Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தப்பிச்செல்லும் அகதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Evening-Tamil-News-Paper_1538813115.jpgrefugees-in-vanni1.jpg

தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆபத்தான பணிகளில் ஈழ அகதிகள் இறங்கியிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 120 ஈழ அகதிகள் நடுக்கடலில் தத்தளித்தநிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 78 பேர் ஆண்கள், 20 பெண்கள், 22 குழந்தைகள். தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த இவர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர். கடந்த ஆண்டும் இதே போல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டபொழுது தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஏன் தமது உயிரைப் பணயம் வைத்து இந்த அபாயப் பயணத்துக்குத் தயாராகிறார்கள்?

1983 முதல் இன்றுவரை ஈழ மக்கள் தங்கள் தாய் நிலத்தைவிட்டு உலகப் பரப்பெங்கும் இடம்பெயர்ந்து அகதிகளாகிக் கொண்டே இருக்கிறார்கள். இன்று ஈழத் தமிழர்கள் இல்லாத உலக நாடுகள் என்று எதுவுமில்லை. இப்படி  அகதிகளாக வசிக்கும் மக்களில் பலரும் ஆபத்தான கடல் பயணங்களை மேற்கொண்டு சென்றவர்கள்தாம். படகுகள் கவிழ்ந்து மூழ்கி இறந்தவர்களும் அநேகம்.

எமது தொப்பிள் கொடி உறவு என்னும் நெருக்கத்துடன் தமிழகத்தை நோக்கி படகுகளில் ஏறிய ஈழ அகதிகள் இப்பொழுது கள்ளத் தோணிகளில் ஏறி தமிழகத்தைவிட்டுத் தப்பிச்செல்ல முனைகின்றனர். இத்தனைக்கும் தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெறுகின்றன. பல அரசியல் தலைவர்கள் ஈழத்துக்காகக் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்தில்கூட தனி ஈழத்துக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈழத் தமிழ் அகதிகள் ஏன் தமிழகத்தைவிட்டு இடம்பெயர்ந்து செல்லவேண்டும்? காரணம், உலக நாடுகளில் அகதிகளுக்கிருக்கும் உரிமைகூட தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு இல்லை. தொப்புள் கொடி உறவு என்பதற்காகவெல்லாம் அல்ல, இந்தியாவில் உள்ள திபெத்திய, ஆப்கன் அகதிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளைக்கூட ஈழத் தமிழர்களுக்கு வழங்க தமிழ்நாடு தயாராக இல்லை.

தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களைவிட்டு வெளியில் செல்ல ஒருவருக்கும் அனுமதியில்லை. வெளியில் வேலை எதுவும் செய்ய இயலாது. ஆனால் உலக நாடுகளில் எங்கு சென்றாலும் விசாரணையின் பின்னர் அந்தந்த நாடுகளில் வேலை செய்ய அகதிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். லண்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து என்று பல நாடுகளில் ஈழத் தமிழ் மக்கள் குடியுரிமை பெற்று வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் ஈழத் தமிழர்கள் யாரும் குடியுரிமை கோருவதில்லை. அகதி உரிமையே கேட்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 133 அரசு முகாங்களில் சுமார் ஒரு லட்சம் ஈழ அகதிகள் வசிக்கின்றனர். இதைத் தவிர பல்லாயிரக்கணக்கானவர்கள் முகாம்களுக்கு வெளியில் அகதிகளாகப் பதிவு செய்து வசிக்கிறார்கள். குடும்பத் தலைவருக்கு மாதம் 1000 ரூபாயும் ஏனையவர்களுக்கு 400 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படுகிறது. ஈமச் சடங்குகளுக்கு 450 ரூபாய்.

வெளியில் செல்ல இரண்டு பேர் பிணை வைக்கவேண்டும். சிமிட்டிப் பைகளால் தடுக்கப்பட்ட 8 சதுரடி அளவிலான அறைகள்தான் இந்த அகதிகளின் இருப்பிடங்கள். இருபது முதல் இருபத்தைந்து வருடங்களாக இந்த எட்டடிக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். முகாமைவிட்டு வெளியில்செல்வதாக இருந்தால் தாசில்தாரிடம் அனுமதி எடுக்கவேண்டும். இப்படி தினமும் அனுமதியோடுதான் அகதிகள் போய் வருகிறார்கள்.

