Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை - வெங்கட் சாமிநாதன்

AndOtherPoems.jpg

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை

சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்

நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். நிறைய ஜெய காந்தனின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நிறைய தற்கால எழுத்துக்களைப் படித்து வருகிறார் என்றும் தெரிந்தது. அதெல்லாம் சரி. ஆனால், இவ்வளவு நீண்ட காலம் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வெளியே இருந்தவருக்கு வேறு துறையில் நிபுணத்துவம் பெற்றவருக்கு தமிழிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு இருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. படிப்போடு நில்லாது தான் ரசித்தவற்றைப் பற்றியும் நிறைய எழுதிவருகிறார்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அவரது இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள். இரண்டுமே இன்றைய தமிழ்க் கவிதைகளில் அவர் தேர்ந்து மொழிபெயர்த்தவை. பாரதி முதல் வைரமுத்து, சிற்பி ஆகியோர் வரை. கவிதைகளிலும் மொழிபெயர்ப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடும் ரசனையும் இல்லாது இது சாத்தியமில்லை. அவரது மொழிபெயர்ப்பும் இரண்டு மொழிகளிலும் அவருக்கு இருந்த சொல்லாட்சித் திறனைச் சொல்வதாக இருந்தது. அது தற்கால தமிழ்க் கவிதை பற்றியது.

இப்போது எனக்குக் கிடைத்திருப்பது (Tamil Women Poets – Sangam to the Present) சங்க காலத்திலிருந்து இன்று வரை பெண் கவிஞர்களின் பங்களிப்பை ஒரு வேக பருந்துப் பார்வை தரும் வகையில் அவராகத் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கே. எஸ் சுப்பிரமணியம். எனக்கு மிக மன மகிழ்வைத் தந்த சமீபத்திய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இம்மாதிரியான ஒரு கவிதைத் தொகுப்பை தேர்வு செய்து மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியதே, சந்தையை மனதில் கொண்டு செயல்படாத மனிதர்களும் இன்றைய தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். தற்காலத் தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்க முன்னர் முனைந்த போது இத்தகைய ஒரு தொகுப்பு பற்றிய எண்ணம் மனத்தில் உதித்ததாகச் சொல்கிறார் கே.எஸ். சுப்பிரமணியம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டு நீட்சி கொண்ட தமிழ்க் கவிதையினூடே ஒரு பிரயாணம் சங்க கால கவிதைகளிலிருந்து தொடங்கி, நீதி போதனைப் பாடல்கள்,, பக்தி காலம், தனிப்பாடல்கள் (இதில் கால வரையறை இல்லை) நாட்டுப் பாடல்கள் எல்லாம் கடந்து வந்து நவீன தமிழ்க் கவிதை வரை. பார்வை நீள்கிறது. தமிழ் வரலாற்றில் ஔவையார்கள் வெவ்வேறு கால கட்டங்களில் பலர் இருந்தனர்.ஒற்றை வரியில் நீதி போதனைகள் தந்த ஔவையாரையும்கூட விடுவதற்கு சுப்ரமண்யத்திற்கு மனம் வரவில்லை. இருப்பினும் இத் தொகுப்பு தமிழ் அறியாதோர்க்கு தமிழ்க் கவிதை வளத்தைக் காட்டும் எண்ணத்தை மனதில் வைத்துச் செய்யப்பட்டது என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் காணப்படும் ஔவையார் ஒரு இளம் பெண்ணாகத் தான் நம் முன் காட்சி தருகிறார்.

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்

அலமரல் அசைவளி அலைப்பவென்

உயவுநோ வறியாது துஞ்சும் ஊர்க்கே.

இதை சுப்பிரமண்யன் எவ்வளவு எளிதாக, அழகாக ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்!

Do I butt them? Do I toss them?\

Spurred by some impulse

Do I shout hoarse

I am at a loss

The prancing breeze

Torments me to no end

Townsfolk in slumber buried

Blissfully oblivious

Of my agony of suppressed libido

What to do I know not.

