Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எப்போதும் போல வேடிக்கை பாருங்கள் மிஸ்டர் ரஜினி! - பாரதி தம்பி

Featured Replies

அன்புள்ள ரஜினிகாந்த்,

ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்த தமிழ் ரசிகன் எழுதுகிறேன். நலமா?

 

இலங்கை அரசை கண்டித்து ஏப்ரல் 2-ம் தேதி உங்கள் திரைத்துறையை சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக செய்திகள் படித்தேன். அதில் நீங்களும், கமல்ஹாசனும் கலந்துகொள்வீர்கள் என்ற 'சிறப்பு செய்தி'யையும் படித்தேன். நல்லது. நீங்கள் வர வேண்டும் எனவே விரும்புகிறேன். இப்போது மட்டுமல்ல... எப்போதுமே நீங்கள் இத்தகைய போராட்டங்களில் முன் நிற்க வேண்டும் என்றும், நீங்களே முன்வந்து தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் ஆசைப்படுகிறேன். உங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு இதை செய்ய வேண்டிய பெரும் கடமை உங்களுக்கு இருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன?

 

ஈழம், கூடங்குளம், முல்லைப் பெரியாறு, மீனவர்கள் பிரச்னை... என எதற்கும் அசையாத உங்கள் மனசாட்சி, சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டு வெடிப்பில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதும் பதறித் துடிக்கிறது. அவரை விடுவிக்க வேண்டும் என அறிக்கை விடுத்தீர்கள். ஒரு நீதிமன்ற தீர்ப்பு எனவும் பாராமல் கருத்து சொன்ன உங்கள் தைரியத்தை பாராட்டவே ஆசை. ஆனால் ரஜினி... நீங்கள் கருத்து சொல்ல தேர்ந்தெடுக்கும் விஷயங்கள் உங்களைக் காட்டிக்கொடுத்துவிடுகின்றன.

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு வருட காலமாகவே பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக, கூடங்குளம் மற்றும் ஈழப் போராட்டங்கள். இவை தொடர்பான செய்திகளில் இருந்து யாரும் விலகியிருக்க வாய்ப்பே இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டு என ஒதுங்கியிருப்பவர்கள் கூட மனசாட்சி உறுத்தி வீதிக்கு வருகின்றனர். ஈழத்துக்காக நியாயம் கேட்டு லயோலா கல்லூரியில் சிறு பொறியாக துவங்கிய மாணவர் போராட்டங்கள், இன்று மாநிலம் தழுவிய பெருநெருப்பாகப் பற்றி எரிவது இத்தகைய வெகுமக்கள் ஆதரவினால்தான்.

இந்த மாணவர் போராட்டத்தில் பல்வேறு தரப்பினரும் பங்கெடுக்கிறார்கள். உங்கள் திரைத் துறையைச் சேர்ந்தவர்கள்கூட அண்மையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். அதில் உங்களைக் காணவில்லை. எனக்குத் தெரிந்து உங்களுக்கு இப்போது எந்தப் படத்தின் படப்பிடிப்பும் இல்லை. இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்துகொடுத்துவிட்டீர்கள். புதிதாக அடைய வேண்டிய புகழோ, பொருளோ எதுவும் இல்லை. உங்களை யாரும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவில்லை. நீங்கள் நினைத்தால் அந்த உண்ணாவிரதத்துக்கு வந்திருக்க முடியும். ஆனால் வரவில்லை. 

