Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னாபிரிக்க மத்தியஸ்தம்: பிரச்சினையை தீர்க்கவா? கால அவகாசத்தைக் கொடுக்கவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்க மத்தியஸ்தம்: பிரச்சினையை தீர்க்கவா? கால அவகாசத்தைக் கொடுக்கவா?

முத்துக்குமார்
 

 

இந்தியாவும், நோர்வேயும் ஏறிய குதிரையில் தென்னாபிரிக்காவும் ஏறத்தொடங்கியுள்ளது. அரசின் பிரதிநிதிகள் தென்னாபிரிக்கா சென்று வந்த பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போது தென்னாபிரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. கூட்டமைப்பினர் ஜனவரி மாதமளவில் தென்னாபிரிக்கா செல்லவுள்ளனர்.

 

தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கிவிட்டமை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்தின் இரண்டாவது முயற்சி. முதலில் நோர்வேயைக் களத்தில் இறக்கிவிட்டு தோல்வியடைந்தனர். தற்போது தென்னாபிரிக்காவை களத்தில் இறக்கி சில முயற்சிகளை செய்கின்றனர். இதிலும் வெற்றி கிடைக்கும் என்பதற்கான சமிஞ்ஞைகள் தெரியவில்லை.

 

மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்குமுள்ள பிரச்சினை தமிழ் மக்களின் விவகாரமல்ல. சீனாவின் அதிகரித்த பிரசன்னம்தான். சீனாவை அரசாங்கத்திலிருந்து அகற்றுவதில் அவை தொடர்ச்சியாக தோல்விகளையே தழுவிக்கொண்டு வருகின்றன. எனினும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல தொடர்ச்சியான முயற்சிகளைச் செய்கின்றனர். இந்திய - மேற்குலகைப் பொறுத்தவரையில் மகிந்தரை இராஜதந்திர ரீதியாக கையாளக் கடினமான நபர் என்றே கருதுகின்றன. பிரபாகரனும் முன்னர் அவ்வாறே கருதப்பட்டார். இத்தகைய மனிதரைக் கையாள்வதற்குரிய எத்தனங்களாகவே தென்னாபிரிக்க முயற்சிகள் இருக்கின்றன. மக்களின் ஆதரவுபெற்ற அரசு என்பதால் ஒரு கட்டத்திற்கு மேல் அழுத்தங்களைக் கொடுக்க முடியாத நிலையிலும் இவை இருக்கின்றன. அதிக அழுத்தம் கொடுத்தால் சீனா பக்கம் சரிந்துவிடுமோ என்ற அச்சம் வேறு. இதனால் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதும் இந்தியா பாதுகாப்பதும் என்கின்ற சடுகுடு விளையாட்டு நடைபெறுகின்றது.

 

இலங்கை இன விவகாரத்தைப் பொறுத்தவரை மூன்றாவது தரப்பு ஒன்றின் தலையீடு இல்லாமல் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பது நிதர்சனமானதே. ஆனால் அம்மூன்றாம் தரப்பிற்கு இலங்கை இனவிவகாரம் தொடர்பான வரலாற்று அனுபவம் இருக்கவேண்டும். தென்னாபிரிக்காவிற்கு அந்த அனுபவம் இருக்கின்றதா என்பது சந்தேகமானதே! குறிப்பாக சிங்கள சமூக உருவாக்கம், அதன் அடிப்படையில் எழுச்சியடைந்த சிங்கள அரசுருவாக்கம் பற்றிய தெளிவான அறிவு இருக்கவேண்டும்.

 

சிங்கள சமூக உருவாக்கம் என்பது சிங்கள - பௌத்த பேரினவாத கருத்துநிலைகளால் கட்டியெழுப்பப்பட்டதே. இக் கட்டியெழுப்புதல் அரசியல் மட்டத்தில் மட்டும் இடம்பெறவில்லை. மாறாக வரலாறு, சமயம், ஐதீகம் என்கின்ற கூட்டு அடிப்படையில் இடம்பெற்றுள்ளது. இதன் கூட்டுக்கருத்து இலங்கைத்தீவு சிங்கள – பௌத்த மக்களுக்கு மட்டும் சொந்தமானது. ஏனையவர்கள் வாழ்ந்துவிட்டுப் போகலாம். உரிமைகள் எதுவும் கேட்கக்கூடாது என்பதே! இதுபற்றி எனது முன்னைய கட்டுரைகளிலும் கூறியிருக்கின்றேன்.

