Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் உகந்த வழி போரா? பேச்சுவார்த்தையா?

Featured Replies

போர் நிறுத்த மீறல்.

நிழல் யுத்தம்.

போர் நிறுத்த உடன்பாட்டிலிருந்து விலகல்.

போர்.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட கால கட்டத்திலிருந்து சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல், தாக்குதலுக்குப் பின்னர் சிங்கள அரசு மேற்கொண்ட மோசமான தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றை ஒப்பிட்டுப் பார்க்கின்ற போது சிறிலங்கா அரசு முழு அளவில் போரைத் திணித்துள்ளதையே காட்டுகின்றன.

போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து ஆங்காங்கே போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்று வந்தன. போர் நிறுத்த மீறல் சம்பவங்களில் படைத்தரப்பு ஈடுபட்டதால் சமாதான வழிமுறைகளில் நம்பிக்கை பலவீனமடைந்தது. எனினும், உடன்பாடு முன்னெடுக்கப்பட்ட போதும் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்ட கருணாவையும் கருணா கும்பலையும் தமக்குச் சாதகமான துருப்புச் சீட்டாக சிறிலங்கா அரசு கருதியது.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து விலக்கப்பட்டதை கருணா பிரிந்து விட்டதாகத் திரிபுபடுத்தப்பட்ட செய்திகளை சிங்கள இனவாத சார்புப் போக்கான ஊடகங்கள் வெளியிட்டன.

எனவே, விடுதலைப்புலிகள் பலவீனப்பட்டு விட்டார்கள். விடுதலைப்புலிகளால் இனி போரிடும் பலம், மனோபலமில்லை என்ற கற்பனா வாதம் தென்னிலங்கையில் வலுவூன்றியது. அதன் விளைவு போர் நிறுத்த உடன்பாட்டை முழுமையாக அமுல்படுத்தி சமாதான வழிமுறைகளை துரிதப்படுத்த வேண்டிய சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தமொன்றை தீவிரப்படுத்தியிருந்தது.

நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தி விடுதலைப்புலிகளின் பொறுமையை இழக்கச் செய்வதன் மூலம் விடுதலைப்புலிகள் நான்காம் கட்ட ஈழப்போரை தொடங்குவார்கள். இதன் மூலம் விடுதலைப்புலிகள் மீது சண்டையை தொடங்கியதற்கான பழியைப் போடுவது, இரண்டாவதாக கருணா கும்பலின் துணையுடன் போரிடுவதன் மூலம் வெற்றியை உறுதிப்படுத்துவது இதுவே சிறிலங்கா அரசின் திட்டமாகவிருந்தது.

எனினும் நிழல்யுத்தம் தீவிரமடையவும் விடுதலைப்புலிகள் மீதான, பொதுமக்கள் மீதான தாக்குதல் உச்சக்கட்டத்தை அடைந்த போதும் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்திலிருந்து துளியளவும் விலகவில்லை. அதேவேளை நிழல் யுத்தமானது தமிழ் மக்களிடையே மன உணர்வுகளை கிளர்ந்தௌச் செய்தது. 'பொங்கி எழும் மக்கள் படை' என்றொரு அமைப்பு மக்களால் உருவானது. நிழல் யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் படைத் தரப்புக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அதிகளவான தமிழ் மக்களை ஒட்டுக் குழுக்களின் உதவியுடன் கொன்றழிக்கும் நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. தமிழ் மக்கள் கொல்லப்பட்டு இராணுவக் கெடுபிடிகளை மக்கள் எதிர் நோக்கியபோது தமிழ் மக்களிடையே சமாதான வழிமுறைகள் மூலம் தீர்வு கிடைக்கும் என்ற மன உணர்வு, எண்ணப்பாடு குறைவடைந்தே சென்றது.

மீண்டும் போர் மூழ்வதற்கான சூழல் கனதியான போது சர்வதேச சமூகம் மீளவும் போர் மூள்வதை விரும்பவில்லை. இரு தரப்பும் பேச வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தியது. எனினும், நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்கா அரசு, போர் நிறுத்தத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும். போர் நிறுத்த உடன்பாட்டின் படி போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது விடுதலைப்புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. இதற்கமைய ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்கள் போர் நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவதற்கான பேச்சுக்களாக அமைய வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் கோரிக்கையாக இருந்தது.

