Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல்சன் மண்டெலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெல்சன் மண்டெலாவின் அரசியல் வாழ்வும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்களும்

முத்துக்குமார்

 

 

கறுப்பின மக்களின் மாபெரும் ஆளுமையாக விளங்கிய நெல்சன் மண்டெலா அமரராகிவிட்டார். பிறப்பவர் அனைவரும் இறப்பவர்களே என்பது உண்மையாயினும் நெல்சன் மண்டெலாவின் இறப்பு உலகெங்கும் வாழும் அடக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பே. அவர் அடக்கப்பட்ட மக்களுக்குரிய விடுதலையின் ஒரு சின்னமாக இருந்ததே இதற்கு காரணம்.

 

அடக்கப்பட்ட மக்கள் மீது அளவில்லாத பற்றுதல், தெளிவான இலக்கு, உறுதியான கொள்கைகள், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, இராஜதந்திரம், பதவியில் நாட்டமின்மை - இதெல்லாம் இணைந்து மண்டெலாவின் ஆளுமைக்கு மெருகூட்டியுள்ளன.

 

ஈழத் தமிழர்களாகிய நாம் நீண்ட வரலாற்று ரீதியான ஒடுக்கு முறைக்கு உட்பட்டவர்கள். பேரினவாத அரசினால் ஆயுத ரீதியாக தோற்கடிக்கப்பட்டவர்கள். மண்டெலாவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கும் பல விடயங்கள் உள்ளன.

 

அதிலும் முதலாவது தெளிவான இலக்காகும். மண்டெலா வெள்ளையின மேலாதிக்கத்திலிருந்து கறுப்பின மக்கள் விடுதலையடைவதன் மூலமே அபிலாசைகளை அடைந்து கொள்ளலாம் என்பதில் மிகவும் தெளிவாக இருந்தார். இந்த இலக்கில் எந்த ஒரு விட்டுக்கொடுப்பினையும் செய்வதற்கு அவர் தயாராக இருக்கவில்லை. அவர் சிறையிலிருந்தபோது ஒரு தடவை 'அரசியல் நடவடிக்கையைக் கைவிடுவதாக இருந்தால் விடுதலை செய்வோம்' என வெள்ளையின அரசாங்கம் கூறியபோது அதனை நிராகரித்திருந்தார். அவர் சிறைவாசம் அனுபவித்த ஆண்டுகளில் 18 ஆண்டுகள் தென்னாபிரிக்காவின் றொபன் தீவில் (ROBBEN ISLAND) தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டபோதும் சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் கல்லுடைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டபோதும் அவர் தனது இலக்கினின்றும் நிலைகுலையவில்லை.

 

இரண்டாவது, தனது கால சர்வதேச அரசியலை தனது இலக்கின் வெற்றிக்கு முழுமையாக பயன்படுத்தியமையாகும். இவர் அரசியல் வாழ்வு மேற்கொண்ட காலப்பகுதி பனிப்போர் உக்கிரமாக நடந்த காலப்பகுதி. இரண்டாம் உலக யுத்த முடிவுடன் எழுச்சியடைந்த வல்லரசுகளான அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்குமிடையே பனிப்போர் ஆரம்பித்துவிட்டது. 1949ம் ஆண்டில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பின் தோற்றமும், 1955 இல் சோவியத் யூனியன் தலைமையிலான வார்சோ அமைப்பின் தோற்றமும் பனிப்போரினை மேலும் ஊக்குவித்தன.

 

இந்தப் பனிப்போர் அடக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களிற்கும் சர்வதேச அரசியலில் இடத்தைக் கொடுத்தது. குறிப்பாக சோவியத் யூனியன் அடக்கப்பட்ட மக்களுக்கு சார்பான நிலையினை எடுத்தது. நெல்சன் மண்டெலா இந்த வாய்ப்பினை சரியாகவே பயன்படுத்தினார். சோவியத் யூனியனின் உதவியைப் பெற்று ஆயுதப்போராட்டத்தை நடாத்தினார்.

