்ப தொடக்கத்தில் சிறிதாக நிறுவி உள்ளூர் இளைஞர்களுக்கு அறிவியல் உலகில் தங்கள் திறனை ஆராய வாய்ப்புகளை வழங்கினார். அவரது கதை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்திகள் மூலம் பரவி, தங்கள் சொந்த பாதைகளை செதுக்க விரும்பும் எண்ணற்ற நபர்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக அது மாறியது. தளராத மன உறுதியுடனும், தன்மீது உறுதியான நம்பிக்கையுடனும் இருந்தால், உயர்ந்த லட்சியங்களையும் அடைய முடியும் என்பதை நிரூபித்தவர், கனவு காணத் துணிந்த கிழக்கு மாகாண பெண்மணி மீரா என்ற புகழ் இலங்கை முழுவது பரவி, அவளுக்கும் அவளது கிராமத்துக்கும் பெருமை சேர்த்தது! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"உங்கள் சிறப்பு நாளில் எங்கள் அன்பான மகளுக்கு" / "To Our Dearest Daughter on Your Special Day" [12 / 07/ 2024]
"உங்கள் சிறப்பு நாளில் எங்கள் அன்பான மகளுக்கு" / "To Our Dearest Daughter on Your Special Day" [12 / 07/ 2024] [இங்கு, நாட்டிய உடை முழுவதும் தாயின் சேலையில் இருந்து தைத்ததுடன், இந்த பிரத்தியேக ஆட்டம் தாய்க்கு அர்ப்பணிக்கப் பட்டதும் ஆகும் / Here dance dress is completely made out from mother’s sari and dance is dedicated for MOTHER] "ஜூலை பன்னிரண்டாம்நாளில் நீலவானத்தின் கீழ்பிறந்தவளே அதிசயமாக வந்தவளே இன்று கொண்டாடுகிறோம்! பெருமைக்குரிய மகளே கலங்கரை விளக்கே அம்மாவின் வாழ்த்து விண்ணில் ஒலிக்கிறேதே!!" "உறுதியான கைகளுடனும் அன்பான இதயத்துடனும் மகிழ்வான புன்னகை ஆறுதல் தருகிறதே! கணவரும் மூன்று மழலைகளும் வாழ்த்த அன்பிலும் சிரிப்பிலும் நீங்கள் செழிப்பீர்களே!!" "பரதநாட்டிய அருளில் மேடை ஏறினாய் தாயின் சேலையில் பயபக்தியுன் ஆடினாய்! நெஞ்சம்கசிய கண்ணீர்தளும்ப மேலே பார்த்தாய் அம்மாவுக்கு அர்ப்பணித்தாய் அரங்கேற்றம் மகிழ்ந்ததே!!" "அன்புக்கோர் இலக்கணமானவள் அன்னை என்றாய் அகிலத்தில் அவளைப்போல் வேறெவரும் இல்லையென்றாய்! அன்பான தாயாய் இன்று நீயேயானாய் அறிவுடன்பண்பாடுடன் வாழ அப்பாவின் வாழ்த்துக்கள்!!" "எங்கள் மூத்த மகளுக்கு அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] "On this twelfth day of July, under the sky so blue, We celebrate the wonder that is you! Our eldest, our pride, a beacon so bright, Mum's greetings are ringing in the sky!" "With steady hands and a heart so kind, Healing smiles, bringing comfort to all! Three little ones and a husband you cherish, In their laughter and love, you truly flourish!" "But today, let's journey back in time, To your Arangettam, a moment so prime! In Bharatanatyam grace, you took the stage, A vision of beauty, turning a life's new page!" "In a sari spun from mother's care, Every twirl and step was a prayer! You danced for her, in reverence and love, A gift from your heart to the heavens above!" "You sang, "Mother is the definition of Love, And she remains unmatched in the whole world!" Today, you yourself became a loving mother, Dad's best wishes for a wise and cultured life!" "Wishing our daughter a wonderful birthday filled with love and joy!" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
-
"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 25 மண்ணின் பூப்பை நாம் மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போல் பெண்ணின் பூப்பையும், அதாவது பெண்ணின் உடல் தாய்மைக்கு உரிய கன்னித் தன்மையை அடையும் நிகழ்வையும் கொண்டாடும் மரபு, பிறப்பு சடங்குகளை அடுத்து வருகிறது. கிராமப் புறங்களில் சடங்கு என்றாலே அது பூப்புச் சடங்கையே பொதுவாகக் குறிக்கும். 10 முதல் 14 வயது என்பது பெண்கள் பூப்பெய்தும் வயது என்பது பொதுவான விதி. எனவே பெரும்பாலும் மங்கை என்ற மகளிர் பருவத்தில் இந்த பருவ மாற்றம் நடை பெறுகிறது எனலாம், எனினும் சிலவேளை முன்பும், அதாவது பெதும்பை பருவத்திலும் அல்லது பின்பும், அதாவது, மடந்தை பருவத்திலும் நடை பெறலாம். சுமங்கலிப் பெண்கள் கூடி மஞ்சள் கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் [வாயைத் திறந்து நாக்கை வாயின் பக்கவாட்டிலோ மேலும் கீழுமாகவோ அசைத்து மங்கள ஒளி எழுப்பி] புனித நீராட்டுவதும், எதிர்காலத்தில் அவள் குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக ஊட்டச் சத்தான உணவு வகைகளை கொடுப்பதும், பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற நிலையை உறவினர்களுக்கும் உலகத்தார்க்கும் தெரிவிப்பதும், பூப்புச் சடங்கில் தாய்மாமன் முதலிடம் அல்லது தலைமை வகிப்பதும் முக்கிய நிகழ்வாகும். பொதுவாக உளுந்தில் செய்த உணவுகளும், எள் கலந்த உணவுகளும் மற்றும் உணவில் அதிகம் நல்லெண்ணெயும் சேர்க்கப் படும். பெண்ணின் பூப்பெய்தல், அதை ஒட்டிய நிகழ்வுகளை மறைமுகமாக தெரிவிக்கும் ஒரே ஒரு பண்டைய பாடலாக, சங்கப்பாடல், புறநானுறு 337 இன்று எமக்கு கிடைத்துள்ளது. அதில் வரி: "காண்டற்கு அரியளாகி மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு மனைச் செறிந்தனளே வாணுதல் இனியே அற்றன்றாகலின் தெற்றெனப் போற்றிக்" [7 - 13] முக்கியமானது. அவள் பிறரால் காண்பதற்கு அரியவளாக, பெண்மை நிறைந்த [பூப்பு எய்திய] பொலிவோடு [அழகுடன்], மனைக்குள் திகழ்ந்தாள். நீரில் நனைத்துக் காயவிடப்பட்ட மெல்லிய துணி காற்றில் அசைவதுபோல் நடுங்கினாள் [அசைந் தாள்]. கூந்தலில் அவள் ஊட்டிய குளுமையான அகில் புகை தந்த நறும்புகை மெதுவாகச் சென்று படிந்த கபில நிறமுடைய பெரிய அரண்மனையில் மறைந்து இருந்தாள் என்கிறது. [She is hiding in her brown mansion filled with delicately moving fragrant smoke of akil wood. She trembles like a fine washed cloth hung to dry]. இப்படியான சடங்குகளை ஒருவர் அல்லது ஒரு குழு, ஒரு குடும்ப நிலையில் இருந்து இன்னொரு குடும்ப நிலைக்கு மாறிச் செல்வதற்கான சடங்குகள் [Rites of passage) என்றும் கூறலாம். உதாரணமாக பெண்ணுக்கு நான்கு இன்றியமையாத வாழ்க்கை வட்டச் சடங்குகள் வழியாக பூப்பு, வதுவை [திருமணம்], மகப்பேறு, கைம்மை [widowhood] ஆகிய மாற்றங்கள் நிகழ்கின்றன என்பார். இந்த மாற்றங்களின் ஊடாக குமரி, மனைவி, தாய், கைம்பெண் முதலான குடும்ப / சமூக பாத்திரங்களை ஒரு பெண் ஏற்கிறாள் எனலாம். பூப்பு, யாழ்ப்பாணத் தமிழில் “சாமத்தியச் சடங்கு” என்று பொதுவாக அழைக்கப்படும். தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு என்றும் கூறலாம். “பூப்பு" ஓர் உடல் இயலின் பதிவு, அவ்வளவு தான்! பூப்புனித நீராட்டு விழாக்களைப் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், அப்படியான ' வயதுக்கு வருதல்' [‘Coming of Age’] சடங்குகள் அநேக மான பூர்வீக குடிகளிடம் இன்னும் உண்டு. ஈழத்தில் பூப்புனித நீராட்டு விழா மதங்களுக்கு அப்பாற்பட் டது. இந்துக்கள் மட்டுமன்றி கிறித்தவ ஈழத் தமிழர்களும் தமது பெண் குழந்தைகளுக்கு சாமத்தியச் சடங்கை, இந்துக்கள் போலவே, ஆலாத்துதல் (ஆரத்தி) போன்ற சடங்குகளைச் செய்து கொண் டாடுவார்கள். அது மட்டும் அல்ல இங்கு பெண்கள் பொட்டு வைப்பது, தாலி அணிவது, இப்படியான சடங்குகள் செய்வது எல்லாம் தமிழ்ப் பாரம்பரியமாக மட்டுமே கருதப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் மத்தியிலும் திருமணம், பூப்புனித நீராட்டு போன்ற சடங்குகளில் தாய் மாமனுக்குத் தனி மரியாதை உண்டு. இலங்கையில் வேடர் சமுதாயம், பேய்கள், துர்தேவதைகள், இரத்த மற்றும் சதை போன்றவற்றில் மகிழ்வடைகின்றன என நம்புகிறார்கள் [The Veddas of Sri Lanka believe demons relish blood and flesh]. எனவே பூப்படைத்தலில் இரத்தம் ஒரு முக்கிய இடத்தை பெறுவதால், பேய்களின் கோபத்தை தணிக்க அல்லது குறைக்க சில நடவடிக்கைகளை அவர்கள் கையாண்டார்கள். அதுவே இன்று சிங்கள சமூகத்தினரிடமும் ஒரு சடங்காக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது. இது இலங்கை இந்தியா மக்களைத் தவிர, மேலும் ஆப்கானிஸ்தான், ஜப்பான், பொலினேசியா, கொலம்பியா, அந்தமான் தீவுகள், நியூ கினி மற்றும் மத்திய ஆபிரிக்கா [Afghanistan, Japan, Polynesia, Colombia, the Andaman Islands, New Guinea and Central Africa] போன்ற நாடுகளிலும் காணப் படுகின்றன. இலங்கையின் ஒரு புத்த புராணக் கதை, மகா சம்மதவின் மகள், ஒரு வளர்நிலைச் சடங்கில் [Rites of passage] ஈடு படத்தை குறிக்கிறது [Maha Sammata was the first monarch of the world according to Buddhist tradition.]. தமிழ்ச்சமுதாயத்தில் நிலவும் தாய் தெய்வ வழிபாடும் கொற்றவை வழிபாடும் இதை உறுதிப்படுத்தும். இந்த தாய்தெய்வம் மிகப் பழமையான தெய்வம் என்பதால் "பழையோள்" என்றும் மணிமேகலையில் "முதியோள் கோட்டம்": என்றும் குறிக்கப்படுவதைக் காணலாம். தாய்வழிச் சமூகத்தின் எச்சமாகவே பெண் பூப்படைதலைக் கொண்டாடும் சடங்கு பல்வேறு சமூகங்களில் கடைப்பிடிக்கப்படுகிறது. எனினும் பெண்ணுக்கு இயற்கை வழங்கியிருக்கும் மறு உற்பத்தி அதிகாரம் கண்டு பொறாமை கொண்ட ஆண் சமுதாயமும், ஆரிய இனப்பண் பாட்டின் தாக்கமும், இன்றைய மத நம்பிக்கையும், முதலாளித்துவம் கலந்து பெண்ணை அடிமைப் படுத்த முனைந்த காலத்தில் தான், பெண்ணின் பூப்புடைதல் கொண்டாட்டத்தை ஆணின் நுகர்ப் பொருள் கொண்டாட்டமாக்கி, பாலியல் உறவில் ஆணின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் சடங்காகி விட்டது என்பது தான் உண்மை. அதனால்த் தான் பெண்ணின் பூப்படைதலும் மாதவிலக்கும் தீட்டாகிப் போனது எனலாம். எனவே தேவையற்ற சடங்குகளை ஒழிப்பதன் மூலமே நிகழ் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளமுடியும் என நம்புகிறேன். வாழ்க்கை வட்டச் சடங்குகளில் இனி வருபவை திருமணச் சடங்கும், இறுதியாக மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கிய சடங்குகளின் முடிவாக, அவன் இறந்த பின்பும் தொடரும் இறப்புச் சடங்கும் ஆகும், அவை அடுத்த அடுத்த பகுதிகளில் ஓரளவு விரிவாக தரப் பட உள்ளது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 26 தொடரும்
-
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
எல்லோருக்கும் நன்றிகள்
-
"காதலே கலையாதே"
