Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் புயலைக் கிளப்பியிருக்கும் வடமாகாண சபையின் தீர்மானம் - செல்வரட்னம் சிறிதரன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் புயலைக் கிளப்பியிருக்கும் வடமாகாண சபையின் தீர்மானம் - செல்வரட்னம் சிறிதரன்-

01 பெப்ரவரி 2014


இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியான மனித உரிமை மீறல்கள் இனப்படுகொலைக்கு ஒத்தவகையிலான மனிதக் கொலைகளுக்கு நியாயம் கோரும் வகையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது தெற்கில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கின்றது. சிங்களத் தீவிரவாத கட்சிகளை மட்டுமல்லாமல்இ பிரதான எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசிய கட்சியையும் அது உசுப்பிவிட்டிருக்கின்றது.

வடமாகாண சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அந்த சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்திருக்கின்றார்கள். தமது எதிர்ப்பு வலிமையற்றது. தீர்மானம் நிறைவேற்றப்படுவதை அது எந்தவகையிலும் பாதிக்கப்போவதில்லை என்பதை அந்த உறுப்பினர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். இருப்பினும் தமது எதிர்ப்பைத் தாங்கள் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக எதிர்ப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்தனர்;.

வடமாகாண சபையின் 38 உறுப்பினர்களில் 30 பேர் ஆளும் கட்சியாகிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மாத்திரமே எதிர்க்கட்சிகளைச் சேரந்;தவர்கள். ஆகவே இந்தப் பிரேரணைக்கு முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்துஇ வாக்கெடுப்புக்குச் சென்றிருந்தாலும்கூட, பிரேரணை நிச்சயமாக அதி பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பானது, கட்சி கொள்கைகளுக்காகத் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பாகவே கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் நியாயத் தன்மையை அவர்கள் அறியாதவர்களல்ல. தமிழ் மக்களுக்கு இறுதி யுத்தத்தின்போது மட்டுமல்லஇ யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாகவும் அவர்களுக்குப் பல்வேறு வழிகளில் அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசாங்கத் தரப்பினர் அரசியல் ரீதியாகப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றார்கள் என்ற கள உண்மையை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றார்கள். ஏனெனில் அவர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள், யுத்த காலத்தில் யுத்தச் சூழலில் அங்கேயே வாழ்ந்தவர்கள். தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனினும் அவர்களுடைய எதிர்ப்புக்கு மத்தியிலும் நிறைவேற்றப்பட்ட வடமாகாண சபையின் தீர்மானமானது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இதனை வடமாகாண முதலமைச்சர் உறுதியாக வெளிப்படுத்தியிருக்கின்றார். யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகப் போகின்ற நிலையில் முதன் முறையாகப் பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வுகள் இந்தத் தீர்மானத்தின் மூலம் வெளிப்பட்டிருக்கின்றது. இதுவே நாட்டின் தென்பகுதியை நிலைகுலையச் செய்திருக்கின்றது.

தென்பகுதியில் ஏன் இந்த எதிர்ப்புஇ பதைபதைப்பு?

வடமாகாண சபையானது அரசாங்கம் நடத்திய தேர்தல் ஒன்றின் ஊடாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிராந்திய நிர்வாகத்திற்கான ஒரு சபையாகும். நாட்டின் தென்பகுதிகளில் உள்ள மாகாண சபைகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது. வடமாகாண சபையானது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியானது, மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டிருக்கின்றது. இதனால், அது தான் விரும்பியவாறான சட்டங்களை உருவாக்கவும் தீர்மானங்களை மேற்கொள்ளவும் கூடியதாக இருக்கின்றது. வட மாகாண சபையைத் தவிர்ந்த ஏனைய சபைகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகின்றது. ஆனால் வடமாகாண சபையானது அரசாங்கத்தை எதிர்த்து நிற்கின்ற பலமுள்ள ஓர் எதிர் சக்தியாகப் பரிணமித்து நிற்கின்றது.

சிங்கள அரசியல் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ள போதிலும் எதிர்க்கட்சிகள் என்ற வகையில் அந்தக் கட்சிகள் மக்கள் மத்தியில் செலவாக்கு பெற்றிருப்பதை அரசாங்கம் விரும்பவில்லை. எந்த வகையிலும் அந்தக் கட்சிகள் அதிகார பலத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பது அரசாங்கத் தலைவர்களின் ஆணித்தரமான கருத்தாகும். இதுவே அவர்களின் அரசியல் நிலைப்பாடும்கூட.

