Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. பிரேரணை நிறைவேற்றப்பட்டதில் தமிழர்களுக்கு என்ன பயன்? - தாயகத்தில் இருந்து இளங்கீரன்

Featured Replies

ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல், உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல் தாம் அனுபவித்த அவலங்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நிச்சயமாக ஜ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்கள் அனுபவித்த அவலங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலைக்கூட பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. உண்மையாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்போனால் தமிழர்களுடைய பெயரைச் சொல்லியே சர்வதேச சதிகாரர்களால் தமிழர்கள் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் தாங்களே என மார்தட்டிக் கொள்ளும் சில மனிதர்களும் காரணம். வரலாறும், வரலாற்று மாந்தர்களும், உதிரம் சிந்தி, உயிர்க்கொடை செய்து பெற்றுக்கொடுத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்தையும் தமிழர்கள் நாங்கள் தவறவிட்டிருக்கின்றோம்.

அமெரிக்கா தலைமையில் ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சிறீலங்கா அரசிற்கு எதிரானதல்ல. சிறீலங்கா அரசினால் யுத்த நிறைவில் உருவாக்கப்பட்டிருந்த சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவின் அறிக்கையினைப் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த தீர்மானம். இதில் தமிழர்களுக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. ஒரு நாட்டின் அரசாங்கம் தான் நியமித்த ஆணைக்குழு தனக்கெதிரான ஒரு முடிவை எழுதுவதற்கு ஒப்புதலளித்திருக்குமா? நிச்சயமாக கிடையாது.

இங்கு நடைபெற்றது சுயாதீனமானதும், சுதந்திரமானதுமான ஒரு ஆணைக்குழு விசாரணை கிடையாது. இந்த ஆணைக்குழு இந்த முடிவையே எடுக்கப்போகின்றது என்பது சிறீலங்கா அரசாங்கத்திற்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். அல்லது பேசப்பட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த தீர்மானமே எடுக்கப்படவேண்டும் என்பதை அரசு நிச்சமாகவே சொல்லியிருக்கும்.

இதனடிப்படையில்தான் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றச்சாட்டுக்களுடன் ஒருசிலர் மட்டுமே அதுவும் அவர்களின் விருப்ப வெறுப்புக்குட்பட்டு தொடர்பு பட்டிருக்கின்றனர் எனக்கூறி பொறுப்புக்கூறும் விடயத்தில் நழுவியிருக்கின்றது. வடக்கில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை அவதானித்த ஒருவன் என்றவகையில், அமர்வுகளில் மக்கள் சொன்ன எதுவும் இல்லை, மக்கள் சிந்திய கண்ணீர் இறுதி அறிக்கையில் பிரதி பலிக்கவில்லை.

30 வருடம் இங்கு வடக்கில் நடைபெற்ற அத்தனை படுகொலைகள் குறித்தும், அத்தனை கடத்தல்கள் குறித்தும் மக்கள் தெரிவித்திருந்ததோடு மட்டும் நின்றுவிடாமல் அதில் யார் ஈடுபட்டார்கள் என்றும் மக்கள் சொன்னார்கள். இதில் தனிப்பட்ட மனிதர்களே ஈடுபட்டனர் என்றால் அவை நடைபெற்ற காலப்பகுதியில் நடந்த சம்பவங்கள் குறித்து சிறீலங்கா அரசிற்குத் தெரியாமலிருந்ததா? நிச்சயமாக தெரியும்.

ஆனால் அவற்றுக்கு என்ன நியாயம் கிடைத்தது? யுத்தகாலத்தில் ஆலயங்கள் மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள் குறித்தும் என்ன விசாரணை நடத்தப்பட்டது? எதுவுமே கிடையாது. இவை அனைத்தையும் ஆணைக்குழுவின் அமர்வுகளில் மக்கள் சொன்னார்கள். ஆனால் அவை எவையுமே ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது, மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், குண்டுவீச்சுக்கள் குறித்தும் இறுதி யுத்தம் வரை சென்று மீண்டு வந்த மக்கள் சொன்னார்கள்.