"காதலே கலையாதே" உலகப் புகழ் பெற்ற காதலர்கள் என இன்று நாம் போற்றும் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, சங்க இலக்கிய ஆதிமந்தி - ஆட்டநத்தி இப்படி யாரை எடுத்தாலும் அங்கு காதல் வாழ்ந்ததாக முற்றும் முழுதாக சொல்லமுடியாது. பல சோகத்தில் முடிந்தன, பல மரணத்தில் முடிந்தன என்பதே உண்மை. என்றாலும் "காதலே கலையாதே" என்ற வார்த்தைக்கு அர்த்தமும் மதிப்பும் இருப்பதை காண்கிறோம். என் வாழ்வும் இப்படி ஒன்றோ என எண்ணத் தோன்றுகிறது. மும்தாஜ் - ஷாஜஹான் மற்றும் உதயணன் - வாசவதத்தை காப்பியத்தில் நாலு அல்லது நாலுக்கு மேற்பட்ட மனைவிகளை காதல் திருமணம் செய்துள்ளனர்? இதில் திருமணம் செய்து கொண்ட மற்ற பெண்கள் காவிய நாயகியின் வாழ்க்கையைப் தாமும் பகிர்ந்து கொண்டவர்கள் என்பது இங்குக் கருத்ததக்கது. எனவே "காதலே கலையாதே" என்பதுக்கு இங்கு அர்த்தம் இல்லை. அதே போல அந்தோனி கடமையை மறந்து காதலின் பின்னால் சென்றதால் போரில் வீழ்ச்சி அடைந்து, உயிரை நீத்தார். இங்கு "காதலே கலையாதே" என்பதுக்கு ஓரளவு அர்த்தம் இருந்தாலும் இதுவும் எனக்கு உடன்படாத ஒன்று. மஜ்னூன் போல தகுதியற்ற, நிறைவேறமுடியாத காதலும் எனக்கு விருப்பம் இல்லை. அதனால் தானோ என்னவோ ஆதிமந்தி - ஆட்டநத்தி காப்பியத்தை நான் பலதடவை வாசித்துள்ளேன். அதன் பிரதிபலிப்போ என்னவோ ஆதிமந்தி போல ஒருவள் இப்ப என் கனவில் வரத் தொடங்கிவிட்டாள்! ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் [மயங்கி] புலம்பிக் கரை யோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின் சென்று, ""கச்சினையும் கழலினையும் தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினையும் உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய (பொருநனாகிய) ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கதறினாள். "காதலே கலையாதே" என்றதின் அர்த்தத்தை அங்கு நான் அவள் கதறலில் காண்கிறேன்! அதைத்தான் இந்த நிலையற்ற வாழ்வில், நிலையான காதலாகக் காண்கிறேன்! நான் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று இப்ப கொழும்பில் வேலைசெய்யத் தொடங்கியுள்ளேன். நான் இணைந்து ஒரு மாதத்தின் பின் எனக்கு நிர்வாக உதவியாளராக அவள் வந்தாள். பெயர் சுகந்தினி, விஞ்ஞான பட்டதாரி. நாம் இருவரும் ஒரே அறையில் இருந்து தான் பணிபுரிய தொடங்கினோம், அவளை விட என் அறையில், தட்டெழுத்தாளர், ஏவலாள் [பியூன்], எழுத்தர் [குமாஸ்தா] என சிலரும் இருந்தனர். ஆனால் வேலைவிடயமாக கூடுதலாக சுகந்தினியுடன் தான் பழக்கவேண்டி இருந்தது. அது தான் அவளுடன் கொஞ்சம் நெருக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். சுகந்தினிக்கு அவளுடன் பல்கலைக்கழகத்தில் படித்த ஒரு தோழியும் இருந்தாள். இருவரும் ஒரு அறை சின்ன வீட்டில் [studio apartment] ஒன்றாக இருந்தார்கள். இது நான் வாடகைக்கு இருக்கும் ஸ்டுடியோ அபார்ட்மென்ட்டில் இருந்து ஐந்நூறு மீட்டர் தான் இருக்கும். அவளின் தோழி, கொழும்பு விவேகானந்த தேசிய பாடசாலையில் ஆசிரியராக அண்மையில் பொறுப்பேற்று இருந்தார், எம் குடியிருப்புக்கள் கொட்டாஞ்சேனையில் இருந்ததால், அவளின் தோழி நடந்தே வேலைக்கு போய்விடுவார். சுகந்தினிக்கும் எனக்கும் வேலைத் தளத்துக்கு போவதற்கு அண்மையில் உள்ள பேருந்து நிலையம் புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடைக்கு முன்னால் இருந்தது. எனவே பல நேரங்களில் ஒன்றாகவே பயணங்கள் இருந்தன. வேலைத்தளத்தில் இருவரும் தம்தம் வேலையில் இருப்பதால், பெரிதாக தனிப்பட்ட விடயங்கள் கதைப்பது இல்லை, ஆனால் இந்த பயணத்தில் தான் நாம் ஒருவரை ஒருவர் அறியத் தொடங்கினோம். அது தான் எமக்கிடையில் ஒரு நெருக்கத்தை, அன்பை வளர்க்கத் தொடங்கியது. அவளின் அறிமுகம் வந்து ஒருமாதம் கழிய, எனக்குள் அவளைப்பற்றிய எண்ணம் தான் எந்தநேரமும். ஆனால் வேலை நேரத்தைத் தவிர. பேரறிஞர் அண்ணா சொன்ன 'கடமை, கண்ணியம் கட்டுப்பாடு' நான் என்றும் மறப்பதில்லை. பெரியாரின் சீடராக வலம் வந்த போது, இவர் சி.என்.ஏ. என்ற மூன்று எழுத்தால் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத் தக்கது. அண்ணா ஒரு கூட்டத்தில் வெறும் ஐந்து வினாடிகள் மட்டுமே பேசிய சம்பவமும் உண்டு. அது தேர்தல் நேரம். அவர் பேசியது "மாதமோ சித்திரை, மணியோ பத்தரை, உங்களை தழுவுவதோ நித்திரை, உதயசூரியனுக்கு இடுவீர் முத்திரை"...... என்பதே அந்தப் பேச்சு. அவரின் அடுக்கு மொழியில், நேர்மையில், மக்களுக்கான சேவையில் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். இதில் அதிசயம் என்னவென்றால், என்னைவிட அண்ணாவில், தமிழில் கவரப்பட்டவள் சுகந்தினி, ஆகவே இருவரும் நல்ல நண்பர்களாக இணைய அதுவும் ஒரு தூண்டுதலாக இருந்தது! சுகந்தினியும் அவளின் தோழியும் வார இறுதியில் ஒருநாள் காலிமுகத்திடல் போவது வழமை, ஆனால் என் அக்கா, அண்ணா குடும்பம் கொழும்பில் இருந்ததால், நான் அவர்கள் வீட்டிற்கு குட்டி மருமக்களுடன் விளையாட போய்விடுவேன். அவளின் அறிமுகம் கிடைத்து இது இரண்டாவது மாதம். அன்பு என்ற உணர்வு, வேறு ஒரு கோணத்தில் பரிணாமம் அடைவது போல எனக்குத் தோன்றியது? அவள் இப்ப இன்னும் நெருங்கி வர தொடங்கி விட்டாள், ஏன் நானும் கூடத்தான்! இதைத்தான் காதல் என்கிறார்களோ? நான் அறியேன் பராபரமே! ஒரு நாள் என்னையும் காலிமுக திடலுக்கு வரும்படி கூறினாள், ஆனால் எனக்கு உண்மையில் ஆசை இருந்தாலும், குட்டி மருமக்கள் எனக்காக காத்திருப்பார்கள் என்பதால், நான் போகவில்லை. அடுத்தநாள் அவளின் தோழி எனக்கு முறையிடும் பொழுதுதான் அவளின் காதலின் ஏக்கத்தை முழுதாக அறிந்தேன்! ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காண வில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ .. அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள். ஓ .. என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில், தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை" என, "தனக்கேற்றவனாக கருதிய தலைவனை, ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காண முடியவில்லை" என்று அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்ட அந்த காட்சிதான் அப்பொழுது என் மனதில் வந்தது! எனக்கும் அவள் மேலான உணர்வு மேலும் அதிகரிக்க அது வழிவகுத்தது. இப்ப நாம் இருவரும் ஒருவர்க்கு ஒருவர் காத்திருந்து பேருந்தில் ஒன்றாய் பயணிக்கிறோம், என்றாலும் வார இறுதி காலிமுகத்திடல் கொஞ்சம் பிரச்சனைதான் எனவே வாரநாளிலேயே, வேலையில் இருந்து ஒன்று இரண்டு நாள் நேரடியாக அங்கு போய் இரவு உணவும் ஒன்றாக உண்ணத் தொடங்கினோம். அப்ப தான் அவள் ஒரு நாள் மிக அருகில் நெருங்கி இருந்து, என்னை அணைத்தவாறு, 'காதலே கலையாதே' என்று திருப்பி திருப்பி சொன்னாள். எனக்கு கோபமே வந்துவிட்டது. 'ஏன் இந்த ஐயப்பாடு ?' நான் கொஞ்சம் அதட்டி கேட்டேன். அவள் பதில் சொல்லவில்லை. கண்ணீர்தான் என் கையில் விழுந்து தெறித்தன, நானும் அவளை அணைத்தவாறு அலைகள் கரை மோதுவதை பார்த்தேன். 'நாம் காதல் அலையில் மிதக்கிறோம், கட்டாயம் ஒன்றாக இருவரும் கல்யாணம் என்ற கரையில் சேருவோம், காதல் என்றுமே கலையாது' என்றேன். "திதலை மாமை தளிர் வனப்பு அழுங்க, புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப், பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி, பேதுற்றிசினே காதல்அம் தோழி!" என்ற அகநானூறு 135 பாடல் தான் எனக்கு ஞாபகம் வந்தது. என் மேனி தளிர் போல் வனப்புக் கொண்டது. புள்ளிகளுடன் கூடிய மாமை நிறம் கொண்டது. அந்த அழகு கெடும்படி நெற்றியில் பசப்பு பாய்ந்துள்ளது. பீர்க்கம் பூ போல மஞ்சள் நிறப் பசப்பு பாய்ந்துள்ளது. அதனால் மை எழுதிய என் கண் அழுகிறது. ஆதிமந்தி போல என் அறிவு மழுங்கிவிட்டது. பித்துப் பிடித்துக் கிடக்கிறேன். என்மீது காதல் கொண்டுள்ள தோழா ! இதனைக் கேள். என அவள் எனக்கு சொல்லுவது போல அது இருந்தது! காதலை காணாமல், அனுபவிக்காமல் எவருமே பொதுவாக வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது, ஆனால் அந்த காதல் அவர்கள் வாழும் சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறாக இருக்கலாம் , ஆனால் காதலும் அது கொடுக்கும் உணர்வும் என்றுமே மாற்றமடையாத ஒன்று! காதலில் வெற்றி பெற்றால் மட்டும் தான் இன்பம் அல்ல, அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே ஒரு பெரும் மகிழ்வுதான்! ஆமாம் ஒரு சமயம் கைஸைச் [மஜ்னூனை] சிலர் கல்லால் அடித்துப் பரிகசித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் லைலா அவ்வழியாகப் பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். மஜ்னூனன் மீது கல் எறியும் பரிதாபக் காட்சியைக் கண்டு அவள் துடித்தாள். “அடப்பாவிகளா! என் கைஸின் உடலை இப்படிச் வதைக்கிறீர்களே; நீங்கள் செத்து மடிக” என்று குமுறினாள். அதைக் கண்ட கைஸ், “என் அன்பார்ந்த லைலாவே, இவர்கள் என்னைச் வருத்தவில்லை. உன்மேல் நான் கொண்ட ‘காதல் கலையவில்லையா’ என்று அறிய உரைத்துப் பார்க்கின்றனர், என் உடலை; அவ்வளவு தான்” என்று கூறினான். அப்படித்தான் நான் என் காதலை நினைக்கிறன். கட்டாயம் அவளும் அப்படித்தான்! "காதலே கலையாதே" என்று நான் என்றுமே நினைக்கமாட்டேன்! தன்னில் தன் காதலில் நம்பிக்கை இல்லாதவர்கள் வேண்டும் என்றால் "காதலே கலையாதே" என்று சொல்லிக்கொண்டு திரியட்டும்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS"
"ஓரெழுத்து சொற்கள்" / "ONE-LETTER WORDS" The total letters in Tamil are 247, out of these 45 letters are one letter word. That means these 45 letters have a separate meaning. Let us know them!! / 247 தமிழ் எழுத்துக் களில் 45 க்கும் மேலான எழுத்துக்களுக்கு தனியாக பொருள் உண்டு என்பது எத்தனை பேருக்கு தெரியும்? தமிழில் உள்ள அந்த ஓரெழுத்து வார்த்தைகளும் பொருளும் கிழே தரப்பட்டுள்ளன. வாசித்து மகிழவும். ஆங்கில மொழியில் அப்படி ஒரு 2 அல்லது 3 சொல் மட்டுமே உண்டு. அவை: 'A' – used when mentioning someone or something for the first time in a text or conversation. 'I' – Used to refer to oneself as speaker or writer. 'O' – Used to express surprise or strong emotion, commonly used in poetry அ =எட்டு அ = அழகு ஆ =பசு ஈ =ஒரு பூச்சி, கொடு உ =சிவன் ஊ =தசை ஐ =ஐந்து ஓ=மதகு, நீர் தாங்கும் பலகை கா =சோலை கு =பூமி கூ =பூமி கை =கரம் சா =இறப்பு சே =அழிஞ்சில் மரம், எருது சோ =மதில் தா =கொடு து =பறவை இறகு தே =நாயகன் தை =ஒரு மாதம் நா -நாக்கு நௌ =மரக்கலம் பா =பாட்டு பூ =மலர் வை =வைக்கோல் பே =மேகம் பை =பாம்புப் படம், உறை மா =மாமரம், பெரிய மீ= ஆகாயம் மூ =மூன்று மை =அஞ்சனம் யா =அகலம் வீ=பறவை தீ =நெருப்பு து= உணவு நீ = முன்னால் இருப்பவரை அழைக்கும் விளிச்சொல் கோ = அரசன் என்று பொருள் போ = கட, முன்னேறு, போய்விடு, புறப்படு
-
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??"
"யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "உலக வாழ்க்கையின் மகத்தான மேடையில் வரலாறு படைக்கும் இதயங்களின் மத்தியில் மானிடப் பிறவி எடுத்தவன் மனிதனா? மனிதம் கொண்ட ஒருவன் மனிதனா??" "வெறும் சதையும் எலும்பும் மனிதனல்லா வெறும் பலமும் செல்வமும் மனிதனல்லா வெறும் புகழும் பதவியும் மனிதனல்லா யாரடா மனிதன்? எங்கே இருக்கிறான்??" "கண்கள் விழித்து கருணை காட்டும் கொடுமையைக் கண்டு மனது குமுறும் அறிவுடன் அறிந்து உதவும் கரமும் எங்கே இருக்குதோ? அவனே மனிதன்!!" "துயரம் கண்டு அக்கறை காட்டி ஆறுதல் கொடுக்கும் புன்னகை உதிர்ந்து தனக்கென வாழாது உலகத்துக்கும் வாழும் அவனே மனிதன்! அவளே மனிதி!!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS"
"தமிழரின் உணவு பழக்கங்கள்" / "FOOD HABITS OF TAMILS" PART / பகுதி: 24 "பண்டைய சங்க தமிழரின் உணவு பழக்கங்கள் தொடர்கிறது" / "Food Habits of Ancient Sangam Tamils continuing" கறியை பற்றி நாம் மேலதிகமான விபரங்களை தேடினால், கறியில் பல வடிவங்கள் இன்று இருப்பதை காண்கிறோம். உதாரணமாக, இந்திய கறி, தாய் சிவப்பு பச்சை கறி, மலேசியன் கறி, சீனா கறி, ஜப்பான் கறி, கரீபியன் கறி, இலங்கைக் கறி, மொரிஷியன் கறி, பங்களாதேஷி கறி , பாக்கிஸ்தான் பால்டி கறி, பர்மிய கறி இப்படி பல இன்று உள்ளன, ஏன் பிரிட்டிஷ் கறி கூட இன்று உண்டு. அப்படி என்றால், எது உண்மையானது? இது ஒரு தீர்க்கமான வினாவாக இன்று காணப்படுகிறது. நீங்கள் ஆக்ஸ்போர்டு அகராதியை கொஞ்சம் பார்த்தீர்கள் என்றால், தமிழ் சொல் கறி, பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் நாட்டுக் குடிமக்கள் மூலம் ஆங்கில மொழிக்கு வந்தது தெரிய வருகிறது. அப்படியே கறி பிரியர்களின் இன்னும் ஒரு உணவின் ஆங்கில பெயரான பப்படமும் தமிழ் பெயரே, அதேபோல ஆங்கில பெயரான ரசம், கஞ்சி, மாங்காய் எல்லாம் தமிழ்ப் பெயரே. தமிழர்கள் கருமிளகை தமது கறியை மசாலா ஆக்க பாவித்தார்கள். ரோமானியர்கள், கிரேக்கர்கள், சீனர்கள், அரேபியர்கள் [இவர்கள் எல்லோரையும் கூட்டாக ஜவனர்கள் என அழைக்கப் பட்டார்கள்] மற்றும் ஆபிரிக்கர்களுக்கு தமது மசாலா அல்லது நறுமணப் பொருள்களை கிருஸ்துக்கு முன்பே இருந்து பல நுறு ஆண்டுகளாக ஏற்றுமதி செய்தார்கள் என வரலாறு கூறுகிறது. மேலும் 520 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பிரதேசங்களுக்கு போர்த்துக்கேயர் மிளகாயை முதல் முதல் அறிமுகப்படுத்தினார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. அப்படியே பல 130 மரக்கறிகளையும், உதாரணமாக, கோதுமை, தக்காளி, உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், மற்றும் பூசணி போன்றவற்றையும் அறிமுகப் படுத்தினார்கள். சுருக்கமாக எத்தனை விதமான கறிகள் இருந்தாலும், மூல கறி - தமிழ் கறி ஆகும். அதைத்தான் நாம் பகுதி 23 இல் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க பாடல் மூலம் பார்த்தோம். அசைவ உணவுகளான -மீன், ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, மான்கறி ,போன்ற உணவுகளின் குறிப்புகள் சங்க பாடல்களில் புதைந்து கிடைக்கின்றன. என்றாலும் நீரும் நிலமும் சேர்ந்து உண்டாக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தன. அதாவது சைவ உணவுகளான - சோறும் மற்றும் காய்கறி உணவுக்கும் ஆகும். எனினும் சைவ, அசைவ உணவுகளுக் கிடையில் வேறுபாடு ஒன்றும் பெரிதாக அங்கு எடுத்துக் காட்டப் படவில்லை. அது மட்டும் அல்ல, பெரும் பாலான குறிப்புகளில் இரண்டும் ஒன்றாக கலந்து சாப்பிடுவதாகவே உள்ளன. இதை அங்கு கண்டு எடுக்கப் பட்ட புதிய கற்காலம், பெருங்கற்காலம் [Neolithic and megalithic] சார்ந்த தொல்பொருள் சான்றுகள் மேலும் உறுதிப் படுத்துகின்றன. அது மட்டும் அல்ல, வேட்டை யாடும் கருவிகள், இறைச்சி வாட்டப் பட்டதை உறுதிப்படுத்தும் கருகிய எலும்புகள், எலும்புகளிலுள்ள மச்சை [marrow] அகற்றப் பட்டதற்கான அடையாளமாக, வெட்டப் பட்ட காயங்கள் உள்ள எலும்புகள் போன்றவையும் அங்கு கண்டு எடுக்கப் பட்டன. இது சமயம் அவர்களின் உணவை கட்டுப் படுத்த வில்லை என்றும் அல்லது அவர்களின் உணவு பழக்கங்களில் சமயம் ஈடுபடவில்லை என்றும் காட்டுகிறது. தமிழர்கள் மாட்டிறைச்சியை ஒரு உணவாக சாப்பிட்டதில் இருந்து, மாட்டை [பசுவை] தெய்வமாக்கி அதன் இறைச்சியை சாப்பாட்டில் இருந்து தவிர்த்தது, பொதுவாக வரலாற்று இடைக் காலத்தில், தமிழரின் சமயம், இந்து சமயத்திற்குள் உள்வாங்கப் பட்டதை தொடர்ந்து மாறிய சூழ்நிலையில் ஏற்பட்டது ஆகும். கரிகால் பெருவளத்தான் என்னும் அரசனிடம் பொருநன் [கூத்தன்] ஒருவன் பரிசு பெற்று வந்தான். அவன், தன் எதிரில் வந்த வேறு ஒரு பொருநனிடம் கரிகால் பெருவளத்தானிடம் சென்று பரிசு பெறும் வகையில் தனது அனுபவத்தை பகிருகையில், அந்த கவிஞன் வரைந்து காட்டுவது போல மிக நுணுக்கமாக ஒவ்வொரு விவரங்களையும் வரிசைக் கிரமமாக பாடினான். அதில், அவன் மாறுபட்ட இயற்கை வனப்புடைய நிலங்களுக் கூடாக காஞ்சிபுரத்தை நோக்கி போகையில், அந்த ஒவ்வொரு நிலத்திலும் வாழும் பண்டைய தமிழரின் வாழ்வை பற்றியும் அவர்களின் உணவு பழக்கங்கள் பற்றியும், தான் பாடிய சிறப்பு மிக்க பெரும்பாணாற்றுப்படையில் கூறிவைத்துள்ளான். இதில் சமையல் குறிப்புகளை அல்லது சேர்மனங்களைப் பற்றி விபரமாக கூறாவிட்டாலும், அந்த பண்டைய கால சமையல் பண்பாடு [கலாச்சாரம்] பற்றிய ஏராளமான தகவல்களை அங்கு அறியக் கூடியதாக உள்ளது. விசாலமான காட்டு வழியினூடாக சங்க கால கவிஞன் போகும் போது அங்கு ஈந்தின் [ஈச்சஞ் செடி] இலையாலே வேயப்பட்ட கூரை குடிசைகளை காண்கிறான். ஈந்தின் இலை முள் போன்று இருக்கும். எனவே கூரையில் அணிலும் எலியும் ஓடாமல் இருக்க ஈந்துக் குரம்பை குடிசைகளை பாலை நிலத்தில் வாழும் வேடுவர் பயன் படுத்தினர் .[ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை-88]. இப்படிப் பட்ட குடிசையில் வாழும் வேட்டுவப் பெண்களின் அன்றாடச் செயல்களை அழகுற வருணிக்கும் கவிஞன், அவர்களின் செயல்களை கண்ணாற் காண்பது போல, வரிகள் 92-94, இல் சித்திரிக்கிறான். இரும்புப் பூண் பிடித்த வலிமையான பாரையால் நிலத்தை புழுதி பறக்கக் கிண்டி, அந்தக் கரம்பு நிலப் [பயிரிடப்படாத மேட்டு நிலப்] புழுதியை அளைந்து [துழாவி] அதில் கிடை க்கும் மென்மையான புல்லரிசியை [Grain of cluster grass] எடுத்து, பின்னர்க் குடிசைக்குத் திரும்பி, குடிசை முன்றிலில் விளாமர நிழலில் நிலத்திலேயே உள்ள பாறை உரலில் அந்த அரிசியை இட்டு, உலக்கையால் குற்றிக் கொழித்தெடுப்பர் என்கிறார். [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றி யர், பார்வை யாத்த பறைதாள் விளவின், நீழல் முன்றில் நிலவுரல் பெய்து]. பின்னர் பாலை நில மகளிர், கிணற்றில் ஊறியிருக்கின்ற உவர்நீரை எடுத்து வந்து, பழைய விளிம்பு உடைந்து போன வாயை உடைய பானையில் ஊற்றி, உடைந்த அடுப்பில் வைத்து, அரியாது சமைத்த சோற்றை, காய்ந்த மாமிசத்துடன் சேர்த்து உண்பர் என்கிறார். [குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல், 97-100]. நீங்கள் அரசனைப் போற்றிப் புகழ வேண்டியதில்லை. அவன் செந் நிழல் தந்து நாட்டைக் காக்கும் தலைவன், நாங்கள் அவனை எண்ணித் தலைமேற் கொண்டு வந்துள்ளோம். என்று சொன்னாலே போதுமானது. நீங்கள் தெய்வத்திற்குப் பலியிடுமாறு போலத் தேக்கிலையிலே மேலே சொன்னவாறு விருந்தினைப் பெறுவீர்கள் என்று மேலும் கவிஞன் அறிவுரை வழங்கினான். [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும்,பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்,103-105 ]. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 25 தொடரும் "FOOD HABITS OF TAMILS" PART: 24 "Food Habits of Ancient Sangam Tamils continuing" If you go more details about curry, there are many versions now available in the market and the curry lovers are confused. It began as Indian Curry and then we have Thai red and green curries, Malaysian Curry, Chinese Curry, Japanese Curry, Caribbean Curry, Sri Lankan Curry, Mauritian Curry, Bangladeshi Curry, Pakistan Balti Curry, Burmese Curry to name a few. And we now have the British Curry too. So, Which one is authentic? A billion dollars question!. A quick check in the Oxford dictionary shows that the ‘Tamil’ word curry came into the English language via Portuguese in the 16th century. Another popular item with curry lovers, Poppadom is a Tamil word too. Rasam, Congee [கஞ்சி], and Mango are all Tamil words in the English language too. An article “How India changed the English language” appeared on the culture section of BBC’s website on the 22nd of June 2015, had confirmed this fact as well. The Tamils were using black pepper to spice up their curry and the Romans, Greek, Chinese, Arabs (collectively referred to as Yavanas in these ancient Tamil works of literature) and Africans were trading with the Tamils for the spices for a long. However nearly 520 years ago, in 1498, just after the medieval period, the Portuguese came to these Tamils with chili. The Portuguese who brought chilies, also introduced at least 130 other vegetables and plants including wheat, tomatoes, potatoes, cassava, beetroot, and pumpkins to name a few. While there are so many versions of curries from different countries, the mother of all is the Tamil Curry. It is the traditional heritage of the Tamils for more than 2000 years as mentioned in part 22. Eating of fish, mutton, beef, venison, meat in general is found in many references in the ancient Tamil literature. Though, emphasis has been given for food produced with the combination of water and earth and thus, rice eating or vegetarian food. It is evident that a differentiation between vegetarian and non - vegetarian food was not made in those days. Surprisingly, there have been many references which reveal about mixing of both vegetarian and non - vegetarian food together and taking by the ancient Tamils. There are many archaeological evidences found at Neolithic and megalithic burials prove the mixed food habit of the ancient Tamils. Also found different hunting implements, charred bone showing roasting of meat, cut marks on the bones proving the extraction of marrow from them etc. This again goes to prove that religious restriction was not there or religion did not play any role in the food habits. The transition from beef - eating to cow deification leading to banning of the former must have taken place during the complete change over of the social factors with the strong religious and political conditions and compulsions during the Medieval period, when, the society should have been conducive and favourable enough to accept such change. In one of the Sangam poem Perumpanattuppadai [பெரும்பாணாற்றுப்படை], the poet gives graphic details about the life of ancient Tamils and their food habits as the bards travel through various landscapes on the way to the capital city Kanchipuram. There are no detailed recipes in these poems, but they provide abundant information of the culinary culture of the time. As the bards go through the spacious forest paths, there are huts with roofs made of thatched leaves of eenthu (dates) palms [ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குர ம்பை]. The women of these huts dig the ground with spades with caps of iron and raise the dust of black - soiled barren lands and take out the soft rice grains stored in the ground [உளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி, இருநிலக் கரம்பைப் படு நீறு ஆடி, நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்]. They pound this rice with ulakkai (pestles) short and strong in urals (mortars) made in the ground. They draw water from the wells and add to the un-sifted rice along with white meat in an old pot with a broken rim on a broken stove [நீழல் முன்றில் நில உரல் பெய்து, குறுங்காழ் உலக்கை ஓச்சி நெடுங்கிணற்று, வல் ஊற்று உவரி தோண்டி தொல்லை, முரவுவாய்க் குழிசி முரிஅடுப்பு ஏற்றி, வாராது அட்ட வாடு ஊன் புழுக்கல்]. The minstrel advices the panars [minstrel] that if they say they are the subjects of the lord of the hills who wears war anklets on his legs, the forest women will feed them abundant food served on teak leaves [செவ்வரை நாடன் சென்னியம் எனினே, தெய்வ மடையின் தேக்கிலைக் குவைஇ நும், பைதீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர்]. Thanks [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] PART : 25 WILL FOLLOW
-
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
எல்லோருக்கும் நன்றிகள்
-
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
"ஈரம் தேடும் வேர்கள்" / குரல் வடிவம் : ஆனந்தராணி பாலேந்திரா
-
"சங்ககால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / முக்கோணக் காதலில் யாருடைய தியாகம் சிறந்தது ?