வெல்லமுடியாத யுத்தம் என கருதப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற்ற பின்னர், அந்த வெற்றிக்கு இராணுவத்தினருக்குத் தலைமை தாங்கிச் செயற்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா அரசியலில் பிரவேசித்தபோது, அவர் அரசாங்கத்தின் செல்வாக்கை மக்கள் மத்தியில் இருந்து சரித்துவிடுவார். பலமுள்ள ஓர் அரசியல் புள்ளியாகத் தலையெடுத்து விடுவார் என்ற ஒரேயொரு அரசியல் அச்சம் காரணமாகவே, அவரை படாதபாடுபடுத்தி, பல்வேறு குற்றச்சாட்:டுக்களை அவர் மீது அடுக்கடுக்காகச் சுமத்தி, அவரை இராணுவ நீதிமன்றத்திலும்இ சிவில் நீதிமன்றத்திலும் நிறுத்தி குற்றவாளியாக்கி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலமையிலான அரசாங்கம் தண்டனை வழங்கியது. அத்துடன் அவருடைய சிவில் உரிமைகளைப் பறித்து அவரை செல்லாக்காசாக்கி சமூகத்தில் உலவவிட்டிருக்கின்றது.

அது மட்டுமல்ல. அரசாங்கத்தின் கொள்கைகள் சிந்தனைகள், செயற்பாடுகளுக்கு எவரொருவர் எதிராக நின்றாலும்சரி, அவர்களை உண்டு இல்லையென்று பார்த்துவிடுவதே அரசாங்கத்தின் கொள்கையாகவும் நடைமுறைச் செய்பாடாகவும் இருந்து வருகின்றது. இதற்கு நாட்டின் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும், முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவைப் போன்று முக்கியமான உதாரணமாக, உறுதியான சாட்சியமாகத் திகழ்கின்றார்.

இதில் பிரச்சினை என்னவென்றால், ஜனநாயக சர்வாதிகாரம் என்று சொல்லத்தக்க வகையில் அரசியல் பெரும்பான்மை பலத்தை வைத்துக் கொண்டு தனது அதிகாரங்களை வரையறையற்ற வகையில் பெருப்பித்துக் கொள்வதுடன், புதிய புதிய அதிகாரங்களைத் தன் கைகளுக்குள்ளேயே முடக்கிக் கொண்டு செல்கின்றது. எந்த விடயமானாலும்சரி, அதில் அரசாங்கமும், அரசு சார்ந்தவர்களும் பலமுள்ளவர்களாக, அசைக்க முடியாதவர்களாக, கேள்விக்கு உட்படுத்த முடியாதவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையில் காரியங்களை முன்னெடுத்துச் செல்கின்றது. இதற்காகஇ ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி, அவசியமான இடங்களில் அவற்றை வளைத்து நெளித்து தனக்கு இசைவாக்கிக் கொள்ளவும் இந்த அரசாங்கம் தயங்குவதில்லை. இத்தகைய போக்கிற்கு நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மை பலமும், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியும் பெரிதும் துணைபுரிந்து வருகின்றன.

இதுபோன்ற ஜனநாயக பெரும்பான்மை பலத்தைப் பயன்படுத்தி வடமாகாண சபையில் அதிகாரத்தில் உள்ள தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்தையும் அரசாங்கத்த்pன் பலத்திற்குப் பெரும் துணையாக இருக்கின்ற இராணுவத்தினரையும் கேள்விக்கு உள்ளாக்குவதற்கு முற்பட்டிருப்பதை அரசாங்கம் ஒருபோதும் விரும்பமாட்டாது. அதற்கு இடமளிக்குமா என்பதும் கேள்விக்குறியே.