 

இந்த இறுகிப்போன கருத்துநிலையினை அசைக்காமல் அரசியல் தீர்வு எதனையும் கொண்டுவர முடியாது. கடந்த கால தீர்வு முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்தமைக்கு அடிப்படைக் காரணம் இதுதான். இதுபற்றிய சரியான விளக்கமில்லாமல் எந்த மூன்றாம் தரப்பினாலும் முன்னேறமுடியாது.

 

முன்னர் புலிகளின் ஆயுதப் போராட்டம் இருந்தமையினால் சிறிலங்கா அரசிற்கு ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. அந்த வகையான உள்ளூர் நிர்ப்பந்தங்கள் எதுவும் கிடையாது. தற்போது இருப்பதெல்லாம் சர்வதேச நிர்ப்பந்தம் மட்டுமே. உள்ளூர் நிர்ப்பந்தத்தை மகிந்தர் அகற்றியமையினால்தான் சிங்கள மக்களினால் தோற்கப்படமுடியாத மன்னர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

 

தற்போது அரசாங்கம் தென்னாபிரிக்க முயற்சிகளில் அக்கறை கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் முதலாவது மார்ச் மாதம் வரப்போகின்ற ஜெனிவாச் சூட்டைத் தணிப்பதாகும். இலங்கை அரசு தொடர்ந்து எதிர்நிலையில் செல்வதால் இந்தத்தடவை அழுத்தங்களை சற்று அதிகரிக்கவே அமெரிக்கா விரும்புகின்றது. இதுவரை காலமும் இலங்கை விவகாரத்தை அமெரிக்க வெளிநாட்டமைச்சின் ஆசியப் பிரிவே கையாண்டது. தற்போது வெளிநாட்டமைச்சு நேரடியாகவே கையிலெடுத்தள்ளது.

 

எனவே இந்த அழுத்தங்களிலிருந்து தப்பிக்க ஒரு நாடகமாட வேண்டிய தேவை இலங்கை அரசிற்கு உள்ளது. நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்ற உண்மையான உணர்விலிருந்து இதற்கு அரசு சம்மதித்தது எனக் கூறமுடியாது. அரசிடம் விசுவாசமான எண்ணம் இருந்தால் ஏற்கனவே நல்லிணக்கத்திற்கான சூழலை களத்தில் அது உருவாக்கியிருக்கும். ஆனால் மாறாக வட - கிழக்கில் சிங்கள மயமாக்கலை துரிதப்படுத்துவதும் அதிகாரங்களை மத்தியிலிருந்து சமூகங்களை நோக்கி நகர்த்துவதற்கு பதிலாக மத்தியில் குவிப்பதுமே இடம்பெறுகின்றது.

 

இரண்டாவது, காலத்தை இழுத்தடிப்பதாகும். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பத்துச்சுற்றுப் பேச்சுவார்த்தை என 1 1/2 வருடம் வரை இழுத்தடித்தது. பின்னர் தெரிவுக்குழு என 1 1/2 வருடம் இழுத்தடித்து இனி தென்னாபிரிக்க மத்தியஸ்தம் என இழுத்தடிப்பதற்கு சிலவருடங்கள் கிடைக்கப்போகின்றன.

