Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பனிப்போர்க் கால 13வது திருத்தச் சட்டமும், பின்-பனிப்போர் கால இந்தியாவும் - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பனிப்போர்க் கால 13வது திருத்தச் சட்டமும், பின்-பனிப்போர் கால இந்தியாவும் - யதீந்திரா[/size]

இன்றைய அர்த்தத்தில் இலங்கை அரசியலின் விவாத மையம், 13வது திருத்தச் சட்டத்தில் தரித்து நிற்கிறது. தெற்கில், அரசியல்வாதிகளையும் தாண்டி புத்திஜீவிகள், அரசியல் அவதானிகள் என்போர் மத்தியிலும் இது ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற விவாதம் இலங்கை அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகின்ற விவாதமாகும். 1987ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாணசபை முறைமை ஒன்றுதான், சுதந்திர இலங்கையில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் (Decentralization) முறைமை ஆகும். அதனையும் கூட நீக்க அனுமதிப்பதா? என்பதுதான் இன்றைய விவாதத்தின் மையப் பொருளாகும்.

13வது திருத்தச் சட்டம் நீக்கப்படக் கூடாது என்னும் குரல்களும் தெற்கில் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இடதுசாரிக் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும், அமைச்சர் திஸ்ஸ விதாரண, டியு குணசேகர மற்றும் வாசுதேவ நாணக்கார ஆகியோர் பகிரங்கமாகவே 13வது திருத்தச் சட்டம் நீக்கப்படக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றனர். அவர்கள், 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான இயக்கம் ஒன்றையும் ஏற்படுத்துவது குறித்து சிந்தித்து வருகின்றனர்.

இனப்பிரச்சனைக்கான தீர்வைக் கண்டடைய வேண்டுமாயின் நாம் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பயணிப்பதே சாலப் பொருத்தமானதாகும் என்பதே மேற்படி இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கின்றது. இதுபற்றி கருத்துத் தெரிவித்திருக்கும் திஸ்ஸ விதாரண, இலங்கை இனப்பிரச்சனைக்காக மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு முயற்சியும் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக் கொண்டு அமைந்தால் அது சிறப்பானதாக அமையும். 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் பயணித்தால்தான் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு சாத்தியமாகும் - என்று குறிப்பிட்டிருக்கின்றார்.

இதிலுள்ள ஆச்சரியமான பக்கம் என்னவென்றால், 13வது திருத்தச் சட்டம் எந்த மக்களின் பிரச்சனைக்காக அறிமுகம் செய்யப்பட்டதோ, அந்த மக்களின் தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது குறித்து எந்தவொரு தெளிவான நிலைப்பாட்டையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இத்தனைக்கும் கிழக்கு மாகாணசபையில் கூட்டமைப்பு போட்டியிட்டு எதிர்கட்சியாசனத்திலும் அமர்ந்திருக்கிறது. தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்கள், இது குறித்து வாய் திறக்கும்வரை கூட்டமைப்பின் உத்தியோக பூர்வமான நிலைப்பாட்டை எவரும் அறிந்துகொள்ள முடியாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கொள்கை இணக்கம் காணப்பட்ட ஒரு அரசியல் அமைப்பு அல்ல. அது தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடிக் கலைவதற்கான ஒரு ஏற்பாடு மட்டுமே. ஆனால் சம்பந்தன் அவர்கள், 13வது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டால், அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றவாறான எச்சரிக்கை குறிப்பொன்றை வழங்கியிருக்கின்றார். ஆனால் இவ்வாறான வீராவேச அறிக்கைகள் எவற்றையும் தற்போதைய மகிந்த அரசு பொருட்படுத்தப் போவதில்லை. தவிர இவ்வாறான வீராவேச அறிக்கைகள் அரசின் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தவே பயன்படும்.

