Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. தொடர் ஆரம்பமும் ஈழத்தமிழர் தீக்குளிப்பும் – இரா.துரைரத்தினம் -

Featured Replies

சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நாளை 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜெனிவாவின் ஐ.நா. முன்றலின் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது.

உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகங்கள் மனித உரிமை பேரவையில் கூடும் வேளையில் ஜெனிவாவின் ஐ.நா.முன்றலில் கண்டிவெடியின் பாதிப்பை உலகிற்கு எடுத்தியம்பும் மூன்று கால் கதிரைக்கு அருகே உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், விடுதலைக்காக போராடும் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களும் ஜனநாயக போராட்டங்களையும் புகைப்பட கண்காட்சிகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்துவது வழமையாகும்.

வழமையான இந்த ஜனநாயக போராட்டத்திற்கு புறம்பாக ஐ.நா. முன்றலில் கடந்த வியாழன் அதிகாலை துன்பகரமான சம்பவம் ஒன்றும் நிகழ்ந்திருக்கிறது.  வியாழன் அதிகாலை 1.10மணியளவில் ஈழத்தமிழர் ஒருவர் தீக்குளித்து இறந்த செய்தி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சோக அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த இடத்தில் கடந்த சில தினங்களாக அரபு தேசத்து இளைஞர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இரவு பகலாக ஜெனிவா முன்றலின் ஒரு பக்கத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

அந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அரபு தேச இளைஞர் தான் நேரில் கண்டவற்றை பின்வருமாறு விளக்கினார்.

ஒரு மாநிறமான இளைஞன் இங்கே இரவு பனிரெண்டு மணியில் இருந்து சுற்றிக் கொண்டு இருந்தான். சரியாக அதிகாலை 1.10 மணி அளவில் ஒரு பிளாஸ்ரிக் சிறிய கொள்கலனில் இருந்து அடர்த்தியான ஜெல்லி போன்ற திரவத்தை எடுத்து தன் மீது பூசிக்கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் கொளுத்தி கொண்டான்!senthil3.jpg

கொழுந்து விட்டு சுவாலையாக எரியும் போது எந்த சலனமும் இன்றி சில கோஷங்களை மட்டும் சொல்லிவிட்டு ஒரே இடத்தில் அப்படியே ஆடாமல் அசையாமல் நின்று எரிந்து முடித்து கீழே விழுந்தான்.

ஐநாவை சுற்றி பாதுகாப்பு பணியில் இருக்கும் கமேண்டோக்கள் அவனை நெருங்கும் போது கீழே சாய்ந்து விட்டான். பின்னர் காவல் துறையினர் எங்களை விலக்கி விட்டு அவன் தன்னுடன் கொண்டு வந்திருந்த பையையும், காகிதங்களையும் எடுத்துகொண்டு எரிந்த அந்த நபரை அம்புலன்சில் ஏற்றி சென்று விட்டார்கள்.

எரிந்தவன் அருகே ராணுவ தளபதி உடையில் இருக்கும் தமிழர்களின் தலைவர் ஒருவர் படம் இருந்ததை மட்டுமே எங்களால் உறுதிப்படுத்த முடிந்தது என்று மயிர்க்கூச்செறியும் அந்த சம்பவத்தை விளக்கினார்.  தீக்குளித்தவரின் அருகில் விடுதலைப்புலிகளின் தலைவரின் படம் ஒன்று இருந்ததை வைத்து ஜெனிவா காவல்துறையினர் அவர் ஈழத்தமிழராக இருக்கலாம் என நம்பினர். ஆனால் காவல்துறையினருக்கு மற்றொரு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தீக்குளித்தவர் வைத்திருந்த கோவையில் திபெத்தில் தீக்குளித்து இறந்தவர்களின் படங்கள் செய்திகளும் இருந்ததால் அவர் திபெத்தியராக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர்.