அதேநேரத்தில் பெரும்பான்மை அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு வடமாகாண சபையின் ஊடாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் அரசாங்கத்தைப் போல ஓர் அரசியல் பலமுள்ள சக்தியாகத் தோற்றம் பெறுவதை ஐக்கிய தேசிய கட்சியும் விரும்பவில்லை. சிங்கள இனவாதக் கட்சிகளும் விரும்பவில்லை. ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தமட்டில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும், ஜனநாயக ரீதியாக அதற்கென்று இருக்க வேண்டிய அரசியல் பலமற்றதாகவே இருக்கின்றது. இந்த நிலையில் நாட்டில் எதிர்க்கட்சி என்ற ரீதியில் அரசியல் பலமுள்ள சக்தியாக மக்கள் மத்தியில் இருக்க வேண்டிய தன்னையும் மீறிய வகையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபையின் ஊடாக அரசியல் பலத்தைப் பெற்றிருப்பதை அது விரும்பவில்லை. அதனை அதனால் சகிக்க முடியாதுள்ளது. சீரணித்துக்கொள்ளவும் முடியாதிருக்கின்றது. இதன் காரணமாகவே வடமாகாண சபையின் தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியையும் உசுப்பிவிட்டுள்ளது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்போ அல்லது தமிழ் மக்களின் ஏதாவதோர் அரசியல் சக்தியோ பலமுள்ளதாக முளைவிடுவதை சிங்கள இனவாத கட்சிகள் ஒருபோதும் விரும்பியதில்லை. அது மட்டுமல்லாமல் சிங்கள மக்களுக்கு சரிசமனாக தமிழ் மக்கள் உரிமையுடையவர்களாக தோற்றம் பெறுவதும், அரசியல் ரீதியாகப் பலம் பெறுவதும் அந்தக் கட்சிகளுக்கு விருப்பமில்லை. தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக கொடுப்பதைப் பெற்றுக்கொண்டு, சொல்வதைக் செய்யும் ஒரு மக்கள் கூட்டமாகத் தங்களுக்குப் பின்னால் வரவேண்டும் என்பதையே அந்தக் கட்சிகள் விரும்புகின்றன.

இத்தகையதோர் அரசியல் கொள்கை காரணமாகவேஇ தமிழ் மக்களுக்குரிய அரசியல் உரிமைகளையும், அரசியல் அதிகாரங்களையும் அந்தக் கட்சிகள் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. பத்தோடு பதினொன்றாக தமிழ் மக்கள் வாழ வேண்டும் என்ற அந்தக் கட்சிகளின் எதிர்பார்ப்பு காரணமாகவே, இந்த நாட்டில் தமிழ் மக்களுக்குப் பிரச்சினைகள் எதுவுமில்லை, இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லவே இல்லையென்று அந்தக் கட்சிகள் அடித்துக் கூறி வருகின்றன.

தென்னிலங்கையின் பிரதிபலிப்பும் அரசியல் உணர்வுகளும்

வடமாகாண சபையின் தீர்மானமானது, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், நாட்டின் தென்பகுதியில் இந்தத் தீர்மானம் சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதாகவே தெரியவந்துள்ளது. வடமாகாண சபையின் தீர்மானத்தைத் தொடர்ந்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முக்கிய கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தனது மத்திய குழு கூட்டத்தில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி அறிக்கை விட்டிருக்கின்றது.

எனவே, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஜனநாயக மொழியில் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு முனைந்திருக்கின்றது என்று தென்பகுதியில் ஒரு பொதுவான கருத்துருவாக்கம் பெற்றிருக்கின்றது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் இந்த நடவடிக்கையானது, விடுதலைப்புலிகளின் ஆயுதமேந்திய பயங்கரவாதப் போராட்டத்திலும் பார்க்க ஆபத்தானது என்ற பிரசாரமும் தென்பகுதியில் முளைவிடத் தொடங்கியிருக்கின்றது.

சிறுபான்மையினராகிய தமிழ் மக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கங்களின் காலம் காலமாகக் கொண்டுள்ள அரசியல் அணுகுமுறையானது சரியானதல்ல என்று கருத்தில் தொடர்ந்து திளைத்திருந்தவர்கள் மத்தியிலும்கூட வடமாகாண சபையின் தீர்மானமும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தீர்மானமும் சரியானதாகப் படவில்லை.

‘மாறாக, சிஹல உறுமய போன்ற சிங்களத் தீவிரவாத கட்சிகளின் விடாப்பிடியான எதிர்ப்புக்கு மத்தியிலும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்துணிவேர்டு வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தியிருந்தார். அத்துடன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், நாட்டில் பெரும் அதிகார பலம் வாய்ந்தவராகக் கருதப்படுபவருமாகிய தனது சகோதரர் கோத்தாபய ராஜபக்சவின் வெளிப்படையான எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி இந்தத் தேர்தலுக்குப் பச்சைக் கொடி காட்டியிருந்தார். பெரும் எண்ணிக்கையிலான இராணுவ பிரசனனத்திற்கு மத்தியிலும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு ஜனாதிபதியினால் வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் அந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியிருந்தது. ஆனால் அவ்வாறு செயற்பட்டிருந்த ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தத் தக்க வகையிலும், அவருக்கு தென்னிலங்கையில் உள்ளக அரசியல் நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், வடமாகாண சபையும் செயற்பட்டிருக்கின்றன’ என்று தென்னிலங்கையில் உள்ள முன்னணி அரசியல் பிரமுகர்களும் அரசியல் சிந்தனையாளர்களும் கருத்து வெளியிட்டிருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுறவையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான வடமாகாண சபையும் தமது பொறுப்புக்களை மறந்து செயற்பட்டிருக்கின்றன என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியிருக்கின்றார்கள்.