வரலாற்றின் முக்கியமான ஒவ்வொரு தருணங்களிலும் வீராவேச வசனங்களில் திருப்திகண்ட தமிழ் தலைமைகளின் தொடர்ச்சியான கூட்டமைப்பு, 13வது திருத்தச் சட்டம் தொடர்பிலும் அவ்வாறுதான் நடந்து கொள்ளப் போகின்றதா? 13வது திருத்தச் சட்டம் தொடர்பான வீராவேச கருத்துக்களின் பின்னணியை அவதானித்தால் ஒரு விடயம் மறைபொருளாக இருக்கின்றது. அது இந்தியா பற்றியது. 13வது திருத்தச் சட்டத்தை அரசு நீக்காது. ஏனெனில், இந்தியாவை அரசு பகைத்துக் கொள்ள விரும்பாது என்றவாறான ஒரு தமிழ்ப் புரிதலும் இருக்கிறது. இந்தியா தமிழர் பிரச்சனையில் மட்டுமல்ல இலங்கை தொடர்பான விடயங்களிலும் ஒரு தீர்க்கமான சக்தி என்பதில் மாறுபட ஒன்றுமில்லை. இதனை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இந்த பத்தியாளர் வலியுறுத்தியும் வந்திருக்கிறார். ஆனால் இந்தியாவின் இடம் பற்றி தமிழ் தலைமைகள் அறிந்து வைத்திருப்பதிலும் பார்க்க, சிங்கள தலைமைகள் அதிகம் அறிந்து வைத்திருக்கின்றன. இந்தியாவை மிகவும் நுட்பமாக கையாளும் ஆற்றல் சிங்கள ராஜதந்திரத்திற்கு இருக்கிறது.

இந்தியாவின் பிராந்திய நலனுக்கு இலங்கையின் நடவடிக்கைகள் பாதகமாக அமையுமிடத்து, இந்தியா எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருக்கும் கொழும்பு, மாறியிருக்கின்ற உலக ஒழுங்கில் இந்தியாவின் ஆர்வங்கள் என்ன என்பதையும் அறிந்தே செயற்படுகிறது. இதற்காக இரவு பகலாக பணியாற்றுவதற்கான மூளைசாலிகளும் அரசாங்கத்தின் வசம் ஏராளம். இந்த நிலைமையை அப்படியே தமிழ் சூழலுக்கு பொருத்திப் பார்த்தால் எத்தனை பேர் தேறுவார்கள்;? எனவே இந்தியா பின்-யுத்த இலங்கையில் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்றது என்பதை துல்லியமாக மதிப்பிட்டே கொழும்பு தனது நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றது. 13வது திருத்தச் சட்டம் தொடர்பான சர்ச்சையும் இத்தகையதொரு பின்புலத்தில்தான் எழுந்திருக்கிறது. தற்போது வெறும் சர்ச்சையாக இருக்கின்ற மேற்படி விவகாரம், நடைமுறைக்கு வராதென்று தமிழ் தலைமை கணிப்பிடுமானால் அது தவறு.

முதலில் இப்பத்தி ஒரு கேள்விக்கான விடையை காண விளைகிறது. 13வது திருத்தச் சடத்தின் மீது இந்தியாவிற்கு என்ன ஈடுபாடு இருக்க முடியும்? 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் பனிப்போர் கால நகர்வுகளின் விளைவு. பனிப்போர் கால அரசியலை இந்தியா கைவிட்டு இருபது வருடங்கள் ஆகின்றன. எனவே பனிப்போர் காலத்தில் தன்னால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு தலையீட்டின் விளைவான 13வது திருத்தச் சட்டத்தில் இந்தியா எந்தளவு தூரம் இறுக்கம் காட்ட முடியும். தவிர 13வது திருத்தச் சட்டத்தை இந்தியா அழுத்திய காலத்தில் அதனை தமிழர் தரப்பு நிராகாரித்திருந்தது. இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் அமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் எவையும் 13வது திருத்தச் சட்டத்தை அன்று ஏற்றுக் கொண்டிருக்கவில்லை. மாறாக எதிர்த்தே இருந்தன. இந்தியா பெருத்த அவமானத்துடன் இலங்கையிலிருந்து வெளியேறியது.

எனவே இத்தயைதொரு பின்புலத்தில் நோக்கினால், 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது குறித்து இந்தியா பெரியளவில் அழுத்தங்களை பிரயோகிக்கப் போவதில்லை. ஆனால் இந்தியாவிற்கு, குறிப்பாக காங்கிரஸ் இந்தியாவிற்கு இது தொடர்பில் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் அதுவும் தமிழர் தலைமை 13வது திருத்தச் சட்டத்தின் மீது எந்தளவு உறுதியாக இருக்கிறது என்பதை பொறுத்தே அமையும். தவிர இலங்கையின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கும் அரசாங்கம், அரசியல் யாப்பில் சீர்திருத்தம் ஒன்றை மேற்கொள்ளும் போது, அதில் இந்தியா எந்தளவு தூரம் தலையிட முடியும்? இன்றைய சூழலில் இந்தியா வலிந்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து எந்தவொரு முன்மொழிவையும் மேற்கொள்ளாது. சமீப காலமாக இந்தியா வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள் அனைத்தும் இதனையே தெளிவுபடுத்துகின்றது. இவ்வாறான விடயங்களை துல்லியமாக மதிப்பிட்டே, கொழும்பு இத்தகையதொரு நகர்வை மேற்கொண்டிருக்கின்றது. எனவே 13வது திருத்தச்சட்டம் தொடர்பில் இந்தியாவிற்குள்ள பொறுப்பு என்பது இப்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுதியான நிலைப்பாட்டில்தான் தங்கியிருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் அத்தகையதொரு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியுமா என்பது அடுத்த கேள்வி.

விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்ட பின்புலத்தில் தமிழர் தலைமையான கூட்டமைப்பின் தலைவர்கள், கடந்த மூன்று வருடத்தில் ஒன்றுபட்டு தங்களது நிலைப்பாட்டை தற்செயலாகக்கூட தெரிவித்ததில்லை. தவிர கூட்டமைப்பிடம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாக பகிரங்கப்படுத்தக்கூடிய எந்தவொரு திட்டமும் இல்லை. சமீபத்தில் இரா.சம்பந்தன் அவர்களது தலைமையில் புதுடில்லி சென்ற கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட இந்திய அதிகார தரப்பினரை சந்தித்து திரும்பினர் என்பதுதான் பரவலான செய்தி. ஆனால் அங்கு மன்மோகன் சிங், உங்களின் முன்மொழிவு என்ன என்று கேட்டதற்கு எந்தவொரு ஆவணத்தையும் காண்பிக்க முடியாதவர்களாகவே மேற்படி குழுவினர் இருந்தனர் என்பது வெளிவராத செய்தி.

ஆரம்பத்திலிருந்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் ஒரு தெளிவான அரசியல் வேலைத்திட்டமோ, தெளிவான அரசியல் நிலைப்பாடோ இருந்திருக்கவில்லை. கூட்டமைப்பின் அடிப்படையான சிக்கல் அதன் உருவாக்கத்தில் இருந்தே ஆரம்பிக்கின்றது. ஆரம்பத்தில் இயக்க அரசியலால் கையாளப்பட்ட கூட்டமைப்பு, 2009இல் இருந்து மிதவாத தலைமையால் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இதுவே இன்று கூட்டமைப்பிற்குள் நிலவும் அனைத்து பிரச்சனைகளுக்குமான காரணமாகும்.

எனவே இங்கு கூட்டமைப்பு என்பதே ஒரு பிரச்சனையாக மாறியுள்ள நிலையில், கூட்டமைப்பால் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் முன்வைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தவிர ஆரம்பத்திலிருந்தே, கூட்டமைப்பு ஒரு தலைமைக்குரிய கம்பீரத்தடன் விடயங்களை கையாள முற்படவில்லை. இதன் விளைவு, கூட்டமைப்பு பல்வேறு முரண்பட்ட தரப்பினர்களையும் தாஐh பண்ண வேண்டிய நிலைமைக்கு ஆளானது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்று 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எந்தவொரு உறுதியான முடிவையும் பகிரங்கப்படுத்த முடியாத கையறு நிலை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் விடயங்களை நிதானத்துடனும் நெகிழ்வுடனும் கையாளக் கூடிய ஆற்றலுள்ளவர்கள் இருந்தும், கூட்டமைப்பு ஒரு செயற்திறனற்ற அமைப்பாக இருப்பதற்கு மேற்படி சிக்கல்களே காரணமாகும். 13வது திருத்தச் சட்டம் தொடர்பிலும், கூட்டமைப்பு அசமந்தப் போக்கை கடைப்பிடிக்குமாயின், அது தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை நிரந்தர இருளுக்குள் தள்ளவே வழிவகுக்கும். பனிப்போர் காலத்தில் இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு, பின்-பனிப்போர் கால இந்தியா கைகொடுக்கும் என்று நம்பி கூட்டமைப்பு 13வது திருத்தச் சட்ட விவகாரத்தை கைவிடுமாயின், தமிழர் நிலைமை இறுதியில் அரசனை நம்பி புருசனை கைவிட்ட பெண்ணின் கதைக்கு ஒப்பாகும்.

[size=5][size=4] [/size][/size]

[size=5][size=4] [/size][/size]

[size=5][size=4]http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=db81c823-5cf5-4352-a537-157280a6d242[/size][/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.