- "கனவே கலையாதே"
"கனவே கலையாதே" கனவும், இயல்பும் ஒன்றுக்கு ஒன்று முற்றிலும் வேறுபட்டது, என்றாலும் சிலவேளை இயல்பாக நடக்கும் ஒரு சம்பவத்தை, இது கனவா என கருதும் அளவிற்கு ஆச்சரியப்படுத்தும் வலிமை கனவுக்கு உண்டு. அதேபோல கனவு கண்டு கொண்டிருப்பவர் இது இயல்பாகவே நடக்குமா என அவரை சிந்திக்க தூண்டிவிட்டு போகும் வல்லமையும் கனவுக்கு நிறையவே உண்டு. எனக்கு இரண்டுமே நடந்து உள்ளது அதனால்த்தானோ என்னவோ 'உங்களுக்கென ஒரு கனவு இருந்தால், அதைப் கெட்டியாகப் பிடிக்க வேண்டும், ஒருபோதும் விடக்கூடாது' என்று என் பொன்மொழியை மாற்றி உள்ளேன் இல்லை "கனவே கலையாதே" என்று வேண்டுகிறேன்! நான் இப்ப திருமதி ஜெயா தில்லை, ஆனால் நான் வேம்படி மகளிர் கல்லூரியில் உயர் வகுப்பு படிக்கும் காலத்தில், நான் நல்ல அளவான தோற்றத்துடனும் காண்பவர்கள் கண்ணுக்கு 'மயிர் வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும், உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த பல்லின் வனப்பும்' என கொஞ்சம் மிதமிஞ்சிய அழகாக இருந்ததாலோ என்னவோ, என்னை விமர்சிப்பதற்கு, தெரிஞ்சும் தெரியாதது போல் உரசி செல்வதற்கும் வக்கிரம் பிடித்த ஒரு மனித மிருக கூட்டங்கள் காத்திருந்து பின் தொடரும். நான் இதை பெரிதாக பொருட்படுத்து வதில்லை. என்னை பொறுத்தவரையில் ஒருவருக்கு பொதுவாக அனைத்தும் அழகாய் இருக்கவேண்டும், அழகாய் தெரிய வேண்டும் நினைக்க வைப்பது அவரின் இளமை உணர்வுகளே, அப்படியே அனைத்தும் நலமாய் இருக்கவேண்டும் என நினைக்க வைப்பது முதுமை உணர்வுகளே!. ஆமாம் உடையின் அழகை ரசிப்பது இளமை. உள்ளத்தின் அழகை ரசிப்பது முதுமை!! இதில் நான் விதிவிலக்கு அல்ல. அதேபோல அவர்களும் விதிவிலக்கும் அல்ல, ஆனால் அவர்கள் தங்கள் உணர்வை மதிப்போடு, மனிதத்தன்மையுடன் வெளிப்படுத்த வேண்டும் , அதில் தான் அவர்களின் பெருமை நிலைத்திருக்கும். பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணப் பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1838 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான் என் பாடசாலை. இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மாணவிகளையும் நூறு அல்லது சற்றுக் கூடிய தொகை ஆசிரியர்களையும் கொண்டு, 'சரியானதை துணிந்து செய்!' என்ற குறிக்கோளைக் தன்னகத்தே கொண்டது அது. அதனால்த் தானோ என்னவோ, எனக்கும் அந்த துணிவு என் இரத்தத்தில் கலந்து விட்டது. எனவே தான் நான் இந்த வம்பு கூட்டங்களை கண்டு பயப்படுவதே இல்லை. எனினும் என் மனதில் ஒரு சலசலப்பு உண்டு. அது சிலவேளை இரவில் கனவாக வருவதும் உண்டு. எனது அந்த கனவுகளுக்கு பூட்டு இல்லை என்றாலும் யாரும் உள் நுழைந்து என்னை உருகுலைக்க முடியாது! என் கனவுகளில் நானே இளவரசி! வண்ணாத்திப் பூச்சியாய் வண்ண வண்ண சிறகுகளுடன் மகிழ்வாக எங்கும் பறந்து திரிவேன். அங்கே காடையர்கள் கிடையாது! என்னைப் பிடித்து முகர்ந்து [மோந்து] பார்த்து நசுக்கி சாக்கடிக்க. மான் போல் துள்ளி குதித்தாலும் மயில் போல் தோகை விரித்தாலும் இடை மறிப்பதற்கு ஒருவரும் இல்லை. நான் உண்மையில் அந்தக் கனவுகளில் நீந்தி சந்தோசமாக விளையாடினேன். என் கூந்தல் கட்டையாக, சிறு நீளமே எனினும், சிக்கின்றி அந்த சீரான கொண்டையில் மல்லிப்பூ வைத்து வீதியில் நடந்தேன். அப்பொழுது தான் நான் அவனைப் பார்த்தேன். அவன் யார், எனக்கு சரியாக தெரியாது? காக்கி காற் சட்டையுடன் வெள்ளை மேல் சட்டையுடன் மிக எளிமையாக என் எதிரே நடந்து வந்தான். நான் 'கோல முகமும் குறுநகையும் குளிர் நிலவென நீலவிழியும் பிறை நுதலும்' விளங்கிடும் எழில் கொண்டு இருந்தாலும், அவன் என்னை ஏறெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. எனக்கு ஒரே அதிசயம். நான் என் இயல்பான நாணத்தை தூக்கி எறிந்துவிட்டு அவனைப் பார்த்தேன். உறுதியைக்காட்டும் உடலமைப்பு, முறுக்கேறிய மீசை, அகன்ற நெற்றி; ஆழ்ந்த கூரிய கண்கள்; எடுப்பான மூக்கு, அரிதாக புன்னகைக்கும் இறுகிய உதடுகள், ... அப்போதே. அவனுடைய கம்பீரத் தோற்றம் என் நெஞ்சில் நிறைந்து விட்டது. போதிய உயரம் இல்லாவிட்டாலும் அகன்றமார்பும் திரண்ட தோள்களும் அவனுடைய உருவத்தை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை. அதில் என்ன வேடிக்கை என்றால், எனக்கு பின்னே தொடரும் அந்தக் கூட்டம், இவனைக் கண்டதும் எப்படி ஓடி மறைந்ததோ எனக்குத் தெரியவில்லை? அது மேலும் அவனை அணுக வேண்டும் கதைக்க வேண்டும் என என் நெஞ்சம் எனோ ஏங்கியது. நான் ஹலோ என அவனை நோக்கி அழைக்க, என் அம்மா 'பிள்ளை நேரமாச்சு பள்ளிக்கு' என அதட்ட, அவன் மறைந்து போனான். இப்ப என்னைக் யாரும் கேட்டால், 'கனவுகள் இல்லையேல் வாழ்வு இனிமை ஆகாது' என்பேன்! நான் அன்று இரவு மீண்டும் அவன் யார் என்ற எண்ணம் மனதில் ஊஞ்சலாட , இரவு சாப்பாட்டின் பின் நம்பிக்கையோடு உறங்கினேன். என் மனம் இப்ப தெளிந்த நீரோடைப் போல் சலசலத்துக்கொண்டு இருந்தது. புதிய கனவுலகில் நான் மீண்டும் நீந்தினேன், ஆனால் என்ன வியப்பு, நேற்றைய கனவு கலைய வில்லை, அவனே மீண்டும் வந்தான்! அதே கண் அதே பார்வை, ஆனால் சிறு வித்தியாசம், அவன் புன்னகை வீசிடும் கார்முகில் போல கொஞ்சம் சிரிக்கிறான். அது என்னுள் மறைந்து இருந்த அச்சம், மடம், நாணத்தை நீக்கிவிடுகிறது. சரியானதை துணிந்து செய் என்ற என் பாடசாலையின் அறிவுறுத்தல் முன்னுக்கு வர, 'நீ யார், ஏன் என்னை கவருகிறாய்?' கொஞ்சம் உரக்கவே கேட்டுவிட்டேன். அம்மா விழுந்தடித்து வந்து, 'சும்மா கனவுகளை கண்டு குழம்பாதே' , இதற்குத்தான் அந்தந்த வயதில் கல்யாணம் செய்யவேண்டும், வீண் கனவுகள் வந்து, மனதில் வேதனையை புதைக்காதே?, உன்னுடைய அப்பா கேட்டால் தானே, எத்தனை தடவை அவருக்கு சொல்லிவிட்டேன் என்று ஒரு புலம்பல் வேறு! நான் உங்களுக்கு இன்னும் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன், என் அப்பா ஒரு பண்டிதர், புலவர், மகாவித்தியாலயம் ஒன்றின் அதிபர், அம்மா ஒரு ஆசிரியை. என்றாலும் என் அந்த மனம் கொண்ட கனவை, என் விழி காணும் நாளுக்காய் ஒவ்வொருநாளும் என் பயணம் தொடர்ந்தது. அதில் மாற்றம் இல்லை. 'கலையாத கனவு அது அவன் நினைவு, மண் மீது நான் இருந்தும், கனவில் அவனை தேடுகிறேன், அவன் முகம் மீண்டும் மீண்டும் நான் காண தவிக்கிறேன், என் கனவில் அவனிருந்தால் நேரம் போவது தெரியாதே' என என்பாடு போய்விட்டது! திடீரென ஒரு நாள் இரவு, என அம்மா, அப்பா இருவரும் ஒன்றாக கூப்பிட்டு நாளை மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் எனக் கூறி, புது உடைகளும் தந்து, ஆலோசனையும் கூறி நித்திரைக்கு போனார்கள். அப்ப தான் எனக்கு முதல் முதல் கவலை ஒன்று மனதில் தானாக மூண்டது. என் கனவு? அவன் நினைவு ? எல்லாம் மனதை அரிக்கத் தொடங்கின. 'கனவே கலையாதே', அது தான் என் வாழ்வும் இருப்புமாகி விட்டதே! நான் மெல்ல அம்மா, அப்பாவின் கதவைத் தட்டினேன். 'என்னால் இப்ப சடுதியாக மனம் முடிக்கும் நிலையில் இல்லை அப்பா, கொஞ்சம் பிந்தி போடுங்கள் அம்மா, எனக்கு இன்னும் வயது இருக்கு' என்று சொன்னேன். என் நினைவெல்லாம் என் கனவு இன்னும் கொஞ்ச மாதங்களுக்காவது கலையாத கனவாக தொடரவேண்டும் என்பதே! என் அம்மா உடனே 'அதெல்லாம் ஒன்றும் இல்லை, பெண் பார்க்க மட்டும் தான் வருகிறார்கள்' என்றதும் அப்பா 'கவலைப்படாதே, உனக்கு பிடித்தால் மட்டுமே மேற்கொண்டு எல்லாம் நடக்கும், திருமண நாளைக் கூட, உன் விருப்பம் படி ஒன்று இரண்டு ஆண்டுக்கு பிறகு வைக்கலாம், அதில் பிரச்சனை இல்லை, பையனுக்கும் பெரிய வயது ஒன்றும் இல்லை, உன்னைவிட இரண்டு மூன்று வயது தான் கூட' என்று ஆறுதல் வார்த்தையாக கூறினார். அம்மாவும் அப்பாவும் அரை நேரத்துடன் இன்று வேலையால் வந்து விட்டார்கள். பெண் பார்க்க வருபவர்களுக்கு கொடுப்பதற்கு சில பலகாரங்கள் அம்மா செய்ய தொடங்கினார். அப்பா முன் வளவு, நீண்ட பொது அறை [Hall] ... இப்படி கொஞ்சம் துப்பரவு செய்யத் தொடங்கினார், என் கடைசி தங்கையும், தம்பியும் இன்னும் பாடசாலையால் வரவில்லை, மற்ற தங்கை கொழும்பு சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டும் அண்ணா இலங்கை கொழும்பு விமானத் தளத்தில் வேலை செய்து கொண்டும் இருந்தனர், இருவரையும் இதற்கு கூப்பிடவில்லை. எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, என் எண்ணம் எல்லாம் அந்தக் கனவு, அவன் கலையக் கூடாது என்பதே! எனோ என் மனது அதை விரும்புகிறது. ஆனால் எனக்கு காரணம் தெரியாது? நேரம் ஐந்து பத்து இருக்கும், ஒரு சிறு கூட்டம் எமது முன் வாசல் திறந்து உள்ளை நுழையும் சத்தம் கேட்டது. எமது வீடு, ஆத்திசூடி வீதி, கந்தர்மடத்தில் அமைந்து இருந்தது. என்றாலும் என்னை முன்னுக்கு வரவோ, எட்டிப் பார்க்கவோ அப்பா விடவில்லை, இன்னும் கொஞ்சம் முகஒப்பனை, உடை ஒப்பனை எனக்கு பக்கத்து வீட்டு மாமி செய்து கொண்டு இருந்தார். அப்பா அம்மா அவர்களை வரவேற்கும் சத்தங்களும் மணமகனாகப் போகும் பையனின் வீட்டினரின் சத்தங்களும் கேட்டன. என்றாலும் அவனின் சத்தம் ஒன்றும் கேட்கவில்லை? கொஞ்ச நேரம் பெரியவர்கள் தங்களுக்குள் கலந்தாலோசிப்பது போல இருந்தது. அதன் பின் சிரிப்புகளுக்கிடையில் அவனின் குரல் கேட்டது. அந்தக்குரல் எங்கேயோ கேட்டமாதிரி இருந்துது. சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் அது எனக்கு பிடித்து இருந்தது. அவர்கள் வந்து ஒரு இருபது நிமிடத்தின் பின், என்னை அவர்களுக்கு முன் அழைத்துக் கொண்டு போக அம்மா என் அறைக்கு வந்தார், எனக்கு எனோ இதில் மனம் நாடவில்லை. 'என்னைப் பிடிக்கவில்லை' என்று ஏதாவது காரணம் சொல்லி தட்டிக் கழிக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கையுடன் அம்மாவுடன் என் அறையில் இருந்து வெளியே வந்து அவர்களுக்கு வணக்கம் கூறி அமரும் பொழுது தான், அவனை நேருக்கு நேர் பார்த்தேன். அதே என் கனவில் வந்தவன்!!! என்னால் நம்பமுடியவில்லை, அதே முகம், அதே மீசை, அதே பார்வை, அதே புன்னகை, என்னைத் தூக்கிவாரி போட்டது. இவ்வளவு நேரமும் அவன் விரும்பக் கூடாது அல்லது தள்ளிப் போடவேண்டும் என்று கவலைப் பட்டுக் கொண்டு இருந்த நான், இப்ப அவன் விரும்ப வேண்டும், விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என என் மனம் ஏங்கத் தொடங்கி விட்டது, நான் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தேன்!, 'போய் எல்லோருக்கும் பலகாரமும் காபியும் தங்கச்சியுடன் எடுத்து வந்து கொடு' என்று சொல்லி இருக்கா விட்டால், நான் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது! நல்ல காலம் அம்மா என்னை அதிர்ச்சியில் இருந்து மீட்டது! கனவில் வந்தவன் இன்று இயல்பாகவே என முன்னால் நிற்கிறான், அதுவும் என்னை பெண்பார்க்க. இனி என்றுமே என் கனவு கலையப் போவதில்லை!. நான் மிகவும் மகிழ்ச்சியாக அவனின் பெற்றோரிடமும் அவனின் அக்காவுடனும், இடைக்கிடை அவனுடனும் கொஞ்ச நேரம் அம்மா, அப்பாவுடன் சேர்ந்து கதைத்தேன். பிறகு நான் என் அறைக்கு போய்விட்டேன். என்றாலும் அம்மா அப்பா தொடர்ந்து கதைப்பது காதில் கேட்டது. 'தம்பிக்கும் பிடிச்சுக்கொண்டது' அவனின் அக்கா கூறுவது கேட்டது. உடனே அம்மா 'அது மகிழ்ச்சியான செய்தி, மகளிடமும் கேட்டுச் சொல்கிறேன், ஆனால் மகள் ஒன்று இரண்டு வருடமாவது பொறுத்து செய்ய விருப்பம், வயதும் இருவருக்கும் இருக்குதுதானே' என்று கூறியது தான் இப்ப என்னை தூக்கிவாரி போட்டது! ஏன் தான் அப்படி முன்பு சொன்னேனோ என நான் என்னையே திட்டினேன். எனக்கு இப்ப என்னில் சரியான கோபம். அவனுடன் இப்பவே வாழவேண்டும் என என் மனது வெட்கம் இல்லாமல் பேசத் தொடங்கிவிட்டது. அப்பொழுது அம்மா, அப்பா இருவரும் வந்து உனக்கும் சம்மதமா என்று கேட்டனர். நான் ஒருவாறு என்னை சமாளித்துக்கொண்டு புன்சிரிப்பாலேயே மறுமொழி கொடுத்தேன். அதன் பின் உனக்கு விருப்பம் என்றால் தனிய, அவனுடன் போய் கதை என அனுமதி தந்தனர். நாம் இருவரும் பின்வளவில் வாழை மரங்களுக் கிடையில் இருந்த வாங்கில் அருகருகே அமர்ந்து பேசத் தொடங்கினோம். எனக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, அவன் தன்னைப் பற்றி எல்லாம் சொன்னான். நான் கேட்டுக் கொண்டே இருந்தேன், என்னைப் பற்றி ஒரு சில வார்த்தைகளைத் தவிர, நான் வேறு ஒன்றும் பேசவில்லை. எனக்கு இன்னும் கல்யாணம் பிந்திப் போகப் போகுதே என்ற கவலை மறையவில்லை. அவனையே பார்த்துக் கொண்டு இருந்தேன். அது எங்கே அவனுக்கு தெரியப் போகுது. ஆனால் கலையாத கனவாக நனவிலும் அது தொடரும் என்பது மட்டும் இப்ப நிச்சியம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- 'என் மனச திருப்பிக் கொடு'
எல்லோருக்கும் நன்றி இது தான் நான் அறிந்த , அனுபவிக்கிற அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை https://www.facebook.com/groups/978753388866632/permalink/1257428560999112/- "நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்"
"மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெருங்கி அனைத்து அழகு ரசித்து நெகிழ்ந்து பேசிய அந்த தருணத்தின் நெடுங் கதையைக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "மெல்ல வந்து மடியில் சாய்ந்து சொல்லி தந்த நெளிவு சுளிவுகளின் எல்லை அறியக் கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெய்தல் நிலத்தின் உப்புக் காற்றில் நெடுநாள் ஆசை கலைந்து விரிந்த நெடிய வரலாற்றினை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- "நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்]
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 23 8] போதைப்பொருள் துஷ்பிரயோகம் [Drug Abuse] சாராயம் மற்றும் போதை மருந்துகளை ஏன் வேண்டாம் என்கிறோம் என்றால், அது உங்களை போதை மயக்கத்தில் (intoxication) ஆழ்த்தி உங்களுடைய விழிப்புணர்வைத் தொலைப்பது மட்டுமின்றி உடல் நலத்தைக் கெடுத்து, உங்களை அழித்துவிடுகிறது. ஒருவேளை இந்த மருந்துகள் உங்களுக்கு மயக்கத்தைத் தந்து, அதே நேரத்தில் உங்களை மிகுந்த விழிப்புடனும் கெட்டிக்காரத்தனமாகவும் ஆக்கி உங்கள் உடல் நலத்தில் அற்புதமான விளைவை ஏற்படுத்தும் என்றால், நாம் அனைவருமே அதில் முழுதாக மூழ்கி இருப்போம். உதாரணமாக சந்திரன் நம்மீது அல்லது காதலர் மீது ஏற்படுத்தும் தாக்கம் ஒரு அமைதியான இன்பகரமானது, அது உங்களை மயக்கி கற்பனையில் மிதக்க வைக்கும், புலவர்களுக்கு கவிகளை அள்ளிக்கொடுக்கும், காதலர்களுக்கு இன்ப மழை கொட்டும், தனிமையில் இருப்பவர்களுக்கு ஒரு அமைதியைக் கொடுக்கும். அது வரவேற்கத்தக்க போதை. ஆனால் இது அப்படி அல்ல, போதைக்கு அடிமையானவர்கள் போதைப் பழக்கத்துக்காக எதையும் செய்யும் நிலைக்குச் செல்வார்கள். பொய் சொல்வது, திருடுவது, வன்முறையில் ஈடுபடுவது என குற்றச் செயல்களில் கூட தயங்காமல் இறங்குவார்கள். முதன் முறை பயன்படுத்தும் போது பெரும்பாலானவர்களுக்கு பெரிய இன்பம் கிடைக்காது. வித்தியாசமான அனுபவமாக மட்டுமே இருக்கும். ஆனால், தொடர்ந்து இதைப் பயன்படுத்தும் போது மனமும் உடலும் மெல்ல இதற்கு அடிமையாகும். பிறகு இது இல்லாவிட்டால் இன்பமே இல்லை என்ற நிலைக்கு உடல் செல்லும். அங்கு தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. ஏன், எப்படி மக்கள் போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார்கள் என்பதை பலர் பொதுவாக புரிந்து கொள்ளுவதில்லை. அது மட்டும் அல்ல,போதை பொருட்ககளை, பாவிப்பவர்களை மட்டுமே அது பாதிக்கிறது எனவும் கருதுகிறார்கள். அதனால் தான், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட [addicts], இதை ஒரு சாக்காக எடுப்பதால், தொடர்ந்து முறை கேடாக நடக்க அவர்களுக்கு வழி வகுக்கிறது எனலாம். இவர்கள் தாம் தம்மையே பாதிப்பதாகவும், வேறு எவரையும் இல்லை, எனவே, தங்களது அன்புக் குரியவர்கள் ஏன் இதனை, தமது நடத்தையை பெரிதாக, சிக்கலாக கருதுகிறார்கள் என அடிக்கடி குழம்புகிறார்கள். உண்மையில், இந்த பழக்கத்திற்கு அடிமையானவர், தம்மை மட்டும் அல்ல, மற்றவர்களையும் பாதிக்கிறார்கள். எனவே இது ஒரு சமூகப் பிரச்சனையாகவும் உள்ளது. அது மட்டும் அல்ல, தார்மீக கோட்பாடுகள் அல்லது மன உறுதி இல்லாதவர்கள் இவர்கள் என தவறுதலாக எடைபோடுகிறார்கள். எனவே இவர்கள் நினைத்தால் நிறுத்த முடியும், வேண்டுமென்றே அப்படி செய்யாமல் இருக்கிறார்கள் என இவர்களை திட்டுகிறார்கள். உண்மையில் அப்படி இல்லை. போதைப் பொருளுக்கு அடிமையாவது ஒரு சிக்கலான வியாதி, அதை கைவிடுவது, பொதுவாக நல்ல நோக்கங்கள் அல்லது ஒரு வலுவான விருப்பத்தை விட மேலானதும் கடினமானதும் ஆகும். போதைப்பொருள் அவர்களின் மூளையை மாற்றி விடுவதால், அவர்கள் நினைத்தாலும் கைவிடுவது கடினமாகிறது என்பதே உண்மை நிலையாகும். உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் தொடக்கம் எல்லா நாடுகளிலும் மற்றும் எல்லா சமூகங்களிலும் இந்த போதைப் பொருள் பிரச்சினை இன்று காணப்படுகிறது. அதனால் தான் ஒரு விழிப்பை சமூகத்தில் மற்றும் தனி மனிதர்களில் ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினமாக [International Drug Abuse Day] உலகம் முழுதும் கடைப்பிடிக்கப் படுகிறது. போதை என்றால் அது மது மற்றும் புகையிலைத் தொடர்பானவையாக பொதுவாக கருதினாலும், உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரை சீரழிக்கும் சக்திவாய்ந்த போதை பொருளாக கஞ்சா [Cannabis], அபின் [Opium], கோகைன் [Cocaine], பிரவுன் சுகர் [Brown sugar (an adulterated form of heroin) மற்றும் ஒயிட்னர் [Whitener], சில பெயின்ட் வகைகள் என பலவகை பொருட்கள் காணப்படுகின்றன. இவை பவிப்பவர்களின் மனம், உடல் இரண்டையும் கெடுத்து பாவிக்கும் அந்த நபருக்கும், அவரின் குடும்பத்திற்கும், ஆகவே சமுதாயத்திற்கும் பெரும் கெடுதலை விளைவிக்கிறது. நாளடைவில் சிலர் போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க முடியாத ஒரு நிலைக்கு வந்து, போதைப் பொருளுக்கு அடிமையாகி விடுகின்றனர். உலகில் மட்டும் இன்றி, இலங்கையிலும் போதைப் பொருள் பாவனை வீதம் அதிகரித்து வருவதாக தேசிய போதைத் தடுப்பு சபை அண்மையில் எச்சரித்துள்ளது. பொதுவாக இலங்கையில் ஹெரோயின் [heroin], கஞ்சா [Cannabis], அபின் [Opium], மர்ஜுவானா[Marijuana / ஒரு வகை கஞ்சா] ஆகிய நான்கு போதை தரும் பொருட்களே அதிகம் பாவனையில் உள்ளவை. மேலும் இலங்கையில் அவை இளைஞர்களிடையே சடுதியாக அதிகரித்திருப்பதை அது சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவாக போதைப் பொருட்களை உபயோகிப்போர் அதன் மூலம் ஒரு வித இன்ப உணர்வு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்படும் இந்த இன்பம் ஒரு சில மணி நேரங்களுக்கே பொதுவாக நீடிக்கும். அதன் பிறகு அவர்களுக்கு குறிப்பாக மன அழுத்தம், எளிதில் கோபமடைதல், நினைவாற்றலில் குறைபாடு போன்றவற்றுடன் பசியின்மை, உடல் நிறை குறைதல், நரம்பு மண்டல பாதிப்பு, கண் பார்வை குறைதல், நரம்பு உணர்ச்சி குறைதல், உதடு கறுத்தல், ஆண்மை குறைவு போன்ற பல வியாதிகளும் ஏற்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் தமிழர் பகுதிகளில் உள்ள இளைஞர்கள், மாணவர்களை திசை திருப்பும் நோக்கில் இலங்கை அரசாங்கம் போதைப் பொருள் பாவனைகளை ஊக்குவித்து வருவதாகவும் மேலும் தந்தை மற்றும் தாய் ஆகியோர் வேறு ஒரு திருமணத்தை முடித்து பிரிந்து செல்வதனால், பிள்ளைகள் தனிமையாகி, அவர்களில் பலர் போதை பொருளுக்கு அடிமையாவதுடன் அந்த வியாபாரத்திலும் ஈடுபடுவதாக ஒரு கணிப்பு கூறுகிறது. இவைகளுக்கு சான்று பகிர்வது போல, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் மயூரன் 2018 ஆண்டு நடுப்பகுதியில், வடக்கு கிழக்கிலே இருக்கின்ற இளைஞர் யுவதிகளை பார்க்கின்ற போது அதிகளவாக போதைப் பொருளிற்கு அடிமையானவர் களாக இருக்கின்றார்கள் எனவும், இந்த நாட்டிலே போதைப்பொருள் அதிகம் இருக்கின்ற மாகாணமாக வடமாகாணம் திகழ்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 24 தொடரும்- "தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி
"தூக்கணமும் குரங்கும்" / விவேகசிந்தாமணி எல்லோரும் படிக்கும் வண்ணம் எளிய தமிழில், நீதிக் கருத்துகளை பாடலாக எழுதப்பட்ட, ஒரு பழைமையான நூல் விவேக சிந்தாமணி ஆகும். இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியாது. எந்த காலத்தில் இயற்றப்பட்ட நூல் என்பதும் தெரியாது. நாயக்கர் காலத்தில் இந்த நூல் உருவாகியிருக்கலாம் என்று ஒரு சிலர் கூறுகின்றனர். பொதுவாகவே நீதி நூல்கள் அதை செய், இதை செய்யாதே என்று நேரடியாக அறிவுறுத்தும். விவேக சிந்தாமணி அப்படி பட்ட நூல் அல்ல. இது கதை மூலம், நடைமுறையாக, எடுத்துக் கூறும் நூலாகும். இனி தூக்கணமும் குரங்கும் என்ற நாலு வரிப் பாடலைப் பார்ப்போம். "வானரம் மழைதனில் நனையத் தூக்கணம் தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும் ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும் ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே" [விவேகசிந்தாமணி பாடல்: 10] ஒரு காட்டிலே அடர்ந்து வளர்ந்த மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் ஒரு கிளையிலே குருவி ஒன்று கூடு கட்டி குடும்பத்தோடு நீண்ட காலமாக வசித்து வந்தது. பெண்களின் காதிலே தொங்கும் தூக்கணம் போல அதன் கூடு இருந்தமையால் எல்லோரும் அதனை தூக்கணம் குருவி என்று அழைப்பார்கள். அதன் கூடும் உள்ளே மிகவும் அழகாக இருக்கும். அப்படிப்பட்ட அழகான தூக்கணம் வாழும் மரத்திலே இன்னொரு கிளையில் ஒரு குரங்கும் பல காலமாக இருந்து வந்தது. ஒருநாள் இரவு மிகவும் பலத்த மழை பெய்தது. மரங்கள் புயல் காற்றிலே கடுமையாக ஆடின. மிருகங்கள் குகைகளில் பதுங்கிக் கொண்டன. பறவைகள் கூடுகளில் ஒளித்துக் கொண்டன. ஆனால் அந்தக் குரங்கு மட்டும் கைகளால் மரக்கிளையை இறுகக் கட்டிக் கொண்டு மழையில் நனைந்து குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தது. கூட்டில் இருந்த ஆண் குருவி, குரங்கின் நிலையை கண்டு கவலை கொண்டு, "நண்பரே! இப்படிப் பெரு மழையில் வீணாக நனைந்துகொண்டு இருக்கிறீரே. உமக்கு மனிதரைப் போல இரண்டு கைகள் இருக்கின்றன. எனவே முன்னரே மனிதர்களைப்போல வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டிருந்தால் இப்போது மழையில் நனைய வேண்டி இருக்காது. கொஞ்சம் யோசித்துப் பாரும்" என்றது. தூக்கணத்தின் அறிவூட்டலைக் கேட்ட குரங்கு கோபம் கொண்டது. அது தூக்கணம் இருந்த கிளைக்குத் தாவியது. தன் இரண்டு கைகளாலும் தூக்கணம் இருந்த கூட்டைப் பிய்த்து எறிந்தது. கெட்டவர்களுக்குப் புத்தி சொல்லப் போனால் சொல்பவர்களுக்கே அது ஆபத்தாக முடியும் என இப்பாடல் மூலம் விவேகசிந்தாமணி எடுத்துக் கூறுகிறது. அதாவது, சிறுகுருவி பாடுபட்டுக் கட்டிய அழகிய கூட்டினைச் சிதைத்து இடர் விளைவித்த ஈனச் செயலை உதாரணங்காட்டி, "நல்லவற்றை அற்பர்களுக்குக் கூறினால் கூறியவர்களுக்கு அதனால் துன்பமே ஏற்படும்" என்று நமக்கு உணர்த்துகின்றது இந்த விவேக சிந்தாமணிப் பாடல். எனவே யாகாவராயினும் எப்போதும் நா காப்பதே நன்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- 'என் மனச திருப்பிக் கொடு'
'என் மனச திருப்பிக் கொடு' "என் மனச திருப்பிக் கொடு இல்லை என்றால் என்னையே எடுத்துவிடு உன் மனசை தந்து விடு இல்லை என்றால் உன்னையே தந்துவிடு" "எண்ணங்களின் தொகுப்பே மனம் என்றால் நல்ல மனிதர்களை நீ நாடு கன்னங்களின் குழியே அழகு என்றால் நல்ல சிரிப்பை நீ தேடு" "நான் என்ற உணர்வு தோன்றின் மனம் அகங்காரம் ஆகி விடும் ஏன் என்ற கேள்வி பிறப்பின் மனம் புத்தி ஆகி விடும்" "மனது ஆன்மா தொடர்பு பற்றி இறையியல் அன்று எமக்குச் சொன்னது மனது வெறும் உளவியலின் தோற்றமென அறிவியல் இன்று எமக்குச் சொல்லுது" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்"