அதேநேரம், விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஜனநாயக வழியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளையே முன்னெடுப்பதற்கு முனைந்திருக்கின்றார்கள் என்று குற்றம் சுமத்தி, பதின்மூன்றாவது அரசியல் தீருத்தச் சட்டத்தையே இல்லாமல் செய்ய வேண்டும் என்று முழு வீச்சில் எதிர்ப்பு தெரிவித்திருந்த சிங்கள தீவிரவாத அரசியல் கட்சிகளின் கைகளை ஓங்கச் செய்திருக்கின்றது. என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.

சர்வதேச விசாரணையைக் கோருகின்ற வடக்கின் தீர்மானமானது, தேசிய பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் தேசிய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கவில்லை. அது இராணுவத்தினரையும் எந்த வகையிலும் பாதிக்கப் போவதில்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும்இ நாட்டின் ஆட்புல ஒருமைக்கும் இறைமைக்கும் தீங்கு விளைவிக்கத்தக்கது என்ற கருத்தையும் அவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தையும் அமைதியையும் ஏற்படுத்தி, வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்தி வடக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்தியுள்ள ஜனாதிபதிக்கு எதிராக, சர்வதேச மட்டத்தில் சேறு பூசுவதைப் போன்ற ஒரு கைங்கரியத்தைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு செய்திருப்பதாகவும், உள்ளக அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், வருங்காலத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியாயத்தன்மையுடன் நடந்து கொள்வதைத தடுக்கின்ற ஒரு தடைக்கல்லாக இது அமைந்திருக்கின்றது என்றும் அவர்கள் கூறியிருக்கின்றார்கள். மொத்தத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துகின்ற தமிழர் தரப்பு நிலைப்பாடானது தென்பகுதியில் அதிர்ச்சியையும், அரசியல் அதிருப்தியையும், மௌனமான ஒரு எரிச்சல் கலந்த சீற்றத்தையுமே ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏன் இந்த நிலைமை?

காலம் காலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ள தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சரியான முறையில் இனங்காணப்பட்டு, அவர்கள் இந்த நாட்டில் சமவுரிமையுள்ளவர்களாக அதிகாரத்திலும், நிர்வாகம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சம பங்காளர்களாகத் திகழ்வதற்கு வழி செய்யப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையாக இருந்து வருகின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களும், நாட்டின் முக்கிய தென்பகுதி அரசியல் தலைவர்களும் தமிழ் மக்களின் இந்த அபிலாசையையும், நியாயமான கோரிக்கையையும் நிறைவேற்றவில்லை. அந்த அரசியல் பொறுப்பில் இருந்து அவர்கள் தவறிவிட்டார்கள். இதன் காரணமாகத்தான் நாட்டில் அதிருப்தியும், அஹிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்கள் ஏற்பட்டிருந்தன. ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதச் செயற்பாடாகத் திரிபுபடுத்தி, சர்வதேச சக்திகளைக் கையில் போட்டுக்கொண்டு விடுதலைப்புலிகளை ஆட்சியாளர்கள் இல்லாதொழித்திருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், வகைதொகையற்று இடம்பெற்ற கொலைகள், யுத்தத்தில் வெற்றியடைந்த பின்பும், இடம்பெற்ற மனிதாபிமானமற்ற செயல்கள் போன்றவற்றிற்கு அரசாங்கமோ, அரசியல் தலைவர்களோ இன்னுமே பொறுப்பு கூறவில்லை. மாறாக இறுதி யுத்தத்தின்போது, பொதுமக்கள் எவரையுமே நாங்கள் கொல்லவில்லை. எமது இராணுவத்தினர் மனிதாபிமானத்துடன் செயற்பட்டது மட்டுமல்லாமல் உயிர்த்தியாகம் செய்து விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் மக்களை மீட்டெடுத்தார்கள் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வகையில் பேசி வருகின்றார்கள்.