‘கடலில் ஆஸ்திரேலியா போவது எத்தகைய ஆபத்தான பயணம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இங்கிருந்து இனியும் வாழமுடியாது என்கிற பொழுது செத்தாலும் பரவாயில்லை என்றே கடலில் இறங்கினோம்’ என்று  இந்த அகதிகள் குறிப்பிடுகின்றனர். பிள்ளை பிரசவிக்கும் நிலையில் இருந்த ஒரு தாயாரும் இதில் அடக்கம்.

தமிழகத்தின் பல்வேறு முகாங்களைச் சேர்ந்த அகதிகள் ஆளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் விகிதம் படகோட்டிக்குக் கொடுத்து இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். வருமானம் எதுவும் இல்லாத நிலையில் தமது கடுமையான முயற்சியினால் இந்தப் பணத்தைத் திரட்டியதாக அவர்கள் சொல்கிறார்கள்.

ஈழ அகதி முகாம்களில் வசிக்கும் பிள்ளைகள் தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் படிக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில்  அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்புக்களும் வழங்கப்படுவதில்லை. இதனால் வளர்ந்த பிள்ளைகளின் நிகழ்காலமும் குழந்தைகளின் எதிர்காலமும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது, அமைதியைக் கொண்டு வந்துவிட்டோம், நல்லிணக்கமும் உருவாகி வருகிறது என்கிறது இலங்கை அரசு. ஈழத்திலிருந்து உலகம் எங்கும் புலம் பெயர்ந்து சென்ற ஈழ அகதிகளை நாட்டுக்கு வருமாறு  இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே பலமுறை அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், இலங்கையிலிருந்து எந்தக் காரணங்களுக்காக ஈழத்து மக்கள் இடம்பெயர்ந்துசென்றார்களோ அவை இன்னமும் தீர்க்கப்படாத நிலையில் இருப்பதால், மக்கள் ஈழத்துக்குத் திரும்பிவர முடியாத நிலையில் உள்ளனர்.

மாநில சுயாட்சி ஏற்பட்டால்தான் நாங்கள் நாடு திரும்பலாம் என்கிறார்கள் தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலம் ஏற்கெனவே சூறையாடப்பட்டு வரும் நிலையில், இன்னமும் அவர்கள் அஞ்சி வாழும் நிலையில், இப்பொழுதும் அங்கிருந்து இளைஞர்களும் யுவதிகளும் புலம் பெயர்ந்து செல்லும் நிலையில் எந்த நம்பிக்கையில் ஈழத் தமிழர்கள் அங்கே திரும்பிச் செல்வார்கள்?

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஈழ அகதிகள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் சென்னையை அண்டியுள்ள பல்வேறு அகதி முகாம்களிலிருந்து சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டனர். அங்கு வந்திருந்த குழந்தைகள் எல்லாம் ஈழப் படங்களைத் தங்கள் சட்டைகளில் வரைந்திருந்தனர். தனி ஈழம் எப்பொழுது மலரும் எப்பொழுது நாங்கள் எங்கள் மண்ணுக்குத் திரும்புவோம் என்று ஏக்கத்துடன் மேடையில் அகதிகள் பேசினார்கள். கடந்தகால நினைவுகளை, தாய் மண்ணில் அனுபவித்த தருணங்களை கவிதைகளாகவும் உரைகளாகவும் வாசித்தார்கள்.

ஈழத் தமிழர்கள்மீது எப்பொழுதும் அக்கறையோடு இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறது இந்திய அரசு. ஆனால் தமிழ்நாட்டில் திறந்த வெளி முகாம்களுக்குள் ஈழ  அகதிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். இந்த இன்னல்களில் இருந்து தப்ப எந்தவொரு அபாயத்தையும் எதிர்கொள்ள அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதைத்தான் ஆஸ்திரலியா கப்பல் பயணம் நமக்கு உணர்த்துகிறது.

 

 http://www.aazham.in/?p=3428

 

இவர்களை விரைவில் ஈழ மண்ணில் மீளக் குடியேற்ற வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.