111028-UN.gif

அவையும் கூட ஆணைக்குழுவின் அறிக்கையில் பிரதிபலிக்கவில்லை. இந்த நிலையில் குற்றவாளியே குற்றத்தை விசாரணை செய்த விந்தையின் வடிவமே நல்லிணக்க ஆணைக்குழுவும், அதன் அறிக்கையும். இதன் மூலம் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் என எதிபார்த்திருந்தால் எம்மைப்போல ஏமாளிகள் வேறு யாருமே இருக்க முடியாது. இவ்வாறான ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட அறிக்கையினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றே அமெரிக்கத் தீர்மானம் அமைகின்றது.

ஆனாலும் இந்தத் தீர்மானம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிரானதென்றும், அதன் மூலம் தமிழர்களுக்கொரு நியாயம் கிடைக்கும் என்றும் கருத்துக்கள் மக்களின் அடிநெஞ்சில் விதைக்கப்பட்டது. அது எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்த அந்த மக்களின் நெஞ்சங்களில் முளைவிட்டு நம்பிக்கை தரும் அளவிற்கு வளரவும் செய்திருக்கின்றது. ஆனால் அவை போலியானவை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ளும்போது நிச்சயமாக எங்களின் கைகளில் எதுவுமே இருக்காது.

இவ்வாறான தனக்குச் சாதகமான ஆணைக்குழுவின் அறிக்கையினை சிறீலங்கா அரசு எதற்காக எதிர்த்தது? எதற்காக இவ்வளவு கஸ்டப்படுகின்றது என்றெல்லாம் எண்ணத்தோன்றும். அதற்கும் காரணங்கள் சில இருக்கவே செய்கின்றது. அதாவது தனக்கெதிராக கூறப்பட்டு ஜ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுவதை அரசு விரும்பவில்லை. அதற்குமேல் ஆணைக்குழுவை அமைத்ததும், அறிக்கை விடுத்ததும் சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கேயழிய இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்றோ அல்லது தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டுமென்றோ கிடையாது.

அதாவது குறைந்தபட்சம் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையினையும் கூட நிறைவேற்ற அடிப்படையில் சிங்கள இனவாத சக்திகளுக்கு விருப்பமில்லை. இந்த நிலையில் நடந்த அனைத்தையம் மறந்துவிடுவோம் என்று கூறிக்கொண்டே தமிழர்களை வெறுமையாக்கிவிட்டு ஆக்கிரமிப்பைச் செய்வதற்கே மீட்பர்கள் இந்த வேசத்தை அரசு போட்டிருக்கின்றது. ஆக மொத்தத்தில் தமிழர்கள் குறித்தும், தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்தும் எந்த திட்டமும் இந்த அரசிடம் இல்லை.

இந்த அரசிடம் மட்டுமல்ல இனிமேல் எந்த அரசு வந்தாலும் அவர்களிடமும் இருக்கப்போவதில்லை. அதுபோகட்டும் ஜ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானத்திற்கு வாக்களிப்பு நடைபெறவிருந்தபோது சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இறுதியில் இந்தியா எடுத்திருந்த முடிவு தமிழகத்திலும் சரி இலங்கையிலும் சரி தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சிகரமானதொரு சூழலை ஏற்படுதியிருந்தது.

அதற்கு மேலே சொன்னதைப் போன்று அமெரிக்கத் தீர்மானம் தொடர்பாக தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருந்த நம்பிக்கையே இந்த மகிழ்ச்சிக்கு காரணம். ஆனால் இந்தியா செய்து முடித்தது முற்று முழுதான துரோகம் என்பதை தமிழர்கள் புரிந்து கொண்டாக வேண்டும். உள்ளார்ந்தமாகவே இந்தியாவிற்கு சிறீலங்கா அரசாங்கத்தை எதிர்க்கும் மனோபாவம் கிடையாது. ஆனால் தமிழகத்தில் எழுந்துள்ள அதிர்வலைகளை அடக்கவேண்டும்.

அதேவேளை சிறீலங்கா அரசையும் பகைக்ககூடாது. இந்த நிலையில்தான் வாக்களிப்பின் இறுதி நேரத்தில் தீர்மானத்தில் இந்தியா சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைக்கும் சிறீலங்கா அரசாங்கத்தின் ஒப்புதலைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே தீர்மானத்துடன் புதிதாக இணைக்கப்பட்டிருக்கின்ற பகுதி.

