Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியாவிற்குள் செல்லமுடிந்த ஐ.நா சிறீலங்காவிற்கு செல்ல முடியாததேன்?

Featured Replies

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் அரசினை பதவி விலகக் கோரி கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. எதிர்ப்பாளர்களை இராணுவம் மூலம் அதிபர் ஆசாத் ஒடுக்கி வந்தநிலையில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நாள்தோறும் கொல்லப்படும் அப்பாவிப் பொது மக்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்து ஐ.நா. வெளியிட்டு வந்த அறிக்கை, ஐ.நா. பொதுச் சபையில் சிரியாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவதற்கும் தடைகளை விதிப்பதற்கும் வழிவகுத்தன.

இறுதியில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலர் கோஃபி அனான் ஊடாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி, அதனைக் கண்காணிப்பதற்கு ஐ.நா. படையினரையும் அனுப்பிவைத்தது. ஆனாலும், போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் இருதரப்பினர் இடையே மோதல்கள் கடுமையாக தொடர்ந்து வரும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற பேரணி ஒன்றின் மீது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 90ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

ஐ.நாவின் கண்காணிப்பாளர்கள் அங்கு நிலைகொண்டுள்ள நிலையில்தான் இந்தப் படுகொலைகள் அரங்கேறியிருந்தன. சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாகச் சென்ற ஐ.நா. அமைதிக்குழுவினர், கொல்லப்பட்டவர்களின் உடல்களைப் பார்வையிட்டனர். அதன்பின் அமைதிக் குழு தலைவர் ஜெனரல் ரொபர்ட் மூட், ‘இது மிக மோசமான சம்பவம்’ என வர்ணித்ததுடன், ‘மக்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்துவது ஏற்கத்தக்கதல்ல’ என்றும் குற்றம்சாட்டினார். இதேவேளை, இந்தச் சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டதுடன், சிரியாவில் இராணுவம் பொது மக்களின் குடியிருப்புகள் மீது குண்டுகளை வீசுவது அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாகவும், வன்முறைகளை தடுக்க உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இந்தப் படுகொலைகளை பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கண்டித்துள்ளன. பிரான்சின் வெளியுறவுத்துறை அமைச்சர் லோரன்ட் ஃபேபியஸ், சிரியா தொடர்பாக சர்வதேச நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட உடனடியாக ஏற்பாடு செய்துவருகிறோம் என்றார். பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக், ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவரசக் கூட்டத்தை கூட்டுமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் கைடோ வெஸ்டர்வெல்லி, இந்தக் கொலைகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பதாகக் கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு ஐ.நா முதல் உலக நாடுகள் எங்கிலுமிருந்து கவலைகளும் கண்டனங்களும் உடனடியாகவே வந்துகொண்டிருக்கின்றன. போரைத் தடுப்பதற்கும், போர் நிறுத்த மீறல்களைக் கண்காணிப்பதற்கும் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லவேண்டியது ஐ.நாவின் முதல்க் கடமை. சிரிய அதிபர் பஷார் ஆசாத் தனது நாட்டிற்குள் ஐ.நாவின் பிரசன்னத்தை விரும்பாதபோதும், அழுத்தங்களை ஏற்படுத்தி சிரிய மக்கள் மோசமான அழிவுகளை சந்திப்பதற்கு முன்பாக ஐ.நா அமைதிக் குழுவினர் அங்கு விரைந்து சென்றது வரவேற்கப்படவேண்டியது.

சிரிய மக்களில் இத்தனை கரிசனையாக, இத்தனை வேகமாக இயக்கிய இதே ஐ.நா., இலங்கையில் மட்டும் போர் தொடங்கியவுடன் தமிழர்களை கைவிட்டு அங்கிருந்து தப்பித்து வெளியேறியது ஏன்? சிரியா அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யா, சீனா போன்ற வீட்டோ அதிகார நாடுகள் ஆதரவு அளித்து வருவதுடன், பெருமளவில் ஆயுத உதவிகளையும் வழங்கி வருகிறன.