நீங்கள் மட்டுமில்லை... உங்கள் நண்பர் கமல்ஹாசனும் வரவில்லை. 'விஸ்வரூபம்' வியாபார பிரச்னையை தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்னையைப் போல மாற்றி நீதிகேட்ட கொந்தளித்த கலைஞானி, நாடு தழுவிய மாணவர் போராட்டங்களில் விஸ்வரூப அவதாரம் வேண்டாம்... வாமன அவதாரம் கூட எடுக்கவில்லை. 'போராட்டத்துக்கு வந்தே ஆக வேண்டும் ' என யாரையும் கட்டாயப்படுத்த முடியாதுதான். ஆனால் ரஜினி... சில நாட்களுக்கு முன்பு திரைப்பட துறைக்கு சேவை வரி விதிக்கப்பட்டபோது அதைக் கண்டித்து உங்கள் துறையைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர், இதே வள்ளுவர் கோட்டத்தில். அதில் அக்கறையுடன் கலந்துகொண்டு, 'வரி விதித்தால் கறுப்புப் பணம் அதிகமாகும்' என்று கருத்து சொன்னீர்கள். சில மாதங்களுக்கு முன்பு பெப்சி தொழிலாளர் பிரச்னையில் சினிமா உலமே முடங்கி கிடந்தபோது உங்களிடம் இருந்து ஒரு சத்தத்தையும் காணவில்லை. 'பணக்காரன்'களுக்காக துடிக்கும் உங்களின் மனசாட்சி, 'உழைப்பாளி'களுக்கு துடிக்காதது எதனால்? 

சிறு தயாரிப்பாளர்களை அப்புறப்படுத்துவிட்டு, சினிமாவை ஒரு கார்பொரேட் வர்த்தமாக மாற்ற மெனக்கெடும் உங்கள் நண்பர் கமல்ஹாசன், தொழிலாளர் தோழர்களுக்காக எப்போதேனும் குரல் கொடுத்தது உண்டா?  சினிமா முதலாளிகளின் வியாபாரம் பாதிக்கப்படும்போது ஓடிவரும் நீங்கள், தமிழனின் உணர்வு சார்ந்த பிரச்னைகளில் தொடர்ந்து மௌனமாக இருப்பது யதேச்சையானதா?  'துக்ளக்' பத்திரிகையின் ஆண்டு விழாவில் மகிழ்ச்சியுடன் கலந்துகொள்வீர்கள். ஆர்.எம்.வீரப்பன் நடத்தும் கம்பன் கழக சொற்பொழிவில் முன் வரிசையில் இருப்பீர்கள்.  தமிழர்களின் போராட்டம் என்றால், வீட்டை விட்டு வெளியே வர மாட்டீர்கள். எனில், நீங்கள் அதிபுத்திசாலி, நாங்கள் அடிமுட்டாளா ரஜினி?

நான் நினைத்துப் பார்க்கிறேன். கடந்த டிசம்பர் மாதம் உங்கள் பிறந்தநாளின் போது கருவறையை விட்டு இறங்கி வந்த கடவுளைப் போல திடீரென வீட்டைவிட்டு வெளியே வந்து ரசிகர்களையும், ஊடகங்களையும் சந்தித்தீர்கள். நாங்கள் மயங்கினோம். உங்களது 3டி படம் சிவாஜி வெளியாவதாகவும், ரசிகர்கள் அதைப் பார்க்க வேண்டும் எனவும் நீங்கள்  சொன்னபோதுதான் கடவுள் ’காரியமாகத்தான்’ வெளியே வந்திருக்கிறார் என்பது புரிந்தது.

உங்களை நாங்கள் அளவுக்கதிகமாக கொண்டாடிக்கொண்டிருக்கிறோமோ என்று அச்சமாக இருக்கிறது ரஜினி. எங்கள் ரசனையை மூலதனமாக்கி, எங்கள் உணர்ச்சிகளை உரமாகப் போட்டு, இரு தலைமுறை தமிழர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தின் பெரும்பகுதி உங்களிடம் பொன்னாக, பொருளாகச் சேர்ந்திருக்கிறது. ஆனால் நீங்கள் எங்கள் பிரச்னைகளில் பங்கெடுக்க மாட்டீர்கள். உங்கள் துறை சார்ந்தவர்கள் ஒன்று சேரும்போது கூட வர மாட்டீர்கள்.  'நாம் போகாமல் இருந்தால் விமர்சிப்பார்களே' என்ற தார்மீக அச்சம் கூட உங்களுக்கு இல்லை. 