இறுதி நேர யுத்தச் செயற்பாடுகள்தான் போகட்டும் என்றாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் கடந்த நான்கு வருடங்களுக்கு மேற்பட்ட காலத்தில் வடக்கிலும் கிழக்கிலும் நடப்பதென்ன? யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற வகையில் அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் நியாயமாக நடத்தப்படவில்லை. அவர்களுடைய காணிகள் அபகரிக்கப்படுகின்றன. தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் பரவலாக இராணுவத்தை நிலைநிறுத்தி, அவர்களுடைய சிவில் வாழ்க்கையிலும், சமூக, பொருளாதாரஇ சமய கலாசாரம் மற்றும் அரசியல் வாழ்க்கையிலும் அரச தரப்பினர் அளவற்ற தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் போனதெல்லாம் போகட்டும். இனியாவது நிம்மதியாக இருப்போம். நிம்மதியாக இருந்து இழந்துபோன வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவோம் என்று முயன்றால் அதற்கும் தடைகள், தடங்கல்கள் என்று எத்தனையோ வழிகளில் முட்டுக்கட்டைகள் போடப்பட்டிருக்கின்றன. தனது வீட்டு நிர்வாகத்தையும், தமது பிரதேச நிர்வாகத்தையும், பொருளாதார பலமுள்ளதாகக் கொண்டு செல்வதற்கு அவர்கள் முயற்சிக்கின்றார்கள். ஆனால் அந்த முயற்சிகளுக்கு பல்வேறு தப்பர்த்தம் கற்பிக்கப்பட்டு, அவர்களுடைய செயற்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த நிலையில் தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும், அவற்றை வென்றெடுப்பதற்காகவும் கிடைக்கின்ற ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதை இனவாத அரசியல் கண்கொண்டு நாட்டின் தென்பகுதி அரசியல் சக்திகள் நோக்க முற்படுகின்றன. இது ஆரோக்கியமானதல்ல. ஆரோக்கியமான அரசியல் போக்கு என்று கூற முடியாது.

யுத்தம் முவடைந்த பின்னர், யுத்தத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வென்றெடுப்பதற்கு ஆட்சியாளர்கள் முயற்சித்ததாகத் தெரியவில்லை. யுத்தத்தில் வெற்றிகொண்ட தங்களை யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியோடு நோக்க வேண்டும். நன்றியுணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களுக்கே ஆதரவாகச் செயற்பட வேண்டும். அவர்களுக்கென்று தனியான அரசியல் சித்தாந்தங்களோஇ சிந்தனைகளுடன் கூடிய செயற்பாடுகளோ இருக்கக் கூடாது என்ற வகையில் அரசும் அரசு சார்ந்தவர்களும் செயற்பட்டு வந்துள்ளார்கள். இது தவறானது.

யுத்தம் காரணமாக துருவமயமாகியுள்ள நாட்டின் தெற்கையும் வடக்கையும் பூகோள ரீதியாக அல்லாமல்இ சமூக ரீதியாக உளவியல் ரீதியாக அரசியல் ரீதியாக நியாயமான முறையில் புரிந்துணர்வுடன் இணைத்துச் செயற்பட வேண்டும் என்று அவர்கள் சிந்திக்கவில்லை. நீண்டகால அரசியல் நோக்கில்இ நாட்டை வளப்படுத்துவதற்கு இத்தகைய அணுகுமுறை அவசியம் என்பதை அவர்கள் உணர்ந்து செயற்பட்டிருப்பார்களேயானால், சர்வதேச ரீதியில் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதாக அவர்கள் கருதுகின்ற வழியில் வடபகுதி மக்களின் மன உணர்வுகளாக சர்வதேச விசாரணை அவசியம் என்ற தீரமானம் வெளிப்பட்டிருக்கமாட்டாது.

கண் கெட்டபின்னர் சூரிய வணக்கத்தினால் பயனில்லை. இப்பொழுதும் காலம் பிந்திவிடவில்லை. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வுகளையும்இ அவர்களுடைய அரசியல் அபிலாசைகளையும் புரிந்து கொண்டு செயற்பட்டாலே போதும்;. தமிழ் மக்கள் நியாயபூர்வமாக நடந்து கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102517/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச் மாதம் இந்தியத் தொலைக்காட்சிகளில் வாதப் பிரதிவாதங்கள் ஆரம்பமாகும். அப்போது வட மாகாணசபையின் தீர்மானத்தை எடுத்துரைக்க வேண்டும்.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அமைப்பின் தீர்மானம் என்கிற கருத்து வலுவானதாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.