 

1990 இல் நெல்சன் மண்டெலா விடுதலையானபோது பனிப்போரும் முடிவிற்கு வந்தது. இரு மையங்களைக் கொண்ட சர்வதேச அரசியல், ஒற்றை அதிகாரமைய அரசியலாக மாறியது.

 

நெல்சன் மண்டெலா இந்தப் புதிய சர்வதேச சூழ்நிலைகளையும் கவனத்தில் கொண்டு மிகவலுவான இராஜதந்திரத்துடன் சர்வதேச அரசியலை அணுகினார். ஒற்றை மைய அதிகாரத்தைப்பெற்ற அமெரிக்கா இன்னோர் அதிகார மையம் போட்டியாக வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தது. இதன் காரணமாக தென் ஆபிரிக்க பிரச்சனையை தீர்ப்பதில் அதிக அக்கறை செலுத்தியது. மண்டெலா இச் சூழ்நிலையை சரியாக பற்றிக் கொண்டு நெகிழ்சியாக நடந்து கொண்டார். வெள்ளையினத் தலைவர் கிளார்க்குடன் சமாதான உடன்பாட்டிற்கு சென்றார். வெள்ளை இனத்தவர்களுடன் பகை முரண்பாட்டை பேணாமல் நட்பு உறவினைப் பேணினார்.

 

1994 இல் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியானார். போர்க்குற்ற விசாரணையில் வெள்ளையினத்தவர் தவறுகளை ஏற்றுக்கொண்டனர்.

 

இங்கு சர்வதேச அரசியலை பயன்படுத்தும்போது சர்வதேச ஆதிக்க சக்திகளின் எடுபிடியாக அல்லது பொம்மையாக மண்டெலா ஒருபோதும் இருந்ததில்லை. எந்தக் கட்டத்திலும் கறுப்பின மக்களின் சுயமரியாதையை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. கறுப்பின மக்களின் சுயாதீன நிலையைப் பேணிக்கொண்டே சர்வதேச ஆதிக்கசக்திகளுடன் உறவுகளைப் பேணினார். சர்வதேச ஆதிக்க சக்திகளுக்கும் மண்டெலாவிற்கும் இடையிலான உறவு பரஸ்பர மதிப்புக்கொடுக்கும் நட்புறவாக இருந்த ஒழிய எஜமான் அடிமை உறவாக இருக்கவில்லை.

 

மூன்றாவது, பதவி ஆசை பிடித்த ஒருவராக இருக்காமையாகும். ஜனாதிபதி பதவியேற்ற மண்டெலா ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக பதவிவகித்தார். அதன் பின்னர் ஏனையவர்கள் பதவி வகிக்கட்டும் என ஒதுங்கியிருந்தார். அடுத்த தலைமுறை பொறுப்புக்கள் ஏற்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பதவியிலிருந்து விலகியபின்னர் வெளியிலிருந்து வழிகாட்டும் கௌரவ தலைவராகவே அவர் விளங்கினார். சக்கர நாற்காலி வாழ்வில்கூட பதவியைத் துறக்காத நம்மவர் பலர் இருக்கையில் இது ஆச்சரியமானதே.

 

நான்காவது, உள்நாட்டு மட்டத்தில் வலுவான ஐக்கியத்தை பேணியமையாகும். இன ஒடுக்குமுறை என்பது அந்த இனம் வெளியிலிருந்து சந்திக்கும் ஒடுக்கு முறையே. அதற்கு முகம் கொடுப்பதற்கு அவ் இனம் சார்ந்த முழுமக்களையும் ஐக்கியப்படுத்தி ஓரணியில் கொண்டுவருவது அவசியமாகும். பலமான ஐக்கிய முன்னணியே இதனை சாத்தியமாக்கும். மண்டெலா இதில் மிகவும் கவனமாக இருந்தார். சமாதான காலத்தில் பல்வேறு பழங்குடி குழுக்கள் மோதுகின்ற நிலை ஏற்பட்டபோது தனது ஆளுமை மிக்க தலைமைத்துவம் மூலம் அவற்றை தடுத்து நிறுத்தினார். ஒவ்வொரு குழுக்களினதும் அபிலாசைகளை கவனத்தில் எடுத்து அவற்றிற்கிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தினார். முரண்பாடுகள் சமாதான காலத்தில் தான் எப்போதும் மேலே வரப்பார்க்கும். தென்னாபிரிக்காவிலும் அது நிகழ்ந்தது. ஆனால் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டது.