இதில் இன்னொரு விடயம் அவதானிக்கப்பட வேண்டியுள்ளது. அதாவது போர் நிறுத்தம் கைச்சாத்திடப்பட்டதும் நடைமுறைகள் இரு தரப்பாலும் பின்பற்றப்படுவதுடன் பேச்சுக்கள் என்பது அரசியல் ரீதியான சிந்தனைகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என்பது அடிப்படையானது. ஆனால், போர் நிறுத்த உடன்பாட்டை பகிரங்கமாகவே சிறிலங்கா அரசு மீறி நின்று கொண்டு நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்தியதால் அரசியல் ரீதியான பேச்சுக்கள் என்ற படிமுறையில் பேசுவதற்கான சூழலை உருவாக்கவில்லை.

மாறாக போர் நிறுத்த அமுலாக்கம் குறித்துப் பேசவேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் கோரிக்கையாகவிருந்ததால் ஜெனீவாப் பேச்சுக்கள் முக்கிய இடத்தை வகித்திருந்தன.

இப்பேச்சுக்களால் தமிழர் தாயகத்தில் படையினர் ஆக்கிரமிப்புப் பகுதியில் இயங்கும் ஆயுதக்குழுக்களின் விபரம், அவர்களின் செயற்பாடுகள் போன்ற விபரங்கள் அனைத்தையும் ஜெனீவாப் பேச்சு மேசையில் விடுதலைப் புலிகள் முன் வைத்திருந்தனர். குறிப்பிட்ட காலத்துக்குள் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் நிபந்தனையாகவிருந்தது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கான திகதி நிர்ணயத்துடன் இரு நாள் நடைபெற்ற ஜெனீவாப் பேச்சு நிறைவடைந்த போதும் ஒட்டுக் குழுக்களின் ஆயுதங்களைக் களைந்து போர் நிறுத்த உடன்பாட்டை முழு அளவில் அமுல்படுத்துவதற்கான எந்த நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. மாறாக ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. மட்டக்களப்பு நகரில் கோவிந்தன் வீதியில் கருணா கும்பல் தமது முகாமினை அலுவலகம் என்ற பெயரில் திறந்து பகிரங்கமாக செயற்படும் சூழல் ஏற்பட்டது.

அது மாத்திரமின்றி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது பொது மக்களைக் கொலை செய்வது போன்ற பல்வேறு அராஜகத் தனங்களும், அதிகரித்தன. ஜெனீவா இரண்டாம் சுற்றுப் பேச்சு ஏப்ரல் 19ம் திகதி தொடக்கம் மூன்று நாட்களுக்கு நடைபெறுவதாகத் தீர்மானிக்கப்பட்ட போதும் ஜெனீவா முதல் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு அமுல்படுத்த தவறியதால் தமிழர் தரப்பு நம்பிக்கையற்ற போதும் இரண்டாம் சுற்றில் கலந்து கொள்வதற்கு தமது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

முதலாம் சுற்றுப் பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை அரசு நடைமுறைப்படுத்தியிருந்தால் இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் போர் நிறுத்த உடன்படிக்கையில் அமுல்படுத்தப்படாத ஏனைய விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டிருக்கும்.

ஆனால், முதல் சுற்றுப் பேச்சுக்களில் பேசப்பட்ட விடயங்களை அமுல்படுத்தாமைக்கான காரணம் என்ன என்பது குறித்த பேச்சு வார்த்தையாகவே இரண்டாம் கட்ட ஜெனீவாப் பேச்சுக்கள் அமையவிருந்தன. எனினும் பேச்சுக்கான சூழலை உருவாக்குவதில் அரச தரப்புக் காட்டிய அசமந்தத்தனமான நடவடிக்கைகள் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் தென் தமிழீழத் தளபதிகள் கிழக்கிலிருந்து வன்னி சென்று கிழக்கு நிலைமைகள் தொடர்பாக வன்னி சென்று தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடுவது அவசியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், இதற்கான போக்குவரத்துக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு சிறிலங்கா அரசு நடவடிக்கைகள் மேற் கொள்ளாததே இன்றைய நெருக்கடியான சூழலுக்கு தள்ளியது.