 

தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களிலிருந்து வேறுபட்டது. அதனுடைய இருப்பு என்பது சிங்கள மயமாக்கலிலும், அதிகாரக்குவிப்பிலும் தங்கியுள்ளது. பேரினவாத கருத்து நிலையினை அரசு எப்போது கைவிடுகின்றதோ அன்று அதன் இருப்பே பலவீனமாகிவிடும். இதனால் தமிழ்மக்களின்  அடையாளங்களை அழிப்பதிலேயே அது கவனமாக இருக்கின்றது. தற்போது நடைபெறுகின்ற பச்சை ஆக்கிரமிப்புக்கள் எல்லாம் இதன் அடிப்படையில் எழுந்தனவே! இந்த ஆக்கிரமிப்புக்களை முழுமையாக்க அரசாங்கத்திற்கு ஒரு கால அவகாசம் தேவை. அதற்கு தென்னாபிரிக்க மத்தியஸ்தத்தை பயன்படுத்துகின்றது. இந்தக் கால அவகாசத்திற்குள் மேற்குலகத்திற்கும், இந்தியாவிற்கும் சில சலுகைகளை வழங்கி அழுத்தங்களைக் குறைக்கப் பார்க்கும். ஆக்கிரமிப்பு முற்றுப்பெற்றால் இன விவகாரம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

 

தமிழ்மக்களைப் பொறுத்தவரை நல்லிணக்கம் மூன்று கட்டங்களைக் கொண்டது. முதலாவது கட்டம் போரில்லாத நிலை, இரண்டாவது கட்டம் இயல்புநிலையைக் கொண்டுவருதல், மூன்றாவது கட்டம் அரசியல் தீர்வு. படிப்படியாக இந்த மூன்று கட்டங்களையும் தாண்டுவதற்கான வேலைத்திட்டங்களை நகர்த்தும்போதே உண்மையான நல்லிணக்கம் சாத்தியமாகும்.

 

முதலாவது கட்டம், தமிழ்மக்களைப் பொறுத்தவரை முற்றுப்பெறவில்லை. போர் வேறோர் வகையில் தொடர்கின்றது. ஒரு தரப்பு மட்டும் போரை நடத்துகின்றது. போரில் வெற்றியடைந்த அரசுகள் தோல்வியடைந்த அரசுகளை சூறையாடுவதைப் போல ஒரு பச்சைச் சூறையாடல் இடம்பெறுகிறது. தமிழ்மக்கள் ஒரு தேசமாக இருக்கின்ற நிலை பல நுணுக்கமான வேலைத்திட்டங்கள் மூலம் அழிக்கப்படுகின்றன. நிலப்பறிப்பு, வளப்பறிப்பு, கலாச்சாரப் பறிப்பு என்ற வகையில் இந்தப் பறிப்புகள் தொடர்கின்றன. இப்பறிப்பின் கருவிகளாக சிங்கள மக்கள் பயன்படுத்தப்படுவதோடு பௌத்த மதமும் பயன்படுத்தப்படுகின்றது. இராணுவம் இப்பறிப்புகளுக்கான காவலரணாக இருக்கின்றது. பல சந்தர்ப்பங்களில் இதுவும் பறிப்பில் ஈடுபடுகின்றது. வன்னிப்பெருநிலம் சிங்கள மக்களின் போர்ச் சுற்றுலாத் தலங்களாக பயன்படுத்தப்படுகின்றது.

 

எனவே நல்லிணக்கத்தின் முதலாம் கட்டத்தில் இந்த ஒருதரப்புப் போர் நிறுத்தப்படல் வேண்டும். நில, வள, கலாச்சாரப் பறிப்புக்களை கைவிட வேண்டும். மக்களுடைய நிலங்கள் அனைத்தும் திருப்பிக் கொடுக்கப்படல் வேண்டும். இராணுவம் வாபஸ் பெறப்படல் வேண்டும். கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படல் வேண்டும். சகல பாஸ் நடவடிக்கைகளும் இல்லாமல் செய்யப்படல் வேண்டும். நல்லிணக்கத்தின் முதலாம் கட்டமாக மாத்திரமல்ல, தமிழ்மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதற்கும் இச்செயற்பாடு அவசியம். இந்த முதலாம் கட்டத்தை அரசு நிறைவேற்றுவதற்கு முன்னர் தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்வது, ஜெனிவா நெருக்கடியிலிருந்து அரசினைப் பிணை எடுப்பதோடு சிங்கள மயமாக்கலுக்கான கால அவகாசத்தை அரசிற்கு வழங்குவதாகவே அமையும்.

