Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளி நாட்டு தமிழர்களுக்கு பர்மா

Featured Replies

வெளி நாட்டு தமிழர்களுக்கு பர்மா நிலை எப்பவும் நமக்கு வரலாம். எமக்கு என்று ஒரு நாடு அமைக்க உழைத்திடுவீர்...

மியன்மாரில் தமிழர் –

post-9189-0-91068000-1340858920_thumb.jp

இருப்பிடம்

மியன்மாரின் பழைய பெயர் பர்மா 6,76552 சதுர மைல்கள் கொண்டது. பர்மா நாட்டின் வடமேற்கு எல்லையில் இந்தியாவும், பங்களாதேசும் இருக்கின்றன. வடகிழக்கு எல்லையில் žனாவும் லாவோசும் இருக்கின்றன. தென் கிழக்கு எல்லையில் தாய்லாந்து இருக்கிறது. பர்மா ஆங்கில ஆட்சியில் 1936 வரை இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இருந்தது. அரிசி, தேக்கு, நவரத்தினம், முத்து போன்றவை அதன் பாரம்பரியச் சொத்து.

தமிழர் குடியேறிய வரலாறு :

கிறிஸ்து தோன்றுவதற்கு முன்பே தமிழகத்திற்கும் பர்மாவுக்கும் தொடர்பு இருந்து வந்தது. அத்தொடர்பு வணிகத்தை நோக்கமாகக் கொண்டது. பர்மாவை-பட்டினப்பாலை ‘காழகம்’ என்கிறது. ‘காழகத்து ஆக்கமும்’ என்ற வரிகள் இதனை உணர்த்துகின்றன. ‘அருமணதேயம்’ என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

கி.மு. 200 முதல் 300 வரை காஞ்சிபுரத்திலிருந்து புத்த சமயக் கருத்துக்களுடன் பல்லவ எழுத்து, நாகரிகம், பண்பாடு மூலம் தமிழகத் தொடர்பும், நட்பும் ஏற்பட்டன. ‘தட்டாம்’ எனப்படும் சுவர்ண பூமிக்குப் புத்த துறவிகளால் அவை கொணரப்பட்டன எனப் பர்மியப் பண்பாட்டு வரலாறு என்ற நூல் கூறுகிறது என ந.வீரப்பனார் தெரிவிக்கிறார். காஞ்சிபுரத்தைப் பற்றியும், புத்த சமய அறிஞர் தர்மபாலரைப் பற்றியும் தலைங் (Talaing Records) ஆவணத்தில் குறிப்புள்ளது. பல்லவரை அடுத்து, சோழர் காலத்தில் இராஜேந்திர சோழனுடைய கடாரப் படையெடுப்பு பற்றி அதிகளவு செய்திகள் கிடைக்கின்றன.

இராஜேந்திரச் சோழனின் கடாரம் படையெடுப்பு கி.பி. 1025 இல் நிகழ்ந்ததாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இரண்டுமுறை கடல் வழியாகவும், ஒரு முறை நிலவழி அதாவது வங்காளம் வழியாகவும் பர்மாவின் மீது இராஜேந்திரச் சோழன் படையெடுத்தான் என்று ஆர்.சி. மசூம்தார் தெரிவிக்கிறார். பெகுவிற்கு அருகே இரண்டு கருங்கல் தூண்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. அதில் “திருமன்னி வரை இரு நில மடந்தையும்” என்ற சிதைந்த வரி உள்ளது. இராஜேந்திரனின் வெற்றியைப் பறை சாற்றும் நோக்கத்துடன் இந்த வெற்றித் தூண்களை (ஜெயஸ்தம்பம்) அமைத்துள்ளான் என பர்மிய தொல்லியளாளரான டெசெயங்கோ கூறியுள்ளார்.