"தமிழர்களின் மரபும் பாரம்பரிய மும்" / பகுதி: 24 பாரம்பரியம் என்பது நமக்கு முன்னோர்களிடமிருந்து கிடைத்த சொத்து என்று பொருள்படுகிறது. இந்தச் சொல் பல்வேறு விடயங்களையும் விளக்குவதற்கு பயன்படுகிறது. அப்படியானவற்றில் ஒன்றே வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals), கருவுறுதல் தொடங்கி இறப்பு வரை உள்ள பல சடங்குகள் ஆகும். இவற்றைத் தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of Passage) என்றும் அழைப்பர். இவை அனைத்தும் எமது முன்னோர்கள் பாரம்பரியமாக எமக்கு தந்தவை, சில சில மாற்றங்களுடன் இன்றும் தொடர்பவை. பொதுவாக, மனிதன் தோன்றிய பொழுதே சடங்குகளும் தோன்றியது எனலாம். உதாரணமாக அன்று வேட்டைக்கு போகு முன் ஒரு வேட்டை சடங்கு நிகழ்ந்தன என இன்று நாம் கல்வெட்டுக்கள் மூலமும் பாடல்கள் மூலமும் அறிகிறோம். வேட்டையைத் தொழிலாகக் கொண்ட மனிதன் வேட்டையில் விலங்குகள் அகப்பட வேண்டும் என்பதற்காக வேட்டைக்குச் செல்லும் முன்பு விலங்கு நடனம் ஆடினார்கள் என அறிகிறோம். சடங்குகள் சில நோக்கங்களுக்காக, சில நம்பிக்கை அடிப்படையில் அன்று உருவாகின. மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை, ஏன் அவன் இறந்த பின் கூட, அவனை நினைவு கூற, பல்வேறு சடங்குகள் மேற்கொள்ளப் படுகின்றன. இவை அனைத்தும் அந்த மனித வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நடைபெறுகின்றன. உதாரணமாக - பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு இவைகளை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பூப்பு சடங்கு பெண்களுக்கு மாத்திரமே நடைபெறுகின்றன. பெரும்பாலும் பெண்களில் 12 - 18 வயதுகளில் நிகழலாம். அனேகமான எல்லாச் சமூகத்தினருமே இந்நிகழ்வை ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறார்கள். ஒரு பெண் பூப்படைந்தால்தான் அவள் கருத்தரிப்பதற்கு உரிய பருவத்தை அடைந்து விட்டாள் என்பதே இதற்குரிய அடிப்படைக் காரணம் ஆகும், அதை தாம் வாழும் சமூகத்திற்கு உரைப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலை அல்லது ஒருவர் தனது இனத்தை தோற்ருவிக்ககூடிய பருவத்தினை எட்டுதல் என்று கூறலாம். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. எனினும் பெண்ணே கர்ப்பம் தரிப்பதால், அதற்கே முக்கியம் கொடுத்து சடங்கு கொண்டாட்டத்தை கையாண்டனர் எனலாம் அல்லது ஆணின் பங்கை அல்லது ஆண் பக்குவமடையும் நிலையை அல்லது பெண்களைப் போல வெளிப்படையாக இல்லாததால் அன்று சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் கூறலாம். மனிதர்களைப் போல, சிம்பன்சி, பொனோபோ போன்ற மனிதகுரங்குங்களுக்கும், பூப்படையும் தன்மையும், மாதாமாதம் மாதவிடாய் உண்டாகும் தன்மையும் உண்டு. மேலும், புறநானுறு 312 இல் பொன்முடியார் எனும் சங்ககாலப்பெண்புலவர் கூறுவது போல “ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே", என்ற கருத்து பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்ததாலும் ,பெண் அந்த கடமைக்கு தயார் என வெளிப்படுத்தும் கொண்டாட்டமாக, எனவே பெண்களுக்கு மட்டுமே பூப்பு சடங்கு கொண்டாடப் பட்டு , அது வாழையடி வாழையாக இன்றும் தொடர்கிறது என நம்புகிறேன். இந்த வரிசையில் முதலில் வருவது "பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த, மக்கட்பேறு அல்ல பிற" என்று குறள் 61 இல் வள்ளுவர் கூறிய மக்கட் செல்வமாகும். கிடைத்தற்கு அரிய இம் மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும் சடங்குகளே பிறப்புச் சடங்குகள் ஆகும். இந்த வரிசையில் முதலில் வருவது கருவுறுதல் ஆகும். எனவே அந்த தமது வாரிசின் வருகையை, கருவுற்ற நல்ல செய்தியை, வலை காப்புடன் மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறார்கள். இதை 'சீமந்தம்' என்றும் கூறுவர். இது பெரும்பாலும் கருவுற்ற 7 அல்லது 9 ஆம் மாதத்தில், செய்யப்படுகிறது. இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய கண்ணாடி வளையல்களை (காப்பு) அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர். வார்த்தைகளே இல்லாமல் முட்டையிலிருந்து முளைத்த பச்சிளம் குழந்தை உணர்ச்சிப்பூர்வமாக உள்ளுக்குள்ளிருந்தே கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விக்கு வெளியே இருந்து பெரியோர்களால் வெளிப்படையாக கூறப்படும் பதில்களே இந்த வளைகாப்பு என்றும் சிலர் சொல்லுவர். மேலும் அணிவிக்கப்பட்ட வளையல்கள் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இதன் நோக்கமே எந்த ஒரு செயலையும் அவசரம் இல்லாமல் நிதானமாகச் செய்யவேண்டும் என்பதற்காகத் தானாம். வளைகாப்பு நடக்கும் இடத்தில் பூக்கள், பல்வேறு வகையான பழவகைகள், சந்தனம், குங்குமம், மஞ்சள், கண்ணாடி வளையல்கள், மேலும் பல்வேறு வகையான இனிப்பு வகைகளும் வைக்கப்பட்டிருக்கும். சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் போன்ற பல்வேறு விதமான சாதவகைகளும் இருக்கும். அதை தொடர்ந்து பிள்ளை பிறந்ததும் வருவது சேனை தொடுதலும், தொட்டிலிடுதலும், பெயர் இடுதலும் ஆகும். சேய்+நெய்+தொடுதல் என்றால், குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக் குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத் தொட்டு வைக்கும் வழக்கம் ஆகும். சேனை என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ உணவு’ என்கிறது தமிழ் அகராதி. குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும் என்பதால், பொதுவாக பலராலும் குறிப்பாக நாட்டுப்புற மக்களாலும் இது ஒரு சடங்காகவே மேற்கொள்ளப்படுகிறது. தமிழரின் தாலாட்டுப் பாடல்களில் இது குறித்த செய்திகளை நாம் தாராளமாக காணலாம். "பச்சை இலுப்பை வெட்டி பவளக்கால் தொட்டிலிட்டு பவளக்கால் தொட்டிலிலே பாலகனே நீயுறங்கு கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ சித்திரப் பூந்தொட்டிலிலே சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ சித்திரப் பூந் தொட்டிலிலே." அடுத்து, குழந்தைகள் தொடர்பான சடங்குகளில், சிறப்பிடம் பெறுவது சோறு தீத்துதல், பல்லுக் கொழுக்கட்டை அவித்தல், மற்றும் ஏடு தொடக்குதல் ஆகும். பிள்ளைக்குச் சோறு தீத்துவதிலே பல்வேறு நடைமுறைகள் இடத்துக்கு இடம் குடும்பத்திற்கு குடும்பம் காணப்படுகின்றன. தாய்ப்பாலுடன் மட்டும் வளர்ந்த பிள்ளைக்கு மற்றைய உணவுகளை குழந்தைக்குக் கொடுக்கத் தொடங்கு முன்னர் முதல் தடவையாக பிள்ளைக்கு சோறு தீற்றுதல் நிகழ்ச்சி பொதுவாக ஏழு மாதமாகையில் நடை பெறுகிறது. சிலர் ஆலயத்திற்கு போயும் சிலர் தமது வீட்டிலேயும் இதை நடத்துவர். பொதுவாக சர்க்கரைப் பொங்கல் மாமனோ, தகப்பனோ,பேரனோ சிறிதளவு அமுதினை மசித்து குழந்தைக்குத் தீத்தி விடுவர். சில குடும்பங்களிலே உணவை ஒரு பெரிய தட்டிலே போட்டு பிள்ளையே தனது கையால் எடுத்துச் சாப்பிட விடுவர். இதனை 'அள்ளித் தின்ன விடுதல்' என்று அழைப்பர். சில பிள்ளைகள் சாப்பாட்டை எடுத்து வாயிலே வைக்கும். சாப்பாட்டைப் (சோறு) பிள்ளை வாயிலே வைக்காது விட்டால் தாயார் சிறிதளவு எடுத்துத் 'தீத்தி' விடுவார்.'தீத்துதல்' என்ற சொல் சில இடங்களிலே 'ஊட்டுதல்' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் தமிழ் நாட்டிலே 'ஊட்டுதல்' என்ற சொல் வழக்காற்றில் உண்டு. யாழ்ப்பாணத்து பழக்க முறையில், சோறு 'தீத்தும்' சடங்கிற்குப் பின்னர் பல்லுக் கொழுக் கட்டை சடங்கு நடைபெறும். இது குழந்தைக்குப் பல்லுத் தோன்றியதும் நடைபெறும் சடங்காகும். குழந்தையை பாயில் அல்லது ஏதாவது விரிப்பு ஒன்றில் இருத்தி, குழந்தையின் தலையின் மேல் வெள்ளைத் துணியொன்றை போர்த்து, அவித்த பல்லு கொழுக்கட்டைகளைச் சுளகில் அல்லது வெள்ளித்தட்டு அல்லது 'தாம்பாளம்' போன்ற ஒன்றில் எடுத்து வந்து, பொதுவாக தாய்மாமன் குழந்தையின் தலையிலே கொட்டுவார். தமிழர் பண்பாட்டில் சிறப்பாக யாழ்ப்பாணத் தமிழர் பண்பாட்டில் ஏடு தொடக்கல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. யாழ்ப்பாணச் சமூகம் கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தது, கொடுக்கிறது என்பதை இந்த நிகழ்வு இன்று வரை சிறப்பாக தொடர்வதில் இருந்து அறிந்து கொள்ளலாம். ஏடுதொடக்கல் நிகழ்வு பெரும்பாலும் ஆலயங்களில், பாடசாலையில், பொது இடங்களில் அல்லது வீட்டில் நடைபெறும். இங்கு குழந்தைகளின் விரலைப்பிடித்து ஆனா ஆவன்னா என அரிசியில் எழுதப்பழக்குவர். அடுத்து வருவது காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில் குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு நடத்துவார்கள். பண்டைய காலத்தில் காதுவளர்க்கும் முறை ஒரு குறிப்பிட்ட சமூக மக்களிடம் இருந்தது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது. உதாரணமாக, சமண சமயத்தின் தாக்கத்தால் கி.பி. 7, 8 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இக் காது வளர்க்கும் வழக்கம் பெண்களிடம் மட்டும் அல்லாமல் அக்காலத்தில் ஆண்களிடம் இருந்துள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலில் உள்ள ரகசிய அறையில் வரையப்பட்டுள்ள ஓவியத்தில் மன்னர் இராசராச சோழன் தனது காதுமடல்களை நீளமாக வளர்த்து அதில் வளையம் போன்ற அணிகலன்களை அணிந்திருப்பது போன்றே காட்சியளிக்கிறார் என அறிகிறேன். இப்படி தமிழர் காது குத்தி காதணிகள் அணிவதை உறுதி படுத்துவது போல, தமிழன்னையின் காதினில் குண்டலங்களாக, குண்டலகேசி ஒளிர்கின்றது என "காதொளிரும் குண்டலமும் கைக்குவளை -யாபதியும்,கருணை மார்பின் " என்று கவியோகி சுத்தானந்த பாரதியின் பாடல் கூறுகிறது. வழிவழி வந்த இந்த பழக்கம் பின்னாளில் ஒரு சடங்காகவே மாறிவிட்டது. அதில் தாய் மாமன் மடியில் குழந்தையை அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. உறவுகளில் அழிக்க முடியாத உறவு "தாய்மாமன்" உறவு என்பர். இங்கு இந்த உறவு தாயின் உடன் பிறந்தவரைக் குறிக்கும். பெரும்பாலான தாலாட்டுப் பாடல்களில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். அப்படியான காது குத்தும் நாட்டுப் பாடல் ஒன்று உதாரணமாக கீழே தரப்பட்டு உள்ளது: "கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா காதுகுத்தப் போறாகன்னு கிண்ணியில் சந்தனமும் கிளிமூக்கு வெத்தலையும் தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு கொண்டு வந்தார் தாய்மாமன்" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 25 தொடரும்- "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
"தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 11 இந்தியாவினதோ அல்லது தமிழ் நாட்டினதோ தொல் பொருளியல் துறையினர் ஒரு முழுமையான முறையான எந்த ஆய்வும் பூம்புகார் பற்றி இது வரை செய்யவில்லை. ஒரு மிக சிறிய ஆய்வே இதுவரை எவராலும் செய்யப்பட்டு உள்ளது. ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் [Graham Hancock] தற்போதய பூம்புகாரின் கிழக்கே கடலுக் கடியில் செய்த ஆய்வு, கரையில் இருந்து 5 கில்லோ மீற்றர் தூரத்தில், 23 மீற்றர் ஆழத்தில் குதிரை லாட வடிவத்தில் அமைந்த ஒரு கட்டுமானமும் அதன் பக்கத்தில் அமைந்த இன்னும் ஒரு கட்டுமானத்துடன் மட்டுமே நின்று விட்டது. ஆனால் அதே பகுதியில் 100 மீற்றர் ஆழத்திற்கு மேல் 20 இற்கு மேற்பட்ட பெரிய கட்டுமானம் அங்கு இருப்பதாக அறிந்தது பரபரப்பூட்டுகிறதாக உள்ளது. அவை ஒரு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டதே தவிர சுழியோடியால் இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. அவை ஒரு அழிந்த நாகரிகத்தின் பகுதியா?என்பதை கூடுதலான, முழுமையான ஆய்வு மூலம் நாம் அறியலாம். அது மட்டும் அல்ல குமரி கண்டம் என்று ஒன்று உண்மையில் இருந்ததா அல்லது அது ஒரு கட்டு கதையா என்பதற்கும் இது விடை கொடுக்கும். எனவே, இன்றைய நிலையில், குமரிக் கண்டம் என்பது உண்மையா அல்லது வெறும் கற்பனையா என்ற விடயம் தெளிவாக இல்லாது இருக்கின்றது. கன்னியகுமரி பகுதியில் கடலுக்கடியில் ஒலிச்சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக ஒரு ஆராச்சி உரிமை கோருகிறது. ஆகவே நாம் மீண்டும் இந்த வேலை திட்டத்தை தொடங்க வேண்டும். அதன் மூலம் பல சாட்சிகளை முன் நிறுத்தி உண்மையை உலகத்திற்கு எடுத்து கூறலாம். குமரி கண்டம் உண்மையா பொய்யா என்பதை. நிரூபிக்க அல்லது சான்று பகிர, பண்டைய பேச்சு, கவிதை தவிர எம்மிடம் உருப்படியான வேறு அறிவியல் சாட்சிகள் இன்னும் இல்லை. எவ்வாறாயினும் குமரி கண்டத்தை நம்புபவர்கள் சுட்டி காட்டும் காரணங்களை கீழே ஒரு பட்டியலாகத் தருகிறேன். 1) மடகாஸ்கர் தீவிலும் [Madagascar Islands], இந்தியாவிலும் வாழ்கிற விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு இடையில் ஒரு பெரும் ஒத்த தன்மை [great similarity] காணப்பட்டது. அது மட்டும் அல்ல, அந்த ஒற்றுமைகள், மடகாஸ்கர் தீவிற்கு அருகில் இருக்கும் ஆப்ரிக்காவுடன் ஒத்து போகாமல், 2,500 மைல் தூரத்தில் இருக்கும் இந்தியாவுடன் ஒத்து போனது. 2) அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் மற்றும் ஆப்ரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழி தமிழினை ஒத்து இருத்தல். [The language of aboriginal Australians & aboriginal Africans have some similarity / Connection with Tamil] இதனை நீங்கள் மாத்தளை சோமு எழுதிய ‘வியக்க வைக்கும் அறிவியல்’ என்னும் நூலில் இருந்தும் மா.சோ.விக்டர் எழுதிய மொழி ஆய்வு நூல்களில் இருந்தும் அறிந்துக் கொள்ளலாம். உதாரணமாக அவுஸ்ரேலியா பழங்குடி மக்கள் ஒரு பெண்ணினைக் கூப்பிட ‘பூனங்காஇங்கவா’ என்றுக் கூறுகின்றார்கள். இது ‘பூ நங்கையே இங்கே வா’ என்பதின் மருவு தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 3) சங்க இலக்கிய பாடல்களின் செய்திகள். 4) பழந்தமிழர்களின் பழக்க வழக்கங்கள். குறிப்பாக கடலோரத்தில் வாழும் மக்களின் பழக்கவழக்கங்கள். 5) பூம்புகார் என்று பெயர் பெற்ற, மாபெரும் நகரமான காவேரிப்பூம்பட்டினம் கடலினுள் மூழ்கிய வரலாறு. 6] அவ்வாறே தனுஷ்கோடியின் [Dhanushkodi] ஒரு பகுதி கடலினுள் மூழ்கிய வரலாறு. இந்தக் கதை நம் சமகாலத்தில் நிகழ்ந்தது. 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை, வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது. புயல் வந்து புரட்டிப் போட்டதன் அடையாளமாக இன்றும் மிச்சமிருப்பது அழிந்த நிலையில் உள்ள ஒரு தேவாலயம். சில கட்டடங்கள் மட்டுமே. அதிகாலையில் நடந்த இந்த கோர தாண்டவத்தில் மொத்தம் 2000 பேர் வரை உயிரிழந்தனர். அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது. 