Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர் உரிமை - எந்தக் கழகம் முன்னணியில் நிற்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் உரிமை - எந்தக் கழகம் முன்னணியில் நிற்கிறது?
சந்திர. பிரவீண்குமார்


ஈழத் தமிழர் பிரச்சினையைக் காரணம் காட்டி தி.மு.க. மத்திய அரசிலிருந்து விலகியதற்கு மறுநாள், 'இத அப்பவே செஞ்சிருந்தா நான் செத்துருக்க மாட்டேன்ல... தாத்தா? உயிரைத் திரும்ப தா... தா...' என்ற சுவரொட்டியை அ.தி.மு.க.வினர் சென்னை முழுக்க ஒட்டியிருந்தார்கள். அதற்கு பதிலடி தரும் விதமாக, 'போர் என்றால் பொதுமக்கள் கொல்லப்படுவது சகஜம் என்று நீங்கள் அன்று சொன்னதால்தான் எனக்கு இந்த கதி. என் உயிரைத் திரும்ப தர முடியுமா அம்மா?' என்று தி.மு.க.வினர் மற்றொரு சுவரொட்டியை வைத்தார்கள். விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் பிஞ்சு முகத்தை வைத்து இந்த இரண்டு கழகங்களும் அரசியல் செய்வது தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவாளர்களைக் கொதிப்படைய செய்திருக்கும். ஆனால் கழகங்கள் அது பற்றிக் கவலைப்படவில்லை என்பதுதான் வேதனை.

 

மார்ச் 21ஆம் தேதி ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் குரலெழுப்பின. சென்னையில் மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் காரணமாக இந்தப் பிரச்சினை தமிழகத்தில் பூதாகரமாக வெடித்தது. இந்த நிலையில் ஈழ ஆதரவு நிலையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இரண்டு கட்சிகளும் உள்ளன. இந்த அரசியல் யுத்தத்தில் தற்போது கருணாநிதியை விட ஜெயலலிதாவே முன்னணியில் உள்ளார்.

 

தமிழக அரசியலில் பல ஆண்டுகளாக இலங்கை பிரச்சினை பேசப்பட்டுவந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக அது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுவருகிறது. எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தவரை விடுதலைப் புலிகளை ஆதரிக்காத கருணாநிதி, எம்.ஜி.ஆருக்குப் பிந்தைய அரசியல் சூழலில் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். விடுதலைப் புலிகள் இயக்கம் தனிப்பெரும் போராளி இயக்கமாக உருப்பெற்ற பிறகு கருணாநிதியும் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேச ஆரம்பித்தார். ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காகப் பேசினாலும் அவர் அதில் தீவிரம் காட்டவில்லை. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையை விடுதலைப் புலிகளை சம்மந்தப்படுத்தி மட்டுமே பார்த்தார். தமிழகத்துக்கான சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே புலிகள் அமைப்பை அவர் அணுகினார். இந்த நிலைப்பாடு ஈழத் தமிழர்களுக்கான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டையும் பாதித்தது. இந்நிலையில் தமிழீழத்துக்காகவும் தமிழின உரிமைகளுக்காகவும் அழுத்தமாகக் குரல் கொடுப்பவர் கருணாநிதியே என்ற நிலை உருவானது.

 

ஆனால் 2009க்குப் பிறகு கருணாநிதியின் இடத்தை ஜெயலலிதா பிடித்துக்கொண்டார். இறுதிப் போர் சமயத்தில் கருணாநிதி நடந்துகொண்ட விதம் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுக்குக் கசப்புணர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்ததை வைத்து ஈழப் பிரச்சினையில் கருணாநிதி தீவிரம் காட்டியிருக்க முடியும். ஆனால் மத்திய அரசில் தி.மு.க. அங்கம் வகிப்பதில் காட்டிய அக்கறையில் நூறில் ஒரு பங்கைக்கூட அவர் ஈழத் தமிழர் நலனில் காட்டவில்லை என்பதே அவர் மீதான பரவலான குற்றச்சாட்டு.