காண்க: (Archalogical Report on Burma 1908 Para 25) இவருடைய கருத்தை உறுதிப்படுத்துவது போல மற்றொரு செய்தி: பர்மாவில் உள்ள பப்பாளத்தை இராஜேந்திரன் கைப்பற்றினான். மற்றொரு கல்வெட்டு ஆய்வாளரான வெங்கைய்யா அவர்களின் ஆராய்ச்சிப்படி, பர்மாவில் உள்ள துறைமுக நகரம் பப்பாளம், இந்நகரைப் பற்றி மகாவம்சமும் குறிப்பிடுகிற படியால் ஒரே இடத்தில் இருப்பதாலும் இராஜேந்திரனுடைய படையெடுப்பு பற்றிக் கல்வெட்டு குறிப்பிடுகிறவை மெய்தான் என்றாகிறது. மேலும் கி.பி.1084-1112 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த சான்žத்தர் என்ற பர்மிய மன்னர் சோழப் பேரரசனோடு உறவு கொண்டிருந்தார் என்கிற கல்வெட்டும் கிடைத்துள்ளது.

தமிழ்க் கல்வெட்டு :

பர்மாவில் பாகாங்கு என்னும் இடத்தில், ஒரு தமிழ்க் கல்வெட்டு கிடைத்து இருக்கிறது. அக்கல்வெட்டு கி.பி.13-ஆம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருக்கிறது. (சேரமான்) குலசேகர ஆழ்வாரின் ‘முகுந்தமாலா’ என்ற வடமொழி நூலில் உள்ள ஆறாம் சுலோகத்தோடு தொடங்கி, கீழ் காணும் தமிழ்ப் பகுதியோடு முடிகிறது.

“சுவஸ்திஸ்ரீ புக்கம் ஆன அரிவர்த்தனப்

புரத்து நானாதேசி விண்ணகர்

ஆழ்வார் கோயில் திருமண்டபமும்

திருக்கதவும் கிட்டேன், மலைமண்டலம்

துய மகோதையர் பட்டினத்து

ஈராயிரான சிறியனான ž குலசேகர

நம்பியேன்”

(Epigraphia Indica. Vol. 1-7; P.197) என்பது கல்வெட்டு வாசகம். புக்கம்-என்ற அரிமர்த்தனப் புரத்தில் ‘நானாதேசி’கனாகிய வணிகர்ன் குலசேகர நம்பி, விண்ணகர் ஆழ்வார் கோயில் கட்டினான் என்றும், அவன் சேர நாட்டிலுள்ள மகோதையர் பட்டினத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரியவருகிறது. சைவ, வைணவ பக்தி இயக்கத்தை வெளிநாடுகளுக்கும் தமிழர்கள் கொண்டு சென்றதை இதன் மூலம் உணர முடிகிறது.

தமிழக பண்பாட்டுத் தொடர்பு

பல்வர்காலத்தில் தமிழக வைணவம் மியன்மாருக்குச் சென்றது. புத்தம் எப்படி தமிழகத்திலிருந்து சென்றதோ, அதுபோலவே வைதீகமதமும் சென்றது என்பதற்கு அதிகளவு ஆதாரங்கள் மியன்மார் அருங்காட்சிக் கூடத்தில் உள்ளது. இதுபோலவே சமஸ்கிருத மொழியும் பரப்பப்பட்டுள்ளது. அங்குள்ள கட்டடக்கலையின் சாயல் தென்னகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. புத்தரின் சிற்பத்திலும் நம் கலையின் வீச்சை உணர்கிறோம்.

இரண்டாம் கட்டக் குடியேற்றம் :