7) தமிழகத்திலுள்ள குளச்சல் துறைமுகத்தில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் கடலில் ஒரு பாறை இருக்கின்றது. அந்த பாறையினை அங்கு வாழும் மக்கள் ‘ஆடு மேய்ச்சான் பாறை’ [Sheep grazing rock] என்று பெயரிட்டு அழைக்கின்றனர். காரணம் என்னவெனில் ஒரு காலம் அந்த பாறை இருந்த இடம் தரையாக இருந்தது என்றும், அப்பொழுது அங்கு சென்று மக்கள் ஆட்டினை மேய்தனர் என்றும் கூறுகின்றனர். 8] மொழி ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளும் மற்றும் தமிழ் அறிஞர்களின் கூற்றுக்களும். 9] ஆங்கிலேய ஆய்வாளர் கிரகாம் கான்காக் (Graham Hancock)கின் ஆராச்சி முடிவு. 10] கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒலிச்சமிக்ஞை [sound signal] அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதாக கண்டறியப் பட்டது இப்பொழுது நாம் சில விடயங்களை தெளிவு படுத்திக் கொள்ளுவோம் 1] அறிவியல் ஆராய்ச்சிகள் குமரி கண்ட கொள்கையை ஆதரிக்கவும் இல்லை நிராகரிக்கவும் இல்லை. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட பின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற குமரி கண்டம் / இலெமூரிய புனைக்கோள் கைவிடப்பட்டாலும், அறிவியல் முடிந்த முடிவாக தேவையான சாட்சிகளை இன்னும் முன் வைக்கவில்லை. ஆகவே முறையான ஆய்வுகள், கடல் அடி பரிசோதனைகள் பூம்புகார் கடல் பகுதியிலும் அதற்கு அண்டிய பகுதியிலும் செய்யப்பட்டு, அங்கே புதையுண்டு கிடக்கும் மனிதனால் செய்யப்பட்ட கட்டு மானங்கள், பொருட்கள் மற்றும் ஏதாவது முக்கிய சாட்சிகள், அது ஒரு மூழ்கிய நிலப்பகுதி என காட்டக் கூடியதாக அல்லது நிராகரிக்க கூடியதாக அமைந்தால், மேலும் அவைகளின் காலம் சரியாக கணக்கிடப்பட்டால் அன்றி நாம் ஒரு அறிவியல் முடிவிற்கு வரமுடியாது. அப்படியான ஒரு U வடிவ மனிதன் செய்ததாக கருதப்படும் ஒரு கட்டு மானம் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதன் பின் எந்தவொரு ஆய்வும் அங்கு இதுவரை செய்யப் படவில்லை. அப்படி மேலும் பல ஆய்வுகள் செய்யும் வரை, யாரும் ஒருவர் ஏதாவது ஒரு உலகத்தின் மூலையில் இருந்து இதைப் பற்றி கதைத்துக் கொண்டே இருப்பர். 2] இப்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் உலக நாகரிகங்கள் சுமேரியாவிலோ அல்லது சிந்து சமவெளியிலோ தோன்றி இருக்க வேண்டும் என்று கூறுகின்றன. அதற்கு முன்னர் நாகரிகங்கள் இருந்தனவா? அதற்கு முன்னர் மக்கள் எவ்வாறு இருந்தனர் ? போன்றவற்றிற்கு விடை காண, இன்னும் ஆராய்ச்சிகள் முழுவீச்சில் தொடங்கவில்லை. இது ஒரு குறைபாடே? 3] தமிழர்கள் பூம்புகார் பற்றிக் கூறும் செய்திகள் உண்மையென்று சில ஆராய்ச்சிகள் கூறும் பொழுது குமரிக்கண்டத்தைப் பற்றி மட்டும் அவர்கள் பொய் சொல்லி இருப்பார்களா? ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுமா? உண்மை வெளிப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்? திருச்சி பாரதிதாசன் பல்கலை கழகத்தை சேர்ந்த, ரிமோட் சென்சிங் துறையில் உள்ள இரு பேராசியர்கள் [Professor of Eminence Somasundaram Ramasamy and colleague J. Saravanavel, at the Department of Remote Sensing at Bharathidasan University in Tiruchirappalli], Current Science 25 June 2019 அன்று ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையை, GEBCO [The General Bathymetric Chart of the Oceans] என்ற இணையதளத்தில் கடல் கீழ் தரை மட்ட செயற்கைகோள் படங்கள் மற்றும் Geographical software ஐ பயன்படுத்தி, கடலுக் கடியில் நதிகள் ஓடிய தடங்களை பற்றி ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு அறிக்கையின் படி வைகை நதி பற்றிய குறிப்பு கிடைத்தது. தற்போதுள்ள முகத்துவரங்களிலிருந்து கிழக்கு பக்கமாக பாய்ந்த வைகை நதி, ராமேஸ்வரத்திற்கு வடக்காக சென்று பிறகு தெற்கு நோக்கி திரும்பியுள்ளது. அதன்பின் அங்கிருந்து 400 கிமீ தூரம் ஓடி இருக்கிறது. அதாவது இலங்கையின் தென் பக்கம் இருக்கும் காலி வரை நீட்சி காணப்படுவதை செயற்கைக் கோள் படங்கள் காட்டுகின்றது. அந்த இடம் தான் இப்ப மன்னார் வளைகுடாவாக இருக்குது. கடலுக் கடியில் தரை மட்டத்தை காட்டும் செயற்கைகோள் படங்களில் தாமிரபரணி நதி ஓடிய பள்ளங்களும் தெளிவாக இருக்கு. இந்த இடம் சுமார் 20,000 வருடங்களுக்கு முன்பாக கடல் சீற்றத்தில் அழிந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அப்படியானால் லெமுரியா கண்டம் படிப்படியாக அழிந்திருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் தெரிகிறது . கடலின் அடிப் பகுதி தரையை செயற்கைகோள் படங்கள் மூலம் ஆய்வு செய்த போது, அதில் ராமேஸ்வரத்திற்கு கிழக்கே இருந்து இலங்கையின் காலிவரை ஒரு பெரிய பள்ளத்தாக்கு தெளிவாக தெரிகிறது. தற்போதைய மன்னார் வளைகுடாவில் இருக்கும் கடல்பகுதியில் தான் இந்தப் பள்ளத்தாக்கு இருந்திருக்கிறது. இந்த பள்ளத்தாக்கில் வைகைநதி ஓடிய தடம் தெளிவாக காணப்படுகிறது. அது போல தாமிரபரணி கடலில் கலக்கும் இடத்திலிருந்தும் ஒரு நீட்சி காணப்படுகிறது . அந்த பள்ளத்தாக்கு ஒரு இடத்தில் கடலுக்கு அடியில் வைகை நதியோடு இணைகிற காட்சி தெள்ளத்தெளிவாக காணப்படுகிறது. இந்த நதிகளின் பாதைக்கு மேற்கே மற்றுமொரு நதிப்பள்ளத்தாக்கு தெரிகிறது. இதுவே இலக்கியங்களில் கூறப்படும் பஃறுளி ஆறாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது? இந்த நிலப்பரப்பு மேற்கில் மடகாஸ்கர் தீவிலிருந்து கிழக்கில் ஆஸ்திரேலியாவரை பறந்து விரிந்து இருந்திருக்கிறதென சொல்லப்பட்டாலும் செயற்கைக்கோள் புகைப்படங்கள் சுமார் 3 லட்சம் சதுரகிலோமீட்டர் அளவுக்குத்தான் தெளிவாக இருக்கின்றன என்றும் அந்த ஆய்வு அறிக்கையில் சொல்லப்படுகிறது [References; Ramasamy, S. M. & Saravanavel, J. Drowned valleys of Vaigai and Tamiraparani rivers in the Gulf of Mannar region, India. Current. Science. (2019) Article]. லெமுரியா என்பது 19 ஆம் நூற்றாண்டின் கோட்பாடு. கண்டப்பெயர்ச்சி [continental drift] அதை எதிர்த்தது மட்டும் அல்ல, குளோமர் சேலஞ்சர் [Glomar Challenger / குளோமர் சேலஞ்சர் ஒரு ஆழ்கடல் ஆராய்ச்சி மற்றும் கடல்சார் மற்றும் கடல் புவியியல் ஆய்வுகளுக்கான அறிவியல் துளையிடும் கப்பல் ஆகும்] ஆய்வு அறிவியல் ரீதியாக 'கண்டம் சறுக்கல்லை' உறுதிப்படுத்தியது. மற்றொரு அறிவியல் ஆய்வின்படி, தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு தரைப்பாலம் இருந்துள்ளது உள்ளது, ஆனால் குமரி கண்டம் என கருதப்படும் பெரிய கண்டம் அல்ல. உதாரணமாக தமிழ்ச் சங்கங்கள் என்று ஒன்று 10,000 ஆண்டுகளாக இருந்திருந்தால் அதற்கு முன்னரும் ஓரளவு முன்னேறிய நாகரிகம் அங்கு இருந்திருக்க வேண்டும். ஆனால் எதுவும் அப்படி இருந்ததாக இதுவரை விஞ்ஞான, தொல்பொருள் தரவுகள் ஒன்றும் பெரிதாக இல்லை. நாயே 12,000 ஆண்டுகளுக்கு முன்புதான் வீட்டு மிருகமாக வளர்க்கப்பட்டது (domesticated (hunter / gatherer society) / வேட்டையாடி சேகரிக்கும் சமூகம்) என அறிகிறோம். அதற்கு முன் எப்படி ஒரு மேம்பட்ட நாகரிகம் இருந்தது, அதுவும் அறிவியலால் கண்டுபிடிக்கப் படாமல்? சங்க காலக் கவிதைகளில் மூழ்கிய "கண்டத்தை" சுட்டிக்காட்டும் ஒரு துப்பு கூட அங்கு நம்மால் காண முடியாது - மாறாக அவை மூழ்கிய பகுதிகள் மற்றும் சுனாமி பற்றி மட்டுமே பேசுகின்றன. இதைப் பலர் தவறாகப் புரிந்து கொண்டனர் என நம்புகிறேன் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் ஒருவேளை மாவட்டங்களின் அளவைப் போன்றது; இது கடலுக்கு அடியில், குமரியில் மனிதர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் பற்றி பேசுகிறது நிலங்கள் கடல்களால் சூழப்பட்டதாகவும், அதனால் மக்கள் அங்கிருந்து வெளியேறினார் எனவும், அவர்கள் மாற்று நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் எனவும் கூறுகிறது. அவ்வளவு தான். [இந்த சங்க இலக்கியம் (கிமு 600க்கு முற்பட்டது)] பாண்டியர் செப்புத் தகடுகளிலிருந்து ~700 CE: "உயரமான கடல் அலையைத் தடுக்க பாண்டியன் ஈட்டியை எறிந்தான்" என்றும் ~ 1000 CE: "பாண்டிய மன்னன் வானத்தைப் போல உயரமான அலைகளை நிறுத்தினான்" என்றும் மிகைப்படுத்திய தகவல் அறிகிறோம், குமரிக்குக் கீழே அது ஒரு ஒரு கண்டம் என பண்டைய குறிப்புகளில் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் எங்கும் காணவில்லை. மாறாக 2 ஆறுகள் கொண்ட சில நிலங்கள் (மாவட்டங்கள்) மற்றும் கடல்களால் சூழப்பட்ட ஒரு கரையோரம் என்று மட்டும் அங்கு குறிப்பிடுகிறார்கள். எனவே தவறான குமரிக் கண்டம் என்ற விளக்கம் எங்கிருந்து தொடங்கியது? ஐரோப்பிய விலங்கியல் வல்லுநர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியா, மடகாஸ்கர் மற்றும் ஆப்பிரிக்கா இடையே ஒரு நீரில் மூழ்கிய நில இணைப்பு இருப்பதாக கருதினார். ஏனென்றால் மடகாஸ்கர் மற்றும் தென் இந்தியாவில் ஒரே வகை லெமூர் என்னும் புதை படிவம் இருப்பதை கண்டறிந்தார். அதை ஒரு கோட்பாடாக பதிவு செய்தார். அந்த நிலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார். அதை தமிழ் ஆர்வலர் சிலர், சங்க இலக்கியத்தில் கூறிய குமரிக் கோடுவை [குமரிக் கோடு என்பதற்கு குமரிமலை என்று சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் முதல் போ.வே.சோமசுந்தரனார் வரை (உ. வே.சா .உட்பட ) அனைவரும் கூறுகின்றனர். ஆனால் தென் தமிழகத்தைப் பொறுத்த வரை '-கோடு 'என்னும் பின்னொட்டு இடம் பெறும் ஊர்களெல்லாம் நீர்க்கரைகளில் அமைந்துள்ளன. உதாரணமாக: அதங்கோடு [தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் பிறந்தது இவ்வூர் ஆகும்], புதாங்கோடு [சேர நாட்டில்], திருவிதாங்கோடு [கன்னியாகுமரி மாவட்டம்], கோழிக்கோடு [கேரள மாநிலத்தில்], அழிக்கோடு [கேரளம்], காரிக்கோடு [கேரளா, இடுக்கி மாவட்டம் தொடுபுழா] இப்படி வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்.] குமரிக் கண்டம் என, லெமுரியாவை உரிமை கொண்டாடினர். என்றாலும் லெமூரியா கருதுகோள், கண்டப்பெயர்ச்சி கோட்பாடு அறிமுகம் ஆகிய பின் வழக்கற்றுப் போனது. இந்தியச் சூழலில், பனி உருகுவதால் ஏற்படும் ஒப்பீட்டளவில் ஆழமற்ற நீரின் பகுதியின் கீழ் மூழ்கியிருக்கும் ஒரு பகுதியின் படங்கள் சில முக்கிய கண்டுபிடிப்புககளுடன் - மரபணு, தொல்பொருள் மற்றும் கடல் படுக்கை ஆய்வுகள் - இணைக்கப்பட்டுள்ளன. அவை சுய விளக்கம் தரும் என்று நம்புகிறேன். எனவே இன்று லெமுரியா அல்லது குமரிக்கண்டம் என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு கற்பனையான நிலப்பரப்பு / கண்டமாகும் என ஏற்றுக்கொள்ளப் படுகிறது என்பதே உண்மையாகும். பண்டைய நாகரிகங்களில் நம்பிக்கை கொண்டவர்கள், மறைநூல் வல்லுநர்கள் [அமானுஷ்ய வல்லுநர்கள்] மற்றும் அனைத்து வகையான எழுத்தாளர்களும் [believers in ancient civilizations, occultists and writers of all sorts] இதைப் பற்றி எழுதத் தொடங்கியபோது இந்த கற்பனையான நிலப்பரப்பு கல்வி வட்டங்களுக்கு வெளியே அறியப்பட்டு பிரபலமானது. அவ்வளவுதான். இருப்பினும், 1950 களின் முற்பகுதியில், கண்டப்பெயர்ச்சி [கான்டினென்டல் டிரிஃப்ட் / continental drift] கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், இன்று இது புராணங்களாக மாறிவிட்டன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி : 12 தொடரும் பி கு : படம் 03 :: மடகாஸ்கர் மூதாட்டி படம் 04 : ஆஸ்திரேலிய பழங்குடி சிறுமி படம் 05 : கிராமப்புற தமிழ் சிறுமி- "இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day"
நன்றி எல்லோருக்கும்- "இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day"