எனவே இந்தப் புதிய பகுதியினை இணைக்க கேட்டதன் மூலம் இந்தியாவும், இணைத்துக் கொண்டதன் மூலம் அமெரிக்காவும் அடிப்படையில் தமிழர் நலனில் அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. தற்போது ஜ.நா தீர்மானத்தின் கீழான எந்த நடவடிக்கைக்கும் தாம் ஒப்புதல் வழங்கப்போவதில்லை என சிறீலங்கா அரசு தெரிவித்திருக்கின்றது.

இந்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் என்ன பயன்? இதற்கிடையில் இந்தத் தீர்மானமே அடிப்படையென்றும் இதன் பின்னர் அடுத்தக்கட்டம் சில நடவடிக்கைள் உள்ளதென்றும் சொல்லப்படுவதெல்லாம் வெறும் வார்வார்த்தைகளே என்பதைத் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதேபோன்று 2009ம் ஆண்டில் யுத்தத்தை சிறீலங்கா அரசாங்கம் முழுவீச்சில் நடத்த சகல வழிகளிலும் உதவிபுரிந்த இந்தியா, அதனை நியாயப்படுத்துவதற்காகவும், மூடிமறைப்பதற்குமாக இலங்கைக்குள் மாற்று சக்திகள் உள்நுழைவதை இந்தியா உள்ளார்ந்தமாக விரும்பவில்லை. எனவே இந்த இடத்திலாவது இந்தியாவின் புராணம் பாடும் சிலர் வாயை மூடிக்கொள்வது சரியாக இருக்கும். இந்தியா காலத்திற்குக் காலம் செய்த அதே துரோகத்தை இன்றும் தமிழர்களுக்குச் செய்திருக்கின்றது.

இனிவரும் காலங்களிலும் செய்வதற்கு அது தயாராக இருக்கின்றது என்பதே உன்மை. ஜ.நா உள்நாட்டு விடயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும், இலங்கையின் இறைமையை காக்கவுமே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக நியாயம் சொல்லியிருக்கும் இந்தியா. இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஆயுதங்கள் உட்பட சகல வசதிகளையும் செய்து கொடுத்தபோது இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது உள்நாட்டுப்போர் என்பது புரியவில்லையா?

அல்லது இலங்கையின் உள்நாட்டு விடயத்தில், அதன் இறைமை விடயத்திலும் முன்னெப்போதும் இந்தியா தலையிட்டது கிடையாதா? தன்னுடைய நாட்டிலுள்ள தமிழர்களையும், மனிதாபிமானமுள்ள மக்களையும் பகைத்து ஈழத்தமிழருக்குத் துரோகத்திற்கும் மேல் துரோகம் செய்து தெற்காசியப் பிராந்தியத்தில் நிலைப்பதற்காக சிறீலங்கா அரசுடன் உறவு கொண்டாடும் இந்தியா அரசு ஈழத்தமிழரின் பெயராலேயே அவர்களுக்குச் செய்த துரோகத்தினாலேயே ஒரு நாள் தூக்கி வீசப்படும்.

இது இவ்வாறிருக்க தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் (?) என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கூட இராஜதந்திரம் என்ற போர்வையில் செய்திருப்பது மிகப்பெரிய துரோகம் என்றே கருதவேண்டியிருக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோத அதை மறுதலித்து அதில் பிழைகள் இருப்பதை 105 பக்க அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்த கூட்டமைப்பு, ஆணைக்குழு அறிக்கையினை அடியற்றியே அமெரிக்காவினால் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.

ஆணைக்குழுவின் அறிக்கையினை இலங்கையில் நிராகரித்து விட்டு ஜெனீவாவில் ஆதரிக்க முடியுமா? நாங்கள்தான் அமெரிக்கா இந்த தீர்மானத்தை எடுக்க காரணம் என ஏக வசனம் பேசிய கூட்டமைப்பு இறுதியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதனைத் வரவேற்றுமுள்ளது.