 

முதலாம் கட்டத்தை அரசு விசுவாசமாக பூர்த்தி செய்தால் இரண்டாம் கட்டத்தை நகர்த்துவதற்கு தமிழ்த்தரப்பு பேச்சுவார்த்தைக்கு செல்லலாம். அந்தப் பேச்சுவார்த்தை தமிழ்ப் பிரதேசங்களில் இயல்புநிலையினைக் கொண்டுவருவதாக இருக்கவேண்டும். இந்த இயல்புநிலையைக் கொண்டு வருதலில் தமிழ்மக்களின் பிரதிநிதிகள் ஈடுபடுத்தப்படல் வேண்டும். மக்களின் குடியமர்வு, போராளிகளின் புனர்வாழ்வு, வாழ்வாதாரங்களுக்கு உதவுதல் என்பன இந்த இயல்புநிலைக் கொண்டுவருதலில் இருத்தல் வேண்டும்.

 

முதலாம் கட்டம் நிறைவேறாததினால் இரண்டாம் கட்டம் சிறிதளவுகூட முன்னேறவில்லை. மக்கள் தமது காணிகளிலிருந்து துரத்தப்பட்டு காடுகளில் குடியமர்த்தப்படுகின்றனர். தமது கடல், விவசாயத் தொழில்களில் சுதந்திரமாக ஈடுபடமுடியவில்லை. அவர்களது வாழ்வாதாரங்கள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. இவ்வாழ்வாதாரப் பறிப்பு ஏற்கனவே நெருக்கடிநிலையில் இருக்கின்ற மக்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிவிடுகின்றது. அநீதிகளுக்கு எதிரான மக்களின் ஜனநாயக்குரல் இன்று இராணுவத்தின் துணைகொண்டு நசுக்கப்படுகின்றது. அபிவிருத்தி என்ற அரசின் செயற்பாடுகளிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் தூரவிலக்கப்படுகின்றனர். தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி என்பதும், பேரினவாத ஆக்கிரமிப்பின் நீட்சியாக உள்ளது.

 

இந்த இரண்டு கட்டமும் பூர்த்தியடைந்தால், மூன்றாவது கட்டமான அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். அரசு அரசியல் தீர்விற்கு தயாராக இருந்தால் முதல் இரண்டு கட்டங்களையும் செயற்படுத்த முனைந்திருக்கும். அரசினைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு என எதுவுமே இல்லை. அதனை உருவாக்குகின்ற விருப்பமும் இல்லை. மிகப்பலவீனமாக இருக்கின்ற மாகாணசபை முறையினை ஒன்றில் நீக்க முற்படுகின்றது அல்லது மேலும் பலவீனப்படுத்த முற்படுகின்றது. இந்நிலையில் அரசு அரசியல் தீர்வை தரும் என நினைப்பது முட்டாள்தனம்.

 

அரசியல் தீர்வு என வருகின்ற போது தமிழ்மக்களை ஒரு தேசமாக அங்கீகரிப்பது முக்கியமானது. நீண்டவரலாற்று ரீதியான போராட்டத்தினூடாக தமிழ்மக்கள் தங்களை ஒரு தேசமாக ஒழுங்கமைத்துள்ளனர். ஒரு தேசத்திற்குத்தான் தங்களைத் தாங்களே ஆள்கின்ற உரிமை உண்டு. சிறுபான்மை இனங்களுக்கு அது கிடையாது. இந்தக் கொள்கைப் பிரச்சினையை விளங்கிக் கொள்ளாத கூட்டமைப்பின் பிரதிநிதிகள் சிலரும், சில பத்திரிகையாளர்களும் தமிழ்மக்களை ஒரு சிறுபான்மை இனம் எனக் கூறிவருகின்றனர். இது மிகவும் அபத்தமானது. தமிழ்மக்களைக் கொச்சைப்படுத்துகின்ற ஒரு செயற்பாடு. இந்தப் போக்கிற்கு தமிழ்மக்கள் இடங்கொடுக்கக்கூடாது. தமிழ்மக்கள் ஒரு தேசம் என்பது அங்கீகரிக்கப்பட்டால் அதிகாரஅலகு, சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கக்கூடிய பகிர்வு அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் பங்கு, பகிர்வு, கூட்டு அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பன தானாகவே வந்துவிடும்.

