Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கு மாகாணத் தேர்தல் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய உணர்வாளர்களின் எதிர்பார்ப்பும்.

Featured Replies

கிழக்கு மாகாணத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் போட்டியிடவுள்ள கட்சிகள் பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அனைத்துக் கட்சிகளும் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிக்க வேண்டுமென்பதில் மகிந்த ராஜபக்ஷவும் அரசாங்கமும் மிகவும் முனைப்புக் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைத் தோற்றுவித்துள்ளது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கிழக்குத் தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நீண்ட காலமாக ஆயுத ரீதியான போராட்டமொன்றை மேற்கொண்ட தமிழினம் ஜனநாயக வழியில் தமது உரிமைகளை முன்வைப்பதற்கும் நிலைநிறுத்துவதற்கும், இந்தத் தேர்தல் முக்கியமான களமாக அமைகிறது. கிழக்கு மாகாணம் தொடர்பில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் மூலமாக அறிவதற்கு சர்வதேசம் ஆர்வம் காட்டி வருகின்றது.

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட்டு சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென்றும் நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக இந்த இரண்டு மாகாணங்களும் இணைக்கப்பட வேண்டுமென்று கூறப்பட்ட போதிலும் அதனை செயற்படுத்துவதற்கு இலங்கை இந்திய அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்தப் பிராந்தியத்திற்கு சுயாட்சி வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதானாலேயே தமிழ் மக்கள் ஆயுத ரீதியாகப் போராடத் தலைப்பட்டனர். இந்தப் போராடம் கூட சர்வதேச நாடுகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டால் அழித்து துவம்சம் செய்யப்பட்டது.

ஈழத் தமிழ் மக்கள், இந்திய உறவுகள் மற்றும் சர்வதேச நாடுகளில் வாழ்கின்ற புலம் பெயர் தமிழ் மக்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு உலகம் போற்றும் சிறந்த கட்டமைப்பாக வளர்ந்த தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சிங்கள தேசம் பயங்கரவாதமாக சித்தரித்தது. இதனை சர்வதேச நாடுகளும் நம்பியமையே அவர்களின் இராஜதந்திரமற்ற முட்டாள்தனமான செயற்பாடுகளாகும்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் தமக்கென்றொரு சிறப்பான தலைமை இன்மையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே தலையில் தூக்கி வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற ஒரே காரணத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி தமது அரசியல் செயற்பாட்டை முன்னெடுத்தமையே கூட்டமைப்பு மக்கள் மத்தியில் பிரபலம் பெறுவதற்கு காரணமாகியது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு செயற்படப்போகிறது என்பது தொடர்பில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற தமிழ் உணர்வாளர்கள் தமது அச்சத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளனர். ஏனெனில் யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வந்த அனைத்து தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரியவாறு பிரச்சாரங்களில் ஈடுபடவில்லை.

இதனாலேயே கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மை வெற்றியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. 'நாங்கள் பிரச்சாரம் செய்தால் தான் மக்கள் எமக்கு வாக்களிப்பார்களென்றில்லை. மரத்தின் சின்னம் ஒன்றை காட்டி இதுதான் தமிழரசுக் கட்சி என்றால் மக்கள் மறு பேச்சின்றி வாக்களிப்பார்கள்' என்று கடந்த தேர்தல் காலத்தில் ஒருமுறை மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார். அந்தளவுக்கு தமிழ் மக்களை அவர் முட்டாள்கள் என்று நினைத்தார்.

கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தார்கள் தான். ஆனால் வடக்கு மாகாணத்திலுள்ள கிராமப்புறங்களில் தமிழ்க் கூட்டமைப்பு இறங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அவர்கள் அவ்வாறு எதையும் செய்யவில்லை.

தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்கள் அளித்த வாக்குகளாலேயே கூட்டமைப்பு வெற்றி பெற முடிந்தது. பிரதேச மக்களிடையே ஈ.பி.டி.பி இனர் மேற்கொண்ட தீவிர பிரசாரங்கள் அவர்களுக்கு ஓரளவு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. கூட்டமைப்பினர் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தால் ஈ.பி.டி.பி இனருக்கு சென்ற வாக்குகளும் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

மாவையோ சம்பந்தனோ சொல்வதைப் போல மரத்திற்கும் வீட்டுக்கும் வாக்குப் போடக்கூடிய நிலையில் இன்று தமிழ் மக்கள் இல்லை. தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட தமிழ்த் தேசியத்திற்கு வாக்களிப்பதையே தமிழ் மக்கள் பெரிதாக கருதுகின்றனர். தமிழ்த் தேசியம் வெல்ல வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இலட்சியக் கனவாக உள்ளது. இந்த இலட்சியத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்ற தமிழ் மக்களை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி தேர்தலில் வெற்றியடைந்துவிட்டு அவர்களின் அபிலாஷைகளுக்கு மாறாக கூட்டமைப்பு பயணிப்பதை தமிழ் மக்கள் என்றுமே அனுமதிக்க மாட்டார்கள்.