1852-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் பர்மாவைக் கைப்பற்றியதும் இந்தியர்கள் அதிகளவில் இரங்கூனில் குடியேறினர். ஆங்கிலேயர் கீழைப் பர்மாவைக் கைப்பற்றியதும் அங்கும் சென்று குடியேறினர். சென்னை, வங்காளம் மாநிலங்களிலிருந்துதான் பெருமளவில் குடியேறினர். 1874-84 ஆண்டுகளுக்கிடையே 83,197 பேர் சென்றனர். 1850-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் வருவதற்கு முன்பே மொய்மீன் பகுதியில் குடியேறியவர்கள் தமிழகத்து செட்டியார்கள். 1913-ஆம் ஆண்டு முதல் 1929 வரை 45 இலட்சம் இந்தியர்கள் பர்மாவிற்குச் சென்றனர். இவர்களில் 60 விழுக்காட்டிற்கு மேல் தமிழர்கள் இருந்தனர். இரங்கூன் இந்திய நகரமாகவே மாறிவிட்டது. 1901-ஆம் ஆண்டு இரங்கூனில் மொத்த மக்கள் தொகையில் 48 விழுக்காடு இந்தியர்கள் இருந்துள்ளனர். 1931-இல் 52 விழுக்காடாக இருந்தது. 1937-ஆம் ஆண்டு பர்மா இந்தியாவிலிருந்து பிரிந்தது. மற்றும் இரண்டாம் உலகப் போரின் காரணமாகவும் பர்மாவிற்கு வரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.

1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிரான கலகம் தோன்றியது. ஜப்பானியர் படையெடுப்பின் போது 5 இலட்சம் இந்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர். 1948-ஆம் ஆண்டு பர்மா குடி மக்களாக அங்கீகரித்த தமிழரின் எண்ணிக்கை 10,000 மட்டுமே.

1962-66-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் எல்லாக் கடைகளும் தேசிய மயமாக்கப்பட்டன. மண்ணின் மைந்தர்களுக்கே வேலை வாய்ப்பு என்ற தேசிய கொள்கை வந்தபோது பாதிப்படைந்த தமிழர் எண்ணிக்கை 62,412 பேர். இவர்கள் தமிழகம் வந்தனர். 1974-ஆம் ஆண்டு சட்டமும் 1982-ஆம் ஆண்டுச் சட்டமும் மண்ணின் மைந்தரல்லாதவர் முக்கிய பதவிகள் வகிக்க முடியாது எனக் கூறிவிட்டது. இதனால் அல்லல் உற்றவர்கள் ஏராளம்.

தமிழரின் இன்றைய நிலை :

இன்று மியன்மாரில் 2,50,000 தமிழர்கள் வாழ்கின்றனர் என்று ஞானசூரியன் தெரிவிக்கிறார். இன்று மியன்மாரில் இருக்கும் 4 இலட்சம் இந்தியர்களில் 2 இலட்சம் பேர் நாடற்றவர்களாக இருக்கின்றனர். ஒரு இலட்சம் பேர் மியன்மார் நாட்டுக் குடிமகன்களாக இருக்கின்றனர். 1 இலட்சம் பேர் அனுமதி žட்டு பெற்று (Resident permit) வாழ்கின்றனர் என்று 17-9-1988 இந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் இரங்கூன் மத்தியப் பகுதி, கிழக்குப் பகுதி, வடக்கு, மத்திய பகுதிகள். இலாமூடா, தட்டாகலே கம்மாகச்சி, தட்டோன், கம்பை, கலாபஸ்தி, இன்சின், மினிக் கோன், தெ அவுக்கலப்பா, தாம்புவே, தல்லா, கீழந்தான், கம்மாயுட், தீங்காஞ்சூன், சூரியம்-டாம்பின்குயின், மண்டலை, மோல்மின், பாகான். பொதுவாக இந்தியர்கள் இரங்கூன், அராகன், ஐராவதி ஆற்றங்கரையோரம், தென்னாசரீம், மாக்னே முதலிய இடங்களில் வாழ்கின்றனர்.