ஆனால் அவர் ஈழத்தமிழர்தான் என வெள்ளிகாலையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சுவிட்சர்லாந்தின் வலைஸ் மாநில தலைநகரான சியோன் பகுதியில் வசித்து வந்த 34வயதுடைய இரத்தினசிங்கம் செந்தில்குமாரன் என அடையாளம் காணப்பட்டிருக்கிறது.  இவர் புங்குடுதீவை சேர்ந்தவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தீக்குளித்த இவரை காவல்துறையினர் மீட்டு லவுசான் மாநிலத்தில் உள்ள சூவ் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை 4.30மணியளவில் மரணமானார்.  எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமை ஜெனிவாவில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் கல்வி கற்றுக்கொண்டிருந்த முருகதாஸ் என்ற தமிழ் இளைஞர் ஜெனிவா ஐ.நா.முன்றலில் தீக்குளித்து இறந்தார்.  முள்ளிவாய்க்காலில் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் போரை நிறுத்தி அங்கிருக்கும் மக்களை காப்பாற்றுமாறு கோரி முருகதாஸ் தீக்குளித்து மரணமானார்.  இப்போது இரண்டாவது மரணமும் ஜெனிவா ஐ.நா. முன்றலில் நிகழ்ந்திருக்கிறது,

இப்போது தீக்குளித்து மரணமானவர் என்ன கோரிக்கைகளை முன்வைத்தார் என்று தெரியாவிட்டாலும் இவ்வாறான சம்பவங்களை சுவிட்சர்லாந்து அரசாங்கமோ அல்லது இங்குள்ள மனித உரிமை அமைப்புக்களோ ஊடகங்களோ ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே உணர முடிகிறது.

தங்கள் இனத்தின் துன்பத்தை வெளிப்படுத்தவதற்காக அவர் தன்னை தானே மாய்த்துக் கொண்டிருக்கிறார் என ஒரு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தாலும் இச்சம்பவத்தை தங்களுடைய நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதிக்கும் செயல் என காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்த கருத்து புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்திருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய அமைப்பு என்றும் அதனை நவநீதம்பிள்ளை பயங்கரவாத அமைப்பு என கூறிவிட்டார் என ஒரு சாரார் கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.

இதன் விளைவாக நவநீதம்பிள்ளையின் கூற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகின்ற போதிலும் என்ன காரணத்திற்காக தீக்குளித்தார் என்பதை விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் வெளியிடவில்லை,

தீக்குளித்தவர் என்ன கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்பதை காவல்துறையினர் கண்டெடுத்திருக்கும் கோவையில் இருந்திருக்கலாம். ஆனால் காவல்துறையினர் அதனை வெளியிட மாட்டார்கள் என்றே கருதப்படுகிறது.

அதனை வெளியிடுவது மேலும் இவ்வாறான சம்பவங்கள் நடக்க ஊக்கமளிப்பதாக போய்விடும் என காவல்துறையினர் நம்புவதால் தீக்குளிப்பின் பின்னணிகள் வெளி உலகிற்கு தெரியாமலே போகலாம்.

ஈழத்தமிழர்கள் மத்தியில் தீக்குளிப்பு போராட்டம் என்பது இல்லாத ஒன்றாகும். தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியான அகிம்சை போராட்டங்களை கடந்த 60 வருட காலத்தில் நடத்தி வந்திருக்கிறார்கள். உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி உயிர்த்தியாகங்களை கூட செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஒருவர் கூட தீக்குளித்து இறந்ததில்லை, ஆனால் தமிழ்நாட்டில் தீக்குளிப்புக்கள் சாதாரணமானவை, திபெத்திலும் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் திபெத்திலும் இடம்பெற்று வரும் தீக்குளிப்பு மனோநிலை ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்களிடம் பரவி வருகிறதோ என்ற அச்சம் இப்போது எழுந்திருக்கிறது. இது ஈழத்தமிழர்களின் போராட்ட வழிமுறையும் அல்ல.

பொதுவாகவே வளர்ச்சியடைந்த மனித உரிமை விடயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இதனை அவர்கள் விரும்பதகாத வெறுக்கத்தக்க செயலாகவே கருதுகிறார்கள். அதற்கு மேலாக தங்கள் நாட்டில் நடைபெறும் வன்முறை கலாசாரமாகவே இங்குள்ள ஊடகங்களும் பார்க்கின்றன.

எனினும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இது சோக உணர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை.

நாளை மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐ.நா. முன்றலில் நீதி கோரி ஈழத்தமிழர்கள் உட்பட விடுதலைக்காக போராடும் இனங்களின் உரிமை குரல்கள் ஒலிக்க தொடங்கியிருக்கின்றன.

நாளை கூட்டத்தொடரை ஆரம்பித்து உரையாற்றும் மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கையின் நிலமை தொடர்பாக வாய்மொழிமூல அறிக்கை ஒன்றை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

( ஞாயிறு சுடர்ஒளியில் 08.09.2013 அன்று பிரசுரமான கட்டுரை )

http://www.thinakkathir.com/?p=52225#sthash.HXoXBdWK.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.