உலங்கு வானூர்திப் பயணத்தை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் வழித்துணையுடன் கடல் வழிப் போக்குவரத்து யோசனை விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டது. கண்காணிப்புக் குழுவும் ஏற்றுக் கொண்டு பயண ஏற்பாடு செய்யப்பட்ட போதும் கடற்படையின் தலையீடு காரணமாக கடற் பயண நடைமுறையும் தடைப்பட்டது.

இதன் காரணமாக ஜெனீவாப் பேச்சுக்கள் தடைப்பட்டுள்ள அதேவேளை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீதான தாக்குதலுக்கு எதிரொலியாக திருமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழ் மக்கள் குடியிருப்புக்கள் மீது இரு நாட்களாக சிறிலங்காவின் படையினரும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கிபீர் குண்டு வீச்சு, விமானங்கள் குண்டு மழை பொழிய கடற்படை தளத்திலிருந்தும் மற்றும் ஆட்டிலறி பீரங்கித் தாக்குதல் என்பனவும் நடத்தப்பட்டன. தாக்குதலில் பதினாறு பொதுமக்கள் பலியானதுடன் நாற்பதுக்கு மேற்பட்ட பொது மக்கள் படுகாயமடைந்தனர். அத்துடன் பொது மக்களின் வீடுகள், சொத்துக்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி நோக்கி இரண்டு நாட்கள் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அத்துடன் தமிழர் தாயகத்துக்கான போக்குவரத்துப் பாதைகளையும் மூடி அரசு தமிழ் மக்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் ஒரு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இச்சம்பவங்கள் யாவும் போர் நிறுத்த மீறல் என்ற அல்லது நிழல் யுத்தம் என்ற வரையறைக்குள் மட்டுப்படுத்த முடியாது. அவை போர் நிறுத்தவிலகல் என்ற வரையறைக்குள் பார்க்க வேண்டும். எனவே, குற்றவாளி யார் என்பதை கண்டறிய முன்னர் போர் நிறுத்தத்தை விட்டு படைத்தரப்பு விலகி அதனை சின்னாபின்னப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலானது போர் மூளும் பட்சத்தில் அரச பயங்கரவாதம் எவ்வாறு தமிழ் மக்களை மூர்க்கத்தனமாகக் கொன்றொழிக்கும் என்பதற்குத் திருமலைத் தாக்குதல் சம்பவம் நல்ல உதாரணம்.

சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் சிறிலங்காவின் முப்படைகளும் போர் நிறுத்த விதியை மீறி மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதிலிருந்து போர் ஆரம்பிக்குமாக இருந்தால் எவ்வாறு இன அழிப்பை அரசு மேற் கொள்ளும் என்பது புலனாகிறது. எனவே, இந்த சிறிலங்கா அரசை இன்னமும் நம்பலாமா? பேச்சுகளை தொடங்கலாமா? என்ற கேள்வி தமிழ் மக்களுக்கு தற்போது எழுகின்றது.

ஏனெனில் போர் நிறுத்த உடன்படிக்கையை அமுல்படுத்தாமல் இழுத்தடித்து வரும் சிறிலங்கா அரசு இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான உகந்த சூழலை அதாவது விடுதலைப் புலிகளின் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்காத அரசு. வலிந்து போரை திணித்து முப்படைகளின் மூர்கத்தனமான தாக்குதலில் தமிழ் மக்கள் பிணங்களாகச் சரிய ஒப்பாரி ஓலங்கள் எங்கும் ஒலிக்க இன்னுமொரு தடவை சிங்களத் தரப்புடன் பேசுவதால் ஏற்படப் போகும் இலாபமென்ன?

எனவே, பேச்சுவார்த்தை என்பது பேய்காட்டல் என்று கருதுவதுடன் தமிழ் மக்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கும் தமிழின விடுதலைக்காக பக்க துணையாக நிற்பதற்கும் அனைவரும் அணி திரள்வதுதான் உகந்த வழி

பிரவீனா

நன்றி மட்டு ஈழநாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.