சமயம் :

மயன்மரில் உள்ள பழைய கோயில்கள் சித்தி விநாயகர் கோயில் (1860); காளிகோயில் (1860); தாட்டானில் உள்ள தண்டபாணிக் கோயில் (1888); இரங்கூன் மகாமாரியம்மன் கோயில் (1903); வரதராச பெருமாள் கோயில் (1927). 1933 வரை 62 ஆலயங்கள் பர்மா செட்டியார்கள் பேராதரவுடன் கட்டப்பட்டன. மோல் மீனில் உள்ள வேல்முருகன் கோயில் மலையில் உள்ளது. இதுவே பர்மாவில் உள்ள பெரிய இந்துக் கோயிலாகும். தமிழ் கத்தோலிக்கர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தனித்தனிக் கோயில்களுண்டு. பர்மாவில் தமிழ்க் கத்தோலிக்கர் ஆலய நூற்றாண்டு விழா (1877-1977) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 1946-க்குப்பின் கத்தோலிக்க சமயத் தலைவர்களாக தமிழர்களே உள்ளனர்.

அகில பர்மா இந்து மத்திய வாரியத்தின் கீழ் 75 கோயில்களும், கழகங்களும் சேர்ந்துள்ளன. இவ்வாரியம் ஐந்து மாநாடுகளை நடத்தியுள்ளது. வெள்ளி விழா மலரை ஆங்கிலத்தில் 1978-ஆம் ஆண்டு வெளியிட்டது. தமிழர் நடத்தும் விழாக்களில் (தைபூசம்) பர்மியரும் கலந்து கொள்வார்களாம். தீமிதி, தேரோட்டத்தில் ஏராளமாக கலந்து கொள்வார்கள் என்று பலரும் தெரிவிக்கின்றனர். பொங்கலும், தீபாவளியும் கொண்டாடப்படுகின்றன.

உடை :

தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர்.

உணவு :

நெல் சோறே பெரும் உணவு. இட்லி, புட்டு, தோசை வடை எல்லாம் தமிழகம் போலவே இங்கும் உண்டு.

தகவல் தொடர்பு சாதனங்கள் :

1962-ஆம் ஆண்டிற்குப்பிறகு வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றில் தமிழர்களுக்கு இடம் இல்லை. செய்தித்தாள், புத்தக வெளியீடு மட்டும்தான் தமிழரின் தகவல் தொடர்பு சாதனமாகும். 1936-இல் ‘லோகமான்யா’ என்ற இதழ் புதன் கிழமை தோறும் வெளிவந்தது. இவ்விதழைப் பவானி நடேன் ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கிறார். 1931க்கு முன் ‘இஸ்லாம் அலின்’ என்ற ஏட்டை தமிழறிஞர் பா. தாவுத்சா நடத்தியிருக்கிறார். ‘சாந்தி’ எனும் நாளிதழை எம்.கே. இபுராகிம் நடத்தினார். இவ்வேடு 1952-ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. பின்னர் இவரே ‘தொண்டன்’ என்ற நாளேட்டையும் நடத்தினார். இது 40 ஆண்டு காலம் வெளி வந்திருக்கிறது. 1981-இல் இவர் காலமான பின் ‘தொண்டன் நினைவு மலர்’ 1982-இல் பாதி தமிழிலும், பாதி பர்மிய மொழியிலும் வெளிவந்தது. இவை தவிர சத்திய சோதி, தமிழ் உள்ளம் ஆகிய இதழ்களும் வெளிவந்தன. சாமிநாத சர்மா ‘ஜோதி’ என்ற இதழை பர்மாவில் நடத்திவிட்டு தமிழகம் திரும்பினார்.

தமிழ் மொழியின் நிலை

பிரஞ்சு குடியேற்ற நாடுகளில் ஏற்பட்டது போல மொழியை இழந்த நிலை இங்கு இல்லை. தமிழகத்துடன் விடாத தொடர்பு இருப்பதே இதற்குக் காரணம். 1877-இல் விக்டோரியா பேரரசிக்குத் தமிழில் வாழ்த்துப்பாவை பாடியவர் இராமசாமிப்புலவர். இரண்டாம் பதிப்பாக அதை 1877-இல் வெளியிட்டிருக்கிறார்.