Prancing breeze என்ற சொற்றொடர் மிக அழகாக வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதே சமயம் libido என்ற சொல்லைத் தவிர்த்து desire அல்லது longing என்று சொல்லியிருக்கலாமோ, What to do I know not க்குப் பதில் what do I do I know not என்று சொல்லியிருக்கலாமே என்றும் தோன்றுகிறது. ஆனால் இதெல்லாம் கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லும் காரியம்தானே. முதலில் சுப்ரமண்யம் செய்துள்ள அளவுக்கு நான் என்ன, எனக்குத் தெரிந்தவர்கள் மற்றவர்கள் யாரும் செய்திருக்கிறார்களா என்[பது சந்தேகம் தான். இதிலும் நான் மிகவும் மதிக்கும் டாக்டர் பி.ஆர். சுப்ரமண்யம் வேறு இம்மொழி பெயர்ப்புகளைப் பார்வையிட்டிருக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு,, அகநானூறு, பொருநராற்றுப் படை என தன் தேர்வுக்கு அவர் பார்வை மிகப் பரவலாகத் தான் சுப்பிரமணியம் வீசிய வலை இருந்திருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் இப்பாடல்கள் எழுந்த வாழ்க்கைச் சூழல், அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை சார்ந்திருந்த அறமும் மதிப்புகளும், இது பற்றிய தகவல் இல்லாது இக் கவிதைகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள அன்னியரால் புரிந்து கொள்ளப் படுமா என்பது தெரியவில்லை எனவே இதுபற்றிய வரலாற்றறிவோடு இக்கவிதைகளை அணுகுபவர்களுக்கு கூடிய ரசனை தரும் என்று நினைக்கிறேன். இது எவ்விதத்திலும் சுப்ரமண்யத்தின் மொழிபெயர்ப்புகள் தரும் அனுபவத்தை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

அகநானூறிலிருந்து ஒரு சில வரிகள் மாத்திரம். எவ்வளவு கஷ்டமான பகுதியையும் எவ்வளவு தெளிவாக இன்றைய வாசகனுக்கு எளிதில் .கிடைக்கச் செய்துவிடுகிறார்! சங்க காலத் தமிழ்ப் பாட்டை இன்றைய ஆங்கிலத்தில் கொண்டு வருவதில் எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும் என்பதை எளிதில் கிடைத்த ஒன்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியாது.

அகநானூறு 154 –

குறும்புதற் பிடவின் நெருங்கால் அலர்

செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப

வெஞ்சின அரவின் பை அணந்தன்ன

தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு

Long stemmed flowers of pidavan bushes

Carpet the red soil

Lending it allure

Like the raised hoods of angry snakes

Cool kanthal buds unfold

Spreading aroma around;

பக்திப் பாடல்களிலிருந்து இங்கு இடம் பெற்றிருக்கும் காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் இருவரே ஆனாலும் இருவரும் இரு சிகரங்கள்.

கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

இது எவ்வளவு அழகாக சரளமான அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்..

Black sparrows in droves

Fill the air with ‘keech keech’ chirps

Don’t you hear it, stupid girl?

தனிப்பாடல்கள் என்ற வகையில் நாம் சாதாரணமாகக் கேள்விப் படாத பெயர்களும் பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவற்றின் கால கட்டத்தை அறிவது கஷ்டம் தான். அவசியமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தியவையாக இருக்கும். முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்:

இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு

நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி

முனையா கலவி முயங்கியவா றெல்லாம்

நினையாயோ நெஞ்சத்து நீ.

Come this day

You’ll find me alive

Delay by a day or two

Sure you’ll see the result

O Victorious Munayaa

Won’t your heart recall

Many a passionate union?

நாட்டுப்பாடல் வகையில் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவாக ஆங்கிலத்தில் சுகமான வாசிப்புத் தருவதில்லை. அவர்கள் தொட்டிலிலோ ஊஞ்சலிலோ குழந்தையை இட்டுத் தூங்கச் செய்யும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை போலும். தாலாட்டுப் பாடல்களின் தமிழ் ஓசை நயத்தைக் கொணராவிட்டால் பின் அவை எப்படி தாலாட்டு ஆகும்.? ஆக இதில் சுப்பிரமணியத்தை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால் சக்களத்திச் சண்டைகள் எங்கும் இருக்கும் தானே. அது இன்றைய் பொருளாதாரத்துக்கு முன்னேயே உலகமயமானது தான் (Globalised} இதோ மாதிரிக்கு சில வரிகள். பின் ஆங்கிலத்திலும் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன..