மக்களுக்கு தொடர் அழிவுகள் இடம்பெறும்போதும் தற்போதும் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு ரஷ்ய கப்பல் ஒன்று சிரியாவுக்கு செல்வதாகக் கூறப்படுகின்றது. இதேபோன்றே, சிறீலங்காவிற்கும் இவ்விரு நாடுகளின் ஆதரவும் இருந்து வந்தது. தமிழ் மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது இவ்விரு நாடுகளும் ஆயுத தளவாடங்கள் உட்பட சிறீலங்காவிற்கு அனைத்து ஒத்துழைப்புக்களையும் வழங்கின.

ரஷ்யா சீனாவின் எதிர்ப்பையும் மீறி, சிரியாவின் மீது இறுக்கத்தைப் பேணமுடிந்த ஐ.நாவினால் ஏன் சிறீலங்காவில் மட்டும் முடியவில்லை? அத்துடன், போர் முடிந்ததன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர்தப்பிய மக்களை, சர்வதேச சட்டவிதிகளுக்கு முரணாக மகிந்த அரசின் அடைக்கப்பட்ட முட்கம்பித் தடுப்பு முகாம்களில் இருந்து மீட்டெடுப்பதற்கும் ஐ.நா. தவறியது. ஒட்டுமொத்த மக்களையும் குற்றவாளிகள் போன்று சிறைபோன்ற முகாமில் அடைத்துவைத்திருந்த போதும் அம்மக்களை விடுவிப்பதற்கு ஐ.நா. விரைந்து நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை. அந்த முகாம்களில் வைத்து கடத்தப்பட்ட, கைது செய்யப்பட்ட பலரும் இன்றுவரை என்ன ஆனார்கள் என்பதே தெரியாத நிலையிலேயே உறவினர்கள் ஏங்கிக் கிடக்கின்றார்கள்.

போர் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களும் கைதுகளும் கடத்தல்களும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. ஆனாலும், சிரியாவிற்கு அமைதிப் படையினரை அனுப்ப முடிந்த ஐ.நாவினால், இலங்கைக்கு மனித உரிமைப் பிரதிநிதிகளைக்கூட அனுப்பிவிட முடியவில்லை.

காலம் கடந்து இப்போது அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையிலும், ஐ.நா. மனித உரிமைப் பேரவை பிரதிநிதிகள் இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதியளிக்கப்பட மாட்டாது என சிறீலங்கா அரசாங்கம் தெனாவெட்டாக அறிவித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறீலங்கா மீது அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக தொழில்நுட்பசார் ஆலோசனைகளை வழங்குவதற்காக ஐ.நா சபைப் பிரதிநிதிகள் குழுவொன்றை அனுப்பி வைக்க மனித உரிமைப் பேரவை திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. எமது நாட்டிற்கு இவர்கள் பயணம் செய்வதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மகிந்த அரசு தெரிவித்துள்ளது. பிரதிநிதிகள் குழு தொடர்பில் கடந்த 14ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறீலங்கா வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் ஊடாக தகவல் அனுப்பி வைத்துள்ளார். எதிர்வரும் யூலை மாதமளவில் இந்தப் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கைக்கு மேற்கொள்ளப்படும் பயணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. நவநீதம்பிள்ளை இலங்கைக்கு பயணம் செய்ய முன்னர் அனுமதி மறுத்திருந்த மகிந்த அரசாங்கம், ஜெனிவாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்ட சர்வதேச அழுத்தங்களை அடுத்து இந்த அனுமதியை வழங்கியிருந்தது.

எனினும், மனித உரிமைப் பிரதிநிதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த அரசு கூறுகின்றது. மகிந்தவின் இந்தத் தடைகளைக் கடந்து சிறீலங்காவின் மீது நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்குமா, தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்குமா?

நன்றி : ஈழமுரசு

ஆசிரியர் தலையங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.