பர்மா-ஆங்கிலம்-தமிழ்-இந்தி அகராதியை சோசப் என்பவர் எழுதி வெளியிட்டிருக்கிறார். எம்.என். நாகரத்தினம் ‘அறங்காவலன்’ (1983) ஏட்டில் புத்தரின் ‘தம்மபத’த்தை மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார். பாலிமொழியிலிருக்கும் சுலோகங்களின் விரிவுரையும் வெளிவருகிறது. இவ்வேடு அகிலபர்மா இந்து மத்திய சபையால் வெளியிடப்படுகிறது.

கம்பை நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் நடத்தும் கல்வி வாரியம் 1964-இல் திருக்குறளை பர்மிய மொழியில் வெளியிட்டது. இதைப் பர்மிய அறிஞர் ஊர்மியோ தாண்ட் ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்தார். தட்டான் திருக்குறள் இயக்கம், திருக்குறளைப் பரப்புகிறது. தட்டானில் வள்ளுவர் கோட்டம் பெரிய அளவில் உருவாகி வருகிறது.

1908-இல் ‘மானிட மர்ம சாஸ்திரம்’ என்ற ஆயிரம் பக்க நூல், அறிஞர் எஸ். சாமிவேல் அவர்களால் எழுதப்பட்டு ரங்கூன் தமிழ் அச்சகத்தில் பதிப்பிக்கப்பட்டது. பத்தாண்டுக்குப் பின் இரண்டாம் பதிப்பு கண்டது. மதுரைப்பிள்ளை, இராமச்சந்திர புலவர் போன்ற பெரும் பண்டிதர்கள் இங்கு வாழ்ந்தனர் என்கிறார் வீரப்பனார். இன்றுள்ள எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்: பூ.செ.புதியணன் ஆவார். இவரை ஆசிரியராகக் கொண்ட இலக்கிய ஏடு-காலாண்டிதழாக 1981-முதல் வெளிவருகிறது. ‘தாயும் தாய்மையும்’ என்ற நூலை 1981-இல் இவர் வெளியிட்டார். இது பர்மிய ஆசிரியர் சிட்சன்வின் எழுதிய நூலின் தமிழாக்கமாகும். மேலும் தமிழ்-பர்மிய அகராதியை தொகுத்து வருகிறார். அண்ணா நூல் வெளியீட்ட கத்தை நடத்தி வருகிறார்.

கல்வி

1898-99-ஆம் ஆண்டுகளில் இந்தியர்களுக்கு என்று 45 பள்ளிகள் இருந்தன. பர்மா விடுதலை பெற்றபின்பு பர்மிய மொழி ஆட்சி மொழியானதால் தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டது. பர்மிய மொழியும், துணை மொழியாக ஆங்கிலமுமே கற்று கொடுக்கப்படுகின்றன. அயல் நாட்டினரின் கல்வி, பண்பாடு நடவடிக்கைகளுக்கு 1972-ஆம் ஆண்டு தடையாணை விதிக்கப் பட்டது. சர்வாதிகாரி நிவினின் தேசியமயக் கொள்கையால் தமிழ்க் கல்வி பறிபோனது. பர்மியப் பள்ளிகளில் தமிழ் வகுப்பு இல்லை என்றாலும், சில தமிழ்க் கோயில்களில் மாலை, இரவு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பேகான் கோயிலிலும், கமாயூட் மாரியம்மன் கோயில், மினிக் கோன் சுப்பிரமணியர் ஆலயம் முதலியவை தமிழ்ப்பணி ஆற்றுகின்றன. கோயில்களும், கழகங்களும் ஞாயிறுதோறும் தமிழைக் கற்பிக்கின்றன. இக் கோயில் பள்ளிகளில் பர்மாவில் வெளியிடப்படும் பாலர் நூல்கள் பயன்படுத்தப்படுகின்றன. பி. சுப்பிரமணியன், மா. சந்திரன் என்பவர்கள் ‘அண்ணா அரிச்சுவடி’ எனும் பாலர் பாடநூலை 1981 இல் வெளியிட்டனர். ‘கலைமகள் அரிச்சுவடி நூலை’ பாலர் பள்ளிக்காக வேறுறொருவர் வெளியிட்டுள்ளார். ஒளவையார் ஆத்திச்சூடி வெளியிட்ட தமிழ்ப்புலவர் எம்.என். நாகரத்தினம் பாலர் பாடம் என்ற முதல் வகுப்பு, 2-ஆம் வகுப்பு நூல்களை 1980 முதல் வெளியிட்டு வருகிறார். வடபர்மாவில் தமிழ்ப் படிப்பு குறைந்து வருகிறது. தமிழ்ப் படிப்பிக்க எல்லா கோயில்களிலும் கட்டாயமாக்க பர்மிய இந்துச் சங்கம் முயன்று வருகிறது.