"இன்று 07/07/2024 உலகளாவிய மன்னிப்பு தினம் / National Global Forgiveness Day" ["மன்னிப்போம்! மறப்போம்!! மகிழ்வாக வாழ்வோம்!"] "இடித்து அழித்து எரித்து சாம்பலாக்கி இழிவு செய்த வெட்கமற்ற மனமே இன்று உன்னையறிந்து உண்மை அறிந்து இதயம் திறந்து கேட்காயோ 'மன்னிப்பை?' " "இருளை இன்னுமொரு இருள் அகற்றமுடியாது இமைகாக்கும் கண்ணுக்குக்கண் பகையும் கூடாது இன்முகத்துடன் மன்னித்தல் இயலாமையும் அல்ல இதயம்திறந்து மன்னிப்பது மனித மாண்பே! " [எனது ஒரு பாடலில் இருந்து எட்டு வரிகள் கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] மன்னிப்பு என்பதை ஆங்கிலத்தில் pardon, forgiveness, exemption or apology என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர்மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல் என்றும் கூறலாம். இதற்கு எதிர்மாறான சொல்லாக மன்றுதல் அல்லது ஒறுத்தல் [தண்டஞ்செய்தல்,To fine, punish] காணப்படுகிறது. மன்னித்தல் [Forgiveness] என்பது உண்மையில் ஒரு உளவியல் [psychological] செயல்முறை, ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டதாக உணர்ந்த ஒருவர், அந்த குற்றச்செயல் [offense] தொடர்பான உணர்வுகள் மற்றும் அணுகுமுறையில் மாற்றத்திற்கு உள்ளாகி அதில் இருந்து விடுபட வழிவகுக்கிறது எனலாம். அதாவது மனக்கசப்பு மற்றும் பழிவாங்குதல் போன்ற எண்ணங்களில் [ negative emotions such as resentment and vengeance ] இருந்து இதனால் அவர் விடுபடுகிறார் எனலாம். எனினும் ஆழமாக சிந்திக்கும் பொழுது மன்னிப்பு என்பது உணர்வு மட்டும் அல்ல அது ஒரு செயல் என்பது தெரியவரும். நாம் மனக்கசப்பை விட்டுவிட்டு, நாம் அனுபவித்த காயம் அல்லது இழப்புக்கு ஈடுசெய்யப்பட வேண்டும் என்ற எந்தவொரு கோரிக்கையையும் கைவிடும்போது மற்றவர்களை நாமாகவே மன்னித்து விடுகிறோம் எனலாம். அதே போல எமக்கு கொடுமை இழைத்தவர்கள் தங்கள் கொடுமையை உணர்ந்து, தமது தவறை மறைக்காமல், இனி அப்படி ஒன்று நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுத்து, தாம் செய்த அநியாயங்களை வெளிப்படையாக கூறி, மன்னிப்பு கேட்பது இரு சாராரையும் ஒற்றுமையாக்கும். மன்னித்தல் எப்படி மாண்பு மிகுந்ததோ, அப்படித்தான் மன்னிப்பு கேட்பதும். மன்னிப்பு கேட்பதற்கும் ஒரு பேருள்ளம்வேண்டும் பெருந்தன்மை வேண்டும். கூடுதலாக ஆண்மையும் வேண்டும். மேலும் ஒரு குற்றத்தை ஒப்புக் கொள்வதே அதைத் தவறென்று உணர்ந்திருப்பதை வெளிப்படுத்தும். மன்னிப்பு கேட்பதே குற்றத்திற்கான பாதிதண்டனையை பெற்றுவிட்டதற்கு சமம். மன்னிப்பு கேட்பவனை விட மன்னிக்கத் தெரிந்தவன் தான் மனிதன் என்பார்கள். அந்த மன்னிக்கத் தெரிந்த குணம் எப்போது வரும் என்றால் தவறு செய்தவன் தவறை உணரும் போதுதான். ஆனால் அந்த தவறையும் உணராமல் மன்னிப்பும் கேட்காமல் அவன் இருந்தால் ? இது தான் இன்று பெரும்பான்மை ஆட்சியாளரிடம் சிக்கி தவிக்கும் சிறுபான்மை இனத்தின் கதி ? எனவே தான் உண்மையை கண்டறிந்து, கொடூரத்தின் வெளிப்பாட்டை அவனுக்கு உணர்த்தி, அதன் மூலம் அவனை மன்னிப்பு கேட்க வைக்க, இலங்கையில் காணாமல் போன பெற்றோர் இன்னும் அறவழியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படியான ஒருவரின் இன்றைய நிலையை ''குஞ்சுகளைக் கண்டால் சொல்லுங்கோ....'' என்ற சிறு கதை மூலம் தீபம் ஆசிரியர், திரு செ. மனுவேந்தன் வெளிப்படுத்துகிறார் [http://www.ttamil.com/2021/07/blog-post_05.html]. பொதுவாக கூறுமிடத்து, நம்மை நாம் முதலாவதாக மன்னிக்க வேண்டும் என்று தெளிவுபடுத்தலாம். அதாவது இந்த தவறை செய்ய மாட்டேன் என முடிவெடுத்து நம்மை நாம் மன்னிக்கும் போது, நாம் அடுத்த நல்ல நிலைமைக்கு நம்மை எடுத்து செல்கிறோம் என்றாகிறது. மற்றவர்களை காட்டிலும் நாம் யாரை மன்னித்தோமோ அவர்களே நம் மீது அதிக அன்பு கூறுவார்கள் என்பது உண்மை. ஒருவர் நமக்கு தீமை செய்கிறார். நமக்கு அவர் மேல் கோபம் கொப்பளிக்கிறது. பின் அவர் தனது தவறை உணர்ந்து நம்மிடம் மன்னிப்பு கேட்கிறார். நாமும் மன்னித்தோம் என்று கூறி விடுகிறோம். இதனால் இருவருக்கும் இடையில் சமாதானம் ஏற்படுகிறது. இது தான் நாம் பெரும் பெரிய முதல் பரிசு ஆகும். எது எப்படியாகினும், நாம் உண்மையில் மன்னித்தோமா அல்லது மன்னிக்கப் பட்டோமா என்பது முக்கியம். அது கட்டாயம் உறுதிப்படுத்தப் படவேண்டும். அப்ப தான் சந்தேகம் அற்ற சமாதானம் நிலவும். இன்றைய உலகில் 'மன்னிப்பு' என்ற செயல் கொஞ்சம் வித்தியாசமாக மட்டும் அல்ல. பைத்தியக்காரத்தனமாகக் கூடத் தோன்றும். மன்னிப்பார்கள் என்று நம்பி வெள்ளைக்கொடியுடன் சென்று மாண்டவர்கள் எத்தனை ?. எது எவ்வாறாகினும், நாளும் பிறர்க்குதவும் நல்லெண்ணம் மட்டும் இருப்பதாலோ அல்லது பாசமும் பரிவும் காட்டும் உள்ளங்கள் இருப்பதாலோ நாம் எல்லாவற்றையும் சாதிக்க முடியாது. ஆனால் மன்னிக்கிற மாண்பு மாபெரும் வெற்றிகளை நிகழ்த்துகிறது. ஆமாம், மன்னிப்பு மானுடத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது! தண்டனையால் முடியாத மாற்றத்தை மன்னிப்பு நிகழ்த்தி விடுகிறது. “இருளை இருள் அகற்ற முடியாது என்பதைப்போல பகையை பகை அகற்ற முடியாது. அன்புதான் பகையை அகற்றும்” என்றார் மார்ட்டின் லுாதர் கிங் [Darkness cannot drive out darkness; only light can do that. Hate cannot drive out hate; only love can do that - Martin Luther King] ஆமாம், அந்த அன்பு தான் மன்னிப்பு ஆகும். எனவே, மன்னித்தல் என்பது இயலாமையோ,கோழைத்தனமோ அல்ல. முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி சொல்லியது போல, “மன்னித்தல் என்பது பலசாலிகளின் பண்பு” ஆகும். “கண்ணுக்குக்கண் என்ற பகையுணர்வு இருந்தால் உலகில் எல்லோருமே குருடர்களாகத்தான் திரிந்து கொண்டிருப்பார்கள்” என்று ஒரு முறை மகாத்மா காந்தி கூறியதை நினைவு படுத்துங்கள். "மற்றவர்களிடம் மன்னிப்பு கேட்டால், உங்கள் பரலோகத் தகப்பன் உங்களுக்கு மன்னிப்பார் [For If You Forgive Men When They Sin Against You, Your Heavenly Father Will Also Forgive You]. நீங்கள் மற்றவர்களுடைய பாவங்களை மன்னிக்காவிட்டால், உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார் [But If You Do Not Forgive Men Their Sins, Your Father Will Not Forgive Your Sins]." என்று கிறிஸ்தவம் தனது மத்தேயு 6: 14-15 வில் மனிதர்களுக்கு ஒரு பயமுறுத்தலுடன் போதிக்கிறது. அதே போல "மன்னித்தல் அல்லாஹ் தனது நபிக்கும் அடியார்களுக்கும் ஏவிய நற்பண்புகளில் ஒன்று" என இஸ்லாத்தில் கூறப்படுகிறது. உதாரணமாக, 'இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.' [whoever pardons and makes reconciliation – his reward is [due] from Allah]. (அல்குர்ஆன் 42:39-43) இந்து மதத்தின் ஒரு காப்பியமான மகாபாரதத்தில், வனபர்வம் பகுதி 29 இல் [Mahabharata, Book 3, Vana Parva, Section XXIX,] மன்னிப்பு பற்றிய நீண்ட உரையாடல் காணப்படுகிறது. அதில் "உண்மையில், நேர்மையானவனும் மன்னிக்கும் குணமுள்ளவனும் எப்போதும் வெற்றி பெறுவான் என்பதே அறம்சார்ந்தவர்கள் கருத்து. உண்மையே பொய்மையைவிட நன்மை; மென்மையான நடத்தையே கடுமையான நடத்தையைவிட நன்மை. கோபம், மக்களின் அழிவுக்கும் துயரத்திற்கும் காரணமாகும். மன்னிக்கும் தன்மையுடன் பூமியைப் போன்ற பொறுமை கொண்ட மனிதர்கள் உலகத்தில் இருப்பதாலேயே உயிர்கள் செழிப்பையும் வாழ்வையும் பெறுகின்றன. ஓ அழகானவளே, என்ன காயம் ஏற்பட்டாலும் ஒருவன் மன்னிக்க வேண்டும். மனிதன் மன்னிக்கும் தன்மையுடன் இருப்பதாலேயே உயிர்களின் தொடர்ச்சி ஏற்படுகிறது. கோபத்தை வெல்பவனே, ஞானி. அவனே பலவான். எப்போதும் மன்னிக்கும் தன்மை கொண்ட பொறுமையானவர்களுக்காக சிறப்பு மிகுந்த மன்னிக்கும் தன்மை கொண்ட காசியபர் இந்த வரிகளைப் பாடியிருக்கிறார். "மன்னிப்பதே {பொறுமையே} அறம்; மன்னிப்பதே வேள்வி, மன்னிப்பே வேதம், மன்னிப்பே சுருதி. இதை அறிந்த மனிதன் எதையும் மன்னிக்கும் ஆற்றல் பெற்றவனாக இருப்பான். பொறுமையே பிரம்மம், பொறுமையே உண்மை, மன்னிப்பே பாதுகாக்கப்பட்ட ஆன்மத்தகுதி, எதிர்கால ஆன்மத்தகுதியைக் காப்பது பொறுமையே. பொறுமையே தவம், பொறுமையே புனிதம், பொறுமையாலேயே இந்த அண்ட ம் தாங்கப்படுகிறது. [For, O thou of handsome face, know that the birth of creatures is due to peace! If the kings also, O Draupadi, giveth way to wrath, his subjects soon meet with destruction. Wrath, therefore, hath for its consequence the destruction and the distress of the people. And because it is seen that there are in the world men who are forgiving like the Earth, it is therefore that creatures derive their life and prosperity. O beautiful one, one should forgive under every injury. It hath been said that the continuation of species is due to man being forgiving. He, indeed, is a wise and excellent person who hath conquered his wrath and who showeth forgiveness even when insulted, oppressed, and angered by a strong person. The man of power who controleth his wrath, hath (for his enjoyment) numerous everlasting regions; while he that is angry, is called foolish, and meeteth with destruction both in this and the other world. O Krishna, the illustrious and forgiving Kashyapa hath, in this respect, sung the following verses in honour of men that are ever forgiving, Forgiveness is virtue; forgiveness is sacrifice; forgiveness is the Vedas; forgiveness is the Shruti. Forgiveness protecteth the ascetic merit of the future; forgiveness is asceticism; forgiveness is holiness; and by forgiveness is it that the universe is held together.]" என்று கூறி உள்ளதை கவனிக்க. "பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று." [குறள் 152] தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் [மன்னித்துக்] கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் [மன்னித்தலையும்] விட நல்லது என்கிறது திருவள்ளுவர் தந்த திருக்குறள். அதாவது, நாம் வாழ்வில் பல மனிதர்களை சந்திக்கிறோம். பெரும்பாலானோரிடம் நல்லவையும் உண்டு குறைகளும் உண்டு என்பதை அறிவோம். சிலரிடம் அதிக குறைகள் உண்டு. அவர்கள் அத்தவறுகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள், திருத்துத்திக்கொள்ளவும் மாட்டார்கள். மறுபுறம் சிலர் தங்கள் தவறுகளை உணர்ந்து மன்னிப்பு கேட்பார்கள். அது அவர்களின் நல்லுள்ளத்திற்கான சான்று. அவர்களின் முன்னேற்றத்திற்கான சான்று. மன்னிப்பு கேட்காதவரிடம் நாம் அமைதியாக சகித்துக்கொண்டு செல்வது சிறப்பாகும். மன்னிப்பு கேட்பவரை மன்னித்து செல்வது சிறப்பாகும். ஆனால் இவற்றைவிடவும் அத்தவறுகளையும் குற்றங்களையும் அறவே மறந்துவிடுவது என்பது சகித்துக்கொள்வதை காட்டிலும் மன்னித்தலை காட்டிலும் மிக மிக சிறந்தது என்று திருவள்ளுவர் வாதாடுகிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]- "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03
"தமிழுடன் ஒரு விளையாட்டு" - 03 [காளமேகப் புலவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள்] இவர் இயற்பெயர் வரதன். இவர் ஆசு கவி (நொடிப் பொழுதில் பாடல் எழுதுபவர்) பாடுவதிலும் சிலேடைப் படல்கள் (ஒரே பாடல் இரு பொருள்) பாடுவதிலும் வல்லவர். இவர் காலம் 15ம் நூற்றாண்டின் இடைப்பகுதி. பாடுக! என்றதும் மழை பொழிவதைப்போல் பாடும் திறமை இவர் பெற்றதால், இவர் ‘காளமேகம்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றார் என்பர். வைணவ சமயத்தில் பிறந்த இவர், திருச்சிக்கு அருகே அமைந்துள்ள, திருவானைக்கா [திருஆனைக்காவல்] கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறி அவரை திருமணம் செய்துகொண்டார். இனி அவரின் தகரவரிசை, ககரவரிசை பாடல்கள் இரண்டையும் கிழே பார்ப்போம். ”தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது?” வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது? தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய் தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய் துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய் துதைது – அடுத்த பூவுக்குச் சென்று அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய் தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? – நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது? "காக்கைகா காகூகை, கூகைக்கா காகாக்கை கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க — கைக்கைக்குக் காக்கைக்குக் கைக்கைக்கா கா" காக்கைக்கு -காக்காவிற்கு ஆகா கூகை -ஆந்தையைப் பிடிக்காது. ஒத்துப்போகாது. கோக்கு -கோ என்றால் அரசன். கூ -பூமி, அவன் நாடு, காக்கை - காப்பது அரசாள்வது கொக்கொக்க -கொக்கைப் போன்று கைக் கை - விரோதிகளை வென்று கா - காப்பது. இதை ஒரு ஒழுங்கில் சொன்னால், காக்கைக்கு இரவில் கண் தெரியாது. ஆந்தைக்கு பகலில் கண் தெரியாது. இரண்டிற்கும் நட்பு கிடையாது. காக்கையை விட ஆந்தை பலம் கொண்டது. எனவே காக்கை தனக்கு சாதகமான பகலில் ஆந்தையை விரட்டும். ஒரு அரசனுக்கு தனது நாட்டைக்காப்பது இன்றியமையாத முக்கிய கடமையாகும். மீன்களை எப்படி கொக்கு நிதானமாக காத்திருந்து உறுமீன் வந்தவுடன் சட்டென்று அதைக் கவ்வுமோ அது போல் எதிரி அசந்திருக்கிற சமயத்தில் அவன் மேல் படை எடுத்து, அவனை வென்று நாட்டைக் காப்பது அவசியம் என்பது இதன் பொருள் ஆகும். - "கனவே கலையாதே"
Important Information
By using this site, you agree to our Terms of Use.