நீங்கள் இருவரும் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் மட்டும்  எல்லாம் சரியாகிவிடப் போவதில்லை. உண்ணாவிரதத்துக்கு வராமல் இருந்தது நீங்கள் மட்டுமேவும் அல்ல. ஆனால் முன்னணி கதாநாயகர்களாக பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. உங்களுக்கு புகழையும், பொருளையும் அள்ளிக்கொடுத்த தமிழர்களின் குரலாக இதைக் கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. திருட்டு டி.வி.டி-களை சமூகத்தின் ஜீவாதாரப் பிரச்னையைப் போல பேசும் நீங்கள், சினிமாக்காரர்களுக்கு ஒன்று என்றால் தமிழ்நாடே பதறித் துடிக்க வேண்டும் என எதிர்பார்க்கும் நீங்கள்... தமிழர்களின் உயிர் போகும் பிரச்னைகளில் கூட காரியவாதமாக மௌனமாக ஒதுங்கியிருப்பீர்கள் என்றால் என்ன அர்த்தம்? 

ஏப்ரல் 2-ம் தேதி நடத்தப்போகும் உண்ணாவிரதம் உண்மையான உணர்வுடன்தான் நடக்கும் என நான் நம்பவில்லை. அது பெயருக்கு கணக்கு காட்டும் ஒன்றாகவே இருக்கும் என தீர்மானமாக கருதுகிறேன். உங்கள் திரைத்துறையினரின் கடந்த கால நடவடிக்கைகள் அப்படித்தான் எண்ண வைக்கின்றன. ஒருநாள் உண்ணாவிரதம் இருந்துவிட்டால் மட்டும் என்ன நடந்துவிடும்? ஒரு நாள் கால்ஷீட்டுக்கு உரிய சில லட்சங்களை விட்டுக்கொடுப்பது உங்களுக்கு வேண்டுமானால் தியாகமாக இருக்கலாம். தங்கள் எதிர்காலத்தையே அடகுவைத்து முழக்கமிடும் மாணவனின் உண்மையான போர்க்குணத்தின் முன்னால் உங்கள் போலி உணர்ச்சிகள் உதிர்ந்துவிடும். 

ஆனால் ரஜினி... இவை அனைத்தையும் மறந்துவிட்டு அடுத்தப் படம் வெளிவரும்போது அதே மயக்கும் புன்னகையுடன் வருவீர்கள். 'கண்ணா..' என சிரிப்பீர்கள். 'கோச்சடையான் வருகிறது' என்று அறிவிப்பீர்கள். ஆனால் காலம் மாறிவிட்டது ரஜினி. நாங்கள் இன்னும் சிறு பிள்ளைகள் இல்லை. உங்கள் விரல் அசைவில் மயங்கி, கிறங்கும் காலத்தில் இருந்து நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம்.  போர்க்குணத்துடன் எழுந்து நிற்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் எங்களுக்கு அரசியல் என்றால் என்ன என்று உணர்த்துகிறார்கள். இவர்கள் உங்கள் சினிமா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களில் விசில் அடிக்கும் ரசிகர்கள் அல்ல. புதிய புரட்சியின் விதைநெல்கள்! 

திண்டுக்கல்லில் உண்ணாவிரதம் இருந்த‌ துப்புரவுத் தொழிலாளர்களும்... நாமக்கல்லில் போராடும் ஆட்டோ ஓட்டுனர்களும்... இடிந்தகரையில் முழக்கமிடும் எங்கள் தமிழ்க் குழந்தைகளும்...  எங்களுக்கு உத்வேகத்துடன் வழிகாட்டுகிறார்கள்.  சூப்பர் ஸ்டார்களின், கலைஞானிகளின் உண்மை முகங்களையும் எங்கள் உணர்ச்சிகளை அறுவடை செய்பவர்களையும் அடையாளம் கண்டுகொள்ள இதுதான் பொருத்தமான தருணம். இது வரலாறு எங்களுக்கு வழங்கியிருக்கும் வாய்ப்பு. நிச்சயம் தவறவிடமாட்டோம். நீங்கள் எப்போதும் போல வேடிக்கை பாருங்கள் மிஸ்டர் ரஜினி!

 

பாரதி தம்பி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.