இலக்கியம் :

பர்மிய தமிழர்கள் கவிதையில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் கதைகளையும் எழுதி வருகின்றனர். அவர்களில் குறிப்பிடத்தக்கோர்: கலைதாசன், திலகம், வசந்தி, பாணபட்டன், வாணவளவன், பாரதிநேசன், ரத்னா, கிருஷ்ணகுரு, தமிழ்மணி, பி.எஸ்.பி அப்துல் வகாப், கே.ஓ.எம் முகம்மது இஸ்மாயில், கார்முகில் கவிராயன், கவி கே.ஏ.மஜ“து, ஹாஜி. எஸ்.ஏ.ரகீம், எஸ்.எம்.யூனுஸ், தமிழ்பித்தன், சிறுத்தொண்டன் முதலியோர்.

அமைப்புக்கள் :

கீழ்கண்ட தமிழகம் சார்ந்த அரசியல், சமூக அமைப்புகள் உள்ளன.

1. திராவிட முன்னேற்றக் கழகம்

2. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

3. பர்மா இந்துத் தமிழ் மன்றம்

4. பர்மா திராவிடக் கலாச்சாரக் கழகம்

5. பர்மா தமிழர் கலாச்சாரக் கழகம் (1977)

6. மக்கள் கவி பாரதியார் முன்னேற்றக்கலை மன்றம்

7. தமிழ் இளைஞர் பொது நலக்குழு

8. பர்மா தமிழ் இளைஞர் சங்கம் (1954)

9. பர்மா ஈழ மாணவர் பொது மன்றம் (1976)

10. அறிஞர் அண்ணா அறிவகம்

11. அறவழி அன்பர்கள் குழு

12. தமிழர் முன்னேற்றக் கழகம்

ஆண்டு தோறும் அறிஞர் அண்ணா விழாவும், பொங்கலையும் தமிழர் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். பெரியார் நூற்றாண்டு விழாவும், பாரதியார் நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டன. பர்மாவில் வீரமாமுனிவர் விழா, திருவள்ளுவர் திருநாள், டாக்டர் அம்பேத்கார் விழா, பாரதி விழா போன்றவை இச்சங்கங்களால் கொண்டாடப்படுகின்றன.

சோழர்காலத்தில் சென்ற தமிழர்கள் சோலியா முஸ்லீம்களாக வாழ்ந்து வருகின்றனர்.

அவர்கள் அமைப்புகள் :

1. சோலியா முசுலீம் சங்கம்

2. சோலியா முசுலீம் சன்மார்க்கச் சேவையகம்

3. சோலியா முசுலீம் மார்க்க நிதி ஸ்தாபனம்

4. பர்மா வாழ் வீர சோழன் முசுலீம் ஜமாஅத்.

தமிழர் சாதனை :

பர்மா நாட்டுத் தமிழர் தலைவர் சி. சத்தியானந்தன் ஆவார். இவர் தமிழர்களுக்காக பாடுபட்டவர்களில் முக்கியமானவர் ஆவார். கடைசியாக நடந்த தேர்தலின் போது சிறையிலிடப் பட்டு தேர்தலன்று காலமாகி விட்டார். பர்மாவில் முதன் முதல் இரங்கூனில் அமைக்கப்பட்ட முதல் தொழிற்சங்கம் ‘தென்னிந்திய ஓட்டல் தொழிலாளர் சங்கம்’ இதன் தலைவராகப் பணியாற்றியவர். டி.எஸ்.மணி. இது போலவே 1946-இல் அகில பர்மா தமிழர் சங்கம் அமைத்தனர். இதில் முக்கிய பங்காற்றியவரும் டி.எஸ். மணி ஆவார். இவரைப் போலவே பெரியவர் பாண்டியன், ஜோசப் போன்றவர்களும் தமிழர்களுக்காக உழைத்து வருகின்றனர்.தொடர்ந்து நடந்து வரும் இராணுவ ஆட்சியில் தமிழரின் கல்வி, வேலைவாய்ப்பு முதலியவை பாதிக்கப்பட்டுள்ளன.