 

ஐந்தாவது, தன்னை 27 வருட காலம் சிறையிலடைத்த வெள்ளை இனத்தவர்களை மன்னித்து சுதந்திர தென்னாபிரிக்க அரசில் அவர்களையும் பங்கேற்கச் செய்தமையாகும். வெறும் 13 வீதத்தினை மட்டும் கொண்ட வெள்ளை இனத்தவர்களை நாட்டை விட்டுக் கலைக்க அவர் முயலவில்லை. அவர்களது கொடூர மனிதாபிமானமற்ற வரலாற்று ரீதியான ஒடுக்கு முறைகளையும் மன்னிக்குமாறு மக்களை வேண்டினார். போர்க்குற்றங்களுக்கு பொறுப்புக்களை மட்டும் ஏற்கச் செய்தார். முன்னர் கூறியது போல தண்டனை பெற்றுக்கொடுக்க முயலவில்லை. காந்தீய சிந்தனைகளின் பாதிப்பு அவரது இத்தகைய அணுகுமுறைகளுக்கு காரணமாக இருந்திருக்கலாம்.

 

தற்போது பலராலும் எழுப்பப்படுகின்ற கேள்வி தென்னாபிரிக்கா அணுகுமுறை இலங்கை இனப்பிரச்சினைக்கு பொருத்தமானதா? இங்கு இக் கேள்வியைக் கேட்பவர்கள் மண்டெலா தனது அரசியல் இலக்கு மீது வைத்திருந்த பற்றுதல் பற்றியோ அல்லது சர்வதேச அரசியலை இராஜதந்திரத்துடன் பயன்படுத்தியமை பற்றியோ, அல்லது பதவிவெறிபிடித்து அலையாமை பற்றியோ அல்லது உள்நாட்டில் ஐக்கிய முன்னணியை அமைத்தமை பற்றியோ மையமாக வைத்து கேட்கவில்லை. அவையெல்லாம் தமிழ்த்தரப்பு முன்மாதிரியாக பின்பற்ற வேண்டியவைதான்.

 

மாறாக கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்குமிடையே ஏற்பட்ட நல்லிணக்க நடவடிக்கைகளினை மையமாக வைத்தே கேட்கின்றனர். தற்போதய தென்னாபிரிக்கா அரசாங்கம் கூட அந்த நடவடிக்கையை மேற்கொள்வதிலேயே அக்கறை செலுத்திவருகின்றது. ஆனால் அந்த அணுகுமுறை இலங்கையை பொறுத்தவரை எந்த வகையிலும் பொருத்தமானதாக அமையாது.

 

தென்னாபிரிக்காவில் ஒடுக்கப்பட்ட மக்கள் வெற்றியடைந்தார்கள். வெற்றியடைந்தவர்களே ஒடுக்கிய தரப்புடன் நல்லிணக்கத்திற்கு சென்றார்கள். இலங்கையில் ஒடுக்கியவர்கள் தான் வெற்றிபெற்றார்கள். அவர்கள் ஒரு போதும் ஒடுக்கப்பட்டவர்களின் அபிலாசைகளை ஏற்று நல்லிணக்கத்திற்கு வரப்போவதில்லை. போருக்குப் பின்னரான நிலைமை அதனையே நீரூபித்து வருகின்றது. 13வது திருத்தத்திலுள்ளவற்றையே கொடுக்க மறுப்பர்களுடன் தமிழ் மக்களின் அபிலாசைகள் அடங்கிய தீர்வை எப்படித்தான் எதிர்பார்க்கமுடியும்.

 

எனவே வெள்ளையினத்தவர்களுடனான நல்லிணக்கச் செயற்பாட்டைத்தவிர மண்டெலாவின் ஏனைய அணுகுமுறைகளை தமிழ்த் தரப்பு முன்மாதிரியாகப் பின்பற்றலாம்.

 

 

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=2&contentid=6b7fce77-69a5-4e10-85da-b4dbf28b6b20
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.