Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மைகளை வாய்திறந்து சொல்லுவதற்கு தமிழர்களுக்கு முதலில் பாதுகாப்பு வேண்டும்

Featured Replies

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறீலங்காவுக்கான விஜயம் நிறை வடைந்திருக்கின்றது. போர் நிறைவடைந்த பின்னரும் நித்தம் கண்ணீருடன் அம்மையாரின் வருகையினையும், வார்த்தைகளையும் எதிர்பார்த்து காத்திருந்த தமிழர்களின் முகங்கள் மிதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஜயத்தின் நிறைவில் அம்மையார் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்.

mullivaikkal_27813_5.JPG

குறித்த சந்திப்பும், அங்கே பேசப்பட்ட வார்த்தைகளும் எங்கள் கன்னங்களில் காய்ந்திருந்த கண்ணீர் தடங்களை அழிக்க தவறியிருக்கின்றன என்பதே யதார்த்தம். ‘வடக்கு, கிழக்கு மாகாணங்களில் என்னைச் சந்தித்த மக்கள் காவல்துறையினர் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலரால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இது ஆரோக்கியமானதல்ல’ என அம்மையார் அந்த செய்தியாளர் சந்திப்பல் ஒரு கட்டத்தில் கூறியிருக்கின்றார். அதே சந்திப்பில் ‘இலங்கையில் காணாமல்போன தமிழ், சிங்கள, முஸ்லிம் இனம்சார்ந்த அனைவர் தொடர்பாகவும் ஆராய்வதற்கு ஜ.நாவின் குழு ஒன்றை அனுப்பவேண்டும்’ என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். அவை நியாயமான கருத்துக்களாக இருப்பினும் எங்களிடம் கேள்விகள் நிறைய இருக்கின்றன.

அம்மையார் கிளிநொச்சி, முல்லைத்தீவு, சம்பூர் போன்ற பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்திருந்தார். அவர் சந்தித்த நேரம் மிக மிகக் குறுகியது. அதற்கே அந்த மக்களுக்கு நேர்ந்த அச்சுறுத்தல்களும், துன்புறுத்தல்களும் வார்த்தைகளால் வரையறுத்துச் சொல்ல முடியாதவை. அதனை அம்மையாரும் அறிந்திருக்கிறார், வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். எனவே ஒரு ஆவணப்படுத்தலுக்காக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக ஒரு சுயாதீன விசாரணைக் குழு சிறீலங்காவுக்கு வருமாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாய்திறந்து பேச முடியுமா? ‘என்னை சந்தித்த மக்கள் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றார்கள்’ என கூறிய அம்மையார் இந்த நாட்டில் தமிழர்கள் தமக்கு நேர்ந்த அநீதிகளை வாய்திறந்து கூற முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்தாரா எமக்கு தெரியவில்லை? எமக்கு நேர்ந்த அநீதிகளை, தமிழர்களாக அல்ல மனிதர்களாக எங்கள் உரிமைகள் மீறப்பட்டதை அறிந்து கொள்ளவேண்டுமானால் எமக்கு முதலில் பாதுகாப்பு தேவை.

போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான விடயம் ஒரு பக்கம் இருக்க. போர் நிறைவடைந்த பின்னர் மக்கள் தாங்களே படையினரிடம் ஒப்படைத்த உறவுகள் எங்கே? போர் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் காணாமல் போனவர்களுக்கு நிகராக, படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்களது எண்ணிக்கை இருக்கின்றது. அதற்கு கண்கண்ட சாட்சிகள் பல இருக்கின்றன. அனைத்து சாட்சிகளும் ஒரே விடயத்தை மீள மீள கூறிக்கொண்டிருக்கின்றன.

அதாவது ‘போர் நிறைவடைந்த பின்னர் நாங்கள் எங்கள் உறவினர்களுடன் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் வருங்கள் என அழைத்தார்கள். எங்கள் கைகளால் எங்கள் கண்முன்னே பிள்ளைகளை, கணவன்மாரை, அப்பாவை ஒப்படைத்தோம்’ இதுவே அந்த சாட்சிகள்.

ஒரு இறைமையுள்ள ஜனநாயக நாடு என மார்தட்டிக் கொள்ளும் சிறீலங்கா அரசாங்கமும், அதன் படையினரும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் காணாமல்போனவர்கள் தொடர்பில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் சொல்வதற்கு சிறீலங்காவிற்குள்ள கடப்பாட்டை நவநீதம்பிள்ளை அம்மையார் ஏன் வலியுறுத்தவில்லை என்பது தமிழர்களுக்குத் தெரியவில்லை.

மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் தற்போது அமைத்துள்ள ஆணைக்குழு தொடர்பில் கேட்டறிந்த அம்மையார், ஏற்கனவே அமைக்கப்பட்ட 5 ஆணைக் குழுக்களைப்போன்று இதுவும் இருக்ககூடாது என்று குறிப்பிட்டிருக்கின்றார். எனவே ஏற்கனவே 5 ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டதும், அவையும், அவற்றின் இறுதி அறிக்கைகளும் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதும் அம்மையாருக்கு தெரியாததில்லை.

ஆக 5 ஆணைக்குழுக்கள் பயனற்றுப்போன நிலையில் 6வதாக அம்மையாரின் வருகையினையும், செம்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடரினையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு சிறீலங்கா அரசாங்கம் அமைத்திருக்கும் இந்த ஆணைக்குழு தமிழர்களுக்கு தீர்வினைக் கொடுக்கும் வகையிலான ஒரு பரிந்துரையினைச் செய்யும் என நாங்கள் நம்புவதாக இருந்தால் நாங்கள் மனநலம் குன்றியவர்களாக இருக்கவேண்டும்.

இந்நிலையில் ஜ.நா மனிதவுரிமைகள் ஆணையாளர் எப்படி ஏற்றுக்கொண்டார் என்பதும் எமக்கு தெரியவில்லை. சிறீலங்கா அரசாங்கம் ஜ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு மாற்றாக உள்ளக ரீதியாக சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு அமைத்து அந்த ஆணைக்குழு இறுதி அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பித்திருந்தது. அந்த அறிக்கையினை நடைமுறைப்படுத்தவேண்டும் என சிறீலங்கா அரசாங்கத்தை ஜ.நாவும் கேட்டிருந்தது. அதற்காக ஜ.நா கால அவகாசமும் கொடுத்திருந்தது. கால அவகாசம் நிறைவடைந்துவிட்டது. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டனவா? அதனை ஜ.நா அறியவில்லையா? இந்நிலையில் எப்படி 6வது ஆணைக்குழுவை தமிழர்கள் நம்புவது? முள்ளிவாய்க்கால் மண்ணில் காணாமல்போனவர்களது உறவினர்களின் கண்ணீரைக் கண்டு உள்ளம் நடுங்கி கண்கலங்கிய அம்மையார் அத்தனையினையும் தெற்கில் மறந்த மாயம் என்ன?

மிக மேதாவித்தனமாக எதனையும் விமர்சிக்க நாம் நினைக்கவில்லை. சிறீலங்கா அரசும் அதன் படைகளும் உயிர்ப்பலியெடுத்தது எங்கள் உறவுகளை, காணாமல்போனவர்கள், காணாமல்போய் கொன்று புதைக்கப்பட்டவர்களும், வீதிகளில் வீசப்பட்டவர்களும் எங்கள் உறவுகள். எமக்கு வலி தெரியும். உடல் வியர்க்க உழைத்தவன் மட்டுமே காற்றுவாங்க தகுதி பெறுகிறான். நாங்கள் இரத்தம் சிந்தியிருக்கிறோம், உயிர்ப்பலி கொடுத்திருக்கிறோம், அவலம் சுமந்திருக்கிறோம். அத்தனைக்கும் எமக்கே நியாயம் வேண்டும். நாங்கள் கேட்கத் தகுதி பெற்றவர்கள். எனவே நவநீதம்பிள்ளை அம்மையார் சர்வதேச விசாரணை ஒன்றை கோரியமையினை தமிழர்கள் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் வடகிழக்கு தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும். அதற்காக வடகிழக்கில் ஜ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்காணிப்பில் ஒரு இடைக்கால நிர்வாகசபை ஏற்படுத்தப்படவேண்டும். அதன் மூலம் தமிழர்களுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்படவேண்டும். அதன் பின்னர் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்கு நேர்ந்த அத்தனை அநீதிகள் தொடர்பிலும் சுயாதீன விசாரணையன்று நடத்தப்படவேண்டும். அவ்வாறான விசாரணைகள் மட்டுமே தமிழர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுக்கும். அவ்வாறு விசாரணை நடத்தப்பட்டால் விசாரணையின் இறுதி அறிக்கை மிகத் தெளிவாக கூறும்.

கடந்த 60 வருடங்கள் சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு இழைத்த அநீதிகளை, அதனடிப்படையில் தமிழர்கள் தொடர்ந்தும் சிங்கள பேரினவாதிகளுடன் வாழ்வதா அல்லது பிரிந்து செல்வதா என்ற தீர்மானத்தினையும் தெளிவாக எடுக்க முடியும். தமிழர்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகளின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்கப்போவதில்லை. காலம், சூழல் மாறும்போது ஆணைக்குழுக்களும், அவற்றின் அறிக்கைளும் பிடுங்கி வீசப்படும். இது தமிழர்களின் அனுபவப் பகிர்வு.

-தாயகத்தில் இருந்து சுதந்திரன்

நன்றி: ஈழமுரசு

http://www.sankathi24.com/news/32985/64//d,fullart.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.