மாதிரிக்கு சில வரிகள்

”………………………………………………………………

செட்டிக்கடை வெட்டி வேரு

சிவகாசிப் பன்னீரு

மதுரைக் கடைச்சக்களத்தி

மறக்கப் பொடிபோட்டா

குதிரைவாலிக் கருது போல

குறிச்ச பொண்ணு நானிருக்கேன்

சரவட்டைக் கருதுக்காக

சாம வழி போகலாமா?…….”

எந்தத் துறையானால் என்ன, எந்த மக்களானால் என்ன, எந்த மொழியானாலென்ன, வெகு சுலபமான ஆங்கிலத்தில் சொல்லிவிட முடிகிறது சுப்பிரமண்யத்தால்.

Cuscus grass from Chetty shop

Fragrant Sivakasi pannier

He forgets in the vile spell

Cast by the Madurai slut

Here I am so georgeous

Like lush paddy sheaf

And I’am the girl anointed too;

In search of measely stalk

Should you scurry so far.

iஇதிலெல்லாம் நமக்கு அனேகமாக ஏதும் பிரசினை இருக்காது. நீதிப் பாடல்கள் தான் கவிதையாகுமா, அதில் ஏது பாவமும் மற்றதும் என்று நாம் நினைப்போம். சங்கப்பாடல்களும், பக்திப் பாசுரங்களும் ஏற்கனவே தொகுக்கப்பட்டவை. அவற்றில் எதைச் சோடை என்பது? யார் எந்தத் தேர்வு செய்தாலும், யாரும் ஏதும் சர்சைக்கு வரமாட்டார்கள். பழசெல்லாம் புனிதம் என்ற மரபு சார்ந்த பார்வை வேறு.

ஆனால் சமீப கால எழுத்துக்களில் அதிலும் பெண் கவிஞர்கள் என்றால் நமக்குள் நிறைய கருத்து வேறு பாடுகள் இருக்கும். ஆனால் சுப்பிரமணியம் இந்த வம்புக்கெல்லாம் போவதில்லை. பெண் கவிஞர்களே முப்பத்து மூன்று பேர்களை நம் முன் வைத்திருக்கிறார். இவ்வளவு பெண் கவிஞர்கள் இருக்கிறார்களா என்று நமக்குத் திகைப்பு. இருக்கிறார்கள் தான். நம்மில் அதிகம் கண்களில் படும் பெயர்களை மட்டுமல்ல, அவர்களையும் தாண்டி நாம் அநியாயமாக மறந்து விட்டவர்களையும், சுப்பிரமணியம் தேடிப்பிடித்து வந்துள்ளார். சமீபத்தில் தெரிய வந்த, வயதில் மூத்த பூரணி, பின் நாம் மறந்துவிட்ட திரிசடை, இரா.மீனாட்சி வயதில் எல்லோரிலும் இளைய என்று நான் யூகிக்கும் வெண்ணிலா/அழகுநிலாவோடு அனேகமாக பெண் கவிஞர் குழாமே தம்முள் ஒருவராகக் கருதாத ஆனால் பேசப்படவேண்டிய திலக பாமா வரை நிறைய பெண் கவிஞர்களை இத்தொகுப்பில் சுப்பிரமணியம் சேர்த்துள்ளார்

இக்குரல்கள், பல வகைப்பட்டவை. அவர்கள் கவிதையாக்கியுள்ள அனுபவங்களும் பார்வைகளும், அவர்கள் கையாளும் மொழியும் அவரவர்க்கு உரியன. இவர்கள் எல்லாம் தான் எங்களது இன்றைய ஆதிமந்தியாரும் அஞ்சில் அஞ்சியாரும் என்று சொல்வது போல. நமக்கு மட்டுமல்ல. தமிழுக்கு அன்னியமான ஆங்கிலம் வழி இப் பெண்கவிஞர்களையும் அவர்கள் பேச வந்துள்ளதையும் பரிச்சயப்படுத்திக்கொள்ள வருபவர்களுக்கும் இவ்வுலகத்தைக் காண சில ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்தது போல இருக்கும். அவை நிச்சயமாக வேறு பட்டவையாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இது நமக்கு ஒரு பருந்துப் பார்வை தரும் அதே சமயம் சுப்பிரமண்யத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும். இரண்டுமே நல்ல அனுபவங்கள் என்னைப் பொறுத்த வரை. என் இஷ்டத்துக்கு என் தேர்வுகளில் சில. எல்லாவற்றையும் கொடுக்க இயலாது.. அப்படித்தானே நம் எல்லோருக்கும் இருக்கும்.

சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும்.

தன் வழி தவறி

அறைக்குள் சிக்கிய

பட்டாம்பூச்சி துவக்கிற்று

தன் தேடலை

……………………

என்றேனும்

கதவு திறந்து வழி கிடைக்குமெனில்

அது பறந்து தான் போகும்

வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட

Losing its way

Trapped in the room

Starts its search

This butterfly

One day some day

Should door open and way found

Sure it would wing its way out

Though robbed of its hues.

இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்..

நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை

தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்

வார்த்தைகளை

………………

மூடிய இமைகளுக்குள்

உலவும் இருளுக்கு

வெள்ளைக் காகிதங்களின் குணம்

கவிகதைகளாய் என்

நினைவுகளைச் சுமந்து

மடி நிரப்பியிருக்கிறது……

Words

Buried in a pool of dust

I can’t retrieve from the memory’s loft

The inky darkness

Encased in shut eyelids

Assumes

White paper’s aspect

Films my madi

As poems

Carrying my memories

இன்னும் ஒரே ஒன்று. உமா மகேஸ்வரியின் தனிமையையும் வெறுமையையும் காட்சிப் படுத்தும் ஒரு கவிதை. ஆரம்பப் பத்தி மாத்திரம்

வெளிவாசல் வழியே

சலித்த மதியம்

சாக்கடை நீரருந்தும் குருவி

உதிர்கிற மென்மையும்

உடைபடாக் கடினமும்

விசித்திரமாய் முடைந்த மௌனம்

The noon

Filtered through the front door

A sparrow drinking gutter water

A silence

A strange weave of

Softly enveloping tenderness

And unrelenting hardness.

போதிய பரிச்சயம் தந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தமிழ்த் துறைக்கே, தமிழ்க் கவிதைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடமிருந்து இத்தகைய ஒரு முயற்சி வரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் வண்டிச் சுவடை ஒட்டியே தம் பயணத்தை மேற்கொண்டு தடம் முடியும் இடத்தில் முடித்துக் கொள்பவர்கள். தமிழைப்புதிய தடத்தில் இட்டுச்சென்ற வர்கள் அனேகமாக தமிழ் துறை சாராதவர்களாக இருந்திருக்கிறார்கள். வக்கீலுக்குப் படித்த வையாபுரிப் பிள்ளையும் ரசிக மணியும் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.. ஒரு சமயம் ஐம்பதுகளின் இறுதியில் ஒரு கூட்டத்தில் ரா.பி.சேதுப் பிள்ளையும் இருந்தார். விஞ்ஞானி கே.எஸ் கிருஷ்ணனும் இருந்தார். ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி. அதிகாரியும் இருந்தார். பெயர் மறந்து விட்டது. ரா.பி. சேதுப் பிள்ளையிடமிருந்து புதிதாகப் பெற எனக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கே.எஸ் கிருஷ்ணன் தான் ஆத்மார்த்தமாக தான் படித்துப் புரிந்து கொண்ட திருக்குறளைப் பற்றிப் பேசியது ஒரு புதிய பார்வையாகவும் அனுபவமுமாக இருந்தது.

கம்பன் ராமகாதையைத் தொடங்குமுன் “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று சொல்லித் தான் தொடங்குகிறான். ஆசை பற்றி செயல்படும் எதுவும் சிறப்புடன் இருக்கும். மற்றதெல்லாம் தான் நமக்குத் தெரியுமே.

அது போல் தான் ஆசிய வளர்ச்சி வங்கியில் மணிலாவில் இருபதாண்டு காலம் கழித்த கே.எஸ் சுப்பிரமணியம் தந்துள்ள இந்த் தமிழ்க் கவிதைத் தொகுப்பும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும்,.

Tamil Women Poets: Sangam to the Present: Translation: K.S.Subramaniam

Tamil University, Thanjavur pages 276 + 16 Rs100

நன்றி -
திண்ணை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.