 

இலங்கையில் நடந்த இறுதிப் போர் சமயத்தில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசு அதை கண்டிக்கவில்லை. அப்போது தி.மு.க.வும் மத்திய அரசில் அங்கம் வகித்தது. ஆனால் 2ஜி அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாகக் கருணாநிதியால் வலுவான நெருக்கடி தர முடியவில்லை. அந்தச் சமயத்தில் தி.மு.க. மனிதச் சங்கிலிப் போராட்டம், கடையடைப்புகள் ஆகியவற்றை மேற்கொண்டது. 'ஆளுங்கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது' என்று உயர் நீதிமன்றம் கடுமையாகச் சொன்னபோதும் இந்தக் கடையடைப்புகள் நடந்தன. ஆனால் தி.மு.க. நடத்திய இந்தப் போராட்டங்களைப் பெரும்பாலான தமிழர்கள் வெறும் நாடகம் என்றுதான் நம்பினார்கள். இலங்கை பிரச்சினையால் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கனிமொழி, தயாநிதி மாறன் உட்பட அனைத்து தி.மு.க. எம்.பி.க்களும் ஜனாதிபதியிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பதற்குப் பதில் கருணாநிதியிடம் அளித்தார்கள். காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதியைச் சுட்டிக்காட்டி ராஜினாமா முடிவை கருணாநிதி மாற்றிக்கொண்டார். இலங்கை ராணுவ வெறியாட்டத்துக்கு இந்திய அரசும் மறைமுகமாக உதவிகள் செய்தது என்ற குற்றச்சாட்டை ஈழ ஆதரவாளர்கள் சுமத்தியபோது மத்திய அரசு அதை மறுக்கவில்லை. 'இலங்கைக்கு நாம் உதவி செய்யாவிட்டால் சீனா இலங்கையில் கால் ஊன்றிவிடும்' என்று மத்திய அரசின் பிரதிநிதிகள் கூறினார்கள். கருணாநிதி வாய் திறக்கவில்லை. மத்திய அரசில் இருந்து வெளியே வரவில்லை.

 

இந்த இடத்தில்தான் ஜெயலலிதா கால் ஊன்றினார். இலங்கை பிரச்சினையில் தனக்கு அதுவரை இருந்த நிலைப்பாட்டினைத் தாண்டி வெளியே வந்தார். அதுவரை ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதா அதிக கவனம் செலுத்தியதில்லை. ஆனால் அண்மைக்காலமாக ஜெயலலிதா ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவருகிறார். தி.மு.க. மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் இலங்கை பிரச்சினையும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. அ.தி.மு.க. வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே ஈழப் பிரச்சினை குறித்து ஜெயலலிதா பேசி வந்தாலும் முதல்வராக பதவியேற்றவுடன் இன்னும் வேகம் காட்டி வருகிறார். முக்கியமாக ராஜபக்சேயை ஹிட்லர் என்று வர்ணிக்கிறார். இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறார். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் தீவிரமான வாசகங்கள் கொண்டதாக இருந்தது ஜெயலலிதாவின் உறுதியைப் பறைசாற்றுவதாக இருந்தது. ஜெனீவா மாநாட்டை ஒட்டிய நிகழ்வுகளின்போது இலங்கை மீதான அமெரிக்காவின் தீர்மானத்தைத் தாண்டி யோசிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் போராடினார்கள். ஜெயலலிதா இதை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்றாலும் போராட்டத்தை ஒடுக்கவும் இல்லை.

 

சட்டசபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவந்தபோது இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை ஜெயலலிதா பாராட்டினார். தியாகம் செய்பவர்கள் என்றும், சுயநலத்துக்காகவோ, குறுகிய அரசியல் லாபத்துக்காகவோ அவர்கள் போராடவில்லை என்றும் புகழாரம் சூட்டினார்.