வணிகம்-தொழில் புரிவோர் விபரம் :

பர்மாவில் குடியேறிய தமிழர்களில் செட்டியார்களே அதிகளவு தொழிலில் ஈடுபட்டனர். வட்டித் தொழிலிலும், நெல் ஏற்றுமதியிலும் ஈடுபட்டனர். பர்மாவில் செட்டியார்களின் 1655 கடைகளில் 5 1/2 கோடி ஸ்டெர்லிங் பவுன் மூலதனத்துடன் இயங்கி வந்தன. அப்போது அவர்களிடம் மூன்றரை லட்சம் ஏக்கர் நெல் வயல்களும் வேறு உடைமைகளும் இருந்தன. 1930-க்கு முன் மலேயாவுக்கு அடுத்த நிலையில் 400 கிட்டங்கிகளில் வட்டித்தொழில் நில அடைமானம், ஆலை நிர்வாகம், முதலிய தொழில்களில் முதலீடு செய்தனர். 1105 கிட்டங்கிகளில் கிடைத்த 75 கோடி ரூபாயில் பர்மியர்கள் கடனாக பெற்றது 35 கோடி; தமிழர்கள் வாங்கியது 40 கோடி ரூபாய்; 1929-30 இல் 5,70,000 ஏக்கர் கீழ் பர்மாவில் இவர்களுக்கு சொந்தமாகியது. இது 1938 இல் 24,68,000 ஏக்கராக உயர்ந்தது. இதுவே 30.12.1947 இல் 50 இலட்சம் ஏக்கராக உயர்ந்து விட்டது. “செட்டிநாடு பாங்” என்ற பெரிய அமைப்பையே தமிழர்கள் இயக்கினார்கள். 1938-க்குப் பிறகு எல்லாம் சரிவை நோக்கி சென்றது 1938-ஆம் ஆண்டு இந்தியர்களுக்கு எதிராக கலகம் வெடித்ததும் இரண்டாம் உலகப்போரின் போக்கும் இதற்குக் காரணமாக அமைந்தன. 1950க்குப் பிறகு அரசு அலுவலர்கள் சிறுகடை வியாபாரிகள், நெல் விவசாயிகள், மரம் அறுப்போர், தேயிலைத் தோட்ட தொழிலாளிகள் என்றே பெரும்பாலான தமிழர் வாழ்கின்றனர். தற்போது தட்டோன் பகுதியில் நெல் வயல் உரிமையாளராக பலர் உள்ளனர். அவர்களில் நெ.மாரிமுத்துவும் ஒருவர்.

தொகுப்பு : ப.திருநாவுக்கரசு.

பார்வை நூல்கள் :

1. தென்கிழக்கு ஆசியநாடுகளில் தமிழ் பண்பாடு – டாக்டர். க.த.திருநாவுக்கரசு.

2. அயல்நாடுகளில் தமிழர் – எஸ். நாகராஜன்.

3. உலகத் தமிழர் இரண்டாம் பாகம் – வீரப்பனார்

பகிர்வுக்கு நன்றி ரமணன்.

2,50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பது எனக்கு புது செய்தியே. இதில் எத்தனை பேருக்கு தமிழ் எழுத / படிக்க தெரியுமோ! அடுத்த தலைமுறை வரைக்குமாவது அவர்களது தமிழ் அடையாளத்துவம் நிலைக்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.