எனவே இந்த தீர்மானத்தில் தமிழர்களுக்கு எதுவுமே கிடையாது என்பதும், தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நாமாவது சர்வதேசத்திற்குச் சொல்லவேண்டும் என்பதும் கூட்டமைப்பிற்குத் தெரியாமல் இல்லை. தெரிந்தும் சொல்லாமல் இருந்ததே உண்மைக்கதை, எனவே மீட்சி பெற முடியாதளவு அவலத்தின் வாயிலில் தமிழர்கள் நின்றிருந்தபோதும், சரி, பிழைகளுக்கப்பால் தமிழ் மக்கள் கூட்டமைப்பை தெரிவு செய்திருந்தனர்.

ஆனால் கூட்டமைப்பு அந்த வரலாற்றுப் பொறுப்பை உதாசீனம் செய்திருக்கின்றது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியானபோது அதனை வெளிப்படையாக நிராகரித்திருந் கூட்டமைப்பு அதன் மூலம் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தியிருந்த நம்பிக்கையினை பின்னர் தவறாக பயன்படுத்தியிருக்கின்றது.

மற்றொரு பக்க யாதார்த்தம் என்னவென்றால், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் தொடர்பாக ஏற்கனவே அறிந்திருந்த கூட்டமைப்பு, அமெரிக்கா தீர்மானத்தை கொண்டுவருகின்றது, எனவே ஜெனீவாவிற்குச் சென்று அந்த தீர்மானத்திற்கு இடையூறு விளைவிப்பதை அமெரிக்கா விரும்பப்போவதில்லை என கூறிக்கொண்ட கூட்டமைப்பு, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை இலங்கையில் நிராகரித்துவிட்டு வெளிநாட்டில் அதற்கு வலுச்சேர்க்க முடியுமா எனக்கேள்வியெழுப்பிய அதே கூட்டமைப்பு, வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காக எமது அபிலாசைகளை விற்றுத் தீர்த்திருக்கின்றதே தவிர எங்களுடைய அபிலாசைகளை, எங்களுடைய இனத்தின் சுயமரியாதை உணர்வுகளை ஒருபோதும் சர்வதேசத்திற்குச் சொல்லவில்லை.

சர்வதேச சக்திகள் தருவதைத்தான் வாயை மூடிக்கொண்டு பெற்றுக் கொள்ளவேண்டும் என்றிருந்தால் 2009ம் ஆண்டின் நிறைவில் உலகத்தை கண்விழிக்கச் செய்த விடுதலைப் புலிகளினதும், ஆயிரமாயிரம் அப்பாவி மக்களினதும் உன்னதமான மரணமும், புலம்பெயர் தமிழர்களின் போராட்ட சக்தியும் போதும். கூட்டமைப்பு வேண்டாப்பொருள்.

எனவே சர்வதேசம் இலங்கையில் நடைபெற்று முடிந்த போரில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கெதிரான குற்றங்களுக்கான சர்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையன்றினையே தமிழர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இன்றுவரையில் எதுவுமே கிடைக்காத நிலையில், கிடைத்த சந்தர்ப்பங்களிலும் எமது நிலைப்பாடுகளில் உறுதியும், எமது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தும் தன்மையும் இன்மையினாலுமே இன்றுவரை தமிழர்கள் நிர்க்கதி நிலையில், ஆக்கிரமிப்புக்களுக்கும், அடாவடிகளுக்கும் பலியாவோராக மாறியிருக்கின்றோம்.

ஒவ்வொரு தமிழனும் தன்னுடையதும் தனது இனம்சார்ந்தும் அரசியலை கையிலெடுக்கவேண்டும், அரசியலை வெறுமனே அரசியல்வாதிகளிடம் விட்டுவிடும் பண்பாட்டை மறக்கவேண்டும். இதுவொன்றே தமிழர்கள் அடுத்த தலைமுறையிலாவது மீட்சிபெறுவதற்கு இருக்கின்ற ஒரே வழி. விடுதலைப் புலிகள் போன்று அடிப்படைக் கொள்கைளில் விட்டுக்கொடுப்பின்றி, வலிவானதும் இனம்சார்ந்து சிந்திக்கத் தலைப்படுவதுமான ஒரு அரசியல் சக்தி இருக்கவேண்டும்.

அது இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் நலன்களுக்காக பேசாத அந்த நலன்களை எமது மக்கள் மீது சுமத்தாத ஒன்றாகவும் இருக்கவேண்டும். அப்போதே அடுத்த தலைமுறையாவது நிம்மதியாக வாழும்.

நன்றி : ஈழமுரசு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.