மாவையின் மரக் கதையுடன் ஒட்டிய போக்கிலேயே தற்போது கூட்டமைப்பினர் கிழக்குத் தேர்தலையும் எதிர்கொண்டுள்ளனர். திருகோணமலையின் சில இடங்களில் மட்டும் அவ்வப்போது சம்பந்தன் எம்.பி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றார். ஆனால் ஏனைய இடங்களில் பிரச்சார நடவடிக்கைகள் உரியவாறு, தீவிரமாக முன்னெடுக்கப்படவில்லை. இது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கிழக்கின் வெற்றி குறித்து பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தற்போதைய தேர்தல் களம் மிகவும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கிழக்கில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களிலும் பெரு வெற்றியைப் பெற்றுக்கொள்வதற்கு ஆளும் கட்சியும் எதிர்க் கட்சிகளும் துடியாய்த் துடித்து வருகின்றன. ஆனால் அவற்றில் அவர்களுக்கு தோல்விகளே ஏற்பட்டன. கடந்த தடவை நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போதும் மகிந்த அரசாங்கம் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியிருந்தது.

இதனால் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியாக இருந்து பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கி வெற்றியும் கண்டது. பிள்ளையான் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினராக உள்ளதால் அவருக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று கருதியதாலேயே மகிந்த இவ்வாறு செயற்பட்டார்.

ஆனால் தற்போதைய கிழக்குத் தேர்தல் களநிலை கடந்த காலங்களைப் போல அல்ல. தற்போது கிழக்கின் நிலமை மிகவும் வித்தியாசமானதாக மாறிவிட்டது. ஏனெனில் வடக்கு-கிழக்கு இணைந்த சுயாட்சிக் கோட்பாடு மீண்டும் வலுப்பெற்று வருகின்றது. சுயாட்சி தொடர்பாக தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டில் உள்ளனர் என்பதை அறிவதற்கு சர்வதேசம் ஆவலாக உள்ளது. கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் தமிழ்த் தேசியத்தின்பால் உறுதியாக நிற்கிறார்களா என்பதை இந்தத் தேர்தல் மூலமாக அறிவதற்கு சர்வதேசம் காத்திருக்கிறது.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழர் தரப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற அனுமதிக்கக் கூடாது என்பதில் மகிந்த தலைமையிலான சிங்கள அரசு மிக உறுதியாகச் செயற்படுகிறது. இதற்காகவே ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸை கிழக்கில் மகிந்த தனியாக களமிறக்கியிருக்கிறார். அதை விட தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க வேண்டுமென்பதற்காக அரசுக்கு நெருக்கமான பல உதிரிக் கட்சிகளும் தனித்தனியாகவும் சுயேட்சையாகவும் களமிறக்கப்பட்டுள்ளன. கிழக்கில் எப்படியாவது சிங்கள அரசின் வெற்றியை உறுதியாக்குவதற்கு மகிந்த சிறந்த திட்டமிடலுடன் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்.

எதிர்வரும் 2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று மகிந்த ராஜபக்ஷ அறிவித்திருக்கின்றார். இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வெற்றிபெறும் என்பது மகிந்த ராஜபக்ஷவிற்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையில் கிழக்கு மாகாண சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுமாயின் அது தமிழர்களின் வடக்கு-கிழக்கு இணைந்த தாயகக் கோட்பாட்டை சர்தேச ரீதியாக நிலைநிறுத்துவதற்கு வரலாற்றுத் திருப்புமுனையாக அமையும் என்பதும் மகிந்த ராஜபக்ஷவிற்கு நன்றாகவே தெரியும். இதனாலேயே கிழக்கு மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற விடக்கூடாதென்பதில் மகிந்த ராஜபக்ஷ உறுதியாக இருக்கின்றார்.

இந்த விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் வேட்பாளர்களும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தின் கிராமப் புறங்கள் தோறும் சென்று தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும். கிழக்கு மாகாண மக்கள் மிகவும் எழுச்சி பூர்வமான சிந்தனையுடையவர்கள். தமிழ்த் தேசயப் பற்றாளர்கள். கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற விடுதலைப் போராட்டத்திற்காக கிழக்கு மாகாண இளைஞர்கள் அளப்பரிய தியாகம் செய்தவர்கள். இந்த தியாகங்களைப் படைத்த தாயக மண்ணில் உள்ள மக்கள் இன்றுவரை தாயகப் பற்றுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தாயக உணர்வையும் அவர்களின் அபிலாஷைகளையும் தென்னிலங்கை சிங்களக் கட்சிகளும் அரச அடிவருடிகளும் அபகரிப்பதற்கு இடமளிக்கக் கூடாது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ந்துகொள்ள வேண்டும். அதற்கேற்ப செயற்பட வேண்டும்.

எனவே, கிழக்கு மக்களின் தேசியத்தையும் அவர்களின் தன்மானத்தையும் பாதுகாக்க வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடமையாகும். இந்த வரலாற்றுக் கடமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறைவேற்றுமா என்பதே எமது இன்றைய எதிர்பார்ப்பாக உள்ளது.

தாயகத்திலிருந்து வீரமணி

www.irruppu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.