 

எனவே மேற்கூறிய மூன்று கட்டங்களையும் முன்கொண்டு செல்லக்கூடிய பேச்சுவார்த்தையே இன்று தேவை. இதனை நோக்கி சர்வதேசத்தை வழிப்படுத்தவேண்டியது தமிழ்த் தலைமையின் கடமை. துரதிஸ்டவசமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச வழிப்படுத்தும் ஆற்றலை இன்னமும் பெறவில்லை. மேற்குலகத்தினதும், இந்தியாவினதும், நிகழ்ச்சிநிரலுக்கு பின்னால் ஓடுகின்றதே தவிர தனக்கென சொந்த நிகழ்ச்சிநிரல் எதனையும் கொண்டிருக்கவில்லை. அது தனக்கென ஆலோசனை கூறுவதற்கு ஒரு புலமையாளர் குழுவையும் உருவாக்கியிருக்கவில்லை. அதற்கான விருப்பமும் அதனிடம் கிடையாது. சம்பந்தனின் தனித்த ஓட்டமே அங்கு இடம்பெறுகிறது. கூட்டுச் செயற்பாடு இல்லாததினால் திட்டமிட்ட வேலைத்திட்டங்களும் அங்கு கிடையாது. தன்னியல்பான வேலைகளே நடைபெறுகின்றன. கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட பணிகளை மேற்கொள்வதற்கு பதிலாக அவ்வப்போது கைவந்த பணிகளையே ஆற்றுகின்றனர். பலர் எந்தவித பணிகளும் இல்லாமல் உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் இருப்பினைப் பாதுகாக்க முயல்கின்றனர்.

 

தமிழ் ஊடகங்கள் தமிழ்த் தலைமையை வழிப்படுத்துவதற்கு பதிலாக கூட்டமைப்பிற்குப் பின்னால் இழுபட்டுச் செல்லவே முயல்கின்றன. இதனால் மாகாணசபை அரசியலுக்கு அப்பால் ஊடகங்களின் விவாதம் முன்னேறவில்லை. மாகாணசபை அரசியல் பற்றிகூட ஆரோக்கியமான விவாதம் இடம்பெற்றது எனக் கூறமுடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய – மேற்குலக சக்திகளுக்கு பின்னால் இழுபட்டுச் செல்ல, தமிழ் ஊடகங்கள் கூட்டமைப்பிற்கு பின்னால் இழுபட்டுச் செல்லும் போக்கே உள்ளது,

 

இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல. இதுவிடயத்தில் கூட்டமைப்பையும், தமிழ் ஊடகங்களையும் வழிப்படுத்த தமிழ்மக்கள் முன்வரவேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் திறந்த விவாதத்திற்கான களத்தினை உருவாக்கவேண்டும். இதற்காக சிவில் சமூகம் உட்பட பல அழுக்கக் குழுக்கள் தமிழ்மக்கள் மத்தியிலிருந்து உருவாகவேண்டும். அவை பரந்துபட்ட விவாதத்தினை ஆரம்பிக்கவேண்டும்.

 

அரசியல் தலைமைகள் எல்லாம் செய்வார்கள் என்ற குத்தகை மனோபாவம் தமிழ்மக்களுக்கு இருப்பது ஆபத்தானது. போராட்டம் மக்களுக்கானது என்றால் மக்கள் களத்தில் இறங்கவேண்டும். அப்போதுதான் போராட்டத்தின் மூலம் கிடைக்கும் விடுதலையும் மக்களுக்கானதாக இருக்கும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.