 

ஆட்சியை இழந்த பிறகு கருணாநிதியும் தனது ஈழ ஆதரவு நிலையை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 1980களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக டெசோ என்ற அமைப்பை கருணாநிதி ஏற்படுத்தினார். 2012இல் ஈழத் தமிழர்கள் இலங்கையில் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்த நிலையில் டெசோ இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்க கருணாநிதி முயற்சி செய்தார். இரண்டாவது டெசோ மாநாடு விழுப்புரத்தில் நடக்கும் என்ற அறிவிப்பும் வந்தது. ஆனால் தி.மு.க.வின் நிலையை மாற்றிக்கொள்ளுமாறு காங்கிரஸ் தூது அனுப்பியது. அதனால் டெசோ மாநாடு அரங்க கூட்டமாக சுருக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அ.தி.மு.க. அரசு அதை தடை செய்ய முயற்சித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் தடையை விலக்கியதால் கூட்டம் நடந்தது. டெசோ கூட்டத்தின் தீர்மானங்களை ஐ.நா. பிரதிநிதிகளிடம் அளித்தார்கள். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அரசில் தி.மு.க. தொடர்ந்து அங்கம் வகித்ததால் இந்த செயல்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், மார்ச் 21ஆம் தேதி நடந்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்றும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் இருந்தார்கள். உண்மையில் இந்தத் தீர்மானத்தை இந்தியாவே முன்மொழிய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். மேலும் தமிழக அரசியல் கட்சிகளும், பல்வேறு இயக்கங்களும் மத்திய அரசை வலியுறுத்தின. ஆனால் இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. 'மற்ற நாடுகள் விஷயத்தில் இந்தியா தலையிடாது' என்று கூறிய மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து முடிவு செய்வோம் என்று அறிவித்தார். இந்த அறிவிப்புக்குத் தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசிலிருந்தும், காங்கிரஸ் கூட்டணியில் இருந்தும் தி.மு.க. வெளியேறியது. மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்துவந்த தி.மு.க. அமைச்சர்கள் ஆறு பேரும் ராஜினாமா செய்தார்கள்.

 

இதுபற்றி கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், 'அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுக்கும் என்ற முடிவு, கருணாநிதியிடம் தெரிவிக்கப்பட்டது. அவரும் ஒப்புக்கொண்டார். ஒரு நாளுக்குள் வேறு ஏதோ நடந்திருக்கிறது' என்று கருத்து தெரிவித்தார். இந்நிலையில் ஐ.நா. சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்துகொண்டு, சில திருத்தங்களுடன் வாக்களித்தது. இதன் மூலம் தீர்மானமே நீர்த்துப்போய்விட்டதாக ஈழ ஆதரவாளர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

 

தி.மு.க. மத்திய அரசில் இருந்து வெளியே வந்துவிட்டாலும் அந்த கூட்டணி குறித்த சந்தேகங்கள் இன்னும் தீரவில்லை. கருணாநிதியின் மகனும் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி, இந்த முடிவில் இருந்து தி.மு.க. பின்வாங்கும் என்று கடைசி நிமிடம் வரை காத்திருந்ததாகவும், ராஜினாமா செய்த பிறகும் பிரதமர், சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து தனது ஆதரவை உறுதி செய்ததாகவும் வதந்திகள் உலவுகின்றன. மேலும் 'மத்திய அரசில் இருந்து தி.மு.க. வெளியேறிவிட்டாலும் அதைக் கவிழ்க்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்காது' என்று தி.மு.க. கூறியுள்ளது. ஆதரவை விலக்கிக்கொண்டதற்கு ஓரிரு நாட்களுக்குப் பிறகு, 'மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலகிவிட்டதால் ஈழப் பிரச்சினை தீர்ந்துவிட்டதா?' என்று கருணாநிதி கேட்டார். இதுபோன்ற பேச்சுகள் தி.மு.க.வின் நிலைப்பாட்டின் மீது ஐயம் எழுப்புகின்றன.

 

இறுதிப் போர் சமயத்தில் மத்திய அரசில் இருந்து வெளியேறாமல் இருந்த தி.மு.க. தமிழகத்தில் ஈழ ஆதரவு இயக்கங்களின் பலம் அதிகரித்து வந்துள்ளதால் தாமதமாக இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டே நெருக்கடிகளைத் தந்திருக்க முடியும். 'ராஜதந்திரி' என்று வர்ணிக்கப்படும் கருணாநிதி, 70 ஆண்டுகளுக்கு மேலான தனது அரசியல் வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களின் மூலம் இலங்கையில் தமிழர்களுக்குத் தேவையான நலவாழ்வுப் பணிகளை துரிதப்படுத்தியிருக்க முடியும். செய்யவில்லை. இந்நிலையில் அதிகாரத்தையும் இழந்து நற்பெயரையும் பெற முடியாமல் 'மத்தளத்துக்கு இரண்டு பக்கம் அடி' என்ற நிலையில் தி.மு.க. சிக்கியிருக்கிறது.

 

ஈழத் தமிழர்கள்மீது தி.மு.க.வுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் ஈழ பிரச்சினையில் தனது வேகத்தை அதிகரிக்க வேண்டும். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான நடைமுறை சாத்தியம் கொண்ட செயல்திட்டத்தை டெசோ மூலம் உருவாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ள நிலையை மேம்படுத்துவதற்கான போராட்டங்களைத் தொடங்க வேண்டும். ஈழத் தமிழர்கள் சம்மந்தமான அனைத்து விதமான போராட்டங்களையும் முன்னெடுத்து மத்திய அரசுக்குத் தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும். இனியும் மந்தமாக இருந்தால் 'மத்திய அரசில் இருந்து வெளியேறுவதற்கு ஈழ பிரச்சினை காரணம் அல்ல' என்ற பிரச்சாரம் வலுப்பெறும்.

 

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் 'இனியும் இலங்கையை இந்தியா நட்பு நாடாக வைத்திருக்கக் கூடாது, இலங்கையின் மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' போன்ற தீர்மானங்களை ஜெயலலிதா ஒருமனதாக நிறைவேற்றினார். 'இலங்கைப் பிரச்சினையில் ஜெயலலிதாவை நம்பக் கூடாது' என்று சிலர் சொல்வதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஈழ பிரச்சினை குறித்து அவர் வலுவாகப் பேசிவருகிறார். அதன் மூலம் ஈழ ஆதரவாளர்களிடையும், தமிழக மக்களிடமும் தனது ஆதரவு தளத்தைப் பெருக்கிக்கொண்டுவருகிறார்.

 

 

தமிழக அரசியலைப் பொறுத்தவரை இனிவரும் காலங்களில் தவிர்க்க முடியாத அங்கமாக ஈழ அரசியல் இருக்கும். அதில் மையமான இடத்தைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் 'தமிழினத் தலைவர்' என்று அடையாளப்படுத்தப்பட்டுவரும் கருணாநிதியை விட ஜெயலலிதா முன்னணி வகிக்கிறார்.

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=11&contentid=369fd726-48d5-4cb8-aa2d-a53b2860956f

சந்திர. பிரவீண்குமார் எழுதியதில் தவறு இல்லை ஆனால் த்ழ்மிழினத்திற்கு இது ஆரோக்கியமான போட்டியே. 

 

 தமிழக அரசியலைப் பொறுத்தவரை இனிவரும் காலங்களில் தவிர்க்க முடியாத அங்கமாக ஈழ அரசியல் இருக்கும். அதில் மையமான இடத்தைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் 'தமிழினத் தலைவர்' என்று அடையாளப்படுத்தப்பட்டுவரும் கருணாநிதியை விட ஜெயலலிதா முன்னணி வகிக்கிறார்.

 

 

 

இவரின் மற்றைய பதிவுகளை காண: http://chandrapraveenkumar.wordpress.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.